வார நாட்களில் வேலை முடிந்து வீடு சென்றடைய இரவு 9.00 மணியாகிவிடும். செம்பூர் புறநகர் ரயிலடியருகே இருந்த ஒரு தமிழ் உணவகத்தில் உணவருந்திவிட்டு காலாற ஒரு அரைமணிநேரம் சுற்றிலுமிருந்த தெருக்களில் (அப்போதெல்லாம் 1978ல் இப்போதுள்ள அளவுக்கு ஜன நெருக்கடியிருந்ததில்லை.)நடந்துவிட்டு வீடு சென்றடைவேன். பாக்கெட் டிரான்சிஸ்டரில் (அப்போதெல்லாம் டி.வி. பிரபலமடைந்திருக்கவில்லை. அப்படியே இருந்தாலும் மும்பை தூர்தர்ஷனை விட்டால் வேறு கதியில்லை. சனிக்கிழமை இந்திப் படமும், ஞாயிற்றுகிழமையில் மராத்தி படமும் போடுவான். ஒன்றும் விளங்காது.) சிலோனிலிருந்து வரும் தமிழ்பாட்டைக் கேட்டுவிட்டு பதினோரு மணியளவில் உறங்க சென்றுவிடுவேன்.
என்னுடைய கிளையில் இருந்த பாலக்காட்டு ஐயரைத் தவிர நண்பர்கள் வேறு யாருடனும் சகஜமாய் பழக ஆரம்பிக்காதவரை மும்பை வாசம் நரகமாயிருந்தது.
நாளடைவில் நண்பர்கள் வட்டம் பெருக, பெருக மும்பையில் பல இடங்களுக்கும் வார இறுதிகளில் (Week ends) சென்று வர ஆரம்பித்தேன்.
ஒரு சனிக்கிழமை என் நண்பர்களுள் ஒருவர் பாலக்காட்டு ஐயரிடம் என் காதுபட ‘அரே ஜோசப் சாப்கோ க்ராண்ட் ரோட் பர் லேகே ஜானேகா ரே.’ (டேய், நம்ம ஜோசப் சாரை க்ராண்ட் ரோட்டுக்கு கூட்டிக்கிட்டு போகணுன்டா.) என்றார்.
பாலக்காட்டு ஐயர் என்னை விஷமமாகப் பார்த்து கண்ணடித்தார். ‘என்ன சார், போலாமா?’. எனக்கு ஒன்றும் புரியவில்லை..
‘என்ன சாமி, என்ன சொல்றீங்க?’ (ஐயரை நான் அப்படித்தான் அழைப்பது வழக்கம்) என்றேன்.
ஐயரும் என்னைச் சுற்றிலுமிருந்த நண்பர்களும் ஒருவர் ஒருவரைப் பார்த்து சிரித்துக்கொண்டுவிட்டு என்னைப் பார்த்தனர். ‘அரே க்யா ரே. சாப் ஷராப் பி நஹி பீத்தா ஹை. இன்கோ உதர் லேக்கே ஜாக்கே க்யா திக்கானேக்கா யார்?’ (சார் தண்ணி?! கூட அடிக்க மாட்டேங்கிறார். இவர அங்கல்லாம் கூட்டிக்கிட்டு போய் என்னத்த காமிக்கறது?).
அப்போதெல்லாம் லகுவாக இந்தி புரிந்துக்கொள்ளக்கூடிய ஆற்றல் கூட இல்லாததால் இவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவலில் தலையே வெடித்து விடும்போலிருந்தது.
‘ஐயரே.. என்ன பத்தி இவனுங்க ஏதோ சொல்றானுங்கன்னு மட்டும் தெரியுது. என்னன்னு புரியல. நீங்களாவது சொல்லுங்களேன்.’ என்றேன்.
ஐயர் குழுமியிருந்த நண்பர்களை ஒருமுறை பார்த்துவிட்டு என்னிடம் தயக்கத்துடன், ‘சார் நீங்க தப்பா நினைச்சுக்கலனா, ஒன்னு சொல்றேன்.’ என்றார்.
‘சொல்லுங்க’ என்றேன்.
‘நீங்க ரெட்லைட் ஏரியான்னு கேள்விப்பட்டிருப்பீங்க.’
‘சரி’
‘இன்னைக்கி சாயந்திரம் அங்கல்லாம் ஒரு ரவுண்டு போயிட்டு வரலாமான்னு பசங்க சொல்றாங்க. நீங்க என்ன சொல்றீங்க? உங்களுக்கு இஷ்டமில்லன்னா.. கட்டாயப்படுத்தல..’
“எலேய் நீ அங்க ஏதாவது தப்புத் தண்டா பண்ணேன்னு தகவல் கிடைச்சது, நீ என் மகனே இல்லேன்னு தலைய முழுகிடுவேன்..’ என் தந்தை மும்பைக்கு வழியனுப்பும் போது கூறிய வார்த்தைகள் சமயம் பார்த்து என் செவியில் ஒலித்தன!
‘இந்த விஷப் பரீட்சை வேணுமா சாமி..’ என்றேன் என் நண்பரைப் பார்த்து.
‘உங்களுக்கு வேணாம்னா விட்டுரலாம் சார்.. பக்கத்துலருக்கற டிஸ்க்கொத்தேக்கு வேணா இன்னைக்கி போயிட்டு வரலாம்..’
ஐயரின் குரலில் ஒலித்த கேலி என்னை என்னவோ செய்ய சட்டென்று முடிவெடுத்தேன். என்னதான் நடக்குதுன்னு பாத்துருவமே.
‘சரி சாமி. போலாம்.’
‘இன்னைக்கே போலாமா?’ என்றார் சுற்றிலுமிருந்த நண்பரகளைப் பார்த்தவாறு.
‘சரி.’
‘அரே, சாப் ஜாயேகா போல்தா ஹை. சலோ.’ (சார் போலாம்னு சொல்லிட்டார்றா.. போலாம் வாங்க) என்று மும்பை நண்பர்களைப் பார்த்து சந்தோஷமாய் கூற நண்பர் பட்டாளம் நான் ஏதோ பெரிசாய் சாதித்துவிட்டதுபோல் என் கையைப் பிடித்து குலுக்கியது..
காமத்திப்புரா
இதுதான் மும்பை ரெட்-லைட் பகுதியின் பெயர்.
கிரான்ட் ரோட் இப்பகுதியின் பிரதான தெரு.
அங்கு செல்வது என்று முடிவெடுத்த பிறகு என்னுடைய மும்பை நண்பர்கள் அவர்களுக்குத் தெரிந்த ஒரு மராத்தி பத்திரிகை நிரூபரை அழைத்து எங்களுடனு வருவதற்கு ஏற்பாடு செய்தனர். (அதன் சூட்சுமம் காமத்திப்புரா பகுதிக்கு சென்ற பிறகுதான் விளங்கியது!)
ஆக, நானும் ஏழெட்டு நண்பர்களடங்கிய ஒரு குழுவும் பத்திரிகை நிரூபர் துணையுடன் காமத்திப்புரா பகுதியைச் சென்றடைந்தோம். நல்ல மழை பெய்து ஓய்ந்திருந்த நேரம். தெரு ஓரங்களில் மழைநீர் தேங்கி, குப்பையும் கூளமும் (அதில் சில காண்டம்களும்!!) பார்ப்பதற்கே அருவருப்பாக..
முதன் முதலாய் அங்கு செல்வோருக்கு கிரான்ட் தெருவை அடைத்துக் கொண்டு இப்போதோ அப்போதோ விழப்போகிறேன் என்ற நிலையில் நிற்கும் சுமார் ஐம்பது, அறுபது ஆண்டுகள் ஆன கட்டிடங்களும் அதன் வாசலிலும், ஒவ்வொரு ஜன்னல்களிலும் சோகம் கவிந்த முகங்களோடு நிற்கும் பெண்களையும், தெருவில் நுழைந்தவுடனேயே நம்மை சூழ்ந்துக்கொண்டு... இந்தியாவிலுள்ள அத்தனை மொழிகளிலும் ஒரே கேள்வியைக் கேட்டு துளைத்தெடுக்கும் ஓசையும்... It is a nightmare for the uninitiated..
ஐயர் என் காதை கடித்தார்.. ‘பாத்தீங்களா சார்.. நாமள் மட்டும் இந்த நிரூபரோட வந்திருக்கலைன்னா அம்புடுதேன். (பாலக்காட்டு பாஷை அவ்வப்போது ஐயர் வாயிலிருந்து வரும். சில சமயங்களில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்றே விளங்காது.)
உண்மையிலேயே எனக்கு ஏன்டா வந்தோம் என்றிருந்தது..
‘எங்களோடயே நில்லுங்க சார்.. கொஞ்ச ஏமாந்தீங்கன்னா ஏதாவது வீட்டுக்குள்ள இழுத்துக்கிட்டு போயிருவானுங்க.. அப்புறம் உங்கள கண்டுபிடிக்கறதே பெரிய பாடா போயிரும்’ என்ற ஐயரின் அறிவுரைக்கிணங்கி அவர்களோடேயே போய்க்கொண்டிருந்தேன்..
பத்திரிகை நிரூபரை அங்கு எல்லோருக்குமே தெரிந்திருந்தது.. யார் யாரிடமோ என்னென்னவோ பேசி கடைசியில் எங்களை ஒரு வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
(தொடரும்)
சூப்பர் சார்.
பதிலளிநீக்குபடங்களையும் தேடிப்பிடித்து கொடுத்துள்ளீர்கள். நானும் போயிருக்கிறேன். ஆனால் இதைப் போல் என்னால் தத்ரூபமாக எழுத முடியும் என்று தோணவில்லை.
அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ஏன் சார்,
பதிலளிநீக்குஇப்படி ஒரு பதிவு தேவையா?
ஆனா எனக்கென்னவோ பிடிச்சிதானிருக்கு. ஹி ஹி!
ஆனால் யாராவது பெண்கள் பழித்து எழுதுவதற்கு முன்னால் முந்தி கொள்ளலாமே என்றுதான்..
இதப்பத்தி இன்னும் ஏதாச்சும் எழுதறதாயிருந்தா சீக்கிரம் ( முடிந்தால் அடுத்த பதிவிலேயே)எழுதிருங்க சார். அதாவது ரெட் கார்ட் போடுறதுக்குள்ள..
நான் மும்பை ரெட் லைட்டைப் பத்தி எழுதணுமான்னு நீங்க கேட்டப்போதிருந்து ஆவலோட காத்துக்கிட்டிருந்தேன்.
பதிலளிநீக்குஆனா உங்க பதிவை படிச்சதுக்கப்புறம் ஐயோன்னு இருக்கு. இவ்வளவு பரிதாபமான ஏன் அசிங்கமாவா இருக்கும் அந்த இடம்?
சாரி,எனக்கு இதுவரைக்கும் இப்படி ஒரு அனுபவமில்லீங்க.. அதனாலதான்.
நன்றி சம்பத்,
பதிலளிநீக்குஅடுத்த பகுதி சுவாரசியமாக இருக்கும்.
அத்துடன் வேதனையாகவும்..
நண்பருக்கு,
பதிலளிநீக்குஇப்படி ஒரு பதிவு தேவையா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை.
என்னுடைய கடந்த கால அனுபவங்களைத்தான் நான் எழுதுகிறேன். நாம் நம் வாழ்வில் எத்தனையோ வேண்ட்டாதவைகளை செய்கிறோம்.
என்னுடைய ரெட் லைட் அனுபவங்களும் அவற்றுள் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அது உண்மை.
என் பதிவுகளை என் மனைவியும், இரு மகள்களும்தான் அட்வான்சாகவே வாசித்துவிடுவார்கள்.
இருந்தும் இதுவரை ஒன்றும் சொல்லவில்லை.
அண்ணாமலை சாமுவேல்.
பதிலளிநீக்குநன்றி.
நான் எழுதியதை விட அசிங்கமாக இருக்கும். எய்ட்சின் தொழிற்சாலையாயிற்றே.
அதிகமாய் அங்கே செல்பவர்களில் பெரும்பாலோனோ மும்பை வாசிகள் இல்லை. அவர்களுக்கு தெரியும் அது நிஜ உலகத்தின் மாயை, மற்றும் நரகம் என்று.
I visited that place more out of curiousity than of necessity.