26 நவம்பர் 2013

ஜிடிபி அப்படீன்னா என்னாங்க (நிறைவுப் பகுதி)

ஆனால் பொருட்களின் தயாரிப்பு செலவும் சந்தை விலையும் எல்லா வருடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லையே? ஆகவே கடந்த ஆண்டோ அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு கணக்கிடப்பட்ட GDPயுடனோ ஒப்பிட்டு எத்தனை விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளோம் என்று எவ்வாறு தெரிந்துக்கொள்வது?  

உதாரணத்திற்கு 2000-2001ம் ஆண்டிலிருந்து நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (GDP) எத்தனை விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை கணக்கிடவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். 2010-11 ஆண்டில் இருந்த விலைவாசியே இப்போதும் இருக்காது அல்லவா? இப்படிப்பட்ட சூழலில் நாட்டின் உற்பத்தியில் எவ்வித வளர்ச்சியும் இல்லையென்றாலும் இந்த இடைபட்ட காலத்தில் ஏற்பட்ட விலைவாசி உயர்வே நாட்டின் உற்பத்தி வளர்ச்சி அடைந்துவிட்டதைப் போன்றதொரு பிரமையை ஏற்படுத்திவிடக் கூடும். அதாவது 2010-11ல் நாட்டின் தானிய உற்பத்தி 1000 கோடி டன்னாக இருந்தது என்று வைத்துக்கொள்வோம். அன்று ஒரு டன் தானியத்தின் விலை ஒரு இலட்சம் ரூபாய் என்ற நிலையிலிருந்து பத்து ஆண்டுகளில் ஒன்றரை மடங்கு அதிகரித்திருக்கும் சூழலில் 2012-13ல் நாட்டின் தானிய உற்பத்தி  அதே அளவான ஆயிரம் கோடி டன்னாக இருந்தாலும் தற்போதைய சந்தை விலையில் அதன் மதிப்பு ஒன்றரை மடங்கு அதிகரித்திருக்குமே! 

இந்த விலைவாசி உயர்வை சமநிலைக்கு கொண்டுவந்தால் மட்டுமே நாட்டின் உண்மையான உற்பத்தி நிலவரம் தெரியவரும் என்பதால் எந்த ஆண்டுடன் ஒப்பிட விரும்புகிறோமோ அந்த ஆண்டின் சந்தை விலையிலேயே நடப்பு ஆண்டின் உற்பத்தியையும் கணக்கிடுவார்கள். எந்த ஆண்டு விலைவாசியுடன் ஒப்பிடுகிறோமோ அந்த ஆண்டை தொடக்க ஆண்டாக (Base Year) வைத்துக்கொண்டு நடப்பு ஆண்டிலுள்ள (current year) உற்பத்தி அளவை தொடக்க ஆண்டின் விலைவாசியில் கணக்கிடுவார்கள். இந்த முறையை deflator method என்கிறார்கள். சாதாரணமாக ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டிற்கு முந்தைய ஆண்டை தொடக்க ஆண்டாக வைத்துக்கொண்டு அந்த ஆண்டிலிருந்த விலைவாசிக்கே அந்த திட்டத்தின் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை கணக்கிட்டு ஒப்பிட்டுப் பார்ப்பது வழக்கம். 

மேலும் நடப்பு நிதியாண்டின் ஒவ்வொரு ஆண்டிலும் உள்ள ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் எந்த அளவு உற்பத்தியை எட்ட வேண்டும் என்ற குறியீட்டையும் (Target or Estimate) நிர்ணயித்துக்கொள்வார்கள். இந்த அடிப்படையில் மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation)ஒவ்வொரு ஆண்டும் தயாரித்து அளிக்கும் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி பற்றிய அறிக்கையின் மாதிரி இது. இத்துடன் ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கத்திலும் அடுத்த மூன்று மாத காலத்தில் அடைய வேண்டிய இலக்கையும் நிர்ணயித்து அந்த கால இறுதியில் இலக்கை அடைந்தோமா இல்லையா என்ற ஆய்வையும் இந்த அமைச்சகம் நடத்துகிறது. இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்துத்தான் ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் நாட்டின் பொருளாதார ஆய்வு (Economic Survey) அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி தயாரித்து வெளியிடுகிறது. 

நான் கொடுத்துள்ள மாதிரி அறிக்கை நாட்டின் மொத்த உற்பத்தியை உற்பத்தி முறையிலும் (Production Method) நாட்டின் மொத்த செலவு முறையிலும் (Expenditure Method) முறையிலும் கணக்கிட்டுள்ளதை பார்க்கலாம். இவ்விரண்டு அறிக்கைகளும் ஒரே மதிப்பைத்தான் காட்டியுள்ளன என்றாலும் இரண்டாம் அறிக்கையின் (Expenditure Method) பதினாறாவது இலக்கத்தில் (No.16) காட்டப்பட்டுள்ள வித்தியாசங்கள் (discrepancies) என்ற  தொகை இந்த இரண்டு முறைகள் மூலமாக கணக்கிடப்படும் இறுதி மதிப்பிலுள்ள (final figure) வேறுபாடு எனவும் கொள்ளலாம். 

இந்த அறிக்கையின் இறுதியில் 31 மற்றும் 32 வது இலக்கங்களில் காட்டப்பட்டிருக்கும் எண்களைப் பாருங்கள். 31ல் இந்தியாவின் மக்கள் தொகையும் 32ல் per capita income என்று நம் நாட்டிலுள்ள ஒரு நபரின் வருமானத்தையும் காட்டப்பட்டுள்ளது. 

எண் 32ல் காட்டப்பட்டுள்ள தொகைதான் மிக முக்கியமான தொகை. இதன் அடிப்படையில்தான் நம்முடைய நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மற்ற நாடுகளிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிட வகை செய்கிறது. இதன் அடிப்படையில் ஐ.நா, உலக வங்கி போன்ற அகில உலக அமைப்புகள் உலகிலுள்ள நாடுகளை வரிசைப் படுத்துகின்றன. அதன் ஒரு மாதிரியையும் அளித்துள்ளேன். 

கடந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பின் அடிப்படையில் இந்தியா பத்தாவது இடத்திலுள்ளதை காண முடிகிறது. ஆனால் இது நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பை மட்டுமே வைத்து கணிக்கப்பட்டுள்ளது என்பதையும் மறந்துவிடக் கூடாது. நம்மையும் விட வளர்ந்த நாடுகளாக கருதப்படும் பல ஐரோப்பிய நாடுகளைவிடவும் நம்முடைய ஒட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பு அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம் நம்முடைய நாட்டின் விஸ்தீரணமும் (Georgraphical Area)மக்கள் தொகையும் (Working Population)என்று கூறலாம். ஆனால் Per Capita Income அடிப்படையில் நம்முடைய நாடு நம்மை விடவும் சிறிய நாடுகள் பலவற்றிலும் இருந்து பின்தங்கியிருப்பதை காண முடிகிறது. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பீட்டின் அளவுக்கு முக்கிய காரணமாக இருக்கும் நம்முடைய மக்கள்தொகையே இதற்கும் காரணமாக அமைந்துள்ளதுதான் வேதனை. இதே அளவு உற்பத்தியும் தற்போதுள்ள மக்கள் தொகையில் பாதியும் இருந்திருந்தால் நம்முடைய நாடு உலக அரங்கில் முதல் இடத்தில் இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கடந்த சுமார் பதினைந்து ஆண்டுகளாக நம்முடைய மக்கள் தொகை அதிகரிக்கும் விழுக்காடு (Percentage increase in population) குறைந்துள்ளதை கருத்தில் கொண்டு இனிவரும் இருபத்தைந்தாண்டுகளில் இதே நிலையிலோ அல்லது இதை விட குறைவான விழுக்காட்டிலோ மக்கள் தொகை கூடுமானால் 2035ம் ஆண்டு வாக்கில் நம்முடைய நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மேற்கத்திய நாடுகள் பலவற்றை விடவும் உயர்ந்திருக்கும் என்று நிச்சயமாக நம்பலாம். ஆகவேதான் 2050ம் ஆண்டில் உலகின் மிக பலம் பொருந்திய நாடாக இந்தியா இருக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். 

சரி. கடந்த சில ஆண்டுகளாக நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (GDP)யின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்ததை விடவும் குறைந்து வருகிறது என்று ஏன் கூறுகிறார்கள்?

இந்த நிலைக்கு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள்தான் காரணம் என்கிறார்களே?

இவை சரிதானா?

என்னைக் கேட்டால் இப்போது கடைபிடித்துவரும் பொருளாதார கொள்கையை நரசிம்மராவ் அவர்கள் பிரதமராவதற்கு முன்பிருந்தே (அதாவது இந்திரா காந்தி அம்மையார் ஆண்ட காலத்திலிருந்து) கடைபிடித்து வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பேன். 

எதிலும் தன்னிறைவு எல்லாவற்றிலும் தன்னிறைவு என்ற சித்தாந்தம், என்னால் முடியாதது எதுவும் இல்லை என்கிற மனப்போக்கு, ஒரு நூறு ஆண்டுக்கும் மேலாக ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டுக் கிடந்து அனுபவித்த துன்பங்கள் ஆகியவைதான்  உலகமயமாக்கல் (Globalisation) கொள்கையை நாம் எதிர்க்க காரணங்கள். Iron Curtain என வர்ணிக்கப்பட்டு வந்த ரஷ்யா போன்ற நாடுகளும் பொதுவுடமை கொள்கையை விடாமல் கட்டிக்காத்துவந்த சீனா போன்ற கம்யூனிச நாடுகளுமே உலகமயமாக்கலை இருகரம் விரித்து வரவேற்கிற சூழலிலும் இன்றும் இந்த கொள்கையை எதிர்த்துவரும் சிலரைக் கண்டால் எரிச்சலாகத்தான் வருகிறது. 

நம்முடைய நாடு இன்று கணினி துறையில் அதீத வளர்ச்சியடைந்திருந்தாலும் இன்றும் நம்முடைய நாட்டு நிறுவனங்கள் ஒரு கணினி சேவை நிறுவனங்களாகவே (Services) கருதப்பட்டு வருகின்றனவே தவிர மைக்ரோ சாஃப்ட் போலவோ அல்லது ஆப்பிள் போலவோ ஒரு உற்பத்தி (Product Company) நிறுவனமாக கருதப்படாததற்கு முக்கிய காரணம் தொழில்துறையில் நம்முடைய நாடு இன்னும் முன்னேறாததுதான். 

ஒரு நாட்டின் தொழில்துறை தொடர்ந்து முன்னேறுவதற்கு தொடர் முதலீடுகள் அவசியம் தேவை. நம்முடைய நாட்டிலுள்ள தனிநபர் சேமிப்பில் ஏறக்குறைய எழுபது விழுக்காடு முதலீடாக மாறுவதில்லை. அப்படியே மாறினாலும் அவற்றில் பெரும் பங்கு தங்கம் மற்றும் அசையா சொத்துக்களில்தான் முதலீடு செய்யப்படுவதை பார்க்கிறோம். 

இவையும் முதலீடுகள்தான் என்றாலும் அதனால் நாட்டின் உற்பத்தி பெருகப்போவதில்லை. ஏனெனில் நம்முடைய சேமிப்பை பெருமளவில் விழுங்கும் தங்கம் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டிய சூழல். 

நான் ஏற்கனவே கூறியுள்ளபடி நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதிக்கு செலவிடப்படும் தொகை நாட்டின் GDP கணக்கிலிருந்து குறைக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் GDP என்ற மூன்றெழுத்தில் நடுவிலுள்ள 'D' அதாவது Domestic என்ற ஆங்கில வார்த்தை உள்நாட்டை குறிக்கிறது. அதாவது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு உள்நாட்டிலேயே பயன்பாட்டுக்கு வரும் பொருட்களின் மதிப்பு மட்டுமே இந்த கணக்கீட்டில் உட்படுத்தப்படுகிறது. ஆகவேதான் தங்கத்தில் செய்யும் முதலீடுகளை தயவு செய்து குறைத்துக்கொள்ளுங்கள் என்கிறது மத்திய நிதியமைச்சகம். 

அப்படியானால் சீனா இந்தியாவை விடவும் அதிக தங்கத்தை இறக்குமதி செய்வதாக கூறுகிறார்களே என்கின்றனர் சில அறிவுஜீவிகள். உண்மையில் சீனாவில் தனிநபர் எவரும் தங்கத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அங்கு அரசாங்கம்தான் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. ஏனாம்? தங்களுடைய நாட்டின் சொத்தை மற்ற நாடுகளைப் போன்று அமெரிக்க டாலர்களில் வைக்க அவர்களுக்கு விருப்பமில்லையாம். ஆகவேதான் நாட்டின் கையிருப்பின் பெரும் பகுதியை தங்கத்தில் முடக்கி வைக்கின்றனர். மேலும் அமெரிக்க வங்கிகளில் வைத்தால் நாளை ஏதாவது ஒரு காரணத்திற்காக அவற்றை அமெரிக்க அரசு முடக்கிவிட்டால்?

இதுதான் தங்க முதலீட்டில் நமக்கும் சீனாவுக்கும் உள்ள வித்தியாசம்.

சரி அடுத்தபடியாக நம்முடைய GDPஐ எப்படியெல்லாம் உயர்த்த முடியும் என்று பார்ப்போம்.

நம்முடைய நாட்டின் மொத்த உற்பத்தி (GDP) குறையும்போதெல்லாம் அதை தூக்கி நிறுத்துவதற்கு அரசு தன்னுடைய செலவை (Expenditure) கூட்ட வேண்டும். ஏனெனில் இந்த கணக்கீட்டில் தனிநபர் மற்றும் கார்ப்பரேட் எனப்படும் நிறுவனங்களின் செலவு மற்றும் முதலீடுகள் (Savings and Investment) தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வதற்கு வாய்ப்புகள் குறைவு. பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் சூழலில் தனிநபர் வருமானமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. பிறகு எப்படி சேமிப்பது? தனிநபர் சேமிப்பு குறைந்து போனால் அவர்களுடைய வாங்கும் திறனும் (purchasing power) குறைகிறது. வாங்கும் திறன் குறைந்தால் உற்பத்தியாகும் பொருட்கள் சந்தையில் தேங்கிவிடுகின்றன. சந்தையிலேயே பொருட்கள் விற்காமல் இருக்கும் சூழலில் அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுடைய விற்பனை குறைந்துவிடுகிறது... விற்பனைக் குறைவு அவர்களுடைய வருமானத்தை குறைக்கிறது... குறைந்த வருமானம் அவர்களுடய சேமிப்பையும் அதன் விளைவாக முதலீட்டையும் பாதிக்கிறது..... இது ஒரு சுழற்சி  (cycle) இதில் சிக்கிக்கொண்டால் அதிலிருந்து மீண்டு வருவதென்பது அத்தனை எளிதல்ல.

இந்த சூழலில்தான் அரசு தலையிட்டு தன்னுடைய செலவை (Public Spending) அதிகரிக்க வேண்டும். அதுவும் கூட ஓரளவுக்குத்தான் செய்ய முடியும். இந்த சூழலில்தான் அன்னிய நாட்டின் முதலீடுகள் அவசியமாகின்றன. இதைத்தான் நம்மால் செய்ய முடியாதவற்றை மற்றவர்களைக் கொண்டு செய்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன். நம்மால் முடியாதது எதுவுமில்லை என்கிற வாதம் எவ்வளவு வெற்று வாதம் (empty argument) என்பது புரிகிறதா?

நம்முடைய நிறுவனங்களாலும் அரசாலும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத தொகையை முதலீடாக நம்முடைய நாட்டில் செய்ய வருபவர்கள் ஏதோ நம்முடைய நாட்டு பொருளாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்ற தேசப்பற்றுடன் வருவதில்லை. எங்கு விதைத்தால் நல்ல பலன் கிடைக்குமோ அங்குதானே விவசாயி விதைக்கிறான்? அதுபோன்றுதான் அன்னிய முதலீடும். அன்னிய நிறுவனங்கள் இங்கு வருவதற்கான காரணத்தை ஆராயாமல் அதன் மூலம் கிடைக்கின்ற, நம்மால் செய்ய முடியாத, முதலீட்டால் நம்முடைய நாட்டின் தொழில் வளமும் உற்பத்தியும் பெருகுகிறதா என்பதைத்தான் பார்க்க வேண்டும். 

அன்னிய முதலீடு அறவே இல்லாமல் நம்முடைய பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லை. இன்று நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் தொழில்துறையின் பங்கு 25 விழுக்காடு மட்டுமே தானாம். எட்டு விழுக்காடு விவசாயத்துறையும் மீதமுள்ள 67 விழுக்காடு சேவைத் துறையும் அளிக்கிறதாம். இந்த சேவைத் துறையிலும் பெரும்பங்கு அளிப்பது சமீப ஆண்டுகளில் வளர்ந்துவரும் கணினி மற்றும் தொழில்நுட்ப துறைகளாம். இந்த நிலை மாற வேண்டும். நாட்டின் உற்பத்தி திறன் உயர வேண்டுமென்றால் நாட்டின் முதலீடும் பன்மடங்கு அதிகரிக்க வேண்டும். இன்று பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் (Developed Countries) எனக் கருதப்படும் அனைத்து நாடுகளுமே தொழில்துறையிலும் வளர்ந்த நாடுகளே (Industrialised Countries). இன்று சீனா அவர்களுடைய கொள்கைகளுக்காக உலகளவில் வெறுக்கப்பட்டாலும் அவர்களுடைய பொருளாதார வலிமை அவர்களைக் கண்டு அச்சமடைய வைத்துள்ளது.  

உலக நாடுகளின் தர வரிசையில் இந்தியா உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென்றால் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியின் அளவும் மதிப்பும் உயர்ந்துக்கொண்டே செல்ல வேண்டும். நாட்டின் மக்கள்தொகையும் கட்டுக்குள் நிற்க வேண்டும். 

மத்தியில் எந்த கட்சி ஆட்சியை பிடித்தாலும் இப்போதுள்ள பொருளாதார கொள்கைகளிலிருந்து அடியோடு மாறிவிட வாய்ப்பே இல்லை. தேர்தல் நேரத்தில் என்ன சொன்னாலும் இதுதான் இன்றைய நிதர்சனம். இன்று மத்தியில் கொள்கைகளை வகுப்பது அரசியல்வாதிகள் அல்ல என்பதும் உண்மை. நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் இந்திய மற்றும் அன்னிய தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களே....

இந்த தொடரில் இனியும் பல பொருளாதார பதிவுகளை இடலாம் என்று நினைத்துள்ளேன்..... ஒவ்வொரு பதிவும் எழுதி முடிக்க பல இணையதளங்களிலுள்ளவைகளை தேடிப்பிடிக்க வேண்டியுள்ளதால் பல நாட்கள் தேவைப்படுகின்றன. ஆகவே அடிக்கடி இல்லாவிடினும் அவ்வப்போது எழுதுவேன்...

*********

25 நவம்பர் 2013

ஜிடிபி (GDP) அப்படீன்னா என்னாங்க?


ஒவ்வொரு மூன்று மாத கால இறுதியிலும் நம்முடைய நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று இந்திய ரிசர்வ் வங்கியின் பொருளாதார அறிக்கை கூறுவதையும் நாட்டின் நிதி அமைச்சர் இனி வரும் காலங்களில் அது முன்னேறி எதிர்பார்த்த விழுக்காட்டை அடையும் என்று ஆரூடம் கூறுவதையும் கேட்டிருக்கிறோம்.

2005 முதல் 2010ம் ஆண்டு வரை எட்டு விழுக்காடாக இருந்து வந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, மத்தியில் ஆளும் காங்கிரசின் தவறான பொருளாதார கொள்கைகளின் விளைவாக,  கடந்த இரு ஆண்டுகளாக ஐந்திலிருந்து ஆறு விழுக்காடாக குறைந்துவிட்டது என்கின்றன எதிர் கட்சிகள்.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்றால் என்ன? அதை எப்படி கணக்கிடுகின்றனர் (calculate) என்று பார்ப்போமா?

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அதனுடைய வயதை குறிப்பிடுவதல்ல. இந்தியாவின் வயது என்று சொல்ல வேண்டுமானால் அது ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலையடைந்த ஆண்டிலிருந்து எத்தனை ஆண்டுகள் கழிந்துள்ளன என்பதை வைத்து சுமார் அறுபத்தியாறு வயது என்று கூறலாம் (2013-1947).

ஆனால் அதுவல்ல ஒரு நாட்டின் வளர்ச்சி. உலக சந்தையில் ஒரு நாட்டின் வளர்ச்சி என்று குறிப்பிடுவது அதனுடைய பொருளாதார வளர்ச்சியைத்தான்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்றால் என்ன அது எப்படி கணிக்கப்படுகிறது?

அதற்கு முன்பு உங்களுடைய குடும்பம் பொருளாதார ரீதியாக எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்று யாராவது நம்மை கேட்டால் நாம் அதை எவ்வாறு விளக்குவோம் என்று பார்ப்போம்.

சாதாரணமாக நம்முடைய குடும்ப பொருளாதார வளர்ச்சி என்பது நம்முடைய வாழ்க்கைத் தரத்தின் வளர்ச்சியைத்தான் குறிக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு வாடகை வீட்டில் வசித்து வந்த நான் இப்போது சொந்த வீட்டில் வசிக்கிறேன், சைக்கிளில் சென்று வந்த நான் இப்போது நாற்சக்கர வாகனத்தில் செல்கிறேன் என்றால் என்னுடைய வருமானம் பெருகியுள்ளது என்றுதானே அர்த்தம்? இது என்னுடைய பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கிறது என்று கூறலாம்.  இந்த வளர்ச்சியை அதாவது பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த என்னுடைய ஆண்டு வருமானத்திற்கும் இப்போதுள்ள ஆண்டு வருமானத்திற்கும் இடையிலுள்ள நிகர வித்தியாசத்தை விழுக்காடு அடிப்படையில் கூறுவதைத்தான் வளர்ச்சி விகிதம் என்கிறோம். இதை AI (2013) - AI (2003)/100 என்ற சூத்திரத்தின் (formula) மூலம் எத்தனை விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது என்று கணக்கிடலாம்.

இதே அடிப்படையில் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தில் (Annual National Income) முந்தைய ஆண்டிற்கும் நடப்பு ஆண்டிற்கும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை கணக்கிடமுடியும்.

ஒரு நாட்டிலுள்ளவர்களுடைய ஒட்டுமொத்த வருமானத்தின் அடிப்படையில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுவது ஒரு வகை. இதை ஆங்கிலத்தில் Income Method என்கிறார்கள்.

இதையே ஒரு நாட்டில் ஓராண்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களின் பொருளாதார மதிப்பை (economic value) கணக்கிடுவதன் மூலமும் கண்டுக்கொள்ள முடியும். இந்த கூட்டுத்தொகையைத்தான் Gross Domestic Products அல்லது GDP என்கிறார்கள். அதாவது நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களின் ஒட்டுமொத்த மதிப்பு. தயாரிப்பு என்கிறபோது ஒருநாட்டில் கிடைக்கும் அனைத்து சேவைகளின் (services) மதிப்பும் அடங்கும்.

ஒரு நாட்டின் GDP மூன்று வழிகளில் கணிக்கப்படுகிறது.

1. நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடுவது (மேலே பார்த்த Income Method),

2.நாட்டின் ஒட்டுமொத்த செலவினங்களின் அடிப்படையில் கணக்கிடுவது (Expenditure Method),

3.நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் பொருளாதார மதிப்பின் அடிப்படையில் கணக்கிடுவது (Production Method)

உலகிலுள்ள அனைத்து நாடுகளும் இந்த மூன்று வகைகளில் ஏதாவது ஒன்றின் அடிப்படையில்தான் தங்களுடைய பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுகின்றன.

இந்தியா உட்பட பல நாடுகளும் Expenditure Methodஐ பயன்படுத்துகின்றன.

இந்த முறையில் நாட்டிலுள்ள தனிநபர் மற்றும் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் செலவிடும் தொகையுடன் மத்திய, மாநில அரசுகள் செலவிடும் தொகையும் சேர்த்து உள்நாட்டில் செலவிடப்படும் ஒட்டுமொத்த தொகை கணக்கிடப்படுகிறது. அதனுடன் இம்மூன்று வகையினரும் செய்யும் முதலீட்டுத் தொகை (Investment) சேர்த்துக்கொள்ளப்படுகிறது. இக்கூட்டுத் தொகையிலிருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளுக்கிடையிலுள்ள வித்தியாசத்தின் மதிப்பு சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

இதை சூத்திரத்தில் GDP=C+I+G+(X-M) என்று குறிப்பிடுகிறார்கள். இதில் C தனிநபர் மற்றும் நிறுவன செலவினங்களையும் I இவ்விருவகுப்பினரின் முதலீடுகளையும் G அரசு செய்யும் செலவினங்கள் மற்றும் முதலீடுகளையும் X நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பையும் M இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பையும் குறிக்கிறது.

நம்முடைய நாட்டின் GDP மதிப்பு செலவினங்களின் அடிப்படையில்தான் செய்யப்படுகிறது என்றாலும் இதையே Production Methodடிலும் கணக்கிடப்பட்டு இவ்விரண்டு முறைகளிலும் கிடைக்கும் முடிவை ஒப்பிட்டுப்பார்ப்பதும் உண்டு.

நம்முடைய நாட்டிலுள்ள அனைத்து உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் மதிப்பு (value) என்பது நாட்டில் கிடைக்கும் அனைத்து சேவை (மருத்துவம், போக்குவரத்து என்பன போன்ற) களின் மதிப்பையும் உள்ளடக்கியதாகும். இதிலிருந்து ஒரு பொருளின் இறுதி வடிவத்தை அடைய பயன்படுத்தப்படும் பொருட்களின் (Intermediary prodcuts) மதிப்பை குறைத்துவிட்டால் நாட்டின் ஒட்டுமொத்த பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு கிடைத்துவிடும்.

அது என்ன intermediary products என்று கேட்க தோன்றுகிறதல்லவா?

உதாரணத்திற்கு ஒரு ரொட்டி தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் கோதுமை அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் மைதா, டால்டா அல்லது வெண்ணெய், உப்பு என்பன போன்ற பொருட்களைத்தான் intermediary products என்கிறார்கள். இவற்றை தனித்தனியாக மதிப்பிடாமல் இறுதி வடிவமான ரொட்டியின் (Bread) மதிப்பை மட்டும் எடுத்துக்கொள்வார்கள்.

இதில் இயந்திரங்கள், இரும்பு போன்ற உலோகங்கள், கட்டுமானப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என நம்முடைய வாழ்க்கைக்கு பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருட்களும் மற்றும் நம்முடைய தேவைக்கு பயன்படுத்தும் அனைத்து சேவைகளும் அடங்கும்.

இவற்றின் தயாரிப்பு அளவிகள் (Measures or Units) வெவ்வேறாக இருக்கும் என்பதால்தான் அவற்றின் பண மதிப்பை (Money/Economic Value)கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர்.

இதை அவற்றின் உற்பத்தி மதிப்பிலும் (Production Cost) அதன் சந்தை மதிப்பிலும் (Market Price) கணக்கிட்டு ஒப்பிட்டு பார்க்கப்படுகின்றன. இரண்டு வகையிலும் கணக்கிடப்படும் மதிப்பு ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் அல்லவா?

ஆனால் ஒரு பொருள் அதன் உற்பத்தியாளரிடமிருந்து (Producer) நேராக அதன் நுகர்வோரிடம் (consumer) சென்றடைவதில்லை. சாதாரணமாக  பொருட்கள் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கப்படும் விற்பனை வரி அல்லது சுங்க வரி விதிக்கின்றன. ஒரு சில பொருட்கள் மீது (உ.ம். சமையல் எரிவாயு) அரசாங்கம் மான்யம் வழங்குகிறது.

உதாரணத்திற்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுத்துக்கொள்வோம். நமக்கு வழங்கப்படும் ஒரு சிலிண்டர் எரிவாயு தயாரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆகும் மொத்த செலவு ரூ.900 லிருந்து ரூ.1000 வரை ஆகிறது என்கிறார்கள். அதன் மீது மாநில அரசு விதிக்கும் வரியையும் சேர்க்கும்போது அதன் விலை ரூ.1050/- ஆகிறது. உற்பத்தி செலவான ஆயிரம் ரூபாயில் மத்திய அரசு மான்யமாக ரூ.600 வழங்குகிறது. ஆக, ஒரு எரிவாயு சிலிண்டர் அதன் நுகர்வோரை சென்றடையும்போது ரூ. 450/- என்ற நிலையை அடைகிறது (1000 + 50 - 600).

ஆனால் நாட்டின் GDP கணக்கிடும்போது உற்பத்தியாளர் வசமிருந்து அது சந்தைக்கு செல்லும்போது மதிப்பிடப்படும் மதிப்பைத்தான் எடுத்துக்கொள்வர். எரிவாயு சிலின்டர் எடுத்துக்காட்டில் அது ரூ.1000மாகத்தான் எடுத்துக்கொள்ளப்படும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு வகைகளிலும் கணக்கிடப்படும் நாட்டின் மொத்த வருமானம் ஒன்றாகத்தான் இருக்கும், இருக்க வேண்டும்.

ஆனால் பொருட்களின் தயாரிப்பு செலவும் சந்தை விலையும் எல்லா வருடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லையே? ஆகவே கடந்த ஆண்டோ அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு கணக்கிடப்பட்ட GDPயுடனோ ஒப்பிட்டு எத்தனை விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளோம் என்று எவ்வாறு தெரிந்துக்கொள்வது?  

அடுத்த பகுதியில்.....




20 நவம்பர் 2013

அரசியல்வாதிகள் அனைவருமே முட்டாள்கள்தானா?

அடக்கமுடைமை

குறள் எண்: 127.  யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

குறள் எண்: 129.   தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்  ஆறாதே நாவினாற் சுட்ட வடு.

திருக்குறளில் அடக்கமுடமை என்ற அதிகாரத்தில் தரப்பட்டுள்ள பத்து குறட்பாக்களில் மேலே குறிப்பிட்ட இரு குறள்கள் நாவடக்கத்தைப் பற்றி பேசுகின்றன. இவ்விரு குறட்களின் பொருள் தெரியாதவர்களே இருக்க முடியாது. 

எண் சான் உடம்புக்கு தலையே பிரதானம் என்பார்கள். 

என்னைக் கேட்டால் அதிலுள்ள நாக்கு அதை விட பிரதானம் என்பேன்.

முன்பெல்லாம், ஏன், இப்போதும்தான், அரசியல் பிரமுகர்கள்தான் இந்த அடக்கத்தை காற்றில் பறக்க விட்டுவிட்டு சகட்டுமேனிக்கு பேசிவிட்டு செல்வார்கள். அதிலும் தேர்தல் நேரம் என்றால் கேட்கவே வேண்டாம். சொல்ல தகாததையெல்லாம் சொல்லிவிட்டு ஊடகங்கள் திரித்துவிட்டன என்று கூசாமல் பொய் சொல்வார்கள். 

இப்போது மெத்த படித்தவர்களும் இந்த பட்டியலில் இணைவதுதான் வேதனையளிக்கிறது.

கடந்த சில நாட்களாக வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று ஒரு சில வார்த்தைகளைக் கூறிவிட்டு வாங்கிக் கட்டிக்கொள்ளும் அறிவியல் விஞ்ஞானியும் பாரத ரத்னா விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான திரு. CNR RAOவைப் பற்றித்தான் கூறுகிறேன்.



இவரை நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதுக்கு தெரிவு செய்த அரசியல்வாதிகளையே 'முட்டாள்கள்' என்று வாய் தவறி - உண்மையில் நாக்குதான் தவறு செய்தது. ஆனால் சொல்வது வாய் தவறி விட்டது என்று!! - கூறிவிட்டு நான் சொல்ல வந்தது அது இல்லை என்கிறார். 'முட்டாள்தனம்' என்பதற்கும் 'முட்டாள்' என்பதற்கும் அப்படியென்ன பெரிய வித்தியாசம் என்று விளங்கவில்லை. முட்டாள்தான் முட்டாள்தனத்தை செய்ய முடியும்! அரசு அறிவியல் ஆய்வுகளுக்கு போதிய அளவு பண உதவி வழங்காதது முட்டாள்தனம் என்ற பொருள்பட நான் சொன்னதை ஊடகங்கள் திரித்து அரசியல்வாதிகள் அனைவரையும் நான் முட்டாள்கள் என்று கூறியதுபோல் வெளியிட்டுவிட்டன என்கிறார். 

அதுமட்டுமா? சீனர்களைப் போல் இந்தியர்கள் கடின உழைப்பாளிகள் இல்லையென்றும் திருவாய் மலர்ந்திருக்கிறார். 

இவர் யார் சீனரா? அல்லது இவர்களுடன் பணியாற்றும் அத்தனை விஞ்ஞானிகளும் சீனாவில் இருந்து வந்தவர்களா? 

இருமுறை செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை செலுத்த முயன்று தோல்வியடைந்தவர்கள்தானே சீனர்கள்? நம் இந்தியர்கள் அதில் வெற்றியடையும் நாள் வெகு தொலைவில் இல்லையே?

சீனர்கள் இந்தியர்களைக் காட்டிலும் தேசப் பற்று உள்ளவர்களாம்! இவர் எதை தேசப் பற்று என்கிறார் என்று விளங்கவில்லை. எந்த இந்திய பிரஜை தேசப்பற்று இல்லாமல் இருந்ததாக இவர் குறிப்பிடுகிறார்? அன்னிய நாட்டுக்கு சென்று பணியாற்றுபவர்களையா? சீனாவில் வாழும் சீனர்கள் இந்தியர்களைப் போல வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பாததற்கு மூல காரணம் இந்தியர்களைப் போன்று ஆங்கில அறிவு அவர்களுக்கு இல்லை என்பதுதான். உழைப்பு என்று எடுத்துக்கொண்டால் நாளொன்றுக்கு பதினைந்து மணி நேரம் தொடர்ச்சியாக இன்றும் பணியாற்றும் இந்திய இளைஞர்கள் இருப்பதால்தான் ஐ.டி துறையில் இவர்களால் உலகெங்கும் சென்று பிரகாசிக்க முடிகிறது. இதற்கு முந்தைய தலைமுறை இந்தியர்களை வேண்டுமானால் இந்த அளவுக்கு உழைக்காதவர்கள் சொல்லலாம். ஆனால் அதையும் பொதுவாக சொல்லிவிட முடியாது. அன்று தன்னலம் பாராமல், நேரம் பாராமல் உழைத்து தங்களுடைய குழந்தைகளை படிக்க வைத்ததால்தான் இன்றைய தலைமுறை இந்தியர்கள் படிப்பிலும், விஷய ஞானத்திலும் சிறந்து விளங்க முடிகிறது. ஆனாலும் இப்படி நம்மை நாமே தரம் தாழ்த்திக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. பாமரன் பேசினால் பொறுத்துக்கொள்ளலாம். இந்தியாவின் இரத்தினம் என்று கருதப்படுபவர் இப்படி பேசலாமா?

நாட்டின் மிக உயர்ந்த விருதுக்கு தகுதி பெற வெறும் படிப்பும், அறிவும் மட்டுமே போதாது. தன்னடக்கமும் மிகவும் அவசியம். தன்னடக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே நாவடக்கமும் இருக்கும். இது இரண்டும் இல்லாதவர்கள் வாழ்வில் எத்தகைய உயர்வை அடைந்தாலும் பிறருடைய பழிச்சொல்லுக்கு ஆளாவது நிச்சயம்: திரு CNR ராவைப் போல.

இந்த விஷயத்தில் இதே விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் டென்டுல்கர் பரவாயில்லை. கடந்த இருபத்தி நான்கு ஆண்டு கால பொது வாழ்வில் (No one can dispute that he is one of the most popular public figures in India) ஒரு முறை கூட தகாத பேச்சுக்காக பழித்துரைக்கப்பட்டதில்லை. வெறும் பள்ளி படிப்பை மட்டுமே கொண்டிருக்கும் ஒருவர், புகழின் உச்சிக்கே சென்ற ஒருவர், இந்த அளவுக்கு தன்னடக்கத்துடன் இருப்பது அபூர்வம்தான். அந்த வரிசையில் வரும் இன்னொரு விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த். 

இவ்விருவருடன் ஒப்பிடுகையில் மெத்த படித்த CNR சற்று தரம் இறங்கிவிட்டார் என்றே கூற வேண்டும். 

கடந்த திங்கள் கிழமை அன்று இரவு CNN-IBN தொலைக்காட்சியில் இதைப் பற்றி அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது அவர் முகத்தில் வழிந்த அசட்டுத்தனத்தை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. நாவடக்கமின்மை அவரை எந்த அளவுக்கு இறக்கிவிட்டது! 

சந்தனத்தைப் பூச வந்தவர்கள் முகத்தில் கரியை பூசி அனுப்பியதுபோல் இருந்தது!

***********



18 நவம்பர் 2013

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்ன சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது ஏன்?

தமிழக சட்டமன்றத்தை அவசர, அவசரமாக கூட்டி காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாக கலந்துக்கொள்வது என்று எடுத்த முடிவை எதிர்த்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிய தமிழக அரசு அது மக்களுக்கு முழுமையாக சென்றடைவதற்கு முன்னரே தஞ்சையில் எழுப்பப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றச் சுற்றுச் சுவரையும் அதனையொட்டி அமைக்கப்பட்டிருந்த பூங்காவையும் ப்ரொக்ளைன் இயந்திரம் கொண்டு இடித்து தரைமட்டமாக்கி அதிர்ச்சியை அளித்தது. 

இதை சற்றும் எதிர்பாராத எதிர்கட்சிகள் அனைத்தும் - காங்கிரசைத் தவிர - இது தமிழக முதல்வரின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது என்றன. பழ. நெடுமாறன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. 

இதற்கு அரசு சொல்லும் காரணம்: இடிக்கப்பட்ட பகுதிகள் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது. இவற்றை அகற்ற வேண்டுமென்று சம்மந்தப்பட்டவர்களுக்கு பலமுறை அறிவிக்கைகள் அனுப்பியும் அவர்கள் கண்டுக்கொள்ளாததால்தான் இதை இடிக்க வேண்டியதாயிற்று.

ஆனால் உண்மை காரணம் அதுவல்லவாம். இந்த நினைவுச் சின்னத்தை எழுப்பியவர்களுக்குப் பின்னால் இருந்த ஒருவர் முதலமைச்சரின் பரம வைரி என்பதுதானாம்! 

ஒரு நாளைக்கு முன்பு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிவிட்டு அடுத்த நாளே இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியில் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யபட்ட இலங்கை தமிழர்கள் நினைவாக தஞ்சையில் எழுப்பப்பட்ட ஒரு நினைவுச் சின்னத்தின்  சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய தமிழக அரசின் இந்த செய்கையால் ஆட்சியாளரிளின் உண்மை முகம் தெரிந்துவிட்டது என்றும் இதற்கு காரணமாக இருந்த ஆளும் கட்சிக்கு எதிர்வரும் தேர்தல்களில் தகுந்த பாடம் புகட்டுவோம் என்ற மதிமுக, பாமக போன்ற கட்சிகளின் வாதம் தமிழக மக்கள் முன் எடுபடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

முள்ளிவாய்க்கால் முற்றம் நினைவுச் சின்னம்




ஆனால் இப்படியொரு சின்னம் தமிழ்நாட்டில் திறக்கப்பட வேண்டிய அவசியமே இல்லை என்பதுதான் எங்களுடைய கட்சியின் முடிவு என்றார் காங்கிரஸ் மாநில தலைவர் ஞானதேசிகன்.

இப்படியொரு நினைவுச் சின்னம் தேவைதானா? முள்ளிவாய்க்காலில் அப்படியென்ன நடந்துவிட்டது?

சுருக்கமாக பார்க்கலாம். 

இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ போராளிகளுக்கும் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த நேரம். தங்கள் வசம் இருந்த பெரும்பாலான பகுதிகளை இழந்துவிட்டு பின்னோக்கி ஓடத்துவங்கியிருந்தனர் போராளிகள். இந்த சூழலில் வன்னி மாவட்டத்தை முற்றுகையிட்டு எப்போது தாக்குதலை துவங்கலாம் என்று காத்திருந்தது இலங்கை ராணுவம். 

ஒருபக்கம் போராளிகள், மறுபக்கம் இராணுவம். இவர்களுக்கு இடையில் சுமார் மூன்று இலட்சம் அப்பாவி மக்கள். போராளிகளிடமிருந்து தப்பித்து இலங்கை ராணுவத்திடம் சரணடந்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தவர்கள். 


முள்ளிவாய்க்கால் வன்னி மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமம். மலை, மகுடு என எவ்வித முரண்பாடுகளும் இல்லாத சமவெளிப் பிரதேசம். போர்க்காலங்களில் எதிரிகளின் தாக்குதலிலிருந்து பதுங்கி தப்பிக்க முடியாதபடி நிலம் வெட்டவெளியாக இருந்தது. தங்கள் உயிருக்கு பயந்து மக்கள் தஞ்சமடைந்திருந்த இந்த இடத்தை No Fire Zone ஆக அறிவிக்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தியது அகில உலக செஞ்சிலுவை சங்கம். 

அதுவரை நடந்த போரில் காயமுற்றிருந்த போராளிகள் மற்றும் இலங்கை இராணுவத்தினருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்டிருந்த தாற்காலிக மருத்துவமனையும் அங்குதான் இருந்தது. இவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த போரில் காயமுற்ற பல அப்பாவி மக்களும் இந்த மருத்துவமனையில்தான் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆகவேதான் செஞ்சிலுவை சங்கம் மட்டுமல்லாமல் ஐநா மனித உரிமைகள் குழுவின் தலைவரும் இந்த பகுதியை பாதுகாப்பு வளையமாக அறிவிக்க இலங்கை அரசை வலியுறுத்தினர். 

ஆனால் இலங்கை அரசு செவிமடுக்கவில்லை. அவர்களுக்கு இந்த சலுகையைப் பயன்படுத்தி கூட்டத்தோடு கூட்டமாக போராளிகள் அமைப்பைச் சார்ந்த தலைவர்களும் தப்பித்துக்கொள்வார்கள் என்ற அச்சம் இருந்தது. போராளிகளுக்கோ இந்த மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி இராணுவத்தினரிடமிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம். 

இருப்பினும் ஐநாவின் தொடர் வற்புறுத்தலுக்கு பணிந்து முள்ளிவாய்க்காலில் மருத்துவமனை அமைந்திருந்த பகுதியை No Fire Zoneஆக அறிவித்தது இலங்கை அரசு. இதற்கு தங்களுடைய தொடர் வற்புறுத்தலும் ஒரு காரணம் என்று மார்தட்டிக்கொண்டது இந்திய அரசு.

ஆனால் உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே என்பதுபோல் பாதுகாப்பு வளையம் என்று அறிவித்த அதே இடத்தை கண்மூடித்தனமாக ஆகாயம், தரை, கடல் என அனைத்து திசைகளிலிருந்தும் தாக்கியது இலங்கை இராணுவம். எவ்வித பாதுகாப்பும் இன்றி நிர்க்கதியாய் நின்ற அப்பாவி மக்களில் சுமார் எண்பதாயிரம் பலியாயினர். எண்ணற்றோர் இருந்த இடம் தெரியவில்லை....

இதற்கு தங்களுடைய உத்தரவை இராணுவம் மதிக்காததுதான் முக்கிய காரணம் என்று கூறி அப்போதைய இராணுவ தலைவர் பொன்சேகாவை போர்க்குற்றத்திற்கு ஆளாக்கி தப்பித்தது இலங்கை அரசு.

ஆனால் அதிக அளவிலான சிவிலியன் சாவுக்கு  அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்திய போராளிகள்தான் காரணம் என்றது இலங்கை இராணுவம். 

முள்ளிவாய்க்காலை ஒட்டியிருந்த கடற்பகுதியில் இவ்விருதரப்பினரிடமிருந்து தப்பி வரும் மக்களை  காப்பாற்றி அழைத்துச் செல்ல செஞ்சிலுவை அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க அமெரிக்க கப்பல் ஒன்று காத்திருந்தது எனவும் ஆனால் அதை நோக்கி சென்ற மக்களை ஒரு புறம் போராளிகளும் மறுபுறம் இராணுவமும் சுட்டதால்தான் இந்த அளவுக்கு மனித உயிர்கள் பலியாயின என்றன ஊடகங்கள்.

எது உண்மையோ, பொறியில் சிக்கிய எலிகளாய் அப்பாவி மக்கள் இவர்களுடைய ஈவு இருக்கமற்ற தாக்குதல்களுக்கு பலியானதென்னவோ உண்மை.

இந்திய சுதந்திர போராட்டத்தின்போது ஏற்பட்ட சிப்பாய் கலகத்தில் ஈடுபட்ட இந்திய சிப்பாய்கள் நாலாபுறம் சுற்றிவளைக்கப்பட்டு சுட்டுக்கொலை, ஜாலியன்வாலபாத்தில் குழுமியிருந்த கூட்டத்தை எவ்வித முன்னறிவுப்பும் இன்றி கொன்று குவிப்பு என்று இதுபோன்ற பல படுகொலைகளுக்கு காரணமாயிருந்த இங்கிலாந்தைச் சார்ந்த பிரதமர்தான் இன்று முள்ளிவாய்க்கால் கொலைக்கு பகிரங்க விசாரணை வேண்டும் என்று குரல் கொடுக்கிறார். இதை சுட்டிக்காட்டித்தானோ என்னவோ கண்ணாடி வீட்டிலிருந்துக்கொண்டு கல்லெறிகிறார் என்கிறார் ராஜபக்‌ஷே.

ஆனால் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு நடைபெற்ற மிகப் பெரிய மக்கள் படுகொலை நடந்ததாகக் கூறப்படும் இடம்தான் இந்த முள்ளிவாய்க்கால் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் இது அனைத்து உலக மக்களாலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

அத்தகைய தாக்குதலுக்குள்ளாகி பலியான அப்பாவி மக்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்ப நினைத்ததில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் இதை எழுப்பியவர்கள் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு முழுமையாக கட்டுப்பட்டு செயல்பட்டிருந்தால் இன்று அரசின் எதிர் நடவடிக்கைகளுக்கு ஆளாகாமல் இருந்திருக்கலாம்.  

**********





15 நவம்பர் 2013

காமன்வெல்த் கூட்டத்தில் இந்தியா பங்குபெறுவது சரிதானா?

இலங்கையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பிரதமர்  கலந்துக்கொள்ளாவிடினும் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையில் பங்குகொள்வதென என்ற முடிவு தமிழ்நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாநாட்டை அறவே புறக்கணிக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக தமிழகமெங்கும் நடைபெற்று வந்த போராட்டங்களும் மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் நோக்கத்துடன்  தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டி இந்திய அரசின் முடிவை எதிர்த்து சிறப்பு தீர்மானமும் விழலுக்கு இரைத்த நீராகிப் போயின. 

இந்த சூழலில் இந்தியா எடுத்த முடிவு சரியானதுதானா என்ற விவாதத்தில் இறங்கவே பலரும் தயங்குகின்றனர். எல்லா விஷயத்திலும் தயங்காமல் தங்களுடைய கருத்துக்களை எழுதிவந்த பல மூத்த பதிவர்களும் கூட பெரும்பாலோனோருடைய கருத்துக்களைச் சான்றே எழுதி தப்பித்துக்கொள்வதைக் காண முடிகிறது. 

ஆகவே இந்திய அரசின் இந்த முடிவு சரியானதுதானா என்பதை நடுநிலையான கண்ணோட்டத்துடன் அணுகினால் என்ன என்று பல நாட்களாகவே எண்ணியிருந்தேன். 

முதலில் காமன்வெல்த் அமைப்பு என்றால் என்ன, அதன் உறுப்பு நாடுகள் யார், யார் என்பதை சுருக்கமாக பார்ப்போம். 

ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்த 53 நாடுகள் தாமாக முன்வந்து அமைத்துக்கொண்டதே காமன்வெல்த் என்ற அமைப்பு. இதை வேடிக்கையாகவும் சிலர் வர்ணிப்பதுண்டு. 

அதாவது இந்த 53 நாடுகளின் ஒட்டுமொத்த சொத்தையும் (common-wealth) ஆங்கிலேயர்கள் சுருட்டிச் சென்று தங்களுடைய நாட்டை வளம்கொழித்த நாடாக்கியதை அவ்வப்போது - இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை - நினைவுப்படுத்திக்கொள்ளத்தான் இந்த நாட்டின் தலைவர்கள் இந்த 53 நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டின் தலைநகரில் கூடுகின்றனராம்! இந்த அமைப்பிலுள்ள நாடுகளில் மிகவும் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்ற அடிப்படையில் இந்த அமைப்பிலுள்ள நாடுகளில் மிக முக்கியமான நாடாக இந்தியா கருதப்பட்டுவருகிறது. 

ஆனால் துவக்கத்திலிருந்தே இந்த நாடுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒன்றுகூடி தங்களுடைய பழைய அடிமை வாழ்வை நினைவுபடுத்திக்கொள்வதைத் தவிர பெரிதாக எதையும் சாதித்துள்ளதாக பெருமையடித்துக்கொள்ள முடியாது.

அதுபோலவே இந்த அமைப்பிலுள்ள நாடுகள் - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் கனடாவைத் தவிர, பொருளாதாரத்திலோ அல்லது தொழில்துறையிலோ வளர்ந்த நாடுகள் என்றும் தங்களைக் கூறிக்கொள்ளவும் முடியாது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடாவும் கூட உலகிலுள்ள மற்ற வல்லரசுகள் எடுக்கும் முடிவுகளைச் சார்ந்துதான் தங்களுடைய முடிவுகளையும் அமைத்துக்கொள்கின்றனவே தவிர இதுவரை உலகில் நடந்த எந்தவொரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்விலும்  தனித்து முடிவெடுத்ததில்லை. 

ஆகவே இந்த அமைப்பு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் சம்பிரதாய மாநாட்டில் - உண்மையில் சொல்லப் போனால் இது ஒரு கூட்டம் (Meeting of Heads of Governments) மட்டுமே. மாநாடு என்று கூட அவர்களே கூறுவதில்லை -  கூட்டத்தின் முடிவில் உப்புசப்பில்லாத சில தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு கலைந்து செல்லும் கூட்டம் என்று கூட கூறலாம். 

இந்த அமைப்பின் கடைசி கூட்டம் 2011ல் ஆஸ்திரேலியாவிலுள்ள பெர்த் நகரத்தில் (Perth) நடந்தது.  ஆஸ்திரேலியா யுரேனியம் வழங்க மறுத்துவிட்டதை கண்டித்து அந்த கூட்டத்தில் நம்முடைய பாரதப் பிரதமர் கலந்துக்கொள்ளவில்லை. அப்போது (இப்போதும்தான்) குடியரசு துணைத்தலைவராக இருந்த ஹமீத் அன்சாரியின் தலைமையில் ஒரு அணி சென்றது. ஆனால் எதற்கு பிரதமர் அந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை என்பதை தெளிவாக கூறாமல் அவருக்கு உள்நாட்டில் நிறைய அலுவல்கள் இருந்தன என்று பூசி மெழுகினார்கள். கூட்டத்தின் இறுதியில் இந்திய பிரதமர் கூட்டத்தில் கலந்துக்கொள்ளாததற்கும் ஆஸ்திரேலியா யுரேனியன் வழங்க மறுத்ததற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது ஆஸ்திரேலியா!!

அந்த கூட்டத்தில் என்ன அப்படி பெரிதாக சாதித்தார்கள் என்றால் ஒன்றும் இல்லையென்றுதான் பதில் வரும். அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட எந்தவொரு தீர்மானத்திற்கும் அங்கத்தினர்களின் ஒட்டுமொத்த ஆதரவு கிடைக்கவில்லை. அப்போதும் ஒருசில நாடுகளால் (கனடா என்று அர்த்தம் கொள்க) கொண்டுவரப்பட்ட மனித உரிமை மீறல் சம்மந்தப்பட்ட தீர்மானத்தை எதிர்த்த நாடுகளில் இந்தியாவும் இலங்கையும் இருந்தன. அந்த கூட்டத்திலேயே இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் 'இந்த அமைப்பு நாளுக்கு நாள் எதற்கும் பலனற்ற அமைப்பாக மாறி வருகிறது. இதற்கு அங்கத்தினர்களுக்கிடையில் ஒற்றுமை இல்லாததும் ஒரு முக்கிய காரணம் என்றாலும் பல அங்கத்தினர்கள் எவ்வித ஈடுபாடும் காட்டாததும் ஒரு காரணம்.' என்று எடுத்துரைத்தார். அவரைத் தொடர்ந்து மலேசியாவும் உறுப்பு நாடுகளின் அக்கறையின்மையை (indifference) எடுத்துக்காட்டி இந்த கூட்டத்தில் முன்மொழியப்படும்  தீர்மானங்கள் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப்படாதது இந்த அமைப்பின் செயலற்றத்தன்மையையே இது காட்டுகிறது.' என்று குறைகூறியது. 

அந்த கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே பேசுவதற்கு அழைக்கப்பட்டபோது கனடா பிரதமர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார். மேலும் காமன்வெல்த் கூட்டமைப்பின் அடுத்த கூட்டம் (அதாவது 2013ல்) இலங்கை தலைநகரில் நடத்தப்படுவதாக முடிவானால் அதை கனடா புறக்கணிக்கும் என்று அப்போதே அவர் அறிவித்தார். ஆனால் அவருடைய முடிவை கூட்டத்தில் பங்குகொண்ட எந்த உறுப்பு நாடும் கண்டுக்கொள்ளவில்லை, இந்தியாவையும் சேர்த்து.

இந்த அமைப்பின் முக்கியத்துவம் இவ்வளவுதான். 

இலங்கையில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் இந்தியா கலந்துக்கொள்வதால் அந்த நாட்டின் அதிபருடைய செயல்களுக்கு அங்கீகாரம் அளித்துவிடுவதுபோலாகிவிடும் என்கிற வாதத்தில் எல்லாம் எவ்வித பொருளும் இல்லை. அதுபோலவே அந்த கூட்டத்தில் பங்குபெறும் நாடுகள் எல்லாம் இலங்கையில் மனித உரிமை மீறல்களை அங்கீகரிக்கின்றன என்பதும் பொருள் இல்லை. இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சம்பிரதாய கூட்டம் அவ்வளவுதான். எப்போதும்போலவே மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சில நாடுகள் - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா - தீர்மானங்களை முன்மொழியும். அதை பல நாடுகள் கண்டுக்கொள்ளவும் போவதில்லை, இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஒன்றும் சொல்லாமல் மவுனம் காக்கும், இலங்கையை ஜால்ரா அடிக்கும் நாடுகள் - பாக்கிஸ்தான், பங்களாதேஷ் - அதை எதிர்க்கும்.... இந்த அமைப்பில் மிக அதிக அளவிலான அங்கத்தினர்கள் ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்துதான் வருகின்றனர். அவர்களுக்கு மனித உரிமை மீறல் என்பதன் அர்த்தமே புரிய வாய்ப்பில்லை. ஆகவேதான் அவர்கள் கண்டத்தைச் சார்ந்த, நோபல் பரிசு பெற்ற, பாதிரியார் டெஸ்மன்ட் டூட்டு இந்த கூட்டத்தை புறக்கணியுங்கள் என்று கூறியதை அவர்களில் எவரும் பொருட்படுத்தவே இல்லை.

இந்த வருடமும் இந்த கூட்டத்தின் இறுதியில் எந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தமுடிவும் எடுக்காமல் கூட்டம் முடிவு பெறும். இதுதான் உண்மையில் நடக்கப் போகிறது. இந்த மனித உரிமை மீறல் தீர்மானம் கடந்த மூன்று கூட்டங்களிலும் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படாமலே போனது என்பதும்  இதை ஒவ்வொரு முறையும் எதிர்த்து நின்ற நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

இந்த அமைப்பு நடத்திய முந்தைய சில கூட்டங்களில் ஏதாவது ஒரு காரணத்திற்காக பாரதப் பிரதமர் கலந்துக்கொள்ளாமல் இருந்திருக்கிறார் என்பதால் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் கூட்டத்திலும் அவர் கலந்துக்கொள்ளப் போவதில்லை என்பது அவ்வளவு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவு இல்லை என்பதும் உண்மை. 

மேலும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளாததற்கு உண்மையான காரணத்தையும் பிரதமர் ராஜபக்‌ஷேவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடவில்லை போலிருக்கிறது. இதற்கு முந்தைய கூட்டத்தில் கலந்துக்கொள்ளாதபோது என்ன காரணங்களை சுட்டிக்காட்டி ஆஸ்திரேலிய பிரதமருக்கு எழுதினாரோ அந்த கடிதத்தை நகல் எடுத்து அனுப்பப்பட்டதுபோல்தான் உள்ளது ராஜபக்‌ஷேவுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதமும்!   

இந்த கூட்டத்தில் உள்நாட்டில் உள்ள இத்தனை எதிர்ப்புகளையும் மீறி இந்தியா எதற்காக கலந்துகொள்வது என்று முடிவெடுத்தது என்ற கேள்வி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் கேட்கப்பட்டபோது அவர் அளித்த பதிலின் சாராம்சம் இதுதான்.

1. இலங்கை நம்முடைய அண்டை நாடுகளில் மிகவும் முக்கியமான நாடு. நம்முடைய மற்ற அண்டை நாடுகளுடன் நாம் எவ்வாறு சுமுக உறவு வைத்துக்கொள்ள முயல்கிறோமோ அதே போன்ற உறைவை இலங்கையுடனும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் நம்முடைய விருப்பம்.

2.சமீபத்தில் நடந்து முடிந்த போரில் வீடுகளையும் உரிமைகளையும் இழந்து தவிக்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு மறுவாழ்வு அமைத்துக் கொடுக்க இதுவரை இந்தியா எடுத்துள்ள முயற்சிகள் உண்மையில் பலனளிக்க வேண்டுமென்றால் அந்த முயற்சிகளில் இந்தியா தொடர்ந்து ஈடுபட வேண்டும். அதற்கு இலங்கையுடன் சுமுகமான உறவு இருக்க வேண்டியது அவசியம்.

3.நம்முடைய தொடர் முயற்சியால் மட்டுமே இலங்கை வட மாகாண தேர்தலை நடத்த சம்மதித்தது. இத்தகைய முயற்சிகளை இனியும் தொடரவும் இலங்கையுடன் சுமூக உறவு வைத்திருப்பது அவசியமாகிறது.   

4. இலங்கை மீதான போர்க்குற்றங்களைப் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் சூழலில் அதில் பங்குகொண்டு நம்முடைய கருத்துக்க்ளையும் எடுத்து வைக்கக்கூடிய வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கக் கூடும்.

5.இந்திய மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதுபோன்ற இரு நாடுகளுக்கிடையிலான சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு காணவும் இலங்கையுடனான சுமூக உறவு தொடர வேண்டும்.

வெளியுறவு அமைச்சரின் விளக்கங்கள் எந்த வகையில் நியாயமாக தென்படுகிறது என்பது அவரவர் கண்ணோட்டத்தைப் பொருத்தது. 

இந்த விஷயத்தை நடுநிலையான கண்ணோட்டத்துடன் அணுகுபவர்களுக்கு வெளியுறவு அமைச்சர் கூறியதிலுள்ள நியாயங்களை கண்டுக்கொள்ள முடியும். 

ராஜபக்‌ஷே அரசு இலங்கையில் நடத்தியது அட்டூழியம்தான், போர்க்குற்றங்கள்தான். இல்லையென்று மறுப்பதற்கில்லை. ஆனால் அவற்றை அமெரிக்கா போன்ற நாடுகளாலேயே தடுத்து நிறுத்த முடியாமல்போனது. ராஜபக்‌ஷே அரசை எதிர்த்து ஐநா சபையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை காமன்வெல்த் அமைப்பில் இல்லாத நாடுகள் பலவும் இணைந்து தொடர்ச்சியாக பல மாற்றங்களைக் கொண்டு வந்து அந்த தீர்மானத்தை நீர்த்துப் போக செய்துவிட்டன. 

இத்தகைய நாடுகள் பெரும்பாலானவைகளில் இத்தகைய படுகொலைகள், போர்க்குற்றங்கள் நடந்திருப்பதுதான் இதற்குக் காரணம். ஆகவே இது முழுக்க, முழுக்க இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று பூசிமெழுகிவிட்டனர். 

இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலுள்ள காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாம் நபரின் தலையீட்டை இந்தியா எப்படி விரும்பவில்லையோ அதுபோலவே எங்களுடைய நாட்டில் நடைபெறும் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகள் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்று இலங்கை அரசு பலமுறை பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆகவே இந்த விவகாரத்தில் இந்தியோ போன்ற நாடுகள் ஓரளவுக்குத்தான் தலையிட்டு சுமூக தீர்வு காண முடியுமே தவிர காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்தோ அல்லது ஐநா சபையிலிருந்தோ தள்ளிவைத்து இலங்கையை அடிபணிய வைத்துவிட முடியாது என்பதை அனைவரும் புரிந்துக்கொள்வது நல்லது.

இலங்கையை எதிரி நாடாக பாவித்து சாதிப்பதை விட ஒரு நட்பு நாடாக விருப்பம் இல்லாவிட்டாலும் அங்கு இன்றும் வாழும் தமிழர்களுடைய நலனுக்காக சகித்துக்கொண்டு செல்வது காலத்தின் கட்டாயம். 

ராஜபக்‌ஷேவோ அல்லது அவருடைய சர்வாதிகார குடும்பமோ என்றென்றைக்கும் இலங்கைய ஆளப் போவதில்லை.  இனிவரும் காலங்களில் இலங்கையில் ஆட்சி பொறுப்பை ஏற்கும் தலைவர்களுடைய கண்ணோட்டம் மாறலாம். 

காலங்கள் மாறும், காட்சிகள் மாறும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.


*************  




13 நவம்பர் 2013

சொந்த செலவில் சூன்யம் (முடிவுரை)

கோபால் மீதான மாதவியின் கொலை வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு அடுத்த நாள் காலை எஸ்.பி. சந்தானத்தின் அறையில்  அவருடைய மேசையை சுற்றி ஆய்வாளர் பெருமாள், துணை ஆய்வாளர்கள் தன்ராஜ், ஷங்கர் மற்றும் சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலைய துணை ஆய்வாளர் பாலசுந்தரம் ஆகியோர் அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்து அவருடைய வருகைக்காக காத்திருந்தனர். 

அடுத்த சில நிமிடங்களில் எஸ்.பி. அறைக்குள் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்ததும் அவருடைய மேசை மீது தயாராக வைக்கப்பட்டிர்ந்த டேப் ரிக்கார்டரின் ப்ளே பொத்தானை அழுத்தினார் தன்ராஜ்.

அதிலிருந்து முருகேசனின் குரல் அறையை நிறைத்தது.

ஒலிநாடா ஓட, ஒட தன்ராஜின் அடுக்கடுக்கான கேள்விகள் முருகேசனை திணறடித்ததை அறையிலிருந்த அனைவரும் ரசித்தனர், ஆய்வாளர் பெருமாளைத் தவிர. அவரைத் தவிர அந்த அறையில் இருந்த அனைவருமே நேரடியாக அதிகார பதவிகளில் நுழைந்தவர்கள் என்பதால் தான் தனித்து விடப்படிருந்ததைப் போல் உணர்ந்தார் அவர். 

'ஓ! இதான் உங்க ஸ்டைலா..... நல்லாத்தான் இருக்கு..... நைஸ் வொர்க்' என்றார் எஸ்.பி.

அவருடைய பாராட்டு ஆய்வாளர் பெருமாளை எரிச்சலடையச் செய்தாலும் வேறு வழியின்றி மவுனமாக அமர்ந்திருந்தார். 

தன்ராஜின் கேள்விகளைத் தொடர்ந்து ஷங்கரின் விசாரணை முறையும் எஸ்.பியை கவர்ந்திருக்க வேண்டும்... 'This is your style.....தன்ராஜோட ஸ்டைல்லருந்து வித்தியாசமாருந்தாலும் you complement each other..' என்றார் எஸ்.பி. 'பேசாம ஒங்க ரெண்டு பேரையும் Crime Branchக்கு மாத்திட்டா என்னன்னு தோனுது.... என்ன சொல்றீங்க?'

தன்ராஜும் ஷங்கரும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தனர். நா நேத்து சொன்னத சாரும் சொல்றார் பாத்தியா என்பதுபோலிருந்தது தன்ராஜின் பார்வை.

'நாங்க ரெடி சார்' என்றனர் இருவரும்.

'சரி.... கமிஷனர்கிட்ட சொல்றேன்....' என்ற எஸ்.பியின் கவனத்தை ஈர்த்தது ஒலிநாடாவில் இருந்து வந்த தன்ராஜின் அடுத்த கேள்வி. 

'நாந்தான் மர்டர் பண்ணேன்னு சொன்னா மட்டும் போறாது..... எதுக்கு பண்ணே, அதச் சொல்லு.'

'பின்னே என்ன சார்? அவளெ எவ்வளவு கஷ்டப்பட்டு சென்னைக்கி கொண்டு வந்து தொழில்ல எறக்கி விட்டேன்....? அவ பாட்டுக்கு திடீர்னு ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்ட்டா அப்புறம் என் கதி? இது உனக்கு வேணான்டின்னு எத்தன தடவையோ சொல்லி பாத்தேன்.... கேக்கல..... அதான்......'

'சரி.... அப்புறம் எதுக்கு ராமாரஜன இதுல கூட்டு சேத்த?'

'அவனுக்கும் இந்த ஐடியா இருந்துது சார்.... என்னைக்கி அவனெ வெளியில போடா வேலைக்கார நாயேன்னு அவ திட்டுனாளோ அதுலருந்தே அவள போட்டுத்தள்ளிறணும்னு சொல்லிக்கிட்டுத்தான் இருந்தான்.... ஆனா நம்ம அளவுக்கு தைரியமும் இல்ல.... ஒடம்புல தெம்பும் இல்ல...... நா பாத்துக்கறன்டான்னு சொல்லியும் கேக்காம இல்ல மச்சான் நா பாத்துக்கறேன்னுட்டு போனான்..... சும்மா புடிச்சி தள்ளிட்டு வந்து போட்டு தள்ளிட்டன்டா மச்சான்னு சொன்னான். ஆனா அவனால இது முடியாதுன்னு எனக்கு தெரியும்.... அதனாலதான் எதுக்கும் செக் பண்லாம்னு ஒரு ஆஃபனவர் கழிச்சி கூப்ட்டேன்.... நா நெனச்சிருந்தா மாதிரியேதான் நடந்திருந்துது.... அதான் அவனையும் இழுத்துக்கிட்டி மறுபடியும் அங்க போனோம். ஆனா கடைசி நேரத்துல என்னால முடியாது மச்சான்.... அவ மேல உசுரையே வச்சிருந்தேன்... அவ செத்துக்கிட்டக்கறத பாக்கற தெம்பு எனக்கில்லேன்னுன்னுட்டு கழண்டுக்கிட்டான். சரின்னுட்டு அவனெ பார்க்கிங்ல வுட்டுட்டு நா மட்டும் போனேன். நா நினைச்சா மாதிரியே அங்க அரைகுறை மயக்கத்தோட கிடந்தா.... இனிமேலும் புழைச்சா நம்பள காட்டிக் குடுத்துருவான்னுதான் மறுபடியும் அவ தலைய புடிச்சி சோபா கை மேல செமத்தியா இடிச்சி கொன்னுட்டு 'பரவால்லடா நீ போட்ட போடுல ஆள் க்ளோஸ்'னு சொல்லி அவந்தான் இந்த கொலைய செஞ்சான்னு அவனெ நம்பவச்சேன். ஆனா கேஸ் கோர்ட்டுக்கு வந்தப்போ கவர்ன்மென்ட் லாயர் சொன்னது முழுசையும் தினமலர்காரன் போட்டு காரியத்த கெடுத்துட்டான். மாதவி தலையில ரெண்டு அடி இருந்துது, ரெண்டாவது அடியாலதான் அவ செத்தாங்கறா மாதிரி எழுதியிருந்தத படிச்சதுலருந்தே பய கொஞ்சம் துள்ள ஆரம்பிச்சான்.... அப்போதான் குமார் அப்ஸ்கான்டானான்... அவன் எங்க போவான்னு தெரிஞ்சிருந்ததால அவன் ஊர் போய் சேர்றதுக்குள்ளயே அமுக்குனோம்..... கொஞ்ச நாள் உன் ரூம்ல வச்சிருடா.... தோதா வேற எடம் பாத்துட்டு சொல்றேன்னேன்..... ஆனா முட்டாப்பய அவசரப்பட்டு அவனெ ரூம்லயே விட்டுப்போட்டு வந்து இனி அவன் உன்னோட பொறுப்பு நீதான் அவனெ பாத்து பயப்படணும் எனக்கு என்னன்னான்...... வந்த ஆத்திரத்துல ஓங்கி ஒன்னு விட்டேன்.. பய மயக்கமாய்ட்டான். சரி இவன அப்புறம் பாத்துக்கலாம் முதல்ல போய் குமார மீட்டுக்கினு வரலாம்னு மேன்ஷன் பக்கம் வரேன்.... வாசல்ல ராஜசேகர் கார் நிக்கிது.... கடுப்பாருந்துது...... குப்புற தள்னது போறாதுன்னு மண்ணையும் கொட்றயா இருடா வச்சிக்கறேன்னுட்டு திரும்பி போயி அந்த கோவத்த ராமராஜன் மேல காட்டுனேன்..... முட்டாப் பயலே இன்னும் ஒரு நாள் வெய்ட் பண்ணியிருந்தா குமார் தப்பிச்சிருக்க மாட்டானேன்னேன்.... ஆனா அவன் ஒத்துக்கல... என்ன சொன்னாலும் கேட்டுக்கிட்டிருந்தவன் என்னையே எதுக்கவும் இவன இனிமேலும் விட்டுவச்சிருந்தா நமக்குத்தான் ஆபத்துன்னுட்டு.... அவனெ கொன்னு மாதவிக்கு கொலைக்கு நாந்தான் காரணம் அதனால நா சூயிசைட் பண்ணிக்கறேன்னு அவன் எழுதறா மாதிரி ஒரு லெட்டர எழுதி கொண்டுபோய்  போட்டுட்டு வந்தேன்.'

'அதுக்கப்புறம் எதுக்கு மறுபடியும் அந்த வீட்டுக்குள்ள போன?'

'என்னது நானா?' என்றான் முருகேசன் வியப்புடன், 'எப்போ?'

'டேய்....' என்ற ஷங்கரின் குரலில் இருந்த கோபம் எஸ்.பியை புன்னகைக்க வைத்தது. ஷங்கரைப் பார்த்தார். 'என்ன ஒங்க கைவரிசையை காட்னீங்களா?'

''ஷங்கர் I said no violence' என்று டேப்பிலிருந்து ஒலித்த தன்ராஜின் குரல் அவருக்கு பதிலாய் அமைந்தது.

'நீ தான் போலீஸ் பாடிய அங்கருந்து ரிமூவ் பண்ணதும் அந்த வீட்டுக்குள்ள போனது...... சொல்லு எதுக்கு போன?'

'அவளோட நகையையும் பணத்தையும் எடுக்கத்தான் சார்..... ஆனா எப்ப போலீஸ் மறுபடியும் வந்துருவாங்களோங்கற பயத்துல சரியா தேட முடியல..'

'டேய்... டூப்படிக்காத.... வீட்டையே தலைகீழா பொறட்டி போட்டுருக்கே.... கிடைக்கலன்னு டூப்படிக்காம அங்கருந்து எடுத்தத எங்க வச்சிருக்கே.... உண்மைய சொல்லிறு..' என்றது ஷங்கரின் குரல்.

'பிராமிஸா நாங்க எடுக்கல சார்...' என்றான் முருகேசன். 'அதுக்குள்ளவே போலீஸ் ஜீப் வர்றா மாதிரி இருக்கு மச்சான்னு வாசல்லருந்து ராமராஜன் குரல் குடுத்தான்... அப்படியே போட்டுட்டு ஒடியாந்துட்டேன்..... சார் வந்துட்டு போயிருவார்னு நானும் அவனும் எதுத்து சைட்லருந்து வாட்ச் பண்ணிக்கிட்டு நின்னோம்.... ஆனா சார் போற போக்குல எதுத்தாப்பலருக்கற ஹார்ட்வேர் கடையிலருந்து ஆள கூட்டியாந்து புதுசா ஒரு லாக்க போட்டுட்டு போய்ட்டார்.... அந்த நகையும் பணமும் இப்பவும் அங்கதான் இருக்கணும்..'

சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு மீண்டும் தன்ராஜின் குரல் ஒலித்தது. 'சரி அத விடு.. ராமராஜன் பாடியிலருக்கற சூயிசைட் நோட்ட பாத்துட்டு போலீசோட கவனம் நம்ம மேல திரும்பாதுன்னு நீ நெனச்சது ஓரளவுக்கு சரி.... அதுக்கப்புறம் எதுக்கு ராகவனையும் அவர் வய்ஃபையும் கடத்துனே?'

'அதான் சார் நா பண்ண முட்டாத்தனம். பேசாம கொஞ்ச நாளைக்கி நார்த் பக்கம் போயிருந்தேன்னா கேஸ் தானாவே க்ளோசாயிருக்கும்..... என்னெ பத்தி யாருக்கும் சந்தேகம் வந்துருக்காது....'

'அப்புறம் ஏன்டா பண்ணே?' என்றார் ஷங்கர் கோபத்துடன்.

'எல்லாம் ராஜசேகர் மேலருக்கற கோவந்தான் சார்...... அந்தாள் மட்டும் கோபால் கேஸ்ல பூராம இருந்துருந்தா கோபால் தப்பிச்சிருக்கவே முடியாது.... போறாததுக்கு நாங்க கடத்தி வச்சிருந்த குமார மீட்டுக்கிட்டு போய்ட்டார்.  அதனால முதல்ல அந்தாளோட பொண்ண தூக்குலாம்னுதான் ப்ளான் பண்ணேன்.... ஆனா அங்கயும் அஞ்சி நிமிஷத்துல அவள கோட்டை விட்டேன்.... அப்புறம் கோபாலோட அப்பா சீனிவாசன கடத்தலாம்னு நினைச்சேன்.... ஆனா அங்கயும் அது நடக்கல... வாட்ச்மேன் என்னெ உள்ளவே விடமாட்டேன்னுட்டான்..... அதுவும் ராஜசேகர் வேலையாத்தான் இருக்கணும். அந்தாள நம்மளான்ட வர வைக்கலாம்னுதான்  ராகவனையும் அந்தாள் சம்சாரத்தையும் கடத்துனோம்...... ஆனா அங்கயும் ராஜசேகர் பூந்து சாமர்த்தியமா என்னெ மடக்கிட்டான்....'

தன்ராஜ் மற்றும் ஷங்கரின் சிரிப்பொலி அறையை நிறப்ப... டேப் ரிக்கார்டரை நிறுத்திவிட்டு எஸ்.பி. சந்தானம்..... 'I think we should be thankful to Rajasekar... இந்த கேஸ சால்வ் பண்றதுக்கு அவரோட ப்ரைவேட் இன்வெஸ்ட்டிகேஷனும் ஒரு முக்கிய காரணம்....' என்றார்.

பிறகு தன்ராஜையும் ஷங்கரையும் பார்த்தார்.  ' Nice work......இனிமே நீங்க ரெண்டு பேரும் டீமா ஃபீல்டுல இறங்குறதுதான் நல்லது.' என்றவாறு தன் இடப்புறத்தில் அமர்ந்திருந்த ஆய்வாளர் பெருமாளைப் பார்த்தார். 'என்ன பெருமாள், நீங்க என்ன நினைக்கிறீங்க?'

அவருடைய கேள்வியை எதிர்பாராத பெருமாள் சற்று தடுமாறினார். பிறகு சமாளித்துக்கொண்டு, 'நீங்க சொல்றது சரிதான் சார்.....' என்றார் வேறுவழி தெரியாமல்.

அவருடைய பதிலில் இருந்த பொறாமையை எஸ்.பி. உணர்ந்தாலும் அதை கண்டுக்கொள்ளாதவர்போல் எழுந்து நின்றார். 

'சரி தன்ராஜ், ஷங்கர்..... இனியும் இந்த கேஸ்ல டிலே பண்ணாம சார்ஜ்ஷீட் ஃபைல் பண்ணிருங்க....' என்று தொடர்ந்தவரை அவருடைய செல்ஃபோன் தடுத்து நிறுத்தியது. 'ஒன் செக்கன்ட்' என்றவாறு செல்ஃபோனை காதில் வைத்தவர், 'அப்படியா?' என்றார் வியப்புடன். 'I was expecting this... but not this fast. Thanks for the info.' 

இணைப்பைத் துண்டித்துவிட்டு தன்னை சுற்றி நின்றிருந்தவர்களைப் பார்த்தார். 'பிபி கொஞ்ச நேரத்துக்கு முன்னால ரிசைன் பண்ணிட்டாராம்.' என்றார்.

தன்ராஜும் ஏன் பெருமாளும் கூட இதை எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இவ்வளவு விரைவில் அது நடக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. 'அப்படியா சார்?' என்றனர் இருவரும்.

'இதுவும் நல்லதுக்குத்தான். கொஞ்ச நாளாவே அவரோட நடவடிக்கை ஒன்னும் சரியில்லைன்னு கமிஷனர் வரைக்கும் கூட கம்ப்ளெய்ன்ட்ஸ் போயிருக்கு.... அடுத்து வரப்போற பிபி ஹேன்டில் பண்ணப் போற முதல் கேஸ் இதுவாத்தான் இருக்கணும்..... சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு அவர போயி பாருங்க.' என்றார் எஸ்.பி தன்ராஜை பார்த்து.

'கண்டிப்பா சார்.' என்று பதிலளித்த தன்ராஜ் பெருமாளைப் பார்த்தார். 'சார்..... போலாமா?'

பெருமாள் அவருடைய கேள்வியின் பொருள் விளங்காமல் பார்க்க எஸ்.பி இடைமறித்தார். 'அவர மறுபடியும் ஒங்க ஸ்டேஷனுக்கே ரிலீவ் பண்ணிட்டேன்..... இந்த கேஸ்ல சார்ஜஸ் ஃப்ரேம் பண்ணி முடிக்கற வரைக்கும் அங்கதான் இருப்பார்..... அதுக்கப்புறம் என்ன செய்யிறதுன்னு சொல்றேன்....' 

பிறகு ஆய்வாளர் பெருமாளை தனியே அழைத்துக்கொண்டு போய், 'இந்த கேஸ்ல மட்டுமில்லாம முருகேசன் மேல ஃபைல் பண்ற கேஸ்லயும் PW1, PW2 விட்னஸ் ரொம்ப முக்கியம்ங்க.... இந்த கேஸ்ல ஒங்களுக்கு எதிரா அவங்க ரெண்டு பேரும் சொன்னத மனசுல வச்சிக்கிட்டு அவங்கள எதுவும் செஞ்சிறாதீங்க, சொல்லிட்டேன்...' 

'இல்ல சார்....' என்று தலையை அசைத்தார் பெருமாள்.

பிறகு தனக்காக வாசலில் காத்திருந்த தன்ராஜுடன் அவர் வெளியேற பாலசுந்தரம் ஷங்கரை நெருங்கி, 'பாத்தியா ஷங்கர்.... இவ்வளவு நேரம் இதே ரூம்ல இருந்தும் எங்கிட்ட ஒரு வார்த்தைக் கூட பேசாம பெருமாள் சார் போறத? விட்டா இங்கயே வச்சி என்னெ என்கவுன்டர் பண்ணிருவார் போல' என்றார் புன்னகையுடன்.

ஷங்கரும் சிரித்தார். 'பின்னே.... நீதான அவர எஸ்.பிகிட்ட போட்டு குடுத்தது? நானாருந்தாலும் இந்தாள என்கவுன்டர் பண்ணா என்னான்னுதான் நினைச்சிருப்பேன்....'

பாலசுந்தரம் முறைத்தார். 

***** 

சீனிவாசனும் மகாதேவனும் புழல் சிறை வாசலில் காலையிலிருந்தே கோபாலுக்காக காத்திருந்தனர். ஆனால் நீதிமன்றத்திலிருந்து இன்னும் உத்தரவு வரவில்லையென்று இழுத்தடித்து இறுதியில் கோபால் சிறையிலிருந்து வெளியில் வந்தபோது பிற்பகல் மூன்று மணியாகியிருந்தது.

சிறைவாசலில் தன் தந்தையுடன் காத்திருந்த மகாதேவனைப் பார்த்ததும் கோபாலின் முகம் சுருங்கினாலும் சமாளித்துக்கொண்டு 'வாங்க சார்' என்றான். பிறகு தன் தந்தையை நெருங்கி, 'சாரிப்பா, என்னால ஒனக்குத்தான் ரொம்ப அலைச்சலாயிருச்சி.....' என்றான் உண்மையான வருத்தத்துடன்.

'பரவால்லைடா..... இனியாச்சும் பழசையெல்லாம் மறந்துட்டு நளினியோட குடும்பம் நடத்து.' என்றார் சீனிவாசன். 

'அவ வரலையாப்பா?' என்ற கோபாலின் குரலில் தெரிந்த ஏமாற்றம் சீனிவாசனை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. தன் மருமகளைப் பற்றி கோபால் கேட்க மாட்டான் என்றுதான் நினைத்திருந்தார். 

'அவளுக்கு வரணும்னு ஆசைதான்..... ஆனா ரொம்ப வீக்காருக்காடா. வீட்டுல வச்சி மீட் பண்ணிக்கட்டுமேன்னு டாக்டர் சொன்னார்..... நேத்து ராத்திரிதான் நானே போய் அவள கன்வின்ஸ் பண்ணி வீட்டுக்கு கூட்டியாந்தேன்.... நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நாளைக்கி என் கூடவே இருக்கலாம்னு சொன்னதுக்கப்புறந்தான் வந்தா.....' என்ற சீனிவாசன் தன் மகனை பார்த்தார். 'நா சொல்றது ஒனக்கு புரியுதாடா?'

அவருடைய குரலில் இருந்த ஏக்கத்தைப் புரிந்துக்கொண்ட கோபால், 'நீ சொல்ல வர்றது புரியுதுப்பா.... இனி உங்கூடவே இருக்கேன்.... போதுமா?' என்றவாறு அவருடைய தோள் மீது கை வைத்தார். 

இருவரையும் மாறி மாறி பார்த்த மகாதேவன் இவன் இனி தப்பு பண்ண மாட்டான்..... என்று நினைத்தவாறு, 'சீனி போலாமா?' என்றவாறு காரில் ஏறி அமர்ந்தார். அவரை தொடர்ந்து கோபால் முன் இருக்கையிலும் சீனிவாசன் மகாதேவனுடன் பின் இருக்கையிலும் அமர்ந்துக்கொள்ள டிரைவர் வாகனத்தை நகர்த்தினான்.

**********


'ஏங்க, நேத்துலருந்தே ஒங்கக்கிட்ட ஒன்னு சொல்லணும்னு நினைச்சிக்கிட்டே இருக்கேன்.' என்றார் ரேணுகா ராகவன். 

'என்ன?' என்றார் ராகவன் தினத்தாளிலிருந்து கண்ணெடுக்காமல். 

'அந்த லாயர்.... ராஜசேகர்தான அவர் பேரு?'

'ஆமா அவருக்கென்ன?'

'அவரக் கூட அந்த பொண்ணு விட்டுக்கு வந்து போனத பாத்துருக்கேங்க.....!'

ராகவன் எரிச்சலுடன் திரும்பி தன் மனைவியை பார்த்தார். 'ஒனக்கு இதே பிரமைடி.... ஏற்கனவே ஒருத்தன பாக்கக் கூடாத நேரத்துல பாத்துட்டு பட்டது போறாதா? போயி வேலைய பாரு....'

'என்னைக்கி நா சொன்னத நம்பியிருக்கீங்க?' என்றவாறு எழுந்து ரேணுகா சமையலறைக்குள் நுழைய ராகவன் தினத்தாளில் மீண்டும் மூழ்கினார். ஆனால் அவருடைய மனதிலும் நமக்கும் அவர முதல் தடவ பாத்தப்போ இவர எங்கயோ பாத்தா மாதிரி இருக்கேன்னு தோனிச்சே.... ஒருவேளை இவ சொல்றது நிஜமாருக்குமோ? சரி அதப்பத்தி நமக்கென்ன? அவர் மட்டும் அன்னைக்கி புத்திசாலித்தனமா ஆக்ட் பண்ணலன்னா நம்ம கத கந்தலாயிருக்குமே?

*********

பி.கு. இந்த தொடரை கடந்த எழுபத்தைந்து நாட்களாக தொடர்ந்து படித்து ஆதரவளித்த அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. 

என்னுடைய அடுத்த க்ரைம் நாவலை சில மாதங்களுக்கு முன்பு தில்லியில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற துணை ஆணையர் (ACP) ஒருவர் அவருடைய படுக்கையறையில் அவருடைய  துப்பாக்கியாலேயே சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியை மையமாக வைத்து எழுதலாம் என்று எண்ணியுள்ளேன். அந்த தொடருக்கு தாற்காலிகமாக 'தன் வினை....' என்று பெயர் வைத்திருக்கிறேன். அதை முழுவதும் எழுதி முடித்து புத்தாண்டில் வெளியிடலாம் என்று நினைத்திருக்கிறேன்....



அன்புடன்,
டிபிஆர். 

12 நவம்பர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 75 (நிறைவுப் பகுதி)

IPC.Sec.191. Giving false evidence Whoever, being legally bound by an oath or by an express provision of law to state the truth, or being bound by law to make a declaration upon any subject, makes any statement which is false, and which he either knows or believes to be false or does not believe to be true, is said to give false evidence.

Sec.193. Punishment for false evidence: Whoever intentionally gives false evidence in any stage of a judicial proceeding, or fabricates false evidence for the purpose of being used in any stage of a judicial proceeding, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine, and whoever intentionally gives or fabricates false evidence in any other case, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine.

*****

''அந்த கேஸ்லயும் நீங்க சாட்சி சொன்னதுக்கப்புறம்தான் கேஸ் கன்விக்‌ஷன்ல முடிஞ்சிது... இதுல இன்னொரு ஆச்சரியம் அதுலயும் வேணு சார்தான் கவர்மென்ட் லாயர்.....' என்ற ராஜசேகர், 'நா சொல்றது சரிதானே?' என்றான் தனபாலைப் பார்த்து.

தனபால் பதிலளிக்காமல் வேணு அமர்ந்திருந்த திசையை நோக்கி பார்த்தான். 

வேணு இதை ஆட்சேபிப்பார் என்று எதிர்பார்த்த ராஜசேகர் அதற்கு இடம் அளிக்காமல் மேலே தொடர்ந்தான். 'இன்னும் முடியல.... இன்னொரு கேஸ்லயும்  நீங்க இதே மாதிரி என் கூட ப்ரிசன்ல இருந்த கைதி சொன்னார்னு வந்து சாட்சி சொல்லியிருக்கீங்க...... அதாவது சரியா பதினெட்டு மாசத்துக்கு முன்னால.....ராயபுரத்துல ரவுடிகளுக்கிடையில நடந்த கேங் வார்ல..... இதே வேணு சார் ஆஜரான கேஸ்ல.... அதாவது ஞாபகம் இருக்கா?'

தனபால் பதிலளிக்காமல் நின்றிருக்க ராஜசேகர் தொடர்ந்தான்'  ஆனா ஒங்க துரதிர்ஷ்டம் அந்த கேஸ்ல ஆஜரான டிஃபன்ஸ் லாயர் அந்த கைதி ஒங்கக்கிட்ட பேசிக்கிட்டிருந்ததா நீங்க சொன்ன டேட்டுல ட்ரீட்மென்ட்டுக்காக G.H.க்கு போயிருந்தார்ங்கற ரொம்ப க்ளியராவே ப்ரூஃப் பண்ண..... கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்ல தெரியும்கறா மாதிரி மாட்டிக்கிட்டீங்க! ஞாபகத்துக்கு வருதா?'

'இந்த கேஸ் ஞாபகத்துல இருக்கு சார்... அன்னைக்கி நாந்தான் டேட்ட தப்பா சொல்லிட்டேன்..... ஆனா அந்தாள் எங்கிட்ட சொன்னது உண்மைதாங்க.'

ராஜசேகர் சிரித்தான். 'அதெப்படிங்க உங்கள தேடிப் புடிச்சி ஒவ்வொரு கைதியா வாக்குமூலம் குடுக்கறாங்க? அதுவும் வேணு சார் அப்பியராவற கேஸா பாத்து? அந்த கேஸ்ல நீதிபதி இனிமே இந்த மாதிரி வேணும்னே பொய் சாட்சி சொல்ல வந்தா அதுக்குன்னு ஒங்க மேல தனியா கேஸ் போட வேண்டி வரும்னு வார்ன் பண்ணி அனுப்புனாரா?'

'ஆமாங்க.' என்று தனபால்.

'ஆனாலும் மறுபடியும் வந்து நிக்கறீங்க! இத நீங்களா விரும்பி செய்யலேங்கறது தெரியுது.  நா சொல்றது சரிதானே?'

தனபால் பதிலளிக்காமல் நின்றிருக்க இதையாவது ஆட்சேபிக்கலாமா என்று யோசித்தார் வேணு. ராஜசேகர் ஒவ்வொரு முறையும் தன்னுடைய பெயரை குறிப்பிட்டபோதெல்லாம் ஆட்சேபிக்க வேண்டும் என்று நினைப்பார். ஆனால் அப்போதெல்லாம் நீதிபதியின் இறுகிய முகமும் அவர் அவ்வப்போது தன்னைப் பார்த்த பார்வையில் இருந்த தீவிரமும் அவரை தடுத்து நிறுத்தின. ராஜசேகரை கத்துக்குட்டின்னு நினைச்சது தப்பு போலருக்கே என்று நினைத்தார்.  அத்தோட நாம எந்த அட்வான்ஸ் இன்ஃபர்மேஷனும் இல்லாம ப்ரொட்யூஸ் பண்ண விட்னஸ பத்தி இவனுக்கு எப்படி இவ்வளவு விவரம் தெரிஞ்சிதுங்கறதும் மிஸ்டரியா இருக்கு. யார் வழியாவோ இந்த இன்ஃபர்மேஷன் இவனுக்கு கிடைச்சிருக்கு என்று நினைப்புடன் ஆய்வாளர் பெருமாளைப் பார்த்தார். ஊஹும்.. இவன் வழியா போறதுக்கு சான்ஸ் இல்ல. இதை அப்படியே சற்று நேரம் மனதுக்குள் அசை போட்டதும் சட்டென்று அவருக்கு பொறி தட்டியதுபோல் இருந்தது. ஆமா, அவன் வழியாத்தான் போயிருக்கணும்...... ஆனா எப்படி? அவனெ அன்னைக்கி கோர்ட்ல வச்சி இவன் அந்த மாதிரி வறுத்தெடுத்தான? பெருமாள் சொன்னப்பவே இந்த ஐடியாவ ட்ராப் பண்ணியிருக்கலாம்.... நமக்கு நாமளே சூன்யம் வச்சிக்கிட்டா மாதிரி ஆயிரும் போல..... இந்த ஜட்ஜ் நம்மள பாக்கற பார்வையிலருந்தே இந்த கேஸ் க்ளோஸ்தான் என்று தெரியுதே..... பேசாம நாமளே வித்ட்றா பண்ணிறலாமா? 

தொடர்ந்து பேசிய ராஜசேகரின் குரல் வேணுவை தன்னுடைய நினைவுகளிலிருந்து மீட்டது. கூர்ந்து கவனிக்கலானார்.

'யுவர் ஆனர், ஏற்கனவே ஒருமுறை எச்சரிக்கப்பட்டும் யாருடைய தூண்டுதலாலோ அல்லது அளித்த தைரியத்தாலோ இந்த சாட்சி மீண்டும் ஒருமுறை பொய் சாட்சியம் அளிக்க துணிந்திருக்கிறார். சமுதாயத்தில் ஒரு நல்ல அந்தஸ்த்தில் இருக்கும் என்னுடைய கட்சிக்காரர் ஏற்கனவே ஒரு கொலைக்குற்றத்தில் ஆயுள் தண்டனை அடைந்திருக்கும் இத்தகைய ஒருவரிடம் சரிசமமாக பழகியிருக்க வாய்ப்பே இல்லை. அதுவும் பழகிய இரு தினங்களுக்குள் செய்யாத ஒரு கொலையை செய்ததாக என் கட்சிக்காரர் இவரிடம் ஜம்பம் அடித்துக்கொண்டார் என்று இவர் கூறுவது உண்மைக்கு புறம்பானதுமட்டுமல்ல நடைமுறைக்கும் ஒவ்வாத செயல். இந்த இடத்தில் இத்தகைய extra-judicial confession அதாவது நீதிமன்றத்திற்கு வெளியில் ஒருவர் அளித்ததாக கூறப்படும் ஒப்புதல் வாக்குமூலங்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கவைதானா என்பதைக் குறித்து உச்ச நீதிமன்றம் சில தீர்ப்புகளில் கூறியுள்ளவற்றை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

முதலாவதாக சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு RAJA RAM (2003) என்பவருக்கு , எதிரான கொலை வழக்கு ஒன்றில் the Honourable Apex Court has ( reported in 8 SCC - 180 (supra))observed as under:-

"Extra Judicial confession will have to be proved like any other fact. The value of the evidence as to confession, like any other evidence, depends upon the veracity of the witness to whom it has been made. The value of the evidence as to the confession depends on the reliability of the witness who gives the evidence."

இரண்டாவது வழக்கு SK.YUSUF Vs. STATE OF WEST BENGAL (2011) & reported in 3 SCC (Cri.)
620, as regards Extra Judicial Confession, at special page 627, para 28, the Honourable Supreme Court  has observed as under:-

"The Court while dealing with a circumstance of extra-judicial confession must keep in mind that it is a very weak type of evidence and requires appreciation with great caution."

இப்போது சாட்சி கூண்டில் நிற்கும் இவர் ஏற்கனவே ஒருமுறை பொய் சாட்சியம் அளித்ததற்காக நீதிமன்றத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளவர் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஆகவே இவருடைய சாட்சியத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதுடன் இவர் மீது பொய்சாட்சி சொன்ன குற்றத்திற்காக இந்திய தண்டனைச் சட்டம் 191 மற்றும் 193வது பிரிவுகளின் படி வழக்கு பதிவு செய்து தகுந்த தண்டனை வழங்கவும் கேட்டுக்கொள்கிறேன்.' என்ற ராஜசேகர் நீதிபதியை பார்த்து பேசினான்: 'யுவர் ஆனர். நீங்கள் என்னை வழக்கின் துவக்கத்தில் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டபோது இல்லை என்று நான் கூறினேன். அதற்கு பதிலாக இப்போது ஒரு சில நிமிடங்கள் பேச அனுமதி கோருகிறேன்.'  

ராஜசேகர் அரை மணி நேரத்தில் தன்னுடைய குறுக்கு விசாரணையை முடித்துவிடுவான் என்று எதிர்பார்த்திருந்த நீதிபதி சற்று எரிச்சலைடந்ததுபோல் தோன்றினாலும் சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தவாறே, 'Make it short.' என்றார். 

'அரசு தரப்பில் சாட்சியம் அளித்த PW1 மற்றும் PW2 ஆகியவர்கள் அளித்த சாட்சியத்திலிருந்தே என்னுடைய கட்சிக்காரர் இந்த குற்றத்தை செய்யவில்லை என்பது மிகத் தெளிவாக தெரிந்துவிட்டது. அவர்களை நான் குறுக்கு விசாரணை செய்யாமலே அவர்களாகவே அரசுக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர். ஏனெனில் அதுதான் உண்மை. அவர்களை தங்களுடைய விருப்பத்திற்கேற்ப உண்மையை மறைத்துக் கூற சிலர் அவர்களை நிர்பந்தித்ததும் அவர்களுடைய மனமாற்றத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம். அதிகாரத்திலுள்ள சிலருடைய சட்டத்திற்கு புறம்பான மிரட்டுதல்களுக்கு ஆளாவதிலிருந்து தப்பிக்கும் நோக்கத்துடன்தான் சட்டத்தை அனுசரித்து செல்லும் குடிமக்கள் பலரும் எந்த குற்றவாளிக்கும் எதிராக சாட்சியம் அளிக்க முன்வருவதில்லை. அரசு தரப்பில் சாட்சியம் அளிக்க வந்த முதல் இரு சாட்சிகளையும் உண்மைக்கு புறம்பாக சாட்சியம் அளிக்க நிர்பந்தித்தவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும், கண்டிக்கப்பட வேண்டும். அவர்களுடைய சாட்சியம் தங்களுக்கு சாதகமாக இருக்கப்போவதில்லை என்பதை எவ்வாறோ உணர்ந்த அரசுதரப்பு  ஒரு அப்பாவி சிறைக்கைதியை ஆசை வார்த்தை காட்டியோ அல்லது மிரட்டியோ நடக்காத ஒன்றை நடந்ததாக பொய் சாட்சியம் அளிக்க வைத்திருப்பதும் கண்டிக்கத்தக்கது.  ஆனால் அவர்களுடைய நோக்கம் முறியடிக்கப்பட்டுவிட்டது. இந்த வழக்கில் இனி வரப்போகும் அரசுதரப்பு சாட்சிகள் பிரேதப்பரிசோதனை, கைரேகை மற்றும் ஃபாரன்சிக் இலாக்காவைச் சார்ந்தவர்களே. அவர்கள் அளிக்கவிருக்கும் சாட்சியம் கொலை நடந்தது என்பதை மட்டுமே நிரூபிக்க முடியுமே தவிர அதை செய்தவர்கள் யார் என்று சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் போவதில்லை. கொலை நடந்தது உண்மைதான். கண்டிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் அந்த கொலையை செய்தவர் என் கட்சிக்காரர் அல்ல என்பதுதான் என்னுடைய வாதம். இந்த வழக்கில் அரசு இனி முன்வைக்கவிருக்கும் சாட்சிகளின் விசாரணையை அனுமதிப்பதில் எவ்வித பயனும் இல்லை என்று தாழ்மையுடன் கோர்ட்டார் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். ஆகவே இந்த வழக்கை இனியும் தாமதியாமல் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.' என்று முடித்துவிட்டு தன்னுடைய இருக்கையை அடைந்து அமர்ந்தான் ராஜசேகர். 

ராஜசேகரின் நீண்ட அதே சமயம் திறமையான வாதத்தில் மூழ்கிப் போய் பிரமிப்புடன் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் நீதிபதி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை அறியும் ஆவலுடன் அவரையே பார்த்தனர். ராஜசேகர் வாதத்தை முடித்துக்கொண்டு தன் இருக்கையில்  சென்று அமரும் வரை ஒன்றும் கூறாமல் தன் இருக்கையில் அமர்ந்திருந்த நீதிபதி சட்டென்று எழுந்து அறையிலிருந்து வெளியேற அந்த வழக்கை தொடர்ந்து அன்று விசாரிக்கவிருந்த வழக்குகளில் ஆஜராக காத்திருந்த வழக்கறிஞர்கள் குழப்பத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். பார்வையாளர்கள் மத்தியிலும் சலசலப்பு ஏற்பட்டது. 

'இனி என்ன நடக்கும் சார்....' என்றவாறு ராஜசேகரை பார்த்தார் கோபால். 'இன்னைக்கி பெய்லாவது கிடைக்கிமா? அது கிடைச்சா கூட போதும்னு இருக்கு சார்.'

ராஜசேகருக்கும் நீதிபதியின் செயல் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. சேம்பருக்கு போயிருப்பாரோ என்ற நினைப்புடன் தன் அருகில் அமரிந்திருந்த வசந்தைப் பார்த்தான்.  'பாஸ் அங்க பாருங்க!' என்று அவன் கண்களால் சாடை செய்ய அவன் காட்டிய திசையில் பார்த்தான். நீதிபதியின் அந்தரக ஊழியன் வேணுவை நோக்கி சென்று ஏதோ கூறிவிட்டு தன்னை நோக்கி வருவதைக் கண்டான். 'சார்... ஒங்கள ஐயா சேம்பருக்கு வரச் சொல்றாங்க.'

ராஜசேகர் உடனே எழுந்து அவன் பின்னால் சென்றான்.

கோபால் மற்றும் வசந்தைப் போலவே பார்வையாளர் மத்தியில் அமர்ந்திருந்த மகாதேவனும் என்ன நடக்கிறது என்பது புரியாமல் அமர்ந்திருந்தார். ஜட்ஜ் ரெண்டு பேரையும் சேம்பருக்கு கூப்டறார்னா இன்னைக்கே இந்த முடிஞ்சிரும்னு தோனுது.... பேசாம வாபஸ் வாங்கிருங்கன்னு பிபி கிட்ட சொல்லப் போறாரோ என்னவோ..... இந்த கேஸ இதுக்கு மேலயும் கன்டினியூ பண்றது வேஸ்ட் ஆஃப் டைம்னு நமக்கே தோன்றப்போ ஜட்ஜுக்கு தோனாதா என்ன? அவர் இவ்வாறு யோசித்துக்கொண்டிருக்கும் போதே ராஜசேகர் அறைக்குள் நுழைவதை கவனித்தார். அவருக்குப் பின்னால் அறைக்குள் நுழைந்த வேணுவின் நடையிலிருந்தே தான் சற்று முன் நினைத்தது சரிதான் என்று அவருக்கு தெரிந்தது. உடனே எழுந்து அறையை விட்டு வெளியேறி வராந்தாவில் நின்றார். சீனிக்கி நல்ல நியூஸ் சொல்ற முதல் ஆள் நாமளா இருப்போம் என்ற எண்ணத்துடன் செல்ஃபோனை எடுத்து கையில் வைத்துக்கொண்டு நீதிமன்ற அறையின் வாசலில் நின்று காத்திருந்தார். 

அடுத்த சில நிமிடங்களில் நீதிபதி தன் இருக்கையில் அமர்ந்து தன் முன்னால் இருந்த குறிப்புகளை ஒரு சில நொடிகள் பார்த்துவிட்டு பிபி வேணுவைப் பார்த்தார்.

அவர் மெள்ள எழுந்து, 'The State would like to  withdraw the case  for lack of evidence.' என்று சுருக்கமாக கூறிவிட்டு அமர உடனே பார்வையாளர்கள் மத்தியில் பலத்த சலசலப்பு ஏற்பட்டது.  இதை எதிர்பார்த்திருந்த நீதிபதி அது அடங்கும் வரை ஒரு சில நிமிடங்கள் காத்திருந்துவிட்டு நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தார். 

பிறகு வழக்கு எண் மற்றும் வழக்கு விவரங்களை கூறி ஒரே வரியில் 'Dismissed as prayed.' என்று அறிவித்துவிட்டு தன் இருக்கைக்கு கீழ் அமர்ந்திருந்த அலுவலரிடம், 'அடுத்த கேஸ் கூப்டுங்க......' என்றார். 

*********

நீதிமன்ற அறையையொட்டி இருந்த வராந்தாவில் நின்றிருந்த ராஜசேகரை அன்று வரவிருந்த தங்களுடைய வழக்கில் ஆஜராக வந்து காத்திருந்த வழக்கறிஞர்கள் சிலரும் அறையிலிருந்து வெளியேறி அவனுடைய கரத்தைப் பற்றி, 'கலக்கிட்டீங்க ராஜசேகர்.' என்றனர். 

'சூப்பர் பாஸ்... நீங்க அஸ்யூம் பண்ணா மாதிரியே நடந்திரிச்சி.' என்றான் வசந்த் புன்னகையுடன்.

நீதிபதியின் அறிவிப்பு வந்ததுமே சீனிவாசனை அழைத்த மகாதேவன் விஷயத்தை தெரிவித்துவிட்டு ராஜசேகரை அணுகினார். 'கங்கிராட்ஸ் மிஸ்டர் ராஜசேகர்.....' என்றார்.

அவர் அருகில் நின்றிருந்தும் அவரை கவனியாதவன் போல் நின்றிருந்த கோபால் அவர் அங்கிருந்து அகன்றதும் ராஜசேகரை கட்டித் தழுவிக்கொண்டார். அவருடைய கண்கள் இரண்டும் கண்ணீரால் நிறைந்திருந்ததைக் கவனித்த ராஜசேகர், 'சார் எமோஷனல் ஆகாதீங்க. முதல்ல ஒங்க ஃபாதர கூப்ட்டு சொல்லுங்க.' என்றவாறு தன்னுடைய செல்ஃபோனை அவரிடம் அளித்தான். அவர் அதைப் பெற்றுக்கொண்டு சற்று தள்ளிச் சென்று தன் தந்தைக்கு டயல் செய்தார். 

கோபாலுடன் காவலுக்கு வந்திருந்த இரு காவலர்களும் அங்கேயே நின்றுக்கொண்டிருந்ததைக் கவனித்த வசந்த் அவர்களை நெருங்கினான். 

அவர்களுள் ஒருவர், 'சார்.... அவர நாங்க மறுபடியும் ப்ரிசனுக்கு கூட்டிக்கிட்டு போய் ஒப்படைக்கணும் சார்... கோர்ட்லருந்து ஆர்டர் வந்தப்புறந்தான் அவர் வெளியில.......' என்றார்.

வசந்த் இடைமறித்து, 'தெரியுங்க.... இருங்க அவர் ஃபோன் பண்ணி முடிக்கட்டும்.' என்றவாறு ராஜசேகரை நெருங்கி காவலர் தெரிவித்ததை அவனிடம் கூறினான். 

'ஆமாடா....ஆர்டர் இங்கருந்து போறதுக்கு சாயந்தரம் ஆயிரும்..... நா கோபால்கிட்ட பேசறேன்.' என்ற ராஜசேகர் கோபாலை நெருங்கி விஷயத்தை கூறினான். 

அவர் உடனே 'சரி சார்... காலையில ரிலீஸ் பண்ணாக் கூட போதும்.' என்றவாறு செல்ஃபோனை அவனிடம் நீட்டினார். 

ராஜசேகர் அதை பெற்றுக்கொள்ளாமல், 'ஒங்க வய்ஃபுக்கும் ஃபோன் பண்ணி சொல்லுங்களேன்.... அவங்களுக்கும் ஆறுதலாருக்கும்.' என்றான் 'போலீஸ் வற்புறுத்தியும் உங்களுக்கு எதிரா விட்னெஸ் குடுக்க வர மாட்டேன்னு அவங்க சொன்னது உங்களுக்கு தெரியாது....'

ராஜசேகரின் பரிந்துரைக்கு பதிலேதும் கூறாமல் நின்றிருந்த கோபால் சில விநாடிகளுக்குப் பிறகு, 'இன்னும் ஹாஸ்ப்பிடல்லதான் இருக்காளா சார்?' என்றார்.

'அப்படித்தான்னு  நினைக்கேன்....'

சரி என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு மீண்டும் சற்று தள்ளி நின்று அவர் ஃபோன் செய்ய, 'எப்படி பாஸ் கரெக்டான டைமிங்ல இப்படில்லாம் செய்யணும்னு ஒங்களுக்கு மட்டும் தோனுது.' என்றான் வசந்த் வியப்புடன்.

'டேய்... இன்டைரக்டா வாராத..... வா காருக்கு போலாம்.... அவர் பேசிட்டு வரட்டும்....' என்றவாறு அங்கிருந்து நகர்ந்து தன்னுடைய வாகனத்தை நோக்கி நடந்தான். 

வசந்த் கோபாலுக்காக காத்திருந்த காவலர்களை நெருங்கி, 'வாங்க..... ஒங்க வேனுக்கு போலாம். அவர் பேசிட்டு வரட்டும்.'என்று அவர்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

ராஜசேகரின் வாகனத்தை அடைவதற்கென்றே காத்திருந்தவன்போல், 'சேம்பர்ல என்ன பாஸ் நடந்துது?' என்றான் வசந்த்.

சற்று தொலைவில் தலைகுணிந்தவாறு நடந்துச் சென்றுக்கொண்டிருந்த பிபி வேணுவைப் பார்த்தவாறே பதிலளித்தான் ராஜசேகர், 'நீங்களா கேஸ வித்ட்றா பண்ணிறுங்க. இல்லன்னா நானெ டிஸ்மிஸ் பண்ண வேண்டி வரும். அதோட உங்களுக்கு அகெய்ன்ஸ்டா ஸ்ட்ராங்கான ஸ்ட்ரிக்சர்ஸும் (strictures) பாஸ் பண்ணுவேன்னார். வேணு பதில் பேசாம கொஞ்ச நேரம் ஒக்காந்திருந்துட்டு 'I will withdraw'னு சொல்லிட்டு எழுந்து போய்ட்டார். அவர அப்போ பாக்க பாவமாத்தான் இருந்துது....'

'நீங்க வேற பாஸ்' என்று சிரித்தான் வசந்த், 'அவரா வச்சிக்கிட்ட சூன்யம்தான? அனுபவிக்கட்டும்.'

நிறைவு

இத்தொடரின் முடிவுரை (Epilog) நாளை...

11 நவம்பர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 74

நீ மட்டும் வா என்பதுபோல் ராஜசேகர் சாடை காட்டினான். வசந்த் புரிந்துக்கொண்டு தன் பர்சில் இருந்து  பணத்தை எடுத்து காவலர் ஒருவரிடம் கொடுத்து 'நீங்க சாப்ட்டுக்கிட்டிருங்க....' என்று அனுப்பி வைத்துவிட்டு ராஜசேகரை நெருங்கினான்.

'சொல்லுங்க பாஸ்.... இப்ப என்ன பண்ணலாம்... அட்ஜேர்ன்மென்ட் கேக்கலாமா?' என்றான்.

'டேய், அதுக்கு முன்னால இன்னொரு முக்கியமான விஷயம்.' என்ற ராஜசேகர் முந்தைய தினம் இரவு தன்ராஜே அழைத்து தனபால் சாட்சியம் அளித்திருந்த முந்தைய வழக்கு விவரங்களை அளித்ததை கூறினான். அதை தொடர்ந்து அந்த வழக்குகளில் வழங்கப்பட்டிருந்த தீர்ப்பின் நகலை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்த விவரத்தையும் தெரிவித்தான். 'அந்த மூனு கேஸ்லயுமே வேணுதான்டா அட்வகேட். இதுலருந்து என்ன தெரியுது?'

'அவன் இவரோட கையாள்னு....' என்று சிரித்தான் வசந்த். 'ஒருவேளை ரெண்டு பேரும் ஒரே ஊர்க்காரங்களோ என்னவோ?'

'யார் கண்டா? இருந்தாலும் இருக்கும்.' என்ற ராஜசேகர் தொடர்ந்து, 'டேய், நீ டேட்டா கார்ட் கொண்டு வந்துருக்கியா?' என்று வினவினான்.

'அதான் நம்ம ஒடன்பிறப்பாச்சே பாஸ்... அது இல்லாம நா என்னைக்கி வெளிய போயிருக்கேன்? ஏன் கேக்கறீங்க?'

'எனக்கு ஒரு டீட்டெய்ல்ஸ் வேணும். வா, கார்ல போயி ஒக்காந்து பாக்கலாம்.'

இருவரும் ராஜசேகரின் வாகனத்தை அடைந்து வசந்தின் லேப்டாப்பை திறந்து இணைய தொடர்பை ஏற்படுத்தி புழல் ப்ரிசன் என்று கூகுளில் அடித்து அந்த தளத்தில் இருந்த சில விவரங்களை தன்னுடைய குறிப்பேட்டில் பதிந்துக்கொண்டான். 

'என்ன பாஸ் பாக்கறீங்க?'

'அது சஸ்பென்ஸ்.' என்றான் ராஜசேகர் புன்னகையுடன். அதன் பிறகு இந்திய தண்டனைச் சட்டத்தின் நகல் ஒன்றை தரவிறக்கம் செய்து அவனுக்கு வேண்டிய பிரிவுகளை தேடிப்பிடித்து அவற்றையும் அவற்றிற்கென கொடுக்கப்பட வேண்டிய தண்டனை விவரங்களையும் குறித்துக்கொண்டு இணையத்திலிருந்து வெளியேறினான். 'இந்தா ஷட்டவுன் பண்ணிரு.' என்று வசந்தின் லேப்டாப்பை அவனிடமே கொடுத்துவிட்டு 'வாடா நம்ம சீட்டுக்கு போயி ஒக்காந்துக்கலாம். அஞ்சி நிமிஷம் லேட்டானாலும் ஜட்ஜ் அட்ஜேர்ன் பண்ணாலும் பண்ணிருவார்.'

'அப்ப லஞ்ச் பாஸ்?' என்றான் வசந்த் கலக்கத்துடன்.

'டேய்... ஒரு வேளை வயிறு காஞ்சா செத்துறமாட்டே.... வா.' என்று தயங்கி நின்ற வசந்தை இழுத்துக்கொண்டு நீதிமன்ற அறையை அடைந்தான். ஆனால் நீதிபதி இன்னும் வந்திருக்கவில்லை.

அதுவரை வராந்தாவில் நிற்போம் என்று நினைத்த ராஜசேகர் அருகில் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்துக்கொண்டு, 'டேய், இந்த செஷந்தான் க்ளைமாக்ஸ்னு என் உள்மனசு சொல்லுது.' என்றான்.

'அப்படியா. என்ன பாஸ் சொல்றீங்க? இன்னையோட இது முடிஞ்சிரும்னு சொல்றீங்களா?'

'ஆமாடா....  எதுக்கும் ப்ரிப்பேர்டாத்தான் வந்துருக்கேன்.... இது நம்ம பிபி பண்ண வேலைதான்..... தன்பால் சொல்றது முழுசும் பொய்னு நிரூபிச்சாலே போறும். கேஸ் டிஸ்மிஸ் ஆயிரும்.....' என்ற ராஜசேகர் தொடர்ந்தான். 'எனக்கென்னவோ ஜட்ஜும் ஒரு டிசிஷனுக்கு வந்துட்டார்னுதான் நினைக்கேன். இல்லன்னா லஞ்சுக்கு அப்புறமும் கன்டினியூ பண்ணாம அட்ஜேர்ன் பண்ணியிருப்பார்...... என்ன சொல்ற?'

'அப்படியா சொல்றீங்க? இருந்தாலும் இருக்கும்....' என்ற வசந்த் தொடர்ந்து, 'போலீஸ் முருகேசன இன்னும் இன்டரகேட் பண்ணி முடிக்கலையா பாஸ்? கேட்டீங்களா?'

'இல்லேன்னு நினைக்கிறேன். இல்லன்னா தன்ராஜ் கூப்டாம இருந்துருக்க மாட்டார்.  அப்படியே அவன் ஒத்துக்கிட்டாலும் இந்த சமயத்துல அந்த விஷயத்த கோர்ட்ல சொல்றதுக்கு வேணு நிச்சயம் ஒத்துக்கமாட்டார். அவருக்கு கோபால எப்படியாவது உள்ள தள்ளிறணும்.....'

நீதிபதி அறையை நோக்கி வருவதை கவனித்த ராஜசேகர் பேச்சை மாற்றினான். 'டேய்  நா சீட்டுக்கு போறேன்... நீ போயி கோபால் என்ன ஆனார்னு பார்த்து இழுத்துக்கிட்டு வா....' என்றவாறு அறைக்குள் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்தான்.

அவனுக்கு முன்பே வந்து தன் இருக்கையில் அமர்ந்திருந்த வேணு தன் உதவியாளர்களுடன் தீவிர ஆலோசனையில் இருப்பது தெரிந்தது. அதன் முடிவில் ஒரு கேலி புன்னகையுடன் தன்னை திரும்பி பார்ப்பதையும் கவனித்த ராஜசேகர் இந்தாள் சரியான மேனியாக்கா (maniac) இருப்பான் போலருக்கே..... என்று நினைத்தவாறு அவருடைய பார்வையை தவிர்த்து வாசலை பார்த்தான். கோபால் வருவது தெரிந்தது. அவர் வந்து இருக்கையில் அமர்ந்ததும் 'சார் என்ன நடந்தாலும் நிதானத்த இழக்காம ஒக்காந்துருங்க. நா குறுக்கு விசாரணையில இருக்கறப்போ தயவு செஞ்சி ஏதாச்சும் சொல்லி காரியத்த கெடுத்துறாதீங்க, ப்ளீஸ்.' என்றான். 

'இல்ல சார்....' 

நீதிபதி இருக்கையில் வந்து அமர்ந்ததும் நீதிமன்ற சிப்பந்தியை சாடை காட்ட அவன் தனபாலின் பெயரை உரக்க கூவினான். அடுத்த சில நொடிகளில் தனபால் வந்து சாட்சி கூண்டில் நின்றார். 

'You can proceed' என்றார் நீதிபதி ராஜசேகரைப் பார்த்து, 'But remember, you have only about thirty minutes.....'

'Yes your honour' என்ற ராஜசேகர் 'என்னுடைய குறுக்கு விசாரணையை துவக்குவதற்கு முன்பு இரண்டு விஷயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.' என்றான். 

'Go ahead.'

'முதலாவது: சென்னை புழல் பகுதியிலுள்ள மத்திய சிறைச்சாலைதான் பரப்பளவில் நாட்டிலேயே மிகப் பெரியது. அதில் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகளுக்கென்று தனித்தனியாக இரு பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் சுமார் 1200 கைதிகளை வைக்க முடியும். இணையத்திலுள்ள சமீபத்திய புள்ளி விவரங்கள்படி புழல் சிறையில் 962 தண்டனைக் கைதிகளும் 1100 ரிமான்ட் மற்றும் விசாரணைக் கைதிகள் மட்டுமே உள்ளனர். அதாவது 1200 தண்டனைக் கைதிகள் இருக்கக் கூடிய கட்டிடத்தில் ஆயிரத்திற்கும் குறைவானவர்களே வைக்கப்பட்டிருக்கும் சூழலில் ஆயுள் கைதியான சாட்சியை எதற்காக  விசாரணைக் கைதியான என்னுடைய கட்சிக்காரருடன் ஒரே சிறை அறையில் (prison cell) தங்க வைக்க வேண்டும்?

இரண்டாவதாக, திரு தனபால் என்னுடைய கட்சிக்காரருடைய அறையில் இருந்தது இரண்டே நாட்கள்தான். அதாவது இந்த வழக்கின் கடைசி விசாரணை (last hearing)க்கு அடுத்த நாள் அங்கு கொண்டுச் செல்லப்பட்டு இன்று காலை அங்கிருந்து மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆகவே இது ஒரு திட்டமிடப்பட்ட செயல் என்று கருதுகிறேன்.'

உடனே எழுந்து நின்ற வேணு கோபத்துடன், 'Objection' என்றார். 

எதற்கு என்பதுபோல் அவரைப் பார்த்தார் நீதிபதி. 

'எதிர்தரப்பு வழக்கறிஞர் வேண்டுமென்றே ஏதோ இதை நான்தான் திட்டமிட்டு செய்ததைப் போல் கூறுவதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.'

'Overruled...' என்ற நீதிபதி, ' Proceed with the cross.' என்றார் ராஜசேகரைப் பார்த்து. 

மீண்டும் எதையோ சொல்ல வாயெடுத்த வேணு அதை தவிர்த்து இருக்கையில் அமர ராஜசேகர் சாட்சி கூண்டை நெருங்கி, 'நீங்க புழல் சிறையில எவ்வளவு நாளா இருக்கீங்க?'

'எட்டு வருசம் ஆவுதுங்க.'

'மிஸ்டர் கோபால ஜெயில்ல வச்சி பாக்கறதுக்கு முன்னால ஒங்களுக்கு தெரியுமா, அதாவது பழக்கம் இருக்கா?'

'இல்லீங்க.'

'எவ்வளவு நேரம் அவர் கூட பேசியிருப்பீங்க? அதாவது அவர் நாந்தான் அந்த பொண்ணெ போட்டு தள்னேன்னு சொல்றதுக்கு முன்னாடி.....?'

'பத்து பதினைஞ்சி நிமிஷம் இருக்குங்க.'

'பத்து நிமிஷம் பேசினதுமே இந்த விஷயத்த ஒங்கக்கிட்ட சொல்லிட்டாரா....? இல்ல, அடுத்த நாள், அடுத்த வேளை.... அப்படீன்னு......'

'இல்லீங்க.... அப்பவே சொல்லிட்டார்.'

'அப்படீங்களா?' என்று வியப்புடன் சொன்ன  ராஜசேகர் தன் இருக்கைக்கு திரும்பி மேசை மீது வைக்கப்பட்டிருந்த சில காகிதங்களை எடுத்துக்கொண்டு மீண்டும் சாட்சி கூண்டை நெருங்கினான். 

'இதுக்கு முன்னால.... அதாவது 2005ல நீங்க கன்விக்டானதுக்கப்புறம் வேற ஏதாச்சும் கேஸ்ல சாட்சி சொல்லியிருக்கீங்களா? நல்லா ஞாபகப் படுத்தி சொல்லுங்க.'

ஒரு சில விநாடிகள் யோசிப்பதுபோல் நடித்த தனபால் இறுதியில், 'இல்லேன்னுதான் நினைக்கிறேன்.'

'ஒங்களுக்கு ஞாபக சக்தி ரொம்ப கம்மின்னு நினைக்கேன்...' என்ற ராஜசேகர் தன் கையிலிருந்த காகிதத்தைப் பார்த்தான். 'மூனு வருசத்துக்கு முன்னால வியாசார்பாடியில ஏகாம்பரம்னு ஒரு வியாபாரிய  நாலஞ்சி பேர் வெட்டிக் கொன்ன கேஸ்ல..... இதே மாதிரி ஒங்க செல்லுல கூட இருந்த ஒருத்தர் நாந்தான் இத ப்ளான் பண்ணி செஞ்சேன்னு உங்கக்கிட்ட சொன்னதா சாட்சி சொல்லியிருக்கீங்க! இப்ப ஞாபகம் வருதுங்களா?'

பிடிபட்ட கள்வனைப் போல் திருதிருவென விழித்த தனபால் தன்னையுமறியாமல் பிபி அமர்ந்திருந்த திசையை நோக்கிப் பார்த்தான். ராஜசேகர் அதை கவனியாதவன் போல் நின்றிருந்தாலும் நீதிபதி அதை கவனிக்க தவறவில்லை. பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த மகாதேவனும் அதை கவனித்தார். ஆனால் இந்த விவரம் ராஜசேகருக்கு எப்படி தெரிந்தது என்று நினைத்தார். அதுவும் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் வேணு அழைத்து வந்த சாட்சியைப் பற்றிய தகவலை அதற்குள் எப்படி? இதுக்கு பின்னால என்னமோ நடக்குது என்று நினைத்தார். சரி என்னவாருந்தா நமக்கென்ன கோபால் செய்யாத குத்தத்துக்கு எத்தன நாள்தான் அவஸ்தைப் படறது? இன்னையோட முடிஞ்சா சரிதான்....

'இப்பவும் ஞாபகம் வரலீங்களா?' என்றான் ராஜசேகர். 'அதுவரைக்கும் கவர்ன்மென்ட் சைட்லருந்து சாட்சிங்க சொன்னது எதுவுமே செல்லுபடியாகாம இருந்த சமயத்துலதான் நீங்க வந்து சாட்சி சொல்லி அந்த கேஸ்ல அவர் கன்விக்ட் ஆனார்....'

தனபால் பதிலளிக்காமல் தலை குணிந்து நிற்க இருக்கையில் இருப்புக் கொள்ளாமல் தவித்தார் வேணு..... இடியட்.... எத்தனை தடவை இவனுக்கு சொல்லியிருப்பேன்.... தலை குணிஞ்சி நிக்காம எதையாச்சும் சொல்லி வைடான்னு..... வேணுவின் இந்த உத்திக்கு துவக்கத்திலிருந்தே சம்மதிக்காத ஆய்வாளர் பெருமாள் வேணும்யா ஒமக்கு.... நீரே வச்சிக்கிட்ட சூன்யம்தான? இத்தோட நீர் க்ளோஸானாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல என்று தனக்குள் மகிழ்வடைந்தார். 

ராஜசேகர் மீண்டும் தன் கையிலிருந்த காகிதங்களை புரட்டி அதில் ஒன்றை உருவி எடுத்து படிப்பதுபோல் நடித்துவிட்டு சட்டென்று, 'நீங்க சென்னை சென்ட்ரல் ஜெய்ல் புழலுக்கு மாத்தறதுக்கு முன்னாலருந்தே இருக்கறவர்தான?'

'ஆமாங்க.'

'புழலுக்கு வந்ததுலருந்தே கன்விக்ட் ப்ரிசனர்ஸ் ப்ளாக்லதான இருக்கீங்க?'

'ஆமாங்க.'

'அப்புறம் திடீர்னு எதுக்கு ஒங்கள ட்ரையல் ப்ரிசனர்ஸ் ப்ளாக்குக்கு மாத்தினாங்க?'

'தெரியலீங்க.... போன வாரம் ஒரு நாள் அசிஸ்டென்ட் ஜெயிலர் ஐயா வந்து எங்கூட வாய்யான்னு சொல்லி அந்த ப்ளாக்குல கொண்டு விட்டார்.... இங்க ஒரு வாரம் இரு.... அப்புறம் சொல்றேன்னார்.... அதான் தெரியும்.'

'ஆனா ரெண்டு மூனு நாள்தான் இங்க இருந்தீங்க, அப்படீத்தான?'

'விசாரணை கைதிங்க இருக்கற பில்டிங்லதான் சார் இப்பவும் இருக்கேன்.... ஆனா இன்னொருத்தரோட?'

'அதாவது அவர் கிட்டருந்தும் உண்மைய வரவைக்கறதுக்குன்னு சொல்லுங்க!' என்றான் ராஜசேகர் புன்னகையுடன். 

'Objection' என்றார் வேணு உரக்க, 'இது சாட்சியை அவமதிப்பதுபோல் உள்ளது.'

'Sustained..' என்றார் நீதிபதி சற்று எரிச்சலுடன். 'Is it going to take long?' என்றார் ராஜசேகரிடம். 

'No your honour... just few more questions.'

சரி என்பதுபோல் தலையை அசைத்த நீதிபதி சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தார். 

'ரெண்டு வருசத்துக்கு முன்னால பனகல்பார்க்ல ஒரு சீட்டுக் கடைக்காரர் மர்டர் ஆன கேஸ்லயும் நீங்க விட்ன்ஸ் குடுத்துருக்கீங்க? அவர் பேர் ஞாபகம் இருக்கா?'

தன்பால் திருதிருவென முழித்தவாறு, 'இல்லீங்களே?'

'அதான! என்ன கேஸ், யார கொலை பண்ணாங்கன்னு தெரியாமயே சாட்சி சொல்றவர்தான நீங்க?' என்ற ராஜசேகர் வேணு இதை ஆட்சேபிப்பார் என்று எதிர்பார்த்து அதற்கு அவருக்கு வாய்ப்பளிக்காமல், 'சரி அத விடுங்க.' என்று அடுத்த கேள்விக்கு தாவினான். 

'அந்த கைதி பேராவது ஞாபகம் இருக்கா?'

சிறிது நேரம் யோசிப்பதுபோல் நடித்த தனபால், 'இல்ல சார்.' என்றான். 

இதெல்லாம் இவனுக்கு எப்படி தெரிந்தது என்று நினைத்த வேணு சற்று தள்ளி அமர்ந்திருந்த ஆய்வாளர் பெருமாளை பார்த்தார். அவருக்கும் இது வியப்பை அளித்திருந்தது என்பது அவர் முகம் போன போக்கிலேயே தெரிந்தது. 

'அந்த கேஸ்லயும் நீங்க சாட்சி சொன்னதுக்கப்புறம்தான் கேஸ் கன்விக்‌ஷன்ல முடிஞ்சிது... இதுல இன்னொரு ஆச்சரியம் அதுலயும் வேணு சார்தான் கவர்மென்ட் லாயர்.....' என்ற ராஜசேகர், 'நா சொல்றது சரிதானே?' என்றான் தனபாலைப் பார்த்து.

தனபால் பதிலளிக்காமல் வேணு அமர்ந்திருந்த திசையை நோக்கி பார்த்தான். 


நாளையுடன் நிறைவுபெறும்.....