சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 அக்டோபர் 2013

சொந்த செலவில் சூன்யம் - நீதி மன்ற விசாரணை நியதிகள் (சிறப்பு பதிவு)

நான் எழுதி வரும் 'சொந்த செலவில் சூன்யம்' என்ற தொடரில் நாளை (திங்கட்கிழமை) கோபாலுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை சென்னை பெருநகர் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பகுதியை இடுவதற்கு முன்பு குற்றவழக்கு விசாரணைகள் நீதிமன்றங்களில் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதை சுருக்கம்மாக கூறலாம்  என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டதே இந்த சிறப்பு பதிவு.

நம்முடைய நாட்டில் குற்ற விசாரணைகள் நான்கு நிலைகளில் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது. 

இந்த நிலைகளில் முதலில் வருவது 

1.மாவட்ட நீதிமன்றங்கள். 

இதில் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) மற்றும் செஷன்ஸ் எனப்படும் அமர்வு நீதிமன்றங்கள் (Court of Sessions) வருகின்றன. 

இவ்விரு நீதிமன்றங்களை அடுத்து

2. ஒவ்வொரு மாநிலங்களிலும் இயங்கி வரும் உயர் நீதிமன்றம்

இந்த நீதிமன்றத்தை அடுத்து 

3. நாட்டின் மிகப்பெரியதாக கருதப்படும் உச்ச நீதிமன்றம் வருகிறது.

இந்த நீதிமன்றங்களின் செயல்பாடுகளை  இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Code of  Criminal Procedure)  விரிவாக கூறுகிறது. 

இச்சட்டத்தின். 

அ) பிரிவு 225லிருந்து 237 வரையுள்ள பிரிவுகள் அமர்வு நீதிமன்றங்களில் விசாரணை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதையும்

ஆ) பிரிவு 238லிருந்து 250 வரையுள்ள பிரிவுகள் நீதித்துறை நடுவர் மன்றங்களில் விசாரணை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதையும் கூறுகின்றன.

இந்த தொடரில் குறிப்பிடப்படும் வழக்கு இவ்விரு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட வேண்டிய வழக்கு என்பதால் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களின் செயல்பாடுகளைப் பற்றி எதையும் நான் குறிப்பிடவில்லை. 

ஒரு மாநிலத்தில் நடைபெறும் பெரும்பாலான குற்ற வழக்குகள் இவ்விரு நீதிமன்றங்களிலேயே நடைபெற்று தீர்ப்பு வழங்கப்படுவதால் இவற்றின் செயல்பாடுகளைப் பற்றி ஓரளவுக்காவது நாம் தெரிந்து வைத்திருப்பது நல்லது. அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை அளிக்கப்பட்டால் மட்டுமே அதை உறுதி செய்ய உயர் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்பதால் ஒரு மாநிலத்தில் நடைபெறும் பெரும்பாலான வழக்குகள் அதன்னை அமர்வு நீதிமன்றங்களிலேயே முடிந்துவிடுவது வழக்கம், அதாவது அவற்றை எதிர்த்து மேல் முறையீடு செய்யாதவரை. மேல் முறையீடு என்று வந்துவிட்டால் வழக்குகள் உச்ச நீதிமன்றம் வரையிலும் கூட செல்வது வாடிக்கை. 

குற்றவியல் நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் வழக்குகள் இருவகைப் படும். 

1. அழைப்பாணை வழக்கு (summons cases) 

2. பிடிகட்டளை வழக்கு (warrant case)

அதிகபட்சனையாக இரண்டு ஆண்டுகள் வரையிலும் தண்டனை வழங்கப்படக் கூடிய வழக்குகளை அழைப்பாணை வழக்குகள் என்றும் மரண தண்டனை வரையிலும் தண்டனை வழங்கப்படக் கூடிய வழக்குகளை பிடிகட்டளை வழக்குகள் என்றும் கூறுகின்றனர். 

ஆனால் அனைத்து குற்றவியல் பிடிகட்டளை வழக்குகளிலும் கூட குற்றவாளி கைது செய்யப்பட்டதும் ஆஜர்படுத்தப்படுவது நீதித்துறை நடுவர் மன்றத்தில்தான். அந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகுதான் அது எத்தகைய தண்டனை வழங்கப்படக் கூடிய குற்றம் என்பது அனுமானிக்கப்பட்டு (சாதாரணமாக பிடிகட்டளை வழக்குகள் அன்னைத்துமே அமர்வு நீதிமன்றங்களால் மட்டுமே விசாரிக்கப்படுகின்றன என கூறலாம். ஏனெனில் ஒரு நீதிமன்ற நடுவருக்கு ஆயுள் தண்டனையோ அல்லது மரண தண்டனையோ வழங்க அதிகாரம் இல்லை) அதை தொடர்ந்து தன்னுடைய நீதிமன்றத்திலேயே விசாரிப்பதா அல்லது அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றபட வேண்டிய வழக்கா என்பதை நீதித்துறை நடுவர் அனுமானித்து அது அமர்வு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டிய குற்றம் என்று கருதும்பட்சத்தில் அதில் குற்றப்பத்திரிக்கை தாக்கப்பட்டதும் வழக்கு சம்மந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் அமர்வு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இதை ஆங்கிலத்தில் commitment of case to sessions court என்பார்கள். (குமுச. 207 (9).

அவ்வாறு ஒரு வழக்கை அமர்வு நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு முன்பு நீதித்துறை நடுவர் என்னென்ன நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதையும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் விவரிக்கின்றது. அதன் சாராம்சத்தை மட்டும் பார்ப்போம்.

1. குற்றம் சுமத்தப்பட்டவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதா?

2. குமுச பிரிவ 161 அல்லது 164ல் குறிப்பிட்டுள்ள படி வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளனவா?

3. குற்றப்பத்திரிக்கை உள்ளிட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களின் நகல்களும் எதிரிக்கு வழங்கப்பட்டுள்னவா? அவற்றில் ஏதேனும் அளிக்கப்படவில்லை என்று எதிரி கூறும் பட்சத்தில் அவற்றை  அமர்வு நீதிமன்றத்தில் பெறுவது சாத்தியமாகாது என்பதால் வழக்கை அமர்வு நீதிமன்றத்திற்கு கமிட் (commit) செய்வதற்கு முன்பே அளிக்க நடுவர் உத்தரவிட வேண்டும். 

4. எதிரிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதா? அல்லது காவல்துறை பொறுப்பில் உள்ளாரா?  காவல்துறை பொறுப்பில் எதிரி இருக்கும் சூழலில் அவரை உடனே நீதிமன்ற பொறுப்பில் எடுத்து சிறையில் அடைக்க வேண்டும். பிணை வழங்கப் படாதிருக்கும் பட்சத்தில் அவரை பிணையில் விடுவிக்க நடுவர் முயலக் கூடாது.   

5. அமர்வு நீதிமன்றத்தில் தன் சார்பில் வழக்கறிஞரை நியமித்துக்கொள்ள எதிரிக்கு வசதியுள்ளதா என்பதை உறுதிசெய்துக்கொள்ள வேண்டும். அப்படி அவருக்கு வசதியில்லாத சூழலில் அரசின் சார்பில் ஒரு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும்

6. வழக்கு சம்மந்தப்பட்ட பொருட்கள் (material objects) ஏதேனும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் அவற்றையும் அமர்வு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

7. அமர்வு நீதிமன்றங்களில் அரசின் சார்பில் குற்றத்துறை வழக்கறிஞர் (public prosecutor) மட்டுமே ஆஜராக முடியும் என்பதால் அவருக்கு நீதிமன்ற நடுவர் அறிவிக்கை (notice) அனுப்ப வேண்டும்.

அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 

1. வழக்கு விசாரணையை அமர்வு நீதிமன்றம் துவக்குவதற்கு முன்பு எதிரிக்கு குற்றப்பத்திரிக்கையும் அதனுடன் போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களின் நகல்களும் எதிரிக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். 

2. குற்றச்சாட்டு வரையப்படும் நிலையில் (framing of charges)எதிரியின் மீது குற்றம் எழவில்லை என்று அவருடைய தரப்பில் வாதம் முன்வைக்கப்படும் சூழலில் அரசு தரப்பு வாதத்தையும் கேட்டதற்கு பிறகே எதிரி தரப்பின் வாதத்திலுள்ள நியாயத்தை தீர்மானிக்க வேண்டும். இருதரப்பு வாதங்களின் முடிவில் எதிரியின் மீது வரையபட்ட குற்றம் ஏதும்  நிரூபணம் ஆகவில்லை என்று நீதிமன்றம் கருதும்பட்சத்தில் அவரை விடுவிக்கும் அதிகாரம் அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு உண்டு (குமுச.232). எதிரியின் மீதான குற்றத்தில் உண்மை இருக்கலாம் என்று கருதப்படும் சூழலில் விசாரணையை தொடர அனுமதிக்கலாம். 

3. கொலை குற்றங்களில் எதிரி குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டாலும் அவரை நீதிமன்றம் உடனே தண்டித்துவிடக் கூடாது. சாட்சி விசாரணை முழுவதுமாக முடிந்த பின்னரே தண்டனை வழங்க வேண்டும்.

4.எதிரி குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்தால் அரசு தரப்பு சாட்சியங்களை விசாரிக்க அதற்கென்று நாள் ஒன்றை குறிப்பிட வேண்டும். 

5. அரசு தரப்பு சாட்சிய விசாரணை நடைபெறும்போது அவர்களை குறுக்கு விசாரணை செய்ய எதிரிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

6. அரசு தரப்பு சாட்சிய விசாரணைக்குப் பிறகு குமுச. பிரிவு 313ல் குறிப்பிட்டபடி நீதிபதி எதிரியை சுமத்தப்பட்ட குற்றங்களைக் குறித்து விளக்கமளிக்க உத்தரவிடலாம். அப்போது எதிரியே நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அவர் சார்பாக ஆஜராக வழக்கறிஞரை பதிலளிக்க அனுமதிக்கலாகாது. ஆனால் இதற்கு மற்ற சாட்சியங்களைப் போல பிரமாணம் ஏதும் எதிரி எடுத்துக்கொள்ள தேவையில்லை. நீதிபதி கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுக்கும் உரிமையும் எதிரிக்கு உண்டு. நீதிபதியின் கேள்விகளுக்கு எதிரி அளிக்கும் பதில்களை நீதிபதி எழுதி எடுத்துக்கொள்ள வேண்டும். எதிரியின் பதில்களை சம்மந்தப்பட்ட வழக்கில் அவருக்கு எதிராக அரசு பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதிக்கலாம் என்கிறது இந்த சட்டப் பிரிவு. இந்த நியதி நிறைவேற்றப்படுவதற்கு முன்பு எதிரியின் சாட்சியங்களை நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது.

7. நீதிபதியின் நேரடி விசாரணைக்குப் பிறகும் குற்றம் நிரூபணமாகவில்லை என்று நீதிமன்றம் கருதும்பட்சத்தில் எதிரியின் சாட்சிய விசாரணை துவங்கும். அரசு தரப்பில் ஆஜரான சாட்சிகளை மீண்டும் விசாரணை செய்யவும் விசாரணைக்கு வருவதற்கு மறுக்கும் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று அழைப்பாணை வழங்க வேண்டும் என்று கோரவும் எதிரிக்கு உரிமையுண்டு.  எதிரி தரப்பு சாட்சிய விசாரணையின் போது எதிரியும் தனக்கு ஆதரவாக சாட்சியமளிக்க அனுமதிக்கப்படுவார். ஆனால் அத்தகைய சாட்சியம் கூற எதிரியை நிர்பந்திக்கும் அதிகாரம் இல்லை. அவராக முன்வந்து எழுத்து மூலம் கோரிக்கை வைத்தால் மட்டுமே அவர் சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்கிறது குமுச பிரிவு 315.

8. எதிரியின் தரப்பில் முன்னிலைப்படுத்தப்படும் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யும் உரிமை அரசுக்கு உண்டு. 

9. சாட்சிய விசாரணையின் முடிவில் இருதரப்பு வழக்கறிஞர்களுடைய வாதங்களும் கேட்கப்படும். இருதரப்பு வாதங்களின் முடிவில் நீதிபதி தீர்ப்பளிப்பார். 

10. அமர்வு நீதிமன்றத்திற்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்க அதிகாரம் உண்டு என்றாலும் அத்தகைய அதிகபட்ச தண்டனை சம்மந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட வேண்டும் என்கிறது சட்டம்.

இந்த பதிவு குற்றவியல் நீதிமன்ற விசாரணைகள் நடைபெறுவதின் சாராம்சம் மட்டுமே. இதைத் தவிர இன்னும் பல நடைமுறைகளை விவரமாக தெரிவிக்கின்றது இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம். 

ஆனால் என்னுடைய  'சொந்த செலவில் சூன்யம்' என்ற க்ரைம் தொடரை தொடர்ந்து படிக்க இந்த பதிவு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

***********

16 ஆகஸ்ட் 2013

யார் கொலையாளி (நிறைவுப் பகுதி)

நேற்றைய பதிவை படித்துவிட்டு மேலைநாட்டு நண்பர் ஒருவர் அங்குள்ள  கைதிகளுக்கு 'மிராண்டா உரிமைகள்' முழுவதுமாக படித்துக்காட்டப்பட்டே கைது செய்கின்றனர் என்றும் குற்றவாளி எனக் கருதப்படுபவர் போலீஸ் விசாரணையின்போதோ அல்லது நீதிமன்றத்திலோ தனக்கு எதிராக சாட்சியம் அளிக்க வற்புறுத்தப்படுவதில்லை என்றும், தீர்ப்பு வரும் வரையிலும் ஒருவர் குற்றவாளி எனக் கருதப்படுவதில்லை என்றும் கருத்துரையில் குறிப்பிட்டிருந்தார். 

இங்கும் அத்தகைய சில உரிமைகளை சட்டம் வழங்கியுள்ளது. அதைப் பற்றி இன்று சுருக்கமாக பார்ப்போம்.

குற்றம் சுமத்தப்பட்டவரின் சாட்சியம்

க்ரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு எதிராக சாட்சியம் அளிக்க நிர்பந்திக்கப்படலாகாது என்கின்றன சட்டங்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 20(3) எந்த இந்திய குடிமகனும் தனக்கு எதிராக சாட்சியமளிக்க தேவையில்லை என்றும் அது அவருடைய அடிப்படை உரிமைகளில் ஒன்றும் என்றும் கூருகிறது. 21வது ஷரத்தில் இந்திய குடிமகன் ஒருவருக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளான சுதந்திரமான, இடையூறு இல்லாத வாழ்க்கை ஆகியவற்றை வேறெந்த சட்டமும் பறிக்கலாகாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே போன்று இந்திய குற்றவியல் முறைச் சட்டமும் 161, 313, 315வது பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டவர் குற்றம் நிரூபிக்கப்படும் வரையிலும் குற்றமற்றவர் என்றும் கருதப்படுவதால் அவரை தனக்கு எதிராக அரசால் தொடரப்படும் எந்த க்ரிமினல் வழக்குகளிலும் சாட்சியம் சொல்ல வற்புறுத்தலாகாது என்று கூறப்பட்டுள்ளது. குற்றம் சுமத்தபட்ட ஒருவர் சாட்சியம் அளிக்க முன்வராத நிலையில் அதை அவருக்கு எதிராக பயன்படுத்திக்கொள்ளவும் முடியாது என்கிறது குவிமுச.315 (B) பிரிவு.

ஏனெனில் ஒருவரை குற்றவாளி என்று நிரூபிக்கும் கடமையும் பொறுப்பும் குற்றம் சுமத்துபவருக்கே உள்ளதே தவிர குற்றம் சுமத்தப்பட்டவர் தன்னை நிரபராதி என நிரூபிக்கும் கடமை இல்லை. 

ஆகவே குற்றம் சுமத்தப்பட்டவர் தனக்கு எதிராகவோ அல்லது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு விசாரணையின்போதோ அல்லது நீதிமன்றத்திலோ உண்மையாக பதில் கூற வேண்டும் என்றோ நிர்பந்தப்படுத்த முடியாது. 

ஆனால் குற்றம் சுமத்தப்பட்டவர் தாமாக முன்வந்து நீதிமன்றத்தில் தனக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்கும் பட்சத்தில் அவரை குறுக்கு விசாரணை செய்ய அரசுதரப்பு வழக்கறிஞருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உண்மை கண்டறியும் பரிசோதனைகள்.

Lie Detector Test எனப்படும் உண்மையை கண்டறிய நடத்தப்படும் பரிசோதனைகளும் குற்றம் சுமத்தப்பட்டவருடைய அனுமதி இல்லாமல் நடத்த முடியாது. சமீபத்தில் நடைபெற்ற பல வழக்குகளிலும் உச்சநீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்டவரை இத்தகைய பரிசோதனைகளுக்கு நிர்பந்திப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21வது ஷரத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை பறிப்பதாக உள்ளது என்பதால் அதை அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. ஆனால் ஒருவர் தாமாக முன்வந்து பரிசோதனைக்கு தன்னை ஆளாக்கிக்கொள்ளும் பட்சத்தில் அதன் முடிவுகளை அவருக்கு எதிராக பயன்படுத்திக்கொள்ள தடையேதும் இல்லை. 

ஆகவே காவல்துறை அதிகாரிகள் தங்களுடைய புலன் விசாரணையில் இறங்குவதற்கு முன்பே குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு சட்டம் வழங்கியுள்ள பல சலுகைகளை, உரிமைகளை கருத்தில்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் பல சமயங்களில், குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க தங்களுடைய மேலதிகாரிகளிடமிருந்து வரும் நிர்பந்தங்களால் விசாரணை அதிகாரிகள் பல சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பதும் உண்மை. 

விசாரணை செய்து குற்றவாளி யார் என்று கண்டுபிடிப்பதை விட அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்களையும் சாட்சியங்களையும் திரட்டி அவருக்கு நீதிமன்றங்கள் வழியாக தண்டனை பெற்றுத்தரும் பெரும் பொறுப்பும் காவல்துறை அதிகாரிகளுக்கு உண்டு. 

இதை சொல்வது மிக எளிது. ஆனால் நடைமுறையில் அது அத்தனை எளிதல்ல என்பதை பல வருடங்கள் இத்துறையில் பணியாற்றியவர்களுக்கே தெரியும். 

ஆனால் விசாரணை அதிகாரிகளுடைய கரங்கள் சட்டத்தால் எவ்வாறெல்லாம் கட்டப்பட்டுள்ளன என்பதைப் பற்றிய விவரம் ஏதும் இல்லாத நம்மைப் போன்ற பொதுஜனமும் பத்திரிகைத் துறையும் குற்றம் நடந்த சில தினங்களிலேயே குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போனால் காவல்துறை உறங்குகிறதா என்று கேள்வி கேட்பதற்கு மட்டும் தயங்குவதே இல்லை. 

இதை ஓரளவுக்காவது நாம் தெரிந்து வைத்திருப்பது என்று நான் நினைத்ததால்தான் இந்த கட்டுரையை எழுதினேன். அதற்கென நான் என்னை தயாரித்துக்கொள்ள முயன்றபோது அது அத்தனை எளிதல்ல என்பதை உணர்ந்துக்கொண்டேன். எனக்கு இதில் உதவ இப்போது காவல்துறையில் சர்வீசிலுள்ளவர்கள் மட்டுமல்லாமல் ஓய்வுபெற்றவர்களும் கூட தயாராக இல்லை.  சிலர் என் பேரை எங்கையும் குறிப்பிடக்கூடாது சார் என்று சொல்லிவிட்டுத்தான் நான் எழுதிய கட்டுரையை படித்துப்பார்த்து அவற்றிலுள்ள ஒருசில தவறுகளை சுட்டிக்காட்டினார்கள். இன்றும் அந்தத் துறையில் உள்ளவர்கள் மத்தியில் உள்ள ஒருவித அச்ச உணர்வே இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

வழக்கறிஞர்களுள் பலருக்கு முன்பு ஒருகதை சொல்வார்களே தலைமை மந்திரவாதி தன்னுடைய மந்திரங்களில் மிக முக்கியமானவற்றை தன்னுடைய சீடர்களுடன் கூட பகிர்ந்துக்கொள்ள மாட்டாராம் என்று, அதுபோல இது ஏதோ தொழில் ரகசியம் என்பதுபோன்று தங்களுடைய கருத்துக்களை கூறாமல் நழுவிப்போய்விட்டனர். 

ஆனால் தமிழக காவல்துறையின் இணையதளத்தில் பல நல்ல தகவல்கள் குவிந்துக்கிடக்கின்றன. தெரிந்தோ தெரியாமலோ காவல்துறையினருக்கு மட்டுமே அனுமதி வழங்கவேண்டிய பல சுட்டிகள் நமக்கும் படிக்க கிடைக்கின்றன. அத்துடன் விக்கிப்பீடியா, லீகல் ஹெல்ப் என்ற பெயரில் நாட்டிலுள்ள பல இணையதளங்களிலும் இருந்து பல உபயோகமான தகவல்கள் கிடைத்தன. இவற்றை வைத்தே என்னால் இயன்ற அளவு வாசிப்பவர்களுக்கு புரியும் வகையில் எளிதான தமிழில் அளிக்க முயற்சி செய்தேன். 

இது ஒரு வசீகரமான தகவல்கள் இல்லைதான் என்றாலும் பலரும் இத்தொடரை விரும்பிப் படித்ததுடன் நிற்காமல் எனக்கு உற்சாகப்படுத்தும் வகையில் தங்களுடைய கருத்துக்களையும் பகிர்ந்துக்கொண்டனர். அவர்களுக்கெல்லாம் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்.

இந்த ஆய்வை நான் நடத்தியதற்கு வேறொரு காரணமும் உண்டு.

நான் பல வருடங்களாக கதைகள் படிப்பதில் ஆர்வமுள்ளவன். அதிலும் க்ரைம் நாவல்கள் என்றால் உயிர். ஒரு காலத்தில் நம்முடைய தமிழகத்தில் க்ரைம் நாவல்களுக்கு பிரசித்திபெற்ற ராஜேஷ்குமாருடைய பரம ரசிகனாயிருந்தவன். அதன் பிறகு பல ஆங்கில க்ரைம் நாவல்களைப் படிக்க வாய்ப்பு கிடைத்தபோது அவருடைய நாவல்கள் எத்தனை primitive ஆக இருந்தன என்பதை பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். 

சமீபகாலமாக ஆங்கில க்ரிமினல் நாவல்கள் எழுதுவதில் சிறந்துவிளங்குபவர் அமெரிக்க நாவலாசிரியரான  மைக்கேல் கொனெல்லி.  லாஸ் ஏஞ்சல்ஸ் டைம் பத்திரிகையின் க்ரைம் ரிப்போர்ட்டராக பணியாற்றிய இவருக்கு அமெரிக்க காவல்துறையினரின் செயல்பாடுகள் அனைத்தும் அத்துப்படி. ஆகவே பிற்காலத்தில் ஒரு தலைசிறந்த க்ரிமினல் கதைகள் எழுதும் நாவலாசிரியராக உருப்பெற்றதில் வியப்பேதும் இல்லை. அவர் படைத்த ஹாரி போஷ் (Harry Bosch) கதாபாத்திரம் க்ரிமினல் நாவல் பிரியர்கள் நடுவில் மிகவும் பிரபலமானது. லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறையில் புலன் விசாரணை அதிகாரியாக பணிபுரிவதுபோல் படைக்கப்பட்ட அந்த கதாபாத்திரம் குற்றவாளிகளை எவ்வாறு மடக்கிப் பிடிக்கிறார் என்பதை மிகவும் விலாவாரியாக, சுவைபட எழுதுவதில் கொனெல்லி மிகவும் வல்லவர். லாஸ் ஏஞ்சல்ஸ் செயல்பட்டு வந்த க்ரிமினல் லாயர்களுடைய செயல்பாடுகளை மையமாக வைத்தும் பல சுவையான கதைகளையும் படைத்துள்ளார் அவர்.

அவரைப் போலவே ஒரு க்ரைம் நாவலை முந்தைய காலத்திய இந்திய எழுத்தாளர்களைப் போன்று மேலெழுந்தவாரியாக எழுதாமல் ஒரு கொலைக் குற்றவாளி மற்றும் அவரை துரத்தும் காவல்துறை அதிகாரி அவர்களைத் தொடர்ந்து புலன் விசாரணை முடிவில் அதை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று வாதாடி வெற்றி பெற வழக்கறிஞர்கள் எடுக்கும் முயற்சிகள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றை மிக அழகாக எழுத்தில் கொண்டுவருவதை ஒரு பிரத்தியேக கலையாக கொண்ட ஆங்கில நாவலாசிரியர்கள் ஏராளம்.

அதே பாணியில் ஒரு கொலைக் குற்றம் நடந்ததிலிருந்து, விசாரணை, நீதிமன்றத்தில் நடத்தப்படும் காரசார விவாதங்கள் என அனைத்தையும் ஒரு நாவலில் சொன்னால் என்ன என்று நானும் யோசித்திருக்கிறேன். ஏறக்குறைய மூன்று மாத காலமாக அதைப் பற்றியே கனவு கண்டு அதற்காக இங்கும் அங்கும் அலைந்து இந்திய, குறிப்பாக தமிழக சூழலில் ஒரு முழுமையான க்ரைம் நாவலை எழுத முற்பட்டேன். எனக்கு பழக்கமான காவல்துறை அதிகார்கள், க்ரிமினல் வழக்கறிஞர்கள் சிலரை நேரில் சந்தித்து பல விஷயங்களை தெரிந்துக்கொண்டேன். அத்துடன் நில்லாமல் சென்னை சைதாப்பேட்டையிலுள்ள பெருநகர மெட்ரோபாலிட்டன் மஜிஸ்திரேட் மற்றும் எக்மோரிலுள்ள செஷன்ஸ் நீதிமன்றங்களுக்கும் நேரில் சென்று அங்கு நடைபெற்ற வழக்கு விசாரணைகளிலும் ஒரு பார்வையாளனாக கலந்துக்கொண்டேன். 

அந்த முயற்சியில் நான் கண்டறிந்தவற்றை குறிப்பெடுத்து முடித்தபோது அதுவே ஒரு தனிக் கட்டுரையாக வடிவெடுத்திருந்தது. ஆகவே அதையே ஒரு தனி பதிவாக 'யாரி கொலையாளி!' என்ற தலைப்பில் எழுத முடிவு செய்தேன்.

இதன் தொடர்ச்சியாக என்னுடைய 'கதையுலகம்' ப்ளாகில் 'சொந்த செலவில் சூன்யம்...' என்ற தலைப்பில் நாவல் ஒன்றை பதிவிட முடிவு செய்துள்ளேன். தினமும் ஒரு மணி நேரத்திற்கு மேல் கணினியில் எழுத முடியவில்லை என்பதால் கதையை எழுதத் துவங்கி இரண்டு மாத காலம் ஆகியும் இன்னும் முழுவதும் ரெடியாகவில்லை. இரண்டு வாரங்களில் முடித்துவிட முடியும் என்று நினைக்கிறேன். அதையும் படித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

அன்புடன்,
டிபிஆர்.


**********

15 ஆகஸ்ட் 2013

கொலையாளி யார் 4

கொலைக்குற்றம் சாட்டப்பட்டவரை கைது செஞ்சி 24 மணி நேரத்துக்குள்ள தாக்கல் செஞ்சி மறுபடியும் போலீஸ் விசாரணைக்குன்னு கஸ்டடியில எடுக்கறதுக்கு முக்கிய காரணம் அவர்கிட்டருந்து எப்படியாச்சும் நாந்தான் இந்த கொலைய செஞ்சேன்னு வாக்குமூலம் வாங்கறதுதான். ஏன்னா அது மட்டும் நடந்துருச்சின்னா கேஸ ஈசியா க்ளோஸ் பண்ணிறலாமே, அதுக்குத்தான். ஆனா அதுக்கும் சட்டம் ஒரு செக் (check) வச்சிருக்கு. அது என்னான்னு பாக்கலாம்.  

ஒப்புதல் வாக்குமூலம்

சில சமயங்கள்ல குற்றவாளி தானாவே முன்வந்து ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கறதுக்கும் வாய்ப்புண்டு. அதாவது முதல் முறையா ஏதோ ஒரு ஆத்திரத்தில் கொலை செய்றவங்க அதுக்கப்புறம் மனம் வருந்தி தங்களோட தப்பை உணர்ந்து குற்றத்தை ஒப்புக்கொள்றது உண்டு.  

அப்படிப்பட்ட சமயத்துல இந்த வாக்குமூலத்த எப்படி வாங்கணும்னும் சட்டம் சொல்லுது. இந்திய குற்றவியல் முறைச்சட்டம் 164 பிரிவில சொல்லியிருக்கறா மாதிரி அவரோட வாக்குமூலத்த ஒரு மஜிஸ்டிரேட் முன்னால  எழுத்து மூலமா வாங்கணுமாம். இதுக்கு சம்மந்தப்பட்ட கேஸ விசாரிக்கற மஜிஸ்டிரேட்டாத்தான் இருக்கணும்னு கட்டாயமில்ல. அந்த மாதிரி சமயத்துல வாக்குமூலத்தை பதிவு செய்யிற மஜிஸ்டிரேட் அத வழக்கை விசாரிக்கபோற மஜிஸ்திரேட்டுக்கு நேரடியா அனுப்பி வைக்கணுமாம். இந்த மாதிரி வாக்குமூலத்த குடுக்கறவங்க பின்னால போலீசோட நிர்பந்தத்தாலதான் குடுத்தேன்னு பின்வாங்க முடியாதுங்கறதாலதான் இந்த ஏற்பாட்ட சட்டம் செஞ்சி வச்சிருக்கு. இப்படியில்லாம போலிஸ் ஸ்டேஷன்ல வாங்கற எந்த ஒப்புதல் வாக்குமூலமும் கோர்ட்ல செல்லாதுங்கறது ரொம்ப முக்கியம். 

குற்றப்பத்திரிக்கை - Charge Sheet (கு.மு.ச.173(2))

புலன் விசாரணையின் முடிவில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது காவல்துறை கூறும் குற்றச்சாட்டுக்களை அதற்கென காவல்துறை நிர்ணயித்துள்ள படிவத்தில் பட்டியிலிட்டு அதனுடன் சம்மந்தப்பட்ட அறிக்கைகள், அரசுத்தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்கள், தடயங்களைப் பற்றிய விவங்கள் ஆகியவற்றை இணைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். 

இதை குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்ட தியதியிலிருந்து 30லிருந்து 90 நாட்களுக்குள் செய்ய வேண்டும் என்பதும் நியதி. அதற்குள் செய்ய இயலாமல் போகும் பட்சத்தில் நீதிமன்றத்தை அணுகி தகுந்த காரணங்களுடன் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு சிறையிலிருக்கும் குற்றவாளை விடுவிக்கப்படவும் வாய்ப்புள்ளதாம். 

இது எதற்கு என்று கேட்க தோன்றலாம். 

இப்படியொரு விதியை சட்டம் வகுத்திருக்கவில்லையென்றால் தகுந்த காரணம் இல்லாமல் ஒருவரை கைது செய்து சிறையிலடைக்க காவல்துறைக்கு அதிகாரம் அளித்துவிடுவதற்கு ஒப்பாகும் அல்லவா? மேலும் இந்திய சிறைகளிலுள்ள தண்டிக்கப்பட்ட (convicted) குற்றவாளிகளை விட குற்றம் சாட்டப்பட்ட கைதிகளின் (accused) எண்ணிக்கை அதிகமாகிவிட வாய்ப்புள்ளது. அதுமட்டுமா? தகுந்த சான்றுகளுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளே பல ஆண்டுகள் நிலுவையில் நிற்கையில் அடிப்படை ஆதாரமான குற்றப்பத்திரிக்கையே தாக்கல் செய்யப்படாமல் இருக்கும் வழக்குகளும் சேர்ந்துக்கொண்டால் என்னாவது? மேலும் கைது செய்து 90 நாட்களுக்குள் கிடைக்காத சான்றுகள் அதற்குப் பிறகு கிடைக்க வாய்ப்பு மிகவும் குறைவு என்று நீதிமன்றங்கள் கருதுவதால்தான இதை தாக்கல் செய்ய அதிகபட்ச காலத்தை நிர்ணயிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. 

குற்றப்பத்திரிக்கையில் குற்றம் நாட்டில் நடைமுறையிலுள்ள எந்தெந்த சட்ட விதிகளின் கீழ் வருகிறது, அது எங்கு, எப்போது, எவ்வாறு நடந்தது. அதற்கு காரணமாக இருந்தவர்கள் யார், யார் அதற்கு துணை போனவர்கள் யார், யார் என்ற விவரங்கள், அவர்கள் சிறையில் உள்ளனரா அல்லது பிணையில் உள்ளனரா என்பதுபோன்ற விவரங்களுடன் குற்றத்தை சந்தேகமில்லாமல் நிரூபிக்க காவல்துறை சமர்ப்பிக்கும் ஆதாரணங்கள், அதைச் சார்ந்துள்ள அறிக்கைகள், வாக்குமூலங்கள், குற்றம்சாட்டப்பட்டவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ஆயுதங்கள், கொலைக்களத்திலிருந்து கைப்பற்றப்பட்ட அல்லது எடுக்கப்பட்ட தடயங்கள், ஆவணங்கள் என அனைத்தையும் இணைத்து ஒரு முழுமையான ஆவணமாக தாக்கல் செய்யப்பட வேண்டும்.

முதல் முறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகையே இறுதியானதாக இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டப் பிறகும் தேவை என்று கருதும்பட்சத்தில் விசாரணையை தொடர காவல்துறைக்கு அதிகாரம் உண்டு. குறிப்பாக கொலை முயற்சி என்று பதிவு செய்யப்படும் குற்றம் வழக்கு நிலுவையிலுள்ளபோது தாக்கப்பட்டவர் மரிக்கும் பட்சத்தில் கொலைக் குற்றமாக மாற்றப்பட வாய்ப்புள்ளது. ஆகவே வழக்கு முடிவாகும் வரையிலும் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்ய காவல்துறை அனுமதிக்கப்படுவதுண்டு. ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டவருடன் மேலும் குற்றவாளிகள் அல்லது கூடுதல் அரசு தரப்பு சாட்சியங்களை சேர்க்கவும் கூடுதல் குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்படுவதுண்டு. ஆகவே காவல்துறை முதல் முறையாக தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிக்கையில் இது இறுதி அறிக்கை என்ற வாசகத்தை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது காவல்துறை இலாக்கா வழங்கியுள்ள சுற்றறிக்கைகளில் ஒன்று.

குற்றப்பத்திரிக்கையை  நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு அதனுடைய மாதிரி வடிவத்தை (draft copy) அரசு தரப்பில் வழக்கை நடத்த நியமிக்கப்படும் அரசு வழக்கறிஞரிடம் (Public Prosecutor(PP)/DPP/APP) காண்பித்து அவருடைய அனுமதியை பெற வேண்டும் என்று காவல்துறை தன்னுடைய உள்சுற்றுக்கு மட்டுமான (inside circulation only) சுற்றறிக்கைகளில் கூறியிருந்தாலும் பல உயர்/உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அது கட்டாயமல்ல என்றும் அரசு வழக்கறிஞர்கள் இதை காவல்துறை அதிகாரிகள் மீது நிர்பந்திக்கக் கூடாது என்று கூறியுள்ளதும் உண்மை. 

இதற்கு என்ன காரணம் என்று என்னுடைய வழக்கறிஞர் நண்பர் ஒருவரிடம் கேட்டேன். அவர் கூறியதிலிருந்து நான் தெரிந்துக்கொண்டவை:

ஏன் அரசு வழக்கறிஞரிடம் காட்ட வேண்டும்?

1. விசாரணை அதிகாரிகள் குற்றத்திற்கான இந்திய தண்டனை சட்டத்தின் சரியான பிரிவுகளை கூறாமல் விட்டுவிடுவார்கள். இதன் மூலம் தண்டனையின் வீரியம் குறைந்துவிட வாய்ப்புள்ளது.

2.நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவியலாத ஆவணங்களைத் தாக்கல் செய்வது. அல்லது குற்றத்தை நிரூபிக்க தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யாமல் விட்டுவிடுவது ஆகியவற்றை தவிர்க்க முடியும்.

3.சாட்சியங்களின் வாக்குமூலத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யாமல் அப்படியே தாக்கல் செய்வதை தவிர்க்க முடியும். 

ஏன் காட்ட தேவையில்லை?

1. காவல்துறையினர் பரிந்துரைக்கும் இ.த.ச பிரிவுகளை கண்டுக்கொள்ளாமல் தாங்கள் பரிந்துரைக்கும் பிரிவுகளைத்தான் சேர்க்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர்களுள் சிலர் நிர்பந்திப்பதுண்டாம். அரசியல் மற்றும் செல்வாக்குள்ளவர்களின் தலையீடுதான் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. காவல்துறையினரை அணுகுவதை விட அரசு வழக்கறிஞர்களை அணுகுவது எளிதல்லவா?

2.குற்றம் சாட்டப்பட்டவரையே மாற்ற நிர்பந்திப்பது. அல்லது குற்றத்திலிருந்து தங்களுக்கு தெரிந்தவர்களை விடுவிக்க அறிவுறுத்துவது. 

3.காவல்துறையினர் மேற்பார்வைக்காக தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையை சரிபார்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் காலதாமதம் செய்துவிட்டு பிறகு காவல்துறை அதிகாரிகளை குறை சொல்வது.

ஆனாலும் பல சமயங்களில் தங்களுடைய உயர் அதிகாரிகளுடைய நிர்பந்தத்திற்கு அடிபணிந்து குற்றப்பத்திரிக்கையை அரசு வழக்கறிஞர்களுடைய மேற்பார்வைக்கு சமர்ப்பிப்பதை விசாரணை அதிகாரிகளால் தவிர்க்க முடியாமல் போய்விடுவதுண்டு. இதனாலேயே நீர்த்துப்போன வழக்குகளும் உண்டாம்!

குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை குற்றவாளியென நிரூபிக்க காவல்துறையினரின் திறமையான புலன் விசாரணை மட்டும் போதாது. விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டவற்றை தகுந்த ஆதாரங்களுடனும் சாட்சியங்களுடனும்  எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் (beyond resonable doubt)நீதிமன்றத்தில் நிரூபிக்கவும் வேண்டும். குற்றம் சுமத்தப்பட்டவர் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க தேவையில்லை என்கிறது சட்டம். அவர்தான் குற்றவாளி என்று நிரூபிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் குற்றம் சுமத்திய வழக்கு தொடுக்கும் அரசையே சாரும். அத்தகைய அரசின் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடுவது அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் என்பதால்தான் காவல்துறையினருடைய குற்றப்பத்திரிக்கையை சரிபார்க்கும் பொறுப்பு தங்களுக்கு உண்டு என்கின்றனர் அரசு வழக்கறிஞர்கள். இதைக் கருத்தில் கொண்டுதான் அரசு விசாரணை அதிகாரிகளுக்கு அளித்துள்ள கையேட்டில் இதை அறிவுறுத்துகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பு காவல்துறை அதுவரை நடத்திய விசாரணைக் குறிப்புகள் அனைத்தையும் - காவல்நிலையத்தில் பராமரிக்கப்படும் பொது நாட்குறிப்பு, விசாரணை அதிகாரியால் அன்றாடம் தயாரிக்கப்பட்ட வழக்கு சம்மந்தமான தின நாட்குறிப்பு  ஆகியவை  உட்பட - அரசு வழக்கறிஞரின் பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். 

அவற்றுடன் 
1. பிரேத பரிசோதனை அறிக்கை, 
2. குற்றவாளியின் வீடு/அலுவலகம் ஆகியவற்றிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சொத்துக்கள் அடங்கிய பட்டியலின் நகல் 
3. கைரேகை, பாதமுத்திரை (footprint) பற்றிய விவரங்கள், 
4. தடயவியல் இலாக்காவினரிடமிருந்து பெறப்பட்ட அறிக்கை, 
5. குற்றவாளி மற்றும் பிற சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலம் 
ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும். 

சாதாரணமாக, அரசு வழக்கறிஞர்கள் காவல்துறையினரிடமிருந்து பெறப்பட்ட விசாரணை அறிக்கையை மட்டுமே நம்பி நீதிமன்றத்திற்கு சென்றுவிடுவதில்லை. காவல்துறை விசாரணையில் ஏதேனும் தவறு நடந்துள்ளதா என்றும் ஆய்வு செய்கின்றனர்.  அத்துடன் நில்லாமல் குற்றம் சுமத்தப்பட்டவர் ஏற்கனவே இத்தகைய வழக்கு எதிலாவது சம்மந்தப்பட்டிருக்க வாய்ப்புண்டா என்று பழைய அரசு கோப்புகளை முழுவதுமாக ஆய்வு செய்கின்றனர். 

குற்றம் சுமத்தப்பட்டவருக்காக ஆஜராகும் வழக்கறிஞர்கள் (defense counsels) காவல்துறை மற்றும் அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களை விடவும் மிக அதிகமாக தங்களை தயார் செய்கின்றனர் என்பதும் உண்மை. குற்றம் சுமத்தப்பட்டவர் குற்றவாளிதானா என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர் உண்மையிலேயே குற்றவாளிதான் என்று தெரிந்தாலும் அந்த வழக்கிலிருந்து முழுவதுமாக தங்கள் கட்சிக்காரரை  தப்புவிக்க வாய்ப்புள்ளதா என்ற கோணத்தில்தான் அவர்களுடைய முழுக் கவனமும் இருக்கும். 

கிரிமினல் வழக்குகளில் அதிகம் பிரபலமடைந்துள்ள பல வழக்கறிஞர்கள் அனுபவம் பெற்ற துப்பறியும் நிபுணர்களை பயன்படுத்துகின்றனர் என்பதும் உண்மை. அவர்கள் மூலமாக கட்சிக்காரருக்கே தெரியாமல் அவரைப் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்துவிடுகின்றனர். அதற்கான தொகையையும் தங்களுடைய கட்டணத்தில் சேர்த்து கட்சிக்காரரிடமிருந்து வசூல் செய்துவிடுகின்றனர். இதன் மூலம் வழக்கு விசாரணை சமயத்தில் தங்களுடைய கட்சிக்காரரைப் பற்றி தங்களுக்கு தெரியாத தகவல்கள் ஏதும் வருவதை அவர்கள் தவிர்த்துவிட முடியும் என்பதாலேயே சிரமத்தைப் பார்க்காமல் இத்தகைய தனிப்பட்ட விசாரணையில் இறங்கிவிடுகின்றனர்.

பிணை (Bail) (குமுச 450)

சாதாரணமா கொலை குற்றங்கள்ல குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை கிடைக்கறதுக்கு சான்ஸ் ரொம்ப கம்மி. போலீஸ் விசாரணை முழுசா முடிஞ்சி குற்றப்பத்திரிகை (Charge Sheet) கோர்ட்ல ஃபைல் பண்றவரைக்கும் பெய்ல் கிடைக்க சான்ஸே இல்லைன்னுதான் சொல்லணும். 

ஆனா அதுக்குன்னு ஒருத்தர கைது பண்ணி ஜெய்ல்ல வச்சிட்டு தங்களோட சவுகரியம்போல குற்றப்பத்திரிக்கை தாக்கல் செஞ்சாப் போறும்னு போலீஸ் நினைச்சிறமுடியாது. அதுக்கும் சட்டம் ஒரு லிமிட் வச்சிருக்கு.  குற்றத்தோட தீவிரத்தைப் பொருத்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய தேவையான கால அவகாசத்த கோர்ட் தீர்மானிக்கும். அது கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 30 முதல் 90 நாட்கள் வரை இருக்கலாம். அதுக்கப்புறமும் போலீஸ் தேவையில்லாம குற்றப்பத்திரிக்கை தாக்கல் பண்றத தள்ளிப்போடறாங்கன்னு கைதிக்கு சார்பா ஆஜராகற வக்கீல் நினைச்சா தன் கட்சிக்காரர ஜாமீன்ல விடணும்னு பெட்டிஷன் போட வாய்ப்பிருக்கு. அதுல இருக்கற நியாயத்த பார்த்து கோர்ட் ஜாமீன் வழங்கவும் வாய்ப்பிருக்கு. அதுக்கு எதிரா போலீஸ் சொல்ற காரணங்கள் ஏத்துக்கறா மாதிரி இல்லேன்னா ஜாமீன் நிச்சயம். 

சாதாரணமா குற்றம்சாட்டப்பட்டவர் தனக்கு எதிரான சாட்சியங்களை கலைத்துவிடக் கூடும்னு போலீஸ் சொல்றதாலத்தான் விசாரணை முடிஞ்சி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ற வரைக்கும் அவருக்கு பிணை வழங்கமாட்டாங்க. ஆனா இன்னொன்னையும் இங்க கவனிக்கணும். குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செஞ்சதுக்கப்புறமும் சிறையிலிருந்து வெளியில் வரும் குற்றம்சாட்டப்பட்டவர்  சாட்சிகளை கலைக்க ட்ரை பண்றார்னு போலீசுக்கு தெரியவந்தா உடனே அவர மறுபடியும் அரெஸ்ட் பண்ணி ரிமான்ட் செய்யணும்னு போலீஸ் கோர்ட்டுக்கு போகலாம்னு சட்டம் சொல்லுது. ஏன்னா செல்வாக்கு படைச்ச ஆளுங்க பெய்ல இருக்கறப்பவே சாட்சிகள மிரட்டற வேலைய ஆரம்பிச்சிருவாங்க. இத தடுக்கறதுக்காகவே பெய்ல வர்றவங்கள அவங்க சாதாரணமா குடியிருக்கற இடத்துலருந்து கொஞ்சம் தள்ளி இருக்கற இடத்துலதான் தங்கணும்னும் டெய்லி பக்கத்துலருக்கற போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி அங்க இருக்கற ரிஜிஸ்டர்ல கையெழுத்து போடணும்னும் கோர்ட் கண்டிஷன் போடுறது வழக்கம். ஆனா சிங்கம் 1 படத்துல காமிச்சா மாதிரி அந்த விஷயத்துலயு ஒரு ஆள செட்டப் பண்ணி கையெழுத்து போட வைக்கிற சம்பவங்களும் நடக்கத்தான் செய்யிது. அந்த மாதிரி சமயத்துல அவரோட பிணையை ரத்து செஞ்சி மறுபடியும் அவர சிறையில் அடைக்கறதுக்கும் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!




நாளைய பதிவுடன் முடியும்.....

14 ஆகஸ்ட் 2013

சேரனுக்கு என்ன ஆச்சி? ஏன் இப்படி செய்கிறார்?

Don't wash your dirty linen in  Publicனு சொல்வாங்க. 

அதத்தான் செஞ்சிக்கிட்டிருக்கார் இயக்குனர் சேரனும் அவருடைய ஆத்மார்த்த நண்பர் என்று கூறிக்கொண்டு செயல்பட்டு வரும் இயக்குனர் அமீரும்.

பிள்ளைப்பாசம் சிலரை பைத்தியமாக்கிவிடும் என்பார்கள். அது இவர் விஷயத்தில் உண்மைதான் என்று காட்டுகிறது.

இந்த விஷயத்தப் பத்தி எதுக்கு எழணும், இது அவரோட தனிப்பட்ட விஷயமாச்சேன்னுதான் இதுவரைக்கும் எழுதாம இருந்தேன். 

ஆனா போன ஒரு வாரமா ராஜ் தொலைக்காட்சியில் கோப்பியம் என்ற நிகழ்ச்சியில் இவரும் இவருடைய நண்பர் அமீரும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சேரனின் மகள் தாமினியின் காதலர் எனப்படும் சந்துருவையும் அவருடைய குடும்பத்தையும் பற்றி பேசுவதைக் கேட்டபோது என்ன ஆச்சி இவருக்கு என்றுதான் கேட்க தோன்றியது. அதைப் பற்றி எழுதினால்தான் என்ன என்றும் தோன்றியது.

இப்போது இளவயதில் காதல்வயப்பட்டு பெற்றோர் எத்தனை எடுத்துச் சொல்லியும் கேளாமல் தான் விரும்பியவரைத்தான் கைபிடிப்பேன் என்று அடம்பிடிக்கும் இளைஞர்கள் இல்லாத குடும்பம் இருக்கிறதா என்ன? கணக்கெடுத்துப் பார்த்தால் இன்று நாட்டிலுள்ள ஏன் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் கூட இத்தகைய பொருத்தமில்லாத காதல்கள் கோடிக்கணக்கில் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. இது வீட்டுக்கு வீடு வாசப்படி என்கிற நிலைதான்.

சேரன் நிலையில் இருக்கும் ஒரு தந்தை என்ன செய்திருக்க வேண்டும்?

இந்த விஷயத்தை ஒரு தந்தை ஸ்தானத்திலிருந்து இருவேறு கோணங்களிலிருந்து அணுகியிருக்கலாம்.

ஒன்று இதெல்லாம் இந்த வயதில் சகஜம் என்று கண்டுக்கொள்ளாமல் இருந்திருக்கலாம். தாமினியைப் போன்ற இளைஞர்களுக்கு பள்ளிப் பருவத்திலோ அல்லது கல்லூரி பருவத்திலோ இனக்கவர்ச்சியால் ஏற்படுகிற ஈர்ப்பு காலப்போக்கில் காதலாக கனியாமலேயே போய்விடக்கூடும். ஆகவே இதை தங்களுடைய அனுபவத்தால் உணரக் கூடிய பெற்றோர்கள் அதை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவார்கள். அப்படியே தெரிய வந்தாலும் என்ன நடக்கிறது என்றுதான் பார்ப்போமே என்றோ அல்லது அவர்களாக தங்களிடம் வந்து கூறட்டுமே என்று காத்திருப்பார்கள். 

இரண்டாவது வகை பெற்றோர் தன்னுடைய மகனோ மகளோ காதல் செய்கிறார் என்று தெரிய வந்ததுமே அதை ஊதி பெரிதாக்கி அடுத்து குடியிருப்போருக்கெல்லாம் கேட்கும்படி கூப்பாடுபோடுவார்கள். மகளாக இருந்தால் கேட்கவே வேண்டாம். மானமே போய்விட்டது, வானமே தங்கள் மீது விழுந்துவிட்டது, ரோட்டில் நடக்கவே முடியாதபடி செய்துவிட்டாயே என்றெல்லாம் மகளை வசைபாடியதோடு நிற்காமல் அவளை வீட்டை விட்டு வெளியில் போகக்கூடாது என்றும் அடைத்துவிடுவார்கள்.

சேரன் ஒரு ரெண்டும்கெட்டான் தந்தையாக இருந்திருக்கிறார்.

தன்னுடைய மகளுடைய முகநூலில் சந்துரு வந்து I love you என்று போட்டதைப் பார்த்துவிட்டு மகளை பெருந்தன்மையுடன் லைக் போட்டு அதை தொடர அனுமதித்திருக்கிறார். அப்போது தன்னுடைய மகள் இன்னும் படிப்பை முடிக்கவில்லை என்பதோ அல்லது அவளுடைய காதலனுக்கு ஒழுங்கான வேலை ஏதும் உள்ளதா என்பதெல்லாம் அவருக்கு பெரிதாக படவில்லை. தன்னுடைய அந்த பெருந்தன்மையை மிகப் பெருமையாகவும் பத்திரிகையாளர்களிடம் கூறியதை உலகமே பார்த்தது, கேட்டது. 

பிறகு அவளுடைய காதலனுக்கு சரியான வேலையில்லை என்பதை கேள்விப்பட்டிருக்கிறார். அதை தன்னுடைய மகளிடமும் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால் அவருக்கு அது ஒன்று பெரிய விஷயமாகப் படவில்லை. அந்த வயதில் காதலில் மூழ்கிப்போனவர்களுக்கு சாதாரணமாக ஏற்படும் பிரமைதான் அது. ஆனால் அது சேரனுக்கு பெரிய விஷயமாக படுகிறது.

சந்துருவை அழைத்துப் பேசுகிறார். தன்னுடைய மகளும் படித்து முடிக்க வேண்டும், நீங்களும் பொருளாதாரத்தில் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் ஆகவே ஒரு மூன்றாண்டு காலம் இருவரும் காத்திருங்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறார். இதிலும் தவறேதும் இல்லை. பெண்ணைப் பெற்றவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். 

ஆனால் அதற்கும் அவருடைய மகளும் சரி சந்துருவும் சரி செவிமடுக்கவில்லை. அவர்கள் எப்போதும் போலவே மொபைலில் பேசுவதும் சேர்ந்து வெளியில் சென்று வருவதுமாக இருந்துள்ளனர். இதை அறிந்த சேரன் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர சந்துருவின் குடும்பத்தாரை அழைத்து பேசுகிறார். இருவரும் மூன்று வருடம் காத்திருக்க வேண்டும் என்றும் அதுவரை இருவரும் பேசவோ சந்திக்கவோ கூடாது என்றும் கண்டிஷன் போடுகிறார். 

பதிலுக்கு அவர்கள் என்ன சொன்னார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் தாமினி-சந்துருவின் தொலைபேசி பேச்சும் வெளியில் சேர்ந்து சென்று வருவதும் சேரனுக்கு தெரியாமல் தொடர்கிறது.

அப்போதும் காரியம் ஒன்றும் விபரீதமாகவில்லை. ஆனால் சுமார் மூன்று மாதங்கள் கழித்து தாமினி தன் தந்தையிடம் 'சந்துருவிடம் என்னால் பேசாமல் இருக்க முடியல, அதுக்கு பதிலா செத்துப் போவலாம் போலருக்குப்பா' என்று கூறியதாக சேரனே பத்திரிகையாளரிடம் கூறியதை கேட்டோம். அதைக் கண்டு மனமிளகிப்போன சேரன் அவரே தன்னுடைய மொபைலில் சந்துருவை அழைத்து இருவரையும் பேச வைத்ததாகவும் ஆனால் தான் பேசாமல் இருந்ததாக தன்னிடம் தாமினி கூறிய அந்த மூன்று மாதங்களும் அவர்கள் இருவரும் தினமும் தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருந்ததை தான் விசாரித்து தெரிந்துக்கொன்டதாகவும் அதே பத்திரிகையாளரிடம் கூறுகிறார்.

சந்துரு தன்னுடைய மகள் முன்பாகவே அவளைப் பற்றி அவதூறாக தன்னுடைய மற்ற பெண் சிநேகிதிகளிடம் குறை கூறினார் என்று வருத்தப்படும் சேரனும் அதையேதான் பத்திரிகையாளர் முன்னிலையில் செய்தார் என்பதை எப்படி மறந்துப் போனார்? மூன்று மாதங்களாக சந்துருவிடம் பேசவில்லை என்று தன்னிடம் உண்மைக்குப் புறம்பாக தாமினி சொன்னார் என்று பேசியது அவரை ஒரு பொய் பேசும் பெண் என்று கூறுவதுபோல் இல்லையா? 

தன் மகளின் இந்த பித்தலாட்டத்தால் கொதிப்படைந்த சேரன் அவரை வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடாது என்று சினிமா பாணியில் கட்டளையிடுகிறார். அதே சினிமா பாணியில் சமயம் பார்த்து வீட்டைவிட்டு வெளியேறும் தாமினி சந்துருவின் வீட்டிற்கு சென்றுவிடுகிறார். பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் தன்னிடமே திரும்பி வந்து சந்துரு மிக மோசமானவன், தன்னை வைத்துக்கொண்டே மற்ற பெண்களுடன் மொபைலில் பேசுகிறான், அவன் தனக்கு எந்த சந்தோஷத்தையும் அளிக்கவில்லை என்றெல்லாம் புகார் கூறியதாகவும் கூறுகிறார். 

ஆனால் சந்துருவோ தாமினி தன்னுடன் இருந்த மூன்று மாதங்களில் அவளை நல்லவிதமாகத்தான் நடத்தினேன் என்றும் அவளுடைய உடல் மீது என்னுடைய விரல் கூட பட்டதில்லை என்றும் ஆனால் சேரனோ அவளுக்கு வர்ஜின் டெஸ்ட் கூட நடத்திப் பார்த்தார் என்றும் பத்திரிகையாளர் முன்பு கூறி மானத்தை வாங்கிவிட்டார். 

சொந்த மகளுக்கே வர்ஜின் பரிசோதனையா என்று வியந்துபோனேன் நான். இந்த குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஒரு பொறுப்புள்ள தந்தை செய்யக் கூடிய காரியமா இது? தன்னுடைய மகளுடைய நடத்தை மீதே ஒரு தகப்பன் சந்தேகப்பட்டால் அந்த மகளின் மனது என்ன பாடுபடும்? தன்மானமுள்ள எந்த இளம் பெண்ணும் நிச்சயம் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டாள்.  எப்படி அவருடைய தாயும் இந்த சோதனையை நடத்த அனுமதித்தார் என்பதும் புரியவில்லை. சரி தாமினிக்கு உடல்ரீதியாக  எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை மருத்துவ பரிசோதனைகள் கூறிவிட்டிருக்கும். ஆனால் அத்தகைய சோதனைகளுக்கு அவளுடைய சம்மதம் இல்லாமல் உட்படுத்தியிருந்தால் அதனால் ஏற்படக்கூடிய மன ரீதியான பாதிப்பின் வீரியம் சேரனுக்கு தெரியுமா?

இதுபோதாது என்று சேரனின் நண்பர் அமீர் தன்னுடைய நண்பரின் குடும்பத்திற்கு நன்மை செய்வதாக நினைத்துக்கொண்டு சந்துருவின் குடும்ப பின்னணியை ஆராய்ந்து தினமும் ஒரு குற்றச்சாட்டை பத்திரிகையாளர் முன்னால் வைப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை. இதை எதற்கு பத்திரிகையாளர்களிடமும் அவர்கள் மூலமாக உலகிற்கும் அவர் தெரிவிக்க வேண்டும்? இதை ஆதாரபூர்வமாக சேரனின் மகள் தாமினியிடம் அளித்து அவருடைய மனதை  மாற்ற முயற்சிக்க அல்லவா செய்திருக்க வேண்டும்?

இவர்கள் மீதான வழக்கு விசாரணையை நீதிமன்ற கூடத்தில் வைத்து நடத்தினால் தாமினி போன்ற ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை கெட்டுவிடுமே என்ற நல்லெண்ணத்தில் தங்களுடைய தனி அறையில் விசாரணையை நடத்த சம்மதித்த நீதியரசர்கள் எங்கே சொந்த மகளென்றும் பாராமல் அவரைப் பற்றி பத்திரிகையாளர்கள் முன்னால் குறை கூறி அலையும் இவர் எங்கே?

ஒருவேளை அவருடைய இத்தகைய முட்டாள்தனமான நடவடிக்கைகள்தான் இன்று தாமினியை தன்னுடைய தந்தைக்கு எதிராக நிற்க வைத்துள்ளதோ என்னவோ?

இதுவெல்லாம் போதாது என்பதுபோல் சந்துரு மற்றும் குடும்பத்தாரைப் பற்றி உளவுதுறை அதிகாரிகள் விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிகையாளர் முன்வைத்து அமீர் கோரிக்கை விடுகிறார். 

இதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா?

வாருங்கள் பார்ப்போம்....

நேற்றும் அதற்கு முந்தைய தினமும் நான் இட்ட இரண்டு பதிவுகளில் நான் குறிப்பிட்டவற்றில் இருந்து Non-cognizable offences எனக் கருதப்படும் குற்றங்களில் மஜிஸ்டிரேட் வழங்கக்கூடிய கைது வாரண்ட் இல்லாமல் குற்றம் சுமத்தப்பட்டவரை கைது செய்ய முடியாது என்று கூறியிருந்தேன்.

சந்துரு மீது அமீர் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் யாவுமே இந்த வகையைச் சார்ந்தவைதான். மேலும் சந்துருவின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தால் மட்டுமே அவர் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியுமே தவிர இந்த விஷயத்தில் எந்த பாதிப்பும் அடையாத அமீர் அல்லது சேரன் போன்றவர்கள் சொல்வதையெல்லாம் வைத்து காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்க இயலாது என்பது அவருக்கு தெரியாது போல் இருக்கிறது.

இந்த வழக்கின் முடிவு எதுவானாலும் சேரனுக்கும் அவருடைய மகளுக்கும் இடையிலுள்ள உறவில்  தற்போது ஏற்பட்டுள்ள விரிசல் அவ்வளவு எளிதில் சீராகப் போவது இல்லை என்பது மட்டும் நிச்சயம்.

சேரனின் விஷயத்தைப் பற்றி பேசியது போதும் என்று நினைக்கிறேன். 

இனி யார் குற்றவாளி தொடரில் நான் இன்று சொல்லவிருப்பதை படியுங்கள்..

இதுவரை காவல்துறை எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கைகள் மூலமாவே குற்றவாளி யாராக இருக்கக் கூடும்னு இன்வெஸ்ட்டிகேஷன் அதிகாரியால டிசைட் பண்ணியிருக்க முடியும்கறதால அடுத்த நடவடிக்கை அவரை கைது செய்வதுதான்.

கைது நடவடிக்கை.

நான் ஏற்கனவே கூறியுள்ளபடி பிடிவாரண்ட் இல்லாமல் கைது செய்யக் கூடிய குற்றங்களில் (Cognizable Offences) ஒன்று கொலைக்குற்றம். அதனால தடயங்கள் மற்றும் சாட்சிகள் மூலம் இவர்தான் குற்றவாளியாக இருக்க முடியும்கற சந்தேகத்துக்குள்ளானவரை காவல்துறை விசாரணை அதிகாரியே  கைது செய்ய முடியும். காவல்துறை அதிகாரிக்கு இருக்கற இந்த அதிகாரத்தைப் பற்றி கு.மு.ச.41,42 மற்றும் 43வது பிரிவுகள் விரிவாக தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லீங்க, ஒருத்தரை கைது செய்றப்பவும் அதற்கு பிறகும் என்னவெல்லாம் செய்யணும்னுகறத கூட 43 முதல் 60 பிரிவு வரை ரொம்ப விளக்கமாக சொல்லியிருக்காங்க.

இந்த பிரிவுகள்ல சொல்லியிருக்கறத சுருக்கமா சொல்றேன். 

1. கைது செய்யப்படவர்கிட்ட எதுக்காக அவர கைது செய்யறோம்னு கைது பண்ற அதிகாரி அவர்கிட்ட தெளிவா சொல்லணும்.

2. அவர ஸ்டேஷனுக்கு கொண்டு போனதும் உடனே ஸ்டேஷன்லருக்கற டைரியில (Station Diary) அவர ஸ்டேஷனுக்கு கொண்டு வந்த தேதி, நேரம் எல்லாத்தையும் பதிவு செய்யணும். 

3. இன்னார இன்ன குத்தத்துக்காக கைது செஞ்சிருக்கோம்னு அவருடைய குடும்ப உறவினர், அப்படி யாரும் இல்லைன்னா, அவருடைய நண்பர்களுக்கு தொலைபேசி மூலமாவோ தந்தி மூலமாவோ உடனே தெரிவிச்சிறணும். (தபால் நிலைய தந்தி சேவை இதற்குத்தான் பெரும்பாலும் பயன்பட்டு வந்தது. ஆனால் செல்ஃபோன் வசதிகள் பெருகிவிட்ட நிலையில் தந்தி அனுப்பும் முறை இப்போது கைவிடப்பட்டுவிட்டது என்றே கூறலாம்.)

4. கைது செய்யப்பட்டவரை தேகப் பரிசோதனை செய்து (body search) அவர்கிட்டருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அல்லது ஆவணங்கள் எல்லாத்தையும் லிஸ்ட் போட்டு அதுக்குன்னு இலாக்கா வடிவமைச்சிருக்கற படிவத்தில் ஒரு ரிப்போர்ட் தயாரிக்கணும். இதுவும் மர்டர் ஸ்பாட்லருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பட்டியலைப் போன்று மிகவும் முக்கியமானது. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த லிஸ்ட்ல இல்லாத எந்த பொருளையும் கேஸ் கோர்ட்ல விசாரயணையில இருக்கறப்போ குத்தவாளிக்கிட்டருந்து கைப்பற்றுனதா சமர்ப்பிக்க (produce) முடியாது. இந்த லிஸ்ட்ல கைது செய்யப்பட்டவரோட கையெழுத்தையும் அப்பவே வாங்கிறணும். 

5.கைது செய்யப்பட்ட நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள்ள அவர அருகிலுள்ள (அதிகார எல்லைக்குட்பட்ட) மஜிஸ்திரேட் முன்பு ஆஜர் பண்ணிறணும். அதுக்கப்புறம் அவர மேற்கொண்டு விசாரிக்கணும்னா நீதிபதியோட பர்மிஷனோட போலீஸ் கஸ்டடியில எடுத்து விசாரிக்கலாம். அதுக்கு நீதிபதி ஒத்துக்காத பட்சத்துல அவர் சிறையில் அடைக்கப்படுவார். ஆனால் பெண் கைதிகளுக்கு 24 மணி நேரம் வரைக்கும்லாம் காத்திருக்க தேவையில்லையாம். எவ்வளவு சீக்கிரம் அவரை மஜிஸ்திரேட் முன்னால  ஆஜர் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க வேண்டும். இரவு நேரங்களில் பெண் கைதிகளை காவல்நிலையத்தில் வைத்திருக்கலாகாது என்ற உச்ச நீதிமன்றத்தில் ஆணையால் இந்த நியதி.

6. ஸ்டேஷன்ல வச்சிருக்கறப்போ - அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் -  அவரை அடித்து துன்புறுத்தவோ அல்லது வற்புறுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி நிர்பந்திக்கவோ கூடாது. அப்படி பெறப்படும் எந்த வாக்குமூலமும் கோர்ட்ல செல்லாதுங்கறதும் முக்கியமான விஷயம். இது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் நீதிமன்றங்கள் தெரிவித்த கருத்துங்கறதால இந்த மாதிரியான அடாவடி நடவடிக்கையில் தகுந்த முகாந்தரம் இல்லாமல் இறங்கக் கூடாது என்று தமிழக காவல்துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்பதும் உண்மை. ஆனால் குற்றவாளி தாமாக முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அவரை ஒரு மஜிஸ்டிரேட் முன்னால ஆஜர்படுத்திறணும். மஜிஸ்திரேட் அவர் எந்த வற்புறுத்தலும் இல்லாம தானா முன்வந்து ஒப்புக்கொள்றாராங்கறத உறுதிப்படுத்திக்கிட்டு அவர் சொல்ற வாக்குமூலத்தை எழுதி எடுத்துக்குவாரு. இப்படி வாங்கற வாக்குமூலத்த மட்டுந்தான் கோர்ட் ஏத்துக்கும். 

7. கைது செய்யப்படுபவரை  தேவையில்லாமல் (unless it is absolutely necessary) கையில விலங்கு மாட்டியோ இல்ல கால சங்கிலியால கட்டியோ கூட்டிக்கிட்டு போகக் கூடாது (shall not be handcuffed and paraded in the street unnecessarily without the authority of the Court).

கைதியிடம் விசாரனை

கைது செஞ்சவர 24 மணி நேரத்திற்குள்ள கோர்ட்ல ஆஜர்படுத்தணுங்கற கண்டிஷன் இருக்கறதால பல சமயங்கள்ல அவர முழுமையா விசாரணை பண்ண முடியாம போறதுக்கு வாய்ப்பு இருக்கு. முக்கியமா, குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் குற்றத்தை ஒப்புக்காம இருக்கறப்போ  அவர்கிட்டருந்து விசாரணை மூலமா வெளியக் கொண்டு வரவேண்டிய உண்மைகள் பல இருக்கலாம். அந்த மாதிரியான நேரத்துல அரெஸ்ட் பண்ணவர கோர்ட்ல ஆஜர் செஞ்சி தங்கள் பொறுப்பில் (Police custody) எடுத்து விசாரிக்க பர்மிஷன் கேக்கணும். சாதாரணமா இந்த மாதிரி ரிக்வெஸ்ட்ட கோர்ட் நிராகரிக்கறதில்லை. ஆனா போலீஸ் பத்து நாள் விசாரிக்கணும்னு கேட்டா கோர்ட் அதுல பாதிக்குத்தான் சம்மதிப்பாங்க. இத தெரிஞ்சி வச்சிருக்கற போலீஸ் அவங்களுக்கு எவ்வளவு நாள் வேணுமோ அதுல ரெண்டு மடங்கா கேப்பாங்களாம். ஆனா கைதிக்கு ஆதரவா ஆஜராகற வழக்கறிஞர் போலீசோட ரிக்வெஸ்ட்ட அவ்வளவு ஈசியா ஒத்துக்க மாட்டார். ஆனால் இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு காவல்துறையினரின் விசாரணை இன்னும் முடிவடைஞ்சிருக்காதுன்னு நீதிபதி நினைச்சார்னா அவரை தொடர்ந்து விசாரணை செய்ய அனுமதிக்கறது வழக்கம். அப்படி மேற்கொண்டு போலீஸ் கஸ்டடி தேவையில்லைன்னு மஜிஸ்டிரேட் நினைச்சா அவர நேரடியா கோர்ட் கஸ்டடியில (judicial custody) வச்சாப் போறும்னு சொல்லிருவார். கோர்ட் கஸ்டடின்னா ஜெயில்வாசம்தான். ஆனா கொலைக்கான மேலும் சில ஆதாரங்கள் போலீஸ்க்கு கிடைக்கறபட்சத்துல கைதியை தங்கள் பொறுப்பில் எடுத்து விசாரணை செய்ய அனுமதிக்கணும்னு மறுபடியும் காவல்துறையினர் மனுதாக்கல் செய்யலாம். 

குற்றவாளியின் வீடு/அலுவலகம் சோதனையிடுதல்

கைது செய்யப்பட்டவர கோர்ட்ல ப்ரட்யுஸ் பண்றப்பவே அவரோட ஆஃபீஸ்/வீடு எல்லாத்தையும் சோதனை போடணும்னு சொல்லி போலீஸ் பெட்டிஷன் போட்டு கோர்ட்லருந்து Search Warrant வாங்கிருவாங்க. சாதாரணமா  ஒருத்தர கைது செஞ்ச 24 மணி நேரத்திற்குள்ள இந்த சோதனையை செஞ்சாத்தான் அது effectiveஆ இருக்கும்னு போலீசுக்கு தெரியும். அத விட்டுட்டு சாவகாசமா searchக்கு போனா அதுக்குள்ள எல்லா தடயங்களையும் சம்மந்தப்பட்டவரோ இல்ல அவரோட ஆளுங்களோ மறைச்சிடறதுக்கு சான்ஸ் குடுத்தா மாதிரி ஆயிருமே. பல கேஸ்லருந்து குத்தவாளி தப்பிக்கறதுக்கு இந்த விஷயத்துல போலீசாரோட மெத்தனமும் ஒரு காரணம்னு பாதிக்கப்பட்டவங்க சொல்றதுக்கு வாய்ப்பிருக்கு.  குற்றம் சாட்டப்பட்டவர் தடயங்களை மறைத்துவிட வாய்ப்பிருக்குன்னு போலீஸ் நினைச்சா கோர்ட் உத்தரவு கையில இல்லாமேயே கூட search பண்றதுக்கு சட்டத்துல இடம் இருக்கு. இந்த மாதிரி சமயத்துல இன்னின்ன காரணத்தால நாங்க சோதனைய துவக்கப் போறோம்னு ஒரு பெட்டிஷன கோர்ட்ல தாக்கல் பண்றதுக்கு ஏற்பாடு பண்ணிட்டு செய்யலாம்னு கு.மு.ச. பிரிவு 165ல சொல்லியிருக்காங்க. 

இந்த மாதிரி சோதனை நடத்தற போலீஸ் அதிகாரிங்க எப்படி செயல்படணும்னு கூட தமிழக காவல்துறை மிக விரிவாக தெளிவுபடுத்தியிருக்காங்க.  அதுல சில முக்கியமான உத்தரவுகளை கீழ குடுத்துருக்கேன். 

1. சோதனைக்கு தேவையான நீதிமன்ற ஆணையை (search warrant) வீட்டில குடியிருக்கறவங்களுக்கு இல்லன்னா ஹவுஸ் ஓனருக்கு காட்டி அவரோட பர்மிஷனோடத்தான் சோதனை நடத்தவேண்டிய இடத்துக்குள்ள நுழையணும். அவங்க வேணும்னே பர்மிஷன் குடுக்க மாட்றாங்கன்னு போலீசுக்கு சந்தேகம் வந்தா வீட்டின் கதவு/ஜன்னல்களை உடைத்து திறக்கும் அதிகாரம்கூட போலீசுக்கு உண்டாம். ஆனாலும் கூடிய மட்டும் போலீஸ் அத தவிர்க்கணும்.  

2.சோதனையை துவக்குறதுக்கு முன்னாலயே அக்கம்பக்கத்துலருக்கற இரண்டு பொறுப்பான ஆளுங்கள சாட்சியா அழைச்சிக்கணும். 

3.குற்றத்திற்கு சம்மந்தமில்லாத பொருட்களை/ஆவணங்களை அழிக்கவோ சேதப்படுத்தவோ கூடாது.

4.சோதனையின்போது வீட்டிலுள்ளவர்களை தனிநபர் சோதனைக்கு (தேகப் பரிசோதனை ) உட்படுத்த காவல்துறை ஆய்வாளருக்கு அதிகாரம் உண்டுன்னாலும் அவர்கள் பெண்களாக இருக்கும்பட்சத்தில் பெண் காவலர்கள் மட்டுமே அத்தகைய சோதனையை செய்ய வேண்டும். 

5.சோதனை நடத்தறப்போ கிடைக்கற எல்லா பொருட்களையும் அங்கேயே அதற்கென காவல்துறை இதுக்காக வச்சிருக்கற படிவத்தில் பட்டியலிட்டு கூட இருந்த சாட்சியங்களோட கையெழுத்தையும் வாங்கிறணும். இது ரொம்ப முக்கியம். ஏற்கனவே சொன்னா மாதிரி இதுல இல்லாத பொருட்களை கோர்ட்ல ப்ரொட்யூஸ் பண்ணவும் முடியாது. இதுல இருக்கற பொருட்களை ப்ரொட்யூஸ் பண்ணாம இருக்கவும் முடியாது. 

6.கூடிய மட்டும் பட்டியல் அடித்தல்/திருத்தல் இல்லாமல் இருக்க வேண்டும். இல்லன்னா அதுவே கைதி கேஸ்லருந்து விடுபட வாய்ப்பாயிரும்.

இன்னும் இரண்டே பதிவுகள்தான்...

12 ஆகஸ்ட் 2013

யார் கொலையாளி?

கொஞ்ச நாளாவே தமிழ்நாட்டுல மட்டுமில்லாம நாடெங்கும் கொலை, குறிப்பா அரசியல் கொலைகள், பெருகி வர்றதா எதிர்கட்சிங்க குத்தம் சொல்றத நாம பாத்துக்கிட்டு வரோம்.

போன மாசம்  சேலத்தில நடந்த ஒரு அரசியல் கொலை ரொம்ப பரபரப்பா பேசப்பட்டது. அதை எதிர்த்து, குறிப்பா இந்த விஷயத்தில காவல்துறை ரொம்பவும் கேர்லஸ்ஸா நடந்துக்கிட்டத ஜனங்கக்கிட்ட எடுத்து சொல்றதுக்கு பிஜேபி ஒரு கடையடைப்பே நடத்துனாங்க.

இதே மாதிரி மேற்கு வங்கம், கொல்கொத்தா சிட்டியில கொஞ்ச நாளைக்கு முன்னால நடந்து முடிஞ்ச உள்ளாட்சி தேர்தல்ல ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி ஆளுங்களுக்கு இடையில நடந்த சண்டையில பல எதிர்கட்சி ஆளுங்கள திட்டம்போட்டு கொலை செஞ்சதாகவும்  படிச்சிருப்பீங்க. அங்கயும் ஆளுங்கட்சி ஆளுங்களோட வெறியாட்டத்த போலீஸ் கண்டும் காணாததுபோல்  இருந்தாங்கன்னு எதிர்கட்சி ஆளுங்க சொன்னாங்க.

அதே மாதிரிதான் உத்தரபிரதேசத்திலயும்.  சமீபத்தில ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு அப்புறம் பல பழிவாங்கும் கொலைகள் நடந்ததையும் கேள்விப்பட்டோம். அங்கயும் எதிர்க்கட்சிகளோட  கோபத்திற்கு உள்ளானது காவல்துறைதான்.

உயிர்க்கொலைங்கறது மற்றெந்த குற்றங்களையும் விட கொடுமையானதுங்கறதுல மாற்று கருத்து இருக்க முடியாது இல்லையா? அதை விட கொடுமை கொலை பண்ணிட்டு எந்த தண்டனையுமில்லாம தப்பிச்சிக்கிறது.

குற்றம் செஞ்சவர், அவர் யாராயிருந்தாலும், அவர் எவ்வளவு செல்வாக்கு படைச்சவரானாலும் அவரைக் கண்டுபிடிச்சி சட்டத்தின் முன்னால நிறுத்த வேண்டிய முதல் பொறுப்பு போலீசுக்குத்தான் இல்லையா?

ஏன்னா சட்டத்தை அமல்படுத்தற கடமையும் பொறுப்பும் அவங்களுக்குத்தான் இருக்கு. அதுக்குத்தான் அவங்கள அரசாங்கம் வேலை குடுத்து அதுக்கு சம்பளமும் குடுக்கறாங்க, சரிதானே?

ஒரு கொலைக் குற்றம் நடந்து முடிஞ்சதும் அதுக்கு காரணமாயிருந்த கொலைகாரன கண்டுபிடிச்சி சரியான  தண்டனையை வாங்கிக் குடுக்கறதுல எதுக்கு இவ்வளவு டிலே ஆகுது?

போலீசோட அஜாக்கிரதையும் அசிரத்தையுமே இதுக்கு முக்கிய காரணம்னு எல்லாரும் சொல்றாங்களே அது உண்மையா?

அதே சமயம் அவங்க தங்களோட அதிகாரத்த முழுசா, பயன்படுத்தறதுக்கு அனுமதிக்கப்படுறதில்லேன்னும் சொல்றாங்களே, அது உண்மையா?

இந்த விஷயத்துல, போலீஸ் இலாக்கா தங்களோட அதிகாரிகளுக்கு குடுத்துருக்கற அட்வைஸ் அல்லது guidelines என்னென்னன்னு  கொஞ்சம் டீப்பா போயி பாக்கலாமா?

ஆனா அதுக்கு முன்னால குற்றம்னா என்னன்னு சட்டம் சொல்லுதுன்னு  சுருக்கமாக பாக்கலாம்.

இந்திய தண்டனைச் சட்டத்துல (IPC: Indian Penal Code 1860) இந்தியாவுல  நடக்கற எல்லா குத்தத்தையும் அவைகளுக்குண்டான தண்டனைகளையும் விளக்கி சொல்லியிருக்காங்க.

அதுல எல்லா மாதிரியா குத்தங்களையும் சொல்லியிருந்தாலும் நாம இந்த பதிவுல பாக்கப்போறது கொலைக்குத்தம் மட்டுந்தான். ஏன்னா அதுதான நாட்டுல நடக்கற எல்லா குத்தத்துலயும் ரொம்பவும் பரபரப்பா பேசப்படுது?

கொலைக் குத்தத்தப்பத்தி பாக்கறதுக்கு முன்னால பொதுவா குத்தம்னா என்னன்னு இந்த சட்டம் சொல்லுதுன்னு பாப்போம்.

CRPC 1973 (இந்திய குற்றவியல் முறைச்சட்டம் - இ.மு.ச.1973)

"offence" means any act or omission made punishable by any law for the time being in force..."

குத்தம்னா என்ன, ஒரு குத்தவாளிய புடிக்கறதுலருந்து அவர கோர்ட்டுக்கு போயி தண்டனை வாங்கிக்குடுக்கற வரைக்கும் என்னென்ன செய்யணும் இந்திய குற்றவியல் முறைச்சட்டத்துல (இ.மு.ச) சொல்லியிருக்காங்க.

அந்த சட்டத்துல சொல்லியிருக்கறபடி இந்தியாவுல நடைமுறையில இருக்கற எல்லா சட்டமும் இந்த மாதிரி ஏதாச்சும் செஞ்சீங்கன்னா (Acts) உங்களுக்கு தண்டனை நிச்சயம்னு சொல்லுதோ அதெல்லாமே குத்தம்தானாம். அது மட்டுமில்லீங்க, சட்டம் செய்யின்னு சொல்லியிருக்கற எதையாச்சும் நாம செய்யாம இருந்தாலும் (omissions) குத்தம்தானாம்!

தலை சுத்துது இல்ல?

இந்தியாவுல மட்டுமில்லீங்க, உலகத்துல இருக்கற எல்லா சட்டத்தையும் இப்படி தலைய சுத்தி மூக்க தொடறா மாதிரிதான் சொல்லி வச்சிருக்காங்க. நம்ம சட்டத்த எழுதி வச்சவங்கள்லயும் பெரும்பாலானவங்க இங்கிலாந்து, அமெரிக்கா மாதிரி நாட்டு சட்டங்கள படிச்சிட்டு வந்தவங்கதானே? அதான் அதே ஸ்டைல்ல நம்மள மாதிரியான பாமர ஆளுங்களுக்கு புரியாத ஸ்டைல்ல எழுதி வச்சிருக்காங்க.

இங்லீஷ்ல எழுதி வச்சிருக்கறத படிச்சாலே புரியமாடேங்குது இந்த லட்சணத்துல தமிழாக்கம் பண்றேன் பேர்வழின்னு நம்ம ஆளுங்க (படிப்பு என்னமோ எம்.ஏ., பி.எல்னுதான் போட்டுக்கிட்டிருக்காங்க) தமிழாக்கம் பண்ணி வச்சிருக்காங்க பாருங்க, அதுக்கு இங்லீஷ்ல எழுதியிருக்கறதே மேல்னு சொல்லலாம்.

இந்த பதிவ எழுதறதுக்கு முன்னால சென்னையிலருக்கற ஹிக்கின்ஸ்பாதம்ஸ் கடைக்கி போயி சட்டத்த பத்தி  தமிழ்ல புக்ஸ் ஏதாச்சும் இருக்கான்னு பாத்தேன். நிறைய இருக்கு. அதுல சிலத மேலோட்டமா படிச்சிட்டு வாங்கிக்கிட்டும் வந்தேன். இங்லீஷ்ல எழுதியிருக்கறத ஏற்கனவே நெட்லருந்து டவுண்லோட் பண்ணி வச்சிருக்கேன். அதுல எழுதியிருக்கறத அப்படியே வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை கொஞ்சம் கூட தமிழுக்கு ஏத்தா மாதிரி மாற்றி அமைக்காம (rearrange) பண்ணாம மொழி மாத்தம் மட்டும் செஞ்சி வச்சிருக்கறத பாத்தப்போ போட்ட காசு தெண்டம்டான்னு பட்டுது. அதனால நா படிச்சி புரிஞ்சிக்கிட்டத சிம்பிளா சொல்றேன்.

சிம்பிளா சொல்லணும்னா க்ரிமினல் சட்டத்துல கொலை செஞ்சா, பிக்பாக்கெட் அடிச்சா குத்தம்னு சொல்லியிருக்காங்கன்னு வையிங்க. அவங்க சொன்னா எனக்கு என்ன நா செய்யத்தான் செய்வேன்னு செஞ்சா அது குத்தம். இத சட்டத்துல actsனு சொல்லியிருக்காங்க.

அதே மாதிரி சட்டத்துல இதெல்லாம் நீங்க செய்யணும்னு சொல்லி வச்சிருக்காங்க. அதாவது உங்க ஃப்ரெண்ட் ஒரு கொலைய பண்ணிட்டு உங்கக்கிட்ட வந்து அடைக்கலம் கேக்கறாரு. ஆனா அவரு கொலை செஞ்சிருக்காருன்னு தெரிஞ்சா உடனே போலீசுக்கு சொல்லணும்னு சட்டம் சொல்லுது. ஆனா அவரு நம்ம ஃப்ரென்டாச்சே இல்லன்னா நம்ம மகனாச்சேன்னு வீட்ல பூட்டி வச்சிட்டு பேசாம இருந்தீங்கன்னா அது omissionகற குத்தம். அதேமாதிரி  வருமான வரிச் சட்டம் ஒவ்வொரு வருசமும் மார்ச் 31ம் தேதிக்குள்ள வருமான வரிய கட்டிறணும்னு சொல்லுது. ஆனா அடப் போய்யா ஒனக்கு வேலையில்லேன்னு கட்டாம இருந்தீங்கன்னா அதுவும் omissionங்கற குத்தமாம்!

ஆக, சிலத செஞ்சாலும் குத்தம் வேற சிலத செய்யாம இருந்தாலும் குத்தம். சுத்தமா இல்லன்னாலும் சுமாராவாது புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன். இல்லன்னாலும் பரவால்லை. இனிமே சொல்றத வச்சி ஒரளவுக்கு புரிஞ்சிக்கலாம். தொடர்ந்து படிங்க.

1.சூதாடறது சட்டப்படி குத்தம். நீங்க காசு வச்சி சூதாடி போலீஸ் கிட்ட மாட்டிக்கிட்டா நீங்க குற்றவாளி.

2.பதினெட்டு வயசு முடியாத பொண்ண கல்யாணம் பண்றது குத்தம். நா அப்படித்தான் செய்வேன்னு சொல்லி செஞ்சீங்கன்னா நீங்க குத்தவாளி.

அதே மாதிரி சட்டம் ரோட்டுல போறப்போ சில ரூல்ஸ போட்டு இப்படித்தான் போவணும், ரெட் சிக்னல்ல நிக்கணும், லைன் மாதிரி போவக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. எனக்கு அதப்பத்தியெல்லாம் கவலையில்லேன்னு அதன்படி நடக்காம இருந்தீங்கன்னா அதுவும் omissionங்கற விதிப்படி குத்தம்தான்.

வருமான வரி கட்டுனா போறாது ஜூலை 31ம் தேதிக்குள்ள வருமான வரி ரிட்டர்ன் (Return) ஃபைல் பண்ணிறம்னுன்னும் சொல்லியிருக்காங்க. ஆனா நா பண்ண மாட்டேன்னு சும்மா இருந்தீங்கன்னா அதுவும் omissionதான்.

சரி, குத்தம்னா என்னன்னு பாத்தாச்சி. இனி இதுல எத்தனை வகைன்னு பாப்போம்.

குத்தத்துல சிவில் (civil) க்ரிமினல் (criminal)னு ரெண்டு வகையா பிரிச்சிருக்காங்க.

நாம இந்த பதிவுல பாக்கப் போறது க்ரிமினல் குத்தங்களபத்தித்தான். அதுலயும் கொலைக் குத்தத்த பத்தி மட்டுந்தான் பாக்கப்போறோம்.

க்ரிமினல் குத்தத இன்னும் ரெண்டு வகையா பிரிச்சிச் சொல்லியிருக்காங்க.

1. வாரண்ட் குற்றங்கள்.
2. மற்ற குற்றங்கள்/

1. பிடி வாரன்ட் (arrest waarant) இல்லாமல் குற்றம் செஞ்சவரைக் கைது பண்ணக் கூடிய குற்றங்கள். இத ஆங்கிலத்தில் Cognizable offencesனு சொல்றாங்க. அதாவது, குத்தம் நடந்துருக்குன்னு தெரிய வந்தவுடனே  காவல்துறை ஆய்வாளரோ அல்லது துணை ஆய்வாளரோ (இவங்களுக்கு கீழ இருக்கற ஹெட் கான்ஸ்டபிளோ இல்ல கான்ஸ்டபிளோ கைது பண்ண முடியாதுங்க) சந்தேகத்துக்குள்ளானவரை கைது செய்யலாம். உதாரணத்துக்கு கொலைக் குற்றம் செஞ்சவர். இவர கைது பண்றதுக்கு பிடி வாரண்ட் எதுவும் தேவையில்லையாம்!.

2. நீதிமன்றத்துலருந்து பிடிவாரண்ட் வாங்குனதுக்கப்புறம் கைது பண்ணக்கூடிய குத்தம். அதாவது இந்த குற்றத்த செஞ்சதா சந்தேகத்தின் பேர்ல காவல்துறை அவங்க நினைச்சபடி கைது பண்ண முடியாது. இத ஆங்கிலத்துல Non-Cognizable offencesனு சொல்றாங்க. உதாரணம்:  பண மோசடி, ஏமாத்து வேலை செஞ்சவங்க அப்புறம்  பொது இடத்துல தகராறு பண்றவங்க. இவங்களை விசாரனைக்கு கூட்டிக்கிட்டு போலாமே தவிர கோர்ட் உத்தரவு இல்லாம கைது செய்ய முடியாது.  அப்படி விசாரணக்கப்புறம் இவர்தான் குத்தவாளின்னு போலீசுக்கு தெரியவந்தா சம்பவம் நடந்த இடம் எந்த கோர்ட்டுக்கு கீழ வருதோ அங்கருந்து பிடி வாரண்ட் வாங்கி கைது பண்ணிக்கலாம்.

இந்த குற்றங்கள இன்னும் ரெண்டு விதமா சட்டம் பிரிக்கிது:

1. நீதிமன்றமோ அல்லது காவல்துறையோ பிணை வழங்கக் கூடிய குற்றங்கள்
2. பிணை பெற முடியாத குற்றங்கள்.

ஆனா பிணை பெற முடியாத குற்றங்கள்ல கூட நீதிமன்றம் நினைச்சா பிணை வழங்க முடியுமாம்! அது அந்த குத்தத்தோட தீவிரத்த பொருத்தது.

இதுல  பிடி ஆணை எதுவும் இல்லாம கைது பண்ணக்கூடிய குத்தங்கள்ல முக்கியமான குத்தம் கொலைக் குத்தம்.

கொலைக் குத்தம்னா என்னன்னு இந்திய தண்டனைச் சட்டத்துல (இதச 1860) சொல்லியிருக்காங்க.

இந்த பிரிவுல சொல்லியிருக்கறத அப்படியே ஆங்கிலத்துல கீழ குடுத்துருக்கேன் பாருங்க:

299. Culpable homicide: Whoever causes death by doing an act with the intention of causing death, or with the intention of causing such bodily injury as is likely to cause death, or with the knowledge that he is likely by such act to cause death, commits the offence of culpable homicide.

இத அப்படியே மொழி மாற்றம் செஞ்சா ஒன்னும் புரியாது. அதனால இதுல சொல்லியிருக்கற சாராம்சத்த மட்டும் பாக்கலாம்.

இதுல மூனு விஷயங்கள சொல்லியிருக்காங்க:

1. ஒருத்தர கொலை செய்யிறது,
அல்லது
2. ஒருத்தர கொலை செய்யணும்கற எண்ணத்தோட பயங்கரமா தாக்குறது,
அல்லது
3. நாம அடிச்சா அவரு செத்துருவாருன்னு தெரிஞ்சும் அடிக்கறது.

இந்த மூனுமே கொலைக்குத்தம்தான். இத culpable homicideனு ஆங்கிலத்துல சொல்றாங்க.

இது ஒரு பொதுவான விளக்கம்னு சொல்லலாம்.

இதே சட்டத்துல அடுத்தடுத்து வர்ற பிரிவுகள்ல கொலைன்னா என்னன்னு இன்னும் தெளிவா சொல்லியிருக்காங்க. அதையும் பாக்கலாம்.


300. Murder Except in the cases hereinafter excepted, culpable homicide is murder, if the act by which the death is caused is done with the intention of causing death, or-

Secondly- If it is done with the intention of causing such bodily injury as the offender knows to be likely to cause the death of the person to whom the harm is caused, or-

Thirdly- If it is done with the intention of causing bodily injury to any person and the bodily injury intended to be inflicted is sufficient in the ordinary course of nature to cause death, or-

Fourthly,- If the person committing the act knows that it is so imminently dangerous that it must, in all probability, cause death or such bodily injury as is likely to cause death, and commits such act without any excuse for incurring the risk of causing death or such injury as aforesaid.

இந்த பிரிவுல கீழ சொல்லியிருக்கற அஞ்சி செயல்கள லிஸ்ட் (List) பண்ணிட்டு அதத் தவிர மேலே சொன்ன பிரிவு 299ல சொல்லியிருக்கற செயல்கள் எல்லாமே கொலைக்குத்தமா கருதப்படுமாம். அது என்ன செயல்கள்?

Exception 1- When culpable homicide is not murder- Culpable homicide is not murder if the offender, whilst deprived of the power of self-control by grave and sudden provocation, causes the death of the person who gave the provocation or causes the death of any other person by mistake or accident.

இப்ப ஒருத்தர் உங்கள கோவப்படுத்தறா மாதிரி பேசறாருன்னு வச்சிக்குவம். உங்களுக்கு திடீர்னு பயங்கரமா கோவம் வந்து கன்ட்ரோல் போயிறுது. அதாவது உங்கள கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோவம். கோவத்துல என்ன செய்யிறதுன்னு தெரியல. அதனால என்ன செய்யறோம்னே தெரியாம அவர கொலை பண்றீங்க. ஆனா அவர கொலை பண்ணணும்கறது உங்க எண்ணம் இல்ல. உங்களையும் அறியாம நீங்க செஞ்சிடறீங்க. சட்டம் அது கொலை இல்லேன்னு சொல்லுது.


Exception 2- Culpable homicide is not murder if the offender, in the exercise in good faith of the right of private defence of person or property, exceeds the power given to him by law and causes the death of the person against whom he is exercising such right of defence without premeditation, and without any intention of doing more harm than is necessary for the purpose of such defence.

உங்கள ஒருத்தர் தாக்குறாரு. அதுலருந்து நீங்க தப்பிக்கலன்னா ஒருவேளை உங்களுக்கு பயங்கர காயம், ஏன், மரணமே ஏற்படப்போவுதுன்னு நீங்க நினைக்கறீங்க. உங்கள காப்பாத்திக்கறதுக்கு நீங்க ஏதாச்சும் செஞ்சே ஆவணும். அந்த மாதிரி நீங்க நெனச்சி ஏதாச்சும் செய்யப் போக அதனால உங்கள தாக்க வந்த ஆளு செத்துடறாரு. உங்களுக்கு அந்த ஆள கொலை செய்யணும்கற எந்த எண்ணமும் இல்லை. நீங்க செஞ்சது உங்கள காப்பத்திக்கறது செஞ்ச காரியம். அதனால தாக்கப்பட்ட ஆள் செத்துப் போனாலும் சட்டத்தோட பார்வையில அது ஒரு கொலை இல்லை.

Exception 3- Culpable homicide is not murder if the offender, being a public servant or aiding. a public servant acting for the advancement of public justice, exceeds the powers given to him by law, and causes death by doing an act which he, in good faith, believes to be lawful and necessary for the due discharge of his duty as such public servant and without ill-will towards the person whose death is caused.

ஒரு பப்ளிக் செர்வன்ட் (அரசு ஊழியர்னு சொல்லலாம். இதுல காவல்துறை அதிகாரிகளும் வருவாங்க) பொது இடத்துல சட்டத்த நிலைநாட்டறதுக்கு சட்டத்துக்குட்பட்டு தங்களோட ட்யூட்டிய செய்யறப்போ அதனால யாருக்காச்சும் மரணம் சம்பவிச்சா அது கொலை இல்லை. அந்த அரசு ஊழியரும் கொலையாளின்னு கருதப்படமாட்டார். மரக்காணம் கலவரத்துல நடந்த துப்பாக்கி சூட்டுல நிறைய பேர் இறந்தாங்களே அதுக்கு சம்மந்தப்பட்ட போலீசார் மேல கொலைக் குத்தம் சுமத்தணும்னு எதிர்க்கட்சிகள் சொல்லியும் அரசு கண்டுக்காம இருந்தாங்களே அது இதனால்தான் போலருக்கு.

Exception 4. -Culpable homicide is not murder if it is committed without premeditation in a sudden fight in the heat of passion upon a sudden quarrel and without the offender having taken undue advantage or acted in a cruel or unusual manner.

ஒருத்தர கொல்லணும்கற எந்த திட்டமும் இல்லாம திடீர்னு அவர்கூட ஏற்பட்ட வாக்குவாதம் முத்திப்போயி அதனால அவர நீங்க அடிக்கப் போயி அவர் இறந்துட்டார்னா அதுவும் கொலை இல்லையாம். ஆனா நீங்க குரூரமா எதையும் செஞ்சிருக்கக் கூடாது. குரூரம்னா என்னன்னு இந்த செக்‌ஷன்ல சொல்லல. அத கோர்ட் தீர்மானிக்கும். இதுல யார் முதல் அடிச்சாங்கறது முக்கியமில்லேன்னும் சட்டம் சொல்லுது.

Exception 5- Culpable homicide is not murder when the person whose death is caused, being above the age of eighteen years, suffers death or takes the risk of death with his own consent.

நாம ஒருத்தருக்கு விஷத்த குடுத்து குடிறான்னு சொல்றோம். அவருக்கும் அத குடிச்சா நாம செத்துருவோம்னு நல்லா தெரியும். ஆனாலும் குடிச்சிட்டு செத்துபோயிட்டாரு. அதுவும் கொலை இல்லையாம். ஆனா செத்துபோனவர் பதினெட்டு வயசுக்குள் இருந்தவர்னு தெரிய வந்தா அப்போ நீங்க செஞ்சது கொலைக்குத்தம்.

முதல் தடவையா படிக்கறப்போ கொஞ்சம் குழப்பமாத்தான் (confusion) இருக்கும். ஆனா ஒன்னுக்கு ரெண்டு தரம் படிச்சா புரிஞ்சிரும்..

அதனால இன்னைக்கி இத்தோட நிறுத்திக்கறேன்..

மீதி நாளைக்கி பாக்கலாம்.



தொடரும்...