29 நவம்பர் 2005

(49) திரும்பிப் பார்க்கிறேன் - 23

என்னையே பார்த்துக்கொண்டு நின்ற என் மனைவியைப் பார்த்ததும் ஒரு விநாடி எப்படி ரியாக்ட் செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போனேன். பின்னர் சுதாரித்துக்கொண்டு ‘என்ன’ என்று என் புருவங்களை உயர்த்தினேன்.

‘ஒன்னுமில்லை’ என்று தலையசைத்துவிட்டு செய்துகொண்டிருந்த வேலைக்கு திரும்பினார் என் மனைவி. ‘அப்படா’ என்றிருந்தது எனக்கு.

அதுதான் என் மனைவியுடைய ஸ்பெஷாலிட்டி. நானாக எந்த ஒரு விஷயத்தை சொல்லும்வரை துருவி துருவி கேட்கும் சுபாவம் அவருக்கு இல்லை. இன்றும் அப்படித்தான். என்னுடைய அலுவலக விஷயங்களை வீட்டில் டிஸ்கஸ் செய்யக்கூடாது என்பது எனக்கும் என் மனைவிக்கும் இடையேயுள்ள எழுதாத ஒரு ஒப்பந்தம்.

இப்போதும் வீட்டிற்குள் நுழைந்தவுடனே அலுவலக பிரயாசைகளை மறந்து என்னால் ரிலாக்ஸ் செய்ய முடிகிறதென்றால் அதற்கு என்னுடைய மனைவியின் இந்த நல்ல குணமும் ஒரு காரணம்.

சரி, விஷயத்துக்கு வருவோம்.

அடுத்த நாள் அலுவலகத்துக்கு செல்லும் வழியிலேயே முதல் வேலையாக அந்த பான் புரோக்கரின் வீட்டுக்கு சென்றேன். வீட்டு வாசலிலேயே அமைந்திருந்த அவருடைய கடையில் அவரும், அவருடைய மூத்த சகோதரரும் அமர்ந்திருந்தனர். அவர்களைக் கண்டதும் நான் நிம்மதியடைந்தேன். இன்று இவ்விஷயத்துக்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும் என்ற நிம்மதி.

ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அவர்களை நெருங்கினேன். அவர்கள் இருவருடைய முகத்திலும் ஏதோ ஒரு குழப்பம் தென்பட்டதுபோல் தோன்றியது எனக்கு. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல், ‘என்ன சேட் இப்படி பண்ணீட்டீங்க? நீங்க சொன்னீங்கன்னுதான் அவருக்கு லோன் குடுத்தேன்.’ என்றேன்.

அதற்கு அவர் நேரடியாக பதில் சொல்லாமல் ‘முதல்ல உக்காருங்க சார். சொல்றேன்.’ என்றவாறு தன் சகோதரனை ‘நீங்க சொல்லுங்க’ என்பதுபோல் பார்த்தார்.

‘என்ன சேட், ஏதாவது ப்ராப்ளமா? ஏதாயிருந்தாலும் சொல்லுங்க.’ என்றேன் இருவரையும் பார்த்து.

‘சார்.. உங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியாமத்தான் நேத்தைக்கி ராத்திரி தம்பி வந்தவுடனே உங்களுக்கு போன் பண்ணலை.. அந்த ஆளு தம்பியவே ஏமாத்திட்டான் சார்.’ என்று இழுத்தார் சேட்டின் சகோதரர்.

‘என்ன சார் சொல்றீங்க? எனக்கு விளங்கலை.’

‘நம்ம தோஸ்த்து தலைமறைவாயிட்டான் சார். இப்பத்தான் தெரியுது அவன் எங்க பான் புரோக்கர் சங்கத்துலருக்கற நிறைய ஆளுங்கள நிறைய பாங்குகள்ல இதுமாதிரி ரெக்கமண்ட் பண்ண சொல்லி முலாம் பூசுன நகைகள அடகு வச்சி ஏமாத்தியிருக்கான் சார். அந்த விஷயம் நேத்து பகலுக்கு மேல தற்செயலா எங்க சங்க ஆஃபீஸ்க்கு போயிருந்தப்போதான் எனக்கு தெரிஞ்சிது சார். அதான் நேத்தைக்கு சாயந்திரம் முழுசும் நானும் எங்க சங்கத்து ஆளுங்களும் அவன எப்படியாவது பிடிச்சிரலாம்னு ராத்திரி பதினோரு மணி வரைக்கும் தேடினோம். கிடைக்கவேயில்லை.. மாதச்சோத் (ஹிந்தியில் கெட்ட வார்த்தை) எஸ்கேப் ஆயிட்டான். இப்ப என்ன செய்யறதுன்னு தெரியலை..’

எனக்கு என்ன பேசுவதென்றே தெரியாமல் சிறிது நேரம் அவர்கள் இருவரையுமே மாறி, மாறி பார்த்தேன்.

‘இது நல்லால்லை சேட். உங்களுக்கு உதவ போய் நம்ம அசிஸ்டென்ட் மானேஜர் மாட்டிக்கிட்டார். அவர் பாவம் எங்கருந்து பணத்த கட்டுவார்? நான் சொல்றேன்னு தப்பா நெனச்சிக்காதீங்க சேட். போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் பண்றப்போ நீங்கதான் அவரை அறிமுகப்படுத்தினீங்கன்னு சொல்ல வேண்டியிருக்கும். அப்புறம் உங்க இஷ்டம்.’ என்றேன்.

உடனே இருவரும் பதறிக்கொண்டு என் கையைப் பிடித்தனர். ‘சார் அவசரப்பட்டு ஏடாகூடமா அந்த மாதிரி எதுவும் பண்ணிராதீங்க. அப்புறம் நான் இந்த ஏரியாவுலேயே பிசினஸ் பண்ணமுடியாது. எனக்கு ரெண்டே, ரெண்டே நாள் டைம் குடுங்கோ. அந்த மாதச்சோத் எந்த ஊர்லருந்தாலும் கண்டு பிடிச்சி உங்க முன்னால கொண்டுவந்து நிறுத்தறேன். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்குங்க.’

எனக்கும் வேறு வழி தெரியவில்லை. அந்த பான்புரோக்கர் பெயரில் பத்துக்கும் மேல்பட்ட நகைக்கடன் என் கிளையிலிருந்து கொடுத்திருக்கிறேன். அவற்றுக்கு ஈடாக வைக்கப்பட்டிருந்த நகைகளின் மதிப்பே மூன்று லட்சத்துக்கு மேல் இருக்கும். எப்படியும் இவர் என்னிடமிருந்து தப்பிக்க முடியாதென்று அவருக்கும் தெரியும். விட்டுப் பிடிக்கலாம். பணம் எங்கும் போய்விடாது.

ஆனால் ஒரு பிரச்சினை. இன்றைக்குள் பணத்தை ரிக்கவர் செய்யாவிட்டால் என்னுடைய தலைமயகத்துக்கு அறிவிக்கவேண்டியிருக்கும். அதன் பின் விளைவுகளை நினைத்துப் பார்க்கவே பயமாயிருந்தது. ஆனால் வேறு வழியில்லை. நானாக அறிவிக்காமலிருந்து வேறு வழியாய் தெரியவருவதைவிட இது மேல் என்றதான் தோன்றியது.

‘சரி சேட். நீங்க கேட்டாமாதிரி ரெண்டு நாள் வெய்ட் பண்றேன். ஆனா ஒன்னு. நீங்க இப்ப சொன்னதை எழுத்துல தரணும். இல்லன்னா ரெண்டு நாள் கழிச்சி நான் போலீசுக்கு போனா போலீசும் சரி, எங்க H.Oவும் சரி ஒத்துக்க மாட்டாங்க. அநாவசியமான கேள்வியெல்லாம் வரும், சொல்லிட்டேன். என்ன சொல்றீங்க?’ என்றேன்.

‘சார் அதெல்லாம் வேணுமா. நான் வாக்கு குடுத்தா போறாதா?’ என்றார் இளைய சேட்.

‘போறாது சேட். என்னோட நிலைமையையும் நினைச்சி பாருங்க. ஏமாத்துவேலைன்னு தெரிஞ்சவுடனே ஏன் சார் எங்க கிட்ட ப்ராது குடுக்கலைன்னு போலீஸ் கேட்டா இவர்தான் ரெண்டு நாளைல பணத்த கட்டிர்றேன்னு சொன்னார்னு உங்கள காமிக்கலாம் இல்ல? அதுக்காகத்தான். நான் சொல்றா மாதிரி நீங்க எழுதி தந்தாத்தான் என் பொசிஷன் சேஃபாயிருக்கும். வேற வழியில்ல சேட்.’ என்று நான் பிடிவாதமாய் சொல்ல அவர்கள் இருவரும் அரைமனதுடன் எழுதி கையெழுத்திட்டு கொடுத்தனர்.

நான் அதை பெற்றுக்கொண்டு வங்கியை அடைந்தபோது அங்கு வேறொரு அதிர்ச்சி காத்திருந்தது!


தொடரும்

24 கருத்துகள்:

  1. பெயரில்லா11:58 AM

    என்ன சார் நீங்க. உங்க வீட்லருக்கறவங்க உங்கள கையும் களவுமா பிடிச்சிட்டாங்கன்னு நினைச்சா பொசுக்குன்னு முடிச்சிட்டீங்களே. இருந்தாலும் இந்த பதிவ என் மனைவிகிட்ட காட்டி நீயும் இதுமாதிரி இரேன்னு சொல்ல போறேன்.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா12:01 PM

    நீங்க சொல்றதுதான் சரி சார். அலுவலக விஷயம் அலுவலகத்திலயும் வீட்டு விஷயம் வீட்டுலயும் வைத்துக்கொள்வதுதான் சாலச் சிறந்தது. அப்படி இல்லாததுனாலத்தான் நிறைய பேர் வீட்ல எப்ப பார்த்தாலும் சண்டையும் சச்சரவுமா இருக்குன்னு நினைக்கிறேன்.

    இந்த பதிவுலயும் யதார்த்தமா நடந்தத சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா12:02 PM

    நான் அதை பெற்றுக்கொண்டு வங்கியை அடைந்தபோது அங்கு வேறொரு அதிர்ச்சி காத்திருந்தது!

    அதிர்ச்சி மேல அதிர்ச்சியா குடுக்கறீங்க? போலீசா?

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா12:05 PM

    ஆனால் வேறு வழியில்லை. நானாக அறிவிக்காமலிருந்து வேறு வழியாய் தெரியவருவதைவிட இது மேல் என்றதான் தோன்றியது.//

    நீங்க சொல்றது மிகவும் சரியான வார்த்தை. யாராவது நம்மைப்பற்றி மேலதிகாரிகளுக்கு அறிவிப்பதற்கு முன் நாமே நம் தவற்றை முறைப்படி அறிவித்துவிடுவது மேல்.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா12:06 PM

    சூப்பரா ஒரு மர்மகதை ரேஞ்சில போவுது சார் உங்க தொடர். ஒவ்வொரு பதிவையும் வாசிக்கணும்னு தூண்டறா மாதிரியிருக்குது. நாளைக்கு என்ன அதிர்ச்சி காத்திருந்தது சார்.

    பதிலளிநீக்கு
  6. இருந்தாலும் இந்த பதிவ என் மனைவிகிட்ட காட்டி நீயும் இதுமாதிரி இரேன்னு சொல்ல போறேன்//


    பார்த்து சம்பத். அப்புறம் உங்க வீட்டுல இனிமே அந்தாளு பதிவையே படிக்கக்கூடாதுன்னு 144 போட்டுறப்போறாங்க. நீங்க ஒருத்தர்தான் என்னுடைய Ardent ரசிகர்னு நினைக்கறேன். அதுவும் போயிறப்போகுது!

    பதிலளிநீக்கு
  7. அலுவலக விஷயம் அலுவலகத்திலயும் வீட்டு விஷயம் வீட்டுலயும் வைத்துக்கொள்வதுதான் சாலச் சிறந்தது. /


    ஆமாம் சார். வீட்டுல வந்தா அலுவலக டென்ஷன் ஒன்னுமில்லாம மனைவி, பிள்ளைங்களோட பேசிக்கிட்டிருக்கறதே ஒரு சந்தோஷம்தான். இல்லன்னா வீட்டுலருக்கறவங்களுக்கும் அநாவசியமா டென்ஷன்.

    பதிலளிநீக்கு
  8. அதிர்ச்சி மேல அதிர்ச்சியா குடுக்கறீங்க? //

    நாளைய பதிவை பாருங்களேன்.

    பதிலளிநீக்கு
  9. "நீங்க சொல்றது மிகவும் சரியான வார்த்தை. யாராவது நம்மைப்பற்றி மேலதிகாரிகளுக்கு அறிவிப்பதற்கு முன் நாமே நம் தவற்றை முறைப்படி அறிவித்துவிடுவது மேல்."

    ஆனந்த விகடனில் சமீபத்தில் 1954-ல் முன்னால் படித்த ஜோக் அப்போது புரியவில்லை. ஓரிரு ஆண்டுகளுக்கு பின்னால்தான் புரிந்தது. (அதுவும் என் அனுபவத்திலேயே நடந்த பின்னே, ஹி ஹி ஹி)

    "அப்பா (மகனிடம்): மனசாட்சி என்றால் என்ன?
    மகன்: நான் செய்த தவறு தங்கச்சிக்குத் தெரியவர, அவள் உங்களிடம் போட்டுக்கொடுப்பதற்கு முன் நானே கூறிவிடுவதற்கு பெயரே மனசாட்சியாகும்."

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  10. நன்றி அண்ணாமலை.

    அதுலயும் சில சிக்கல்கள் இருக்கு.

    ஒன்னுமில்லாத விஷயத்தை கூட ஊதி, ஊதி பெருசாக்கிருவாங்க. அதுவும் நமக்கு பிடிக்காதவங்க யாராச்சும் இருந்தாங்கன்னு வச்சிக்குங்க, அப்புறம் தடி குடுத்து அடி வாங்குன கதையாயிடும்.

    பதிலளிநீக்கு
  11. நாளைக்கு என்ன அதிர்ச்சி காத்திருந்தது சார்.


    விடை நாளைய பதிவில்!!

    பதிலளிநீக்கு
  12. ஒரு நாளைக்கு ரெண்டு எபிசோட் போடுங்களேன் //

    அப்படி போட்டா சீக்கிரம் சீரியல் முடிஞ்சிருமே..
    எல்லாம் இந்த மெகா சீரியல் பாக்கறதுனால வந்த வினை.

    ஒவ்வொன்னாவே போலாம்,என்ன சரியா?

    பதிலளிநீக்கு
  13. "அப்பா (மகனிடம்): மனசாட்சி என்றால் என்ன?
    மகன்: நான் செய்த தவறு தங்கச்சிக்குத் தெரியவர, அவள் உங்களிடம் போட்டுக்கொடுப்பதற்கு முன் நானே கூறிவிடுவதற்கு பெயரே மனசாட்சியாகும்."

    நூத்துல ஒரு வார்த்தை டோண்டு சார். இப்படித்தானே நிறைய விஷயங்கள் குடும்பத்துல வெளியே வருது!!

    பதிலளிநீக்கு
  14. நம்ம கூட்டத்துலேயே இந்த 'மெகா சீரியல்'ன்னு சொல்ற எதையுமே பார்க்காத ஆளு நாந்தான்.

    இப்பப் புரியுது எல்லோரும் இந்தியாவுலே என்னாத்துக்கு டி.வி.யைக் கட்டிக்கிட்டு அழறாங்கன்னு;-)

    விறுவிறுப்பா இருந்தா பார்க்கத்தானே சொல்லும்?

    இப்ப நாளைக்கு வரப்போறதைப் படிக்க நான்/நாம் காத்திருக்கறமாதிரி?

    பதிலளிநீக்கு
  15. மிக்க நன்றி துளசி.

    முன்பெல்லாம் தூர்தர்ஷனில் மெகா சீரியல் என்றால் 53 வாரங்கள் என்ற ஒரு லிமிட் இருக்கும். அதாவது வாரத்தில் ஒரு நாள் என ஒரு வருடம் வரை செல்லும்.

    ஆனால் இப்போது வாரத்தில் ஐந்து நாட்கள் வந்தும் சில தொடர்கள் மூன்று வருடங்கள் வரை செல்கின்றன!!

    கற்பனைத் திறன் அத்தனை முன்னேறியிருக்கிறது. இந்தியா வளரவில்லை என்று யார் சொன்னது?

    நம்ம சீரியல் அத்தனை தூரம் எல்லாம் போகாது.

    பதிலளிநீக்கு
  16. ஜோசப் சார்,
    ஒரு பக்கம் காமெடி..இன்னொரு பக்கம் செண்டிமெண்ட் திரில்லர் ..கலந்து ஒரு சினிமா எடுத்துடலாம் போல இருக்கே..ரசிகர் வட்டத்தை பெருசாக்கிட்டே போறீங்க..கலக்குங்க சார்!

    பதிலளிநீக்கு
  17. நல்லா இருக்கு - நடந்தவைகளும், சொல்லும் பாணியும்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. அப்படியா ஜோ!

    என்னவோ முடிஞ்ச வரைக்கும் எழுதறேன். சில நாள்ல படுக்கறதுக்கு ராத்திரி 12 ஆவுது. என்னத்த போட்டு கம்ப்யூட்டர்ல எழுதிக்கிட்டே இருக்கீங்க? கரண்ட் வேஸ்டாக்கிட்டுன்னு வீட்ல கம்ப்ளெயின்ட்.

    இதெல்லாம் எங்க கொண்டு விடப்போகுதோ.. சரியான லூஸ்ப்பா நீங்கன்னு அதிகமா சுதந்திரம் கொடுத்து வளர்க்கப்பட்ட பொண்ணு.

    இருந்தாலும் உங்கள் மாதிரி நல்ல நண்பர்களை தினமும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறதே. அதற்காகத்தான்.

    பதிலளிநீக்கு
  19. வாங்க தருமி சார், வாங்க.
    எவ்வளவு நாளாச்சு உங்கள பார்த்து? அதாவது என்னோட பதிவுல.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  20. விறுவிறுப்பாக எழுதவும் சரியான இடத்தில் நிறுத்தவும் தெரிந்திருக்கிறது. ரசித்து படிக்கிறேன்.
    துளசி: மெகா சீரியல்- நானும் பார்த்ததில்லை.

    பதிலளிநீக்கு
  21. தினத்தந்தி கன்னித்தீவை மிஞ்சக் கூடிய மெகா சீரியல் ஏதேனும் இருக்கிறதா ? :-))

    பதிலளிநீக்கு
  22. பெயரில்லா9:32 AM

    இன்றைய நிலையில் அதிகளவில் வாசகர்கள் யாருக்கு என்றால் அது
    உங்களுக்கு தான்.அப்படி எல்லோரை
    யும் வளைத்து போட்டுவிட்டீர்கள்.
    மர்மக்கதை மாதிரி போகுது உங்கட
    கதை ஒவ்வொரு பதிவும் சஸ்பென்சுடந்தான் முடிக்கிறது எண்டு
    ஏதாவது வேண்டுதலா?

    சஸ்பென்ஸ் தாங்க
    முடியவில்லை.எப்படி சுவாரசியமாக
    ஆரம்பிக்கிறீர்களோ அப்படியே
    நிறுத்தவும் செய்கிறீர்கள்.

    வாழத்துக்கள்.ஆரம்பம் முதல் படித்தாலும் இன்றுதான் முதல் முதலாக பின்னூட்டம் இடுகிறேன்.
    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  23. நன்றி தேன்துளி.

    நன்றி லதா. கன்னித்தீவை நான் சிறு வயதில் பல வருடங்கள்!! படித்திருக்கிறேன். அதை மிஞ்ச யாரால் முடியும்!

    பதிலளிநீக்கு
  24. இன்றைய நிலையில் அதிகளவில் வாசகர்கள் யாருக்கு என்றால் அது
    உங்களுக்கு தான்.//

    அப்படியா! நீங்க சொன்னா சரிதான்.

    பதிலளிநீக்கு