27 நவம்பர் 2019

என்னுடைய புத்தகங்கள் இலவசமாய்.....


என்னுடைய இந்த இரண்டு கிண்டில் புத்தகங்களையும் இன்று முதல் சனிக்கிழமை வரையிலும் கிண்டில் ஆன்லைன் கடையிலிருந்து இலவசமாய் தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

இவற்றை படிக்காதவர்கள் அமேஜான் கிண்டில் ஆன்லைன் ஸ்டோருக்கு சென்று ‘free ebooks tamil' என்று  தேடலில் குறிப்பிடவும்.  அதை தொடர்ந்து காட்டப்படும் பட்டியலில் காட்டப்படும் இவை இரண்டையும் இலவசமாக தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

இதற்கு உங்களிடம் கிண்டில் செயலி தேவைப்படும். அது இப்போது கணினிக்கும் கிடைக்கிறது.

இதை தரவிறக்கம் செய்ய உங்களுக்கு அமேஜான் கணக்கு தேவைப்படும். உங்களிடம் இல்லையென்றால் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி புதிதாய் கணக்கு ஒன்று துவக்கிக்கொள்ளலாம்.

நட்புடன்,
டிபிஆர்.

21 நவம்பர் 2019

கணினிக்கு ஏற்ற கிண்டில் மென்பொருள்

நான் அமேஜான் கிண்டிலில் என்னுடைய புத்தகத்தை வெளியிட்டுள்ள தகவலை என்னுடைய பல அலுவலக நண்பர்களுடன் பகிர்ந்திருந்தேன். அதில் பலரும் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் என்பதால் எங்களால் கைப்பேசியில் இதை படிக்க முடியவில்லை, கண்கள் வலிக்கின்றன என்றார்கள். எனக்கும் அதே தொல்லை தான் என்றேன்.

வேறு சிலர் எங்களிடம் ஸ்மார்ட் ஃபோன் இல்லை டிபிஆர் என்றார்கள். என்னிடமும்தான் இல்லை என்றேன்.

நானும் இதை நினைத்துத்தான் கிண்டில் பக்கமே செல்லாமல் இருந்தேன். ஆனால் என்னுடைய நண்பர்களுள் ஒருவர் கணினிக்கு என்றே அமேஜான் ஒரு கிண்டில் மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதை தரவிறக்கம் செய்து படியுங்கள் என்றார்.

இதில் நம் வலை நண்பர் ஜோதிஜி அவர்களின் புத்தகத்தைத்தான் முதலில் படித்தேன். நம் கண்களுக்கு தேவையான அளவுக்கு எழுத்துக்களை பெரிதாக்கிக் கொள்ளும் வசதியும் இதில் இருப்பதால் கண்களுக்கு எவ்வித வலியும் ஏற்படவில்லை.

ஆகவே இத்தகையோர் பயனடையவே இந்த பதிவை எழுதுகிறேன்.

கீழ்காணும் திரை நகல்களை பார்த்தாலே போதும் என்று நினைக்கிறேன்.
இரண்டாவது திரையில் உங்கள் மின்னஞ்சல் விலாசத்தை கொடுத்தால் மென்பொருளின் சுட்டி (Link) வந்துவிடும். அதை பயன்படுத்தி மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிவிடலாம்

உங்களுக்கு அமேஜான் கணக்கு இருந்தால் மென்பொருளை அங்கு பதிவு செய்துக்கொள்வது நல்லது.

அதன் பிறகு டெஸ்க்டாப்பிலுள்ள கிண்டில் சுட்டியை க்ளிக் செய்து கிண்டில் தளத்திலுள்ள எந்த மின்புத்தகத்தையும் வாங்கி படிக்கலாம். ஜெயகாந்தனின் சிறுகதை தொகுப்பு இலவசமாகவே கிடைக்கிறது. அதே போல் பல பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன.

அச்சு புத்தக விலையுடன் ஒப்பிடுகையில் இதில் பண்மடங்கு குறைந்த விலையிலேயே புத்தகங்கள் கிடைக்கின்றன. பல புதிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் ஐம்பது ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைப்பது எத்தனை அரிது!

இந்த மென்பொருளை பயன்படுத்தி மறைந்து வரும் வாசிப்பு பழக்கத்தை மீண்டும் தொடருங்கள்.

நன்றி,

டிபிஆர்.





20 நவம்பர் 2019

அமேஜான் கிண்டிலில் என் புத்தகம்

சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு ‘சொந்த செலவில் சூன்யம்’ என்ற க்ரைம் நாவலை ஒரு நீள் தொடராக எழுதியிருந்தேன். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதை அப்போதே பல நண்பர்கள் இதை புத்தக வடிவில் வெளிக்கொணரலாமே என்று கருத்துரைகளில் கூறியிருந்தனர். ஆனால் அதில் அப்போது எனக்கு அவ்வளவாக விருப்பமில்லை. 

ஆனால் இப்போது நம்முடைய பதிவுலக நண்பர்கள் சிலர் காட்டிய பாதையில் அமேஜான் கிண்டில் தளத்தில் வெளியிட்டுள்ளேன். 


இதை இயன்றவரை பலருக்கும் சென்று சேர்க்கும் வகையில் இதன் விலையை ஐம்பது ரூபாய்க்கும் குறைவாக விலையிட வேண்டும் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் அமேஜான் தளத்தில் புத்தகத்தின் அளவின் (size) அடிப்படையில் அமெரிக்க சந்தையில் குறைந்த பட்சம் 0.99 டாலர்கள் விலை இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அந்த சந்தையில் நிர்ணயிக்கப்படும் விலையின் அடிப்படையில்தான் உலகெங்கும் உள்ள அமேஜான் கிண்டில் தளங்களில் விலை நிர்ணயிக்கப்படுமாம்!

அமெரிக்க சந்தையில் குறைந்த பட்ச விலையாக ஒரு டாலரை தெரிவு செய்தேன். அதன் அடிப்படையில் இந்திய சந்தையில் ரூ.72/- என நிர்ணயிக்கப்பட்டது. இதில் முப்பந்தைந்து விழுக்காடு எனக்கு ராயல்ட்டியாக வழங்கப்படும். எழுபது விழுக்காடு வரை ராயல்டி வழங்கும் திட்டமும் உள்ளது. ஆனால் அந்த் அடிப்படையில் புத்தகத்தின் விலை குறைந்த பட்சம் ரூ.225/- இருக்க வேண்டும். அந்த விலையில் புத்தகத்தை இந்தியாவில் விற்பது கடினம் என்பதால் அதை நான் தெரிவு செய்யவில்லை. 

இந்த நாவலை தொடராக படித்தவர்களுக்கு இதைப் பற்றி தெரிந்திருக்கும். அமேஜான் விதித்த நிபந்தனைகளின்படி இத்தொடரை என்னுடைய என்னுலகம் தளத்திலிருந்து நீக்கிவிட வேண்டியதாயிற்று. இப்போது அது என்னுடைய பளாகில் படிக்க கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் இதுவரை படிக்காதவர்களுக்கு  ஒரு கதை சுருக்கம்.

ராஜசேகர் ஒரு க்ரிமினல் வழக்கறிஞர். திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. 

வழக்கறிஞர் பணியில் அதிகம் பிரசித்தி இல்லாதவர். சுமாரான வருமானம்தான். 

இந்த சூழலில் தன்னிடம் உதவி கேட்டு வரும் மாதவி என்ற பெண்ணுடன் தகாத உறவு ஏற்படுகிறது. 

ஆனால் அந்த பெண் தன்னுடன் அல்லாமல் வேறு பலருடனும் இத்தகைய தொடர்பு வைத்திருந்ததை அறிய வரும்போது அவர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் தன்னை தாக்க வரும் மாதவியை பிடித்துதள்ளிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார் ராஜசேகர். 

அடுத்த நாள் காலை மாதவி கொலையுண்டு இறந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைகிறார். ஒருவேளை தாந்தான் கொலையாளியாக இருக்குமோ என்று அஞ்சுகிறார். 

அவர்தான் கொலை செய்தாரா இல்லையா அப்படியானால் அதிலிருந்து விடுபடுகிறாரா அல்லது தண்டிக்கப்படுகிறாரா என்பதுதான் மீதி கதை. 

ஒரு சராசரி க்ரைம் நாவலைப் போன்று இல்லாமல் குற்றவாளையை கண்டுபிடிப்பதில் காவல்துறை செய்யும் புலன்விசாரணைகள், காவல்துறையில் அதிகாரிகளுக்கிடையில் ஏற்படும் ஈகோ மோதல்கள், காவல்துறைக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் இடையில் ஏற்படும் மோதல்கள், குற்றவாளிக்காக ஆஜராகும் வழக்கறிஞரின் குற்ற விசாரணைகள் அதை தொடர்ந்து வழக்கு வழக்காடு மன்றத்திற்கு செல்லும் சூழலில் அங்கு ஏற்படும் மோதல்கள், காரசாரமான விவாதங்கள் என குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது முதல் தண்டனை அளிக்கப்படும் வரையிலான அனைத்து நிகழ்வுகளையும் விவரிக்கிறது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நாவலை தேடி எடுத்து சில பகுதிகளை குறைத்தோ நீக்கியோ என ஒரு முழு தணிக்கை செய்து வெளியிட்டுள்ளேன்.

இதை தொடராக வாசித்தவர்களுக்கும் முழு நாவலையும் ஒரே மூச்சில் வாசித்து முடிக்கும் அனுபவம் இந்த புத்தக வாயிலாக கிடைக்கும் என்று நம்புகிறேன். 

நன்றி,

அன்புடன்,
டிபிஆர்.  

14 நவம்பர் 2019

கா..கா..கா (நகைச்சுவை)

நடிகர்கள்: பார்த்திபன், வடிவேலு, மற்றும் பலர்.

சாலையோரத்திலிருந்த டீக்கடை ஒன்றில் பார்த்திபன் அமர்ந்து காப்பி குடித்துக் கொண்டிருக்கிறார்.

தெருமுனையில் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்த வடிவேல் தூரத்திலிருந்தே அவரைப் பார்த்துவிடுகிறார். அவர் பார்ப்பதை பார்த்திபனும் பார்த்துவிடுகிறார். உடனே ஒரு விஷமப் புன்னகை அவர் உதடுகளில் தவழ்கிறது. இருப்பினும் பார்த்தும் பார்க்காததுபோல் தன் அருகில் பெஞ்சில் கிடந்த தினத்தந்தி நாளிதழை எடுத்து தன் முகத்தை மூடிக்கொண்டு படிக்கிறார்.

வடிவேலு சைக்கிளிலிருந்து இறங்கி வந்த வழியே செல்ல முயன்றவர் பார்த்திபன் பேப்பரில் ஆழ்ந்திருப்பதைப் பார்க்கிறார். நின்று யோசிக்கிறார்.

வடி: அட கன்றாவியே.. இன்னைக்கி பொறப்பட்ட நேரமே சரியில்லை போலருக்குதேடா.. இவன் எங்க இங்க வந்தான்? கேள்வி கேட்டே கொன்னுருவானே.. இப்ப என்ன பண்ணித் தொலையறது? (பார்த்திபனை ஓரக் கண்ணால் பார்க்கிறார்) நம்மள பார்த்திருப்பானோ.. இருக்காது.. அவன்தான் பேப்பர்ல முங்கிட்டான்லே.. நம்மள பார்த்துருக்க மாட்டான்.. நாம வந்த வழியே போனோம்னு வச்சிக்க.. நோட் பண்ணாலும் பண்ணுவான்.. அதனால.. சைலண்ட்டா வண்டிய உருட்டிட்டே போயி.. அந்த பயல தாண்டுனதும் ஏறிக்குவம்.. அதான் கரெக்ட். அப்படியே பார்த்துட்டாலும் அவன் யாருன்னு தெரியாத மாதிரி நடிச்சிருவோம். நடிக்கறதுக்கு நமக்கு சொல்லியா தரணும்.. நடிப்புல நம்ம யாரு? கிங்குல்ல? (தன் பாணியில் கழுத்தை உலுக்கிக் கொண்டு உறுமுகிறார். பிறகு சைக்கிளை உருட்டிக் கொண்டே பார்த்திபன் இருந்த திசைக்கு நேரெதிர் திசையில் பார்த்துக்கொண்டு ‘நான் பார்த்ததிலே இவன் ஒருத்தனைத்தான் அசிங்கம் என்பேன் ரொம்ப அசிங்கம் என்பேன்.’ என்று பார்த்திபனை மனதில் நினைத்துக் கொண்டு வாய்க்குள் பாடியவாறே செல்கிறார். இதை ஆரம்பமுதலே கவனித்துக்கொண்டிருந்த பார்த்திபன் அவர் கடையைக் கடக்கும்வரை பொறுத்திருந்து பேப்பரை கக்கத்தில் வைத்துக்கொண்டு தன் இரண்டு கைகளையும் தட்டுகிறார். பிறகு பேப்பரை மீண்டும் எடுத்து முகத்தை மூடிக்கொள்கிறார்.)

(கைதட்டல் சப்தம் கேட்டு ஷாக் அடித்தாற்போல் நின்ற வடிவேலு தன்னையுமறியாமல் திரும்பிப் பார்க்கிறார். பார்த்திபன் பேப்பரைப் படித்தவாறே ஓரக்கண்ணால் வடிவேலுவைக் கவனிக்கிறார். வடிவேலு பார்த்திபன் பேப்பரில் மூழ்கியிருப்பதை பார்த்து நிம்மதியடைகிறார்.)

வடி: யார்ராவன்? கைதட்டல் சத்தம் மட்டும் கேக்குது திரும்பிப் பார்த்தா ஒரு பய மவனையும் காணோம்.. காலங்கார்த்தால வம்பு பண்றதுக்குன்னே அலையறானுவப்பா.. நிம்மதியா எளுந்திரிச்சமா.. ஒரு வேல சோலிய பாத்தமான்னு இருக்க முடியுதா.. ரோட்டுல நிம்மதியா நடமாடக் கூட முடியாம.. என்ன பொளப்புறா சாமி... பேசாம துபாய்ல கக்கூஸ்... (வாயைப் பொத்திக்கொண்டு சுற்றும் முற்றும் பார்க்கிறார்) வாணாம்.. வாய குடுத்து மாட்டிக்கிறாத.. வாய்க்குள்ள பேசினாக் கூட கண்டுபிடிச்சிருவான்.. எமகாதக பய.. உக்காந்துருக்கான் பார், ஒன்னுமே தெரியாதமாதிரி.. அவன் மூஞ்சும், மொவறையும்.. சரி நமக்கெதுக்கு ஊர் வம்பு.. இப்பிடியே போயி சந்தைல ஆத்தா குடுத்த லிஸ்ட்டு பிரகாரம் ஜாமான வாங்கிக்கிட்டு ஊர் போய் சேர்வோம்.. சைக்கிளை உருட்ட ஆரம்பித்தவர் சட்டென்று நினைவுக்கு வந்தவர்போல்..) சரிஈஈஈஈ.. அதான் கடை போயிருச்சில்ல.. பொறவெதுக்கு உருட்டறது? சும்மா சல்லுன்னு ஏறிக்கிற வேண்டியதுதான.. (சைக்கிளை நிறுத்தி வலது காலை தூக்கி சீட்டின் மேல் வைக்கிறார்.. மீண்டும் கைதட்டல் சப்தம் கேட்கிறது. பதறியடித்துக் கொண்டு காலை இறக்கிக் கொண்டு திரும்பிப் பார்க்கிறார். யாரும் காணாமல் மீண்டும் காலை சீட்டுக்கு உயர்த்துகிறார். அவருக்கு பின்னால் இருந்து குரல் மட்டும் கேட்கிறது. ‘டேய் கேன, உன்னைத்தாண்டா. காது கேக்கல?)

வடி: (திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்க்கிறார். யாரையும் காணோம். பார்த்திபனைப் பார்க்கிறார். அவர் பேப்பரால் முகத்தை மூடிக்கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு நிம்மதியடைகிறார்.) சை.. குரல் மட்டுந்தேன் கேக்குது.. மூஞ்ச காணோமே.. அசரீரிம்பாங்களே அதா இருக்குமோ.. (தலையை ஆட்டிக்கொண்டு) இருக்கும், இருக்கும்.. நமக்கெதுக்கு வம்பு..? திரும்பிப் பாக்காம.. மிதிச்சிக்கிட்டு.. வாணாம்.. கால தூக்கிப் போடறப்பதான குரல் கேக்குது.. உருட்டிக்கிட்டே போய்ட்டா..? ஆமா.. இப்படியே இன்னும் கொஞ்ச தூரம் உருட்டிக்கிட்டே போயி..

(அவர் போவதைப் பார்த்த பார்த்திபன் பேப்பரை மடித்து தன் அருகில் வைத்துவிட்டு மீண்டும் கைகளை தட்டுகிறார்.)

வடி: என்னடாயிது காலங்கார்த்தால ரோதனை.. ?(சடாரென் திரும்பி) எவண்டா அவன்..? என்ன நக்.. (பார்த்திபன் தன்னையே பார்ப்பதைப் பார்த்துவிட்டு தனக்குள்) பார்த்திட்டாண்டா.. பார்த்திட்டாண்டா.. இன்னைக்கி போனாப்பலதான்... சரி, சரி.. அவன யாருன்னு தெரியாதமாதிரி நடிக்கத்தான போறோம்.. முட்டாப் பய மவன்.. கண்டுபிடிக்கிறானான்னு பாப்பம்..

(பார்த்திபன் பெஞ்சிலிருந்து எழுந்திருக்காமலேயே வடிவேலுவை நோக்கி ‘இங்க வா’ என்று சைகை செய்கிறார்.

வடி:(தனக்கு பின்னால் திரும்பி பார்க்கிறார். அங்கே யாரையும் காணாமல் பார்த்திபனைப் பார்க்கிறார்) யாரு, என்னையா?

பார்: ஆமாண்டா.. உன்னையேத்தான்.. நீ என்ன டமார செவிடா? ரெண்டுதரம் கைதட்டியும் திரும்பிப் பாக்காம போற?

வடி: (வேண்டா வெறுப்போடு வந்து அவன் முன்னே நிற்கிறார். ஆனால் அவர் முகத்தைப் பார்க்காமல் மேலே பார்த்துக்கொண்டு நிற்கிறார்) யோவ் யாருய்யா நீ? ரோட்ல பேசாம போய்ட்டிருக்கற ஆள இளுத்து வச்சி வம்பு பண்ற?

பார்: டேய் வெண்ணெ.. என்ன பார்த்து பேசுறா.. அங்க எங்கயோ சூன்யத்த பாத்த்துக்கிட்டு யார்யா நீன்னா? அங்கருந்து யாரு.. செத்துப்போன உங்க பாட்டனா பதில் குடுப்பான்..?

வடி: (கோபத்துடன் பார்த்திபனை முறைக்கிறார்) யோவ்.. எதுக்குய்யா எங்க தாத்தனையெல்லாம் இளுக்கற? வேணாம்.. மரியாத கெட்டுரும்...சொல்லிட்டன்.. ஆளம் தெரியாம கால விட்டுட்டு.. (சட்டென்று நினைவுக்கு வந்தவராய் வாயை மூடிக்கொள்கிறார்)

பார்: (நெருங்கி வடிவேலு முகத்தை உற்று பார்க்கிறார்) டேய் என்ன நிறுத்திட்டே.. சொல்லு.. ஆழம் தெரியாம என்னத்த விட்டேன்.. சொல்றா?

வடி: ஒன்னுமில்லப்பா.. ஆள விடு.. சந்தைக்கு போணும்.. ஆத்தா வையும்..ஆள விடு..

பார்: டேய், டேய் நிறுத்துறா... நீ என்ன பதினாறு வயதினில கமல்ஹாசனா.. சொன்னதையே சொல்லிக்கிட்டு.. சரி.. என்னை தெரியல? பார்த்தும் பாக்காத மாதிரி போற...?

வடி: (பார்த்திபனை பார்க்கிறார்) தெரியலயே.. நீ யாருன்னே தெரியலையே (அழுகிறார்) எதுக்குய்யா சும்மா போய்ட்டிருந்த என்ன இளுத்து வச்சி வம்பு பண்றே..?விடுய்யா.. சந்தைக்கு போணும்.. ஆத்தா நிசத்துக்குமே வையும்யா.. என்ன விட்டுறு..

பார்: (டீ கடை பெஞ்சில் அமர்ந்திருந்தவர்களைப் பார்க்கிறார்) ஏங்க உங்க யாருக்காவது என்ன அடையாளம் தெரியுதா?

எல்லோரும் கோரசாக: ஓ தெரியுதே.. புதுசா ஊருக்கு வந்துருக்கற தம்பிதானே.. நல்லாத் தெரியுது..

பார்: (சலிப்புடன்) என்னங்க நீங்க..? நா இந்த ஊருக்கு வந்துதான் ஆறு மாசத்துக்கு மேல ஆயிருச்சில்ல..? இன்னும் புதுசா ஊருக்கு வந்த தம்பிங்கறீங்க? சரி அது போட்டும்.. அப்ப என்ன உங்க எல்லாருக்கும் அடையாளம் தெரியுது.. (டீக்கடைக்காரரை பார்க்கிறார்) ஏங்க டீ.. உங்களுக்கு?

டீக்கடைக்காரர்: (தனக்குள்) களவாணிப்பய.. எம்பேரு தெரிஞ்சிருந்தும் நக்கலா டீங்கறாம் பாரு.. பேசாம தெரியலேன்னு சொல்லிரலாமா? ஆனா இவன் குடுக்க வேண்டிய அம்பது ரூவா காசு அம்பேலாயிருமே.. (பார்த்திபனையும் வடிவேலுவையும் மாறி மாறி பார்க்கிறார்) அட என்ன தம்பி கிண்டல் பண்ணிக்கிட்டு... உங்கள் தெரியாம இருக்குமா? நீங்க வேற நமக்கு அம்பது ரூவா பாக்கி வச்சிருக்கீக, உங்கள தெரியாம போயிருமா?

பார்: யோவ்! என்ன சந்துல சிந்து பாடறியா..? பிச்சாத்து அம்பது ரூபா.. (சட்டென்று திரும்பி வடிவேலுவைப் பார்க்கிறார்) சார் ஒரு அம்பது ரூபா இருந்தா குடுங்க சார்.. இந்த டீக்கடைக் காரன் மூஞ்சில விட்டெறியறேன்.. (வடிவேலு இல்லையென்று மறுக்க அதை பொருட்படுத்தாமல் அவருடைய சட்டைப் பையில் கைவிட்டு கொத்தாய் கிடைத்த பணத்திலிருந்து ஐம்பது ரூபாய் நோட்டொன்றை எடுத்து கடைக்காரரை நோக்கி எறிகிறார்) இந்தாய்யா ஒம் பிச்சாத்து அம்பது ரூபா.. சார் யாருன்னு நினைக்கறே? துபாய்ல லச்ச லச்சமா சம்பாதிச்சவரு.. அதையெல்லாம் விட்டுட்டு இந்த ஊர்ல.. நம்மள மாதிரி ஆளுங்களுக்கு சேவை செய்யணும்னு இங்கயே தங்கிட்டார்.. (வடிவேலுவை பார்த்து) என்ன கக்கூ.. சாரி.. உங்க பேரே இதுவரைக்கும் சொல்லலையா.. அதான்.. கொஞ்சம் கன்ஃப்யூசாயிட்டேன்.. இப்ப சொல்லுங்க.. ஏன் பாத்தும் பாக்காத மாதிரி போனீங்க..ங்க என்ன ங்க.. டேய் சொல்லுறா.. எதுக்கு... பார்த்தும்... பாக்காம... போன?

வடி: யோவ் யார்யா நீ? லூசா..? நாந்தான் தெரியாதுங்கறேன்ல.. சொன்னதையே திருப்பி திருப்பி சொல்ற? கைலருந்த காசையும் எடுத்துக்கிட்டு.. யோவ் வேணாம்.. எடுத்த காச திருப்பி குடுத்துறு.. அப்புறம் சந்தைலருந்து ஜாமான் வாங்காம வீட்டுக்கு போனா.. ஆத்தா நிசத்துக்குமே வையும்யா.. காச குடுய்யா.. (அழுகிறார். கடையிலிருந்த எல்லோரும் சிரிக்கின்றனர்)

பார்: டேய்.. (விரல்களை மடக்கிக்கொண்டு முஷ்டியை உயர்த்தி முகத்துக்கு முன்னால் குத்துவதைப் போல் வருகிறார்) டேய் யாரப் பாத்து லூசுங்கற? இப்ப சொல்லு.. நீ அன்னைக்கி பஸ்சுல டிக்கட் வாங்காம.. செக்கிங் இன்ஸ்பெக்டர்கிட்ட லஞ்சம் குடுத்து அடிவாங்குன பார்ட்டி தான?

வடி: (தனக்குள்) படுபாவிப் பய.. நாம முட்டாத்தனமா செஞ்ச காரியத்தையெல்லாம் ஒன்னு விடாம ஞாபகத்துல வச்சிருக்கானே.. இப்ப என்ன பண்றது? சரி.. நாம போட்ட வேஷத்தையே தொடர்ந்து போட வேண்டியதுதான்.. (அசடு வழிகிறார்) யோவ் நெசமாவ நான் அவனில்லைய்யா.. என்ன விட்டுறு..

பார்: (கோபத்துடன்) டேய் என்ன ஜெமினி கனேசன்னு நினைப்பா.. ?கொட்டா டாக்கீஸ்ல நான் அவனில்லை படத்த பாத்துட்டு.. என்ன.. நக்கலா? நீ நான் அவனில்லைன்னு சொன்னா நான் நீ அவனில்லைன்னு நம்பிரணுமா? சொல்றா நீ அவந்தானே...

வடி: நீ என்னய்யா சொல்ற? உனக்கு மட்டும் எப்படீய்யா இப்படியெல்லாம் மாத்தி மாத்தி பேச வருது.. ஜெமினி கனேசங்கற, கொட்டா டாக்கீசுங்கற.. நீ என்ன சொல்ல வரேன்னே தெரியலையேய்யா.. கொஞ்சம் தெளிவாத்தான் பேசேன்.. (டீக்கடையிலிருந்தவர்களைப் பார்க்கிறார்) ஏன்யா பாத்துக்கிட்டே இருக்கீகளே.. யாராச்சும் கேக்கப் படாதா.. இவரு சொல்றது உங்களுக்கு யார்க்காச்சும் புரியுதா? (இல்லை என்று தலையசைத்துவிட்டு பார்த்திபன் முறைத்ததும் ஆமாம் என்று தலையசைத்துவிட்டு ஒவ்வொருவராய் எழுந்து போகின்றனர்)

வடி: யோவ் என்னய்யா இது.. நா கேட்டப்ப இல்லைன்னவனெல்லாம் உன் மூஞ்ச பார்த்ததும் ஆமாங்கறானுங்க.. யார்யா நீ?

பார்: டேய்.. என்ன நடிச்சே தப்பிச்சிரலாம்னு பாக்கறீயா.. ?உனக்கு ஜெமினி கணேசன் யாருன்னு தெரியாது?

வடி: யோவ் எதிர்ல நிக்கற உன்னையே யாருன்னு தெரியல.. அது யாருய்யா ஜெமினி கணேசன்? அந்தாள எனக்கு எதுக்கு தெரியணுங்கற?

பார்: (திரும்பி டீக்கடைக்காரரைப் பார்க்கிறார்) ஏங்க, உங்களுக்கு ஜெமினி கணேசன தெரியுமா?

டீ.க: என்ன தம்பி நீங்க கிண்டல் பண்ணிக்கிட்டு.. காதல் மன்னன தெரியாதாக்கும். அந்த தம்பிதான் சும்மா கிண்டல் பண்ணுதுன்னா.. நீங்களும் என்ன கேக்கறீங்களே..

பார்: (வடிவேலுவிடம்) பாத்தியாடா.. நாள் முழுசும் டம்ளர் டம்ளரா டீ, காப்பிங்கற பேர்ல சுடுதண்ணிய வித்துக்கிட்டிருக்கறவருக்குக்கூட (டீக்கடைக்காரர் முகத்தை தொங்கப்போடுகிறார்) ஜெமினி கணேசன்னவுடனே காதல் மன்னன்னு தெரியுது.. நீ தெரியலேன்னு டிராம பண்றியா?

வடி: யோவ் யாரைய்யா சொல்ற? உண்மைலையே தெரியாதுய்யா..

பார்: சரி.. உனக்கு என்ன வயாசாச்சி..

வடி: (சந்தேகத்துடன்) எதுக்கு?

பார்: (முட்டியை வைத்து முகத்தில் லேசாக குத்துகிறார்) ஊம்.. ஒன்ன கல்யாணம் பண்ணிக்கறதுக்கு.. சொல்றா.. என்ன வயசாச்சி..? அம்பது, இல்ல அது ஜாஸ்தி.. ஒரு நாப்பத்தஞ்சி..

வடி:(அழுகிறார்) யோவ்.. முழுசா இருபது கூட ஆவலய்யா. என்ன போயி.. ஏன்யா இந்த அழும்பு பண்ற..? எனக்கின்னும் கல்யாணம் கூட ஆவலைய்யா!

பார்: ஐ! எனக்குக்கூடத்தான் முப்பத்தஞ்சி வயசாயும் இன்னும் கல்யாணம் ஆவலே.. அதுக்காக நீ சின்னப் பையன்னு ஆயிருமா? சரி.. என்னை தெரியலை ஒத்துக்கறேன்.. ஜெமினி கணேசன்னு யாருன்னு சொல்லு விட்டுடறேன்.. சொல்லு..

வடி: (அழுகை கூடி குரல் உச்சத்துக்கு போகிறது) யோவ்.. நெசமாலுமே நீ சொல்ற ஆள எனக்கு தெரியாதுய்யா..

பார்: டேய், வேணாம். இந்த ஜிம்கானா வேலையெல்லாம் என்கிட்ட வேணாம்.. சரி.. நீ சினிமால்லாம் பாப்பேல்ல?

வடி: (அழுகையை நிறுத்திவிட்டு.. தலையை ஒரு உலுக்கு உலுக்கிக் கொண்டு உறுமுகிறார்.) என்னா நீ அப்படி கேட்டுட்டே..? வாரம் ரெண்டு சினிமான்னாச்சும் பாக்கலேன்னா ஐயாவுக்கு சாப்பாடு எறங்காதுல்லே..

பார்: அதுசரி.. சினிமால்லாம் பாக்கற ஆளுதானா நீ.. பார்த்தா தெரியலையே..

வடி: யோவ்.. சினிமா பாக்கற ஆளுன்னு பாத்தவுடனேயே சொல்லிருவியா நீ? போய்யா.. எவனாச்சும் காதுல பூ வச்சிருப்பான் அவங்கிட்ட போயி சொல்லு.. சரி.. இப்ப ஒனக்கு என்ன வேணும்? எதுக்கு இப்ப சினிமா பாக்கறியான்னு கேக்கறே.. ?அதச் சொல்லு..

பார்: (டீக்காரரை திரும்பி பார்க்கிறார்) பாத்தியாய்யா.. என்னையே மடக்கிட்டான்.. (வடிவேலுவைப் பார்த்து) சரி.. அவ்வை சண்முகி படம் பாத்திருக்கியா..

வடி: (சந்தோஷத்துடன்) என்னா நீ அப்படி கேட்டுட்டே.. நம்ம கமல் காசன்னா நமக்கு உசுருல்லே..

பார்: என்னது கமல் காசனா? உன் நாக்குல இடி விழ! கமல் காசன் இல்லடா கமல் ஹாசன்.. எங்க சொல்லு.. கமல் ஹாசன்..

வடி: (தனக்குள்) நமக்கு 'ஹா' வராதுன்னு தெரிஞ்சிருப்பான் போலருக்குதே.. இத வச்சே நம்மள ராவிருவானே.. பேசாம ஜெமினி கணேசன தெரியும்னே சொல்லிட்டு போயிருக்கலாம்.. எல்லாம் இன்னைக்கி முளிச்ச நேரம்.. (பார்த்திபனை ஓரக்கண்ணால் பார்க்கிறார்)இப்ப என்ன வேணும் ஒனக்கு? அவர் பேரை இன்னொருத்தரம் சொல்லணும்.. அதானே..

பார்: (நெற்றியில் அடிக்கிறார்) அதாண்டா வேணும், வெண்ண.. சொல்லு.. க..ம..ல் ஹா..ச..ன்.. அழுத்தமா கரெக்டா சொல்லு.. விட்டுர்றேன்.. ஜெமினி யார்னு கூட சொல்ல வேணாம்.. இத்த மட்டும் கரெக்டா சொல்லு.. சொல்றா டேய்..

வடி: (அழுகிறார்) அதுக்கேன்யா சும்மா சும்மா அடிக்கறே.. வலிக்குதில்லே..

பார்: டேய் பேச்ச மாத்தாத.. சொல்லு..

வடி: கமல் காசன்.. சொல்லிட்டேன்.. போட்டுமாய்யா.. சந்தைய மூடிரப்போறான்யா.. ஆத்தா வையும்.. விட்டுறுய்யா..

பார்: (டீக்காரரைப் பார்த்து) ஏங்க.. இவன் கரெக்டா சொன்னானா? உங்களுக்கு எப்படி கேட்டிச்சி..?

டீ.கா: (தனக்குள்) சரியாச் சொன்னான்னு சொன்னா புது தம்பி கோச்சிக்கும். தப்புன்னு சொன்னா வீணா அந்த தம்பியோட விரோதமாயிரும். அந்த தம்பியோட ஆத்தா வேற ஊர்ல பெரிய மனுஷி.. எனக்கு இது தேவை தானா? இருந்தாலும் இந்த புது தம்பி படா பேஜார் புடிச்சவந்தான்.. என்ன சொல்றது?

பார்: யோவ் என்ன உனக்கும் காதுல ஏதாச்சும் ப்ராப்ளமா?

டீ.கா: (பதறிக்கொண்டு) இல்லீங்களே தம்பி..

பார்: அப்புறம் என்ன? இவர் சொன்னது சரியா தப்பான்னு கேட்டனே? பதிலையே காணோம்..

(டீ.கா.. பார்த்திபனின் பின்னால் நின்றுக்கொண்டிருந்த வடிவேலுவின் கைகளில் இருந்த நூறு ரூபாய் நோட்டைப் பார்க்கிறார். அவரையுமறியாமல் புன்னகை விரிய.. பார்த்திபன் அவருடைய பார்வை சென்ற பாதையில் பார்க்கிறார். வடிவேலு சட்டென்று ரூபாய் நோட்டை தனக்கு பின்னால் மறைத்துக்கொண்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்கிறார்.)

பார்: (வடிவேலுவை அப்படியே திருப்பி அவருடைய கையிலிருந்த நூறு ரூபா நோட்டை பிடுங்கிக் கொள்கிறார்) டேய் என்ன லஞ்சமா? சரி.. அதுவும் நல்லதுக்குத்தான்.. காலைலருந்து எந்த லூசு மாட்டுவான் இன்னைக்கி சாப்பாட்டுக்கு புடுங்கலாம்னு பார்த்துக்கிட்டிருந்தேன்.. நீ மாட்டிக்கிட்டே.. ரொம்ப தாங்க்ஸ்.. (பாக்கெட்டில் வைத்துக்கொள்கிறார்) ஆமா, நான் அம்பது ரூபா எடுத்ததுக்கு ஜாமான் வாங்கணும், ஆத்தா வையும்னு ஒப்பாரி வச்சியே.. இப்ப சொளையா நூறு ரூபா நோட்ட எடுத்த நீட்டுற? 

வடி: (கெஞ்சுகிறார்) யோவ், யோவ், வேணாம்யா.. நா முட்டாத்தனமா காச எடுத்து நீட்டிட்டேன்யா.. அத குடுத்துறுய்யா.. அது ஆத்தா காசுய்யா.. நா ஓன் கால்ல வேணும்னாலும் விழறேன்.. குடுத்துறுய்யா.. (காலில் விழ குனிகிறார்)

பார்: (வலது கரத்தை உயர்த்து ஆசீர்வதிக்கிறார்) தீர்க்காயுசு பவ.. கல்யாணம் பண்ணிக்கிட்டு வீணா போ. எழுந்திரு. இன்னொரு தரம் கமல் ஹாசன்னு சொல்லிட்டு திரும்பிப் பாக்காம ஓடு..

வடி: (தரையில் கைகளை ஊன்றி தடுமாறி எழுந்து அழுக்கான கைகளை மறந்து போய் தன் சட்டையில் தேய்க்க.. சட்டை முழுவதும் அழுக்காகிறது. அதைப் பார்த்துவிட்டு மீண்டும் அழுகிறார்) யோவ் இது ஒனக்கே நல்லாருக்கா.. வெள்ளையும் சொள்ளையுமா சந்தைக்கு போயிட்டிருந்தவன கூட்டி வச்சி வம்பு பண்ணி.. ஒன் கால்ல விழ வச்சி இப்படி அலங்கோலமாக்கிட்டியே.. நியாயமாய்யா.. சொல்லுய்யா.. நியாயமா?

பார்: (டீக்கடை பெஞ்சில் சென்று அமர்ந்தவர் கால் மேல் கால் போட்டுக்கொண்டு வடிவேலுவை மேலும் கீழும் பார்க்கிறார். திரும்பி டீக்காரரை பார்க்கிறார்) ஏங்க, ஐயா இப்பத்தான் அம்சமா இருக்காருல்லே.. (வடிவேலுவிடம்) இப்படியே போ.. கரெக்டா கூலிக்காரன் மாதிரியிருக்கே.. சந்தையில எல்லாம் சீப்பா தருவான்.. உங்கையிலயும் நூத்தம்பது ரூபா கம்மியா இருக்கில்லே.. இந்த வேஷம் கரெக்டா இருக்கு.. போ.. டாடா.. (டீக்காரரிடம்) யோவ்.. சூடா ஒரு டீ போடு.. தண்ணி கலக்காத பால்ல போடு.. அதான் சார் நூறு ரூபா குடுத்துருக்காரே.. அப்படியே ரெண்டு பப்ஸ எடு..

வடி: (இரண்டு பேரையும் மாறி மாறி பார்க்கிறார்) யோவ் நீங்க ரெண்டு பேருமே நல்லாருக்க மாட்டீங்க.. சொல்லிட்டேன்.. (அழுக்கான சட்டையை தட்டிவிட்டுக்கொண்டே சைக்கிளை நோக்கி செல்கிறார்)

பார்: (கைதட்டி) டேய் நில்றா.

வடி: (திடுக்கிட்டு நின்று திரும்பி பார்க்கிறார்) இன்னுமென்னய்யா? அதான் கைலருந்ததெல்லாத்தையும் பிடுங்கிட்டே இல்ல.. பொறவென்ன?

பார்: பயந்துராத.. காசெல்லாம் வேணாம்.. ஹா ஹா ஹான்னு ஒரு சிரிப்பு சிரியேன்.. சிரிச்சிக்கிட்டே போனா காசு போனதெல்லாம் மறந்துருமில்லே அதான் கேட்டேன்.. எங்க கொஞ்சம் சிரி..

(வடிவேலு அவர் சொன்னதன் சூட்சுமம் புரியாமல் அழுதுக்கொண்டே ஹா.. ஹா.. ஹா.. என்று சிரிக்க அது கா, கா, கா என்று ஒலிக்கிறது. பார்த்திபனும், டீக்காரரும்.. சற்று முன் பெஞ்சிலிருந்து எழுந்து சென்று ஒதுங்கி நின்று பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் கொல்லென்று சிரிக்க வடிவேலு தன் தவறைப் புரிந்துக்கொண்டு வாயை மூடிக்கொண்டு சைக்கிளில் ஏறிக்கொண்டு ஒரே ஓட்டமாய் சென்று மறைகிறார்.)




முற்றும்.

01 நவம்பர் 2019

பாஜகவின் சரிவு...... நிறைவுப் பகுதி

4 ம் பாகம்

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் என்ற மத்திய அரசின் திட்டங்களால் வரலாறு காணாத அளவுக்கு சரிந்து கிடக்கும் நாட்டின் பொருளாதாரட்தை மீட்டெடுக்கும் பொறுப்பு யாரிடம் உள்ளது?

நிச்சயம் அது மத்திய அரசின் கையில்தான் உள்ளது என்று சமீபத்தில் கைவிரித்துவிட்டது மத்திய ரிசர்வ் வங்கி. எங்களால் வங்கிகளுக்கு நாங்கள் அளிக்கும் கடனுக்கு வசூலிக்கப்படும் ரிப்போ (Repo) வட்டி விகிதத்தை மட்டும்தான் குறைக்க முடியும்  ஆனால் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் வங்கிகளிடம் தான் உள்ளது என்கிறார் மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர். 

ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு ரிப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட போதும் அதை பயன்படுத்தி ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் பெற வங்கிகள் யாரும் முன் வரவில்லை. 

ஏன்?

ஏனெனில் வங்கிகளிடம் உள்ள முதலீட்டையே அவர்களால் முழுவதுமாக பயன்படுத்த வாய்ப்பில்லாத சூழல். இதன் காரணமாக  தங்களிடம் உபரியாக உள்ள தொகையை வங்கிகளுக்கிடையிலான கடன் வழங்கும்  ஓவர்நைட் எனப்படும் ஒரு நாள் வட்டிக்கு கடனாக வழங்கிவருகின்றனர். இதில் அவர்களுக்கு கிடைக்கும் ஆறு விழுக்காடு வட்டி வாடிக்கையாளர்களுடைய  குறைந்த பட்ச வைப்பு நிதிக்கான வட்டியை விடவும் குறைவு. அதாவது ஆறு முதல் ஏழரை விழுக்காட்டிற்கு வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட தொகையை ஆறு அல்லது அதற்கும் குறைவாக பிற வங்கிகளுக்கு  நாள் வட்டிக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்கிற உண்மை நாட்டிலுள்ள எத்தனை பாமரனுக்கு தெரியும்.

ஏன் இந்த அவல நிலை?

வங்கிகளிலிருந்து பெருமளவு கடன் பெறுவது பெரும் தொழில் நிறுவனங்கள்தான். அல்லது பெரும் வர்த்தக நிறுவனங்கள். இவை அனைத்துமே முடங்கிப் போயுள்ள சூழலில் யார் கடன் வாங்கி முதலீடு செய்ய முன்வருவார்கள்?

மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி நாட்டிலுள்ள மொத்த உற்பத்தித் திறனில் (Installed Capacity) 67 முதல் 70 விழுக்காடு வரை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறதாம். அதாவது நாட்டிலுள்ள நிறுவனங்கள் மொத்தமாக ஒரு லட்சம் கோடி மதிப்பிற்கு உற்பத்தி செய்ய முடியும் என்கின்ற சூழலில் அறுபதாயிரம் முதல் எழுபதாயிரம் கோடி வரை மட்டுமே உ/ற்பத்தி செய்யப்படுகின்றனவாம். அதையே சந்தையில் வாங்க ஆளில்லாதபோது மேற்கொண்டு கடன் வாங்கி உற்பத்தியை கூட்டுவதற்கு எந்த தொழிலதிபர் முன்வருவார்?

இதுதான் இன்றைய யதார்த்த நிலை..

இந்த சூழலில்  தான் தொழிலதிபர்களின் வரி விகிதத்தை பெருமளவுக்கு குறைக்க முன்வந்தது மத்திய அரசு. இந்த வரிக்குறைப்பு தொழிலதிபர்களின் மனநிலையை பெரிதளவுக்கு மாற்றுவதாக தெரியவில்லை. உண்மையில் மத்திய அரசுக்கு இதனால் ஏற்படவிருக்கும் ஒரு லட்சம் கோடி வருவாய் இழப்பு  வெறும் விழலுக்கு இறைத்த நீராகத்தான் போய்விட்டது எனலாம். 

இந்த சூழலில் ஒரு நாட்டின் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்று நான் இந்த பதிவின் துவக்கத்தில் கூறியுள்ள  ஆங்கிலேய பொருளாதார மேதை கெய்ன்ஸ் அன்றே கூறியுள்ளார். 

அவர் கூறியுள்ளது இதுதான்.

நாட்டின் பொருளாதாரம் எதனால் மந்த நிலையை அடைந்துள்ளது என்பதை அந்த நாட்டின் அரசு முதலில் ஆராய வேண்டும். ஒரு நாட்டின் உற்பத்தித் திறன் முழுமையாக பயன்படுத்தப்படாத சூழலில் அதை மேம்படுத்த முயற்சிகள் செய்ய வேண்டும். அதாவது அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைகளில் முழுவதுமாக விற்க நுகர்வோர் தேவையை அதிகரிக்க வேண்டும். அதாவது அவர்களுடைய வாங்கும் திறனை அதிகரிக்க வேண்டும். 

எப்படி... ?

நாட்டிலுள்ள தனிநபர் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். 

இதை நாட்டிலுள்ள தனியார் தொழில் நிறுவனங்களால் செய்ய முடியாமல்போகும் சூழலில் (இதுதான் இன்றைய நிலை) மத்திய அரசே தன்னுடைய பொது செலவினங்களை (Public Expenditure) அதிகரிக்க வேண்டும் என்கிறார் கெய்ன்ஸ்.

அதாவது மத்திய, மாநில அரசுகள் தங்களுடைய முதலீட்டை அதிகரிக்க வேண்டும். பெரிய அளவிலான கட்டுமான திட்டங்கள் அதாவது ஸ்மார்ட் சிட்டி போன்ற பெரு நகரங்களை உருவாக்கும் திட்டம், நாட்டிலுள்ள அனைத்து மாநில நகரங்களில் உலகதரம் வாய்ந்த விமான நிலையங்களை உருவாக்கும் திட்டங்கள், சாலை வசதிகளை மேம்படுத்துதல் என அரசுகள் மக்களிடத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும். இதற்கு தேவைப்படும் நிதியை கடனாக பெற வேண்டி வந்தாலும் அதை  செயல்படுத்த ஆட்சியாளர்கள் துணிந்து  முன் வரவேண்டும். ஆங்கிலத்தில் இதை calculated risk என்பார்கள். 

ஆனால் நடப்பது என்ன? மத்திய அரசு நலத் திட்டங்களை செயல்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை. தொழில் நிறுவனங்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் நியாயமாக வழங்க வேண்டிய தொகைகளையே நிதிப்பற்றாக் குறையை (fiscal deficit) காரணம் காட்டி சுமார் ஒரு லட்சம் கோடி அளவுக்கு முடக்கி வைத்திருப்பதை என்னவென்று சொல்வது?

அதாவது ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள ஒரு தொழில் அல்லது வர்த்தக நிறுவனம் தங்களுடைய மூலப் பொருள் கொள்முதலுக்கு செலுத்திய ஜிஎஸ்டி  மற்றும் எக்சைஸ் வரியை அவர்கள் ஏற்றுமதி செய்தவுடன் அரசு சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு திருப்பி வழங்குவது வாடிக்கை.... அதே போல் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் ஒப்பந்ததாரர்களுக்கு அவர்கள் பணியை முடித்த உடனே ஒப்பந்த தொகையை வழங்கிட வேண்டும்.... மக்களிடமிருந்து வசூலித்த கூடுதல் வருமான வரி போன்ற தொகைகளையும் குறைந்த காலக் கெடுவிற்குள் திருப்பி வழங்கிட வேண்டும். ஆனால் இத்தகைய தொகைகளை தங்களுடைய நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி நிறுத்தி வைப்பது எந்த விதத்தில் நியாயம்? பெரு நிறுவனங்களுக்கு அரசு வழங்க வேண்டிய தொகைகளை நிறுத்தி வைப்பதாலோ அல்லது காலங்கடந்து வழங்குவதாலோ அத்தகைய பெரு நிறுவனங்கள் தங்களுக்கு மூலப் பொருட்களை வழங்கும் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய தொகையையும் நிறுத்தவோ தள்ளிப்போடவோத்தானே செய்ய நேரிடும்...? மத்திய மாநில அரசுகளின் இத்தகைய பொறுப்பற்ற செயல்களால் நாட்டில் பணப்புழக்கம் மேலும் மேலும் நலிவடையத்தானே செய்யும்?

இதை ஆங்கிலத்தில் vicious cycle என்பார்கள்... இதை உடனே தடுத்து நிறுத்த மத்திய அரசு தாராள பொருளாதார கொள்கையை கடைபிடிக்க துணிந்து முன் வரவேண்டும்.... நாட்டின் ஒட்டுமொத்த கடன் அளவு சிறிது உயர்ந்தாலும் அதனால் ஏற்படும் பொருளாதார முன்னேற்றம்.... அதன் விளைவாக அரசுகளுக்கு கிடைக்கும் வருவாய் அதிகரிப்பு என நாளடைவில் அரசின் ஒட்டுமொத்த வருவாயும் உயர்ந்து வாங்கிய கடனை அடைக்க ஏதுவாக அமையும்.

RISK என்கிற ஆங்கில வார்த்தைக்கு Rare Instinct to Seek the unKnown என்று கூறுவார்கள். Rare Instinct என்றால் அபூர்வ உள்ளுணர்வு... unknown என்றால் நமக்குத் தெரியாதவை. அதை நோக்கிப் பயணிப்பது தான் RISK. அது வெகு சிலருக்கே சாத்தியப்படும். அதாவது என்ன நடக்கும் என்பது தெரியாமலே இலக்கைத் தேடிச் செல்லும் துணிவு... இலக்கை அடைந்தால் மகிழ்ச்சி... தோல்வியடைந்தால் தொடர்ந்து முயல்வேன் என்கிற பிடிவாதம்....

இது ஒரு காலத்தில் சாதாரண சாக்கு பை விற்றுக் கொண்டிருந்த அம்பானிக்கு இருந்தது. இன்று அவருடைய மகன் முகேஷ் ஆசியாவிலேயே பெரும் தொழிலதிபர்கள் பட்டியலில்... இப்படி அசாத்திய துணிவுடன் சாதித்தவர்கள் நம்முடைய நாட்டில் ஏராளம் பேர் உள்ளனர். ஆட்சியாளர்களில் சொல்ல வேண்டுமென்றால் காலம் சென்ற நரசிம்மராவை சொல்லலாம். நேரு குடும்பத்தைச் சாராத முதல் பிரதமர் என்றாலும் அவர் அன்று நடைமுறைப்படுத்திய தாராள பொருளாதார கொள்கைகள் அப்போது நாடு இருந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வர உதவியது.

இதுதான் இன்றைய ஆட்சியாளர்களுக்கு தேவைப்படும் குணாதிசயம். 

துரதிர்ஷ்டவசமாக அது இப்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. 

நிறைவு.