30 செப்டம்பர் 2019

நடந்தது என்ன... 3


 டாக்டர் கிட்டயும் வக்கீல் கிட்டயும்...



மாதவன் தன் படுக்கையறையில் அமர்ந்து அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் அவன் செல்பேசியை தொலைத்து விட்டு வந்த டிஆர் மாலின் முன்பகுதியில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில்  ரவியும் தன் கையிலிருந்த மாதவனின் செல்பேசியையே பார்த்தவாறு தன் இருசக்கர வாகனத்தில்அமர்ந்திருந்தான்.

அவன் வேறு யாருமில்லை.

'இது என்ன மாடல் சார். சூப்பரா இருக்கே?' என்று மாதவனைக் கேட்டு எரிச்சலடைய வைத்தவனே தான்.

மாதவனைப் போலவே பொருட்களுடன் பில் கவுண்டரை அடைந்து கையிலிருந்த ப்ளாஸ்டிக் கூடையை வைத்துவிட்டு பில் போடும்போதே அதில் வரும் தொகையை பார்த்துக்கொண்டு நின்றவனை, 'சார் ஃபோன்' என்ற குரல் ஈர்த்தது. பில் போடுபவனுக்கு அருகில் பொருட்களை பைகளில் அடுக்கிக்கொண்டிருந்த பணியாள் அவனை நோக்கி செல்பேசி ஒன்றை நீட்டுவதை பார்த்தான்.

'இத போயி சாமான்களோட வச்சிருக்கீங்க? யாராச்சும் எடுத்திருந்தா என்னாவறது? இந்தாங்க பிடிங்க.'

இது அந்தாளோட ஃபோன் ஆச்சே? இது எப்படி நம்ம கூடையில வந்துது?

சுற்று,ம் முற்றும் பார்த்தான். மாதவன் வாசலுக்கு வெளியே தன் இரு சக்கர வாகனத்தில் ஏறி புறப்பட்டுச் செல்வது தெரிந்தது.  அவனை கூப்பிட குரல் எழுப்ப நினைத்தவனை பில் கவுண்டரிலிருந்து வந்த குரல் இடைமறித்தது. சார்... 475/- ஆவுது கார்டா கேஷா?'

'கேஷ்தான்'  சட்டைப் பாக்கெட்டிலிருந்த ஐநூறு  ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான்.

மீதியை வாங்கிக்கொண்டு வெளியில் வந்தவன் அவசர அவசரமாக சாலையில் இறங்கி மாதவன் சென்ற திசையைப் பார்த்தான். மாதவன் சென்ற சுவடே தெரியவில்லை.

'சுத்த லூசா இருப்பான் போலருக்கே.... ஃபோன் காணலைங்கறது கூடவா தெரியாம இருக்கும்?' என்று நினைத்தவாறு தன்னுடைய இரு சக்கர வாகனத்தை நெருங்கி பையை தொங்க விட்டுவிட்டு சீட்டில் அமர்ந்து யோசித்தான்.

'இப்ப என்ன பண்றது?’கடையிலயே திருப்பி குடுத்துறலாமா? ஆனா அவனுங்களே வச்சிக்கிட்டானுங்கன்னா? வேணாம். ஆனா இந்த மாதிரி செல்ஃபோனுக்கு ஆசைப்பட்டுத்தானே நம்ம வேலையே போச்சி?

ஒன்னு பண்லாம்.இத தொறந்து பார்த்து அந்தாளோட விவரம் தெரியுதான்னு பாப்பம். அப்புறம் காண்டாக்ட் பண்ணி உங்க ஃபோன் எங்கிட்டதான் இருக்கு. வந்து வாங்கிக்கிருங்கன்னு சொல்லி குடுத்துருவோம். அதுக்கு முதல்ல இத ரீசார்ஜ் பண்ணணும்..' என்று நினைத்தவாறு  ரீசார்ஜ் செய்ய உதவும் துளையை பார்த்தான். அது சற்று அகண்டு இருந்தது.

இதை ரீ சார்ஜ் செய்வதற்கு அவனுடைய அறையில் இருந்த சார்ஜரால் முடியாது என்று தோன்றியது.  என்ன செய்யலாம்? புதுசா ஒரு சார்ஜர வாங்கணும்னா செலவு ஆகும். பர்சை திறந்து பார்த்தான். அதில் ஒரேயொரு ஐநூறு ரூபாய் தாள் அம்போ என்று நின்றிருந்தது. அவனுடைய வேலை பறிபோனதிலிருந்து அவனுடைய ஒரே வருமானம் செல்பேசிகளை வாங்கி விற்பதிலிருந்து தான் வந்துக்கொண்டிருந்தது. டி.எம்.இ வரை படித்திருந்தும் அவனுக்கு ஏற்ற வேலையாக ஒன்றும் கிடைத்தபாடில்லை. இருந்த ஒரு வேலையையும் அவனுடைய அவசரபுத்தியால் இழந்திருந்தான். அடுத்த வேலை எப்போது கிடைக்குமோ? பேசாமல் இந்த ஃபோனை கைமாத்திட்டா என்ன? ஆனால் இதுவரை அவன் ஸ்மார்ட் ஃபோன் எதையும் வாங்கி விற்றதில்லை.

ஐந்தாயிரம் வரை விலையுள்ள செல்பேசியை தொலைப்பவர்களோ அல்லது திருடு கொடுப்பவர்களோ அநேகமாக காவல் நிலையங்களுக்கு சென்று புகார் கொடுக்க மாட்டார்கள் என்பது இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள ரவி போன்றவர்களுக்கு தெரியும். ஆனால் எட்டாயிரத்துக்கும் அதற்கு மேலும் விலையுள்ள செல்பேசியை வைத்துள்ளவர்களுள் அநேகம் பேர் தங்களுடைய செல்பேசி திருடுபோய்விட்டால் அடுத்துள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுப்பார்கள். ஆனால் அவர்களுள் தங்களுடைய செல்பேசியின் IMIE ஏண்ணை தங்கள் புகாருடன் சமர்ப்பித்தால் மட்டுமே அதை காவல்நிலையத்தில் புகாரையே ஏற்றுக்கொள்வார்கள் என்பதும் ரவிக்கு தெரியும். ஏனெனில் செல்பேசியை திருடுபவர்கள் உடனே அதில் இருக்கும் சிம் கார்டை மாற்றிவிடுவார்கள். அந்த சூழலில் சம்மந்தப்பட்ட செல்பேசியின் IMIE ஏண் தெரிந்தால் மட்டுமே அதை ட்ரேஸ் செய்ய முடியும். ஆகவே அது இல்லையென்றால் காவல்நிலையத்தில் புகாரை வாங்கவே யோசிப்பார்கள். அப்படியே வாங்கினாலும் அதை கிடப்பில் போட்டுவிடுவார்கள்.

ரவி தன் கையில் இருந்த மாதவனின் செல்பேசியை மீண்டும் ஒரு முறை பார்த்தான். இது நிச்சயம் பத்தாயிரத்துக்கு மேல இருக்கும் பார்த்தா புதுசாவும் இருக்கு. அஞ்சாறு மாசத்துக்குள்ளதான் வாங்கியிருப்பான். பாத்தா படிச்சவன் மாதிரியும் இருக்கான். அதனால் இதனோட IMIE நம்பர நிச்சயம் வச்சிருப்பான். ஆனா மணி இப்பவே பத்தாயிருச்சி.  இந்த ராத்திரி நேரத்துல எந்த போலீஸ் ஸ்டேஷன்லயும் கம்ப்ளெய்ண்ட் வாங்க மாட்டாங்க.. அதே சமயம் அவனுக்கு நம்ம ஃபோன எவனோ எடுத்துக்கிட்டான்னு தோனாது. கடையிலதான் விழுந்துருக்கும்னுதான் நினைப்பான்.

ரவி இவ்வாறு யோசித்துக்கொண்டிருக்கும்போதே அவனுக்கு பின்னால் மாலின் முகப்பு விளக்குகள் அணைக்கப்படுவது தெரிந்தது. அவனைத் தவிர பத்து இருபது வாகனங்களே அந்த பார்க்கிங் பகுதியில் நிற்பதை கவனித்தான். அதுவும் கூட அந்த மாலிலுள்ள கடைகளில் பணியாற்றுபவர்களாக இருக்கக் கூடும்.

மீண்டும் அவனுடைய சிந்தனை இந்த செல்பேசியை என்ன செய்யலாம் என்பதை பற்றி எழுந்தது. திருப்பி குடுத்துரலாமா இல்ல வித்து காசாக்கிரலாமா? அவனால் நேரடியாக விற்க முடியாத செல்பேசிகளை அவனுக்கு தெரிந்த தரகரிடம் ஒப்படைத்துவிட்டு கிடைக்கும் பணத்தை வாங்கிக்கொள்வது வழக்கம். பேசாம அப்படி செஞ்சிரலாமா/ இதுக்கு எப்படியும் மூவாயிரம் நாலாயிரம் கிடைக்கும்.... ரெண்டு மூனு வாரம் ஓட்டிரலாம்.

அவனுடைய வேலை எதற்காக பறிபோனது என்பது தெரிய வந்ததுமே அவனுடைய மனைவி ராஜி குழந்தையுடன் அவனை விட்டு பிரிந்து தாய்வீடு சென்றுவிட்டிருந்ததால் அவன் தனியாகத்தான் வீட்டை காலி செய்துவிட்டு நண்பன் ஒருவனுடன் மான்ஷன் ஒன்றில் வசித்துக்கொண்டிருந்தான். அவன் குடியிருந்த வீட்டு உரிமையாளர் அவனுடைய வேலை பறிபோய்விட்டது என்பது தெரிந்ததுமே வீட்டை காலி செய்ய வைத்துவிட்டார். உடனே வீட்டிலிருந்த அனைஹ்து சாமான்களையும் மனைவி வீட்டு விலாசத்துக்கு லாரியில் ஏற்றி அனுப்பிவிட்டான்.

‘சார்... நேரமாச்சுது கிளம்புறீங்களா?’ என்ற குரல் கேட்டு தன்னுடைய நினைவுகளிலிருந்து மீண்ட ரவி தன் அருகில் நின்ற காவலாளியை பார்த்தான்.

‘இதோ கிளம்பிட்டேன்... சாரி’ என்றவாறு வாகனத்தை கிளப்பி சாலையில் இறங்கி சிறிது தூரம் சென்றதும் சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு மீண்டும் என்ன செய்யலாம் என்று யோசித்தான். பிறகு தன்னுடைய செல்பேசியை எடுத்து அவனுக்கு தெரிந்த தரகரை அழைத்து தனக்கு செல்பேசி ஒன்று கிடைத்துள்ள விவரத்தை தெரிவித்துவிட்டு ‘இத பார்த்தா புது ஃபோன் மாதிரிதான் தெரியுது. சாம்சங் ஏ50 மாடல். ஆனா ஆஃபாயிருக்கறதால தொறந்து பாக்க முடியலங்க... ஒங்கள இப்ப வந்து பாக்கலாமா?’ என்றான்.

‘இப்பவா?’

‘ஆமா... எங்கிட்ட ஃபோன் வ்ந்து அரை மணி நேரம் ஆயிருச்சி... அவன் போலீஸ்க்கு போறதுக்குள்ள சிம் கார்ட மாத்திறணும்.... ஆனா சிம்ம எப்படி எடுக்கறதுன்னு தெரியல. அப்புறம் இத சார்ஜ் பண்ணி பாத்தா நல்லதுன்னு நினைக்கேன்.. உங்கக் கிட்டதான் எல்லா ஃபோனுக்கு ஏத்த சார்ஜர் இருக்குமே. அதான் கூப்ட்டேன். இன்னும் அரை மணிக்குள்ள இத தொறந்தாவனும்.. என்ன சொல்றீங்க? ஒங்களால முடியாதுன்னா சொல்லிறுங்க.. நா வேற ஏற்பாடு பண்ணிக்கறேன்.’

உண்மையில் அவனுக்கு வேறு எந்த தரகரையும் பரிச்சயமில்லை.. ஆனாலும் அவன் சொன்ன அந்த பொய் வேலை செய்தது. ‘சரி.. சரி... பத்து நிமிஷத்துல வர முடியுமா?’

அவர் குடியிருந்த வீடு பக்கத்தில்தான் இருந்தது. ‘சரி வரேன். கொஞ்சம் முன்ன பின்ன ஆவலாம்...பரவால்லையா?’

’சரி... அதிக பட்சம் கா மணி நேரம். அப்புறம் நா போயிருவேன்.’

‘அதுக்குள்ள வந்துருவேன்.’ என்று பதிலளித்துவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டு அடுத்த பதினைந்து நிமிடத்தில் செல்ல வேண்டிய இடத்தை அடைந்தான்.

தரகர் அவருடைய அலுவலக அறையின் வாசலில் நிற்பது தெரிந்தது.

‘எங்க ஃபோன குடுங்க பார்க்கலாம்?’

அவன் வாகனத்தை விட்டு இறங்குவதற்குள் அவனிடமிருந்த செல்பேசையை வாங்கிக்கொண்டு கடைக்குள் சென்று இருக்கையில் அமர ரவி அவரைப் பின்தொடர்ந்து சென்று எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

அவரிடமிருந்த சார்ஜர்களில் ஒன்று மாதவனின் செல்பேசிக்கு பொருத்தமான ஒன்றை எடுத்து அதை செல்பேசியில் சொருக ரவி உடனே அவரை தடுத்து நிறுத்தினான். ‘இருங்க... முதல்ல சிம்ம கழட்டிறலாம்.’

தரகார் புன்னகையுடன் அவனை பார்த்தார். ‘பாய்ண்ட கரெக்டா புடிச்சிட்டய்யா.’

தன் மேசை டிராயரை திறந்து அதில் கிடந்த ஊசி போன்ற ஒன்றை எடுத்து செல்பேசியின் பக்கவாட்டிலிருந்து துளையில் இட்டு அழுத்த இரண்டு சிம் கார்டுகளுடன் ஒரு பலகை (Tray) வெளியில் வந்தது.

‘அது சரி... இதான் மேட்டரா? நா என்னடா சிம் கார்ட் ஓட்டையையே காணமேன்னு முழிச்சிக்கிட்டிருந்தேன்.” என்றான் ரவி. ‘எதுக்கும் இந்த ஊசி எங்கிட்டவே இருக்கட்டும்... நாளைக்கி திருப்பி தந்துர்றேன்.
.

அடுத்த ஒரு சில நொடிகளில் இரண்டு சிம் கார்டையும் நீக்கிவிட்டு சார்ஜரை செருகியதும் செல்பேசி உயிர்பெற்று ரவி சற்று முன் கூறியிருந்தது போலவே சாம்சங் ஏ50 என்றது அந்த செல்பேசி.

‘தொறந்து பாக்காமயே எப்படி மாடல கரெக்டா சொன்னீங்க?’ என்றார் தரகர்.

‘அந்த ஆள்தான் சொன்னான்.’ என்றான் ரவி புன்னகையுடன்.

‘என்னது ஓனரே சொன்னானா? உங்கக் கிட்டயா? எப்ப?’

தரகரின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலாக தன்னிடன் அந்த செல்பேசி வந்து சேர்ந்த விவரத்தை சுருக்கமாக கூறினான் ரவி.

அவன் சொல்லி முடிப்பதற்குள் தரகரின் முகம் முற்றிலுமாக மாறிப்போனது.

‘இது வேலைக்கு ஆவாது ரவி...’

ரவி அவருடைய முகத்திலிருந்த கலவரத்தின் காரணம் தெரியாமல் குழம்பினான். ‘ஏன் எதுக்கு அப்படி சொல்றீங்க?’

‘இங்க பாருங்க ரவி... இந்த தொழில்ல போலீஸ்ல மாட்டாத வரைக்கும்தான் நாம் சேஃப். ஒருதரம் மாட்டிட்டோம்னு வைங்க... அதுக்கப்புறம் நம்ம ஏரியாவுல எங்க செல்ஃபோன் காணாம போனாலும் நம்ம வீட்டுக் கதவத்தான் போலீஸ் முதல்ல தட்டும்... இதுவரைக்கும் நா போலீஸ்ல மாட்டாம தப்பிச்சிக்கிட்டிருக்கேன்... அத கெடுத்துக்க நா விரும்பலைங்க...’

‘புரியலீங்க....’

‘இது ஒங்க கைக்கு வந்தது ஒரு பெரிய மால்ல... அங்க முக்குக்கு முக்கு கேமார இருக்கும். இந்த ஃபோனோட ஓனர், இத ஒங்க கூடையிலருந்து உங்ககிட்ட இத எடுத்து குடுத்த அந்த கடை பையன் ரெண்டு பேரும் உங்கள பாத்துருக்காங்க...அதனால கம்ப்ளெய்ண்ட் கிடைச்சவுடனே போலீஸ் அந்த மாலுக்கு போயி விசாரிச்சா நீங்க ஈசியா மாட்டிப்பீங்க.. அதனாலதான் சொல்றேன் இது வேலைக்கு ஆவாது... வேணும்னா கொஞ்ச நேரம் ஒக்காந்து சார்ஜ் பண்ணிக்கிட்டு போயிருங்க.... இத விக்கிற வேலை மட்டும் ஆவாது.... இல்லன்னா நீங்களே எவனாச்சும் இளிச்சவாயன் கிடைச்சா வந்த விலைக்கி தள்ளி விட்ருங்க...’

அவர் கூறிய வார்த்தைகளிலிருந்த உண்மை புரிந்ததும் ரவியும் ஒரு நிமிடம் கலவரமடைந்தான்.

எதற்கும் இங்கேயே ஒக்காந்து சார்ஜ் பண்ணிக்கிட்டு போயிருவோம்.. அப்புறமா தொறந்து பாத்துட்டு என்ன செய்லாம்னு டிசைட் பண்ணிக்கலாம் என்று நினைத்தவாறு எதிரில் அமர்ந்திருந்த தரகரை பார்த்தான். ‘நீங்க சொல்றதும் சரிதான். நா ஒன்னு பண்றேன். இதுக்குள்ள அந்தாளோட வீட்டு செல்ஃபோன் நம்பர் ஏதாச்சும் இருந்தா கூப்ட்டு சொல்றேன். இல்லன்னா மால் மேனேஜர் கிட்ட ஹேண்டோவர் பண்ணிடறேன்.. எதுக்கு வீணா வம்பு?’

‘சரி.... அப்படியே செஞ்சிருங்க. இல்லன்னா நீங்க மாட்டுறதும் இல்லாம இங்க வந்துதான் ஃபோன சார்ஜ் பண்ணீங்கன்னு போலீசுக்கு தெரிய வந்தா நானும் மாட்டிக்குவேன்.’ என்றவாறு எதிர் சுவரிலிருந்த கடிகாரத்தை பார்த்தார். ‘மணி இப்பவே பதினொன்னு ஆயிருச்சி... வீட்ல தேடுவாங்க... இந்த சார்ஜர வேணும்னா கொண்டு போய்ட்டு நாளைக்கி கொண்டு வாங்களேன்.’

அது சரிவராது என்று நினைத்தான் ரவி. இதை எடுத்துக்கொண்டு போவதால் பயன் ஏதும் இல்லை. ஏனெனில் அவன் தங்கியிருந்த மேன்ஷன் அறைகளில் ப்ளக் பாய்ண்ட் எதுவும் இருந்ததாக நினைவில் இல்லை. அதுவுமல்லாமல் அவனுடன் அறையில் குடியிருப்பவர்களும் இதை பற்றி கேட்டால் தேவையில்லாத தொல்லை ஏற்படும்... ‘இல்ல சார்... இன்னும் பத்து பதினஞ்சி நிமிஷம்.... பாட்டரி அம்பது பர்சண்ட் வந்தா போறும். காலையில அவங்கக்கிட்ட ஒப்படைக்கற வரைக்கும் சார்ஜ் நிக்கணுமே... அதான்....’

அவன் குரலில் இருந்த கெஞ்சல் தரக்ரை மீண்டும் இருக்கையில் அமர்த்தியது.

அடுத்த பதினைந்து நிமிடங்களில் செல்பேசியின் பாட்டரி ஐம்பது விழுக்காடை அடைய ரவி செல்பேசியை எடுத்துக்கொண்டு தரகரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான். அவனைத் தொடர்ந்து சாலையில் இறங்கிய தரகர், ‘இங்க பாருங்க ரவி... நீங்க இங்க வரலை... என்னெ பாக்கலை... சரிங்களா?’ என்றார்.

‘சரிங்க... கலவலைப்படாதீங்க.’

நாளை தொடரும்...

28 செப்டம்பர் 2019

நடந்தது என்ன - 2

ஆத்திரக்காரனுக்கு......

ரவியின் மனைவி ராஜி அவனிடமிருந்து செல்பேசியை பறித்துக்கொண்டு ஹாலில் அமர்ந்து சற்று முன் வந்த செல்பேசி எண்ணை டயல் செய்தாள்.

எதிர் முனையில் பெண் குரல் ஒன்று கேட்டதும், ‘மேடம், உங்க வீட்டுக்காரர் கடையில விட்டுட்டு போன ஃபோன் எங்கிட்டதான் இருக்கு. நாளைக்கி எங்க வந்து குடுக்கணும்னு சொல்லுங்க.’ என்றாள்.

எதிர்முனையில் சிறிது நேரம் பதில் வரவில்லை. அந்த பெண் கணவனுடன் பேசும் ஒலி மட்டும் லேசாக கேட்டது. 

‘ஹ்லோ..’ என்றாள் தயக்கத்துடன்.

‘சரிங்க. காலையில அந்த மாலுக்கே வர்றேன்னு சொல்றார். கூப்ட்டதுக்கு ரொம்ப தாங்க்ஸ்ங்க.’

‘பரவால்லைங்க.’ என்று அதற்கு மேல் பேச மனமில்லை இணைப்பை துண்டித்துவிட்டு செல்பேசியை சமையலறைக்குள் மறைத்து வைத்தாள்.

*****

’ஏங்க எங்கிட்ட என்ன சொன்னீங்க? செல்ஃபோன் டிஸ்ப்ளே சரியில்லை. ஃப்ரெண்டுக்கிட்ட குடுத்துருக்கேன்.. ரெண்டு நாள்ல வந்துரும்.... ஏங்க எப்படிங்க உங்களால மட்டும் இப்படி கோர்வையா டூப் அடிக்க முடியுது?’ என்றவாறு மாதவனை கடுப்புடன் பார்த்தாள் ஷாமிலி.’ஃபோன் தொலைஞ்சிருச்சின்னு சொன்னா ஒங்கள கடிச்சா தின்னுருவேன்?’

’உங்கிட்ட சொன்னா பேசியே கொன்னுருவியேன்னுதான் சொல்லலை...’ என்று முனுமுனுத்தவன் இவளிடம் என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று யோசித்தவாறு அமர்ந்திருந்தான். 

‘என்ன பதிலையே காணம்?’

’இல்லடி.. எதுக்கு வீணா ஒன்ன டென்ஷன் படுத்தணும்னுதான்....’

‘சரி... ஆனா ஒங்க ஃபோன் ஆஃபாயிருச்ச்ன்னு சொன்னீங்க? இப்ப எப்படி அதுக்கு உயிர் வந்துது?’

அதானே என்று நினைத்தான் மாதவன். செல்ஃபோன் ஆஃபாயிருச்சின்னுதான நாம ட்ராலியில போட்டோம்? இது எப்படி அந்த லேடிகிட்ட போச்சி?

‘தெரியலையே.. ஒருவேளை நாம யார்ங்கற டீட்டெய்ல்ஸ் தெரிஞ்சிக்கறதுக்காக சார்ஜ் பண்ணியிருப்பாங்களோ என்னவோ?’ என்று பதிலளித்த மாதவ்ன் சட்டென்று நினைவுக்கு வந்தவனாய் ‘அப்படீன்னா கூட ஃபோன் லாக்காகியிருக்குமே எப்படி திறந்தாங்க?’ என்றான் குழப்பத்துடன். ‘எனக்கென்னவோ இது அந்த லேடியோட வீட்லருக்கற ஆம்பள பண்ண வேலையாத்தான் இருக்கும்...’

ஷாமிலிக்கும் குழப்பமாகத்தான் இருந்தது, 

மாதவனும் யோசனையில் ஆழ்ந்தான். ஒருவேளை இந்த லேடியோட ஹஸ்பெண்ட்தான் அந்த ஆறடி ஆளா இருப்பானோ? அவந்தான் நம்ம பக்கத்துல க்ளோஸா நின்னுக்கிட்டிருந்தான். அவந்தான் நாம பின்ன (PIN) அடிச்சத பாத்துருப்பான்....... கரெக்ட் இது அவன் வேலையாத்தான் இருக்கும்... ட்ராலியிலருந்து விழுந்த ஃபோன எடுத்துருப்பான்.... அவன் பார்வையே சரியில்லை....

அவனுடைய சந்தேகத்தை அப்படியே மனைவியிடம் சொல்ல அது வேறொரு பிரச்சினையை கிளப்பியது.

‘ஒங்களுக்கு விவஸ்தையே கிடையாதுங்க.’ என்றாள் ஷாமிலி எரிச்சலுடன்...

‘ஆரம்பிச்சிட்டாடா.... நானே வாய குடுத்துட்டு மாட்டிக்கறனே... இதுக்குத்தான் இவ கிட்ட சொல்ல வேணாம்னு பாத்தேன்... எல்லாம் அந்த ராஸ்கலால வந்த வினை.... காலையில முதல் வேலையா ஸ்டேஷனுக்கு போயி ரெண்டு கான்ஸ்டபிள்ங்கள கூட்டிக்கிட்டு போயி அவன புடிச்சி குடுக்கணும்... முட்டிக்கி முட்டி தட்ட வச்சாத்தான் நம்ம ஆத்திரம் அடங்கும்....அவனா ஃபோன் பண்றதுக்கு பயந்துக்கிட்டு பொண்டாட்டிக்கிட்ட குடுத்து ஃபோன் பண்ண வைக்கிறான்... நாளைக்கி இருக்கு அவனுக்கு....

‘எந்த எடத்துடல எத எப்படி செய்யிறதுன்னு.... ஒரு..... புத்தி கெட்ட மனுஷன்.... இதுல நா டென்ஷனாவேன்னு எங்கிட்டருந்து மறைச்சாராம்...’ ஷாமிலி தொடர்ந்து புலம்ப மாதவன் காது கேளாதவன் போல் அமர்ந்திருந்தான்...

சிறிது நேரம் புலம்பி நிறுத்திய ஷாமிலி..’காலையில முதல் வேலையா போயி அத வாங்கிருங்க. ‘ என்றாள்.

‘சரி.. அத நா பாத்துக்கறேன்... நீ போய் படு... மணி ஒன்னாகப் போவுது...’

‘நாளைக்கி அவங்க கிட்ட எதுவும் ப்ராப்ளம் பண்ணாதீங்க...’ ஷாமிலி குழந்தைகள் படுத்திருந்த அறைக்குள் சென்று கதவை சாத்தினாள்.

’அத எடுத்தது நீயா? இருடே நாளைக்கி இருக்கு ஒனக்கு,,,,’ என்று அந்த ஆறடி உருவத்தை மனதுக்குள் கறுவியவாறு படுக்கையறைக்குள் நுழைந்து ஏசியை ஆன் செய்தான். 

உறக்கம் வந்தால்தானே.... அடுத்த நாள் காலை எழுந்ததும் என்ன செய்ய வேண்டும் என்பதை மனதுக்கு திட்டமிட்டவாறே படுக்கையில் உருண்டுக்கொண்டிருந்த மாதவன் தன்னையும்றியாமல் உறங்கிப்போனான்.

*****

அடுத்த நாள் காலையில் எழுந்ததும் மாதவன் தன் நண்பனை அழைத்து தான் அன்று அலுவலகத்திற்கு விடுப்பு என்று கூறிவிடுமாறு கேட்டுக்கொண்டு முந்தைய நாள் இரவு தீர்மானித்தபடி குளித்து உடை மாற்றிக்கொண்டு புறப்பட்டான். பத்து மணிக்கி முன்னால போயிரணும்.... இன்ஸ்பெக்டர் வரலைன்னாலும் எஸ்.ஐ யாராச்சும் இருப்பாங்களே....

அவன் அறையிலிருந்து வெளியில் வருவதற்கென்றே காத்திருந்தவள் போல்,’நீங்க அந்த மால் வாசல்லருக்கற காஃபி ஸ்டால்கிட்ட நிக்கணுமாம். அந்த லேடியோட ஹஸ்பெண்ட் வந்து குடுப்பாராம். அவர் ஒங்கள் நேத்து பாத்துருக்கறதால அடையாளம் கண்டுபிடிச்சிருவார்னு சொன்னாங்க.’ என்றாள் ஷாமிலி.

ஆக அவந்தான் ஃபோன எடுத்துருக்கான்.....வச்சிக்கறேன்... நேரா என்னெ கூப்டுருக்கலாமில்ல? தேவையில்லாம இவள கூப்ட்டு...

‘என்ன யோசிக்கிறீங்க? அவர் கிட்ட தகராறு பண்லாம்னுதான?’

‘இல்லடி... அதான் நேத்தே சொல்லிட்டியே... தகராறு பண்ணி என்ன ஆவப்போவுது? ஆனா...’

ஷாமிலி எரிந்து விழுந்தாள்.’ என்ன ஆனான்னு இழுக்கறீங்க?’

‘இல்ல தேவையில்லாமல் ஒனக்கு ஃபோன் பண்ணி......’

‘ஓ... இப்ப எனக்கு தெரிஞ்சி போச்சேன்னுதான் ஒங்க கவலை, இல்ல? ஏங்க இப்படி இருக்கீங்க? அவங்க எப்படி ஒங்க ஃபோன்ல கூப்ட முடியும்? அதுவே அவங்கக்கிட்டதான் இருக்கு. நீங்க என் ஃபோன்லருந்து கூப்ட்டீங்க. அதனால அதே ஃபோனுக்குத்தான் கூப்டுவாங்க? என் ஃபோன் அடிச்ச சத்தம் கேட்டதால நா ஓடி வந்து ஆன்ஸர் பண்ணனேன்... நீங்க அந்த நேரம் பாத்து பாத்ரூம் போனீங்க.. அதுவும் நல்லதுக்குத்தான் இல்லனா எனக்கு இந்த விஷயமே தெரிஞ்சிருக்காதே...’

அவள் கூறுவதும்தான் சரிதான் என்று நினைத்த மாதவன் பதிலளிக்காமல்... ‘டிஃபன் ரெடியால் இல்லன்னா... நா வெளிய பாத்துக்கறேன்...’ என்றவாறு பேச்சை திசை மாற்றினான்.

‘ஆமா... லேட்டா தூங்கனதால... காலையில எழுந்து டிஃபன் பண்ண முடியல.... மதியானத்துக்கும் கேண்டீன்லயே சாப்டுக்கங்க... ஃபோன் கிடைச்சதும். எனக்கு ஃபோன் பண்ணுங்க...சரியா?’ என்றவாறு ஷாமிலி வாசலை நோக்கி நகர மாதவன் சோபாவில் கிடந்த லேப்டாப் பையையும் பைக் சாவியையும்  எடுத்துக்கொண்டு அவள் பின்னால் சென்றான்.

*****

‘மறுபடியும், மறுபடியும் சொல்றேன்னு நினைக்காதீங்க.... அந்த ஆள பாத்ததும் ஜாஸ்தியா பேசிக்கிட்டு நிக்காம ஃபோன குடுத்துட்டு வந்துருங்க... இடையில புத்தி கெட்டு போயி எதாச்சும் தில்லு முல்லு பண்ணீங்க... அப்புறம் என்னெ மறந்துற வேண்டியதுதான்...சொல்லிட்டேன்...’என்ற ராஜியை பார்த்தான் ரவி...

அதான் கைக்கு எட்டுனத வாய்க்கு எட்டாம பண்ணிட்டியே..... இப்படி போயிருவேன் போயிருவேன்னு சொல்லியே என்ன இன்னும் எத்தன நாளைக்கித்தான் ப்ளாக்மெயில் பண்ணுவியோ தெரியல... இன்னும் ஒரு அரை மணி நேரம் கழிச்சி வந்திருந்தேன்னா ஒரு அம்பது ரூபாய என் அக்கவுண்டுக்கு மாத்திக்கிட்டிருப்பேன்.... 

‘என்ன பதிலையே காணம்?’ 

நினைவுகள் கலைக்கப்பட்ட ரவி திடுக்கிட்டு தன் மனைவியை பார்த்தான். ‘இல்ல ஒன்னுமில்ல... ஆனா....’

‘என்ன ஆணா....?’

‘அவன் போலீஸ் கீலிஸ்னு போயிருந்தா?’

ராஜியும் சிந்தனையில் ஆழ்ந்தாள்....’ஆமா நீங்க சொல்றதும் சரிதான்......’

‘நா வேணா நம்ம பாஸ்கர கூப்ட்டு விஷயத்த சொல்லவா?’

‘யாரு... லா டிகிரிய முடிக்காமயே லாயர்னு சொல்லிக்கிட்டு திரியற அந்த ஆளையா? வேற வினையே வேணாம்...’

‘இல்லம்மா.... அவன் வேலை பாக்கற லாயர் ரொம்ப சீனியர் தெரியுமா? அவர் கிட்ட வேலை செஞ்ச அவன் கிட்டத்தட்ட முழு லாயராய்ட்டான்... போலீஸ் ஸ்டேஷன்ல எல்லாரையும் தெரிஞ்சி வச்சிருக்கான்...அவனோட போனா அந்த ஆள் ஏதாச்சும் வில்லங்கம் பண்ணாலும் சமாளிச்சிறலாம்...’

‘சரி... என்னவோ செய்ங்க.... நீங்களா இழுத்து வச்சிருக்கற வில்லங்கத்த விடவா அந்தாளு வில்லங்கம் பண்னப் போறான்? சரி போலீஸ்க்கு போய்ட்டார்னே வச்சிக்குவம்.... நீ  எதுக்குய்யா கீழ கிடந்த ஃபோன எடுத்ததுமில்லாம அத திறந்து பாத்தேன்னு போலீஸ் கேட்டா என்ன பதில் சொல்வீங்க?”

’அத பாஸ்கர் கிட்ட விட்டுறலாம்... அவன் பாத்துக்குவான்... ஒருவேளை அந்த ஸ்டேஷன்ல கூட யாரையாச்சும் இவனுக்கு தெரிஞ்சிருக்கலாம்...’

‘சரி....பாத்து சூதானமா நடந்துக்குங்க.... லாயர்னு ஒருத்தர் கூட இருக்கற தைரியத்துல எதையாச்சும் பேசி விஷயத்த பெரிசாக்கிறாதீங்க.... என்ன நடந்தாலும் எங்கிட்டருந்து மறைக்காதீங்க... உடனே ஃபோன் பண்ணுங்க... என்ன நா சொல்றது கேக்குதா?

‘கேக்குது கேக்குது.... ஃபோன குடுத்ததும் ஒனக்கு ஃபோன் பண்றேன்...’ 

விட்டால் போதும் என்பதுபோல் உடனே அங்கிருந்து புறப்பட்டான்..... வழியில் தன் நண்பன் பாஸ்கரை அழைத்து விஷயத்தை கூறினான். 

‘சர்றா மச்சான்... டீ ஆர் மால் தான? நீ போய் சேர்றதுக்குள்ள நா அங்க இருப்பேன். நா வந்த பிறகு அந்தாள் கிட்ட பேசிக்கலாம்.. நீயா போய் மாட்டிக்காத..’

‘சரிடா.. வச்சிர்றேன்..’ இணைப்பை துண்டித்துவிட்டு பைக்கை டிஆர் மால் இருந்த திசையில் செலுத்தினான்.

காலை நேர வாகன நெரிசல் அவன் மாலை அடைந்த போது பத்து மணியை கடந்திருந்தது. மாலை நெருங்கியதும் வாசலை அடுத்திருந்த காஃபி ஸ்டாலை பார்த்தான். அங்கு யாரும் காத்திருக்கவில்லை.... ‘இன்னும் வரல போலருக்கு.... அவனும் ட்ராஃபிக்ல மாட்டியிருப்பான்.’

‘என்னடா நா நெனச்சதுக்கு முன்னாலயே வந்துட்டே’ என்றவாறு தன்னை நோக்கி வந்த பாஸ்கரை கவனித்தான். ‘மச்சான் இந்த ட்ரஸ்ல அசல் லாயர் மாதிரியே இருக்கேடா...’ என்றான் புன்னகையுடன்.

‘டேய்.... உண்மையிலயே நா லாயர்தாண்டா....’ என்றான் பாஸ்கர் புன்னகையுடன்.... ‘அட்லீஸ்ட் அப்படித்தான் எல்லாரையும் நம்ப வச்சிக்கிட்டிருக்கேன்.... நீதான் நம்ப மாட்டேங்கற..’

‘இல்லடா மச்சான்.....சும்மா தமாஷ்....’

‘சரி... அந்தாள் வந்துட்டானா? பாத்தியா?’

மீண்டும் ஒருமுறை காஃபி ஸ்டால் இருந்த திசையில் பார்த்தான்... ’இல்ல மச்சான். எங்கயாவது ட்ராஃபிக்ல சிக்கிக்கிட்டிருப்பான்.’

****

ஆனால் உண்மையில் மாதவன் வாகன நெரிசல் எதிலும் சிக்கவில்லை.. .

கடந்த ஒரு மணி நேரமாக காவல் நிலையத்தில் அங்கிருந்த உதவி ஆய்வாளர் கோபாலின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தான்.

‘ஏங்க பாத்தா படிச்ச ஆள் மாதிரி இருக்கீங்க. இப்படியா எல்லாத்தையும் ஃபோன்லயா சேவ் பண்ணி வப்பீங்க? இது எப்படி இருக்குன்னா வீட்ட பூட்டிட்டு சாவிய பூட்டு வாயிலயே வச்சிட்டு போற மாதிரி இருக்கு..’ என்று கிண்டலடித்த கோபால் ‘சரி இப்ப நாங்க என்ன பண்ணணும்கறீங்க?’ என்று வினவினார்.

‘இல்ல சார்... அந்த ஆள் என் பேங்க் அக்கவுண்ட்லருந்து ஏதாச்சும் எடுத்துருப்பானோன்னு ஒரு டவுட்...’

‘அத எப்படி அவ்வள்வு ஷ்யூரா சொல்றீங்க?’

‘காலையில பேங்க் சைட்ல போயி செக் பண்ணி பாத்துட்டுதான் சார் வரேன்... முழுசா இருபத்தையாயிரம் குறையறா மாதிரி தெரியுது..’ தான் சொல்வதில் துளியும் உண்மையில்லை என்பது தெரிந்தே சொன்னான் மாதவன். அவனுக்கு ஃபோனை எடுத்தவன் தன்னுடைய மனைவியிடம் தன்னை போட்டு கொடுத்துவிட்டானே என்கிற ஆத்திரம். 

‘மாதிரி தெரியுதுன்னா?’ கோபாலின் குரலில் தெரிவது கோபமா அல்லது கிண்டலா என்பது தெரியாமல் குழம்பினான் மாதவன்.

‘புரியல சார்..’ என்றான் தயக்கத்துடன்.

‘இல்ல... அக்கவுண்ட்ல பேலன்ஸ் குறையறா மாதிரி தெரியுதுன்னீங்களே அத கேட்டேன்.... மாதிரி தெரியுதா இல்ல உண்மையிலேயே குறைஞ்சி இருக்குதா? தெளிவா சொல்லுங்க.’

தான் சொல்வதில் இவருக்கு நம்பிக்கை இல்லை போலருக்கே.. நாம சொல்றது பொய்னு இவருக்கு தெரிஞ்சிருக்குமோ? அவசரப் பட்டுட்டமோ? இங்க வந்தே இருக்க வேணாம் போலருக்கே? நம்ம ஏரியா ஸ்டேஷனா இருந்தா நம்ம நலச் சங்க ஆளுங்கள யாரையாச்சும் கூட்டிக்கிட்டு போயிருக்கலாம். ;இல்ல சார் ஃபோன எங்க தொலைச்சீங்களோ அந்த ஏரியா ஸ்டேஷன்லதான் புகார் குடுக்கணும்.’ என்று தன்னை காலையில் அவனுடைய பகுதிகுட்பட்ட காவல் நிலையத்தில் தெரிவித்ததால் வேறு வழியின்றி இந்த நிலையத்திற்கு வந்தான்...

உதவி ஆய்வாளர் கோபால் கேட்ட கேள்விக்கு எப்படி பதிலளிப்பது என்று குழம்பியவாறு மாதவன் சில நொடிகள் அமர்ந்திருந்தான்.

‘இங்க பாருங்க சார்.. எங்களுக்கு நிறைய வேலை இருக்கு...’ என்று எரிந்து விழுந்தார் கோபால். ‘நீங்க தயங்கறதுலருந்தே நீங்க சொல்றது உண்மையில்லேன்னு தெரியுது. உங்க ஃபோன் போச்சேங்கற கவலைய விட அந்தாளு நம்ம ஃபோன தொறந்து பாத்துட்டானேங்கற ஆத்திரம் தான் ஜாஸ்தியா இருக்கறா மாதிரி தெரியுது.’

இந்த போலீஸ்காரங்களுக்கு இதெல்லாம் எப்படித்தான் தெரியுதோ தெரியல. நம்ம மனசுலருக்கறத அப்படியே சொல்றான் பார்.... 

‘இன்னொன்னையும் சொல்லிக்கறேன். False complaint குடுக்கறது எவ்வளவு பெரிய தப்புன்னு தெரியுமா? இதுக்குன்னே ஐபிசில ஒரு செக்‌ஷன் இருக்கு. செக்‌ஷண்ட் 182ல  இதுக்கு என்ன தண்டனைன்னு சொல்லியிருக்கு தெரியுமா? குறைந்த பட்சம் ஆறு மாசம் ப்ரிசன். அதனால யோசிச்சி சொல்லுங்க. உண்மையிலடே அந்தாளு உங்க அக்கவுண்ட்லருந்து பணத்த கையாடல் பண்ணியிருக்காரா இல்லையா?’ உதவி ஆய்வாளரின் குரல் அதிகார தோரணையில் உயர்ந்துக்கொண்டே போக உண்மையிலேயே அரண்டு போனான் மாதவன்.

அவனையுமறியாமல் இருக்கையில் இருந்து எழுந்து நின்றான்.

‘என்ன எழுந்துட்டீங்க? உக்காருங்க.’ என்றார் உதவி ஆய்வாளர் கோபத்துடன். ‘நீங்க பாட்டுங்க வருவீங்க... பொய்யா ஒரு புகார் குடுப்பீங்க... அதுக்கு நாங்க FIR போட்டு விசாரணை பண்ணிக்கிட்டு கிடக்கணும்...அப்படித்தான?’

செய்வதறியாது தவித்தான் மாதவன்... ‘இல்ல சார்... ஃபோன் போன பதட்டத்துல.....’ அவனுடைய குரலில் இருந்த நடுக்கத்தை கவனித்த உதவி ஆய்வாளர் நாமளும் அதிகமா கோச்சிக்கிட்டமோ என்று நினைத்தார். .

அந்த நேரம் பார்த்து மாதவனின் கையிலிருந்து அவனுடைய மனைவியின் செல்பேசி ஒலிக்கவே, ‘எடுத்து யார்னு பாருங்க.’ என்றார் உதவி ஆய்வாளர். ‘அந்தாளா இருந்தா எங்கிட்ட குடுங்க.’

‘என்ன சார்... பத்து மணிக்கே வரேன்னீங்க?’ என்ற குரல் கேட்டதும் ‘அந்தாள்தான் சார்’ என்றவாறே உதவி ஆய்வாளரிடம் நீட்டினான்.

‘நீங்க எங்க இருக்கீங்க?’ என்றார் அதிகாரத்துடன்.

‘நீ யார்யா?’ என்று பதில் வந்ததும்.

‘டேய்....  நா நீங்க யார்னு மரியாதையா கேட்டா பதிலுக்கு நீ யார்யான்னு என்னையே கேக்கறியா? நா இந்த ஏரியா எஸ்.ஐ.. இன்னும் பத்து நிமிஷத்துல ஃபோனோட இங்க வரல....’

எதிர் முனையில் யாரோ இருவர் பேசிக்கொள்வது கேட்டது... அதை பொருட்படுத்தாமல் இனைப்பை துண்டித்துவிட்டு மாதவனிடம் செல்பேசியை திருப்பி அளித்தார் உதவி ஆய்வாளர். ‘பதினஞ்சி நிமிஷம் பார்ப்போம். இல்லன்னா கான்ஸ்டபிள அனுப்பி தேட வைப்போம். நீங்க போயி வாசல்ல வெய்ட் பண்ணுங்க. அந்த ஆள வாசல்ல பாத்தா ஒன்னும் பேசாதீங்க. நா விசாரிச்சி முடிச்சிட்டு ஒங்கள் கூப்டறப்போ மட்டும் வந்தா போதும்... வேணும்னா ஒரு டீ அடிச்சிட்டு வாங்க. என்ன?’

மாதவனுக்கும் பசி வயிற்றை கிள்ளியது. காலையில் டிஃபன் ஒன்றும் சாப்பிடாததும் உதவி ஆய்வாளரின் கிடுக்கிப்பிடி விசாரணையாலும் ஆடிப்போயிருந்த அவனுக்கு எதையாவது சாப்பிட்டால்தான் தெம்பு வரும் என்று தோன்றியது...

‘தாங்ஸ் சார்..’ என்றவாறு வாசலை நோக்கி நடந்தான். 

****

ரவி இணைப்பு துண்டிக்கப்பட்ட செல்பேசியையே பார்த்தவாறு நின்றிருந்தான். நாம நினைச்சது மாதிரியேத்தான் நடந்துருக்கு. நல்ல வேளையா பாஸ்கர வரச்சொன்னோம் என்று நினைத்தவாறு தன் அருகில் நின்றிருந்த தன்னுடைய நண்பனைப் பார்த்தான்.

‘என்னடா பேயறைஞ்சா மாதிரி ஆய்ட்டே?’ என்றான் பாஸ்கர். ‘யார் ஃபோன்ல?’

‘இந்த ஏரியா எஸ்.ஐடா... அவன் போலீஸ் கம்ப்ளெய்ண்ட் குடுத்துட்டான் போலருக்கு. இன்னும் பத்து நிமிஷத்துல ஸ்டேஷன்ல இருக்கணும்னார்.... அதான் ஒரு செக்கண்ட் என்ன பண்ரதுன்னு தெரியாம.....’

பாஸ்கர் சிரித்தான். ’ஓ இதான் விஷயமா? கவலைய விடு. இந்த ஏரியா எஸ்.ஐ நமக்கு தெரிஞ்சவர்தான்...கொஞ்சம் அடாவடியா பேசுவார்... ஆனா கை சுத்தம்.. மத்த ஆளுங்க மாதிரி இல்ல.. வா பாத்துக்கலாம். ஒன்னோட வண்டியிலயே போயிரலாம். சாவிய குடு. என் வண்டிய வந்து எடுத்துக்கலாம்.’

இருவரும் அடுத்த ஐந்தாவது நிமிடம் காவல் நிலையத்தை அடைந்தனர். 

பாஸ்கரை பார்த்ததும் ஏளனத்துடன் புன்னகை செய்தார் உதவி ஆய்வாளர். ‘என்னய்யா பாஸ்கர், எங்க இவ்வளவு தூரம்? இவர் யாரு ஒன் ஃப்ரெண்டா?’

‘ஆமா சார்...கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஃபோன்ல பத்து நிமிஷத்துல இங்க இருக்கணும்னு மிரட்டுனீங்களே அவர் இவர்தான்.’ என்று பதிலளித்த பாஸ்கர் ரவியின் கையிலிருந்த செல்பேசியை வாங்கி அவரிடம் நீட்டினான். ‘இதான் உங்க கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணவரோட செல்ஃபோன்.’

அதை வாங்கி மேஎசையில் வைத்துவிட்டு ரவியை பார்த்தார் உதவி ஆய்வாளர். ‘இது எப்படிங்க உங்கக்கிட்ட வந்தது? எல்லாத்தையும் மறைக்காமல் சொன்னீங்கன்னா நல்லது.’

ரவி பதில் பேசாமல் தன்னருகில் நின்றிருந்த பாஸ்கரை பார்த்தான். 

‘சார் அது வந்து...’ என்று பாஸ்கர் இழுக்க... உதவி ஆய்வாளர் தலையை வேண்டாம் என்பதுபோல் அசைத்தார். ‘பாஸ்கர் நீங்க வெளியில இருங்க பளீஸ்... இவர நாங்க விசாரிக்கத்தான் கூப்ட்டோம்... இன்னும் அரெஸ்ட் பண்ணல.... போலீஸ் விசாரணையில குறுக்கிட கூடாதுங்கறது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கேன்.’

அவர் சொல்வதில் இருந்த நியாயத்தை உணர்ந்த பாஸ்கர் ரவியிடம், ‘டேய் பயத்துல எதையாவது உளறி வைக்காத... கேக்கற கேள்விக்கு மட்டும் பதில சொல்லு. பொய்யா மட்டும் எதையும் சொல்லாத. அப்புறம் என்ன நடந்தாலும் நா பாத்துக்கறேன். சரியா? நா இங்கதான் இருப்பேன்.’ என்று கிசுகிசுத்துவிட்டு வெளியிஏறினான். 

தயக்கத்துடன் நின்றுக்கொண்டிருந்த ரவியை யோசனையுடன் பார்த்தார் உதவி ஆய்வாளர்.... ஆள பாத்தா டவுட்டா எதுவும் தெரியலையே...அந்தாள் சொன்னா மாதிரி பேங்க்லருந்து பணத்த கையாடல் பண்ணியிருந்தா தைரியமா ஃபோன திருப்பி குடுக்க வரமாட்டானே? எதுக்கு விசாரிப்போம்.. அப்புறம் பாத்துக்கலாம்  என்று நினைத்தவாறு... அவனை அமரச்சொன்னார்.

‘உங்க பேரு?’

‘ரவி சார்.’ என்றான் தயக்கத்துடன். 

‘என்ன பண்றீங்க?’

வேலை செஞ்ச இடத்த சொன்னா அங்க விசாரிக்கணும்னு சொன்னாலும் சொல்வார்... அப்புறம் வேற வினையே வேணாம். ‘சொந்தமா பிசினஸ் பண்றேன்’

‘பிசினஸ்னா? கடை கிடை வச்சிருக்கீங்க:ளா? விவரமா சொல்லுங்க.’

‘அமேஜான்லருந்து மொத்தமா சாமான்கள வாங்கி வீடு வீடா போயி விப்பேன் சார்.... இருபதுலருந்து இருபத்தஞ்சி பெர்சண்ட் கிடைக்கும்....

‘அமேஜான் ஆன்லைன் ஷாப்லருந்தா?’

‘ஆமா சார்.’ இதுக்கு மேல கேக்காதீங்க சார்.. பொய்யா எதையும் சொல்லி வைக்காதே என்று பாஸ்கர் அறிவுறுத்தியது வேறு நினைவுக்கு வந்தது.

நல்லவேளையாக உதவி ஆய்வாளர் அவனுடைய பதிலில் திருப்தியடைந்துவிட்டதுபோலிருந்தது அவருடைய அடுத்த கேள்வி.

‘சரி.. இந்த ஃபோன் எப்படி உங்க கைக்கு வந்தது? அதச் சொல்லுங்க.’ 

ரவி முந்தைய தினம் நடந்தவற்றை கூறினான். ‘அது எப்படி என் பேஸ்கட்ல வந்துச்சிங்கறது சத்தியமா எனக்கு தெரியாது சார். நீங்க வேணும்னா கடையிலருக்கற சிசிடிவி ஃபுட்டேஜ் பாருங்க....கவுண்டர்ல பில் போடற பையன் எடுத்து குடுத்தப்பத்தான் எனக்கே தெரியும்.’

எவ்வித தடுமாற்றமும் இல்லாமல் அவன் கூறியதிலிருந்தே அவன் சொல்வது உண்மைதான் என்பதை உணர்ந்துக்கொண்ட உதவி ஆய்வாளர் மேலே தொடர்ந்தார்.

‘சரி ஃபோன அந்த கடை பையன் குடுக்கும்போதே அது எந்தில்லேன்னு சொல்லிற வேண்டியதுதான? எதுக்கு அத வாங்கி.... அத்தோட நிக்காம அத தொறந்து பாத்து அதுலருக்கற நம்பருக்கு ஃபோன் பண்ணி..... இப்படி இங்க வந்து நிக்கணுமா?’

இத்தனை கேள்விகளா? இதுல எதுக்கு முதல்ல பதில் சொல்றது என்று திணறினான் ரவி.

‘என்ன பதில காணம்?’ 

உதவி ஆய்வாளர் குரலில் இருந்த அதட்டல் அவனை மேலும் பதறவைத்தது. இது நமக்கு தேவையா? ஒரு லாபமும் இல்லாம...ச்சை என்று தன்னைத் தானே நொந்துக்கொண்டான். ஏதாச்சும் ஹெல்ப் பண்ணுவான்னு பாஸ்கர கூப்டுக்கிட்டு வந்தா இவர் அவனெ ஒரே வார்த்தையில விரிட்டிவிட்டுட்டார். 

‘என்னங்க?’ கோபால் விடுவதாக இல்லை.

‘இல்ல சார்.. கடை பையன்......

‘ஆட்டைய போட்ருவான்னு நினைச்சிருப்பீங்க. அப்படித்தானே?’

‘ஆமா சார்’ என்றான் ரவி அவசர அவசரமாக... அவன் சொன்ன நினைத்ததை உதவி ஆய்வாளரே சொன்னதில் அவனுக்கு ஒரு திருப்தி,’அதனாலதான்
அந்த ஃபோன வாங்கி அது யாரோடதுன்னு தெரிஞ்சிக்கிறலாம்னுதான்...

உதவி ஆய்வாளர் அட லூசுப்பயலே என்பதுபோல் அவனைப் பார்த்து ஏளனத்துடன் புன்னகைத்தார் கோபால். நீ இப்படி சொல்ற. அவன் நீ காச ஆட்டைய போட்டுட்டேன்னு புகார் குடுக்கறான்... 

சுவரில் இருந்த சுவர் கடிகாரத்தை பார்த்தார் கோபால்... ஐயையோ கோர்ட்டுக்கு வேற போவணுமே....ரெண்டு மூனு கேள்வியோட முடிச்சிக்கணும்....இது ஒரு ஒப்பேறாத கேஸ்

‘சரி.. நீங்க இப்படி சொல்றீங்க? புகார் குடுத்தவர் நீங்க அவர் பேங்க் அக்கவுண்ட்லருந்து காச எடுத்துட்டீங்கன்னு சொல்றாரே?’

ரவி திடுக்கிட்டு அவரை பார்த்தான். ‘சார்... சத்தியமா இல்ல சார்.... வேணும்னா இப்பவே உங்களுக்கு ஃப்ரூஃப் பண்ணி காட்றேன்.’

‘எப்படி?’  

அந்த ஃபோன ஒரு நிமிஷம் நா யூஸ் பண்லாமா சார் என்றவாறு மேசை மீதிருந்த செல்பேசியை எடுத்து அடுத்த பதினைந்து நிமிடத்தில் மாதவனின் மூன்று வங்கிகளுடைய ஆப்பையும் பயன்படுத்தி ஒவ்வொன்றிலும் இருந்து வங்கி கணக்கு புத்தக நகலை தரவிறக்கம் செய்து அதில் எதிலிருந்தும் தான் பணத்தை எடுக்கவில்லை என்பதை நிரூபித்தான். 

அவன் செயல்படுவதை அவனுடைய இருக்கைக்கு பின்னல் நின்று கவனித்துக்கொண்டிருந்த கோபால் அவன் செய்து முடித்ததும்....’ நீங்க பலே ஆள் போல இருக்குதே...’ என்று சிரித்தார். ‘அதெப்படிங்க ஒரு ஆளோட பேங்க் அக்கவுண்ட்டுக்க்ள்ள இவ்வளவு ஈசியா போய் வரீங்க? அதுக்கு வேண்டிய பாஸ்வேர்ட் எல்லாம் அந்த ஃபோன்ல இருக்கறதுங்கறத நேத்து ராத்திரி பூரா ஒக்காந்து மேய்ஞ்சிருக்கீங்க, இல்ல?’

அவர் குரலில் இருந்த கோபம் ரவியை குழப்பியது... இந்த ஆள்தான நா காட்டறேன்னு சொன்னப்போ சரிங்கறா மாதிரி ஃபோன குடுத்தாரு? இப்ப அதுவே விணையா போயிருச்சி போலருக்கே?

‘சரி.. சரி டென்ஷனாகாதீங்க.... எல்லாம் ஒரு க்யூரியாசிட்டி இல்ல? இத்தன பேங்க்ல கணக்கு வச்சிருக்கானே? அப்படி என்னத்தான் அதுல வச்சிருப்பான்னு பாக்கற ஆர்வம்... அப்படித்தான? அதுவும் நல்லதா போச்சி... இல்லன்னா அந்த ஆள் அப்படி ஒரு புகார் குடுத்தா ஒங்களால அது பொய்யின்னு ப்ரூஃப் பண்ணியிருக்க முடியாதே... குட்... நல்ல வேலை செஞ்சீங்க...’ என்ற உதவி ஆய்வாளர் எழுந்து நின்றார்... பிறகு எதிரில் நின்றிருந்த காவலரிடம், ‘யோவ் வெளியில அந்த லாயர் பாஸ்கர் வெய்ட் பண்ணிக்கிட்டிருப்பார் அவர உள்ள வரச்சொல்லு’

பாஸ்கர் அடுத்த நொடியே உள்ளே வந்தான். ‘என்ன சார்.. முடிச்சிட்டீங்களா?’

‘ஆமாய்யா.... ஒன் ஃப்ரெண்ட் பலே ஆள்தான்... ஆனா சுத்த ஏமாளி அவர் இருந்த இடத்துல வேற ஆளா இருந்தா பேங்க் பேலன்ஸ் முழுசையும் சுரண்டிட்டு ஃபோன குப்ப தொட்டியில வீசி எறிஞ்சிட்டு போயிருப்பான். இவர் என்னடான்னா ஃபோன் சொந்த காரன கூப்ட்டு குடுக்கலாம்னு..... அந்தாள் என்னடான்னா இவன் பணத்த ஆட்டைய போட்டுட்டான்னு கம்ப்ளெய்ண்ட் குடுக்கறான்....?’

பாஸ்கர் கோபத்துடன், ‘அப்படியா சொன்னான்...? அப்படி ஒரு கம்ப்ளெய்ண்ட் அந்தாள் குடுத்தா நாங்க ஐபிசி செக்‌ஷன் 182ல ஒரு கவுண்டர் (counter) கம்ப்ளெய்ண்ட் குடுத்தா எப்படி இருக்கும் சார்.. ?சும்மான்னாச்சும் ஒரு ஃபால்ஸ் கம்ப்லெய்ண்ட் குடுத்து ஒங்கள சுத்த விடற ஆள சும்மா விட கூடாது சார்.’

கோபால் சிரித்தார். ‘ரொம்ப ஷார்ப்பா இருக்கீங்க? கவுண்டர் கம்ப்ளெய்ண்ட்லாம் தேவையிருக்காது...அந்தாள ஏற்கனவே மிரட்டிதான் வச்சிருக்கேன். சரி... நீங்க வெய்ட் பண்ணிக்கிட்டிருந்தப்போ அந்தாள் வந்தாரா?’

‘இல்லையே சார்... வெளியில யாரும் இல்லையே?’ 

‘அப்படியா? அப்படியே ஓடிட்டானா?’ என்று சிரித்தார் கோபால். ‘பொய் புகார் குடுத்தா ஆறு மாசம் ஜெயில்னு ஒரு குண்ட போட்டேன்.. மனுஷன் பயந்துட்டார் போலருக்கு.....’

‘அப்ப நாங்க போலாமா சார்?’

‘தாராளமா....அந்தாள் புகார் எதுவும் ரைட்டிங்ல குடுக்கல... குடுத்தா பாத்துக்கலாம்...’ என்றவன் ரவியை பார்த்து புன்னகைத்தார்...’பாத்துங்க... எல்லாரும் என்னைய மாதிரி இருக்க மாட்டாங்க... புகார வாங்கிக்கிட்டு உள்ள தள்ளியிருப்பாங்க.... அப்புறம் நீங்க நிரபராதின்னு கோர்ட்லதான் ப்ரூஃப் பண்ணியிருக்கனும்...போய்ட்டு வாங்க... இனிமே இந்த மாதிரி சோஷியல் சர்வீஸ்லாம் பண்ணாதீங்க... என்ன புரியுதா?’

ரவி உடனே தலையை அசைத்தான்.... ‘தாங்ஸ் சார்...’ என்றவாறு பாஸ்கரை பார்த்தான். அவன் போகலாம் என்பதுபோல் தலையை அசைக்க இருவரும் காவல்நிலையத்தை விட்டு வெளியேறினர். 

அவர்கள் இருவரும் பேசியவாறே காவல்நிலையத்தை விட்டு வெளியேறியதை சாலையின் மறுபுறத்தில் நின்றுக்கொண்டிருந்த மாதவன் கவனித்தான். பிறகு அவர்கள் இருவரும் வாகனத்தில் ஏறி சென்று மறையும் வரை காத்திருந்துவிட்டு காவல்நிலையத்திற்குள் நுழைந்தான்.

அவன் வருவதை கவனித்த உதவி ஆய்வாளர் கோபால். ‘என்ன சார் எங்க போய்ட்டீங்க? அவங்கள நேரா மீட் பண்ற தைரியம் இல்ல... அப்படித்தான?’ 

என்ன பதிலளிப்பது என்று தெரியாமல் தலை கவிழ்ந்து நின்றான் மாதவன். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதுபோல் தான் அவசரப்பட்டு தேவையில்லாமல் சொன்ன பொய் தன்னை இப்படி நிற்க வைத்துவிட்டதே என்று நொந்துபோனான்.

‘இந்தாங்க உங்க ஃபோன்.... நியாயமா இத எடுத்து உங்கக்கிட்ட சேஃபா சேத்துறம்னு நினைச்ச ஆளுக்கு நீங்க ஏதாச்சும் ரிவார்ட் குடுக்கறது போயி... நீங்க சொன்ன ஒரு பொய் உங்கள அந்தாள் மூஞ்ச கூட பாக்க முடியாம பண்ணிருச்சி....’

ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தான். ‘சாரி சார்... ஏதோ அந்தாள் மேலருந்த கோபத்துல....’

‘ஆமாங்க... இப்பவாச்சும் தெரிஞ்சிக்குங்க... கோபத்துல எடுக்கற எந்த முடிவும் சரியா இருக்காது....’ என்ற உதவி ஆய்வாளர் தொடர்ந்தார்..’அந்த மாதிரி பணத்த ஆட்டைய போடணும்னு நினைக்கற ஆள் எதுக்காக ஒங்கள கூப்டணும்.? அக்கவுண்ட்லருந்து எல்லாத்தையும் எடுத்துட்டு ஒங்க ஃபோன சிம் கார்ட எடுத்துட்டு தூக்கி எறிஞ்சிட்டு போயிருந்தா என்ன செஞ்சிருப்பீங்க? சரி ஒங்க ஃபோனோட IMEI நம்பரையாவது சேவ் பண்ணி வச்சிருக்கீங்களா?’

‘இல்ல சார்...’ 

உதவி ஆய்வாளர் எரிச்சலுடன் அவனை பார்த்தார். ‘முதல்ல அத செய்ங்க... அப்பத்தான் ஃபோன்ல வேற எந்த சிம் கார்ட போட்டாலும் ட்ரேஸ் (Trace) பண்ண முடியும்... அது இல்லேன்னா.... ஒன்னும் பண்ண முடியாது....’

மேசை மீதிருந்த செல்பேசியை எடுத்து அவனிடம் நீட்ட அதை பெற்றுக்கொண்டு ‘சாரி சார்... தாங்ஸ் சார்...’ என்று குளறியவாறு தலைகுணிந்தபடி காவல்நிலையத்தை விட்டு வெளியேறினான் மாதவன்...

*******

இது இப்படியும் முடியலைங்க...

அப்போ உண்மையில என்னதான் நடந்தது?

அதை திங்கட்கிழமை பாக்கலாம்...

இது வரைக்கும் புடிச்சிருந்தா மேலருக்கற ‘லைக்’ பட்டண அழுத்துங்க...



**********




27 செப்டம்பர் 2019

நடந்தது என்ன? (சிறுகதை )

மாதவன் நிமிர்ந்து மணியைப் பார்த்தான்.

எட்டு மணி!

இப்பவே கிளம்புனாத்தான் கடை மூடறதுக்குள்ள போக முடியும்.

செல்பேசியை எடுத்து  அன்று காலையில் அவனுடைய மனைவி  ஷாமிலி சொல்ல சொல்ல சாம்சங் நோட்ஸ் கோப்பில் குறித்து வைத்திருந்த மளிகை பொருட்களின் பட்டியலைப் பார்த்தான். '

'எத்தன தடவ சொன்னாலும் கேக்க மாட்டேங்குறியே ஒரு வாரத்துக்கு வேணுங்கற சாமான மட்டும் வாங்குடின்னா.... ச்சை '  என்று மனைவியை கடிந்துக்கொண்டது நினைவுக்கு வந்தது.

'ஏன் கேக்க மாட்டீங்க? சாப்பிடறது நீங்க... என்னமோ நா எல்லாதையும் எங்கம்மா வீட்டுக்கு தூக்கி குடுத்துடறா மாதிரி...'

'சரி... சரி ஆரம்பிச்சிறாத... வாங்கிக்கிட்டு வரேன்.'

மாதம் முதல் தேதியானதும் அந்த மாதம் முழுவதுக்கும் தேவையான மளிகை பொருட்களை வாங்குவதில் அவனுக்கு விருப்பமில்லை. 'எதுக்கு வீணா நாலாயிரம் அஞ்சாயிரத்துக்கு சாமான வாங்கி, வைக்கக் கூட இடம் இல்லாம... வாரத்துக்கு ஒரு தடவ வாங்கினா போதும்.. நா வர்ற வழியிலதான டிஆர் மால் இருக்கு? ஒரே கடையில எல்லாத்தையும் வாங்கினா மாதிரியும் இருக்கும்... கார்ட்லயே பே பண்ணிறலாம்...' என்பான்.

'அப்ப வாங்கிட்டு வாங்க... நீங்கதான் நாலஞ்சி தரம் அலையணும்...வீட்டுக்கு பக்கத்துலயே கடை இருக்கு. ஒன்னாம் தேதியானா லிஸ்ட் போட்டு குடுத்துட்டா வீட்டுக்கே வந்து போட்டுறப்போறான். எதுக்கு எங்கயோ கிடக்குற மால்ல போயி வாங்கறது? ஒட்டிக்கி ரெட்டியா அவன் கடைவாடகையையும் சேர்த்து சாமான் விலையில வைப்பான்.'

ஷாமிலி பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டாள் என்பது அவனுக்கு தெரியும். பதிலுக்கு பதில் பேசாமல் இருந்தால் சிறிது நேரத்தில் அவளே அடங்கிவிடுவாள்.

ஆகவே மாதவன் பதிலேதும் பேசமால் குழந்தைகளுக்கு 'பை பை' சொல்லிவிட்டு கிளம்பியதை நினைத்துப் பார்த்தான். அவனையுமறியாமல் அவன் உதடுகள் புன்னகையால் விரிந்தன.

இருக்கையிலிருந்து எழுந்து லாப்டப்பை அணைத்து பேக் பேக்கில் (Back Pack) வைத்தான். காலடியில் கிடந்த டிபன் பாக்ஸ் பையை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

நூறு மென்பொறியாளர்கள் அமர்ந்து பணியாற்றக்கூடிய அந்த விசாலமான ஹாலில் அவனைத் தவிர சுமார் பத்து பதினைந்து பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர்.

ஹாலை விட்டு வெளியேறி மின்தூக்கி இருந்த திசையைப் பார்த்தான். வாயிலில் அவனுடைய நண்பர்கள் நிற்பது தெரிந்தது. அவணுங்க கூட போனா எதையாச்சும் பேசுவாணுங்க.... நம்ம டைம் போயிரும். அப்புறம் ஷாமிலிக்கு பதில் சொல்ல முடியாது.

மூன்றாம் தளத்திலிருந்து படிகளில் தடதடவென இறங்கி பார்க்கிங்கில் இருந்த இரு சக்கர வாகனத்தை கிளப்பி சாலையில் இறங்கி அடுத்த பதினைந்து நிமிடத்தில் டிஆர் மாலை அடைந்தான்.

அவனுடைய வாகனத்திற்கே பார்க்கிங் இல்லாமல் நிரம்பிக் கிடந்த வாகனங்களைப் பார்த்ததும் எரிச்சலாக இருந்தது.

மணியை பார்த்தான்.

9.00!

இன்னும் அரை மணி நேரத்தில் வாசற்கதவை மூடிவிடுவார்கள் என்பது நினைவுக்கு வர கண்ணில் தெரிந்த காலி இடத்தில் வாகனத்தை பார்க் செய்துவிட்டு கடை வாசலை அடைத்து வழியில் இருந்த ட்ராலிகளில் ஒன்றை எடுத்துக்கொண்டான். பில் கவுண்டர்களுக்கு முன்பு நின்றுக்கொண்டிருந்த கூட்டத்திற்குள் புகுந்து மளிகை பொருட்கள் இருந்த ஹாலுக்குள் நுழைந்தான்.

அங்கும் பெரும் கூட்டம்..

எந்த பகுதியில் கூட்டம் குறைவாக இருக்கிறது என்று பார்த்து அதை நோக்கி விரைந்தான்.

சட்டைப் பையில் இருந்த செல்பேசியை எடுத்து நுழைவு சமிக்ஞையை (entry pin) அடித்து திறந்தான்.

'அட சூப்பரா இருக்கு சார். என்ன மாடல் சார்?'

குரல் எங்கிருந்து வருகிறது என்று சுற்றும் பார்த்தவன் தன் மீது மூச்சுக் காற்று படும் அளவுக்கு நெருக்கத்தில் நின்றிருந்தவனை நிமிர்ந்து பார்த்தான்.

அடேங்கப்பா ஆறடிக்கு மேல இருப்பான் போலருக்கு என்று நினைத்தான். 'என்ன கேட்டீங்க?'

'இல்ல ஃபோன் என்ன மாடல்னு கேட்டேன்.'

இது என்னவா இருந்தா இவனுக்கு என்ன வந்தது? ஆள் ஆறடி வளர்ந்துருக்கான தவிர...... 'சாம்சங் ஏ50' என்று சுருக்கமாக கூறிவிட்டு லிஸ்ட்டில் இருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு  அங்கிருந்து நகர்ந்தான்.  செல்பேசி பேட்டரி இன்னும் ஒரு சில நொடிகளில் மரித்துவிடுவேன் என்று மிரட்டியதை கவனியாமல் அடுத்து என்ன எடுக்கலாம் என்று லிஸ்ட்டை பார்க்கவும் அது செயலிழந்து போகவும் சரியாக இருந்தது.

'ச்சை.... செத்துட்டியா?' என்றான் சற்று உரக்கவே.

அருகில் இருந்தவர்களில் சிலர் தன்னை விநோதமாக பார்ப்பதை உணர்ந்தவன் அவர்களுடைய பார்வையை தவிர்த்து அணைந்துபோன செல்பேசியை எரிச்சலுடன் ட்ராலியில் வீசி எறிந்தான்.

காலையில் குறித்து வைத்திருந்த பொருட்களின் பட்டியலில் நினைவில் இருந்தவைகளை ட்ராலியில் அள்ளிப் போட்டுக்கொண்டு பில் கவுண்டரை நோக்கி விரைந்தான். கூட்டம் குறைவாக இருந்த வரிசையில் நின்றவன் பில் தொகையை செலுத்த பர்ஸில் இருந்த டெபிட் கார்டை எடுத்து நீட்டினான்.

'பை இருக்கா சார்?'

ச்சே... மறுபடியும் மறந்துருச்சே.... சாமான சொல்றவ பையை குடுத்தணுப்பணும்னு நினைச்சாளா பார்....

'என்ன சார் பை போடவா? அதுக்கு எக்ஸ்ட்ரா வரும். கார்ட்ல போட முடியாது.. கேஷ்தான்.'

எரிச்சலுடன் பர்ஸில் இருந்த ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டினான். ஒரு துணிப் பைக்கு பதினைந்து வீதும் இரண்டும் பைகளுக்கு முப்பது ரூபாய் போக  மீதியை வாங்கிக்கொண்டு வாய் வரை நிரம்பி வழிந்த பைகளை எடுத்துக்கொண்டு வாகனத்தை நோக்கி நகர வாசற்கதவு அடைத்துவிட்டதை பார்த்தான்.

'சைடு வழியாத்தான் சார் போவணும்... மணி பத்தாக போவுதே?' என்ற வாட்ச்மேனை பார்த்து முறைத்துவிட்டு பைகளை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு பர்க்கிங்கை அடைந்தான்.

அடுத்த அரை மணியில் வீட்டையடைந்தவனுக்கு வழி முழுவதும் பின் சீட்டின் இருபுறமும் ஆடிக்கொண்டிருந்த பைகளில் இருந்து பொருட்கள் ஏதும் விழுகிறதா என்றும் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது.

வாசலிலேயே இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு ஷாமிலி நிற்பது தெரிந்தது.

ஏதாச்சும் சொல்லட்டும் வச்சிக்கறேன் கச்சேரி என்று மனதுக்கு முணகியவாறே வண்டியிலிருந்து இறங்கினான்.

'ஏங்க எத்தன தடவ கூப்டறது? எடுக்கவே மாட்டேங்கறீங்க? எப்பவும் மாதிரியே பேட்டரி போயிருச்சா?'

'என்னது கூப்டியா, அடிக்கவே இல்லையே?' என்ற மாதவன் சட்டைப்பையை தடவ அது காலியாக இருந்ததை உணர்ந்தான். அப்போதுதான் கடையில் செல்பேசியை அணைத்து ட்ராலிக்குள் வீசியது நினைவுக்கு வந்தது. ஐயையோ கீழ விழுந்துருச்சி போலருக்கே.... ச்சை... எப்படி மறந்து போனேன்?வாங்கி

முழுசா மூனு மாசம் கூட ஆகலையே.... சுளையா 12000 ரூபாயாச்சே...

அத வாங்கிய அன்னைக்கே ஷாமிலியுடன்நடந்த வாக்குவாதம் நினைவுக்கு வந்தது.

'என்ன புது ஃபோனா? பழைய ஃபோனுக்கு என்ன ஆச்சு நல்லாத்தான இருந்துச்சு?' என்றவாறே அவன் கையிலிருந்து பிடுங்கி ஃபோனை பார்த்தவளுக்கு இன்னும் கோபம் வந்தது. 'ஏங்க விலை ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் போலருக்கு? இது இப்ப தேவையா? ஒங்க தங்கச்சி கல்யாணத்துக்கு வாங்குன கடனே இன்னும் முழுசா அடைச்சி முடிக்கல...'

'ஜாஸ்தி ஒன்னும் இல்லைடி.... பழைய ஃபோன எக்ஸ்சேஞ்ச் செஞ்சி வாங்குனேன். கையிலருந்து ஐயாயிரம்தான் குடுத்தேன்.' என்று பொய் சொல்லி சமாளித்ததும் நினைவுக்கு வந்தது. அந்த ஃபோனைத்தான் இப்போது தொலைத்து விட்டு வந்து நிற்கிறோம்..... ஆனா தொலைஞ்சிருச்சின்னு இவ கிட்ட இப்ப சொல்ல வேணாம்.... வேற எதையாச்சும் சொல்லி சமாளிப்போம்....

'இல்லடி. டிஸ்ப்ளே காலையிலருந்தே மக்கார் பண்ணிக்கிட்டிருந்திச்சி. அதான் ஆஃபீஸ் ஃப்ரென்ட் கிட்ட குடுத்து பாக்க சொல்லியிருக்கேன். ரெண்டு நாள்ல வந்துரும். நீ இத எடுத்துக்கிட்டு போய் உள்ள வை.'

ஆனால் அந்த பொய் வேறு ஒரு பிரச்சினையை கிளப்பியது. 'போச்சா? வாங்கி முழுசா ரெண்டு மாசம் ஆகலை. அதுக்குள்ளவே ரிப்பேரா?. ஆன்லைன்ல வாங்காதீங்க, வாங்காதீங்கன்னு சொன்னா கேக்கறீங்களா? ஃப்ராடு பயலுக. இப்படி ஏமாத்தறானுங்களே?' என்று ஷாமிலி புலம்பியவாறே சாமான்களை எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் செல்ல. மாதவன் தன் பாக்கெட்டை துழாவி மாலில் வாங்கிய சாமான்களை பில்லை எடுத்து தொலைபேசி எண் ஏதும் இருக்கிற்தா என்று தேடினான்.

இருந்தது.

டீப்பாயில் கிடந்த ஷாமிலியின் செல்பேசியை எடுத்துக்கொண்டு தன் படுக்கையறைக்குள் நுழைந்து கதவை சாத்திவிட்டு டயல் செய்தான்.

'ஹல்லோ யாருங்க?' என்ற ஒலி எதிர்திசையிலிருந்து கேட்டதும் கடகடவென்று விஷயத்தை விவரித்து தன்னுடைய செல்பேசி அங்கு உள்ளதா என்று கேட்டான்.

'ஏங்க மணி பத்தரையாயிருச்சேங்க. கடை மூடியாச்சே. நா வாட்ச்மேன் பேசறேன். காலையில கூப்டுங்க" இணைப்பு துண்டிக்கப்பட இடியட்' என்றான் உரக்க.

இப்ப என்ன செய்யறது?

சட்டென்று நினைவுக்கு வந்தவனாய் வெளியில் வந்து ஜன்னலில் மாட்டி வைத்திருந்த அவன் குடியிருந்த  காலனி நல சங்கத்தின் காலண்டரை திருப்பி அதில் பட்டியலிடப்பட்டிருந்த தொலைபேசி எண்களை மேய்ந்தான். வருடா வருடம் அந்த சங்கத்தில் உருப்படியாய் செய்யும் காரியம் பெரிய நாள்காட்டியை இலவசமாக வினியோகிப்பதுதான். அதன் பின்பக்கத்தில் அந்த ஏரியா மின்வினியோக அலுவலகத்திலிருந்து காவல் நிலையம் வரை அனைத்து தொலைபேசி எண்களும் அச்சடிக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து அந்த ஏரியா காவல் நிலையத்தின் எண்ணை குறித்துக்கொண்டு மீண்டும் படுக்கையறைக்குள் நுழைந்தான். நல்ல வேளையாய் ஷாமிலி சமையலறையில் மும்முரமாய் இருந்தாள்.

வெகுநேரம் கழித்து எதிர்முனையிலிருந்து '......... போலீஸ் ஸ்டேஷன் ' என்று குரல் வந்தது.

மாதவன் தன் பிரச்சினையை விவரித்தான்.

'இன்ஸ்பெக்டர் ஐயா வீட்டுக்கு போய்ட்டாருங்க. இனி காலையிலதான். பத்து மணிக்கி வந்து கம்ப்ளெய்ன்ட் எழுதி குடுங்க. வச்சிர்றேன்.

மாதவனை பேச விடாமல் இணைப்பு துண்டிக்கப்பட ஆத்திரத்தில் செல்பேசியை படுக்கையில் எறிந்துவிட்டு தலையில் கையை வைத்துக்கொண்டு அப்படியே அமர்ந்தான்.

'எவனாச்சும் எடுத்துருப்பானோ?'

அடுத்த நொடியே  அப்படியே எடுத்திருந்தாலும் அத ஓப்பன் பண்ண முடியாதே என்றும் நினைத்தான். ஆனாலும் மனது ஆறவில்லை. அவன் கணக்கு வைத்திருந்த மூன்று வங்கிகளின் கணக்கு ஆப்கள் (apps) அதில்தான் இருந்தது. மொபைல் பேங்க் ஆப்ஸ் வேறு. ஆனால் அதை திறப்பதற்கு எடுத்தவனால் முடியுமா? என்று நினைத்தவன் தேள் கொட்டியதுபோல் நிமிர்ந்து உட்கார்ந்தான். டெபிட் கார்ட் மற்றும் பேங்கிங் ஆப்களின் அனைத்து பின் நம்பர்களும் அந்த ஃபோனில்தான் இருந்தன என்பதும் நினைவுக்கு வந்தது.

'முதல்ல ஃபோன திறக்கணுமே' என்ற வினாவுடன் தன்னைத்தானே தேற்றிக்கொண்டான். ஏனெனில் அந்த செல்பேசியின் 'திறப்பு பின்' ஷாமிலியின் பிறந்த தேதி மற்றும் மாத எண்களின் காம்பினேஷனைக் கொண்டது. அவனுடைய நெருங்கிய நண்பர்களாலும் கூட ஊகிக்க முடியாத எண் என்று எப்போதும் நிணைத்துக்கொள்வான்.ஆகவேதான் அந்த ஃபோனில் இருந்த 'சாம்சங் நோட்ஸ்' ஆப்பிலேயே அனைத்தையும் குறித்து வைத்திருந்தான். பாதுகாப்பாக இருக்குமே என்று.

'ஏங்க என்ன பண்றீங்க? சாப்பிட வரீங்களா? மணி பண்ணெண்டாக போகுது.'

பண்ணிரண்டா? நேரம் போகாமல் செல்பேசி தொலைந்ததை பற்றியே மீண்டும் மீண்டும் யோசித்துக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

எழுந்து உடை மாற்றிக்கொண்டு குளித்தான். தலையை துவட்டியவாறே டைனிங் மேசையில் அமர்ந்து ஷாமிலி பரிமாறிய சப்பாத்தியை மடமடவென சாப்பிட்டு முடித்தான்.

'நான் இன்னைக்கி பசங்களோட படுத்துக்கறேன். நீங்க ஏற்கனவே டயர்டா இருக்கா மாதிரி தெரியுது. நிம்மதியா ஏசிய போட்டுக்கிட்டு தூங்குங்க.'

ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்பார்களே அதுமாதிரி ஏழு வயதில் ஒரு பெண்ணும் ஐந்து வயதில் ஒரு மகனும் அவனுக்கு.

ஷாமிலி குழந்தைகள் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொள்ள மாதவன் சோபாவிலேயே அமர்ந்து யோசிக்க துவங்கினான்...
.......

மாதவன் யோசித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் அங்கிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருந்த அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில்

அமர்ந்திருந்த ரவியும் தன் கையிலிருந்த செல்பேசியையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.

அவன் வேறு யாருமில்லை.

'இது என்ன மாடல் சார். சூப்பரா இருக்கே?' என்று மாதவனைக் கேட்டு எரிச்சலடைய வைத்தவனே தான்.

மாதவனைப் போலவே பொருட்களுடன் பில் கவுண்டரை அடைந்து கையிலிருந்த ப்ளாஸ்டிக் கூடையை வைத்துவிட்டு பில் போடும்போதே அதில் வரும் தொகையை பார்த்துக்கொண்டு நின்றவனை, 'சார் ஃபோன்' என்ற குரல் ஈர்த்தது. பில் போடுபவனுக்கு அருகில் பொருட்களை பைகளில் அடுக்கிக்கொண்டிருந்த பணியாள் அவனை நோக்கி செல்பேசி ஒன்றை நீட்டுவதை பார்த்தான்.

'இத போயி சாமான்களோட வச்சிருக்கீங்க? யாராச்சும் எடுத்திருந்தா என்னாவறது? இந்தாங்க பிடிங்க.'

இது அந்தாளோட ஃபோன் ஆச்சே? இது எப்படி நம்ம கூடையில வந்துது?

சுற்று,ம் முற்றும் பார்த்தான். மாதவன் வாசலுக்கு வெளியே தன் இரு சக்கர வாகனத்தில் ஏறி புறப்பட்டுச் செல்வது தெரிந்தது.  அவனை கூப்பிட குரல் எழுப்ப நினைத்தவனை பில் கவுண்டரிலிருந்து வந்த குரல் இடைமறித்தது. சார்... 475/- ஆவுது கார்டா கேஷா?'

'கேஷ்தான்'  சட்டைப் பாக்கெட்டிலிருந்த ஐநூறு  ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான்.

மீதியை வாங்கிக்கொண்டு வெளியில் வந்தவன் அவசர அவசரமாக சாலையில் இறங்கி மாதவன் சென்ற திசையைப் பார்த்தான். மாதவன் சென்ற சுவடே தெரியவில்லை.

'சுத்த லூசா இருப்பான் போலருக்கே.... ஃபோன் காணலைங்கறது கூடவா தெரியாம இருக்கும்?' என்று நினைத்தவாறு தன்னுடைய இரு சக்கர வாகனத்தை நெருங்கி பையை தொங்க விட்டுவிட்டு சீட்டில் அமர்ந்து யோசித்தான்.
'இப்ப என்ன பண்றது?’கடையிலயே திருப்பி குடுத்துறலாமா? ஆனா அவனுங்களே வச்சிக்கிட்டானுங்கன்னா? வேணாம். ஆனா இந்த மாதிரி செல்ஃபோனுக்கு ஆசைப்பட்டுத்தானே நம்ம வேலையே போச்சி?

ஒன்னு பண்லாம்.இத தொறந்து பார்த்து அந்தாளோட விவரம் தெரியுதான்னு பாப்பம். அப்புறம் காண்டாக்ட் பண்ணி உங்க ஃபோன் எங்கிட்டதான் இருக்கு. வந்து வாங்கிக்கிருங்கன்னு சொல்லி குடுத்துருவோம். அதுக்கு முதல்ல இத ரீசார்ஜ் பண்ணணும்..' என்று நினைத்தவாறு  ரீசார்ஜ் செய்ய உதவும் துளையை பார்த்தான். அது சற்று அகண்டு இருந்தது.

'வீட்லருக்கற சார்ஜரால இத சார்ஜ் பண்ண முடியாது போலருக்கே?' என்று யோசித்தவனுடைய பார்வையில் சாலையின் மறுபுறம் ஒளிவிளக்குகளுகளுடன் மின்னிக்கொண்டிருந்த பூர்விகா செபேசி கடை தெரிந்தது.

பைக்கில் ஏறி சற்று தொலைவில் தெரிந்த யூடர்னில் வளைவெடுத்து கடையை அடைந்தான்.

கூட்டம் சற்று குறைவாகவே இருந்ததால் 'என்ன சார் வேணும்'  என்று கேட்டவனைநெருங்கி 'நா வெளியூரு. வர்ற அவசரத்துல சார்ஜர் எடுக்கமறந்துட்டேன்.

ஆஃபாயிருச்சி..' என்று தன் கையிலிருந்த மாதவனின் செல்பேசியை நீட்டினான். 'இதுக்கு ஒரு சார்ஜர் வேணும்.'

'என்ன மாடல் சார்?'

இந்த கேள்வியை எதிர்பார்க்காத ரவி ஒரு சில நொடிகள் திகைத்துப்போனான். உடனே மாதவன் சற்று முன்பு கூறியது நினைவுக்கு வர சமாளித்துக்கொண்டு

'சாம்சங் ஏ50' என்றான்.

'இதுக்கு எதுக்கு இப்படி தடுமார்றான்.' என்று அவனை சந்தேகத்துடன் பார்த்தான் கடையின் பணியாள். அதை கவனியாதவன் போல் பாவித்த ரவி, 'எவ்வளவு வரும்' என்று சமாளித்தான்.

விலையைக் கேட்டதும் சற்று அதிர்ந்து போனான். 'ஏங்க ஆன்லைன்ல நாநூறுக்கு கீழ கிடைக்குதே?'

'அப்ப ஆன்லைன்லயே வாங்க வேண்டியதுதான?' கடைய மூடற நேரத்துல வந்துட்டு... என்று மனதுக்குள் கறுவினான் கவுண்டரில் நின்றிருந்தவன்.

'உடனே கிடைக்காதே....அதான்...'

'அதனாலதான் இந்த விலை. வேணுமா, வேணாமா?'

ரவி எரிச்சலுடன் எதிரில் நின்றவனை பார்த்தவாறு பர்சை எடுத்து தனியாய் நின்ற கடைசி ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான்.'டெஸ்ட் பண்ணி குடுத்துறுங்க.'

சார்ஜரில் இணைக்கப்பட்ட அடுத்த சில நொடிகளில் செல்பேசிக்கு உயிர் வந்தது. 'இது போறுமா?' என்று கேட்ட பணியாளிடம் 'போறுங்க.' என்றவாறு செல்பேசியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.

அடுத்த அரை மணியில் வீட்டையடைந்து கையிலிருந்த பையை மனைவி ராஜியிடம் கொடுத்துவிட்டு நேரே தன்னுடைய படுக்கையறையை நோக்கி விரைந்தவனை 'என்ன சாப்பிடலையா? ரெடியாருக்கு.' என்ற மனைவியின் குரல் தடுத்து நிறுத்தியது.

'இப்ப வேணாம்... கொஞ்ச நேரம் ஆவட்டும்'

படுக்கையறைக்குள் நுழைந்து சட்டையைக் கூட கழற்றாமல் சார்ஜரை ப்ளக்கில் நுழைத்து மாதவனின் செல்பேசியை அதனுடன் இணைத்தான். அடுத்த சில நொடிகளில் அது உயிர் பெற்று எண் பேடை (Pad) காட்டியது.

'அவன் என்னவோ நம்பர அடிச்சானே?' என்று கண்களை மூடியவாறு யோசித்தான். சட்டென்று நினைவுக்கு வந்த எண்களை தயக்கத்துடன் அடித்தான்.

அவனுடைய அதிர்ஷ்டம் செல்பேசி உடனே ஹோம் திரையை காட்டியது. ஏதோ ஜாக்பாட் அடித்தவன் போல் மகிழ்ந்து போனான் ரவி.

அடுத்த ஐந்து நிமிட நேரம் செல்பேசியின் சகல வசதிகளையும் பார்வையிட்டான். நிறைய வித விதமான ஆப்கள் (Apps) நிறுவப்பட்டிருந்தன. அதில் அவனுடைய கவனத்தை ஈர்த்தது வங்கி ஆப்கள். மூன்று வங்கிகளின் செல்பேசி வங்கி வர்த்தக ஆப்கள் (mobile banking apps). பயங்கர பசையுள்ள ஆள் போல இருக்கே. உள்ளாற நுழைஞ்சி பாக்கலாமா?

ஆனா இதுக்கெல்லாம் பாஸ்வேர்ட் இல்லன்னா பின்  வேண்டியிருக்கு,மே? என்று யோசித்தவாறே  அனைத்து ஆப்களையும் மீண்டும் ஒருமுறை மேய்ந்தான்.

இறுதியில் அவனில் கண்ணில் பட்டது 'Samsung Notes'.

இதுலருந்துதான அவன் சாமான்கள் லிஸ்ட வாசிச்சான் என்று யோசித்தவாறு அதில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கோப்புகளை அலசினான்.

அந்த கோப்புகளில் ஒன்றின் பெயர் pwd என்றிருக்கவே அதை திறந்தான். கண்கள் வியப்பால் விரிந்தன.

'அடப்பாவி! இப்படியா ஒருத்தன் எல்லா பாஸ்வேர்டையும் ஒரே ஃபைல்ல சேத்து வைப்பான். அட மொபைல் பேங்க் பின் நம்பர் கூட இருக்கே' என்று மகிழ்ந்து போனான்.

மீண்டும் ஒரு முறை படுக்கையறை கதவு மூடியிருக்கிறதா என்று பார்த்துவிட்டு. நிறுவப்பட்டிருந்த ஒவ்வொரு வங்கி ஆப்பினுள்ளும் நுழைந்து வெளியேறினான். மூன்று வங்கிகளிலும் சேர்த்து ரூ.1.50 லட்சம் சேமித்து வைத்திருப்பதை பார்த்ததும் நாவில் எச்சில் ஊற மென்று விழுங்கினான்.

அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கலானான். இப்ப இருக்கற நிலைமைக்கு அதிகம் வேணாம் ஒரு அம்பதாயிரம் கிடைச்சா ரெண்டு மாசத்த ஓட்டிறலாம்... அடுத்த வேலை கிடைக்கற வரைக்கும்.....

அவனை மேலும் தொடர்ந்து யோசிக்க விடாமல் அவன் எதிர்பாராத நேரத்தில் கையிலிருந்த செல்பேசி மிகுந்த சப்தத்துடன் ஒலிக்க துவங்கியது திரையில் ஷாமிலி .( wife) என்ற எழுத்தும் அழகான முப்பது முப்பத்தைந்து  பெண்ணின் புகைப்படமும் தெரிய 'அட! சூப்பரா இருக்காளே' என்றான் சற்று உரக்க..

அவனை சாப்பிட அழைக்கலாம் என்று நினைத்தவாறு அவனுடைய படுக்கையறைக்குள் நுழைந்த ராஜி 'யார் சூப்பரா இருக்கா?' என்றவாறே அவன் கையில் ஒலித்தவாறு இருந்த செல்பேசியை பார்த்ததும் வியப்புடன், 'இது யார் ஃபோனுங்க?' என்றவாறே அவனருகில் அமர்ந்தாள்.

திரையில் தெரிந்த பெண்ணைப் பார்த்ததும் பொறாமையுடன் 'சூப்பரா இருக்காளேன்னு இவளதான் சொன்னீங்களா?' என்றாள்.

ரவி இல்லை என்று அசடு வழிந்தான். கையும் களவுமாய் பிடிபட்ட கள்வனைப் போலிருந்தது அவனுடைய பார்வை.அதற்குள் செல்பேசி அடித்து ஓய்ந்தது.

ராஜி கோபத்துடன் ரவியை பார்த்து முறைத்தாள். 'சொல்லுங்க... யார் ஃபோன் இது? மறுபடியும் ஒங்க பழைய வேலைய ஆரம்பிச்சிட்டீங்களா?'

ரவிக்கு திருட்டு செல்பேசிகளை வாங்கி அதை மாற்றியமைத்து (Reset) அதிக விலைக்கு கைமாற்றுவது வழக்கம்.  ரவியின் ஆடம்பர சிலவுகளுக்கு அவனுடைய மாத ஊதியம் போதாததாக இருந்ததால் இதை ஒரு சைட் பிசினஸ்சாகவே செய்து வந்தான். ராஜி பல்முறை எச்சரித்தும் அதை அவன் விடுவதாயில்லை. விளைவு? கடந்த மாதம் அவன் அலுவலகத்திலிருந்தே ஒரு செல்பேசியை திருடிவிட கையும் களவுமாய் பிடிபட்டு வேலை போய் கடந்த ஒரு மாதமாக வேறு வேலை தேடிக்கொண்டிருந்தான்.

'நல்ல வேலைக்காரன் நீ, உனக்கெதுக்குடா இந்த சில்லறை புத்தி?' என்று அவனுடைய நெருங்கிய நண்பர்களே ஒதுங்கிக்கொண்டனர்.

'சத்தியமா இல்லம்மா... இன்னைக்கி டிஆர் மால்ல ஒருத்தன் மறந்து  விட்டுட்டு போய்ட்டான். அது எப்படி என் சாமான் கூடையில வந்துதுன்னு தெரியல. பில்லு போடறப்போ அந்த பேக்கிங் பையன் இந்தாங்க சார் உங்க ஃபோன்னு கையில திணிச்சிட்டான். வேற வழி தெரியல வாங்கிக்கிட்டு வந்துட்டேன். இப்ப என்ன பண்ரதுன்னு தெரியல..'

'சரி எடுத்துக்கிட்டு வந்தீங்க. இப்ப அவங்க வீட்லருந்துதான ஃபோன் பண்றாங்க? உங்க ஃபோன் இங்கதாங்க இருக்குன்னு சொல்லிற வேண்டியதுதான? அத விட்டுப்  போட்டு அந்தாளோட வய்ஃப் சூப்பரா இருக்கான்னு வழியறீங்க?' ராஜியின் குரலில் தெரிந்த எரிச்சல் ரவியையும் தொற்றிக்கொண்டது.

'இவ ஒருத்தி பூஜை நேரத்துல கரடி மாதிரி....' என்று மனதுக்குள் நினைத்தான்.

'என்ன கம்முன்னு ஒக்காந்திருக்கீங்க?' என்றாள் ராஜி எரிச்சலுடன். 'அந்த நம்பருக்கு ஃபோன் போடுங்க.'

'இல்லம்மா...' என்று இழுத்தான் ரவி.'ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆயிருந்தது. நாந்தான் சார்ஜர் ஒன்ன வாங்கி.....

'எதுக்கு? நீங்க எதுக்கு தண்டத்துக்கு சார்ஜர் வாங்கனீங்க? அதுலருக்கறத அழிச்சிட்டு கைமாத்தறதுக்குத்தான?'

'சீச்சி... சத்தியமா இல்லம்மா..'

'பின்ன?'

அவளிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்ற யோசனையுடன் பதில் பேசாமல் அமர்ந்திருக்க ராஜியின் கோபம் அதிகரித்தது.

'என்ன சத்தத்தையே காணம்? ஆபீஸ்ல ஃபோன திருடுனீங்களே அப்பவே அவங்க போலீஸ் கம்ப்ளைண்ட் குடுத்திருந்தா என்ன ஆயிருக்கும்? நா வந்து ஒங்க எம்டி கால்ல விழுந்து கெஞ்சினதுனால விட்டார்.... இந்த லட்சணத்துல இத வேற நோண்டி முட்டாள்தனமா எதையாச்சும் செஞ்சிட்டு மாட்டிக்கிட்டீங்க... நா பாட்டுக்கு பிள்ளைங்கள கூட்டிக்கிட்டு ஊர பாக்க போயிருவேன்...'

அவளுடைய குரலில் இருந்த கோபம் அவனை திடுக்கிட வைத்தது.

'இல்லம்மா... அப்படியெல்லாம் எந்த ஐடியாவும் இல்லை...' என்று இழுத்தான்.

'அப்புறம் எதுக்கு இந்த ஃபோன கை நீட்டி வாங்கனீங்க. அவன் நீட்னப்பவே என்னது இல்லன்னு சொல்லிற வேண்டியதுதான?'

'சொல்லியிருக்கலாம்தான்... அப்ப தோனலை... வேணும்னா நாளைக்கி காலையில திருப்பி குடுத்துட்டு வந்துற்லாம். என்ன சொல்ற?.

'தேவையில்லாததையெல்லாம் செஞ்சிட்டு இங்க வந்து கேளுங்க..... ஃபோன வாங்குனதுதப்புன்னா... அத தேவையில்லாம திறந்து பாத்தது அத விட பெரிய தப்பு.' என்று சீறிய ராஜி அவனிடமிருந்து செல்பேசியை பிடுங்கி திரையிலிருந்த ஆப்களை பார்த்தாள். 'இதுல அந்தாளோட பேங் ஆப்லாம் நிறைய இருக்கு போலருக்கு?'

'அப்படியா?' என்று ஒன்றும் தெரியாதவனைப் போல் எட்டி தன் கையிலிருந்த ஃபோனைப் பார்த்தவனை வெறுப்புடன் தள்ளிவிட்டாள் ராஜி.

'ஒன்னும் தெரியாத மாதிரி ஆக்ட் குடுக்காதீங்க. நீங்க வந்ததுலருந்து அரை மணி நேரமா இந்த ரூமுக்குள்ள இந்த ஃபோனதான் நோன்டிக்கிட்டிருந்தீங்க? உண்மைய சொல்லுங்க.... ஏதாச்சும் தில்லுமுல்லு பண்ணீங்களா?

இல்லை என்பதுபோல் ரவி தலையை அசைக்க 'அப்ப குடுங்க ஃபோன. இத எப்படி எங்க சேக்கணும்னு நா டிசைட் பண்ணிக்கறேன்.'

'இல்ல வேணாம்... அவன் போலீஸ் கீலீஸ்னு போயிருந்தா பிரச்சினையாயிரும். இத நானே டீல் பண்ணிக்கறேன்.. நீ போய் படு.'

'வேணவே வேணாம்.... இனியும் உங்கள நம்பி இத உங்கக்கிட்ட விட்டு வைக்க முடியாது' என்று மறுத்த ராஜி அவனிடமிருந்து செல்பேசியை பிடுங்கிக்கொண்டு

அறையிலிருந்து வெளியேறி கதவைச் சாத்தினாள்.

கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம போயிருச்சே என்ற ஏக்கத்துடன் உடை மாற்றிக்கொண்டு குளிக்க போனான் ரவி.



*******



இந்த கதை இப்படி முடியாம இருந்தா?

அத நாளைக்கு பாக்கலாம்.



12 செப்டம்பர் 2019

பொதுத்துறை வங்கிகளின் இணைப்பின் பின்னணி என்ன?

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களால் அறிவிக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு திட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துமே மிகவும் நலிவடைந்த வங்கிகளாகும். 

நிரவ் மோடியுடன் கூட்டு சேர்ந்துக்கொண்டு வங்கி ஊழியர்கள் செய்துக்கொண்டிருந்த மோசடியை பல ஆண்டுகளாக கண்டுக்கொள்ளாமல் இருந்ததன் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளை இழந்த பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியன்டல் பேங் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளை இணைத்து இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியாக உருவாகப்போகிறது என்கிறார்கள்.  இந்த மூன்று வங்கிகளுடைய ஒட்டுமொத்த வைப்பு நிதி மற்றும் அவை வழங்கியுள்ள கடன் தொகைகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் இந்திய ஸ்டேட் வங்கிக்கு அடுத்த வங்கியாக உருவெடுக்கும் என்பது உண்மைதான். ஆனால் இவற்றின் ஒட்டுமொத்த வாராக்கடன்களின் அளவும் நாட்டிலேயே அதிகமானதாகத்தான் இருக்கும்.  இவை மூன்றுமே வட இந்தியாவில் அதிக கிளைகளைக் கொண்டுள்ள வங்கிகளாகும். இவற்றை இணைப்பதன் மூலம் ஒரே நகரத்தில் ஏன் ஒரே சாலையில் கூட பல கிளைகளைக் கொண்டுள்ள வங்கியாகவும் மாறும் சூழல். 

அடுத்து தென் இந்தியாவைச் சார்ந்த அதுவும் ஒரே மாநிலத்தில் தலைமையலுவலகத்தைக் கொண்டிருக்கும் கனரா மற்றும் சின்டிகேட் வங்கிகள். மேலே குறிப்பிட்ட வட இந்திய வங்கிகள் அளவுக்கு மோசமான நிலைமையில் இவ்வங்கிகள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் ஒரே மாநிலத்தைச் சார்ந்தவை என்பதால் பல கிளைகளை மூடவோ இடமாற்றம் செய்யவோ வேண்டியிருக்கும். 

மூன்றாவது வங்கி யூனியன் வங்கி, ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகளை இணைத்து உருவாக்கப்படவுள்ளது. இதில் மிகப்பெரிய அளவில் நிர்வாக சீர்திருத்தங்கள் செய்ய தேவையிருக்காது. ஆனால் இதுவரை சுமாராக இயங்கி  வரும் யூனியன் வங்கியின் நிதிநிலமை மற்ற இரு வங்கிகளின் வாராக் கடன் மற்றும் அவற்றின் மோசமான நிதிநிலையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இணைப்புக்குப் பிறகு யூனியன் வங்கி அதிகாரிகளின் கையே ஓங்கி நிற்கும். ஏனெனில் இதனுடன் ஒப்பிடுகையில் அனைத்து வகையிலும் மற்ற இரு வங்கிகளும் சிறியவை.

நான்காவது இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கிகளை இணைத்து உருவாக்கப்படவுள்ளது. ஒன்று மேற்கு வங்கத்தைச் சார்ந்தது. இன்னொன்று தமிழகத்தைச் சார்ந்தது.   ஆனால் அலகாபாத் வங்கியின் மிக அதிக அளவிலான வாராக்கடன்கள் இந்தியன் வங்கி ஈட்டக்கூடிய மொத்த லாபத்தையும் விழுங்கிவிடும் போலுள்ளது. 

இந்த பத்து வங்கிகளை இணைத்து வர்த்தக அளவில் நான்கு பெரிய வங்கிகளாக உருவாக்குவதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் நடவடிக்கைகளில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஏனெனில் இந்திய வங்கித்துறையின் செயல்பாடுகளில் குறைகளாக உலக வங்கி குறிப்பிட்டுள்ள அனைத்தும்  இணைப்புக்குப் பிறகும் தொடரத்தானே போகிறது.

1. வங்கி செயல்பாடுகளில் ஆட்சியாளர்களின் தலையீடு.  இது என்றும் தொடரும் தொடர்கதையாகத்தான் இருக்கும்.

2. வாடிக்கையாளர்களின் கடன் தேவைகளை சரியாக கணிக்கும் திறன் இந்திய வங்கிகளிடம் இல்லை . இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளான வங்கி அதிகாரிகள்தானே இணைப்புக்குப் பிறகும் இந்த வங்கிகளை வழிநடத்தப் போகிறார்கள்? அப்படியானால் அவர்களுடைய கணிக்கும் திறனில் முன்னேற்றம் ஏற்படவா போகிறது? வங்கிகள் பெரிதானால் அவர்களுடைய கடன் வழங்கும் திறன் பெருகும் வங்கிகளும் வலுவடையும் என்கிறார் நம்முடைய நிதியமைச்சர். 

நூறு ரூபாயை வைத்துக்கொண்டு இலாபம் ஈட்ட தெரியாதவனிடம் ஆயிரம் ரூபாயை கொடுத்தால் சரியாகிவிடும் என்பதுபோல் இருக்கிறது. மேலும்  கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வாணம் ஏறி வைகுண்டம் போறானாம் என்பார்களே அதுபோல் உள்ளது நிதியமைச்சரின் இந்த கணிப்பு.

ஆக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ள இரண்டு குறைபாடுகளுமே வங்கிகளின் இணைப்புக்குப் பிறகும் தொடரத்தான் போகின்றது.

வங்கிகளின் இணைப்புக்கு இது ஒரு காரணமாக நிதியமைச்சர் கூறினாலும் உண்மையான காரணம் அதுவல்ல என்று நினைக்கிறேன். இணைக்கப்படவுள்ள வங்கிகளுடைய சமீபத்திய நிதிநிலை அறிக்கைகளை ஆய்வு செய்ததில் நான் கண்டது இதுதான். இவை வழங்கிய மொத்த கடன்களில் யாருக்கு அதிக அளவில் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை கீழேயுள்ள படத்தை  பார்த்தாலே புரிந்துவிடும்.



சமீபத்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையின் படி வங்கிகளிலுள்ள மொத்த வாராக்கடன்களில் கார்ப்பரேட் குறிப்பாக சேவைத் துறை மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட கடன்கள்தான் அதிகம் அதாவது 75 விழுக்காடு! இதையும் வங்கிகளின் மொத்தக் கடன் தொகையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது சுமார் 50 விழுக்காடு என்ற உண்மையையும் ஒப்பிட்டு பார்க்கும்போது இன்றை பொதுத்துறை வங்கிகளின் அவல நிலைக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் காரணம் என்பது தெளிவாக புரிகிறது.

சிறு சிறு வங்கிகளாக செயல்பட்டுக்கொண்டிருக்கும்போதே விவசாயத்துக்கும் சிறு குறு தொழில்களுக்கும் 20 விழுக்காட்டுக்கும் குறைவாக கடன் வழங்கி வரும் இந்த வங்கிகள் இணைக்கப்பட்டு பெரும் வங்கிகளானால் யாருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் எனறு நினைக்கிறீர்கள்? அது நிச்சயம் விவசாயம், சிறு குறு தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களாக இருக்க வாய்ப்பேயில்லை. இதே நிலைதான் தனிநபர் கடன்களுக்கும் ஏற்படும். 

தற்போது வங்கிகளுடைய முதலீட்டு தொகையில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு வரையில் மட்டுமே கடன் வழங்க முடியும் என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதன் படி பார்த்தால் தனித்தனியாக குறைந்த அளவு முதலீட்டுடன் இயங்கி வரும் இந்த வங்கிகளால் பெரிய அளவில் கடன் தேவைப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் பல சிக்கல்கள் உள்ளன. ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஐந்தாயிரம் கோடி கடன் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.  இப்போதுள்ள சூழலில் அத்தனை பெரிய கடனை தனியாக வழங்க பெரும்பான்மையான வங்கிகளால் முடியாது. அந்த சூழலில் கார்ப்பரேட் நிறுவனம் பிரதான கணக்கு வைத்திருக்கும் வங்கி பிற வங்கிகளுடன் இணைந்து கூட்டாக அந்த கடனை வழங்க ஒரு அமைப்பை (consortium) ஏற்படுத்தும். மொத்த கடன் தொகையை தங்களுடைய தகுதிக் கேற்ப பிரித்துக் கொள்ளும். இதனால் கடன் வழங்குவதிலும் அதன் பிறகு கடனை நிர்வகிப்பதிலும் வசூலிப்பதிலும் இந்த வங்கிகள் அனைத்தும் கூட்டாக மட்டுமே எந்த முடிவையும் எடுக்க முடியும். இது கடன் வழங்கும் வங்கிகளுக்கும் கடன் பெறும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் பல சிக்கல்களை ஏற்படுத்தும்  தனித்தனியாக இயங்கிவரும் சிறிய வங்கிகளை இணைப்பதன் மூலம் இந்த சிக்கல்களை முழுமையாக தவிர்க்க முடியும் என்பதாலும் இந்த வங்கி இணைப்பு நாடகம் அரங்கேற்றப்படுகிறது. இதனால் வங்கிகளின் வர்த்தகம் வேண்டுமானால் படு வேகமாக வளரும். ஆனால் அந்த வர்த்தகம் வலுவானதாக பாதுகாப்பானதாக இருக்குமா என்பதுதான் கேள்வி. இதையே தான் பாதிக்கப்படவுள்ள வங்கிகளின் வங்கி ஊழியர் சங்கங்களும் கூறுகின்றன. 

மேலும் வளர்ந்துவிட்ட வங்கி முன்பு போல் விவசாயம், சிறு குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் கடன்களை வழங்குவதில் அக்கறை காட்டுமா என்பதும் கேள்விக்குறி.

மத்தியில் ஆளும் பாஜகவின் தேவையும் இதுவாக இருக்கலாம். ஏனெனில்  கடந்த தேர்தலுக்கு முன்னால் கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடையில் சுமார் 90 விழுக்காட்டுக்கும் மேல் பாஜகவுக்குத்தான் வழங்கப்பட்டது என்பதை பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டதை கண்டிருப்பீர்கள். ஆகவே அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதை ஆட்சியாளர்கள் விரும்புவார்கள். 

இதுதான் இந்த இணைப்பின் பின்னால் இருக்கும் உண்மையான காரணமாக இருக்கக் கூடும்.

இதனால் அதிகம் பாதிக்கப்பட போகிறவர்கள் வங்கி ஊழியர்கள். பத்து வங்கிகளை இணைத்து அதுவும் நாட்டின் ஒரே பகுதியில் இயங்கி வரும் வங்கிகள் இணைக்கப்படும்போது நிச்சயம் பல கிளைகள் ஒருங்கிணைக்கப்படுவதை தவிர்க்க வாய்ப்பே இல்லை. யாருக்கும் பணியிழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று நிதியமைச்சர் கூறினாலும் பணியிழப்பு ஏதாவது ஒரு வகையில். அது கட்டாய அல்லது விருப்ப ஓய்வாக இருக்கலாம், அல்லது மறைமுக பணியிழப்பு அதாவது வலுக்கட்டாயமாக பணியிட மாற்றம் செய்யப்படும் சூழலில் ஊழியர்களே பணியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்படலாம். பணியிழப்பு எந்த ரூபத்தில் வந்தாலும் அது இழப்புத்தானே?

சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விவாதத்தில் வங்கிகள் இணைப்பு வங்கி ஊழியர்களுக்கு வேண்டுமானால் சிக்கலை ஏற்படுத்தலாம் ஆனால் மொதுமக்களுக்கு அது நல்ல பலனையே தரும் என்று பாஜக பேச்சாளர் கூறினார். இதுதான் அந்த கட்சி தலைமையின் நிலைப்பாடாக இருக்கலாம். 

ஆனால் எந்த ஒரு நிறுவனமும் நல்ல நிலையில் இயங்க வேண்டுமென்றால் முதலில் அதில் பணியாற்றும் ஊழியர்களுடைய நலனில் நிர்வாகம் அக்கறை காட்டவேண்டியது அவசியம், மன நிறைவு இல்லாமல் பணியாற்றும் ஊழியர்களால் பணியாற்றும் நிறுவனத்திற்கும் எந்த பலனும் கிடைக்காது அதனுடைய வாடிக்கையாளர்களுக்கும் சரியான சேவையை வழங்க முடியாது. நாட்டின் மிகப் பெரிய சேவை (srvices) நிறுவனங்களான பொதுத்துறை வங்கிகளின் எஜமானர்களான இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் இதை மறந்துவிடக் கூடாது.

இன்று இருக்கும் ஆட்சியாளர்கள் நாளை இருப்பதில்லை. அதில் பாஜகவும் விதிவிலக்கல்ல. சிறையில் தள்ளுபவர்களே பிற்காலத்தில் சிறைக்கு செல்ல நேரிடுவதை கண்கூடாக காண்கிறோம்.

இதை உணர்ந்து இணைக்கப்படும் வங்கிகளை இணைப்புக்குப் பிறகு நிர்வாக பொறுப்பில் அமர்த்தப்படும் அதிகாரிகள் ஆட்சியாளர்களின் 

தலையீட்டுக்கு அஞ்சி வங்கிகளை பாதிக்கும் முடிவுகளை எடுக்கலாகாது. அது நாளை உங்களையே பாதிக்கலாம். நீங்கள் பாதிக்கப்படும்போது அதற்கு காரணமாயிருந்த அரசியல்வாதிகளோ, அரசு அதிகாரிகளோ உங்களை காப்பாற்ற வரப்போவதில்லை.

இணைக்கப்படவிருக்கும் வங்கிகளில் யூனியன் வங்கி, கனரா வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகிய மூன்றைத் தவிர மற்ற ஏழு வங்கிகளும் கடந்த சில ஆண்டுகளாகவே நஷ்டத்தில் இயங்கிவருகின்றன. இவை சேர்த்து வைத்துள்ள வாராக்கடன்களால் இதுவரை இலாபத்தில் இயங்கிவந்த மற்ற மூன்று வங்கிகள் ஈட்டுகின்ற இலாபத்தை இணைக்கப்படவுள்ள வங்கிகள் முழுவதுமாக கரைத்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனை.

*********

11 செப்டம்பர் 2019

பொதுத்துறை வங்கிகள் இணைப்பின் பின்னணி.

வாராக் கடன்கள் 

2001ம் ஆண்டு வரை ஒரு கடன் கணக்கில் பற்று வைக்கப்படும் வட்டித் தொகையானது அது வாடிக்கையாளரால் திருப்பி செலுத்தப்பட்டாலும் நிலுவையில் இருந்தாலும் அது வங்கியின் வருமானமாக கருதப்பட்டது. இதன் விளைவாக வங்கிகள் தங்களுடைய ஆண்டு நிதிநிலை அறிக்கைகளில் காட்டி வந்த இலாப தொகைகள் உண்மையிலேயே ஈட்டப்பட்டதுதானா என்கிற ஐயம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட துவங்கியது. மேலும் பற்று வைக்கப்பட்ட வட்டித் தொகைகளை வசூலிப்பதில் வங்கிகள் போதிய அக்கறை காட்டுவதில்லை என்பதையும் இந்திய ரிசர்வ் வங்கி தங்களுடைய தணிக்கைகளில் கண்டுபிடித்தது.

இந்த குறையை போக்கும் நோக்கத்துடன் 31.3.2001ல் ஒரு சுற்றறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு அனுப்பியது. அதில்  வட்டி, அல்லது தவணைத் தொகை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு செலுத்தப்படாமல் இருந்தால் அந்த கணக்குகள் குறையுள்ள கணக்குகளாக I(Substandard)கருதப்பட வேண்டும் என்றும் அத்தகைய கணக்குகளில் பற்று வைக்கப்பட்ட வட்டி தொகைகள் வங்கியின் இலாப கணக்கில் வருவாயாக எடுத்துக்கொள்ளப்படக் கூடாது என்றும் வங்கிகள் அறிவுறுத்தப்பட்டன.

இந்த அதிரடி உத்தரவால் நாட்டில் பல வங்கிகள் குறிப்பாக பொதுத்துறை வங்கிகளுடைய உண்மையான நிதி நிலை வெட்ட வெளிச்சமானது. இதுவரை இலாபத்தில் இயங்கிவந்த  பல வங்கிகள் நஷ்ட கணக்கு காட்ட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டன. 

மேலும் இத்தகைய கணக்குகள் வாராக் கடனாக கருதப்பட்டு அவற்றில் நிலுவையிலுள்ள தொகைகளில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு தொகையை ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் தங்களுடைய இலாபத்தில் இருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வங்கிகள் அறிவுறுத்தப்படவே வங்கிகளின் நிதிநிலமை இன்னும் மோசமானது. பெரும்பாலான பொதுத்துறை  வங்கிகள் பெருத்த இழப்பை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் அவற்றின் முதலீடும் (capital) பெருமளவு சரியத் துவங்கியது.  வாராக் கடன்களின் அளவோ  2001 ஆண்டு இருந்த அளவிலிருந்து வளர்ந்து வளர்ந்து இப்போது ஒரு பூதாகரமான நிலையை அடைந்துள்ளதை கீழ்காணும் படத்தில் காணலாம்.  இத்தகைய கடன்களில் சுமார் 90 விழுக்காடு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் என்கிறது ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கை.


(1 trillion=1lakh crores)


அத்துடன் வங்கிகள் தங்களுடைய முதலீட்டில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு வரை மட்டுமே கடன் வழங்க முடியும் என்ற ரிசர்வ் வங்கியின் நிபந்தனையும் வங்கிகளின் கடன் வழங்கும் திறனை வெகுவாக பாதிக்க துவங்கியது. இதனை தொடர்ந்து வங்கிகளின் வருவாய் ஈட்டும் திறனும் சரியத் துவங்கியது. விளைவு? வங்கிகளின் நஷ்டம் நாளுக்கு நாள் பெருகி சில வங்கிகளின் முதலீடு முழுவதுமாக கரைந்து போயின. 

இந்த சூழலிலிருந்து பொதுத்துறை வங்கிகளை மீட்டெடுக்கத்தான் மத்திய அரசு அவ்வப்போது மத்திய நிதியிலிருந்து ஒரு கணிசமான தொகையை வங்கிகளுக்கு முதலீடாக வழங்கத்துவங்கியது. துவக்கத்தில் ஆயிரக்கணக்கான கோடிகள் என்ற நிலை இப்போது இலட்சம் கோடிகளாக உயர்ந்துள்ளது. அதாவது மக்கள் செலுத்தும் வரிப்பணம் இத்தகைய வங்கிகளுக்கு முதலீடாக சென்றடைகின்றன. இதன் விளைவாக வரியை நேர்மையுடன் செலுத்தும் மக்களுக்கு நேரிடையாக எவ்வித பலனும் கிடைப்பதில்லை. சமூக நலத்திட்டங்களுக்கு செலவழிக்கவோ அல்லது இயற்கை சீற்றத்தால் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய நிவாரணம் அளிக்கவோ அல்லது விவசாயக்கடன்களை ரத்து செய்யவோ போதிய நிதி இல்லை என்பதை காரணம் காட்டி புறக்கணிக்கும் மத்திய அரசு வங்கிகளின் முதலீட்டை கூட்டுவதற்கு லட்சோப லட்ச கணக்கில் வாரி இறைப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுவதில் என்ன தவறிருக்க முடியும்?

கடந்த நிதியாண்டில் பல பொதுத்துறை வங்கிகள் நஷ்ட நிலையிலிருந்து மீண்டு வந்துள்ளன என்று இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்தாலும் இது உண்மையான நிலை அல்ல என்று பல பத்திரிகைகளும் பொருளாதார நிபுணர்களும் எழுதி வருவதை காண முடிகிறது. வாராக்கடனாக ஏற்கனவே கணிக்கப்பட்ட கணக்குகளை மறுசீரமைப்பு (restructuring) என்ற பெயரில் மறுவாழ்வு அளித்து அவற்றை இன்னும் சில மாதங்களுக்கு அதாவது அடுத்த நிதியாண்டு வரையிலும் வங்கிகள் நீட்டித்து வருகின்றன என்பதுதான் உண்மை. ஆனால் இவற்றில் நிலுவையிலுள்ள வட்டியையோ அல்லது மாதத் தவணைகளையோ சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து உண்மையிலேயே வசூலிக்கப்படுகின்றனவா என்பது சந்தேகமே. வங்கிகள் கடன்களை கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து வசூலிப்பதை விட எழுதித் தள்ளுவதே அதிகம் என்பதை கீழுள்ள படத்தை பார்த்தாலே தெரியும்



இதுதான் இன்றை பொதுத்துறை வங்கிகளின் உண்மையான நிலமை.

ஜி20 நாடுகளில் இரண்டாவது மிகவும் மோசமான வங்கித் துறையைக் கொண்டிருப்பது இந்தியா என்கிறது உலக வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கை. பொதுத்துறை வங்கிகளின் இத்தகைய பரிதாபகரமான நிலைமைக்கு முக்கியமான காரணங்களாக உலக வங்கி முன்வைப்பது வங்கிகளின் கடன் கொள்கைகள்தானாம். அதாவது இந்திய வங்கிகளுக்கு வாடிக்கையாளரின் கடன் தேவைகளை சரியாக கணிக்கும் திறன் இல்லை என்றும் பெரும்பாலான வங்கி செயல்பாடுகளின் ஆட்சியாளர்களின் தலையீடு இருப்பதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டுகிறது. 

இது எனக்கு தெரிந்தவரை உண்மை தான். இன்று வங்கிகளில் உயர்பதவியில் அமர்ந்திருக்கும் பல அதிகாரிகள் ஆட்சியாளர்களின் தயவாலும் பரிந்துரையாலும் அந்த பதவியை அடைந்தவர்களே. ஆகவே ஆட்சியாளர்களின் தேவைகளை அவ்வப்போது நிறைவேற்றியே தீரவேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். இது இப்போதைய ஆட்சியாளர்களை மட்டும் குறை சொல்வதில் பயனில்லை. வங்கிகள் எப்போது நாட்டுடமை ஆக்கப்பட்டனவோ அப்போதிலிருந்தே மத்தியிலும் மாநிலங்களிலும் அதிகாரத்திலுள்ளவர்களின் தலையீடு இருந்து வந்ததை மறுப்பதற்கில்லை. 

இத்தகைய சூழலில் நலிவடைந்துள்ள பொதுத்துறை வங்கிகளை இணைப்பதன் மூலம் சரிவை சரிக்கட்டிவிட முடியும் என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்திருப்பது வியப்பளிக்கிறது. 

அதை நாளை பார்க்கலாம்.....

10 செப்டம்பர் 2019

வங்கிகள் இணைப்பின் பின்னணி என்ன?

1969 ஆம் ஆண்டு முதன் முறையாக நாட்டில் அப்போது இயங்கிவந்த  பதினான்கு பெரிய தனியார் வங்கிகள் (50 இலட்சத்திற்கும் அதிகமான வைப்பு நிதி (Deposit) கொண்டிருந்த) வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இதன் பின்னால் அரசியல்தான் இருந்ததே தவிர நாட்டின் பொருளாதாரம் உயர்வடைய வேண்டும் என்றோ அல்லது ஏழை எளிய மக்கள் எளிதாக கடன் பெற வேண்டும் என்ற எண்ணமோ இருப்பதாக தெரியவில்லை என அப்போதே பல எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதன் பிறகு பதினோரு ஆண்டுகள் கழித்து மேலும் ஆறு (அதாவது ரூ.200 இலட்சம் வைப்பு நிதி கொண்டிருந்த)வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. 

தேசியமயமாக்கப்பட்டபோது அரசால் முன்வைக்கப்பட்ட காரணங்களுள் மிக முக்கியமானது என்னவென்றால் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மக்களும் எளிதில் கடன் பெற முடிவதுடன்  வங்கி சேவைகள் நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்றடையும் என்பது. 

இந்த இரு நோக்கங்களும் பெரும்பாலும் நிறைவேறியுள்ளன என்பதை மறுக்க முடியாது.:

1. தேசியமயமாக்கப்பட்டதிலிருந்து அதாவது கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாட்டிலுள்ள மொத்த வங்கி கிளைகளின் எண்ணிக்கை சுமார் 8,500லிருந்து 1.45,000 ஆக உயர்ந்துள்ளது. இவற்றுள் சுமார் 90% கிளைகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் என்றால் மிகையல்ல.



2. சுமார் 65000 வாடிக்கையாளர்களுக்கு ஒரு வங்கி கிளை என்ற 1969ம் வருட நிலையிலிருந்து சுமார் 14,000 வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிளை என்ற அளவுக்கு வங்கிகள் நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ளன. இவற்றுள் ஐம்பது விழுக்காடு கிளைகள் கிராம மற்றும் சிறிய நகர்ப்புறங்கிளில் செயல்படுகின்றன. 

3.1969ம் ஆண்டு வரை வசதிபடைத்தவர்களுக்கு மட்டும் வங்கிக் கடன் என்ற நிலை மாறி விவசாயம், சிறு, குறு தொழில்கள், சில்லறை வணிகம் என  நாட்டில் யார் வேண்டுமானாலும் வங்கிகளை அணுகி மிகுந்த சிரமம் இல்லாமல் கடன் பெற முடியும் என்ற நிலை உருவானது.

4. வங்கிகளில் கணக்கு துவங்கும் பழக்கமும் மிகப் பெரிய அளவில் பெருகிவருவதையும் பார்க்க முடிகிறது. கடந்த ஐம்பதாண்டுகளில்  வங்கி சேமிப்பு (DEPOSIT) தொகை ரூ.1,24,000 billion (1 Billion=100 crores) என்ற எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இத்தொகையில் நீண்ட கால வைப்புத்தொகை (fixed deposits) ஐம்பது விழுக்காட்டிலிருந்து சுமார் தொன்னூறு விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. இது நாட்டிலுள்ள வங்கிகள் மீது குறிப்பாக பொது வங்கிகள் மீது மக்கள் வைத்திருக்கும் அபிரிமிதமான நம்பிக்கையை காட்டுகிறது எனலாம். 

5. இதே போன்று வங்கிகள் கடனாக வழங்கும் தொகையும்  ரூ.1,05,000 billion அளவுக்கு  உயர்ந்துள்ளது.




சுருக்கமாக கூற வேண்டுமென்றால் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு நாடு அடைந்த பொருளாதார வளர்ச்சிக்கு பொதுத்துறை வங்கிகள் பெருமளவு உதவிசெய்துள்ளன என்பது உண்மைதான். 

ஆனால் நாட்டுடமையாக்கப்படுவதற்கு முன்பு சிறிய அளவில் கட்டுப்பாடுடன் இயங்கிவந்த தனியார் வங்கிகளின் கிளைகள் கட்டுக்கடங்காத அளவுக்கு பெருகியதாலும் அதன் விளைவாக ஏற்பட்ட மிகப் பெரிய வணிக வளர்ச்சியாலும் நிர்வாக ரீதியாக பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழலுக்கு வங்கிகள் தள்ளப்பட்டன என்பதும் உண்மை. இன்று பொதுத்துறை வங்கிகளில் பல பெரும் நஷ்டத்தில் இயங்கிவருவதற்கு இத்தகைய அபிரிதமான வளர்ச்சியும் ஒரு முக்கியமான காரணமாக கருதப்படுகின்.றது.

மிகப் பெரிய அளவிலான விரிவாக்கம்  மிகப் பெரிய அளவிலான வைப்புத் தொகைகளையும் வங்கிகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து ஈட்டித் தந்தன. வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட வைப்பு தொகைகளுக்கு நியாயமான அளவிலான வட்டி அளிப்பதற்கு அவற்றை அதிக அளவில் கடனாக வழங்க வேண்டிய அவசியமும் வங்கிகளுக்கு உருவானது. இலட்ச கணக்கில் கடன் வழங்கி வந்த வங்கிகள் கோடிக் கணக்கில் வழங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டன. இது மேலும் மேலும் பலுகிப் பெருகி இன்று ஒரே நிறுவனத்திற்கு ஆயிரம், இரண்டாயிரம் கோடிகள் என கடன் வழங்கும் நிலையை நாட்டுடமையாக்கப்பட வங்கிகள் அடைந்துள்ளன. 

கோடிகள் ஆயிரக் கணக்கில் பெருகி இன்று இலட்சம் கோடி என்ற பெரும் தொகைகயை நாட்டிலுள்ள வெகு சில கார்ப்பரேட் நிறுவனங்களை மிகப் பெரிய வணிக மற்றும் தொழில் நிறுவனங்களாக இந்த வங்கிகள் உருவாக்கியுள்ளதை காணமுடிகிறது.

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மிகச் சிறிய நிறுவனங்களாக இருந்த நிறுவனங்கள் பல இன்று உலக நிறுவனங்களாக  (multi-national ompanies) உருமாறியுள்ளன என்றால் அதற்கு மிக முக்கியமான காரணம் வங்கிகள் வழங்கிய கடன்களே என்றால் மிகையாகாது.

வங்கிகளிடமிருந்து எளிதாக பெற்ற கடன் தொகைகளை பெரும்பாலான நிறுவனங்கள் சரியாக பயன்படுத்தாத காரணத்தாலும், உலகளவில் பொருளாதாரம் சரிவை சந்தித்தாலும் பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்க துவங்கின. இதன் விளைவாக வங்கிக் கடன்களை திருப்பித் தர முடியாத சூழல் ஏற்பட்டது.

இதன் விளைவாக வங்கிகள் வழங்கிய கடன்கள் வாராக் கடன்களாக உருமாற வங்கிகளின் வருமானம் சரியத் துவங்கியது...

நாளையும் தொடரும்

02 செப்டம்பர் 2019

சுருங்கி வரும் பதிவர் வட்டம்

சுமார் பதினைந்து ஆண்டுகளாக கோலோச்சு வந்த தமிழ் வலைப்பூக்களின் (Blogs) திரட்டியான ‘தமிழ்மணம்’ செயலிழந்து போனதை அடுத்து தமிழ் பதிவர் வட்டம் வெகுவாக சுருங்கி போய்விட்டது என்றால் மிகையாகாது.

தமிழ் பதிவுகளை அவை எழுதப்பட்ட ஒரு சில நொடிகளிலேயே திரட்டி அவற்றை அழகாக வரிசைப் படுத்தி வெளியிட்டு வந்த ‘தமிழ்மணம்’ நிதிபற்றாக் குறை காரணமாக (அப்படித்தான் தோன்றுகிறது) சடுதியாக செயலிழந்துபோனது நம் தமிழ் பதிவர் வட்டத்துக்கு பெருத்த ஏமாற்றமாக போய்விட்டது.

தமிழ்மணம் போன்ற திரட்டிகள் பலவும் இன்று செயலிழந்து போனதும் உண்மை. அகில இந்திய அளவில் மிகவும் பிரபலமாக இருந்த இண்டிப்ளாகும் (Indieblog) கூட இப்போது புதிய அங்கத்தினர்களை ஏற்பதில்லை. கடந்த காலங்களில் இணைக்கப்பட்ட பதிவர்களின் பதிவுகளை மட்டும் இப்போதும் திரட்டி வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.  ஆனால் அது ஆங்கில வலைப்பூக்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் திரட்டி என்பதால் அதில் இடம் பெறும் தமிழ் பதிவுகள் வெகு வெகு சொற்பம்தான். அவர்களிலும் பலர் அவ்வப்போதுதான் எழுதுகிறார்கள்.

திரட்டிகள் செயலிழந்து நிற்கும் இத்தகைய சூழலில் பதிவுர்கள் எழுதும் பதிவுகளை மற்ற சக பதிவர்களுக்கோ அல்லது பொது வாசகர்களுக்கோ எடுத்துச் செல்வது அத்தனை எளிதல்ல என்பதை இப்போதும் தொடர்ந்து எழுதி வரும் பதிவர்கள் அறிவார்கள்.

பெரும்பாலான பதிவர்கள் தங்களுடைய சக பதிவாள நண்பர்கள் நட்பு அடிப்படையிலேயே கூகுள் தேடுதலை பயன்படுத்தி தேடிப் பிடித்து வாசித்து வருகிறார்கள் என்பதை ப்ளாகர் வெளியிடும் தகவல்களில் (Statistics) இருந்து அறிந்துக்கொள்ள முடிகிறது.

என்னுடைய பதிவுகளை வாசிக்கும் மொத்த வாசகர்களில் சுமார் 95 விழுக்காடு வாசகர்கள் கூகுள் தேடல் வழியாகத்தான் தளத்திற்கு வருகிறார்கள் என்பது கீழ்காணும் திரையை பார்த்தாலே தெரியும்


இந்த படத்தில் மேல் பகுதியில் கூகுள் தேடலுக்கு கீழே ஃபீட்லி (feedly) என்ற தேடல் இருப்பதை காணலாம்.

அது உண்மையில் ‘தேடல்’ அல்ல ‘திரட்டி’. திரட்டி என்பதை விட ’வாசிப்பான்’(reader) என்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த வாசிப்பானின் பெயரை சில மாதங்களுக்கு முன்பு தற்செயலாகத்தான் என்னுடைய ப்ளாகர் ’Stat' பகுதியில் பார்த்தேன். உடனே இது என்னவாக இருக்கும் என்ற எண்ணத்துடன் கூகுள் தேடலில் ‘feedly' என்று தேடிப்பார்த்தபோது கிடைத்ததுதான் இந்த அற்புத கையடக்க 'app.'

இதை உடனே என்னுடைய செல்பேசியில் தரவிறக்கம் செய்து அதில் கூறியுள்ளபடி செய்து எனக்கு தெரிந்த சில பதிவர்களின் பதிவு விலாசங்களை சேர்த்தேன். அவற்றில் சமீபத்தில் எழுதப்பட்ட பதிவுகளின் விவரங்கள் அடுத்த சில நிமிடங்களிலேயே கிடைத்தன.



ஸ்மார்ட் செல்பேசி (ஆண்டிராய்ட் அல்லது ஆப்பிள் iOS) வைத்திருப்பவர்கள் இந்த செயலியை (app) கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம். 

ஸ்மார்ட் செல்பேசி இல்லாதவர்கள் கனிணியிலும் இந்த மென்பொருளை பயன்படுத்தலாம்.

இந்த தளத்தின் விலாசம்: www.feedly.com

இதில் நுழைந்தவுடன் நாம் காணும் login திரை இது::



இந்த தளத்திற்குள் நுழைய (login) தனியாக கணக்கு எதுவும் தேவையில்லை . நம்முடைய கூகுள் அல்லது முகநூல் கணக்கையே பயன்படுத்தலாம்.


இதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி உள்ளே நுழைந்ததும் நாம் காணும் திரை:



இதில் ’தேடல்’ பெட்டியில் நீங்கள் விரும்பும் தளத்தின் பெயரை டைப் செய்த உடனே அதனுடைய பெயர் பெட்டியின் கீழே காண்பிக்கப்படும். அதையும் க்ளிக் செய்யுங்கள்.


உடனே அந்த தளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகளை காட்டும்.



இந்த திரையில் ‘follow' பட்டனை க்ளிக் பண்ணிட்டு அதுக்குக் கீழே ‘new feed' ஐயும் க்ளிக் செய்யுங்கள்.


இந்த திரையில் உங்களுடைய ‘new feed' பெயரை ‘தமிழ்’ என்றே தெரிவு செய்யுங்கள். ஏனெனில் இந்த தளத்தில் உலகெங்கும் உள்ள பல ஆங்கில பதிவுகளும் படிக்க கிடைக்கின்றன. 

நாம் தெரிவு செய்யும் பதிவுகள் பெரும்பாலும் தமிழில் இருக்கும் என்பதால் அந்த தொகுப்பின் பெயர் தமிழ் என்று இருந்தால் அவை அனைத்தையும் இந்த தொகுப்பிலேயே சேமித்து வைத்தால் பிறகு படிப்பதற்கு எளிதாக இருக்கும். 

இவ்வாறு நீங்கள் படிக்க விரும்பும் அனைத்தும் தளங்களையும் அதாவது RSS FEED உள்ள் சுமார் 100 தளங்களை இந்த இலவச மென்பொருளில் (free version) சேமித்துக்கொள்ளலாம். நாம் சேமித்த தளங்களின் பட்டியல் திரையின் இடது பகுதியில் காண்பிக்கப்படும்.

இதில் சேமிக்கப்பட்டுள்ள தளங்களில் பதிவு செய்யப்படும் பதிவுகள் அவை பதியப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே இந்த செயலியில் தரவிறக்கம் செய்யப்படுவதை கண்டிருக்கிறேன். 

செல்பேசியில் என்றால் உடனே அழைப்பான் (notification) வரும். கனிணி என்றால் நாம் இந்த feedly.com தளத்தில் நுழைந்தவுடனேயே புதிதாக வந்துள்ள பதிவுகளின் பட்டியல் காட்டப்படும்.

நான் என்னுடைய செல்பேசியில் சேமித்து வைத்துள்ள பட்டியலிலுள்ள அனைத்து தளங்களின் நகல்களையும் என்னுடைய கனிணியிலும் காண முடிகிறது. இதற்கென்று மீண்டும் உள்நுழைய (login) தேவையில்லை. 

என்னுடைய செல்பேசியில் நான் சேமித்து வைத்துள்ள சுமார் பதினைந்து பதிவர்களின் தளங்களின் பட்டியலை மேலே வெளியிட்டுள்ளேன். இதில் இடம் பெறாத பதிவர்கள் தங்களுடைய தளத்தின் விலாசத்தையும் தாங்கள் பருந்துரைக்கும் பதிவர்களின் தளங்களுடைய விலாசங்களையும் இந்த பதிவின் கருத்துரையில் (comments) நானும் அவற்றை சேமித்துக்கொண்டு இனி வரும் காலங்களில் படிக்க உதவியாக இருக்கும். நன்றியுள்ளவனாகவும் இருப்பேன்.

**********