எம்.ஜி.ஆருடன் சந்திப்பு - 5
Climax No.2
நல்ல விதமாய் விழா முடிந்தது என்ற சந்தோஷத்தில் அன்று என்னுடன் கிளையில் பணிபுரிந்த நண்பர்களுக்கு ஒரு சிறிய விருந்து கொடுத்துவிட்டு வீடு திரும்பிய போது நள்ளிரவை கடந்திருந்தது..
அடுத்த நாள் காலை வங்கியின் முதல் அலுவலக நாள். காலையிலேயே செல்ல வேண்டியிருந்தது.
சென்னையில் பிரபல உணவு விடுதியில் தங்கியிருந்த எங்களுடைய வங்கி தலைவரையும் Board Members ஐயும் மாலையில் சென்று வழியனுப்ப வேண்டியிருந்ததால் என்னுடைய துணை மேலாளரை அழைத்து அன்று மதியம் செய்யவேண்டியிருந்த எல்லா அலுவல்களையும் குறித்து விளக்க வேண்டும் என்ற நினைப்புடன் மளமளவென முந்தைய நாள் துவக்கப்பட்ட கணக்குகளை சரிபார்த்துக்கொண்டிருந்த சமயம்..
சுமார் காலை 10.00 மணி.
என்னுடைய மத்திய கிளை மேலாளரிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு. எடுத்து காதில் வைத்ததுதான் தாமதம்.. மேலாளரின் கோபக்குரல்..
‘என்ன டி.பி.ஆர். என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க அங்க? உங்கள இங்க காணாம எல்லா Board Membersம் அப்செட்டாயிருக்காங்க.. எல்லா வேலையையும் அப்படியே போட்டுட்டு ஹோட்டலுக்கு வாங்க.. அர்ஜென்ட்..’
எனக்கு என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை..
உடனே சென்னையிலிருந்த என் வங்கியினுடைய வேறொரு கிளை மேலாளரை தொலைப்பேசியில் அழைத்தேன். அவர் Chairman தங்கியிருந்த ஹோட்டலுக்கு போயிருப்பதாயும் என்னை அவர் என்னுடைய வீட்டு தொலைப்பேசியில் பலமுறை அழைத்தும் நான் எடுக்காததால் எனக்கு தெரிவிக்க முடியவில்லை என்றும், நான் அழைத்தால் உடனே ஹோட்டலுக்கு புறப்பட்டு வரவேண்டும் என்று சொல்லிவிட்டு அவர் சென்றிருக்கிறார் என்றும் அவருடைய ஊழியர்களுள் ஒருவர் கூற எனக்கு மேலும் குழப்பமானது..
என்னுடைய உதவியாளரை அழைத்து கிளை பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அரக்கபரக்க ஆட்டோ ஒன்றை எடுத்துக்கொண்டு ஓடினேன்.
ஹோட்டல் வாசலிலேயே எனக்காக காத்திருந்த என்னுடைய மத்திய கிளை மேலாளர் என்னைக் கண்டதும் பொரிந்து தள்ளிவிட்டார்.
‘என்ன டி.பி.ஆர். உங்க வீட்டுல ஃபோன் அடிச்சா உங்களுக்கும் உங்க Wifeக்கும் எடுத்து பேசற பழக்கமில்லையா? சரி ஃபோன் வேலை செய்யிதா இல்லையான்னு கூடவா பாக்க மாட்டீங்க.. இங்க என்ன நடந்துதுங்கறது விடியற்காலம் ரெண்டு மணியிலருந்து உங்களுக்கு தெரிவிக்கறதுக்குள்ள நான் பட்ட பாடு.. உங்க விழாவுக்காகன்னே வந்தவங்க எப்படி இருக்காங்கன்னு பாத்துக்கற Basic decency வேண்டாம் உங்களுக்கு? Shame on you..’
எனக்கு தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. விஷயத்தை சொல்லாமல் பேசிக்கொண்டே போகும் மேலாளரை எரிச்சலுடன் பார்த்தேன். ‘சார் என்ன நடந்தது அது சொல்லுங்க.. ப்ளீஸ்.’ என்றேன்.
‘நம்ம சேர்மன் காலைல அஞ்சி மணிக்கு ஹார்ட் அட்டாக் வந்து சரியா பாக்கறதுக்கு யாரும் இல்லாம அவர் ரூம்ல தூக்கத்திலேயே இறந்து போயிட்டார் டி.பி.ஆர். இதுக்கு உங்களுடைய அஜாக்கிரதையும் காரணம்னு Board Members நினைக்கிறாங்க. இதுக்கு என்ன சொல்லப் போறீங்க?’
‘மை காட்!’ எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் உதடுகள் நடுங்க.. அவருடைய கைகளைப் பிடித்துக்கொண்டு.. ‘என்ன சார் சொல்றீங்க.. எனக்கு முன்னாலேயே தெரிஞ்சிருந்தா..’ என்னுடைய முட்டாள்தனத்தை அறிந்து பாதியிலேயே நிறுத்திக்கொண்டேன். என்னுடைய வீட்டு தொலைப்பேசி பழுதடைந்திருந்ததை நான் கண்டுகொள்ளாமல் இருந்தது எத்தனை துர்பாக்கியம்!
தொலைப்பேசித்துறையில் இன்று ஏற்பட்டுள்ள இந்த புரட்சிகர மாற்றங்கள் அன்று இல்லையே என்று இன்று நினைத்தாலும் அங்கலாய்க்கிறேன்.
விழாவில் பங்குபெற்ற ஒரு பொதுவுடமை வங்கியின் கஸ்டோடியன் (என்னுடைய வங்கித்தலைவரின் நெருங்கிய நண்பர் அவர்) ‘யோவ், என்னோட பாங்க்ல கூட இப்படி ஒரு திறப்பு விழா நடந்ததில்லை. You have made a Fantastic beginning.’ என்று வாழ்த்த அபிரிதமான வெற்றியில் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டிருந்த என் தலைவருக்கு அந்த அபிரிதமான மகிழ்ச்சியே எமனாய் அமைந்தது!
நள்ளிரவைக் கடந்து சென்ற Cocktail விருந்தும் அவருடைய சடுதி மரணத்திற்கு காரணமாயிருந்திருக்கலாம் என்றனர் பலரும்.
சுமார் ஒரு மணியளவில் உறங்க சென்றவர் மூன்று மணியளவில் மார்பு பகுதியில் லேசான Discomfort ஏற்பட மூன்றாவது மாடியிலிருந்து இறங்கி இரண்டாவது மாடியிலிருந்த தன்னுடைய உதவியாளரை (அவருடைய அறையிலிருந்தே அழைத்திருக்கலாம். எல்லாம் விதியின் விளையாட்டு!) அவருடைய அறைக்கதவை தட்டி அவரிடம் விளக்க அன்று பார்த்து ஹோட்டலில் ஒரு மருத்துவர் கூட தங்கியிருக்கவில்லை.. பிறகுஅவருடைய பி.ஏ. சென்னைவாசியான என்னை தொடர்புகொண்டு ஒரு மருத்துவரை அழைத்துக்கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார். என்னுடைய தொலைப்பேசி பழுதடைந்திருப்பதை அவர்கள் உணரவில்லை.. தொலைப்பேசி அடித்துக்கொண்டே இருக்கிறது டி.பி.ஆர். நன்றாக உறங்கிக்கொண்டிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு என்மேல் கோபம் கொண்டிருக்கிறார்கள்.
அதற்கு பிறகு.. அரை மணி நேரம் கழித்து ஹோட்டல் ரிசப்ஷன் உதவியுடன் அருகிலிருந்த மருத்துவர் ஒருவரை அழைத்திருக்கிறார்கள். அவரும் வந்து பார்த்திருக்கிறார்..
‘Since the patient is under the influence of liquor I am unable to determine the cause for the uneasiness. I will give an injection as a temporary relief. If the uneasiness persists take him to the Royapettah Hospital.’ என்று கூறிவிட்டு மருத்துவர் சென்றிருக்கிறார்.
ஊசியின் பாதிப்பில் சேர்மன் உறங்கிவிட அரைமணி நேரம் காத்திருந்த அவருடைய பி.ஏவும் மற்றவர்களும் அவரவர் அறைக்கு சென்றிருக்கின்றனர்.
மறுநாள் காலை ஏழு மணியளவில் பி.ஏ அவருடைய அறைக்கு சென்று கதவை வெகு நேரம் தட்டியும் திறக்காததால் ரிசப்ஷனிலிருந்து ஆட்கள் வந்து கதவைத் திறக்க சேர்மன் உறக்கத்திலேயே இறந்திருப்பது தெரிய வந்திருக்கிறது!
முந்தைய நாள் விழாவில் கலந்துக்கொண்ட பத்திரிகையாளர்கள் விவரமறிந்து ஹோட்டலுக்கு வர அவருடைய மரணம் முதலமைச்சரை எட்டியது.. அவர் உடனே அருகிலிருந்தவர்களிடம் ‘மதுவின் சதி’ என்றாராம்.
என்னவென்று சொல்ல?
இன்று வரை என் மனதை அறுத்துக்கொண்டிருக்கும் துயர சம்பவம் அது!
போன பதிவில் கோடி காட்டியிருந்தீர்கள். நான் புரிந்து கொண்டேன். ஆனால் கூற மனமில்லை.
பதிலளிநீக்குடாஷ்கண்டில் லால் பஹதூர் சாஸ்திரி அவர்கள் இறந்த நிகழ்ச்சி எனக்கு நினைவுக்கு வருகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
WHAT A SAD END...ANTICLIMAX...
பதிலளிநீக்குI THOUGHT YOU WILL TELL SOMETHING ENTERESTING ABOUT MGR
என்னங்க... இப்படி ஆய்டுச்சு. இப்போது நினைத்தாலும் வருத்தம் மேலிடுகிறது, உங்களை அதிலும் அந்த நாள் காலையில் நினைத்துப்பார்க்க ரொம்ப கஷ்டமாயிருக்கிறது.
பதிலளிநீக்குஇது மிகவும் வருத்தமான பதிவு. இவ்வளவு பேர் இருந்தும் சென்னையில் ஒருவருக்குத் தகுந்த treatment கொடுக்கமுடியவில்லை என்பது விதியின் கொடுமையே. அவர்களுக்கு உங்கள் எண் மட்டுமே தெரிந்திருந்ததும் அதுவும் பழுதாயிருந்ததும் என்னவென்று சொல்வது ?
பதிலளிநீக்குஉண்மைதான் ராகவன் சார்.
பதிலளிநீக்குஆனால் லால் பகதூர் சாஸ்திரியின் மரணம் இயற்கையானதல்ல என்றுதான் இப்போதும் பலரும் நினைக்கிறோம். அது ஒரு திட்டமிடப்பட்ட சதி.
ஆமாம் முத்து.
பதிலளிநீக்குIt was an anti climax.
அதைவிட சோகம் என்னவென்றால் அதை தடுத்திருக்கலாம் என்பதுதான்.
அதுமட்டுமல்ல டி.பி.ஆர் ஒரு ராசியில்லாதவன் என்ற முத்திரையும் எனக்கு ஏற்பட்டு அடுத்து நான் திறந்த ஒரு கிளைக்கு H.O.விலிருந்து வர யாருமே தயாராயில்லை!!
அது மூட நம்பிக்கைதான் என்றாலும் உயிர் சம்மந்தப்பட்ட விஷயமாயிற்றே.
ஆமாம் அன்பு.
பதிலளிநீக்குஅன்றைய நிகழ்ச்சிக்குப் பிறகு நிம்மதியாய் உறங்கவே எனக்கு பல வாரங்கள் பிடித்தது..
நேற்று இந்த பதிவை எழுதி முடித்தபோது பழைய நினைவுகள் எல்லாம் திரும்பி வந்து.. I had a nightmarish experience yesterday.
இந்த பதிவிற்கு வந்த பின்னூட்டங்கள் எல்லாம் என்னுடைய எண்ணங்களை பிரதிபலிப்பதாகவே அமைந்துள்ளன.
நன்றி அன்பு.
உண்மைதான் மணியன்.
பதிலளிநீக்குஅதுதான் பெரிய கொடுமை. நான் பல வருடங்களாகவே சென்னைவாசியானதால் I could have contacted the most suitable doctor (at that time KJ Hospital was a very famous hospital in Chennai) to attend him at the right time.
எல்லாம் விதி. அவ்வளவுதான்.
இப்பத்தான் உங்க பதிவை படித்தேன்.
பதிலளிநீக்குஎத்தனை கொடுமை!
அவருடைய முடிவு உங்களுடைய முந்தைய நாள் மகிழ்ச்சியை அடியோடு அழித்திருக்கும் இல்லையா?
இருந்தாலும் உங்களுடைய அந்த சோகத்தை மிக அருமையாக எழுத்தில் கொண்டுவந்திருக்கிறீர்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்..
எப்படி சார் இப்படியொரு சோகமான பதிவை மனதில் வைத்துக்கொண்டே இதற்கு முந்தைய பதிவுகளை அவ்வளவு சுவாரசியமாக எழுத முடிந்தது?
பதிலளிநீக்குஎங்களைப் பொருத்தவரை இது ஒரு நிகழ்ச்சி..
ஆனால் உங்களுக்கு? நீங்கள் நினைத்திருந்தால் இம்மரணத்தை தடுத்திருக்க முடியுமே என்ற ஆதங்கத்தையும் ஒரு குற்ற உணர்வையும் தரக்கூடிய நிகழ்ச்சி..
அதை அழகாக எழுத்து வடிவத்தில் தந்து இதை படித்தவர் மனதிலும் ஒரு ஈரத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் சார்.
வாழ்த்துக்கள்.
உங்களுடைய பதிவு ஒரு சோகக் கதையை படித்து முடித்த சோகம் என் மனதிலும் ஏற்படுத்திவிட்டது ஜோசப்.
பதிலளிநீக்குஏன் என்று தெரியவில்லை, ஒரு இனம் தெரியாத இழப்பு..ஏதோ எனக்கு நன்கு தெரிந்தவரை இழந்துவிட்டதைப் போன்ற ஒரு தாக்கம் என் மனதில்..
உங்களுடைய பதிவின் கடைசி வரி:
"இன்று வரை என் மனதை அறுத்துக்கொண்டிருக்கும் துயர சம்பவம் அது!"
உங்களுடைய குற்ற உணர்வை என்னால் புரிந்து, பகிர்ந்து கொள்ள முடிகிறது..
ஒருவேளை அதை நீங்கள் எழுதிய முறையாயிருக்கலாம்..
தொடர்ந்து எழுதுங்கள்..
நாங்க சாதாரணமா எங்க பதிவில ஜாலியா ஏதாவது படத்த போட்டு.. இல்லன்னா ஒரு ஜோக்கை போட்டு எங்க நண்பர்களோட பகிர்ந்துக்கறதுதான் வழக்கம்.
பதிலளிநீக்குஜஸ்ட,எ டைம் பாஸ்..
ஆனா கடந்த சில வாரங்களா நீங்க எழுதிக்கிட்டிருக்கற உங்க பதிவுகள படிக்கிறப்போ ஒரு வித்தியாசமான அனுபவங்கள நேரடியா சம்மந்தப்பட்டவரே ஒரு ஈடுபாட்டோட எழுதறதால எங்களையுமறியாம உங்களோட ஒன்னாயிட்டமாதிரி ஒரு உணர்வு..
அதனாலதானோ என்னவோ திடீர்னு ஒரு சடுதி மரண செய்தியை கேட்டா மாதிரி ஒரு சோகம்..
நல்லாயிருந்தது சார் உங்களுடைய இந்த க்ளைமாக்ஸ் 2 பதிவு..
வாழ்த்துக்கள்
அடக் கடவுளே! இப்படியொரு சோகமா?
பதிலளிநீக்குஎன்ன செய்வது. மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள். காலம்தான் மருந்து.
அன்புடன்
சுந்தர்.