பொருளாதாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொருளாதாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 நவம்பர் 2019

பாஜகவின் சரிவு...... நிறைவுப் பகுதி

4 ம் பாகம்

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் என்ற மத்திய அரசின் திட்டங்களால் வரலாறு காணாத அளவுக்கு சரிந்து கிடக்கும் நாட்டின் பொருளாதாரட்தை மீட்டெடுக்கும் பொறுப்பு யாரிடம் உள்ளது?

நிச்சயம் அது மத்திய அரசின் கையில்தான் உள்ளது என்று சமீபத்தில் கைவிரித்துவிட்டது மத்திய ரிசர்வ் வங்கி. எங்களால் வங்கிகளுக்கு நாங்கள் அளிக்கும் கடனுக்கு வசூலிக்கப்படும் ரிப்போ (Repo) வட்டி விகிதத்தை மட்டும்தான் குறைக்க முடியும்  ஆனால் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் வங்கிகளிடம் தான் உள்ளது என்கிறார் மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர். 

ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு ரிப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட போதும் அதை பயன்படுத்தி ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் பெற வங்கிகள் யாரும் முன் வரவில்லை. 

ஏன்?

ஏனெனில் வங்கிகளிடம் உள்ள முதலீட்டையே அவர்களால் முழுவதுமாக பயன்படுத்த வாய்ப்பில்லாத சூழல். இதன் காரணமாக  தங்களிடம் உபரியாக உள்ள தொகையை வங்கிகளுக்கிடையிலான கடன் வழங்கும்  ஓவர்நைட் எனப்படும் ஒரு நாள் வட்டிக்கு கடனாக வழங்கிவருகின்றனர். இதில் அவர்களுக்கு கிடைக்கும் ஆறு விழுக்காடு வட்டி வாடிக்கையாளர்களுடைய  குறைந்த பட்ச வைப்பு நிதிக்கான வட்டியை விடவும் குறைவு. அதாவது ஆறு முதல் ஏழரை விழுக்காட்டிற்கு வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட தொகையை ஆறு அல்லது அதற்கும் குறைவாக பிற வங்கிகளுக்கு  நாள் வட்டிக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்கிற உண்மை நாட்டிலுள்ள எத்தனை பாமரனுக்கு தெரியும்.

ஏன் இந்த அவல நிலை?

வங்கிகளிலிருந்து பெருமளவு கடன் பெறுவது பெரும் தொழில் நிறுவனங்கள்தான். அல்லது பெரும் வர்த்தக நிறுவனங்கள். இவை அனைத்துமே முடங்கிப் போயுள்ள சூழலில் யார் கடன் வாங்கி முதலீடு செய்ய முன்வருவார்கள்?

மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி நாட்டிலுள்ள மொத்த உற்பத்தித் திறனில் (Installed Capacity) 67 முதல் 70 விழுக்காடு வரை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறதாம். அதாவது நாட்டிலுள்ள நிறுவனங்கள் மொத்தமாக ஒரு லட்சம் கோடி மதிப்பிற்கு உற்பத்தி செய்ய முடியும் என்கின்ற சூழலில் அறுபதாயிரம் முதல் எழுபதாயிரம் கோடி வரை மட்டுமே உ/ற்பத்தி செய்யப்படுகின்றனவாம். அதையே சந்தையில் வாங்க ஆளில்லாதபோது மேற்கொண்டு கடன் வாங்கி உற்பத்தியை கூட்டுவதற்கு எந்த தொழிலதிபர் முன்வருவார்?

இதுதான் இன்றைய யதார்த்த நிலை..

இந்த சூழலில்  தான் தொழிலதிபர்களின் வரி விகிதத்தை பெருமளவுக்கு குறைக்க முன்வந்தது மத்திய அரசு. இந்த வரிக்குறைப்பு தொழிலதிபர்களின் மனநிலையை பெரிதளவுக்கு மாற்றுவதாக தெரியவில்லை. உண்மையில் மத்திய அரசுக்கு இதனால் ஏற்படவிருக்கும் ஒரு லட்சம் கோடி வருவாய் இழப்பு  வெறும் விழலுக்கு இறைத்த நீராகத்தான் போய்விட்டது எனலாம். 

இந்த சூழலில் ஒரு நாட்டின் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்று நான் இந்த பதிவின் துவக்கத்தில் கூறியுள்ள  ஆங்கிலேய பொருளாதார மேதை கெய்ன்ஸ் அன்றே கூறியுள்ளார். 

அவர் கூறியுள்ளது இதுதான்.

நாட்டின் பொருளாதாரம் எதனால் மந்த நிலையை அடைந்துள்ளது என்பதை அந்த நாட்டின் அரசு முதலில் ஆராய வேண்டும். ஒரு நாட்டின் உற்பத்தித் திறன் முழுமையாக பயன்படுத்தப்படாத சூழலில் அதை மேம்படுத்த முயற்சிகள் செய்ய வேண்டும். அதாவது அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைகளில் முழுவதுமாக விற்க நுகர்வோர் தேவையை அதிகரிக்க வேண்டும். அதாவது அவர்களுடைய வாங்கும் திறனை அதிகரிக்க வேண்டும். 

எப்படி... ?

நாட்டிலுள்ள தனிநபர் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். 

இதை நாட்டிலுள்ள தனியார் தொழில் நிறுவனங்களால் செய்ய முடியாமல்போகும் சூழலில் (இதுதான் இன்றைய நிலை) மத்திய அரசே தன்னுடைய பொது செலவினங்களை (Public Expenditure) அதிகரிக்க வேண்டும் என்கிறார் கெய்ன்ஸ்.

அதாவது மத்திய, மாநில அரசுகள் தங்களுடைய முதலீட்டை அதிகரிக்க வேண்டும். பெரிய அளவிலான கட்டுமான திட்டங்கள் அதாவது ஸ்மார்ட் சிட்டி போன்ற பெரு நகரங்களை உருவாக்கும் திட்டம், நாட்டிலுள்ள அனைத்து மாநில நகரங்களில் உலகதரம் வாய்ந்த விமான நிலையங்களை உருவாக்கும் திட்டங்கள், சாலை வசதிகளை மேம்படுத்துதல் என அரசுகள் மக்களிடத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும். இதற்கு தேவைப்படும் நிதியை கடனாக பெற வேண்டி வந்தாலும் அதை  செயல்படுத்த ஆட்சியாளர்கள் துணிந்து  முன் வரவேண்டும். ஆங்கிலத்தில் இதை calculated risk என்பார்கள். 

ஆனால் நடப்பது என்ன? மத்திய அரசு நலத் திட்டங்களை செயல்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை. தொழில் நிறுவனங்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் நியாயமாக வழங்க வேண்டிய தொகைகளையே நிதிப்பற்றாக் குறையை (fiscal deficit) காரணம் காட்டி சுமார் ஒரு லட்சம் கோடி அளவுக்கு முடக்கி வைத்திருப்பதை என்னவென்று சொல்வது?

அதாவது ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள ஒரு தொழில் அல்லது வர்த்தக நிறுவனம் தங்களுடைய மூலப் பொருள் கொள்முதலுக்கு செலுத்திய ஜிஎஸ்டி  மற்றும் எக்சைஸ் வரியை அவர்கள் ஏற்றுமதி செய்தவுடன் அரசு சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு திருப்பி வழங்குவது வாடிக்கை.... அதே போல் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் ஒப்பந்ததாரர்களுக்கு அவர்கள் பணியை முடித்த உடனே ஒப்பந்த தொகையை வழங்கிட வேண்டும்.... மக்களிடமிருந்து வசூலித்த கூடுதல் வருமான வரி போன்ற தொகைகளையும் குறைந்த காலக் கெடுவிற்குள் திருப்பி வழங்கிட வேண்டும். ஆனால் இத்தகைய தொகைகளை தங்களுடைய நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி நிறுத்தி வைப்பது எந்த விதத்தில் நியாயம்? பெரு நிறுவனங்களுக்கு அரசு வழங்க வேண்டிய தொகைகளை நிறுத்தி வைப்பதாலோ அல்லது காலங்கடந்து வழங்குவதாலோ அத்தகைய பெரு நிறுவனங்கள் தங்களுக்கு மூலப் பொருட்களை வழங்கும் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய தொகையையும் நிறுத்தவோ தள்ளிப்போடவோத்தானே செய்ய நேரிடும்...? மத்திய மாநில அரசுகளின் இத்தகைய பொறுப்பற்ற செயல்களால் நாட்டில் பணப்புழக்கம் மேலும் மேலும் நலிவடையத்தானே செய்யும்?

இதை ஆங்கிலத்தில் vicious cycle என்பார்கள்... இதை உடனே தடுத்து நிறுத்த மத்திய அரசு தாராள பொருளாதார கொள்கையை கடைபிடிக்க துணிந்து முன் வரவேண்டும்.... நாட்டின் ஒட்டுமொத்த கடன் அளவு சிறிது உயர்ந்தாலும் அதனால் ஏற்படும் பொருளாதார முன்னேற்றம்.... அதன் விளைவாக அரசுகளுக்கு கிடைக்கும் வருவாய் அதிகரிப்பு என நாளடைவில் அரசின் ஒட்டுமொத்த வருவாயும் உயர்ந்து வாங்கிய கடனை அடைக்க ஏதுவாக அமையும்.

RISK என்கிற ஆங்கில வார்த்தைக்கு Rare Instinct to Seek the unKnown என்று கூறுவார்கள். Rare Instinct என்றால் அபூர்வ உள்ளுணர்வு... unknown என்றால் நமக்குத் தெரியாதவை. அதை நோக்கிப் பயணிப்பது தான் RISK. அது வெகு சிலருக்கே சாத்தியப்படும். அதாவது என்ன நடக்கும் என்பது தெரியாமலே இலக்கைத் தேடிச் செல்லும் துணிவு... இலக்கை அடைந்தால் மகிழ்ச்சி... தோல்வியடைந்தால் தொடர்ந்து முயல்வேன் என்கிற பிடிவாதம்....

இது ஒரு காலத்தில் சாதாரண சாக்கு பை விற்றுக் கொண்டிருந்த அம்பானிக்கு இருந்தது. இன்று அவருடைய மகன் முகேஷ் ஆசியாவிலேயே பெரும் தொழிலதிபர்கள் பட்டியலில்... இப்படி அசாத்திய துணிவுடன் சாதித்தவர்கள் நம்முடைய நாட்டில் ஏராளம் பேர் உள்ளனர். ஆட்சியாளர்களில் சொல்ல வேண்டுமென்றால் காலம் சென்ற நரசிம்மராவை சொல்லலாம். நேரு குடும்பத்தைச் சாராத முதல் பிரதமர் என்றாலும் அவர் அன்று நடைமுறைப்படுத்திய தாராள பொருளாதார கொள்கைகள் அப்போது நாடு இருந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வர உதவியது.

இதுதான் இன்றைய ஆட்சியாளர்களுக்கு தேவைப்படும் குணாதிசயம். 

துரதிர்ஷ்டவசமாக அது இப்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. 

நிறைவு.

31 அக்டோபர் 2019

பாஜகவின் சரிவு....4


3ம் பாகம்

ஜிஎஸ்டி வரி விதிப்பு உண்மையில் வரவேற்கப்பட வேண்டியதுதான். 

ஏனெனில் ஜிஎஸ்டி அமலாக்கப்படுவதற்கு முன்பு நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களும் தங்கள் விருப்பப்படி விற்பனை வரி, நுழைவு வரி, மதிப்பு கூட்டு வரி, சேவை வரி என பல்வேறு வரிகளை வெவ்வேறு விகிதங்களில் வசூலித்துவந்தன. யூனியன் பிரதேசங்கள் எனப்படும் பாண்டிச்சேரி, தில்லி போன்ற மாநிலங்களில் மற்ற மாநிலங்களில் நடப்பில் இருந்து வந்த விகிதங்களை விட மிகவும் குறைவாக விற்பனை வரி  வசூலிக்கப்பட்டு வந்தன. இதனால்  அண்டை மாநிலங்களான தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் வசித்தவர்கள் கூட உண்மைக்கு புறம்பான தங்குமிட விலாசங்களை காட்டி விலையுயர்ந்த வாகனங்களுக்கு மிகக் குறைந்த விற்பனை வரி செலுத்தி வரி ஏய்ப்பு நடத்த வாய்ப்பளித்தது. அத்துடன் மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகங்களுக்கு அந்தந்த மாநில விற்பனை வரியுடன் மத்திய அரசின் விற்பனை வரியையும் செலுத்தும் பழக்கமும் இருந்து வந்தது. இதனால் பல வணிகர்கள் வரிக்கு வரி செலுத்த வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டனர். 

இவ்வாறு மாநிலங்களுக்கிடையில் விற்பனை மற்றும் சேவை வரி வசூலிப்பத்தில் எவ்வித ஒற்றுமையும் இல்லாத சூழலில் நாடு முழுவதும் வசூலிக்கப்பட்டு வந்த பல்வேறு வகையான வரி விகிதங்களை ஒருங்கிணைத்து விற்பனை மற்றும் சேவை வரி என்ற ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு மத்திய அரசு தள்ளப்பட்டது. 

ஆனால் இதை அமல்படுத்துவதில் மத்திய அரசு காட்டிய அவசரம்தான் இப்போது நிலவும் அனைத்து குழப்பத்திற்கும் காரணம். 

மேலும் ஜிஎஸ்டிக்கு முன்பு மாநிலங்கள் வசூலித்து வந்த விற்பனை வரி விகிதங்கள் ஏழு விழுக்காட்டிலிருந்து அதிக பட்சமாக பதினான்கு விழுக்காடு வரை இருந்தன. தமிழகத்தை பொருத்தவரை அதிகபட்ச விற்பனை வரி 12.5 விழுக்காடாக இருந்தது. நாட்டில் எந்த ஒரு மாநிலத்திலும் விற்பனை வரி பதினெட்டு விழுக்காட்டிற்கு மேல் இருக்கவில்லை. மாநில எல்லையை தாண்டி நடக்கும் வர்த்தகத்திற்கு தமிழக விற்பனை வரியுடன் மத்திய அரசு விற்பனை வரி (அதிகபட்ச வரியாக ஆறு விழுக்காடு)யையும் சேர்த்தாலும் பதினெட்டு விழுக்காட்டை தாண்டியதில்லை.

ஆனால் இவற்றை ஒருங்கிணைத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியில் அதிகபட்ச வரியாக இருபத்தி எட்டு விழுக்காடு என நிர்ணையிக்கப்பட்டது. இதே போன்று எட்டிலிருந்து பத்து விழுக்காடு வரை மட்டுமே இருந்துவந்த பல பொருட்களின் வரி விகிதம் பதினெட்டு விழுக்காடு என்ற அளவுக்கு உயர்த்தி நிர்ணையிக்கப்பட்டது. அதாவது அத்தியாவசிய பொருட்கள் என மக்கள் கருதி வந்த பல பொருட்களின் மீது விதிக்கப்பட்டு வந்த விற்பனை வரி ஆறிலிருந்து பத்து விழுக்காடு வரை உயர்த்தப்பட்டதால் பொருட்களின் விலையும் உயர்ந்தன. இதன் விளைவாக மக்கள் அவற்றை வாங்குவதை குறைக்கவோ அல்லது வசதியில்லாதவர்கள் முற்றிலுமாக தவிர்க்கவோ செய்தனர். 

இதில் விசித்திரம் என்னவென்றால் மேல்தட்டு மக்கள் மட்டுமே அதிக அளவில் உண்ணும் பித்சா, பர்கர் போன்ற உணவு வகைகளுக்கு ஐந்து விழுக்காடு வரியும் பாமரர் வீட்டு குழந்தைகளும் உண்ணும் பிஸ்கட்டுக்கு பதினெட்டு விழுக்காடு வரி என்கிற அளவில் ஒரு வரைமுறை இன்றி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டன. பாமரர்களால் நினைத்தும் பார்க்க முடியாத ஆலிவ் எண்ணெய்க்கு ஐந்து விழுக்காடு வரி... ஆனால் பெரும்பாலோர் பயன்படுத்தும் சமையல் எண்ணெய்க்கு பண்ணிரண்டு விழுக்காடு வரி... பற்பசை தூளுக்கு பண்ணிரண்டு விழுக்காடு, பற்பசை மற்றும் பிரஷ்சுக்கு பதினெட்டு விழுக்காடு வரி... தீப்பெட்டிக்கு 12 விழுக்காடு, மண்ணெண்னை விளக்குக்கு (hurricane lamps) 18%

தீப்பெட்டி தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விகிதத்தை குறைக்கும்படி பலமுறை கோரிக்கை விடுத்தும் அது இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருந்து வருகிறது.  இதனால் சிவகாசி மற்றும் கோவில்பட்டியில் இயங்கிவரும் பல சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு பலர் வேலையிழந்து தவிப்பது நமக்கு தெரிகிறது. இன்றைய காலை செய்தியில் சாலையோரம் பல வருடங்களாக இயங்கிவந்த பல உணவகங்கள் நாள்தோறும் மூடப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டது, . 

இத்தகைய நியாயமற்ற வரி விகிதங்களால் சிறிய அளவில் உற்பத்தியில் ஈடுபட்டு வந்திருந்த சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் அவர்கள் வாங்கும் ஒவ்வொரு மூலப்பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்தி வாங்க வேண்டிய சூழலில் அவர்களுடைய பொருட்களுக்கு அதுவரை அமலில் இருந்து வந்த வரி விகித உயர்வால் ஏற்பட்ட விற்பனை சரிவும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு பல நிறுவனங்களும் மூடும் நிலையை அடைந்தன. தமிழகத்தில் இத்தகைய உற்பத்தி நிறுவனங்களுக்கு பேர்பெற்ற திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டதிலிருந்து மூடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்தை கடந்துவிட்டது என்கிறது சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கைகள். 

இந்த திட்டம் அமலாக்கப்பட்டதிலிருந்து சுமார் முப்பது முறைகளுக்கு மேலாக வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டதிலிருந்தே இந்த திட்டம் எத்தனை அவசரகதியில் அமலுக்கு கொண்டு வரப்பட்டது என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. இன்னமும் இது முடிந்தபாடில்லை. இனி வரும் ஜிஎஸ்டி குழுவின் கூட்டங்களிலும் பல பொருட்களின் குறைக்கப்பட வேண்டிய சூழல் ஏற்படும். ஏனெனில் எவ்வித வரைமுறையும் ஆய்வும் இல்லாமல் நிர்ணயிக்கப்பட்ட வரி விகிதங்கள் இவை. ஏறத்தாழ கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் வரி விகிதங்கள் பல முறை குறைக்கப்பட்டாலும் அமலாக்கப்பட்ட காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட நியாயமற்ற வரி விகிதத்தால் விற்பனையை இழந்து மூடப்பட்ட நிறுவனங்களில் பல இன்னும் மூடிய நிலையிலேயே இருப்பதுதான் வேதனை.

ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு கொண்டுவரப் பட்டபோது மாதம் குறைந்தது ஒரு லட்சம் கோடி வருவாய் இருந்தால்தான் நாட்டின் மொத்த நிதிபற்றாக்குறையை(fiscal  deficit) சமாளிக்க முடியும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. துவக்க காலங்களில் அந்த இலக்கை அடைய முடிந்தாலும் கடந்த ஒரு வருடமாக சராசரியா எண்பதாயிரம் கோடியை தொடுவதே சிரமமாக உள்ளதாம்.

இது எதனால்?

நாட்டின் வரி வருவாயை அதிகரிக்க வேண்டுமானால் நாட்டின் உற்பத்தியை பெருக்கி அதன் விளைவாக  சந்தைக்கு வரும் பொருட்களை உடனே வாங்கும் அளவுக்கு நுகர்வோரின் வாங்கும் திறனையும் சேர்த்து அதிகரித்தால் விற்பனை  தொடர்ந்து உயரும். அதனால் நாட்டின் மறைமுக வரி வருவாயும் உயர்ந்துக்கொண்டே செல்லும்.

இந்த அடிப்படை பொருளாதார தத்துவத்தை உணராத ஆட்சியாளர்கள் வரியை மட்டும் உயர்த்தினாலே வருவாய் பெருகிவிடும் என்று நினைத்தது எத்தனை அறிவீனம்?. மத்தியிலுள்ள ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகளால் விற்பனை சரிந்துக்கொண்டே இருக்கும்போது அதன் மூலமாக கிடைக்கும் வரி வருவாயும் குறையத்தானே செய்யும்? அதுதான் இப்போது நடக்கிறது.




பணமதிப்பிழப்பு நடவடிக்கை உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் அனைவருடைய கையிலுமிருந்த ரொக்கப் பணத்தை இல்லாமல் செய்தது. ஜிஎஸ்டியோ இந்த சூழலில் இருந்து மீண்டு வந்து உற்பத்தியை பெருக்கி இலாபம் ஈட்டலாம் என்று நினைத்திருந்த உற்பத்தியாளர்களின் எண்ணத்தை நிராசையாக்கிப் போட்டது எனலாம். 

இத்தோடு நிற்காமல் இன்னும் ஒரு முட்டாள்தனமான தீர்மானம் மூலம் நாட்டின் வாகன உற்பத்தியையும் முடக்கி போட்டது மத்திய அரசு. அதன் விளைவாக கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாம் காணாத அளவுக்கு வாகன விற்பனை சரிந்து அதன் உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியையே பெருமளவு குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன. 

அதுதான் மாசுகட்டுப்பாட்டை மேலும் கடுமையாக்கும் பிஎஸ் ஆறு (BS 6) திட்டம். 

வாகன விற்பனை பெருமளவில் குறைந்ததற்கு காரணம் என்ன என்று மத்திய நிதியமைச்சரிடம் நிரூபர்கள் கேள்வி கேட்டபோது அவர் திருவாய் மலர்ந்து உதிர்த்த அபத்தமான பதில்: இப்போதெல்லாம் மக்கள் ஓலா, ஊபர் போன்ற வாடகை வாகனங்களில் பயணிப்பதையே விரும்புகிறார்கள். வாகன விற்பனை  சரிவுக்கு இதுவும் ஒரு காரண்ம். இந்த பதிலுக்கு ஆங்கில பத்திரிகை ஒன்று அளித்த பதில் என்ன தெரியுமா? ’இப்படி ஒரு பதிலை அளிப்பதற்கு பதிலாக நிதியமைச்சர் எனக்கு தெரியவில்லை என்றே பதிலளித்திருக்கலாம். ’

மத்திய அரசு கடந்த ஆண்டு நாட்டில் தற்போது  நடைமுறையிலுள்ள Bharat Stage (BS) IV என்ற மாசுகட்டுப்பாட்டு விதிமுறை (Emission Norm) யிலிருந்து நேரடியாக BS VI மாற தீர்மானித்தது. இது ஐரோப்பாவில் நடைமுறையிலுள்ள Euro VI விதிமுறைக்கு சமமாக கருதப்படுகிறது. இந்த முடிவு நல்ல முடிவு என்பது உண்மைதான் என்றாலும் நாடு இப்போதுள்ள நிதி நிலமையில் இந்த முடிவு தேவைதானா என்ற கேள்வி எழுகிறது.

ஏனெனில் உலகில் பல வளர்ந்த நாடுகள் இன்னும் Euro IV என்கிற நிலையையே எட்டவில்லையாம்! இதற்குக் காரணம் இதற்கு வாகனங்களில் பல முக்கிய மாறுதல்களை செய்ய வேண்டியுள்ளது.   அதற்கு மிக அதிக அள்விலான முதலீடு தேவைப்படுகிறது. ஆகவே தான் வாகன உற்பத்தியாளர்கள் பலரும் தங்களால் இயன்றவரை இந்த திட்டத்தை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டுமென்று மத்திய அரசுடன் போராடி பார்த்தார்கள். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி எதிர்வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தே தீரும் என்று அறிவித்துவிட்டது. 

ஆகவேதான் நாட்டிலுள்ள பல வாகன உற்பத்தியாளர்கள் தங்களுடைய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த  வேண்டிய நடைமுறைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே BS IV மோட்டார் இயந்திரங்களை (Engines) கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள வாகனங்களை நுகர்வோர் யாரும் வாங்குவதற்கு முன்வராததால் வாகன விற்பனையும் வெகுவாக சரிந்து உற்பத்தியையே நிறுத்த வேண்டிய சூழலுக்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டனர். 

மத்திய நிதியமைச்சர் தற்போது பயன்பாட்டிலுள்ள BS IV இயந்திரங்களுடன் இயங்கும் வாகனங்களுக்கு அதன் ஆயுட்காலம் வரை பயன்படுத்துவதற்கு ஏற்ற ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று உறுதியளித்திருந்தாலும் அவருடைய வாக்குறுதியை நுகர்வோர் நம்ப தயாராக இல்லை என்பதை வாகன விற்பனையின் தொடர் சரிவு உறுதி செய்கிறது. வாகனங்களை இயக்க பயன்படுத்தும் பெட்ரோலிய பொருட்களிலும் மாற்றங்கள் செய்யப்படவிருப்பதால் BS VI வாகனங்கள் விற்பனைக்கு வரும்போது அதை வாங்கிக்கொள்ளலாம் என்று நுகர்வோரும் தங்களுடைய முடிவை சற்று தள்ளிப்போட்டுவிட்டனர் போலும். 

இந்த மாற்றம் டீசல் இயந்திரத்துடன் இயங்கும் வாகனங்களைத்தான் மிக அதிக அளவில் பாதிக்கும் என்கிறார்கள். சரக்கு போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து கனரக வாகனங்களுமே டீசலைத்தான் பயன்படுத்துவதால் அத்தகைய வர்த்தகத்தில் ஈடுபட்டு வருபவர்களும் தங்களுடைய புதிய வாகன தேவைகளை தற்போதைக்கு ஒத்திவைத்து விட்டனர். 

இதுதான் தற்போதைய வாகன உற்பத்தி நிறுத்தம் மற்றும் விற்பனை சரிவுக்கு உண்மையான காரணம். 

சரி இந்த பொருளாதார சரிவிலிருந்து எப்படி மீள்வது? இது யார் கையில் உள்ளது?

நாளை பார்க்கலாம்.

30 அக்டோபர் 2019

பாஜகவின் சரிவு....3

2ம் பாகம்

1. பணப்புழக்கத்தில் வீழ்ச்சி

இந்திய வர்த்தகத்தை என்னதான் டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு முயற்சித்தாலும் இன்று மட்டுமல்ல இனி எதிர்வரும் ஐம்பதாண்டு காலத்திற்கும் மொத்த வர்த்தகத்தில் சுமார் 96 விழுக்காடு கேஷ் அண்ட் கேரி (Cash and Carry) எனப்படும் ரொக்க வர்த்தகமாகத்தான் இருக்கும். இதுதான் இந்திய வர்த்தகத்தின் தனித்துவம். நாட்டில் எத்தனை பெரிய பல்பொருள் அங்காடிகள் (Super Stores, Hyper Stores, Malls) வந்தாலும் சாலையோர கடைகளில்தான் இந்தியாவின் பெரும்பான்மை வர்த்தகம் நடைபெறுகிறது... இனியும் நடைபெறும்.... இத்தகைய கடைகளில் நடக்கும் வர்த்தகம் அனைத்துமே ரொக்கத்தில்தான் நடைபெறுகின்றன. இத்தகைய கடைகளை நடத்துபவர்கள் கொள்முதல் செய்வதும் ரொக்க அடிப்படையில்தான். இதை மத்திய அரசு எத்தனை முயற்சித்தாலும் மாற்றுவது சாத்தியமில்லை. 

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை அறிவித்த பிரதமர் எதிர்வரும் காலங்களில் நாட்டின் பணப் பயன்பாடு பெருமளவு குறையும் என்று ஆரூடம் கூறினாலும் உண்மையில் நடந்தது என்ன? 

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் துவக்க நாட்களில் கையில் பணமில்லாமல் அல்லாடிய சாமான்ய மக்கள் வேறுவழியின்றி வங்கி அட்டைகளை பெருமளவில் பயன்படுத்த துவங்கியது என்னவோ உண்மைதான். அந்த காலக்கட்டத்தில் மொத்த பணப் பயன்பாடு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்புடன் ஒப்பிடுகையில் (curreny to GDP ratio) 12.01 விழுக்காடு என்ற நிலையிலிருந்து 8.8 விழுக்காடாக குறைந்தாலும் பணப்புழக்கம் அடுத்த சில மாதங்களில் சீரடைந்ததும் மீண்டும் 10.10 விழுக்காடு என்ற அளவுக்கு உயர்ந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்ட முந்தைய கால அளவுக்கு மீண்டும் அடைந்தது என்பதுதான் உண்மை. 

மேலும் நம்முடைய நாட்டின் பொருளாதார நிலையை தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிப்பவர்கள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 90 விழுக்காடு உள்ள சாமான்ய மக்கள். அதாவது நடுத்தரத்திற்கும் சற்று கீழே உள்ளவர்கள். இவர்களுடைய வாங்கும் திறனை வைத்துத்தான் சந்தையில் எந்த ஒரு பொருளின் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலோனோர் கிராமங்களில் வசிப்பவர்கள். இவர்களுடைய மாத வருமானத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தை வைத்துத்தான் இந்திய பொருளாதாரத்தின் நிலை தீர்மானிக்கப்படுகிறதே தவிர. ஆன்லைனிலோ அல்லது பெரும் மால்களிலோ பொருட்களை வாங்கிக் குவிக்கும் மேல்தட்டு மக்களால் அல்ல.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் பணப்புழக்கம் முற்றிலுமாக ஸ்தம்பித்து நின்ற அறிமுக மாதங்களில் முதலில் முடங்கிப்போனது இத்தகையோரை சென்றடையும் வர்த்தகம்தான். இவர்கள் கைவசம் இருந்த அனைத்து ரொக்கத்தையும் வங்கிகளில் அடைத்துவீட்டதால் பணப்புழக்கம் வெகுவாக ஏன் முற்றிலுமாக குறைந்துபோய் அதிலிருந்து மீளவே முடியாமல் தாற்காலிகமாக அடைக்கப்பட்ட சிறு குறு வர்த்தக நிறுவனங்களுக்கு அளவே இல்லை. இதன் விளைவாக இவற்றிற்கு விநியோகம் செய்துவந்த மொத்த வணிகர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டனர் என்பதும் உண்மை. ஆகவே தான் இந்த நடவடிக்கை நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி அளவு மற்றும் அவற்றின் மொத்த மதிப்பு எனப்படும் GDP யும் கூட எதிர் வரும் ஆண்டுகளில் கணிசமான அளவு குறைய வாய்ப்புள்ளது என்று அன்றே முன்னாள் நிதி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல பொருளாதார வல்லுநர்கள், உலக வங்கி உட்பட கூறினார்கள்.

2. சரக்கு போக்குவரத்தில் சிக்கல்.

இத்தகைய வணிக நிறுவனங்களின் இடைவிடா தேவைகளையே சார்ந்திருந்த சரக்கு போக்குவரத்து நிறுவனங்களும் கைவசம் ரொக்கம் இல்லாமல் பெருமளவு பாதிக்கப்பட்டன. இந்திய அளவில் சுமார் எட்டு லட்சம் சரக்கு வாகன ஓட்டுனர்கள் தங்களுடைய வாகனங்களுக்கு டீசல் கூட நிரப்ப முடியாமல் அவதியடைந்தனர். இவர்களில் எத்தனை பேரிடம் வங்கி அட்டைகள் இருந்திருக்க வாய்ப்புள்ளது? அன்றாடம் தேவைப்படும் டீசல் மற்றும் கைச்செலவுக்கு கூட ரொக்கம் இல்லாமல் அவதிப்பட்டதை மறுக்கமுடியுமா? இதன் விளைவு... வர்த்தக்ப் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கிப்போனது. அதில் இருந்து மீண்டு வர முடியாமல் தொழிலையே தாற்காலிகமாக கைவிட்டவர்கள் எத்தனையோ பேர். 

3.பங்கு சந்தை வீழ்ச்சி

இந்த நடவடிக்கை ரொக்கத்தில் நடக்கும் வணிகம் மட்டுமல்லாமல் இந்திய பங்கு சந்தையையும் வெகுவாக பாதித்தது. பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நாளன்று தேசிய பங்கு சந்தை சுமார் 1,700 புள்ளிகளும் நிஃப்டி சுமார் 600 புள்ளிகளும் சரிந்தன. அன்றைய சரிவிலிருந்து மீண்டு வர சுமார் மூன்று மாதங்கள் தேவைப்பட்டன. 2016 ஜூலை மாதம் துவங்கி 2017 பிப்ரவரி வரையிலான இடைப்பட்ட காலத்தில் சரிவை சந்திக்காத நிறுவனங்களே இல்லை என்கிறது புள்ளிவிவரங்கள் பெரும்பான்மையான நிறுவனங்கள் இன்றுவரையிலும் அதிலிருந்து மீளவில்லை என்பதுதான் உண்மை. குறிப்பாக ரொக்கத்திலேயே நடைபெற்று வரும் கட்டுமானத் தொழில், மோட்டார் வாகனம், சில்லறை வர்த்தகம், 

3. தொழில் உற்பத்தியில் சரிவு

நாட்டிலுள்ள பெரும் தொழில் நிறுவனங்களும் கூட இதனால் பாதிக்கப்பட்டன. ஏன்.. இவை தயாரிக்கும் பொருட்களில் பெரும்பாலான விழுக்காடு இந்திய சந்தையை நம்பியே தயாரிக்கப்படுகின்றன. கடைநிலை வர்த்தக நிறுவனங்களில் ஏற்படும் பணத்தட்டுப்பாடு எஸ்கலேட்டர் (Escalator)முறையில் நாட்டிலுள்ள அனைத்து பெரிய நிறுவனங்களின் உற்பத்தியையும் பாதித்தன. கடைநிலை வர்த்தக நிறுவனங்களில் தொடர் தேவையினால்தான் (continuous demand) இத்தகைய தொழில் நிறுவனங்கள் தொடர்ச்சியாக இயங்க முடிந்தன. சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் முடக்கப்பட்டதன் விளைவு அவற்றையே நம்பியிருக்கும் பெரு நிறுவனங்களையும் பாதிக்கத்தானே செய்யும்?

4. விவசாய உற்பத்தியில் வீழ்ச்சி

கிராமங்களில் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த அனைத்து தொழில்களிலும் ரொக்கம்தான் பெருமளவில் பயன்படுகின்றன. விதை, உரம், வேலையாட்களுக்கு கூலி என எதிலும் ரொக்க பரிவர்த்தனைகள்தான் என்பதுதான் இன்றல்ல இனிவரும் காலங்களிலும் நடக்கும். அதை எந்த தொழில்நுட்ப முன்னேற்றமும் மாற்றிவிடப்போவதில்லை. விவசாய உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதிலும் கூட ரொக்கம்தான் தேவைப்படுகிறது. எந்த விவசாயி பொருட்களை விற்றுவிட்டு வங்கியில் செலுத்தப்படும் தொகைக்காக காத்திருப்பான்? இப்போதும் அரசு கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்யப்படும் பொருட்களின் மதிப்பு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்றால் விவசாயிகள் அதை ஏற்காமல் குறைந்த விலைக்கானாலும் உடனே ரொக்கம் தர தயாராக உள்ள இடைத்தரகரிடம் விற்பதையே விரும்புகின்றனர். மேலும் தங்களுடைய பொருட்களின் மொத்த மதிப்பும் வங்கியில் வரவு வைக்கப்படுமா என்கிற நிச்சயத்தன்மையும் இல்லாத சூழலில் இது முழுவதுமாக நடைமுறைக்கு வருவது சாத்தியமே இல்லை. சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது என இத்தகைய மையங்களில் பொருட்களை விற்கும் விவசாயிகள் குமுறுவது செய்திகளில் வருவதை பார்க்க முடிகிறது. 

5. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (GDP) வீழ்ச்சி

சிறு, குறு மற்றும் பெரு என அனைத்து தொழில் உற்பத்தி மற்றும் விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட சரிவின் விளைவு 15-16 ஆம் நிதியாண்டில் 9.00 விழுக்காடாக இருந்த நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியின் அளவு பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்ட 16-17 நிதியாண்டில் 5.5. விழுக்காடுக்கு சரிந்தது. அதிலிருந்து மெள்ள மெள்ள மீண்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் 6.5 விழுக்காடாக அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு விழுக்காடு அளவுக்கே உயர்ந்துள்ளது. இப்படியே போனால் 15-16 நிதியாண்டில் நாடு அடைந்த 9.00 விழுக்காட்டை அடையவே இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படுமோ?



6. வேலை வாய்ப்பில் இழப்பு

பணப்புழக்கம் அறவே முடக்கப்பட்டுவிட்ட நிலையில் குடிசை தொழில்கள் மற்றும் முறைசாரா தொழில் துறை (unorganised sector) நிறுவனங்களும் ஒவ்வொன்றாக மூடப்பட அதில் பணிபுரிந்த பெருவாரியான பணியாட்கள் பணி இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். இதில் பெருமளவு பாதிக்கப்பட்டவை கட்டுமான தொழில். இதில் அன்றாட கூலிக்கு பணிபுரிந்துவந்த லட்சக்கணக்கான பணியாட்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தங்களுடைய வேலைகளை இழந்து போயினர். கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது என்ற நிலை ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் என்றாலும் மிகையாகாது.

இந்த நடவடிக்கையை தொடர்ந்து ஏற்பட்ட சரிவை மேல்காணும் படம் மிகத் தெளிவாக காட்டுகிறது. 

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நடைமுறைப்படுத்தப்பட்டதற்கு காரணமாக இருந்தவர்களின் மனப்போக்கு எத்தகையதாக இருந்தது என்பது தெரியவில்லை. இத்தகைய நடவடிக்கையை தனிமனிதனாகவோ அல்லது ஒரு சிறு குழுவாகவோ தீர்மானித்து எடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களால் கடுமையாக தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சம்மந்தப்பட்டவர்களின் பேச்சு திறமையாலும் அதன் எதிர்பாளர்கள் அதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட எதிர்மறை விளைவுகளுக்கு மக்களிடத்தில் தகுந்த முறையில் எடுத்துரைக்க தவறியதாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் பாராட்டப்பட்டு முன்பைவிட அதிக அளவு பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தப்பட்டதன் விளைவைத்தான் நாடு இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வருவதற்கு முன்பே மத்திய அரசு எடுத்த மற்றுமொரு அவசர முடிவு தான் ஒரே நாடு ஒரே வரி என்ற ஜிஎஸ்டி வரி அமலாக்கம்...

அதை நாளை பார்க்கலாம்

29 அக்டோபர் 2019

பாஜாகவின் சரிவு....2



முதல் பாகம்

சந்தையில் ஒரு பொருளின் விலை அதன் விநியோகம் (supply) அந்த பொருளுக்கு சந்தையில் நுகர்வோர் தரப்பிலிருந்து வரும் தேவை (Demand)என இரண்டின் அளவை பொருத்தே நிர்ணயிக்கப்படுகின்றன என்பதை இன்றல்ல சுமார் எண்பது வருடங்களுக்கு முன்பே அதாவது 1930ல் வாழ்ந்த இங்கிலாந்து பொருளாதார மேதை ஜே.எம்.கெய்ன்ஸ் (John Maynard Keynes) தன்னுடைய ஆராய்ச்சி கட்டுரை ஒன்றில் கூறியிருக்கிறார். 

உதாரணத்திற்கு வெங்காயத்தின் விலையை எடுத்துக்கொள்வோம்.

சந்தையிலுள்ள மொத்த விநியோகம் ஒரு டண் என்று வைத்துக்கொள்வோம். அதை வாங்க அதே சந்தையில் உள்ள மொத்த நுகர்வோரின் எண்ணிக்கை ஆயிரம் என்று வைத்துக்கொள்வோம். விநியோகத்தின் அளவில் மாற்றமில்லாமல் நுகர்வோரின் எண்ணிக்கை கூடும்போது.... அதாவது நுகர்வோரின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் அதிகரிக்கும் சூழலில் வெங்காயத்தின் விலை கூடும்... ஆயிரத்துக்கும் கீழே குறையும் போது அதாவது தேவை குறையும்போது வெங்காயத்தின் விலையை குறைக்காவிட்டால் அது விற்பனையாகாமல் தேங்கும் நிலை உருவாகும். ஆகவே வணிகர்கள் அதன் விலையை குறைக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

இதையே மாற்றி நுகர்வோரின் எண்ணிக்கை அதே ஆயிரம் என்ற நிலையில் வெங்காயத்தின் விநியோக அளவு ஒரு டண்ணுக்கும் கீழே குறையும்போது தேவை விநியோகத்தை விட அதிகம் என்பதால் வெங்காயத்தின் விலை கூடும். விநியோகத்தின் அளவு ஒரு டண்ணுக்கு மேல் அதிகரிக்கும்போது வெங்காயத்தின் விலை குறையும்...

இதுதான் ஒரு பொருளாதார சந்தையில் ஒரு பொருளின் விலை நிர்ணயிக்கப்படுவதின் அடிப்படை தத்துவம்.

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கைகள் தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள் என்றாலும் அது விநியோகம் மற்றும் நுகர்வோரின் வாங்கும் திறன்களை ஒரே மாதிரியாக பாதித்ததால் இதுவரையிலும் பொருட்களின் விலை அதிக அளவில் உயரவில்லை என்பது உண்மை.

ஆனால் இந்த முடிவுகள் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை பாதித்துவிட்டதாக வல்லுநர்கள் கூறுவது எதனால்?

இதை ஆராய நான்  உலக பொருளாதாரத்தைப் பற்றி விவாதிக்கும் பல இணையதளங்களை உலாவி (Browse)திரட்டிய தகவல்களை இங்கே சுருக்கமாக அளித்திருக்கிறேன்.

முதலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை.

இந்த நடவடிக்கை எதற்காக எடுக்கப்பட்டது என்பதை மத்திய அரசு அளித்திருந்த விளக்கம் என்ன?

1.இந்திய பணச்சந்தையில் கறுப்புப் பணத்தின் விழுக்காடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
2.கள்ள நோட்டுகளின் புழக்கம் மிக அதிக அளவில் அதிகரித்துவிட்டது. இது தீவிரவாதிகளின் செயல்பாடுகளுக்கு மிகவும் உதவுகிறது.
3.வருமானவரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் 
4.நாட்டில் பணப்புழக்கம் குறையும். அதனால் விலைவாசி குறையும்.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

1. கறுப்பு பணம் அதிகரித்துவிட்டது/

மத்திய அரசின் மதிப்பீட்டின்படி இந்தியாவில் சுமார் மூன்று லட்சம் கோடி கறுப்புப் பணம் இருந்ததாம்! இந்த மதிப்பீட்டை யார், எந்த அடிப்படையில் செய்தார்கள் என்பதே ஒரு கேள்விக் குறி. உண்மையில் மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது புழக்கத்தில் இருந்த சுமார் ரூ.15.41 லட்சம் கோடியில் ரூ.15.30 லட்சம் கோடி அதாவது மொத்த பணத்தில் 99.3 விழுக்காடு பணம் வங்கிகளில் செலுத்தப்பட்டுவிட்டது. மீதமுள்ள தொகையான ரூ.10,720 கோடி மட்டும்தான் கறுப்புப் பணம்.. இந்த அளவு குறைந்த தொகையை மீட்டெடுக்க இத்தனை விபரீதமான முடிவு தேவைதானா என்று பொருளாதார வல்லுநர்கள் கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

இவற்றை மீட்டெடுக்கத்தானே வருமான துறை என்ற ஒரு பெயரில் சர்வ அதிகாரம் படைத்த ஒரு அமைப்பு உள்ளது.? அவர்கள் ஒவ்வொரு ஆண்டும்  மீட்டெடுக்கும் தொகைக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லையே என்றும் கூறுகின்றனர் என்கின்றனர் வல்லுநர்கள்.

மேலும் ஒரு நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு அந்த நாட்டின் கறுப்புப் பணம் மட்டுமே காரணமாகிவிட முடியாது. ஏனெனில் இன்று உலகளவில் மிக அதிக அளவு கறுப்புப் பணத்தை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் ரஷ்யாவும் இரண்டாம் இடத்தில் சீனாவும் உள்ளன. இவை இரண்டுமே கடந்த இருபது ஆண்டுகளில் அசுரத்தனமான பொருளாதார வளர்ச்சியை சந்தித்துள்ள நாடுகள். அதற்கு அடுத்தபடியாக மெக்சிகோ. அதன் பிறகுதான் இந்தியா வருகிறது. முதல் இரண்டு இடங்களில் உள்ள நாடுகளிலுள்ள கறுப்புப் பணத்தின் அளவோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் உள்ள கறுப்புப் பணத்தின் அளவு ஐம்பதில் ஒரு பங்கு மட்டுமே. 

ஆக பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு அரசு முன்வைத்த முதல் காரணமே அடிபட்டுப் போகிறது. சரி அப்படியே வைத்துக்கொண்டாலும் கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்கிறார்களே அப்போதெல்லாம் கறுப்புப் பணம் நாட்டில் இல்லையா? 

இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட காலக்கட்டத்தை இப்போது திரும்பிப் பார்க்கும்போது இதன் பின்னாலிருந்த மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுவது: அப்போது நடக்கவிருந்த ஐந்து வட மாநில சட்டமன்ற தேர்தல்கள்.. குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தை தன் வசப்படுத்த நினைத்த மோடியும் அவருடைய கட்சியும் எதிர்கட்சிகள் வசமிருந்த கணக்கில் வராத பெரும் தொகை ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் தாள்களாகவே இருக்கும் என்றும் அதை செல்லாக் காசாக்கிவிட்டால் அவர்களுடைய மொத்த கஜானாவும் காலியாகிவிடும் எனறு எண்ணியிருக்கலாம். 

2. கள்ள நோட்டுகள் ஒழிக்கப்பட்டுவிடும்!

மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.1000, தாள்கள்களுக்கு மாற்றாக அரசு அறிமுகப்படுத்திய ரூ.2000 தாளில் பல நகலெடுக்கவியலாத அம்சங்கள் உள்ளன என்று விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் அது அறிமுகப்படுத்தப்பட்ட வெகு சில மாதங்களிலேயே பாக்கிஸ்தானிலிருந்து எல்லையை தாண்டி ஊடுருவிய தீவிரவாதிகளிடமிருந்து கட்டுக்கட்டாக ரூ.2000த்தின் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டபோது நாடே அதிர்ந்து போனது. மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி 2017-2018 நிதியாண்டில் இந்திய வங்கிகளில் செலுத்தப்பட்ட தொகைகளில் மட்டும் சுமார் 5.04 லட்சம் கள்ள நோட்டுகள் இருந்தனவாம்! அதில் 2000 ரூபாய் தாள் மட்டும் 1.80 லட்சம்! இதில் வியப்பு என்னவென்றால் புதிய ஐநூறு ரூபாய் மற்றும் இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிறகு நூறு ரூபாய் மற்றும் ஐம்பது ரூபாய் தாள்களின் கள்ளப் பிரதிகள் அதிக அளவில் புழக்கத்தில் வந்துள்ளதாம்! . 





இரண்டாயிரம் ரூபாய் தாள்களின் கள்ள பிரதிகள் நாட்டில் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதால் அதன் பயன்பாட்டை குறைக்கும் வகையில் கடந்த ஓராண்டில் அதை அச்சடிப்பதையே மத்திய ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது!

ஆக இதிலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியையே சந்தித்துள்ளது 

3. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயரும்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆண்டை தொடர்ந்து வந்த நிதியாண்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை சுமார் பத்து மில்லியன் அதாவது ஒரு கோடி உயர்ந்தது என்பது உண்மைதான். ஆனால் இதில் பெரும்பாலோனோர் மாத வருமானம் பெறுவோர். அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் சராசரியாக அதிகரித்த வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை விட இந்த அதிகரிப்பு ஒன்றும் அதிகம் இல்லை.. மேலும் எண்ணிக்கை அதிகரித்தாலும் வரி வசூலில் பெரிய அளவுக்கு ஏற்றம் இல்லை என்கிறது வருமான வரித்துறையின் அறிக்கை. அவ்வாறு அதிகரித்த தொகையிலும் பெருமளவு பணமதிப்பிழப்பு எடுக்கப்பட்ட துவக்க நாட்களில் மதிப்பிழந்த ரூபாய்களை அதாவது ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகளை வரி செலுத்துவதற்கு பயன்படுத்தலாம் என்ற அரசின் அறிவிக்கையை தொடர்ந்து செலுத்தப்பட்ட சுமார் ஐம்பதாயிரம் கோடியை கழித்துவிட்டால் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு முன்புள்ள ஐந்தாண்டுகளில் சராசரியாக வசூலிக்கப்பட்ட தொகையின் அளவிலேயே இருந்துள்ளது. 

எனவே இந்த காரணமும் ஏற்புடையதல்ல.

4. நாட்டில் பணப்புழக்கம் குறையும் அதனால் விலைவாசி குறையும்

நான் ஏற்கனவே விளக்கியுள்ளப்படி விலைவாசி குறைய பணப்புழக்கம் ஒரு காரணமே தவிர அதுமட்டுமே காரணமல்ல.. விநியோகம் முந்தைய அளவிலேயே இருந்து பணப்புழக்கம் மட்டும் கணிசமான அளவு குறைக்கப்பட்டு இருந்தால் மட்டுமே விலை வாசி குறைய வாய்ப்புள்ளது. ஆனால் உற்பத்தியும் குறைந்து அதன் விளைவாக விநியோக குறைவும் நுகர்வோரின் வாங்கும் சக்தி குறைவும் சம நிலையில் இருக்கும்போதும் விலைவாசி ஏறாமல் இருக்கும் என்பதுதான் உண்மை. ஆகவே விலைவாசி ஏறாமல் இருந்திருக்குமானால் அதற்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மட்டுமே காரணமல்ல.

ஆனால் இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகள் என்னென்ன?

நாளை பார்க்கலாம்...

28 அக்டோபர் 2019

பாஜகவின் சரிவு துவங்கிவிட்டது.....

சமீபத்தில் நடந்து முடிந்த மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல்களில் மக்கள் பாஜகவிற்கு அருதி பெரும்பான்மை கிடைக்காத அளவுக்கு வாக்களித்ததற்கு இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவும் அதனால் ஏற்பட்ட விளைவுகளால் மக்கள் பட்ட அவதியும் தான் முக்கிய காரணம் என்றால் மிகையாகாது. 

இரு மாநிலங்களிலும் பிரச்சாரத்தின்போது மோடியும் அமித்ஷாவும் காஷ்மீரில் 370வது பிரிவை நீக்கியதைப் பற்றியே பேசியது நினைவிருக்கலாம். ஆனால்  காஷ்மீரில் நடக்கும் பிரச்சினையைப் பற்றி எங்களுக்கு எவ்வித கவலையும் இல்லை என்பதை மக்கள் தெளிவாக தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தரப்பில் இன்னும் சிறிது ஒருங்கிணைப்பு சரியாக இருந்திருந்தால் ஹரியானாவில் நிச்சயம் ஆட்சியை கைப்பற்றியிருக்க முடியும். 

இந்த சூழலில் இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை குறித்து ஆட்சியாளர்கள் கவலைப்படும் நேரம் வந்துவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்துக்கொள்வது நல்லது. 

எதிர்கட்சிகள் மட்டுமல்லாமல் நாட்டிலுள்ள பொருளாதார வல்லுனர்கள், முன்னாள் நிதியமைச்சர், இன்னாள் நிதியமைச்சரின் கணவர்.... இவ்வளவு ஏன், நோபல் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டவர் வரையிலும் கடந்த ஆறு ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் சிறிது சிறிதாக நலிவடைந்து வந்துள்ளது என்பதை பல ஆதாரங்களுடன் எடுத்துரைத்துள்ளனர்.

ஆனால் அரசாங்கம்தான் இதை ஒப்புக்கொள்வதாக இல்லை.

இதில் தான் சிக்கலே....

தமிழக அரசு டெங்கு காய்ச்சல் விஷயத்தில் நடந்துக்கொள்வதுபோன்றுதான் மத்திய அரசும் பொருளாதார விஷயத்தில் self denial modeல் செயலாற்றிக்கொண்டிருக்கிறது.

டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் இருப்பதும் அது வேகமாக பரவி வருவதும் உண்மைதான் என்பதை தமிழக அரசும் பொருளாதாரம் உண்மையிலேயே தேக்க நிலையை அடைந்திருப்பது உண்மைதான் என்பதை மத்திய அரசும் ஒப்புக்கொண்டாலே போதும், பாதி கிணறு தாண்டிய மாதிரிதான். 

இந்த நிலையிலிருந்து எவ்வாறு மீளலாம் என்பதை அதன் பிறகுதான் எடுக்க முடியும். நாட்டில் எவ்வித பொருளாதார நெருக்கடியும் இல்லை... அமேஜான் ஆன்லைன் ஸ்டோரில் ஒரே வாரத்தில் சுமார் இருநூறு கோடிக்கு செல்பேசிகள் விற்பனை ஆகியுள்ளன... கடந்த ஒரே மாதத்தில் மூன்று பாலிவுட் திரைப்படங்கள் முன்னூறு கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளன என்பன போன்றவற்றையெல்லாம் பாமரத்தனமாக சுட்டிக்காட்டி  இந்திய பொருளாதாரத்தில் எவ்வித தேக்கமும் ஏற்படவில்லை என்றெல்லாம் கூறிவருவதைப் பார்க்கும்போது இதே அமேஜானின் கடந்த வருட நிதியறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்த லாபத்தை சுட்டிக்காட்டி அமெரிக்காவில் பொருளாதரம் நலிவடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவது தவறு என்ற அதிபர் டிரம்ப்புக்கும் நம்முடைய பிரதமர் மோடிக்கும் இடையில் எவ்வளவு ஒற்றுமை உள்ளது என்பது தெரிகிறது. 

இந்தியாவில் பொருளாதாரம் நலிவடைந்து வருகிறது என்றால் உலகமெங்குமே இதே நிலைதான் என்று உலக வங்கியே கூறுகிறது என்கிறார் நிதியமைச்சர். பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் நம்முடைய தமிழகத்தில் டெங்குவின் பாதிப்பு மிக, மிக குறைவு என்று நம்முடைய சுகாதார அமைச்சர் கூறுவது போல்தான் உள்ளது இது. நம்முடைய மத்திய மாநில அரசுகளிடத்தில்தான் எத்தனை ஒற்றுமை!

சில தினங்களுக்கு முன் பொருளாதாரத்தில் 2019ம் ஆண்டுக்கான  நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள அமெரிக்க வாழ் இந்திய பொருளாதார வல்லுநர் அபிஜித் பானர்ஜி அவர்கள் கூறுகையில் இந்தியாவின் பொருளாதாரம் கடந்த ஆறு ஆண்டுகளாகவே சரியான பாதையில் பயணிக்கவில்லை என கூறியிருந்ததை பத்திரிகைகளில் வாசிக்க முடிந்தது. அதாவது மோடி அவர்கள் பதவியேற்றதிலிருந்துதான் இந்த நிலை என்பதை சூசகமாக கூறியிருந்தார் அவர்.

இதையேத்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு நம்முடைய மத்திய நிதியமைச்சரின் கணவரும் கூறியிருந்தார். அவர் தொடர்ந்து கூறுகையில் முந்தைய ஆட்சி காலங்களில் அதாவது நரசிம்மராவ் முதல் மன்மோகன் சிங் ஆகியோர ஆட்சி செய்த காலத்தில் அவர்கள் வழிநடத்திய முறையை பின்பற்றியிருந்தாலே இந்த சரிவை தவிர்த்திருக்க முடியும் என்றார்.

முன்னாள் மத்திய ரிசர்வ் வங்கி தலைவர் ராஜன் அவர்கள் கூறும்போது கடந்த மூன்று ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பல பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் மத்திய அரசால் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள்தான் இந்திய பொருளாதாரம் முடங்கிப்போனதற்கு முக்கிய காரணம் என்றார். 

அதென்ன முக்கிய சீர்திருத்தங்கள்?

முதலாவது 2016ஆம் ஆண்டு அவசர, அவசரமாக மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவருக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை.

அதன் பாதிப்பில் இருந்து நுகர்வோரும், சிறு, குறு வணிக மற்றும் தொழில் நிறுவனங்களும் மீள்வதற்கு முன்பே கடந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு சற்று முன்பு எடுக்கப்பட்ட .ஜி.எஸ்.டி வரி திட்டம்.

முதலாவது முடிவால் நுகர்வோர் கைகளில் இருந்த ரொக்கப்பணம் முழுவதுமாக பறிக்கப்பட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டது. அப்படி சேர்ந்த தொகையையும் முழுவதுமாக மக்களை எடுக்க விடாமல் ரேஷன் முறையில் அலைக்கழித்தது. இது மட்டுமா? வங்கிகளும் கூட இந்த பணத்தை முழுமையாக பயன்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதிக்காமல் அதில் பெரும் விழுக்காட்டை முடக்கிப் போட்டது. ஆக நுகர்வோர் பணம் சந்தையிலிருந்து அகற்றப்பட்டுவிட்டது. பொருளாதார வல்லுநர்கள் பாஷையில் சொல்ல வேண்டுமானால் சந்தையின் தேவைகளை (Market Demand) பெருமளவு குறைத்துவிட்டது. நுகர்வோரின் வாங்கும் சக்தியை குறைத்தாலே அவர்களின் தேவையும் குறைந்துவிடும் அல்லவா? இதுதான் பொருளாதார வீழ்ச்சியின் துவக்கம்..

இரண்டாவது முடிவு தொழில், வணிகம் செய்வோரை முடக்கிப்போட்டுவிட்டது. வல்லுநர்கள் பாஷையில் வணிக மற்றும் தொழில் துறை நிறுவனங்களின் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலையை இந்த புது வரி உயர்த்தியதால் ஏற்கனவே வாங்கும் திறனை இழந்திருந்த நுகர்வோரிடமிருந்து வரக்கூடிய மீதமிருந்த தேவையையும் குறைத்துவிட்டது. இதன் விளைவாக உற்பத்தி குறைந்து சந்தையில் பொருட்களின் வரத்து (Supply) குறைந்துபோனது. 

பொருளாதார வீழ்ச்சியிலும் விலைவாசி அதிக அளவில் உயராமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்கின்றனர் வல்லுநர்கள்.

எப்படி?

நாளை பார்க்கலாம்....

10 டிசம்பர் 2013

PPP அடிப்படையில் இந்தியா ஜப்பானை முந்தியது!!

GDP, GNP அடிப்படையில் உலகில் ஒன்பதாவது இடத்திலுள்ள இந்தியா 'வாங்கும் திறன் ஒப்பீடு' (Purchasing Power Parity) அடிப்படையில் ஜப்பானை முந்தி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது என்கிறது உலக நாணய நிதியம் (IMF). 2011ம் ஆண்டு இறுதியில் அது வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (GDP) இந்த ஒப்பீட்டின் அடிப்படையில் $ 4.46 trillion ஆகவும் ஜப்பானின் மதிப்பு $ 4.44 trillion ஆகவும் இருந்ததாம்!! 

அது என்ன வாங்கும் திறன் ஒப்பீடு?

சுருக்கமாக பார்க்கலாம்.

உலகிலுள்ள மிகப் பெரிய பொருளாதார சக்தி எனப்படும் அமெரிக்காவின்  நாணயமான டாலருடன் உலகிலுள்ள மற்ற நாடுகளின் நாணயங்களின் வாங்கும் திறனை (Purchasing Power) ஒப்பிட்டுப் பார்ப்பதுதான் இந்த 'வாங்கும் திறன் ஒப்பீடு.'

ஆங்கிலத்தில் இதை Purcasing Power Parity என்கிறார்கள். 

உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் செல்லுபடியாகக் கூடிய ஒரே நாணயம் அமெரிக்காவின் டாலர்தான் என்றால் மிகையாகாது. ஆகவே உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் வசிப்பவர்களுடைய வாங்கும் திறனை மதிப்பீடு செய்ய 1986ம் வருடம், அமெரிக்காவில் கிடைக்கும் ஒரு பொருளின் விலையை மற்ற நாடுகளில் நிலுவையிலுள்ள விலையுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தது  அமெரிக்காவின் பிரபல  'தி எக்கனாமிஸ்ட்'  சஞ்சிகை (Magazine).

அமெரிக்காவிலுள்ள மக்டனால்டு பர்கர் (Burger) ஒன்றின் விலையை அந்த நிறுவனத்தின் கிளைகள் இயங்கிவரும் ஏனைய நாடுகளிலுள்ள விலையுடன் ஒப்பிட்டு அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டின் நாணயத்தின் மதிப்பு என்ன என்பதை தோராயமாக கணக்கிட்டு Big Mac Index என்ற ஒரு பட்டியலை வெளியிட்டது இந்த சஞ்சிகை. அதன்படி இந்தியாவின் ரூபாய்தான் உலகிலேயே குறைத்து மதிப்பிடப்படும் நாணயம் என்று கண்டறியப்பட்டது.  

இதை எப்படி கண்டுபிடித்தார்கள் என்று பார்ப்போம்.

அமெரிக்காவில் மிகவும் பிரபலமான மக்டனால்டு பர்கரின் சராசரி விலை $ 4.56. இந்தியாவில் அதே பர்கர் $ 1.50 கிடைக்கிறது. தற்போதைய அன்னிய செலாவணி மாற்று விகிதத்தின் படி ஒரு டாலரின் மதிப்பு ரூ.59.98. இதன் அடிப்படையில் இந்தியாவில் இந்த பர்கரின் விலை Rs.90/-  ($1.50x59.98).   அமெரிக்காவில் இதன் இந்திய ரூபாய் மதிப்பு சுமார் Rs.273.50 ($4.56x59.98).  இதன்படி பார்த்தால் ஒரு டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு Rs.19.70(90/4.56=19.70)  என்றுதான் இருக்க வேண்டும். இது அன்னிய சந்தையின் டாலர் மதிப்புடன் ஒப்பிடுகையில் ரூ.40.30 குறைவு (60 - 19.70=40.30).

ஆகவேதான் இந்திய ரூபாயை the world's most underestimated currency என்கிறது இந்த கணிப்பு.  

இந்த சூத்திரத்தின் அடிப்படையில் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பை (GDP)கணக்கிடும்போதுதான் அது ஜப்பானின் ஒட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பை மிஞ்சுகிறதாம்! 

இந்த தளத்தில் உலகிலுள்ள அனைத்து நாடுகளுடைய நாணயத்தின் டாலருக்கு எதிரான உண்மையான மதிப்பை உடனடியாக கணக்கிட்டும் பார்க்கும் வசதியுள்ளது. 

மக்டனால்டு பர்கர் என்பதில் மட்டுமில்லாமல்  இந்திய-அமெரிக்க நாடுகளில் விற்கப்படும் பெட்ரோல் விலையிலும் இதே நிலைதான். சென்னையில் எண்பது ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலின் அமெரிக்க விலை சுமார் மூன்று டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் நூற்றியெண்பது ரூபாய். இந்த அடிப்படையில் பார்த்தாலும் ஒரு டாலரின் இந்திய மதிப்பு அன்னிய செலவானி சந்தையிலுள்ள டாலரின் மதிப்பைக் காட்டிலும் மிகவும் குறைவு (80/3=26.66). எலக்ட்ரானிக் பொருட்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் மற்ற எல்லா பொருட்களுடைய விலையிலும் இத்தகைய கணிசமான வேறுபாட்டை நம்மால் காண முடிகிறது.

ஆனால் இது ஒரு குறியீடு மட்டுமே என்பதையும் இதை மட்டும் வைத்து ஒரு நாட்டிலுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை அளவிட்டுவிட முடியாது என்பதையும் மறுப்பதற்கில்லை. 

இத்தகைய ஒப்பீடுகள் பை-லேட்டிரல் எனப்படும் இரண்டு நாடுகளுடைய நாணயங்களின் மதிப்பை ஒப்பிட பயன்படுவதுடன் வர்த்தக அடிப்படையில் அவ்விரு நாடுகளுக்கிடையிலும் நடைமுறையிலுள்ள நாணய மாற்று விகிதத்தில் ஒரூ நீண்டகால தாக்கத்தை (Long Term Effect) ஏற்படுத்தவும்  வாய்ப்புள்ளது என்கின்றனர் சில பொருளாதார நிபுணர்கள். 

இரு நாடுகளுக்கிடையிலுள்ள வர்த்தகத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் சந்தை பணமாற்று விகிதத்திற்கும் (Exchange Rate) இத்தகைய வாங்கு திறன் அடிப்படையில் கணிக்கப்படும் நாணய மதிப்பிற்கும் (Estimated under PPP) ஏன் இந்த வேறுபாடு என்ற கேள்வி எழலாம்.

இதற்கு பல காரணங்கள் இருப்பினும் இவற்றில் முக்கியமானதாகக் கருதப்படுவது இரண்டு காரணங்கள்:

1. அந்தந்த நாட்டிலுள்ள தொழிலாளர் ஊதியம் (Labour cost).

இது ஓரளவுக்குத்தான் உண்மை என்றாலும் இதுதான் மிக முக்கியமான காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்தியாவில் ஒரு தொழிலாளருக்கு வழங்கப்படுவதைப் போல மூன்று மடங்கு அதிகமான தொகை ஊதியமாக அமெரிக்காவில் வழங்கப்படுகிறது. ஒரு பொருளின் உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் தொழிலாளர்  ஊதியம்(Labout Cost) பொருட்களின் இறுதி சந்தை விலையையும் ஏற்றிவிடுகிறது. 

2. இந்திய நாட்டின் கணக்கில் வராத வர்த்தகத்தின் மதிப்பு. (Hidden strength of India's parallel economy)

இந்த கறுப்புச் சந்தை இந்திய பொருளாதாரத்தின் மிகப்பெரிய பலவீனம் எனக் கருதப்பட்டாலும் சில வேளைகளில் அதுவே நம்முடைய பலமாகவும் கருதப்படுகிறது. கணக்கில் வராத வர்த்தகர்கள் அல்லது தயாரிப்பாளர்களால்  அரசுக்கு விற்பனை வரி, கலால் வரி, வருமான வரி, சொத்துவரி என பலவிதங்களில் வரி செலுத்தும் நேர்மையான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தயாரித்து விற்கும் பொருட்களின் விலையை விடவும் பண்மடங்கு குறைத்து விற்க முடிகிறது. 

அத்தகைய பொருட்களுடன் போட்டிப் போடும் நிலைக்கு உள்ளூர் மற்றும் அயல்நாட்டு வர்த்தகர்களும் தள்ளப்படுவதால்தான் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம்முடைய சந்தையில் இந்த அளவுக்கு பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன என்கின்றனர். மேலும் சீனாவைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் உலகின் மற்றெந்த நாட்டிலும் இல்லாத உள்நாட்டு தேவைகள் (Domestic Demand) இந்தியாவில் இருப்பதும் ஒரு காரணம். இதில் இன்னொரு காரணமும் உள்ளது. இதை ஆங்கிலத்தில் Economies of Scale என்கிறார்கள். அதாவது இந்தியாவிலுள்ள மிக அதிக அளவிலான நுகர்வோர் தேவைகளால் (Increasing demand of the domestic consumer) பொருட்களின் தயாரிப்பும் அதிகரிக்கப்படுகிறது. ஒரு பொருளை அதிக தளவில் தயாரிக்கும்போது (Mass Production) அதன் தயாரிப்பு செலவையும் குறைக்க முடியும் என்கிறார்கள்.

அது எப்படி?

ஒரு பொருளை தயாரிக்க தேவைப்படும் செலவினங்களில் (Production cost) நிரந்தர செலவு (Fixed Cost) அன்றாட செலவு (Variable Cost)  என்று இரு இனங்கள் உண்டு. இதில் தொழிற்சாலையின் வாடகை, தயாரிப்பில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்காகும் பராமரிப்பு செலவுகள் மற்றும் அவற்றின் தேய்மானம் (Depreciation), உழைப்பாளரின் ஊதியம் (Labour Cost) ஆகியவை ஒரு பொருள் தயாரித்தாலும் நூறு பொருட்கள் தயாரித்தாலும் பெரிதாக மாறப்போவதில்லை. ஆகவே ஒரு பொருளை அதிக அளவில் தயாரிக்கும்போது அதன் சராசரி உற்பத்தி செலவு ( Average Production Cost) குறைகிறது. இதன் விளைவாக அவற்றின் விலையையும் கணிசமாக குறைக்க முடிகிறது. விற்பனைக்கு வரும் பொருட்களை பெருமளவில் கொள்முதல் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் பல்பொருள் அங்காடிகளால் (Super Markets) ரோட்டோர சில்லறைக் கடைகளை விடவும் மலிவான விலைக்கு பொருட்களை விற்க முடிவதற்கும் இதுவே காரணம். (அதே சமயம் இத்தகைய ரோட்டோர சில்லறைக் கடைகளும் சந்தையில் இருப்பதால்தான் பல்பொருள் அங்காடிகளும் அவர்களுடன் போட்டி போடுவதற்காகவே தங்களுடைய பொருட்களின் விலையை குறைக்கும் நிர்பந்தத்திற்குள்ளாகிறார்கள் என்பதும் உண்மை. எதிர்வரும் காலங்களில் ரோட்டோர சில்லறைக் கடைகள் அடியோடு அழியுமானால் அப்போது பல்பொருள் அங்காடிகளின் ஆதிக்கம் பெருகி அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் உள்ளதுப்போல் அவர்களுடைய (Supermarkets) கட்டுப்பாட்டில் நம்முடைய நுகர்வோரும் சிக்கி திணறப்போவது உறுதி. )

இந்திய சந்தையில் பணவீக்கத்தின் (inflation) தாக்கத்தால் அன்றாடம் ஏறும் விலைவாசியால் பாதிக்கப்படும் நம்முடைய நுகர்வோருக்கு PPP என்பதோ வாங்கு திறன் ஒப்பீடு என்பதோ அல்லது இந்தியாவின் நாணயம்தான் உலகிலேயே குறைத்து மதிக்கப்படும் நாணயம் என்பதோ எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை  என்பது உண்மை. ஆனாலும் இத்தகைய ஒப்பீடுகளின் மூலம் உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம்முடைய நாட்டிலுள்ள விலைவாசி அவ்வளவு அதிகமில்லை என்பதை நம்மால் உணர முடிகிறது. 

கடந்த மூன்று மாத காலமாக அமெரிக்காவில் வசித்து வரும் என்னுடைய மகள் கூறுவதை கேட்டதிலிருந்து இந்தியா இந்தியாதான் என்பதை உணர முடிகிறது. என்னுடைய மலேசிய வாசத்தின்போதும் இதை முழுவதுமாக உணர முடிந்திருக்கிறது. இங்கு யாராலும் வாழ்ந்துவிட முடியும். கோடீஸ்வரனாலும் வாழ முடியும் அதே அளவுக்கு இல்லாவிடினும் தன்னுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துக்கொண்டு பாமரனாலும் வாழ்ந்துவிட முடிகிறது.

'நான் சென்ற நாட்டில் இந்த நாடு சிறந்தது' என்று அன்று கண்ணதாசன் எழுதிய பாட்டில் வரும் வரிகள் இன்றளவும் உண்மை. 

**********

03 டிசம்பர் 2013

GNP என்றால் என்ன - GDP க்கும் அதற்கும் என்ன வித்தியாசம்?

கடந்த வாரம் GDP என்றால் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பு என்று பார்த்தோம். உண்மையில் அது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டிலேயே பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு என்று கூற வேண்டும். அதாவது, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு முழுவதுமாக இதில் சேர்க்கப்படுவதில்லை. ஒரு நாட்டின் ஏற்றுமதி அதன் இறக்குமதியை விட அதிகமாக இருக்கும் சூழலில் மட்டுமே அதிகமுள்ள பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு மற்ற உள்நாட்டு தயாரிப்புகளின் மதிப்புடன் சேர்க்கப்படுகிறது. 

ஆனால்  GNP என்பது எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டாலும் அவை நம்முடைய நாட்டை சார்ந்தவர்களால் தயாரிக்கப்படும் பொருட்களாக இருக்கும் பட்சத்தில் அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தின்  மதிப்பையும் (Income) உள்ளடக்கியதாகும். 

இன்னும் எளிமையாக கூறவேண்டுமானால் நம்முடைய நாட்டின் GDP நம்முடைய நாட்டில் வாழும்/இயங்கும் அயல் நாட்டைச் சார்ந்த தனிநபர்  அல்லது நிறுவனங்கள் இங்கு தயாரிக்கும் அல்லது அளிக்கும் சேவைகளின் மதிப்பை உள்ளடக்கியது என்றாலும் அவற்றால் அவர்களுக்கு (அயல் நாட்டினருக்கு) கிடைக்கும் வருமானம் அதாவது, முதலீடு மற்றும் பங்குகளிலிருந்து கிடைக்கும் டிவிடன்ட், கடன் பத்திர முதலீட்டிலிருந்து கிடைக்கும் வட்டி, அயல் நாட்டினருக்கு சொந்தமான நிறுவனங்கள் ஈட்டும் லாபம் ஆகியவற்றின் மதிப்பு ஒட்டுமொத்த GDP யிலிருந்து குறைக்கப்படுகிறது. 

ஆகவே நம்முடைய GDP வருடா வருடம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும் நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த வருமானம் அதே அளவு வளரும் என்று சொல்ல முடியாது. 

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் இங்கு  செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள்  ஒவ்வொரு வருடமும் ஈட்டும் லாபம் மற்றும் FIIs எனப்படும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் நம்முடைய பங்கு சந்தைகளில் செய்யும் முதலீடுகளிலிருந்து ஈட்டும் லாபம் ஆகியவை நம்முடைய GDP அதாவது நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் சேவைகளின் மதிப்பிலிருந்து குறைக்கப்படும். அதே சமயம் நம்முடைய நாட்டினர் வெளிநாடுகளில் ஈட்டும் வருமானம், லாபம், வட்டித் தொகை ஆகியவை நம்முடைய GDPயுடன் சேர்க்கப்பட்டும். இந்த கூட்டுத்தொகைதான் GNP எனப்படுகிறது.

தலை சுற்றுகிறதா?

இதை ஒரு சூத்திரத்தின் மூலம் விளக்குகிறேன்.

கடந்தவாரம் GDPஐ கணக்கிட நாம் பார்த்த சூத்திரம் இது: 

GDP=C+I+G+(X-M) 

இதில் 

C= Consumption அதாவது தனிநபர் மற்றும் நிறுவன செலவினங்களையும் 

I= Investments அதாவது இவ்விருவகுப்பினரின் முதலீடுகளையும் 

G= Government Expenditure & Investments அதாவது அரசு செய்யும் செலவினங்கள் மற்றும் முதலீடுகளையும் 

X= Exports அதாவது நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பையும்

M= Imports அதாவது இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பையும் குறிக்கிறது என்று பார்த்தோம்

இந்த முறையில் கணக்கிடப்படும் GDPயிலிருந்து 

1. வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அவர்களுடைய நாட்டிற்கு அனுப்புகிற வருமானத்தை குறைக்க வேண்டும்

2. நம்முடைய நாட்டினர் வெளிநாடுகளிலிருந்து நம்முடைய நாட்டுக்கு அனுப்பியுள்ள வருமானத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். 

இதன் கூட்டுத் தொகைதான் GNP (Gross National Product).

இன்னும் தெளிவாக்க வேண்டுமானால் GDPயை கணக்கிட நம்முடைய நாட்டின் பூளோக எல்லைக்குள் (Geopgraphic Area) தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களின் மதிப்பையும் பார்க்கிறார்கள். அது எந்த நாட்டினரால் தயாரிக்கப்பட்டது என்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால் அவற்றால் கிடைக்கும் வருமானம் நமக்கு கிடைப்பதில்லை. 

ஆகவேதான் நம்முடைய GDPயின் தொடர் வளர்ச்சி மட்டுமே நம்முடைய பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் ஒரு நாட்டின் GNP வளர்ச்சியடையும் போது அது அந்த நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தையும் அந்த நாட்டினரின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தும் என்று நம்பப்படுகிறது. 

இதை சூத்திரத்தில் கூற வேண்டுமென்றால் GNP = GDP + Net Income Earned from Abroad என்று கூறலாம்.

இதில் NET என்ற வார்த்தை நம்முடைய நாட்டினர் அயல் நாட்டில் ஈட்டும் வருமானம் மற்றும் நம்முடைய நாட்டில் அயல்நாட்டினர் ஈட்டும் வருமானம் ஆகியவற்றிற்கு இடையிலுள்ள வித்தியாசத்தை (Difference between Income earned by our citizens abroad AND Income earned by foreign nationals in our Country) குறிக்கிறது. 

சுருக்கமாக கூறவேண்டுமென்றால் ஒரு நாட்டின் GNP என்பது அந்த நாட்டினர் ஈட்டும் மொத்த வருமானத்தின் மதிப்பு என்றும் கூறலாம். 

ஆயினும் உலகிலுள்ள அனைத்து நாடுகளும் தங்களுடைய பொருளாதார வளர்ச்சியை GDP அடிப்படையிலேயே கணக்கிடுகின்றனர் என்பதும் உண்மை. ஆகவே 1991 வரை தங்களுடைய நாட்டுப் பொருளாதார நிலையை GNP மூலம் மட்டுமே கணக்கிட்டு வந்த அமெரிக்கா அதன் பிறகு பிற உலக நாடுகள் பின்பற்றும் முறையான GDP முறையை பின்பற்ற துவங்கியது.

(United States used GNP as its primary measure of total economic activity before 1991, when it began to use GDP. In making the switch, the Bureau of Economic Analysis (BEA) noted that GDP provided an easier comparison of other measures of economic activity in the United States and that "virtually all other countries have already adopted GDP as their primary measure of production.") 

Source:http://en.wikipedia.org/wiki/Gross_national_product

GDP முறையை அடிப்படையாக வைத்தே உலகிலுள்ள நாடுகளை உலக வங்கி தரவரிசைப் படுத்துகிறது என்றாலும் GNP அடிப்படையிலும் நாடுகளின் தரவரிசை பட்டியலும் விக்கிப்பீடியா தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா 2010 மற்றும் 2011 வருடங்களில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. (GDP அடிப்படையிலும் இந்தியா இதே இடத்தில்தான் உள்ளது). இதிலிருந்து என்ன புரிகிறது? நம்முடைய நாட்டைப் பொருத்தவரை GDP மற்றும் GNP ஆகிய எந்த முறையில் கணக்கிட்டாலும் பெரிய வேறுபாடுகள் இல்லை. 

ஆனால் உலகின் மற்ற வேறெந்த நாடுகளிலும் இல்லாத ஒரு பிரத்தியேகம் நம்முடைய நாட்டில் உள்ளது. அதுதான் parallel economy எனப்படும் கறுப்புச் சந்தை. நம்முடைய நாட்டின் உற்பத்தியாகட்டும் அல்லது வருமானமாகட்டும் அவற்றில் சரிபாதி, - சிலர் சம அளவு என்றும் கூட கூறுகின்றனர் - கணக்கில் வரவு வைக்கப்படாமலேயே இருந்து வருகிறது. ஆகவே நம்முடைய நாட்டில் வெளியிடப்படும் GDPயின் மதிப்பு உண்மையில் வெளியிடப்படும் மதிப்பை போல் ஒன்றரை மடங்கு இருக்க வேண்டும் என்றாலும் மறுப்பதற்கில்லை. இதை நம்முடைய நாட்டின் சாபக்கேடு என்றும் சொல்லலாம் அல்லது மறைந்துக்கிடக்கும் வலிமை என்றும் (Intrinsic Value)கூறலாம். அது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தைப் பொருத்தது.  

ஒரு நாட்டின் GNPயும் GDPஐ போலவே நடப்பு விலைவாசியிலும் (current market prices) அடிப்படை ஆண்டிலிருந்த (Base Year) விலைவாசியிலும் கணக்கிடுகிறார்கள். இதன் மூலம் கணக்கிடப்படும் ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு நாடு எந்த அளவுக்கு உற்பத்தியிலும் வருமானத்திலும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை கணக்கிட முடிகிறது.

ஒரு நாட்டின் ஒட்டுமொத்த GNPஐ அந்த நாட்டிலுள்ள மக்கள்தொகையால் வகுத்து (Divide) கிடைக்கும் தொகையை Per Capita GNP என்கின்றனர். 

ஒரு நாட்டின் Per Capita GNP மதிப்பை அமெரிக்க டாலருக்கு மாற்றுவதன் மூலம் உலகிலுள்ள அனைத்து நாடுகளின் தனிநபர் வருமானத்தை ஒரே நாணய மதிப்பில் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது என்கிறது உலக வங்கி. ஆனால் இந்த தொகை நாட்டிலுள்ள அனைத்த நபர்களுக்கும் ஒரே அளவில் கிடைக்கிறது (equal distribution) என்பதை காட்டுவதில்லை என்பதும் உண்மை. 

ஒரு நாட்டினரின் வாழ்க்கைத் தரத்தை இன்னொரு நாட்டினரின் வாழ்க்கைத் தரத்துடன் Per Capita GDP மற்றும் Per Capita GNP அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்ப்பதைவிட அவ்விரு நாட்டினரின் வாங்கும் திறன் அடிப்படையில் (Purchasing Power) ஒப்பிட்டு பார்க்கும் முறையை Purasing Power Parity Method என்கின்றனர். 

அது என்ன என்பதை அடுத்த பதிவில் காணலாம். 







26 நவம்பர் 2013

ஜிடிபி அப்படீன்னா என்னாங்க (நிறைவுப் பகுதி)

ஆனால் பொருட்களின் தயாரிப்பு செலவும் சந்தை விலையும் எல்லா வருடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லையே? ஆகவே கடந்த ஆண்டோ அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு கணக்கிடப்பட்ட GDPயுடனோ ஒப்பிட்டு எத்தனை விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளோம் என்று எவ்வாறு தெரிந்துக்கொள்வது?  

உதாரணத்திற்கு 2000-2001ம் ஆண்டிலிருந்து நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (GDP) எத்தனை விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை கணக்கிடவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். 2010-11 ஆண்டில் இருந்த விலைவாசியே இப்போதும் இருக்காது அல்லவா? இப்படிப்பட்ட சூழலில் நாட்டின் உற்பத்தியில் எவ்வித வளர்ச்சியும் இல்லையென்றாலும் இந்த இடைபட்ட காலத்தில் ஏற்பட்ட விலைவாசி உயர்வே நாட்டின் உற்பத்தி வளர்ச்சி அடைந்துவிட்டதைப் போன்றதொரு பிரமையை ஏற்படுத்திவிடக் கூடும். அதாவது 2010-11ல் நாட்டின் தானிய உற்பத்தி 1000 கோடி டன்னாக இருந்தது என்று வைத்துக்கொள்வோம். அன்று ஒரு டன் தானியத்தின் விலை ஒரு இலட்சம் ரூபாய் என்ற நிலையிலிருந்து பத்து ஆண்டுகளில் ஒன்றரை மடங்கு அதிகரித்திருக்கும் சூழலில் 2012-13ல் நாட்டின் தானிய உற்பத்தி  அதே அளவான ஆயிரம் கோடி டன்னாக இருந்தாலும் தற்போதைய சந்தை விலையில் அதன் மதிப்பு ஒன்றரை மடங்கு அதிகரித்திருக்குமே! 

இந்த விலைவாசி உயர்வை சமநிலைக்கு கொண்டுவந்தால் மட்டுமே நாட்டின் உண்மையான உற்பத்தி நிலவரம் தெரியவரும் என்பதால் எந்த ஆண்டுடன் ஒப்பிட விரும்புகிறோமோ அந்த ஆண்டின் சந்தை விலையிலேயே நடப்பு ஆண்டின் உற்பத்தியையும் கணக்கிடுவார்கள். எந்த ஆண்டு விலைவாசியுடன் ஒப்பிடுகிறோமோ அந்த ஆண்டை தொடக்க ஆண்டாக (Base Year) வைத்துக்கொண்டு நடப்பு ஆண்டிலுள்ள (current year) உற்பத்தி அளவை தொடக்க ஆண்டின் விலைவாசியில் கணக்கிடுவார்கள். இந்த முறையை deflator method என்கிறார்கள். சாதாரணமாக ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டிற்கு முந்தைய ஆண்டை தொடக்க ஆண்டாக வைத்துக்கொண்டு அந்த ஆண்டிலிருந்த விலைவாசிக்கே அந்த திட்டத்தின் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை கணக்கிட்டு ஒப்பிட்டுப் பார்ப்பது வழக்கம். 

மேலும் நடப்பு நிதியாண்டின் ஒவ்வொரு ஆண்டிலும் உள்ள ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் எந்த அளவு உற்பத்தியை எட்ட வேண்டும் என்ற குறியீட்டையும் (Target or Estimate) நிர்ணயித்துக்கொள்வார்கள். இந்த அடிப்படையில் மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation)ஒவ்வொரு ஆண்டும் தயாரித்து அளிக்கும் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி பற்றிய அறிக்கையின் மாதிரி இது. இத்துடன் ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கத்திலும் அடுத்த மூன்று மாத காலத்தில் அடைய வேண்டிய இலக்கையும் நிர்ணயித்து அந்த கால இறுதியில் இலக்கை அடைந்தோமா இல்லையா என்ற ஆய்வையும் இந்த அமைச்சகம் நடத்துகிறது. இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்துத்தான் ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் நாட்டின் பொருளாதார ஆய்வு (Economic Survey) அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி தயாரித்து வெளியிடுகிறது. 

நான் கொடுத்துள்ள மாதிரி அறிக்கை நாட்டின் மொத்த உற்பத்தியை உற்பத்தி முறையிலும் (Production Method) நாட்டின் மொத்த செலவு முறையிலும் (Expenditure Method) முறையிலும் கணக்கிட்டுள்ளதை பார்க்கலாம். இவ்விரண்டு அறிக்கைகளும் ஒரே மதிப்பைத்தான் காட்டியுள்ளன என்றாலும் இரண்டாம் அறிக்கையின் (Expenditure Method) பதினாறாவது இலக்கத்தில் (No.16) காட்டப்பட்டுள்ள வித்தியாசங்கள் (discrepancies) என்ற  தொகை இந்த இரண்டு முறைகள் மூலமாக கணக்கிடப்படும் இறுதி மதிப்பிலுள்ள (final figure) வேறுபாடு எனவும் கொள்ளலாம். 

இந்த அறிக்கையின் இறுதியில் 31 மற்றும் 32 வது இலக்கங்களில் காட்டப்பட்டிருக்கும் எண்களைப் பாருங்கள். 31ல் இந்தியாவின் மக்கள் தொகையும் 32ல் per capita income என்று நம் நாட்டிலுள்ள ஒரு நபரின் வருமானத்தையும் காட்டப்பட்டுள்ளது. 

எண் 32ல் காட்டப்பட்டுள்ள தொகைதான் மிக முக்கியமான தொகை. இதன் அடிப்படையில்தான் நம்முடைய நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மற்ற நாடுகளிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிட வகை செய்கிறது. இதன் அடிப்படையில் ஐ.நா, உலக வங்கி போன்ற அகில உலக அமைப்புகள் உலகிலுள்ள நாடுகளை வரிசைப் படுத்துகின்றன. அதன் ஒரு மாதிரியையும் அளித்துள்ளேன். 

கடந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பின் அடிப்படையில் இந்தியா பத்தாவது இடத்திலுள்ளதை காண முடிகிறது. ஆனால் இது நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பை மட்டுமே வைத்து கணிக்கப்பட்டுள்ளது என்பதையும் மறந்துவிடக் கூடாது. நம்மையும் விட வளர்ந்த நாடுகளாக கருதப்படும் பல ஐரோப்பிய நாடுகளைவிடவும் நம்முடைய ஒட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பு அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம் நம்முடைய நாட்டின் விஸ்தீரணமும் (Georgraphical Area)மக்கள் தொகையும் (Working Population)என்று கூறலாம். ஆனால் Per Capita Income அடிப்படையில் நம்முடைய நாடு நம்மை விடவும் சிறிய நாடுகள் பலவற்றிலும் இருந்து பின்தங்கியிருப்பதை காண முடிகிறது. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பீட்டின் அளவுக்கு முக்கிய காரணமாக இருக்கும் நம்முடைய மக்கள்தொகையே இதற்கும் காரணமாக அமைந்துள்ளதுதான் வேதனை. இதே அளவு உற்பத்தியும் தற்போதுள்ள மக்கள் தொகையில் பாதியும் இருந்திருந்தால் நம்முடைய நாடு உலக அரங்கில் முதல் இடத்தில் இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கடந்த சுமார் பதினைந்து ஆண்டுகளாக நம்முடைய மக்கள் தொகை அதிகரிக்கும் விழுக்காடு (Percentage increase in population) குறைந்துள்ளதை கருத்தில் கொண்டு இனிவரும் இருபத்தைந்தாண்டுகளில் இதே நிலையிலோ அல்லது இதை விட குறைவான விழுக்காட்டிலோ மக்கள் தொகை கூடுமானால் 2035ம் ஆண்டு வாக்கில் நம்முடைய நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மேற்கத்திய நாடுகள் பலவற்றை விடவும் உயர்ந்திருக்கும் என்று நிச்சயமாக நம்பலாம். ஆகவேதான் 2050ம் ஆண்டில் உலகின் மிக பலம் பொருந்திய நாடாக இந்தியா இருக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். 

சரி. கடந்த சில ஆண்டுகளாக நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (GDP)யின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்ததை விடவும் குறைந்து வருகிறது என்று ஏன் கூறுகிறார்கள்?

இந்த நிலைக்கு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள்தான் காரணம் என்கிறார்களே?

இவை சரிதானா?

என்னைக் கேட்டால் இப்போது கடைபிடித்துவரும் பொருளாதார கொள்கையை நரசிம்மராவ் அவர்கள் பிரதமராவதற்கு முன்பிருந்தே (அதாவது இந்திரா காந்தி அம்மையார் ஆண்ட காலத்திலிருந்து) கடைபிடித்து வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பேன். 

எதிலும் தன்னிறைவு எல்லாவற்றிலும் தன்னிறைவு என்ற சித்தாந்தம், என்னால் முடியாதது எதுவும் இல்லை என்கிற மனப்போக்கு, ஒரு நூறு ஆண்டுக்கும் மேலாக ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டுக் கிடந்து அனுபவித்த துன்பங்கள் ஆகியவைதான்  உலகமயமாக்கல் (Globalisation) கொள்கையை நாம் எதிர்க்க காரணங்கள். Iron Curtain என வர்ணிக்கப்பட்டு வந்த ரஷ்யா போன்ற நாடுகளும் பொதுவுடமை கொள்கையை விடாமல் கட்டிக்காத்துவந்த சீனா போன்ற கம்யூனிச நாடுகளுமே உலகமயமாக்கலை இருகரம் விரித்து வரவேற்கிற சூழலிலும் இன்றும் இந்த கொள்கையை எதிர்த்துவரும் சிலரைக் கண்டால் எரிச்சலாகத்தான் வருகிறது. 

நம்முடைய நாடு இன்று கணினி துறையில் அதீத வளர்ச்சியடைந்திருந்தாலும் இன்றும் நம்முடைய நாட்டு நிறுவனங்கள் ஒரு கணினி சேவை நிறுவனங்களாகவே (Services) கருதப்பட்டு வருகின்றனவே தவிர மைக்ரோ சாஃப்ட் போலவோ அல்லது ஆப்பிள் போலவோ ஒரு உற்பத்தி (Product Company) நிறுவனமாக கருதப்படாததற்கு முக்கிய காரணம் தொழில்துறையில் நம்முடைய நாடு இன்னும் முன்னேறாததுதான். 

ஒரு நாட்டின் தொழில்துறை தொடர்ந்து முன்னேறுவதற்கு தொடர் முதலீடுகள் அவசியம் தேவை. நம்முடைய நாட்டிலுள்ள தனிநபர் சேமிப்பில் ஏறக்குறைய எழுபது விழுக்காடு முதலீடாக மாறுவதில்லை. அப்படியே மாறினாலும் அவற்றில் பெரும் பங்கு தங்கம் மற்றும் அசையா சொத்துக்களில்தான் முதலீடு செய்யப்படுவதை பார்க்கிறோம். 

இவையும் முதலீடுகள்தான் என்றாலும் அதனால் நாட்டின் உற்பத்தி பெருகப்போவதில்லை. ஏனெனில் நம்முடைய சேமிப்பை பெருமளவில் விழுங்கும் தங்கம் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டிய சூழல். 

நான் ஏற்கனவே கூறியுள்ளபடி நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதிக்கு செலவிடப்படும் தொகை நாட்டின் GDP கணக்கிலிருந்து குறைக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் GDP என்ற மூன்றெழுத்தில் நடுவிலுள்ள 'D' அதாவது Domestic என்ற ஆங்கில வார்த்தை உள்நாட்டை குறிக்கிறது. அதாவது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு உள்நாட்டிலேயே பயன்பாட்டுக்கு வரும் பொருட்களின் மதிப்பு மட்டுமே இந்த கணக்கீட்டில் உட்படுத்தப்படுகிறது. ஆகவேதான் தங்கத்தில் செய்யும் முதலீடுகளை தயவு செய்து குறைத்துக்கொள்ளுங்கள் என்கிறது மத்திய நிதியமைச்சகம். 

அப்படியானால் சீனா இந்தியாவை விடவும் அதிக தங்கத்தை இறக்குமதி செய்வதாக கூறுகிறார்களே என்கின்றனர் சில அறிவுஜீவிகள். உண்மையில் சீனாவில் தனிநபர் எவரும் தங்கத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அங்கு அரசாங்கம்தான் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. ஏனாம்? தங்களுடைய நாட்டின் சொத்தை மற்ற நாடுகளைப் போன்று அமெரிக்க டாலர்களில் வைக்க அவர்களுக்கு விருப்பமில்லையாம். ஆகவேதான் நாட்டின் கையிருப்பின் பெரும் பகுதியை தங்கத்தில் முடக்கி வைக்கின்றனர். மேலும் அமெரிக்க வங்கிகளில் வைத்தால் நாளை ஏதாவது ஒரு காரணத்திற்காக அவற்றை அமெரிக்க அரசு முடக்கிவிட்டால்?

இதுதான் தங்க முதலீட்டில் நமக்கும் சீனாவுக்கும் உள்ள வித்தியாசம்.

சரி அடுத்தபடியாக நம்முடைய GDPஐ எப்படியெல்லாம் உயர்த்த முடியும் என்று பார்ப்போம்.

நம்முடைய நாட்டின் மொத்த உற்பத்தி (GDP) குறையும்போதெல்லாம் அதை தூக்கி நிறுத்துவதற்கு அரசு தன்னுடைய செலவை (Expenditure) கூட்ட வேண்டும். ஏனெனில் இந்த கணக்கீட்டில் தனிநபர் மற்றும் கார்ப்பரேட் எனப்படும் நிறுவனங்களின் செலவு மற்றும் முதலீடுகள் (Savings and Investment) தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வதற்கு வாய்ப்புகள் குறைவு. பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் சூழலில் தனிநபர் வருமானமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. பிறகு எப்படி சேமிப்பது? தனிநபர் சேமிப்பு குறைந்து போனால் அவர்களுடைய வாங்கும் திறனும் (purchasing power) குறைகிறது. வாங்கும் திறன் குறைந்தால் உற்பத்தியாகும் பொருட்கள் சந்தையில் தேங்கிவிடுகின்றன. சந்தையிலேயே பொருட்கள் விற்காமல் இருக்கும் சூழலில் அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுடைய விற்பனை குறைந்துவிடுகிறது... விற்பனைக் குறைவு அவர்களுடைய வருமானத்தை குறைக்கிறது... குறைந்த வருமானம் அவர்களுடய சேமிப்பையும் அதன் விளைவாக முதலீட்டையும் பாதிக்கிறது..... இது ஒரு சுழற்சி  (cycle) இதில் சிக்கிக்கொண்டால் அதிலிருந்து மீண்டு வருவதென்பது அத்தனை எளிதல்ல.

இந்த சூழலில்தான் அரசு தலையிட்டு தன்னுடைய செலவை (Public Spending) அதிகரிக்க வேண்டும். அதுவும் கூட ஓரளவுக்குத்தான் செய்ய முடியும். இந்த சூழலில்தான் அன்னிய நாட்டின் முதலீடுகள் அவசியமாகின்றன. இதைத்தான் நம்மால் செய்ய முடியாதவற்றை மற்றவர்களைக் கொண்டு செய்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன். நம்மால் முடியாதது எதுவுமில்லை என்கிற வாதம் எவ்வளவு வெற்று வாதம் (empty argument) என்பது புரிகிறதா?

நம்முடைய நிறுவனங்களாலும் அரசாலும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத தொகையை முதலீடாக நம்முடைய நாட்டில் செய்ய வருபவர்கள் ஏதோ நம்முடைய நாட்டு பொருளாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்ற தேசப்பற்றுடன் வருவதில்லை. எங்கு விதைத்தால் நல்ல பலன் கிடைக்குமோ அங்குதானே விவசாயி விதைக்கிறான்? அதுபோன்றுதான் அன்னிய முதலீடும். அன்னிய நிறுவனங்கள் இங்கு வருவதற்கான காரணத்தை ஆராயாமல் அதன் மூலம் கிடைக்கின்ற, நம்மால் செய்ய முடியாத, முதலீட்டால் நம்முடைய நாட்டின் தொழில் வளமும் உற்பத்தியும் பெருகுகிறதா என்பதைத்தான் பார்க்க வேண்டும். 

அன்னிய முதலீடு அறவே இல்லாமல் நம்முடைய பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லை. இன்று நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் தொழில்துறையின் பங்கு 25 விழுக்காடு மட்டுமே தானாம். எட்டு விழுக்காடு விவசாயத்துறையும் மீதமுள்ள 67 விழுக்காடு சேவைத் துறையும் அளிக்கிறதாம். இந்த சேவைத் துறையிலும் பெரும்பங்கு அளிப்பது சமீப ஆண்டுகளில் வளர்ந்துவரும் கணினி மற்றும் தொழில்நுட்ப துறைகளாம். இந்த நிலை மாற வேண்டும். நாட்டின் உற்பத்தி திறன் உயர வேண்டுமென்றால் நாட்டின் முதலீடும் பன்மடங்கு அதிகரிக்க வேண்டும். இன்று பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் (Developed Countries) எனக் கருதப்படும் அனைத்து நாடுகளுமே தொழில்துறையிலும் வளர்ந்த நாடுகளே (Industrialised Countries). இன்று சீனா அவர்களுடைய கொள்கைகளுக்காக உலகளவில் வெறுக்கப்பட்டாலும் அவர்களுடைய பொருளாதார வலிமை அவர்களைக் கண்டு அச்சமடைய வைத்துள்ளது.  

உலக நாடுகளின் தர வரிசையில் இந்தியா உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென்றால் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியின் அளவும் மதிப்பும் உயர்ந்துக்கொண்டே செல்ல வேண்டும். நாட்டின் மக்கள்தொகையும் கட்டுக்குள் நிற்க வேண்டும். 

மத்தியில் எந்த கட்சி ஆட்சியை பிடித்தாலும் இப்போதுள்ள பொருளாதார கொள்கைகளிலிருந்து அடியோடு மாறிவிட வாய்ப்பே இல்லை. தேர்தல் நேரத்தில் என்ன சொன்னாலும் இதுதான் இன்றைய நிதர்சனம். இன்று மத்தியில் கொள்கைகளை வகுப்பது அரசியல்வாதிகள் அல்ல என்பதும் உண்மை. நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் இந்திய மற்றும் அன்னிய தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களே....

இந்த தொடரில் இனியும் பல பொருளாதார பதிவுகளை இடலாம் என்று நினைத்துள்ளேன்..... ஒவ்வொரு பதிவும் எழுதி முடிக்க பல இணையதளங்களிலுள்ளவைகளை தேடிப்பிடிக்க வேண்டியுள்ளதால் பல நாட்கள் தேவைப்படுகின்றன. ஆகவே அடிக்கடி இல்லாவிடினும் அவ்வப்போது எழுதுவேன்...

*********

25 நவம்பர் 2013

ஜிடிபி (GDP) அப்படீன்னா என்னாங்க?


ஒவ்வொரு மூன்று மாத கால இறுதியிலும் நம்முடைய நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று இந்திய ரிசர்வ் வங்கியின் பொருளாதார அறிக்கை கூறுவதையும் நாட்டின் நிதி அமைச்சர் இனி வரும் காலங்களில் அது முன்னேறி எதிர்பார்த்த விழுக்காட்டை அடையும் என்று ஆரூடம் கூறுவதையும் கேட்டிருக்கிறோம்.

2005 முதல் 2010ம் ஆண்டு வரை எட்டு விழுக்காடாக இருந்து வந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, மத்தியில் ஆளும் காங்கிரசின் தவறான பொருளாதார கொள்கைகளின் விளைவாக,  கடந்த இரு ஆண்டுகளாக ஐந்திலிருந்து ஆறு விழுக்காடாக குறைந்துவிட்டது என்கின்றன எதிர் கட்சிகள்.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்றால் என்ன? அதை எப்படி கணக்கிடுகின்றனர் (calculate) என்று பார்ப்போமா?

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அதனுடைய வயதை குறிப்பிடுவதல்ல. இந்தியாவின் வயது என்று சொல்ல வேண்டுமானால் அது ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலையடைந்த ஆண்டிலிருந்து எத்தனை ஆண்டுகள் கழிந்துள்ளன என்பதை வைத்து சுமார் அறுபத்தியாறு வயது என்று கூறலாம் (2013-1947).

ஆனால் அதுவல்ல ஒரு நாட்டின் வளர்ச்சி. உலக சந்தையில் ஒரு நாட்டின் வளர்ச்சி என்று குறிப்பிடுவது அதனுடைய பொருளாதார வளர்ச்சியைத்தான்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்றால் என்ன அது எப்படி கணிக்கப்படுகிறது?

அதற்கு முன்பு உங்களுடைய குடும்பம் பொருளாதார ரீதியாக எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்று யாராவது நம்மை கேட்டால் நாம் அதை எவ்வாறு விளக்குவோம் என்று பார்ப்போம்.

சாதாரணமாக நம்முடைய குடும்ப பொருளாதார வளர்ச்சி என்பது நம்முடைய வாழ்க்கைத் தரத்தின் வளர்ச்சியைத்தான் குறிக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு வாடகை வீட்டில் வசித்து வந்த நான் இப்போது சொந்த வீட்டில் வசிக்கிறேன், சைக்கிளில் சென்று வந்த நான் இப்போது நாற்சக்கர வாகனத்தில் செல்கிறேன் என்றால் என்னுடைய வருமானம் பெருகியுள்ளது என்றுதானே அர்த்தம்? இது என்னுடைய பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கிறது என்று கூறலாம்.  இந்த வளர்ச்சியை அதாவது பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த என்னுடைய ஆண்டு வருமானத்திற்கும் இப்போதுள்ள ஆண்டு வருமானத்திற்கும் இடையிலுள்ள நிகர வித்தியாசத்தை விழுக்காடு அடிப்படையில் கூறுவதைத்தான் வளர்ச்சி விகிதம் என்கிறோம். இதை AI (2013) - AI (2003)/100 என்ற சூத்திரத்தின் (formula) மூலம் எத்தனை விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது என்று கணக்கிடலாம்.

இதே அடிப்படையில் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தில் (Annual National Income) முந்தைய ஆண்டிற்கும் நடப்பு ஆண்டிற்கும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை கணக்கிடமுடியும்.

ஒரு நாட்டிலுள்ளவர்களுடைய ஒட்டுமொத்த வருமானத்தின் அடிப்படையில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுவது ஒரு வகை. இதை ஆங்கிலத்தில் Income Method என்கிறார்கள்.

இதையே ஒரு நாட்டில் ஓராண்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களின் பொருளாதார மதிப்பை (economic value) கணக்கிடுவதன் மூலமும் கண்டுக்கொள்ள முடியும். இந்த கூட்டுத்தொகையைத்தான் Gross Domestic Products அல்லது GDP என்கிறார்கள். அதாவது நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களின் ஒட்டுமொத்த மதிப்பு. தயாரிப்பு என்கிறபோது ஒருநாட்டில் கிடைக்கும் அனைத்து சேவைகளின் (services) மதிப்பும் அடங்கும்.

ஒரு நாட்டின் GDP மூன்று வழிகளில் கணிக்கப்படுகிறது.

1. நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடுவது (மேலே பார்த்த Income Method),

2.நாட்டின் ஒட்டுமொத்த செலவினங்களின் அடிப்படையில் கணக்கிடுவது (Expenditure Method),

3.நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் பொருளாதார மதிப்பின் அடிப்படையில் கணக்கிடுவது (Production Method)

உலகிலுள்ள அனைத்து நாடுகளும் இந்த மூன்று வகைகளில் ஏதாவது ஒன்றின் அடிப்படையில்தான் தங்களுடைய பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுகின்றன.

இந்தியா உட்பட பல நாடுகளும் Expenditure Methodஐ பயன்படுத்துகின்றன.

இந்த முறையில் நாட்டிலுள்ள தனிநபர் மற்றும் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் செலவிடும் தொகையுடன் மத்திய, மாநில அரசுகள் செலவிடும் தொகையும் சேர்த்து உள்நாட்டில் செலவிடப்படும் ஒட்டுமொத்த தொகை கணக்கிடப்படுகிறது. அதனுடன் இம்மூன்று வகையினரும் செய்யும் முதலீட்டுத் தொகை (Investment) சேர்த்துக்கொள்ளப்படுகிறது. இக்கூட்டுத் தொகையிலிருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளுக்கிடையிலுள்ள வித்தியாசத்தின் மதிப்பு சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

இதை சூத்திரத்தில் GDP=C+I+G+(X-M) என்று குறிப்பிடுகிறார்கள். இதில் C தனிநபர் மற்றும் நிறுவன செலவினங்களையும் I இவ்விருவகுப்பினரின் முதலீடுகளையும் G அரசு செய்யும் செலவினங்கள் மற்றும் முதலீடுகளையும் X நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பையும் M இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பையும் குறிக்கிறது.

நம்முடைய நாட்டின் GDP மதிப்பு செலவினங்களின் அடிப்படையில்தான் செய்யப்படுகிறது என்றாலும் இதையே Production Methodடிலும் கணக்கிடப்பட்டு இவ்விரண்டு முறைகளிலும் கிடைக்கும் முடிவை ஒப்பிட்டுப்பார்ப்பதும் உண்டு.

நம்முடைய நாட்டிலுள்ள அனைத்து உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் மதிப்பு (value) என்பது நாட்டில் கிடைக்கும் அனைத்து சேவை (மருத்துவம், போக்குவரத்து என்பன போன்ற) களின் மதிப்பையும் உள்ளடக்கியதாகும். இதிலிருந்து ஒரு பொருளின் இறுதி வடிவத்தை அடைய பயன்படுத்தப்படும் பொருட்களின் (Intermediary prodcuts) மதிப்பை குறைத்துவிட்டால் நாட்டின் ஒட்டுமொத்த பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு கிடைத்துவிடும்.

அது என்ன intermediary products என்று கேட்க தோன்றுகிறதல்லவா?

உதாரணத்திற்கு ஒரு ரொட்டி தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் கோதுமை அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் மைதா, டால்டா அல்லது வெண்ணெய், உப்பு என்பன போன்ற பொருட்களைத்தான் intermediary products என்கிறார்கள். இவற்றை தனித்தனியாக மதிப்பிடாமல் இறுதி வடிவமான ரொட்டியின் (Bread) மதிப்பை மட்டும் எடுத்துக்கொள்வார்கள்.

இதில் இயந்திரங்கள், இரும்பு போன்ற உலோகங்கள், கட்டுமானப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என நம்முடைய வாழ்க்கைக்கு பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருட்களும் மற்றும் நம்முடைய தேவைக்கு பயன்படுத்தும் அனைத்து சேவைகளும் அடங்கும்.

இவற்றின் தயாரிப்பு அளவிகள் (Measures or Units) வெவ்வேறாக இருக்கும் என்பதால்தான் அவற்றின் பண மதிப்பை (Money/Economic Value)கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர்.

இதை அவற்றின் உற்பத்தி மதிப்பிலும் (Production Cost) அதன் சந்தை மதிப்பிலும் (Market Price) கணக்கிட்டு ஒப்பிட்டு பார்க்கப்படுகின்றன. இரண்டு வகையிலும் கணக்கிடப்படும் மதிப்பு ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் அல்லவா?

ஆனால் ஒரு பொருள் அதன் உற்பத்தியாளரிடமிருந்து (Producer) நேராக அதன் நுகர்வோரிடம் (consumer) சென்றடைவதில்லை. சாதாரணமாக  பொருட்கள் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கப்படும் விற்பனை வரி அல்லது சுங்க வரி விதிக்கின்றன. ஒரு சில பொருட்கள் மீது (உ.ம். சமையல் எரிவாயு) அரசாங்கம் மான்யம் வழங்குகிறது.

உதாரணத்திற்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுத்துக்கொள்வோம். நமக்கு வழங்கப்படும் ஒரு சிலிண்டர் எரிவாயு தயாரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆகும் மொத்த செலவு ரூ.900 லிருந்து ரூ.1000 வரை ஆகிறது என்கிறார்கள். அதன் மீது மாநில அரசு விதிக்கும் வரியையும் சேர்க்கும்போது அதன் விலை ரூ.1050/- ஆகிறது. உற்பத்தி செலவான ஆயிரம் ரூபாயில் மத்திய அரசு மான்யமாக ரூ.600 வழங்குகிறது. ஆக, ஒரு எரிவாயு சிலிண்டர் அதன் நுகர்வோரை சென்றடையும்போது ரூ. 450/- என்ற நிலையை அடைகிறது (1000 + 50 - 600).

ஆனால் நாட்டின் GDP கணக்கிடும்போது உற்பத்தியாளர் வசமிருந்து அது சந்தைக்கு செல்லும்போது மதிப்பிடப்படும் மதிப்பைத்தான் எடுத்துக்கொள்வர். எரிவாயு சிலின்டர் எடுத்துக்காட்டில் அது ரூ.1000மாகத்தான் எடுத்துக்கொள்ளப்படும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு வகைகளிலும் கணக்கிடப்படும் நாட்டின் மொத்த வருமானம் ஒன்றாகத்தான் இருக்கும், இருக்க வேண்டும்.

ஆனால் பொருட்களின் தயாரிப்பு செலவும் சந்தை விலையும் எல்லா வருடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லையே? ஆகவே கடந்த ஆண்டோ அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு கணக்கிடப்பட்ட GDPயுடனோ ஒப்பிட்டு எத்தனை விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளோம் என்று எவ்வாறு தெரிந்துக்கொள்வது?  

அடுத்த பகுதியில்.....




29 மே 2008

பணவீக்கம் - காரணிகள் 2

விலைவாசி உயர்வு ஏன் ஏற்படுகிறது என்பதை சுருக்கமாகப் பார்த்தோம்.

அதாவது விலைவாசி உயர்வதற்கு நுகர்வோரின் தேவைகள் (Demand) அதிகரிப்பதும் ஒரு காரணம் என்று பார்த்தோம். ஆனால் அது மட்டுமே முழுமையான காரணம் அல்ல.

நுகர்வோர் தேவைப்படும் பொருட்கள் சந்தையில் சரிவர கிடைக்காமல் போனாலும் விலைவாசி உயரும்.

இதற்கு பல காரணங்கள் உள்ளன.

1. தேவைப்படும் பொருளின் உற்பத்தி குறைந்துபோவது.

குறிப்பாக உணவுப் பொருட்கள். பருவமழையையே நம்பியிருக்கும் விவசாயம் பருவமழை பொய்த்தால் நலிந்துபோக நேருகிறது. அது அதீத மழையாலும் நேரிடலாம். அறுவடைக்கு காத்திருக்கும் நெற்பயிர் திடீரென்று கொட்டி தீர்க்கும் அடை மழையால் நீரில் மூழ்கிப்போவதும் வளர்ந்து கனி கொடுக்க காத்திருக்கும் வாழை, கரும்பு பேய்க் காற்றால் சரிந்துபோவதும் நம் நாட்டில் அவ்வப்போது காணும் நிகழ்ச்சிகள்.

2. வியாபாரிகளின் நேர்மையற்ற நடத்தைகள்.

பருவமழை, பேய்க்காற்று ஆகியவற்றையாவது முன்னறிவிக்க வளர்ந்துவரும் தொழில்நுட்பம் வகைசெய்கிறது. ஆனால் artificial shortage எனப்படும் மனித வக்கிரங்களால் ஏற்படும் பதுக்கல் மற்றும் cartel எனப்படும் கூட்டுக் களவானித்தனத்தை எப்படி முன்னறிவது? மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் பதுக்கல் பெரும்பாலும் அரிசி, கோதுமை, பருப்பு போன்ற உணவுப்பொருட்களின் விலையைப் பாதிக்கிறது. தயாரிப்பாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் கூட்டு சேர்ந்து தங்களுடைய பொருட்களை குறிப்பிட்ட விலைக்கு கீழ் விற்பதில்லை என்று முடிவெடுத்துக்கொள்வது இரும்பு, சிமிட்டி போன்ற கட்டுமான பொருட்களின் விலையைப் பாதிக்கிறது.

இயற்கையின் இடையூறுகளால் ஏற்படும் தட்டுப்பாட்டை, குறிப்பாக உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டை ஈடுகட்ட அரசு தங்களிடம் உள்ள கையிருப்பை உடனே சந்தையில் வினியோகிப்பதோ அல்லது இறக்குமதி செய்வதோ அவசியமாகிறது. இது ஒரு குறுகிய கால நடவடிக்கை. நீண்ட கால நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு, அவர்கள் மீண்டும் உணவு உற்பத்தியில் ஈடுபட சலுகை கடன் வசதிகள் ஆகிய நடவடிக்கைகளும் உணவுப்பொருள் உற்பத்தி மிகுதியாகும் காலங்களில் அவற்றை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து தேவைப்படும்போது சந்தையில் இறக்கி விலைவாசியைக் கட்டுப்படுத்துவது, உணவுப்பொருள் தட்டுப்பாடு உள்ள காலங்களில் அவற்றின் ஏற்றுமதியை தடைசெய்வது என பல்வகை நடவடிக்கைகளை எடுக்கும் கடமை அரசுக்கு உண்டு.

அதுபோன்றே தயாரிப்பாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களின் நடவடிக்கைகளால் ஏற்படும் செயற்கையான பற்றாக்குறையை நேர்மையுடனும், கண்டிப்புடனும் எதிர்கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதும் அரசின் கடமையாகும். அரசின் கோரிக்கைக்கு செவிமடுக்க மறுக்கும் உற்பத்தியாளர்களை வழிக்குக்கொண்டு வர தங்களிடம் உள்ள அதிகாரத்தை அரசு தயங்காமல் பயன்படுத்த முன்வருவதன் மூலம் செயற்கையாக சந்தையில் ஏற்படும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

இதைத்தான் supply side management என்கிறார்கள். அதாவது நுகர்வோரின் தேவைகளை ஈடுகட்ட (to meet the consumers’ demand) எடுக்கப்படும் நடவடிக்கைகள்.

நுகர்வோரின் அத்தியாவசிய தேவைகளுக்கு நிகரான பொருட்கள் சந்தையில் கிடைக்கச் செய்வது மத்திய/மாநில அரசுகளின் கடமை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் நுகர்வோரின் தேவைகள் தேவைக்கு மேல் ஏற்படும்போது என்ன செய்வது? அவர்களுடைய அதீத தேவைகளை நிவர்த்தி செய்வது என்பது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று. ஆகவேதான் நுகர்வோரின் கைவசமுள்ள ரொக்கத்தை (Money) கட்டுப்படுத்தவும் அரசு முயல்கிறது.

நாட்டிலுள்ள மொத்த பணப்புழக்கத்தை அவ்வப்போது கண்கானித்து தேவைப்பட்டால் கட்டுப்படுத்தவும் அரசு பல நடவடிக்கைகளை இந்திய ரிசர்வ் வங்கி மூலம் எடுத்து வருகிறது.

நம் நாட்டிலுள்ள மொத்த பணப்புழக்கத்தை இந்திய ரிசர்வ் வங்கி எவ்வாறு கணக்கிடுகிறது?

1. நாட்டு மக்கள் கைவசமுள்ள ரொக்கம் (Currency with Public)
2. வங்கிகளில் உள்ள சேமிப்பு மற்றும் வைப்புநிதி திட்டங்களிலுள்ள தொகை (Deposits with commercial Banks)

இவற்றின் மொத்த மதிப்பே நாட்டின் மொத்த பணப்புழக்கமாக கணிக்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி இவ்விரண்டின் மொத்த மதிப்பு சுமார் ரூ.40,00,000 கோடிகள்!! இதில் நாட்டு மக்கள் கைவசமுள்ள ரொக்கம் மட்டும் ரூ.5,67,700 கோடி!

வங்கி சேமிப்பு திட்டங்களிலுள்ள தொகையை எப்போது வேண்டுமானாலும் ரொக்கமாக மாற்றிவிட முடியும் என்பதால் அதுவும் நாட்டின் மொத்த பணப்புழக்கமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

கடந்த 2007ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவை இரண்டும் சுமார் 21% விழுக்காடு உயர்ந்துள்ளது. அதாவது சுமார் ரூ.8,00,000 கோடிகள் உயர்ந்துள்ளன!

இந்த அளவுக்கு நுகர்வோரின் வாங்கும் திறன் அதிகரித்தால் விலைவாசி உயர்வதை எவ்வாறு தடுப்பது!!

நாட்டில் பணப்புழக்கம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுவது இவை இரண்டும்:

1. வங்கிகள் அரசுக்கு வழங்கியுள்ள கடன்கள் (Bank Credit to Govt)
2. வங்கிகள் வர்த்தகர்களுக்கு வழங்கியுள்ள கடன்கள் (Bank Credit to Commercial Sector)

வங்கிகள் அரசுக்கு வழங்கும் கடன் முழுவதும் அரசை நடத்திச் செல்லவும் மக்கள் நலத் திட்டங்களுக்காகவும் செலவிடப்படுவதால் அது நுகர்வோரின் கையிருப்பாக மாறிவிட வாய்ப்புள்ளது. இதை கட்டுப்படுத்துவது அத்தனை எளிதல்ல.

ஆனால் வங்கிகள் தயாரிப்பாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் வழங்கும் கடன் அவர்களுடைய தயாரிப்பு மற்றும் வர்த்தக திறனை அதிகரிக்கின்றன. இதன் விளைவாக சந்தையில் கிடைக்கும் பொருட்களின் அளவு மற்றும் அதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் லாபமும் கணிசமாக உயர்கிறது.

மேலும் கடந்த ஓராண்டு காலத்தில் வங்கிகள் அரசுக்கு வழங்கிய கடன் தொகையில் எவ்வித மாற்றமும் இல்லையென்றாலும் வர்த்தகத்திற்கு வழங்கிய கடன் தொகை சுமார் ரூ.2,35,000 கோடிகள் உயர்ந்துள்ளன என்கிறது ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கை.

ஆகவேதான் இத்தகையோருக்கு கடன் வழங்கும் வங்கிகளுடைய கடன் வழங்கு சக்தியை (Lending Power) முடக்கும் நோக்கத்துடன் இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய தொகையின் அளவை 7.5%லிருந்து 8%ஆக (Cash Reserve) உயர்த்தியது. அதாவது வங்கிகளுடைய சேமிப்பு திட்டங்களிலுள்ள மொத்த தொகையில் 8 விழுக்காடு ரிசர்வ் வங்கியால் முடக்கப்பட்டுவிடும். இது 31.3.07ல் 6% ஆக இருந்தது.

இதன் மூலம் வங்கிகள் கடன் வழங்கும் திறன் குறைக்கப்படுகிறது. தயாரிப்பாளர்கள்/ வர்த்தகர்கள் வங்கிகளிலிருந்து பெறும் கடனின் அளவும் கணிசமாக குறையும். இதன் விளைவாக தயாரிப்பு குறையும், கொள்முதல் குறையும், சந்தைக்கு வரும் பொருட்களின் அளவும் குறையும்.

ஆனால் இது விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்துமா?

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

தொடரும்..

20 மே 2008

பணவீக்கம் - காரணிகள்

பணவீக்கம் என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் பொதுவான ஒன்று. வளர்ந்த நாடுகள் எனப்படும் அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி போன்ற மேலை நாடுகளிலும் பணவீக்கம் மிக சகஜமாகிவரும் காலம் இது.

ஒரு குறிப்பிட்ட அளவு பணவீக்கம் வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதார சந்தையில் தவிர்க்க முடியாத ஒன்று என்பது மட்டுமல்ல தேவையான ஒன்றும் கூட. ஆங்கிலத்தில் இதை necessary evil என்பார்கள்.

ஆனால் அது ‘குறிப்பிட்ட’ அளவைத் தாண்டும்போதுதான் ஒரு சர்ச்சைக்குரிய பொருளாதார பிரச்சினையாக நின்றுவிடாமல் சமுதாய பிரச்சினையாகவும் உருவாகிவிடுகிறது. குறிப்பாக முதிர்ச்சியடையாத அரசியல் சூழலைக் கொண்டுள்ள இந்தியா போன்ற நாடுகளில் பணவீக்கம் ஒரு சிக்கலான மற்றும் உணர்வுபூர்வமான பிரச்சினையாகவே மாறிவிடுகிறது.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிவிரைவு பார்வையில் பயணிக்கும்போது அதன் விளைவாக ஏற்படும் பணவீக்கம் தவிர்க்க முடியாத ஒன்று. நாட்டில் உற்பத்தி திறன் அதிகரிக்க, உற்பத்தி அதிகரிக்கிறது. அதிகரிக்கப்பட்ட பொருட்களுக்கு உள்நாட்டில் தேவை (Demand) இருக்கும் பட்சத்தில் அவை அனைத்தும் விலை போகின்றன. அதன் விளைவு உற்பத்தியாளர்களுடைய வருமானம் மற்றும் லாபம் (Revenue Income and Profit) உயர்கிறது. உற்பத்தியாளர்களின் வருமானத்தில் ஒரு பங்கு பணியாளர்களின் வருமானமாக செல்கிறது. உற்பத்தியாளர்களின் வருமானம் அதிகரிக்க, அதிகரிக்க அவர்களுடைய பணியாளர்களின் வருமானமும் உயர்கிறது. தனிநபர் வருமானம் உயர, உயர அவர்களுடைய வாங்கும் திறனும் அதிகரிக்கிறது. விளைவு? அவர்களுடைய தேவையும் அதிகரிக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அலங்கார அல்லது தேவையற்றதாக கருதப்பட்டு வந்த கைப்பேசி, கணினி போன்ற பல பொருட்கள் இன்று ஒருவகையில் அத்தியாவசிய பொருட்களாக உருவெடுத்துள்ளனவென்றால் அதற்கு முக்கிய காரணியாக கருதப்படுவது தனிநபர் வருமான உயர்வு.

சந்தையிலுள்ள நுகர்வோரின் ஒட்டுமொத்த தேவைக்கு (Collective demand of the consumers) நிகராக அவை சந்தையில் கிடைக்கும் அளவும் (Supply) சூழலில் சம்பந்தப்பட்ட பொருளின் விலை உயரத்தானே செய்யும்?


இதை பொருளாதார நிபுணர்கள் பல கோணங்களிலிருந்து ஆய்வு செய்து பல விளக்கங்களை அளித்துள்ளனர்.

1. தேவைகள் (Demand) அதிகரிப்பதால் ஏற்படும் உயர்வு.

ஒரு பொருளின் விலை அதன் நுகர்வோரால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது! அதாவது சந்தையிலுள்ள ஒட்டுமொத்த நுகர்வோரின் தேவை (Demand) மற்றும் அது சந்தையில் கிடைக்கும் அளவு (Supply or Availablity) ஆகியவற்றைப் பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது.

பொருளாதார வல்லுனர்களின் கூற்றுப்படி ஒரு பொருளின் விலை சந்தையிலுள்ள நுகர்வோரின் தேவையையும் (Demand) அது கிடைக்கும் அளவையும் (supply) பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது.

ஆனால் இந்தியா போன்ற வளரும் சந்தைகளில் ஒரு சில பொருட்கள் தவிர (அன்றாட உணவுப் பொருட்களான முட்டை, காய் கறி, மாமிசம்) பல அத்தியாவசிய பொருட்களின் விலையை அரசே நிர்ணயித்துவிடுவதால் அவற்றின் தேவை மற்றும் கிடைக்கும் அளவைப் பொருத்து அமைவதில்லை.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறியின் விலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலைக்கு விற்கப்படுவதை காண்கிறோம். காலை நேரத்தில் கட்டு ஒன்று ரூ.3.00 வீதம் விற்கப்படும் கொத்தமல்லி/புதினா மாலையில் ரூ.1க்கும் கிடைப்பதுண்டு. சில நாட்களில் கட்டு ஒன்று ரூ.5க்கும் கிடைப்பது அரிதாகிவிடும். வேறு சில நாட்களில் எதிர்பாராத விதமாக அதிக அளவிலான சரக்கு வந்து இறங்க கட்டு ஒன்று 50 காசுக்கும் வாங்க ஆளிருக்காது. தக்காளியும் அதேபோல்தான். சந்தையில் வந்திறங்கும் சரக்கின் அளவைப் பொருத்தே அன்றைய விலை நிர்ணயிக்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால் when the supply of a commodity does not keep pace with the demand the prices will rise.

இதைத்தான் தேவைகள் அதிகரிப்பதால் ஏற்படும் விலைவாசி உயர்வு என்கிறார்கள் (demand pull inflation).

நுகர்வோரின் தேவைகள் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

1. வாங்கும் திறன் அதிகரிப்பு
2. நுகர்வோரின் ரசனையில் ஏற்படும் மாறுதல்கள்
3. விலைவாசி உயரக் கூடும் என்ற எண்ணம்
4. விலை வீழ்ச்சி

இத்துடன் கால மாற்றத்தால் ஏற்படும் குறுகிய கால தேவைகளில் ஏற்படும் மாற்றங்கள் (Seasonal demand).

கடந்த சில மாதங்களில் உலக உணவுப் பொருட்கள் சந்தையில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வுக்கு ஒரு காரணம் இந்தியா மற்றும் சீன நடுத்தர மக்களின் தேவைகளின் அதிகரிப்பு என்று அமெரிக்க அதிபரும் உலக வங்கி தலைவரும் கூறியதைக் கண்டு நாட்டிலுள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் கொதித்துப் போனார்கள் என்றாலும் அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

இன்று சென்னையில் பல் அங்காடிகளை மொய்த்துக்கொண்டு நிற்பது கூப்பன் வாசிகள் எனப்படும் கணினித்துறை ஊழியர்கள்தான். இவர்களுடைய வருமானத்தில் ஒரு பகுதியாக வழங்கப்படும் கூப்பன்களை எப்படியாவது செலவழிக்க வேண்டும். மேலும் இதை பணத்திற்குப் பதிலாக ஏற்றுக்கொள்வது பல்பொருள் அங்காடிகள்தான். ஆகவே தேவை உள்ளதோ இல்லையோ இத்தகைய அங்காடிகளில் கிடைக்கும் பொருட்களை வாங்கிக் குவிப்பது இவர்களுக்கு வாடிக்கை.

கடந்த சில ஆண்டுகளில் நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் முளைத்துள்ள Mall கள் எனப்படும் பல்பொருள் அங்காடிகள், eateriers எனப்படும் உணவுப்பண்டம், பானங்கள் விற்பனைக் கூடங்கள் ஆகியவற்றை முற்றுகையிட்டு தங்களுடைய உபரி வருமானத்தை செலவிடும் இந்திய நடுத்தர மக்களின் வாங்கும் திறன் இன்றைய விலைவாசி உயர்வின் மிக முக்கியமான காரணங்களில் ஒன்று என்பதை மறுக்க முடியாது.

2. நுகர்வோரின் ரசனையில் ஏற்படும் மாற்றங்கள்.

காலப் போக்கில் ஏற்படும் ரசனை மாற்றங்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களை விளைவிப்பதில்லை. நம் நாட்டில் தொலைக்காட்சி அறிமுகமாகி சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகின்றன. துவக்கத்தில் மேல் தட்டு மக்களிடம் மட்டுமே புழக்கத்தில் இருந்த தொலைக்காட்சி நடுத்தர மக்களிடம் பரவி பிறகு அடித்தட்டு மக்களை வந்தடைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது. இதை காலப் போக்கில் ஏற்பட்ட ஒரு சாதாரண மாற்றம் எனலாம். ஆகவே தொலைக்காட்சி பெட்டியின் விலையில் மிகப்பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.

ஆனால் கைத்தொலைபேசி நாட்டில் அறிமுகமாகி முழுமையாக பத்தாண்டுகள் நிறைவாறாத நிலையில் இன்று நாட்டிலுள்ள சுமார் முப்பது கோடி கைத்தொலைபேசி வாடிக்கையாளர்கள் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் USD 250மில்லியன் இந்த சேவைக்கென செலவழித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இத்தகைய ரசனை மாற்றத்தை எந்த வகையில் சேர்ப்பது?

3. விலைவாசி உயரக்கூடும் என்ற அச்சம்

இதற்கு முக்கிய உதாரணம் பெட்ரோல் விலை. இன்று நள்ளிரவில் இருந்து பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 கூடப்போகிறது என்ற ஊகம் மட்டுமே நுகர்வோரின் தேவையை பன்மடங்கு உயர்த்திவிடுகிறதே?

4. விலை வீழ்ச்சி

இது நம்முடைய நாட்டைப் போன்ற முதிர்ச்சியடையாத பொருளாதார சந்தையில் ஏற்படும் விசித்திரம். Reduction Sale அல்லது கழிவு விற்பனை. பண்டிகை வந்தால் பண்டிகை கழிவு. ஆடி மாதம் வந்தால் ஆடிக்கழிவு. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். தேவையோ இல்லையோ கழிவு விலையில் வாங்கிக் குவிக்கும் அறியாமை!

இத்தகைய நுகர்வோரின் தேவை அதிகரிப்பதால் ஏற்படும் விலைவாசி உயர்வைக் (Demand Pull Inflation) கட்டுப்படுத்த மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் உதவியுடன் பல நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

அவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம்.


தொடரும்...