13 நவம்பர் 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 12

எம்.ஜி. ஆருடன் சந்திப்பு - 3

கடந்த பதிவின் தொடர்ச்சி..

....‘சார்.. தம்பி நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவர்னு சொல்லிட்டு வந்தேன். நீங்க மானேஜர கூட்டிக்கிட்டு தைரியமா போங்க. எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன். என்ன சேட், சொல்லுங்க சார் கிட்ட’ என்று அசடு வழிந்துவிட்டு.. அவருடைய காரில் ஏறி செல்ல.. நானும், மானேஜரும், சேட்டும் ஒரு காரில் ஏறி திரும்பி வந்தோம்..

அமைச்சர் கூறியபடி இரண்டு வாரங்கள் கழித்து அவருடைய பி.ஏ.வை தொலைபேசியில் அழைத்து விவரம் கேட்டபோது அவர் கூறிய செய்தி என்னை அதிர வைத்தது..

முதலில் நான் யார் என்று பலமுறை கூறியும் அவருக்கு விளங்கவில்லை. பிறகு நான் அமைச்சர் எங்களிடம் கூறியதை கூறியபோது அவர் சர்வசாதாரணமாக.. ‘சார் மினிஸ்டர யார் யாரோ வந்து ஏதேதோ விஷயமா பேசிட்டு போறாங்க. அதையெல்லாம் ஞாபகத்துல வச்சிருக்க முடியுமா என்ன? என்றார்’ நானும் ‘சாரி சார். நான் அப்புறமா கூப்பிடுறேன்.’ என்று தொடர்பைத் துண்டித்துவிட்டு உடனே என்னுடைய மேலாளரிடம் தெரிவிக்க அவர் சேட்டை அழைத்து சற்று கோபத்துடன் பேசினார்.

இரண்டொரு வாரத்திற்கு ஒன்றும் நடக்கவில்லை.

மூன்றாவது வாரத்தில், ஒரு நாள் சேட் பிள்ளையை கையோடு அழைத்துக்கொண்டு எங்களுடைய மத்திய கிளை அலுவலகத்துக்கு வந்தார்.

‘சார் நீங்க யார்கிட்ட பேசனீங்கன்னு தெரியலை.. நான் அந்த பி.ஏ.கிட்ட இப்பத்தான் பேசிட்டு வரேன். அப்படி ஒரு போன் வரவேயில்லன்னு சாதிக்கறான். ஒழிஞ்சி போடான்னு விட்டுட்டேன். நீங்க ரெண்டு பேரும் இப்பவே வாங்க. இன்னொரு மினிஸ்டர்கிட்ட கூட்டிக்கிட்டு போரேன். அவர் இவனை மாதிரியில்ல.. ரொம்ப தங்கமான பையன். நம்ம தலைவருக்கு ரொம்ப வேண்டப்பட்டவன். நான் சொன்னா கண்டிப்பா செய்வான்.’ என்ற பிள்ளையை நம்ப முடியாமல் என்னுடைய மேலாளர் அவரைப் பார்த்து அவருக்கு தெரிந்த தமிழில் , ‘சார் சேட்டுக்காக பாக்கறேன். உங்களால முடிஞ்சா செய்யிங்க.. சும்மா நம்மள அலைய விடாதீங்க..’ என்றார் சற்றே கோபமாக..

தனக்கே உரிய பாணியில் பிள்ளை உடனே எழுந்து அவருடைய கைகளைப் பிடித்துக்கொண்டார் (அவருக்கு எங்கே மூன்று பஸ்சுகளுக்கு வேண்டிய கடன் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம்).

‘சார்.. அப்படியெல்லாம் இல்ல சார்.. அவன மறந்துடுங்க.. நான் இந்த தடவை கண்டிப்பா முடிச்சி தர்றேன். இங்க வர்றதுக்கு முன்னால நான் இப்ப சொன்ன மினிஸ்டரோட பி.ஏவை பார்த்துட்டுதான் வர்றேன். கவலைப்படாம கிளம்பி வாங்க.. தம்பி சொல்லுங்க..’ என்று என்னையும் சிபாரிசுக்கு அழைக்க.. நான் என் மேலாளரிடம் ‘கடைசியா ஒருதடவை போய்ட்டு வரலாம் சார்’ என்றேன்.

ஆக, நால்வரும் கிளம்பி சென்றோம்..

அவர் கூறியபடி, அன்று காணச்சென்ற அமைச்சர் மிகவும் நல்லவராய் தெரிந்தார். ( இப்போது அரசியலிலேயே காணோம்.. என்னவானார் என்றே தெரியவில்லை..)

அவரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தோம். அமைச்சர் என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல் (வக்கீலுக்கு படித்தவர் என்பதால் ஆங்கில புலமையும் இருந்தது) எங்களை அழைத்து பேசி இரண்டொரு நாட்களுக்குள் தலைவரிடம் இருந்து தியதியைப் பெற்றுத் தருவதாக சொன்னவர் அப்படியே செய்யவும் செய்தார்..

அதனாலேயே வந்தது வேறொரு விணை.

பிள்ளை உடனே நாங்கள் முன்பு சென்று கண்ட அமைச்சரின் பி.ஏவை தொலைப்பேசியில் அழைத்து முதலமைச்சரின் சம்மதம் கிடைத்த செய்தியை அறிவித்ததுடன் நிற்காமல் அவரை தாறுமாறாக ஏசிவிட விஷயம் அமைச்சரின் காதுகளுக்கு எட்டியது.

எல்லா இடங்களிலும் நீக்கமற பரவியிருக்கும் ஈகோ அமைச்சரைத் தூண்டிவிட தியதி பெற்றுக் கொடுத்த அமைச்சரை (அவர் பாவம் வயசிலும், அரசியல் அனுபவத்திலும் செல்வாக்கிலும் மற்றவரை விட மிகவும் ஜூனியர்) தன்னுடைய அரசியல் செல்வாக்கை உபயோகித்து மிரட்ட அவர் மிரண்டு போய் பிள்ளையை அழைத்து ‘நீங்க அந்த அமைச்சரைப் பார்த்த விஷயத்தை ஏங்க என்கிட்டருந்து மறைச்சீங்க?’ என்று கோபித்துக்கொண்டார்.

எனவே ஒரு Fire Fighting Exercise ஐ நடத்த வேண்டியிருந்தது..

நான், பிள்ளை மற்றும் சேட் (என் மேலாளர் ‘டி.பி.ஆர். இனி இவன்க முன்னாலெல்லாம் கை கட்டி காத்து நிக்க என்னால முடியாது. தேதி கிடைச்சாச்சி. இனி நீங்களே பாத்துக்குங்க.’ என்று ஒதுங்கிக்கொண்டார்) முதலில் கண்ட அமைச்சருடைய செயலாளரை பார்க்க தலைமைச் செயலக அலுவலகத்திற்கு சென்றோம்.

பிள்ளை ஏற்கனவே அவரை தாறுமாறாக பேசியிருந்ததால் அவர் அவருடைய அதிகாரத்தை காட்ட எங்களை நான்கு மணி நேரம் காக்க வைத்துவிட்டு அமைச்சரை காண சம்மதித்தார்.

எங்களை அறைக்குள் வர சம்மதித்த அமைச்சரோ ஒரு பதினைந்து நிமிடம் வரை எங்களை கண்டு கொள்ளவேயில்லை. (எல்லா அமைச்சர்களுடைய அறைகளிலும் சட்டமன்றத்தில் நடப்பவற்றை அவரவர் அறைகளிலிருந்தே கேட்பதற்கு வசதியாக ஒரு சிறிய ஒலிபெருக்கி (Speaker) பெட்டி வைக்கப் பட்டிருந்தது. அமைச்சர்கள் தங்களை காண வந்துள்ள பார்வையாளர்களிடம் பேசிக்கொண்டே சட்டமன்றத்தில் நடைபெறும் விவாதங்களை கேட்கவியலும். தேவைப்பட்டால் உடனே சட்டமன்றத்துக்கு சென்று பதில் அளித்துவிட்டு திரும்பிவந்து தங்களுடைய அலுவல்களை கவனிக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்று நினைக்கிறேன்.) ஆனால் நம்முடைய அமைச்சர் நாங்கள் அவர் முன்னால் அமர்ந்திருந்தும் வேண்டுமென்றே ஒப்புக்கு பெறாத விவாதங்களை ஒலிபெருக்கி வாயிலாக கேட்பதிலேயே குறியாயிருந்தார்.

சுமார் அரைமணி கழித்து வேண்டா வெறுப்பாக கேலியுடன் பிள்ளையைப் பார்த்து ‘என்னங்க தலைவரோட டேட் கிடைச்சிருச்சி போலருக்குது.. அப்புறம் எதுக்கு வந்தீங்க?’ என்றார்.

பிள்ளை மனதிற்குள் என்ன நினைத்தார் என்பது வேறு விஷயம். ஆனால் வெளியில், பணிவுடன் ‘தம்பி, தப்பா நினைச்சிக்காதீங்க.. நீங்க ரொம்ப பிசியான அமைச்சர்.. அதான் அவர் வழியா முதலமைச்சரைப் பாக்கலாம்னு...’ என்று இழுத்தார்.

அமைச்சர் உடனே பெருந்தன்மையாக ஆனால் பந்தா சற்றும் குறையாமல் ‘ நானும் தலைவர்கிட்ட பேசிட்டேன். நீயும் அன்னைக்கி தலைமை தாங்க வந்துருய்யா.. அவனை வேணும்னா (அதாவது தேதி பெற்றுக் கொடுத்த அமைச்சர்) வந்து வாழ்த்துரை வழங்க வச்சிரலாம்னு சொல்லிட்டார். தலைவர் சிறப்பு விருந்தினரா கலந்துக்கிட்டு குத்து விளக்கு ஏத்திட்டு உங்க கிளையை திறந்து வச்சி பேசுவார்.. அதுக்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் பண்ணிருங்க.. ஆனா ஒன்னு. தலைவர் இதவரை இந்த மாதிரி வங்கி திறப்பு விழாவுக்கெல்லாம் ஒத்துக்கிட்டதே இல்லை. அதனால அரேஞ்மென்ட்ஸ் எல்லாம் ரொம்ப சிறப்பா இருக்கணும்... அப்புறம் நான் முன்னமே சொன்னா மாதிரி கொறைஞ்சது நூறு பேருக்காவது சின்ன சின்ன கடன்களை தலைவர் கையால மேடையில் வச்சி குடுக்கணும்.. ஜாஸ்தியா வேணாம்.. ஒவ்வொருத்தருக்கு ரு 1000 – 1500 வரை (1980ல் அதுவே பெரிய தொகை!) குடுத்தா போறும். ஒரு 25 பேருக்கு தையல் மிஷின் குடுக்கணும்.. ரெண்டு மூணு நாளைக்குள்ள நம்ம வட்ட செயலாளர் ... வந்து உங்கள பாப்பாரு.. (இந்த வட்ட செயலாளர் எம்.ஜி. ஆர் காலத்திற்குப் பிறகு தி.மு.க வுக்கு மாறி பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை.) எல்லத்தையும் நல்லபடியா ஏற்பாடு பண்ணிட்டு என்னை வந்து பாருங்க..’ என்று வழியனுப்பி வைத்தார்.

வெளியே வந்த எனக்கு ‘அப்பாடா இந்த மட்டில் விட்டாரே.’ என்றிருந்தது..

பிள்ளை என்னைப் பார்த்து, ‘என்ன சார்.. சக்ஸஸ்ஃபுல்லா முடிச்சிட்டேன்ல? என் விஷயத்தை மறந்திடாதீங்க..(அதாவது அவருடைய மூன்று பேருந்துகள் வாங்க கடன்) கிளை திறந்தவுடனே உங்கள வந்து பாக்கறேன்.’ என்றவாறு விடை பெற்றுக்கொண்டார்.

பிள்ளை தலைமறைந்ததும் சேட் என்னைப் பார்த்து விஷமத்துடன் புன்னகைத்தார். ‘சார்.. இதெல்லாம் உங்களுக்கு ஒரு எக்ஸ்பீரியன்ஸ்.. இந்த பிள்ளை இருக்கானே அவன் ஒரு பயங்கரமான ஆளு.. இவனையெல்லாம் எங்கள மாதிரி ஆளுங்களாலத்தான் டீல் பண்ண முடியும். பாருங்களேன் போன பத்துவருஷமா எங்க கிட்ட லோன் வாங்கி, வாங்கிதான் பெருசானான். இப்ப உங்க அறிமுகம் கிடைச்சதும் என்னை விட்டுட்டு உங்ககிட்ட தாவறான் பாருங்க. ஜாக்கிரதை சார், இவனுக்கு லோன் குடுத்தீங்க.. உங்க கேரியரையே நாசமாக்கிருவான்.’

‘இதெல்லாம் எனக்கு தெரியாதாக்கும்!’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அவரைப் பார்த்து நன்றியுடன் புன்னகைத்தேன்.

‘நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப தாங்க்ஸ் சேட். பிள்ளை விஷயத்தை நான் எப்படி டீல் பண்ணிக்கணுமோ அப்படி டீல் பண்ணிக்கறேன். அத விட முக்கியம் இப்ப இந்த வட்ட செயலாளரை டீல் பண்றதுதான்.. நூறு பேருக்கு 1000 என்றாலே ஒரு லட்சம் ஆயிடும். தொகை பெரிசில்லதான். ஆனா ஃபார்மாலிட்டீசை கம்ப்ளீட் பண்றதுக்குள்ள போறும், போறும்னு ஆயிரும்.. நான் வரேன் சார். ஃபங்ஷன் வேலைகளை இப்பவே முடுக்கிவிட்டாத்தான் ரெண்டு வாரத்துக்குள்ள முடிக்க முடியும்.’

சாதாரணமாக சொல்லிவிட்டாலும் திறப்புவிழா ஏற்பாடுகளில் கட்சி தொண்டர்களும், லோக்கல் தலைவர்களும் தலையிட்டு கொடுத்த தொல்லைகள்... அப்பப்பா இப்போது நினைத்தாலும் உறக்கம் போய்விடுகிறது..

டென்ஷன்கள் தொடரும்..

16 கருத்துகள்:

  1. பெயரில்லா12:32 PM

    நீங்க சொல்றது ரொம்ப சரி சார்.

    அரசியலுக்கும் எளிமைக்கும் சம்மந்தமே இல்லை..

    ஈகோவும், ஆணவமும், அகங்காரமும் இல்லையென்றால் எந்த அரசியல்வாதியும் ஃபீல்டில் நிற்க முடியாது.

    அதனால்தான் நீங்க குறிப்பிட்ட அந்த எளிமையான அமைச்சர் காணாமலே போய்விட்டார்.

    உங்க தொடர் நல்லா போய்கிட்டிருக்கு. தொடர்ந்து, அதே சமயம் ஜாக்கிரதையா எழுதுங்க.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா12:45 PM

    நீங்க ஒரு தனியார் வங்கியில் அதிகாரியாக இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    பொது உடைமை வங்கிகள் என்றால் பரவாயில்லை.. நீங்கள் எதற்காக இது போன்ற அரசியல்வாதிகளை வைத்து திறப்பு விழா நடத்த வேண்டும்?

    உங்கள் வங்கியின் அணுகுமுறையே தவறு என்றுதான் சொல்லுவேன்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா12:47 PM

    அதெப்படி சார் சாதாரண நிகழ்வுகளை ஒரு கதை சொல்றா மாதிரி இத்தனை interesting ஆ எழுதறீங்க?

    நல்லாயிருக்கு சார்.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா12:49 PM

    அந்த பந்தா பேர்வழி யாருன்னு சொல்ல மாட்டீங்க, இல்ல?

    போட்டும்..

    நல்லா சஸ்பென்சை மெயின்டெய்ன் பண்றீங்க?

    அடுத்த பதிவு நாளைக்கா, திங்கள் கிழமையா?

    பதிலளிநீக்கு
  5. நன்றி சம்பத்,


    ஆணவமும், அதிகாரமும் கலந்து இருந்தால்தான் அரசியலில் நிலைத்து நிற்கமுடியும் என்பது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை..

    நான் சந்தித்த அரசியல்வாதிகளில் அமைச்சர் மாதவன் மிக நல்ல மனிதராக தோன்றினார். நான் இப்பதிவில் குறிப்பிட்ட இரண்டாவது அமைச்சரும் அப்படித்தான்.

    அவர் இப்போது அரசியலில் காணாவிட்டாலும் அவருடைய சொந்த வாழ்க்கையில் வெற்றியடைந்திருப்பார் என்பதில் சந்தேகமேயில்லை.

    பதிலளிநீக்கு
  6. அ.நா 1

    நீங்கள் கூறியது சரிதான். ஒரு தனியார் வங்கி கிளையை திறக்க ஒரு முதலமைச்சர் தேவையில்லை.

    அதனால் கிடைக்கும் ஒரு தற்காலிக விளம்பரத்துக்கு ஆசைப்பட்டு இத்தனை மனக்கஷ்டம் படத்தேவையே இல்லை.

    பதிலளிநீக்கு
  7. அ.நா 2

    அத்தனை சுவாரசியமாகவா இருக்கிறது?


    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. அ.நா 3

    திங்கள் கிழமைதான்..

    வீட்டில் Dial up தான் இருக்கிறது..

    Upload செய்வது அத்தனை எளிதல்ல.

    உங்கள் ஆர்வத்துக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா2:10 PM

    MGR சந்திப்பைப் பற்றி இன்னும் எத்தனை பதிவுகள் எழுதுவதாக உத்தேசம் சார்?

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா2:14 PM

    ஒரே அமைச்சரவையில் உள்ள இரு அமைச்சர்களுக்குள் ஈகோ தகராறு வருவது மிகவும் இயற்கையே.

    அதுவும் ஒருவர் சீனியராகவும், மற்றவர் ஜூனியராகவும் இருந்தால் கேட்கவே வேண்டாம்.

    அது அநேகமாக மத்திய அமைச்சரவையிலிருந்து இப்போதிருக்கும் தமிழக அமைச்சரவைக்கும் பொருந்தும்

    பதிலளிநீக்கு
  11. MGR சந்திப்பைப் பற்றி இன்னும் எத்தனை பதிவுகள் எழுதுவதாக உத்தேசம் சார்?//

    ஏன் அலுத்துவிட்டதா?

    அதிகபட்சம் இரண்டு..

    பதிலளிநீக்கு
  12. ஒரே அமைச்சரவையில் உள்ள இரு அமைச்சர்களுக்குள் ஈகோ தகராறு வருவது மிகவும் இயற்கையே.//


    சரியாக சொன்னீர்கள்.

    இப்போதைய தமிழக அமைச்சரவையில் நிச்சயம் இருக்கும். ஆளுக்கு ஆள் அம்மையாரை மகிழ்விப்பதிலேயே குறியாய் இருக்கிறார்களே. அதனாலேயே அவர்கள் மத்தியில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. எப்படித்தான் நமக்குன்னு இப்படி அரசியல்வாதிகளாகக் கிடைக்கிறார்களோ...
    Or, do we deserve only such people?

    பதிலளிநீக்கு
  14. சுவைபட இருந்தது. தொடர்ந்து படித்து வருகிறேன். அமெரிக்காவில் செனேட்டர்களை சந்திப்பது எளிது. உங்கல் ஊர் செனேட்டர்டம் சொல்லி பிறகு வாஷிகடொன் போனால், வெள்ளை மாளிகையை சுற்றி பார்க்க முடிந்தால், உங்கள் துறை செகரட்டரியை பார்க்க அனுமதி வாங்கிதருவார்கள். அதேபோல குழந்தைகள் பிறந்த நாள் அன்று கடிதம் எழுது பணம் கட்டினால், குழந்தை பெயருடன் நாள் முழுக்க அமெரிக்க தேசிய கொடியை பறக்கவிடுவார்கள். எல்லாம் ஒரு கடிதம் மூலமே. கவர்னரை சந்திப்பதும்(முக்கிய காரணங்களுக்காக) எளிது.

    பதிலளிநீக்கு
  15. You are right Mr.Darumi,

    We deserve only this kind of Politicians.

    Thanks for your apt comment.

    பதிலளிநீக்கு
  16. இப்போதே அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்துவிடவேண்டும் போல் இருக்கிறது.


    ஆனால் ஒன்று. அறஞர் அண்ணாவும், கலைஞரும் ஆட்சி செய்த சமயத்தில் தலைமை செயலகத்துக்கு சென்று முதல்வரையோ அல்லது மற்ற அமைச்சர்களை சந்திப்பதோ எந்த ஒரு கட்சியையும் சார்ந்திராத நம்மைப் போன்றோருக்கு மிகவும் எளிதாய் இருந்தது..

    பதிலளிநீக்கு