31 அக்டோபர் 2019

பாஜகவின் சரிவு....4


3ம் பாகம்

ஜிஎஸ்டி வரி விதிப்பு உண்மையில் வரவேற்கப்பட வேண்டியதுதான். 

ஏனெனில் ஜிஎஸ்டி அமலாக்கப்படுவதற்கு முன்பு நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களும் தங்கள் விருப்பப்படி விற்பனை வரி, நுழைவு வரி, மதிப்பு கூட்டு வரி, சேவை வரி என பல்வேறு வரிகளை வெவ்வேறு விகிதங்களில் வசூலித்துவந்தன. யூனியன் பிரதேசங்கள் எனப்படும் பாண்டிச்சேரி, தில்லி போன்ற மாநிலங்களில் மற்ற மாநிலங்களில் நடப்பில் இருந்து வந்த விகிதங்களை விட மிகவும் குறைவாக விற்பனை வரி  வசூலிக்கப்பட்டு வந்தன. இதனால்  அண்டை மாநிலங்களான தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் வசித்தவர்கள் கூட உண்மைக்கு புறம்பான தங்குமிட விலாசங்களை காட்டி விலையுயர்ந்த வாகனங்களுக்கு மிகக் குறைந்த விற்பனை வரி செலுத்தி வரி ஏய்ப்பு நடத்த வாய்ப்பளித்தது. அத்துடன் மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகங்களுக்கு அந்தந்த மாநில விற்பனை வரியுடன் மத்திய அரசின் விற்பனை வரியையும் செலுத்தும் பழக்கமும் இருந்து வந்தது. இதனால் பல வணிகர்கள் வரிக்கு வரி செலுத்த வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டனர். 

இவ்வாறு மாநிலங்களுக்கிடையில் விற்பனை மற்றும் சேவை வரி வசூலிப்பத்தில் எவ்வித ஒற்றுமையும் இல்லாத சூழலில் நாடு முழுவதும் வசூலிக்கப்பட்டு வந்த பல்வேறு வகையான வரி விகிதங்களை ஒருங்கிணைத்து விற்பனை மற்றும் சேவை வரி என்ற ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு மத்திய அரசு தள்ளப்பட்டது. 

ஆனால் இதை அமல்படுத்துவதில் மத்திய அரசு காட்டிய அவசரம்தான் இப்போது நிலவும் அனைத்து குழப்பத்திற்கும் காரணம். 

மேலும் ஜிஎஸ்டிக்கு முன்பு மாநிலங்கள் வசூலித்து வந்த விற்பனை வரி விகிதங்கள் ஏழு விழுக்காட்டிலிருந்து அதிக பட்சமாக பதினான்கு விழுக்காடு வரை இருந்தன. தமிழகத்தை பொருத்தவரை அதிகபட்ச விற்பனை வரி 12.5 விழுக்காடாக இருந்தது. நாட்டில் எந்த ஒரு மாநிலத்திலும் விற்பனை வரி பதினெட்டு விழுக்காட்டிற்கு மேல் இருக்கவில்லை. மாநில எல்லையை தாண்டி நடக்கும் வர்த்தகத்திற்கு தமிழக விற்பனை வரியுடன் மத்திய அரசு விற்பனை வரி (அதிகபட்ச வரியாக ஆறு விழுக்காடு)யையும் சேர்த்தாலும் பதினெட்டு விழுக்காட்டை தாண்டியதில்லை.

ஆனால் இவற்றை ஒருங்கிணைத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியில் அதிகபட்ச வரியாக இருபத்தி எட்டு விழுக்காடு என நிர்ணையிக்கப்பட்டது. இதே போன்று எட்டிலிருந்து பத்து விழுக்காடு வரை மட்டுமே இருந்துவந்த பல பொருட்களின் வரி விகிதம் பதினெட்டு விழுக்காடு என்ற அளவுக்கு உயர்த்தி நிர்ணையிக்கப்பட்டது. அதாவது அத்தியாவசிய பொருட்கள் என மக்கள் கருதி வந்த பல பொருட்களின் மீது விதிக்கப்பட்டு வந்த விற்பனை வரி ஆறிலிருந்து பத்து விழுக்காடு வரை உயர்த்தப்பட்டதால் பொருட்களின் விலையும் உயர்ந்தன. இதன் விளைவாக மக்கள் அவற்றை வாங்குவதை குறைக்கவோ அல்லது வசதியில்லாதவர்கள் முற்றிலுமாக தவிர்க்கவோ செய்தனர். 

இதில் விசித்திரம் என்னவென்றால் மேல்தட்டு மக்கள் மட்டுமே அதிக அளவில் உண்ணும் பித்சா, பர்கர் போன்ற உணவு வகைகளுக்கு ஐந்து விழுக்காடு வரியும் பாமரர் வீட்டு குழந்தைகளும் உண்ணும் பிஸ்கட்டுக்கு பதினெட்டு விழுக்காடு வரி என்கிற அளவில் ஒரு வரைமுறை இன்றி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டன. பாமரர்களால் நினைத்தும் பார்க்க முடியாத ஆலிவ் எண்ணெய்க்கு ஐந்து விழுக்காடு வரி... ஆனால் பெரும்பாலோர் பயன்படுத்தும் சமையல் எண்ணெய்க்கு பண்ணிரண்டு விழுக்காடு வரி... பற்பசை தூளுக்கு பண்ணிரண்டு விழுக்காடு, பற்பசை மற்றும் பிரஷ்சுக்கு பதினெட்டு விழுக்காடு வரி... தீப்பெட்டிக்கு 12 விழுக்காடு, மண்ணெண்னை விளக்குக்கு (hurricane lamps) 18%

தீப்பெட்டி தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விகிதத்தை குறைக்கும்படி பலமுறை கோரிக்கை விடுத்தும் அது இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருந்து வருகிறது.  இதனால் சிவகாசி மற்றும் கோவில்பட்டியில் இயங்கிவரும் பல சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு பலர் வேலையிழந்து தவிப்பது நமக்கு தெரிகிறது. இன்றைய காலை செய்தியில் சாலையோரம் பல வருடங்களாக இயங்கிவந்த பல உணவகங்கள் நாள்தோறும் மூடப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டது, . 

இத்தகைய நியாயமற்ற வரி விகிதங்களால் சிறிய அளவில் உற்பத்தியில் ஈடுபட்டு வந்திருந்த சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் அவர்கள் வாங்கும் ஒவ்வொரு மூலப்பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்தி வாங்க வேண்டிய சூழலில் அவர்களுடைய பொருட்களுக்கு அதுவரை அமலில் இருந்து வந்த வரி விகித உயர்வால் ஏற்பட்ட விற்பனை சரிவும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு பல நிறுவனங்களும் மூடும் நிலையை அடைந்தன. தமிழகத்தில் இத்தகைய உற்பத்தி நிறுவனங்களுக்கு பேர்பெற்ற திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டதிலிருந்து மூடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்தை கடந்துவிட்டது என்கிறது சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கைகள். 

இந்த திட்டம் அமலாக்கப்பட்டதிலிருந்து சுமார் முப்பது முறைகளுக்கு மேலாக வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டதிலிருந்தே இந்த திட்டம் எத்தனை அவசரகதியில் அமலுக்கு கொண்டு வரப்பட்டது என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. இன்னமும் இது முடிந்தபாடில்லை. இனி வரும் ஜிஎஸ்டி குழுவின் கூட்டங்களிலும் பல பொருட்களின் குறைக்கப்பட வேண்டிய சூழல் ஏற்படும். ஏனெனில் எவ்வித வரைமுறையும் ஆய்வும் இல்லாமல் நிர்ணயிக்கப்பட்ட வரி விகிதங்கள் இவை. ஏறத்தாழ கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் வரி விகிதங்கள் பல முறை குறைக்கப்பட்டாலும் அமலாக்கப்பட்ட காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட நியாயமற்ற வரி விகிதத்தால் விற்பனையை இழந்து மூடப்பட்ட நிறுவனங்களில் பல இன்னும் மூடிய நிலையிலேயே இருப்பதுதான் வேதனை.

ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு கொண்டுவரப் பட்டபோது மாதம் குறைந்தது ஒரு லட்சம் கோடி வருவாய் இருந்தால்தான் நாட்டின் மொத்த நிதிபற்றாக்குறையை(fiscal  deficit) சமாளிக்க முடியும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. துவக்க காலங்களில் அந்த இலக்கை அடைய முடிந்தாலும் கடந்த ஒரு வருடமாக சராசரியா எண்பதாயிரம் கோடியை தொடுவதே சிரமமாக உள்ளதாம்.

இது எதனால்?

நாட்டின் வரி வருவாயை அதிகரிக்க வேண்டுமானால் நாட்டின் உற்பத்தியை பெருக்கி அதன் விளைவாக  சந்தைக்கு வரும் பொருட்களை உடனே வாங்கும் அளவுக்கு நுகர்வோரின் வாங்கும் திறனையும் சேர்த்து அதிகரித்தால் விற்பனை  தொடர்ந்து உயரும். அதனால் நாட்டின் மறைமுக வரி வருவாயும் உயர்ந்துக்கொண்டே செல்லும்.

இந்த அடிப்படை பொருளாதார தத்துவத்தை உணராத ஆட்சியாளர்கள் வரியை மட்டும் உயர்த்தினாலே வருவாய் பெருகிவிடும் என்று நினைத்தது எத்தனை அறிவீனம்?. மத்தியிலுள்ள ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகளால் விற்பனை சரிந்துக்கொண்டே இருக்கும்போது அதன் மூலமாக கிடைக்கும் வரி வருவாயும் குறையத்தானே செய்யும்? அதுதான் இப்போது நடக்கிறது.




பணமதிப்பிழப்பு நடவடிக்கை உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் அனைவருடைய கையிலுமிருந்த ரொக்கப் பணத்தை இல்லாமல் செய்தது. ஜிஎஸ்டியோ இந்த சூழலில் இருந்து மீண்டு வந்து உற்பத்தியை பெருக்கி இலாபம் ஈட்டலாம் என்று நினைத்திருந்த உற்பத்தியாளர்களின் எண்ணத்தை நிராசையாக்கிப் போட்டது எனலாம். 

இத்தோடு நிற்காமல் இன்னும் ஒரு முட்டாள்தனமான தீர்மானம் மூலம் நாட்டின் வாகன உற்பத்தியையும் முடக்கி போட்டது மத்திய அரசு. அதன் விளைவாக கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாம் காணாத அளவுக்கு வாகன விற்பனை சரிந்து அதன் உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியையே பெருமளவு குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன. 

அதுதான் மாசுகட்டுப்பாட்டை மேலும் கடுமையாக்கும் பிஎஸ் ஆறு (BS 6) திட்டம். 

வாகன விற்பனை பெருமளவில் குறைந்ததற்கு காரணம் என்ன என்று மத்திய நிதியமைச்சரிடம் நிரூபர்கள் கேள்வி கேட்டபோது அவர் திருவாய் மலர்ந்து உதிர்த்த அபத்தமான பதில்: இப்போதெல்லாம் மக்கள் ஓலா, ஊபர் போன்ற வாடகை வாகனங்களில் பயணிப்பதையே விரும்புகிறார்கள். வாகன விற்பனை  சரிவுக்கு இதுவும் ஒரு காரண்ம். இந்த பதிலுக்கு ஆங்கில பத்திரிகை ஒன்று அளித்த பதில் என்ன தெரியுமா? ’இப்படி ஒரு பதிலை அளிப்பதற்கு பதிலாக நிதியமைச்சர் எனக்கு தெரியவில்லை என்றே பதிலளித்திருக்கலாம். ’

மத்திய அரசு கடந்த ஆண்டு நாட்டில் தற்போது  நடைமுறையிலுள்ள Bharat Stage (BS) IV என்ற மாசுகட்டுப்பாட்டு விதிமுறை (Emission Norm) யிலிருந்து நேரடியாக BS VI மாற தீர்மானித்தது. இது ஐரோப்பாவில் நடைமுறையிலுள்ள Euro VI விதிமுறைக்கு சமமாக கருதப்படுகிறது. இந்த முடிவு நல்ல முடிவு என்பது உண்மைதான் என்றாலும் நாடு இப்போதுள்ள நிதி நிலமையில் இந்த முடிவு தேவைதானா என்ற கேள்வி எழுகிறது.

ஏனெனில் உலகில் பல வளர்ந்த நாடுகள் இன்னும் Euro IV என்கிற நிலையையே எட்டவில்லையாம்! இதற்குக் காரணம் இதற்கு வாகனங்களில் பல முக்கிய மாறுதல்களை செய்ய வேண்டியுள்ளது.   அதற்கு மிக அதிக அள்விலான முதலீடு தேவைப்படுகிறது. ஆகவே தான் வாகன உற்பத்தியாளர்கள் பலரும் தங்களால் இயன்றவரை இந்த திட்டத்தை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டுமென்று மத்திய அரசுடன் போராடி பார்த்தார்கள். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி எதிர்வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தே தீரும் என்று அறிவித்துவிட்டது. 

ஆகவேதான் நாட்டிலுள்ள பல வாகன உற்பத்தியாளர்கள் தங்களுடைய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த  வேண்டிய நடைமுறைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே BS IV மோட்டார் இயந்திரங்களை (Engines) கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள வாகனங்களை நுகர்வோர் யாரும் வாங்குவதற்கு முன்வராததால் வாகன விற்பனையும் வெகுவாக சரிந்து உற்பத்தியையே நிறுத்த வேண்டிய சூழலுக்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டனர். 

மத்திய நிதியமைச்சர் தற்போது பயன்பாட்டிலுள்ள BS IV இயந்திரங்களுடன் இயங்கும் வாகனங்களுக்கு அதன் ஆயுட்காலம் வரை பயன்படுத்துவதற்கு ஏற்ற ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று உறுதியளித்திருந்தாலும் அவருடைய வாக்குறுதியை நுகர்வோர் நம்ப தயாராக இல்லை என்பதை வாகன விற்பனையின் தொடர் சரிவு உறுதி செய்கிறது. வாகனங்களை இயக்க பயன்படுத்தும் பெட்ரோலிய பொருட்களிலும் மாற்றங்கள் செய்யப்படவிருப்பதால் BS VI வாகனங்கள் விற்பனைக்கு வரும்போது அதை வாங்கிக்கொள்ளலாம் என்று நுகர்வோரும் தங்களுடைய முடிவை சற்று தள்ளிப்போட்டுவிட்டனர் போலும். 

இந்த மாற்றம் டீசல் இயந்திரத்துடன் இயங்கும் வாகனங்களைத்தான் மிக அதிக அளவில் பாதிக்கும் என்கிறார்கள். சரக்கு போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து கனரக வாகனங்களுமே டீசலைத்தான் பயன்படுத்துவதால் அத்தகைய வர்த்தகத்தில் ஈடுபட்டு வருபவர்களும் தங்களுடைய புதிய வாகன தேவைகளை தற்போதைக்கு ஒத்திவைத்து விட்டனர். 

இதுதான் தற்போதைய வாகன உற்பத்தி நிறுத்தம் மற்றும் விற்பனை சரிவுக்கு உண்மையான காரணம். 

சரி இந்த பொருளாதார சரிவிலிருந்து எப்படி மீள்வது? இது யார் கையில் உள்ளது?

நாளை பார்க்கலாம்.

30 அக்டோபர் 2019

பாஜகவின் சரிவு....3

2ம் பாகம்

1. பணப்புழக்கத்தில் வீழ்ச்சி

இந்திய வர்த்தகத்தை என்னதான் டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு முயற்சித்தாலும் இன்று மட்டுமல்ல இனி எதிர்வரும் ஐம்பதாண்டு காலத்திற்கும் மொத்த வர்த்தகத்தில் சுமார் 96 விழுக்காடு கேஷ் அண்ட் கேரி (Cash and Carry) எனப்படும் ரொக்க வர்த்தகமாகத்தான் இருக்கும். இதுதான் இந்திய வர்த்தகத்தின் தனித்துவம். நாட்டில் எத்தனை பெரிய பல்பொருள் அங்காடிகள் (Super Stores, Hyper Stores, Malls) வந்தாலும் சாலையோர கடைகளில்தான் இந்தியாவின் பெரும்பான்மை வர்த்தகம் நடைபெறுகிறது... இனியும் நடைபெறும்.... இத்தகைய கடைகளில் நடக்கும் வர்த்தகம் அனைத்துமே ரொக்கத்தில்தான் நடைபெறுகின்றன. இத்தகைய கடைகளை நடத்துபவர்கள் கொள்முதல் செய்வதும் ரொக்க அடிப்படையில்தான். இதை மத்திய அரசு எத்தனை முயற்சித்தாலும் மாற்றுவது சாத்தியமில்லை. 

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை அறிவித்த பிரதமர் எதிர்வரும் காலங்களில் நாட்டின் பணப் பயன்பாடு பெருமளவு குறையும் என்று ஆரூடம் கூறினாலும் உண்மையில் நடந்தது என்ன? 

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் துவக்க நாட்களில் கையில் பணமில்லாமல் அல்லாடிய சாமான்ய மக்கள் வேறுவழியின்றி வங்கி அட்டைகளை பெருமளவில் பயன்படுத்த துவங்கியது என்னவோ உண்மைதான். அந்த காலக்கட்டத்தில் மொத்த பணப் பயன்பாடு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்புடன் ஒப்பிடுகையில் (curreny to GDP ratio) 12.01 விழுக்காடு என்ற நிலையிலிருந்து 8.8 விழுக்காடாக குறைந்தாலும் பணப்புழக்கம் அடுத்த சில மாதங்களில் சீரடைந்ததும் மீண்டும் 10.10 விழுக்காடு என்ற அளவுக்கு உயர்ந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்ட முந்தைய கால அளவுக்கு மீண்டும் அடைந்தது என்பதுதான் உண்மை. 

மேலும் நம்முடைய நாட்டின் பொருளாதார நிலையை தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிப்பவர்கள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 90 விழுக்காடு உள்ள சாமான்ய மக்கள். அதாவது நடுத்தரத்திற்கும் சற்று கீழே உள்ளவர்கள். இவர்களுடைய வாங்கும் திறனை வைத்துத்தான் சந்தையில் எந்த ஒரு பொருளின் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலோனோர் கிராமங்களில் வசிப்பவர்கள். இவர்களுடைய மாத வருமானத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தை வைத்துத்தான் இந்திய பொருளாதாரத்தின் நிலை தீர்மானிக்கப்படுகிறதே தவிர. ஆன்லைனிலோ அல்லது பெரும் மால்களிலோ பொருட்களை வாங்கிக் குவிக்கும் மேல்தட்டு மக்களால் அல்ல.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் பணப்புழக்கம் முற்றிலுமாக ஸ்தம்பித்து நின்ற அறிமுக மாதங்களில் முதலில் முடங்கிப்போனது இத்தகையோரை சென்றடையும் வர்த்தகம்தான். இவர்கள் கைவசம் இருந்த அனைத்து ரொக்கத்தையும் வங்கிகளில் அடைத்துவீட்டதால் பணப்புழக்கம் வெகுவாக ஏன் முற்றிலுமாக குறைந்துபோய் அதிலிருந்து மீளவே முடியாமல் தாற்காலிகமாக அடைக்கப்பட்ட சிறு குறு வர்த்தக நிறுவனங்களுக்கு அளவே இல்லை. இதன் விளைவாக இவற்றிற்கு விநியோகம் செய்துவந்த மொத்த வணிகர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டனர் என்பதும் உண்மை. ஆகவே தான் இந்த நடவடிக்கை நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி அளவு மற்றும் அவற்றின் மொத்த மதிப்பு எனப்படும் GDP யும் கூட எதிர் வரும் ஆண்டுகளில் கணிசமான அளவு குறைய வாய்ப்புள்ளது என்று அன்றே முன்னாள் நிதி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல பொருளாதார வல்லுநர்கள், உலக வங்கி உட்பட கூறினார்கள்.

2. சரக்கு போக்குவரத்தில் சிக்கல்.

இத்தகைய வணிக நிறுவனங்களின் இடைவிடா தேவைகளையே சார்ந்திருந்த சரக்கு போக்குவரத்து நிறுவனங்களும் கைவசம் ரொக்கம் இல்லாமல் பெருமளவு பாதிக்கப்பட்டன. இந்திய அளவில் சுமார் எட்டு லட்சம் சரக்கு வாகன ஓட்டுனர்கள் தங்களுடைய வாகனங்களுக்கு டீசல் கூட நிரப்ப முடியாமல் அவதியடைந்தனர். இவர்களில் எத்தனை பேரிடம் வங்கி அட்டைகள் இருந்திருக்க வாய்ப்புள்ளது? அன்றாடம் தேவைப்படும் டீசல் மற்றும் கைச்செலவுக்கு கூட ரொக்கம் இல்லாமல் அவதிப்பட்டதை மறுக்கமுடியுமா? இதன் விளைவு... வர்த்தக்ப் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கிப்போனது. அதில் இருந்து மீண்டு வர முடியாமல் தொழிலையே தாற்காலிகமாக கைவிட்டவர்கள் எத்தனையோ பேர். 

3.பங்கு சந்தை வீழ்ச்சி

இந்த நடவடிக்கை ரொக்கத்தில் நடக்கும் வணிகம் மட்டுமல்லாமல் இந்திய பங்கு சந்தையையும் வெகுவாக பாதித்தது. பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நாளன்று தேசிய பங்கு சந்தை சுமார் 1,700 புள்ளிகளும் நிஃப்டி சுமார் 600 புள்ளிகளும் சரிந்தன. அன்றைய சரிவிலிருந்து மீண்டு வர சுமார் மூன்று மாதங்கள் தேவைப்பட்டன. 2016 ஜூலை மாதம் துவங்கி 2017 பிப்ரவரி வரையிலான இடைப்பட்ட காலத்தில் சரிவை சந்திக்காத நிறுவனங்களே இல்லை என்கிறது புள்ளிவிவரங்கள் பெரும்பான்மையான நிறுவனங்கள் இன்றுவரையிலும் அதிலிருந்து மீளவில்லை என்பதுதான் உண்மை. குறிப்பாக ரொக்கத்திலேயே நடைபெற்று வரும் கட்டுமானத் தொழில், மோட்டார் வாகனம், சில்லறை வர்த்தகம், 

3. தொழில் உற்பத்தியில் சரிவு

நாட்டிலுள்ள பெரும் தொழில் நிறுவனங்களும் கூட இதனால் பாதிக்கப்பட்டன. ஏன்.. இவை தயாரிக்கும் பொருட்களில் பெரும்பாலான விழுக்காடு இந்திய சந்தையை நம்பியே தயாரிக்கப்படுகின்றன. கடைநிலை வர்த்தக நிறுவனங்களில் ஏற்படும் பணத்தட்டுப்பாடு எஸ்கலேட்டர் (Escalator)முறையில் நாட்டிலுள்ள அனைத்து பெரிய நிறுவனங்களின் உற்பத்தியையும் பாதித்தன. கடைநிலை வர்த்தக நிறுவனங்களில் தொடர் தேவையினால்தான் (continuous demand) இத்தகைய தொழில் நிறுவனங்கள் தொடர்ச்சியாக இயங்க முடிந்தன. சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் முடக்கப்பட்டதன் விளைவு அவற்றையே நம்பியிருக்கும் பெரு நிறுவனங்களையும் பாதிக்கத்தானே செய்யும்?

4. விவசாய உற்பத்தியில் வீழ்ச்சி

கிராமங்களில் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த அனைத்து தொழில்களிலும் ரொக்கம்தான் பெருமளவில் பயன்படுகின்றன. விதை, உரம், வேலையாட்களுக்கு கூலி என எதிலும் ரொக்க பரிவர்த்தனைகள்தான் என்பதுதான் இன்றல்ல இனிவரும் காலங்களிலும் நடக்கும். அதை எந்த தொழில்நுட்ப முன்னேற்றமும் மாற்றிவிடப்போவதில்லை. விவசாய உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதிலும் கூட ரொக்கம்தான் தேவைப்படுகிறது. எந்த விவசாயி பொருட்களை விற்றுவிட்டு வங்கியில் செலுத்தப்படும் தொகைக்காக காத்திருப்பான்? இப்போதும் அரசு கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்யப்படும் பொருட்களின் மதிப்பு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்றால் விவசாயிகள் அதை ஏற்காமல் குறைந்த விலைக்கானாலும் உடனே ரொக்கம் தர தயாராக உள்ள இடைத்தரகரிடம் விற்பதையே விரும்புகின்றனர். மேலும் தங்களுடைய பொருட்களின் மொத்த மதிப்பும் வங்கியில் வரவு வைக்கப்படுமா என்கிற நிச்சயத்தன்மையும் இல்லாத சூழலில் இது முழுவதுமாக நடைமுறைக்கு வருவது சாத்தியமே இல்லை. சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது என இத்தகைய மையங்களில் பொருட்களை விற்கும் விவசாயிகள் குமுறுவது செய்திகளில் வருவதை பார்க்க முடிகிறது. 

5. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (GDP) வீழ்ச்சி

சிறு, குறு மற்றும் பெரு என அனைத்து தொழில் உற்பத்தி மற்றும் விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட சரிவின் விளைவு 15-16 ஆம் நிதியாண்டில் 9.00 விழுக்காடாக இருந்த நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியின் அளவு பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்ட 16-17 நிதியாண்டில் 5.5. விழுக்காடுக்கு சரிந்தது. அதிலிருந்து மெள்ள மெள்ள மீண்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் 6.5 விழுக்காடாக அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு விழுக்காடு அளவுக்கே உயர்ந்துள்ளது. இப்படியே போனால் 15-16 நிதியாண்டில் நாடு அடைந்த 9.00 விழுக்காட்டை அடையவே இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படுமோ?



6. வேலை வாய்ப்பில் இழப்பு

பணப்புழக்கம் அறவே முடக்கப்பட்டுவிட்ட நிலையில் குடிசை தொழில்கள் மற்றும் முறைசாரா தொழில் துறை (unorganised sector) நிறுவனங்களும் ஒவ்வொன்றாக மூடப்பட அதில் பணிபுரிந்த பெருவாரியான பணியாட்கள் பணி இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். இதில் பெருமளவு பாதிக்கப்பட்டவை கட்டுமான தொழில். இதில் அன்றாட கூலிக்கு பணிபுரிந்துவந்த லட்சக்கணக்கான பணியாட்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தங்களுடைய வேலைகளை இழந்து போயினர். கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது என்ற நிலை ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் என்றாலும் மிகையாகாது.

இந்த நடவடிக்கையை தொடர்ந்து ஏற்பட்ட சரிவை மேல்காணும் படம் மிகத் தெளிவாக காட்டுகிறது. 

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நடைமுறைப்படுத்தப்பட்டதற்கு காரணமாக இருந்தவர்களின் மனப்போக்கு எத்தகையதாக இருந்தது என்பது தெரியவில்லை. இத்தகைய நடவடிக்கையை தனிமனிதனாகவோ அல்லது ஒரு சிறு குழுவாகவோ தீர்மானித்து எடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களால் கடுமையாக தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சம்மந்தப்பட்டவர்களின் பேச்சு திறமையாலும் அதன் எதிர்பாளர்கள் அதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட எதிர்மறை விளைவுகளுக்கு மக்களிடத்தில் தகுந்த முறையில் எடுத்துரைக்க தவறியதாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் பாராட்டப்பட்டு முன்பைவிட அதிக அளவு பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தப்பட்டதன் விளைவைத்தான் நாடு இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வருவதற்கு முன்பே மத்திய அரசு எடுத்த மற்றுமொரு அவசர முடிவு தான் ஒரே நாடு ஒரே வரி என்ற ஜிஎஸ்டி வரி அமலாக்கம்...

அதை நாளை பார்க்கலாம்

29 அக்டோபர் 2019

பாஜாகவின் சரிவு....2



முதல் பாகம்

சந்தையில் ஒரு பொருளின் விலை அதன் விநியோகம் (supply) அந்த பொருளுக்கு சந்தையில் நுகர்வோர் தரப்பிலிருந்து வரும் தேவை (Demand)என இரண்டின் அளவை பொருத்தே நிர்ணயிக்கப்படுகின்றன என்பதை இன்றல்ல சுமார் எண்பது வருடங்களுக்கு முன்பே அதாவது 1930ல் வாழ்ந்த இங்கிலாந்து பொருளாதார மேதை ஜே.எம்.கெய்ன்ஸ் (John Maynard Keynes) தன்னுடைய ஆராய்ச்சி கட்டுரை ஒன்றில் கூறியிருக்கிறார். 

உதாரணத்திற்கு வெங்காயத்தின் விலையை எடுத்துக்கொள்வோம்.

சந்தையிலுள்ள மொத்த விநியோகம் ஒரு டண் என்று வைத்துக்கொள்வோம். அதை வாங்க அதே சந்தையில் உள்ள மொத்த நுகர்வோரின் எண்ணிக்கை ஆயிரம் என்று வைத்துக்கொள்வோம். விநியோகத்தின் அளவில் மாற்றமில்லாமல் நுகர்வோரின் எண்ணிக்கை கூடும்போது.... அதாவது நுகர்வோரின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் அதிகரிக்கும் சூழலில் வெங்காயத்தின் விலை கூடும்... ஆயிரத்துக்கும் கீழே குறையும் போது அதாவது தேவை குறையும்போது வெங்காயத்தின் விலையை குறைக்காவிட்டால் அது விற்பனையாகாமல் தேங்கும் நிலை உருவாகும். ஆகவே வணிகர்கள் அதன் விலையை குறைக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

இதையே மாற்றி நுகர்வோரின் எண்ணிக்கை அதே ஆயிரம் என்ற நிலையில் வெங்காயத்தின் விநியோக அளவு ஒரு டண்ணுக்கும் கீழே குறையும்போது தேவை விநியோகத்தை விட அதிகம் என்பதால் வெங்காயத்தின் விலை கூடும். விநியோகத்தின் அளவு ஒரு டண்ணுக்கு மேல் அதிகரிக்கும்போது வெங்காயத்தின் விலை குறையும்...

இதுதான் ஒரு பொருளாதார சந்தையில் ஒரு பொருளின் விலை நிர்ணயிக்கப்படுவதின் அடிப்படை தத்துவம்.

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கைகள் தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள் என்றாலும் அது விநியோகம் மற்றும் நுகர்வோரின் வாங்கும் திறன்களை ஒரே மாதிரியாக பாதித்ததால் இதுவரையிலும் பொருட்களின் விலை அதிக அளவில் உயரவில்லை என்பது உண்மை.

ஆனால் இந்த முடிவுகள் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை பாதித்துவிட்டதாக வல்லுநர்கள் கூறுவது எதனால்?

இதை ஆராய நான்  உலக பொருளாதாரத்தைப் பற்றி விவாதிக்கும் பல இணையதளங்களை உலாவி (Browse)திரட்டிய தகவல்களை இங்கே சுருக்கமாக அளித்திருக்கிறேன்.

முதலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை.

இந்த நடவடிக்கை எதற்காக எடுக்கப்பட்டது என்பதை மத்திய அரசு அளித்திருந்த விளக்கம் என்ன?

1.இந்திய பணச்சந்தையில் கறுப்புப் பணத்தின் விழுக்காடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
2.கள்ள நோட்டுகளின் புழக்கம் மிக அதிக அளவில் அதிகரித்துவிட்டது. இது தீவிரவாதிகளின் செயல்பாடுகளுக்கு மிகவும் உதவுகிறது.
3.வருமானவரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் 
4.நாட்டில் பணப்புழக்கம் குறையும். அதனால் விலைவாசி குறையும்.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

1. கறுப்பு பணம் அதிகரித்துவிட்டது/

மத்திய அரசின் மதிப்பீட்டின்படி இந்தியாவில் சுமார் மூன்று லட்சம் கோடி கறுப்புப் பணம் இருந்ததாம்! இந்த மதிப்பீட்டை யார், எந்த அடிப்படையில் செய்தார்கள் என்பதே ஒரு கேள்விக் குறி. உண்மையில் மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது புழக்கத்தில் இருந்த சுமார் ரூ.15.41 லட்சம் கோடியில் ரூ.15.30 லட்சம் கோடி அதாவது மொத்த பணத்தில் 99.3 விழுக்காடு பணம் வங்கிகளில் செலுத்தப்பட்டுவிட்டது. மீதமுள்ள தொகையான ரூ.10,720 கோடி மட்டும்தான் கறுப்புப் பணம்.. இந்த அளவு குறைந்த தொகையை மீட்டெடுக்க இத்தனை விபரீதமான முடிவு தேவைதானா என்று பொருளாதார வல்லுநர்கள் கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

இவற்றை மீட்டெடுக்கத்தானே வருமான துறை என்ற ஒரு பெயரில் சர்வ அதிகாரம் படைத்த ஒரு அமைப்பு உள்ளது.? அவர்கள் ஒவ்வொரு ஆண்டும்  மீட்டெடுக்கும் தொகைக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லையே என்றும் கூறுகின்றனர் என்கின்றனர் வல்லுநர்கள்.

மேலும் ஒரு நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு அந்த நாட்டின் கறுப்புப் பணம் மட்டுமே காரணமாகிவிட முடியாது. ஏனெனில் இன்று உலகளவில் மிக அதிக அளவு கறுப்புப் பணத்தை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் ரஷ்யாவும் இரண்டாம் இடத்தில் சீனாவும் உள்ளன. இவை இரண்டுமே கடந்த இருபது ஆண்டுகளில் அசுரத்தனமான பொருளாதார வளர்ச்சியை சந்தித்துள்ள நாடுகள். அதற்கு அடுத்தபடியாக மெக்சிகோ. அதன் பிறகுதான் இந்தியா வருகிறது. முதல் இரண்டு இடங்களில் உள்ள நாடுகளிலுள்ள கறுப்புப் பணத்தின் அளவோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் உள்ள கறுப்புப் பணத்தின் அளவு ஐம்பதில் ஒரு பங்கு மட்டுமே. 

ஆக பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு அரசு முன்வைத்த முதல் காரணமே அடிபட்டுப் போகிறது. சரி அப்படியே வைத்துக்கொண்டாலும் கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்கிறார்களே அப்போதெல்லாம் கறுப்புப் பணம் நாட்டில் இல்லையா? 

இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட காலக்கட்டத்தை இப்போது திரும்பிப் பார்க்கும்போது இதன் பின்னாலிருந்த மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுவது: அப்போது நடக்கவிருந்த ஐந்து வட மாநில சட்டமன்ற தேர்தல்கள்.. குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தை தன் வசப்படுத்த நினைத்த மோடியும் அவருடைய கட்சியும் எதிர்கட்சிகள் வசமிருந்த கணக்கில் வராத பெரும் தொகை ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் தாள்களாகவே இருக்கும் என்றும் அதை செல்லாக் காசாக்கிவிட்டால் அவர்களுடைய மொத்த கஜானாவும் காலியாகிவிடும் எனறு எண்ணியிருக்கலாம். 

2. கள்ள நோட்டுகள் ஒழிக்கப்பட்டுவிடும்!

மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.1000, தாள்கள்களுக்கு மாற்றாக அரசு அறிமுகப்படுத்திய ரூ.2000 தாளில் பல நகலெடுக்கவியலாத அம்சங்கள் உள்ளன என்று விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் அது அறிமுகப்படுத்தப்பட்ட வெகு சில மாதங்களிலேயே பாக்கிஸ்தானிலிருந்து எல்லையை தாண்டி ஊடுருவிய தீவிரவாதிகளிடமிருந்து கட்டுக்கட்டாக ரூ.2000த்தின் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டபோது நாடே அதிர்ந்து போனது. மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி 2017-2018 நிதியாண்டில் இந்திய வங்கிகளில் செலுத்தப்பட்ட தொகைகளில் மட்டும் சுமார் 5.04 லட்சம் கள்ள நோட்டுகள் இருந்தனவாம்! அதில் 2000 ரூபாய் தாள் மட்டும் 1.80 லட்சம்! இதில் வியப்பு என்னவென்றால் புதிய ஐநூறு ரூபாய் மற்றும் இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிறகு நூறு ரூபாய் மற்றும் ஐம்பது ரூபாய் தாள்களின் கள்ளப் பிரதிகள் அதிக அளவில் புழக்கத்தில் வந்துள்ளதாம்! . 





இரண்டாயிரம் ரூபாய் தாள்களின் கள்ள பிரதிகள் நாட்டில் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதால் அதன் பயன்பாட்டை குறைக்கும் வகையில் கடந்த ஓராண்டில் அதை அச்சடிப்பதையே மத்திய ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது!

ஆக இதிலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியையே சந்தித்துள்ளது 

3. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயரும்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆண்டை தொடர்ந்து வந்த நிதியாண்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை சுமார் பத்து மில்லியன் அதாவது ஒரு கோடி உயர்ந்தது என்பது உண்மைதான். ஆனால் இதில் பெரும்பாலோனோர் மாத வருமானம் பெறுவோர். அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் சராசரியாக அதிகரித்த வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை விட இந்த அதிகரிப்பு ஒன்றும் அதிகம் இல்லை.. மேலும் எண்ணிக்கை அதிகரித்தாலும் வரி வசூலில் பெரிய அளவுக்கு ஏற்றம் இல்லை என்கிறது வருமான வரித்துறையின் அறிக்கை. அவ்வாறு அதிகரித்த தொகையிலும் பெருமளவு பணமதிப்பிழப்பு எடுக்கப்பட்ட துவக்க நாட்களில் மதிப்பிழந்த ரூபாய்களை அதாவது ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகளை வரி செலுத்துவதற்கு பயன்படுத்தலாம் என்ற அரசின் அறிவிக்கையை தொடர்ந்து செலுத்தப்பட்ட சுமார் ஐம்பதாயிரம் கோடியை கழித்துவிட்டால் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு முன்புள்ள ஐந்தாண்டுகளில் சராசரியாக வசூலிக்கப்பட்ட தொகையின் அளவிலேயே இருந்துள்ளது. 

எனவே இந்த காரணமும் ஏற்புடையதல்ல.

4. நாட்டில் பணப்புழக்கம் குறையும் அதனால் விலைவாசி குறையும்

நான் ஏற்கனவே விளக்கியுள்ளப்படி விலைவாசி குறைய பணப்புழக்கம் ஒரு காரணமே தவிர அதுமட்டுமே காரணமல்ல.. விநியோகம் முந்தைய அளவிலேயே இருந்து பணப்புழக்கம் மட்டும் கணிசமான அளவு குறைக்கப்பட்டு இருந்தால் மட்டுமே விலை வாசி குறைய வாய்ப்புள்ளது. ஆனால் உற்பத்தியும் குறைந்து அதன் விளைவாக விநியோக குறைவும் நுகர்வோரின் வாங்கும் சக்தி குறைவும் சம நிலையில் இருக்கும்போதும் விலைவாசி ஏறாமல் இருக்கும் என்பதுதான் உண்மை. ஆகவே விலைவாசி ஏறாமல் இருந்திருக்குமானால் அதற்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மட்டுமே காரணமல்ல.

ஆனால் இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகள் என்னென்ன?

நாளை பார்க்கலாம்...

28 அக்டோபர் 2019

பாஜகவின் சரிவு துவங்கிவிட்டது.....

சமீபத்தில் நடந்து முடிந்த மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல்களில் மக்கள் பாஜகவிற்கு அருதி பெரும்பான்மை கிடைக்காத அளவுக்கு வாக்களித்ததற்கு இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவும் அதனால் ஏற்பட்ட விளைவுகளால் மக்கள் பட்ட அவதியும் தான் முக்கிய காரணம் என்றால் மிகையாகாது. 

இரு மாநிலங்களிலும் பிரச்சாரத்தின்போது மோடியும் அமித்ஷாவும் காஷ்மீரில் 370வது பிரிவை நீக்கியதைப் பற்றியே பேசியது நினைவிருக்கலாம். ஆனால்  காஷ்மீரில் நடக்கும் பிரச்சினையைப் பற்றி எங்களுக்கு எவ்வித கவலையும் இல்லை என்பதை மக்கள் தெளிவாக தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தரப்பில் இன்னும் சிறிது ஒருங்கிணைப்பு சரியாக இருந்திருந்தால் ஹரியானாவில் நிச்சயம் ஆட்சியை கைப்பற்றியிருக்க முடியும். 

இந்த சூழலில் இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை குறித்து ஆட்சியாளர்கள் கவலைப்படும் நேரம் வந்துவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்துக்கொள்வது நல்லது. 

எதிர்கட்சிகள் மட்டுமல்லாமல் நாட்டிலுள்ள பொருளாதார வல்லுனர்கள், முன்னாள் நிதியமைச்சர், இன்னாள் நிதியமைச்சரின் கணவர்.... இவ்வளவு ஏன், நோபல் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டவர் வரையிலும் கடந்த ஆறு ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் சிறிது சிறிதாக நலிவடைந்து வந்துள்ளது என்பதை பல ஆதாரங்களுடன் எடுத்துரைத்துள்ளனர்.

ஆனால் அரசாங்கம்தான் இதை ஒப்புக்கொள்வதாக இல்லை.

இதில் தான் சிக்கலே....

தமிழக அரசு டெங்கு காய்ச்சல் விஷயத்தில் நடந்துக்கொள்வதுபோன்றுதான் மத்திய அரசும் பொருளாதார விஷயத்தில் self denial modeல் செயலாற்றிக்கொண்டிருக்கிறது.

டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் இருப்பதும் அது வேகமாக பரவி வருவதும் உண்மைதான் என்பதை தமிழக அரசும் பொருளாதாரம் உண்மையிலேயே தேக்க நிலையை அடைந்திருப்பது உண்மைதான் என்பதை மத்திய அரசும் ஒப்புக்கொண்டாலே போதும், பாதி கிணறு தாண்டிய மாதிரிதான். 

இந்த நிலையிலிருந்து எவ்வாறு மீளலாம் என்பதை அதன் பிறகுதான் எடுக்க முடியும். நாட்டில் எவ்வித பொருளாதார நெருக்கடியும் இல்லை... அமேஜான் ஆன்லைன் ஸ்டோரில் ஒரே வாரத்தில் சுமார் இருநூறு கோடிக்கு செல்பேசிகள் விற்பனை ஆகியுள்ளன... கடந்த ஒரே மாதத்தில் மூன்று பாலிவுட் திரைப்படங்கள் முன்னூறு கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளன என்பன போன்றவற்றையெல்லாம் பாமரத்தனமாக சுட்டிக்காட்டி  இந்திய பொருளாதாரத்தில் எவ்வித தேக்கமும் ஏற்படவில்லை என்றெல்லாம் கூறிவருவதைப் பார்க்கும்போது இதே அமேஜானின் கடந்த வருட நிதியறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்த லாபத்தை சுட்டிக்காட்டி அமெரிக்காவில் பொருளாதரம் நலிவடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவது தவறு என்ற அதிபர் டிரம்ப்புக்கும் நம்முடைய பிரதமர் மோடிக்கும் இடையில் எவ்வளவு ஒற்றுமை உள்ளது என்பது தெரிகிறது. 

இந்தியாவில் பொருளாதாரம் நலிவடைந்து வருகிறது என்றால் உலகமெங்குமே இதே நிலைதான் என்று உலக வங்கியே கூறுகிறது என்கிறார் நிதியமைச்சர். பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் நம்முடைய தமிழகத்தில் டெங்குவின் பாதிப்பு மிக, மிக குறைவு என்று நம்முடைய சுகாதார அமைச்சர் கூறுவது போல்தான் உள்ளது இது. நம்முடைய மத்திய மாநில அரசுகளிடத்தில்தான் எத்தனை ஒற்றுமை!

சில தினங்களுக்கு முன் பொருளாதாரத்தில் 2019ம் ஆண்டுக்கான  நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள அமெரிக்க வாழ் இந்திய பொருளாதார வல்லுநர் அபிஜித் பானர்ஜி அவர்கள் கூறுகையில் இந்தியாவின் பொருளாதாரம் கடந்த ஆறு ஆண்டுகளாகவே சரியான பாதையில் பயணிக்கவில்லை என கூறியிருந்ததை பத்திரிகைகளில் வாசிக்க முடிந்தது. அதாவது மோடி அவர்கள் பதவியேற்றதிலிருந்துதான் இந்த நிலை என்பதை சூசகமாக கூறியிருந்தார் அவர்.

இதையேத்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு நம்முடைய மத்திய நிதியமைச்சரின் கணவரும் கூறியிருந்தார். அவர் தொடர்ந்து கூறுகையில் முந்தைய ஆட்சி காலங்களில் அதாவது நரசிம்மராவ் முதல் மன்மோகன் சிங் ஆகியோர ஆட்சி செய்த காலத்தில் அவர்கள் வழிநடத்திய முறையை பின்பற்றியிருந்தாலே இந்த சரிவை தவிர்த்திருக்க முடியும் என்றார்.

முன்னாள் மத்திய ரிசர்வ் வங்கி தலைவர் ராஜன் அவர்கள் கூறும்போது கடந்த மூன்று ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பல பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் மத்திய அரசால் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள்தான் இந்திய பொருளாதாரம் முடங்கிப்போனதற்கு முக்கிய காரணம் என்றார். 

அதென்ன முக்கிய சீர்திருத்தங்கள்?

முதலாவது 2016ஆம் ஆண்டு அவசர, அவசரமாக மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவருக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை.

அதன் பாதிப்பில் இருந்து நுகர்வோரும், சிறு, குறு வணிக மற்றும் தொழில் நிறுவனங்களும் மீள்வதற்கு முன்பே கடந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு சற்று முன்பு எடுக்கப்பட்ட .ஜி.எஸ்.டி வரி திட்டம்.

முதலாவது முடிவால் நுகர்வோர் கைகளில் இருந்த ரொக்கப்பணம் முழுவதுமாக பறிக்கப்பட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டது. அப்படி சேர்ந்த தொகையையும் முழுவதுமாக மக்களை எடுக்க விடாமல் ரேஷன் முறையில் அலைக்கழித்தது. இது மட்டுமா? வங்கிகளும் கூட இந்த பணத்தை முழுமையாக பயன்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதிக்காமல் அதில் பெரும் விழுக்காட்டை முடக்கிப் போட்டது. ஆக நுகர்வோர் பணம் சந்தையிலிருந்து அகற்றப்பட்டுவிட்டது. பொருளாதார வல்லுநர்கள் பாஷையில் சொல்ல வேண்டுமானால் சந்தையின் தேவைகளை (Market Demand) பெருமளவு குறைத்துவிட்டது. நுகர்வோரின் வாங்கும் சக்தியை குறைத்தாலே அவர்களின் தேவையும் குறைந்துவிடும் அல்லவா? இதுதான் பொருளாதார வீழ்ச்சியின் துவக்கம்..

இரண்டாவது முடிவு தொழில், வணிகம் செய்வோரை முடக்கிப்போட்டுவிட்டது. வல்லுநர்கள் பாஷையில் வணிக மற்றும் தொழில் துறை நிறுவனங்களின் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலையை இந்த புது வரி உயர்த்தியதால் ஏற்கனவே வாங்கும் திறனை இழந்திருந்த நுகர்வோரிடமிருந்து வரக்கூடிய மீதமிருந்த தேவையையும் குறைத்துவிட்டது. இதன் விளைவாக உற்பத்தி குறைந்து சந்தையில் பொருட்களின் வரத்து (Supply) குறைந்துபோனது. 

பொருளாதார வீழ்ச்சியிலும் விலைவாசி அதிக அளவில் உயராமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்கின்றனர் வல்லுநர்கள்.

எப்படி?

நாளை பார்க்கலாம்....

24 அக்டோபர் 2019

தங்கவேல் நினைவாக .....(நகைச்சுவை)

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த தங்கவேல்-சரோஜா நகைச்சுவை ஜோடியை மறக்கவே முடியாது. அவர்கள் இருவரும் கணவன் - மனைவியாகவே நடித்து கலக்கிய திரைப்படங்கள் ஏராளம்.

அவற்றில் முக முக்கியமான திரைப்படம் கல்யாணப் பரிசு. மன்னார் & கம்பெனி என்று Google Searchல் அடித்து பாருங்கள், முதலில் வருவது சித்ராலயா கோபுவை பற்றி இந்து தினத்தாளில் வெளியான செய்திதான். (Years ago director and comedy playwright `Chithralaya' Gopu started `Mannar & Co.' in the film "Kalyana Parisu". Even today the imaginary firm `Mannar and Co' track, involving Thangavelu and Saroja, evokes laughter. )


சித்ராலயா கோபுவின் கற்பனையில் உருவான மன்னார் & கோ இப்போதும் வேலை வெட்டியில்லாத மருமகனை கேலி செய்ய மாமானார்கள் பயன்படுத்தும் நிறுவனம் என்றால் அது மிகையாகாது.

இக்கருத்தை உபயோகித்து தங்கவேல்-சரோஜா ஜோடியை கணவன்-மனைவியாக கற்பனையில் ஒரு நகைச்சுவைக் காட்சியை ஜோடித்தால் என்ன என்று முயன்றதன் விளைவே இந்த குறு-நாடகம்.

பாத்திரங்கள்

கணவர்: டணால் தங்கவேல்
மனைவி: சரோஜா

(வீட்டு கதவு திறந்து கிடக்கிறது. வீட்டினுள் நுழைந்த கணவர் ஹாலில் கிடந்த நாற்காலியொன்றில் அமர்கிறார்)

கணவர்: ஷூ.. அப்பப்பா.. என்னா வெயில், என்னா வெயில்? (உள்ளே எட்டிப்பார்த்து) ஏய் கமலா.. உன் வீட்டுக்காரன் களைச்சி போய் வந்திருக்கேன்.. ஒரு காப்பி, கீப்பி கிடையாதா?

(உள்ளிருந்து சப்தமே வராமல் போகவே.. கணவர் மெதுவே எழுந்து சமையற்கட்டை நோக்கி நடக்கிறார். அங்கேயும் அவருடைய மனைவி இல்லை. குழப்பத்துடன் வாசலை நோக்கி திரும்புகிறார். கணவருடைய குரல் கேட்டு அடுத்த வீட்டிலிருந்து வந்த அவருடைய மனைவி இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு கோபத்துடன் தன்னையே பார்த்துக்கொண்டு வாசலில் நிற்பதை பார்க்கிறார்.)

கணவர்:(தனக்குள்) இவளுக்கு விஷயம் தெரிஞ்சிருக்குமோ.. எமகாதகியாச்சே.. நமக்கு பின்னாலயே யாரையாச்சும் அனுப்பியிருப்பாளோ? இருக்கும், இருக்கும். (வெளியில்) ஹெஹ்ஹஹ்ஹே.. என்ன அப்படி பாக்கறே கமலா? என்னடா இவன் ஆஃபீஸ் போய்ட்டு வரேன்னு சொன்னவன் பகல்லயே வந்துட்டானான்னு பாக்கற.. அப்படித்தானே? அது ஒரு பெரிய கதை..(பேசிக்கொன்டே படுக்கையறையை நோக்கி நகர்கிறார்)

மனைவி: (கேலியுடன்) நீங்க சொல்றது எல்லாமே கதைதானே.. என்னைக்கி உண்மைய பேசியிருக்கீங்க? சொல்லுங்க, எங்கருந்து வரீங்க?

கணவர்: (தனக்குள்) மாட்டிக்கிட்டோம்னு நினைக்கறேன். இப்ப எப்படி சமாளிக்கறது? (மனைவியிடம்) ஹெஹ்ஹஹ்ஹே.. என்ன இப்படி கேட்டுட்டே? ஆஃபீஸ்லருந்துதான்?

மனைவி: அதான் கேக்கறேன் எந்த ஆஃபீஸ்லருந்து?

கணவர்: (சிரிக்கிறார்)ஏன் கேக்கறே?

மனைவி: (கேலியுடன்) விஷயமாத்தான் கேக்கறேன். சொல்லுங்க எந்த ஆஃபீஸ்லருந்து?

கணவர்: (தனக்குள்) நம்ம பார்க்லருந்து வந்தத எவனாவது பாத்த்துட்டு வந்து சொல்லிட்டானா? இருக்கும், இருக்கும். (பதில் சொல்ல வாய் திறக்கிறார்)

மனைவி: (கேலியுடன்) ஹெஹ்ஹஹ்ஹே.. அதான? நீங்க பொய் சொல்றப்பல்லாம் சிரிக்கிற சிரிப்புத்தானே? உங்களுக்காக நானே சிரிச்சிட்டேன். சொல்லுங்க? எந்த பார்க்லருந்து.. இல்ல இல்ல எந்த ஆஃபீஸ்லருந்து வரீங்க? போன வாரம் ஒரு டூப் விட்டீங்களே அந்த மன்னார் அண்ட் கம்பெனியிலருந்தா?

கணவர்: (தனக்குள்) அதையும் கண்டுபிடிச்சிட்டாளா? எமகாதகி, எமகாதகி..

மனைவி: என்ன சத்தத்தையே காணோம்?

கணவர்: (தனக்குள்) நான் என்னத்த சொல்றது? அதான் எனக்கும் சேர்த்து நீயே பேசிட்டியே. (மனைவியைப் பார்த்து)ஊம்.. உனக்கு என்ன தெரியணும்? நான் அதே ஆஃபீஸ்ல வேல செய்யறேனா இல்லையான்னுதானே?

மனைவி: (கேலியுடன்) நீங்க எந்த ஆஃபீசுக்காவது போயிருந்தாத்தானே அதே ஆஃபீசா இல்ல வேற ஏதாவது ஆஃபீசான்னு நினைக்கறதுக்கு?

கணவர்: என்னடாயிது வம்பாயிருக்கு? அப்ப நான் எந்த வேலையும் செய்யலேங்கறியா?

மனைவி: பின்னே.. முதல்ல மன்னார் & கோவிலன்னீங்க.. அந்த மானேஜரையே உங்க முன்னால நிறுத்தி நீங்க சொன்னது பொய்யின்னு நிரூபிச்சேன்.. அப்புறமா நான் பெரிய கதாசிரியன்னு ரீல் விட்டு கடையில வாங்குன ஒரு மாலையோட வந்து நின்னீங்க.. அதுவும் பொய்யின்னு தெரிஞ்சதுக்கப்புறம் ஹெஹ்ஹஹ்ஹேன்னு இளிச்சி சமாளிச்சீங்க.. இன்னும் என்னெல்லாம் சொல்லப் போறீங்களோன்னு பாக்கறேன்.. சொல்லுங்க இன்னைக்கி என்ன சொல்ல போறீங்க?

கணவர்: (கேலியுடன்) அதையும் நீயே சொல்லிடேன். புருஷன் வெளிய போய் வீட்டுக்கு வந்தா.. அன்பா.. வாங்க, உக்காருங்க, என்ன குடிக்கிறீங்க? காப்பி போதுமா, இல்ல ஏதாவது ஆப்பிள் ஜூஸ், ஆரஞ்ச் ஜுஸ் வேணுமா? அப்படின்னு கேக்கறவதான் மனைவி.. நீ என்னடான்னா?

மனைவி: (கோபத்துடன்) அது வேலைக்கி போயி சம்பாதிச்சிக்கிட்டு வர கணவனுக்கு.. உங்களுக்கில்ல..

கணவர்: (கோபத்துடன்) நான் சம்பாதிச்சிக்கிட்டு வராமத்தான் நீ இத்தன வருஷம் சாப்பிட்டுக்கிட்டு இருக்கியா?

மனைவி: (தாடையில் கைவைத்து ஆச்சரியப்படுகிறார்) பாருடி இந்த கூத்தை? உங்களுக்கு கோபம் கூட வருமாக்கும்?

கணவர்: ஏன்? ரோஷம் இருக்கற எந்த ஆம்பளைக்கும்தான் கோபம் வரும். எனக்கு வரக்கூடாதா? என்ன பேசற நீ?

மனைவி: (கேலியுடன்) அது ரோஓஓஓஒஷம் (இழுத்து உச்சரிக்கிறார்) உள்ளவங்களுக்கு.. உங்களுக்கில்ல..

கணவர்: (மனைவியின் பார்வையை தவிர்து தரையை பார்க்கிறார்)

மனைவி: அதிருக்கட்டும். போனமாசம் பாத்துக்கிட்டிருக்கறதா சொன்னீங்களே அந்த வேலை என்னாச்சி?

கணவர்: எது அந்த எக்ஸ்போர்ட், இம்போர்ட் கம்பெனியா? அது..

மனைவி: (கேலியுடன்) ஆஆஆஆஅமா.. (நடிகை சரோஜாவின் ஸ்பெஷாலிடியே வார்த்தைகளை இழுத்து, இழுத்து நக்கலடிப்பதுதான்) என்ன இழுக்கறீங்க? அங்கயும் கல்த்தா குடுத்துட்டானா? சொல்லுங்க. என்ன பண்ணீங்க?

கணவர்: அந்த மானேஜரை கன்னத்துல அறைஞ்சிட்டேன்.. அதான் கல்த்தா குடுத்து அனுப்பிச்சிட்டான் (தன் பின்னங் கழுத்தில் கைவைத்து தள்ளிவிடுவதுபோல் அபிநயிக்கிறார்).

மனைவி: (தாடையை பிடித்துக்கொண்டு ஆச்சரியத்துடன் கணவரை பார்க்கிறார்) என்ன மானேஜர அடிச்சீங்களா? நீங்களா? எதுக்கு?

கணவர்: பின்னே? முதலாளி சொன்னா செய்யாம இருக்க முடியுமா?

மனைவி: (குழப்பத்துடன்) என்ன சொல்றீங்க? உங்க மானேஜரையே அடிக்கசொல்லி உங்க முதலாளி சொன்னாரா ? டூப் விடாதீங்க. நீங்க தினமும் விடற டூப்ல நீங்க எப்ப டூப் விடறீங்க, எப்ப உண்மைய பேசறீங்கன்னே சொல்ல முடியல.. உண்மைய சொல்லுங்க.. மானேஜர அடிக்க சொல்லி உங்க முதலாளி சொன்னாரா?

கணவர்: ஐயர ரெண்டறைன்னு சொன்னா என்ன அர்த்தம்? எங்க மானேஜர் ஒரு ஐயர். அவரத்தான் ரெண்டு அறை விட சொல்றார்னு நினைச்சி சப்புன்னு அறைஞ்சிட்டேன் (தன் கன்னத்திலேயே அடித்துக்கொள்கிறார்). சொன்னத செஞ்சதுக்கு சீட்ட கிழிச்சிட்டான்.

மனைவி:(எரிச்சலுடன்) ஐயோ.. நீங்க விடுற டூப்புக்கு அளவே கிடையாதா?

கணவர்: அடிச்சதுக்கப்புறம்தான் தெரிஞ்சிது முதலாளி கணக்கு போட்டுக்கிட்டிருந்திருக்காருன்னு தெரிஞ்சது.

மனைவி: கணக்கா? என்னங்க சொல்றீங்க?

கணவர்: ஆமா கமலா.. அவரு முந்தா நாளோட கணக்கு வழக்க பாத்துக்கிட்டிருந்திருக்காரு.. அஞ்சி அரை (ஹாஃப், ஹாஃப் என்று ஒலி வராமல் உதடுகளை மட்டும் அசைத்து காட்டுகிறார்) களை கூட்டினா ரெண்டரைதானே வரும்.. அதத்தான் அந்த மனுஷன் சத்தமா சொல்லியிருக்காரு வாய்ப்பாடு மாதிரி. எனக்கு பக்கத்துல நின்னுக்கிட்டிருக்கற மானேஜர் ஐயரை ரெண்டறைன்னு கேட்டுச்சு.. பளார், பளார்னு அறைஞ்சிட்டேன்.. வெளியே போடான்னுட்டான்.

(மனைவி பொங்கிவந்த சிரிப்பை அடக்க முடியாமல் வயித்தை பிடித்துக்கொண்டு சிரிக்கிறார்.. தப்பித்தால் போதும் என்று கணவர் தன் படுக்கையறைக்குள் ஓடி ஒளிகிறார்.)

முடிவு

21 அக்டோபர் 2019

குண்டக்க மண்டக்க (நகைச்சுவை)

(சாலையின் வலப்புறத்திலிருந்து நகைச்சுவை நடிகர் வடிவேலு வந்துகொண்டிருக்கிறார். வானத்தைப் பார்த்தவாறு தனக்குள் பேசிக்கொள்கிறார்)

வடிவேலு: யப்பா சாமி. நா இன்னைக்கி போற காரியத்த நீதாம்பா நல்லபடியா முடிச்சித்தரணும். முடிச்சி தந்தேன்னா, திரப்பி வரப்ப என்னால முடிஞ்சத உன் கோயில் உண்டியல்ல போடறேம்பா..

(எதிரில் வரும் ஒருவர்  அவரை கடந்து செல்ல, வடிவேலு  அவர் காலரைப் பிடித்து தன் பக்கம் இழுத்து அவருடைய கன்னத்தில் அறைகிறார்.)

அறைவாங்கியவர்: (கோபத்துடன்) யோவ். உனக்கென்ன பைத்தியமா? ஏன்யா சும்மா போறவன பிடிச்சி அடிக்கறே?

வடிவேலு: டேய் நா யாரு?

யாருன்னா?

நான் யார்ரா? (தன் நெஞ்சில் கைவைத்து) நானு, நானு.

யோவ் சுத்த இவனா இருக்கியே.. பேசாம ரோட்ல போயிட்ருக்கவன இழுத்து பிடிச்சி கன்னத்துல அறஞ்சிட்டு.. நா யாரு, நா யாருன்னு கேக்கற?

( வடிவேலு மீண்டும் கன்னத்தில் அறைகிறார்) சரியா பாத்து சொல்லு.. நா யாருன்னு தெரியல?

(அறை வாங்கியவன் அழுகிறான்) யோவ் தெரியலையா.. நீதான் யார்னு சொல்லித் தொலையேன்.

உண்மையிலயே நா யாருன்னு தெரியலை?

தெரியலையா..'

சரி நீ போ..

அறைவாங்கியவர் (தனக்குள்) யார்ரா இவன்? ரோட்ல போய்க்கிட்டிருந்தவன நிறுத்தி கன்னத்துல அடிக்கிறான். ஏன்டா அடிச்சேன்னு கேட்டா நான் யார்ராங்கறான். தெரியலன்னு சொன்னா சரி போடாங்கறான். சுத்த பைத்தியக்காரனாயிருப்பான் போலருக்குதே.. இவன்கிட்ட நின்னு பேசினதே தப்பு.. போயிருவம்.. (திரும்பி திரும்பி பார்த்தவாறே அடிபட்ட கன்னத்தை தடவிக்கொண்டு செல்கிறார்)

வடிவேலு: (தனக்குள்) அப்பாடா. இந்த ஊர்ல நம்மளை தெரிஞ்சவன் யாருமில்ல போலருக்குது. தைரியமா நடமாடலாம்.

(காலரை தூக்கிவிட்டுக்கொள்கிறார்). அலட்சியமாக சாலையில் போவோர் வருவோரை பார்க்கிறார். கால்களை அகல வைத்து தெனாவட்டாக சாலையின் நடுவில் நடக்கிறார். ஏற்கனவே அவர் ஒருவரை அடித்ததை பார்த்தவர்கள் அவரை விட்டு சற்று தள்ளியே செல்கின்றனர். அதைப் பார்த்த வடிவேலு ‘அது.. அந்த பயம் இருக்கணும்..’ என்று தனக்குள் சொல்லிக்கொள்கிறார்.

திடீரென்று பின்னாலிருந்து சைக்கிளில் வந்த பார்த்திபன்  அவர் மேல் இடிக்க முகம் குப்புற விழுகிறார். அவர் அணிந்திருந்த வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி முழுவதுமாக அழுக்கடைகிறது. வடிவேலு கோபத்துடன் எழுந்து தன்னை இடித்துவிட்டு நிற்கும் பார்த்திபனை ஓரக்கண்ணால் பார்க்கிறார். அடுத்த நொடியில் அவர் முகம் இருளடைகிறது. (தனக்குள் பேசிக்கொள்கிறார்) ஐயோ, இவனா? நாம எங்க போனாலும் மோப்பம் பிடிச்சிக்கிட்டு வந்திற்ரானய்யா. இன்னைக்கி என்னல்லாம் குன்டக்க மன்டக்கன்னு பேசப் போறானோ தெரியலையே. திறக்கப்படாது.. அவன் என்ன பேசுனாலும் நம்ம வாயவே தெறக்கப்படாது..

பார்த்திபன்:(சைக்கிளில் அமர்ந்தவாறே) டேய்.. என்ன ரோடு உனக்காகத் தான் போட்ருக்குன்னு நெனப்பா உனக்கு? நடு ரோட்ல பெரிய இவன் மாதிரி.. யார்ரா நீ?

வடிவேலு: (பார்த்திபனுக்கு முதுகை காட்டிக்கொண்டு நிற்கிறார்) அட ஒன்னுமில்லப்பா.. நான் ஊருக்கு புதுசு.. நீ போ.. (அந்த இடத்தைவிட்டு வேகமாக செல்ல முயல்கிறார்)

டேய் நில்றா. நான் கேட்டுக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்கு போய்கிட்டே இருக்கே?

(வடிவேலு அப்படியே நிற்கிறார். திரும்பாமலே பதில் சொல்கிறார்) நீ என்ன கேட்டே, நான் யாருன்னுதானே? அதான் நான் ஊருக்கு புதுசுன்னு சொல்லிட்டேன்லயா.. பிறவென்ன? (தனக்குள்) விடமாட்டான் போலருக்கய்யா..

ஏன், முகத்த பாத்து பேசமாட்டீங்களோ?

என் முகத்த பாத்து என்னய்யா செய்யப் போறே?

அத நான் பாத்துக்கறேன். நீ முதல்ல திரும்பி என்ன பாத்து பேசுடா.

(வடிவேலு திரும்பி முழுவதுமாக சுற்றிக்கொண்டு மீண்டும் முதுகையே காண்பிக்கிறார்) போதுமா? பாத்துட்டேல்ல? நான் போட்டா? அர்ஜண்டா ஒரு சோலிக்கி போயிட்டிருக்கேன்யா? என்ன உட்டுறேன் (அழுகிறார்).

டேய்.. முகத்த காட்றான்னா மறுபடியும் முதுகையே காட்றே? என்ன நக்கலா? அதுவும் ஏங்கிட்டயே?

இப்ப என்னய்யா பண்ணணும்கற?

ஸ்லோ மோஷன்ல திரும்பு.

(வடிவேலு ஸ்லோ மோஷன்ல மீண்டும் முழு வட்டமடித்து திரும்ப முயல.. பார்த்திபன் வடிவேலுவின் தோளைப் பிடித்து நிறுத்துகிறார். வடிவேலு தன் இரு கண்களையும் ஒன்றரை கண்ணுள்ளவன்போல் மாற்றிக்கொண்டு நிற்கிறார்.)

(ஆச்சரியத்துடன்) டேய் நீயா?

நீயான்னா? நீ நெனக்கற ஆள் நானில்லையா? என்ன உட்டுறு.

டேய்.. நா நீ யாருன்னு நெனச்சேன்னு உனக்கெப்படி தெரியும்? நீ நான் நீன்னு நெனச்ச ஆள்தான நீ?

(தனக்குள்) மறுபடியும் ஆரம்பிச்சிட்டான்யா. இப்படி குண்டக்க மண்டக்கன்னு பேசி எத்தனை நாளைக்கித்தான் இவன் என் கழுத்த அறுக்க போறான்னே தெரியலையே. என்னய்யா சொல்ற? ஒரெழவும் விளங்க மாட்டேங்குதே..

சரி மெதுவா உன் மர மண்டைக்கு விளங்கமாதிரி சொல்றேன். நீ நான் நீன்னு நெனச்ச ஆள்தானே நீ?

நீ.. நீன்னு.. எளவு வரமாட்டேங்குதே.. சரி ஏதோ ஒன்னு.. வேணாம். என்ன விட்டுரு..

என்ன வேணாம்?

என்ன வேணாம்னா?

இல்ல.. இப்ப ஏதோ வேணாம்னியே?

நானா? எப்ப?

டேய்.. என்ன விளையாடறியா? இப்ப நீதானடா வேணாம் என்ன விட்டுருன்னே? அதான் கேக்கறேன். சொல்லு, என்ன வேணாம்?

(அழுகிறான்) யோவ், ஏதோ ஒரு பேச்சுக்கு சொன்னேன்யா?

பேச்சுக்கா? அதென்ன பேச்சுக்கு? நாங்க மட்டும் பேசாமயா சொன்னோம்? சொல்றா?

(தனக்குள்) என்னடா இவன்.. முன்னால போன முட்டுறான்.. பின்னால போனா ஒதைக்கிறான்.. இன்னைக்கி விடிஞ்சாப்பலதான்.. இப்ப என்ன கேக்க வராங்கறத மறந்து போயிருச்சே..

(பார்த்திபன் வடிவேலுவின் தலையில் தட்டுகிறார்) டேய் என்ன சத்தத்தையே காணோம். சரி, அத விடு.. நீ நான் நெனச்ச ஆளா இல்லையா அத சொல்லு..

முதல்ல நான் யாருன்னு நீ நினச்சு பேசிக்கிட்டிருக்க.. அதச் சொல்லு..

டேய், என்னையே மடக்கறியா? மவனே.. அப்ப எதுக்கு நீ நெனச்ச ஆள் நான் இல்லன்னு சொன்னே?

நான் ஒரு குத்து மதிப்பா கேக்கறியாக்கும்னு சொன்னேன்யா.

குத்து மதிப்பா? அதென்னா குத்து, மதிப்பு?

யோவ் ஒரு பேச்சுக்கு சொன்னேன்யா..

டேய் சொன்ன டையலாக்கையே சொன்னே.. கொன்னுருவேன். சரி அதையும் விடு.. நான் சொல்றேன். நீ அந்த துபாய் கக்கூஸ் பார்ட்டிதானே..

(தனக்குள்) ஆஹா.. மாட்டிக்கிட்டம்யா.. எமகாதகானாயிருப்பான் போலருக்குதே.. துபாயா? கக்கூசா? நீ என்னய்யா சொல்றே? நான் மெட்றாசே பாத்ததுல்ல.. இதுல துபாயில போயி.. நீ நெனக்கற ஆளு நான் இல்லையா.. உலகத்துல ஒருத்தன மாதிரி ஏழு பேர் இருப்பாங்கன்னு நீ கேட்டதில்ல அதுல ஒருத்தன் நான்னு வச்சிக்கயேன்..

சரி வச்சிக்கறேன்.. அதுக்குன்னு அவன் மேல அடிச்ச அதே கக்கூஸ் நாத்தமுமா ஏழுபேர் மேலயும் அடிக்கும்?

(வடிவேலு தன் மேல் முகர்ந்து பார்க்கிறார்.) எனக்கு அடிக்காத நாத்தம் இவனுக்கு மட்டும் எப்படி அடிக்குதுன்னே தெரியலையே.

என்ன அடிக்குதா?

எது?

அதான்டா.. மோந்து பாத்தியே.. அது..

(வடிவேலு விறைப்புடன் திரும்பி பார்க்கிறார்) ஆமாய்யா நீ நெனக்கற ஆளு நான்தான்.. இப்ப என்னாங்கற?

(வியப்புடன்) தோ பார்றா, கோபங்கூட வருமா உனக்கு?

பின்னே.. நான் என்ன ஒன்னுக்கும் பெறாத ஆளுன்னு நினைச்சியா.. வேணாம். சொல்லிட்டேன்.

ஒன்னுக்கு போவாத ஆளா? அது வேறயா? தள்ளி நில்றா!

(தனக்குள்) ஐயோ.. நானே வாய் குடுத்துட்டு, குடுத்துட்டு மாட்டிக்கறனே.. (கன்னத்தில் அடித்துக்கொள்கிறார்) சும்மா வாய வச்சிக்கிட்டு இரேன்டா..

டேய் யார சொல்றே?

என்னது, நானா?

இப்ப ஏதோ வாய்க்குள்ளயே சொன்னியே?

(வடிவேலு வாயை மூடிக்கொள்கிறார்) 'இல்லை' என்று தலையை அசைக்கிறார்.

(பார்த்திபன் வடிவேலுவை பின்னந்தலையில் அடிக்கிறார்) வாயை தொறந்து சொல்றா?

(வடிவேலு கோபத்துடன் முறைக்கிறார்) யோவ். பேசிக்கிட்டிருக்கப்பவே.. கையை நீட்டுற.. வேணாம்.. சொல்லிட்டேன்.

'என்ன வேணாம்? என்ன சொல்லிட்டே? அடிக்கடி இதே டயலாக்க சொல்றே? என்ன வேணாம்? நான் இந்தான்னு எதையோ குடுத்தா மாதிரி!

(வடிவேலு கைகளை தலைக்குமேலே உயர்த்தி கும்பிட்டவாறு தரையில் விழுகிறார்) ஐயோ சாமி.. தெரியாம சொல்லிட்டேன்.. ஆள விடுய்யா..

( பார்த்திபன் வலது கரத்தை உயர்த்தி ஆசீர்வதிக்கிறார்) தீர்க்காயுசு பவ.. நீ சாவாம நூறு வருஷம் இரு.. (தனக்குள்) அப்பத்தான அடிக்கடி எங்கிட்ட மாட்டுவே..

(வடிவேலு எழுந்து முற்றிலும் அழுக்காகிப்போன தன் உடைகளைப் பார்க்கிறார்) இப்ப திருப்தியா?

(பார்த்திபன் வடிவேலுவை மேலும் கீழும் பார்க்கிறார்) இப்பத்தான் சரியான கக்கூஸ் பார்ட்டி மாதிரி இருக்கே.. இப்படியோ போ..

(வடிவேலு தலையை குனிந்தவாறே சாலையின் ஓரத்துக்கு சென்று ஓரக்கண்ணால் பார்த்திபனை பார்க்கிறார்)

டேய் என்ன பாக்கறே?

ஒன்னுமில்லய்யா.. இதோ போய்கிட்டேயிருக்கேன்.. (செல்கிறார்)

(பார்த்திபன் தன் டிரேட் மார்க் விஷம புன்னகையுடன் சைக்கிளை திருப்பிக்கொண்டு வந்த வழியே திரும்புகிறார்)

முடிவு


04 அக்டோபர் 2019

நடந்தது என்ன? (முடிவுரை)

சென்னையிலிருந்து வெளியேறிய ரவி மாதவனின் இரு சிம் கார்டுகளையும் உடைத்தெறிந்தான். ஆனால் செல்பேசியை வீசி எறிய மனம் வரவில்லை. தன்னுடைய செல்பேசியையும் அணைத்து மாதவனுடைய செல்பேசியுடன் கைப் பையில் வைத்துக் கொண்டான். கொஞ்ச நாளைக்கி நம்ம ஃபோனையும் யூஸ் பண்ண வேணாம்... இத வச்சே போலீஸ் ட்ரேஸ் பண்ணிருமே....அதுவரைக்கும் தேவைப்படும்போது மட்டும் ராஜியோட ஃபோன யூஸ் பண்ணிக்குவோம்...

ஆனால் அவன் திருடிய பணம் அவனுக்கு வெகுநாள் வரவில்லை.... கேரளா, ஆந்திரா என்று சுற்றி திரிந்துவிட்டு கையிருப்பு காலியானதும் வருவது வரட்டும் என்ற நினைப்புடன் தனக்கு பரிச்சயமான சென்னைக்கே திரும்பினான்... தன்னுடைய கணக்கில் மீதமிருந்த பதினையாயிரம் ரூபாய் பணத்தை கணக்குகளிலிருந்து எவ்வித தடங்கலுமின்றி எடுக்க முடிந்ததும் சரி... நம்மள யாரும் கண்டுபிடிக்கல போலருக்கு என்று நினைத்தவாறு மேன்ஷனை அடைந்து தன் நண்பனை சந்தித்தான்..

’டேய் எங்கடா போய் தொலைஞ்ச...?..செல்ஃபோனையும் ஆஃப் பண்ணி வச்சிட்டே... என்னடா ஆச்சி?’ என்ற நண்பனிடம்...’ ஊருக்கு போற வழியில ஒரு ஆக்சிடண்ட்ல மாட்டிக்கிட்டண்டா.. பொழைச்சதே புண்ணியம்...’ என்று பொய் சொல்லி சமாளித்தான்...

அடுத்ததாக என்ன செய்யலாம் என்று யோசித்தான். இனியும் அவனால் எந்த பணியிலும் சேர்ந்த அது அளிக்கும் சொற்ப ஊதியத்தைக் கொண்டு வாழ்கையை நடத்த முடியும் என்று தோன்றவில்லை. உழைக்காமல் சுளையாக கிடைக்கும் பணத்தை செலவிடுவதில் உள்ள இன்பம் மற்ற எதிலும் கிடைக்காது என்று நினைத்தான்..... மீண்டும் செல்பேசிகளை வாங்கி விற்கும் தொழிலில் இறங்கினான்... கையிலிருந்த பணத்தில் நான்கைந்து திருட்டு செல்பேசிகளை அவனுக்கு எப்போதும் அத்தகைய செல்பேசிகளை விற்கும் ஆட்களிடமிருந்து வாங்கினான். கை மாத்தி வித்தா ரெண்டு மூனாயிரம் கிடைக்கும்... இப்போதைக்கி இதை வைத்து சமாளிப்போம்.. அப்புறம் பாத்துக்கலாம்....

அவன் வாங்கிய செல்பேசிகளில் ஒன்று ஸ்மார்ட் ஃபோன் ரகம் என்பதை கவனித்தான்.  அவனுடைய அதிர்ஷ்டமோ அல்லது கெட்ட காலமோ அந்த செல்பேசியை ஆன் செய்ததுமே ‘இது திருடுபோன செல்ஃபோன்.. உடனே அருகிலிருக்கும் காவல்நிலையத்தில் ஒப்படைக்கவும் ’ என்ற SMS வந்ததும் அதிர்ந்துபோனான்... என்னடா  இது சோதனை? சிம் கார்ட எடுக்காமயே நம்ம கிட்ட வித்துட்டான் போலருக்கே.... நாமளாவது சிம் கார்ட எடுத்திட்டு தொறந்துருக்கலாம்.....இப்ப என்ன பண்றது? என்று நினைத்தவாறு சுற்றும் பர்த்தான்.... அனைவரும் தன்னையே கவனிப்பதுபோன்ற பிரமை ஏற்பட தன்னுடைய வாகனத்தில் ஏறி அங்கிருந்த அகன்றான். 

அவசரத்தில் அவன் செய்த ஒரே முட்டாள்தனம் ஆன் செய்த செல்பேசியை அணைக்க மறந்ததுதான். 

அந்த செல்பேசியை களவு கொடுத்தவன் மாதவனைப் போல் முட்டாள் இல்லை. அதிகம் தாமதியாமல் காவல்துறையை அணுகி தன்னுடைய செல்பேசியின் IMIE எண்ணை புகாருடன் இணைத்து சமர்பித்திருந்ததால் சென்னைக் காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த வழங்கியில் செல்பேசியின் IMIE எண் பதிவாகியிருந்தது. விளைவு? ரவி அணைக்காமல்  சட்டைப்பையில் வைத்திருந்த அந்த  செல்பேசியின் சிக்னலே அவனைத் தொடர்ந்து சென்று அவன் தங்கியிருந்த விடுதியை அடைந்ததும் நிலையாக நின்றது. கட்டுப்பாட்டு அறையிலிருந்து மேன்ஷன் இருந்த பகுதி காவல்நிலையத்திற்கு விஷயம் செல்ல அடுத்த ஒரு மணி நேரத்தில் காவல்துறையிடம் சிக்கிக்கொண்டான்..

மாதவனின் முட்டாள்தனத்தால் செய்த குற்றத்தில் இருந்து தப்பிய ரவி தனது முட்டாள்தனத்தால் செய்யாத குற்றத்திற்கு சிக்கிக் கொண்டான். இதுதான் விதி போலும். 

ரவி தற்போது விசாரணை கைதியாக புழல் சிறையில்.....வழக்கு நிலுவையில்...

***********

இந்த சிறுகதை தொடரை வாசித்து இடப்பட்டிருந்த கருத்துரைகளில் இரண்டை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

1. திரு. ஜிஎம்பி. அவர்கள் இட்ட கருத்துரை ”எல்லா கதையிலும் உண்மையும் கற்பனையும் இணைந்துதான் இருக்கும்.”

அது இந்த கதைக்கும் பொருந்தும். இந்த கதையின் மூலக் கரு சில மாதங்களுக்கு முன்பு வந்த ஒரு செல்பேசி திருட்டுசம்மந்தப்பட்ட துணுக்கு செய்தி. அதில் களவு போன செல்பேசியிலிருந்த மொபைல் பேங்கிங் மென்பொருள் வழியாக பணம் கையாடல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கள்வன் பிடிபட்டானா என்பது தெரியவில்லை.

மேலும் கடந்த சில வருடங்களில் செல்பேசி திருட்டு என்பது மிக அதிக அள்வில் அதிகரித்து வருகின்றன என்பதையும் இணையத்தில் இருந்து நான் திரட்டிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் சில மாதிரிகளை கீழே அளித்துள்ளேன்.



அவை எங்கு செல்கின்றன?

நாம் என்ன செய்ய வேண்டும்?


செல்பேசி IMIE ஐ எவ்வாறு கண்டுபிடிப்பது?
எங்கு. எவ்வாறு சேமித்து வைக்கலாம்?

இந்த விவரத்தை திரையாகவே (Screenshot) எடுத்து நம்முடைய கணினியில் சேமிக்கலாம். கூடுதலாக இதை அப்படியே நம்முடைய மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்பி விட்டால் அங்கு மிகவும் சேமிப்பாக இருக்கும். எங்கிருந்து வேண்டுமானாலும் அதை தரவிறக்கம் செய்துக்கொள்ள முடியும்.

கடவுசொற்களை செல்பேசியிலையே சேமித்து வைப்பதில் தவறில்லை. ஆனால் அந்த கோப்பை வேறொரு கடவு எண் மூலம் பூட்டி வைக்கும் வசதி செல்பேசியில் இருந்தால் செய்யலாம். 

இன்னொரு சிஷயம். செல்பேசியை தொலைத்துவிடுவது என்பது நம்மையே தொலைத்துவிடுவதற்கு சமம் என்றும் ஆகவே செல்பேசி திருட்டை வெறும் திருட்டாக இனிமேலும் கருதமுடியாது என்று கனடா நாட்டு உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் ஒன்றில் குறிப்பிட்டிருந்ததையும் இணையத்தில் வாசிக்க நேர்ந்தது. அத்தகைய நிலைப்பாட்டை நம்முடைய நீதிமன்றங்களும் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். சாதாரண திருட்டு என்றால் அதிகபட்சமக மூன்றாண்டுகள்தான் சிறை தண்டனை... ஆனால் செல்பேசி திருட்டுக்கு அதை விடவும் கூடுதல் தண்டனை வழங்கினால் மட்டுமே இத்தகைய திருட்டுகள் குறைய வாய்ப்புள்ளது.

மேலும் ரவி சென்னை திரும்பி வாங்கிய செல்பேசியை திறந்ததுமே ’இது திருடப்பட்ட செல்பேசி....’ என்ற sms வருவதாக கூறியிருந்தேன். அது சாத்தியம்தானா என்று உங்கள் மனதில் எழுந்தால் அதற்கு பதில் கீழே:

சில மாதங்களுக்கு முன்பு தமிழக காவல்துறை DIGICOP  என்ற மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் சில விவரங்கள் கீழே:

1. இதில் செல்பேசி திருட்டை காவல் நிலையம் செல்லாமலேயே பதிவு செய்ய முடியும். இதில் தரப்பட்டுள்ள திரைகளில் (சிலவற்றை கீழே அளித்துள்ளேன்) நம்முடைய செல்பேசியின் அனைத்து விவரங்களையும் பதிவு செய்தால் திருட்டுப் போன செல்பேசியை யார் எடுத்து ஆன் செய்தாலும் அது உடனே காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செய்தியாக சென்றுவிடும். உடனே அங்கிருந்து நான் மேலே குறிப்பிட்டுள்ள குறுந்தகவலை அந்த செல்பேசி வைத்திருப்பவருக்கு சென்றுவிடும். அவரால் அந்த செல்பேசியை மீண்டும் பயன்படுத்தவே முடியாத அளவுக்கும் காவல்துறையால் லாக் செய்துவிட முடியும்.



2. திரு. நடனசபாபதி அவர்கள் இட்ட கருத்துரை: மாதவன் உடனே தன்னுடைய மனைவியின் செல்பேசியிலிருந்து கடவுச் சொற்களை மாற்றியிருந்தால் இந்த இழப்பு நடந்திருக்காதே என்று குறிப்பிட்டிருந்தார். 

ஆனால் அது அத்தனை எளிதல்ல என்று நினைக்கிறேன். இப்போது ஏறத்தாழ அனைத்து வங்கிகளுமே ‘Registered Cellphone' என்று ஒரு கொள்கையை வைத்திருக்கிறார்கள். நாம் கணக்கு துவங்கும்போது எந்த செல்பேசி எண்ணை பதிவு செய்கிறோமோ அதே எண்ணை வைத்துத்தான் பிறகு எவ்வித மாற்றங்களையும் செய்ய முடிகிறது. அதே எண்ணாக இருந்தாலும் கூட அந்த செல்பேசியை மாற்றி புதிதாக ஒரு செல்பேசியை வாங்கினாலே அதில் பழைய செல்பேசியில் நிறுவப்பட்டிருந்த எந்த வங்கி மென்பொருளையும் எளிதில் இயக்கிவிடமுடிவதில்லை. மீண்டும் அந்த மென்பொருளை புது செல்பேசியில் நிறுவி வங்கியுடன் தொடர்புகொண்டு அவர்கள் கூறும் அனைத்து வழிகளையும் பின்பற்றினால் மட்டுமே மென்பொருள் மீண்டும் ஆக்டிவ் செய்யப்படுகிறது. இந்த முறை செபேசிகளில் இயங்கிவரும் மின்சார பகிர்வு, செல்பேசி நிறுவனங்கள் என அனைத்து மென்பொருள்களும் இதே கருத்தின் (Concept) அடிப்படையில்தான் இயங்குகின்றன. மேலும் ஒவ்வொரு வங்கியும் வெவ்வேறான வழிமுறைகளை பின்பற்றுவதையும் காண முடிகிறது. அன்னிய செலவாணி வர்த்தகத்தில் Uniform customs and practices என்கிற அனைத்து வங்கி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்பது குறிப்பிடப் பட்டிருக்கும்... அதே போன்று உள்ளூர் வங்கி வர்த்தகத்திலும் அனைத்து வங்கிகளுக்கும் ஒரே மாதிரியான வழிமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன்...

இந்த குறுந்தொடரை தினமும் வாசித்து கருத்துரை இட்ட அனைத்த நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்மணம் போன்றதொரு திரட்டி இல்லாத சூழலில் பதிவுகளை வாசிப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பது ஒருவகையில் எழுதுபவர்களுக்கு சோர்வை அளித்தாலும் இந்த கதைக்கு வந்திருந்த பெரும்பாலான ஆதரவளிக்கக் கூடிய கருத்துரைகளை சோர்ந்திருப்போரையும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.... எனக்கும் அப்படித்தான்... படிப்பவர்கள் குறைவாக இருந்தாலும்...படிப்பவர்கள் அனைவருமே விவரம் உள்ளவர்கள் என்பதும் ஆறுதல் அளிப்பதை மறுப்பதற்கில்லை...

கொசுறு செய்தி: நேற்றைய செய்தியில் சென்னையில் பல மாதங்களாக இயங்கி வந்த செல்பேசி திருடும் கும்பல் ஒன்றை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த குழுவில் உள்ளவர்களுக்கு தினமும் ரூ.1000/- ஊதியமும் வாரத்திற்கு இரண்டு நாள் விடுமுறையும் வழங்கப்படுகிறதாம். தினமும் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் மூன்று ஸ்மார்ட் செல்பேசிகளையாவது திருடவேண்டும். இந்த குழுவின் தலைவன் பெயரும் ரவி!

என்ன ஒரு coincidence பாருங்கள்.



நன்றி.

03 அக்டோபர் 2019

நடந்தது என்ன,,,? (நிறைவுப் பகுதி)

‘ஏங்க பாத்தா படிச்ச ஆள் மாதிரி இருக்கீங்க. இப்படியா எல்லாத்தையும் ஃபோன்லயே சேவ் பண்ணி வப்பீங்க? இது எப்படி இருக்குன்னா வீட்ட பூட்டிட்டு சாவிய பூட்டு வாயிலயே வச்சிட்டு போற மாதிரி இருக்கு..’ என்று கிண்டலுடன் தன் எதிரில் அமர்ந்திருந்த மாதவனை பார்த்தார் உதவி ஆய்வாளர் கோபால் ‘சரி இப்ப நாங்க என்ன பண்ணணும்கறீங்க?’

டிஆர் மாலுக்கு அருகில் இருந்த அந்த பகுதி காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த மாதவன் கடந்த அரை மணி நேரமாக உதவி ஆய்வாளர் கோபாலின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கி அவஸ்தை பட்டுக்கொண்டிருந்தான்.

‘ஒரு சேஃப்டிக்காகத்தான் சார்.... ரெண்டு மூனு பேங்க்ல அக்கவுண்ட் இருக்கு.... அத்தோட டெபிட் கார்ட்... அப்புறம் க்ரெடிட் கார்டுன்னு இருந்ததால....’

‘ஆமா.... பணம் நிறைய இருந்தா ரெண்டில்ல நாலு பேங்க்ல கூட அக்கவுண்ட் வச்சிக்கலாம்...எல்லா காரடையும் பர்சுல வச்சிக்கலாம்... அதுக்கு வேண்டிய பாஸ்வேர்ட் பின் நம்பர உங்கள மாதிரி செல்ஃபோன சேவ் பண்ணி வச்சிக்கலாம்.... இதுக்கு பதிலா அந்த கார்டுங்க பின்னாலயே எழுதி வச்சிருந்தீங்கன்னா திருடுறவனுக்கு இன்னும் ஈசியா இருந்திருக்கும்ல?’ கோபாலின் குரலில் இருந்த நக்கல் மாதவனை எரிச்சலடைய வைத்தது...

இதுக்குத்தான் இங்க வரவே கூடாதுங்கறது.... இவனுங்க கிட்ட மாட்டிக்கிட்டு அல்லாடுறதுக்குள்ள பேசாம வேற ஒரு ஃபோன வாங்கிகிட்டு போயிறலாம் போல...

‘என்ன மிஸ்டர் மாதவன்... என்ன பதிலையே காணம்?’

‘இல்ல சார் ஆஃபனவர் முன்னாலதான் செக் பண்ணேன் ஃபோன் ஸ்விட்சாஃப்னுதான் வந்துது...’

‘அப்படீன்னா அது அந்த மால்லதான் எங்கயாவது கிடக்குதோ என்னவோ? அங்க போய் கேட்டீங்களா?’

‘ஆமா சார்.. காலையில முதல் வேலையா அங்கதான் போனேன். மேனேஜர பார்த்து ஒரு கம்ப்ளெய்ண்ட் வேற குடுத்துட்டுதான் வ்ரேன்.’

‘மேனேஜர பாத்தீங்களா? அந்தாள் அடாவடிய பேசுவானே?’

நீங்க மட்டும் என்னவாம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்ட மாதவன். ‘ஆமா சார்... எங்க கடையில ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டார்... ஆனா நீங்க கொஞ்சம் சிசிடிவி ஃபுட்டேஜ பாருங்க சார்னு கேட்டேன்...’

‘அதுக்கு அவர் என்ன சொன்னார்?’

‘ஒங்கக் கிட்டல்லாம் காட்ட முடியாது... நீங்க போலீஸ் கம்ப்ளெய்ண்ட் குடுங்க.. அவங்க வந்து கேட்டா காட்டறோம்னு சொல்லிட்டார்... எனக்கு வேற வழி தெரியல அதான் இங்க வந்தேன்...’

‘இருங்க நா ஃபோன் செஞ்சி கேக்கறேன்.’ என்று பதிலளித்த உதவி ஆய்வாளர் கோபால் தன் செல்பேசியை எடுத்து டயல் செய்தார். நீண்ட நேரம் கழித்து எதிர் முனையிலிருந்து மால் மேலாளரின் குரல் கேட்டது.... ;சொல்லுங்க சார்... ஒங்க ஃபோனத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன்..அந்தாள் அங்க வந்துருப்பாரே?

‘ஆமா.... சிசிடிவி ஃபுட்டேஜ்ல ஏதாச்சும் தெரிஞ்சிதா?’

‘ஆமா சார்... அந்தாளு மூளை இல்லாம செல்ஃபோன ட்ராலிக்குள்ள வீசி எறிஞ்சிருக்கான். அது கீழருக்கற ஹோல் வழியா தரையில விழுந்துருக்கு. அத கூட கவனிக்காம அந்தாள் அடுத்த செக்‌ஷனுக்கு போயிருக்கான்... கீழ விழுந்து கிடந்த ஃபோன ஒரு சின்ன பாப்பா எடுத்து பக்கத்துலருக்கற இருந்த கூடைக்குள்ள போடறது தெரியுது.. ஆனா அந்த கூடைய யார் எடுத்துக்கிட்டு போனார்ங்கறது மட்டும் ஃபுட்டேஜ்ல க்ளியரா தெரியல... அத ஒரு சிடியில காப்பி பண்ணி வச்சிருக்கேன்... நம்ம பையன் கிட்ட குடுத்து உடறேன்....’

‘சரி... அனுப்புங்க.’ இணைப்பை துண்டித்துவிட்டு மாதவனைப் பார்த்தார் கோபால்.. அந்தாள் காட்டு கத்தலா கத்தனத இந்தாளும் நிச்சயமா கேட்ருப்பாங்கறது இந்தாள் முகம் போற போக்க பாத்தால தெரியுதே..

‘அவர் சொல்றது ஒங்களுக்கு கேட்ருக்குமே?’

மாதவன் ஆமாம் என்பது போல் தலையை அசைத்தான்.

‘அப்போ ஃபோன் மாலுலருந்து வெளியில போயிருக்கு....ஒங்க நம்பர சொல்லுங்க... டயல் பண்ணி பாக்கலாம்...’

மாதவன் சொல்ல சொல்ல கோபால் டயல் செய்துவிட்டு காத்திருந்தார்.... check the number you have dialled... என்று வந்தது.....

கோபால் தன் எதிரில் அமர்ந்திருந்த மாதவனை எரிச்சலுடன் பார்த்தார். ‘என்னமோ switch off னு வந்துதுன்னு சொன்னீங்க?’

‘ஆமா சார்... அந்த மால் ஆள் கிட்டருந்து ஃபோன வாங்கி நாந்தான் டயல் பண்ணேன்.... இப்ப என்ன சொல்லுது சார்?’

‘அப்படி ஒரு நம்பரே இல்லேங்குது.... எடுத்தவன் சிம் கார்ட கழட்டினாத்தான் இப்படி பதில் வரும்...’

‘இருக்க முடியாது சார்... நா விட்டப்போ அது டெட் ஆகியிருந்தது... அந்த எரிச்சல்ல தான் ட்ராலிக்குள்ள போட்டேன்...’

‘சரி.. அது போவட்டும்.. ஒங்க ஃபோனோட IMIE நம்பர் தெரியுமா?’

மாதவன் திருதிருவென விழித்ததிலிருந்தே அது அவனிடம் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது... எழுந்து நின்றார்... ‘சரி.. நீங்க கிளம்புங்க... ஒங்க செல்லோட IMIE நம்பரோட சப்மிட் பண்ணாத்தான் புகாரையே ரிஜிஸ்டர் பண்ணிக்குவோம்... அது இல்லன்னா தலைகீழா நின்னாலும் ஒங்க ஃபோன ட்ரேஸ் பண்ணவே முடியாது... நீங்க போயி வீட்ல எங்கயாச்சும் எழுதி வச்சிருக்கீங்களான்னு பாருங்க... அப்புறமா வந்து கம்ப்ளெய்ண்ட் வாசல்லருக்கற ரைட்டர் கிட்ட குடுத்துட்டு போங்க...ஹூம்...’

மாதவனும் வேறு வழியின்றி எழுந்து நின்றான். அந்த நேரம் பார்த்து ஒரு காவலர் வந்து ‘சார் இந்த சிடிய டிஆர் மால் பையன் வந்து குடுத்துட்டு போனான் சார்...’ என்று ஒரு சிடியை நீட்ட கோபால் அதை வாங்கிக்கொண்டு மாதவனை பார்த்தார். ஒக்காருங்க என்று சைகை காட்டிவிட்டு மேசை மீதிருந்த தன் கணினியில் அதை இட்டு பார்த்தார்.

சற்று முன்னர் டிஆர் மாலின் மேலாளர் பார்த்த அதே காட்சிகள் திரையில் தெரிய....’இடியட்ஸ்... எத்தன தடவ சொன்னாலும் இந்த மால்காரங்க கேக்க மாட்டேங்கறானுங்களே... கடைக்குள்ள ஹெல்மெட், தொப்பி போட்டுக்கிட்டு வர விடாதீங்கன்னு எத்தன தடவ சொல்லியிருக்கோம்....’ என்று எரிச்சலுடன் பேசியவாறே மீண்டும் செல்பேசியை எடுத்து டயல் செய்தார்.

எதிர் முனையில் மால் மேலாளர் எடுத்ததும் ‘சார் எத்தன வாட்டி சொல்றது? இப்படி தொப்பியோடயோ இல்ல ஹெல்மெட்டோடயோ யாரையும் மாலுக்குள்ள அலவ் பண்ணாதீங்கன்னு.... இப்படி ஒரு சொத்த ஃபுட்டேஜ வச்சிக்கிட்டு நாங்க என்ன பண்றது’ என்று உரக்கவே இரைந்தார்.

‘நாங்க சொன்னாலும் கஸ்டமர்ஸ் கேக்க மாட்டேங்கறாங்க சார்..நீங்க ஒன்னு பண்ணுங்க...எனக்கு ரைட்டிங்ல ஒரு லெட்டர் அடிச்சி அனுப்புங்க... அத நாங்க கடை முழுசும் டிஸ்ப்ளே பண்ணிடறோம்.. இதுக்கு மேல எங்களால ஒன்னும் பண்ண முடியாது.. சாரி..’ என்றவாறு கோபாலின் பதிலுக்கு காத்திராமல் இணைப்பை துண்டிக்க... ‘சரியான அகராதி புடிச்சவன்...’என்றவாறு மாதவனை பார்த்தார். ‘இங்க வந்து பாருங்க... இந்தாள நேத்து பாத்த ஞாபகம் இருக்கா?’

மாதவன் எழுந்து உதவி ஆய்வாளரின் இருக்கைக்கு பின்னால் நின்று கணினி திரையை பார்த்தான். இவன் நம்ம பின்னால நின்னுக்கிட்டிருந்தவனாச்சே....’ஆமா சார்... இந்தாளு எனக்கு பின்னாலதான் நின்னுக்கிட்டிருந்தான்... என் ஃபோன கூட சூப்பரா இருக்கு என்ன மாடல்னு கேட்டான்... அப்ப இவன் கையிலதான் ஃபோன் இருக்கு போலருக்கு சார்..’``

‘இருந்து என்ன பண்ண? அவன் முகமே தெரியலையே... இதுக்குத்தான் படிச்சி படிச்சி சொல்றோம்... இந்த மாதிரி முகத்த மூடறா மாதிரி ஹெல்மெட்டோ தொப்பியோ போட்டுக்கிட்டு வர்றவங்கள உள்ள விடாதீங்கன்னு... கேட்டாத்தான?’

மாதவன் மீண்டும் தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தான்... இவன் முன்னாலதான் நாம ஃபோனையே ஓப்பன் பண்ணி சாமான்க லிஸ்ட்ட பாத்தோம்... ஒருவேள எண்ட்ரி கோட அடிச்சதையும் கவனிச்சிருப்பானோ.... தெரியலையே....

‘என்ன மாதவன்... என்ன யோசனை?’

இவர் கிட்ட சொல்லி இன்னும் வாங்கி கட்டிக்கவா? ஒன்றும் இல்லை என்பது போல் தலையை அசைத்தான்.

‘அந்தாள் சிம் கார்ட ரிமூவ் பண்ணதிலருந்து என்ன தெரியுது?’

இல்லை என்பது தலையை அசைத்தான் மாதவன்.

‘அந்தாள் ஒங்க ஃபோன ரீசார்ஜ் பண்ணி ஓப்பன் செஞ்சிருக்கான்.... ஃபோன தொறக்கறதுக்கு வெறும் ஸ்வைப் மட்டுந்தான் வச்சிருந்தீங்களா.. இல்ல பேட்டர்ன் ஏதாச்சும் இருக்கா?’ என்றவர் அவருடைய கேள்விகளுக்கு அவரே பதிலும் அளித்தார். ‘வச்சிருந்தாலும் அதல்லாம் இப்ப மேட்டரே இல்ல...அத தொறந்து குடுக்கறதுக்குன்னே நிறைய பேர் அலையறானுங்க....’

என்ன பதிலளிப்பது என தெரியாமல் அமர்ந்திருந்த மாதவனை கோபாலின் அடுத்த கேள்வி உரைய வைத்தது.

‘மூனு பேங்க்ல அக்கவுண்ட்ஸ் வச்சிருக்கேன்னு சொன்னீங்களே... சுமாரா எவ்வளவு பேலன்ஸ் வச்சிருப்பீங்க?

இந்தாள் கிட்ட சொல்லி என்ன ஆவப்போவுது? லட்சத்துக்கு மேலன்னு சொன்னா... நம்ம கிட்டருந்து எவ்வளவு கறக்கலாம்னு நினைப்பானோ... வேணாம்.... இவன் கிட்ட சொல்லி... நாள பின்னால விசாரணைன்னு சொல்லி வீடு வரைக்கும் வந்து ஷாமிலிக்கி ஃபோன் தொலைஞ்ச விஷயம் தெரிஞ்சா காலாகாலத்துக்கு அத சொல்லி சொல்லியே சாவடிப்பா....

‘என்ன கேல்குலேட் பண்றீங்களா?’

‘பெருசா ஒன்னும் இல்ல சார்... மினிமம் பேலன்ஸ்தான் மூனுலயும் இருக்கும்... மிஞ்சி போனா பத்து பதினஞ்சி..’ 

அந்த  பொய்யால் எத்தனை பெரிய இழப்பு தனக்கு ஏற்படவுள்ளது என்பதை அப்போது அவன் உணர்ந்திருக்கவில்லை... ‘டெபிட் கார்ட் இல்லாம அவனால வித்ட்றா பண்ண முடியாதே சார்..’

‘அதுவும் சரிதான்.... நீங்க போயி ஒங்க ஃபோனோட IMIE நம்பர் இருக்கான்னு பாருங்க... இல்லன்னா கம்ப்ளெய்ண்ட் குடுக்கறதுல எந்த யூசும் இல்ல... இதனால ஒங்களுக்கு ஃபோன் போச்சேங்கறத தவிர மானிடரியா பெரிய லாஸ் எதுவும் இல்லாததால.... அவனெ ட்ரேஸ் பண்றதுல பெருசா எதுவும் கிடைக்க போறதில்ல.... என்ன சொல்றீங்க?’

மாதவன் அப்போதே அங்கிருந்து போய் தன்னுடைய வங்கி கணக்குகளின் இருப்பை செக் செய்தால் தேவலை என்று தோன்றவே எழுந்து நின்றான்.. ‘சரி சார்.. தேடி பார்த்துட்டு வரேன்...’

அவன் வாசலை கடந்து மறையும் வரை காத்திருந்த கோபால்....’டூப் அடிக்கிறான்.. பேலன்ஸ் பெரிசா வச்சிருப்பான்னுதான் நினைக்கேன்... இல்லன்னா அவன் மூஞ்சி அப்படி பேயறைஞ்சா மாதிரி இருக்காது...எங்க நம்ம கிட்ட ஆக்சுவல் பேலன்ஸ சொன்னா எதையாச்சும் கேப்பமோன்னு நினைச்சிருப்பான்.... எப்படியோ தொலையட்டும்....’

அவருக்கு அருகில் நின்றிருந்த காவலர்கள் அவருடைய பேச்சுக்கு எப்படி பதிலளிப்பது என்பது தெரியாதது போல் அவரை பார்த்தனர்...

‘இந்தாள் அவன் ஃபோனோட IMIE நம்பர் இல்லாம வந்தா புகார வாங்க கூடாது... என்ன புரியுதா?’

சரி சார் என்பதுபோல் காவலர்களை தலையை அசைத்தனர்....’வெளீயில நேத்து வந்த அந்த குடும்ப தகராறு ஆளுங்க வந்துருக்காங்க சார்.’என்றார் ஒரு காவலர்.

‘சரி வரச்சொல்லு... காலையில யார் முகத்துல முளிச்சனோ அந்தாளோட ரெண்டு மணி நேரம் வேஸ்ட்டா போயிருச்சி.... முட்டா பசங்க.. படிச்சவனுங்களே இப்படி முட்டாத்தனமா இருந்தா என்னத்த செய்யிறது?’ என்று முனகியவாறே தன் இருக்கையில் சென்று அமர்ந்தார் கோபால்.

*************

காவல் நிலையத்தை விட்டு வெளியேறி சிறிது தூரம் சென்ற மாதவன் சாலையின் எதிர்புறத்தில் இருந்த வங்கி ஏடிஎம் அறைக்குள் நுழைந்து பர்சை எடுத்து ஒவ்வொரு டெபிட் கார்டையும் பயன்படுத்தி இருப்பை சோதிக்கலானான்....

ஆனால் அவன் இருந்த பதட்டத்தில் அவனிடமிருந்த எந்த டெபிட் கார்டுடைய பின் நம்பரும் சரியாக நினைவுக்கு வரவில்லை... முதல் இரண்டு முயற்சிகளும் தோல்வியில் முடிய மூன்றாவது முறையும் தவறாக அடித்தால் அந்த அட்டை அன்று முழுவதும் முடக்கப்பட்டுவிடும் என்பது அவனுக்கு தெரியும் என்பதால் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

அவனுடைய செல்பேசியில் சேமித்து  வைத்திருந்த கடவு எண்களின் கோப்பின் நகல் ஒன்றை மடிக்கணினியில் சேமித்து வைத்தது நினைவுக்கு வர ஏடிஎம் வாசலில் வேறு யாராவது காத்திருக்கிறார்களா என்று வாசல் கண்ணாடி வழியாக பார்த்தான்.

நல்ல வேளையாக யாரும் இல்லை. உடனே முதுகில் மாட்டியிருந்த பையில் இருந்த மடிக்கணினியை எடுத்து ஆன் செய்து தன்னை ஒரு நிமிடம் நிதானப்படுத்திக்கொண்டு தேடினான்... ஐந்தாறு நிமிடங்களுக்குப் பிறகு அந்த கோப்பைக் கண்டுபிடிக்க முடிந்தது.

பிறகு ஒவ்வொரு அட்டையையும் பயன்படுத்தி சோதிக்க துவங்கினான். முதல் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரியவே பதட்டத்துடன் தன் கையில் மீதமிருந்த கார்டுகளையும் பயன்படுத்தி சோதனை செய்தான். இறுதியில் அவனுடைய மூன்று வங்கி கணக்குகளிலிருந்து மொத்தமாக எழுபத்தையாயிரம் எடுக்கப்படிருப்பதை பார்த்து அதிர்ந்தே போனான்..... அடப்பாவி.... காலையிலயே செக் பண்ணணும்னு தோனாம போச்சே....  நாம வேற மினிமம் பேலன்ஸ்தான் இருக்கும்னு சொல்லிட்டமே... இப்ப மறுபடியும் போலீஸ்ல போயி சொன்னா நம்புவாங்களா?

அதுவுமில்லாமல் டெபிட் கார்ட் இல்லாம எப்படி பணத்த எடுத்திருப்பான்? பேங்க் டு பேங்க் டிரான்ஸ்ஃபர் பண்ணியிருப்பானோ என்று நினைத்தவனுக்கு தன் செல்பேசியில் வங்கிகளின் மொபைல் பேங்கிங் ஆப்கள் இட்டு வைத்திருந்தது நினைவுக்கு வந்தது. எடுத்தவன் படா கேடியா இருப்பான் போலருக்கே.... எந்த பேங்குக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருப்பான்..? இத எப்படி கண்டுபிடிக்கிறது? நெட் பேங்கிங் வழியா கண்டுபிடிச்சிறலாமே? ஆனா அதுக்கு நெட் கனெக்‌ஷன் வேணுமே?

அவனுடைய கணினியில் இணைய வசதி இல்லை... தன் செல்பேசியிலுள்ள இணைப்பை கணினியுடன் ஷேர் செய்துதான் இணையத்தை வலம் வருவான்.  அந்த செல்பேசி இல்லாத சூழலில் அலுவலகத்திற்கு சென்றால்தான் அது சாத்தியமாகும்... அப்படியே கண்டுபிடிச்சாலும்  போலீஸ் ஹெல்ப் இல்லாம அவனெ எப்படி புடிக்க முடியும்? நாம போய் கேட்டாலும் அந்த பேங்க் ஆளுங்க ஒரு இன்ஃபோவும் குடுக்க மாட்டானுங்களே....

கடவுளே எதுக்கு இந்த சோதனை எனக்கு? ரெண்டு லட்சமா சேர்ந்ததும் மொத்தமா ஊருக்கு அனுப்பி கல்யாண கடன அடைச்சிருங்கம்மான்னு சொல்லலாம்னு நினைச்சமே இப்படி அம்போன்னு பாதிய பறிகுடுத்துட்டு நிக்கறமே... இது மட்டும் ஷாமிலிக்கு தெரிஞ்சா என்ன ஆவறது....?

மேற்கொண்டு என்ன செய்வது என்பது தெரியாமல் அங்கேயே சிலையாய் நின்றான் மாதவன்...

டாக்டர் கிட்டயும் வக்கீல் கிட்டயும் பொய் சொல்லக் கூடாதுன்னு சொல்வாங்களே? அதுல போலீஸ்கிட்டயும் பொய் சொல்லக் கூடாதுன்னு சேத்துக்கணும் போல ....

அவன் காவல் ஆய்வாளரிடம் உண்மையை கூறியிருந்தால் எந்த கணக்குக்கு தொகை மாற்றப்பட்டிருந்தததோ அந்த கணக்கு விவரத்தை வைத்தே கள்வனை பிடித்திருக்கலாம்... எடுத்தவனுடைய தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தாலும் அவனுடைய புகைப்படம் நிச்சயம் அதிலிருந்து கிடைத்திருக்கும். .அதை வைத்தே சிறிது காலதாமதமானாலும் அவனை பிடித்திருக்கலாம்.

ஆனால் மாதவனுக்கு பணம் களவு போனதை விடவும் எங்கே அது தன் மனைவிக்கு தெரிந்துவிடுமோ என்கிற அச்சமே அதிகமாய் வாட்டி எடுத்ததால்...

போனது போட்டும்... சம்பாதிச்சிக்கலாம்... ஆனா ஷாமிலிக்கி மட்டும் தெரிஞ்சா நம்ம நிம்மதியே போயிரும்.... வாழ்நாள் முழுசும் இத சொல்லியே டார்ச்சர் பண்ணிருவா... வேணாம்... இது நமக்குள்ளவே இருக்கட்டும்..... எல்லாம் என் தலையெழுத்து என்று தன்னையே நொந்தவாறு சாலையில் இறங்கி நடந்தான் மாதவன்...

விநாச காலே விபரீத புத்தி அதாவது விதி  கெட்டுப்போனால் மதி கெட்டுப் போகும் என்பார்கள். மாதவனின் விஷயத்தில் அது உண்மையாகிப்போனது.

நிறைவு...

இந்த சிறுகதையின் முடிவுரை நாளை...

02 அக்டோபர் 2019

நடந்தது என்ன 5

‘சார்... நீங்க சொல்றா மாதிரி இங்க எதுவும் ஃபோன் கிடைக்கல சார்... நீங்க வேணா மேனேஜர் வர்ற வரைக்கும் வெய்ட் பண்ணி பாருங்க... அவர் நினைச்சா எங்க ஆளுங்க எல்லாரையும் கூப்ட்டு விசாரிப்பார்...’ என்றான் டிஆர் மால் கடை ஊழியர். 

‘அவர் எப்ப வருவார்?’ என்றான் மாதவன் எரிச்சலுடன்.

‘பத்து மணி ஆயிரும் சார்... எதுக்கும் நீங்க போய்ட்டு பத்து பத்தே காலுக்கு வந்து பாருங்க.’ கவுண்டரில் நின்றிருந்தவன் தன்னுடைய அலுவலை கவனிக்க துவங்கினான். மாதவன் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று சிந்திக்கலானான். அதுக்குள்ள போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய்ட்டு வந்துறலாமா?

‘இந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷன் எங்க இருக்குன்னு தெரியுமா?’ என்றான் சற்று முன் தன்னிடம் பேசியவனிடம்.

‘இப்படியே நேரா போயி ரைட்ல திரும்பி கேளுங்க.. சொல்வாங்க.’

அதற்குள் மாதவனின் மனது இது வேணுமா என்றது... போலீஸ் ஸ்டேஷனுக்கு போனா உடனே எதுவும் ஆகப்போறதில்ல... இந்த மேனேஜரே பத்து மணிக்குத்தான் வருவான்னா... அங்க இன்ஸ்பெக்டர் நிச்சயம் அதுக்கப்புறம்தான் வரப்போறார்... எதுக்கும் வெய்ட் பண்ணி இவர பாத்துட்டே அங்க போவோம்... ஒருவேளை ஃபோன கடை ஆள் யாராச்சும் எடுத்து மேனேஜர் கிட்ட குடுத்திருந்தா போலீசுக்கு போறத அவாய்ட் பண்லாமே.... அங்க போயி தேவையில்லாம அவனுங்க கேக்கற அடாவடி கேள்விக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்க வேணாமே...

சட்டென்று நினைவுக்கு வந்தவனாய்... கவுண்டரை நெருங்கி ‘ஒங்க ஃபோன்லருந்து என் செல்ஃபோனுக்கு டயல் பண்ண முடியுமா?’ என்றான்...

கவுண்டரில் நின்றிருந்தவன் எரிச்சலுடன் பார்த்தான். ‘இந்தாங்க நீங்களே டயல் பண்ணுங்க....’

மாதவன் பதட்டத்துடன் அதை வாங்கி அவசர அவசரமாக டயல செய்தான். ‘Switched off' என்று பதில் வந்ததும் நிம்மதியுடன் திருப்பிக் கொடுத்தான். ’நா இங்க விட்டுட்டு போனப்போ ஆஃபாயிருந்தா மாதிரியேத்தான் இப்பவும் இருக்கு.... அதனால இங்க எங்கயோதான் அது கெடக்கணும்... நா வேணா தேடி பாக்கலாமா?’

‘எங்கன்னு சார் பார்ப்பீங்க? மொத்தம் இருபதினாயிரம் சதுர அடி ஏரியா இது... வொர்க்கர்ஸ் எல்லாம் சாமான்கள அடுக்கிக்கிட்டு இருக்கற நேரம் வேற... இங்க இருந்துருந்தா காலையில க்ளீன் பண்ண ஹவுஸ் கீப்பிங் ஆளுங்க கையில கிடைக்காம இருந்துருக்காது... அவங்க எடுத்தாலும் ஒன்னும் செஞ்சிக்க முடியாது... ஏன்னா எல்லா ஏரியாவும் கேமரா கவரேஜ் இருக்கு....’

மாதவன் உடனே, ‘அப்படீன்னா நேத்து ஃபோன் விழுந்ததையும் ஏதாச்சும் ஒரு கேமரா கேப்சர் பண்ணியிருக்கலாம் இல்ல? அத பாக்க முடியுமா?; என்றான்.

‘அதுக்கு மேனேஜர் வரணும்... ஒன்னு வெளியில வெய்ட் பண்ணுங்க... இல்லன்னா போய்ட்டு அப்புறமா வாங்க...’ பணியாள் கோபத்துடன் தன் இருக்கைக்கு திரும்பிச் செல்ல மாதவன் வேறு வழியின்றி கடையிலிருந்து வெளியேறினான்.

********

ரவி மால் இயங்கிவந்த பகுதியை அடைந்தபோது பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் மிகவும் குறைவாக இருந்ததை கவனித்தான். ஆனாலும் அங்கு வாகனத்தை நிறுத்தாமல் மாலை ஒட்டியிருந்த சாலையில் திரும்பி வாகனத்தை நிறுத்தினான். அது ஒரு வர்த்தக பகுதியாக இருந்ததாலும் காலை பத்து மணிக்கு மேல்தான் பல கடைகளும் திறக்கப்படுவது வழக்கம் என்பதாலும் பல கடைகள் மூடிக்கிடந்தது அவனுக்கு வசதியாகப் போய்விட்டது. சாலையிலும் அவ்வளவாக ஆள்நடமாட்டாம் இல்லை. கண்காணிப்பு கேமராக்கள் ஏதும் உள்ளனவா என்று சாலையின் இருதிசையிலும் பார்வையை செலுத்தினான். ஓரிரண்டு கடைகளைத் தவிர மற்ற எவற்றிலும் காமரா பொருத்தபடாமலிருந்ததை கவனித்தான்.

காமரா பொருத்தப்படாமலிருந்த கடைகளில் ஒன்றின் படிகட்டுகளில் அமர்ந்து மாதவனின் செல்பேசியை எடுத்து ஆன் செய்தான். அவன் என்ன செய்ய போகிறான் என்பதை அறிந்த அவனுடைய மனது மீண்டும் அவனை எச்சரித்தது.

எதுக்கும் இன்னொரு தரம் யோசி.... நீ எந்த அக்கவுண்ட்டுக்கு மாத்தறியோ அதுல ஒன்னோட அட்றஸ் மட்டுமில்லாம ஒன்னோட செல்ஃபோன் நம்பரும் இருக்கும்.. வீட்ட மாத்திட்டே சரி.... ஃபோன் நம்பர என்ன பண்ணுவே...? யூஸ் பண்ணாம இருக்க முடியுமா ஒன்னால? அத வச்சே ஒன்னெ போலீஸ் புடிச்சிருவாங்களே? என்று குடைந்த மனதை அடக்கினான். ‘என் செல்போன யூஸ் பன்னாத்தான? அதான் ராஜி  போறப்போ ஒன் ஃபோன நீயே வச்சிக்கோன்னு எறிஞ்சிட்டு போய்ட்டாளே? கொஞ்ச நாளைக்கி அத யூஸ் பண்ணிக்குவோம்... எத்தன நாளைக்கி போலீஸ் தேடுவாங்க? மிஞ்சிப் போனா மூனு நாலு மாசம்... அதுக்கப்புறம் வேற கேஸ்ல அவங்க கவனம் போயிரும்.. 

தவறு செய்ய வேண்டும் என்று துணிந்தவர்கள் அதை நியாயப்படுத்த எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் என்பது ரவியின் விஷயத்தில் உண்மையானது. 

குடைந்ததெடுத்த மனசாட்சியை பொருட்படுத்தாமல் முந்தைய தினம் அவன் செய்ய நினைத்திருந்த காரியத்தில் முனைப்பாக இறங்கினான்.

அவன் நினைத்ததை செய்து முடிக்க சரியாக இருபது நிம்டங்கள் எடுத்தன. முந்தைய நாள் இரவில் அவனுடைய கணக்கு விவரத்தை பதிவு செய்துக்கொள்ள மறுத்த வங்கிகள் இப்போது எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் செய்துக்கொள்ள அனுமதித்தன.

IMPS (Immediate Payment Service)முறையில் பணத்தை அவனுடைய கணக்குகளுக்கு மாற்றினான். அடுத்த அரை மணி நேரத்தில் மூன்று வங்கிகளிலிருந்தும்  எழுபத்தையாயிரம் ரூபாய் வந்து சேர்ந்தது.

இத உடனே வித்ட்றா பண்ணணும்.... அது இந்த ஏரியாவுல வேணாம்... ஒருவேளை கேமராவுல நம்ம மொகம் தெரிஞ்சி அத வச்சி அக்கம்பக்கத்துல விசாரிச்சா எவனா ஒருத்தன் நம்ம ஹைட்ட (height) வச்சே அடையாளம் சொல்லிறுவான்... கொஞ்ச தூரம் போய் பாக்கலாம்..

***********

ஏறத்தாழ அதே நேரத்தில் மாலுக்குள் மீண்டும் நுழைந்த மாதவன் ‘மேனேஜர் வந்துட்டாருங்களா?’ என்றான் அவனை எதிர்கொண்ட முதல் பணியாளிடம்..

‘இப்பத்தான் வந்தார்.... ஆனா மால் முழுசும் ரவுண்ட்ஸ் போய்ட்டு பத்தரைக்கு மேலத்தான் கேபினுக்கு வருவார்... நீங்க வேணும்னா அஞ்சாவது மாடியில போய் வெய்ட் பண்ணுங்க...’

மாதவன் மணியை பார்த்தான். மணி பத்தரை ஆகியிருந்தது... என்ன ஆளுங்கடா.. என்று சலித்துக்கொண்டான்... வேறு வழியின்றி ஐந்தாவது மாடியை அடைந்து அங்கு அமர்ந்திருந்த பெண்ணிடம் மேனேஜரை பார்க்க வேண்டும் என்றான்...

‘ரவுண்ட்ஸ் போயிருக்காரு... வெய்ட் பண்ணுங்க..’

மாதவன் முனகியவாறே அங்கிருந்த இருக்கைகள் ஒன்றில் அமர்ந்து காத்திருந்தான்.

****

ரவி அங்கிருந்து கிளம்பி பத்து நிமிட தூரம் சென்றதும் மாதவன் கணக்கு வைத்திருந்த வங்கி ஏடிஎம்களை கண்டதும்.. இங்கயே நம்ம வேலைய முடிச்சிறலாம்... ஆனா ஒரு டைம்ல பத்தாயிரத்துக்கு மேல எடுக்க முடியாது போலருக்கே....எதுக்கும் ட்ரை பண்ணி பாக்கலாம்..

அவ்ன் நினைத்தது போலவே ஒரு தவணையில் பத்தாயிரம்தான் எடுக்க முடிந்தது. ஆனாலும்  இரண்டு வங்கிகளிலும் இருந்து ஒரு நாளுக்கு தலா முப்பதாயிரம் வரையிலும் எடுக்க முடியும் என்பது அவனுக்கு தெரியும். அந்த வங்கியின் ஏடிஎம்மில் அவனைத் தவிர வேறு யாரும் காத்திருக்காததும் அவனுக்கு வசதியாகப் போனது. சலிப்படையாமல், பதட்டப்படாமல் ஆறு முறை இரண்டு வங்கிகளின் டெபிட் கார்டுகளையும் பயன்படுத்தி அறுபதாயிரத்தை எடுத்துக்கொண்டான். அவன் எடுத்த தொகையின் பெரும் பகுதி இரண்டாயிரம் நோட்டுகளாகவே இருந்ததைக் கண்டதும் ‘வசதியா போயிருச்சி...’ என்று நினைத்தான்.. .

நல்ல வேளை, ஆளுங்க வர்றதுக்குள்ள நாம வேலைய முடிச்சிட்டோம் என்று எண்ணியவாறே தலையில் அணிந்திருந்த தொப்பியை முகம் மறையும் வரையிலும் இழுத்துவிட்டுக்கொண்டு விரைந்து சென்று வாகனத்தில் ஏறி அங்கிருந்து அகன்றான்....

வேறு எங்கும்  நிற்காமல் மேன்ஷனை அடைந்து அறையிலிருந்த தன்னுடைய பொருட்களில் ஒரேயொரு கைப்பையை மட்டும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான். வாகன சாவியை சுவரில் இருந்த ஆணியில் தொங்கவிட்டான். ‘ரிசெப்ஷன்ல குடுக்க வேணாம்... மோகன் வர்றப்ப இத பாத்து எடுத்துக்குவான்.’

நல்ல வேளையாக அவன் வாசலுக்கு வரும்போது ரிசப்ஷனில் யாரும் இல்லை.

ரவி சாலையில் இறங்கி சிறிது தூரம் நடந்து சென்று மாநகர பேருந்து நிறுத்ததில் காத்திருந்தான். இங்கருந்து ஆட்டோவுல போனா நாம எங்க போறோம்கறத போலீஸ் ஈசியா தெரிஞ்சிக்க வாய்ப்பிருக்கே...

தன்னால் முடிந்தவரை தன்னை பின்னால் காவல்துறை ட்ரேஸ் செய்ய முடியாமல் செய்துவிட்டோம் என்ற திருப்தியில் அடுத்த சில நிமிடங்களில் வந்து நின்ற பேருந்தில் ஏறினான்.

எங்கு செல்வது என்ற எவ்வித இலக்கும் இல்லாமல் துவங்கியது அவனுடைய பயணம்....

*******

‘சார் உங்கள மேனேஜர் வரச்சொன்னார்’

மாதவன் உடனே எழுந்து எதிரிலிருந்த மேலாளர் அறைக்குள் நுழைந்தான்.

‘என்ன விஷயமா என்னெ பாக்கணும்னு சொன்னீங்க?’ என்ற மேலாளரிடம் தான் வந்த விவரத்தை பதட்டத்துடன் சொல்லி முடித்தான்.

‘அப்போ எத்தன மணி இருக்கும்?’

‘ராத்திரி ஒன்பது மணி இருக்கும் சார்.’

‘சரி நா எதுக்கும் வொர்க்கர்ஸ் கிட்ட விசாரிச்சி வைக்கிறேன்... நீங்க எதுக்கும் போலீஸ்ல ஒரு கம்ப்ளெய்ண்ட் குடுத்துருங்க.’

மாதவனுக்கு எரிச்சல் வந்தது. ‘சார் ஒங்க கடையில இருக்கற சிசிடிவி ஃபுட்டேஜ பார்த்தா யாராச்சும் எடுத்திருந்தாலும் தெரியுமில்ல?’

மேலாளர் அவனுக்கு பதிலளிக்காமல் எழுந்து நின்றார். ‘அத நாங்க பாத்துக்கறோம்... நீங்க போலீஸ்ல கம்ப்ளெட்ண்ட் குடுக்கறதுதான் பெட்டர்... அவங்க வந்து விசாரிக்கறப்போ வீடீயோ ஃபுட்டேஜ காட்டிக்கறோம்.. வேணும்னா நீங்க ஒரு கம்ப்ளெய்ண்ட் எழுதி வெளியில இருக்கற வொர்க்கர் குடுத்துட்டு போங்க...’

அவனுடைய பதிலுக்கு காத்திராமல் அவர் அறையை விட்டு வெளியேற வேறு வழியின்றி மாதவனும் எழுந்து வெளியில் வந்து அங்கு அமர்ந்திருந்த பணியாளிடமே ஒரு வெள்ளைத்தாளை பெற்று ஒரு புகாரை எழுதிக்கொடுத்துவிட்டு வெளியேறினான். 

******

அவன் மின்தூக்கியில் ஏறி மறைந்ததும் மால் மேலாளர் கண்காணிப்பு கேமாரா திரைகள் மேற்பார்வையிடும் அறைக்குள் நுழைய அங்கு பணியில் இருக்க வேண்டியவர்கள் இருக்கையில் இல்லாமல் இருப்பதை கவனித்ததும் எரிச்சலுடன் வெளியில் வந்து, ‘ஏன் இங்க யாரும் இல்ல?; என்று உரக்க கத்தினார்.

அடுத்த சில நொடிகளில் ஒரு அறையில் இருந்து இரண்டு பணியாட்கள் ஓடி வந்தனர்... ‘பாத்ரூம் போயிருந்தோம் சார்...’

‘ரெண்டு பேருக்கும் ஒன்னாவா வரும்?’ என்று எரிந்து விழுந்தார் ‘ எப்பவும் ஸ்க்ரீன் முன்னால ஒரு ஆளாவது இருக்கணும்னு சொல்லியிருக்கேன்ல?’

’சாரி சார்....’

‘இத சொல்லி சொல்லி கடுப்பேத்தாதீங்க போய் வேலைய பாருங்க... இன்னொரு தரம் இந்த மாதிரி நடந்துது.....’ என்றவாறு மீண்டும் காமரா திரைகள் இருந்த அறைக்குள் நுழைந்த மேலாளர்.... ‘நேத்து க்ரவுண்ட் ஃப்ளோர்ல ரிக்கார்ட் பண்ண சிடிய எடுத்துக்கிட்டு என் ரூமுக்கு ஒரு ஆள் வாங்க....’

பணியாள் ஒருவர் தயக்கத்துடன் அவரை பார்த்தான்..’டைம் ஸ்லாட் ஏதாச்சும் இருக்கா இல்ல ஃபுல்லா வேணுமா சார்?’

‘ராத்திரி ஒன்பது மணியிலருந்து கடை மூடற வரைக்கும் போதும்... க்விக்.’ அவர் வெளியேறி தன் அறையை நோக்கி சென்றார்.

‘என்னடா காலையிலயே மிலிட்டரி இந்த கத்து கத்துது?’ என்றவாறே இருவரில் ஒருவன் முந்தையை தினம் ரெக்கார்ட் செய்து சேமித்து வைக்கப்பட்டிருந்த சிடிக்கள் இருந்த ட்ராயரை திறக்க அடுத்தவன் சிரித்தவாறே ‘தெரியலையே’ என்றான்.

அந்த மாலில் இருந்தவர்கள் மேலாளரின் கண்டிப்பானவர் என்பதால் மிலிட்டரி என்று பெயர் வைத்திருந்தார்கள்.

*******

பணியாள் கொண்டு வந்து கொடுத்த சிடியை தன் கணினியில் இட்டு ஆய்வு செய்த மேலாளர்  சற்று முன்பு தன்னிடம் புகார் அளிக்க வந்தவர் தெரிகிறாரா என்று பார்த்தார்.

வாசலில் இருந்து ஒவ்வொரு பகுதியாக நகர்ந்தவர் பால், தயிர் இருந்த பகுதியில் மாதவனைப் போன்ற ஒரு உருவத்தைக் கண்டதும் ஜூம் செய்து பார்த்தார். ‘இந்த ஆள்தான்...’

மாதவன் தன் செல்பேசியை ஆன் செய்வதும் அதை தொடர்ந்து தன் அருகில் நின்றிருந்தவரிடம் உரையாடுவதும் பிறகு அங்கிருந்து நகர்ந்து அடுத்திருந்த மளிகை பொருட்கள் பகுதிக்குள் நுழைவதும் அங்கு தன்னுடைய செல்பேசியை ட்ராலிக்குள் எறிவதும் தெரிந்தது...

கேமராவை மீண்டும் ஜூம் செய்து பார்த்தார். மாதவன் வீசி எறிந்த செல்பேசி ட்ராலியின் அடியில் இருந்த ஒட்டை வழியாக தரையில் விழுவதும் தெரிந்தது. ஆனால் அதை யாரும் எடுக்கவில்லை என்பதையும் கவனித்தார். 

இந்த ஓட்ட ட்ராலிய மாத்துங்கடான்னு எத்தன தரம் அந்த சூப்பர்வைசர் கிட்ட சொல்லியிருக்கேன்.... ?அப்பவே மாத்தியிருநதா இப்போ இது விழுந்திருக்குமா? போலீஸ் வந்து ஏங்க முழுசா ஒரு செல்ஃபோன் கீழ விழற அளவு ஓட்டையா ட்ராலியில இருக்கும்னு கேட்டா நா என்ன பதில் சொல்றது? இவனுங்கள கட்டி மேய்க்க முடியலடா சாமி என்று நொந்தவாறே திரையில் தன்னுடைய பார்வையை தொடர்ந்தார்....

அடுத்த சில நொடிகளில் இரண்டு அல்லது மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று தரையில் கிடந்த செல்பேசியை எடுத்து அருகில் வைக்கப்பட்டிருந்த கூடையில் போடுவது தெரிந்தது... அடுத்து என்ன நடக்கிறது என்பதை கவனித்துக்கொண்டிருந்த மேலாளர் அந்த கூடையில் மீண்டும் சில பொஎருட்கள் வைக்கப்படுவதையும் அத்துடன் சேர்த்து தலையில் தொப்பி அணிந்திருந்த ஒருவர் அந்த கூடையுடன் அங்கிருந்து நகர்வதையும் கவனித்தார்.

அந்த மனிதரின் முகத்தை பார்க்கும் நோக்கத்துடன் காமராவை ஜூம் செய்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.... திரையை அடைத்துக்கொண்டு அந்த மனிதரின் தலையில் அணிந்திருந்த தொப்பி மட்டுமே தெரியவே எரிச்சலுடன் தன் காலடியில் இருந்த அழைப்பு மணியை அழுத்தினார். அவர் அழுத்திய வேகத்தில் அது அபாய மணி போல் அடித்து அந்த தளம் முழுவதும் ஒலிக்க அடுத்த நொடியே நான்கைந்து பணியாட்கள் அவருடைய அறைக்குள் நுழைந்தனர்.

‘இண்டர் காம்ல கூப்ட்டு க்ரவுண்ட் ஃப்ளோர் சூப்பர்வைசர வரச்சொல்லு....க்விக்.’

அவருடைய குரலிலிருந்த வேகம் அனைவரையும் தொற்றிக்கொள்ள அதில் ஒருவர் வராந்தாவிலிருந்த உள் தொலைபேசியில் விவரத்தை கூற அடுத்த சில நிமிடங்களில் தரைதளத்திற்கு பொறுப்பிலிருந்த சூப்பர்வைசர் மேலாளர் அறைக்குள் நுழைந்தார்.

‘நேத்து ராத்திரி ஒம்பது மணிக்கு நீங்க ட்யூட்டில இல்லையா:’

‘இருந்தேனே சார்.’

மேலாளர் ஜூம் செய்யப்பட்டிருந்த திரையை காட்டினார். ‘அப்ப இது என்ன? நம்ம மாலுக்குள்ள ஹெல்மெட்டோ இல்ல இந்த மாதிரி முகத்த மூடுறா மாதிரியான தொப்பியோ யாராச்சும் போட்டுக்கிட்டு வந்தா அத ரிமூவ் பண்ன சொல்லணும்னு சொல்லியிருக்கேன்ல?’

‘ஆமா சார்.... ஆனா?’

‘என்ன ஆனா?’

‘நிறைய கஸ்டமர்ஸ் சொன்னாலும் எடுக்க மாட்டேங்கறாங்க சார்... சண்டைக்கி வராங்க... எங்களால திருப்பி ஒன்னும் சொல்ல முடியறதுல்ல...

‘ஒடனே எங்கிட்ட சொல்ல வேண்டியதுதானையா? இப்ப போலீஸ் வந்து கேட்டா இத எப்படி காட்றது?’

‘போலீசா...? எதுக்கு சார்? ஏதாச்சும் பிரச்சினையா?’

‘ஆமாய்யா.... இப்பத்தான் ஒரு ஆள் வந்து என் செல்ஃபோன இங்கதான் விட்டுட்டு போனேன்னு கம்ப்ளெய்ண்ட் குடுத்திட்டு போயிருக்கார்... இந்த தொப்பிக்காரன் கூடையிலதான் அந்த ஃபோன் விழுந்திருக்கு... இவன் தான் அத எடுத்துக்கிட்டு போயிருக்கணும்... அவன ஐடி(ID)  பண்லாம்னு பாத்தா முகமே தெரியல... போலீஸ் வந்து இத பாத்தா காறி துப்ப மாட்டாங்க?’

சூப்பர்வைசர் முந்தைய நாள் இரவு ஒரு வாடிக்கையாளர் கூடையிலிருந்து கவுண்டரில் இருந்த ஒரு வொர்க்கர் ஒரு செல்பேசியை எடுத்து அந்த கூடையை வைத்திருந்த வாடிக்கையாளரிடம் கொடுத்ததை நினைவு கூர்ந்தார்.... அந்த ஆளும் தலையில தொப்பி போட்டுருந்தா மாதிரிதான் இருந்தது.... ஆனா அத இவர் கிட்ட சொல்ல போயி..... இவர் போலீசுக்கிட்ட சொல்லி... அந்த ஆள அடையாளம் காட்ட ஸ்டேஷனுக்கு வான்னு கண்ட நேரத்துலயும் இழுத்தடிச்சா என்னாவறது......? ஒன்னும் தெரியாத மாதிரி இருந்துருவோம்....

‘என்ன சைலண்டாய்ட்டீங்க..?’

‘இனிமே ஸ்ட்ரிக்டா சொல்லிடறேன் சார்...’ என்று பதிலளித்தான் சூப்பர்வைசர்.

‘இனிமே சரி... நேத்து ஏன் இத கவனிக்கல? அதுக்கு என்ன பதில்?’

‘அந்த நேரத்துல கடையில நல்ல கூட்டம் சார்.... கவுண்டர் கிட்டவே நிக்க வேண்டியதா போச்சி... அதான்....’

‘எதையாச்சும் சொல்லி சமாளிக்கறதுல இருக்கற புத்திசாலித்தானம் வேலையில இருக்கணுமில்ல? சரி சரி போயி வேலைய பாருங்க...’

அவர் அவசர அவசரமாக அறையிலிருந்து வெளியேற திரையில் தெரிந்த மனிதர் வேறு பகுதிக்கு எங்காவது சென்றிருந்தாரா என்று கவனித்தார். மேற்பார்வையாளர் கூறியிருந்ததுபோல முந்தைய நாள் இரவு கடை மூடும் சமயம் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததை பார்க்க முடிந்தது.... கவுண்டர் ஏரியாவுல இன்னும் ரெண்டு மூனு காமரா வைக்கணும் போலருக்கு... பத்து கவுண்டருக்கு மூனு காமரா போதாது.... காமராவின் அருகிலிருந்த கவுண்டர்களைத் தவிர மற்ற கவுண்டர்களில் நின்றிருந்தவர்கள் எவர் முகத்தையும் ஜூம் செய்தாலும் சரியாக தெரியாததையும் கவனித்தார். அதனால்தான் காமராவில் இருந்து தொலைவிலிருந்த எட்டாவது கவுண்டரில் ரவியின் கூடையிலிருந்து செல்பேசியை எடுத்து ரவியிடம் கொடுத்தது சரியாக கேப்சர் செய்யபடாமல் போயிருந்தது....

சிடியை கணினியிலிருந்து எடுத்து தன் அருகில் நின்றிருந்த பணியாளிடம் கொடுத்தார். ‘ஒன்பது மணியிலருந்து கடை மூடற வரைக்கும் எடுத்த போர்ஷன மட்டும் தனியா ஒரு சிடி போட்டு எடுத்து கொண்டுக்கிட்டு வா....’

அவன் வாசலை நோக்கி நகர்ந்தான்,

‘டேய்... இத போயி எல்லார்கிட்டயும் தம்மட்டம் அடிக்காத... சீக்ரெட்டா போட்டு எடுத்து கொண்டுக்கிட்டு வா... சீக்கிரம்..’

இவருக்கு எல்லாமே சீக்கிரம்தான் என்று தனக்குள் முணகியவாறே பணியாள் கண்காணிப்பு திரைகள் இருந்த அறையை நோக்கி நகர்ந்தான். 

‘முட்டா பசங்க... இந்த சிடிய பாத்துட்டு போலீஸ்காரன் என்ன சொல்வான்னு தெரியலையே...’ என்று முணகியவாறு தன் அலுவலை தொடர்ந்தார் மேலாளர்.

நாளை நிறைவு பெறும்...