அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 நவம்பர் 2019

பாஜகவின் சரிவு...... நிறைவுப் பகுதி

4 ம் பாகம்

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் என்ற மத்திய அரசின் திட்டங்களால் வரலாறு காணாத அளவுக்கு சரிந்து கிடக்கும் நாட்டின் பொருளாதாரட்தை மீட்டெடுக்கும் பொறுப்பு யாரிடம் உள்ளது?

நிச்சயம் அது மத்திய அரசின் கையில்தான் உள்ளது என்று சமீபத்தில் கைவிரித்துவிட்டது மத்திய ரிசர்வ் வங்கி. எங்களால் வங்கிகளுக்கு நாங்கள் அளிக்கும் கடனுக்கு வசூலிக்கப்படும் ரிப்போ (Repo) வட்டி விகிதத்தை மட்டும்தான் குறைக்க முடியும்  ஆனால் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் வங்கிகளிடம் தான் உள்ளது என்கிறார் மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர். 

ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு ரிப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட போதும் அதை பயன்படுத்தி ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் பெற வங்கிகள் யாரும் முன் வரவில்லை. 

ஏன்?

ஏனெனில் வங்கிகளிடம் உள்ள முதலீட்டையே அவர்களால் முழுவதுமாக பயன்படுத்த வாய்ப்பில்லாத சூழல். இதன் காரணமாக  தங்களிடம் உபரியாக உள்ள தொகையை வங்கிகளுக்கிடையிலான கடன் வழங்கும்  ஓவர்நைட் எனப்படும் ஒரு நாள் வட்டிக்கு கடனாக வழங்கிவருகின்றனர். இதில் அவர்களுக்கு கிடைக்கும் ஆறு விழுக்காடு வட்டி வாடிக்கையாளர்களுடைய  குறைந்த பட்ச வைப்பு நிதிக்கான வட்டியை விடவும் குறைவு. அதாவது ஆறு முதல் ஏழரை விழுக்காட்டிற்கு வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட தொகையை ஆறு அல்லது அதற்கும் குறைவாக பிற வங்கிகளுக்கு  நாள் வட்டிக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்கிற உண்மை நாட்டிலுள்ள எத்தனை பாமரனுக்கு தெரியும்.

ஏன் இந்த அவல நிலை?

வங்கிகளிலிருந்து பெருமளவு கடன் பெறுவது பெரும் தொழில் நிறுவனங்கள்தான். அல்லது பெரும் வர்த்தக நிறுவனங்கள். இவை அனைத்துமே முடங்கிப் போயுள்ள சூழலில் யார் கடன் வாங்கி முதலீடு செய்ய முன்வருவார்கள்?

மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி நாட்டிலுள்ள மொத்த உற்பத்தித் திறனில் (Installed Capacity) 67 முதல் 70 விழுக்காடு வரை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறதாம். அதாவது நாட்டிலுள்ள நிறுவனங்கள் மொத்தமாக ஒரு லட்சம் கோடி மதிப்பிற்கு உற்பத்தி செய்ய முடியும் என்கின்ற சூழலில் அறுபதாயிரம் முதல் எழுபதாயிரம் கோடி வரை மட்டுமே உ/ற்பத்தி செய்யப்படுகின்றனவாம். அதையே சந்தையில் வாங்க ஆளில்லாதபோது மேற்கொண்டு கடன் வாங்கி உற்பத்தியை கூட்டுவதற்கு எந்த தொழிலதிபர் முன்வருவார்?

இதுதான் இன்றைய யதார்த்த நிலை..

இந்த சூழலில்  தான் தொழிலதிபர்களின் வரி விகிதத்தை பெருமளவுக்கு குறைக்க முன்வந்தது மத்திய அரசு. இந்த வரிக்குறைப்பு தொழிலதிபர்களின் மனநிலையை பெரிதளவுக்கு மாற்றுவதாக தெரியவில்லை. உண்மையில் மத்திய அரசுக்கு இதனால் ஏற்படவிருக்கும் ஒரு லட்சம் கோடி வருவாய் இழப்பு  வெறும் விழலுக்கு இறைத்த நீராகத்தான் போய்விட்டது எனலாம். 

இந்த சூழலில் ஒரு நாட்டின் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்று நான் இந்த பதிவின் துவக்கத்தில் கூறியுள்ள  ஆங்கிலேய பொருளாதார மேதை கெய்ன்ஸ் அன்றே கூறியுள்ளார். 

அவர் கூறியுள்ளது இதுதான்.

நாட்டின் பொருளாதாரம் எதனால் மந்த நிலையை அடைந்துள்ளது என்பதை அந்த நாட்டின் அரசு முதலில் ஆராய வேண்டும். ஒரு நாட்டின் உற்பத்தித் திறன் முழுமையாக பயன்படுத்தப்படாத சூழலில் அதை மேம்படுத்த முயற்சிகள் செய்ய வேண்டும். அதாவது அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைகளில் முழுவதுமாக விற்க நுகர்வோர் தேவையை அதிகரிக்க வேண்டும். அதாவது அவர்களுடைய வாங்கும் திறனை அதிகரிக்க வேண்டும். 

எப்படி... ?

நாட்டிலுள்ள தனிநபர் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். 

இதை நாட்டிலுள்ள தனியார் தொழில் நிறுவனங்களால் செய்ய முடியாமல்போகும் சூழலில் (இதுதான் இன்றைய நிலை) மத்திய அரசே தன்னுடைய பொது செலவினங்களை (Public Expenditure) அதிகரிக்க வேண்டும் என்கிறார் கெய்ன்ஸ்.

அதாவது மத்திய, மாநில அரசுகள் தங்களுடைய முதலீட்டை அதிகரிக்க வேண்டும். பெரிய அளவிலான கட்டுமான திட்டங்கள் அதாவது ஸ்மார்ட் சிட்டி போன்ற பெரு நகரங்களை உருவாக்கும் திட்டம், நாட்டிலுள்ள அனைத்து மாநில நகரங்களில் உலகதரம் வாய்ந்த விமான நிலையங்களை உருவாக்கும் திட்டங்கள், சாலை வசதிகளை மேம்படுத்துதல் என அரசுகள் மக்களிடத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும். இதற்கு தேவைப்படும் நிதியை கடனாக பெற வேண்டி வந்தாலும் அதை  செயல்படுத்த ஆட்சியாளர்கள் துணிந்து  முன் வரவேண்டும். ஆங்கிலத்தில் இதை calculated risk என்பார்கள். 

ஆனால் நடப்பது என்ன? மத்திய அரசு நலத் திட்டங்களை செயல்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை. தொழில் நிறுவனங்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் நியாயமாக வழங்க வேண்டிய தொகைகளையே நிதிப்பற்றாக் குறையை (fiscal deficit) காரணம் காட்டி சுமார் ஒரு லட்சம் கோடி அளவுக்கு முடக்கி வைத்திருப்பதை என்னவென்று சொல்வது?

அதாவது ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள ஒரு தொழில் அல்லது வர்த்தக நிறுவனம் தங்களுடைய மூலப் பொருள் கொள்முதலுக்கு செலுத்திய ஜிஎஸ்டி  மற்றும் எக்சைஸ் வரியை அவர்கள் ஏற்றுமதி செய்தவுடன் அரசு சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு திருப்பி வழங்குவது வாடிக்கை.... அதே போல் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் ஒப்பந்ததாரர்களுக்கு அவர்கள் பணியை முடித்த உடனே ஒப்பந்த தொகையை வழங்கிட வேண்டும்.... மக்களிடமிருந்து வசூலித்த கூடுதல் வருமான வரி போன்ற தொகைகளையும் குறைந்த காலக் கெடுவிற்குள் திருப்பி வழங்கிட வேண்டும். ஆனால் இத்தகைய தொகைகளை தங்களுடைய நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி நிறுத்தி வைப்பது எந்த விதத்தில் நியாயம்? பெரு நிறுவனங்களுக்கு அரசு வழங்க வேண்டிய தொகைகளை நிறுத்தி வைப்பதாலோ அல்லது காலங்கடந்து வழங்குவதாலோ அத்தகைய பெரு நிறுவனங்கள் தங்களுக்கு மூலப் பொருட்களை வழங்கும் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய தொகையையும் நிறுத்தவோ தள்ளிப்போடவோத்தானே செய்ய நேரிடும்...? மத்திய மாநில அரசுகளின் இத்தகைய பொறுப்பற்ற செயல்களால் நாட்டில் பணப்புழக்கம் மேலும் மேலும் நலிவடையத்தானே செய்யும்?

இதை ஆங்கிலத்தில் vicious cycle என்பார்கள்... இதை உடனே தடுத்து நிறுத்த மத்திய அரசு தாராள பொருளாதார கொள்கையை கடைபிடிக்க துணிந்து முன் வரவேண்டும்.... நாட்டின் ஒட்டுமொத்த கடன் அளவு சிறிது உயர்ந்தாலும் அதனால் ஏற்படும் பொருளாதார முன்னேற்றம்.... அதன் விளைவாக அரசுகளுக்கு கிடைக்கும் வருவாய் அதிகரிப்பு என நாளடைவில் அரசின் ஒட்டுமொத்த வருவாயும் உயர்ந்து வாங்கிய கடனை அடைக்க ஏதுவாக அமையும்.

RISK என்கிற ஆங்கில வார்த்தைக்கு Rare Instinct to Seek the unKnown என்று கூறுவார்கள். Rare Instinct என்றால் அபூர்வ உள்ளுணர்வு... unknown என்றால் நமக்குத் தெரியாதவை. அதை நோக்கிப் பயணிப்பது தான் RISK. அது வெகு சிலருக்கே சாத்தியப்படும். அதாவது என்ன நடக்கும் என்பது தெரியாமலே இலக்கைத் தேடிச் செல்லும் துணிவு... இலக்கை அடைந்தால் மகிழ்ச்சி... தோல்வியடைந்தால் தொடர்ந்து முயல்வேன் என்கிற பிடிவாதம்....

இது ஒரு காலத்தில் சாதாரண சாக்கு பை விற்றுக் கொண்டிருந்த அம்பானிக்கு இருந்தது. இன்று அவருடைய மகன் முகேஷ் ஆசியாவிலேயே பெரும் தொழிலதிபர்கள் பட்டியலில்... இப்படி அசாத்திய துணிவுடன் சாதித்தவர்கள் நம்முடைய நாட்டில் ஏராளம் பேர் உள்ளனர். ஆட்சியாளர்களில் சொல்ல வேண்டுமென்றால் காலம் சென்ற நரசிம்மராவை சொல்லலாம். நேரு குடும்பத்தைச் சாராத முதல் பிரதமர் என்றாலும் அவர் அன்று நடைமுறைப்படுத்திய தாராள பொருளாதார கொள்கைகள் அப்போது நாடு இருந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வர உதவியது.

இதுதான் இன்றைய ஆட்சியாளர்களுக்கு தேவைப்படும் குணாதிசயம். 

துரதிர்ஷ்டவசமாக அது இப்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. 

நிறைவு.

31 அக்டோபர் 2019

பாஜகவின் சரிவு....4


3ம் பாகம்

ஜிஎஸ்டி வரி விதிப்பு உண்மையில் வரவேற்கப்பட வேண்டியதுதான். 

ஏனெனில் ஜிஎஸ்டி அமலாக்கப்படுவதற்கு முன்பு நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களும் தங்கள் விருப்பப்படி விற்பனை வரி, நுழைவு வரி, மதிப்பு கூட்டு வரி, சேவை வரி என பல்வேறு வரிகளை வெவ்வேறு விகிதங்களில் வசூலித்துவந்தன. யூனியன் பிரதேசங்கள் எனப்படும் பாண்டிச்சேரி, தில்லி போன்ற மாநிலங்களில் மற்ற மாநிலங்களில் நடப்பில் இருந்து வந்த விகிதங்களை விட மிகவும் குறைவாக விற்பனை வரி  வசூலிக்கப்பட்டு வந்தன. இதனால்  அண்டை மாநிலங்களான தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் வசித்தவர்கள் கூட உண்மைக்கு புறம்பான தங்குமிட விலாசங்களை காட்டி விலையுயர்ந்த வாகனங்களுக்கு மிகக் குறைந்த விற்பனை வரி செலுத்தி வரி ஏய்ப்பு நடத்த வாய்ப்பளித்தது. அத்துடன் மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகங்களுக்கு அந்தந்த மாநில விற்பனை வரியுடன் மத்திய அரசின் விற்பனை வரியையும் செலுத்தும் பழக்கமும் இருந்து வந்தது. இதனால் பல வணிகர்கள் வரிக்கு வரி செலுத்த வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டனர். 

இவ்வாறு மாநிலங்களுக்கிடையில் விற்பனை மற்றும் சேவை வரி வசூலிப்பத்தில் எவ்வித ஒற்றுமையும் இல்லாத சூழலில் நாடு முழுவதும் வசூலிக்கப்பட்டு வந்த பல்வேறு வகையான வரி விகிதங்களை ஒருங்கிணைத்து விற்பனை மற்றும் சேவை வரி என்ற ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு மத்திய அரசு தள்ளப்பட்டது. 

ஆனால் இதை அமல்படுத்துவதில் மத்திய அரசு காட்டிய அவசரம்தான் இப்போது நிலவும் அனைத்து குழப்பத்திற்கும் காரணம். 

மேலும் ஜிஎஸ்டிக்கு முன்பு மாநிலங்கள் வசூலித்து வந்த விற்பனை வரி விகிதங்கள் ஏழு விழுக்காட்டிலிருந்து அதிக பட்சமாக பதினான்கு விழுக்காடு வரை இருந்தன. தமிழகத்தை பொருத்தவரை அதிகபட்ச விற்பனை வரி 12.5 விழுக்காடாக இருந்தது. நாட்டில் எந்த ஒரு மாநிலத்திலும் விற்பனை வரி பதினெட்டு விழுக்காட்டிற்கு மேல் இருக்கவில்லை. மாநில எல்லையை தாண்டி நடக்கும் வர்த்தகத்திற்கு தமிழக விற்பனை வரியுடன் மத்திய அரசு விற்பனை வரி (அதிகபட்ச வரியாக ஆறு விழுக்காடு)யையும் சேர்த்தாலும் பதினெட்டு விழுக்காட்டை தாண்டியதில்லை.

ஆனால் இவற்றை ஒருங்கிணைத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியில் அதிகபட்ச வரியாக இருபத்தி எட்டு விழுக்காடு என நிர்ணையிக்கப்பட்டது. இதே போன்று எட்டிலிருந்து பத்து விழுக்காடு வரை மட்டுமே இருந்துவந்த பல பொருட்களின் வரி விகிதம் பதினெட்டு விழுக்காடு என்ற அளவுக்கு உயர்த்தி நிர்ணையிக்கப்பட்டது. அதாவது அத்தியாவசிய பொருட்கள் என மக்கள் கருதி வந்த பல பொருட்களின் மீது விதிக்கப்பட்டு வந்த விற்பனை வரி ஆறிலிருந்து பத்து விழுக்காடு வரை உயர்த்தப்பட்டதால் பொருட்களின் விலையும் உயர்ந்தன. இதன் விளைவாக மக்கள் அவற்றை வாங்குவதை குறைக்கவோ அல்லது வசதியில்லாதவர்கள் முற்றிலுமாக தவிர்க்கவோ செய்தனர். 

இதில் விசித்திரம் என்னவென்றால் மேல்தட்டு மக்கள் மட்டுமே அதிக அளவில் உண்ணும் பித்சா, பர்கர் போன்ற உணவு வகைகளுக்கு ஐந்து விழுக்காடு வரியும் பாமரர் வீட்டு குழந்தைகளும் உண்ணும் பிஸ்கட்டுக்கு பதினெட்டு விழுக்காடு வரி என்கிற அளவில் ஒரு வரைமுறை இன்றி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டன. பாமரர்களால் நினைத்தும் பார்க்க முடியாத ஆலிவ் எண்ணெய்க்கு ஐந்து விழுக்காடு வரி... ஆனால் பெரும்பாலோர் பயன்படுத்தும் சமையல் எண்ணெய்க்கு பண்ணிரண்டு விழுக்காடு வரி... பற்பசை தூளுக்கு பண்ணிரண்டு விழுக்காடு, பற்பசை மற்றும் பிரஷ்சுக்கு பதினெட்டு விழுக்காடு வரி... தீப்பெட்டிக்கு 12 விழுக்காடு, மண்ணெண்னை விளக்குக்கு (hurricane lamps) 18%

தீப்பெட்டி தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விகிதத்தை குறைக்கும்படி பலமுறை கோரிக்கை விடுத்தும் அது இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருந்து வருகிறது.  இதனால் சிவகாசி மற்றும் கோவில்பட்டியில் இயங்கிவரும் பல சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு பலர் வேலையிழந்து தவிப்பது நமக்கு தெரிகிறது. இன்றைய காலை செய்தியில் சாலையோரம் பல வருடங்களாக இயங்கிவந்த பல உணவகங்கள் நாள்தோறும் மூடப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டது, . 

இத்தகைய நியாயமற்ற வரி விகிதங்களால் சிறிய அளவில் உற்பத்தியில் ஈடுபட்டு வந்திருந்த சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் அவர்கள் வாங்கும் ஒவ்வொரு மூலப்பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்தி வாங்க வேண்டிய சூழலில் அவர்களுடைய பொருட்களுக்கு அதுவரை அமலில் இருந்து வந்த வரி விகித உயர்வால் ஏற்பட்ட விற்பனை சரிவும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு பல நிறுவனங்களும் மூடும் நிலையை அடைந்தன. தமிழகத்தில் இத்தகைய உற்பத்தி நிறுவனங்களுக்கு பேர்பெற்ற திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டதிலிருந்து மூடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்தை கடந்துவிட்டது என்கிறது சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கைகள். 

இந்த திட்டம் அமலாக்கப்பட்டதிலிருந்து சுமார் முப்பது முறைகளுக்கு மேலாக வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டதிலிருந்தே இந்த திட்டம் எத்தனை அவசரகதியில் அமலுக்கு கொண்டு வரப்பட்டது என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. இன்னமும் இது முடிந்தபாடில்லை. இனி வரும் ஜிஎஸ்டி குழுவின் கூட்டங்களிலும் பல பொருட்களின் குறைக்கப்பட வேண்டிய சூழல் ஏற்படும். ஏனெனில் எவ்வித வரைமுறையும் ஆய்வும் இல்லாமல் நிர்ணயிக்கப்பட்ட வரி விகிதங்கள் இவை. ஏறத்தாழ கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் வரி விகிதங்கள் பல முறை குறைக்கப்பட்டாலும் அமலாக்கப்பட்ட காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட நியாயமற்ற வரி விகிதத்தால் விற்பனையை இழந்து மூடப்பட்ட நிறுவனங்களில் பல இன்னும் மூடிய நிலையிலேயே இருப்பதுதான் வேதனை.

ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு கொண்டுவரப் பட்டபோது மாதம் குறைந்தது ஒரு லட்சம் கோடி வருவாய் இருந்தால்தான் நாட்டின் மொத்த நிதிபற்றாக்குறையை(fiscal  deficit) சமாளிக்க முடியும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. துவக்க காலங்களில் அந்த இலக்கை அடைய முடிந்தாலும் கடந்த ஒரு வருடமாக சராசரியா எண்பதாயிரம் கோடியை தொடுவதே சிரமமாக உள்ளதாம்.

இது எதனால்?

நாட்டின் வரி வருவாயை அதிகரிக்க வேண்டுமானால் நாட்டின் உற்பத்தியை பெருக்கி அதன் விளைவாக  சந்தைக்கு வரும் பொருட்களை உடனே வாங்கும் அளவுக்கு நுகர்வோரின் வாங்கும் திறனையும் சேர்த்து அதிகரித்தால் விற்பனை  தொடர்ந்து உயரும். அதனால் நாட்டின் மறைமுக வரி வருவாயும் உயர்ந்துக்கொண்டே செல்லும்.

இந்த அடிப்படை பொருளாதார தத்துவத்தை உணராத ஆட்சியாளர்கள் வரியை மட்டும் உயர்த்தினாலே வருவாய் பெருகிவிடும் என்று நினைத்தது எத்தனை அறிவீனம்?. மத்தியிலுள்ள ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகளால் விற்பனை சரிந்துக்கொண்டே இருக்கும்போது அதன் மூலமாக கிடைக்கும் வரி வருவாயும் குறையத்தானே செய்யும்? அதுதான் இப்போது நடக்கிறது.




பணமதிப்பிழப்பு நடவடிக்கை உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் அனைவருடைய கையிலுமிருந்த ரொக்கப் பணத்தை இல்லாமல் செய்தது. ஜிஎஸ்டியோ இந்த சூழலில் இருந்து மீண்டு வந்து உற்பத்தியை பெருக்கி இலாபம் ஈட்டலாம் என்று நினைத்திருந்த உற்பத்தியாளர்களின் எண்ணத்தை நிராசையாக்கிப் போட்டது எனலாம். 

இத்தோடு நிற்காமல் இன்னும் ஒரு முட்டாள்தனமான தீர்மானம் மூலம் நாட்டின் வாகன உற்பத்தியையும் முடக்கி போட்டது மத்திய அரசு. அதன் விளைவாக கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாம் காணாத அளவுக்கு வாகன விற்பனை சரிந்து அதன் உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியையே பெருமளவு குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன. 

அதுதான் மாசுகட்டுப்பாட்டை மேலும் கடுமையாக்கும் பிஎஸ் ஆறு (BS 6) திட்டம். 

வாகன விற்பனை பெருமளவில் குறைந்ததற்கு காரணம் என்ன என்று மத்திய நிதியமைச்சரிடம் நிரூபர்கள் கேள்வி கேட்டபோது அவர் திருவாய் மலர்ந்து உதிர்த்த அபத்தமான பதில்: இப்போதெல்லாம் மக்கள் ஓலா, ஊபர் போன்ற வாடகை வாகனங்களில் பயணிப்பதையே விரும்புகிறார்கள். வாகன விற்பனை  சரிவுக்கு இதுவும் ஒரு காரண்ம். இந்த பதிலுக்கு ஆங்கில பத்திரிகை ஒன்று அளித்த பதில் என்ன தெரியுமா? ’இப்படி ஒரு பதிலை அளிப்பதற்கு பதிலாக நிதியமைச்சர் எனக்கு தெரியவில்லை என்றே பதிலளித்திருக்கலாம். ’

மத்திய அரசு கடந்த ஆண்டு நாட்டில் தற்போது  நடைமுறையிலுள்ள Bharat Stage (BS) IV என்ற மாசுகட்டுப்பாட்டு விதிமுறை (Emission Norm) யிலிருந்து நேரடியாக BS VI மாற தீர்மானித்தது. இது ஐரோப்பாவில் நடைமுறையிலுள்ள Euro VI விதிமுறைக்கு சமமாக கருதப்படுகிறது. இந்த முடிவு நல்ல முடிவு என்பது உண்மைதான் என்றாலும் நாடு இப்போதுள்ள நிதி நிலமையில் இந்த முடிவு தேவைதானா என்ற கேள்வி எழுகிறது.

ஏனெனில் உலகில் பல வளர்ந்த நாடுகள் இன்னும் Euro IV என்கிற நிலையையே எட்டவில்லையாம்! இதற்குக் காரணம் இதற்கு வாகனங்களில் பல முக்கிய மாறுதல்களை செய்ய வேண்டியுள்ளது.   அதற்கு மிக அதிக அள்விலான முதலீடு தேவைப்படுகிறது. ஆகவே தான் வாகன உற்பத்தியாளர்கள் பலரும் தங்களால் இயன்றவரை இந்த திட்டத்தை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டுமென்று மத்திய அரசுடன் போராடி பார்த்தார்கள். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி எதிர்வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தே தீரும் என்று அறிவித்துவிட்டது. 

ஆகவேதான் நாட்டிலுள்ள பல வாகன உற்பத்தியாளர்கள் தங்களுடைய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த  வேண்டிய நடைமுறைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே BS IV மோட்டார் இயந்திரங்களை (Engines) கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள வாகனங்களை நுகர்வோர் யாரும் வாங்குவதற்கு முன்வராததால் வாகன விற்பனையும் வெகுவாக சரிந்து உற்பத்தியையே நிறுத்த வேண்டிய சூழலுக்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டனர். 

மத்திய நிதியமைச்சர் தற்போது பயன்பாட்டிலுள்ள BS IV இயந்திரங்களுடன் இயங்கும் வாகனங்களுக்கு அதன் ஆயுட்காலம் வரை பயன்படுத்துவதற்கு ஏற்ற ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று உறுதியளித்திருந்தாலும் அவருடைய வாக்குறுதியை நுகர்வோர் நம்ப தயாராக இல்லை என்பதை வாகன விற்பனையின் தொடர் சரிவு உறுதி செய்கிறது. வாகனங்களை இயக்க பயன்படுத்தும் பெட்ரோலிய பொருட்களிலும் மாற்றங்கள் செய்யப்படவிருப்பதால் BS VI வாகனங்கள் விற்பனைக்கு வரும்போது அதை வாங்கிக்கொள்ளலாம் என்று நுகர்வோரும் தங்களுடைய முடிவை சற்று தள்ளிப்போட்டுவிட்டனர் போலும். 

இந்த மாற்றம் டீசல் இயந்திரத்துடன் இயங்கும் வாகனங்களைத்தான் மிக அதிக அளவில் பாதிக்கும் என்கிறார்கள். சரக்கு போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து கனரக வாகனங்களுமே டீசலைத்தான் பயன்படுத்துவதால் அத்தகைய வர்த்தகத்தில் ஈடுபட்டு வருபவர்களும் தங்களுடைய புதிய வாகன தேவைகளை தற்போதைக்கு ஒத்திவைத்து விட்டனர். 

இதுதான் தற்போதைய வாகன உற்பத்தி நிறுத்தம் மற்றும் விற்பனை சரிவுக்கு உண்மையான காரணம். 

சரி இந்த பொருளாதார சரிவிலிருந்து எப்படி மீள்வது? இது யார் கையில் உள்ளது?

நாளை பார்க்கலாம்.

30 அக்டோபர் 2019

பாஜகவின் சரிவு....3

2ம் பாகம்

1. பணப்புழக்கத்தில் வீழ்ச்சி

இந்திய வர்த்தகத்தை என்னதான் டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு முயற்சித்தாலும் இன்று மட்டுமல்ல இனி எதிர்வரும் ஐம்பதாண்டு காலத்திற்கும் மொத்த வர்த்தகத்தில் சுமார் 96 விழுக்காடு கேஷ் அண்ட் கேரி (Cash and Carry) எனப்படும் ரொக்க வர்த்தகமாகத்தான் இருக்கும். இதுதான் இந்திய வர்த்தகத்தின் தனித்துவம். நாட்டில் எத்தனை பெரிய பல்பொருள் அங்காடிகள் (Super Stores, Hyper Stores, Malls) வந்தாலும் சாலையோர கடைகளில்தான் இந்தியாவின் பெரும்பான்மை வர்த்தகம் நடைபெறுகிறது... இனியும் நடைபெறும்.... இத்தகைய கடைகளில் நடக்கும் வர்த்தகம் அனைத்துமே ரொக்கத்தில்தான் நடைபெறுகின்றன. இத்தகைய கடைகளை நடத்துபவர்கள் கொள்முதல் செய்வதும் ரொக்க அடிப்படையில்தான். இதை மத்திய அரசு எத்தனை முயற்சித்தாலும் மாற்றுவது சாத்தியமில்லை. 

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை அறிவித்த பிரதமர் எதிர்வரும் காலங்களில் நாட்டின் பணப் பயன்பாடு பெருமளவு குறையும் என்று ஆரூடம் கூறினாலும் உண்மையில் நடந்தது என்ன? 

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் துவக்க நாட்களில் கையில் பணமில்லாமல் அல்லாடிய சாமான்ய மக்கள் வேறுவழியின்றி வங்கி அட்டைகளை பெருமளவில் பயன்படுத்த துவங்கியது என்னவோ உண்மைதான். அந்த காலக்கட்டத்தில் மொத்த பணப் பயன்பாடு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்புடன் ஒப்பிடுகையில் (curreny to GDP ratio) 12.01 விழுக்காடு என்ற நிலையிலிருந்து 8.8 விழுக்காடாக குறைந்தாலும் பணப்புழக்கம் அடுத்த சில மாதங்களில் சீரடைந்ததும் மீண்டும் 10.10 விழுக்காடு என்ற அளவுக்கு உயர்ந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்ட முந்தைய கால அளவுக்கு மீண்டும் அடைந்தது என்பதுதான் உண்மை. 

மேலும் நம்முடைய நாட்டின் பொருளாதார நிலையை தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிப்பவர்கள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 90 விழுக்காடு உள்ள சாமான்ய மக்கள். அதாவது நடுத்தரத்திற்கும் சற்று கீழே உள்ளவர்கள். இவர்களுடைய வாங்கும் திறனை வைத்துத்தான் சந்தையில் எந்த ஒரு பொருளின் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலோனோர் கிராமங்களில் வசிப்பவர்கள். இவர்களுடைய மாத வருமானத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தை வைத்துத்தான் இந்திய பொருளாதாரத்தின் நிலை தீர்மானிக்கப்படுகிறதே தவிர. ஆன்லைனிலோ அல்லது பெரும் மால்களிலோ பொருட்களை வாங்கிக் குவிக்கும் மேல்தட்டு மக்களால் அல்ல.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் பணப்புழக்கம் முற்றிலுமாக ஸ்தம்பித்து நின்ற அறிமுக மாதங்களில் முதலில் முடங்கிப்போனது இத்தகையோரை சென்றடையும் வர்த்தகம்தான். இவர்கள் கைவசம் இருந்த அனைத்து ரொக்கத்தையும் வங்கிகளில் அடைத்துவீட்டதால் பணப்புழக்கம் வெகுவாக ஏன் முற்றிலுமாக குறைந்துபோய் அதிலிருந்து மீளவே முடியாமல் தாற்காலிகமாக அடைக்கப்பட்ட சிறு குறு வர்த்தக நிறுவனங்களுக்கு அளவே இல்லை. இதன் விளைவாக இவற்றிற்கு விநியோகம் செய்துவந்த மொத்த வணிகர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டனர் என்பதும் உண்மை. ஆகவே தான் இந்த நடவடிக்கை நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி அளவு மற்றும் அவற்றின் மொத்த மதிப்பு எனப்படும் GDP யும் கூட எதிர் வரும் ஆண்டுகளில் கணிசமான அளவு குறைய வாய்ப்புள்ளது என்று அன்றே முன்னாள் நிதி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல பொருளாதார வல்லுநர்கள், உலக வங்கி உட்பட கூறினார்கள்.

2. சரக்கு போக்குவரத்தில் சிக்கல்.

இத்தகைய வணிக நிறுவனங்களின் இடைவிடா தேவைகளையே சார்ந்திருந்த சரக்கு போக்குவரத்து நிறுவனங்களும் கைவசம் ரொக்கம் இல்லாமல் பெருமளவு பாதிக்கப்பட்டன. இந்திய அளவில் சுமார் எட்டு லட்சம் சரக்கு வாகன ஓட்டுனர்கள் தங்களுடைய வாகனங்களுக்கு டீசல் கூட நிரப்ப முடியாமல் அவதியடைந்தனர். இவர்களில் எத்தனை பேரிடம் வங்கி அட்டைகள் இருந்திருக்க வாய்ப்புள்ளது? அன்றாடம் தேவைப்படும் டீசல் மற்றும் கைச்செலவுக்கு கூட ரொக்கம் இல்லாமல் அவதிப்பட்டதை மறுக்கமுடியுமா? இதன் விளைவு... வர்த்தக்ப் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கிப்போனது. அதில் இருந்து மீண்டு வர முடியாமல் தொழிலையே தாற்காலிகமாக கைவிட்டவர்கள் எத்தனையோ பேர். 

3.பங்கு சந்தை வீழ்ச்சி

இந்த நடவடிக்கை ரொக்கத்தில் நடக்கும் வணிகம் மட்டுமல்லாமல் இந்திய பங்கு சந்தையையும் வெகுவாக பாதித்தது. பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நாளன்று தேசிய பங்கு சந்தை சுமார் 1,700 புள்ளிகளும் நிஃப்டி சுமார் 600 புள்ளிகளும் சரிந்தன. அன்றைய சரிவிலிருந்து மீண்டு வர சுமார் மூன்று மாதங்கள் தேவைப்பட்டன. 2016 ஜூலை மாதம் துவங்கி 2017 பிப்ரவரி வரையிலான இடைப்பட்ட காலத்தில் சரிவை சந்திக்காத நிறுவனங்களே இல்லை என்கிறது புள்ளிவிவரங்கள் பெரும்பான்மையான நிறுவனங்கள் இன்றுவரையிலும் அதிலிருந்து மீளவில்லை என்பதுதான் உண்மை. குறிப்பாக ரொக்கத்திலேயே நடைபெற்று வரும் கட்டுமானத் தொழில், மோட்டார் வாகனம், சில்லறை வர்த்தகம், 

3. தொழில் உற்பத்தியில் சரிவு

நாட்டிலுள்ள பெரும் தொழில் நிறுவனங்களும் கூட இதனால் பாதிக்கப்பட்டன. ஏன்.. இவை தயாரிக்கும் பொருட்களில் பெரும்பாலான விழுக்காடு இந்திய சந்தையை நம்பியே தயாரிக்கப்படுகின்றன. கடைநிலை வர்த்தக நிறுவனங்களில் ஏற்படும் பணத்தட்டுப்பாடு எஸ்கலேட்டர் (Escalator)முறையில் நாட்டிலுள்ள அனைத்து பெரிய நிறுவனங்களின் உற்பத்தியையும் பாதித்தன. கடைநிலை வர்த்தக நிறுவனங்களில் தொடர் தேவையினால்தான் (continuous demand) இத்தகைய தொழில் நிறுவனங்கள் தொடர்ச்சியாக இயங்க முடிந்தன. சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் முடக்கப்பட்டதன் விளைவு அவற்றையே நம்பியிருக்கும் பெரு நிறுவனங்களையும் பாதிக்கத்தானே செய்யும்?

4. விவசாய உற்பத்தியில் வீழ்ச்சி

கிராமங்களில் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த அனைத்து தொழில்களிலும் ரொக்கம்தான் பெருமளவில் பயன்படுகின்றன. விதை, உரம், வேலையாட்களுக்கு கூலி என எதிலும் ரொக்க பரிவர்த்தனைகள்தான் என்பதுதான் இன்றல்ல இனிவரும் காலங்களிலும் நடக்கும். அதை எந்த தொழில்நுட்ப முன்னேற்றமும் மாற்றிவிடப்போவதில்லை. விவசாய உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதிலும் கூட ரொக்கம்தான் தேவைப்படுகிறது. எந்த விவசாயி பொருட்களை விற்றுவிட்டு வங்கியில் செலுத்தப்படும் தொகைக்காக காத்திருப்பான்? இப்போதும் அரசு கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்யப்படும் பொருட்களின் மதிப்பு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்றால் விவசாயிகள் அதை ஏற்காமல் குறைந்த விலைக்கானாலும் உடனே ரொக்கம் தர தயாராக உள்ள இடைத்தரகரிடம் விற்பதையே விரும்புகின்றனர். மேலும் தங்களுடைய பொருட்களின் மொத்த மதிப்பும் வங்கியில் வரவு வைக்கப்படுமா என்கிற நிச்சயத்தன்மையும் இல்லாத சூழலில் இது முழுவதுமாக நடைமுறைக்கு வருவது சாத்தியமே இல்லை. சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது என இத்தகைய மையங்களில் பொருட்களை விற்கும் விவசாயிகள் குமுறுவது செய்திகளில் வருவதை பார்க்க முடிகிறது. 

5. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (GDP) வீழ்ச்சி

சிறு, குறு மற்றும் பெரு என அனைத்து தொழில் உற்பத்தி மற்றும் விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட சரிவின் விளைவு 15-16 ஆம் நிதியாண்டில் 9.00 விழுக்காடாக இருந்த நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியின் அளவு பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்ட 16-17 நிதியாண்டில் 5.5. விழுக்காடுக்கு சரிந்தது. அதிலிருந்து மெள்ள மெள்ள மீண்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் 6.5 விழுக்காடாக அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு விழுக்காடு அளவுக்கே உயர்ந்துள்ளது. இப்படியே போனால் 15-16 நிதியாண்டில் நாடு அடைந்த 9.00 விழுக்காட்டை அடையவே இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படுமோ?



6. வேலை வாய்ப்பில் இழப்பு

பணப்புழக்கம் அறவே முடக்கப்பட்டுவிட்ட நிலையில் குடிசை தொழில்கள் மற்றும் முறைசாரா தொழில் துறை (unorganised sector) நிறுவனங்களும் ஒவ்வொன்றாக மூடப்பட அதில் பணிபுரிந்த பெருவாரியான பணியாட்கள் பணி இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். இதில் பெருமளவு பாதிக்கப்பட்டவை கட்டுமான தொழில். இதில் அன்றாட கூலிக்கு பணிபுரிந்துவந்த லட்சக்கணக்கான பணியாட்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தங்களுடைய வேலைகளை இழந்து போயினர். கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது என்ற நிலை ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் என்றாலும் மிகையாகாது.

இந்த நடவடிக்கையை தொடர்ந்து ஏற்பட்ட சரிவை மேல்காணும் படம் மிகத் தெளிவாக காட்டுகிறது. 

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நடைமுறைப்படுத்தப்பட்டதற்கு காரணமாக இருந்தவர்களின் மனப்போக்கு எத்தகையதாக இருந்தது என்பது தெரியவில்லை. இத்தகைய நடவடிக்கையை தனிமனிதனாகவோ அல்லது ஒரு சிறு குழுவாகவோ தீர்மானித்து எடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களால் கடுமையாக தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சம்மந்தப்பட்டவர்களின் பேச்சு திறமையாலும் அதன் எதிர்பாளர்கள் அதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட எதிர்மறை விளைவுகளுக்கு மக்களிடத்தில் தகுந்த முறையில் எடுத்துரைக்க தவறியதாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் பாராட்டப்பட்டு முன்பைவிட அதிக அளவு பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தப்பட்டதன் விளைவைத்தான் நாடு இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வருவதற்கு முன்பே மத்திய அரசு எடுத்த மற்றுமொரு அவசர முடிவு தான் ஒரே நாடு ஒரே வரி என்ற ஜிஎஸ்டி வரி அமலாக்கம்...

அதை நாளை பார்க்கலாம்

29 அக்டோபர் 2019

பாஜாகவின் சரிவு....2



முதல் பாகம்

சந்தையில் ஒரு பொருளின் விலை அதன் விநியோகம் (supply) அந்த பொருளுக்கு சந்தையில் நுகர்வோர் தரப்பிலிருந்து வரும் தேவை (Demand)என இரண்டின் அளவை பொருத்தே நிர்ணயிக்கப்படுகின்றன என்பதை இன்றல்ல சுமார் எண்பது வருடங்களுக்கு முன்பே அதாவது 1930ல் வாழ்ந்த இங்கிலாந்து பொருளாதார மேதை ஜே.எம்.கெய்ன்ஸ் (John Maynard Keynes) தன்னுடைய ஆராய்ச்சி கட்டுரை ஒன்றில் கூறியிருக்கிறார். 

உதாரணத்திற்கு வெங்காயத்தின் விலையை எடுத்துக்கொள்வோம்.

சந்தையிலுள்ள மொத்த விநியோகம் ஒரு டண் என்று வைத்துக்கொள்வோம். அதை வாங்க அதே சந்தையில் உள்ள மொத்த நுகர்வோரின் எண்ணிக்கை ஆயிரம் என்று வைத்துக்கொள்வோம். விநியோகத்தின் அளவில் மாற்றமில்லாமல் நுகர்வோரின் எண்ணிக்கை கூடும்போது.... அதாவது நுகர்வோரின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் அதிகரிக்கும் சூழலில் வெங்காயத்தின் விலை கூடும்... ஆயிரத்துக்கும் கீழே குறையும் போது அதாவது தேவை குறையும்போது வெங்காயத்தின் விலையை குறைக்காவிட்டால் அது விற்பனையாகாமல் தேங்கும் நிலை உருவாகும். ஆகவே வணிகர்கள் அதன் விலையை குறைக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

இதையே மாற்றி நுகர்வோரின் எண்ணிக்கை அதே ஆயிரம் என்ற நிலையில் வெங்காயத்தின் விநியோக அளவு ஒரு டண்ணுக்கும் கீழே குறையும்போது தேவை விநியோகத்தை விட அதிகம் என்பதால் வெங்காயத்தின் விலை கூடும். விநியோகத்தின் அளவு ஒரு டண்ணுக்கு மேல் அதிகரிக்கும்போது வெங்காயத்தின் விலை குறையும்...

இதுதான் ஒரு பொருளாதார சந்தையில் ஒரு பொருளின் விலை நிர்ணயிக்கப்படுவதின் அடிப்படை தத்துவம்.

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கைகள் தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள் என்றாலும் அது விநியோகம் மற்றும் நுகர்வோரின் வாங்கும் திறன்களை ஒரே மாதிரியாக பாதித்ததால் இதுவரையிலும் பொருட்களின் விலை அதிக அளவில் உயரவில்லை என்பது உண்மை.

ஆனால் இந்த முடிவுகள் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை பாதித்துவிட்டதாக வல்லுநர்கள் கூறுவது எதனால்?

இதை ஆராய நான்  உலக பொருளாதாரத்தைப் பற்றி விவாதிக்கும் பல இணையதளங்களை உலாவி (Browse)திரட்டிய தகவல்களை இங்கே சுருக்கமாக அளித்திருக்கிறேன்.

முதலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை.

இந்த நடவடிக்கை எதற்காக எடுக்கப்பட்டது என்பதை மத்திய அரசு அளித்திருந்த விளக்கம் என்ன?

1.இந்திய பணச்சந்தையில் கறுப்புப் பணத்தின் விழுக்காடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
2.கள்ள நோட்டுகளின் புழக்கம் மிக அதிக அளவில் அதிகரித்துவிட்டது. இது தீவிரவாதிகளின் செயல்பாடுகளுக்கு மிகவும் உதவுகிறது.
3.வருமானவரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் 
4.நாட்டில் பணப்புழக்கம் குறையும். அதனால் விலைவாசி குறையும்.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

1. கறுப்பு பணம் அதிகரித்துவிட்டது/

மத்திய அரசின் மதிப்பீட்டின்படி இந்தியாவில் சுமார் மூன்று லட்சம் கோடி கறுப்புப் பணம் இருந்ததாம்! இந்த மதிப்பீட்டை யார், எந்த அடிப்படையில் செய்தார்கள் என்பதே ஒரு கேள்விக் குறி. உண்மையில் மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது புழக்கத்தில் இருந்த சுமார் ரூ.15.41 லட்சம் கோடியில் ரூ.15.30 லட்சம் கோடி அதாவது மொத்த பணத்தில் 99.3 விழுக்காடு பணம் வங்கிகளில் செலுத்தப்பட்டுவிட்டது. மீதமுள்ள தொகையான ரூ.10,720 கோடி மட்டும்தான் கறுப்புப் பணம்.. இந்த அளவு குறைந்த தொகையை மீட்டெடுக்க இத்தனை விபரீதமான முடிவு தேவைதானா என்று பொருளாதார வல்லுநர்கள் கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

இவற்றை மீட்டெடுக்கத்தானே வருமான துறை என்ற ஒரு பெயரில் சர்வ அதிகாரம் படைத்த ஒரு அமைப்பு உள்ளது.? அவர்கள் ஒவ்வொரு ஆண்டும்  மீட்டெடுக்கும் தொகைக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லையே என்றும் கூறுகின்றனர் என்கின்றனர் வல்லுநர்கள்.

மேலும் ஒரு நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு அந்த நாட்டின் கறுப்புப் பணம் மட்டுமே காரணமாகிவிட முடியாது. ஏனெனில் இன்று உலகளவில் மிக அதிக அளவு கறுப்புப் பணத்தை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் ரஷ்யாவும் இரண்டாம் இடத்தில் சீனாவும் உள்ளன. இவை இரண்டுமே கடந்த இருபது ஆண்டுகளில் அசுரத்தனமான பொருளாதார வளர்ச்சியை சந்தித்துள்ள நாடுகள். அதற்கு அடுத்தபடியாக மெக்சிகோ. அதன் பிறகுதான் இந்தியா வருகிறது. முதல் இரண்டு இடங்களில் உள்ள நாடுகளிலுள்ள கறுப்புப் பணத்தின் அளவோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் உள்ள கறுப்புப் பணத்தின் அளவு ஐம்பதில் ஒரு பங்கு மட்டுமே. 

ஆக பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு அரசு முன்வைத்த முதல் காரணமே அடிபட்டுப் போகிறது. சரி அப்படியே வைத்துக்கொண்டாலும் கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்கிறார்களே அப்போதெல்லாம் கறுப்புப் பணம் நாட்டில் இல்லையா? 

இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட காலக்கட்டத்தை இப்போது திரும்பிப் பார்க்கும்போது இதன் பின்னாலிருந்த மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுவது: அப்போது நடக்கவிருந்த ஐந்து வட மாநில சட்டமன்ற தேர்தல்கள்.. குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தை தன் வசப்படுத்த நினைத்த மோடியும் அவருடைய கட்சியும் எதிர்கட்சிகள் வசமிருந்த கணக்கில் வராத பெரும் தொகை ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் தாள்களாகவே இருக்கும் என்றும் அதை செல்லாக் காசாக்கிவிட்டால் அவர்களுடைய மொத்த கஜானாவும் காலியாகிவிடும் எனறு எண்ணியிருக்கலாம். 

2. கள்ள நோட்டுகள் ஒழிக்கப்பட்டுவிடும்!

மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.1000, தாள்கள்களுக்கு மாற்றாக அரசு அறிமுகப்படுத்திய ரூ.2000 தாளில் பல நகலெடுக்கவியலாத அம்சங்கள் உள்ளன என்று விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் அது அறிமுகப்படுத்தப்பட்ட வெகு சில மாதங்களிலேயே பாக்கிஸ்தானிலிருந்து எல்லையை தாண்டி ஊடுருவிய தீவிரவாதிகளிடமிருந்து கட்டுக்கட்டாக ரூ.2000த்தின் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டபோது நாடே அதிர்ந்து போனது. மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி 2017-2018 நிதியாண்டில் இந்திய வங்கிகளில் செலுத்தப்பட்ட தொகைகளில் மட்டும் சுமார் 5.04 லட்சம் கள்ள நோட்டுகள் இருந்தனவாம்! அதில் 2000 ரூபாய் தாள் மட்டும் 1.80 லட்சம்! இதில் வியப்பு என்னவென்றால் புதிய ஐநூறு ரூபாய் மற்றும் இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிறகு நூறு ரூபாய் மற்றும் ஐம்பது ரூபாய் தாள்களின் கள்ளப் பிரதிகள் அதிக அளவில் புழக்கத்தில் வந்துள்ளதாம்! . 





இரண்டாயிரம் ரூபாய் தாள்களின் கள்ள பிரதிகள் நாட்டில் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதால் அதன் பயன்பாட்டை குறைக்கும் வகையில் கடந்த ஓராண்டில் அதை அச்சடிப்பதையே மத்திய ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது!

ஆக இதிலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியையே சந்தித்துள்ளது 

3. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயரும்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆண்டை தொடர்ந்து வந்த நிதியாண்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை சுமார் பத்து மில்லியன் அதாவது ஒரு கோடி உயர்ந்தது என்பது உண்மைதான். ஆனால் இதில் பெரும்பாலோனோர் மாத வருமானம் பெறுவோர். அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் சராசரியாக அதிகரித்த வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை விட இந்த அதிகரிப்பு ஒன்றும் அதிகம் இல்லை.. மேலும் எண்ணிக்கை அதிகரித்தாலும் வரி வசூலில் பெரிய அளவுக்கு ஏற்றம் இல்லை என்கிறது வருமான வரித்துறையின் அறிக்கை. அவ்வாறு அதிகரித்த தொகையிலும் பெருமளவு பணமதிப்பிழப்பு எடுக்கப்பட்ட துவக்க நாட்களில் மதிப்பிழந்த ரூபாய்களை அதாவது ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகளை வரி செலுத்துவதற்கு பயன்படுத்தலாம் என்ற அரசின் அறிவிக்கையை தொடர்ந்து செலுத்தப்பட்ட சுமார் ஐம்பதாயிரம் கோடியை கழித்துவிட்டால் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு முன்புள்ள ஐந்தாண்டுகளில் சராசரியாக வசூலிக்கப்பட்ட தொகையின் அளவிலேயே இருந்துள்ளது. 

எனவே இந்த காரணமும் ஏற்புடையதல்ல.

4. நாட்டில் பணப்புழக்கம் குறையும் அதனால் விலைவாசி குறையும்

நான் ஏற்கனவே விளக்கியுள்ளப்படி விலைவாசி குறைய பணப்புழக்கம் ஒரு காரணமே தவிர அதுமட்டுமே காரணமல்ல.. விநியோகம் முந்தைய அளவிலேயே இருந்து பணப்புழக்கம் மட்டும் கணிசமான அளவு குறைக்கப்பட்டு இருந்தால் மட்டுமே விலை வாசி குறைய வாய்ப்புள்ளது. ஆனால் உற்பத்தியும் குறைந்து அதன் விளைவாக விநியோக குறைவும் நுகர்வோரின் வாங்கும் சக்தி குறைவும் சம நிலையில் இருக்கும்போதும் விலைவாசி ஏறாமல் இருக்கும் என்பதுதான் உண்மை. ஆகவே விலைவாசி ஏறாமல் இருந்திருக்குமானால் அதற்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மட்டுமே காரணமல்ல.

ஆனால் இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகள் என்னென்ன?

நாளை பார்க்கலாம்...

28 அக்டோபர் 2019

பாஜகவின் சரிவு துவங்கிவிட்டது.....

சமீபத்தில் நடந்து முடிந்த மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல்களில் மக்கள் பாஜகவிற்கு அருதி பெரும்பான்மை கிடைக்காத அளவுக்கு வாக்களித்ததற்கு இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவும் அதனால் ஏற்பட்ட விளைவுகளால் மக்கள் பட்ட அவதியும் தான் முக்கிய காரணம் என்றால் மிகையாகாது. 

இரு மாநிலங்களிலும் பிரச்சாரத்தின்போது மோடியும் அமித்ஷாவும் காஷ்மீரில் 370வது பிரிவை நீக்கியதைப் பற்றியே பேசியது நினைவிருக்கலாம். ஆனால்  காஷ்மீரில் நடக்கும் பிரச்சினையைப் பற்றி எங்களுக்கு எவ்வித கவலையும் இல்லை என்பதை மக்கள் தெளிவாக தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தரப்பில் இன்னும் சிறிது ஒருங்கிணைப்பு சரியாக இருந்திருந்தால் ஹரியானாவில் நிச்சயம் ஆட்சியை கைப்பற்றியிருக்க முடியும். 

இந்த சூழலில் இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை குறித்து ஆட்சியாளர்கள் கவலைப்படும் நேரம் வந்துவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்துக்கொள்வது நல்லது. 

எதிர்கட்சிகள் மட்டுமல்லாமல் நாட்டிலுள்ள பொருளாதார வல்லுனர்கள், முன்னாள் நிதியமைச்சர், இன்னாள் நிதியமைச்சரின் கணவர்.... இவ்வளவு ஏன், நோபல் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டவர் வரையிலும் கடந்த ஆறு ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் சிறிது சிறிதாக நலிவடைந்து வந்துள்ளது என்பதை பல ஆதாரங்களுடன் எடுத்துரைத்துள்ளனர்.

ஆனால் அரசாங்கம்தான் இதை ஒப்புக்கொள்வதாக இல்லை.

இதில் தான் சிக்கலே....

தமிழக அரசு டெங்கு காய்ச்சல் விஷயத்தில் நடந்துக்கொள்வதுபோன்றுதான் மத்திய அரசும் பொருளாதார விஷயத்தில் self denial modeல் செயலாற்றிக்கொண்டிருக்கிறது.

டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் இருப்பதும் அது வேகமாக பரவி வருவதும் உண்மைதான் என்பதை தமிழக அரசும் பொருளாதாரம் உண்மையிலேயே தேக்க நிலையை அடைந்திருப்பது உண்மைதான் என்பதை மத்திய அரசும் ஒப்புக்கொண்டாலே போதும், பாதி கிணறு தாண்டிய மாதிரிதான். 

இந்த நிலையிலிருந்து எவ்வாறு மீளலாம் என்பதை அதன் பிறகுதான் எடுக்க முடியும். நாட்டில் எவ்வித பொருளாதார நெருக்கடியும் இல்லை... அமேஜான் ஆன்லைன் ஸ்டோரில் ஒரே வாரத்தில் சுமார் இருநூறு கோடிக்கு செல்பேசிகள் விற்பனை ஆகியுள்ளன... கடந்த ஒரே மாதத்தில் மூன்று பாலிவுட் திரைப்படங்கள் முன்னூறு கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளன என்பன போன்றவற்றையெல்லாம் பாமரத்தனமாக சுட்டிக்காட்டி  இந்திய பொருளாதாரத்தில் எவ்வித தேக்கமும் ஏற்படவில்லை என்றெல்லாம் கூறிவருவதைப் பார்க்கும்போது இதே அமேஜானின் கடந்த வருட நிதியறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்த லாபத்தை சுட்டிக்காட்டி அமெரிக்காவில் பொருளாதரம் நலிவடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவது தவறு என்ற அதிபர் டிரம்ப்புக்கும் நம்முடைய பிரதமர் மோடிக்கும் இடையில் எவ்வளவு ஒற்றுமை உள்ளது என்பது தெரிகிறது. 

இந்தியாவில் பொருளாதாரம் நலிவடைந்து வருகிறது என்றால் உலகமெங்குமே இதே நிலைதான் என்று உலக வங்கியே கூறுகிறது என்கிறார் நிதியமைச்சர். பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் நம்முடைய தமிழகத்தில் டெங்குவின் பாதிப்பு மிக, மிக குறைவு என்று நம்முடைய சுகாதார அமைச்சர் கூறுவது போல்தான் உள்ளது இது. நம்முடைய மத்திய மாநில அரசுகளிடத்தில்தான் எத்தனை ஒற்றுமை!

சில தினங்களுக்கு முன் பொருளாதாரத்தில் 2019ம் ஆண்டுக்கான  நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள அமெரிக்க வாழ் இந்திய பொருளாதார வல்லுநர் அபிஜித் பானர்ஜி அவர்கள் கூறுகையில் இந்தியாவின் பொருளாதாரம் கடந்த ஆறு ஆண்டுகளாகவே சரியான பாதையில் பயணிக்கவில்லை என கூறியிருந்ததை பத்திரிகைகளில் வாசிக்க முடிந்தது. அதாவது மோடி அவர்கள் பதவியேற்றதிலிருந்துதான் இந்த நிலை என்பதை சூசகமாக கூறியிருந்தார் அவர்.

இதையேத்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு நம்முடைய மத்திய நிதியமைச்சரின் கணவரும் கூறியிருந்தார். அவர் தொடர்ந்து கூறுகையில் முந்தைய ஆட்சி காலங்களில் அதாவது நரசிம்மராவ் முதல் மன்மோகன் சிங் ஆகியோர ஆட்சி செய்த காலத்தில் அவர்கள் வழிநடத்திய முறையை பின்பற்றியிருந்தாலே இந்த சரிவை தவிர்த்திருக்க முடியும் என்றார்.

முன்னாள் மத்திய ரிசர்வ் வங்கி தலைவர் ராஜன் அவர்கள் கூறும்போது கடந்த மூன்று ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பல பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் மத்திய அரசால் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள்தான் இந்திய பொருளாதாரம் முடங்கிப்போனதற்கு முக்கிய காரணம் என்றார். 

அதென்ன முக்கிய சீர்திருத்தங்கள்?

முதலாவது 2016ஆம் ஆண்டு அவசர, அவசரமாக மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவருக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை.

அதன் பாதிப்பில் இருந்து நுகர்வோரும், சிறு, குறு வணிக மற்றும் தொழில் நிறுவனங்களும் மீள்வதற்கு முன்பே கடந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு சற்று முன்பு எடுக்கப்பட்ட .ஜி.எஸ்.டி வரி திட்டம்.

முதலாவது முடிவால் நுகர்வோர் கைகளில் இருந்த ரொக்கப்பணம் முழுவதுமாக பறிக்கப்பட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டது. அப்படி சேர்ந்த தொகையையும் முழுவதுமாக மக்களை எடுக்க விடாமல் ரேஷன் முறையில் அலைக்கழித்தது. இது மட்டுமா? வங்கிகளும் கூட இந்த பணத்தை முழுமையாக பயன்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதிக்காமல் அதில் பெரும் விழுக்காட்டை முடக்கிப் போட்டது. ஆக நுகர்வோர் பணம் சந்தையிலிருந்து அகற்றப்பட்டுவிட்டது. பொருளாதார வல்லுநர்கள் பாஷையில் சொல்ல வேண்டுமானால் சந்தையின் தேவைகளை (Market Demand) பெருமளவு குறைத்துவிட்டது. நுகர்வோரின் வாங்கும் சக்தியை குறைத்தாலே அவர்களின் தேவையும் குறைந்துவிடும் அல்லவா? இதுதான் பொருளாதார வீழ்ச்சியின் துவக்கம்..

இரண்டாவது முடிவு தொழில், வணிகம் செய்வோரை முடக்கிப்போட்டுவிட்டது. வல்லுநர்கள் பாஷையில் வணிக மற்றும் தொழில் துறை நிறுவனங்களின் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலையை இந்த புது வரி உயர்த்தியதால் ஏற்கனவே வாங்கும் திறனை இழந்திருந்த நுகர்வோரிடமிருந்து வரக்கூடிய மீதமிருந்த தேவையையும் குறைத்துவிட்டது. இதன் விளைவாக உற்பத்தி குறைந்து சந்தையில் பொருட்களின் வரத்து (Supply) குறைந்துபோனது. 

பொருளாதார வீழ்ச்சியிலும் விலைவாசி அதிக அளவில் உயராமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்கின்றனர் வல்லுநர்கள்.

எப்படி?

நாளை பார்க்கலாம்....

12 செப்டம்பர் 2019

பொதுத்துறை வங்கிகளின் இணைப்பின் பின்னணி என்ன?

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களால் அறிவிக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு திட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துமே மிகவும் நலிவடைந்த வங்கிகளாகும். 

நிரவ் மோடியுடன் கூட்டு சேர்ந்துக்கொண்டு வங்கி ஊழியர்கள் செய்துக்கொண்டிருந்த மோசடியை பல ஆண்டுகளாக கண்டுக்கொள்ளாமல் இருந்ததன் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளை இழந்த பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியன்டல் பேங் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளை இணைத்து இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியாக உருவாகப்போகிறது என்கிறார்கள்.  இந்த மூன்று வங்கிகளுடைய ஒட்டுமொத்த வைப்பு நிதி மற்றும் அவை வழங்கியுள்ள கடன் தொகைகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் இந்திய ஸ்டேட் வங்கிக்கு அடுத்த வங்கியாக உருவெடுக்கும் என்பது உண்மைதான். ஆனால் இவற்றின் ஒட்டுமொத்த வாராக்கடன்களின் அளவும் நாட்டிலேயே அதிகமானதாகத்தான் இருக்கும்.  இவை மூன்றுமே வட இந்தியாவில் அதிக கிளைகளைக் கொண்டுள்ள வங்கிகளாகும். இவற்றை இணைப்பதன் மூலம் ஒரே நகரத்தில் ஏன் ஒரே சாலையில் கூட பல கிளைகளைக் கொண்டுள்ள வங்கியாகவும் மாறும் சூழல். 

அடுத்து தென் இந்தியாவைச் சார்ந்த அதுவும் ஒரே மாநிலத்தில் தலைமையலுவலகத்தைக் கொண்டிருக்கும் கனரா மற்றும் சின்டிகேட் வங்கிகள். மேலே குறிப்பிட்ட வட இந்திய வங்கிகள் அளவுக்கு மோசமான நிலைமையில் இவ்வங்கிகள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் ஒரே மாநிலத்தைச் சார்ந்தவை என்பதால் பல கிளைகளை மூடவோ இடமாற்றம் செய்யவோ வேண்டியிருக்கும். 

மூன்றாவது வங்கி யூனியன் வங்கி, ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகளை இணைத்து உருவாக்கப்படவுள்ளது. இதில் மிகப்பெரிய அளவில் நிர்வாக சீர்திருத்தங்கள் செய்ய தேவையிருக்காது. ஆனால் இதுவரை சுமாராக இயங்கி  வரும் யூனியன் வங்கியின் நிதிநிலமை மற்ற இரு வங்கிகளின் வாராக் கடன் மற்றும் அவற்றின் மோசமான நிதிநிலையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இணைப்புக்குப் பிறகு யூனியன் வங்கி அதிகாரிகளின் கையே ஓங்கி நிற்கும். ஏனெனில் இதனுடன் ஒப்பிடுகையில் அனைத்து வகையிலும் மற்ற இரு வங்கிகளும் சிறியவை.

நான்காவது இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கிகளை இணைத்து உருவாக்கப்படவுள்ளது. ஒன்று மேற்கு வங்கத்தைச் சார்ந்தது. இன்னொன்று தமிழகத்தைச் சார்ந்தது.   ஆனால் அலகாபாத் வங்கியின் மிக அதிக அளவிலான வாராக்கடன்கள் இந்தியன் வங்கி ஈட்டக்கூடிய மொத்த லாபத்தையும் விழுங்கிவிடும் போலுள்ளது. 

இந்த பத்து வங்கிகளை இணைத்து வர்த்தக அளவில் நான்கு பெரிய வங்கிகளாக உருவாக்குவதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் நடவடிக்கைகளில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஏனெனில் இந்திய வங்கித்துறையின் செயல்பாடுகளில் குறைகளாக உலக வங்கி குறிப்பிட்டுள்ள அனைத்தும்  இணைப்புக்குப் பிறகும் தொடரத்தானே போகிறது.

1. வங்கி செயல்பாடுகளில் ஆட்சியாளர்களின் தலையீடு.  இது என்றும் தொடரும் தொடர்கதையாகத்தான் இருக்கும்.

2. வாடிக்கையாளர்களின் கடன் தேவைகளை சரியாக கணிக்கும் திறன் இந்திய வங்கிகளிடம் இல்லை . இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளான வங்கி அதிகாரிகள்தானே இணைப்புக்குப் பிறகும் இந்த வங்கிகளை வழிநடத்தப் போகிறார்கள்? அப்படியானால் அவர்களுடைய கணிக்கும் திறனில் முன்னேற்றம் ஏற்படவா போகிறது? வங்கிகள் பெரிதானால் அவர்களுடைய கடன் வழங்கும் திறன் பெருகும் வங்கிகளும் வலுவடையும் என்கிறார் நம்முடைய நிதியமைச்சர். 

நூறு ரூபாயை வைத்துக்கொண்டு இலாபம் ஈட்ட தெரியாதவனிடம் ஆயிரம் ரூபாயை கொடுத்தால் சரியாகிவிடும் என்பதுபோல் இருக்கிறது. மேலும்  கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வாணம் ஏறி வைகுண்டம் போறானாம் என்பார்களே அதுபோல் உள்ளது நிதியமைச்சரின் இந்த கணிப்பு.

ஆக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ள இரண்டு குறைபாடுகளுமே வங்கிகளின் இணைப்புக்குப் பிறகும் தொடரத்தான் போகின்றது.

வங்கிகளின் இணைப்புக்கு இது ஒரு காரணமாக நிதியமைச்சர் கூறினாலும் உண்மையான காரணம் அதுவல்ல என்று நினைக்கிறேன். இணைக்கப்படவுள்ள வங்கிகளுடைய சமீபத்திய நிதிநிலை அறிக்கைகளை ஆய்வு செய்ததில் நான் கண்டது இதுதான். இவை வழங்கிய மொத்த கடன்களில் யாருக்கு அதிக அளவில் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை கீழேயுள்ள படத்தை  பார்த்தாலே புரிந்துவிடும்.



சமீபத்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையின் படி வங்கிகளிலுள்ள மொத்த வாராக்கடன்களில் கார்ப்பரேட் குறிப்பாக சேவைத் துறை மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட கடன்கள்தான் அதிகம் அதாவது 75 விழுக்காடு! இதையும் வங்கிகளின் மொத்தக் கடன் தொகையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது சுமார் 50 விழுக்காடு என்ற உண்மையையும் ஒப்பிட்டு பார்க்கும்போது இன்றை பொதுத்துறை வங்கிகளின் அவல நிலைக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் காரணம் என்பது தெளிவாக புரிகிறது.

சிறு சிறு வங்கிகளாக செயல்பட்டுக்கொண்டிருக்கும்போதே விவசாயத்துக்கும் சிறு குறு தொழில்களுக்கும் 20 விழுக்காட்டுக்கும் குறைவாக கடன் வழங்கி வரும் இந்த வங்கிகள் இணைக்கப்பட்டு பெரும் வங்கிகளானால் யாருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் எனறு நினைக்கிறீர்கள்? அது நிச்சயம் விவசாயம், சிறு குறு தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களாக இருக்க வாய்ப்பேயில்லை. இதே நிலைதான் தனிநபர் கடன்களுக்கும் ஏற்படும். 

தற்போது வங்கிகளுடைய முதலீட்டு தொகையில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு வரையில் மட்டுமே கடன் வழங்க முடியும் என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதன் படி பார்த்தால் தனித்தனியாக குறைந்த அளவு முதலீட்டுடன் இயங்கி வரும் இந்த வங்கிகளால் பெரிய அளவில் கடன் தேவைப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் பல சிக்கல்கள் உள்ளன. ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஐந்தாயிரம் கோடி கடன் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.  இப்போதுள்ள சூழலில் அத்தனை பெரிய கடனை தனியாக வழங்க பெரும்பான்மையான வங்கிகளால் முடியாது. அந்த சூழலில் கார்ப்பரேட் நிறுவனம் பிரதான கணக்கு வைத்திருக்கும் வங்கி பிற வங்கிகளுடன் இணைந்து கூட்டாக அந்த கடனை வழங்க ஒரு அமைப்பை (consortium) ஏற்படுத்தும். மொத்த கடன் தொகையை தங்களுடைய தகுதிக் கேற்ப பிரித்துக் கொள்ளும். இதனால் கடன் வழங்குவதிலும் அதன் பிறகு கடனை நிர்வகிப்பதிலும் வசூலிப்பதிலும் இந்த வங்கிகள் அனைத்தும் கூட்டாக மட்டுமே எந்த முடிவையும் எடுக்க முடியும். இது கடன் வழங்கும் வங்கிகளுக்கும் கடன் பெறும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் பல சிக்கல்களை ஏற்படுத்தும்  தனித்தனியாக இயங்கிவரும் சிறிய வங்கிகளை இணைப்பதன் மூலம் இந்த சிக்கல்களை முழுமையாக தவிர்க்க முடியும் என்பதாலும் இந்த வங்கி இணைப்பு நாடகம் அரங்கேற்றப்படுகிறது. இதனால் வங்கிகளின் வர்த்தகம் வேண்டுமானால் படு வேகமாக வளரும். ஆனால் அந்த வர்த்தகம் வலுவானதாக பாதுகாப்பானதாக இருக்குமா என்பதுதான் கேள்வி. இதையே தான் பாதிக்கப்படவுள்ள வங்கிகளின் வங்கி ஊழியர் சங்கங்களும் கூறுகின்றன. 

மேலும் வளர்ந்துவிட்ட வங்கி முன்பு போல் விவசாயம், சிறு குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் கடன்களை வழங்குவதில் அக்கறை காட்டுமா என்பதும் கேள்விக்குறி.

மத்தியில் ஆளும் பாஜகவின் தேவையும் இதுவாக இருக்கலாம். ஏனெனில்  கடந்த தேர்தலுக்கு முன்னால் கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடையில் சுமார் 90 விழுக்காட்டுக்கும் மேல் பாஜகவுக்குத்தான் வழங்கப்பட்டது என்பதை பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டதை கண்டிருப்பீர்கள். ஆகவே அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதை ஆட்சியாளர்கள் விரும்புவார்கள். 

இதுதான் இந்த இணைப்பின் பின்னால் இருக்கும் உண்மையான காரணமாக இருக்கக் கூடும்.

இதனால் அதிகம் பாதிக்கப்பட போகிறவர்கள் வங்கி ஊழியர்கள். பத்து வங்கிகளை இணைத்து அதுவும் நாட்டின் ஒரே பகுதியில் இயங்கி வரும் வங்கிகள் இணைக்கப்படும்போது நிச்சயம் பல கிளைகள் ஒருங்கிணைக்கப்படுவதை தவிர்க்க வாய்ப்பே இல்லை. யாருக்கும் பணியிழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று நிதியமைச்சர் கூறினாலும் பணியிழப்பு ஏதாவது ஒரு வகையில். அது கட்டாய அல்லது விருப்ப ஓய்வாக இருக்கலாம், அல்லது மறைமுக பணியிழப்பு அதாவது வலுக்கட்டாயமாக பணியிட மாற்றம் செய்யப்படும் சூழலில் ஊழியர்களே பணியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்படலாம். பணியிழப்பு எந்த ரூபத்தில் வந்தாலும் அது இழப்புத்தானே?

சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விவாதத்தில் வங்கிகள் இணைப்பு வங்கி ஊழியர்களுக்கு வேண்டுமானால் சிக்கலை ஏற்படுத்தலாம் ஆனால் மொதுமக்களுக்கு அது நல்ல பலனையே தரும் என்று பாஜக பேச்சாளர் கூறினார். இதுதான் அந்த கட்சி தலைமையின் நிலைப்பாடாக இருக்கலாம். 

ஆனால் எந்த ஒரு நிறுவனமும் நல்ல நிலையில் இயங்க வேண்டுமென்றால் முதலில் அதில் பணியாற்றும் ஊழியர்களுடைய நலனில் நிர்வாகம் அக்கறை காட்டவேண்டியது அவசியம், மன நிறைவு இல்லாமல் பணியாற்றும் ஊழியர்களால் பணியாற்றும் நிறுவனத்திற்கும் எந்த பலனும் கிடைக்காது அதனுடைய வாடிக்கையாளர்களுக்கும் சரியான சேவையை வழங்க முடியாது. நாட்டின் மிகப் பெரிய சேவை (srvices) நிறுவனங்களான பொதுத்துறை வங்கிகளின் எஜமானர்களான இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் இதை மறந்துவிடக் கூடாது.

இன்று இருக்கும் ஆட்சியாளர்கள் நாளை இருப்பதில்லை. அதில் பாஜகவும் விதிவிலக்கல்ல. சிறையில் தள்ளுபவர்களே பிற்காலத்தில் சிறைக்கு செல்ல நேரிடுவதை கண்கூடாக காண்கிறோம்.

இதை உணர்ந்து இணைக்கப்படும் வங்கிகளை இணைப்புக்குப் பிறகு நிர்வாக பொறுப்பில் அமர்த்தப்படும் அதிகாரிகள் ஆட்சியாளர்களின் 

தலையீட்டுக்கு அஞ்சி வங்கிகளை பாதிக்கும் முடிவுகளை எடுக்கலாகாது. அது நாளை உங்களையே பாதிக்கலாம். நீங்கள் பாதிக்கப்படும்போது அதற்கு காரணமாயிருந்த அரசியல்வாதிகளோ, அரசு அதிகாரிகளோ உங்களை காப்பாற்ற வரப்போவதில்லை.

இணைக்கப்படவிருக்கும் வங்கிகளில் யூனியன் வங்கி, கனரா வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகிய மூன்றைத் தவிர மற்ற ஏழு வங்கிகளும் கடந்த சில ஆண்டுகளாகவே நஷ்டத்தில் இயங்கிவருகின்றன. இவை சேர்த்து வைத்துள்ள வாராக்கடன்களால் இதுவரை இலாபத்தில் இயங்கிவந்த மற்ற மூன்று வங்கிகள் ஈட்டுகின்ற இலாபத்தை இணைக்கப்படவுள்ள வங்கிகள் முழுவதுமாக கரைத்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனை.

*********

11 செப்டம்பர் 2019

பொதுத்துறை வங்கிகள் இணைப்பின் பின்னணி.

வாராக் கடன்கள் 

2001ம் ஆண்டு வரை ஒரு கடன் கணக்கில் பற்று வைக்கப்படும் வட்டித் தொகையானது அது வாடிக்கையாளரால் திருப்பி செலுத்தப்பட்டாலும் நிலுவையில் இருந்தாலும் அது வங்கியின் வருமானமாக கருதப்பட்டது. இதன் விளைவாக வங்கிகள் தங்களுடைய ஆண்டு நிதிநிலை அறிக்கைகளில் காட்டி வந்த இலாப தொகைகள் உண்மையிலேயே ஈட்டப்பட்டதுதானா என்கிற ஐயம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட துவங்கியது. மேலும் பற்று வைக்கப்பட்ட வட்டித் தொகைகளை வசூலிப்பதில் வங்கிகள் போதிய அக்கறை காட்டுவதில்லை என்பதையும் இந்திய ரிசர்வ் வங்கி தங்களுடைய தணிக்கைகளில் கண்டுபிடித்தது.

இந்த குறையை போக்கும் நோக்கத்துடன் 31.3.2001ல் ஒரு சுற்றறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு அனுப்பியது. அதில்  வட்டி, அல்லது தவணைத் தொகை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு செலுத்தப்படாமல் இருந்தால் அந்த கணக்குகள் குறையுள்ள கணக்குகளாக I(Substandard)கருதப்பட வேண்டும் என்றும் அத்தகைய கணக்குகளில் பற்று வைக்கப்பட்ட வட்டி தொகைகள் வங்கியின் இலாப கணக்கில் வருவாயாக எடுத்துக்கொள்ளப்படக் கூடாது என்றும் வங்கிகள் அறிவுறுத்தப்பட்டன.

இந்த அதிரடி உத்தரவால் நாட்டில் பல வங்கிகள் குறிப்பாக பொதுத்துறை வங்கிகளுடைய உண்மையான நிதி நிலை வெட்ட வெளிச்சமானது. இதுவரை இலாபத்தில் இயங்கிவந்த  பல வங்கிகள் நஷ்ட கணக்கு காட்ட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டன. 

மேலும் இத்தகைய கணக்குகள் வாராக் கடனாக கருதப்பட்டு அவற்றில் நிலுவையிலுள்ள தொகைகளில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு தொகையை ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் தங்களுடைய இலாபத்தில் இருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வங்கிகள் அறிவுறுத்தப்படவே வங்கிகளின் நிதிநிலமை இன்னும் மோசமானது. பெரும்பாலான பொதுத்துறை  வங்கிகள் பெருத்த இழப்பை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் அவற்றின் முதலீடும் (capital) பெருமளவு சரியத் துவங்கியது.  வாராக் கடன்களின் அளவோ  2001 ஆண்டு இருந்த அளவிலிருந்து வளர்ந்து வளர்ந்து இப்போது ஒரு பூதாகரமான நிலையை அடைந்துள்ளதை கீழ்காணும் படத்தில் காணலாம்.  இத்தகைய கடன்களில் சுமார் 90 விழுக்காடு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் என்கிறது ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கை.


(1 trillion=1lakh crores)


அத்துடன் வங்கிகள் தங்களுடைய முதலீட்டில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு வரை மட்டுமே கடன் வழங்க முடியும் என்ற ரிசர்வ் வங்கியின் நிபந்தனையும் வங்கிகளின் கடன் வழங்கும் திறனை வெகுவாக பாதிக்க துவங்கியது. இதனை தொடர்ந்து வங்கிகளின் வருவாய் ஈட்டும் திறனும் சரியத் துவங்கியது. விளைவு? வங்கிகளின் நஷ்டம் நாளுக்கு நாள் பெருகி சில வங்கிகளின் முதலீடு முழுவதுமாக கரைந்து போயின. 

இந்த சூழலிலிருந்து பொதுத்துறை வங்கிகளை மீட்டெடுக்கத்தான் மத்திய அரசு அவ்வப்போது மத்திய நிதியிலிருந்து ஒரு கணிசமான தொகையை வங்கிகளுக்கு முதலீடாக வழங்கத்துவங்கியது. துவக்கத்தில் ஆயிரக்கணக்கான கோடிகள் என்ற நிலை இப்போது இலட்சம் கோடிகளாக உயர்ந்துள்ளது. அதாவது மக்கள் செலுத்தும் வரிப்பணம் இத்தகைய வங்கிகளுக்கு முதலீடாக சென்றடைகின்றன. இதன் விளைவாக வரியை நேர்மையுடன் செலுத்தும் மக்களுக்கு நேரிடையாக எவ்வித பலனும் கிடைப்பதில்லை. சமூக நலத்திட்டங்களுக்கு செலவழிக்கவோ அல்லது இயற்கை சீற்றத்தால் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய நிவாரணம் அளிக்கவோ அல்லது விவசாயக்கடன்களை ரத்து செய்யவோ போதிய நிதி இல்லை என்பதை காரணம் காட்டி புறக்கணிக்கும் மத்திய அரசு வங்கிகளின் முதலீட்டை கூட்டுவதற்கு லட்சோப லட்ச கணக்கில் வாரி இறைப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுவதில் என்ன தவறிருக்க முடியும்?

கடந்த நிதியாண்டில் பல பொதுத்துறை வங்கிகள் நஷ்ட நிலையிலிருந்து மீண்டு வந்துள்ளன என்று இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்தாலும் இது உண்மையான நிலை அல்ல என்று பல பத்திரிகைகளும் பொருளாதார நிபுணர்களும் எழுதி வருவதை காண முடிகிறது. வாராக்கடனாக ஏற்கனவே கணிக்கப்பட்ட கணக்குகளை மறுசீரமைப்பு (restructuring) என்ற பெயரில் மறுவாழ்வு அளித்து அவற்றை இன்னும் சில மாதங்களுக்கு அதாவது அடுத்த நிதியாண்டு வரையிலும் வங்கிகள் நீட்டித்து வருகின்றன என்பதுதான் உண்மை. ஆனால் இவற்றில் நிலுவையிலுள்ள வட்டியையோ அல்லது மாதத் தவணைகளையோ சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து உண்மையிலேயே வசூலிக்கப்படுகின்றனவா என்பது சந்தேகமே. வங்கிகள் கடன்களை கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து வசூலிப்பதை விட எழுதித் தள்ளுவதே அதிகம் என்பதை கீழுள்ள படத்தை பார்த்தாலே தெரியும்



இதுதான் இன்றை பொதுத்துறை வங்கிகளின் உண்மையான நிலமை.

ஜி20 நாடுகளில் இரண்டாவது மிகவும் மோசமான வங்கித் துறையைக் கொண்டிருப்பது இந்தியா என்கிறது உலக வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கை. பொதுத்துறை வங்கிகளின் இத்தகைய பரிதாபகரமான நிலைமைக்கு முக்கியமான காரணங்களாக உலக வங்கி முன்வைப்பது வங்கிகளின் கடன் கொள்கைகள்தானாம். அதாவது இந்திய வங்கிகளுக்கு வாடிக்கையாளரின் கடன் தேவைகளை சரியாக கணிக்கும் திறன் இல்லை என்றும் பெரும்பாலான வங்கி செயல்பாடுகளின் ஆட்சியாளர்களின் தலையீடு இருப்பதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டுகிறது. 

இது எனக்கு தெரிந்தவரை உண்மை தான். இன்று வங்கிகளில் உயர்பதவியில் அமர்ந்திருக்கும் பல அதிகாரிகள் ஆட்சியாளர்களின் தயவாலும் பரிந்துரையாலும் அந்த பதவியை அடைந்தவர்களே. ஆகவே ஆட்சியாளர்களின் தேவைகளை அவ்வப்போது நிறைவேற்றியே தீரவேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். இது இப்போதைய ஆட்சியாளர்களை மட்டும் குறை சொல்வதில் பயனில்லை. வங்கிகள் எப்போது நாட்டுடமை ஆக்கப்பட்டனவோ அப்போதிலிருந்தே மத்தியிலும் மாநிலங்களிலும் அதிகாரத்திலுள்ளவர்களின் தலையீடு இருந்து வந்ததை மறுப்பதற்கில்லை. 

இத்தகைய சூழலில் நலிவடைந்துள்ள பொதுத்துறை வங்கிகளை இணைப்பதன் மூலம் சரிவை சரிக்கட்டிவிட முடியும் என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்திருப்பது வியப்பளிக்கிறது. 

அதை நாளை பார்க்கலாம்.....

10 செப்டம்பர் 2019

வங்கிகள் இணைப்பின் பின்னணி என்ன?

1969 ஆம் ஆண்டு முதன் முறையாக நாட்டில் அப்போது இயங்கிவந்த  பதினான்கு பெரிய தனியார் வங்கிகள் (50 இலட்சத்திற்கும் அதிகமான வைப்பு நிதி (Deposit) கொண்டிருந்த) வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இதன் பின்னால் அரசியல்தான் இருந்ததே தவிர நாட்டின் பொருளாதாரம் உயர்வடைய வேண்டும் என்றோ அல்லது ஏழை எளிய மக்கள் எளிதாக கடன் பெற வேண்டும் என்ற எண்ணமோ இருப்பதாக தெரியவில்லை என அப்போதே பல எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதன் பிறகு பதினோரு ஆண்டுகள் கழித்து மேலும் ஆறு (அதாவது ரூ.200 இலட்சம் வைப்பு நிதி கொண்டிருந்த)வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. 

தேசியமயமாக்கப்பட்டபோது அரசால் முன்வைக்கப்பட்ட காரணங்களுள் மிக முக்கியமானது என்னவென்றால் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மக்களும் எளிதில் கடன் பெற முடிவதுடன்  வங்கி சேவைகள் நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்றடையும் என்பது. 

இந்த இரு நோக்கங்களும் பெரும்பாலும் நிறைவேறியுள்ளன என்பதை மறுக்க முடியாது.:

1. தேசியமயமாக்கப்பட்டதிலிருந்து அதாவது கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாட்டிலுள்ள மொத்த வங்கி கிளைகளின் எண்ணிக்கை சுமார் 8,500லிருந்து 1.45,000 ஆக உயர்ந்துள்ளது. இவற்றுள் சுமார் 90% கிளைகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் என்றால் மிகையல்ல.



2. சுமார் 65000 வாடிக்கையாளர்களுக்கு ஒரு வங்கி கிளை என்ற 1969ம் வருட நிலையிலிருந்து சுமார் 14,000 வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிளை என்ற அளவுக்கு வங்கிகள் நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ளன. இவற்றுள் ஐம்பது விழுக்காடு கிளைகள் கிராம மற்றும் சிறிய நகர்ப்புறங்கிளில் செயல்படுகின்றன. 

3.1969ம் ஆண்டு வரை வசதிபடைத்தவர்களுக்கு மட்டும் வங்கிக் கடன் என்ற நிலை மாறி விவசாயம், சிறு, குறு தொழில்கள், சில்லறை வணிகம் என  நாட்டில் யார் வேண்டுமானாலும் வங்கிகளை அணுகி மிகுந்த சிரமம் இல்லாமல் கடன் பெற முடியும் என்ற நிலை உருவானது.

4. வங்கிகளில் கணக்கு துவங்கும் பழக்கமும் மிகப் பெரிய அளவில் பெருகிவருவதையும் பார்க்க முடிகிறது. கடந்த ஐம்பதாண்டுகளில்  வங்கி சேமிப்பு (DEPOSIT) தொகை ரூ.1,24,000 billion (1 Billion=100 crores) என்ற எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இத்தொகையில் நீண்ட கால வைப்புத்தொகை (fixed deposits) ஐம்பது விழுக்காட்டிலிருந்து சுமார் தொன்னூறு விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. இது நாட்டிலுள்ள வங்கிகள் மீது குறிப்பாக பொது வங்கிகள் மீது மக்கள் வைத்திருக்கும் அபிரிமிதமான நம்பிக்கையை காட்டுகிறது எனலாம். 

5. இதே போன்று வங்கிகள் கடனாக வழங்கும் தொகையும்  ரூ.1,05,000 billion அளவுக்கு  உயர்ந்துள்ளது.




சுருக்கமாக கூற வேண்டுமென்றால் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு நாடு அடைந்த பொருளாதார வளர்ச்சிக்கு பொதுத்துறை வங்கிகள் பெருமளவு உதவிசெய்துள்ளன என்பது உண்மைதான். 

ஆனால் நாட்டுடமையாக்கப்படுவதற்கு முன்பு சிறிய அளவில் கட்டுப்பாடுடன் இயங்கிவந்த தனியார் வங்கிகளின் கிளைகள் கட்டுக்கடங்காத அளவுக்கு பெருகியதாலும் அதன் விளைவாக ஏற்பட்ட மிகப் பெரிய வணிக வளர்ச்சியாலும் நிர்வாக ரீதியாக பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழலுக்கு வங்கிகள் தள்ளப்பட்டன என்பதும் உண்மை. இன்று பொதுத்துறை வங்கிகளில் பல பெரும் நஷ்டத்தில் இயங்கிவருவதற்கு இத்தகைய அபிரிதமான வளர்ச்சியும் ஒரு முக்கியமான காரணமாக கருதப்படுகின்.றது.

மிகப் பெரிய அளவிலான விரிவாக்கம்  மிகப் பெரிய அளவிலான வைப்புத் தொகைகளையும் வங்கிகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து ஈட்டித் தந்தன. வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட வைப்பு தொகைகளுக்கு நியாயமான அளவிலான வட்டி அளிப்பதற்கு அவற்றை அதிக அளவில் கடனாக வழங்க வேண்டிய அவசியமும் வங்கிகளுக்கு உருவானது. இலட்ச கணக்கில் கடன் வழங்கி வந்த வங்கிகள் கோடிக் கணக்கில் வழங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டன. இது மேலும் மேலும் பலுகிப் பெருகி இன்று ஒரே நிறுவனத்திற்கு ஆயிரம், இரண்டாயிரம் கோடிகள் என கடன் வழங்கும் நிலையை நாட்டுடமையாக்கப்பட வங்கிகள் அடைந்துள்ளன. 

கோடிகள் ஆயிரக் கணக்கில் பெருகி இன்று இலட்சம் கோடி என்ற பெரும் தொகைகயை நாட்டிலுள்ள வெகு சில கார்ப்பரேட் நிறுவனங்களை மிகப் பெரிய வணிக மற்றும் தொழில் நிறுவனங்களாக இந்த வங்கிகள் உருவாக்கியுள்ளதை காணமுடிகிறது.

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மிகச் சிறிய நிறுவனங்களாக இருந்த நிறுவனங்கள் பல இன்று உலக நிறுவனங்களாக  (multi-national ompanies) உருமாறியுள்ளன என்றால் அதற்கு மிக முக்கியமான காரணம் வங்கிகள் வழங்கிய கடன்களே என்றால் மிகையாகாது.

வங்கிகளிடமிருந்து எளிதாக பெற்ற கடன் தொகைகளை பெரும்பாலான நிறுவனங்கள் சரியாக பயன்படுத்தாத காரணத்தாலும், உலகளவில் பொருளாதாரம் சரிவை சந்தித்தாலும் பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்க துவங்கின. இதன் விளைவாக வங்கிக் கடன்களை திருப்பித் தர முடியாத சூழல் ஏற்பட்டது.

இதன் விளைவாக வங்கிகள் வழங்கிய கடன்கள் வாராக் கடன்களாக உருமாற வங்கிகளின் வருமானம் சரியத் துவங்கியது...

நாளையும் தொடரும்

14 ஆகஸ்ட் 2019

காஷ்மீர் முடிவின் பின்னணி என்ன?

சமீபத்தில் காஷ்மீர் மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த அனைத்து சிறப்பு சலுகைகளும் ரத்து செய்யப்பட்டு அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேவங்களாக பிரிக்கப்பட்டதையொட்டி நாடு முழுவதும் பலவகையான விமர்சனங்கள் எழுந்தன.

நாட்டின் பிரதான எதிர் கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் இதை முழுமூச்சுடன் எதிர்த்து வந்தாலும் அவை ஆட்சியில் இல்லாத மாநிலங்களை ஆளும் பாஜக அல்லாது ஆட்சியாளர்களும் இதை மறைமுகமாக ஆதரித்ததால்தான் இந்த மசோதா மாநிலங்கள் அவையிலும் மிக எளிதாக நிறைவேற்றப்பட்டது.

எதற்காக இந்த அவசர முடிவு என்கின்றனர் பலரும்.

ஆனால் உண்மையில் இது அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்பதை இந்த முடிவின் பின்னணியை சற்று ஆராய்ந்தால் தெரியும் என்று நான் கருதியதன் விளைவே இந்த பதிவு.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்ட குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்த சிற்றரசுகள் இருந்தனவாம். அவற்றை அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் அவருக்கு உறுதுணையாக அப்போது உள்துறையில் உயர் அதிகாரியாக இருந்த கேரளத்தைச் சார்ந்த திரு வி.பி.மேனன் ஆகியோரின் விடா முயற்சியாலும் இந்த சிற்றரசுகள் இந்தியாவுடன் ஒவ்வொன்றாக இணைக்கப்பட்டன. இவற்றுள் இவ்விருவரின் எவ்வித முயற்சிகளும் பிடிகொடுக்காமல் இருந்துவந்தவை ஹைதராபாத் மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசுகள்.

இவ்விரண்டு அரசர்களையும் தன்னுடைய புத்திக் கூர்மையாலும் நாவண்மையாலும் வழிக்கு கொண்டு வந்தவர் திரு வி.பி. மேனன் அவர்கள்தான் என்கிறது வரலாறு. பட்டேலுக்கு நூறடியில் உருவச் சிலை வைத்து போற்றும் பாஜக  அவருக்கு வலதுகரமாக இருந்து இயங்கிய விபி மேனனை முற்றிலுமாக மறந்து போனது வியாப்பாக உள்ளது.

ஜம்மு காஷ்மீர் அரசின் அப்போதைய மன்னராக இருந்த ஹிரிசிங்கிற்கு இந்தியாவுடனோ பாக்கிஸ்தானுடனோ இணைவதில் தயக்கம் இருந்தது. ஆனால் இந்தியா சுநந்திரம் அடைந்த போது காஷ்மீரை தன் வசம் எடுத்துக்கொள்ள முடியாத ஏமாற்றத்தில் இருந்த பாக்கிஸ்தான் காஷ்மீரிலுள்ள பஷ்த்தூன் இனத்தவர்களை தூண்டிவிட்டு காஷ்மீரின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதனைக் கண்ட மன்னர் இனிமேலும் தனித்து ஆட்சி நடத்த முடியாது என்று அஞ்சி இந்தியாவுடன் இணைவது என முடிவு செய்தார். ஆனால் இதில் பல நிபந்தனைகளை மன்னர் முன் வைத்ததால் அவருடைய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மனமில்லாதிருந்த நேரு அவர்கள் இணைப்பில் தீவிரம் காட்டவில்லை. இந்த இடைபட்ட காலத்தில் பஷ்த்தூன் மக்களுடைய தாக்குதலில் காஷ்மீரின் வடக்கு மற்ரும் மேற்கு பகுதிகளை பாக்கிஸ்தான் கைப்பற்றியது. இவை இப்போதும் பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டுக்குள் உள்ள காஷ்மீராக கருதப்படுகிறது.

வழிக்கு வராமல் முரண்டுபிடித்த மன்னரை சமாதானப்படுத்தி இணைப்பு ஆவணத்தில் அவருடைய கையொப்பத்தை பெற இந்திய அரசு திரு வி.பி. மேனனை அனுப்பி வைத்தது. அவருடைய தொடர் முயற்சியின் பலனாக 1947 வருடம் அக்டோபர் மாதத்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது.

ஆனால் மன்னரின் முக்கிய நிபந்தனைகளான தங்களுக்கு என்று தனி கொடி, நாடாளுமன்றம், தனி குடியுரிமை போன்ற நிபந்தனைகளை இந்திய அரசால் நிராகரிக்க முடியவில்லை. இத்துடன் வெளியுறவு, இராணுவம் மற்றும் தகவல்தொடர்பு ஆகியவற்றை தவிர மற்ற அனைத்தையும் முடிவு செய்துக்கொள்ளும் உரிமையும் ஜம்மு காஷ்மீர் அரசுக்கு அளிக்கப்பட்டது. இந்த சுதந்திரத்தை அவர்களுக்கு அளிக்க வசதியாகத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 370 வது பிரிவு சேர்க்கப்பட்டது. இதன்
படி இம்மூன்று துறைகளைத் தவிர மற்ற அனைத்து துறைகளையும் பாதிக்கும் இந்திய அரசின் எந்த சட்டட்மானாலும் அவை ஜம்மு காஷ்மீர் அரசின் ஒப்புதலுடன் மட்டுமே இயற்றப்பட வேண்டும். இல்லையெனில் இத்தகைய சட்டங்கள் எதுவும் காஷ்மீர் மக்களை கட்டுப்படுத்தாது/ மேலும் காஷ்மீரில் அப்போது நிரந்தரமாக வசித்து வந்த மக்களே அந்நாட்டின் நிரந்தர குடிமக்களாக கருதப்பட்டனர். அவர்களுக்கு மட்டுமே அந்த மாநிலத்தில் அசையா சொத்துக்களை வாங்கவோ விற்கவோ முடியும் என்ற சலுகையும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. காஷ்மீர் பெண்களை மணக்கும் வெளி மாநிலத்து கணவர்களுக்குக் கூட இந்த  உரிமை மறுக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மன்னரின் இத்தனை நிபந்தனைகளையும் விருப்பமில்லாவிட்டாலும் அப்போதைய பிரதமாரக இருந்த நேரு ஏற்றுக்கொண்டதற்குக் காரணம் காஷ்மீரை பாக்கிஸ்தானிடம் இழந்துவிக் கூடாது என்பதுதான்.

இந்த சிறப்புச் சலுகைகளை 1951ம் ஆண்டு துவக்கப்பட்ட பாரதீய ஜனசங்க கட்சி துவக்க முதலே எதிர்த்து வந்தது. இமயம் முதல் குமரிவரை இந்தியா ஒரே நாடு என்பது அக்கட்சியின் தாரக மந்திரமாக இருந்தது. ஆகவேதான் காஷ்மீர் மக்களுக்கு இதுவரை அளித்து வந்த சிறப்பு சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டபோது ஜனசங்க கட்சியின் நிறுவனர் (founder)ஷ்யாம பிரசாத் முகர்ஜியின் கனவு நனவானது என்று மறைந்த தலைவர் பெயரில் இன்றும்
இயங்கிவரும் ஆய்வு மைய இயக்குன அனிர்பன் கங்குலி கூறியதாக செய்திகளில் பார்த்தோம். பாரதிய ஜனசங்கத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சியாக பெயரளவில் மட்டும் மருவிய பாஜக தங்களுடைய நெடுங்கால கனவுத் திட்டத்தை இந்திய நாடாளுமன்றத்தில் இதற்கு தேவையான பெரும்பான்மை கிடைக்கும் காலத்திற்காகவே காத்திருந்தது. தற்போது அந்த கட்சிக்கு மாநிலங்களவையில் இதை நிறைவேற்ற போதிய பெரும்பான்மை இல்லாவிடினும் ஒடிசா., தில்லி ,ஆந்திரா, தெலுங்கான மற்றும் நம்முடைய தமிழகம் ஆகிய மாநிலங்களைச் சார்ந்த உதிரி கட்சிகளின் துணையுடன் அதை மிக எளிதாக நிறைவேற்றி சுமார் எழுபதாண்டுகால போராட்டத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டுள்ளது.

இதுதான் உண்மை.

இதற்கு இமயம் முதல் குமரி வரை இந்தியா ஒரே நாடுதான் ஆகவே இதில் எந்த மாநில மக்களுக்கும் தனி அரசாங்கம் தனி கொடி, குடியுரிமை போன்ற
சலுகைகள் தேவையற்றவை என்பது மட்டுமே இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவுக்கு பிண்ணனியாக இருக்க வாய்ப்பில்லை. காஷ்மீர் மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகளில் மிக முக்கியமாக கருதப்படுவது வெளிமாநிலத்தவர்கள் அங்கு அசையா சொத்துக்களை வாங்க முடியாது என்பதும் இந்த முடிவின் ஒரு முக்கிய காரணமாக எடுத்துரைக்கப்படுகிறது.

சமீபத்திய பண மதிப்பிழப்பு முடிவு அமலுக்கு வருவதற்கு முந்தைய ஒரு சில மாதங்களில் பாஜக வட இந்தியாவில் பல விலை மதிப்பு மிக்க அசையா
சொத்துக்களை பாஜக வாங்கி குவித்ததாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியானதை படித்திருப்பீர்கள். அது போன்றதொரு நிகழ்வுகள் அடுத்த சில
ஆண்டுகளில் காஷ்மீரில் நடக்க வாய்ப்புள்ளது. கோடிக்கணக்கில் பணத்தை சேமித்து வைத்திருக்கும் பாஜக காஷ்மீர் மாநிலத்தில் தங்கள் விருப்பப்படி அசையா சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போவது நிச்சயம். நில அளவை மற்றும் நில மாற்றம் (transfer of property) மாநில ஆளுநரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளபடியால் இவர்கள் நினைப்பதை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள முடியும். இங்கு அம்மையார் காலத்தில் அவரின் பெயரை பயன்படுத்தி ஒரு கும்பல் தமிழக சொத்துக்களை அடுமாட்டு விலைக்கு வாங்கினார்களே அதுபோல பாஜகவின் இரட்டை தலைவர்களின் பெயரை பயன்படுத்தி தற்போது ஆளுங்கட்சியினரின் ஆதரவைப் பெற்றுள்ள பல அடாவடி கார்ப்பரே நிறுவன முதலாளிகளும் காஷ்மீர் மாநிலத்தின் பெரும்பகுதியை வாங்கி குவிக்க வாய்ப்புண்டு என்றாலும் மிகையாகாது.

அதுமட்டுமல்ல அந்த மாநிலத்தில் கொட்டிக் கிடக்கும் கனிமவளங்களை இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களை ஏவிவிட்டு கொள்ளையடிப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். கீழ் காணும் வரைபடத்தை பார்த்தாலே இதன் தீவிரம் உங்களுக்கு புரியும்.



************ 

05 ஆகஸ்ட் 2019

புதிய கல்விக் கொள்கை (நிறைவுப் பகுதி)

பொது (அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்) மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்துமே இக் கொள்கை வரைவில் குறிப்பிட்டப்பட்டுள்ள அனைத்து
ஒழுங்கு முறைகளுக்கும் கட்டுபட்டே இயங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அப்படியானால் நாட்டின் மிகப் பெரிய பொது (மத்திய அரசின்  மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குவதால் இதுவும் பொது
பள்ளியாக கருதப்படுகிறது)  பள்ளியான CBSE பள்ளி மற்றும் அரசு உதவிப் பெறாத தனியார் பள்ளிகளான ICSE போன்ற பள்ளிகளும் இந்த கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் படுமா என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

இந்த CBSC பள்ளிகளில் மட்டும் எதற்காக பாடங்கள் ஆங்கிலத்தில் நடத்தப்படுகின்றன என்று சிலர் கேட்கலாம். இந்த பள்ளிகள் மத்திய அரசு
அலுவலகங்களில் பணியாற்றுபவர்களின் வாரிசுகளுக்காகவே துவக்கப்பட்ட பள்ளிகளாகும். இத்தகைய பணியாளர்கள் குறிப்பாக அதிகாரிகள் நாட்டின் எந்த பகுதிக்கும் மாற்றப்படலாம் என்பதாலும் பல மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் தாய் மொழியாக கருதப்படும் மொழிகள் கட்டாய பாடமாக இருப்பதாலும் இவர்களுடைய வாரிசுகளுக்கு படிப்பில் சிரமம் ஏதும் இல்லாமல் இருக்கவே இத்தகைய பள்ளிகள் அனைத்து மாநிலங்களிலும் துவங்கப்பட்டன.

ஆனால் பல மாநிலங்களிலும் நடத்தப்பட்டும் வரும் அரசு நிதி உதவி பெறாத பல தனியார் பள்ளிகளும் இவர்களுடைய பாடத்திட்டத்தையே பின்பற்றுவதால் இத்தகைய ஆங்கில வழிக் கல்வி நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் பரவி கிடக்கின்றன. தமிழகத்திலும் சமச்சீர்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் பல தனியார் பள்ளிகள் CBSC பாடத்திட்டத்திற்கு மாறிக்கொண்டிருக்கின்றன. ஆகவே இத்தகைய பள்ளிகள் புதிய கல்விக் கொள்கையால் பாதிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அதே சமயம் அரசிடமிருந்து நிதியுதவி பெறாத (புதிய)தனியார் பள்ளிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் அத்தகைய பள்ளிகள் அரசின் ‘ஒழுங்குமுறை சுமைகளிலிருந்து’ (Regulatory burdens) விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கொள்கை வரைவில் குரிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு என்ன பொருள்?

கொள்கை வரைவில் இதுவரை நாம் கண்ட அனைத்து ஒழுங்குமுறைகளும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும்தானா?

இவை அனைத்தும் அரசு உதவி பெறாத பள்ளிகளுக்கு மட்டும் சுமைகளாக தெரிகின்றனவா என்ற கேள்வி எழுகிறதல்லவா?

அதாவது எதிர் வரும் காலங்களில் அரசின் ஒழுங்குமுறை அனைத்தும் இனி துவங்கவிருக்கும் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தாது போலுள்ளது.

எதை நோக்கி பயணிக்க இந்த விதிவிலக்கு? இத்தகைய தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டிலுள்ள மாணவர்களை முதல் தரம்,. இரண்டாம் தரம் என்று பிரிக்கத்தானோ?

புதிதாக துவங்கப்படும் தனியார் பள்ளிகளில் மும்மொழி கொள்கை என்கிற எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் தற்போது CBSC போன்ற பள்ளிகளில்
நடைமுறையிலுள்ள ஆங்கில வழி கல்வியே தொடரும் என்பதால் அத்தகைய பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அறிவாற்றலிலும் திறனிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளீலும் பயிலும் மாணவர்களை விட சிறந்தவர்களாக திகழப்போவது நிச்சயம்.

நாட்டில் நடைபெறவிருக்கும் அனைத்து நுழைவு தேர்வுகளும் இத்தகைய அரசு உதவி பெறாத தன்னார்வ நிறுவனங்களால் நடத்தப்படும் பாடத்திட்டங்களின் அடிப்படையிலேயே நடத்தப்படப் போவதும் உறுதி,

இந்த அவலம்தானே சமீப காலமாக மத்திய அரசு நடத்தும் NEET போன்ற நுழைவுத் தேர்வுகளில் நடக்கிறது? மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் நடத்தப்பட்டு வந்த இத்தகைய தேர்வுகள் இனி பொறியியல் கல்லூரிகளுக்கும் சில வருடங்கள் கழித்து கலைக் கல்லூரிகளுக்கும் விரிவு படுத்தப்பட்டால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர் கல்வி பயிலும் வாய்ப்பையே இழந்து பள்ளிக் கல்வியுடன் நிறுத்திக்கொள்ளும் காலம் வெகு விரைவில்
வரத்தான் போகிறது!

கல்வி மேலாண்மை

தற்போது தேசிய அளவில் கல்வி மத்திய அரசின் பொதுப் பட்டியலில் இருந்தாலும் மாநில அளவில் இதை ஒழுங்குப்படுத்தி மேலாண்மை செய்யும் பொறுப்பு மாநில கல்வி இயக்குனர் அலுவலகத்திடம் இருந்து வருகிறது. ஆகவேதான் 1968ல் இருந்தே நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் மும்மொழி கொள்கை அமலில் இருந்தாலும் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் இந்தியை கட்டாய மொழிப் பாடமாக்காமல் இயங்க முடிந்தது. பள்ளிகளுக்கான கொள்கையை வகுத்தல், பள்ளிகளை மேற்பார்வை மற்றும் ஒழுங்குப் படுத்துதல் ஆகிய அனைத்தையும் இந்த அமைப்பே கவனித்து வந்தன.

ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பவிருக்கும் புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்தால் தேசிய அளவில் பள்ளிக் கல்வி மட்டுமல்லாமல்
உயர்கல்விக்கும் சேர்த்தே அளவிலா அதிகாரங்களைக் கொண்டஒரு ஆணையம் (தேசிய கல்வி ஆணையம் - ராஷ்ட்ரிய சிக்‌ஷா ஆயோக்!) அமைக்கப்பட்டு நாடு முழுமைக்கும் ஒரே ஆதார், ரேஷன் அட்டை என்பது போல் ஒரே கல்வி முறை அமலுக்கு வரும். இந்த தேசிய ஆணையம் இடும் அனைத்துக் கட்டளைகளையும் ஒவ்வொரு மாநில அளவிலும் அமைக்கப்படும் இவ்வாணையத்தின் அதிகாரமற்ற கிளைகளான மாநில கல்வி ஆணையம் செயல்படுத்த நிர்பந்திக்கப் படும்.

இந்த ஆணையத்தின் தலைவராக நம் பாரத பிரதமர் அவ்ர்கள் இருப்பார்.

இந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் பேர்பெற்ற கல்வியாளர்கள், மாநில முதலமைச்சர்கள் அல்லது கல்வி அமைச்சர்கள் ஆகியோர் இடம் பெற்றிருப்பர். இந்த ஆணையம் நாட்டின் கல்வி சம்பந்தமான அனைத்திற்கும் முடிவு எடுக்கக் கூடிய அதிகாரம் பெற்றிருக்கும்.

இந்தியாவின் அனைத்து இயக்கங்களையும் ஒவ்வொன்றாக தன் நேரடி கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்திருக்கும் மத்திய பாஜக அரசு தற்போது கல்வியையும் தன் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

தற்போதும் கல்வி மத்திய அரசின் பட்டியலில்தான் இருந்து வருகிறது என்றாலும் மாநில அளவில் அந்தந்த மாநில கல்வி இயக்குனர்களுக்கு தங்களுடைய மாநில அளவில் தேவையான மாற்றங்களை செய்துக்கொள்ளக் கூடிய தன்னாட்சி அதிகாரம் இருந்தது.

அது இப்போது முழுமையாக பறிக்கப்பட்டு மத்திய கல்வி ஆணையத்தின் ஆணைகளை செயல்படுத்தும்  ஒரு கிளை ஆணையமாக மாற்றப்பட்டுள்ளது.

இப்படி பல குழப்பங்களையும் குறைபாடுகளையும் நடைமுறைக்கு சாத்தியமற்ற மாற்றங்களையும் உள்ளடக்கியுள்ள கல்வித் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு மத்திய அரசு ஏன் இத்தனை அவசரம் காட்டுகிறது என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

மத்தியிலுள்ள இன்றைய ஆட்சியாளர்களுக்கு நாடாளுமன்றத்தில் உள்ள அசுர பலத்தின் உதவியுடன் இந்த வரைவு கொள்கை எதிர்கட்சிகளின் அனைத்து எதிர்ப்ப்புகளையும் மீறி சட்டமாக்கப்படுவது என்னவோ நிச்சயம்.

அப்படியொரு நிலை ஏற்படுமானால் தமிழக மாணவர்களுக்கு குறிப்பாக கிராமப் புற ஏழை மாணவர்களுக்கு எதிர்வரும் காலம் ஒரு இருண்ட காலமாகத்தான் அமையப் போகிறது.



(நிறைவு)

03 ஆகஸ்ட் 2019

புதிய கல்விக் கொள்கை - 6

2008-2009 கணக்கெடுப்பின் படி தமிழகத்தில்

Number of Districts: 30
Number of Educational Districts: 65
Number of Blocks: 385

Number of Schools

Primary School (1-5 only) 23395
Middle School (1-8) 7597
High School (6-10) 2176
Higher Secondary School (6-12) 2100
Grand Total 35268

அரசு பள்ளிகள் உள்ளன.

இவற்றுள் கிராமப் புற மற்றும் நகர்புறங்களில்

Primary and Middle Schools - 32648
Secondary Schools - 3997 உள்ளன

ஒட்டு மொத்த இந்தியாவை எடுத்துக்கொண்டால் 2016-17ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 28 விழுக்காடு அரசு துவக்க (Primary) பள்ளிகளிலும் 15 விழுக்காடு நடுநிலைப் பள்ளிகளிலும் (Upper Primary) 30 மாணவர்களுக்கும் குறைவாகவே உள்ளனராம்! மேலும் சுமார் 1.20 லட்சம் பள்ளிகள் ஒற்றை ஆசிரியர் பள்ளிகளாம்! இவற்றுள் சுமார் 95,000 பள்ளிகள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகள் வரை மட்டுமே உள்ள பள்ளிகள்!

இவ்வாறு தனித்து இயங்கும் சிறு, சிறு பள்ளிகளை நிர்வகிப்பதிலும் ஆசிரியர் நியமனங்களிலும் மிக அதிகம் சிரமங்கள் உள்ளது. ஆகவே இத்தகைய பள்ளிகள் அனைத்தும் அதாவது இருபது மாணவர்களுக்கும் குறைவாக பள்ளிகளை அவை எத்தகைய பள்ளிகளாக இருப்பினும் அருகாமையிலுள்ள பள்ளிகளுடன் இணைக்கப்பட வேண்டுமாம்!

தமிழகத்தைப் பொறுத்தவரை சமீபத்திய கணக்கெடுப்பின்படி 20 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள துவக்கப் பள்ளிகள் சுமார் 1000.

மீதமுள்ள பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில் நூறு மாணவர்களுக்கும் குறைவாக உள்ளனராம்.

புதிய வரைவு கல்விக் கொள்கை 20 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை, அவை எந்த வகையைச் சார்ந்த பள்ளியாக இருப்பினும், 2020 கல்வியாண்டுக்குள் அடுத்துள்ள  பள்ளிகளுடன் இணைத்துவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழக கல்வித் துறையோ ஐம்பது மாணவர்களுக்கும் குறைவாகவுள்ள கிராமப்புற துவக்கப்பள்ளிகளை மூடுவதற்கு அல்லது அடுத்துள்ள பள்ளிகளுடன் இணைப்பதற்கு உத்தரவு பிறப்பித்துவிட்டதாக மார்க்சிஸ்ட் கட்சி சமீபத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

தற்போதுள்ள அரசு பள்ளிகள் சிலவற்றில் முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையிலும் இன்னும் சில பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையிலும் இருப்பதை மேல் காணும் புள்ளி விவரங்களிலிருந்து  அறிந்துக்கொள்ள முடிகிறது. இந்த பள்ளிகள் பெரும்பாலும் கிராமப்புற/சிறு நகர்புறங்களில் இயங்கி வருகின்றன. இவை எவ்வாறு பிரிக்கப்படும். அப்படிப்பட்ட சூழலில் எத்தனை பள்ளிகள் மற்ற பள்ளிகளுடன் இணைக்கப்படும் அல்லது மூடப்படும் என்பது தெரியவில்லை.

பெரு நகரங்களான சென்னை, கோவை, மதுரை போன்றவற்றிலும் இத்தகைய குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது ஒரு பள்ளியிலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தூரத்தில் வசிக்கும் மாணவர்கள் மட்டுமே அந்த பள்ளியில் சேர்க்கப்படுவார்கள் என்ற எழுதப்படா விதி கடைபிடிக்கப்படுகின்றது. புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்தால் தற்போது மழலையர் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை வகுப்புகளைக் கொண்டுள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கதி என்னவாகும்?

ஆக, புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் தற்போது இயங்கிவரும் பள்ளிகள் பிரிக்கப்பட்டால் அதிகம் பாதிக்கப்படப் போவது கிராம மற்றும் சிறு நகரங்களில் படிக்கும் மாணவர்கள்தான்

அகில இந்திய அளவில் சுமார் 1.25 இலட்சம் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மூடப்படவுள்ளது என்பதை நினைத்துப் பார்க்கவே மலைப்பாக உள்ளது!

இன்னும் சிலவற்றைப் பற்றி நாளை (திங்களனறு) விவாதிக்கலாம்






02 ஆகஸ்ட் 2019

புதிய கல்விக் கொள்கை - 5

நேற்றைய பதிவில் கடந்த சுமார் நாற்பதாண்டு காலமாக நடைமுறையில் இருந்து வரும் 10+2 என்ற பள்ளிக் கல்வி  முறை புதிய கல்வி திட்டத்தின் படி 5+3+3+4 ஆக அதிகரிக்கப்படவுள்ளது என்று குறிப்பிட்டிருந்தேன்.

இதில் அடிப்படை ஆண்டுகள் (foundation years) எனப்படும் முதல் ஐந்து ஆண்டுகளில் முதல் மூன்றாண்டுகள் மழலையர் பள்ளி பருவத்தைச் சார்ந்தவை.

தற்போது எந்த அரசு பள்ளிகளிலும் இந்த வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. பெரும்பாலான அரசு பள்ளிகள் ஐந்து வயது பூர்த்தியான குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்கும் முறையை பின்பற்றி வருகின்றன.

குறிப்பாக கிராமப்புறங்களில் அங்கீகாரமில்லாத சில தனியார் பள்ளிகள் மட்டுமே இத்தகைய வகுப்புகளை நடத்தி வருகின்றன. இத்தகைய மழலையர் வகுப்புகள் அரசு துவக்கப்பள்ளிகளுடன் இணைக்கப்பட்டால் தற்போது இயங்கிவரும் இதகைய பள்ளிகளின் நிலை என்னவாகும்? இந்த மூன்று வகுப்புகளையும் தற்போதுள்ள அரசு துவக்கப்பள்ளிகளுடன் இணைக்க உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது அத்தனை எளிதான காரியமா?

மேலும் புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிட்டுள்ள  இந்த நான்கு பிரிவுகளுக்கென தனித்தனி பள்ளிகள் அமைக்கப்படுமா என்பதும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

அப்படி அமைக்கப்படும் பட்சத்தில் ஒரு பள்ளியிலிருந்து அடுத்த பள்ளிக்கு செல்வதற்கு மீண்டும் மீண்டும் பெற்றோர்கள் அலைய வேண்டிய சூழல் ஏற்பட வாய்ப்புண்டு. தற்போது பெரும்பாலான நகர்ப்புற பள்ளிகளில் மழலையர் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை படித்து முடிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆகவே அத்தகைய பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு எவ்வித தொல்லையுமில்லாமல் படித்து முடித்துவிட முடிகிறது.

பொதுத் தேர்வுகள்

தற்போது மேல்நிலை பள்ளி முடிவில் அதாவது 10வது வகுப்புக்கும் அதன் பிறகு 11 மற்றும் 12வது வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவை நான்கு பள்ளிகளாக பிரிக்கப்படுவதால்  மூன்றாவது, ஐந்தாவது மற்றும் எட்டாவது வகுப்புகளுக்கும் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் ப்ரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது சாத்தியமா? இந்த வயதுகளில் குழந்தைகளை இத்தகைய மன அழுத்தத்திற்கு உட்படுத்த வேண்டுமா?

மேலும் நான்காவது நிலையான மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான நான்கு ஆண்டுகள் எட்டு செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டு நான்காம் ஆண்டு இறுதியில் ஒரே சான்றிதழ் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இப்போது நடைமுறையிலுள்ள பத்தாவது மற்றும் பன்னிரண்டாவது வகுப்புகளில் நடத்தப்படும் பொதுத்தேர்வும் தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது?

அப்படியானால் இந்த நான்காண்டுகளில் நடத்தப்படும் செமஸ்டர் தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தப்படுமா? இவ்வாறு ஒவ்வொரு அரையாண்டிலும் செமஸ்டர் எனப்படும் பருவ தேர்வுகள் நடத்தப்படும்போது மேலும் இரண்டு பொதுத்தேர்வுகள் எதற்காக?

அடுத்த முக்கியமான பிரச்சினை பள்ளிகள் ஒருங்கிணைப்பு.

இதைப் பற்றி நாளை விவாதிக்கலாம்.







01 ஆகஸ்ட் 2019

புதிய கல்விக் கொள்கை - 4

நேற்றைய பதிவில் மும்மொழிப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு காராணமாக கொள்கை வரைவில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பற்றி எழுதியிருந்தேன்.

ஆனால் உண்மையில் அதுவல்ல காரணம் .

புதிய கொள்கை வரைவு அறிக்கையின் 82ம் பக்கத்தில் (பத்தி 4.5.4) குறிப்பிடப்பட்டுள்ள வாக்கியங்களை அப்படியே மொழிபெயர்த்து தருகிறேன்.

“ நாடு சுதந்திரம் பெற்ற காலம் முதலே ஆங்கில மொழியில் மட்டுமே புலமை வாய்ந்த (15 விழுக்காடு உள்ள) ‘மேல்தட்டு மக்கள்’ 55 விழுக்காடுக்கும் அதிகமாகவுள்ள ஹிந்தி பேசும் மக்களை தங்கள் ஆளுமைக்கு உட்படுத்தி வைத்துள்ளனர். இதை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு ஒரு புதிய கல்விக் கொள்கை தேவைப்படுகிறது .”

இதுதான் இந்த புதிய கொள்கையின் உண்மையான காரணம்.

அதாவது, இதுவரை ஒடுக்கப்பட்டிருந்த ஹிந்தி பேசும் பெரும்பான்மை இந்தியர்களின் வாழ்வில் ஒரு புதிய ஒளி ஏற்றுவதுதான் இந்த கல்விக் கொள்கையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் மும்மொழிப் பாடத் திட்டத்தின் மூல நோக்கம் என்றாலும் மிகையாகாது!

அதே சமயம் கொள்கை வரைவில் எந்த இடத்திலும் மூன்றாவது மொழியாக இந்தியை மட்டுமே மாணவர்கள் தெரிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப் படவில்லை என்பதும் உண்மை. அதை தீர்மானிக்கும் உரிமையை மாணவர்களுக்கே விட்டுக்கொடுத்துள்ளது.

சரி, மாணவர்களின் விருப்பத்தை யார் முடிவு செய்வார்கள் என்று பார்த்தால் அங்குதான் சிக்கலே.

புதிய கல்விக் கொள்கையின் படி பள்ளிப் பருவ காலம் தற்போது நடைமுறையிலுள்ள 10+2 என்ற முறையிலிருந்து 5+3+3+4 ஆக திருத்தியமைக்கப்பட வுள்ளது.

இது

1. ஐந்து வருட அடித்தள நிலை (Foundation) - 3 வயதிலிருந்து 8 வரை - தற்போதைய மழலை வகுப்புகள், 1 & 2 KG, 1,2 வகுப்புகள்
2. மூன்று வருட ஆயத்த நிலை (Preparatory) 8 வயது முதல் 11 வயது வரை -
தற்போதைய 3 - 5 வகுப்புகள்
3. மூன்று வருட நடு நிலை = 11லிருந்து 13 வயது வரை - 6,7,8 வகுப்புகள்
4. நான்கு வருட மேல்நிலை கல்வி (High)- 14 முதல் 18 வயதுவரை - 9,10,11,12 வகுப்புகள்.

இவற்றுள் அடிப்படைக் கல்வி நிலையிலேயே அதாவது அடித்தள நிலையிலிருந்தே மும்மொழி கல்வி அறிமுகப்படுத்தப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் மூன்று வயதிலிருந்து எட்டு வயது வரையிலும் குழந்தைகளுக்கு புதிய மொழிகளைக் கற்றுக்கொள்ளும் திறன் அதிகமாக இருக்கும் என்பதால் அவர்கள் எந்த மொழியையும் எளிதில் கற்றுக்கொள்வார்கள் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது (பக்கம் 79).

இந்த வயதில் மூன்றாவது மொழிப் பாடமாக தெரிவு செய்யும் திறன் நிச்சயம் குழந்தைகளிடம் இருக்கப் போவதில்லை.

ஆகவே இதை தீர்மானிக்கப் போவது 1. பெற்றோர்கள் அல்லது 2. பள்ளி நிர்வாகம்.

ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் எந்த மொழியை அதிக மாணவர்கள் தெரிவு செய்கிறார்களோ அதைத்தான் மீதமுள்ள மாணவர்களும் தெரிவு செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார்கள்.  ஏனெனில் ஒரு வகுப்புக்கு நான்கைந்து மொழிப்பாட ஆசிரியர்களை எந்த பள்ளி நிர்வாகத்தாலும் நியமிக்க முடியாது.

மேலும் மூன்றாவதாக இந்தியாவின் 8வது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த மொழியை வேண்டுமானாலும் மாணவர்கள் தெரிவு செய்துக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் எந்த மொழியை அதிக மக்கள் பேசுகிறார்களோ அல்லது எந்த மொழியை படித்தால் நம் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்குமோ அந்த மொழியைத்தான் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகமும் தெரிவு செய்வார்கள்.

அப்படிப் பார்த்தால் இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களில் பேசப்படும் மொழி இந்தி ஒன்றுதான். ஆகவே பெற்றோர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியை தெரிவு செய்யும் கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்படுவார்கள் என்பது இந்த கொள்கையை தயாரித்தவர்களுக்கும் தெரியும் இப்போது மத்தியில் ஆட்சியிலுள்ளவர்களுக்கும் தெரியும்.

ஆகவே தான் இந்த மும்மொழிக் கல்வி திட்டமே எங்களுக்கு வேண்டாம் என்று குரலெழுப்ப துவங்கிய தமிழக எதிர் கட்சியாளர்களுடன் இணைந்து மக்களும் போராட்டத்தில் இறங்க வேண்டும் என்கிறேன்.

இது என்னை பாதிக்கப் போவதில்லை என்று ஒதுங்கியிராமல் தமிழக மக்கள் அனைவருமே விழித்தெழுந்து போராட வேண்டிய தருணம்.

நாளை இந்த கொள்கையால் கிராமப் புற மாணவர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட் போகிறார்கள் என்பதை விவாதிக்கலாம்.


31 ஜூலை 2019

புதிய கல்விக் கொள்கை - 3

”உயர் கல்வியை அனைவருக்கும் வழங்குவதன் மூலம் நிலைத்து நிற்கக் கூடிய, அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கக் கூடிய, உயிரோட்டமுள்ள, அறிவுசார் சமூகமாக நம்முடைய நாட்டை மாற்றுவதற்கு   நேரடியாக பங்களிக்கக் கூடிய,  இந்தியாவை மையப்படுத்திய, கல்வி அமைப்பை தேசிய கல்விக் கொள்கை முன்வைக்கிறது.”

இதுதான் விரைவில் நடைமுறைப் படுத்தப்படவிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் ‘தொலைநோக்கு பார்வை’ யாம்!!

இது இக்கொள்கையின் தமிழ் வரைவில்  முதல் பக்கத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது இப்போதுள்ள இந்தியாவில் இத்தகைய கல்வி முறை இல்லையாம்!

இதில் இறுதி வாக்கியத்தில் வருகின்ற ‘இந்தியாவை மையப்படுத்தி’ என்ற சொற்களுக்கு பதிலாக ‘இந்தியை மையப்படுத்தி’ என்ற சொற்களை பயன்படுத்தியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.

ஏனெனில் இந்த வரைவு கொள்கையின் ஆங்கிலப் பதிப்பின் 81ம் பக்கத்தில் இந்தியாவை மையப்படுத்துவது என்றால் என்ன என்பது சூசகமாக குறிப்பிடப்பட்டுள்ளதை காண முடிகிறது.

இந்த கொள்கை விளக்கம் சுமார் இரண்டு பக்கங்களுக்கு விலாவாரியாக எழுதிப்பட்டுளதால் நான் சுருக்கமாக இங்கு தருகிறேன்.

“இந்தியாவிலுள்ள மொழிகள் பலவும் கலாச்சார மற்றும் அறிவியல் ரீதியாக பல சிறப்புகளைக் கொண்டிருப்பினும் இந்திய பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாக பயன்படுத்தப்பட்டு வருவது வேதனைக்குரியது. (எனக்கு தெரிந்தவரை தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அனைத்து பாடங்களும் தாய்மொழியில்தான் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாகவே இருந்து வருகிறது. மத்திய அரசின் நேரடி பார்வையில் நடத்தப்படும் CBSC பள்ளிகளில்தான் அனைத்துப் பாடங்களும் ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கப்படுகின்றன!)

இதற்கு காரணம்  இந்திய மக்கள் தொகையில் சுமார் 15 விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ள மேல்தட்டு மக்களின் (Elite) ஆங்கில மோகம்தான் என்றால் மிகையாகாது. இந்தியா சுதந்திரம் அடைந்த நாள் முதல் தங்களுடைய ஆங்கில புலமையை மட்டுமே பயன்படுத்தி அரசின் அனைத்து உயர் பதவிகளையும் ஆட்கொண்ட இந்த கூட்டம் ஆங்கிலம் எழுத, பேச தெரியாத ஆனால் இவர்களை விட அறிவிலும், ஆற்றலிலும் சிறந்து விளங்கும் பெரும்பான்மை இளைஞர்களை  தங்களுடைய ஏவலுக்கு அடிபணியும் பணியாளர்களாக மட்டுமே அடக்கி வைத்துள்ளனர்.

ஆகவே சமத்துவமான, அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கக் கூடிய ஒரு இந்தியாவை உருவாக்க வேண்டுமென்றால் இத்தகையோரின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது அவசியமாகிறது.

அதற்கு முதற் படியாக நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் துவக்க நிலையிலிருந்தே அவரவர் தாய்மொழியில் கற்பிக்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்துவது என பரிந்துரைக்கப் படுகிறது.

அத்துடன் 1968ல் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் 1992ல் வலியுறுத்தப்பட்ட மும்மொழி கொள்கையை துவக்கப் பள்ளிகளிலிருந்தே அறிமுகப்படுத்துவது எனவும் பரிந்துரைக்கப்படுகிறது.

தாய்மொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் மூன்றாவது மொழிப் பாடமாக ஏதாவது ஒரு  இந்திய மொழியை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப அந்தந்த மாநில கல்வித் துறை தங்களுடைய பள்ளிகளில் நடைமுறைப் படுத்தலாம் எனவும் பரிந்துரைக்கப்படுகிறது.”

இதுதான் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தப்படுவது ஏன் என்பதற்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கம்.

ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாகவும் தாய்மொழியை மற்ற அனைத்துப் பாடங்களுக்கும் பயிற்று மொழியாகவும் ஏற்றுக்கொள்வதில் எவ்வித பாதகமும் இல்லை. ஏனெனில் இப்போதும் அதுதான் அரசு பள்ளிகளில் நடைமுறையிலுள்ளது.

ஆனால் இத்தகைய தாய்மொழி வழி கல்வி நாட்டிலுள்ள அனைத்து கல்வி முறைகளிலும் (Streams) நடைமுறைப் படுத்தப்படுமா என்பதில் தெளிவில்லை.  உதாரணத்திற்கு, மத்திய அரசின் நேரடி பார்வயில் இயங்கிவரும் CBSC பள்ளிகளில் இந்த கொள்கை நடைமுறைப்படுத்தப்படுமா? ஏனெனில் கொள்கை வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள ‘மேல்தட்டு, ஆங்கில மோகம் கொண்ட’ மக்களை உருவாக்குவதே இத்தகைய பள்ளிகள்தானே?

இதேபோன்று தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் CISCE, IGCSE பாடத்திட்டங்களில் பயிலும் மாணவர்களுக்கும் இது பொருந்துமா என்பதும் தெளிவில்லை.

இவ்வாறு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளையும் உள்ளடக்கிய ஒரு கல்விக் கொள்கையை மத்திய அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டால் மட்டுமே அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கக் கூடிய நாடாக இந்தியாவை மாற்ற முடியுமே தவிர வெறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்விநிலையங்களுக்கு மட்டுமே ஒரு கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்துவதால் எவ்வித பயனும் இல்லை என்பதே என்னுடைய வாதம்...

அடுத்ததாக, இந்த மூன்றாவது மொழியை எவ்வாறு தெரிவு செய்வது?

நாளை விவாதிக்கலாம்.