15 நவம்பர் 2005

திரும்பிப் பார்க்கிறேன் – 13

எம்.ஜி.ஆருடன் சந்திப்பு - 4

என்னுடைய மத்திய கிளையில் அப்போது மேலாளராக இருந்தவர் என்னுடைய முதல் அக்கவுன்டன்டைப் போலவே தீவிர சினிமா ரசிகர்.

அவருடைய வேண்டுகோளைத் தட்ட முடியாமல் அன்று மலையாளத் திரையுலகில் பிரபலமாயிருந்த இரண்டு நடிகைகள், ஒரு இளம் ஒளிப்பதிவாளர் ஆகியோரை விழாவில் வாழ்த்திப் பேச (Felicitation) அழைத்தோம். அவர்களும் விழா நாயகன் பெயரைக் கேட்டதுமே மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டார்கள். அவர்களுடன் ஒரு தமிழ் நடிகரையும் அழைக்கவேண்டும் என்று என் மேலாளர் விரும்பியதால் அன்று பிரபலாமாயிருந்த பல நடிகர்களையும் அணுகினோம் (கிளை கோடம்பாக்கத்தில் திறக்கப்படவிருந்ததால் திறப்பு விழாவில் நடிகர்களுடைய பிரசன்னம் நல்ல விளம்பர உத்தியென்பது என்னுடைய மேலாளரின் எண்ணம். அதற்காக நாய் படாத பாடு நான் பட வேண்டியிருந்தது).

ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை. நாங்கள் வீடு தேடி சென்று அழைத்தும் எல்லோரும் ஏதாவது சாக்கு சொல்லி தப்பிப்பதிலேயே குறியாய் இருந்தார்கள். ஒரேயொரு வில்லன் நடிகர் மட்டும் ‘தம்பி உங்க கிட்ட சொல்றதுக்கென்ன? நீங்க விழாநாயகனா அழைச்சிருக்கீங்களே.. அவரு திரைப்படத்துறையிலருந்து வந்தவராயிருந்தாலும் அவர் கூட ஒரே மேடையில இருக்கறதுக்கு நம்ம திரைப்படத்துறையில யாருமே விரும்பமாட்டாங்க.. அதான் காரணம். நீங்க வீணா அலையறத விட்டுட்டு அந்த ரெண்டு மலையாள பொம்பளைங்கள வச்சிட்டு ஷோவை முடிச்சிருங்க..’ என்று போட்டு உடைத்தார்.. (அவர் வார்த்தைக்கு பிரட்டு (தூத்துக்குடி பாஷையில் கெட்ட வார்த்தை) போட்டு பேசியதை அப்படியே எழுதினால் இந்த பதிவையே காசி அவர்கள் தூக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை).

நடிகர் கூறியதை முழுவதும் புரிந்துக்கொள்ள முடியாத என்னுடைய மேலாளர் தன் பாஷையில் ‘அயாளு எந்தா பறஞ்ச டி.பி. ஆர்? நம்மள்ட நேதாவ குறிச்சான? கொற தெறி விளிச்சின்னு மாத்திரம் மனசிலாயி.’ (அந்த ஆளு நம்ம தலைவரைப் பத்தியா சொன்னான் டி.பி.ஆர்? நிறைய கெட்ட வார்த்தைகள் சொன்னார்னு மட்டும் புரிஞ்சிது.) என்றார்.

ஆனால் ‘அத விடுங்க சார். நீங்க சொன்னீங்கன்னுதான் இந்த வேலைக்கு இறங்கினேன். போதும். நம்ம வேலைய பார்ப்போம். இன்விடேஷன ஃபைனல் பண்ணி மினிஸ்டர்கிட்ட குடுக்கற வழிய பார்ப்போம்’ என்று அந்த விஷயத்தை அத்துடன் முடிவுக்கு கொண்டு வந்தேன். ஆக, எங்களுடைய நடிக, நடிகைகளுடைய வேட்டை அந்த வில்லன் நடிகருடைய வீட்டோடு முடிந்தது (அவர் காலமாகி சுமார் பத்து வருடங்களாகின்றன!).

இரண்டொரு நாட்களுக்குள் அழைப்பிதழை டிராப்ட் எடுத்து நானே நேரில் போய் விழாத்தலைவராக அழைக்கப்பட்டிருந்த அமைச்சரின் செயலாளரிடம் கொடுத்துவிட்டு வந்தேன்.

ஒரு வாரம் கழித்தும் பதிலொன்றும் வராததால் மீண்டும் அமைச்சருடைய செயலாளரை தொலைப்பேசியில் அழைக்க அவர், ‘சார் உடனே புறப்பட்டு வந்தீங்கன்னா நல்லாருக்கும். அமைச்சர் உங்க மேல ரொம்ப அப்செட்டாயிருக்கார்’ என்றார்.

இதென்னடா சோதனை என்று நொந்துக்கொண்டு தலைமைச் செயலகத்துக்கு ஓடினேன்.. அன்று பார்த்து சேட்டும் ஊரில் இல்லை.

அன்றுவரை நான் தனியாய் தலைமைச் செயலகத்துக்கு சென்றதில்லை..

சேட்டும், பிள்ளையும் அங்குள்ள வாயிற்காப்போனுக்கு ‘தாராளமாக கொடுத்து’விட்டுத்தான் உள்ளே நுழைதை பார்த்திருக்கிறேன். இதே தலைமை செயலகத்தில் ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் ஒரு கிளை திறப்புவிழாவுக்கு அன்றைய முதலமைச்சரை அழைக்க வந்ததைப் பற்றி முந்தைய பதிவுகளில் எழுதியிருந்தேன். அப்போதிருந்த தலைமைசெயலகத்திற்கும் இப்போதிருந்த தலைமை செயலகத்திற்கும் எத்தனை வித்தியாசம்?

முதலமைச்சரையோ அல்லது ஏதாவது ஒரு அமைச்சரையோ பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு அன்று கிடைத்த மரியாதை இப்போது எங்கோ தொலைந்து போயிருந்தது.

எல்லா வாயில்களையும் அடைத்துக்கொண்டு நின்ற கட்சித்தொண்டர்கள் கூட்டம் நம்மைப் போன்றவர்களை உள்ளே புகவிடாது. ஒன்று நாம் எல்லோருக்கும் தெரிந்த அரசியல்வாதியாயிருக்க வேண்டும் அல்லது நாம் அந்த அரசியல்வாதிக்கு தெரிந்தவராயிருக்க வேண்டும். இல்லை யென்றால் வாயிலில் நிற்போருக்கு தாராளமாக ‘சம்திங்’ தள்ள வேண்டும்.

ஆனால் எனக்கு யாரையும் தெரியாததால் காவலாளர்கள் என்னை உள்ளே விடுவதாயில்லை..எனக்கு ‘சம்திங்’ கொடுத்து பழக்கமில்லாததாலும் எவ்வளவு கொடுத்தால் உள்ளே விடுவான் என்றும் தெரியாததாலும் (குறைவாய் கொடுக்கபோய் ஏதாவது ஏடாகூடமாகிவிடுமோ என்ற பயம் வேறு!) என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டு நிற்கத்தான் முடிந்தது!

இப்போதுள்ளதுபோல் கைத்தொலைப்பேசி வசதியிருந்திருந்தால் அமைச்சரின் செயலாளரையாவது அழைத்திருக்கலாம். தலைமைச் செயலக வளாகத்தில் பொதுத்தொலைப்பேசி வசதியும் அப்போதில்லை. ஒருவேளை இருந்திருக்கலாம். ஆனால் கண்ணுக்கெட்டியதூரம் வரை பார்த்தும் ஒன்றும் அகப்படவில்லை.

என் நல்ல நேரம், அன்று தலைமைச்செயலகத்தில் வருடாந்தர மாவட்ட ஆட்சியர் மாநாட்டின் துவக்கநாளாயிருந்தது. நான் செய்வதறியாது வெளியே நின்றுக்கொண்டிருந்த நேரம் முதலமைச்சர் மாநாட்டைத் துவக்கி வைப்பதற்காக அவருடைய அறையிலிருந்து வெளியேறி தலைமைச் செயலகத்தின் புதிதாய் கட்டியிருந்த இணைப்பு கட்டத்திற்கு செல்ல, அவரை பார்ப்பதற்காக ஒரு பெரிய பார்வையாளர் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு வாயில்களை நெருங்க அவர்களை கட்டுப்படுத்தவே காவலாளர்களுக்கு சரியாயிருந்தது.. அந்த களேபரத்தில் நான் உள்ளே நுழைந்ததை அவர்களால் கவனிக்க இயலவில்லை..

நான் உள்ளே நுழையவும் நம்முடைய அமைச்சர் அவருடைய அறையை விட்டு வெளியே வரவும் சரியாயிருந்தது.. நான் அவரைப் பார்த்து (பிள்ளை பாணியில்) ஒரு கூழைக் கும்பிடு போட்டேன் (என் தலையெழுத்து!). அவரோ என்னை அடையாளம் தெரியாமல் (அல்லது வேண்டுமென்றே) கையை மட்டும் உயர்த்தி காட்டிவிட்டு (பதில் வணக்கமாம்!) முதலமைச்சரின் பின்னால் சென்ற சக அமைச்சர்களின் கூட்டத்தோடு கூட்டமாய் போய்விட்டார்.

நான் சிறிது நேரம் அவர் போவதையே பார்த்துக்கொண்டு நிற்க நான் நிற்பதைப் பார்க்காததுபோல் அவருடைய செயலாளரும் என்னைக் கடந்து செல்வதைப் பார்த்த நான், ‘சார், சார்’ என்று அழைத்தவாறே அவர் பின்னால் ஓடினேன்.

நல்ல வேளையாய் அவருக்கு என்னை நினைவிருந்தது! ‘என்ன சார்? நான் உங்கள எத்தன மணிக்கி வரச்சொன்னேன், சாவகாசமா இப்ப வர்றீங்க? அமைச்சர் இப்பத்தான் போனாரு.. திரும்பிவர எப்படியும் மூணு, நாலு மணி நேரமாகும்.. ஒன்னு வெய்ட் பண்ணுங்க.. இல்லன்னா போய்ட்டு வாங்க..’ என்று கூறிவிட்டு என் பதிலுக்கு காத்திராமல் அமைச்சரின் பின்னாலேயே ஓட்டமும் நடையுமாய் போய்விட்டார்.

(பொதுவாக இத்தகைய மாநாடுகள் நடக்கும்போது அமைச்சர்களின் இலாகா சம்மந்தப்பட்ட எல்லா கோப்புகளும் அவர்களுடைய செயலாளரின் கைகளில்தான் இருக்கும். அமைச்சர்களின் இருக்கைகளுக்கு பின்னால் அமர்ந்துக்கொண்டு அவர்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் குறிப்புகளை வழங்கிக்கொண்டே இருக்கவேண்டும்.)

அமைச்சரின் அறை வரை எட்டியதே பெரிய பாடு. இதில் வெளியே போய் மீண்டும் உள்ளே வரமுடியுமா, முடியாதோ என்று நினைத்துகொண்டு அமைச்சருடைய அறையின் வாயிலிலேயே நிற்பதென முடிவு செய்தேன்.. (ஒன்றோ, இரண்டோ மணியளவல்ல, அன்று காலை பதினோரு மணியிலிருந்து பிற்பகல் நான்கு மணிவரை!).

மாலை 4.00 மணிக்கு சாவகாசமாக திரும்பி வந்த செயலாளர் என்னை ஆச்சரியத்துடன் பார்த்தார் (எனக்கோ அவருடைய குரல்வளையை நெரித்தால் என்ன என்றிருந்தது!). ‘என்ன சார், நீங்க போகவேயில்லையா?’ என்றார்.

நான் பரிதாபமாக, ‘எப்படி சார் போறது? அமைச்சர் ஏதோ அப்செட்டாயிருக்கார்னு சொன்னீங்களே, அதான் முழுசா கேட்டுட்டு போயிரலாம்னு..’ என்று இழுத்தேன்.

‘சரி, அதுவும் நல்லதுக்குத்தான். வாங்க.. என்ன விஷயம்னு சொல்றேன்.’ என்றவர் அறைக்குள் நுழைந்து என்னையும் அமரச் சொல்லிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு எனக்கு மட்டும் கேட்கும் குரலில் ‘அதொன்னும் இல்லை சார். அந்த லோக்கல் வட்டம்தான் ஏதோ அமைச்சர்கிட்ட போட்டு குடுத்துட்டான். நீங்க அவர் வந்தப்போ ஏதோ ரூல்செல்லாம் பேசினீங்களாம். துவக்க விழா அன்றைக்கி லோனுக்கு வேண்டிய அடையாள சாங்க்ஷன்தான் குடுக்க முடியும்னு சொன்னீங்களாமே.. அதென்ன ஏமாத்து வேலைன்னு அமைச்சர் அப்செட்டாயிருக்கார்.. நீங்க கொஞ்சம் வெய்ட் பண்ணி பாத்துட்டு போயிட்டீங்கன்னா காரியம் முடிஞ்சிரும்.. நீங்க குடுத்த மாதிரி அழைப்பிதழ் முதலமைச்சர்கிட்ட குடுத்தாச்சி. இன்னும் ரெண்டொரு நாள்ல கிடைச்சிரும். அதப்பத்தி கவலையே இல்ல.’ என்றவர் குரலை இன்னும் ஒரு படி கீழே இறக்கி இன்னொரு விஷயம் சார் என்றார். சரி இவரு ஏதோ அடி போடறார் என்று நினைத்துக்கொண்டு ‘என்ன சொல்லுங்க?’ என்றேன்.

‘என் பையனுக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கனும். என் கிட்ட ஸ்கூட்டர் விலையில பத்து, பதினஞ்சி பெர்சன்ட் இருக்கு. நீங்க ஒரு லோன் போட்டு குடுக்கணும்..’ என்று தயக்கத்துடன் கூறிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தார்.

அரசுத்துறையில் இப்படிபட்ட ஆட்கள் நிறைய பேர் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன். நம்முடைய தேவைக்கு இவர்களைத் தேடி போகும்போது பயங்கர பந்தா காண்பிப்பார்கள். அதே இவர்களுக்கு தேவையென்று வந்துவிட்டால் அப்படியே அடியோடு மாறி காலை பிடிக்கவும் தயங்க மாட்டார்கள்.

இருப்பினும் அவரைப் பார்க்க பாவமாயிருந்தது. அப்போது பிரபலாமாயிருந்த லாம்பி ஸ்கூட்டரின் விலை பத்தாயிரத்துக்குள் தானிருந்தது. பதினைந்து சதவிகிதம் மார்ஜின் பணம் போக கடன் தொகை எட்டாயிரத்துக்குள் அடங்கும். ‘சரி சார். அது ஒரு பிரச்சினையே இல்லை. நீங்க இந்த வட்ட செயலாளர்கிட்ட சொல்லி என்ன கொஞ்ச நாளைக்கி அதாவது திறப்புவிழா முடியற வரைக்கும் சும்மா இருக்க சொன்னா போறும். அவர் பாட்டுக்கு டெய்லி ஒரு இருபது, முப்பது பேரை என் வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்து இவங்களுக்கெல்லாம் எப்ப லோன் குடுக்க போறிங்கன்னு நின்னா என்னால என்ன பண்ண முடியும்? அமைச்சர்கிட்ட சொல்லுங்க, அவர் சொன்னா மாதிரி நூறு பேருக்கு ஆயிரம் வீதம் கடன் குடுக்கறது என்னோட பொறுப்பு. ஆனா பிராஞ்சே தொடங்கறதுக்கு முன்னால லோன் குடுன்னா எப்படி குடுக்கறது? திறப்பு விழா அன்றைக்கு கடன் வழங்கும் சாங்க்ஷன் லெட்டர்ஸ் முதலமைச்சர் கையால ஒரு இருபது பேருக்கு குடுத்துடறோம். லோன் தொகை திறப்பு விழா முடிஞ்சி ஒரு மாசத்துக்குள்ள மொத்த நூறு பேருக்கும் குடுத்து முடிச்சிடறேன். என்ன சொல்றீங்க’ என்று விலாவாரியாக எடுத்து கூறினேன்.

நமக்கு ஸ்கூட்டர் கடன் கண்டிப்பாய் உண்டு என்பதில் மகிழ்ச்சியடைந்த செயலாளர் ‘நான் அமைச்சர்கிட்ட சொல்லிக்கறேன் சார். நீங்க போங்க’ என உற்சாகமாய் வழியனுப்பிவைத்தார். அத்துடன் 'சார் நீங்க இனிமே என்னை எப்ப வேணும்னாலும் வந்து பாருங்க. இந்தாங்க ஒரு நிரந்தர விசிட்டர்ஸ் பாஸ் தரேன். இத வாசல்ல காட்டுனீங்கன்னா போறும். ஒரு பய தடுக்க மாட்டான்.’ என்று அவர் கொடுத்த பாஸ்சை வாங்கி சட்டைப் பையில் வைத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் திரும்பினேன்..

சும்மா சொல்லக்கூடாது. அதன் பிறகு எந்த அரை வட்டம், முழு வட்டமும் திறப்பு விழா தினம் வரை என்னை நெருங்கவில்லை..

தொடரும்

28 கருத்துகள்:

  1. ம்.ம்.ம். மேலே சொல்லுங்க. (கவனமா இருங்க:-))

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா11:37 AM

    ஜோசப் சார்,

    வந்துட்டீங்களா அடுத்த பதிவோட.

    நாங்க வந்து கால் கடுக்க நின்னாலும் ஒரு சின்ன லோன் குடுக்கறதுக்கு நாளைக்கு வா, நாளான்னிக்கு வான்னு இழுத்தடிப்பீங்க..

    அரசியல்வாதின்னா, அவருடைய பிஏ ன்னா லோன் உடனே கிடைச்சிரும். தனியார் வங்கியிலும் இந்த நிலைதானா?

    சும்மா ஜோக்கடிச்சேன்.

    கோபிச்சுக்காதீங்க..

    இந்த எபிசோடும் நல்லாருக்கு.

    கன்டினியூ பண்ணுங்க.

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. ஜோசப் சார்,
    தொடர்ந்து படித்து வருகிறேன்.ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு .சீக்கிரம் தொடர்ச்சிய போடுங்க.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா11:40 AM

    சார் நீங்க சொல்றதெல்லாம் உண்மையிலேயே நடந்துச்சா?

    ஆனா நீங்க தலைமை செயலகத்தைப் பத்தி இந்த பதிவிலே எழுதினது சரிதான்.

    நானே இந்த கஷ்டத்தை அனுபவிச்சிருக்கேன்.

    இத படிக்கும்போது எனக்கும் ஒரு பதிவு போட்டலென்னன்னு தோணுது.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா11:43 AM

    உங்கள மாதிரி அதிகாரிங்களுக்கு இந்த பொழப்பு (தப்பா நினைச்சிக்காதீங்க) தேவைதானா.

    பேசாம நீங்க நினைச்சா மாதிரி கலெக்டர வச்சே ஒபன் பண்ணியிருக்கலாம்.

    விதி யாரை விட்டது..

    நல்லாத்தான் இருக்கு.

    தொடர்ந்து எழுதுங்க. அதே சமயம் காசி சாரே சொல்லிட்டார் கவனமாயிருங்கன்னு.. பாத்துக்குங்க..

    பதிலளிநீக்கு
  6. வாங்க காசி,

    உங்களுடைய வரவேற்பு வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் கிடைச்சதுபோலிருக்கு.

    நன்றி.

    நீங்கள் கூறியதுபோல் கவனமாகவே இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. நன்றி சம்பத்.

    நீங்களே ஜோக்குன்னு சொல்லிட்டதால பரவாயில்லை.

    பெருமைக்காக சொல்லவில்லை,என்னுடைய இருபதாண்டுகால மேலாளர் அனுபவத்தில் எங்களுடைய வங்கியில் கடன் பெற்று வாழ்க்கையில் முன்னேறியவர்கள் எத்தனையோ பேர். சிலர் வகையறியாமல் தொழில் செய்து நொடித்தும் போயிருக்கிறார்கள். இவர்களுள் சிலரைப் பற்றி வரும் பதிவுகளில் எழுதுவேன்.

    உங்களுடைய விமர்சனத்திற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  8. அநா 1

    நான்தான் முன்பே கூறியிருக்கிறேனே. நான் எழுதும் சம்பவங்கள் யாவும் உண்மை.

    நாகரீகம் காரணமாக உரையாடல்களில் ஒரு சில மாற்றங்கள் செய்து எழுதியிருக்கிறேன்.

    தலைமை செயலகத்தில் அன்றாடம் நடக்கும் கூத்து நேரில் சென்று கண்டவர்க்கே புரியும். உங்களுடைய அனுபவங்களையும் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  9. நன்றி ஜோ.

    ரொம்ப நாளைக்கப்புறம் என்னுடைய வலைபூவுக்கு வந்திருக்கீங்க.

    அடிக்கடி வாங்க..

    பதிலளிநீக்கு
  10. அநா 2

    வங்கி அதிகாரிகளின் முக்கியமாக பொதுத்துறை வங்கி அதிகாரிகளின் வாழ்க்கை கேவலமான பிழைப்புத்தான்.

    Thankless jobஎன்பார்களே அதுபோல. Loan Melaஎன்று அரசியல்வாதிகள் 1980துகளில் அடித்த கூத்திருக்கிறதே அதில் என்னைப் போன்ற அதிகாரிகள் மாட்டிக் கொண்டு பட்ட அவஸ்தைகளை எழுத ஆரம்பித்தால் அதற்கு எல்லையே இல்லை..

    இருப்பினும் நாம் கடன் உதவி செய்து அவர்கள் அதைக்கண்டு முன்னேறி நல்ல நிலையை அடையும்போது நமக்கு கிடைக்கும் மன நிறைவு இருக்கிறதே அது வேறெந்த தொழிலிலும் கிடைக்காது..

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா1:09 PM

    ரொம்ப நாளைக்கப்புறம் காசி சாரே பின்னூட்டம் இட்டிருக்கார்னா க்ரேட்!

    நல்லாத்தான் போயிட்டிருக்கு சார் உங்க தொடர்..

    உங்க எளிய சரளமான நடையும் ரொம்ப ஜோர்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா1:12 PM

    Great Going Mr.Joseph.

    அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா..

    லோன் மேளாங்கறது என்னன்னு நினைசீங்க?

    எங்கள மாதிரி ஏழைங்களுக்கு !? உதவறதுக்குத்தானே..

    அத நடத்துற எங்க தலைவருங்க மேல உங்களுக்கென்னா சார் கோபம்?

    இத நான் சொல்லலை சார். சம்மந்தப்பட்ட கட்சி தொண்டர்கள்..

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா2:15 PM

    தலைமைச் செயலகம் போய் அறை அறையாய்ச் சுற்றிய அனுபவம் எனக்கும் உண்டு. எப்போதும் பிசியாயிருக்கும் இடம்.

    தங்கள் ஆக்கம் நன்றாகச் செல்கிறது. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  14. //ரொம்ப நாளைக்கப்புறம் என்னுடைய வலைபூவுக்கு வந்திருக்கீங்க.//
    ஐயா,வேலை காரணமாக வெளியூரிலிருக்கிறேன் .அதிகமாக பின்னூட்டமிட முடியவில்லையெனினும் உங்கள் தொடரை தவறாமல் படித்து வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  15. நன்றி மூர்த்தி.

    பிசியா இருக்கறாமாதிரி காண்பிச்சிப்பாங்க.

    உண்மையாவே பிசியாத்தான் இருக்காங்களான்னு கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா2:23 PM

    ரொம்ப நாளைக்கப்புறம் காசி சாரே பின்னூட்டம் இட்டிருக்கார்னா க்ரேட்!

    :=)))))))))))))))))))))))))))))))))))))

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லா2:25 PM

    நானும் தலைமைச் செயலகத்துக்கு பலமுறை சென்றிருக்கிறேன்.

    இப்போதைய ஆட்சியில் இனியும் மோசம்.


    ஆளுங்கட்சியினராலேயே ஒரு காரியத்தை நடத்தி முடிக்க பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது.

    நீங்கள் கூறியதுபோல் கலைஞரின் ஆட்சிகாலத்திலிருந்த (கடந்த முறை அல்ல. பு.தலைவர் ஆட்சிகாலத்திற்கு முன்பு) ஒரு Transperency இப்போது இல்லை.

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லா2:28 PM

    ரொம்ப நாளைக்கப்புறம் காசி சாரே பின்னூட்டம் இட்டிருக்கார்னா க்ரேட்!//

    :-)))))))))))))))))))))))

    அதென்ன அப்படி ஒரு இளிப்பு!

    யார்யா அது.. உங்க பேரைக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

    ரெட் போட்டுடறேன்.

    பதிலளிநீக்கு
  19. Silence please! Climax vanthudutchu... kasi solara mathiri ellorum kavanamaa padingaaa! Neenga continue pannunga sir!

    பதிலளிநீக்கு
  20. பெயரில்லா2:44 PM

    நான் அவரைப் பார்த்து (பிள்ளை பாணியில்) ஒரு கூழைக் கும்பிடு போட்டேன் (என் தலையெழுத்து!)//

    உங்கள பாத்தா பாவமாத்தான் இருக்கு சார்.

    பதிலளிநீக்கு
  21. பெயரில்லா2:46 PM

    யார்யா அது.. உங்க பேரைக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

    ரெட் போட்டுடறேன்.//


    யார்யா அது என் பேரை கேக்கறது?
    ஏன் உங்க பேர போடுங்களேன்.

    பதிலளிநீக்கு
  22. நன்றி ஜெமினி.


    நீங்க சொன்னா மாதிரி நாளைக்கி க்ளைமாக்ஸ்..

    ஆனா அதுக்கடுத்த பதிவில நீங்க யாருமே எதிர்பாக்காத இன்னொரு க்ளைமாக்ஸ் இருக்கு..
    எங்க எல்லோரையும், ஏன் முதலமைச்சரையே, அதிர்ச்சியில் ஆழ்த்திய க்ளைமாக்ஸ் அது..

    பதிலளிநீக்கு
  23. நன்றி ஜெமினி.//


    Sorry. It should read Rajini.

    பதிலளிநீக்கு
  24. "சும்மா சொல்லக்கூடாது. அதன் பிறகு எந்த அரை வட்டம், முழு வட்டமும் திறப்பு விழா தினம் வரை என்னை நெருங்கவில்லை."

    நல்ல வியூகம்தான் அமைத்தீர்கள். எம்.ஜி.ஆரின். செயல்பாட்டை நீங்கள் இரண்டு பகுதியாகப் பார்க்க வேண்டும். 1977-ல் பதவிக்கு வந்ததும் அவர் மிக தூய்மையான ஆட்சியை கொடுத்தார். கட்சிக்காரர்கள் எல்லோரையும் தலையில் தட்டி உட்கார வைத்திருந்தார். 1980-ல் கருணாநிதி அவர்கள் தூண்டுதலில் அவர் ஆட்சியை கலைத்து இடை தேர்தல் நடத்த அவர் மீண்டும் பதவிக்கு வந்தார். அப்போதிலிருந்து நேர் தலைகீழாக செயல்பட ஆரம்பித்தார்.

    உங்கள் துரதிர்ஷ்டம் நீங்கள் அந்த நேரம் பார்த்து அவரை அணுகியிருக்கிறீர்கள். ஒரு வருடம் முன்னால் சென்றிருந்தால் உங்களுக்கு இவ்வளவு சங்கடமான அனுபவங்கள் வந்திராது என்றுதான் நினைக்கிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  25. டோண்டு சார்,

    நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு சரி.

    பதிலளிநீக்கு
  26. ஜோசப் ஸார். எளிய நடையில் நன்றாக இருக்கிறது உங்கள் பதிவு. அடுத்து என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

    அது சரி. முகமது பின் துக்ளக் படத்தை இப்போது பார்த்தாலும் எதுவும் அதீத கற்பனையாகத் தெரியாது சம்பவங்கள் இக்காலகட்டத்திற்கும் பொருத்தமாகவே இருக்கிறதில்லையா? அது போல நீங்க சொல்ற நிகழ்வு அப்படியே இப்போதும் பொருந்தி வரும்.என்ன ஒங்க கையில் செல் போன் ஒண்ணு இருக்கறதா எழுதினாப் போதும். இன்னிக்குக் காலைல நடந்ததை எழுதின மாதிரிதான் இருக்கும். 'அந்தக் காலத்துல'ங்கற பிரயோகத்துக்கே தேவையில்லை :)

    பதிலளிநீக்கு
  27. பெயரில்லா8:05 AM

    Joseph , Its an excellent article/posting.

    Its like one of those "thodar" you read and wait for the next episode.

    Waiting for the next article.

    -Satheesh

    பதிலளிநீக்கு