கடந்து வந்த பாதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடந்து வந்த பாதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13 டிசம்பர் 2019

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்!

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.....

வாழ்க்கை  என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும் 

இதுதான் வாழ்க்கை. இதை ஏற்ருக்கொண்டால் நிம்மதி பிறக்கும். என்கின்றன இந்த திரைப்படப் பாடல் வரிகள்.

ஆனால் இது  தோல்வியை, இழப்பை ஏற்றுக்கொள் அதற்காக வருந்தாதே என்று நம்மை நாமே திருப்திப் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவது போலல்லவா உள்ளது?

அதையே இப்படி பாடிப் பார்த்தால்..

உனக்கும் மேலே உள்ளவர் கோடி 
உழைத்து உழைத்து  முன்னே செல்லு

என்றும் 

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் சாதனை இருக்கும்

ஆம்!

சாதிக்க வேண்டும் என்று நினைத்து முன்னே செல்வதுதான் இன்றைய தேவை.

நம்மால் முடிந்தால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை என்பதை என்னுடைய மேலாளர் வாழ்க்கையில்  ஒன்றும் இல்லாமையிலிருந்து தங்களுடைய அசுர உழைப்பால் மிக உன்னத நிலையை அடைந்த பல வாடிக்கையாளர்களை கண்டிருக்கிறேன். 

நான் முதல் முதலாக சென்னை கிளை ஒன்றில் மேலாளராக அமர்த்தப்பட்ட சமயம்.

சென்னை அமைந்தகரையில் 20க்கு 20 அடி பரப்பளவு மட்டுமே  இருந்த ஒரு சிறைய கடையில் ஐந்தாறு இரும்பு கட்டில்கள், மேசை மற்றும் கூரை மின் விசிறிகள், மடக்கும் இரும்பு நாற்காலிகள் என சுமார் பத்து பதினைந்து பொருட்களை மட்டுமே இருப்பு வைத்துக்கொண்டு தவணை முறையில் அவற்றை விற்பனை செய்து வந்த ஒருவரை என்னுடைய கிளை அருகில் அதே மாதிரியான ஆனால் சற்றே பெரிய அளவில் வணிகம் செய்துக்கொண்டிருந்த ஒரு வாடிக்கையாளர் அறிமுகப்படுத்தினார். எங்களுடைய வங்கியில் அ[போது வணிக கணக்கு (current account) துவங்க குறைந்தபட்சமாக ரூ. 500/- செலுத்தப்படுவதுடன் அதை இருப்பிலும் வைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த தொகை கூட அவரிடம் இருக்கவில்லை. ஆகவே முதலில் நீங்கள் உங்களுடைய பெயரில் சேமிப்பு கணக்கு துவங்குங்கள்.... வணிகம் சற்று பெருகியதும் வணிகக் கணக்கு துவங்கலாம் என்று அறிவுரை கூறி ரூ.100 மட்டும் செலுத்தி கணக்கு துவக்க வைத்தேன்.

அத்துடன் நில்லாமல் அடுத்த சில மாதங்களில் அப்போது பிரபலமாக இருந்த சிறு வணிகக் கடன் திட்டத்தில் (Small Loan Scheme) ரூ.10000/- ஓவர்டிராஃப்ட்டும் வழங்கினேன். அதற்கு ஈடாக அடகு வைக்கக் கூட அவரிடம் ஒன்றும் இருக்கவில்லை. அவரை அறிமுகப்படுத்தியவருக்கு அவருக்கு ஜாமீன் வழங்கவும் அவ்வளவாக விருப்பமில்லை. ஆனாலும் வேறொரு வாடிக்கையாளருடைய தனிநபர் ஜாமீன் இல்லாமல் கடன் கொடுக்கவும் வழியில்லை. ஆகவே அவரை நானே சமாதானப்படுத்தி ஜாமீன் வழங்க வைத்து கடனை வழங்கினேன்.

அவர் மீது நான் வைத்திருந்த நம்பிக்கை வீண் போகவில்லை. அவருடைய தன்னம்பிக்கையும் அயரா உழைப்பும் நான் அங்கிருந்த மாற்றலாகிப்போகும் சமயத்தில் அதாவது சுமார் இரண்டு ஆண்டு காலத்தில் அவருடைய ஒவர்டிர்ஃப்ட் லிமிட் ஒரு லட்சமாகவும் அவருடைய வருட வணிகம் சுமார் பத்து லட்சமாகவும் வளர்ந்திருந்தது. 

நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது  அந்த கிளையின் மிகப் பெரிய வாடிக்கையாளராக உயர்ந்துள்ளார் என்று கேள்விப்பட்டபோது வியந்துபோனேன். இப்போதும் அதே பகுதியில்தான் அவருடைய கடை உள்ளது சுமார் நாற்பதாயிரம் சதுர அடி பரப்பில்.... அதே சாலையில் அவருடைய இரு இளைய சகோதரர்களும் அதே மாதிரியான கடைகளை நடத்தி வருகின்றனர்.

ஆயினும் அதே எளிமையுடன் அவர் இருப்பதை பார்க்கும்போது எவ்வித பின்புலனும் இல்லாமல் தனி ஒருவர் நினைத்தால் தன்னுடைய அயரா உழைப்பால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்பதை  உணர்ந்தேன்.

அதே போல் தூத்துக்குடியில் நான் மேலாளராக பொறுப்பேற்றபோது  மீன் ஏற்றுமதியாளர்களுக்கு ஐஸ் கட்டிகளை சிறிய அளவில் விற்பனை செய்துக்கொண்டிருந்த ஒருவரை சந்திக்க நேரந்தது. தூத்துக்குடியில் பிரதான தொழில் மீன்பிடி தொழில். அங்கு கிடைக்கும் சிங்க இறால்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அவற்றை டண் கணக்கில் கொள்முதல் செய்து மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கென்றே கேரள மாநிலத்தைச் சார்ந்த பலர் அங்கு தொழிற்சாலைகளை நடத்தி வந்தனர். இவர்களுக்கு ஐஸ் கட்டிகளை வழங்குவதற்கென்றே பல சிறிய நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வந்தன. வருடத்தில் எட்டு மாதங்கள் சீசன் படு ஜோராக நடக்கும். 

என்னுடைய வாடிக்கையாளர் மிகவும் நலிந்த குடும்பத்திலிருந்து வந்தவர். வேறொரு நிறுவனத்தில் தினக்கூலிக்கு ஐஸ் வெட்டும் பணியில் இருந்தவர். அவருக்கும் இதே போன்று ஒரு தொழிலை சொந்தமாக துவங்கி தொழில் செய்ய வேண்டும் என்ற ஆவல். நான் செல்லும் தேவாலயத்துக்குத்தான் அவரும் வருவார். அப்போது தூத்துக்குடியில் சிறப்பாக செயல்பட்டு வந்த பல்நோக்கு சேவை மையத்திலிருந்த மேலாளர் இவரை பரிந்துரைத்ததால் அரசு செயல்படுத்தி வந்த திட்டத்தின் கீழ் ரூ.பத்தாயிரம் கடனாக கொடுத்தேன். அந்த திட்டத்தில் அரசு சார்பில் இருபத்தைந்து விழுக்காடு மானியமாக வழங்கப்பட்டது. 

நான் கடன் வழங்கியது 1985ம் வருடம். இன்று தூத்துக்குடியிலேயே பெரிய ஐஸ் கட்டி தொழிற்சாலை அவருடையதுதான். தனி ஆளாக தன்னுடைய உழைப்பால் மட்டுமே உயர்ந்த மனிதர் அவர்!

இதுபோல் சென்னை ராயப்பேட்டையில், புரசை வாக்கத்தில் மும்பை செம்பூரில் என என்னுடைய பல கிளைகளில் மிக நலிந்த பின்னணியிலிருந்து வந்த பல வாடிக்கையாளர்கள் சுமார் இருபது ஆண்டு கால இடைவெளியில் நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து நிற்பதை பார்த்தபோது..

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் சாதனை இருக்கும்

என்கிற வரிகள் எத்தனை உண்மையானது என்பது புலப்பட்டது...

உழைப்பு, உழைப்பு, உழைப்பு இது மட்டுமே போதும்.... சரியான நேரத்தில் தேவைப்படும் மூலதனமும் கிடைத்துவிட்டால் வணிகத்தில் எட்டிவிட முடியாததே இல்லை எனலாம். 

***********



22 செப்டம்பர் 2008

உறவுகளும் நட்பும்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'கடந்து வந்த பாதை' என்ற தொடரில் என்னுடைய நெடுநாள் நண்பர் ராஜ் என்பவரைப் பற்றி எழுதியிருந்தேன்.

அதை படிக்காதவர்கள் இங்கு செல்லலாம்

பகுதி I

பகுதி II

கடந்த வாரம் சென்னையிலுள்ள ஒரு பிரபல கண் மருத்துவமனைக்கு செல்ல நேர்ந்தது. (Conjectivitis என்கிற கண் நோயால் இரு வாரங்களுக்கு மேலாக அவதிப்பட்டு இந்த மருத்துவமனைக்கு சென்றபிறகுதான் அதிலிருந்து விடுபட்டேன்.)

நான் மருத்துவரைக் காண வரவேற்பறையில் காத்திருந்தபோது எனக்கு எதிரிலிருந்த லிஃப்ட்டிலிருந்து ஒரு சக்கர நாற்காலியில் வய்தான ஒருவரை வைத்து ஒரு பெண் (அவரும் வயதானவர்தான்) தள்ளிக்கொண்டு வருவதைக் கண்டேன். அவர் கருப்பு கண்ணாடி அணிந்திருந்தார். காட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்திருப்பார் போலிருக்கிறது என்று நினைத்தேன். அவரை எங்கோ பார்த்ததுபோன்று தோன்றியது. ஆனால் எப்படி கேட்பது என்று தயக்கத்துடன் அவரையே பார்த்தேன்.

அவரும் என்னை பார்த்தவாறே அருகில் வந்ததும், 'Don't mistake me....நீங்க ஜோசஃப்தானே' என்றார். நான் தயக்கத்துடன் 'ஆமாம்.' என்றேன்.. 'தப்பா நினைக்காதீங்க...அடையாளம் தெரியல...'

அவர் புன்னகையுடன். 'எத்தன வருசமாச்சி பாத்து... எப்படி ஞாபகம் இருக்கும்? ராஜ்.... FCI...' என்றார்.

ராஜ்! சட்டென்று நினைவுக்கு வர அவருடைய கரங்களைப் பற்றியவாறே அவருக்கருகில் நின்றிருந்த பெண்ணை நோக்கினேன்...'நீங்க இவருக்கு....' என்று இழுத்தேன் தயக்கத்துடன். ஏனெனில் அவருடைய தோற்றமே - நல்ல சிவந்த நிறம் - என்னுடைய நண்பருக்கு உறவினராய் இருக்க முடியாது என்று கூறியது.

அவர் பதிலளிக்காமல் என்னுடைய நண்பரைப் பார்த்தார். அவர் ஒரு பெருமூச்சுடன் 'அது ஒரு பெரிய கதை ஜோசஃப்' என்றார். தொடர்ந்து, 'நீங்க எதுக்கு வந்திருக்கீங்க? கண்ணுல ஏதாச்சும் பிரச்சினையா?' என்றார்.

'ஆமா சார். ரெண்டு வாரமா கண்ணுல கொஞ்சம் ப்ராப்ளம். போன வாரம் வந்து டாக்டரை பார்த்தேன். இப்ப பரவாயில்லை.. இன்னும் மருந்த கண்டினியூ பண்ணணுமான்னு கேட்டுட்டு போலாம்னு வந்தேன்.'

'நா வேணும்னா வெய்ட் பண்றேன். ரொம்ப நாள் கழிச்சி பாத்துட்டு இப்படியே போயிர முடியாது. உங்ககிட்ட பேசறதுக்கு நிறைய இருக்கு.' என்றார்.

'இன்னும் ஒரு பேஷண்ட்தான் அடுத்தது நாந்தான்னு சிஸ்டர் சொல்லியிருக்காங்க. மேக்சிமம் பத்து நிமிஷம் ஆகலாம்.'

ஆனால் அடுத்த நிமிடமே என்னுடைய பெயர் அழைக்கப்பட 'இருங்க இதோ வந்துடறேன்.' என்று மருத்துவர் அறையை நோக்கிச் சென்றேன். அவர் என்னுடைய கண்களைப் பார்த்துவிட்டு, 'இன்னும் ஒரு நாலஞ்சி நாளைக்கி கண்டினியூ பண்ணுங்க. அப்புறம் ஸ்டாப் பண்ணிறலாம்.' என்று விடைகொடுக்க வெளியில் வந்து என்னுடைய நண்பரை அழைத்துக்கொண்டு மருத்துவமனை வாசலை அடைந்தேன்.

'என் கார்லயே போயிரலாம். பேசிக்கிட்டே போகலாம்.' என்றேன்.

அவர் சரியென்றாலும் அவருடன் வந்திருந்த பெண் சற்று தயங்குவதுபோல் தெரிந்தது. ராஜ் புன்னகையுடன். 'பரவால்ல பார்வதி. ஜோசப்புக்கு உன்னைப் பத்தியும் தெரியும்.' என்றார் என்னை பார்த்தவாறு.

நான் வியப்புடன் அவரைப் பார்த்தேன். ஏதோ புரிந்ததுபோல் இருந்தது. ஆயினும் தயக்கத்துடன், 'இவங்க... உங்க பழைய பிராமின் ஃப்ரெண்ட்....' என்றேன்..

ஆமாம் என்றவாறு அவர் சக்கர நாற்காலியிலிருந்து இறங்கி நிற்க நான் அவரை பின்னிருக்கையில் அமர்த்திவிட்டு எதிர்ப்புற கதவை திறந்து அந்த பெண்ணை அமரச்செய்தேன்.

என்னுடைய வாகனத்தை ஸ்டார்ட் செய்து பிரதான சாலையில் கலக்கும் வரை காத்திருந்த அவர் மெள்ள பேச ஆரம்பித்தார். என்னுடைய கவனம் சாலையில் இருந்தாலும் அவர் கூறியதைக் கேட்டு மனம் நைந்துப் போனது. இப்படிப்பட்ட உறவுகள் தேவைதானா என்று தோன்றியது.

****

அவரைப் பற்றிய முந்தைய பதிவில் சென்னை சைதாப்பேட்டையில் ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் தனியாக வசித்துவந்ததாக குறிப்பிட்டிருந்தேன்.

நான் அவரை சந்தித்த அடுத்த சில மாதங்களில் அவருடைய உடல் நலம் பாதிக்கப்படவே அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவருடைய இளைய சகோதரருக்கு தெரிவித்துள்ளனர். அவரும் வந்து பார்த்துவிட்டு என்னுடைய நண்பரின் நிலையைப் பார்த்துவிட்டு, 'என் கூடவே வந்துருங்கண்ணே.' என்று அழைத்துச் சென்றிருக்கிறார்.

'ஆனா என் கொழுந்தியாளுக்கு என்னெ வீட்ல வச்சிக்க விருப்பமேயில்ல ஜோசஃப். ரெண்டு மாசம் பல்ல கடிச்சிக்கிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் நம்ம பழைய காலனிக்கே போயிரலமான்னு யோசிச்சிக்கிட்டிருந்தப்பத்தான் பார்வதி வீட்டுக்கு வந்தா.' என்றார் ராஜ்.

பார்வதிதான் என்னுடைய நண்பர் திருமணம் செய்துக்கொள்ள விரும்பிய பிராமண வகுப்பைச் சார்ந்த பெண். ஆனால் அவருடைய வீட்டில் சம்மதிக்காமல் போகவே வேறொருவரை திருமணம் செய்துக்கொண்டவர். அவருக்கு ஒரு மகனும் மகளும். இருவருக்கும் திருமணம் முடிந்து சென்னையில்தான் வாசம். பார்வதியின் கணவர் இறந்தபிறகு அவரால் மருமகளுடன் ஒத்துப்போக முடியவில்லை. மகனே ஒரு தனிவீட்டில் தன் தாயை குடி வைத்துவிட தனியாளாய் போனார் பார்வதி.

'மக கூட போய் இருந்திருக்கலாம். ஆனா அவ அவங்க மாமனார், மாமியாரோட இருக்கா. எப்பவாச்சும் ஒருதரம் போய் வந்தாலே அவங்க மாமியார் ஒரு மாதிரி பேசுவாங்க. அதனால அங்கயும் போய் இருக்க முடியலை. ஊருக்குள்ளயே இருந்தும் பேரப் பிள்ளைங்களக் கூட இருக்க முடியலையேன்னு தோனும். அதுவும் ரிட்டையர் ஆனதுக்கப்புறம் எதுக்குடா இந்த வாழ்க்கைன்னுல்லாம் கூட தோனும். அப்பத்தான் இவர் நினைப்பு வந்துது. இவர் என் நினைப்பாவே கல்யாணம் பண்ணிக்காம இருக்கார்னு தெரியும். இவர் ஆஃபீஸ்ல போய் கேட்டு இவர் விலாசத்த தேடிக்கிட்டு போய் பார்த்தேன். ஆனா நா அங்க போனதே இவருக்கு பெரிய பிரச்சினையா போயிருச்சி....' என்ற பார்வதி கண்கள் கலங்கிப் போய் மேலே தொடர முடியாமல்....

சிறிது நேரம் மவுனமாய் மூவரும் அமர்ந்திருந்தோம். பிறகு அவரே சுதாரித்துக்கொண்டு தொடர்ந்தார். 'இவர பாத்துட்டு வந்ததுலருந்தே எனக்கு மனசே சரியில்லைங்க. என்னாலதான் இவருக்கு இந்த நிலைமைன்னு நினைச்சி, நினைச்சி ஒரு வாரமா அவஸ்த்தைப்பட்டேன். சரி, வர்றது வரட்டும்னு மறுபடியும் இவர் தம்பி வீட்டுக்கு போனேன். இவர் அங்க இல்லை. ஆனா இவரோட தம்பி வய்ஃப் என்னெ ரொம்ப மரியாதையில்லாம பேசி அவர் எங்கருக்கார்னு எங்களுக்கு தெரியாது இங்க வந்து மானத்த வாங்காதீங்கன்னு சொல்லி அசிங்கப்படுத்திருச்சி. ஆனா பக்கத்து ஃப்ளாட்டுக்காரங்க இவரோட அட்றச குடுத்து 'நீங்களாச்சும் போய் அவருக்கு ஹெல்ப் பண்ணுங்கம்மா. உடம்பு சரியில்லாத மனுசன்னு சொன்னாங்க. நா அங்க போயி இவர் குடியிருந்த போர்ஷன பாத்தப்ப மனசு பதறிப்போச்சி. கட்டாயப்படுத்தி வீட்ட காலி பண்ண வச்சி எங்கூடவே கூட்டிக்கிட்டு போயிட்டேன். அதுவும் பிரச்சினையாத்தான் முடிஞ்சிது.' என்றவர் மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு சிறிது நேரம் மவுனமாகிப் போனார்.

'பார்வதி என்னெ பாக்க வந்தது என் தம்பி குடும்பத்துக்கு புடிக்கல... நா இவளோட போய் இருந்தது இவளோட சன்னுக்கு புடிக்கல. 'இந்தாளூ இங்க இருக்கறதாருந்தா நா இந்த பக்கமே வரமாட்டேன்னு சொல்லிட்டான்.' என்று தொடர்ந்தார் ராஜ் சோகத்துடன். 'நா மட்டும் பட்டுக்கிட்டுருந்த கஷ்டம் பாவம், இவளையும்.....'

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒன்றும் சொல்ல முடியாமல் மனம் கணத்துப் போக பாதையில் கவனத்தை செலுத்தினேன்.

'அத்தோட நிக்கல அந்த பாவி.. நா அவன் சொன்னத கேக்கலேன்னுட்டு நா குடியிருந்த வீட்டுக்காரர உசுப்பேத்தி என்னை அங்கிருந்தே காலி பண்ண வச்சிட்டான். எங்கயும் வீடு கிடைக்காம இவர் தன்னோட ஆஃபீஸ்ல போயி கேக்க அவரோட ஃப்ரெண்ட் ஒருத்தர் இப்ப நாங்க இருக்கற வீட்டை குடுத்தார். வாடகைன்னு பெருசா இல்லை. இப்ப ரெண்டு வருசமா அங்கதான் இருக்கோம்.' என்றவாறு பார்வதி விலாசத்தை கூற அடுத்த அரை மணியில் அங்கு சென்றடைந்தோம்.

தனி வீடு. சிறியதாக இருந்தாலும் கச்சிதமாக இருந்தது. நடுத்தரத்துக்கும் சற்று உயர்ந்தவர்கள் குடியிருந்த சூழல் என்பதால் இவர்களுடைய விஷயத்தில் தலையிட யாரும் இருக்கவில்லை.

'நாங்க ரெண்டுபேருமே எங்க குடும்பத்துக்காகன்னு சொல்லி ஒருத்தர் மேல் ஒருத்தருக்கிருந்த அன்பைக் கூட சாக்ரிஃபைஸ் பண்ணோம். ஆனா ரெண்டு குடும்பங்களுக்குமே நாங்க இப்ப வேண்டாதவங்களா போய்ட்டோம். என்னோட ஃப்ரெண்ட்ஸ் எங்கள புரிஞ்சிக்கிட்ட அளவுக்குக் கூட எங்க குடும்பத்துலருக்கறவங்க எங்கள புரிஞ்சிக்கலையேங்கறத தவிர எங்களுக்கு எந்த வருத்தம் இல்லை ஜோசஃப்.' என்று நான் விடைபெற்றபோது ராஜ் கூறினாலும் அவருடைய குரலில் இருந்த சோகம் என்னை கஷ்டப்படுத்தியது.

உறவுகள் வேண்டாம் என்று ஒதுக்க அலுவலக நட்பு இவருக்கு துணை சென்றதை நினைத்துப் பார்க்கிறேன். உறவுகளைவிட நட்புதான் சிறந்தது என்றே எண்ணத் தோன்றுகிறது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தோன்றும் நட்புக்கு இணை எந்த உறவும் இல்லை.

ராஜும் பார்வதியும் இப்போதும் நல்ல நண்பர்களாகவே இருக்கின்றனர். இளம் வயதில் அவர்களைப் பிரித்து வைத்த விதி முதிய வயதில் அவர்களை இணைத்திருக்கிறது, நல்ல நண்பர்களாக... தள்ளாத வயதில் ஒருவருக்கொருவர் துணையாக...

*********

08 ஜூன் 2007

திரைப்படங்களில் பிரம்மாண்டம் - நிறைவு

நான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த திரைப்பட தயாரிப்பாளர் பிரம்மாண்டங்களுக்கு பெயர்போனவர்.

அவருக்கு ஒரு சகோதரரும் உண்டு. அவரும் பிரபலமான இயக்குனர்தான். அவரும் பிரம்மாண்ட வெறி பிடித்தவர் எனலாம். அதாவது சில சமயங்களில் ridiculous லெவலுக்கு செல்வார். அவருடைய படங்களில் வரும் பாடல் காட்சிகளைப் பார்த்தாலே இது தெரியும். பாடலிலுள்ள ஒவ்வொரு வரிக்கும் (சில சமயங்களில் ஒவ்வொரு வார்த்தைக்கும் கூட) ஒவ்வொரு காட்சி இருக்கும். ஒரு வரியில் வயல்வெளி என்றால் அடுத்த வரி மலைக்கு மீது. ஒரு வரி காஷ்மீர் என்றால் அடுத்த வரி கன்னியாகுமரி என... எளிதாக சென்ற வெளியில் படப்பிடிப்பு நடத்தக்கூடிய காட்சிகளுக்கும் கூட செட்டுகளைப் போட்டு பணத்தை விரயம் செய்யக் கூடியவர்.

ஒவ்வொரு லொக்கேஷனுக்கும் ஒரு பெரிய கும்பலையே கூட்டிக்கொண்டு போய் ஸ்டார்ட் கேமரா என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த வரி முடிந்துவிடும். ஒருவேளை அந்த ஒரு வரிக்கே ஒரு வாரம் செலவழித்தாலும் வியப்பில்லை. அந்த வரி முடிந்தவுடன் மீண்டும் பேக்கப், பயணம், ஸ்டார்ட் கேமரா.... எத்தனை விரயம்?

நம்மில் யாராவது ஒரு படத்தில் இத்தனை பாடல்கள் வேண்டுமென்றோ அல்லது ஒவ்வொரு பாடலிலும் இத்தனை காட்சிகள் வேண்டுமென்றோ கேட்டிருக்கிறோமா? முன்பெல்லாம் ஒரு தோட்டத்தைக் கூட செட்டுக்குள்ளேயே நான்கைந்து தொட்டிகளையும் அதற்கு பின்னால் நிலாவை ஒரு திரையில் வரைந்து வைத்து படம் பிடித்தார்களே அப்போது திரைப்படங்களை மக்கள் பார்க்கவில்லையா?

கேட்டால் படம் ரிச்சாக இருக்க வேண்டும் என்பார்கள். லாஜிக்காக படும் எடுக்கிறேன் என்று தன்னைப் பற்றி கூறிக்கொள்ளும் அந்த இளைய சகோதரருடைய படங்களுடைய தயாரிப்பு செலவு மற்ற படங்களைக் காட்டிலும் நான்கு மடங்கு, ஐந்து மடங்கு இருக்குமாம். இயக்குனர் திலகம் என வர்ணிக்கப்படும் ஒரு இயக்குனருக்கு சொந்தமான நிறுவனம் இவரை வைத்து படம் எடுத்து நொந்துப்போய் இவருடைய மூத்த சகோதரரான - நேற்றைய பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த - தயாரிப்பாளரிடம் சென்று ஏகமாய் எகிறியிருந்த தயாரிப்பு செலவைப் பற்றி முறையிட்டாராம்!

தன்னுடைய இளைய சகோதரருடைய படங்களுக்கு ஆகும் செலவுகளை சமாளிக்க முடியாமல் இவர் ஊரெல்லாம் அசுர வட்டிக்கு கடன் வாங்கியதன் விளைவு சகோதரர்களுக்கிடையில் மனத்தாங்கல் ஏற்பட்டு பிரிந்து சென்றனர். இவர் வாங்கியிருந்த கடனுக்கு வட்டி, வட்டிக்கு வட்டி என இறுதியில் சமாளிக்க முடியாமல் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு குடும்பத்தினர் வீட்டில் இல்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இவருடைய நிறுவனத்திற்கு அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்று மிகப்பெரிய அளவில் கடன் வழங்கியிருந்தது. (என்னுடைய கிளையிலிருந்த கடனை அடைக்க அவர் அளித்த காசோலை இந்த வங்கியிலிருந்த கணக்கிலிருந்துதான் வழங்கப்பட்டது.) அதன் கிளை மேலாளர் ஒரு சபலபுத்திக்காரர் என்பதை தெரிந்துக்கொண்ட இந்த தயாரிப்பாளருடைய கும்பல் அவரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து அவருடைய மேலிடம் அனுமதித்திருந்த கடன் அளவுக்கு மேல் சுமார் மூன்று மடங்கு தொகையை பெற்றிருந்தார் என்பது பிறகுதான் தெரிய வந்தது. விளைவு? அவருடைய வங்கி அந்த கிளை மேலாளரைக் குறித்து காவல்துறையில் புகார் செய்ய அவர் சிறையிலடைக்கப்பட்டார். அவரும் என் வயதொத்தவர்தான். இன்னும் வெளியில் வந்தாரா என்பது சந்தேகமே.

இவர் கதை இப்படி முடிந்தது.

நான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த இரண்டாமவர் கேரளாவைச் சார்ந்தவர்.

அவரும் என்னுடைய கிளையிலிருந்து கடன் பெற்றிருந்தவர்தான். நல்லவேளையாக அவருக்கு கடன் கொடுத்திருந்தது ஒரு படத்திற்காக மட்டும். அந்த படம் வெற்றிபெற்றதால் கடன் முழுவதையும் சிரமமில்லாமல் வசூலிக்க முடிந்தது. ஆனால் அதற்குப் பிறகு அவர் சமர்ப்பித்த விண்ணப்பத்தை என்னுடைய பரிந்துரையின் பேரில் அவருக்கு கடன் அளிக்க எங்களுடைய வங்கி மறுத்துவிட்டது. அப்போதே பெரிய அளவில் பந்தா செய்வார். வங்கி மேலாளர் அவருடைய வீட்டுக்கு வந்து கடன் பத்திரங்களில் கையொப்பம் வாங்க வேண்டும் என்று சொன்னவர்!

இவரும் அபத்தமான பிரம்மாண்டங்களுக்கு பெயர்போனவர். முதல் மூன்று படங்கள் அளித்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சென்னை கோடம்பாக்கத்தில் பல கட்டிடங்களை விலைக்கு வாங்கியவர். ஆனால் இறுதியாக அவர் எடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் தொழிற்சங்கப் பிரச்சினை ஏற்பட்டு படம் பாதியில் நின்றுபோய்... பிறகு மீண்டும் துவங்கி... வெளியாகி ஒரே வாரத்தில் பெட்டிக்குள் திரும்பி...பெருத்த நஷ்டத்திற்கு உள்ளானவர்.

இப்போது அவர் குடியிருப்பது வாடகை வீட்டில் என்றால் நம்ப முடிகிறதா?

இவர்கள் இருவருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லையென்றாலும் உங்களால் ஊகித்திருக்க முடியும் என்று நம்புகிறேன்.

இதுதான் பிரம்மாண்டத்தின் விளைவு.

இவர்கள் வரிசையில் வருபவர்தான் இப்போதைய ஷங்கர். மலைக்கு வர்ணம் பூசுவது, ஒரு சாலையையே சாயம் அடிப்பது, லாரிகளுக்கு கண், மூக்கு வைப்பது, அடுக்கு மாடிகளில் சென்று படம் எடுக்காமல் அதற்கென ஒரு பிரம்மாண்டமான செட் போடுவது, இதில்தான் இவருடைய கவனம் செல்கிறதே தவிர லாஜிக்கான கதையை புனைவதில் கவனம் இருக்காது. ரயில்வே காண்டீனில் இருக்கும் ஒரு இரும்புக் கடாயில் இருக்கும் கொதிக்கும் எண்ணெயில் ஒரு மனிதனையே மூழ்கடித்து கொல்லும் அளவுக்கு அபத்த மன்னன்!

வடிவேலுவை நம்பி படம் எடுத்து கையை சுட்டுக்கொண்டதுடன் விழித்துக்கொள்வார் என்று நினைத்தேன். ஊஹும்.... மேலும் அவருடைய பயணம் தொடர்கிறது.. காலம்தான் இவருக்கு பதில் சொல்லும். ஆனால் இவருடைய எக்ஸ்ட்ரீமுக்கு ஏவி.எம் போன்ற நிறுவனம் எப்படி சம்மதித்தது என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. இந்த படத்திற்கு செலவழிக்கும் பணத்தை நஷ்டமில்லாமல் எடுப்பதற்கே குறைந்தபட்சம் நூறு நாட்கள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடவேண்டும் என்று தோன்றுகிறது. அதற்குப் பிறகு லாபம் எப்படி பார்ப்பது? கடவுளுக்கே வெளிச்சம்.

சினிமா ஒரு சூதாட்டம் என்பது சரியாகத்தான் இருக்கிறது. எத்தனை நஷ்டம் ஏற்பட்டாலும் அடுத்த படத்தில் விட்டதை எடுக்கலாம் என்ற நோக்கத்துடன் விட்டுக்கொண்டே இருப்பார்கள்..

சரியானதொரு திட்டமில்லாத வெறும் கனவு காணும் கும்பல் என்றாலும் மிகையாகாது.

ஆகவேதான் திரைப்படத்துறைக்கு கடன் வழங்க இன்னமும் வங்கிகள் முன்வருவதில்லை.

*****

07 ஜூன் 2007

திரைப்படங்களில் பிரம்மாண்டம்

இன்றைய குமுதத்தில் சிவாஜி திரைப்படத்தைப் பற்றி நடிகர் விக்ரம் கூறுகையில் இயக்குனர் சங்கர் அவர்களுடைய பிரம்மாண்ட யுக்திகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

திரைப்படங்களில் பிரம்மாண்டம் தேவைதான், ஓரளவுக்கு. ஆனால் அதையே ridiculous என்பார்களே அந்த அளவுக்கு கொண்டு செல்வதால் தயாரிப்பாளருக்கு ஏற்படும் விளைவுகளைப் - பொருளாதார விளைவுகள் - பற்றி இவர்களுக்கு கடன் வழங்கும் என்னைப் போன்ற வங்கி மேலாளர்களுக்கே தெரியும்.

நான் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு எங்களுடைய வங்கியின் சென்னைக் கிளையில் மேலாளராக பணியாற்றியபோது இரண்டு திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கடன் வழங்கிய அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

முதலாமவர் நம் தமிழ்நாட்டைச் சார்ந்தவர். அப்போது தமிழ் திரையுலகில் பெரிய தயாரிப்பாளர்களுள் ஒருவர்.

நான் கிளைக்கு பொறுப்பேற்கும்போதே அவருக்கு எங்களுடைய கிளையிலிருந்து கடன் வழங்கப்பட்டிருந்தது. என்னுடைய காலத்தில் அதை புதுப்பிக்க வேண்டும். அதற்காக அவரிடமிருந்து ஒரு விண்ணப்பம் வேண்டியிருந்தது.

அதற்கே பலமுறை என்னுடைய பணியாளர்களுள் ஒருவர் நடையாய் நடக்க வேண்டியிருந்தது. பிறகு பெருந்தன்மையுடன் சரிவர பூர்த்தி செய்யப்படாத ஒரு விண்ணப்பத்தையும் அதனுடன் தணிக்கை செய்யப்படாத நிதியறிக்கைகளையும் சமர்ப்பித்திருந்தார்.

அவருடைய நிதியறிக்கைகளைப் பரிசீலித்தபோது அதில் sundry creditors பகுதியில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட திரையரங்குகளின் பெயரைக் காண முடிந்தது. ஏறக்குறைய இவர்கள் எல்லோருடைய பெயரும் sundry debtors பகுதியிலும். அதாவது நிறுவனத்திற்கு கடனும் கொடுத்திருக்கிறார்கள், அதே நிறுவனத்திலிருந்து கடனும் பெற்றிருக்கிறார்கள். இதில் ஏதேனும் வில்லங்கம் இருக்குமோ என்று நினைத்தேன்.

அப்போது அந்த தயாரிப்பாளர் இருந்த உச்ச நிலையில் அவரை அணுகி விளக்கம் கேட்பதென்பது முடியாத காரியம். அவருடைய அலுவலக மேலாளர் அதற்கும் மேல். தொலைப்பேசியில் அழைப்பது வங்கி மேலாளர் என்று தெரிந்ததும் இருந்துக்கொண்டே இல்லையென்று சொல்லும் ரகம். திரைப்பட நடிகர்கள் காட்டும் பந்தாவைவிட திரைப்பட தயாரிப்பாளர்களும் அவர்களுடைய உதவியாளர்களும் காட்டும் பந்தா மிக அதிகம்.

ஒருவழியாக பல தொலைபேசி அழைப்புகளுக்குப் பிறகு தயாரிப்பாளருடைய மேலாளரையும், தணிக்கையாளரயும் சந்திக்க முடிந்தது. என்னுடைய சந்தேகம் எல்லாம் எப்படி ஒருவரே கடன் பெற்றவராகவும், கடன் கொடுத்தவராகவும் தொடர்ந்து இருக்க முடியும் என்பதுதான்.

அதற்கு அவர்கள் அளித்த பதில். 'சார் நம்ம கம்பெனி கண்ட்ரோல்ல இருக்கற தியேட்டர்காரங்கதான் இவங்க. நாங்க தயாரிக்கற படாமாருந்தா ஒரு படத்துக்கு பூஜை போட்டதும் ஏரியா, ஏரியாவா வித்துருவோம். அதுக்கு அவங்க குடுக்கற அட்வான்ஸ் தொகை sundry creditor அக்கவுண்ட்ல புடிச்சிருவோம். அதுக்கப்புறம் படம் முடிஞ்சி ரிலீஸ் பண்ற நேரத்துல மீதி பணத்த அவங்களால ஒரே தவணையில குடுக்க முடியாமப் போயிரும். அவங்க குடுத்துருக்கற தொகைய கழிச்சிக்கிட்டு மீதி வரவேண்டிய தொகைய sundtry debtor அக்கவுண்ட்ல புடிச்சிருவோம்.'

எனக்கு அப்போதும் குழப்பம் தீரவில்லை. 'நீங்க சொன்னபடி பார்த்தா படம் ரிலீஸ் பண்ற நேரத்துல அவங்கக்கிட்டருந்து வாங்குன தொகைய கழிச்சிக்கிட்டுத்தான படத்த குடுக்கறீங்க? அப்போ sundry creditorல இருக்கற கணக்க முடிச்சிரணுமே. அதுக்கப்புறம் எப்படி அதுல பாலன்ஸ் இருக்கும்?' என்றேன்.

இது கூட தெரியாதா சார் உங்களுக்கு என்பதுபோல் இருவரும் என்னைப் பார்த்தனர். 'இது அடுத்த படத்துக்கான அட்வான்ஸ் சார்.. அதோட நாங்க வருசத்துக்கு கொறஞ்சது நூறு படங்கள வெளியாளுங்கக் கிட்டருந்து வாங்கி ரிலீஸ் பண்றமே? அதனால இது தொடர்ந்துக்கிட்டே இருக்கும் சார்.'

அதாவது சங்கிலித் தொடர்போன்று படங்கள் தயாரிக்கப்படுவதும், வெளியிடப்படுவதும் நடந்துக்கொண்டே இருப்பதால் நிறுவனத்துடன் தொடர்புக்கொண்டிருந்த திரையரங்குகளிடமிருந்து பணம் பெறுவதும் கொடுப்பதும் தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கும்.

'சரி சார். அப்படீன்னா ஒவ்வொரு படத்துக்கும் வர்ற லாபத்த எப்படி கணக்கு பண்ணுவீங்க? முழுத்தொகையும் வசூலாவறமாதிரியே தெரியலையே? நீங்க போன வருசத்துல காமிச்சிருக்கற லாபம் எந்தெந்த படங்கள்லருந்து வந்த லாபம்னு ஏதாவது கணக்கு இருக்கா? எங்க ஹெட் ஆஃபீஸ்ல கேப்பாங்களே?' என்றேன் சலிப்புடன்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். இந்த மாதிரி சின்னப் பசங்கள்லாம் பேங்க் மேனேஜரா வந்தா இதான் பிரச்சினை என்று அவர்கள் நினைப்பது எனக்கு நன்றாகவே விளங்கியது.

'சார்... இது நீங்க நினைக்கறா மாதிரி பிசினஸ் இல்லை. எவ்வளவு போட்டா எவ்வளவு லாபம் வரும்னெல்லாம் கணக்கு தெரியாம செய்யற பிசினஸ். ஒரு படத்துக்கு ஒரு கோடி செலவு செய்வோம்... பத்து கோடி லாபம் வரும்... பத்து கோடி இன்வெஸ்ட் பண்ணுவோம்.. படம் ஊத்திக்கும்.. இதுல இந்த படத்துக்கான காச கீழ வச்சாத்தான் அடுத்த பட ரிலீஸ் தருவோம்னு தியேட்டர்காரங்கக் கிட்ட சண்டைக்கு நின்னா... அவ்வளவுதான் நம்ம படத்த எவனும் ரிலீஸ் பண்ண முன்வரமாட்டான். நீங்க குடுக்கற --------லட்சத்துல நடக்கற கம்பெனியில்லசார் இது. வேணும்னா ஒங்க மொத்த பேலன்சையும் வட்டியோட இப்பவே செக்கா குடுத்து செட்டில் பண்ண சொல்றேன். வாங்கிக்கிறீங்களா?' என்றார் தணிக்கையாளர் எகத்தாளமாக.

அன்றைய தியதியில் அவர்களுக்கு அளித்திருந்த கடன் தொகை கணிசமானதுதான்... அந்த தொகையை உடனே வசூலித்துவிட்டால் அதன் மூலம் வங்கிக்கு கிடைத்துவரும் லாபம் உடனே போய்விடும். 'அவங்க நல்ல பார்ட்டியாச்சே எதுக்கு அக்கவுண்ட க்ளோஸ் பண்ணிட்டாங்க?' என்ற கேள்விகளும் என்னுடைய மேலிடத்திலிருந்து எழலாம்.

ஆயினும் நாம் வழங்கும் கடன் மட்டும் வேண்டும். ஆனால் நம்முடைய கேள்விகளுக்கு பதிலளிக்க விருப்பமில்லை என்பதுபோல் நடந்துக்கொள்ளும் வாடிக்கையாளர் நமக்கு தேவையில்லை என்று அப்போது தோன்றியது எனக்கு. ஒரு நொடி கூட தயங்காமல், 'சரி சார். குடுத்துருங்க.' என்றேன். இதை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லையென்பது அவர்கள் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியே காட்டிக் கொடுத்தது. ஆனால் இந்த சின்ன பையன் முன்னால நம்ம கவுரவத்தை இழந்துவிடவேண்டாம் என்று நினைத்தார்களோ என்னவோ உடனே காசோலையை கிழித்துக் கொடுத்துவிட்டார்கள். 'இது ப்ளாங்க் செக் சார்... வட்டியோட சேத்து ஃபில் அப் பண்ணிக்குங்க. பேங்க்ல போடறதுக்கு முன்னால அமவுண்ட மட்டும் போன் பண்ணி சொல்லிருங்க.' என்றவாறு எழுந்து நிற்க நானும் பெற்றுக்கொண்டு திரும்பினேன்.

ஒருவேளை என்னுடைய அனுபவமின்மையும் இத்தகைய முடிவுக்கு காரணமாயிருக்கலாம். ஆனால் அது என்னை எத்தனை பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றியது என்பது சுமார் பதினைந்து வருடங்கள் கழித்து தெரிந்தது...

அதைப்பற்றி நாளை கூறுகிறேன்....

16 பிப்ரவரி 2007

கடந்து வந்த பாதை - ரவி 2

ரவியும் அவருடைய மனைவி மல்லிக்காவும் மாலையும் கழுத்துமாய் வீட்டு வாசலில் வந்து நின்றபோது அவருடைய தாயாரின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். சாஸ்திரங்களின் மீதும் சம்பிரதாயங்களின் மீதும் தான் வைத்திருந்த நம்பிக்கையை தன்னுடைய சொந்த அதுவும் ஒரே மகனே மதிக்கவில்லை என்பதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

தனக்கு மட்டுமே சொந்தமாயிருந்த மகன் தான் பார்த்து வைக்கவேண்டிய பெண்ணை மட்டுமே திருமணம் செய்துக்கொள்வான் என அக்கம்பக்கத்தினரிடமெல்லாம் கூறிவந்திருந்த அவருக்கு தன்னுடைய மகனுடைய செயல் மிகுந்த அதிர்ச்சியை அளித்தது என்பது அன்று அவர் நடந்துக்கொண்ட விதமே தெளிவாக எடுத்துக்காட்டியது.

அந்த சோக நிகழ்ச்சியை எத்தனை முயன்றாலும் வார்த்தைகளில் வடித்தெடுக்க இயலாது. ஏற்கனவே இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தவர் ரவி ரகசியமாய் அதுவும் வேறொரு இனத்தைச் சார்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு வந்து நின்றதை பார்த்தபோது கொதித்தெழ புதுமணப் பெண்ணை வரவேற்க வேண்டிய சமயத்தில் அது ஒரு துக்க வீடாக மாறிப்போனது.

ஆம்.. ரத்த அழுத்தம் கட்டுக்கடங்காமல் போய் மயக்கமடைந்து விழ ரவியின் தந்தை செய்வதறியாமல் திகைத்து நிற்க ரவி சடுதி நேரத்தில் மாலையைக் கழற்றிவிட்டு என்னுடைய வாகனத்தில் தாயைக் கிடத்த நானும் அவரும் அடுத்திருந்த மருத்துவமனையை நோக்கி ஓடினோம்.

இருவார சிகிச்சை. நினைவு திரும்பியது. ஆனால் ஒரு கை, கால் செயலிழந்துபோயின. பேச்சும் பறிபோனது.

அந்த நேரத்திலும் நிதானமிழக்காமல் தன்னுடைய மனைவியையும் தாயையும் அணைத்துச் சென்ற ரவியின் பக்குவத்தையும் அவனுக்கு துணையாய் நின்று மருமகளை வீட்டிற்குள் சேர்த்துக்கொண்ட அவனுடைய தந்தையையும் இப்போதும் நினைத்து வியக்கிறேன்.

அதுபோலவே புதுமணப்பெண் மல்லிகாவும். வயதுக்கு மீறிய பக்குவத்துடன் தன்னை ஏற்றுக்கொள்ள மறுத்த ரவியின் தாய்க்கு ஒரு கைதேர்ந்த தாதியைப் போல் அடுத்து வந்த சில மாதங்கள் சேவை செய்ததைப் பார்த்து அந்த குடியிருப்பில் இருந்த அனைவருமே வியந்து நின்றனர் என்றால் மிகையாகாது.

அடுத்த சில மாதங்களில் ரவியின் தாயாருடைய உடல்நலத்தில் சற்று முன்னேற்றம் அடைந்தது.

மல்லிகாவின் பணிவிடை அவருடைய மனதை மாற்றியிருக்கும் என்றுதான் நானும் மற்றவர்களும் நினைத்திருந்தோம். ஆனால் எங்களுடைய நினைப்பைப் பொய்யாக்கினார் அவர். செயலிழந்த கையும், காலும் சற்று சரியானதுமே தன் மருமகளை வெளியேற்றுவதிலேயே குறியாயிருந்தார் அவர். ரவியும் அவருடைய தந்தையும் எத்தனை முயன்றும் பலனளிக்கவில்லை. அவர் நினைத்திருந்தது மல்லிகாவை வெளியேற்றிவிட்டு தன்னுடைய மகனுக்கு வேறொரு திருமணம் வைப்பது என்று!

ஆனால் அதற்கு ரவி ஒருபோதும் சம்மதிக்க மாட்டார் என்று தெரிந்திருந்தும் அவர் அதிலேயே குறியாயிருந்ததுதான் வேதனை. ரவியின் தந்தை ஒரு சாதுவான மனிதர். மனைவி சொல்லை தட்டாத கணவர். தன்னுடைய மனைவி ரவி வீட்டில் இல்லாத சமயங்களில் மல்லிகாவிடம் நிர்த்தான்சயமாக பேசும் வார்த்தைகளுக்கு எதிர் பேச்சு பேச விரும்பியும் பேச முடியாத கோழை..

மல்லிகா குணத்தில் சொக்கத் தங்கம். சிறுவயதிலேயே தந்தையையும் தாயையும் இழந்து சகோதரனுடைய அரவணைப்பில் வளர்ந்திருந்த அவளுக்கு ரவியின் தாயாருடைய அரக்கக் குணம் பழகிப்போனது. எந்த ஒரு சுடுசொல்லுக்கும் புன்னகையையே பதிலாய் தந்தவரை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். 'என்ன பொண்ணும்மா நீ? அவங்க இவ்வளவு பேசறாங்க எப்படி பொறுத்துக்கறே?' என்று அந்த குடியிருப்பிலிருந்த அவர் வயதொத்த பெண்கள் சிலர் சீண்டிப்பார்த்தபோது அதற்கும் ஒரு புன்னகை..

ரவியின் தாயாருக்கு பணிவிடை செய்யவேண்டும் என்ற நோக்கில் தன்னுடைய பணிக்கு நீண்ட விடுப்பு எடுத்திருந்த மல்லிகா ஒரு சமயத்தில் அந்த வேலையையும் ராஜிநாமா செய்ய நினைத்தபோது என்னுடைய மனைவி அதை எப்படியோ தடுத்து நிறுத்தினார். 'இல்லக்கா.. நா ஆஃபீசுக்கு போயி பெருசா என்ன ஆவப்போவுது? ரவியோட சம்பளமும், மாமாவோட பென்ஷனுமே ஜாஸ்திக்கா. மாமி எப்படியாவது நல்லபடியா ஆயி மறுபடியும் வேலைக்கு போனா அவங்க போக்குலயும் மாறுதல் இருக்கும்னு நினைக்கேன்..அதான்..' என்றவரை நானும் தலையிட்டு 'வேலைய மட்டும் விட்டுராதம்மா.' என்று தடுத்து நிறுத்தினோம்.

அதுவே வினையாய் போனது. தன்னுடைய தாயார் முழுவதும் நலமடையாத நிலையில் மல்லிகா பணிக்கு திரும்புவதை ரவியே விரும்பவில்லை. 'இன்னும் எதுக்கு மல்லி வேலை? அம்மா இப்ப என்ன சொன்னாலும் என்னைக்காவது ஒருநா ஒன்னெ ஏத்துக்காம போயிரமாட்டாங்க. அதனால நீ பேசாம ராஜிநாமா செஞ்சிட்டு வீட்டோடயே இரு. அம்மா மறுபடியும் வேலைக்கு போற நிலைம வந்ததும் நானே ஒனக்கு வேற ஒரு வேலை பார்த்து தரேன்.' என்று அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால் மல்லிகா வேலையை உதறுவதில் காட்டிய தயக்கம் ரவியை மேலும் ஆத்திரமூட்டியது.

நானும் என்னுடைய மனைவியும் கூறிய அறிவுரையால்தான் மல்லிகா வேலையை விட மறுக்கிறார் என்பதை எப்படியோ அறிந்துக்கொண்ட ரவி ஒரு சந்தர்ப்பத்தில் என்னையே எடுத்தெறிந்து பேசிவிட அதற்கு மேல் அவர்கள் விஷயத்தில் தலையிட்டால் நமக்கு மரியாதையில்லை என்பதை உணர்ந்த நான் ஒதுங்கிக் கொண்டேன். ஆனாலும் ரவியின் தந்தை என்னுடன் நட்பாகவே இருந்தார்.

அடுத்த சில மாதங்கள் அந்த குடும்பத்தில் அன்றாடம் நடந்த சச்சரவுகளையும் ரவியும் தன்னுடைய தாயாருடன் சேர்ந்துக்கொண்டு மல்லிகாவை பழித்துரைத்ததையும் பார்த்தும் பாராமுகமாக இருந்து அதனால் ஏற்பட்ட மன உளைச்சல்.. 'ஏங்க நம்மால என்ன பண்ண முடியும். மல்லிகாவுக்கு கவலப்படறதத் தவிர நம்மால் இப்போதைக்கி ஒன்னும் பண்ணமுடியாது.' என்றார் என் மனைவி.

ஒரு கட்டத்தில் அந்த குடியிருப்பில் வீட்டு உரிமையாளர்களுடைய சங்க செயலாளரே தலையிடும் அளவுக்கு குடும்பச் சண்டை பெரிதாகிப் போனது. 'இது எங்க குடும்ப விஷயம். ஒங்க வேலைய பாத்துக்கிட்டு போங்க.' என்று அவரையும் ரவி எடுத்தெறிந்து பேச அவரும் வேறு வழியில்லாமல் ஒதுங்கிப் போனார். ரவியின் தாயாருடைய போக்கால் அந்த குடியிருப்பிலிருந்த பெரும்பாலோனோர் அந்த குடும்பத்தையே ஒதுக்க துவங்கினர்.

இதற்கு மல்லிகாவே காரணம் என்று கருதிய ரவியின் தாய் அவளை மேலும் தன்னுடைய வார்த்தைகளால் நிந்திக்க துவங்கினார். பொறுத்தது போதும் என்று நினைத்தாரோ என்னவோ ஒருநாள் திடீரென்று மல்லிகா யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறினார்.

இதை முற்றிலும் எதிர்பாராத ரவி மல்லிகாவின் அலுவலக நண்பர்கள் மூலமாக அலைந்து திரிந்தும் பலனில்லாததால் கலங்கிப்போனார். அந்த குடியிருப்பிலிருந்த எல்லோருடனும் பகையை வளர்த்துக்கொண்டிருந்ததால் எவரும் அவருடைய உதவிக்கு வர முன்வரவில்லை. எனக்கு விருப்பமிருந்தும் தயக்கமாக இருந்தது.

காவல்துறையினரிடம் செல்லவும் அவர்களுக்கு தயக்கம். வேறு வழியின்றி ரவியின் தந்தை என்னை அணுகி, 'அவனெ பாக்கவே பாவமாயிருக்கு சார். அவனோட அம்மா பக்கம் பேசறதா நினைச்சி மல்லிகாவ திட்டுனாலும் அவனுக்கு அந்த பொண்ணு இல்லாம முடியல சார். அந்த அளவுக்கு அவ மேல உசிரையே வச்சிருக்கான்.. எல்லாத்தையும் அவ அம்மாவுக்காக மறைச்சி வச்சிருந்துருக்கான். ஒங்கக் கிட்ட வந்து உதவி கேக்கவும் தயக்கம். நீங்கதான் ஏதாவது செய்யணும் சார்.' என்றார் பரிதாபமாக.

நல்லவேளையாக என்னுடைய கிளையில் வாடிக்கையாளராக ஒரு உயர் காவல்துறை அதிகாரி இருந்தார். அடுத்த நாளே நான் ரவியை அழைத்துக்கொண்டு மல்லிகாவின் சமீபத்திய புகைப்படத்துடன் அவரைச் சென்று சந்தித்தேன்.

அடுத்த இருபத்தி நாலு மணி நேரத்திலேயே அவரிடமிருந்து அழைப்பு வந்தது. 'மிஸ்டர் ஜோசப், நீங்க மட்டும் வாங்க. அவருக்கு தெரிய வேணாம். ' என்ற அவருடைய அழைப்பின் பொருள் விளங்காமல் அவருடைய அலுவலகத்திற்கு ஓடிச் சென்றேன்.. 'மிஸ்டர் ஜோசப் நீங்க சொன்ன பொண்ணு இதா பாருங்க?' என்று ஒரு பெண்ணின் சடலத்தின் புகைப்படத்தை காட்ட நான் அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் ஆமாம் என்று தலையை அசைத்தேன். முட்டாள் பெண்.. கடலில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டாள்! 'சாரி சார்.. இத நீங்களே அவங்கக்கிட்ட சொல்ற விதத்துல சொல்லி அவர கூட்டிக்கிட்டு போய் ஜி.எச் மார்ச்சுவரியிலருக்கற பாடிய வாங்கிக்கிருங்க.'

எப்படிச் சொல்வேன் அவரிடம்?

ஆனால் சொல்லத்தானே வேண்டும், வேறு வழி?

நான் எதிர்பார்த்திருந்ததுபோலவே ரவி நிலைகுலைந்துப் போனார். அவருடைய தந்தையோ குற்றவுணர்வால் குன்றிப்போனார். ரவியின் தாயாரோ 'விட்டது சனியன். அந்த ஒடம்ப அவங்களே எரிச்சிக்கட்டும் நீ போகக்கூடாது.' என்றார் தன் மகனிடம்.

அப்போதும் தன்னுடைய மனைவியை எதிர்த்துப் பேச முடியாமல் எங்களைப் பார்த்து அழுத ரவியின் தந்தையை என்னால் மன்னிக்கவே முடியவில்லை. வெறுப்புடன் விலகிப் போனேன். ரவி முதன் முதலாக தன்னுடைய தாயை பொருட்படுத்தாமல் தன்னுடைய நண்பர்களுடைய உதவியுடன் மல்லிகாவின் உடலை பெற்று தகனம் செய்ய முனைய நானும் குடியிருப்பிலிருந்த சில ஆண்களும் அவருடன் சென்று ஈமக்கடனை நிறைவேற்றினோம். இறுதியில் திரும்பி வரும் நேரத்தில் அவர் என்னுடைய கரங்களைப் பற்றிக்கொண்டு, 'நீங்க சொன்னப்பவே அவள கூட்டிக்கிட்டு தனிக்குடித்தனம் போயிருந்தா என் மல்லிகாவ நா இழந்துருக்கவே மாட்டேனே சார்..' என்று கதறியழுத காட்சியை நெடுநாட்கள் என்னால் மறக்கவே முடியவில்லை.

அத்துடன் நின்றாரா அவர்?

அன்று இரவே தன்னுடைய படுக்கையறையிலேயே தூக்குப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டார், தன்னுடைய முடிவுக்கு யாரும் காரணமில்லை என்று எழுதி வைத்துவிட்டு!

மரித்தபோதும் தன்னுடைய தாயை குறைசொல்ல விரும்பாத அன்பு மகனாக!

அதன் பிறகு கதறியழுத அவருடைய தாயை அந்த குடியிருப்பிலிருந்த யாருமே தேற்ற முன்வரவில்லை. செய்தி கேட்டு வந்திருந்த அவர்களுடைய உறவினர்களும் விட்டேத்தியாக கடமைக்கு இறுதிச்சடங்கில் பங்குகொண்டுவிட்டு திரும்பிச் சென்றனர்.

அடுத்த ஆறே மாதத்தில் இருவருமே அந்த குடியிருப்பில் இருக்க விருப்பமில்லாமல் வெளியேற நானும் அடுத்த சில மாதங்களில் சென்னையிலிருந்து மாற்றலாகிப் போனேன்.

அந்த குடியிருப்பை வாங்க யாருமே முன்வராமல் சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் காலியாகவே கிடந்தது என பிறகு கேள்விப்பட்டேன்.

*****

15 பிப்ரவரி 2007

கடந்து வந்த பாதை - ரவி

ரவியை நான் சந்தித்த நாள் இன்னும் என் கண்முன்னே நிற்கிறது.

அப்போது அவருக்கு இருபது வயதிருக்கும். நான் எங்களுடைய வங்கியின் சென்னைக் கிளைகளுள் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்த சமயம். 1988ம் வருடம்.

என்னுடைய மூத்த மகளுக்கு அப்போது ஐந்து வயது. நாங்கள் வசித்த குடியிருப்பில் சுமார் பத்து குடியிருப்புகள். கீழ் தளத்தில் நான்கு குடியிருப்புகள். அதில் ஒன்றில் நானும் எனக்கு அடுத்த குடியிருப்பில் ரவியின் குடும்பமும் இருந்தது. அப்பா, அம்மா பிள்ளை என சிறிய குடும்பம்.

'ரவிக்கப்புறம் ரெண்டு பொண்ணுங்க பொறந்தது. ஒன்னு குறைப்பிரசவம். இன்னொன்னு பொறந்து நாலு மாசத்துலயே போயிருச்சி. அதுக்கப்புறம் போறும்னு இருந்துட்டோம். பத்து மாசம் சொமந்து பெத்து பிறந்தவுடனே பறிகுடுக்கறதவிட பெரிய கொடுமை இல்ல சார்.' என்றார் ரவியின் தந்தை ஒரு நாள்.

உண்மைதான். எனக்கும் அப்படியொரு அனுபவம் இருந்ததால் அவர்களுடைய வேதனையை நானும் என் மனைவியும் முழுமையாக உணர்ந்தோம். என்னுடைய இரண்டாவது மகள் பிறந்து பத்தே நாட்களில் ஒரே நாள் காய்ச்சலில் மரித்துப்போனதை மறக்க முடியாமல் எத்தனை இரவுகள் நானும் என் மனைவியும் கலங்கிப்போயிருந்தோம்!

ரவியின் அப்பா ஒரு அரசு ஊழியர். குமாஸ்தா பதவியே போதும் என்ற முடிவுடன் இருந்தவர். 'எதுக்கு சார் ப்ரொமோஷன் ஒன்னுக்கு பின்னால ஓடி என்ன பிரயோசனம்? ஒரே ஊர்ல இருக்க முடியாது. ஒங்கள மாதிரி மூனு வருசத்துக்கு ஒரு தடவ ஊர்விட்டு ஊர் ஓடணும்.. நேரங்காலம் இல்லாத வேலை.. எதுக்கு இந்த தலவலின்னு நெனச்சித்தான் வேணாம்னு இருந்துட்டேன்.' என்றார் ஒருமுறை. ரவியோட அம்மாவும் சென்னையிலேயே இருந்த தனியார் பள்ளியொன்றில் ஆசிரியராக இருந்தார். அவருடைய பள்ளிக்கு அருகிலேயே இருந்த அந்த கட்டடத்தில் சுமார் ஆயிரம் ச.அடிகள் கொண்ட குடியிருப்பை வாங்கி ஆறுமாத காலமே ஆகியிருந்தது.

நான் குடியிருந்த குடியிருப்பும் அதே அளவைக் கொண்டதுதான். அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவருடையதுதான். அவர் என்னுடைய வங்கி வாடிக்கையாளர்களுள் ஒருவர் என்பதால் எனக்கு சுமாரான வாடகைக்கு கொடுத்திருந்தார். என்னுடைய அலுவலகமும் குடியிருப்பிலிருந்து ஐந்து நிமிட நடை தூரம்தான்.

ஒருநாள் நான் அலுவலகத்திலிருந்து புறப்படவிருந்த நேரத்தில் ரவி என்னையழைத்து 'சார் ஒங்கக் கூட கொஞ்ச நேரம் பேசலாம்னுதான் கூப்ட்டேன்.' என்றார் தயக்கத்துடன். நான் வியப்புடன் 'சொல்லுங்க ரவி. என்ன புதுசா ஃபோன்ல கூப்டறீங்க? வீட்டுக்கு வரவேண்டியதுதானே?' என்றேன்.

'இல்ல சார்.. வீட்ல வச்சி பேசமுடியாது. நான் ஒங்க ஆஃபீசுக்கு எதிர்த்தாப்புலருந்துதான் பேசறேன். மேல வர்றதுக்கு முன்னாடி ஒங்கள கேட்டுக்கலாமேன்னுதான் கூப்ட்டேன்.. ஒங்களுக்கு அப்ஜெக்ஷ்ன் இல்லேன்னா..' என்று அவர் தயங்க நான், 'மேல வாங்க ரவி.. எனக்கென்ன அப்ஜெக்ஷன்' என்று நானே வாசல்வரை சென்று அவரை அழைத்துவந்தேன்.

அவருடைய முகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் ஏதோ குழப்பத்தில் இருப்பது தெரிந்தது. இருப்பினும் அவராக கூறட்டும் என்று காத்திருந்தேன்.

ரவி குடும்பத்திற்கு ஒரே பிள்ளை. அதுவும் அவருக்குப் பிறகு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளும் மரித்துப்போனதால் ரவியின் பெற்றோர் முக்கியமாக அவருடைய அன்னை அவர் மீது மிகவும் பொசஸ்சிவாக இருப்பவர்.

ரவியின் தந்தை பணியிலிருந்து ஓய்வு பெற இருந்ததால் ரவிக்கு உடனே திருமணம் செய்துவைத்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தார். ரவி அப்போதுதான் படிப்பு முடிந்து ஒரு தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்திருந்தார். நான்கிலக்க ஊதியம்தான் என்றாலும் அவருக்கு அது போறாது என்ற கணிப்பு. ஆகவே இனி இரண்டு அல்லது மூன்றாண்டுகள் போகட்டுமே என்று நினைத்திருந்தார். ஆனால் அவருடைய திருமணத்தை ஒத்திப்போட அதை அவருடைய பெற்றோர்கள் ஒரு தகுதியான காரணமாகவே ஏற்றுக்கொள்ளவில்லை.

'எதுக்கு இவன் இப்படியெல்லாம் நினைக்கிறானே தெரியல ஜோசப். எங்களுக்கு அவன் ஒரே பிள்ளை.. நாங்க ரெண்டு பேரும் சம்பாதிச்சதுல மிச்சம் புடிச்சித்தான் இந்த ஃப்ளாட்ட வாங்குனோம். நான் ரிட்டையர் ஆனாலும் பென்ஷன் வரும். என் வய்ஃப் ரிட்டையர் ஆவறதுக்கு இன்னும் அஞ்சாறு வருசம் இருக்கு.. ரவிக்கு வர்ற சம்பளத்தோட சேர்த்து மொத்தமா குடும்பத்துக்கு இருபதாயிரத்துக்கு மேல மாசம் வருது. இது போறாதுன்னா இவன் இப்போ கல்யாணம் வேணாங்கறான்? நீங்களே எடுத்து சொல்லுங்க சார்.' என்றார் அவருடைய தந்தை ஒரு நாள்.

இது விஷயமாகத்தான் அவர் என்னை சந்திக்க நினைத்திருப்பார் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் ரவி என்னிடம் கூறியது நேரெதிராக இருந்தது.

'சார்.. நா ஒரு பொண்ண விரும்பறேன். அதுவும் இந்துப்பொண்ணுதான். ஆனா வேற சாதி. என்னோட ஆஃபீஸ் கொல்லீக் சார்.'

நான் அதிர்ந்து போனேன். 'என்ன ரவி சொல்றீங்க? இது நடக்கற காரியமா? ஒங்கம்மா அந்த விஷயத்துல ரொம்ப பிடிவாதமானவங்களாச்சே?'

ஆம். ரவியின் தந்தை மட்டுமே என்னுடைய வீட்டிற்குள் வந்து அமர்ந்து எங்களுடன் சகஜமாக உரையாடுவார். அவருடைய தாயாரோ ஒதுங்கியே இருப்பார். சாஸ்திரம், சம்பிரதாயத்தில் ஊறிப்போன பிராமணக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்.

'அதனாலத்தான் ஒங்கக்கிட்ட வந்தேன் சார்.. உதவி கேக்கறதுக்கு.'

'நானா என்ன சொல்றீங்க ரவி' என்றேன் குழப்பத்துடன். என்னால் அப்படியென்ன உதவி செய்துவிட முடியும் என்று தோன்றியது எனக்கு.

'நான் அந்த பொண்ணெ ரிஜிஸ்டர் மேரேஜ் செஞ்சிக்கறதுக்கு நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணணும் சார்.'

நான் மீண்டும் அதிர்ந்துபோனேன். பார்ப்பதற்கு சாதுவாக இருக்கும் இவரா? என்ன சர்வசாதாரணமாக கூறிவிட்டார்? அவருடைய வீட்டுக்கு அடுத்த குடியிருப்பில் வசிக்கும் நானே அவர்களுடைய பெற்றோர்க்கு எதிராக எப்படி இவருக்கு உதவ முடியும்? என்னை எதற்கு இவர் தர்மசங்கடத்தில் ஆழ்த்த நினைக்கிறாரே என்ற லேசான எரிச்சலும் எட்டிப்பார்த்தது.

'என்ன சார்.. ஒங்களுக்கே இதுல விருப்பம் இல்லையா? அப்படீன்னா சொல்லிருங்க சார். நா வேற ஏற்பாடு செஞ்சிக்கறேன்.' என்றவாறு எழுந்து நின்ற ரவியை தோள்களைப் பிடித்து மீண்டும் இருக்கையில் அமர்த்தினேன்.

'அப்படியில்ல ரவி. நம்ம ஏரியா ரிஜிஸ்திரார் ஆஃபீஸ் பக்கத்துலயே இருக்கு. ரிஜிஸ்தர் மேரேஜ் பண்ணிக்கறதுக்குன்னு சில ஃபார்மாலிட்டீசெல்லாம் இருக்குன்னு ஒங்களுக்கு தெரியுமில்ல. அதுல ஒன்னு ஒங்க ரெண்டு பேரோட மேரேஜ் நோட்டிச முப்பது நாளைக்கு முன்னால் நோட்டீஸ் போர்ட்ல டிஸ்ப்ளே பண்றது. நம்ம வீட்டுக்கு கிட்டக்கவே இருக்கற ஆஃபீஸ்ல போடற நோட்டீஸ் ஒங்கப்பா கண்ணுலருந்து தப்புமா ரவி.. அப்படியே இல்லன்னாலும் வேற யாராவது பார்த்துட்டு ஒங்கப்பாக் கிட்ட போயி சொல்ல மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? இது சரிவராது ரவி. ஐ ஆம் சாரி.'

அவர் என்ன நினைத்தாரோ மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் நான் தடுத்தும் கேட்காமல் வெளியேறினார்.

அவருக்கு நான் சொல்ல வந்தது புரிந்திருக்கும், ஆகவே இந்த எண்ணத்தை கைவிட்டுவிடுவார் என்றே நினைத்தேன்.

ஆனால் அவர் தன்னுடைய முடிவில் உறுதியாயிருந்தார் என்பது அடுத்த வாரத்திலேயே தெரிந்தது. ரிஜிஸ்தர் திருமணத்தில் இருந்த சிக்கலை உணர்ந்த அவர் அந்த பெண்ணை திருப்பதிக்கு அழைத்துச் சென்று திருமணம் புரிந்துக்கொண்டு மாலையும் கழுத்துமாக குடியிருப்பின் வாசலில் வந்து நின்றபோதுதான் விளங்கியது அவர் அன்று எடுத்திருந்த முடிவு என்னவென்று.

நாளை நிறைவு பெறும்..

27 அக்டோபர் 2006

கடந்து வந்த பாதை - 9

பரிமளா அவர்களை நான் முதியோர் இல்லத்தில் சந்தித்தபோது அவருக்கு சுமார் ஐம்பது வயதிருக்கும்.

மூளையில் ஏற்பட்டிருந்த ரத்தக் கசிவால் ஒரு கை, ஒரு கால் செயலிழந்துபோயிருந்த நிலையில் பேச்சில் தெளிவில்லாமல் பார்க்கவே பரிதாபகரமான நிலையில் நான் அவரை சந்தித்தேன்...

அவருக்கு வாரம் இருமுறை உடற்பயிற்சி அளிக்க வந்து சென்ற ஒரு மருத்துவருடைய ஆலோசனைப்படி அவருக்கு பயிற்சிகளை செய்ய உதவுவது, அவருடைய பேச்சுத் திறனை மீண்டும் முந்தைய நிலைக்கு கொண்டுவருவது.. இதுதான் என்னுடைய அலுவல்..

அத்தனை சிறிய வயதில் இனியும் நான் வாழ்ந்தென்ன பயன் என்ற மனநிலையில் இருந்த பரிமளாவை உற்சாகப்படுத்தி என்னுடைய முயற்சிகளில் வெற்றியடைய மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

பரிமளா சென்னையிலேயே பிறந்து வளர்ந்த ஒரு உயர் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர். படித்த பட்டதாரி. பெற்றோருக்கு ஒரே மகள். தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரி. தாய் ஒரு துவக்கப் பள்ளி ஆசிரியர்.

பரிமளா பார்ப்பதற்கு அழகாக இருந்ததால் அவர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் அவரை துரத்தி, துரத்தி காதலித்த வாலிபனை தன்னுடைய பெற்றோருடைய சம்மதமில்லாமல் திருமணம் செய்துக்கொண்டார்.

தன்னுடைய குடும்ப அந்தஸ்த்துக்கு முற்றிலும் ஏற்ற குடும்பத்திலிருந்து வந்தவர்தான் தன்னுடைய கணவர் என்று தெரிந்தும் அவரை தன்னுடைய பெற்றோர் வெறும் சாதி வித்தியாசத்தைக் காட்டி ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனரே என்ற ஏக்கம் மனதில் இருந்தும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தன்னை அன்புடன் ஏற்றுக்கொண்ட கணவர் குடும்பத்துடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார் பரிமளா.

ஆனால் திருமணம் முடிந்த முதல் வருட முடிவிலேயே ஒரு அழகான பெண் குழந்தைக்குத் தாயான அவருடைய வாழ்க்கையில் விதி விளையாடியது.

அலுவலக விஷயமாக வெளியூர் சென்றிருந்த கணவர் உயிரற்ற சடலமாக திரும்பி வந்தபோது அதுவரை அவர்மேல் அன்பாய் இருந்த கணவர் குடும்பம் ராசியற்றவள் என வெறுத்து ஒதுக்கியது. எல்லாம் வேலையற்ற ஒரு ஜோஸ்யர் பரிமளாவின் ஜாதகத்தைப் பார்த்து ‘இந்த ஜாதகப்படிதாம்மா நடந்திருக்கு.’ என்று கூறியதுதான் காரணம்!

கணவர் வீட்டுக் கொடுமைகளை மேலும் தாக்குப் பிடிக்க முடியாமல் கைக்குழந்தையுடன் வெளியேறிய பரிமளாவுக்கு அவருடைய பெற்றோரும் அடைக்கலம் தர முன்வராததுதான் கொடுமையிலும் கொடுமை.

ஆனாலும் மனந்தளராத பரிமளா தன்னுடைய கணவர் பணியாற்றிய நிறுவனத்தினர் பெருந்தன்மையுடன் நஷ்ட ஈட்டுடன், அவருடைய படிப்புக்கு தகுந்த வேலையையும் அளிக்க தனியாய் தன்னுடைய வாழ்க்கையைத் தொடர்கிறார்.

பரிமளாவின் புத்திக்கூர்மையும், அயராத உழைப்பும் துணைக்கு வர அடுத்த சில வருடங்களில் பதவியும், வசதிகளும் உயர அவருடைய வாழ்க்கையில் மீண்டும் சந்தோஷம்..

பரிமளாவை அப்படியே உரித்துவைத்தவள் போலிருந்தாள் அவருடயை மகள் சியாமளா..

ஆனால் பரிமளா மிகவும் ஜாக்கிரதையாய் தன் மகளைக் கண்கானித்தாள். தான் பட்ட அவஸ்தையை தன் மகளும் படக்கூடாது என்பதில் ஆரம்ப முதலே கவனமாயிருந்தார்.

சியாமளாவின் கல்லூரி படிப்பு முடிந்ததுமே அவளுக்கு தகுந்த ஜோடியை தேர்ந்தெடுப்பதில் முனைந்தார்..

நல்ல வரனும் அமைந்தது. நிச்சயம் முடிந்து திருமணத்திற்கு நாள் குறித்தபோதுதான் வந்தது குழப்பம்.

‘நம்ம கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் ஒங்கம்மா வந்து நம்ம கூட இருக்கக் கூடாது.’ என்ற நிபந்தனையை மாப்பிள்ளை தன்னுடைய பெற்றோருடைய தூண்டுதலில் அவள் முன் வைத்தபோது சீறியெழுந்தாள் சியாமளா..

ஒரே வார்த்தையில் நிச்சயத்தையே முறித்துவிடுவதாகக் கூறிவிட்டு வந்து தன்னுடைய தாயிடம் தெரிவிக்கிறாள்..

பதறிப் போகிறார் பரிமளா..

சியாமளாவுக்குத் தெரியாமல் சம்பந்திகளுடைய வீட்டிற்குச் சென்று அவள் சார்பில் மன்னிப்பு கேட்டு, மாப்பிள்ளையை சம்மதிக்க வைக்கிறார்.

சியாமளா எத்தனை தடுத்தும் கேளாமல் அவரை நிர்பந்தம் செய்து திருமணத்தை முடித்து வைக்கிறார்.

ஆனால் திருமணம் முடிந்த கையுடன் சியாமளா தன் சுயரூபத்தை காட்டுகிறார்.

‘நான் ஒங்களுக்கு வேணும்னா நீங்க எங்கம்மா இருக்கற வீட்டுல வந்து இருங்க. இல்லன்னா நீங்களும் வேணாம், நீங்க கட்டுன தாலியும் வேணாம்..’ என்று கூறிவிட்டு தன் தாய் வீட்டுக்கு திரும்புகிறார்.

பரிமளா எத்தனை தடுத்தும் கேட்க மறுக்கிறாள் சியாமளா. அடுத்த சில மாதங்களிலேயே தனக்கென ஒரு வேலையையும் தேடிக்கொள்கிறாள்..

பரிமளா தினமும் கண்ணீருடன் தன் மகளுடன் போராடுகிறார்.

சம்பந்தி வீட்டார் தன் மகனுக்கு வேறொரு திருமணம் செய்து வைக்கப் போவதாக மிரட்ட ஏற்பட்ட மன அதிர்ச்சியில் அவருக்கு Brain Stroke ஏற்படுகிறது.

அவருடைய இடப்பக்கம் முழுவதும், பேச்சும் செயலிழந்துபோகிறது. இரு வார மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்புகிறாள்.

தன் தாய்க்கு நேர்ந்ததை காணச் சகியாமல் தன் தாய்க்கு துணையாய் நிற்க வேண்டிய நேரத்தில் தன்னால் தானே தன் தாய்க்கு இந்நிலை என்ற சுய பச்சாதாபத்துக்கு ப்லியாகி தற்கொலை செய்துக் கொள்கிறாள் அந்த முட்டாள் பெண் சியாமளா..

கதைகளில் நடப்பதுபோன்று நடைபெற்ற இச்சம்பவங்களால் நிலைகுலைந்து கவனிப்பார் யாருமின்றி அவருடைய மருத்துவருடைய பரிந்துரையால் இல்லத்தில் சேர்க்கப்படுகிறார் பரிமளா..

***

‘இத்தனை நடந்தும் என்ன ஏதுன்னு கேட்காத பரிமளாவின் பெற்றோரை என்னன்னு சொல்றது மிஸ்டர் ஜோசப். அவங்க சென்னையிலேயாதான் இப்பவும் இருக்காங்கன்னு பரிமளா சொல்லித்தான் எங்களுக்கே தெரியும்.. அவங்க எழுதிக்கொடுத்த விலாசத்துக்கு ஆளனுப்பியும் வரவேயில்லை.. என்னன்னு சொல்றது?’ என்று இல்லத்தில் இருந்த கன்னியர்களுள் ஒருவர் என்னிடம் கூறியபோது..

என்ன உலகமடா இது.. என்று தோன்றியது..

19 அக்டோபர் 2006

கடந்து வந்த பாதை - 8 மாதவன்

நான் சில வருடங்களுக்கு முன்பு சென்னையிலுள்ள ஒரு முதியோர் இல்லத்தில் பகுதி நேர விருப்ப ஊழியராக (Volunteer) பணியாற்றினேன்.

வார இறுதி நாட்களில் இல்லத்து அலுவலகத்திலும் இல்லத்தில் தங்கியிருந்த முதியோர்களுள் இயலாதவருக்கு சிறு, சிறு உதவி செய்வதும் எங்களைப் போன்றவர்களுடைய அலுவல்.

நான் பணிக்கு சேர்வதற்கு முந்தைய தினம் எனக்கு தெரிந்த ஒரு கன்னியர் மடத்தலைவி கொடுத்திருந்த அறிமுகக் கடிதத்துடன் இல்லத் தலைவியை சந்திக்கும் நோக்குடன் இல்ல அலுவலகத்தில் காத்திருந்தேன்.

அப்போது அலுவலகத்தில் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த முதல் பார்வையிலேயே ஏனோ தெரியவில்லை எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

எங்களுடைய இருவருடைய பார்வையும் சந்தித்துக்கொண்டபோது எதற்காக காத்திருக்கிறீர்கள் என்று புருவங்களை உயர்த்தினார். நான் ஒரு புன்னகையுடன் எழுந்து இல்லத் தலைவியைக் காண காத்திருக்கிறேன் என்றேன்.

அவர் உடனே என்ன விஷயம் என்றார். நானும் கூறினேன்.

அவர் வியப்புடன், ‘தப்பா நினைக்கலேன்னா ஒங்களுக்கு என்ன வயசு இருக்கும் தம்பி?’ என்றார்.

நான் என் வயதைக் கூறினேன்.

அவர் சற்று தயங்கி, ‘நீங்க சின்ன வயசாருக்கீங்களே தம்பி. ஒங்களால தாங்க முடியுமா?’ என்றார்.

நான் விவரம் புரியாமல், ‘என்ன சொல்றீங்க?’ என்றேன்.

அவர் பதில் கூறுவதற்கு முன் இல்லத் தலைவி வந்துவிடவே எங்களுடைய உரையாடல் தடைபட்டுப் போனது.

ஆனால் அவர் கேட்ட கேள்வியின் பொருள் அடுத்த சில நாட்களிலேயே எனக்கு புரிந்தது.

ஆம் நண்பர்களே..

அங்கு தங்கியிருந்தவர்களின் கதையைக் கேட்டபோது கலங்கித்தான் போனேன். அதை கேட்டு, மனம் பதறாமல் இருப்பது மிகவும் கடினம்.

நான் முதல் நாள் சந்தித்த ஓய்வு பெற்ற தாசில்தார் இல்லத்தில் தன் மனைவியுடன் இருந்தார்.

நான் இல்லத்தில் பணிக்கு சேர்ந்த ஒரு மாதத்திற்குள் அவரும் நானும் ஒரு நல்ல நண்பர்களாகிப் போனோம். எங்கள் இருவரிடையே இருந்த சுமார் முப்பது வருட வயது வித்தியாசம் அதற்கு தடையாய் இருக்கவில்லை.

எனக்கென்னவோ என்னை விடவும் வயதில் மூத்தவர்களிடத்தில் சகஜமாய் பழகி நட்பு பாராட்டுவது எளிதாக இருந்தது.

மாலை நேரங்களில் இல்லத்தில் தங்கியிருந்த முதியோர்களுடன் அமர்ந்து உரையாடுவதும் அவர்கள் மனதில் தேங்கியிருந்த ஆசாபாசங்களையும், ஆதங்கங்களையும் கேட்டு முடிந்த அளவுக்கு ஆறுதல் சொல்வதும் எங்களுடைய அலுவலில் ஒரு பாகம்.

நான் இல்லத்தில் பணியாற்றிய அந்த இரண்டாண்டு காலத்தில் பல மாலைப் பொழுதுகளில் என்னுடைய தாசில்தார் நண்பர் மாதவன் சாருடனும் அவருடைய மனைவியுடனும் உரையாடிக்கொண்டிருந்ததன் சாராம்சம்தான் இன்றைய பதிவு.

***

மாதவன் தென் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் பிறந்திருந்தாலும் வளர்ந்ததென்னவோ சென்னையில்.

தமிழக அரசில் குமாஸ்தாவாக நுழைந்து தன்னுடைய சுய முயற்சியால் தாசில்தார் பதவிக்கு உயர்ந்து ஓய்வு பெற்றவர்.

அவர் பிறந்து வளர்ந்த அதே கிராமத்தில் இருந்த ஒரு ஏழைக் குடும்பத்திலிருந்து பெண் கொண்டவர்.

அவருக்கு மூன்று ஆண், இரண்டு பெண் குழந்தைகள்.

குமாஸ்தா பதவியிலிருந்து அதிகாரியாக பதவி உயர்ந்ததிலிருந்தே தன் மனைவி, மக்களை சென்னையிலேயே விட்டு விட்டு தன்னுடைய வேலையே கண்ணாக ஊர் ஊராக சுற்றியவர்.

‘என் பெஞ்சாதி சின்ன ஊர்லருந்து வந்தவள்னாலும் குடும்பத்த நடத்தறத பயங்கர புத்திசாலி ஜோசப். அவளுக்கு நான் இருக்கணும்னே இல்ல.. நான் மெட்றாஸ்ல இருந்தாலும் கடை, கண்ணிக்கெல்லாம் போற அளவுக்கு எனக்கு பொறுமை இருந்ததில்ல.. வீட்டுக்கு தேவையான எல்லாத்தையும் அவதான் பார்த்துப்பா.. அதே மாதிரிதான் பிள்ளைங்க விஷயத்திலும்.. எனக்கு எந்த பையன் எந்த வகுப்புல படிக்கான், என்னைக்கு என்ன பரீட்சைன்னு கூட சில சமயத்துல தெரியாதுன்னா பாத்துக்கயேன்..’ என்றார்.

அத்தனை பொறுப்பு மிகுந்த மனைவி அமைந்ததாலோ என்னவோ அவருக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் இடையில் அன்னியோன்யம் ஏற்பட வாய்ப்பில்லாமலே போயிருந்தது.

‘அவங்கள குத்தம் சொல்லி பிரயோசனம் இல்ல தம்பி. அவங்க வேல அப்படி. கலெக்டர் ஆஃபீஸ்ல சோலின்னா அப்பல்லாம் ரொம்ப பெரிய விஷயமாச்சே.. நாங்கல்லாம் ஒன்னா இருந்த கொஞ்ச காலத்துலயும் இருட்டறதுக்கு முன்னால அவங்க வீட்டுக்கு வந்து நான் பார்த்ததே இல்ல.. பிள்ளைங்க அவங்க வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாலயே தூங்கிரும்.. பல நாட்கள்ல அதுங்க எழுந்திருக்கறதுக்கு முன்னாலயே இவர் கிளம்பி போயிருவாரு...’ என்றார் அவருடைய மனைவி..

அப்படித்தான் இருந்தது மாதவனுடன் வாழ்க்கை. அலுவலக காரியங்களில் மூழ்கிப்போயிருந்தவருக்கு தனக்கென்று ஒரு குடும்பம், குழந்தைகள் என்ற நினைவு தோன்ற ஆரம்பித்தபோது பிள்ளைகள் எல்லாம் வளர்ந்து ஆளாகியிருந்தனர்.

‘அவங்களுக்கு என்ன தேவையிருந்தாலும், அது என்னுடைய சக்திக்குள்ள இருந்தா நா செஞ்சி குடுக்காம இருந்ததே இல்ல ஜோசப். ஆனா அது போறலைன்னு பிள்ளைங்க நினைச்சிருந்தா அது என்னோட தப்பில்லன்னுதான் நா இன்னைக்கும் நினைக்கேன்.. அது அவங்க எதிர்ப்பார்ப்புலருக்கற தப்பு.. முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டாம்பாங்களே அது மாதிரி..’ என்றார் ஒரு நாள்.

‘ஐயா நீங்க சொல்றது சரியாருக்கலாம்.. ஆனா என்னைக்காவது நீங்க பிள்ளைங்கள கூட்டி வச்சி.. ஐய்யா.. என்னால இதுதான் முடியும்.. அப்படீன்னு பேசி புரிய வச்சிருக்கீங்களா?’ என்றேன் ஆதங்கத்துடன்.

‘அதான்யா இவங்க செஞ்ச தப்பு. நான் எத்தனையோ தடவ இவங்கக் கிட்ட சொல்லியிருக்கேன். கவர்ன்மெண்ட் ஆஃபீஸ்ல வேல செய்யறவங்களுக்கு சம்பளத்துக்கு மேலயும் கிடைக்குதாமே ஏம்மா அப்பா மட்டும் எப்ப பார்த்தாலும் இல்லே, இல்லேன்னே கைய விரிக்கிறாங்கன்னு கேக்கற பிள்ளைங்கள.. ஐய்யா.. அப்படி சம்பாதிக்கற அப்பன் நான் இல்லேன்னு பிள்ளைங்கக் கிட்ட சொல்லி புரிய வைக்கணுமில்லையாய்யா.. அத இவங்க செய்யல.. அம்மா, நான் என்னத்த சொல்லி என்ன பலன் சொல்லுங்க.. அதுக்கப்புறம் கடனெ, ஒடனெ வாங்கி மூனு பையன்களையும் காலேஜுக்கெல்லாம் அனுப்பத்தான் செஞ்சார்.. படிச்சி முடிச்சிட்டு அதுங்க வேலைன்னு வந்து நின்னதுங்க.. இவங்களால ஒன்னும் செய்ய முடியல.. அதுங்களாவே என்ன வேல கிடைச்சிதோ அதுல போய் சேர்ந்து, கைய ஊனி கரணம் போட்டு.. ஒரு நல்ல நிலைமைக்கு வந்திருச்சிங்க.. ஆனா அப்பா மேல இருந்த கோபம் மட்டும் இன்னும் தீரல.. நீங்க வேணும்னா எங்க கூட வந்து இருங்கம்மா.. ஆனா அப்பாவ வச்சிக்க முடியாதுன்னு சொல்லிட்டானுங்க.. வயசான காலத்துல இவங்கள தனியா விட்டுட்டு எப்படிப்பா போறது?’

மாதவன் தன்னுடைய 58 வயதில் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோதுதான் தான் தனிமரமாகிப் போனதை உணர்ந்தார். கடைசியில் பிறந்த பெண் பிள்ளைகள் இருவருமே தங்களுடைய பெற்றோர்கள் மீது பாசம் வைத்திருந்தாலும் அவர்களுடன் போய் வசிக்க அவருக்கு விருப்பமில்லை.

‘எதுக்குப்பா.. அவங்க கணவன், பிள்ளைங்க, மாமனார், மாமியார்னு இருக்கறப்போ நாங்க ரெண்டு பேரும் போயி அவங்களுக்கு கூடுதல் பாரமா.. ஒங்களுக்குன்னு மூனு ஆம்பிள பசங்க இருக்கறப்போ இப்படி பொண்ணுங்க கூட போயி இருக்கறது நல்லாவா இருக்குன்னு யாராச்சும் கேட்டுறக்கூடாதில்லே?’

நியாயம்தானே?

‘ரெண்டு வருசமா இந்த பார்க்கின்சன் வியாதி.. கை நடுக்கம் இருக்கு. ஜோசப் எப்ப அட்டாக் வரும்னு சொல்ல முடியாது.. அது வர்ற நேரத்துல இவளால ஒன்னும் செய்ய முடியாது. சுகர், ப்ரஷர் எல்லாமே இருக்கு. இந்த மடத்துலருக்கற க்ளினிக்லதான் நானும் மாசா மாசம் ப்ளட் டெஸ்ட் எடுத்துக்க வருவேன்.. அப்படி வந்துக்கிட்டிருக்கறப்ப ஒரு நாள் சுகர் லெவல் ரொம்பவும் லோவாயிருச்சின்னு நினைக்கேன். மயக்கம் போட்டு விழுந்துட்டேன். அப்ப சிஸ்டர்தான் என்னெ க்ளினிக்லருந்த பெட்ல அட்மிட் பண்ணிட்டு ஒரு பியூன பிடிச்சி வீட்டுக்கு என் பெஞ்சாதிக்கு சொல்லியனுப்புனாங்க.. அவ ஒடனே பதறிப்போயி ஓடி வந்தா.. பிள்ளைங்களுக்கு ஃபோன் பண்ணி சொன்னா.. ஆனா ஒரு பயலும் வரல.. தனியா நாங்க ரெண்டு பேரும் புலம்பிக்கிட்டிருந்தோம். அத சிஸ்டர் கேட்டுருப்பாங்க போலருக்கு.. இங்கயே ரெண்டு பேரும் தங்கிக்கிறீங்களான்னாங்க.. ஒங்க பிள்ளைங்களுக்கு விரோதம் இருந்தா நா வற்புறுத்தலைன்னும் சொன்னாங்க.. யோசிச்சோம்.. நா வேணும்னா இங்க இருந்துக்கறேன் நீ ஒன் பிள்ளைங்க கூட போய் இரேன்னு இவ கிட்ட சொன்னேன்.. வேணாம்னுட்டா... ரெண்டு பேரும் அடுத்த வாரமே இங்க வந்து சேர்ந்துட்டோம்.. அந்த மாசத்து பென்ஷன் வந்ததும் சிஸ்டர்கிட்ட கொண்டு போய் கொடுத்தேன். அவங்க சிரிச்சிக்கிட்டே.. நீங்களே வச்சிக்குங்க.. ஒங்களுக்கு மடத்துக்கு ஏதாச்சும் செய்யணும்னு தோனிச்சின்னா சும்மா இருக்கற நேரத்துல எங்க ஆஃபீஸ் அட்மினிஸ்ட்ரேஷன கொஞ்சம் பாத்துக்குங்கன்னு சொன்னாங்க.. வந்து ரெண்டு வருசமாச்சு. எந்த டென்ஷனும் இல்லாம சந்தோஷமாருக்கோம். இப்பல்லாம் ப்ரஷரும் இல்ல.. ஷ¤கரும் கண்ட்ரோல்ல இருக்கு... அடிக்கடி வந்துக்கிட்டிந்த நடுக்கமும் இப்ப எப்பவாச்சுந்தான்.. கூட நிறைய சிஸ்டர்ஸ் இருக்கறதுனால பயமில்ல. பேரப் பிள்ளைங்கள் பாக்க முடியறதில்லேங்கறத தவிர.. ஒரு குறையுமில்ல ஜோசப்..’

ஆனால் அவருடைய மனைவியின் முகத்தில் அந்த சந்தோஷமும், திருப்தியும் இல்லாததுபோல் ஒரு தோற்றம்..

‘ஒங்க பிள்ளைங்க ஒன்னும் சொல்லலையா சார்?’ என்கிறேன்..

அவர் முகத்தில் சட்டென்று ஒரு சோகம் தோன்றி மறைகிறது.

‘யாரோ சொல்லி தெரிஞ்சப்போ இங்க வந்து நின்னு மானத்த வாங்கிட்டீங்களேன்னு சத்தம் போட்டாங்க. என்னெ மட்டுமில்லாம சிஸ்டரயும் பார்த்து எங்கப்பா பென்ஷன் பணத்துக்கு ஆசைப்பட்டுத்தானேன்னு பெரியவன் சத்தம் போட்டான். சிஸ்டர் ஒன்னுமே சொல்லாம சிரிச்சிக்கிட்டு நின்னாங்க. நம்ம ஆஃபீஸ் ப்யூந்தான் அடிக்க போய்ட்டான். என்னெ வற்புறுத்தி பேங்க் பாஸ்புக்க பிடுங்கி அவன் கிட்ட காட்டினான்.. அதுக்கு மேல ஒன்னும் பேச முடியல.. எங்க ரெண்டு பேரையும் எரிச்சிடறாப்பல பார்த்துட்டு போய்ட்டான்.. பொம்பள பிள்ளைங்க ரெண்டும்.. ஒரு தடவ வந்து அழுதுட்டு போச்சிங்க.. அவங்க மாமனார், மாமியார் வீட்ல பேசறாங்களாம்.. என்னெ பிள்ளைங்கள வளர்த்தார் ஒங்கப்பான்னு கேக்கறாங்களாம்..’

நான் பேச்சற்று அமர்ந்திருந்தேன்..

அவருடைய முகத்திலும் பேச்சிலும் தெரிந்த சோகமும், ஆற்றாமையும் எந்த ஒரு கைதேர்ந்த எழுத்தாளனாலும் எழுத்தில் வடித்தெடுக்க முடியாதது..

இதை மனதில் வைத்துத்தான் ‘நீங்க ரொம்ப சின்ன வயசாருக்கீங்களே தம்பி. ஒங்களால தாங்க முடியுமா?’ என்று அவர் என்னிடம் அன்று கேட்டார் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

14 அக்டோபர் 2006

கடந்து வந்த பாதை - ராமு 2

ராமுவின் திருமணத்தன்று எனக்கு தஞ்சையில் முக்கியமான அலுவல் இருந்ததால் என்னால் அவருடைய திருமணத்திற்கு செல்ல இயலவில்லை. வாழ்த்துத் தந்தியும் ஒரு சிறு அன்பளிப்பும் மட்டுமே அனுப்ப முடிந்தது.

அதன் பிறகு அவரை மறந்தே போனேன்.

தஞ்சையில் சுமார் இரண்டாண்டுகள் இருந்துவிட்டு தூத்துக்குடிக்கு மாற்றலாகிப் போனேன்.

தூத்துக்குடியில் பணிக்கு சேர்ந்து ஒரு வாரம் இருக்கும். என்னுடைய தலைமையலுவலகத்திலிருந்து வந்திருந்த சுற்றறிக்கை என்னை அதிர்ச்சியுறச் செய்தது.

சாதாரணமாக ஊழியர் ஒருவர் ஓய்வு பெறுகையில் அவர் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் அல்லது பிடித்தம் ஏதாவது வசூலாகாமல் எந்த கிளையிலாவது நிலுவையில் இருக்கிறதா என்பதைக் கண்டறிய ஒரு சுற்றறிக்கை அனுப்பப்படுவது வழக்கம். இத்தகைய சுற்றறிக்கை ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டாலு, மரித்தாலும் வருவதுண்டு.

அன்று வந்திருந்த சுற்றறிக்கையில் எங்களுடைய பாலக்காடு கிளையில் சிப்பந்தியாகவிருந்த ராமு என்பவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவருக்கெதிராக நிலுவையிலுள்ள தொகை பற்றிய விவரங்களை உடனே தெரிவிக்கும்படியும் குறிப்பிட்டிருந்தது.

நான் அதிர்ந்துபோய் என்னுடைய உதவி மேலாளரை அழைத்து நாந்தான் ராமுவை பணிக்கு அமர்த்திய மேலாளர் என்பதைக் கூறி மாய்ந்து போனேன்.

உடனே அவர், ‘சார் நம்ம ஹென்றி பாலக்காடு ப்ராஞ்சிலருந்து டிரான்ஸ்ஃபர் ஆயி போன மாசந்தான் வந்தார். அவர கேட்டா இவரபத்தி ஏதாச்சும் தெரியும் சார். நான் போயி அவர அனுப்பட்டுமா?’ என்றார்.

‘அப்படியா.. சரி இப்ப வேணாம் சாயந்திரமா கூப்ட்டு கேக்கேன். இப்ப கஸ்டமர்ஸ் வர்ற நேரம்.’ என்று அவரை அனுப்பிவிட்டு அன்றைய அலுவலில் மூழ்கிப்போனேன்.

அன்று மாலை அன்றைய பணிகள் யாவையும் தீர்த்தபின் என்னுடைய குமாஸ்தாக்களில் ஒருவரான ஹென்றியை அழைத்து விசாரித்தேன்.

அவர் கூறிய விவரங்களை நம்பவும் முடியாமல் நம்பாமலும் இருக்க முடியாமல் நெடுநேரம் என் இருக்கையிலேயே அமர்ந்திருந்தேன்..

****

ராமுவின் வாழ்க்கையின் லட்சியமே தன்னுடைய சித்தி மகளை நல்ல இடத்தில் திருமணம் முடித்துக் கொடுப்பதுதான்.

சித்தி மகள் பார்ப்பதற்கு சிவப்பாக, லட்சணமாக இருந்தும் இந்த சமூகத்தினரிடையில் பரவலாக பரவி நின்ற வரதட்சணை என்னும் சாத்தான் இதற்கு தடையாயிருந்தது.

கடைசியாக பார்த்த இடத்தில் பெண் கொடுத்து பெண் எடுக்க தயாராக இருப்பதாகவும் அவர்களுடைய குடும்பத்து பெண்ணுக்கு வரதட்சணை கேட்காத பட்சத்தில் நம் வீட்டு பெண்ணையும் வரதட்சணை இல்லாமல் எடுத்துக்கொள்வதாகவும் கூறுவதாக கடிதம் வந்தவுடனே ராமு மகிழ்ச்சியுடன் ஊருக்கு கிளம்பிச் சென்று அந்த பெண்ணைப் பார்க்காமலே ஒத்துக்கொண்டு தங்கைக்கு நிச்சயதார்த்தத்தை முடித்து இரு ஜோடிகளுக்கும் திருமணத்திற்கு நாள் குறித்த கையுடன் சென்னைக்கு திரும்பி பெரும்பாடுபடு திருமணத்திற்குத் தேவையான பணத்தைப் புரட்டியிருக்கிறார்.

அவருடைய பழைய முதலாளி, என்னுடைய வங்கி ஊழியர்கள், சில வாடிக்கையாளர்கள் என்பவர்களுடன் நிறுத்திக்கொள்ளாமல் அசுர வட்டிக்குக் கடன் கொடுப்பவர்களிடமும் கடன் பெற்று தங்கையின் திருமணத்தை முடித்திருக்கிறார். தங்கையின் திருமணத்தன்றும்  தனக்கு முடிக்கப் போகும் பெண்ணைக் காணாமல் போகவே தன்னுடைய சித்தி, சித்தப்பாவிடம் சாடை மாடையாக கேட்டிருக்கிறார். ‘இல்லடா ராமு அவளுக்கு ஏதோ காய்ச்சலாம்.. அதான் ஆத்துலயே விட்டுட்டு வந்திருக்கா.. இன்னும் ஒரு வாரத்துல நோக்கும் அவளுக்கும் கல்யாணமோன்னா.. அதான் ரெஸ்ட் எடுத்துக்க  ஆத்துலயே இருக்கா போலருக்கு. நீ வேணுன்னா போய் பார்த்துட்டு வாயேன்.’ என்று பதிலளிக்க, ‘சேச்சே.. அதெல்லாம் வேணாம்.. கல்யாணத்தன்னிக்கே பார்த்துண்டா போறது..’ என்று இருந்திருக்கிறார் ராமு..

பாவம் அவர்.. கள்ளங்கபடமில்லா மனிதர். தன்னை வளர்த்து ஆளாக்கிய சித்தியும் சித்தப்பாவும் தனக்கு கேடு நினைக்க மாட்டார்கள் என்ற நினைப்பில் திருமண தேதி வரை பெண்ணைப் பார்க்க வேண்டும் என்ற தோன்றவே இல்லை.

மணவறைக்கு பெண்ணை இரண்டு மூன்று பேர் கைத்தாங்கலாக அழைத்து வந்ததைப் பார்த்ததும் லேசான சந்தேகம் எழுந்தது. ஆனால் அதற்கும் ஒரு சாக்கு வைத்திருந்தார் சித்தி, ‘இல்லடா ராமு அவோ ரெண்டு வாரமா ஜுரத்துல வீக்காயிருப்பாளோன்னோ.. அதான் தோளைப் பிடிச்சி கூட்டியாறா..’

தாலி கட்டி முடித்து முதல் ராத்திரி..

‘இன்னைக்கி நாள் நல்லால்லையாண்டா ராமு.. ஒரு வாரம் பத்து நாள் போட்டும்னு சொல்றாராம் ஜோஸ்யர்.. வா நாம நம்மாத்துக்கு போலாம்.. பொண்ணும் வீக்காருக்காளாம்.. அப்புறம் பாத்துக்கலாம்.. எங்க போய்ட போறது..’ என்ற சித்தியின் வாதத்தை நம்பி அவர்களுடன் தன் வீட்டுக்கு திரும்புகிறார்.

ஒரு வாரம் போனது.. பெண்ணைக் காட்டுவதாக தெரியவில்லை. லேசான சந்தேகம் மனதில் துளிர்க்க எதையும் தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தறியாத ராமு தன்னுடைய கிளையிலிருந்த சக நண்பர்களிடம் தெரிவிக்கிறார்.

அதில் ஒருவர் அடுத்த சில தினங்களில் ரகசிய விவசாரனையில் இறங்குகிறார். விஷயம் தெரியவருகிறது. ஆனால் ராமுவிடம் எப்படி இதைத் தெரிவிப்பதென தெரியாமல் தயங்கி நேரே அவருடைய சித்தி, சித்தப்பாவை எதிர்கொள்கிறார்.

‘எப்படி சார் இப்படி ஒரு அநியாய காரியத்த செஞ்சீங்க? ஒங்க மக நல்லாருக்கணுங்கறதுக்காக ஒங்கள தெய்வமா நினைச்சிக்கிட்டிருக்கற ஒரு அப்பாவி பையனோட வாழ்க்கைய இப்படி நாசமாக்கிட்டீங்களே.. இதுக்கு ஒங்களுக்கு எப்படி சார் மனசு வந்தது?’ என்று வாதிட்டிருக்கிறார்.

‘எல்லாம் அந்த பகவானோட விளையாட்டுப்பா.. எங்கக்கிட்டருந்தும் மறைச்சிட்டா பொண்ணு வீட்டுக்காரா.. ராமுவோட தங்¨கைக்கு நிச்சயம் பண்ணதுக்கப்புறந்தான் எங்களுக்கே தெரிய வந்துது.. அப்பவும் சொல்லியிருக்கலாம்..நிச்சயம் பண்ண கல்யாணத்த நிறுத்து வேண்டி வந்தா அப்புறம் எங்க பொண்ணுக்கு இந்த ஜன்மத்துல கல்யாணம் நடக்காதேப்பா.. நீ சொன்னா மாதிரி சுயநலந்தான்.. ராமு நல்லவன்.. புத்தி பெசகுன பொண்ணுன்னு அவள தள்ளி வச்சிரமாட்டான்னு நினைச்சித்தான் வாய மூடிண்டோம்.. அவளுக்கு அமாவாசை, பெளர்ணமி வந்தாத்தான் இப்படி ஆவும்னு சொன்னா..ஆனா இப்ப பார்த்தா..’

ஆனால் ராமு இதைக் கேள்விப்பட்டபோது எந்தவித அதிர்ச்சியையும் காட்டாமல் இருந்ததுதான் நண்பர்களுக்கு பெருத்த வியப்பாயிருந்திருக்கிறது.

‘இதுக்குத்தான் ஜோஸ்யர் சொல்லிருக்கார்.. கல்யாணம் ப்ராப்தம் இல்லேன்னுட்டு.. நாந்தான் அத எதுத்துக்கிட்டு செஞ்சேன்.. இதுல நல்ல காரியம்னு ஒன்னு நடந்துருக்கே அதுவே போறும். சித்தப்பா, சித்தி என்ன பண்ணுவா பாவம்..’

அத்துடன் நிற்கவில்லை அந்த சதிகார குடும்பம். ராமுவின் தங்கைய¨ மேலும் சீர் கொண்டு வா, பணம் கொண்டு வா என்று துன்புறுத்தியிருக்கிறது.

ராமு ஏற்கனவே திருமணத்திற்கென வாங்கியிருந்த அசுர வட்டிக்கு கடன் கொடுத்தவர்களின் கடித மற்றும் தொலைப்பேசி மிரட்டலுக்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் திகைத்துப்போயிருக்க ஒரு நாள் அவருடைய தங்கையை நாத்தனாருடைய வைத்திய செலவுக்கு ரூ.50000/-த்தை உடனே கொண்டு வா என்று விரட்டியடிக்க செய்வதெறியாத ராமு அன்று மாலை வங்கியிலிருந்த பணத்தை இரும்பு அறைக்குக் (Safe Room) கொண்டு செல்லும் நேரத்தில் சில கரன்சி கற்றைகளை எடுத்து வேட்டியில் சொருக.. கையுள் களவுமாய் பிடிபடுகிறார்.

ஆயினும் அவருடைய நிலைமையை கருத்தில்கொண்டு அவரை மன்னித்து விட்டுவிட மேலாளர் தயாராயிருந்தும் காசாளராயிருந்த தொழ்ற்சங்க தலைவர் சம்மதிக்கவில்லை. ‘சார்.. ஏற்கனவே போன ரெண்டு மாசமா ஆயிரம், ரெண்டாயிரம்னு கேஷ்ல குறையறப்பவே ஒங்கக்கிட்ட கம்ப்ளெய்ன் செஞ்சிருக்கேன்.. நீங்க என்னோட கவனக்குறைவுக்கு பேங்க் பொறுப்பேக்க முடியாதுன்னு சொல்லிட்டீங்க.. இப்ப இவன கையும் களவுமா பிடிச்சி குடுத்துருக்கேன்.. எனக்கென்னவோ இவந்தான் அந்த திருட்டுக்கும் காரணம்னு நினைக்கேன். இவனெ இப்பவே போலீஸ்ல பிடிச்சி குடுக்கணும்.. நீங்களா செஞ்சா நல்லது இல்லன்னா..’ என்ரு மிரட்ட வேறு வழிதெரியாமல் ராமுவை போலீசில் பிடித்துக்கொடுத்திருக்கிறார்.

‘கல்யாணம் செஞ்சதுலருந்தே ராமு பழைய ராமுவா இல்ல சார்.. எப்பவும் எதையோ பறிகொடுத்தா மாதிரி.. கொஞ்ச, கொஞ்சமா குடிக்கவும் ஆரம்பிச்சிட்டார்.. குடி போதையில் ரோட்டோரத்துல படுத்து கிடந்தத நாங்களே பார்த்துட்டு நிறைய நாள் வீட்ல கொண்டு சேர்த்திருக்கோம்.. அப்பல்லாம் இவனால எங்காத்து மானமே போய்ட்டுதுன்னு அவங்க சித்தி குத்தம் சொல்வாங்களே தவிர இதுக்கெல்லாம் காரணம் அவங்கதான்னு உணரவே மாட்டாங்க.. பாவம் ராமு பெய்ல்ல கூட வழியில்லாம ஜெயில்லதான் இப்பவும் இருக்கார்னு கேள்வி சார்..’  என்றார் ஹென்றி..

என்ன கொடுமை?

யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத அந்த நல்ல ஆத்மாவுக்கு இப்படியொரு சோதனையா என்று மாய்ந்துபோனோம் நானும் என் மனைவியும்..

அத்துடன் முடியவில்லை அவருடைய கதை..

இரண்டு வாரங்கள் கழித்து  அவருடைய தங்கையின் மாமனார் வீட்டார் திருடனுக்கு தங்கை என்ற பட்டப்பெயரை சூட்டி வீட்டிலிருந்து விரட்டி விட கண்ணீரும் கம்பலையுமாக அவரை சிறையில் பார்க்க சென்ற நேரத்தில் அடக்க மாட்டாமல், ‘எனக்கு வாழ்க்கைய உண்டாக்கி குடுத்துட்டு நீயே அத பறிக்கவும் செஞ்சிட்டியேண்ணா..’ என்று கதற வெறுத்துப்போன ராமு தன் வாழ்வை முடித்துக்கொள்ளும் நோக்கத்துடன் அடுத்த நாள் காலை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் அவருடன் சென்ற காவலர் அசந்திருந்த நேரத்தில் வாகனத்திலிருந்து குதித்து.. பின்னால் வந்துக்கொண்டிருந்த லாரியொன்றில் அடிபட்டு..

தற்கொலைதான்.. என்று கேசை முடித்தார்கள் என்று கேள்விப்பட்டபோது....

தனக்காக வாழத் தெரியாத ஒரு அப்பாவி இளைஞனின் வாழ்வில் இறைவன் இத்தனை விளையாட வேண்டுமா என்ன?

விடை கிடைக்காத கேள்விதான் இது..

நிறைவு..

13 அக்டோபர் 2006

கடந்து வந்த பாதை - 7

நான் சென்னை கிளைகளில் ஒன்றில் மேலாளராக பணியாற்றிய காலத்தில் ஒரு நாள் காலை குளித்து முடித்து அலுவலகத்திற்கு புறப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் வாசலில் அழைப்பு மணி ஒலிக்க சென்று கதவைத் திறந்தேன்.

சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வாசலில் கையில் ஒரு உறையை வைத்துக்கொண்டு நிற்பதைப் பார்த்தேன். அவர் என்னைக் கண்டதும் பணிவுடன் வணக்கம் செலுத்திவிட்டு தான் இன்னாரிடத்திலிருந்து வருவதாக கூறினார்.

அவர் குறிப்பிட்ட நபர் என்னுடைய கிளையின் வாடிக்கையாளர்களுள் முக்கியமானவர் என்பதால் நான் அவரை உடனே வரவேற்று இருக்கையளித்தேன்.

அவர் கொண்டு வந்திருந்த கடிதத்தில் இக்கடிதத்தைக் கொண்டுவருபவர் தனக்கு மிகவும் பரிச்சயமான நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் தாற்காலிக ஊழியராக பணிபுரிகிறார் என்றும் முடிந்தால் என்னுடைய வங்கியில் அவருக்கு ஒரு வேலை கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நான் அவரை மேலும் கீழும் பார்த்தேன். அவருடைய தோற்றம் ஒரு எளிய குடும்பத்திலிருந்து வருவதை எனக்கு உணர்த்தியது. அவர் பார்ப்பதற்கு உற்சாகத்துடன் இருந்தாலும் அவருடைய கண்களில் நான் கண்ட ஒரு இனம் தெரியாத சோகம் ஏனோ என்னை அவர் மீது அனுதாபம் கொள்ள வைத்தது.

அன்றைய காலத்தில் என்னைப் போன்ற மேலாளர்களுக்கு யாரை வேண்டுமானாலும் தாற்காலிக சிப்பந்தி பணிக்கு நியமிக்கும் அதிகாரம் இருந்தது. தாற்காலிக பணியாளரின் வேலை திருப்தியளிக்கும் பட்சத்தில் அவரை நிரந்தர பணியாளராக ஆகவும் என்னுடைய தலைமையலுவலகத்திற்கு பரிந்துரை செய்தாலே போதும் என்ற நிலை.

அவரை பரிந்துரைத்திருந்த என்னுடைய வாடிக்கையாளர் மிகவும் நம்பத்தகுந்தவராகவும் அவரால் பரிந்துரைக்கப்பட்டிருந்த அந்த வாலிபரும் நல்ல அடக்க ஒடுக்கமுள்ளவராயும், எளிய குடும்பத்திலிருந்து வந்தவர் போல் தோன்றியதாலும் நான் அவரை ஒரு தாற்காலிக சிப்பந்தியாக பணியில் அமர்த்த தீர்மானித்தேன்.

ஆகவே அன்றே அவரை என்னுடைய அலுவலகத்திற்கு வருமாறு பணித்துவிட்டு நான் உடை மாற்ற சென்றேன்.

அப்படி பணியில் அமர்ந்தவர்தான் ராமு.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சார்ந்தவர் என்பதால் தமிழும் மலையாளமும் சரளமாக வந்தது. அத்துடன் சென்னையில் சரக்குகளை கையாளும் ஒரு போக்குவரத்து அலுவலகத்தில் ஓராண்டுகாலம் புக்கிங் குமாஸ்தாவாக பணியாற்றிய அனுபவமும் இருந்தது. பத்தாவது வரை படித்திருந்தார். சுமாரான ஆங்கில அறிவும் இருந்தது.

ஆனால் ஒரு குமாஸ்தாவாக பணியாற்றியவரால் திடீரென்று அந்நிலையிலிருந்து இறங்கி வந்து மற்ற குமாஸ்தாக்களுக்கு ஏவல் பணிசெய்யும் ஒரு சிப்பந்தியாக அவரால் செயலாற்ற முடியுமா என்று ஆரம்பத்தில் எனக்கு ஒருவித தயக்கம் தோன்றியது.

‘அதெல்லாம் நான் பாக்க மாட்டேன் சார். எனக்கு அப்பா, அம்மா இல்ல சார். எனக்கு ஒரேயொரு சித்தப்பாவும், சித்தியும்தான். அவங்கதான் என்னெ வளர்த்து ஆளாக்கினாங்க. நல்லா வாழ்ந்த குடும்பம். இப்போ நொடிச்சி போயி என் சம்பளத்த நம்பி இருக்காங்க. அவங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கு. கல்யாணம் பண்ணணும்.. அதுக்கும் நாந்தான் பொறுப்பு. நா இப்ப வேலை செய்யற எடத்துல இப்போதைக்கு தேவையான அளவு சம்பளம் கெடச்சாலும் வேல நிரந்தரமில்ல சார்.. அதான் நம்ம முதலாளி ஐயாகிட்டவே வேற எங்கயாவது ரெக்கமெண்ட் பண்ணச் சொல்லி கேட்டேன். அவர்தான் இப்ப லெட்டர் குடுத்த ஐயா கிட்ட சொல்லி விட்டார். நீங்களோ இல்ல இந்த ப்ராஞ்ச்லருக்கற யார் என்ன சொன்னாலும் செய்வேன் சார். என் கையும் வாயும் சுத்தம் சார். நீங்க என்ன தைரியமா சேர்த்துக்கலாம் சார்.’ என்று வார்த்தைக்கு வார்த்தை சார் போட்டு பேசியதில் திருப்தியடைந்து நான் அவரை அன்றே பணியில் சேர்த்துக்கொண்டேன்.

அடுத்த ஒரு மாதத்திலேயே அவருடைய சாமர்த்தியம், பணிவு என்னை மட்டுமல்லாமல் என் கிளையில் இருந்த அத்தனை பேரையும் கவர்ந்ததுடன் கிளைக்கு வரும் வாடிக்கையாளர்களையும் ‘எங்க சார் ராமுவ காணம்?’ என்று கேட்கும் வகையில் இருந்தது.

எனக்கு அவருடைய திறமையில் மிகவும் கவர்ந்தது வாய்ச் சாலகம்தான். பேசுவதில் பயங்கர சமர்த்து. எந்த வெளி காரியத்திற்கும் அவரை அனுப்பினால் வெட்டிக்கிட்டு வா என்றால் பறித்துக்கொண்டு வந்தார் என்பார்களே அந்த ரகம்.

வேலையிலும் படு சுறுசுறுப்பு. அத்துடன் ஒரு வங்கிக் கிளையில் சிப்பந்தியாக பணியாற்றுபவருடைய கையும் படு சுத்தமாக இருக்க வேண்டும். பணம் புரளும் இடமல்லாவா? ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் அன்று வாடிக்கையாளர்கள் செலுத்திய கரன்சி நோட்டுகளை கற்றையாக, கற்றையாக அடுக்கி அதற்குரிய ஸ்டேப்ளர் இயந்திரத்தில் நூறு நோட்டுகளைக் கொண்ட ஒவ்வொரு கற்றையையும் ஸ்டேப்பிள் செய்து கட்டு கட்டாக கட்டி ஆள் உயரத்திற்கு அடுக்கி வைத்திருப்பார் காசாளர்.

வங்கியில் பணி புரியும் பணியாளர்களைப் பொறுத்தவரை அவை வெறும் காகிதங்களே. அப்படியல்லாமல் இவ்வளவு பணம் இருக்கிறதே ஸ்டாப்ளர் செய்யும் நேரத்தில் ஒன்றிரண்டை உருவி எடுத்துக்கொண்டால் தெரியவா போகிறது என்று ஒரு சிப்பந்தி நினைத்துப் பார்க்க துவங்கிவிட்டால் வந்தது ஆபத்து. அதுவே ஒரு போதைபோலாகிவிடும். கையும் களவுமாக பிடிபட்டால் வேலை போவதுடன் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

ஆகவேதான் ஒருவரை, அதுவும் சிப்பந்தி வேலைக்கு, பணிக்கு அமர்த்துமுன் அவருடைய பூர்வீகத்தையே தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

ராமுவின் நேர்மையில் எனக்கு எந்தவித ஐயப்பாடும் இருந்ததில்லை.

ராமுவிடம் என்னை மிகவும் கவர்ந்த மற்றொரு அம்சம் அவருடைய எளிமை. அவர் முதல் நாள் யார் என்ன வேலை சொன்னாலும் செய்வேன் சார் என்றபோது பணிக்கு சேரும் புதிதில் எல்லோரும் சொல்லும் ஒரு வாக்கியம் என்றே நினைத்தேன்.

ஆனால் ராமுவைப் பொருத்தவரை அது உண்மையாகவே இருந்தது. என்னுடைய வீட்டுக்கும் வந்து உரிமையுடன் சகல வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார்.

நான் சென்னையிலிருந்த சமயத்தில் என் மைத்துனர் கப்பலிலிருந்து விடுமுறையில் இந்தியா வந்திருந்தார். துத்துக்குடி செல்லும் வழியில் சென்னை வந்து ஒருவார காலம் தங்கியிருப்பேன் என்று அவருடைய கடிதம் வந்ததுமே ராமு பரபரப்பாகிவிட்டார். அவர் விமான நிலையத்தில் வந்து இறங்கிய நேரம் நள்ளிரவு. அப்போதும் என்னுடனும் என் மனைவியுடனும் அவரும் வந்து சாமான்களையெல்லாம் காரில் ஏற்றி, வீடு வந்ததும் இறக்கி வைத்துவிட்டுத்தான் வீடு திரும்பினார். ‘எதுக்கு ராமு நீங்க..’ என்று என் மனைவி தடுத்தபோது ‘என்னெ ஒங்க வீட்டாள நினைச்சிக்குங்க மேடம்.’ என்றார்.

என் மைத்துனர் ஒரு சினிமா பிரியர். அதுவும் இரண்டாண்டுகள் தொடர்ந்து கப்பலில் பணியாற்றிவிட்டு எப்போதுடா தாயகம் வந்து சேர்வோம் என்று ஆவலுடன் சென்னை வந்திறங்கிய அவர் எங்களுடன் தங்கிய அந்த ஒரு வாரத்தில் சென்னையிலுள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் அனுமதி சீட்டு வாங்கிக் கொடுத்து அவருடைய நட்பையும் சம்பாதித்துக் கொண்டார். 'என்ன மச்சான் ராமு ஒங்களுக்காக இப்படி உருகுறார்.' என்று என் மைத்துனர் வியப்புறும்படி நடந்துக்கொண்டார் ராமு.

எனக்கு மட்டுமல்ல என்னுடைய உதவி மேலாளர் துவங்கி என் கிளையிலிருந்த குமாஸ்தா, காசாளர் என எல்லாருக்குமே அவர்தான் பெர்சனல் சேவகர் என்றால் மிகையாகாது.

அப்போது என்னுடைய பணியாற்றிய அனைவருமே, அதாவது சிப்பந்திகளைத் தவிர, பெண்கள், உதவி மேலாளர் உட்பட. அவர்கள் அனைவருக்குமே ராமு உற்ற நண்பன் எனலாம். அந்த அளவுக்கு எல்லோருக்கும் அவரை பிடித்திருந்தது.

நான் சென்னையிலிருந்து மாற்றலாகி தஞ்சைக்கு செல்லும் நேரத்தில் என்னுடைய வீட்டுப் பொருட்களை பேக்கிங் செய்து அவர் முன்பு பணியாற்றிய போக்குவரத்து நிறுவனத்தின் லாரிகளில் ஒன்றை அவரே மலிவாக அமர்த்தி கூடவே லாரியில் தஞ்சைவரை வந்து எல்லா பொருட்களையும் பொருப்புடன் இறக்கி கொடுத்த காட்சி இப்போதும் என் கண் முன்னே விரிகின்றது.

நான் மாற்றலாகும் முன்பே அவரை நிரந்தர பணியாளராக்கியிருந்தேன். சுமார் ரூ.3000/- வருமானத்தில் நிரந்தர நியமன உத்தரவு வந்த தினத்தன்று ஒரு தட்டு நிறைய பூ, பழங்களுடன் என் வீட்டுக்கு வந்து என்னையும் என்னுடைய மனைவியையும் சேர்த்து நிற்க வைத்து முப்பது வயது கூட நிறைந்திராத என்னுடைய காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி கண்களில் ததும்பி நின்ற கண்ணீருடன் நன்றி செலுத்திய நல்ல, விகல்பமில்லாத, குழந்தை மனதுடையவர் ராமு.

‘சார் நீங்க செஞ்ச இந்த உதவி எனக்கு மட்டுமில்ல சார். என்னையே நம்பி ஊர்லருக்கற என் சித்தி, சித்தப்பா, தங்கச்சி.. இவங்க எல்லாருக்குமே செஞ்ச உதவி சார்.’ என்றார்.

‘இந்த வருமானத்துல நாலு பேர் அடங்கிய குடும்பத்த எப்படி ராமு சமாளிப்பே. அதுவும் அவங்க ஊர்ல இருக்காங்க. இங்க ஒன் செலவுக்கு போக ஒன்னால அவங்களுக்கு அப்படி எவ்வளவு குடுக்க முடியும்?’

அவர் சிரித்தார். ‘என்ன சார் நீங்க. சுமார் பதினஞ்சி மணி நேரம் வேல செஞ்சி ஆயிரம் ரூபா வாங்கிக்கிட்டிருந்த எனக்கு இந்த சம்பளம் புதையல் மாதிரி சார். நா இப்பவும் ராத்திரியில லாரி ஷெட்லதான் சார் போய் படுத்துக்குவேன். ஒங்கள மாதிரியே என் பழைய முதலாளியும் சொக்கத் தங்கம் சார். நீங்க எனக்கு கூட பொறக்காத அண்ணா மாதிரினா அவர் எனக்கு அப்பா மாதிரி. இங்க வேல முடிஞ்சதும் நேரா அங்கதான போறேன். ராத்திரில எல்லா வண்டியும் பொறப்பட்டு போனதும் ஷெட்லருக்கற சில்லறை வேலைய பார்த்துட்டு படுக்கப் போவேன். காலையில டீ, பலகாரம் பக்கத்துலருக்கற டீ கடையில முடிச்சிக்குவேன். அதுக்கு பணம் குடுக்க வேணாம். முதலாளி கணக்கு. பகல்ல நம்ம ஸ்டாஃப் எல்லாருமா அவங்க கொண்டு வர சாப்பாட்டுல எனக்கு ஒரு ஷேர் குடுத்துருவாங்க. ராத்திரிக்கும் ஷெட்ல பக்கத்துலருக்கற டீக்கடைதான். அது யாராச்சும் ஒரு லாரி டிரைவர் பாத்துக்குவார். அப்புறம் என்ன சார். ஒரு நூறு ரூபா மாத்திரம் என் கைச் செலவுக்கு வச்சிக்குவேன். ரெண்டாயிரத்த ஊருக்கு அனுப்பிருவேன். மீதிய நம்ம பேங்க்லயே வச்சிருவேன். தங்கச்சிக்கு ரெண்டு வருசத்துல கல்யாணத்த முடிச்சிரணும்..’ என்றார் மூச்சு விடாமல்.

என் மனைவி கேலியுடன், ‘என்ன ராமு. ஒங்க கல்யாணம் எப்ப? இப்பவே கல்யாண வயசு தாண்டிட்டா மாதிரி தெரியுதே?’ என்பார். ராமுவின் உருவம் அப்படித்தான் இருந்தது. 25 வயதிலேயே தலை முடியில் பாதிக்கு மேல் கொட்டி, ஒட்டிய கன்னங்கள், உள் வாங்கிய கண்கள் என முப்பது வயதுக்கும் கூடுதல் உருவத்தில் சில சமயங்களில் பார்க்கவே பாவமாக இருக்கும்.

‘எனக்கா கல்யாணமா? என்ன மேடம் தமாஷ் பண்றீங்க. தங்கச்சிக்கு கல்யாணத்த முடிச்ச கையோட சார் தயவுல எனக்கு நம்ம பாலக்காட்டு பிராஞ்சுக்கு டிரான்ஸ்ஃபர் குடுத்துட்டாங்கன்னா என்னையே மலையா நம்பியிருக்கற என் சித்தி, சித்தப்பாக்கூட அவங்க கடைசி காலம் வரைக்கும் இருந்து காப்பாத்தணும்னு நினைச்சிக்கிட்டிருக்கேன்.. எனக்கு கல்யாண ப்ராப்தம் இல்லன்னு ஜோசியரே சொல்லியிருக்கார் மேடம்.’ என்றார்.

அப்படி கூறியவரிடமிருந்து நான் தஞ்சையிலிருந்த சமயத்தில் ஒரு நாள் தொலைப்பேசி வந்தது.

‘சார் எனக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு சார். நீங்க எப்படியாச்சும் எனக்கு பாலக்காட்டுக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிக் குடுத்தா நல்லாருக்கும் சார்.’ என்றதும் நான் ஆச்சரியத்துடன், ‘என்ன ராமு திடீர்னு. எனக்கு கல்யாண ப்ராப்தமே இல்லேன்னு சொன்னீங்க?’ என்றேன்.

அவர் சிரித்தார். அந்த சிரிப்பில் சந்தோஷம் இல்லையே என்று ஒரு நொடி தோன்றினாலும் அது வெறும் பிரம்மை என்று நினைத்து, ‘சரி ராமு நான் நம்ம எச். ஆர் ஹெட் கிட்ட பேசி ஏற்பாடு பண்றேன். ஒங்களுக்கு ஆர்டர் வர்ற வரைக்கும் ஒங்க மேனேஜருக்கு தெரிய வேணாம்.’ என்றேன். ஏனெனில் என்னைத் தொடர்ந்து மேலாளராக வந்திருந்தவருக்கும் எனக்கும் லேசான அபிப்பிராய பேதம் இருந்தது.

அப்போது எங்களுடைய வங்கியின் எச்.ஆர் ஹெட்டாக இருந்தவர் என்னுடைய முன்னாள் மேலாளர் என்பதால் என்னுடைய பரிந்துரையை ஏற்று அடுத்த ஒரு வாரத்தில் ராமுவுக்கு பாலக்காடு கிளைக்கு மாற்றம் கொடுத்தார்.

ஆனால் நான் செய்த மிகப்பெரிய தவறு அது என்று அடுத்த ஐந்தாறு மாதங்களிலேயே தெரிந்தது.

நாளை நிறைவு பெறும்..

09 அக்டோபர் 2006

கடந்து வந்த பாதை - ப்ரேம் 2

ப்ரேம் எப்போதுமே எளிதில் உணர்ச்சிவசப்படாதவர். நான் அப்படியல்ல. அதற்கு நேர் எதிர்.

அவர் எந்த அளவுக்கு தன்னுடைய மனைவியின் மேல் உயிராயிருந்தார் என்பது எனக்கு தெரியும்.

அப்படிப்பட்ட பெண் தன்னைவிட்டு பிரிந்துபோனார் என்று சர்வ சாதாரணமாக, எந்தவித உணர்ச்சியும் இல்லாத குரலில்...

‘என்னடா சொல்றே?’ என்ற என்னுடைய சற்றே உரத்த குரல் கான்டீனில் சிற்றுண்டியருந்திக் கொண்டிருந்த சிலரை என்னை திரும்பி பார்க்க வைத்தது. அதற்கு மேலும் அங்கு அமர்ந்து உரையாட முடியும் எனக்கு தோன்றாததால், ‘டேய் ப்ரேம் ஹாஃப் டே லீவ் போட்டுட்டு வாயேன்.. நாம முந்தி போவோமே அந்த பார்க்ல போய் ஒக்காந்து பேசலாம்.. வா’ என்று அவனை வற்புறுத்தி அழைத்துக்கொண்டு புறப்பட்டேன்.

இருவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்துக்கொண்டிருந்த சமயத்தில் மாலை நேரங்களில் சில நாட்கள் அங்கு சென்று அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது வழக்கம். ப்ரேம் பெற்றோருக்கு ஒரே மகன் என்றாலும் அவனுடைய தந்தையின் குடும்பம் பெரியது. இந்துக்  கூட்டுக் குடும்பம் (HUF) என்பார்களே அந்த ரகம். பிரச்சினைகளுக்கு கேட்கவா வேண்டும்..

ஊரைவிட்டு வந்து தனி அறை பிடித்து பணியாற்றிக் கொண்டிருந்தவனை சில நூறு கி.மீ. துரத்திலிருந்த குடும்பப் பிரச்சினை அவ்வப்போது வரும் கடிதங்கள் மூலம் காதில் விழும். அப்போதெல்லாம் மன ஆறுதலுக்காக அவற்றை என்னுடன் பகிர்ந்துக்கொள்வான். அதே பார்க் இப்போதும் அவனுடைய பிரச்சினையை என்னுடன் பகிர்ந்துக்கொள்ள உதவியதை வேதனையுடன் நினைத்துப் பார்த்தேன்.

‘டேய்..ப்ரேம்.. அப்போ ஒங்கப்பா அனுப்புன கடிதங்கள இங்கன வச்சி படிச்சிக் காட்டி.. இதுக்கு ஏதாச்சும் ஐடியா சொல்லுறான்னு கேப்பியே ஞாபகம் இருக்கா..’ என்றபோது அவனால் லேசாக புன்னகை மட்டுமே செய்ய முடிந்தது.

நாங்களிருவரும் எப்போதும் அமரும் அந்த சிமெண்ட் பெஞ்ச் அதே கோலத்தில் காலியாய் இருக்க எங்களையுமறியாமல் அதிலேயே அமர்ந்தோம்..

அடுத்த சுமார் இரண்டு மணி நேரத்தில் அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் இப்போது மீண்டும் நினைவுக்கு வர என்னையுமறியாமல் கண்கலங்கிப் போகிறேன்.

அவனுடைய குரலில் பெரிதாய் எந்த வருத்தமும் தெரியவில்லையென்றாலும் என் மனம் வலித்தது. அந்த வேதனையை என்னால் எழுத்தில் வடித்தெடுக்க முடியுமா என்பது சந்தேகமே..

***

லதா திருமணமான புதிதில் ஒரு சராசரி மனைவிக்குண்டான கோபம், தாபம், பொறாமையுடன் இருந்தாள். சிறிய ஊரில் பிறந்து வளர்ந்து சட்டென்று சென்னையைப் போன்ற ஒரு பெரு நகரத்தில் வாழ வந்த ஒரு பெண்ணின் சுபாவத்தைத் தவிர வேறெந்த விசித்திர குணத்தையும் வெளிக்காட்டவில்லை..

ஆனால் நாளடைவில் ப்ரேமுடன் வெளியில் செல்லும்போதெல்லாம் அவள் தன்னை மறைமுகமாக கண்கானிப்பதை அவன் உணர்ந்தான். ஆரம்பத்தில் தன்னுடைய கணவன் பார்க்க கவர்ச்சியானவன் என்று அவள் கொண்டிருந்த  கர்வம் மெள்ள, மெள்ள சந்தேகமாக மாறத் துவங்கியதை அவனால் உணர முடிந்தது.

‘இங்க பாருங்க.. இனிமே நா ஒங்கக் கூட வெளியில வரமாட்டேன்.. இந்த பட்டணத்துல இருக்கறவளுங்களுக்கு வெவஸ்த்தையே இல்ல போலருக்கே.. இப்படி விளுங்கறா மாதிரி பாக்கறாளுங்க.. அதுவும் கட்டுன பொண்டாட்டி கூட போறப்ப?’ என்பாள் வீட்டுக்கு திரும்பியதும்.

ஆரம்பத்தில் ப்ரேம் அதை மனைவியருக்கே உரிய பொறாமை என்று நினைத்து சிரிப்புடன், ‘ஏய் லதா.. என்ன ஒன்னையுந்தான் ஆம்பளைங்க விழுங்கறாமாதிரி பாக்கானுங்க.. நா ஏதாச்சும் சொல்றேனா என்ன? பாக்கறவன் பாக்கத்தான் செய்வான்.. நம்ம மனசுதான் சுத்தமாருக்கணும்..’ என்பான்..

ஆனால் லதா ஒத்துக்கொள்ள மாட்டாள்.. ‘அதெப்படிங்க.. ஆம்பளைங்க பொண்ணுங்க அழகாருந்தாத்தான்னு இல்ல.. எல்லா பொண்ணுங்களையுந்தான் பாப்பாங்க.. எங்க ஊர்லயும் அப்படித்தான்.. சின்ன வயசுலருந்தே எங்க வீட்ல, ‘ரோட்ல போகும்போது தரைய பாத்துத்தான் நடக்கணும்.. ரோட்ல போற வர ஆம்பளைங்க பாக்கத்தான் செய்வாங்க.. அத நீங்க பாத்தீங்கன்னாதான் பிரச்சினை.. பின்னாலயே வருவாங்க’ன்னு சொல்லித்தான் எங்கள வளர்த்தாங்க. அதனால அது ஒரு பெரிய பிரச்சினையில்ல.. ஆனா இது அப்படியில்ல..’ என்பாள்..

சில நேரங்களில் ப்ரேம் சலிப்புடன், ‘சரி இப்ப என்ன பண்ணலாம் சொல்லு.. என் மூஞ்சில ஆசிட ஊத்திக்கவா?’ என்பான்..

‘ஆன்னா, ஊன்னா.. இதையே சொல்லி சமாளிங்க..’ என்று அத்துடன் அந்த விஷயத்தை முடித்துவிடும் லதா நாளடைவில் அவனுடன் வெளியில் வருவதையே நிறுத்திவிட ப்ரேம் இவளை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றால் என்று சிந்திக்கலானான்..

திருமணம் முடிந்து முதல் வருடத்திலேயே ஒரு பெண்குழந்தை, இருவரையும் தூக்கி சாப்பிட்டுவிடக் கூடிய கலருடனும் அழகுடனும் பிறக்க லதா தன் கவலையை மறந்து அந்த குழந்தையுடனேயே ஐக்கியமாகிப் போக ப்ரேம் அவளை மருத்துவரிடம் கொண்டு செல்லவேண்டிய அவசியம் இருக்காது என்று நினைத்து சமாதானமடைந்தான்.

குழந்தை பிறந்து ஒரு வருடம் பூர்த்தியாகவிருந்த சமயத்தில், ‘மாப்பிள்ளை, பிள்ளைக்கு மொட்ட போட்டு காது குத்தணும். நம்ம குலதெய்வத்துக்கு குடும்பத்தோட வர்றதா லதா அம்மா நேந்திருக்காளாம். அதனால ஒரு நாலு நாள் லீவ் போட்டுட்டு லதாவ கூட்டிக்கிட்டு வந்தீங்கன்னா..’ என்று ஊரிலிருந்து வந்த கடிதத்தைப் பார்த்ததும் தன் நண்பனுடைய நாற்சக்கர வாகனத்தை ஏற்பாடு செய்துக்கொண்டு கிளம்பினான்..

ஆறேழு மணி நேர பயணத்தில் அடைந்துவிடக்கூடிய தூரம் என்பதால் உச்சி வெயிலுக்கு முன்பு ஊர் சேர்ந்து போய்விட வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னையிலிருந்து விடியற்காலை நான்கு மணிக்கு புறப்பட்டான்..

குழந்தை உறக்கத்திலிருந்ததால் லதாவும் குழந்தையும் காரின் பின் சீட்டில் அமர ப்ரேம் தன் நண்பனுடைய ஓட்டுனரின் அருகில் அமர்ந்துக்கொண்டான்.

மார்கழி மாத விடியற்காலை நேரம்.. பனிமூட்டம்.. ஹெட்லைட்டை முழு வீச்சில் இட்டுக்கொண்டு வாகனங்கள் சர், சர்ரென்று தங்களைக் கடந்து செல்வதைப் பார்த்த ப்ரேம்.. ‘கொஞ்சம் மெதுவாவே ஓட்டுங்க டிரைவர்.. அவசரம் ஒன்னுமில்ல..’ என்று எச்சரித்து வாய் மூடுவதற்குள் எதிரில் கண்மூடித்தனமாக வந்த லாரியொன்றிலிருந்து தப்பிக்க ஓட்டுனர் தன் முழு பலத்தையும் உபயோகித்து வாகனத்தைத் திருப்ப சாலையோரத்திலிருந்த மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது.

பின் சீட்டிலிருந்த லதாவும் குழந்தையும் அதிர்ஷ்டவசமாக லேசான சிறாய்ப்புகளுடன் தப்பினர்.

ஓட்டுனர் படுகாயமடைய அவருக்கருகில் முன் சீட்டில் அமர்ந்திருந்த ப்ரேமுக்கு முன் கண்ணாடி சுக்குள் நூறாக உடைந்து தெறித்ததில் முகத்தில் ஐந்தாறு இடங்களில் கீறல்.. சில சற்று ஆழமாகவே..

நல்லவேளையாக விபத்து சென்னைக்கு மிக அருகிலேயே ஏற்பட்டதால் இருவரையும் உடனே அருகிலிருந்த தனியார் மருத்துவமனையொன்றில் சேர்த்து சிகிச்சையளிக்க முடிந்தது.

செய்தியறிந்து ப்ரேமுடைய பெற்றோரும்.. லதாவின் பெற்றோரும் ஊரிலிருந்து ஓடி வர ப்ரேம் இரு வார மருத்துவமனை வாசத்திற்கு பிறகு வீடு திரும்பினான். ஓட்டுனரோ சிகிச்சை பலனளிக்காமல் மரித்துப் போனார்.

‘நானும் அந்த விபத்துலயே செத்துப் போயிருக்கலாம்டா.. பொழச்சி வந்து இந்தமாதிரி அவஸ்த பட வேண்டியிருக்காதுல்லே..’ என்ற என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென தெரியாமல் நான் அமர்ந்திருந்தேன்..

‘அந்த ஆக்சிடெண்டுலயா ஒன் மொகம் இப்படியாயிருச்சி?’ என்றேன்.

‘இல்லடா.. ஒரு அஞ்சாறு வடு மட்டுந்தான் இருந்தது. அதுல ரெண்டு மூஞ்சிக்கு குறுக்கே கொஞ்சம் நீளமா.. ஆனா இதுல லதாவுக்கு என்னவோ நிம்மதியாருந்தா மாதிரி.. எங்க ரெண்டு பேர் குடும்பத்துக்குமே அவளோட அந்த ஒரு மாதிரி கவலைப்படாத குணம் அதிர்ச்சியாருந்தது. ஆனா நா அத பொருட்படுத்தல.. எப்படியோ அவளோட நச்சரிப்புலருந்து விடுதல கிடைச்சிதேன்னு நினைச்சேன்..’ என்று நிறுத்திய ப்ரேம் மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைக்க, ‘என்னடா இது நீ பாட்டுக்கு ஊதி தள்ளிக்கிட்டே இருக்கே.. முந்தியெல்லாம் நீ இவ்வளவு குடிக்க மாட்டியே?’ என்றேன்.

ஆனால் அவன் அதைக் கண்டுக் கொள்ளாமல் தொடர்ந்தான்.

‘ஆனா என் குழந்தையே என் முகத்த பார்த்து பயந்து அலற ஆரம்பிச்சப்போதான் வீட்ல மறுபடியும் பிரச்சினை வந்தது ஜோசப். லதா ஒரு நாள் ‘என்னங்க நான் சொல்றனேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க.. நீங்க இந்த மூஞ்சோட பிள்ளையோட மொகத்துல விழிக்காதீங்க. இனிமே அவ தூங்கனதுக்கப்புறம் வாங்களேன்.. இல்லன்னா மூஞ்சிக்கு ஏதாச்சும் வைத்தியம் பாருங்க.. குழந்தைக்கென்ன எனக்கே ஒங்க மொகத்த பாக்க சகிக்கல.. இந்த முகத்துக்கா ஏங்கிப் போய் நின்னேன்னு நினைச்சால அருவருப்பாருக்குன்னு’ சொன்னப்போ எனக்கு நேரா போய் தற்கொல பண்ணிக்கலாம்னு கூட தோனிச்சி.. ஆனா எங்கம்மா அப்பா மொகத்துக்காக பொறுத்துக்கிட்டேன். என் ஆஃபீஸ்ல என் ஃப்ரெண்ட்ஸ்கிட்டருந்து எனக்கு கிடைச்ச  ஆறுதல்கூட என் வீட்ல கிடைக்கலேன்னு நினைச்சப்போ பேசாம டைவர்ஸ் பண்ணிட்டா என்னன்னு கூட தோனிச்சி. ஒனக்குதான் தெரியுமே எங்க குடும்பம் HUFனு.. கல்யாணத்துக்கு நின்ன சித்தப்பா பொண்ணுங்க, அத்தை பொண்ணுங்கன்னு எதையாவது காரணம் காட்டி என் விருப்பத்த நிறைவேத்திக்கவே முடியாதுன்னு போயிருச்சி.’

‘டேய் ப்ரேம்.. லதா சொன்னா மாதிரி இதுக்கு ஏதாச்சும் ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட் கிட்ட காட்டித்தான் பாரேன்னு அப்பா சொன்னாரேன்னு நானும் போய் காட்டுனேன்.. அந்த டாக்டர் ப்ரஸ்க்ரைப் பண்ண க்ரீம வாங்கி ஒரு ரெண்டு வாரத்துக்கு தடவியிருப்பேன்.. அது எனக்கு ஒத்துக்கல போலருக்கு.. ஒரு மாசத்துக்கப்புறம்தான் இந்த ராஷஸ் வந்துது.. அதுக்கப்புறம் தோலெல்லாம் திட்டு திட்டா கருப்பா இப்பருக்கற மாதிரி...’ சொல்ல வந்ததை தொடர முடியாமல் மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு சூனியத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தவனிடம் என்ன பேசுவதென தெரியாமல் நான் அமர்ந்திருந்தேன்..

‘கீறல் வடு இருந்ததுக்கே வீட்டுக்கு இருட்டனதுக்கப்புறம் வாங்கன்னு சொன்னவளாச்சே.. இனி கேக்கணுமா? அஞ்சாறு மாசம் கழிச்சி ஒரு நாள் நான் ஆஃபீஸ் விஷயமா வெளியூர் போய்ட்டு ஒருவாரம் கழிச்சி வரேன்.. வீடு பூட்டிக் கிடக்கு.. எங்க அப்பார்ட்மெண்ட்ல இருந்தவங்க ஒருத்தர் வந்து ‘சார் ஒங்க வய்ஃப் குழந்தைய தூக்கிக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போறதா சொல்லிட்டு போய்ட்டாங்க.. நீங்க வந்ததும் ஃபோன் பண்ணுவீங்களாம்..’என்று என்னுடைய வீட்டு சாவியைக் கொடுத்துவிட்டுபோனார்றா.. நா வீட்ட தொறந்து பாக்கேன்.. முன் ரூம்லயே ஒரு லெட்டர்..  இனிமே ஒங்கக் கூட என்னால வாழ முடியாது. நான் போறேன்.. என்னோட மனசுக்கு புடிச்ச ஒருத்தர் கூட, என்னோட என் குழந்தையையும் ஏத்துக்க தயாராருக்கறவரோட போரேன்.. எங்க வீட்டுக்கு தெரிய படுத்தி, என்னெ தேட முயற்சி செஞ்சீங்கன்னா.. நீங்க என்னெ கொடுமை படுத்துனதா போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் பண்ணுவேன்னு லெட்டர்ல.. ஆனா அடுத்த நாளே நான் பொறப்பட்டு அவங்க ஊருக்கு போனேன்.. லெட்டர காட்டினேன்.. அவங்க அதிர்ச்சியில என்ன பேசறதுன்னே தெரியாம நிக்க.. நான் எங்க ஊருக்கு போய் அப்பா, அம்மாட்ட சொன்னேன்.. அப்பாவால தாங்க முடியல.. நான் ஊருக்கு திரும்பி வந்து சேர்றேன்.. அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்குன்னு தந்திவருது.. வீட்ல சித்தப்பா, அத்தை எல்லாருமா சேர்ந்து பேசியிருக்காங்க.. அப்பாவால தாங்க முடியல.. மாசிவ் அட்டாக். எவ்வளவோ முயற்சி செஞ்சும் அடுத்த நாளே..' தொடர்ந்து பேச முடியாமல் சற்று நேரம் மவுனமாகிறான்.. நானும் எதிரே சாலையில் படுபிசியாய் இருந்த போக்குவரத்தைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறேன்...

எத்தனை நேரம் போனதோ அவனாகவே தொடர்கிறான். 'அதுக்கப்புறம் அம்மாவ கூட்டிக்கிட்டு இங்க வந்துட்டேன்.. லதா எங்க போனா, யாரோட போனா.. ஒரு விவரமும் இல்லை.. அந்த அப்பார்ட்மெண்ட்லயே எல்லாரும் கேள்விப்பட்டப்போ நம்ப முடியாம என்னையே சந்தேகப்பட ஆரம்பிச்சிட்டாங்க.. அதுல ஒருத்தர் போலீஸ்ல புகார் பண்ணி.. அவங்க வந்து என்னெ ஸ்டேஷனுக்கு கூப்ட்டுட்டு போயி.. அடுத்த நாள் பேப்ப்ரல எல்லாம் வந்து.. எங்க ஆஃபீஸ்லயே என்னெ சந்தேகப்பட ஆரம்பிச்சிட்டாங்க.  என் மேல ஒரு தப்பும் இல்லன்னு விடற வரைக்கும் நா பட்ட அவஸ்தை இருக்கே... வார்த்தையால சொல்ல முடியாதுறா.. விஷயத்த கேள்விப்பட்டு எங்க சித்தப்பாமார்ங்கல்லாம் வந்து அம்மாவ குடும்ப மானமே என்னால காத்துல போயிருச்சிங்கறா மாதிரி பேசு, பேசுன்னு பேசி.. அந்த டென்ஷன் தாங்காம அம்மாவுக்கும் அட்டாக் வந்து ஒரு பக்கம் கை, கால் விளங்காம போயிருச்சி.. இப்ப அம்மாவும் நானுந்தான்..’

அந்த சந்திப்புக்குப் பிறகு வாரம் ஒருமுறையாவது அவனுடைய வீட்டுக்குச் செல்வதென தீர்மானித்தேன்.. ஆனால் என்னுடைய எந்த முயற்சியும் அவனை அவனுடைய சோகத்திலிருந்து விடுவிக்கவில்லை..

அதன் பிறகு நான் மீண்டும் பதவி உயர்வு பெற்று மும்பைக்கு செல்ல எங்களுடனான சந்திப்பு நின்றுபோனது....

ஐந்து வருடங்கள் கழித்து நான் மீண்டும் சென்னை வந்த பிறகு அவன் பணியாற்றிய நிறுவனத்திலிருந்தும் ராஜிநாமா செய்துவிட்டான் என்று கேள்விப்பட்டேன்.. வீட்டுக்குச் சென்று விசாரித்தபோது அவனுடைய தாயார் இறந்த கையோடு ப்ரேம் வீட்டையும் காலி செய்துவிட்டு சென்றுவிட்டான் என்று தெரிந்தது..

நான் மும்பைக்கு செல்வதற்கு முன் அவனை ஒரு முறை சந்தித்தபோது அவன் கூறிய இந்த வார்த்தைகள் இப்போதும் என் காதுகளில்.. ‘என் மொகத்த பார்த்து வர்ற எந்த பொண்ணையும் கட்டறதில்லேன்னு தீர்மானமா இருந்தேனே.. ஆனா லதா என்னெ கட்டுனதே இந்த மொகத்துக்காகத்தான்னு அப்புறந்தான்டா தெரிஞ்சது.. இப்ப சொல்றேன்.. நாம விரும்பற பொண்ணத்தான் ஜோசப் கட்டிக்கணும்.. நம்மள விரும்பற பொண்ணையில்ல.. ஏன்னா லதா மாதிரி வெறும் தோலுக்காக கட்டுறாங்களா இல்லையான்னு நம்மளால தெரிஞ்சிக்க முடியாதுல்லே..’

சத்தியமான வார்த்தை.. அதனால் பாதிக்கப்பட்டவனாயிற்றே.. அதில் உண்மை இருக்கத்தான் செய்யும்..

நிறைவு..

07 அக்டோபர் 2006

கடந்து வந்த பாதை - 6

என்னுடைய திருமணம் தூத்துக்குடியில் நடந்தது. திருமணம் முடிந்து சென்னையில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

என்னுடைய வங்கி நண்பர்களுக்கென தனியாக ஒரு விருந்து கொடுத்துவிடலாம் என்ற நோக்கத்தில் எனக்கு மிகவும் நெருக்கமாயும் என்னுடன் நீண்ட காலம் பணியாற்றிய அலுவலக மற்றும் வெளியிலுள்ள நண்பர்களை மட்டும் என்னுடைய உறவினர்களுடன் சேர்த்து வரவேற்புக்கு அழைத்திருந்தேன்.

அவர்களுள் ஒரு ஜோடிதான் பிரேம் மற்றும் லதா தம்பதியினர். அவர்களுக்கும் திருமணமாகி ஒரு மாதமே ஆகியிருந்தது.

நம் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள்தான். என்றாலும் கேரள மாநிலத்திற்கே உரிய கலரில் சினிமா கதாநாயகன், கதாநாயகி போலிருந்ததை வரவேற்புக்கு வந்திருந்த அனைவருமே கவனித்தனர்.

மேடையிலிருந்த திருமண ஜோடியைவிட விருந்தினர் வரிசையிலிருந்த இவர்கள்தான் எல்லோரையும் கவர்ந்தனர் என்றால் மிகையாகாது.

நான் வங்கியில் குமாஸ்தாவாக பணிக்கு சேருவதற்கு முன் சென்னையில் இரண்டு வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்றியிருந்தேன். அவற்றுள் ஒன்றில் எனக்கு அறிமுகமாகி நாளடைவில் நெருங்கிய நண்பரானவர் பிரேம். தென் தமிழ்நாட்டிலுள்ள ஒரு மாவட்டத்தைச் சார்ந்தவர்.

நானும் அவரும் சேர்ந்து சாலையில் செல்லும் நேரத்தில் அவர் மீது படாத இளம் கண்களே இல்லையெனலாம். அவ்வளவு அம்சமாக, செக்கச் செவேலென்ற கலரில் அப்போதிருந்த சிவக்குமாரைப் போல் இருப்பார்.

‘தோடா ப்ளாக் அண்ட் ஒய்ட் ஜோடி’ என என்னையும் அவரையும் சேர்த்து சிலர் கமெண்ட் அடித்தது இப்போதும் நினைவில் நிற்கிறது.

அவரை கணவராக அடையும் பெண் நிச்சயம் அவரை சந்தேகித்தே தன்னுடைய வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்வார் என்று  எங்களுடைய நண்பர்களுடைய வட்டத்தில் அப்போது வேடிக்கையாக சொல்வதுண்டு. அத்தனை பெண் விசிறிகள் இருந்தனர்.

ஆனாலும் ப்ரேம் அவற்றையெல்லாம் கண்டுக்கொள்ளவே மாட்டார். ‘டேய் ஜோசப் இதெல்லாம் வெறும் தோல்டா. இதுக்கு மட்டும் ஆசைப்பட்டு வர எந்த பொண்ணையும் நா ஏறெடுத்துக்கூட பாக்க மாட்டேன்.. எங்க வீட்ல பாத்து வைக்கற பொண்ணத்தான் கட்டிக்குவேன்.’ என்பான்.
அப்படித்தான் நடக்கவும் செய்தது.

நானும் அவனும் பணியாற்றிக் கொண்டிருந்த நிறுவனத்தில் என்னுடைய வேலை நிரந்தரமாகவில்லை. இரண்டு வருடங்கள் அப்ரெண்டிஸ் கணக்கராக வைத்திருந்துவிட்டு வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். ‘டேய் நீ மட்டும் இந்துவாருந்திருந்தா ஒன்னையும் கன்ஃபர்ம் செஞ்சிருப்பாங்களாம். நம்ம செக்ஷன் ஹெட் இன்னொருத்தர் கிட்ட சொல்லிக்கிட்டிருந்தார். எனக்கு ச்சேன்னு யிருச்சி.. நானும் பேசாம இந்த வேலைய விட்டுட்டு உங்கூடவே வேற வேலைய தேடிக்கலாம்னு பாக்கேன்.’ என்றான் நான் வேலையிலிருந்த இறுதிநாளன்று.

எனக்கு உண்மையிலேயே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நான் கத்தோலிக்க கிறிஸ்துவனாயிருந்தது என்னுடைய தவறா என்ன? இரண்டு வருடங்கள் மாடு மாதிரி உழைத்தேனே? என்றெல்லாம் எண்ணி மருகினேன். இருப்பினும் என்னுடைய நண்பனிடம், ‘டேய்.. எனக்காக நீ வேலைய விடறதா? எனக்கு வேற வேலை கிடைக்காம போகாதுறா.. நீ வேணா பாத்துக்கிட்டேயிரு இன்னும் ஒரு மாசத்துக்குள்ள எனக்கு இத விட நல்ல வேலையா கிடைக்கும். அதுக்குத்தான் இந்த வேலையோ போச்சோ என்னவோ? நான் இந்த ஆஃபீச விட்டுப் போனாலும் நம்ம நட்பு தொடரணும்..’ என்று சமாதானப்படுத்தினேன் என் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு.

கடவுள் ஒரு கதவை மூடினால் மற்றொரு கதவைத் திறப்பார் என்பதில் எனக்கு திடமான நம்பிக்கை இருந்தது.

அதே போல் ஒரே மாதத்தில் இப்போது நான் பணியாற்றும் வங்கியில் குமாஸ்தாவாக வேலை கிடைத்தது.

நாங்கள் இருவருமே சென்னையில் இருந்ததால் எங்களுடைய நட்பு தடையில்லாமல் தொடர்ந்தது. மாதம் ஒருமுறையாவது நேரில் சந்திக்காமல் இருந்ததில்லை.

எனக்கு திருமணமாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான்  அவருடைய திருமணம் அவர் கூறியிருந்தபடியே பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு அவருடைய சொந்த ஊரில் நடந்தது. அவருக்கு பெண் கொடுக்க நீ, நான் என்று அவருடைய தாய் மற்றும் தந்தை வீட்டு உறவினர்கள் முயற்சித்தும் இரண்டு வீடுகளுக்கும் உறவு இல்லாத ஒரு குடும்பத்தில்தான் அவருக்கு பெண் அமைந்தது.

பெண் பார்ப்பதற்கு என் நண்பரை விட நல்ல கலரும், லட்சணமும் கொண்டவராய் இருந்தது அவருடைய பெற்றோரை விட என்னைப் போன்ற நண்பர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. ஏனெனில் எங்கள் இருவருடைய நண்பர்கள் வட்டத்திலும் ப்ரேமுக்கு எப்படிப்பட்ட பெண் அமையும் என்பதில் ஒரு விவாதமே நடந்திருக்கிறது. ஆகவே நாங்கள் அனைவருமே எதிர்பாராத அழகுடன் பெண் அமைந்தது எல்லோருக்கும் பரம திருப்தி. ‘டேய் ப்ரேம் நீ எங்கள மாதிரி எந்த பொண்ணுங்க பின்னாலயும் போகாம, யார் வலையிலயும் விழாம அப்பா, அம்மா பார்த்து வச்ச பொண்ணையே கட்டுன பாரு.. நீ உண்மையிலயே க்ரேட்தாண்டா..’ என்று நண்பர்கள் சிலர் திருமணத்தன்று பாராட்டியபோது, ‘டேய் பசங்களா போறும் நீங்களே கண்ணு வச்சிராதீங்க.’ என்று அவருடைய தாயார் எங்களை அடக்கியது இப்போதும் நினைவில் நிற்கிறது..

அவர் வாய்க்கு சர்க்கரைதான் போட வேண்டும்..

சாரி.. நல்லது நடந்தாத்தான் இப்படி சொல்வார்கள் இல்லையா?

நடந்தது நல்லதல்லவே..

ஆனால் அவர் அன்று சொன்னது சரிதான் போலிருக்கிறது என்பதை சில வருடங்கள் கழித்து நான் அவனை மீண்டும் இதே சென்னையில் சந்தித்தபோதுதான் தெரிந்தது.

நான் மேலாளராக பதவி உயர்வு பெற்று பல இடங்களுக்கும் சென்று சென்னைக்கு மீண்டும் திரும்பியபோது சுமார் ஐந்தாறு வருடங்கள் கடந்திருந்தன.

சென்னையிலிருந்து மாற்றலாகிச் சென்றபோதும் என்னையும் என் மனையையும் வழியனுப்ப என் உறவினர்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ப்ரேமும் ஒரு சில நண்பர்கள் மட்டுமே ரயில் நிலையம் வந்திருந்தனர்.

அதன் பிறகு முதல் வருடத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் மாதம் ஒருமுறையாவது கடிதம் எழுதிக்கொள்வோம். அது மூன்று, நான்கு மாதத்திற்கு ஒரு முறை என்று நீண்டு நாளடைவில் நின்றுபோனது.

நான் மதுரையிலிருந்து மீண்டும் சென்னைக்கு மாற்றலானபோது ப்ரேமின் நினைவு மீண்டும் வர என்னிடமிருந்த அவனுடைய கடைசி விலாசத்திற்கு கடிதம் எழுதி சென்னை வந்ததும் அவனை வந்து சந்திப்பதாக அறிவித்தேன். ஆனால் நான் சென்னைக்கு புறப்படும் வரை அவனிடமிருந்து பதிலே வரவில்லை.

இருப்பினும் நான் அதை பெரிதுபடுத்தாமல் சென்னை வந்து சேர்ந்தபின் ஒரு வாரம் கழித்து அவனுடைய அலுவலகத்திற்கு சென்றேன். வரவேற்பறையிலிருந்த ரிசெப்ஷனிஸ்ட்டிடம் என்னுடைய விசிட்டிங் கார்டைக் கொடுத்தனுப்பிய பத்து நிமிடத்தில் என் எதிரே வந்து நின்ற ப்ரேமைக் கண்டு பேச்சற்று போய் அவனையே சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘என்னடா ப்ரேம்.. இது என்ன கோலம்?’ என்று நான் அதிர்ச்சியில் சற்று உரக்கவே கேட்டுவிட்டேன் போலிருக்கிறது.. தன்னுடைய பணியில் ஆழ்ந்திருந்த ரிசெப்ஷனிஸ்ட் பெண் என்னை முறைத்தார்.

ப்ரேம் ஒரு வரட்டுப் புன்னகையுடன், ‘எப்படிறா இருக்கே.. பாத்து எவ்வளவு நாளாச்சி.. வா வெளிய போய் பேசலாம்.’ என்றவாறு என் முன்னே நடக்க நான் மாறாத அதிர்ச்சியுடன் அவன் பின்னே சென்றேன்.

அவனுடைய அலுவலக காண்டீனை நோக்கி அவன் நடக்க நான் அவனை பிந்தொடர்ந்தேன்.

காலியாய் கிடந்த கான்டீன் இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்து அமராமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்த என்னைப் பார்த்து, ‘ஒக்கார்றா.. நீ என்ன கேக்க வரேன்னு புரியுது.. சொல்றேன்.. அதுக்கு முன்னால நீ எப்படி இருக்கே.. அதச் சொல்லு.. என் கதை பெரிய கதை.. ஆரம்பிச்சா ரெண்டு நாளைக்கு சொல்லலாம்..’ என்றான்..

அவனுடைய குரலில் இருந்தது கேலியா இல்லை சுயபச்சாதாபமா என்று எனக்கு விளங்கவில்லை.

அவனுக்கெதிரில் இருந்த இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்து என்னைப் பற்றிய விவரத்தை சுருக்கமாகக் கூறி முடித்தேன். ‘ரெண்டு பொண்ணுங்க ப்ரேம்.. மூத்தவ மூனாவது படிக்கிறா.. சின்னத இனிமேத்தான் சேக்கணும்.. தூத்துக்குடியில சின்னதா ஒரு வீட்டைக் கட்டி முடிச்சதுதான் இந்த அஞ்சு வருசத்துல நான் செஞ்ச பெரிய சாதனை.. இப்ப சொல்லு என்ன இது கோலம்? ஒன் மொகத்துக்கு என்ன ஆச்சி....நீ இருந்த இருப்பு என்ன? என்ன கோலம்டா இது?’

மன்மதன் மாதிரி இருந்த அவனுடைய முகம் முழுவதும் ஸ்கின் கேன்சர் என்பார்களே அப்படியிருந்தது, முடிச்சு முடிச்சாக. காது மடல்களிலும் மூக்கின் தண்டு மீது, நெற்றியில் என.. தோலும் கருத்துப் போய்.. தலை நிறைய சுருள், சுருளாக அடர்த்தியாக இருந்த அவனுடைய முடி போன இடமே தெரியாமல் பாதி வழுக்கையாய்.. முப்பது, முப்பத்தைந்து வயதில் அரை கிழவனாக..

‘சொல்றா லதா எப்படி இருக்காங்க? பிள்ளைங்க எத்தன பேர்?’ என்றெல்லாம் கேட்க வேண்டும் என்றுதான் நினைத்தேன்.. ஆனால் அவன் கையிலிருந்த சிகரெட் விரல் நுனியை சுடுகிறது என்ற நினைவும் இல்லாமல் எங்கோ பார்த்துக்கொண்டிருந்ததை பார்த்த எனக்கு அதை கேட்க துணிவில்லாமல்...

சிறிது நேரம் கழித்து சிகரெட்டை அணைத்துவிட்டு மேசையின் குறுக்கே கரங்களை நீட்டி என்னுடைய கரங்களைப் பற்றியவாறு, ‘லதா இப்ப எங்கூட இல்லடா.. போய்ட்டா.’ என்றான் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல்.. ‘சிம்பிளா சொல்லணும்னா ஓடிப்போய்ட்டாடா.. என் குழந்தையையும் தூக்கிக்கிட்டு..’

நாளை நிறைவு பெறும்..