செய்தி விமர்சனம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்தி விமர்சனம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 ஆகஸ்ட் 2019

காஷ்மீர் முடிவின் பின்னணி என்ன?

சமீபத்தில் காஷ்மீர் மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த அனைத்து சிறப்பு சலுகைகளும் ரத்து செய்யப்பட்டு அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேவங்களாக பிரிக்கப்பட்டதையொட்டி நாடு முழுவதும் பலவகையான விமர்சனங்கள் எழுந்தன.

நாட்டின் பிரதான எதிர் கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் இதை முழுமூச்சுடன் எதிர்த்து வந்தாலும் அவை ஆட்சியில் இல்லாத மாநிலங்களை ஆளும் பாஜக அல்லாது ஆட்சியாளர்களும் இதை மறைமுகமாக ஆதரித்ததால்தான் இந்த மசோதா மாநிலங்கள் அவையிலும் மிக எளிதாக நிறைவேற்றப்பட்டது.

எதற்காக இந்த அவசர முடிவு என்கின்றனர் பலரும்.

ஆனால் உண்மையில் இது அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்பதை இந்த முடிவின் பின்னணியை சற்று ஆராய்ந்தால் தெரியும் என்று நான் கருதியதன் விளைவே இந்த பதிவு.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்ட குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்த சிற்றரசுகள் இருந்தனவாம். அவற்றை அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் அவருக்கு உறுதுணையாக அப்போது உள்துறையில் உயர் அதிகாரியாக இருந்த கேரளத்தைச் சார்ந்த திரு வி.பி.மேனன் ஆகியோரின் விடா முயற்சியாலும் இந்த சிற்றரசுகள் இந்தியாவுடன் ஒவ்வொன்றாக இணைக்கப்பட்டன. இவற்றுள் இவ்விருவரின் எவ்வித முயற்சிகளும் பிடிகொடுக்காமல் இருந்துவந்தவை ஹைதராபாத் மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசுகள்.

இவ்விரண்டு அரசர்களையும் தன்னுடைய புத்திக் கூர்மையாலும் நாவண்மையாலும் வழிக்கு கொண்டு வந்தவர் திரு வி.பி. மேனன் அவர்கள்தான் என்கிறது வரலாறு. பட்டேலுக்கு நூறடியில் உருவச் சிலை வைத்து போற்றும் பாஜக  அவருக்கு வலதுகரமாக இருந்து இயங்கிய விபி மேனனை முற்றிலுமாக மறந்து போனது வியாப்பாக உள்ளது.

ஜம்மு காஷ்மீர் அரசின் அப்போதைய மன்னராக இருந்த ஹிரிசிங்கிற்கு இந்தியாவுடனோ பாக்கிஸ்தானுடனோ இணைவதில் தயக்கம் இருந்தது. ஆனால் இந்தியா சுநந்திரம் அடைந்த போது காஷ்மீரை தன் வசம் எடுத்துக்கொள்ள முடியாத ஏமாற்றத்தில் இருந்த பாக்கிஸ்தான் காஷ்மீரிலுள்ள பஷ்த்தூன் இனத்தவர்களை தூண்டிவிட்டு காஷ்மீரின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதனைக் கண்ட மன்னர் இனிமேலும் தனித்து ஆட்சி நடத்த முடியாது என்று அஞ்சி இந்தியாவுடன் இணைவது என முடிவு செய்தார். ஆனால் இதில் பல நிபந்தனைகளை மன்னர் முன் வைத்ததால் அவருடைய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மனமில்லாதிருந்த நேரு அவர்கள் இணைப்பில் தீவிரம் காட்டவில்லை. இந்த இடைபட்ட காலத்தில் பஷ்த்தூன் மக்களுடைய தாக்குதலில் காஷ்மீரின் வடக்கு மற்ரும் மேற்கு பகுதிகளை பாக்கிஸ்தான் கைப்பற்றியது. இவை இப்போதும் பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டுக்குள் உள்ள காஷ்மீராக கருதப்படுகிறது.

வழிக்கு வராமல் முரண்டுபிடித்த மன்னரை சமாதானப்படுத்தி இணைப்பு ஆவணத்தில் அவருடைய கையொப்பத்தை பெற இந்திய அரசு திரு வி.பி. மேனனை அனுப்பி வைத்தது. அவருடைய தொடர் முயற்சியின் பலனாக 1947 வருடம் அக்டோபர் மாதத்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது.

ஆனால் மன்னரின் முக்கிய நிபந்தனைகளான தங்களுக்கு என்று தனி கொடி, நாடாளுமன்றம், தனி குடியுரிமை போன்ற நிபந்தனைகளை இந்திய அரசால் நிராகரிக்க முடியவில்லை. இத்துடன் வெளியுறவு, இராணுவம் மற்றும் தகவல்தொடர்பு ஆகியவற்றை தவிர மற்ற அனைத்தையும் முடிவு செய்துக்கொள்ளும் உரிமையும் ஜம்மு காஷ்மீர் அரசுக்கு அளிக்கப்பட்டது. இந்த சுதந்திரத்தை அவர்களுக்கு அளிக்க வசதியாகத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 370 வது பிரிவு சேர்க்கப்பட்டது. இதன்
படி இம்மூன்று துறைகளைத் தவிர மற்ற அனைத்து துறைகளையும் பாதிக்கும் இந்திய அரசின் எந்த சட்டட்மானாலும் அவை ஜம்மு காஷ்மீர் அரசின் ஒப்புதலுடன் மட்டுமே இயற்றப்பட வேண்டும். இல்லையெனில் இத்தகைய சட்டங்கள் எதுவும் காஷ்மீர் மக்களை கட்டுப்படுத்தாது/ மேலும் காஷ்மீரில் அப்போது நிரந்தரமாக வசித்து வந்த மக்களே அந்நாட்டின் நிரந்தர குடிமக்களாக கருதப்பட்டனர். அவர்களுக்கு மட்டுமே அந்த மாநிலத்தில் அசையா சொத்துக்களை வாங்கவோ விற்கவோ முடியும் என்ற சலுகையும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. காஷ்மீர் பெண்களை மணக்கும் வெளி மாநிலத்து கணவர்களுக்குக் கூட இந்த  உரிமை மறுக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மன்னரின் இத்தனை நிபந்தனைகளையும் விருப்பமில்லாவிட்டாலும் அப்போதைய பிரதமாரக இருந்த நேரு ஏற்றுக்கொண்டதற்குக் காரணம் காஷ்மீரை பாக்கிஸ்தானிடம் இழந்துவிக் கூடாது என்பதுதான்.

இந்த சிறப்புச் சலுகைகளை 1951ம் ஆண்டு துவக்கப்பட்ட பாரதீய ஜனசங்க கட்சி துவக்க முதலே எதிர்த்து வந்தது. இமயம் முதல் குமரிவரை இந்தியா ஒரே நாடு என்பது அக்கட்சியின் தாரக மந்திரமாக இருந்தது. ஆகவேதான் காஷ்மீர் மக்களுக்கு இதுவரை அளித்து வந்த சிறப்பு சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டபோது ஜனசங்க கட்சியின் நிறுவனர் (founder)ஷ்யாம பிரசாத் முகர்ஜியின் கனவு நனவானது என்று மறைந்த தலைவர் பெயரில் இன்றும்
இயங்கிவரும் ஆய்வு மைய இயக்குன அனிர்பன் கங்குலி கூறியதாக செய்திகளில் பார்த்தோம். பாரதிய ஜனசங்கத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சியாக பெயரளவில் மட்டும் மருவிய பாஜக தங்களுடைய நெடுங்கால கனவுத் திட்டத்தை இந்திய நாடாளுமன்றத்தில் இதற்கு தேவையான பெரும்பான்மை கிடைக்கும் காலத்திற்காகவே காத்திருந்தது. தற்போது அந்த கட்சிக்கு மாநிலங்களவையில் இதை நிறைவேற்ற போதிய பெரும்பான்மை இல்லாவிடினும் ஒடிசா., தில்லி ,ஆந்திரா, தெலுங்கான மற்றும் நம்முடைய தமிழகம் ஆகிய மாநிலங்களைச் சார்ந்த உதிரி கட்சிகளின் துணையுடன் அதை மிக எளிதாக நிறைவேற்றி சுமார் எழுபதாண்டுகால போராட்டத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டுள்ளது.

இதுதான் உண்மை.

இதற்கு இமயம் முதல் குமரி வரை இந்தியா ஒரே நாடுதான் ஆகவே இதில் எந்த மாநில மக்களுக்கும் தனி அரசாங்கம் தனி கொடி, குடியுரிமை போன்ற
சலுகைகள் தேவையற்றவை என்பது மட்டுமே இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவுக்கு பிண்ணனியாக இருக்க வாய்ப்பில்லை. காஷ்மீர் மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகளில் மிக முக்கியமாக கருதப்படுவது வெளிமாநிலத்தவர்கள் அங்கு அசையா சொத்துக்களை வாங்க முடியாது என்பதும் இந்த முடிவின் ஒரு முக்கிய காரணமாக எடுத்துரைக்கப்படுகிறது.

சமீபத்திய பண மதிப்பிழப்பு முடிவு அமலுக்கு வருவதற்கு முந்தைய ஒரு சில மாதங்களில் பாஜக வட இந்தியாவில் பல விலை மதிப்பு மிக்க அசையா
சொத்துக்களை பாஜக வாங்கி குவித்ததாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியானதை படித்திருப்பீர்கள். அது போன்றதொரு நிகழ்வுகள் அடுத்த சில
ஆண்டுகளில் காஷ்மீரில் நடக்க வாய்ப்புள்ளது. கோடிக்கணக்கில் பணத்தை சேமித்து வைத்திருக்கும் பாஜக காஷ்மீர் மாநிலத்தில் தங்கள் விருப்பப்படி அசையா சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போவது நிச்சயம். நில அளவை மற்றும் நில மாற்றம் (transfer of property) மாநில ஆளுநரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளபடியால் இவர்கள் நினைப்பதை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள முடியும். இங்கு அம்மையார் காலத்தில் அவரின் பெயரை பயன்படுத்தி ஒரு கும்பல் தமிழக சொத்துக்களை அடுமாட்டு விலைக்கு வாங்கினார்களே அதுபோல பாஜகவின் இரட்டை தலைவர்களின் பெயரை பயன்படுத்தி தற்போது ஆளுங்கட்சியினரின் ஆதரவைப் பெற்றுள்ள பல அடாவடி கார்ப்பரே நிறுவன முதலாளிகளும் காஷ்மீர் மாநிலத்தின் பெரும்பகுதியை வாங்கி குவிக்க வாய்ப்புண்டு என்றாலும் மிகையாகாது.

அதுமட்டுமல்ல அந்த மாநிலத்தில் கொட்டிக் கிடக்கும் கனிமவளங்களை இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களை ஏவிவிட்டு கொள்ளையடிப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். கீழ் காணும் வரைபடத்தை பார்த்தாலே இதன் தீவிரம் உங்களுக்கு புரியும்.



************ 

27 ஜூன் 2014

நடிகரின் தற்கொலை - காரணம் என்ன?

இன்று காலையில் பத்திரிகையைத் திறந்ததுமே கண்ணில் பட்ட செய்திகளில் ஒன்று ஐம்பத்து நான்கு வயதே ஆன தமிழ் திரைப்பட நடிகர் பால முரளி மோஹனின் தற்கொலை!

அதே பகுதியில் வெளியாகியிருந்த இன்னொரு செய்தி சென்னை கோயம்பேட்டிலுள்ள தெற்காசிய விளையாட்டு சென்னையில் நடைபெற்றபோது வீரர்கள் தங்க கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருந்த ஐம்பது வயது கூட நிரம்பாத பெண் ஒருவர் அவருடைய குடியிருப்பின் மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை!

நான் குடியிருக்கும் பகுதியில் வசித்து வந்த ஒரு இளைஞர் (நாற்பது வயது கூட ஆகியிருக்கவில்லை) தற்கொலை செய்துக்கொண்ட இரண்டாம் வருட நினைவு நாள் நேற்று!

ஏன் இந்த நிலை?இதுபோன்ற செய்திகள் வெளிவராத நாளே இல்லை என்னும் அளவுக்கு தற்கொலைகள் பெருகிக்கொண்டே போவதைக் காண முடிகிறது.

இதற்கு என்ன காரணம்?


எல்லா புகைப்படங்களிலும் குழந்தைத்தனமான புன்னகையுடன் காட்சியளிக்கும் நடிகர் பால முரளி மோஹனா தற்கொலை செய்துக்கொண்டார்? இதற்கு கடந்த ஆறு மாதங்களாக நடிப்பதற்கு வாய்ப்பு வரவில்லை என்ற காரணம் என்கிறார்கள்.

என்னுடைய பகுதியில் வசித்தவருடைய தற்கொலைக்கு அவருடைய அலுவலக தோழர்கள் பல காரணங்களை கூறினார்கள். ஒருவர் அவருக்கு பல வியாதிகள் இருந்தன என்றார். 'இன்னும் ரெண்டு நாள்ல அவருக்கு ஹெர்னியா ஆப்பரேஷன் இருந்துது சார்.' ஒரு ஹெர்னியா சிகிச்சைக்கு பயந்து தற்கொலை செய்துக்கொள்வாரா என்று வியந்துபோனேன். ஏனெனில் அவர் நல்ல திடகாத்திரமானவராகத்தான் தெரிந்தார். தினமும் பேட்மின்டன் விளையாடுவார். சரியான எடையுடன் வயதுக்கேற்ற உருவம் கொண்டவர். இன்னொருவர் 'அவருக்கு ட்ரிங்ஸ் ஹேபிட் இருந்துது சார். கொஞ்ச நாளாவே ஜாஸ்தியா குடிப்பார்.' இப்போது யாருக்குத்தான் இந்த பழக்கம் இல்லை என்று தோன்றியது.  

இதுபோன்ற காரணங்கள் எல்லாமே தற்கொலை செய்துக்கொண்டவருடைய மரணத்திற்குப் பிறகு அவருடைய நண்பர்களால்/உறவினர்களால் முன்வைக்கப்படுபவையே. இவை மட்டுமே ஒருவரை தற்கொலைக்கு அழைத்துச் சென்றுவிடுமா என்று ஆய்ந்து பார்த்தால் வியப்புதான் மிஞ்சும்.

இது இன்றோ நேற்றோ தோன்றியதல்ல. இது நம்முடைய நாட்டை மட்டுமே ஆட்டிப்படைக்கும் விசித்திரமும் இல்லை. 

மனித குலம் தோன்றிய நாள் முதலே இருந்துவரும் பழக்கம்தான் இது. 

பண்டைக் காலங்களில் கிரேக்க நாட்டில் தற்கொலை செய்துக்கொள்பவரை புதைக்க இடம் வழங்க மறுக்கப்படுமாம். 

அத்தகையோரை ஊருக்கு வெளியே அனாதைப் பிணமாகத்தான் புதைப்பார்களாம். மற்ற கல்லறைகளில் வைக்கப்படுவதைப் போன்ற அறிவிப்பு பலகைகள் வைப்பதற்கு அனுமதி இல்லையாம். 

இங்கிலாந்து நாட்டில் பதினேழாம் நூற்றாண்டில் தற்கொலை செய்துக்கொண்டவரின் உடலை கயிற்றில் கட்டி சாலையில் இழுத்துச் சென்று குப்பைகள் கொட்டும் இடத்தில் வீசி எறிந்துவிடுவார்களாம். 

ஆக, தற்கொலை ஒரு இழுக்கான செயலாகவே அன்று முதல் கருதப்பட்டு வருகிறது என்பது தெரிகிறது. 

தற்கொலை செய்துக்கொண்டு மரிப்பவர்களுக்கு அவர்களுடைய துன்பங்களிலிருந்து, அவர்களுடைய கவலைகளிலிருந்து ஒரு நொடிப்பொழுதில் விடுதலை கிடைத்துவிடுகிறது. ஆனால் அவர்களுடைய அந்த முடிவுக்கு காரணகர்த்தாவாக சமுதாயத்தால் கற்பிக்கப்படும் அவர்களுடைய சொந்த பந்தங்கள் படும் அவமானத்திற்கும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் அதுவே ஆரம்பமாகிவிடுகிறது. அதிலிருந்து விடுபட முடியாமல் அவர்கள் படும் அவஸ்தையை அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். 

தற்கொலை யார், ஏன் செய்துக்கொள்கிறார்கள்?

சமீபத்திய ஆய்வுகளின்படி தற்கொலை செய்துக்கொள்பவர்களில் மிக அதிக அளவிலான விழுக்காடு இளம் வயதினராம். 

அதிலும் பெண்கள்தான் அதிக அளவில் இத்தகைய முடிவுகளுக்கு தள்ளப்படுகிறார்களாம். 

இத்தகையோர் ஏன் இந்த முடிவுக்கு வருகிறார்கள் அல்லது தள்ளப்படுகிறார்கள்?

இதற்கு பல காரணங்களை ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள்.

இவற்றுள் முதலாவதாக கருதப்படுவது மன அழுத்தம் (Depression).

இன்றைய அதிவேக உலகில் மன அழுத்தம் இல்லாதவர்கள் இருக்க முடியுமா என்ன?

மன அழுத்தம் யாருக்குத்தான் இல்லை!

முன்பெல்லாம் வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டும்தான் மன அழுத்தம் ஏற்படும் என்பார்கள். 

பொருளாதார பிரச்சினையில் குறிப்பாக மிக அதிக அளவிலான கடன் தொல்லை உள்ளவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதுண்டு. திருமண வாழ்க்கையில் பிரச்சினை. வேலையை இழந்துவிடுவதால் ஏற்படும் வேதனை, அவமானம். இவைகள்தான் ஒருவரின் மன அழுத்தத்திற்கு காரணமாக கூறப்பட்டு வந்தன. 

ஆனால் இந்த வட்டத்திற்குள் தற்கொலை விழுக்காடு மிக அதிக அளவில் உள்ளது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடும் 15வயதிலிருந்து 30 வயதுக்குள்ளவர்கள் வருவதில்லையே?

உண்மைதான். 

தற்கொலை என்கிற திரும்பி வர முடியாத எல்லைக்கு (point of no return) இட்டுச் செல்ல மிக முக்கியமான காரணமாக கூறப்பட்டு வரும் மன அழுத்தத்திற்கு இதுவரை மிக மிக அற்பமான காரணங்களாக (silly reasons) கருதப்பட்டு வரும் பல நிகழ்வுகள்தான் இன்றைய இளைஞர்களுடைய தற்கொலைக்கு பிரதான காரணமாக பட்டியலிடப்படுகின்றன. 

1. பள்ளி, கல்லூரிகளில் சக மாணவர்கள் முன்பு ஏற்படும் அவமானம்.
2. சக மாணவர்களால் ஏற்படும் அவமானங்கள் (ragging)
3. தேர்வுகளில் ஏற்படும் தோல்விகள்,
4. ஒருதலைக் காதலில் தோல்வி.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட ஒரு செவிலியர் பயிற்சிக் கல்லூரி மாணவி ஒருவர் சக மாணவிகளிடம் அனுபவித்த தொல்லைகளால் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்ட செய்தி வெளிவந்திருந்ததே. அதில் தன்னை குளிக்க விடாமல் சீனியர் மாணவிகள் சிலர் தடுத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதாக தன்னுடைய கடிதத்தில் எழுதியிருந்தாராம்!

இக்கால இளைஞர்களுக்கு எதனால் எல்லாம் மன உளைச்சல் ஏற்படுகிறது பாருங்கள்! 

நான் தஞ்சையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அங்கு இயங்கிக்கொண்டிருந்த தமிழ் பல்கலைக்கழகத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துக்கொண்டார்கள். அதற்கு அவர்கள் சமர்ப்பித்திருந்த ஆய்வுக்கட்டுரைகளில் ஒரு குறிப்பிட்ட பேராசிரியர் அற்பமான காரணங்களைக் காட்டி நிராகரித்து வந்ததுதான் முக்கிய காரணமாக கூறப்பட்டது! அதே போன்று நான் மும்பையில் பணியாற்றியபோது மும்பை பாபா அணு ஆராய்ச்சி கழகத்திலும் (Baba Atomic Reserce Centre- BARC) இத்தகைய தற்கொலைகள் சர்வ சாதாரணமாக நடப்பதை கேட்டிருக்கிறேன். பேராசிரியர்கள்-ஆராய்ச்சி மாணவர்களுக்கிடையிலுள்ள தலைமுறை இடைவெளிதான் (Generation Gap)இதற்கு முக்கிய காரணமாக அப்போது கூறப்பட்டது. அது இன்றும் விடை காண முடியாத பிரச்சினையாகத்தான் இருந்து வருகிறது என்கிறார்கள்.

இன்றைய தலைமுறையினரின் தற்கொலைக்கு மேற் கூறிய நான்கு காரணங்களுக்கு அடுத்ததாக கருதப்படுவது போதைப் பழக்கம். இந்த பழக்கத்திற்கு தங்களையும் அறியாமல் இழந்துவிடும் இளைஞர்கள் அதிலிருந்து மீள முடியாமல் இறுதியில் அதற்கு தற்கொலை ஒன்றுதான்  தீர்வு என்கிற முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். 

ஆக ஒருவருடைய தற்கொலைக்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுவது மன அழுத்தம்தான் என்பது தெளிவாகிறது. 

அதிலிருந்து விடுபட என்ன செய்யலாம்?

இதற்கு மன அழுத்தத்திற்கு உள்ளானவர் மட்டுமே முயற்சி செய்தால் போதாது. இதில் அவரைச் சுற்றியுள்ள குறிப்பாக அவருடைய நெருங்கிய குடும்பத்தினர், உறவினர்கள் அவர்களை விட மிக முக்கியமானவர்களாகக் கருதப்படும் நண்பர்கள் ஆகியோரின்  பங்கு மிக, மிக முக்கியமானது என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

ஆனால் இத்தகைய மன அழுத்தத்திற்கு தங்களுடைய குழந்தைகள் உள்ளாகியிருக்கிறார்கள் என்பதை பல பெற்றோர்கள் கடைசி நிமிடம் வரையிலும் அறிந்துக்கொள்வதே இல்லை. பலருக்கு அது பாதிக்கப்பட்டவர்களுடைய தற்கொலைக்குப் பிறகே தெரிய வருகிறது என்பதுதான் வேதனை. இதற்கு குறுகி வரும் குடும்பங்களே முக்கிய காரணம். கணவன், மனைவி ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் என சுருங்கிவிட்ட குடும்பங்களில் துயரங்களை பகிர்ந்துக்கொள்ள யாருக்கு  நேரம் இருக்கிறது? 'இவனுக்காகத்தானங்க நாங்க ரெண்டு பேரும் நாள் பூரா உழைக்கிறோம்? இதை ஏன் இவன் புரிஞ்சிக்காம போய்ட்டான்?' என்று அங்கலாய்க்கும் பெற்றோர்கள்தான் இப்போது அதிகம். பணம் மட்டுமே தங்களுடைய குழந்தைகளின் துயரங்களை போக்கிவிடும் என்று நம்பும் பெற்றோர் அது மட்டும் போதுமா என்று பெற்றோரின் அன்புக்காக, அவர்களுடைய வழிகாட்டுதல்களுக்காக ஏங்கும் குழந்தைகள்..... இது ஒரு தீர்வு காண முடியாத பிரச்சினையாக உருவெடுப்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்துக்கொண்டுள்ளோம்?

மன அழுத்தத்திற்கு உள்ளாகும் அனைவருமே தற்கொலைக்கு முயற்சி செய்வார்கள் என்பது பொருளல்ல. ஆனால் அது முளையிலேயே கண்டறியப்பட்டு கிள்ளியெறியப்படாவிட்டால் அது தற்கொலையில் சென்று முடியுமாம். 

எதற்கெடுத்தாலும் தற்கொலைக்கு துணிபவர்கள் அதிகமாகி வரும் இன்றைய சூழலில் இதுதான் காரணம் என்று கண்டுக்கொள்வது அத்தனை எளிதல்ல என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

ஆனால் நம்மில் பலரும் நமக்கு நெருங்கியவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளப் போகிறேன் என்று மிரட்டும்போது அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. 'இவர் எப்பவுமே இப்படித்தாங்க' என்று மனைவியே அலட்சியப்படுத்துவதை பார்க்கலாம். பெரும்பாலான சமயங்களில் புலி வருது, புலி வருது என்று கூறுவார்களே அத்தகைய மிரட்டலைப் போன்றதுதான் இதுவும் என்று பொருட்படுத்தாமல் இருந்துவிட்டு அதை நிஜமாகும்போதும் தங்களைத் தாங்களே குற்றவாளிகளாக கருதிக்கொள்வது சகஜமாகிவிட்டது. 

தற்கொலை செய்துக்கொள்பவர்கள் ஏதாவது ஒருவிதத்தில் தங்களுடைய எண்ணத்தை தனக்கு நெருங்கியவர்களிடம் கோடிட்டு காட்டாமல் இருக்க வாய்ப்பில்லை என்பதுதான் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் அவற்றை சரியாக நேரத்தில் இனம்கண்டுக்கொள்ளாமல் இருந்துவிடுகிறோம். குரைக்கிற நாய் கடிக்காது என்பார்கள். அதுபோல் தற்கொலை செய்துக்கொள்வேன் என்று அடிக்கடி கூறுபவர்கள் அதை செய்துக்கொள்ள மாட்டார்கள் என்ற ஒரு தவறான எண்ணமே பலருடைய தற்கொலைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. 

ஆகவே, விழிப்பாயிருப்போம். மன அழுத்தம் எந்த ரூபத்திலும் வெளிப்படலாம். அது நமக்கு நெருங்கியவர்களிடம் காணப்படும்போது அலட்சியப்படுத்தாமல் அவர்களுடைய குறைகளைக் கேட்போம். அவர்களுடைய மன அழுத்தத்தைப் போக்க நம்மால் ஆனவற்றை செய்வோம்.  

************



  

20 நவம்பர் 2013

அரசியல்வாதிகள் அனைவருமே முட்டாள்கள்தானா?

அடக்கமுடைமை

குறள் எண்: 127.  யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

குறள் எண்: 129.   தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்  ஆறாதே நாவினாற் சுட்ட வடு.

திருக்குறளில் அடக்கமுடமை என்ற அதிகாரத்தில் தரப்பட்டுள்ள பத்து குறட்பாக்களில் மேலே குறிப்பிட்ட இரு குறள்கள் நாவடக்கத்தைப் பற்றி பேசுகின்றன. இவ்விரு குறட்களின் பொருள் தெரியாதவர்களே இருக்க முடியாது. 

எண் சான் உடம்புக்கு தலையே பிரதானம் என்பார்கள். 

என்னைக் கேட்டால் அதிலுள்ள நாக்கு அதை விட பிரதானம் என்பேன்.

முன்பெல்லாம், ஏன், இப்போதும்தான், அரசியல் பிரமுகர்கள்தான் இந்த அடக்கத்தை காற்றில் பறக்க விட்டுவிட்டு சகட்டுமேனிக்கு பேசிவிட்டு செல்வார்கள். அதிலும் தேர்தல் நேரம் என்றால் கேட்கவே வேண்டாம். சொல்ல தகாததையெல்லாம் சொல்லிவிட்டு ஊடகங்கள் திரித்துவிட்டன என்று கூசாமல் பொய் சொல்வார்கள். 

இப்போது மெத்த படித்தவர்களும் இந்த பட்டியலில் இணைவதுதான் வேதனையளிக்கிறது.

கடந்த சில நாட்களாக வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று ஒரு சில வார்த்தைகளைக் கூறிவிட்டு வாங்கிக் கட்டிக்கொள்ளும் அறிவியல் விஞ்ஞானியும் பாரத ரத்னா விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான திரு. CNR RAOவைப் பற்றித்தான் கூறுகிறேன்.



இவரை நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதுக்கு தெரிவு செய்த அரசியல்வாதிகளையே 'முட்டாள்கள்' என்று வாய் தவறி - உண்மையில் நாக்குதான் தவறு செய்தது. ஆனால் சொல்வது வாய் தவறி விட்டது என்று!! - கூறிவிட்டு நான் சொல்ல வந்தது அது இல்லை என்கிறார். 'முட்டாள்தனம்' என்பதற்கும் 'முட்டாள்' என்பதற்கும் அப்படியென்ன பெரிய வித்தியாசம் என்று விளங்கவில்லை. முட்டாள்தான் முட்டாள்தனத்தை செய்ய முடியும்! அரசு அறிவியல் ஆய்வுகளுக்கு போதிய அளவு பண உதவி வழங்காதது முட்டாள்தனம் என்ற பொருள்பட நான் சொன்னதை ஊடகங்கள் திரித்து அரசியல்வாதிகள் அனைவரையும் நான் முட்டாள்கள் என்று கூறியதுபோல் வெளியிட்டுவிட்டன என்கிறார். 

அதுமட்டுமா? சீனர்களைப் போல் இந்தியர்கள் கடின உழைப்பாளிகள் இல்லையென்றும் திருவாய் மலர்ந்திருக்கிறார். 

இவர் யார் சீனரா? அல்லது இவர்களுடன் பணியாற்றும் அத்தனை விஞ்ஞானிகளும் சீனாவில் இருந்து வந்தவர்களா? 

இருமுறை செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை செலுத்த முயன்று தோல்வியடைந்தவர்கள்தானே சீனர்கள்? நம் இந்தியர்கள் அதில் வெற்றியடையும் நாள் வெகு தொலைவில் இல்லையே?

சீனர்கள் இந்தியர்களைக் காட்டிலும் தேசப் பற்று உள்ளவர்களாம்! இவர் எதை தேசப் பற்று என்கிறார் என்று விளங்கவில்லை. எந்த இந்திய பிரஜை தேசப்பற்று இல்லாமல் இருந்ததாக இவர் குறிப்பிடுகிறார்? அன்னிய நாட்டுக்கு சென்று பணியாற்றுபவர்களையா? சீனாவில் வாழும் சீனர்கள் இந்தியர்களைப் போல வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பாததற்கு மூல காரணம் இந்தியர்களைப் போன்று ஆங்கில அறிவு அவர்களுக்கு இல்லை என்பதுதான். உழைப்பு என்று எடுத்துக்கொண்டால் நாளொன்றுக்கு பதினைந்து மணி நேரம் தொடர்ச்சியாக இன்றும் பணியாற்றும் இந்திய இளைஞர்கள் இருப்பதால்தான் ஐ.டி துறையில் இவர்களால் உலகெங்கும் சென்று பிரகாசிக்க முடிகிறது. இதற்கு முந்தைய தலைமுறை இந்தியர்களை வேண்டுமானால் இந்த அளவுக்கு உழைக்காதவர்கள் சொல்லலாம். ஆனால் அதையும் பொதுவாக சொல்லிவிட முடியாது. அன்று தன்னலம் பாராமல், நேரம் பாராமல் உழைத்து தங்களுடைய குழந்தைகளை படிக்க வைத்ததால்தான் இன்றைய தலைமுறை இந்தியர்கள் படிப்பிலும், விஷய ஞானத்திலும் சிறந்து விளங்க முடிகிறது. ஆனாலும் இப்படி நம்மை நாமே தரம் தாழ்த்திக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. பாமரன் பேசினால் பொறுத்துக்கொள்ளலாம். இந்தியாவின் இரத்தினம் என்று கருதப்படுபவர் இப்படி பேசலாமா?

நாட்டின் மிக உயர்ந்த விருதுக்கு தகுதி பெற வெறும் படிப்பும், அறிவும் மட்டுமே போதாது. தன்னடக்கமும் மிகவும் அவசியம். தன்னடக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே நாவடக்கமும் இருக்கும். இது இரண்டும் இல்லாதவர்கள் வாழ்வில் எத்தகைய உயர்வை அடைந்தாலும் பிறருடைய பழிச்சொல்லுக்கு ஆளாவது நிச்சயம்: திரு CNR ராவைப் போல.

இந்த விஷயத்தில் இதே விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் டென்டுல்கர் பரவாயில்லை. கடந்த இருபத்தி நான்கு ஆண்டு கால பொது வாழ்வில் (No one can dispute that he is one of the most popular public figures in India) ஒரு முறை கூட தகாத பேச்சுக்காக பழித்துரைக்கப்பட்டதில்லை. வெறும் பள்ளி படிப்பை மட்டுமே கொண்டிருக்கும் ஒருவர், புகழின் உச்சிக்கே சென்ற ஒருவர், இந்த அளவுக்கு தன்னடக்கத்துடன் இருப்பது அபூர்வம்தான். அந்த வரிசையில் வரும் இன்னொரு விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த். 

இவ்விருவருடன் ஒப்பிடுகையில் மெத்த படித்த CNR சற்று தரம் இறங்கிவிட்டார் என்றே கூற வேண்டும். 

கடந்த திங்கள் கிழமை அன்று இரவு CNN-IBN தொலைக்காட்சியில் இதைப் பற்றி அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது அவர் முகத்தில் வழிந்த அசட்டுத்தனத்தை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. நாவடக்கமின்மை அவரை எந்த அளவுக்கு இறக்கிவிட்டது! 

சந்தனத்தைப் பூச வந்தவர்கள் முகத்தில் கரியை பூசி அனுப்பியதுபோல் இருந்தது!

***********



18 நவம்பர் 2013

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்ன சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது ஏன்?

தமிழக சட்டமன்றத்தை அவசர, அவசரமாக கூட்டி காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாக கலந்துக்கொள்வது என்று எடுத்த முடிவை எதிர்த்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிய தமிழக அரசு அது மக்களுக்கு முழுமையாக சென்றடைவதற்கு முன்னரே தஞ்சையில் எழுப்பப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றச் சுற்றுச் சுவரையும் அதனையொட்டி அமைக்கப்பட்டிருந்த பூங்காவையும் ப்ரொக்ளைன் இயந்திரம் கொண்டு இடித்து தரைமட்டமாக்கி அதிர்ச்சியை அளித்தது. 

இதை சற்றும் எதிர்பாராத எதிர்கட்சிகள் அனைத்தும் - காங்கிரசைத் தவிர - இது தமிழக முதல்வரின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது என்றன. பழ. நெடுமாறன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. 

இதற்கு அரசு சொல்லும் காரணம்: இடிக்கப்பட்ட பகுதிகள் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது. இவற்றை அகற்ற வேண்டுமென்று சம்மந்தப்பட்டவர்களுக்கு பலமுறை அறிவிக்கைகள் அனுப்பியும் அவர்கள் கண்டுக்கொள்ளாததால்தான் இதை இடிக்க வேண்டியதாயிற்று.

ஆனால் உண்மை காரணம் அதுவல்லவாம். இந்த நினைவுச் சின்னத்தை எழுப்பியவர்களுக்குப் பின்னால் இருந்த ஒருவர் முதலமைச்சரின் பரம வைரி என்பதுதானாம்! 

ஒரு நாளைக்கு முன்பு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிவிட்டு அடுத்த நாளே இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியில் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யபட்ட இலங்கை தமிழர்கள் நினைவாக தஞ்சையில் எழுப்பப்பட்ட ஒரு நினைவுச் சின்னத்தின்  சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய தமிழக அரசின் இந்த செய்கையால் ஆட்சியாளரிளின் உண்மை முகம் தெரிந்துவிட்டது என்றும் இதற்கு காரணமாக இருந்த ஆளும் கட்சிக்கு எதிர்வரும் தேர்தல்களில் தகுந்த பாடம் புகட்டுவோம் என்ற மதிமுக, பாமக போன்ற கட்சிகளின் வாதம் தமிழக மக்கள் முன் எடுபடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

முள்ளிவாய்க்கால் முற்றம் நினைவுச் சின்னம்




ஆனால் இப்படியொரு சின்னம் தமிழ்நாட்டில் திறக்கப்பட வேண்டிய அவசியமே இல்லை என்பதுதான் எங்களுடைய கட்சியின் முடிவு என்றார் காங்கிரஸ் மாநில தலைவர் ஞானதேசிகன்.

இப்படியொரு நினைவுச் சின்னம் தேவைதானா? முள்ளிவாய்க்காலில் அப்படியென்ன நடந்துவிட்டது?

சுருக்கமாக பார்க்கலாம். 

இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ போராளிகளுக்கும் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த நேரம். தங்கள் வசம் இருந்த பெரும்பாலான பகுதிகளை இழந்துவிட்டு பின்னோக்கி ஓடத்துவங்கியிருந்தனர் போராளிகள். இந்த சூழலில் வன்னி மாவட்டத்தை முற்றுகையிட்டு எப்போது தாக்குதலை துவங்கலாம் என்று காத்திருந்தது இலங்கை ராணுவம். 

ஒருபக்கம் போராளிகள், மறுபக்கம் இராணுவம். இவர்களுக்கு இடையில் சுமார் மூன்று இலட்சம் அப்பாவி மக்கள். போராளிகளிடமிருந்து தப்பித்து இலங்கை ராணுவத்திடம் சரணடந்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தவர்கள். 


முள்ளிவாய்க்கால் வன்னி மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமம். மலை, மகுடு என எவ்வித முரண்பாடுகளும் இல்லாத சமவெளிப் பிரதேசம். போர்க்காலங்களில் எதிரிகளின் தாக்குதலிலிருந்து பதுங்கி தப்பிக்க முடியாதபடி நிலம் வெட்டவெளியாக இருந்தது. தங்கள் உயிருக்கு பயந்து மக்கள் தஞ்சமடைந்திருந்த இந்த இடத்தை No Fire Zone ஆக அறிவிக்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தியது அகில உலக செஞ்சிலுவை சங்கம். 

அதுவரை நடந்த போரில் காயமுற்றிருந்த போராளிகள் மற்றும் இலங்கை இராணுவத்தினருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்டிருந்த தாற்காலிக மருத்துவமனையும் அங்குதான் இருந்தது. இவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த போரில் காயமுற்ற பல அப்பாவி மக்களும் இந்த மருத்துவமனையில்தான் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆகவேதான் செஞ்சிலுவை சங்கம் மட்டுமல்லாமல் ஐநா மனித உரிமைகள் குழுவின் தலைவரும் இந்த பகுதியை பாதுகாப்பு வளையமாக அறிவிக்க இலங்கை அரசை வலியுறுத்தினர். 

ஆனால் இலங்கை அரசு செவிமடுக்கவில்லை. அவர்களுக்கு இந்த சலுகையைப் பயன்படுத்தி கூட்டத்தோடு கூட்டமாக போராளிகள் அமைப்பைச் சார்ந்த தலைவர்களும் தப்பித்துக்கொள்வார்கள் என்ற அச்சம் இருந்தது. போராளிகளுக்கோ இந்த மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி இராணுவத்தினரிடமிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம். 

இருப்பினும் ஐநாவின் தொடர் வற்புறுத்தலுக்கு பணிந்து முள்ளிவாய்க்காலில் மருத்துவமனை அமைந்திருந்த பகுதியை No Fire Zoneஆக அறிவித்தது இலங்கை அரசு. இதற்கு தங்களுடைய தொடர் வற்புறுத்தலும் ஒரு காரணம் என்று மார்தட்டிக்கொண்டது இந்திய அரசு.

ஆனால் உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே என்பதுபோல் பாதுகாப்பு வளையம் என்று அறிவித்த அதே இடத்தை கண்மூடித்தனமாக ஆகாயம், தரை, கடல் என அனைத்து திசைகளிலிருந்தும் தாக்கியது இலங்கை இராணுவம். எவ்வித பாதுகாப்பும் இன்றி நிர்க்கதியாய் நின்ற அப்பாவி மக்களில் சுமார் எண்பதாயிரம் பலியாயினர். எண்ணற்றோர் இருந்த இடம் தெரியவில்லை....

இதற்கு தங்களுடைய உத்தரவை இராணுவம் மதிக்காததுதான் முக்கிய காரணம் என்று கூறி அப்போதைய இராணுவ தலைவர் பொன்சேகாவை போர்க்குற்றத்திற்கு ஆளாக்கி தப்பித்தது இலங்கை அரசு.

ஆனால் அதிக அளவிலான சிவிலியன் சாவுக்கு  அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்திய போராளிகள்தான் காரணம் என்றது இலங்கை இராணுவம். 

முள்ளிவாய்க்காலை ஒட்டியிருந்த கடற்பகுதியில் இவ்விருதரப்பினரிடமிருந்து தப்பி வரும் மக்களை  காப்பாற்றி அழைத்துச் செல்ல செஞ்சிலுவை அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க அமெரிக்க கப்பல் ஒன்று காத்திருந்தது எனவும் ஆனால் அதை நோக்கி சென்ற மக்களை ஒரு புறம் போராளிகளும் மறுபுறம் இராணுவமும் சுட்டதால்தான் இந்த அளவுக்கு மனித உயிர்கள் பலியாயின என்றன ஊடகங்கள்.

எது உண்மையோ, பொறியில் சிக்கிய எலிகளாய் அப்பாவி மக்கள் இவர்களுடைய ஈவு இருக்கமற்ற தாக்குதல்களுக்கு பலியானதென்னவோ உண்மை.

இந்திய சுதந்திர போராட்டத்தின்போது ஏற்பட்ட சிப்பாய் கலகத்தில் ஈடுபட்ட இந்திய சிப்பாய்கள் நாலாபுறம் சுற்றிவளைக்கப்பட்டு சுட்டுக்கொலை, ஜாலியன்வாலபாத்தில் குழுமியிருந்த கூட்டத்தை எவ்வித முன்னறிவுப்பும் இன்றி கொன்று குவிப்பு என்று இதுபோன்ற பல படுகொலைகளுக்கு காரணமாயிருந்த இங்கிலாந்தைச் சார்ந்த பிரதமர்தான் இன்று முள்ளிவாய்க்கால் கொலைக்கு பகிரங்க விசாரணை வேண்டும் என்று குரல் கொடுக்கிறார். இதை சுட்டிக்காட்டித்தானோ என்னவோ கண்ணாடி வீட்டிலிருந்துக்கொண்டு கல்லெறிகிறார் என்கிறார் ராஜபக்‌ஷே.

ஆனால் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு நடைபெற்ற மிகப் பெரிய மக்கள் படுகொலை நடந்ததாகக் கூறப்படும் இடம்தான் இந்த முள்ளிவாய்க்கால் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் இது அனைத்து உலக மக்களாலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

அத்தகைய தாக்குதலுக்குள்ளாகி பலியான அப்பாவி மக்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்ப நினைத்ததில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் இதை எழுப்பியவர்கள் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு முழுமையாக கட்டுப்பட்டு செயல்பட்டிருந்தால் இன்று அரசின் எதிர் நடவடிக்கைகளுக்கு ஆளாகாமல் இருந்திருக்கலாம்.  

**********





15 நவம்பர் 2013

காமன்வெல்த் கூட்டத்தில் இந்தியா பங்குபெறுவது சரிதானா?

இலங்கையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பிரதமர்  கலந்துக்கொள்ளாவிடினும் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையில் பங்குகொள்வதென என்ற முடிவு தமிழ்நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாநாட்டை அறவே புறக்கணிக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக தமிழகமெங்கும் நடைபெற்று வந்த போராட்டங்களும் மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் நோக்கத்துடன்  தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டி இந்திய அரசின் முடிவை எதிர்த்து சிறப்பு தீர்மானமும் விழலுக்கு இரைத்த நீராகிப் போயின. 

இந்த சூழலில் இந்தியா எடுத்த முடிவு சரியானதுதானா என்ற விவாதத்தில் இறங்கவே பலரும் தயங்குகின்றனர். எல்லா விஷயத்திலும் தயங்காமல் தங்களுடைய கருத்துக்களை எழுதிவந்த பல மூத்த பதிவர்களும் கூட பெரும்பாலோனோருடைய கருத்துக்களைச் சான்றே எழுதி தப்பித்துக்கொள்வதைக் காண முடிகிறது. 

ஆகவே இந்திய அரசின் இந்த முடிவு சரியானதுதானா என்பதை நடுநிலையான கண்ணோட்டத்துடன் அணுகினால் என்ன என்று பல நாட்களாகவே எண்ணியிருந்தேன். 

முதலில் காமன்வெல்த் அமைப்பு என்றால் என்ன, அதன் உறுப்பு நாடுகள் யார், யார் என்பதை சுருக்கமாக பார்ப்போம். 

ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்த 53 நாடுகள் தாமாக முன்வந்து அமைத்துக்கொண்டதே காமன்வெல்த் என்ற அமைப்பு. இதை வேடிக்கையாகவும் சிலர் வர்ணிப்பதுண்டு. 

அதாவது இந்த 53 நாடுகளின் ஒட்டுமொத்த சொத்தையும் (common-wealth) ஆங்கிலேயர்கள் சுருட்டிச் சென்று தங்களுடைய நாட்டை வளம்கொழித்த நாடாக்கியதை அவ்வப்போது - இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை - நினைவுப்படுத்திக்கொள்ளத்தான் இந்த நாட்டின் தலைவர்கள் இந்த 53 நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டின் தலைநகரில் கூடுகின்றனராம்! இந்த அமைப்பிலுள்ள நாடுகளில் மிகவும் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்ற அடிப்படையில் இந்த அமைப்பிலுள்ள நாடுகளில் மிக முக்கியமான நாடாக இந்தியா கருதப்பட்டுவருகிறது. 

ஆனால் துவக்கத்திலிருந்தே இந்த நாடுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒன்றுகூடி தங்களுடைய பழைய அடிமை வாழ்வை நினைவுபடுத்திக்கொள்வதைத் தவிர பெரிதாக எதையும் சாதித்துள்ளதாக பெருமையடித்துக்கொள்ள முடியாது.

அதுபோலவே இந்த அமைப்பிலுள்ள நாடுகள் - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் கனடாவைத் தவிர, பொருளாதாரத்திலோ அல்லது தொழில்துறையிலோ வளர்ந்த நாடுகள் என்றும் தங்களைக் கூறிக்கொள்ளவும் முடியாது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடாவும் கூட உலகிலுள்ள மற்ற வல்லரசுகள் எடுக்கும் முடிவுகளைச் சார்ந்துதான் தங்களுடைய முடிவுகளையும் அமைத்துக்கொள்கின்றனவே தவிர இதுவரை உலகில் நடந்த எந்தவொரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்விலும்  தனித்து முடிவெடுத்ததில்லை. 

ஆகவே இந்த அமைப்பு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் சம்பிரதாய மாநாட்டில் - உண்மையில் சொல்லப் போனால் இது ஒரு கூட்டம் (Meeting of Heads of Governments) மட்டுமே. மாநாடு என்று கூட அவர்களே கூறுவதில்லை -  கூட்டத்தின் முடிவில் உப்புசப்பில்லாத சில தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு கலைந்து செல்லும் கூட்டம் என்று கூட கூறலாம். 

இந்த அமைப்பின் கடைசி கூட்டம் 2011ல் ஆஸ்திரேலியாவிலுள்ள பெர்த் நகரத்தில் (Perth) நடந்தது.  ஆஸ்திரேலியா யுரேனியம் வழங்க மறுத்துவிட்டதை கண்டித்து அந்த கூட்டத்தில் நம்முடைய பாரதப் பிரதமர் கலந்துக்கொள்ளவில்லை. அப்போது (இப்போதும்தான்) குடியரசு துணைத்தலைவராக இருந்த ஹமீத் அன்சாரியின் தலைமையில் ஒரு அணி சென்றது. ஆனால் எதற்கு பிரதமர் அந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை என்பதை தெளிவாக கூறாமல் அவருக்கு உள்நாட்டில் நிறைய அலுவல்கள் இருந்தன என்று பூசி மெழுகினார்கள். கூட்டத்தின் இறுதியில் இந்திய பிரதமர் கூட்டத்தில் கலந்துக்கொள்ளாததற்கும் ஆஸ்திரேலியா யுரேனியன் வழங்க மறுத்ததற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது ஆஸ்திரேலியா!!

அந்த கூட்டத்தில் என்ன அப்படி பெரிதாக சாதித்தார்கள் என்றால் ஒன்றும் இல்லையென்றுதான் பதில் வரும். அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட எந்தவொரு தீர்மானத்திற்கும் அங்கத்தினர்களின் ஒட்டுமொத்த ஆதரவு கிடைக்கவில்லை. அப்போதும் ஒருசில நாடுகளால் (கனடா என்று அர்த்தம் கொள்க) கொண்டுவரப்பட்ட மனித உரிமை மீறல் சம்மந்தப்பட்ட தீர்மானத்தை எதிர்த்த நாடுகளில் இந்தியாவும் இலங்கையும் இருந்தன. அந்த கூட்டத்திலேயே இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் 'இந்த அமைப்பு நாளுக்கு நாள் எதற்கும் பலனற்ற அமைப்பாக மாறி வருகிறது. இதற்கு அங்கத்தினர்களுக்கிடையில் ஒற்றுமை இல்லாததும் ஒரு முக்கிய காரணம் என்றாலும் பல அங்கத்தினர்கள் எவ்வித ஈடுபாடும் காட்டாததும் ஒரு காரணம்.' என்று எடுத்துரைத்தார். அவரைத் தொடர்ந்து மலேசியாவும் உறுப்பு நாடுகளின் அக்கறையின்மையை (indifference) எடுத்துக்காட்டி இந்த கூட்டத்தில் முன்மொழியப்படும்  தீர்மானங்கள் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப்படாதது இந்த அமைப்பின் செயலற்றத்தன்மையையே இது காட்டுகிறது.' என்று குறைகூறியது. 

அந்த கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே பேசுவதற்கு அழைக்கப்பட்டபோது கனடா பிரதமர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார். மேலும் காமன்வெல்த் கூட்டமைப்பின் அடுத்த கூட்டம் (அதாவது 2013ல்) இலங்கை தலைநகரில் நடத்தப்படுவதாக முடிவானால் அதை கனடா புறக்கணிக்கும் என்று அப்போதே அவர் அறிவித்தார். ஆனால் அவருடைய முடிவை கூட்டத்தில் பங்குகொண்ட எந்த உறுப்பு நாடும் கண்டுக்கொள்ளவில்லை, இந்தியாவையும் சேர்த்து.

இந்த அமைப்பின் முக்கியத்துவம் இவ்வளவுதான். 

இலங்கையில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் இந்தியா கலந்துக்கொள்வதால் அந்த நாட்டின் அதிபருடைய செயல்களுக்கு அங்கீகாரம் அளித்துவிடுவதுபோலாகிவிடும் என்கிற வாதத்தில் எல்லாம் எவ்வித பொருளும் இல்லை. அதுபோலவே அந்த கூட்டத்தில் பங்குபெறும் நாடுகள் எல்லாம் இலங்கையில் மனித உரிமை மீறல்களை அங்கீகரிக்கின்றன என்பதும் பொருள் இல்லை. இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சம்பிரதாய கூட்டம் அவ்வளவுதான். எப்போதும்போலவே மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சில நாடுகள் - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா - தீர்மானங்களை முன்மொழியும். அதை பல நாடுகள் கண்டுக்கொள்ளவும் போவதில்லை, இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஒன்றும் சொல்லாமல் மவுனம் காக்கும், இலங்கையை ஜால்ரா அடிக்கும் நாடுகள் - பாக்கிஸ்தான், பங்களாதேஷ் - அதை எதிர்க்கும்.... இந்த அமைப்பில் மிக அதிக அளவிலான அங்கத்தினர்கள் ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்துதான் வருகின்றனர். அவர்களுக்கு மனித உரிமை மீறல் என்பதன் அர்த்தமே புரிய வாய்ப்பில்லை. ஆகவேதான் அவர்கள் கண்டத்தைச் சார்ந்த, நோபல் பரிசு பெற்ற, பாதிரியார் டெஸ்மன்ட் டூட்டு இந்த கூட்டத்தை புறக்கணியுங்கள் என்று கூறியதை அவர்களில் எவரும் பொருட்படுத்தவே இல்லை.

இந்த வருடமும் இந்த கூட்டத்தின் இறுதியில் எந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தமுடிவும் எடுக்காமல் கூட்டம் முடிவு பெறும். இதுதான் உண்மையில் நடக்கப் போகிறது. இந்த மனித உரிமை மீறல் தீர்மானம் கடந்த மூன்று கூட்டங்களிலும் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படாமலே போனது என்பதும்  இதை ஒவ்வொரு முறையும் எதிர்த்து நின்ற நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

இந்த அமைப்பு நடத்திய முந்தைய சில கூட்டங்களில் ஏதாவது ஒரு காரணத்திற்காக பாரதப் பிரதமர் கலந்துக்கொள்ளாமல் இருந்திருக்கிறார் என்பதால் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் கூட்டத்திலும் அவர் கலந்துக்கொள்ளப் போவதில்லை என்பது அவ்வளவு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவு இல்லை என்பதும் உண்மை. 

மேலும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளாததற்கு உண்மையான காரணத்தையும் பிரதமர் ராஜபக்‌ஷேவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடவில்லை போலிருக்கிறது. இதற்கு முந்தைய கூட்டத்தில் கலந்துக்கொள்ளாதபோது என்ன காரணங்களை சுட்டிக்காட்டி ஆஸ்திரேலிய பிரதமருக்கு எழுதினாரோ அந்த கடிதத்தை நகல் எடுத்து அனுப்பப்பட்டதுபோல்தான் உள்ளது ராஜபக்‌ஷேவுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதமும்!   

இந்த கூட்டத்தில் உள்நாட்டில் உள்ள இத்தனை எதிர்ப்புகளையும் மீறி இந்தியா எதற்காக கலந்துகொள்வது என்று முடிவெடுத்தது என்ற கேள்வி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் கேட்கப்பட்டபோது அவர் அளித்த பதிலின் சாராம்சம் இதுதான்.

1. இலங்கை நம்முடைய அண்டை நாடுகளில் மிகவும் முக்கியமான நாடு. நம்முடைய மற்ற அண்டை நாடுகளுடன் நாம் எவ்வாறு சுமுக உறவு வைத்துக்கொள்ள முயல்கிறோமோ அதே போன்ற உறைவை இலங்கையுடனும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் நம்முடைய விருப்பம்.

2.சமீபத்தில் நடந்து முடிந்த போரில் வீடுகளையும் உரிமைகளையும் இழந்து தவிக்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு மறுவாழ்வு அமைத்துக் கொடுக்க இதுவரை இந்தியா எடுத்துள்ள முயற்சிகள் உண்மையில் பலனளிக்க வேண்டுமென்றால் அந்த முயற்சிகளில் இந்தியா தொடர்ந்து ஈடுபட வேண்டும். அதற்கு இலங்கையுடன் சுமுகமான உறவு இருக்க வேண்டியது அவசியம்.

3.நம்முடைய தொடர் முயற்சியால் மட்டுமே இலங்கை வட மாகாண தேர்தலை நடத்த சம்மதித்தது. இத்தகைய முயற்சிகளை இனியும் தொடரவும் இலங்கையுடன் சுமூக உறவு வைத்திருப்பது அவசியமாகிறது.   

4. இலங்கை மீதான போர்க்குற்றங்களைப் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் சூழலில் அதில் பங்குகொண்டு நம்முடைய கருத்துக்க்ளையும் எடுத்து வைக்கக்கூடிய வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கக் கூடும்.

5.இந்திய மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதுபோன்ற இரு நாடுகளுக்கிடையிலான சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு காணவும் இலங்கையுடனான சுமூக உறவு தொடர வேண்டும்.

வெளியுறவு அமைச்சரின் விளக்கங்கள் எந்த வகையில் நியாயமாக தென்படுகிறது என்பது அவரவர் கண்ணோட்டத்தைப் பொருத்தது. 

இந்த விஷயத்தை நடுநிலையான கண்ணோட்டத்துடன் அணுகுபவர்களுக்கு வெளியுறவு அமைச்சர் கூறியதிலுள்ள நியாயங்களை கண்டுக்கொள்ள முடியும். 

ராஜபக்‌ஷே அரசு இலங்கையில் நடத்தியது அட்டூழியம்தான், போர்க்குற்றங்கள்தான். இல்லையென்று மறுப்பதற்கில்லை. ஆனால் அவற்றை அமெரிக்கா போன்ற நாடுகளாலேயே தடுத்து நிறுத்த முடியாமல்போனது. ராஜபக்‌ஷே அரசை எதிர்த்து ஐநா சபையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை காமன்வெல்த் அமைப்பில் இல்லாத நாடுகள் பலவும் இணைந்து தொடர்ச்சியாக பல மாற்றங்களைக் கொண்டு வந்து அந்த தீர்மானத்தை நீர்த்துப் போக செய்துவிட்டன. 

இத்தகைய நாடுகள் பெரும்பாலானவைகளில் இத்தகைய படுகொலைகள், போர்க்குற்றங்கள் நடந்திருப்பதுதான் இதற்குக் காரணம். ஆகவே இது முழுக்க, முழுக்க இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று பூசிமெழுகிவிட்டனர். 

இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலுள்ள காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாம் நபரின் தலையீட்டை இந்தியா எப்படி விரும்பவில்லையோ அதுபோலவே எங்களுடைய நாட்டில் நடைபெறும் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகள் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்று இலங்கை அரசு பலமுறை பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆகவே இந்த விவகாரத்தில் இந்தியோ போன்ற நாடுகள் ஓரளவுக்குத்தான் தலையிட்டு சுமூக தீர்வு காண முடியுமே தவிர காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்தோ அல்லது ஐநா சபையிலிருந்தோ தள்ளிவைத்து இலங்கையை அடிபணிய வைத்துவிட முடியாது என்பதை அனைவரும் புரிந்துக்கொள்வது நல்லது.

இலங்கையை எதிரி நாடாக பாவித்து சாதிப்பதை விட ஒரு நட்பு நாடாக விருப்பம் இல்லாவிட்டாலும் அங்கு இன்றும் வாழும் தமிழர்களுடைய நலனுக்காக சகித்துக்கொண்டு செல்வது காலத்தின் கட்டாயம். 

ராஜபக்‌ஷேவோ அல்லது அவருடைய சர்வாதிகார குடும்பமோ என்றென்றைக்கும் இலங்கைய ஆளப் போவதில்லை.  இனிவரும் காலங்களில் இலங்கையில் ஆட்சி பொறுப்பை ஏற்கும் தலைவர்களுடைய கண்ணோட்டம் மாறலாம். 

காலங்கள் மாறும், காட்சிகள் மாறும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.


*************  




07 அக்டோபர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 39

'பின்னே? இப்பத்தைக்கி அந்த கேஸ்லதான சார் நம்ம கான்ஸ்டிரேஷன்லாம்....?' என்றார் பிபி சற்று எரிச்சலுடன். 'நாளைக்கி சார்ஜ் ஷீட் ஃபைல் பண்ண கையோட மஜிஸ்டிரேட் கிட்ட செஷன்ஸ் கோர்ட்டுக்கு கமிட் பண்ண சொல்லிறணும்னு மாதவன் கிட்ட ஏற்கனவே சொல்லியாச்சு.... செஷன்ஸ் கோர்ட்ல வந்துட்டா அப்புறம் அது நம்ம கேஸ்... ஒரே வாரத்துலயே காஸ் லிஸ்ட்ல (cause list) வந்துறும்.... அதுக்கு நா கியாரன்டி... அப்புறம் நம்ம சைடுலருந்து வாய்தா வாங்கற பேச்சுக்கே இடமில்ல.... கோர்ட் பண்ற adjournmentsல்லாத்தையும் சேத்தா கூட எப்படியும் ஆறு மாசத்துக்குள்ள முடிச்சி கன்விக்‌ஷன் வாங்கி அந்த கேடிய உள்ள தள்ளிட்டுத்தான் மறுவேலைன்னு இருக்கேன்.... நீங்க என்னடான்னா எந்த கேஸ்ங்கற மாதிரி கேள்வி கேக்கறீங்க? ஒங்க எஸ்.ஐதான் இப்படின்னு நினைச்சா எவ்வளவு சீனியர் நீங்க... நீங்களே இப்படி கேட்டா எப்படி சார்?'

எரிச்சலுடன் பி.பி பொறிந்து தள்ள நெற்றியில் கைவைத்தவாறு கேட்டுக்கொண்டிருந்த ஆய்வாளர் பெருமாள் டைனிங் ரூமிலிருந்து தன்னையே கேலி புன்னையுடன் பார்த்தவாறு அமர்ந்திருந்த தன் மனைவியை பார்த்து முறைத்தார்.. நீ உன் வேலையை பாரு என்பதுபோல்...

'சாரி... கோச்சிக்காதீங்க சார்....'

'பரவால்லை சொல்லுங்க.... பேசினீங்களா?

'ஆமா சார்... அந்த பார்க்கிங் பையன ஸ்டேஷனுக்கே கூப்ட்டு வார்ன் பண்ணி அனுப்பியிருக்கேன்... பயத்துல அழறான் சார்.. எப்படி சார் ஜட்ஜ் முன்னால பொய் சொல்றதுன்னுட்டு.... நா சொன்னா மாதிரி சொல்லலன்னாத்தான்டா ஒனக்கு பிரச்சினைன்னு மிரட்டியிருக்கேன்... பய சொல்லிறுவான்.... ஆனா...'

'என்ன சார் ஆனான்னு இழுக்கறீங்க?'

'இல்ல சார். அந்த லேடிதான் பிரச்சினையாருக்கும்போல.... அந்த லேடி ஒத்துக்கிட்டா மாதிரிதான் இருந்துது.... அந்தம்மாவோட ஹஸ்பென்ட் கொஞ்சம் பெரிய எடம்... ரிட்டையர் ஆய்ட்டாலும் இன்னும் இன்ஃப்ளூயன்ஸான ஆள் மாதிரி தெரியுது.... இந்த மாதிரியெல்லாம் தேவையில்லாம தொந்தரவு செஞ்சீங்கன்னா அப்புறம் நா கமிஷனர் லெவல்ல மூவ் பண்ண வேண்டி வரும்னார்....'

'அத கேட்டுக்கிட்டு நீங்க வந்துட்டீங்களா சார்?' என்று எரிச்சலுடன் இடைமறித்தார் வேணு...

'இல்ல சார்..... நா விடாம, வேணும்னா போய்க்குங்க சார்னு ஒரு போடு போட்டேன்.... மனுசன் வாய மூடிக்கிட்டார்...'

'அப்போ பிரச்சினை வராது!'

'ஆமா சார்... அப்படியே வந்தாலும் பாத்துக்கலாம் சார்.. .குறைக்கிற நாயி கடிக்காது... அந்தாளுக்கு உண்மையிலயே கமிஷனர தெரிஞ்சிருந்தாலும் அவருக்கு இவர தெரிஞ்சிருக்கணுமே, என்ன சொல்றீங்க?' என்று பெருமாள் சிரிக்க எதிர்முனையில் அவர் காது கிழிந்துவிடும் அளவுக்கு வேணு சிரித்தார். 'சரி சார்.... வேற ஒன்னும் இல்லையே?'

'இல்ல சார்... நாளைக்கி காலையில நானே கோர்ட்டுக்கு போயி சார்ஜ் ஷீட் ஃபைல் பண்ணிறலாம்னு இருக்கேன்... தன்ராஜ சட்டை பண்ண போறதில்லை.... என்ன சொல்றீங்க?'

'அதுவும் சரிதான்... அந்தாள கொஞ்ச நாளைக்கி டீல்ல வுடுங்க... என்ன பண்றார்னு பாக்கலாம். வச்சிடறேன்...'

பெருமாள் இணைப்பைத் துண்டித்துவிட்டு தன்னையே பார்த்துக்கொண்டிருந்த மனைவியை பொருட்படுத்தாமல் செல்ஃபோனை அணைத்து சோபாவில் வீசிவிட்டு படுக்கையறைக்குள் நுழைந்தார்.

*****

அடுத்த நாள் சென்னை பெருநகர் நடுவர் நீதிமன்றத்தில் காவல்துறை சார்பாக சென்னை மைலாப்பூர் E1 காவல் நிலைய ஆய்வாளர் பெருமாள் மாதவி கொலைவழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட கோபாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தார். அதனையடுத்து எதிர்தரப்பு வழக்கறிஞருக்கு நோட்டீஸ் அனுப்ப நடுவர் உத்தரவிட்டார். ஆனால் அப்போது நீதிமன்றத்தில் இருந்த ராஜசேகர் தாம் ஏற்கனவே நீதிமன்றத்தில் இருப்பதால் நீதிமன்ற அறிவிக்கை தமக்கு தேவையில்லை என்றும் காவல்துறை தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிக்கை மற்றும் அதனுடன் தாக்கல் செய்யப்பட்டிருந்த அனைத்து ஆவணங்களின் நகல்களையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று தயாராக வைத்திருந்த மனுவை சமர்ப்பிக்க நடுவர் அதை ஏற்றுக்கொண்டு வழங்க உத்தரவிட்டார். 

நடுவருடைய சுமூக மனநிலையை உணர்ந்த ராஜசேகர் தான் தயாரித்து வைத்திருந்த மற்றொரு மனுவான மாதவி குடியிருந்த வீட்டை தங்கள் வசம் ஒப்படைக்கும் மனுவையும் சமர்ப்பித்தான். 

அதை வாங்கி வாசித்த நடுவர், 'என்ன சார் சொல்றீங்க?' என்பதுபோல் அரசு வழக்கறிஞர் மாதவனைப் பார்க்க அவர் திரும்பி தன் அருகில் அமர்ந்திருந்த ஆய்வாளர் பெருமாளைப் பார்த்தார். அவர் ஆட்சேபனை இல்லை எனபதுபோல் தலையை அசைக்க, 'we have no objection my lord' என்றார் மாதவன்.

'அப்போ சரி....order is passed as prayed.' என்று உத்தரவிட்ட நடுவர். 'I am committing this case to trial court. Adjourned.' என்று வழக்கை விசாரணை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.

'என்னைக்கி விசாரணைக்கு வரும்னு ட்ரையல் கோர்ட் காஸ் லிஸ்ட்ட பாத்துக்குங்க சார்.' என்றான் பாஸ்கர் ராஜசேகரிடம். 'நீங்க கேட்ட காப்பீஸ இன்னைக்கி சாயந்தரம் இல்லன்னா நாளைக்கி பகலுக்குள்ள குடுத்துடறேன்.'

ராஜசேகர், 'சரி பாஸ்கர்.. நாளைக்கி வசந்த் வருவார். அவர்கிட்ட குடுத்துருங்க.... எனக்கு இன்னும் ரெண்டு கேஸ் இருக்கு.' என்றவாறு அவனுடைய மற்ற வழக்குகள் நடைபிறவிருந்த நீதிமன்ற அறையை நோக்கி விரைந்தான். 

******

அடுத்த நாள் மாலை வழக்கு சம்மந்தப்பட்ட அனைத்து ஆவணங்களின் நகல்களுடன் வசந்த் ராஜசேகருடைய அலுவலகத்திற்கு சென்றான்.

'என்னடா எல்லாத்தையும் வாங்கிட்டியா?' என்றவாறு அவனை வரவேற்ற ராஜசேகர் தன் குமாஸ்தா நாகு இன்னும் தன் இருக்கையில் அமர்ந்திருந்ததை கவனித்தான். 'என்ன நாகு, கிளம்பல?'

'தோ கிளம்பிட்டேன் சார்...' 

'நாளைக்கி நமக்கு கேஸ் எதுவும் இருக்கா, டைரிய பாத்தியா?'

'இல்ல சார்..... இனி வெள்ளிக் கிழமைதான்...'

'ஓ! சரி.. நீ கிளம்பு.... வெள்ளிக்கிழமை காலைல வந்தா போறும்.'

இதை எதிர்பார்க்காத நாகு வாயெல்லாம் பல்லாக, 'அப்படியா சார், தாங்ஸ் சார்...' என்றவாறு உடனே தன் பையை எடுத்துக்கொண்டு கிளம்பினான். இதற்கு மேலும் அங்கு இருந்தால் எங்கே ராஜசேகர் மனதை மாற்றிக்கொள்வானோ என்ற பயம். 

அவன் செல்லும் வரை காத்திருந்த ராஜசேகர், 'வசந்த் நீ அந்த கதவை சாத்தி தாள் போட்டுட்டு வா.... இல்லன்னா அவன் மறுபடியும் வந்தாலும் வந்துருவான்.....'

வச்ந்த் சிரித்தவாறே எழுந்து சென்று கதவைச் சாத்தி தாளிட்டுவிட்டு வந்து அமர்ந்து மேசை மீது வைக்கப்பட்டிருந்த கணத்த உறையை திறந்து குற்றப்பத்திரிக்கையை முதலில் எடுத்து ராஜசேகரிடம் அளித்தான்.

குற்றப்பத்திரிக்கையை மேலோட்டமாக வாசித்த ராஜசேகரின் முகம் சட்டென்று மாறுவதை கவனித்த வசந்த், 'என்ன பாஸ் பேயறைஞ்சா மாதிரி ஆய்ட்டீங்க?' என்றான் சிரிப்புடன்.

ராஜசேகர் எரிச்சலுடன் அவனைப் பார்த்தான். 'டேய்... என்ன நக்கலா?'

'சாரி பாஸ்.... ஒங்க முகம் போன போக்க பாத்துட்டு..... சாரி...'

'சரி பரவால்லை..... ஆனா இத பாத்ததும் கொஞ்சம் ஷாக்காத்தான்டா இருக்கு....'

'அப்படி என்ன பாஸ் இருக்கு? படிங்களேன் நானும் கேக்கேன்...'

'முழுசையும் படிச்சா நேரம்தான் வேஸ்டாவும்.... படிச்சத சுருக்கமா சொல்றேன்.....'

'சரி, சொல்லுங்க...' என்ற வசந்த் தன் குறிப்பேட்டை திறந்தான்.

'டேய்... இப்ப நோட்ஸ் எதுவும் எடுக்காத... நாளைக்கி காப்பி போட்டு குடுக்கறேன்.... இப்ப நா சொல்றத மட்டும் கேளு...'

'ஓக்கே பாஸ்.'

'நாம  எதிர்பார்த்தது மாதிரியே IPC Sec.300ல ஃபர்ஸ்ட் சார்ஜ்.'

'சரி'

'ரெண்டாவது இதுவரைக்கும் நமக்கு தெரியாதது. Sec.375 - Rape - இத நா எதிர்பார்க்கல...' என்றான் ராஜசேகர். 

இதை உண்மையிலேயே அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. இது நிச்சயம் கற்பழிப்பாக இருக்க வாய்ப்பில்லை. பிரேதப் பரிசோதனை அறிக்கையை புரட்டி பார்த்தான். அதில் மருத்துவர் கோபாலுக்கு DNA TEST எடுத்து பார்த்தால்தான் அவர் இதற்கு பொறுப்பா இல்லையா என்று தெரியும் என்று குறிப்பிட்டிருந்ததைப் பார்த்தான். ஆனால் ராஜசேகருக்கு இதற்கு கோபால்தான் காரணம் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்கவில்லை. ஆனால் அதே சமயம் தனக்கென்று ஒதுக்கப்பட்ட செவ்வாய் அன்று தன்னை வேண்டுமென்றே வராதே என்று சொல்லிவிட்டு இன்னொருவருடன் மாதவி சல்லாபத்தில் ஈடுபட்டிருந்தாள் என்ற நினைப்பு அவனை கொதிப்படையச் செய்தது. ஆனால் தன் மனதில் எழுந்த இந்த எண்ணத்தை எதிரில் அமர்ந்திருக்கும் வசந்த் தெரிந்துக்கொள்ளக் கூடாது என்ற நினைப்புடன் மிகவும் சிரமப்பட்டு தன் உணர்வுகள் முகத்தில் தெரியாவண்ணம் அடக்கிக்கொண்டான்.

'என்ன பாஸ் Rape சார்ஜ பாத்ததும் சைலன்டாய்ட்டீங்க?'

'ஆமாடா... இந்த சார்ஜ் கொஞ்சம் ஷாக்கிங்காத்தான் இருக்கு.... இத நா எதிர்பார்க்கலை... ஆனா இத நமக்கு சாதகமாவும் யூஸ் பண்ணிக்கலாம். என்ன சொல்றே?'

சில விநாடிகள் ராஜசேகர் சொன்னதை மனதுக்குள் அசைபோட்டான் வசந்த். 'அதாவது இது அவங்களுக்குள்ள எந்த சண்டையோ சச்சரவோ இல்லேங்கறத காமிக்கிறதா ஆர்க்யூ பண்லாம்னு சொல்றீங்க. அப்படித்தானெ பாஸ்?'

'கரெக்ட்....இத ப்ராசிக்யூஷன் வேணும்னா ரேப்னு சொல்லலாம். ஆனா கோபால் இதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவார்னு தெரியல... இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லேன்னு சொல்லிட்டார்னா அவரில்லாம ஒரு தேர்ட் பார்ட்டி அந்த வீட்டுக்குள்ள போயிருந்தார்கறத ப்ரூஃப் பண்றது நமக்கு ஈசியாயிரும்....'

'கரெக்ட் பாஸ்.... ஆனா கோபால் DNAவுக்கு ஒத்துக்குவாரா?'

'சந்தேகம்தான்.... ஆனா இந்த சார்ஜ அவர் படிக்கறப்ப அவரோட ஃபேஷியல் ரியாக்‌ஷன க்ளோஸா பாக்கணும்.... அவர் முகம் போற போக்குலருந்தே இதுக்கும் அவருக்கும் சம்மந்தம் இருக்கான்னு தெரிஞ்சிக்கலாம்... என்ன சொல்றே?'

வசந்த் சிரித்தான். 'ஆமா பாஸ்... unless he is trained actor..'

ராஜசேகரும் அவனுடைய சிரிப்பில் இணைந்துக்கொண்டான். 'எனக்கும் அந்த லேடிக்கும் ஹவுஸ் ஓனர்-டெனன்ட்ங்கற உறவ தவிர வேறு எதுவும் இல்லேன்னு எங்கிட்ட அடிச்சி சொன்னவராச்சே.... அதான் யோசிக்கிறேன்.'

'அட நீங்க ஒன்னு பாஸ்... அவர் அடிச்ச எத்தனையோ டூப்புல இதுவும் ஒன்னாருக்கும்...'

ராஜசேகர் மீண்டும் புன்னகையுடன் வசந்தை பார்த்தான். 'இருந்தாலும் இருக்கும். ஆனா பொய் சொல்றார்னு அவர் முகத்த பாத்தா தெரியவே தெரியலைடா... அவ்வளவு நேச்சுரலா சொல்றார்...' 

ஏன் நீ மட்டும் என்னவாம் என்று இடித்துரைத்தது அவனுடைய உள்மனசு...!

தொடரும்..




06 ஆகஸ்ட் 2013

வறுமைக் கோடு என்னும் மாயை!

இப்பல்லாம் இதப் பத்தி பேசினாலே கம்ப எடுத்துக்கிட்டு அடிக்க வர்றவங்கதான் அதிகம்.

சமீபத்துல ஒரு மூன்றெழுத்து மூத்த பதிவர் - இவர் வயசுல இளையவர்தான்னாலும் ரொம்ப நாளாவே பதிவுலகுல இருக்கிறவர்ங்கறதால மூத்தவர்னு சொன்னேன் - இதப்பத்தி எழுதி காது குடுத்து கேக்க முடியாத வார்த்தைகள கருத்துரை மூலமா வாங்கிக் கட்டிக்கிட்டார். இத்தனைக்கிம் இவர் கவர்ன்மென்ட் சொன்னத பத்தி எதுவுமே எழுதலைங்க. தனக்கு ஒரு நாளைக்கி சாப்பாட்டுக்கு என்ன செலவாகுதுன்னுதான் சொன்னார்.

இவர நக்கல் பண்ணி இன்னொரு மூன்றெழுத்து மூத்த பதிவர் - இவரோட வயச பத்தி எனக்கு தெரியாதுங்க. ஆனா இவரோட எழுத்த படிச்சீங்கன்னா இவருக்கு ரத்தம் ரொம்ப சூடாருக்கறத புரிஞ்சிக்க முடியும். அதனால இவர் வயசுல மூத்தவரா இருக்க சான்ஸ் இல்லை - ஒரு பதிவு எழுதுனார். இதுலயும் மொதல்ல பதிவு எழுதுனவரப் பத்திய விமர்சனம்தான் ஜாஸ்தி இருந்துச்சி.

ஆனா இந்த ரெண்டு பேர் எழுதுனதப் பத்தியோ இல்ல இதப் பத்தி அல்பத்தனமா அறிக்கைகளை விட்ட சில அரசியல்வாதிகளைப் பத்தியோ நாம பேசப் போறதில்லை.

உண்மையிலேயே வறுமைக்கோடுங்கறது என்ன, எதுக்கு, ஏன் இந்த கோட்ட போடறாங்கங்கறத ஒரு ஆக்கபூர்வமா - குத்தம் சொல்றது எப்பவுமே ரொம்பவே ஈசிங்க. அதுக்குன்னு தனியா எந்த ஆராய்ச்சியும் செய்ய வேணாம். சகட்டுமேனிக்கி எழுதிட்டு போயிறலாம். சேத்த வாறி இறைக்கிறது ஈசிதானே. அத கழுவி சுத்தம் பண்றதுதான் கஷ்டம் - பாத்தா என்னன்னு எனக்கு ரொம்ப நாளாவே ஒரு யோசனை. ஆனா இதப்பத்தி நாலாப்பக்கமும் இருந்து வந்த இரைச்சல் எல்லாம் அடங்கட்டும்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்.

சரி இப்ப விஷயத்துக்குள்ள போலாம் வாங்க.

வறுமைக் கோடுன்னா என்னங்க?

இது என்ன பெரிய லக்‌ஷமண் ரேகையா இதுக்கு இவ்வளவு முக்கியத்துவம் குடுக்கறதுக்கு? நிச்சயமா இல்லைங்க. இந்த கோடு ஒரு அடையாளம் மட்டுமே. இதுக்குக் கீழ இருக்கறவங்கள பரம ஏழைங்கன்னு சொல்லலாம், அவ்வளவுதான்.  உதாரணத்துக்கு சொல்லணும்னா இருக்க வீடு இல்லாம, மூனு வேளையும் சுமாராக் கூட சாப்பிட முடியாம, தங்களோட குழந்தைகள பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப முடியாம அன்னாடம் பொழப்புக்கே திண்டாட்டம் போடறவங்கன்னு சொல்லலாம்.

இதுதான் வறுமைக்கோடு, இதுக்குக் மேலை இருக்கறவங்க எல்லாம் ஏழைகள் இல்லேன்னு சொல்லிற முடியாது. உதாரணத்துக்கு இருக்க வீடுன்னு ஒன்னு இருக்குது. ஆனா மழை வந்துதுன்னா வீட்டுக்குள்ள இருக்கறதுக்கு வெளியிலயே இருக்கலாம்கறா மாதிரியான ஒரு வீடு, ஒரு வேளையாச்சும் வயிறார சாப்பிட முடியற அளவுக்கு வருமானம், பசங்கள கவர்ன்மென்ட் ஸ்கூலுக்கு அனுப்பி படிக்க வைக்க முடியும்... ஆனா ஒடம்புக்கு பெரிசா ஏதாச்சும் வந்திருச்சின்னா மருத்துவம் பாக்க வசதியிருக்காது, பசங்கள ஒரு லிமிட்டுக்கு மேல படிக்க வைக்க முடியாது... இப்படி சொல்லிக்கிட்டே போவலாம்.

இவங்களுக்கும் மேல இருக்கறவங்கள நடுத்தரவாசிகள்னு சொல்றாங்க. இப்போ இந்தியாவுல இருக்கறவங்கள்ல இந்த வகுப்ப சேர்ந்தவங்கதான் ஜாஸ்தியாம். சொந்தமா இல்லன்னாலும் வாடகைக்கு - வசதியா இல்லன்னாலும் தேவைக்கு -  ஒரு வீடு, அந்த வீட்டுல டிவி, ஃபிர்ட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற வசதிகள், மூனு வேளையும் பகட்டா இல்லன்னாலும் வயிறு நிறையறா மாதிரி சாப்பாடு, ஸ்கூல், காலேஜ் வரைக்கும் பசங்கள படிக்க வைக்க முடியற வசதி, வெளிய போய், வர்றதுக்கு ரெண்டு சக்கர வாகனம் - அது சைக்கிளோ இல்ல ஸ்கூட்டரோ, மோட்டார்சைக்கிளோ எதுவானாலும் - மாசத்துல ஒருநாள் ஜாலியா சினிமா செலவுகளை செய்ய முடியற சவுகரியம், பசங்களுக்கு உடம்பு சரியில்லன்னா தனியார் மருத்துவமனைகள்ல மருத்துவம் பாத்துக்க முடியற வசதி, தீபாவளி, பொங்கல் பிரமாதமா இல்லன்னாலும் ஓரளவுக்கு சந்தோஷமா கொண்டாடக் கூடிய வசதி.... இந்த பிரிவுல வர்றவங்க மொத்த ஜனத்தொகையில சுமார் நாற்பது பர்சென்டாம்.

இதுக்கு மேலருக்கறவங்களப் பத்தி சொல்லவே வேணாம். ஏன்னா நம்ம நாட்டுல இந்த பிரிவுல வர்றவங்க 10%க்கும் கம்மியாம்!

எப்படி இந்த கோட்ட போடறாங்கன்னு பாக்கறதுக்கு முன்னால எதுக்கு இந்த கோடுன்னு பாத்துரலாம்.

மத்தியில இருக்கற அரசாங்கமும் சரி, மாநிலங்கள்ல இருக்கற அரசாங்கமும் சரி - அது எந்த கட்சிங்கறது முக்கியமே இல்லைங்க. ஏன்னா இத வரையறுக்கறது அரசாங்க நியமிக்கிற அதிகாரிங்க, பொருளாதாரத்துல டாக்டர் பட்டம் வாங்கினவங்கள மெம்பர்ஸா கொண்ட ஒரு குழுதான் - தங்களோட மக்கள் நல திட்டங்கள் யாருக்கு ஜாஸ்தி போயி சேரணும்கறத தீர்மானிக்கிறதுக்குத்தான் இந்த கோட ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்தையும் ஃபைனலைஸ் பண்றதுக்கு முன்னால போட்டு பாக்கறாங்க.

இப்ப இந்த கோட்ட எப்படி டிரா (Draw) பண்றாங்கன்னு பாக்கலாம்.

இந்தியாவுல என்ன செய்யிறாங்கன்னு சொல்றதுக்கு முன்னால உலகளவுல இருக்கற உலக வங்கி அவங்களோட கணிப்புல என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம்.

உலகளவுல அமெரிக்க பணமான டாலர வச்சித்தான் இந்த கோட்ட போடறாங்க. அதாவது ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கி அமெரிக்க பணத்துல 1.25 டாலர் அளவுக்கு வாங்கும் சக்தி இல்லாதவங்கள பரம ஏழைங்க அதாவது வறுமைக் கோட்டுக்கு கீழ இருக்கறவங்கன்னு சொல்லுது. இதுல முக்கியமா பாக்க வேண்டியது Purchasing power parityங்கற (தனிநபருடைய வாங்கும் திறன் விகிதம்னு சொல்லலாம்) விஷயம். அதாவது உலக பொது அளவி நாணயம்னு சொல்லப்படற அமெரிக்க டாலர் ஒன்னுக்கு அமெரிக்காவுல என்ன வாங்க முடியும்கறத கணக்கு போட்டு அதே பணத்துக்கு ஒவ்வொரு நாட்டுலயும் என்னத்த வாங்க முடியும்னு கணக்கு போடுவாங்க. இத மாத்தி சொல்லணும்னா - உதாரணத்துக்கு நம்ம நாட்டு பணத்த எடுத்துக்குவோம் - நம்ம நாட்டு ஒரு ரூபாவுக்கு அமெரிக்காவுல என்ன கிடைக்கும்னு பாக்கறதுதான் இந்த purchasing power parity (PPP). அஞ்சி வருசதுக்கு முன்னால உள்ள விலைவாசி கணக்குல பாத்தா அமெரிக்காவுல நம்ம ஒரு ரூவாவ பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டான். ஏன்னா கடைசியா எடுத்த கணக்கு பிரகாரம் நம்ம நாட்டு ஒரு ரூவா அமெரிக்க பணத்தோட வாங்கற சக்தியில மைனஸ் அறுபத்திரண்டு பர்சன்டாம்!! ஆனா இன்னைக்கி இந்த இரண்டு நாட்டுக்கும் நடுவுல நடக்கற பிசினஸ்ல மாத்திக்கிற பண மாற்று விகிதப்படி (Exchange rate) ஒரு அமெரிக்க பணத்துக்கு சுமார் அறுபது இந்திய ரூபாவ குடுக்கணும். இதுக்கும் நாம கொஞ்ச நேரத்துக்கு முன்னால பாத்த PPPக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. ஆனாலும் உலக வங்கி சொன்ன அமெரிக்க பணம் 1.25க்கு நிகரான இந்திய பணம் எவ்வளவுன்னு பாத்தா சுமார் ரு.75/- அதாவது ஒரு நபர், ஒரு நாளைக்கி ரூ.75/- கூட செலவு பண்ண முடியலன்னா அவர் பரம ஏழை - அதாவது வறுமைக்கோட்டுக்கு கீழ இருக்கறவர்னு அர்த்தம்!

ஆனா சமீபத்துல செஞ்ச PPP எஸ்டிமேட் என்ன சொல்லுதுன்னு பாத்தா அமெரிக்க-இந்திய பணத்தை ஒப்பிட்டுப்பாக்கறப்போ இந்திய பணம் அமெரிக்க பணத்தை விட இரு மடங்கு குறைவானதாம்! அதாவது ஒரு அமெரிக்க பணத்துல அமெரிக்காவுல என்ன வாங்க முடியுமோ அதவிட ரெண்டு மடங்கு இங்க வாங்க முடியுமாம். இதுல இன்னொரு சூட்சுமத்தையும் உலக வங்கி சொல்லுது. ஒரு பொருளை தயாரிக்கறதுக்கு அமெரிக்காவுல ஆகற செலவுல பாதிதான் இந்தியாவுல ஆகும்கறதையும் கவனிக்கணுமாம். அதே மாதிரிதான் விவசாயத்துலயும். உதாரணத்துக்கு இங்க ஒரு கிலோ சன்ன ரக பொன்னி அரிசி சந்தையில ரூ.65/-க்கு வாங்க முடிஞ்சா அதே அரிசி அமெரிக்காவுல வாங்கணும்னா ரூ.130/- குடுக்கணுமாம். ஏன்னா அங்க அத பயிர் செஞ்சி, மில்லுல அரைச்சி, பேக் பண்ணி, மாலுங்களுக்கு (Mall) கொண்டு போயி சேக்கற செலவையெல்லாம் சேக்கறதால இந்த அடிஷனல் விலையாம்!

இந்த கணக்குப் பிறகாரம் பாத்தா உலக வங்கி சொல்ற அமெரிக்க பணம் 1.25ல பாதி அளவு அதாவது 0.65 டாலர் வாங்கும் திறன் இருந்தாலே ஒருத்தர் வறுமைக்கோட்டுக்கு மேல வந்துருவாராம்! ஓங்கி ஒரு அறை அறைஞ்சா என்னான்னு தோனுமே? நல்லவேளை, இத நா சொல்லலை. உலகவங்கி சொல்லுது. இது நமக்கு மட்டுமில்லீங்க, ஆப்பிரிக்கா, பஞ்சத்துக்கு பேர்போன சோமாலியா மாதிரியான நாட்டுல இருக்கறவங்களையும் இதே மாதிரியான வாங்கும் திறன் விகிதத்த (PPP) வச்சித்தான் கால்குலேட் பண்றாங்க.

அப்படிப்பார்த்தா அமெரிக்க பணம் 0.65 = ரூ.40/-னு வச்சிக்கலாம். அதாவது இந்தியாவுல இருக்கற ஒருத்தருக்கு தினசரி நாப்பது ரூபா செலவு பண்ண வசதி இருந்தா அவர் பரம ஏழையாக கருதப்பட மாட்டார். இது வருமானம் இல்லைங்கறத மனசுல வச்சிக்குங்க. அவருக்கு தினசரி நாற்பது ரூபா கணக்குல மாசத்துக்கு 1200 ரூபா செலவு பண்ண முடியற அளவுக்கு வருமானம் இருக்கணும். அவர் குடும்பத்துல அவரோட அஞ்சி பேர் இருந்தா 6000 ரூபா மாச செலவு செய்ய முடியணும். இப்ப சொல்லுங்க இந்த அளவுக்குள்ள செலவு செய்ய நம்ம நாட்டுல எத்தன குடும்பத்துக்கு முடியும்? அது முடியாதவங்க மட்டுந்தான் பரம ஏழைங்க, அதாவது அரசாங்கம் சொல்ற வறுமைக் கோட்டுக்கு கீழ இருக்கறவங்களாம்.

உலகவங்கி அப்பப்போ அறிவிக்கிற இந்த விகித அடிப்படையிலதான் நம்ம நாட்டுல மட்டுமில்லாம உலகத்துலருக்கற எல்லா நாட்டுலயும் செய்யிறாங்க. ஆனா, அத அப்படியே காப்பியடிச்சி செய்யிறதில்லேங்கறதும் உண்மைதான். சாதாரணமா முன்னேறிய நாடுங்கன்னு சொல்றாங்களே அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், இத்தாலி மாதிரி நாடுங்கள்ல உலகவங்கி சொல்றத விட கொஞ்சம் ஜாஸ்தியாவே வச்சி (higher level) வறுமைக்கோட்ட ஃபிக்ஸ் பண்ணுவாங்க. ஆனா இந்தியா மாதிரி வளர்ந்துவரும் நாடுகள்ல பல காரணங்களுக்காக (இதுல அரசியலும் ஒன்னுதான். மறுக்க முடியாது) உலகவங்கி சொல்றத விட இன்னும் கொஞ்சம் குறைச்சி (lower level) ஃபிக்ஸ் பண்றாங்கன்னும் ஒரு ஆய்வு (study) சொல்லுது. இது நிசம்தாங்கறா மாதிரிதான் இருந்துது இந்த வருசம் நம்ம திட்டக் குழு தீர்மானிச்சி அடிவாங்குன எஸ்டிமேட்டும். எல்லா பக்கத்துலருந்து கிடைச்ச அடிக்கப்புறம் மறுபடியும் ஏதாச்சும் செஞ்சி ஜனங்கள திருப்திப் படுத்தலாமான்னு பாக்கறாங்க.

சரி, இந்த கோட்ட நாங்களா போடலைன்னும் இதுக்குன்னு நாங்க அமைச்ச ஒரு எக்ஸ்பேர்ட் குழுதான் இத தீர்மானிச்சி சொல்லிச்சின்னும் நாங்க சும்மா அத ரிப்போர்ட்தான் பண்ணோம்னும் சமீபத்துல ஜகா வாங்குனார் நம்ம திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் அலுவாலியா. இவரப் பத்தி நிறைய அக்கப்போர் இருக்குது. இவரோட வீட்டுலருக்கற அஞ்சாறு கக்கூஸ - நாகரீகமா சொன்னா கழிவறை - இடிச்சி மாத்தி கட்டுறதுக்கே முப்பத்தஞ்சி லட்சம் செலவு பண்ணாராம்! இப்படிப்பட்டவர் மாசம் ஆறாயிரம் ரூபாவுக்குள்ள அஞ்சி பேர் இருக்கற குடும்பம் நடத்த முடிஞ்சா அவர் பரம ஏழை இல்லேன்னு சொன்னா கோவம் வருமா வராதா? என்னதான் எக்ஸ்பர்ட் குழு சொன்னாலும் இவர் எப்படி அத ஏத்துக்கலாம்னு கேக்கறாங்க ஜனங்க. நியாயம்தானே?

இந்த எக்ஸ்பர்ட் குழு எப்படி இந்த செலவு லிமிட்ட  (expenditure limit) கண்டுபுடிச்சாங்க?

சுதந்திரத்துக்கப்புறம் இந்த வறுமைக் கோட்ட கால்குலேட் பண்றதுக்கு ரெண்டு மூனு குழு அமைச்சிருக்காங்க. அதுல ஒரு குழு ஒவ்வொருத்தருக்கும் தினசரி எத்தன கலோரி உணவு தேவைப்படும்னு கால்குலேட் பண்ணி அப்புறம் அதுக்கு எவ்வளவு செலவாவும்னு ஒர்க் அவுட் பண்ணி அத்தோட மாசா மாசம் குடுக்க வேண்டிய வாடகை, கரன்ட், மருத்துவ செலவுன்னு ரொம்பவும் தேவைப்படற செலவையும் சேர்த்து அத முப்பதால வகுத்து ஒரு ஆளுக்கு ஒரு நாளுக்கு இவ்வளவு வருமானம் (செலவு இல்ல!) வேணும்னு தீர்மானிச்சாங்க. அது சரிவரலை.

அதுக்கப்புறம் வந்த குழு விலைவாசி பட்டியல் (price index) அடிப்படையில கிராமத்துல வசிக்கறவங்களையும் நகரத்துல வசிக்கறவங்களையும் தனித்தனியா எஸ்டிமேட் பண்ணலாம்னு ஒரு ஐடியா குடுத்தாங்க. அதுவும் சரிவரலை.

அதுக்கப்புறம் கடைசியா ஒரு குழு அமைச்சாங்க. அதான் காலம் சென்ற பேராசிரியர் சுரேஷ் டென்டுல்கர் - இவர் ஒரு பொருளாதார மேதை. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் - தலைமையில ஒரு குழு அமைச்சி இந்த கோட்ட மறுபடியும் கொஞ்சம் சைன்ட்டிஃபிக்கா எல்லாருக்கும் புரியறா மாதிரி போடுங்கன்னு சொன்னாங்க.

அவங்க அதுக்கு முன்னால சொன்ன வருமானத்த பாக்காம ஒவ்வொரு குடும்பத்தையும் சில தகுதிகள் (Economic Status) வேணும்னு தீர்மானிச்சி அதன் அடிப்படையில அந்த தகுதிய maintain பண்றதுக்கு ஒருத்தருக்கு ஒரு நாளைக்கு அவரோட அத்தியாவசிய தேவைகளை (இத முக்கியமா புரிஞ்சிக்கணும். அத்தியாவசியம்னா அன்னாடம் உயிர்வாழ என்ன தேவையோ அத மட்டும் பாத்துக்கற அளவுக்கு) நிறைவேத்திக்கறதுக்கு எவ்வளவு செலவு செய்யணும்னு பாக்கலாம்னு டிசைட் பண்ணி அதுக்கு எந்தெந்த செலவையெல்லாம் சேத்துக்கணும்னு ஒரு லிஸ்டே போட்டாங்க.

அதுல பதிமூனு ஐட்டம் இருந்துது.

1.நிலம்,
2.வீடு,
3.உடை,
4.உணவு,
5.சுகாதாரம்,
6.வீட்டு உபயோகத்திற்கு தேவையான சாமான்கள் (இதுல டிவி, ஃபிரிட்ஜ் மாதிரியான ஆடம்பர சாமான்கள் சேத்துறக்கூடாதுங்க!)
7.கல்வி
8.வேலை
9.வருமானம்
10.குழந்தைகள்,
11.கடன் சுமை
12.குடிபெயர்ந்ததற்கான காரணம் (கிராமத்திலிருந்து நகரத்திற்கு குடிபெயர்ந்திருந்தால் அதற்கு என்ன அடிப்படைக் காரணம்?)

இந்த ஒவ்வொரு பிரிவுக்கும் 0லருந்து 4க்குள்ள மார்க் (Mark- மதிப்பெண்கள்) குடுக்கணும்னு டிசைட் பண்ணி சர்வே நடத்தச் சொல்லி ரெக்கமென்ட் பண்ணாங்க.

இதுல ஒரு cut-off mark நிர்ணயம் செஞ்சி இதுக்கு  கீழ மார்க் வாங்குனவங்கள வறுமைக்கோட்டுக்கு கீழ உள்ளவங்கன்னு தீர்மானிக்கலாம்னு ஐடியா!

உதாரணத்துக்கு சொந்த நிலமே இல்லன்னா முதல் பிரிவுல அவருக்கு பூஜ்யம் மதிப்பு கிடைக்கும். நிலம் சொந்தம் ஆனா அது பூர்வீகமா வந்துதுன்னா அதுக்கு 1, தானா சம்பாசிதிச்சதுதான் ஆனா அதுல கொஞ்சம் கடன் இருக்குன்னு சொன்னா அதுக்கு 2 அல்லது 3 கிடைக்கு சுயசம்பாத்தியத்திலிருந்து வாங்கிய வில்லங்கம் ஏதும் இல்லாத நிலம்னா அவருக்கு முழுசா 4 மார்க் கிடைக்கும்.

ரெண்டாவது ஐட்டத்துலருக்கற வீடு: சுய சம்பாத்தியத்துல வாங்குன சொந்த வீடுன்னா அதுக்கு 4 மார்க். சொந்த வீடு ஆனா கடன் நிறைய இருக்குன்னா அதுக்கு 3, பூர்வீக வீடுன்னா அதுக்கு 2. சொந்த வீடுதான் ஆனா அது குடிசைன்னா அதுக்கு 1 சொந்த வீடே இல்லைன்னா அதுக்கு 0.

இப்படி ஒவ்வொரு பிரிவுலயும் மார்க் போட்டு எல்லாத்தையும் சேர்த்து பாக்கறப்போ திட்டக்குழு ஏற்கனவே டிசைட் பண்ணி வச்சிருக்கற cut-offக்குள்ள இருக்கறவங்கள வறுமைக்கோட்டுக்கு கீழ இருக்கறவங்கன்னு ஃபிக்ஸ் பண்ணாங்க.

இத ரெக்கமென்ட் பண்ண டென்டுல்கர் கமிட்டியே இதுல இருக்கற லிமிட்டேஷன்ஸ (limitations) சொல்லாம இல்ல. இது ஒரு முழுமையான அளவுகோல்னுல்லாம் சொல்லிக்கல. இதுக்கு முன்னால இருந்த குழுக்கள் சொன்னதையும் நாங்க சொன்னதையும் சேத்து ஒருத்தருக்கு எவ்வளவு தேவைங்கறத அரசு தீர்மானிச்சிக்கலாம்னும் சொன்னாங்க. ஏன்னா ஒரு மனுஷனோட அடிப்படை தேவை இதுதான்னு சொல்ல முடியாது. அத்தோட இதுல திடீர்னு ஏற்படற மருத்துவ செலவு, வீட்டுல ஏற்படக் கூடிய சுப மற்றும் துர்பாக்கிய நிகழ்வுகளால ஏற்படக் கூடிய செலவுகள், சமுதாய, சாதி அடிப்படையில் தேவைப்படுகிற செலவுகள்னு நிறைய விட்டுப்போயிருக்குன்னு சொல்லிட்டு நாங்க சொன்னத அடிப்படையா வச்சிக்கிட்டு அரசு எந்த தொகையையும் தீர்மானிச்சிக்கலாம்னுதான் சொல்லியிருக்காங்க.

ஆனா சமீபத்துல நடந்தது என்னன்னா கமிட்டி என்ன சொல்லிச்சோ அதை வச்சே ஒரு தொகைய கால்குலேட் பண்ணி அதுல எந்த மாத்ததையும் அரசு செய்யாம வெளியில விட்டுட்டு ஜனங்கக்கிட்டருந்து அடி கிடைச்சதும் இப்போ இத நாங்க சொல்லல எக்ஸ்பேர்ட் குழுதான் சொல்லிச்சின்னு சமாளிக்கப் பாக்கறாங்க. ஆனா இந்த முட்டாத்தனம் இப்ப மட்டுமில்லீங்க ஏறக்குறைய சுதந்திரம் வாங்குனதுலருந்தே செஞ்சிக்கிட்டுத்தான் இருக்காங்க. இப்பருக்கற ஆட்சிக்கு முன்னால பிஜேபி, என்டிஏ வும் கூட பிளானிங் கமிட்டி சொன்னதையே வேதவாக்கா எடுத்துக்கிட்டுத்தான் தங்களோட நல திட்டங்கள்லாம் யாருக்கு போய் சேரணும்னு டிசைட் பண்ணாங்க.

ஆனா எந்த தடவையும் இல்லாம இந்த அளவுக்கு இது கிண்டலுக்கு ஆளானதுக்கு மெயின் காரணம் ஆளுங்கட்சி ஆளுங்க சில பேர் அடிச்ச முட்டாத்தனமான ஜோக்ஸ்தான். அப்புறம் இருக்கவே இருக்கு எத வேணும்னாலும் பரபரப்பாக்கி (sensationalise) காசு பண்லாம்னு பாக்கற மீடியா. நாம ஆட்சியிலருக்கறப்போ என்ன பண்ணோம்கறதையே மறந்துபோன எதிர்க்கட்சிகள்....இவங்கல்லாம் சேர்ந்து செஞ்ச ஒரே நல்ல காரியம் இந்த கோமாளித்தனமான கோட்ட நாட்டு ஜனங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுனதுதான்.

இதுலருந்து உருப்படியா ஏதாச்சும் நடந்தா சரி. ஆனா ஒன்னு... இப்ப சொன்ன லிமிட்டுலருந்து ஒரு அஞ்சோ பத்தோதான் கூட்டி சொல்வாங்களே தவிர நாம நினைக்கறாமாதிரி ரூ.40ங்கறத ரூ.100ன்னு மாத்திரமாட்டாங்க. அந்த கணக்குல அஞ்சி பேர் இருக்கற குடும்பத்துக்கு மாச செலவுக்கு ரூ.15,000/- வேணுமே? அப்படிப் பாத்தா நாட்டுலருக்கற மொத்த ஜனங்கள்ல பாதிக்கும் மேல பரம ஏழையாயிருவாங்களே?

இந்த சூட்சுமத்த புரிஞ்சிக்காம இதப்பத்தி கமென்ட் அடிச்ச நிறைய பேர் அவங்களோட பொருளாதார நிலையில வச்சி இந்த தொகை ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு போறுமான்னு கணக்கு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அது சரியில்லை. தங்கறதுக்கு வீடு வாசல் இல்லாதவங்க, முழுசா மூனு வேளை சாப்பிட வசதியில்லாதவங்க, எங்க போனாலும் கால்நடையாவே போய்ட்டு வர்றவங்க, பசங்கள கார்ப்பரேஷன் ஸ்கூலுக்குக் கூட அனுப்ப வசதியில்லாதவங்க.... இவங்களுக்கு ஒரு நாளை ஒரு ஆளுக்கு எவ்வளவு தேவைன்னு அவங்க லெவல்லருந்து பாக்கணும். அதுக்கு அவங்கள கேட்டாத்தான் தெரியும். உங்களுக்கும் எனக்கும் என்ன தெரியும்?

*********

30 ஜூலை 2013

கிரிமினல் அரசியல்வாதிகள்!

பணமும் பலாத்காரமும் தேர்தல்களில் மட்டும் வெற்றிபெற உதவுவதில்லை. அரசியலை பணம் பண்ணும் தொழிலாகவும் மாற்ற உதவுகிறது.

உச்ச நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு கிரிமினல் குற்றங்களில் சிறை சென்றவர்கள் நாட்டில் நடைபெறவிருக்கும் எந்த தேர்தல்களிலும் போட்டியிடும் தகுதியை இழந்துவிடுவார்கள் என்று தீர்ப்பளித்தது நினைவிருக்கலாம்.

நாட்டை ஆளும் நம் தலைவர்கள் எந்த அளவுக்கு செல்வந்தர்களாக,  கிரிமினல்களாக உள்ளனர் என்பதை சமீபத்தில் வெளியாகியுள்ள கணிப்பு ஒன்று மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த ஆய்வின்படி கடந்த பத்து ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களுடைய தேர்தல் மனுக்களுடன் சமர்ப்பித்த சொத்து விவரங்களின்படி அவர்களுள் 62,847  பேருடையை சராசரி சொத்து மதிப்பு சுமார் 1.37 கோடி!

ஆனால் அவர்களுள் ஏற்கனவே தேர்தல்களில் வெற்றி பெற்றவர்களுடைய சராசரி சொத்து மதிப்பு ரூ.3.83 கோடி!

இன்னும் ஒரு சுவாரஸ்யமான தகவல்: இவர்களுள் ஆள் கடத்தல், கொலை, கற்பழிப்பு போன்ற கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்களுடைய சொத்து மதிப்பு சராசரியாக ரூ.4.38 கோடி!

அரசியல் மற்றும் க்ரிமினல் குற்றங்கள் மூலம் கோடிகளை சம்பாதிக்கும்  இத்தகைய வேட்பாளர்கள் மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பை பெறுவதிலும் முன்னிலை வகிக்கின்றனர் என்பதும் உண்மை.

சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போட்ட தமிழ் திரைப்படம் ஒன்றில் நேர்மையுடன் செயல்படும் அமைச்சரைவிட தன் தந்தையிடமே கடத்தல் நாடகம் ஆடி பணத்தை கொள்ளையடிக்கும் அவருடைய மகனுக்கு கட்சித் தலைவரும் முதல்வருமானவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதுபோன்ற ஒரு காட்சி வைக்கபட்டிருந்தது.

நிஜ வாழ்க்கையிலும் அதுதான் நடக்கிறது என்கிறது இந்த ஆய்வு. நேர்மையாளர்கள் என்று பெயரெடுத்த வேட்பாளர்களை விட கிரிமினல்கள் என்ற குற்றத்தை சுமந்துக்கொண்டிருப்பவர்களுக்குத்தான் தேர்தலில் போட்டியிட மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்கப்படுகிறதாம்!

2004ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட 62,847 வேட்பாளர்களில் 11,063 வேட்பாளர்கள் (18%) ஏற்கனவே கிரிமினல் வழக்குகளில் சம்மந்தப்பட்டிருந்தவர்கள். இவர்களுள் 5,253 வேட்பாளர்கள் (8%) கொலை, கொள்ளை போன்ற பயங்கர வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என்கிறது இந்த ஆய்வு.

அதுமட்டுமல்ல. இவர்களுள் 4182 வேட்பாளர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றங்களை ஆய்வு செய்தபோது இவர்களுள் 1072 வேட்பாளர்கள் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டபோதே அவர்கள் மீதான வழக்குகள் நிலுவையில் இருந்தன என்றும் இவர்களுள் 788 பேர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டபோதும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர்களுடைய முழு குற்றப் பின்னணியும் தெரிந்திருந்தும் இவர்களுக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட அவர்கள் சார்ந்திருந்த கட்சிகளால் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதும் தெளிவாகிறது.

மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர்களுடைய சொத்து மதிப்பு முன்பிருந்ததை விட பலமடங்கு அதிகரித்துள்ளதாம்!

மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்ட 4181 வேட்பாளர்களில் 3173 வேட்பாளர்களுடைய சொத்து மதிப்பு சராசரியாக 2.34 கோடி உயர்ந்துள்ளதாம். அதில் கிரிமினல் குற்றச்சாட்டுகளை சுமந்துக்கொண்டிருப்பவர்களுடைய சொத்து மதிப்பு இரண்டு மடங்கும் 684 பேர்களுடைய சொத்து மதிப்பு ஐந்து மடங்கும் 317 பேர்களுடைய சொத்து மதிப்பு சுமார் பத்து மடங்கும் அதிகரித்துள்ளதாம்! (ஆச்சரியக் குறி போட்டு போட்டு கை அலுத்துருச்சிங்க.... ஆய்வு முடிவுகள் அனைத்துமே ஆச்சரியம் மட்டுமல்லாமல் அதிர்ச்சியும் அளிக்கின்றன என்றால் மிகையாகாது)

இத்தகையோரை மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதித்த கட்சிகள் எவை என்று தெரிய வேண்டுமா?

இதோ பட்டியல்:

சிவசேனா: 2004லிருந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களுள் 75% பேர் க்ரிமினல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.

RJD: 46%

JD: 44%

BJP: 31%

Cong: 22%

அங்கிங்கெனாதபடி அனைத்துக் கட்சிகளிலும் நிறைந்திருக்கும் கிரிமினல்களுக்கு எதிராக வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வரை இவர்களை சட்டம் ஒன்றும் செய்துவிட முடியாது என்பதுதான் நிதர்சனம்.

வேட்பாளர்கள் தங்களுடைய தேர்தல் மனுக்களுடன் சொத்து பட்டியலை மட்டுமல்லாமல் தங்களுக்கு எதிராக நிரூபணமான மற்றும் நிலுவையிலுள்ள கிரிமினல் வழக்குகளைப் பற்றிய பட்டியலையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தால் சட்டம் அவர்களை தண்டிக்காவிட்டாலும் மக்கள் அவர்களை இணம் கண்டுக்கொண்டு அவர்களுக்கு வாக்களிக்காமல் நிராகரிக்க முடியும்.

செய்யுமா தேர்தல் ஆணையம்?




18 ஜூலை 2013

இளவரசனின் மரணம் தற்கொலைதானாம்!

 "எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் பரத்வாஜ், மில்லோடாமின், சுதீர்குமார் குப்தா உள்ளிட்டோர் கடந்த சனிக்கிழமை தருமபுரியில் மறு பிரேத பரிசோதனை மேற்கொண்டு அதன் அறிக்கையை திங்கள்கிழமை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையில், இளவரசன் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார் என்றும், அவரை யாரும் தாக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன."

இது இன்றைய தினசரிகளில் வெளியாகியுள்ள செய்தி.

அப்படியானால் முதல் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் அதன் பிறகு பிரேதத்தை மீண்டும் ஆய்வு செய்த இரு மருத்துவர்கள் அளித்த அறிக்கைகளிலும் இதைத்தான் தெரிவித்திருந்தனரா?

அந்த இரு மருத்துவர்களும் வெவ்வேறு விதமான அறிக்கைகளை சமர்ப்பித்ததால்தானே தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களை மீண்டும் ஆய்வு செய்ய அழைத்தனர்? அப்படியானால் அந்த இரு மருத்துவர்கள் சமர்ப்பித்த அறிக்கைககளில் காணப்பட்ட முரண்பாடுகள் என்னென்ன? ஒருவர் தற்கொலை என்றும் மற்றொருவர் ரயில் விபத்து என்றும் அறிவித்திருந்தனரா?

அதுதான் உண்மை என்றால் தற்கொலை என்று ஏன் ஒருவர் மட்டும் அறிவித்திருக்க வேண்டும்?

சரி, ரயில் விபத்துதான் காரணம் என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறியிருந்தால் அந்த அறிக்கையின் முழுவிவரத்தையும் பத்திரிக்கைகள் வாயிலாக வெளியிட வேண்டாமா?. அப்போதுதானே இந்த விவகாரத்தில் உள்ள சர்ச்சை தீரும்?

இல்லையென்றால் திருமா முன்பே கூறியுள்ளதுபோன்று இது சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் இருக்க செய்யப்பட்ட நாடகம் என்பது உண்மை என்றாகிவிடக் கூடும்.

:இப்போது, இளவரசனின் இறப்பிலும் பா.ம.க.விற்கு எதிராக சிலர் அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இளவரசனின் இறப்பால் வேதனையடைந்தோம். தனது சாவிற்கு யாரும் காரணமில்லை என்று அவர் எழுதி வைத்த பின்னரும் நீதிவிசாரணை கோரி வருகின்றனர்."

இது அன்புமணியின் அறிக்கை. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் இருக்கிறது!

எது எப்படியோ, மூன்று மாத காலத்திற்கும் மேலாக தமிழகத்தை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வந்தால் அனைத்து தரப்பினருக்கும் நல்லது.

*********



11 ஜூலை 2013

சாதிகள் உள்ளதடி பாப்பா!



பாரதியார் சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடியதை வைத்து ஆண் ஜாதி, பெண் ஜாதி என்ற இரு சாதிகளைத் தவிர வேறு சாதிகள் இருக்கலாகாது என்று பொருள்கொள்ளலாகாது.

இந்த உலகம் உள்ளவரையில் இந்தியா போன்ற பலதரப்பட்ட மக்கள் வாழும் நாட்டில் சாதி இருக்கத்தான் செய்யும். சாதிகளுக்கிடையில் மோதல்களும் இருக்கத்தான் செய்யும்.

இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் ஆண், பெண் ஜாதிகள் மட்டுமல்லாமல் பகுத்துணரும் அடிப்படையில் படித்தவன்-படிக்காதவன் என்ற பாகுபாடும் பொருளாதார அடிப்படையில் பணக்காரன் - ஏழை என்கிற பாகுபாடும் இருக்கத்தான் செய்கிறது.

சாதி அடிப்படையில் மனிதர்களை இழிவுபடுத்துவதைத்தான் அன்றைய பாரதியாரும் அவருக்கு பின்னால் வந்த பல பகுத்தறிவுவாதிகளும் தவறு என்று உரைத்தார்கள்.

சாதி அடிப்படையில் மனிதர்களை பிரித்துப்பார்ப்பதும் இழிவான செயல் என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் இருவேறு சாதிகளைச் சார்ந்த இருவர் இணைந்து வாழ்வது என்பது நடைமுறைக்கு சாத்தியம்தானா என்பதில்தான் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது. இதைத்தான் என் கணவர் இளவரசனுடன் எனக்கு compatibility இல்லை ஆகவே அவருடன் இணியும் இணைந்து வாழ்வது சாத்தியாமாகாது என்றார் வித்யா. அவர் உணர்ந்துதான் இதை கூறினாரா அல்லது சாதீய வெறி பிடித்த சிலர் இதை ஒரு சாக்காக கூறுமாறு அவரை வற்புறுத்தினார்களா என்பது தர்க்கத்துக்குரிய விஷயம். அதைப்பற்றி தர்க்கிப்பதல்ல என்னுடைய நோக்கம்.

Compatibility என்ற ஆங்கில வார்த்தையை கருத்தொருமித்தல் என்று மட்டும் பொருள்கொள்வதில் அர்த்தமில்லை. அது இன்னும் பல உள்ளர்த்தங்களைக் கொண்ட வார்த்தை என்றும் கூறலாம். கருத்தில் ஒற்றுமை, அவற்றை செயல்படுத்தும் விதங்களில் ஒற்றுமை, பழக்க வழக்கங்களில் ஒற்றுமை,பேசும் விதங்களில் உள்ள ஒற்றுமை, அணுகுமுறையில் உள்ள ஒற்றுமை, பிறரை அனுசரித்துப் போவதில் உள்ள ஒற்றுமை என பல்வேறு விஷயங்களைக் கூறலாம்.

நட்பு அடிப்பைடையில் இரு வேறு சாதியினர் பழகுவது என்பது எளிதுநட்பிலும் கூட சாதீயத்தை புகுத்த எந்த சாதி கட்சிகளோ அல்லது சாதீய சமூக அமைப்புகளோ முயல்வதில்லை என்பதும் உண்மை.

ஒருவனை அல்லது ஒருத்தியை அவர்களிடமுள்ள நிறை, குறைகளோடு ஏற்றுக்கொள்வது என்பது நட்பில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். ஆனால் வாழ்நாள் முழுவதும் இணைந்து வாழ வேண்டும் என்கிற சூழலில் உடலளவில் மட்டுமல்லாமல் உள்ளத்தளவிலும் என்னுடன் ஒத்துப்போகவேண்டும் என்று நினைக்க எனக்கு எல்லாவித உரிமையும் உண்டு.

அப்படியானால் காதலிக்கும்போது இது தெரியவில்லையா என்று கேட்டால் நிச்சயம் எனக்கு தெரிந்திருக்கவில்லை என்றுதான் காதலித்து திருமணம் செய்துக்கொண்ட பலரிடம் இருந்தும் பதில் வரும். காதல் என்பது யார், எவர் என்று புரிந்துக்கொள்ளும் முன்பே வருவது. இவன் இன்னான், இன்னாருடைய மகன் என்பதையெல்லாம் தெரிந்துக்கொண்டு வருவதல்ல காதல்.

நம்முடைய தினசரி வாழ்க்கையில் பலரை சந்திக்கிறோம், பலருடன் பழகுகிறோம் ஆனால் ஒருவனை, ஒருத்தியைத்தான் திருமணம் செய்துக்கொள்கிறோம். பலருடன் பழகினாலும் ஒருசிலருடன்தான் நட்பு வைத்துக்கொள்கிறோம். அவர்களுள் ஒருசிலருடன்தான் நெருங்கிப் பழகி நம்முடைய சுக, துக்கங்களைப் பகிர்ந்துக்கொள்கிறோம். நட்பிலேயே இவ்வளவு பகுத்துப் பார்த்தல் தேவை என்கிறபோது என்னுடன் இணைந்து வாழ்கிறவன்/ள் என் கருத்துடன் மட்டுமல்லாமல், நடை, உடை, பாவனை, என அனைத்திலுமே ஒத்துப்போக வேண்டும் என்று நினைப்பதில் தவறேதும் இல்லையே.

இதற்கும் சாதிக்கும் என்ன உறவு என்கிறீர்களா?

நிச்சயம் உண்டு.

நான் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வங்கி மேலாளராக பணியாற்றி பலதரப்பட்ட மக்களை சந்தித்திருக்கிறேன். பல சாதிகளைச் சார்ந்த வாடிக்கையாளர்களின் வீடுவரை சென்று பழகியிருக்கிறேன். உண்டு உறவாடியிருக்கிறேன். அவர்களுடைய திருமணங்களில், புகுமுனை விழாக்களில், ஈமச்சடங்குகளில் கலந்துக்கொண்டிருக்கிறேன்.

அந்த அடிப்படையில் சொல்கிறேன். ஒவ்வொரு சாதியினருக்கும் ஒரு பிரத்தியேக குணம், பேச்சு, நடை, உடை, பாவனை என இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் பேசும் பாணியிலிருந்து, உண்பது, உறங்குவது, சிந்திப்பது ஆகியவற்றை  மட்டும் வைத்து இவர்கள் இன்ன சாதியைச் சார்ந்தவர்கள் என்பதை கூற முடியாவிட்டாலும் இன்ன சாதியைச் சார்ந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை கணிப்பது சாத்தியம்.

1. சில சாதிகளைச் சார்ந்தவர்கள் மிகவும் பொறுமைசாலிகளாக இருப்பார்கள். கோபம் என்பது அறவே வராது. தானுண்டு தன் வேலயுண்டு என்று இருப்பார்கள். தன் வீடு, தன் குடும்பம் என்பதில்தான் அவர்களுடைய சிந்தனை, சொல், செயல் எல்லாமே.

2. சில சாதிகளைச் சார்ந்தவர்களுக்கு எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும். பேசிக்கொண்டிருக்கும்போதே கையை நீட்டுவார்கள். பேசி தீர்க்கும் பேச்சுக்கே இடமிருக்காது. எல்லாவற்றிற்கும் வெட்டும் குத்தும் தான் தீர்வு.

3. இன்னும் சிலர் ஒழுங்கீனத்திற்கு பெயர்போனவர்கள். சொல்லிலும் ஒழுக்கம் இருக்காது செயலிலும் ஒழுக்கம் இருக்காது. வீடு, வாசலிலும் சுத்தம் இருக்காது. அவர்களுடைய வீட்டிற்குள் சென்றுவிட்டால் எது எங்கும் இருக்கவேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல் எங்கும் எதுவும் இறைந்து கிடக்கும்.

4. வேறு சிலர் சுத்தத்திற்கு பெயர்போனவர்கள். உள்ளத்தில் சுத்தம் உள்ளதோ இல்லையோ, இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்வார்கள். அவர்களை பிற சாதியினர் தொட்டாலும் தீட்டு, அவர்களை இவர்கள் தொட்டாலும் தீட்டு என்பார்கள். பார்ப்பதற்கும் பாங்காக, சுத்தமாக இருப்பார்கள்.

இப்படி பலதரப்பட்ட குணாதிசயங்கள் அடைப்படையிலேயே இவர்கள் இன்ன சாதியைச் சார்ந்தவர்களாக இருக்க வாய்ப்ப்ள்ளது என கணித்துவிட அனுபவம் உதவுகின்றது.

இதில் ஒன்றாம் மற்றும் இரண்டாம் பிரிவினைச் சார்ந்தவர்களுக்கிடையிலோ அல்லது மூன்றாம் மற்றும் நான்காம் பிரிவினைச் சார்ந்தவர்களுக்கிடையிலோ  எந்தவிதத்திலும் compatibility (கருத்தொற்றுமை) இருக்கப் போவதில்லை என்பது நிச்சயம்.

காதலிக்கிற ஒருசில மாதங்களிலோ அல்லது ஒருசில வருடங்களிலோ தெரிந்துக்கொள்ள முடியாத இத்தகைய வேற்றுமைகளை திருமணம் முடிந்து இணைந்து வாழ்கிறபோதுதான் பலராலும் உணர்ந்துக்கொள்ள முடிகிறது. முந்தைய தலைமுறைகளில் இதைத்தான் 'வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்' என்றார்கள் போலிருக்கிறது. எள்ளளவும் கருத்தொற்றுமை இல்லாவிடினும் குடும்பம் பிளவுபடலாகாது என்பதை உணர்த்தத்தான் 'கண்ணாலானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்' அல்லது 'அடிக்கிற கைதான் அணைக்கும்' அல்லது 'கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்' என்ற பழமொழிகளையும் சொல்லி வைத்தார்கள் போலிருக்கிறது. இந்த பழமொழிகள் எல்லாமே ஆடவன் எத்தனை குணக்கேடுள்ளவன் என்றாலும் பெண் அதை பொருட்படுத்தலாகாது என்பதைத்தான் உணர்த்துகின்றன என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

இந்த வேற்றுமைகளை பொருட்படுத்தாமல் அனுசரித்துச் செல்வதிலும் சுகம் இருக்கத்தான் செய்கிறது என்று எண்ணுபவர்களும் நமக்காக இல்லாவிட்டாலும் நம் குழந்தைகளுக்காகவது இணைந்து வாழத்தான் வேண்டும் என கருதுபவர்களும் இந்த வேற்றுமைகளை பெரிதாக எண்ணாமல் தாம்பத்திய சிறையிலேயே அடைபட்டு கிடக்கின்றனர். அதெல்லாம் எங்களால் முடியாது என்று எண்ணுகிறவர்கள் compatibility இல்லை என்று எளிதாக கூறிவிட்டு பிரிந்துவிடுகின்றனர்.


அப்படித்தான் வித்யாவும் கூறினார் என்று நினைக்கிறேன். கணவன்-மனைவி இருவருக்கிடையில் திருமணத்திற்குப் பிறகு சாதி பேதத்தை விட தங்களுக்கிடையில் அன்றாடம் ஏற்படும் கருத்து பேதங்கள்தான் பெரிதாக தெரியும். இதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

ஆகவேதான் சொல்கிறேன். திருமணங்களைப் பொருத்தவரை 'சாதிகள் உள்ளதடி...' என்று. ஒரே சாதிக்குள் திருமணம் செய்துக்கொள்வதற்கே நாள்,நட்சத்திரம், பொருத்தம் என்றெல்லாம் பார்க்கிற இந்த சமுதாயத்தில் இருவேறு சாதியினர் திருமணம் செய்துக் கொண்டு அனுசரித்துச் செல்வது என்பது நடைமுறைக்கு சாத்தியமல்ல என்பதும் என்னுடைய கருத்து.

இன்று சமூக வலைத்தளங்களில் ஆர்ப்பரிக்கின்றவர்களும் தங்களுடைய சொந்த வாழ்க்கையை சிறிது நேரம் திரும்பிப் பார்த்தாலே போதும், இதை உணர்ந்துக்கொள்வார்கள். அன்றைய மேடைப் பேச்சாளர்கள் பேச்சில் ஒன்று செயலில் ஒன்று என்று வாழ்ந்ததைப் போன்றுதான் இன்றைய சமூகவலைத்தளங்களில் சாதீயம் இல்லை என்று கூப்பாடு போடுபவர்களும்
என்றாலும் மிகையாகாது. ஊருக்குத்தானடி உபதேசம் உனக்கில்லையடி கண்ணே என்பதுபோல்தான் இந்த அறைகூவல்களும்.

இதனால் மட்டுமே இன்றைய சாதீய கட்சிகளையும் அவர்கள் செய்யும் அக்கிரமங்களையும் சரி என்று ஏற்றுக்கொள்கிறவன் என்று முத்திரை குத்திவிடாதீர்கள்! கலப்பு திருமணத்தை குடும்பத்திற்குள்ளேயே நடைமுறைப்படுத்தியவன் நான் என்பது என்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு தெரியும்.


*****