1978ம் வருடம்: நான் சென்னையிலிருந்து மும்பையிலிருந்த கிளைகளில் ஒன்றிற்கு மாற்றப்பட்டேன்.
பள்ளியில் படித்த ஹிந்தி (அப்போதெல்லாம் ஹிந்தி கட்டாயப் பாடமாக இருந்தது. பள்ளியிறுதி தேர்வில் ஹிந்தியில் தேர்ச்சிப் பெறவில்லையென்றாலும் கூட மீண்டும் எல்லா பாடத்தையும் அக்டோபரில் எழுதி வெற்றி பெறவேண்டும். ஹிந்தி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் பெரும் மதிப்பு இருந்த காலம் அது. என் பள்ளியின் துணைத் தலைமையாசிரியர்தான் ஹிந்தி ஆசிரியர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மிகவும் கண்டிப்பானவர்.சிடுமூஞ்சி வாத்தி என்பது நாங்களாக வைத்த பட்டப் பெயர்) புலமை மட்டுமே எனக்கிருந்தது. எழுத, படிக்க தெரிந்திருந்தாலும் பேச வராது.
மும்பை என்றாலே ‘ரெட் லைட்’தான் அப்போது எல்லாருக்கும் நினைவுக்கு வரும், என் தந்தை உட்பட.
‘எலேய், நீயா பம்பாய்க்கு போடுங்கன்னுதானே கேட்டுக்கிட்டு போறே.. படவா, அங்க ஏதாவது தப்புத் தண்டா பண்ணேன்னு தெரிஞ்சுது என் மகனேயில்லன்னு உன்ன தலைய முழுகிடுவேன்.’ என்ற பயமுறுத்தலுடன் என்னை மும்பைக்கு வழியனுப்பி வைத்தபோது கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோலிருந்தது.
அப்போது என்னுடைய கிளையில் இருந்த அக்கவுன்டன்ட் ஒருவர் வேறு ‘ஜோசப் பம்பாய்ல ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். பேங்க்ல வேலை செய்றேன்னு யார்கிட்டயும் சொல்லிராதீங்க.. உங்க லாக்கர் சாவிய பத்திரமா பாத்துக்குங்க. நீங்க அசந்த நேரத்துல ரூம்லருக்கறவன்ல யாராவது திருடி ப்ளாக் எடுத்து டூப்ளிகேட் பண்ணிருவான்க, ஜாக்கிரதை’ என்று பயமுறுத்திவிட்டார்.
லாக்கர் சாவின்னா என்னன்னு சொல்லணும் இல்லையா? வங்கிகளில் கவுண்டருக்கு பின்னால் பெரிய இரும்பு கதவு கொண்ட அறையைப் பார்த்திருப்பீர்கள். அதனுள்தான் வங்கியில் அன்றாட புழக்கத்திற்குத் தேவையான ரொக்கம், அடகு வைத்துள்ள நகைகள், பத்திரங்கள் போன்றவை வைக்கப்பட்டிருக்கும். அதனுடைய இரண்டு கதவுகளுக்கும் சேர்த்து சுமார் ஆறு சாவிகள் இருக்கும். அவற்றை பிரித்து மூன்று அல்லது நான்கு அதிகாரிகள் (மேலாளர், அக்கவுன்டன்ட்)வசம் ஒப்படைத்துவிடுவார்கள். அவற்றில் ஒன்று இல்லையென்றாலும் லாக்கர் அறையை திறக்க இயலாது.
அதில் யாராவது ஒருவர் அவருடைய சாவியைத் தொலைத்துவிட்டால் அதே வங்கியின் வேறொரு கிளையிலோ அல்லது அருகிலிருக்கும் வேறொரு வங்கியின் கிளையிலோ பாதுகாப்பாய் வைக்கப்பட்டிருக்கும் டூப்ளிகேட் சாவியை ரிலீஸ் செய்துக்கொண்டு வந்துதான் திறக்க முடியும். அந்த ரிலீஸ் மனுவையும் சாவியை வைத்திருக்கும் எல்லா அதிகாரிகளும் கையொப்பமிட்டால் மட்டுமே ரிலீஸ் செய்ய முடியும்.
இருப்பினும் அடுத்த நாளே அந்த பூட்டையே அடியோடு மாற்றிவிட்டு அதற்காகும் தொகையை சாவியை தொலைத்தவரிடமிருந்து கறந்துவிடுவார்கள் (இன்றைய நிலையில் சுமார் ரூ.5000 த்திலிருந்து 7,500 வரை ஆகலாம்). அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது லாக்கர் சாவி!!
அத்தகைய சாவியை அறையில் உடனிருப்பவர்கள் திருடி ப்ளாக் (நகல்) எடுத்துவிட வாய்ப்புண்டு என்று என் நண்பர் கூறியதைக் கேட்டு இந்த பணி மாற்றமே வேண்டாம் என்று கூறிவிட்டாலென்ன என்று கூட யோசித்தேன்.
மாற்றத்தை வேண்டாமென்று சொன்னால் பிற்கால பதவி உயர்வுகள் பாதிக்கப்படலாம், தைரியமாக போய்வாருங்கள் என்று என்னுடைய கிளை மேலாளர் உற்சாகப்படுத்த சரி போகலாம் என்று முடிவெடுத்து கிளம்பினேன்.
அப்போது மும்பையில் என்னுடைய வருமானத்திற்குள் வீடு கிடைப்பதென்பது குதிரைக்கொம்பாயிருந்தது. முன் பரிச்சயம் இல்லாத இரண்டு, மூன்று பேருடன் சேர்ந்து ஒரு அறையில் தங்குவதிலும் எனக்கு விருப்பமில்லை.
ஆகவே, என்னுடைய வங்கி வாடிக்கையாளர்களுள் ஒன்றாயிருந்த செம்பூரிலிருந்த ஒரு பள்ளி அலுவலகத்தை அணுகி அவர்களுடைய உதவியைக் கோரினேன். என்னுடைய முதல்வர் அவர்களுக்கு நன்கு அறிமுகமாயிருந்ததால் எனக்கு பள்ளிக்கு அருகிலேயே இருந்த ஒரு கோவன் (கோவாவை சேர்ந்த ஆனால் மும்பையிலேயே பிறந்து வளர்ந்த கத்தோலிக்கர்கள் - நம் ஊரில் ஆங்கிலோ-இந்தியர்கள் என்று அழைப்போமே அந்த ரகத்தைச் சார்ந்தவர்கள் எனலாம்.) குடும்பத்தில் Paying Guest ஆக சகல வசதிகளுடன் கூடிய ஒரு சிறு அறை மாத வாடகை ரூ.400 க்கு கிடைத்தது. விருப்பப்பட்டால் காலை மற்றும் இரவு உணவும் அருந்திக்கொள்ளலாம் (அதற்கு தனியாக ஒரு தொகை கொடுத்துவிட வேண்டும்) என்று கூறினாலும் அவர்களுடைய உணவுமுறை எனக்கு பழக்கமில்லாததால் நான் வெளியிலேயே உணவருந்துவதென்று முடிவு செய்தேன்.
மும்பையில், குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் செம்பூரில் நம்முடைய பக்கத்து உணவகங்கள் பல இருந்தன.
ஆனால் ஒரு சங்கடம்.
அவர்களுடைய வீட்டில் இரண்டு பெரிய அல்சேஷன் நாய்கள் இருந்தன (நாய்கள் என்று குறிப்பிட்டால் அந்த குடும்பத் தலைவருக்கு அசாத்திய கோபம் வந்துவிடும். குழந்தைகளில்லாத அத்தம்பதியருக்கு - அவருடைய அண்ணன் மகளை தத்தெடுத்திருந்தார்கள். பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாயிருந்த அப்பெண்ணுக்கு அந்த சுற்று வட்டாரத்தில் மவுசு அதிகம். கணக்கிடமுடியாத ஆண் நண்பர்கள். சனிக்கிழமை இரவு வீட்டில் நடக்கும் நள்ளிரவு பார்ட்டிகளே அதற்கு சான்று. அவர்களுடைய வாழ்க்கை முறையே அலாதியானது! - அவ்விரு அல்சேஷன் நாய்கள் செல்ல குழந்தைகளைப் போல.
வீட்டினுள் Guestஆக அனுமதித்தபோதே தெளிவாக இடப்பட்ட கட்டளை இதுதான். நள்ளிரவிற்குள் வீடு திரும்பிவிட வேண்டும். ஏன் தெரியுமா? தினமும் இரவு சரியாக 12.00 மணிக்கு இரண்டு நாய்களும் கூண்டிலிருந்து கட்டவிழ்த்து விட்டு விடுவார்கள். இரவு முழுவதும் அவை இரண்டும் காம்பவுன்டைச் சுற்றி வந்து காவல் காக்கும். அந்த நேரத்தில் கேட் வழியாகவோ, சுவர் ஏறி குதித்தோ நுழைய முயன்றால் அதோகதிதான். ஆதலால் எத்தனை தூரம் செல்ல நேரிட்டாலும் பதறியடித்துக்கொண்டு நள்ளிரவுக்குள் திரும்புவதிலேயே குறியாயிருப்பேன்.
வீட்டிற்கு வெகு அழகான பெயரையும் வைத்திருந்தனர். ‘Chez Nouz’ - எங்கள் வீடு!
முழு வீடும், என்னுடைய அறையும் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருந்தது. அந்த குடும்பத்தினருடன் சுமார் பதினெட்டு மாத காலம் இருந்தேன். நம்முடைய எந்த விஷயத்திலும் தலையிட மாட்டார்கள். காலையில் ஓசி காப்பி, சனிக்கிழமை இரவு பார்ட்டியில் எப்போதாவது கலந்துக்கொள்ள வாய்ப்பு, பண்டிகைக் காலங்களில் ஓசியில் இரவு டின்னர் என மகிழ்ச்சியாய் கழித்த காலங்கள் அவை.
என்னுடைய வங்கிக் கிளை சென்னையிலிருந்ததைப்போல் விசாலமானதில்லை. சென்னையில் 4000 சதுர அடி பரப்பில் விசாலமாயிருந்த கிளை அலுவலகத்தில் பணிபுரிந்து விட்டு சுமார் 1000 சதுர அடி மட்டுமே கொண்ட அந்த அலுவலகத்தை பார்த்த முதல் நாள் (அட்டகாசமாக Furnish செய்யப்பட்டிருந்ததென்னவோ உண்மைதான் – Full AC வேறு. 1980ல் அத்தகைய வசதிகள் ஒரு Luxury தான்) மனசில் ஒரு ஏமாற்றம்.
சென்னைக் கிளையில் எனக்கு தனி காபின் இருந்தது. மும்பையில் மேலாளர் அறையே 200 ச.அடிக்கும் குறைவாயிருந்தது. குமாஸ்தாக்களும், மற்ற அதிகாரிகளும் - என்னையும் சேர்த்து நான்கு அதிகாரிகள் - அமர சுமார் 800 ச.அடி அளவுள்ள ஹால். அதற்கே அன்று மாத வாடகை ரு.30000/- கொடுக்க வேண்டியிருந்தது!
குமாஸ்தாக்களில் 3/4 பங்கு மும்பையைச் சார்ந்தவர்கள். அதில் ஒரு பாலக்காட்டு ஐயரும் இருந்தார். தமிழ், இந்தி, மாராட்டி, மலையாளம் என எல்லாவற்றிலும் பேச தெரிந்தவர். இவர்தான் என்னுடைய இரண்டாண்டுகால மும்பை வாசத்தில் பெரிதும் உதவியாயிருந்தவர்.
அந்த இரண்டாண்டு காலத்தில் நடந்த ஒரு முக்கியமான நிகழ்வை மாத்திரம் உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்.
கிளையின் அலுவலகம் சிறிதாயிருந்தாலும் சென்னைக் கிளையை ஒப்பிடும்போது நான்கு மடங்கு வர்த்தகம் அக்கிளையிலிருந்தது. சனிக்கிழமைகளில் மட்டும் சுமார் 250 லிருந்து 300 வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தவும் எடுக்கவும் வந்து சென்றனர்!
மற்ற நாட்களில் இதை விட இரண்டு மடங்கு வாடிக்கையாளர் வந்து போவர் என்றாலும் காலை ஒன்பது மணியிலிருந்து பிற்பகல் இரண்டு அல்லது மூன்று மணிவரை வர்த்தக நேரம் இருந்ததால் வாடிக்கையாளர்கள் வருகை வர்த்தக நேரம் முழுவதும் பரந்து இருக்கும்.எளிதாக அவர்களுடைய தேவைகளை நிறைவு செய்ய முடிந்தது.
ஆனால் சனிக்கிழமைகளில் வர்த்தக நேரம் காலை ஒன்பது மணியிலிருந்து பதினொரு மணிவரை மட்டும்தான். இக்குறுகிய நேரத்தில் மொத்தமாய் வந்து 800 ச.அடி கொண்ட இடத்தில் அடைத்துக்கொண்டு வாடிக்கையாளர்கள் நிற்கும்போது.. மண்டை காய்ந்துவிடும்..
ஒரு சனிக்கிழமை..
காலையில் வங்கி திறந்த நேரம் முதலே கூட்டம் அலைமோதியது.
கிளையிலிருந்த எட்டு குமாஸ்தாக்களில் இருவர் விடுப்பு எடுத்திருந்தனர். (விடுப்பு வழங்கும் உரிமை மேலாளருக்கு மட்டுமே உண்டு. மேலாளர் வயதானவர். ஓய்வு பெற இரண்டோ மூன்றோ ஆண்டுகளே இருந்தன. யாரையும் கண்டிப்புடன் ஒன்றும் கூற மாட்டார். யார், எப்போது விடுப்பு கேட்டாலும் மற்ற அதிகாரிகளைக் கலந்தாலோசிக்காமலே கொடுத்துவிடுவார். நாங்கள் பணிகளை முடிக்க படும் பாடு அவருக்கு புரியவே புரியாது. போய் முறையிட்டாலும் ‘நானெல்லாம் உங்களைப் போல் இருந்த சமயம் வீட்டிற்கு போகவே மாட்டேன். பல நாட்கள் வங்கியிலேயே படுத்து உறங்கியுள்ளேன்’ என பழைய புராணத்தை எடுத்துவிடுவார். ஆதலால் அவரிடம் போய் முறையிடுவதில் பயனில்லை) கவுண்டரில் அமர்ந்துள்ள குமாஸ்தாக்கள் வாடிக்கையாளர்கள் தரும் காசோலையைப் பெற்றுக்கொண்டு ‘டோக்கன்’ கொடுப்பது வழக்கம். ‘டோக்கன்’ எண்ணை காசாளர் (Cashier) அறிவிக்கும்போது ‘டோக்கனை’ கொடுத்துவிட்டு காசோலை பணத்தை வாங்கிக்கொள்வர்.
அன்று குழப்பத்தில் ஒரு குமாஸ்தா ரூ.1500/- க்கான காசோலை கொடுத்தவரிடம் ரூ.25,000/-க்கான டோக்கனையும் ரூ.25,000/- காசோலை கொடுத்தவரிடம் ரூ.1500/-க்கான டோக்கனையும் கொடுத்துவிட்டார்.
இதையறியாத நான் அவ்விரண்டு காசோலைகளையும் பாஸ் செய்து காசாளரிடம் அனுப்பிவிட்டேன். என்னுடைய துரதிர்ஷ்டம் ரூ.1500/- க்கான காசோலை முதலில் காசாளரிடம் செல்ல அவரும் ரூ.25,000/- த்தை காசோலை கொண்டு வந்தவரிடம் அளிக்க அவரும் அதைப்பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். குமாஸ்தா செய்த தவறு ரு.25,000/-க்கான காசோலையை கொண்டுவந்தவரிடம் ரூ.1500/- ஐ காசாளர் கொடுத்தபோதுதான் தெரிந்தது.
அவர் செய்த ரகளையில் சிறிது நேரம் எல்லா அலுவல்களும் ஸ்தம்பித்துப் போயின. 1980ல் ரூ.25,000/- என்பது மிகப் பெரிய தொகை. என்னுடைய அப்போதைய மாத வருமானம் ரூ.1,500/- தவறிழைத்த குமாஸ்தாவின் வருமானம் ரூ.900-
விஷயம் மேலாளரின் கவனத்திற்கு செல்ல அவர் கூலாய் காசாளரைப் பார்த்து இவருக்கு கொடுக்க வேண்டிய ரூ.25,000/- உடனே கொடுத்தனுப்புங்கள். தவறாக பணத்தைக் கொடுத்தவரிடம் வசூலிக்க வேண்டியது செக்ஷன் ஆஃபீசரின் (அதாவது நான்) பொறுப்பு என்று கூறிவிட்டு அவருடைய அறைக்கு போய்விட்டார்.
கிளையில் குழுமியிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் என்னை பார்த்த பார்வையில் ஏளனமும், பரிதாபமும் கலந்திருந்தன.
மேலாளரின் முடிவை செயல்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. என்னுடைய கையெழுத்துக்காக இனியும் காத்திருந்த காசோலைகளை இயந்திரக்கதியில் பாஸ் செய்து அனுப்பிக்கொண்டேயிருந்தேன். வர்த்தக நேரம் கழித்துத்தான் எதையும் செய்ய முடியும் என்ற சூழ்நிலை.
அப்போது என்னுடைய உதவிக்கு வந்த நண்பர் அந்த பாலக்காட்டு தமிழர்தான். கிளையில் இருந்த கடைநிலை சிப்பந்தி (Peon) ஒருவரை துணக்கு அழைத்துக்கொண்டு ரூ.1,500/-க்கான காசோலை கொடுத்திருந்த வாடிக்கையாளரின் விலாசத்திற்கு உடனே விரைந்து சென்று விசாரித்தார். காசோலையை வங்கிக்கு கொண்டுவந்தவர் அவருடைய கடைச் சிப்பந்தி. அவர் காசோலைக்கான சரியான தொகையை முதலாளியிடம் கொடுத்துவிட்டு உடனே விடுப்பு எடுத்துக்கொண்டு போய்விட்டாராம் அவருடைய விலாசத்தைக் கண்டுபிடிக்க செல்கிறோம் என அவர் என்னை தொலைப்பேசியில் அழைத்து தகவல் அறிவித்தபோது ‘பணம் நம் கையிலிருந்து போச்சு.’ என்று நினைத்தேன்.
என்னுடைய நண்பர் சாதுரியமாக அவருடைய காவல்துறை நண்பர் ஒருவரை யூனிஃபார்மில் தன்னுடன் அழைத்துக்கொண்டு செல்ல வீட்டைப் பூட்டிக்கொண்டு பணத்துடன் வெளியூர் செல்லவிருந்த வாடிக்கையாளரின் சிப்பந்தியை கையும் களவுமாக பிடித்து பணத்தைத் திரும்பப் பெற்றுவிட்டனர்.
ஆனால் வர்த்தக நேரம் முடிந்து வரவு செலவு கணக்கை சரிபார்க்கும் நேரத்தில் கையிருப்பு பணத்தில் துண்டு விழுந்தால் தலைமையகத்துக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டுமென்பது நியதி. அதைத் தொடர்ந்து விளக்கம், விசாரணை, கவனக் குறைவுக்கான தண்டனை என விஷயம் தொடரும்..
என் நண்பரும், என்னுடைய அலுவலக சிப்பந்தியும் பணம் கிடைத்துவிட்ட விஷயத்தை என்னிடம் தொலைப்பேசியில் அழைத்து அறிவிக்காததால் வரவு செலவு கணக்கை சரிபார்க்கும் நேரத்தில் துண்டு விழும் தொகையை கையிலிருந்து அடைக்க வேண்டிய கட்டாயம் எழுந்தது.
என்னுடைய கணக்கிலோ சுமார் ரூ.3000/- மட்டுமே இருந்தது.. ஆயினும் நான் கேட்காமலே அன்று என்னுடன் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களும் - மொழி, இன பாகுபாடு இல்லாமல் அவரவரிடமிருந்த தொகையை மொத்தமாக கொடுத்துதவ துண்டு விழும் பணத்தை அடைத்து தலைமையகத்துக்கு அறிவிக்காமல் சமாளிக்க முடிந்தது.
பிறகு மாலையில் திரும்பப் பெறப்பட்ட பணத்தை நண்பர் கொண்டுவர அவரவர் தொகையைத் திருப்பிக் கொடுத்தேன். கிடைத்த பணத்தில் பத்து சதவிகிதத்தை நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்க வேண்டி வந்தது வேறு விஷயம். இருந்தாலும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்று நினைத்துக்கொண்டேன்.
வங்கிகளில் பணிபுரிபவருக்கு தகுதிக்கு மீறிய ஊதியம் கிடைக்கிறது என பலருக்கும் அக்காலத்தில் ஒரு எண்ணமிருந்தது. அது ஓரளவு உண்மைதான்.
ஆனால் அதே சமயம் நாள்தோறும் வங்கிப் பணியாளர்கள் செய்யும் வேலை பணம் சம்மந்தப்பட்ட விஷயம். சில நொடிகளில் பெருந்தொகையை இழந்துவிட வாய்ப்பு உண்டு என்பதைப் பலரும் புரிந்துக்கொள்வதில்லை. அதுமட்டுமல்லாமல் வேலையே போய்விடக்கூடிய சந்தர்ப்பங்களும் எழ வாய்ப்புண்டு.
என்னுடன் வங்கியில் வேலைக்குச் சேர்ந்த எத்தனையோ அதிகாரிகளுக்கு வேலை போனதுடன் சில துர்ப்பாக்கியசாலிகள் செய்யாத தவறுக்கு சிறை சென்றதும் உண்டு. இத்தகையதொரு நிகழ்ச்சியை வரும் பதிவுகளில் எழுதலாம் என்றிருக்கிறேன்.
எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் பணி ஓய்வு பெறுவதே பெரிய அதிர்ஷ்டம் என என்னுடைய பல சக அதிகாரிகளும் பேசிக்கொள்வதுண்டு.
அதிருக்கட்டும் மும்பை ... லைட்டைப் பத்தி எழுதணுமா? வேணும்னா எழுதறேன்.
அனுபவங்கள் தொடரும்
எழுதணுமா? வேணும்மா?
பதிலளிநீக்குNo more "மா" pl. :-)
புரியவில்லை ராம்கி,
பதிலளிநீக்குரெட் லைட் பற்று வேண்டாம் என்கிறீர்களா அல்லது என்னுடைய இந்த பதிவையே தொடர வேண்டாம் என்கிறீர்களா?
கொஞ்சம் விளக்குங்களேன், ப்ளீஸ்.
அது என்ன "னா", எழுதுங்க வெரிஃபை பண்ணி பாத்துக்குவோம்!
பதிலளிநீக்குஓகே, ஓகே. பெருவாரியான!! நண்பர்களுடைய வேண்டுகோளுக்கினங்கி 'நீங்கள் கேட்டதை' விலாவாரியாக எழுதுகிறேன்.
பதிலளிநீக்குகாசி அவர்கள் 'ரெட்' போட்டுவிடாமல் இருக்க வேண்டுகிறேன்.
ஜோசப் சார்,
பதிலளிநீக்குசுவாரஸ்யமா இருக்கு.தொடருங்கள்.
ராம்கி எழுதியதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?'எழுதணுமா?' ..இப்படி 'மா' போட்டு அனுமதியெல்லாம் கேக்காம எழுதிட்டேயிருங்கன்னு சொல்லுறாரு..சரி தானே ராம்கி?
நீங்க சொன்னது சரிதான் ஜோ.
பதிலளிநீக்குஅதை உடனே நண்பர் ராம்கி என்னிடம் தெளிவுபடுத்திவிட்டார்.
நன்றி.