தி.பா. தொடர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தி.பா. தொடர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 ஜூன் 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 64

வங்கிகள் சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட தவணைகளில் திருப்பிச் செலுத்தக் கூடிய கடன்களை (Term Loans) மட்டுமே வழங்க முன்வருவதுண்டு.

அவற்றை இரண்டு வகையாக பிரிக்கலாம். முதலாவது, மூன்று வருடங்கள் அல்லது 36 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தக் கூடிய குறுகிய காலக் கடன் (Short term loan). இரண்டாவது அதற்கு மேற்பட்ட நீண்டகால கடன்கள் (Long term loan).

அப்போதெல்லாம் நீண்டகாலக் கடன்கள் அதிகபட்சமாக ஏழாண்டுகள் வரை வழங்கப்படுவதுண்டு. இது என்னென்ன தேவைகளுக்காக கடன் பெறப்படுகிறது என்பதைப் பொருத்து அமையும். பெரும்பாலும் தொழிற்சாலைக் கட்டிடங்கள் கட்டுவதற்கு, இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு நீண்டகாலக் கடன்கள் வழங்கப்படுவதுண்டு.

ஆனால் இத்தகைய நீண்டகாலக் கடன் வழங்குவது வங்கிகளால் இயலாத காரியம். இதற்கு முக்கிய காரணம் வாடிக்கையாளர்களுடைய வைப்பு நிதி சேமிப்பு திட்டங்களின் கீழ் (Fixed Deposit Schemes) அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரையில் மட்டுமே கணக்கு துவங்க முடியும் என்ற நிர்பந்தம். மேலும் வங்கிகள் வசம் இருந்த மொத்த சேமிப்பு தொகையில் (Deposit Amount) அறுபது விழுக்காடுகளுக்கும் மேல் உடனடியாக திருப்பிச் செலுத்த வேண்டிய Demand Deposits ஆகவே இருந்தன. இப்போதும் அப்படித்தான்.

ஆகவே ஐந்து வருடங்களுக்கு மேல் திருப்பிச் செலுத்தக் கூடிய கடன்களை வழங்குவது சாத்தியமில்லாத விஷயமாகக் கருதப்பட்டது.

இத்தகைய நீண்டகாலக் கடன் வழங்குவதற்கெனவே அப்போது term lending institutions எனப்படும் நிறுவனங்கள் இயங்கி வந்தன. அவற்றில் முக்கியமானவை ICICI Corporation மற்றும் IDBI ஆகியவை.

ஒரு தொழில் துவங்கத் தேவையான முதலீட்டில் நீண்டகாலக் கடன்களை (Term Loans) இத்தகைய நிறுவனங்களும் குறுகியகாலக் கடன்களை (Working Capital facilities) வங்கிகளும் இணைந்து வழங்கி வந்தன. இந்த கடன்களைப் பெறும் தொழில் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் (Factories, Machinery etc) நீண்ட காலக் கடன்களுக்கு ஈடாகவும் அசையும் சொத்துக்கள் (Working Capital Assets) வங்கிகள் வழங்கும் குறுகியக் காலக் கடன்களுக்கு ஈடாகவும் கோரப்படுவதுண்டு.

இத்தகைய கூட்டு முயற்சிகள் அப்போது மிகவும் பிரபலமாயிருந்தது. ஆனால் இதில் நாளடைவில் பிரச்சினைகள் தோன்ற ஆரம்பித்தன. ஒரு தொழில் நிறுவனத்தின் செயல்பாடுகளில் தேக்கநிலை ஏற்படும் சமயங்களில் முதலில் பாதிக்கப்படுவது வங்கிகள் வழங்கிய கடனுக்கு ஈடாக வைக்கப்பட்டுள்ள சொத்துக்கள்தான். நிறுவனத்தின் அன்றாட செயல்பாட்டுக்கு உதவும் அசையா சொத்துக்களான உற்பத்திப் பொருட்கள் கைவசம் இல்லாத நிலையில் வங்கிகள் வழங்கிய கடன்களுக்கு ஈடாக எந்து சொத்தும் இல்லாத நிலை ஏற்பட்டுவிடக்கூடும்.

அச்சமயங்களில் நீண்டகால கடன்களை வழங்கும் ஐடிபிஐ போன்ற நிறுவனங்கள் அவர்களுடைய கடனுக்கு ஈடாக வைக்கப்பட்டுள்ள அசையா சொத்துக்களை வங்கிகளுடன் பகிர்ந்துக்கொள்ள முன்வர வேண்டும். அதுதான் நீண்ட காலக் கடன் வழங்கும் நிறுவனங்களுடனான கூட்டுறவின் அடைப்படை நியதியாக வங்கிகள் கருதிவந்தன.

ஆனால் தங்களுடைய நீண்டகாலக் கடன்களை முழுவதுமாக வசூலித்தப் பிறகு மீதமுள்ள சொத்துக்களை மட்டுமே வங்கிகளுடன் பகிர்ந்துக்கொள்ள முடியும் என்கிற நிலைப்பாட்டை ஐடிபிஐ, ஐசிஐசிஐ போன்ற நிறுவனங்கள் எடுக்கவே வங்கிகளும் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதற்கு ஒரே வழி தங்களிடம் கடன் கோரி வரும் தொழில் நிறுவனங்களின் மொத்த தேவையையும் தாங்களே பூர்த்தி செய்யவேண்டும் என்பதுதான் என வங்கிகளும் உணர ஆரம்பித்தன் விளைவுதான் லீசிங் ஃபைனான்ஸ் என்கிற புதுமாதிரி கடன் வழங்கும் முறை.

அதுவரை நீண்டகாலக் கடன் வழங்கி வந்த ஐசிஐசிஐ, ஐடிபிஐ போன்ற வங்கிகளல்லாத நிறுவனங்கள் மட்டுமே ஈடிபட்டிருந்த லீசிங் முறை வங்கிகளும் ஈடபடத் துவங்கின.

நீண்டகால கடனுக்கு லீசிங் முறைக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு தொழில் நிறுவனத்திற்கு இயந்திரங்கள் வாங்க கடனுதவி தேவை என்று வைத்துக்கொள்வோம்.

இயந்திரம் தேவைப்படும் தொழில் நிறுவனத்திடமிருந்து இயந்திரத்தின் விலையில் சுமார் 10லிருந்து 25 சதவிகிதம் வரை அதனுடைய முதலீடாக (margin) பெற்றுக்கொண்டு மீதித் தொகையை கடனாக வங்கிகள் வழங்குவதுண்டு. இயந்திரத்தின் மொத்த விலையையும் வங்கியே அதன் விற்பனையாளரிடம் வங்கி காசோலை மூலமாக நேரடியாக வழங்கிவிடும். ஆனால் இயந்திரம் கடன் பெற்றவருடைய பெயரில் விற்கப்படும். அதாவது இயந்திரத்தின் உரிமையாளர் கடன் பெறுபவராக இருப்பார். கடன் நிலுவையில் நின்றுவிடும் சூழலில் கடன் வழங்கிய வங்கி நீதிமன்றம் வாயிலாக சம்பந்தப்பட்ட அதாவது அடகு வைக்கப்பட்ட இயந்திரத்தை கைப்பற்றி விற்று கடனை வசூலித்துக்கொள்ள முடியும். வங்கிக்கு இத்தகைய உரிமை உண்டு என்றாலும் அதை செயல்படுத்துவது அத்தனை எளிதல்ல. கடனுக்கு ஈடாக அடகு வைக்கப்படும் சொத்துக்கள் (hypothecated assets) கடன் பெற்றவரின் கைவசம் இருப்பதால் அவற்றை வங்கிகளுக்கு தெரியாமலே விற்றுவிட வாய்ப்பிருந்தது. மேலும் இத்தகைய கடன்களிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையை தவிர வேறெந்த வருமானமும் வங்கிகளுக்கு கிடைப்பதில்லை.

ஆனால் லீசிங் முறையில் தொழில் நிறுவனத்தின் பயனுக்கு தேவையான இயந்திரங்களை வங்கிகளே தங்களுடைய பெயரில் வாங்கி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட முடியும். அதாவது தொழில் நிறுவனத்திற்கு இயந்தைரங்களை பயன்படுத்தும் உரிமை மட்டுமே இருக்கும். அதை விற்பதற்கு எவ்வித உரிமையும் இருக்காது. மீறி விற்றால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரவும் வங்கிகளுக்கு உரிமையுண்டு. சாதாரணமாக இத்தகைய முறையில் வட்டி என்று எதுவும் இருக்காது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மாதா மாதம் வழங்கும் லீசிங் வாடகை வங்கியின் வருமானமாக கருதப்படும். வங்கிகள் ஒரு இயந்திரத்தின் விலையின் மீது பத்திலிருந்து பதினைந்து சதவிகிதம் வரையிலும் கணக்கிட்டு அதை இயந்திரத்தின் விலையுடன் சேர்த்து அந்த கூட்டுத்தொகையை தவணைகளாக பிரித்து வாடகை என்று வசூலிப்பது வழக்கம். இதைத்தான் லீசிங் வாடகை என்பார்கள் (lease rentals). அத்துடன் இயந்திரங்கள் வங்கிகளின் பெயரிலேயே இருப்பதால் வருடா வருடம் அதனுடைய கொள்முதல் விலையில் பத்திலிருந்து பதினைந்து சதவிகிதம் வரையிலும் கழிவு (depreciation) என்று தங்களுடைய வருமானத்திலிருந்து எழுதித் தள்ள முடியும். இதனால் வங்கிகள் செலுத்தக் கூடிய வருமான வரி கனிசமான அளவு குறையக்கூடும்!

ஆனால் இத்தகைய லீசிங் முறையில் கடன் வழங்கும் பாணி அப்போது வங்கித் துறையில் அறிமுக நிலையில் இருந்ததால் எங்களைப் போன்ற வங்கிகளில் அதன் செயல்பாடுகளில் அனுபவம் உள்ள அதிகாரிகள் யாரும் இருக்கவில்லை.

ஆகவே எங்களுடைய வங்கி முதல்வர் இத்தகைய முறையை எங்களுடைய வங்கியிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று முனைந்தாலும் அதை சரிவர செயல்படுத்த முடியவில்லை. ஆகவே அவருடைய முந்தைய வங்கியிலிருந்து இத்துறையில் அனுபவம் உள்ள இரு அதிகாரிகளை கொண்டு வரும் செயலில் இறங்கினார்.

அப்போதுதான் பிரச்சினை பூதாகரமாக வெடித்தது.

சாதாரணமாக எந்த ஒரு நிறுவனத்திலும் உயர் அதிகாரிகள் நிலையில் வெளியிலிருந்து ஆட்களை - அவர்கள் எத்தனை தகுதி மிக்கவர்களாயினும் - கொண்டு வருவதற்கு அந்த நிறுவனத்திலுள்ள மற்ற அதிகாரிகள் அத்தனை எளிதில் சம்மதிக்க மாட்டார்கள்.

அதுதான் எங்களுடைய வங்கியிலும் நடந்தது. நிறுவனத்திலேயே திறமையுள்ள சில அதிகாரிகளை தெரிவு செய்து அவர்களுக்கு இத்துறையில் பயிற்சி அளிக்கலாமே என்ற எண்ணம் பல உயர் அதிகாரிகள் மத்தியில் நிலவியது. அதில் வெகு சிலர் தங்களுடைய கருத்தை பகிரங்கமாகவே கூற ஆரம்பித்தனர். ஆனால் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் தன்னுடைய எண்ணத்தை செயல்படுத்துவதில் எங்களுடைய வங்கி முதல்வர் முனைப்பாயிருந்தார்.

தங்களுடைய கருத்துக்கு அவர் மதிப்பளிக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த அதிகாரிகள் தங்களுடைய தொழிற்சங்கத்தை அணுகினர். இத்தகைய சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்த தொழிற்சங்கத் தலைவர்கள் முதல்வரின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க விஷயம் மேலும் தீவிரம் அடைந்தது.

ஆனால் வங்கி இயக்குனர் குழு முதல்வரின் யோசனையை ஆதரிக்கவே அவர் தன்னுடைய முந்தைய வங்கி நிர்வாகத்திடம் இரு மூத்த அதிகாரிகளுடைய பெயர்களை பரிந்துரைக்குமாறு கடிதம் அனுப்பினார்.

ஆனால் அதிலும் சிக்கல். மூத்த அதிகாரிகள் வெளி வங்கிகளிலிருந்து வருவதை எங்களுடைய வங்கி அதிகாரிகளும் தொழிற்சங்கமும் விரும்பவில்லை என்பதை எப்படியோ அறிந்த முதல்வரின் முந்தைய வங்கி தங்களால் யாரையும் பரிந்துரைக்க இயலாதென்றும் வேண்டுமானால் எங்களுடைய வங்கியின் கோரிக்கையை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக விடுவதாகவும் அதைப் பார்த்துவிட்டு விரும்பி வருபவர்களிலிருந்து தெரிவு செய்துக்கொள்ளலாம் என்று அறிவித்தது.

சாதாரணமாக தற்சமயம் பணியாற்றும் நிறுவனத்தில் தங்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்றோ அல்லது எதிர்வரும் காலத்தில் தங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பில்லை என்றோ கருதும் அதிகாரிகள் மட்டுமே அதிலிருந்து வெளியேற எண்ணுவது வழக்கம். அத்தகையோர் திறமைசாலிகளாகவோ அல்லது அனுபவம் உள்ளவர்களாகவோ இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மேலும் தங்களைவிடவும் பன்மடங்கு சிறிய வங்கிக்கு செல்வதற்கு நல்ல திறமையுள்ளவர்கள் விரும்பமாட்டார்கள் என்பதும் உண்மைதானே.

அப்படித்தான் நடந்தது..

எங்களுடைய வங்கிக்கு வருவதற்கு வெகு சிலரே முன்வந்தனர். அதிலிருந்து எங்களுடைய வங்கி முதல்வர் தெரிவு செய்த இருவரும் எங்களுடைய வங்கியில் பணியாற்றிய அதிகாரிகளைக் காட்டிலும் விஷயஞானத்திலும் சரி திறமையிலும் சரி உயர்ந்தவர்கள் அல்ல என்பது அவர்களுடைய முழு விவரமும் எங்களுடைய வங்கிக்கு வந்து சேர்ந்தவுடன் கொதித்தெழுந்தது எங்களுடைய தொழிற்சங்கம்...

தொடரும்..

05 ஜூன் 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 63

என்னுடைய அப்போதைய வங்கி முதல்வருடைய செயல்பாடுகள், முக்கியமாக கடன் வழங்குவதில் அவர் புகுத்த நினைத்த யுக்திகள், எங்களுடைய தலைமையகத்தில் செயல்பட்ட மத்திய கடன் வழங்கும் இலாக்கா அதிகாரிகளையும் கூட சங்கடத்தில் ஆழ்த்தியது என்றால் மிகையல்ல.

அதுவரை லட்சங்களிலேயே புழங்கியவர்களை கோடிகளைப் பற்றி சிந்திக்க வைத்தார் அவர். அதை 'இப்போ இவ்விடயும் கொடியான பிடிக்கென.' என்று கேலியாக கூற ஆரம்பித்தனர். அவர்கள் 'இவ்விடயும்' அதாவது 'இங்கேயும்' என்று கூறியது கேரளத்தில் கம்யூனிச கொடிகளை பிடித்தவாறு தினமொன்றுக்கு செல்லும் ஊர்வலத்தைக் குறித்துதான் என்பது அனைவருக்கும் விளங்கியது.

என்றாலும் ஒரு வங்கி முதல்வரை எதிர்த்து தலைமையக அதிகாரிகளே செயல்பட முடியாதல்லவா? ஆகவே அவரை சகித்துக்கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவர்களுக்கு. ஆனால் தங்களுடைய எதிர்ப்பை மறைமுகமாக காண்பிக்க ஆரம்பித்தனர்.

கிளைகளிலிருந்து வரும் பெருந்தொகைக்கான கடன் பரிந்துரைகளை தேவைக்கும் அதிகமான சிரத்தையுடன் பரிசீலிக்க ஆரம்பித்தனர். அதாவது எப்படியெல்லாம் கடன் வழங்காமலிருப்பது என்ற கண்ணோட்டத்துடன். It is easy to reject than to sanction என்பார்கள். அதாவது குறைசொல்வது எளிது என்பதுபோல. ஆக்கத்தைவிட அழிப்பது எளிதல்லவா?

ஏற்கனவே வங்கி முதல்வரின் அதிரடி நடவடிக்கைகளால் கலங்கிப் போயிருந்த கிளை மேலாளர்கள் எங்களுடைய மத்திய கடன் வழங்கும் இலாக்காவினரின் எதிர்மறையான செயல்பாட்டால் மேலும் குழம்பிப் போயினர்.

எங்களுடைய வங்கி முதல்வர் பொருளாதார செய்தித்தாள்களில் (Financial Newspapers) தினசரி வெளியாகும் நிறுவனங்களின் நிதியறிக்கைகளை படித்துவிட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் முதல்வருக்கோ அல்லது உயர் அதிகாரிகளுக்கோ நேரடியாக 'உங்களுடைய நிறுவன கடன் தேவைகளுக்கு அருகிலுள்ள எங்களுடைய வங்கி கிளை மேலாளர்களை தொடர்பு கொள்ளுங்கள்' கடிதம் எழுதிவிடுவார். அன்றோ வங்கிகளிலிருந்து கடன் பெறுவது சிரமமாக இருந்த காலம். இன்று பதிமூன்றிலிருந்து பதினைந்தாக இருக்கும் கடன் வட்டி விகிதம் அன்று பதினாறிலிருந்து பதினெட்டு வரை இருந்த காலம்.

ஆகவே எங்களுடைய வங்கி முதல்வரிடமிருந்து கிடைக்கப்பெற்ற கடிதம் சகிதம் கிளை மேலாளர்களை (குறிப்பாக சென்னை, மும்பை, தில்லி நகரங்களிலுள்ளவை) அணுகினாலே போதும், கடன் கிடைத்த மாதிரிதான் என்ற நினைப்புடன் அணுகும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் மற்றும் நிதியறிக்கைகளைப் பெற்று தங்களுடைய பரிந்துரையுடன் கிளை மேலாளர்கள் தலைமையகத்துக்கு அனுப்புவது வழக்கம். ஆனால் அவை யாவுமே சுவரில் அடித்த பந்தாக ஏதாவது ஒரு காரணத்திற்காக திரும்பிவந்தால்?

ஆனால் வங்கி முதல்வரின் செயல்பாட்டை தோல்வியுறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்ட அதிகாரிகள் பிடிபட அதிக நாள் எடுக்கவில்லை. கடன் பரிந்துரைகளை சமர்ப்பித்த சில அனுபவமிக்க கிளை மேலாளர்கள் அவை சில கற்பனையான காரணங்களுக்காக மறுக்கப்பட்ட போது வங்கி முதல்வரிடமே நேரடியாக புகாரளிக்க முதல்வர் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார்.

அடுத்த சில வாரங்களிலேயே கடன் வழங்கும் இலாக்காவில் சொகுசாக பணியாற்றிக்கொண்டிருந்த சில அதிகாரிகள் தில்லி, மும்பை, கொல்கொத்தா போன்ற பெரு நகரங்களுக்கு கிளை மேலாளர்களாக மாற்றப்பட்டனர். அதாவது அவர்கள் சற்று முன்பு நிராகரித்த அதே கடன் பரிந்துரைகளை அவர்களே மீண்டும் பரிந்துரைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.

அவர்களுடைய இடத்திற்கு வங்கியின் இயக்குனர் குழுவின் அனுமதியுடன் சி.ஏ. பட்டம் பெற்ற இளைஞர்களை மத்திய கடன் வழங்கும் இலாக்காவிலும் பெருநகரங்களில் இயங்கிவந்த என்னுடையதைப் போன்ற வட்டார அலுவலகங்களிலும் பணிக்கு அமர்த்தினார். அத்துடன் கடன் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணியில் என்னைப் போன்ற பேங்கிங் அதிகாரிகளுக்கு இருந்த பங்கு (Role) வெகுவாக குறைக்கப்பட்டது. அதாவது ஒரு குறிப்பிட்ட அளவுக்குட்பட்ட கடன் பரிந்துரைகளை மட்டும் எங்களைப் போன்ற அதிகாரிகளும் அதற்கு மேற்பட்ட பரிந்துரைகளை சி.ஏ. பட்டதாரிகளும் பரிசீலிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

பார்ப்பதற்கு சாதுவாக தென்பட்ட முதல்வர் உண்மையில் அப்படிப்பட்டவரல்ல என்பதை இத்தகைய அதிகாரிகள் உணர ஆரம்பித்தனர். விளைவு? அடுத்த ஐந்தாறு மாதங்களில் வங்கியின் கடன் வழங்கும் முறை அடியோடு மாறியது. முன் அனுபவம் இல்லாத சி.ஏ பட்டதாரிகளுடைய பரிந்துரையை மட்டுமே ஏற்று வட்டார மேலாளர்கள் கடன் விண்ணப்பங்களை மேலிடத்திற்கு பரிந்துரைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இப்போதுள்ளது போன்று அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளுக்கு இணையாக செயல்பட்டு வரும் இரண்டாம் தலைமுறை தனியார் வங்கிகள் அப்போது இல்லை என்பதால் அரசு வங்கிகளில் கடன் பெறமுடியாத பல fly by night operators எனப்படும் தரம் குறைந்த நிறுவனங்கள் எங்களைப் போன்ற வங்கிகளுக்கு படையெடுக்க துவங்கியிருந்த காலம் அது.

பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் கடன் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத அரசு வங்கிகள் independent lending என்ற முறையிலிருந்து consortium lending என்று புதிய கடன் வழங்கும் பாணியை அறிமுகப்படுத்தியதும் இந்த காலக்கட்டத்தில்தான்.

எங்களுடைய வங்கி முதல்வரும் நாட்டின் முதன்மை அரசு வங்கியிலிருந்து வந்தவர் என்பதால் அந்த வங்கியின் தலைமையில் இயங்கிவந்த consortium குழுவில் அங்கத்தினராகி அவர்கள் கடன் வழங்கியிருந்த பெருவாரியான நிறுவனங்களுக்கு எங்களுடைய வங்கியும் கடன் வழங்குவது என முடிவு செய்தார். எங்களுடைய வங்கி கிளை மேலாளர்களுக்கு corporate advance proposals பரீசிலனை செய்யக் கூடிய திறன் இல்லை என்பதால் இத்தகைய வங்கி குழுக்களுடன் சேர்ந்து கடன் வழங்குவதன் மூலம் மட்டுமே விரைவில் இத்தகைய கடன்களை வழங்க முடியும் என்பது அவருடைய வாதமாக இருந்தது.

அவருடைய அணுகுமுறையில் எங்களுடைய வங்கி உயர் அதிகாரிகள் பலருக்கும் விருப்பம் இல்லையென்றாலும் அத்தகைய கடன்கள் வழியாக அந்த வருட இறுதியில் வங்கிக்கு கிடைத்த கணிசமான வட்டி வருமானம் வங்கியின் ஒட்டுமொத்த லாப விழுக்காட்டை மிக அதிக அளவில் உயர்த்தியபோது அதிகாரிகளின் வாதம் வெறும் வீம்பு என இயக்குனர் குழு முடிவு செய்தது!

அதுவரை கிளை மேலாளர்களின் செயல்பாட்டின் மூலம் கிடைக்கப் பெற்றிருந்த லாபம் இனி வங்கி முதல்வரின் திறமையான செயல்பாட்டால் மட்டுமே கிடைக்கும் என்பதுபோன்ற முடிவுக்கு எங்களுடைய வங்கியின் இயக்குனர் குழு வந்தது ஒரு துரதிர்ஷ்டவசமான விஷயம்..

வங்கிய அந்த வருடத்திய நிதியறிக்கை வெளியீடு நிகழ்ச்சியில் எங்களுடைய வங்கி முதல்வரின் திறமையான செயல்பாட்டால்தான் வங்கியின் லாப விழுக்காடு பெருமளவில் பெருகியது என்ற அறிக்கையும் வெளியிடப்படவே வருடக் கணக்காக திறம்பட செயல்பட்டு வந்த பல உயர் அதிகாரிகள் சோர்ந்து போயினர் என்பதும் உண்மை.

வங்கியின் இயக்குனர் குழு தன்னுடைய பாணியை அங்கீகரித்தாகிவிட்டது, ஆகவே அதே பாணியில் தொடர்ந்து செல்வது என்ற முடிவுக்கு வந்திருந்த எங்களுடைய வங்கி முதல்வர் மேலும் ஒரு தேவையற்ற காரியத்தை செய்தார்.

அதுவே அவருடைய வீழ்ச்சிக்கும் காரணமாயிருந்தது...


தொடரும்

04 ஜூன் 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 62

என்னுடைய வங்கி முதல்வர் உடனே என்னுடைய நெல்லை நண்பர் அளித்திருந்த விளக்கத்தை பற்றி பேச ஆரம்பித்தார். 'நீங்க அவர் ரிப்ளை பண்ணத பாத்தீங்களா டிபிஆர்?'

உண்மையில் அவர் அதுவரை அந்த கடிதத்தை என்னிடம் காட்டவில்லை.. ஆகவே, 'இல்லை சார். ஆனா என்ன எழுதியிருக்கேன்னு அவர் சொன்னார்.' என்றேன் தயக்கத்துடன்.

'என்ன டிபிஆர்.. ஒரே ஆஃபீஸ்ல வேலை பாக்கீங்க இப்படி சொன்னா எப்படி? அவர் எழுதியிருக்கறத வச்சி இனி என்க்வயரியே தேவையில்லை...Straight away we can intitiate punishment proceedings against him.' அப்படீன்னு நோட் எழுதி என் டேபிளுக்கு அனுப்பியிருக்கு டிபார்ட்மெண்ட்..'

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சாதாரணமாக இத்தகைய பரிந்துரைகள் சேர்மனின் மேசையை அடைய எப்படியும் ஒரு மாத காலம் தேவைப்படும். ஆனால் இரு வாரங்களிலேயே இது அவருடைய மேசையை அடைகிறது என்றால் இதற்குப் பின்னால் யாரோ இருக்க வேண்டும் என்று தெளிவானது. மேலும் 'நீ தவற்றை ஏற்றுக்கொள் நான் உன்னை என்க்வயரியில் காப்பாற்றுகிறேன்' என்று அவருடைய வட்டார மேலாளர் உறுதியளித்திருக்க அவருக்கு தெரியாமலா என் நண்பருக்கு தண்டனை வழங்க ஆய்வு இலாக்கா பரிந்துரைத்திருக்கும் என்று நினைத்தேன்.

என்னுடைய வங்கி முதல்வரின் கேள்விக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது தெரியாமல் என்னுடைய மேசையிலிருந்து இரண்டு மேசைகள் அப்பால் அமர்ந்திருந்த என்னுடைய நண்பரைப் பார்த்தேன். அவர் மும்முரமாக பணியில் ஈடுபட்டிருப்பதைக் காண முடிந்தது.

'என்ன டிபிஆர் பதிலையே காணம்... What do you want me to do...?' என்றவர் அவரே தொடர்ந்து, 'ஓ நீங்க ஆஃபிஸ்லருந்து வெளிப்படையா பேச முடியலை இல்லையா? நீங்க ஒன்னு பண்ணுங்க நீங்க அவரையும் கூட்டிக்கிட்டு என்னோட சன் வீட்டுக்கு ஒரு எட்டு மணிப் போல வாங்க...நான் கூப்பிடறேன்.. பை...' என்ற கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

அலுவலகம் முடிந்ததும் என்னுடைய நண்பரிடம் எங்களுடைய வங்கி முதல்வர் என்னிடம் தெரிவித்தை விளக்கிக் கூறினேன். 'நான் அப்பவே ஒங்க ஜோனல் மேனேஜர் இப்படி செஞ்சாலும் செய்வார்னு சொன்னேன்.. நீங்கதான் கேக்கலை... இப்ப சேர்மனே நா என்னச் செய்யட்டும்னு கேக்கார். என்ன சொல்லப் போறீங்க?'

'அடப்பாவி அந்த பய அப்படியா செஞ்சான்... இருங்க இப்பவே அந்தாளுக்கு ஒரு போன போட்டு நாக்க புடிங்கறா மாதிரி கேக்கேன்.' என்று படபடத்தார்.

நான் இப்படியும் ஒரு வெகுளியா என்று நினைத்தேன். 'இங்க பாருங்க சார்... நீங்க அவர் கிட்ட போயி கேட்டீங்கன்னா இது ஒங்களுக்கு யார் சொன்னான்னு கேப்பார். சேர்மந்தான் சொன்னாருன்னு சொல்ல முடியாது. அதனால சேர்மன் இன்னைக்கி சாயந்தரம் என்ன சொல்றார்னு கேட்டுட்டு ஒரு முடிவுக்கு வருவோம்.' என்று அவரை வற்புறுத்தி அழைத்துக்கொண்டு சேர்மனுடைய மகனுடைய வீட்டிற்கு சென்றேன்.

அவர் எடுத்த எடுப்பிலேயே என்னுடைய நெல்லை நண்பர் என்னருகில் இருக்கிறாரா என்று கேட்டுவிட்டு அவரிடம் பேசினார்.

சிறிது நேரம் சரி, சரி என்று தலையை அசைத்துவிட்டு என்னிடம் ஒலிவாங்கியை நீட்டினார். 'டிபிஆர் I was told that he has been misled by his zonal manager. ஆனா இதுல இங்கருந்து என்னால ஒன்னும் செய்ய முடியாது. இதுக்கு ஒரே வழி அவரோட எக்ஸ்பிளனேஷன retract பண்றதுதான். I can't compel him to do that. But I was told by one of my department heads that he is innocent and hence we should order a proper enquiry before initiating action against him... அதுக்கு அவர் குடுத்த எக்ஸ்ப்ளனேஷன திருப்பி வாங்குனாத்தான் முடியும். I can hold back my decision for a few days... அதுக்குள்ள அவரோட ரிக்வெஸ்ட் வரணும்... நீங்க எடுத்து சொல்லி செய்ங்க...'

இதைத்தான் நானும் சொன்னேன்... என்னுடைய தொழிற்சங்க நண்பரும் சொன்னார்.

'என்ன சார் இப்பவாவது அத திருப்பி வாங்கறீங்களா?' என்றேன்..

சரி என்று அரைமனதுடன் தலையை அசைத்தார் அவர்.

அடுத்த நாளே நான் அலுவலகம் திரும்பியதும் என்னுடைய தொழிற்சங்க நண்பரை அணுகி, 'சார் அவர் தன்னோட எக்ஸ்ப்ளனேஷன திருப்பி வாங்கறதுக்கு ஒத்துக்கிட்டார்... நீங்க ஒரு லெட்டர் டிராஃப்ட் பண்ணி தாங்களேன்.' என்றேன்..

அவரோ, 'செய்யறேன்... ஆனா ஒங்க ஃப்ரெண்ட் எழுத்து மூலமா எங்கிட்ட கேக்கணும்... இது யூனியன் சமாச்சாரம்... ஒர் மெம்பரோட ரிட்டன் ரிக்வெஸ்ட் இல்லாம இதுல நாங்க தலையிடக்கூடாது.' என்று மறுத்துவிட்டார்.

என்னுடைய நண்பரோ, 'எதுக்கு அவங்கிட்ட போய் நிக்கணும்னேன்... நாமளா எழுதி போட்டுருவோம்.... நா ஏதோ டென்ஷன்ல அப்படி எழுதிட்டேன்... அதனால அத திருப்பி தந்துருங்கன்னு எழுதிர வேண்டியதுதானே?' என்றார் கூலாக...

எனக்கு அவருடைய வெகுளித்தனத்தைப் பார்த்து சிரிப்புத்தான் வந்தது.

பிறகு அவரை வற்புறுத்தி வங்கியின் எந்த விதிகளையும் தான் மீறவில்லையென்றும் கிளையிலிருந்து கடன் கொடுக்கப்படுவதற்கு முன்பே வட்டார மேலாளரிடம் கலந்தாலோசித்தேன் என்றும் எழுத வைத்தேன்... 'டிபிஆர் இது உண்மைதான்னாலும் ஜோனல் மேனேஜர இதுல இழுத்து விடறது சரின்னு தோனலை.' என்றார் இறுதியில்.

அவர் அதில் பிடிவாதமாக இருக்கவே அந்த பகுதியை நீக்கிவிட்டு, 'வங்கி நடத்தவிருக்கும் விசாரனையில் நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்க முடியும்' என்ற கோரிக்கையை சேர்த்து அடுத்த நாளே அனுப்பிவைக்க எங்களுடைய வங்கி முதல்வர் அதை ஏற்றுக்கொண்டு விசாரனைக்கு உத்தரவிட்டார்.

விசாரனையதிகாரியாக எங்களுடைய முந்தைய வட்டார மேலாளர் நியமிக்கப்பட்டதைக் கேள்விப்பட்ட நான் மகிழ்ச்சியடைந்தேன். ஏனெனில் அவர் விஷயஞானம் உள்ளவர் என்பதுடன் பாரபட்சமில்லாமல் நடந்துக்கொள்ளக் கூடியவர். ஆயினும் நிர்வாகத்தினர் சார்பாக வாதாடுவதற்காக நியமிக்கப் பட்டவருடைய பெயரைக் கண்டதும் என்னுடைய நண்பர் கவலையடைந்தார். அவருக்கும் தனக்கும் ஏற்கனவே தனிப்பட்ட விரோதம் இருந்திருக்கிறது. 'இந்த பயலையா போடணும்? அதான் டிபிஆர்.... உண்மைய மறைக்கறது சரியில்லைன்னு சொன்னேனே கேட்டீங்களா? இப்ப பாருங்க கடவுளோட கோபம் என் மேல திரும்பிருச்சி... நா என்ன கரடியா கத்துனாலும் இவன் அத ஒடச்சி எறிஞ்சிருவான்.... சரியான ஃப்ராடுப் பய...'

என்னுடைய அலுவலகத்திலிருந்த தொழிற்சங்க நண்பர் இதைக் கேள்விப்பட்டதும், 'டிபிஆர் இவன என்னெ மாதிரியான ஆளுங்களாலதான் சரியா கவுண்டர் பண்ண முடியும்... இவர் யாரோட டிஃபென்சும் இல்லாம என்க்வயரிக்கு போனா நிச்சயம் அது இவருக்கே பிரச்சினையாத்தான் முடியும்... அவர்கிட்ட சொல்லி ஒரு சிம்பிள் ரிக்வெஸ்ட்... என்க்வயரிக்கு எனக்காக ஆஜராவுங்கன்னு எழுதிக் குடுக்க சொல்லுங்க.. மத்தத நாங்க பாத்துக்கறோம்...' என்றார்.

ஆனால் அப்போதும் என்னுடைய நண்பர் ஒத்துக்கொள்ளவில்லை...அத்துடன் 'நீங்க இதுல தலையிடாதீங்க டிபிஆர்... ஒங்க பேச்ச கேட்டு ஒருதரம் செஞ்ச முட்டாத்தனத்தால இப்ப எங்க ஜோனல் மேனேஜரையும் பகைச்சிக்கிட்டாச்சி... அவர் செஞ்ச வேலைதான் இவர மேனேஜ்மெண்ட் ரெப்பா போட்டுருக்கு.... என்னெ என் போக்கிலயே விட்டுருங்க...' என்றார் எரிச்சலுடன்.

சரி அவர் தலையெழுத்து போலவே ஆகட்டும் என்று நானும் அத்துடன் ஒதுங்கிக் கொண்டேன்...

சாதாரணமாக இத்தகைய விசாரனையில் தங்களை காப்பாற்றிக்கொள்ள சம்பந்தப்பட்ட கிளைக்கு குறைந்தது ஒருவாரத்திற்கு முன்பு சென்று தேவைப்படும் ஆவணங்களை கிளையிலிருந்து எடுத்து வாசிக்கவும் நகலெடுக்கவும் அனுமதி உண்டு. அதற்குண்டான பயண கட்டணம் மற்று விடுதிக்குண்டான செலவையும் வங்கியே அளிப்பதுண்டு. ஆனால் என்னுடைய நண்பர் அதல்லாம் தேவையில்லை என்று மறுத்துவிட்டார்.

எவ்வித தயாரிப்பும் இல்லாமல் விசாரனை துவங்கவிருந்த தினத்தன்று அவருடைய முந்தைய வட்டார மேலாளரை அவர் தங்கியிருந்த விடுதிக்கே சென்று தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து தன்னை எப்படியாவது விசாரனையில் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அவருடன் இருந்த நிர்வாகத்தின் சார்பாக வாதாடவிருந்த அதிகாரியிடமும் தங்களுக்குள் இருந்த முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொள்ள வேண்டம் என்றும் கெஞ்சியிருக்கிறார். இருவரும் எமகாதகர்கள்... என்னுடைய நண்பர் கூறியதை அப்படியே விசாரனை அதிகாரியின் முன் எழுத்து மூலம் சமர்ப்பிக்க அவர் வேறு வழியில்லாமல் அவற்றை விசாரனை குறிப்புகளில் சேர்த்திருக்கிறார்.

விளைவு? கடன் வழங்கியதன் சம்பந்தமாக நடந்த அனைத்து விதிமீறல்களுக்கும் என்னுடைய நண்பரையே பொறுப்பாக்கி விசாரனையை முடித்துவிட்டார் என்னுடைய முன்னாள் வட்டார மேலாளர். விசாரனை நடந்த முடிந்து இரண்டு நாட்கள் கழித்து அவரை நான் தொலைபேசியில் தொடர்புக் கொண்டபோதுதான் இவையெல்லாம் எனக்கு தெரிய வந்தது. 'எனக்கு வேறு வழி தெரியல டிபிஆர்... நா சாடை மாடையா ஒங்க ஃப்ரெண்டு கிட்ட சொல்லியும் அவர் பிடிவாதமா நா அப்படி சொன்னது உண்மைதான்னு ஒத்துக்கிட்டார்... As an enquiry officer I just could not do anything else.' என்றார் அவர் தொலைபேசியில்.

இப்படியும் ஒரு முட்டாளா என்றுதான் எண்ணத் தோன்றியது... ஆயினும் என்னால் வேறொன்றும் செய்ய முடியவில்லை...

நான் அடுத்த நாளே என்னுடைய வங்கி முதல்வரை அவருடைய வீட்டு தொலைபேசியில் அழைத்து விசாரனை அதிகாரி என்னிடம் கூறியதை கூறினேன். அவர் அதிகம் பேசாமல், 'ஓகே டிபிஆர் let me see.' என்று முடித்துக்கொண்டார்.

விசாரனை அதிகாரி சமர்பித்திருந்த அறிக்கையின்படி தண்டனை வழங்கும் அதிகாரி அவருக்கு பத்து வருட ஊதிய உயர்வை நிறுத்தி வைத்ததுடன் அவருடைய அப்போதைய பதவியிலிருந்து ஒரு நிலை இறக்க வேண்டும் என்ற அதிகபட்ச தண்டனையை பரிந்துரைத்தார்.

அந்த தீர்ப்பை மிக எளிதாக மேல் முறையீடு செய்து குறைத்திருக்கலாம். ஆனால் அந்த தீர்ப்பைக் கண்டதும் மனமுடைந்துப் போன என்னுடைய நண்பர், 'இதான் கடவுளின் சித்தம் போலருக்கு... நா அப்பீல்னுல்லாம் போகப்போறதில்லை.' என்றார் உறுதியுடன்...

ஆனால் அவருடைய மேல் முறையீடு இல்லாமலே எங்களுடைய வங்கி முதல்வர் ஐந்து ஊதிய உயர்வை நிறுத்தி வைத்தால் போதும் பதவியிறக்கம் தேவையில்லை என்று இயக்குனர் குழுவுக்கு பரிந்துரைத்தார்.

சம்பந்தப்பட்ட நபரின் முறையீடு இல்லாமலே வங்கி முதல்வருக்கு தண்டனையை குறைக்கவோ கூட்டவோ அதிகாரம் இருந்தாலும் இயக்குனர் குழு அதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவில்லை.. இதற்கும் என்னுடைய நண்பருடைய வட்டார முதல்வர்தான் காரணம். இயக்குனர் குழுவிலிருந்த சில முக்கிய இயக்குனர்களிடத்தில் அவருக்கு செல்வாக்கு இருந்ததை என்னுடைய வங்கி முதல்வரே அறிந்திருக்கவில்லை...

இறுதியில் இயக்குனர் குழு என்னுடைய நண்பருக்கு ஐந்து ஊதிய உயர்வை நிறுத்தி வைத்ததுடன் பதவியிறக்கத்தையும் உறுதி செய்து தீர்ப்பளித்தது.

விசாரனை நடந்து முடிந்து சுமார் இருபது வருடங்கள் ஓடிவிட்டன. ஆனால் அவருடைய துரதிர்ஷ்டம் இப்போதும் அதே நிலையில் இருக்கிறார். அவருடைய் ஊதிய உயர்வு நிறுத்தத்தாலும் பதவியிறக்கத்தாலும் குறைந்த பட்சம் பத்து லட்சத்திற்கும் மேல் அவருக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும்...

ஆனால் அவருக்கு துரோகம் இழைத்த வட்டார மேலாளர் அடுத்த வருடமே துணை பொது மேலாளராக பதவி உயர்வு பெற்றார்.

ஆனால் தெய்வம் நின்று கொல்லும் என்பது சரியாக இருந்தது...

சுமார் மூன்று வருடங்கள் கழித்து எங்களுடைய வங்கி முதல்வர் மாறி வேறொருவர் வந்தார். இவர் வேறொரு பிரச்சினையில் சிக்கிக்கொள்ள அவர் சம்பந்தப்பட்ட முந்தைய கோப்புகளை வாசித்த புதிய முதல்வர் என்னுடைய நண்பருக்கு இழைத்த அநீதியையும் படித்திருக்க வேண்டும். செய்த குற்றத்திற்கு தப்பித்தவன் செய்யாத குற்றத்திற்கு தண்டிக்கப்படுவான் என்பதுபோல் எங்களுடைய வங்கி சரித்திரத்திலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட முதல் துணைப் பொது மேலாளர் என்ற பெருமை? அவருக்கு கிடைத்தது.

ஆனால் அவருடைய பணிநீக்கம் என் நண்பர் அனுபவித்த பாதிப்பை எந்தவிதத்திலும் குறைக்கவில்லை என்பதுதான் வேதனை..


தொடரும்...

22 மே 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 61

என்னுடைய நண்பர் தன்னுடைய தவறுகளை ஏற்றுக்கொண்டதற்கு இன்னொரு காரணமும் இருந்தது என்பது பிறகுதான் எனக்கு தெரிந்தது.

என்னுடைய அலுவலகத்தில் பணியாற்றிய தொழிற்சங்க துணைத்தலைவர் ஒரு நாள் மாலை நான் அலுவலகத்திலிருந்து புறப்பட்டுக்கொண்டிருக்கையில் என்னுடைய மேசைய அணுகி, 'டிபிஆர் ஒரு நிமிஷம் உங்களிடம் பேச வேண்டும்' என்றார்.

நானும் என்னுடைய நண்பரும் சேர்ந்துதான் அலுவலகத்திலிருந்து புறப்படுவோம். ஏனெனில் அவரும் நானும் ஒரே பகுதியில்தான் குடியிருந்தோம். மேலும் அவருக்கு வாகனம் என்று எதுவும் இருக்கவில்லை. இப்போதும் அப்படித்தான். எங்கு சென்றாலும் ஒன்று நடை, அல்லது ஆட்டோ.

ஆகவே அன்று என்னுடைய தொழிற்சங்க நண்பர் என்னிடம் ஏதோ பேச வேண்டும் என்று அணுகியதும் நான் சற்று தயங்கினேன். 'நாளைக்கு காலைல பேசலாமா?' என்றேன்.

அவருக்கும் என்னுடைய தயக்கத்தின் காரணம் தெரிந்தது. ஆயினும் அவர், 'டிபிஆர் நீங்க இவர போகச் சொல்லிட்டு வாங்க. அவர் விஷயமாத்தான் பேசணும்.' என்றார் சற்று உரக்க.

நான் கூறாமலே என்னுடைய நெல்லை நண்பர் புரிந்துக்கொண்டு, 'சரி டிபிஆர் நாளைக்கு பார்க்கலாம்' என்று கூறிவிட்டு வெளியேறினார்.

அவர் செல்லும் வரை காத்திருந்த என்னுடைய தொழிற்சங்க நண்பர், 'டிபிஆர். நீங்க பல தடவை சொல்லியும் அவர் அந்த மாதிரி பதில் எழுதி அனுப்புனதுக்கு காரணம் இருக்கு.' என்றார் ஒரு sly புன்னகையுடன்.

நான் என்ன என்பதுபோல் அவரைப் பார்த்தேன்.

'இவரோட ஜோனல் மேனேஜர் இவர கூப்ட்டு 'நீ எல்லா தப்பையும் ஒத்துக்கோ. நா என்க்வயரி டைம்ல ஒன்னெ காப்பாத்தறேன்'னு சொல்லியிருக்கார்.

நான் வியப்புடன் 'அப்படியா? ஏன்?' என்றேன். அவர் சொல்ல வந்தது எனக்கு லேசாக புரிந்தாலும் அவர் வாயிலிருந்தே அதை கேட்க விரும்பினேன்.

'இவர் அந்த லோன குடுக்கட்டுமா சார்னு அவர்கிட்ட கேட்டுட்டுத்தான் குடுத்துருக்கார். அவரும் அந்த டீலர அவரோட ஆஃபீசுக்கு வரச் சொல்லி 'வாங்க' வேண்டியத வாங்கிக்கிட்டு ஃபோன்ல இவர கூப்ட்டு குடுங்கன்னு சொல்லியிருக்கார். இவர் எழுத்து மூலமா சாங்ஷன் தாங்க சார்னு கேக்காம சரின்னு ஓரலா சொல்லிட்டு லோனையெல்லாம் குடுத்துருக்கார்.'

இது நான் எதிர்பாராதது. என்னுடைய நண்பர் 'நான் லோன குடுத்த விஷயம் எங்க ஜோனல் மேனேஜருக்கு தெரியும்' என்று சொன்னதை அவர் கடன்களை கொடுத்துவிட்டு இறுதியில் ஒரு ரிப்போர்ட் அனுப்பியிருப்பார் என்றுதான் நினைத்தேன். சாதாரணமாக அத்தகைய ரிப்போர்ட்களை ஜோனல் அலுவலகத்திலிருக்கும் கடைநிலை அதிகாரி என்ன, ஏது என்று பார்க்காமலே கோப்பில் சேர்த்துவிடுவதை என்னுடைய அலுவலகத்திலேயே பார்த்திருக்கிறேன். ஆகவே என்னுடைய நண்பர் அனுப்பியிருந்த அறிக்கையை அவருடைய வட்டார மேலாளர் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் நினைத்திருந்தேன்.

ஆனால் இவர் கூறுவதைப் பார்த்தால் கடன் வழங்கியதற்குக் காரணமே அவருடைய வட்டார மேலாளர்தான் என்று தெரிந்தது.

'அவருக்கு மேலிடத்துல நல்ல ஹோல்ட் இருக்கு டிபிஆர். இருந்தாலும் இவரே எல்லா தப்பையும் ஒத்துக்கிட்டா தன்னோட பேர் அனாவசியமா கெடாதுல்ல... அதான்... அதுக்கேத்தா மாதிரி இவரும் அவர் சொன்னத அப்படியே நம்பி எல்லாத்துக்கும் நாந்தான் காரணம்னு எழுதி குடுத்துட்டார். நீங்க வேணா பாருங்க அந்த ஜோனல் மேனேஜரே மேனேஜ்மெண்ட் விட்னசா வந்து இவருக்கு எதிரா சாட்சியம் குடுக்கப் போறார். இவரும் வேற வழியில்லாம எல்லாத்தையும் ஒத்துக்கிட்டு பனிஷ் ஆகப்போறார்.' என்றார் என்னுடைய தொழிற்சங்க நண்பர்.

'ஒங்க எக்ஸ்ப்ரீயன்ஸ் படி இதுக்கு என்ன பனிஷ்மெண்ட் கிடைக்கும் சார்?' என்றேன்..

'வேலை போகாதுன்னு நினைக்கேன்.. ஏன்னா லோன் வாங்குனவங்கள்ல பாதி பேர் கட்டியிருக்காங்களே... அதனால் இது ஒரு ஃப்ராடுன்னு சொல்ல முடியாது. ஆனா இவர் வையலேட் செஞ்சிருக்கற இன்ஸ்ட்ரக்ஷன் எல்லாம் ரொம்ப சீரியசா இருக்கறதால... அஞ்சாறு இன்க்ரிமெண்ட்ஸ் நிச்சயம் கட்டாகும்... டிமோட் பண்ணாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல.......'

அடப்பாவமே என்று இருந்தது. அவரும் நானும் அப்போது Scale III என்ற மிடில் மேனேஜ்மெண்ட் க்ரேடில் இருந்தோம். இன்னும் ஒரு வருடத்தில் அடுத்த நிலைக்கான பதவி உயர்வு நேர்காணல் நடக்க வாய்ப்பிருந்தது. இந்த நேரத்தில் இவருக்கு டிமோஷன் என்றால்..... இதுவரையிலும் அவர் சாதித்தவையெல்லாமே வீணாகிவிடுமே என்று தோன்றியது..

பழி ஒரு இடம் பாவம் ஒரு இடம் என்பதுபோல் இவருடைய வட்டார மேலாளருடைய தவறான வழிகாட்டுதலால் இவருடைய அலுவலக வாழ்க்கையே பாதிக்கப்படப் போகிறதே என்று நினைத்தேன்.

அவருடைய மூன்று பிள்ளைகளும் மேல் நிலைப் பள்ளியைக் கடக்கின்ற நிலையில் இருந்தனர். இந்த நேரத்தில் இவருக்கு எதிர்வரும் காலத்தில் கிடைக்கவிருந்த ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டால் என்னாவது என்றும் தோன்றியது.

ஆனால் அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடுத்த நாள் அலுவலகத்தில் நுழைந்ததும், 'என்னவாம் அந்த யூனியன் ஆளுக்கு? என்னெ காப்பாத்தறேன்னு சொல்றானா? எல்லாம் ஹம்பக்.. நம்பாதீங்க...' என்றார் சிரிப்புடன்..

'சார் அப்படி சொல்லாதீங்க.' என்றேன் சூடாக. பிறகு அவர் என்னிடம் முந்தைய நாள் கூறியவற்றை சுருக்கமாக எடுத்துரைத்தேன். 'இப்பவும் ஒன்னும் கெட்டுப் போயிரல சார். நீங்க குடுத்த ரிப்ளைய திருப்பி வாங்கிரலாம். நீங்க போய் அவர்கிட்ட ஒரு வார்த்தை சொன்னா போறும். அவரே டிப்பார்ட்மெண்ட் காண்டாக்ட் பண்ணி அத திருப்பி வாங்கிட்டு சூட்டபிளா வேற பதில எழுதி குடுப்பார். நீங்க எதுக்கு சார் ஒங்க ஜோனல் மேனேஜர் பண்ண ஃப்ராடுக்கு பலியாகணும்?'

'டிபிஆர். நான் ஏற்கனவே அவர் சொன்னபடி ரிப்ளை குடுத்தாச்சி.. இனி கடவுள் சித்தப்படி நடக்கட்டும். நான் செஞ்சது தப்புன்னா பனிஷ்மெண்ட் கிடைக்கட்டும்... நா ஏத்துக்க தயார்... ஆனா குடுத்த ரிப்ளைய திருப்பித் தாங்கன்னு நான் போய் கேட்டா அதுவே தப்பாயிரும். அப்புறம் அவர் என்க்வயரியில ஹெல்ப் பண்ண மாட்டார்.' என்றார் சற்றும் கவலைப்படாமல்.

சரி இனியும் வற்புறுத்துவதில் பயனில்லை என்று நினைத்து அந்த விஷயத்தை நானும் மறந்துப்போனேன்..

இரு வாரங்களுக்குப் பிறகு எனக்கு தலைமையகத்திலிருந்து தொலைபேசி வந்திருப்பதாக என்னுடைய இலாக்கா அதிகாரியின் அறையிலிருந்து அழைப்பு வர நான் யாராயிருக்கும் என்று நினைத்தவாறு சென்று எடுத்தேன்.

எதிர்முனையில் என்னுடைய வங்கி முதல்வர்!

'Is there anybody next to you?' என்றார்.

நான் என்னுடைய இலாக்கா அதிகாரியைப் பார்த்தேன். அவர் வேலையில் மும்முரமாக இருந்தாலும் நான் பேசுவதைக் கவனிப்பதை என்னால் உணர முடிந்தது. நான் பட்டும் படாமலும் 'I am in the CM's cabin Sir.' என்றேன்.

அவர் உடனே, 'Tell me number of your personal extension I will ask my PA to call you on that line.' என்றார்.

நான் என்னுடைய மேசையிலிருந்த இண்டர்காம் எண்ணை கூறிவிட்டு துண்டித்தேன். 'சார்... வீட்லருந்து ஒரு ஃபோன்... அதான் என்னோட எக்ஸ்டென்ஷனுக்கு பண்ணச் சொன்னேன்.' என்று சமாளித்துவிட்டு என்னுடைய மேசைக்கு விரைந்தேன். அடுத்த நிமிடமே என்னுடைய தொலைபேசி ஒலிக்க நான் எடுத்து, 'Yes Sir.' என்றேன்.

அவர் உடனே என்னுடைய நெல்ல நண்பர் அளித்திருந்த விளக்கத்தை பற்றி பேச ஆரம்பித்தார். 'நீங்க அவர் ரிப்ளை பண்ணத பாத்தீங்களா டிபிஆர்?'

உண்மையில் அவர் அதுவரை அந்த கடிதத்தை என்னிடம் காட்டவில்லை.. ஆகவே, 'இல்லை சார். ஆனா என்ன எழுதியிருக்கேன்னு அவர் சொன்னார்.' என்றேன் தயக்கத்துடன்.

'என்ன டிபிஆர்.. ஒரே ஆஃபீஸ்ல வேலை பாக்கீங்க இப்படி சொன்னா எப்படி? அவர் எழுதியிருக்கறத வச்சி இனி என்க்வயரியே தேவையில்லை...Straight away we can intitiate punishment proceedings against him.' அப்படீன்னு நோட் எழுதி என் டேபிளுக்கு அனுப்பியிருக்கு டிபார்ட்மெண்ட்..'

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சாதாரணமாக இத்தகைய பரிந்துரைகள் சேர்மனின் மேசையை அடைய எப்படியும் ஒரு மாத காலம் தேவைப்படும். ஆனால் இரு வாரங்களிலேயே இது அவருடைய மேசையை அடைகிறது என்றால் இதற்குப் பின்னால் யாரோ இருக்க வேண்டும் என்று தெளிவானது. மேலும் 'நீ தவற்றை ஏற்றுக்கொள் நான் உன்னை என்க்வயரியில் காப்பாற்றுகிறேன்' என்று அவருடைய வட்டார மேலாளர் உறுதியளித்திருக்க அவருக்கு தெரியாமலா என் நண்பருக்கு தண்டனை வழங்க ஆய்வு இலாக்கா பரிந்துரைத்திருக்கும் என்று நினைத்தேன்.

தொடரும்..

21 மே 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 60

மத்திய ஆய்வுக் குழுவின் இறுதியறிக்கையின் நகலை என்னுடைய நண்பருக்கு அனுப்பி அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமீறல்களுக்கு அவரிடன் விளக்கம் கேட்டபோதுதான் தெரிந்தது அவருடைய பிரச்சினையின் தீவிரம்.

ஆய்வு அறிக்கையின்படி

1. என்னுடைய நண்பர் வழங்கியிருந்த அளவு எண்ணிக்கையில் கடன் வழங்க ஒரு வட்டார மேலாளருக்கே அதிகாரமில்லை. ஆகவே என்னுடைய நண்பர் வழங்கியிருந்த கடன்கள் அனைத்துமே நியதிக்கு மீறியவை.

2. மாத ஊதிய சான்றிதழை வழங்கவோ அல்லது சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுடைய ஊதியத்திலிருந்து மாதத் தவணைகளைப் பிடித்தம் செய்யவோ பள்ளி தலைமையாசிரியருக்கு அதிகாரம் இருக்கவில்லை. சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிக்கே அந்த அதிகாரம் இருந்தது. ஆனால் அத்தகைய சான்றிதழை வழங்கிய விவரமே தங்களுக்கு தெரியாது என்று எல்லா நிர்வாகிகளுமே ஆய்வுக் குழுவிடம் தெரிவித்ததாக அறிக்கை கூறியது.

3. கடன் பெற்றவர்கள் தங்களுடைய பங்குக்கு செலுத்த வேண்டிய மார்ஜின் தொகையை சாதனங்களை விற்பனை செய்த டீலரே வங்கியில் செலுத்தியிருந்தார்.

4. டீலருக்கு சாதனங்களின் தொகையை வங்கி காசோலையாக வழங்க வேண்டும் என்பது நியதி. ஆனால் எங்களுடைய கிளையிலேயே டீலரை கணக்கு துவக்க அனுமதித்து கடன் தொகையை வரவு (credit) செய்திருந்தார் என்னுடைய நண்பர். பிறகு அதிலிருந்து மொத்த தொகையையும் ரொக்கமாக எடுக்க அனுமதித்திருக்கிறார். இதன் மூலம் கடன் தொகையின் உபயோகத்தை (end use of the loans) கிளை மேலாளர் உறுதி செய்யவில்லை. அத்துடன் வங்கியிலிருந்து கடன் பெற்றிருந்த சிலருக்கு கணக்கிலிருந்து காசோலை (cash cheque) வழங்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுடைய வீடுகளை சென்று பார்த்ததில் கடன் வழங்கப்பட்ட சாதனங்களை அவர்கள் வாங்கவேயில்லையென்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

5. கடன் பெற்றிருந்த பலரும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த விலாசத்தில் வசிக்கவில்லை.

அதாவது ஒரு கடனை வழங்க தேவையான அடிப்படை விதிகளைக்கூட மேலாளர் கடைபிடிக்கவில்லையென்பது ஆய்வில் தெரியவந்தது. இந்த லட்சணத்தில் இருநூறு கடன்களை வழங்கியிருந்தார்!

அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றசாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவருடைய விளக்கம் திருப்தியளிக்காத பட்சத்தில் அவர்மீது விசாரனை நடத்தப்படும் என்று கூறியிருந்தது.

சாதாரணமாக இவ்வாறு விளக்கம் கோரி கடிதம் வரும்போது பாதிக்கப்பட்ட அதிகாரிகள் தங்களுடைய தொழிற்சங்கத்தை அணுகுவது வழக்கம். தொழிற்சங்கத்தில் இதற்கெனவே சில அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் இருப்பார்கள். வேண்டுமென்றே ஊழல் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் இயங்கும் உறுப்பினர்களைத் தவிர மற்றெல்லா உறுப்பினர்களுக்கும் இத்தகைய சமயங்களில் உதவுவதற்கு இவர்கள் தயாராக இருப்பார்கள்.

என்னுடைய நண்பர் நிச்சயம் ஊழலில் ஈடுபடுபவர் அல்ல. அவருடைய நோக்கம் கிளையின் வணிகத்தை கூட்டுவது மட்டுமே என்று அனைவருக்கும் தெரிந்திருந்தது. அதாவது அவரை நன்றாக தெரிந்திருந்தவர்களுக்கு. ஆகவே என்னுடைய அலுவலகத்திலிருந்த பலரும் அவரை தொழிற்சங்கத்தை அணுகும்படி கேட்டனர்.

ஆனால் என்னுடைய நண்பர் ஒத்துக்கொள்ளவில்லை. 'எதுக்கு? நா செஞ்சிருக்கற தப்புன்னுதான் எனக்கே தெரியுதே? ஆனா தப்பான நோக்கத்தோட செய்யலேன்னு எக்ஸ்ப்ளெய்ன் செஞ்சிட்டுப் போறேன்?' என்றார் கூலாக. அவர் சரியான வெகுளி என்பது அப்போதுதான் எனக்கு தெரிந்தது.

சாதாரணமாக நாம் தவறே செய்திருந்தாலும் விசாரனை என்று வந்தால் அதை மறுப்பதுதான் வழக்கம். விசாரனைக்கு உத்தரவிடப்பட்டால் நாமே நமக்காக வாதாடுவதற்குப் பதிலாக தொழிற்சங்க இதில் முன் அனுபவம் உள்ள இத்தகைய அதிகாரிகள் நமக்காக வாதாடுவார்கள்.

அதையும் மீறி நாம் செய்தது தவறுதான் என்பது விசாரனையில் கண்டுபிடிக்கப்பட்டாலும் விசாரணை அதிகாரிக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் இல்லை. அதற்கு வேறொரு அதிகார் இருப்பார். விசாரனை நியாயமாகவும் பாரபட்சமில்லாமலும் நடத்தப்பட்டிருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதுடன் குற்றம் சாட்டப்பட்டவருக்கு தன்னுடைய குற்றத்தை மறுத்துப் பேச போதிய சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டதற்குப் பிறகு வங்கியின் நியதிகளின்படி இன்ன தண்டனை வழங்கலாம் என்று தீர்மானிப்பார்.

ஆனால் அவருடைய தீர்ப்பை எதிர்த்து முறையிட ஒரு மேலதிகாரி நியமிக்கப்பட்டிருப்பார். இவற்றையெல்லாம் கடந்து வங்கியின் இயக்குனர் குழுவிடமும் முறையீடு செய்ய வாய்ப்புண்டு.

ஆனால் இதற்கு தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சம்பந்தப்பட்டவர் மறுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு தான் செய்த தவறுகளை விளக்கம் கோரும் சமயத்திலேயே ஒப்புக்கொண்டுவிட்டால் பிறகு விசாரனைக்கே தேவையில்லாமல் போய்விடும். பிறகு விதிக்கப்படும் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யவும் வாய்ப்பில்லாமல் போய்விடும்.

தங்களுடைய வாதத் திறமையால் விசாரனையின் முடிவில் குற்றம் சாட்டப்பட்ட பல அதிகாரிகளும் அதிலிருந்து தப்பித்ததை நான் கண்டிருக்கிறேன். குற்றச்சாட்டிலிருந்து முழுவதுமாக விடுவிக்கப்படாவிட்டாலும் குற்றச்சாட்டுகளின் தீவிரம் குறைந்துவிடுவதையும் கண்டிருக்கிறேன். ஆகவே பல அதிகாரிகளும் தங்களுடைய தொழிற்சங்கத்தை விளக்கம் கேட்கப்படும் நிலையிலேயே அணுகுவது வழக்கம்.

ஆகவேதான் என்னுடைய நண்பரும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அத்துடன் என்னுடைய அலுவலகத்திலேயே எங்களுடைய தொழிற்சங்கத்தின் துணைத் தலைவர்களுள் ஒருவரும் பணியாற்றிக்கொண்டிருந்ததால் இதற்கென்று கேரளா செல்ல வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. மேலும் அவர் என்னுடைய நெருங்கிய நண்பர்களுள் ஒருவராகவும் இருந்தார். அவருக்கு இதுபோன்ற பல விளக்கக் கடிதங்களுக்கு பதிலளித்த அனுபவமும் இருந்தது. பல இளம் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டிருந்த வீண் பழிகளிலிருந்து மீட்டவர் அவர். மீட்க முடியாமல் போன சமயங்களில் அவர்களுடைய தண்டனையைக் குறைக்க வேண்டி இயக்குனர் குழு வரையிலும் மேல் முறையீடு செய்த அனுபவம் இருந்தது.

ஆனால் என்ன சொல்லியும் என்னுடைய நண்பர் மசிவதாயில்லை. 'என்னைய பொருத்தவரைக்கும் நா ச்செஞ்சது தப்புன்னு தெரியுது டிபிஆர். நா லோன் குடுத்த விஷயம் எங்க ரீஜினல் மேனேஜருக்கும் தெரியும். அதனால நா எந்த தப்பும் ச்செய்யலன்னு சொல்லி மறுபடியும் ஒரு தப்ப ச்செய்ய நா விரும்பல. என்னைய விட்டுருங்க... கடவுள் சித்தப்படி நடக்கட்டும்.'

அவர் கடன்களை வழங்கிய விஷயம் தன்னுடைய வட்டார மேலாளருக்கு தெரியும் என்று கூறினாலும் சம்பந்தப்பட்ட வட்டார மேலாளர் தனக்கு என்னுடைய நண்பர் இதைக்குறித்து எந்த தகவலும் எழுத்து மூலமாக தரவில்லை என்று ஏற்கனவே என்னுடைய தலைமையகத்துக்கு தெரிவித்திருப்பதாக என்னுடைய தொழிற்சங்க நண்பர் என்னிடம் ஏற்கனவே கூறியிருந்தார். அதையும் என்னுடைய நண்பரிடன் கூறி, 'இங்க பாருங்க சார். நீங்க லோன் குடுத்த விஷயம் எனக்கு தெரியும்னு அவர் சொன்னா நிச்சயம் அவர் மாட்டிக்குவார். ஏன்னா அவருக்கே இவ்வளவு பேருக்கு லோன் குடுக்கறதுக்கு அதிகாரம் இல்லை. அதனால அவர் நிச்சயம் ஒங்கள டிஃபென்சுக்கு வரப் போறதில்லை.' என்றேன். ஆனால் அவரோ, 'அவர் அப்படி ச்சொல்லியிருந்தா அவரெ கடவுள் பாத்துக்குவாருங்க.' என்றார் ஒரு பாதிரியாரைப் போல.

மாலைப் பொழுதுகளில் பாதிரியாரைப் போன்று வீட்டிலேயே பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்துபவர்தான் அவர். இன்றும் பிரபலமாக இருக்கும் சி.எஸ்.ஐ. போதகர் ஒருவரின் பரம சிஷ்யர் என்பதால் அவருடைய பேச்சிலும் பாட்டிலும் அந்த சாயல் மிகத் தெளிவாகவே இருந்தது.

ஆனால் நடைமுறை வாழ்க்கையின் நிதர்சனத்தை உணராத மனிதர். நான் எவ்வளவு வற்புறுத்தியும் கேளாமல் அவருக்கு விளக்கம் கேட்டு வந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அனைத்து விதிமீறல்களையும் ஒப்புக்கொண்டதுடன் இனி இத்தகைய தவற்றை செய்ய மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன் என்றும் எழுதி அனுப்பிவிட்டார்.

தொடரும்…

16 மே 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 59

என்னுடைய வங்கி முதல்வரின் போக்குடன் உடன்பாடில்லாத பல வட்டார மேலாளர்களும் மறைமுகமாக அதை எதிர்க்க ஆரம்பித்தனர்.

அதில் மிகவும் முனைப்பாயிருந்தவர் என்னுடைய வட்டார மேலாளர். அவர் எழுதிய சூடான கடிதமும் முதல்வரின் போக்கில் எந்த மாறுதலையும் ஏற்படுத்தவில்லை என்பதை உணர்ந்தவர் இனி நேரடி தாக்குதலில் இறங்குவதில் எந்த பயனுமில்லையென்பதை உணர்ந்தார். ஆகவே அவர் கிளை மேலாளர்களை தொலைபேசியில் அழைத்து நம்முடைய வட்டாரத்தைப் பொருத்தவரை வங்கியின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லையென்றும் பெரிய நிறுவனங்களை நாடிச் செல்ல தேவையில்லையென்றும் கூறலானார்.

இது எப்படியோ வங்கி முதல்வரின் கவனத்திற்கு சென்றது. எப்படியோ என்ன, எல்லாம் எங்களுடைய வட்டார அலுவலகத்திலிருந்த நெல்ல நண்பர் வழியாகத்தான். இந்த விஷயம் எனக்கே பிறகுதான் தெரிய வந்தது. ஆனால் என்னுடைய வட்டார மேலாளருக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டது. அதுமுதல் அவரை அந்த அலுவலகத்திலிருந்து தூக்குவதில் முனைப்பானார்.

என்னுடைய நண்பர் கிளை மேலாளராக பணியாற்றி வெற்றிகள் பல கண்டவர். அவருடைய சமூகத்திற்கே உரிய வணிக சாதுரியம் அவரிடம் நிறையவே இருந்தது. ஆயினும் வங்கியின் நியதிகளைப் பற்றி கவலைப்படமாட்டார். 'நியாயமா பிசினஸ் பண்ணணும்னு வர்றவங்கிட்ட ரூல்ஸ் பேசின என்னவே பிரயோசனம்? நாம சொல்ற ரூலுக்கெல்லாம் சரி, சரின்னு தலையாட்டறவன் வாங்கன கடன திருப்பி கட்டமாட்டான்..' என்பார் கேட்டால். ஆனால் அவர் செயலாற்றிய விதம் அவரை இரண்டு கிளைகளில் வெற்றி பெற்று மூன்றாவதாக சற்று பெரிய கிளையில் மேலாளராக அமர்த்தப்பட்டதுமே சிக்கலில் சிக்க வைத்தது.

நான் வட்டார கிளையில் இரண்டாவது முறையாக சேர்ந்து சுமார் ஆறு மாதங்களில் அவரும் அதே அலுவலகத்தில் வந்து சேர்ந்தார். அப்போது அவருக்கெதிராக விசாரனைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அவருடைய கிளை வேறொரு வட்டாரத்தில் இருந்ததால் அதனுடைய முழுவிவரம் எனக்கு தெரிந்திருக்கவில்லை. அவரும் நெல்லையைச் சார்ந்தவர்தான் என்பது அடுத்த இரு வாரங்களுக்குள் தெரிந்தது. நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததுடன் தமிழ்நாட்டிலிருந்த எங்களுடைய வங்கி கிளைகளில் நான்கைந்தை தவிர பலவற்றில் பணியாற்றியிருக்கவில்லை. ஆகவே அவரை அதற்கு முன்பு சந்தித்திருக்கவில்லை. 'ஒங்கள பத்தி நானும் கேள்விப்பட்டிருக்கேன்... ஏன்னா நம்ம ரெண்டு பேருக்கும் இனிஷியல் மூனு இருக்குல்லே... இந்த மாதிரி திருநெல்வேலிகாரனுக்குத்தான இருக்கும்?' என்றார் ஒருநாள். ஆம்... நா டிபிஆர் என்பதுபோன்றே அவருடைய பெயரையும் மூன்றெழுத்தில் சுருக்கிவிடலாம். நெல்லை, தூத்துக்குடி போன்ற ஊர்களில்தான் குழந்தைக்கு பெயரிடும்போது தாத்தா-பாட்டி, மாமன்மார் பெயர்களையும் சேர்த்துவிடுவார்கள்... நீண்ட பெயரை சொல்லி முடிப்பதற்குள்ளாகவே நாக்கு சுளுக்கிக் கொள்ளும்... ஆகவே பலரும் அதை சுருக்கி வைத்துவிடுவார்கள்...

அவர் முந்தைய கிளையில் வங்கியின் விதிகளை மீறி வழங்கியிருந்த பல கடன்களும் நிலுவையில் நின்றிருந்ததாக அவரே என்னிடம் கூறினார். அதற்காக எங்களுடைய தலைமையகம் அவரிடமிருந்து விளக்கம் கேட்டு அனுப்பியிருந்த கடிதத்தின் நகலை என்னிடம் காட்டி, 'இதப் படிச்சிட்டு நீங்களே சொல்லுங்க டிபிஆர்... இதயெல்லாம் பாத்துக்கிட்டிருந்த பிசினஸ் பண்ண முடியுமா?' என்றார் ஒருநாள்.

அதை வாங்கி படித்தபோதுதான் தெரிந்தது அவருடைய செய்கைகளின் தீவிரம்.

அவர் செய்திருந்ததன் சாராம்சம் இதுதான்..

என்னுடைய நண்பர் வாடிக்கையாளர்களை பிடிப்பதில் மிகவும் சமர்த்தர். அவருக்கிருந்த வாய்ச்சாலகம் அவருக்கு வங்கிக்கு வெளியே பல நண்பர்களைப் பெற்றுத்தந்திருந்தது. ஒரு அசல் வணிகரைப் போலவே பேசுவார். வங்கி கிளை அலுவலகத்தில் அவரைப் பார்ப்பதே கடினம். காலையில் ஒரு மணி நேரம் அலுவலகத்திலிருந்தால் ஆச்சரியம். மீதி நேரங்களில் நகரைச் சுற்றி வந்து வாடிக்கையாளர்கள் பிடிப்பதிலேயே குறியாயிருப்பார். தமிழும் ஆங்கிலமும் சரளமாக வரும் என்பதாலும் பேசுவதில் அதிக ஆர்வம் உள்ளவர் என்பதாலும் அவரால் எவரையும் எளிதில் கவரமுடிந்தது.

ஆனால் அவருடைய பலஹீனம் யாரையும் எளிதில் நம்பிவிடுவது. கஷ்டம் என்று வந்து நின்றால் போதும்.. தனக்கு அத்தகைய கடன் வழங்க அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் பார்க்கமாட்டார். 'கஷ்டம்னு வந்து நிக்கறவங்கிட்ட என்னத்த ரூல்ஸ் பேசறதுங்க... தேவைன்னு வந்து நிக்கறப்ப ஹெல்ப் பண்ண முடியாம ரூல்ஸ் இருந்து என்னத்த ச்செய்யிறது?' என்பது அவருடைய வாதம்.

அதுவும் நடுத்தர, மாச ஊதியம் வாங்குபவர்கள் என்றால் அவருக்கு பயங்கர கரிசனம். அதுவும் ஆசிரியர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அவர் மேலாளராக பணியாற்றிய எல்லா ஊர்களிலும் அவருடைய கிளையில் குறைந்த பட்சம் ஐந்தாறு பள்ளிகளுடைய கணக்குகள் இருக்கும். எல்லா பள்ளி தலைமையாசிரியர்களிடமும் தொடர்பு வைத்திருப்பார். அவர்களுடைய நிகர ஊதியத்தைப் போல் இரண்டு அல்லது மூன்று மடங்கு கடன் வழங்கி மாதமாதம் சம்பள தினத்தன்று அவரே நேரில் சென்று மாதத்தவணையை வசூலிப்பார். 'எதுக்குங்க... ஒங்க ஆஃபீச தேடி வர்றவங்க எவ்வளவோ பேர் இருக்கறப்ப எதுக்கு இந்த லாபம் இல்லாத வேலைய செய்யறீங்க?' என்று அவருடைய உயர் அதிகாரிகள் கேள்வி எழுப்பினால், 'சார்.. நா குடுக்கற லோன்ல டீஃபால்ட் ஏதாச்சும் இருக்கா... இல்லல்லே.. பெறவென்ன?' என்பார். 'சரியான கிறுக்கனாருக்காரே ஒரு லாபமும் இல்லாத இந்த பிசினஸ் வேணாம்னாலும் கேக்க மாட்டேங்கறாரே' என ஏறக்குறைய எல்லா உயர் அதிகாரிகளுமே அவரைக் குறித்து பேசும் அளவுக்கு அவருடைய செயல்பாடுகள் இருந்தன...

முதல் இரண்டு கிளைகளில் அவர் கொடுத்திருந்த பல கடன்களிலும் அவர் மேலாளராக இருக்கும் வரை மட்டுமே தவணைகள் சரிவர செலுத்தப்பட்டிருந்தன. அவர் மாற்றலாகிச் சென்றதுமே வாடிக்கையாளர்கள் மாதத் தவணைகளை நிறுத்திவிட அவர் வழங்கியிருந்த கடன்களில் பெரும்பாலானவை நிலுவையில் நிற்க ஆரம்பித்தன.

ஆகவே அவர் மூன்றாவது அதுவும் வணிக அளவில் சற்று பெரிய கிளைக்கு மேலாளராக நியமிக்கப்பட்டதும் அவருடைய கடன் வழங்கும் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும்... சிறு வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அவருடைய வட்டார மேலாளர் எழுத்து மூலமாக எச்சரித்திருந்தார்.

அவர் அதை ஏற்று முதல் ஆறுமாதங்கள் வரை அத்தகைய கடன்களை வழங்காமல் இருந்திருக்கிறார். ஆனால் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள் அல்லவா?

அவருடைய பேச்சு சாதுரியம் காரணமாக அவரை நகரில் நடக்கும் பல விழாக்களுக்கும் தலைமையேற்று பேசும் வாய்ப்புகள் தேடிவருவதுண்டு. அவருக்கும் அதில் அதிக விருப்பம் என்பதால் எத்தனை வேலைப்பளு இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வார். அப்படித்தான் அவருடைய நகரிலிருந்த ஒரு பள்ளிக்கூட ஆண்டு விழாவில் தலைமையேற்று உரை நிகழ்த்த அழைப்பு வந்தது. விழாவின் இறுதியில் தலைமையாசிரியர் நகரில் டிவி, ஃப்ரிட்ஜ், ரேடியோ வணிகம் செய்து வந்திருந்த ஒரு பெரிய டீலரை அறிமுகப்படுத்தி, 'சார் நம்ம டீச்சருங்களுக்கு டிவி, ஃபிரிட்ஜ் எல்லாம் மாசத் தவணையில இவர் குடுக்க தயாராயிருக்கார்.... ஆனா இவரால கடனுக்கு குடுக்க முடியல... நீங்க நம்ம டீச்சர்ங்களுக்கு ஜாமானோட விலையில ஒரு எழுபது பர்செண்ட் லோன் குடுத்தா நல்லாருக்கும்... டீச்சர்ங்களோட மாச சம்பளத்துலருந்து நா புடிச்சி ஒங்க லோனுக்கு கட்டிடறேன்...' என்று குழைந்திருக்கிறார்...

ஆளுயர மாலை அணிவித்து அவரைப் பற்றி புகழ்ந்து பேசி கவுரவித்த பள்ளி ஆசிரியர்களுக்கு நம்மால் முடிந்தது என்று நினைத்து அங்கேயே தனக்கு அதற்கு அதிகாரம் உள்ளதா என்று கூட கவலைப்படாமல், 'அதுக்கென்ன சார்... செஞ்சிட்டா போச்சி...'என்று வாக்குறிதியளித்துவிட்டு.... அடுத்த இரு வாரங்களிலேயே அந்த பள்ளியில் பணிக்கு இருந்த சுமார் இருபது ஆசிரியர்கள் மற்றும் non-teaching staff எனப்படும் பணியாளர்களுக்கு கடன்களை வழங்கிய விஷயம் காட்டு தீ போல் பரவ நகரிலிருந்த சுமார் பத்து பள்ளிகளும் வங்கியை நோக்கி படையெடுத்தன...

கிளையில் அவருக்கு கீழே பணியாற்றிய மற்ற அதிகாரிகளுடைய அறிவுரையையும் மனிதர் கேட்கவில்லை. 'சார் நா இந்த ஊர்க்காரன் சொல்றேன்... இந்த டீலர் அவ்வளவு நம்பிக்கையானவன் இல்லை...அத்தோட இந்த டீச்சர்ங்களயும் நம்ப முடியாதுசார்...' என்று அதே உரைச் சார்ந்த குமாஸ்தா ஒருவர் தடுத்துரைத்தும் கேட்காமல் சுமார் இருநூறு ஆசிரிய பெருமக்களுக்கு டிவி, ஃபிரிட்ஜ், ஃபர்னிச்சர்கள் வாங்குவதற்கென கடன் வழங்கிவிட்டுத்தான் ஓய்ந்தார்.

ஓரிரு பள்ளிகள் என்றால் மாதா மாதம் சம்பள தினத்தன்று சென்று கடனை வசூலிக்க முடியும். பத்து பள்ளிகள் என்றால்... அதுவும் கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை இருநூறு!

முதல் இரு மாதங்களில் கடன் வசூலிப்பில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை.. மூன்றாம் மாதம் சுமார் நூறு பேர் அடைக்கவில்லையென்பதை கிளை அதிகாரிகள் அவருடைய பார்வைக்கு கொண்டு செல்ல, 'பரவால்லைவே... அதா அடுத்த மாச சம்பளத்துலருந்து பிடிச்சி கட்டிடறேன்னு எச்.எம் லெட்டர் குடுத்திருக்காரில்ல... பாத்துக்குவம்...' என்று சமாளித்திருக்கிறார்.. ஆனால் அதற்கடுத்த மாசம் முந்தைய மாதம் அடைத்தவர்களுள் பலரும் டிமிக்கி கொடுத்திருக்கிறார்கள்... இதற்கிடையில் விஷயம் வட்டார அலுவலகத்திற்கு செல்ல, 'எப்படி நீங்கள் அதிகாரம் இல்லாமல் இந்த அளவுக்கு கடன் வழங்கலாம்?' என்று விளக்கம் கேட்டு கடிதம் வந்திருக்கிறது. மனிதர் அதையும் பொருட்படுத்டவில்லை...

பிறகு வேறு வழியின்றி வட்டார அலுவலகத்தின் பரிந்துரையை ஏற்று அவரை அங்கிருந்து அகற்றி நான் பணியாற்றிய அலுவலகத்திற்கு மாற்றியதுடன் நில்லாமல் ஆசிரியர்களுக்கு அவர் வழங்கியிருந்த கடன்கள் மீது ஒரு முழு ஆய்வுக்கும் எங்களுடைய தலைமையகம் உத்தரவிட்டது...

தொடரும்

15 மே 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 58

சாதாரணமாக ஒரு நிறுவனத்தின் கண்ணோட்டம் அதன் தலைவரைப் பொருத்தே அமையும்.

கடந்த பத்தாண்டுகளில் துவக்கப்பட்ட புதிய வங்கிகளை புதிய தலைமுறை வங்கிகள் என்கிறோம். ஆனால் அத்தகைய வங்கிகள் பணியாற்றும் உயர் அதிகாரியிலிருந்து கடைநிலை ஊழியர் வரை அனைவருமே நாட்டில் அப்போது இயங்கி வந்த வங்கிகளிலிருந்து சென்றவர்கள்தான்.

அரசு வங்கிகள் மற்றும் பழைய தலைமுறை வங்கிகளில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்களை வைத்துத்தான் புதிய வங்கிகளுள் பலவும் துவங்கப்பட்டன. ஆயினும் காலங்காலமாக இயங்கிவந்த வங்கிகளின் கண்ணோட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கண்ணோட்டத்துடன் இந்த வங்கிகள் செயல்பட ஆரம்பித்ததைப் பார்த்திருக்கிறேன்.

இதைப் பார்க்கும்போதெல்லாம் நம்முடைய அரசு தொலைக்காட்சி மற்றும் சுமார் பத்தாண்டுகளுக்கும் முன்பு துவங்கப்பட்ட தனியார் தொலைக்காட்சிகளையும் நினைத்துக்கொள்வேன்..

இத்தகைய தொலைக்காட்சிகள் துவக்கப்பட்டபோது அரசு தொலைக்காட்சியில் பணியாற்றிய பல பணியாளர்கள், கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள்தான் இவற்றிற்கு மாறினார்கள். ஆயினும் தனியார் தொலைக்காட்சிகள் முகக் குறுகிய காலத்தில் சர்வதேச தொலைக்காட்சி நிறுவனங்களின் தரத்தை எட்டிப் பிடிக்க முடிந்ததே ஏன்?

அதுபோலத்தான் புதிய தலைமுறை வங்கிகளும். அந்த வங்கிகள் பணியாற்றிய அதிகாரிகளும் ஊழியர்களும் அரசு வங்கிகள் மற்றும் பழைய தலைமுறை வங்கிகளில் பணியாற்றியவர்கள்தான் எனினும் புதிய வங்கிகளில் பணிக்கு சேர்ந்ததுமே அவர்களுடைய கண்ணோட்டத்தில் ஏற்பட்ட மாபெரும் மாற்றத்திற்குக் காரணம் அவ்வங்கிகளின் தலைவர்கள்தான்.

குறிப்பாக இன்று மத்திய ஸ்டேட் வங்கிக்கு சவால் விடும் அளவுக்கு உயர்ந்து நிற்கும் ஐசிஐசிஐ வங்கியின் செயல்பாட்டுக்கு மூல காரணம் அதன் தலைவர்தான் என்றால் மிகையாகாது. அவ்வங்கி இன்று ஈடுபடாத வணிகமே இல்லை என்னும் அளவுக்கு பரந்து விரிந்து நிற்கிறது. அதன் செயல்பாடுகளை அப்படியே பின்பற்ற நினைத்த பல அரசு வங்கிகளும் இறுதியில் தோல்வியையே தழுவின என்பது வங்கித்துறையில் உள்ளவர்களுக்கே தெரியும்.

என்னுடைய வங்கியின் கடந்த சுமார் ஐம்பதாண்டு கால செயல்பாடுகள் மற்றும் கண்ணோட்டத்தில் மாற்றம் கொண்டுவர என்னுடைய அப்போதைய வங்கி முதல் விரும்பியதில் தவறேதும் இல்லை. ஆனால் அதை அவர் செயல்படுத்த நினைத்த கால அளவில்தான் குறையிருந்தது. You can't simply bring about changes overnight என்பார்கள். அது முற்றிலும் உண்மை..

நாம் நம்முடைய கருத்துக்கு ஏற்றபடி ஒருவரை மாற்றலாம் அல்லது இருவரை... அல்லது ஒரு சிறிய குழுவினரை மாற்றிவிடலாம். ஆனால் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் மூவாயிரம் பணியாளர்களை, அவர்களுடைய கண்ணோட்டத்தை, மாற்றுவதென்பது அத்தனை எளிதல்ல!

ஆனால் வங்கித்துறையில் ஏறத்தாழ முப்பதாண்டுகாலம் பணியாற்றிய ஒருவரால் அதை உணர்ந்துக்கொள்ள முடியாமல் போனதுதான் துரதிர்ஷ்டம்.

நாட்டின் முதல் வங்கி என அங்கீகரிக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றியவர் அவர். நாட்டின் பல முக்கிய நகரங்களில் மேலாளராகவும் மும்பை தலைமையகத்தில் உயர் அதிகாரிகளில் ஒருவராகவும் ஏன் மேலை நாடுகளிலும் பணியாற்றியவர் என்று பெருமைக்குரியவர் அவர். சுமார் ஐந்தாண்டுகாலம் வங்கியின் நியூயார்க் கிளையில் மேலாளராக பணியாற்றிய அனுபவமும் இருந்தது.

ஆனால் அதுவே அவருக்கு ஒரு சங்கடத்தை அல்லது பலஹீனத்தை ஏற்படுத்தியிருந்ததோ என்று நினைக்கிறேன்.

அதாவது பென்ஸ் காரை ஓட்டியே பழக்கப்பட்டவரிடம் திடீரென்று பஜாஜ் இரு சக்கர வாகனத்தை கொடுத்து ஓட்டுங்கள் என்று கூறினால் எப்படியிருக்கும்? அதுபோலத்தான் இருந்தது அவருடைய அணுகுமுறையும்.

இப்போதும் சாலைகளில் பார்க்கலாம். நாற்சக்கர வாகனத்தை செலுத்தி பழகிய ஒருவர் இருசக்கர வாகனத்தில் செல்ல நேர்ந்தால் அப்போதும் சாலையின் நடுவில்தான் செல்வார். அதுபோலவே இருசக்கர வாகனத்தை செலுத்தி பழகிப்போன ஒருவர் நாற்சக்கர வாகனத்தை வாங்கிய புதிதில் சாலையின் நடுவில் செல்ல தயங்குவார். அவருடைய கண்ணோட்டம் அல்லது மனப்பான்மை மாறுவதற்கு சிறிது காலம் தேவைப்படும்.

அதுபோலத்தான் ஒரு நிறுவனத்தை நடத்திச் செல்வதும். நாட்டின் மிகப் பெரிய வங்கியில் சுமார் முப்பதாண்டு காலம் பணியாற்றியவருக்கு எங்களுடைய வங்கியின் நிதர்சனத்தை உணரவே சில ஆண்டுகள் தேவைப்படது. He continues to think that he is the Chairman of SBI என்றார்கள் அவருடைய போக்குடன் ஒத்துபோக விருப்பமில்லாத எங்களுடைய வங்கியின் பல உயர் அதிகாரிகள், ஆதங்கத்துடன்.

அத்துடன் உலக அளவில் பணியாற்றிய அவருக்கிருந்த பரந்த விஷயஞானத்தை எங்களுடைய வங்கியில் ஒரு மாவட்டத்தையே கடக்காதவர்களிடம் எதிர்பார்த்ததும் அவருடைய தவறு. 'குண்டுச் சட்டிக்குள்ளவே குதிரைய ஓட்டிக்கிட்டிருந்தவன் கூட்டத்த பாத்ததும் மிரண்ட கதையால்ல இருக்கு?' என்பார் நெல்லையைச் சார்ந்த என்னுடைய மேலாள நண்பர் ஒருவர் அவருடைய பாணியில். அவரும் என்னுடைய வங்கி முதல்வரும் ஒரே மாவட்டத்திலிருந்து வந்தவர்கள் என்பதுடன் ஒரே சமூகத்தையும் சேர்ந்தவர்கள் என்பதால் அவர் மிகவும் சர்வசாதாரணமாக எங்களுடைய வங்கி முதல்வரின் செயல்பாட்டைக் குறித்து அவரிடமே விமர்சிப்பார்.

எங்களுடைய வங்கி முதல்வருக்கு சென்னையில் ஒரு சொந்த குடியிருப்பு இருந்தது. அவருடைய ஒரே மகன் அப்போது சென்னையில்தான் மருத்துவம் இறுதியாண்டில் படித்துக்கொண்டிருந்தார். ஆகவே சென்னை வரும்போதெல்லாம் தன்னுடைய மகனுடைய வீட்டில் ஒருசில நாட்கள் தங்கியிருப்பது வழக்கம். அலுவலக வேலையாக வரும்போது மட்டுமே அவர் ஒரு வங்கி முதல்வராக நட்சத்திர விடுதிகளில் தங்குவார். அலுவலக வேலைகள் முடிந்ததும் சொந்த வேலை காரணமாக மேலும் ஓரிரு நாட்கள் தங்கியிருக்க நேர்ந்தால் உடனே தன்னுடைய சொந்த குடியிருப்புக்கு மாறிவிடுவார். ஆனால் அந்த நாட்களிலும் அலுவலக நிமித்தம் வாடிக்கையாளர்களை சந்திக்க முன்வருவார். அப்படியொரு நேர்மையான மனிதர் எள்அவர்!

அப்படி அவருடைய மகனுடன் தங்கியிருந்தபோது நானும் நான் மேலே குறிப்பிட்ட நெல்லையைச் சேர்ந்த நண்பரும் சென்னையில் பணியாற்றிக்கொண்டிருந்ததால் ஒரு நாள் மாலை அவருடைய வீட்டுக்குச் செல்ல நினைத்தோம். எனக்கு தயக்கமாக இருந்தது. 'அதுக்கென்ன நாம என்ன அவர் சொத்தையா கேக்கப்போறோம்.. நீ வா பேசாம... ஏதாச்சும் கேட்ட நா பேசிக்கிறேன்...' என்றவாறு என்னுடைய நண்பர் என்னையும் வற்புறுத்தி அழைத்துச் சென்றார்.

நான் அதுவரை சந்தித்திருந்த முதல்வர் அல்ல நான் அன்று சந்தித்தது. அத்தனை எளிமையாக இருந்தார். ஆறடி இரண்டங்குலம் உயரம். பல சமயங்களிலும் கோட் சூட்டில்தான் வருவார். பார்ப்பதற்கே கம்பீரமாக இருக்கும் அவருடைய தோற்றம். அப்படி பார்த்து பழகியவரை வீட்டில் நெல்லைவாசிகளுக்கே உரித்தான சங்கு மார்க் கைலி மற்றும் கையில்லா பணியனுடன் பார்த்தபோது வியப்பாக இருந்தது. ஆனால் மிகவும் பிடித்திருந்தது.

எவ்வித பந்தாவும் இல்லாமல் எங்கள் இருவரையும் வரவேற்று அமர்த்தி சுமார் ஒருமணி நேரம் உரையாடிக்கொண்டிருந்த அந்த காட்சி நெடுநாட்களுக்கு பிறகும் என்னுடைய மனதைவிட்டு நீங்காமலிருந்தது.

என்னுடைய நெல்லை நண்பர் மனதில் பட்டத்தை எந்த தடங்கலுமில்லாமல் வெளிப்படுத்தக் கூடியவர். அதுவே அவரை இறுதியில் சங்கடத்தில் வீழ்த்தியது.. அதை பிறகு சொல்கிறேன்..

அன்றைய சந்திப்பின்போது எங்களுடைய வங்கி முதல்வர் 'என்னுடைய functionsஅ பத்தி பேங்குல என்ன பேசிக்கிறாங்க?' என்று கேட்டார். நான் தயங்கினேன். ஆனால் என்னுடன் வந்திருந்த நண்பர் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிட விரும்பாமல் தன் மனதில் இருந்த அனைத்தையும் கொட்டித் தீர்த்தார்.

அதை அப்படியே இங்கு எழுதுவது உசிதமாயிருக்காது என்று நினைக்கிறேன். மேலும் என்னுடைய நண்பர் பேசும் பாணியே அலாதியானது. என்னுடைய வங்கி முதல்வரே அசந்துபோனார் அல்லது அதிர்ச்சியடைந்தார் என்பது அவருடைய முகத்தில் அவ்வப்போது தோன்றி மறைந்த பாவங்கள் எனக்கு உணர்த்தின. இறுதியில் அவர் அமைதியாக, 'நா கேக்கறேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க.. ஆனா ஒங்க பேங்க் சீனியர் அதிகாரிங்கள பத்தி எப்படி நீங்க இவ்வளவு மோசமா பேசலாம்? அதுவும் சேர்மன்கிட்ட?' என்றார். 'என்ன டிபிஆர்... நீங்க ஏன் பேசாம இருக்கீங்க? Does it mean whatever he has said so far is true?'

என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்திய என்னுடைய நண்பர் மீது எனக்கு கோபம் வந்தது. இருப்பினும் அவருடனான நீண்டகால நட்பை முன்னிட்டு, 'சார் இவர் சொல்றத பெருசா எடுத்துக்காதீங்க. அவர் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட கூடியவர். அதுவுமில்லாம அவருக்கு நம்ம தமிழ் ஆளுங்கன்னா ரொம்பவும் பிடிக்கும். அதனாலதான்....' என்று இழுத்தேன்...

முதல்வர் நான் சொல்ல வந்ததை புரிந்துக்கொண்டார். 'Yes I have also observed that some of the negative comments noted in the appraisal reports of officers belonging to our State... I have not done such things in my career... never... அவங்களோட இந்த மாதிரியான செய்கை உங்களுடைய மனதை புண்படுத்தியிருக்கலாம்... ஆனாலும் அத மனசுல வச்சிக்கிட்டு அவங்களுடைய செயல்பாட்டை குறை சொல்றது நமக்கு அழகில்லையே.' என்று துவங்கி அடுத்த பத்து நிமிடங்கள் ஒரு வெற்றிகரமான அதிகாரியாக திகழ நமக்கு என்னவெல்லாம் தேவை என்பதை வெகு அழகாக எங்களிருவருக்கும் எடுத்துரைத்தார்.

உண்மைதான்... அப்போது உயர் பதவியிலிருந்த பல அதிகாரிகள் தமிழகத்திலிருந்து வந்த அதிகாரிகளை புறக்கணித்தவர்கள்தான்... ஆனால் நாளடைவில் அது மறைந்துபோனது... குறிப்பாக நான் குறிப்பிட்ட முதல்வருடைய காலத்திலிருந்து...

தொடரும்..

09 மே 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 57

சமீப காலமாக இந்தியாவிலுள்ள எல்லா வங்கிகளுடைய கவனமும் திடீரென்று சில்லறை வாடிக்கையாளர்கள் (retail customers) மீது திரும்பியுள்ளதைப் பார்க்கிறோம். குறிப்பாக புதிய தலைமுறை வங்கிகள் என கருதப்படும் ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி, யூடிஐ போன்ற வங்கிகள் இவர்களை தலைமீது தூக்கிவைத்துக் கொண்டு ஆடுகின்றன.

இன்றைய தினசரியில் ஒரு செய்தி. யாத்ரா காம் வழியாக நீங்கள் முன்பதிவு செய்யும் ஒவ்வொரு உள்ளூர் விமான டிக்கெட்டிலும் முப்பது விழுக்காடு வரை கேஷ் பேக் ஆஃபர்! ஐசிஐசிஐ வங்கியும் இந்தியன், ஜெட் மற்றும் கிங்ஃபிஷர் விமான நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன!

ஒருகாலத்தில் அதாவது ஐந்தாறு வருடங்களுக்கு முன்வரை இருசக்கர வாகனங்களுக்கு கடன் வழங்குவதில்லை என்று முடிவெடுத்த வங்கிகளில் பெரும்பாலானவை இப்போது போட்டி போட்டுக்கொண்டு கடன் வழங்குகின்றன.

ஆனால் சுமார் இருபதாண்டு காலமாக இவற்றை எவ்வித விளம்பரமும் இல்லாமல் செய்துக்கொண்டிருந்தன எங்களுடைய வங்கிகளைப் போன்ற பழைய தலைமுறை வங்கிகள். எங்களுடைய வணிகத்தின் முதுகெலும்பே இத்தகைய சில்லறை வாடிக்கையாளர்கள்தான்... அப்போதுமட்டுமல்ல இன்றும் அப்படித்தான்.

வங்கிகளிலிருந்து கடன் பெறுவோரில் அவற்றை முழுவதுமாக திருப்பிச் செலுத்துவதில் இத்தகைய வாடிக்கையாளர்கள் மிகவும் உண்மையானவர்கள் என்பதை சிறிய வங்கிகள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். இன்றும் நம்மைப் போன்ற நடுத்தர வாடிக்கையாளர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதில் அக்கறையுள்ளவர்கள்... ஏனெனில் அவர்கள் தன்மானம் உள்ளவர்கள். கடன் பட்டார் நெஞ்சம் போல.. என்பார்களே அத்தகைய மனநிலைக்கு சொந்தக்காரர்கள் சில்லறை வாடிக்கையாளர்கள்.

ஆகவேதான் எங்களுடைய வங்கியிலிருந்த பல கிளை மேலாளர்களும் இத்தகைய வாடிக்கையாளர்களே போதும் என்ற திருப்தியுடன் தங்களுடைய கிளை வணிகத்தில் இவர்களுக்கு முன்னுரிமை அளித்திருந்தனர். மேலும் இத்தகைய வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவதும் மிகவும் எளிது. ரூ.1000 நகைக்கடன் கேட்டு வருபவரிடம் ரூ.750 தருகிறேன் என்றால் மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்டதும் கடன் கிடைத்ததே என்று கொடுத்ததை வாங்கிக்கொண்டு செல்வார். ரூ.25000 கடன் பெற்றவரிடம் பெரிய நோட்டு இல்ல சார்.. பத்தும் அஞ்சும்தான் இருக்கு என்று காசாளர் சொல்கிறார் என்றால் அதற்கும் 'பரவால்லை சார் அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க பாவம். இருக்கறததான குடுக்க முடியும்' என்று சர்வசாதாரணமாக கையோடு கொண்டு வந்திருக்கும் மஞ்சள் நிற பையில் நோட்டுக் கட்டுகளை கொண்டுசென்றுவிடுவார்கள். குறித்த காலத்தில் அசலை செலுத்துகிறார்களோ மூன்று மாதத்திற்கு ஒருமுறை வட்டியை தவறாமல் செலுத்திவிடுவார்கள்.

அத்துடன் customer loyalty என்பது இத்தகைய வாடிக்கையாளர்களிடம் அதிகம். அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் கடன் கொடுத்த வங்கி மேலாளரை என்றும் நினைவில் வைத்திருப்பார்கள். கூடுதல் ரொக்கம் கையில் வரும்போது முதலில் கடன் கொடுத்த வங்கி கிளை மேலாளரிடம்தான் செல்வார்கள். அப்போது அவர்கள் அளிக்கும் வட்டி குறைவாயிருக்கிறதே என்று நினைக்கமாட்டார்கள். 'வாங்க சார் வாங்க' என்று ஒரு புன்னகையுடன் வரவேற்றாலே போதும், மசிந்துவிடுவார்கள்.

ஆனால் கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் அப்படியல்ல. அதனால்தான் பல கிளை மேலாளர்கள் அவர்களை Mercanaries என்று அழைப்பது வழக்கம். அவர்களைப் பொருத்தவரை தங்களுக்கு கிடைக்கும் சலுகைகள்தான் முக்கியம். அவர்களுக்கு கடன் வழங்குவதற்காகவே வங்கிகள் இயங்குகின்றன என்ற எண்ணம் அவர்களுடைய மனதில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். கடன் கொடுத்தால் போதாது. அது மற்ற வங்கிகளை விட குறைவான வட்டியில் இருக்க வேண்டும். விண்ணப்பத்தை முன்வைத்த இருபத்திநாலு மணி நேரத்திற்குள் பதில் வரவேண்டும். இல்லையென்றால் 'சாரி சார் You can't expect us to wait for this long.... அந்த பேங்குல ஒரு மணி நேரத்துல டிசைட் பண்றாங்க நீங்க ஒரு நாள் கேக்கறீங்களே?' என்று ரீல் விடுவார்கள். சரி அரும்பாடுபட்டு மேலிடத்திலிருந்து அனுமதி பெற்று அனுமதி கடிதத்தை நீட்டினால் 'சாரி சார்... நீங்க ரொம்ப லேட்... இந்த பேங்குலருந்து நான் கேட்ட லோன் உடனே கிடைச்சிருச்சி... அத்தோட ஒங்க பேங்க் வட்டியவிட 0.25% குறைச்சல்.' என்பார்கள்... அதுவரை நாம் செய்த வேலையெல்லாம் வீணாகிவிடும்..

இந்த காரணத்திற்காகவே அன்றைய காலக்கட்டத்தில் எங்களுடைய கிளை மேலாளர்கள் பலரும் இத்தகைய வாடிக்கையாளர்களை நாடி சென்றதில்லை. இதற்கு வேறொரு காரணமும் இருந்தது. கார்ப்பரேட் வாடிக்கையாளர்களிடம் சில்லறை வாடிக்கையாளர்களுடன் உரையாடும் பாணியில் உரையாட முடியாது. அதற்கென்று ஒரு தனித்திறமை வேண்டியிருக்கும். முதலில் விஷயஞானம். பிறகு கம்யூனிக்கேஷன் ஸ்கில் எனப்படும் பேச்சுத் திறமை.

கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் விஷயஞானத்திலும் பேச்சுத்திறமையிலும் கைதேர்ந்தவர்கள். முதலாளிகளைவிட மாத ஊதியத்திற்கு உழைக்கும் நிர்வாக இயக்குனர்களும் மற்ற உயர் அதிகாரிகளும் அந்தந்த துறையில் படித்து பட்டம் பெற்றவர்களாயிருப்பார்கள். வங்கிகளிலிருந்து கடன் பெறுவதற்கு ஆலோசனை வழங்கவே பிரத்தியேகமாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். ஆலோசனை வழங்குவது என்றால் கிளை மேலாளரை 'கவிழ்ப்பது' என்றும் பொருள்கொள்ளலாம்...

அதிகம் போனால் அன்றைய கிளை மேலாளர்களுள் பலரும் என்னைப் போன்று பிகாம் பட்டதாரிகளாகவே இருந்தனர். ஒருசிலர் பிஎஸ்சி, பிஏ பட்டதாரிகள். பெரும்பாலான மேலாளர்களுக்கு வங்கி அலுவல்களை விட்டால் வேறொன்றும் தெரிந்திருக்காது. சுமார் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்புதான் சார்ட்டர்ட் அக்கவுண்டன்சி படித்தவர்கள் மற்றும் எம்பிஏ பட்டம் பெற்றவர்களை சிறப்பு அதிகாரிகளாக (special officers) வங்கிகள் நியமனம் செய்ய ஆரம்பித்தன.

ஆகவே எங்களுடைய அப்போதைய வங்கி முதல்வர் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை குறைக்கும்படி கிளை மேலாளர்களுக்கு அறிவுரை வழங்கியதை பலரும் அதை ஏற்க தயங்கினர். அவர்கள் மட்டுமின்றி ஒருசில வட்டார மேலாளர்களும் இதை ஏற்க மறுத்து வெளிப்படையாகவே தலைமை கடன் வழங்கும் இலாக்கா தலைவருக்கு கடிதங்கள் எழுதினர். அவர்களுள் என்னுடைய அப்போதைய வட்டார மேலாளரும் ஒருவர்.

அவர் நான் ஏற்கனவே கூறியிருந்தபடி சில்லறை வாடிக்கையாளர்கள் தான் வங்கியின் முதுகெலும்பு என்ற எண்ணம் கொண்டவர். செல்வந்தர்களை அறவே வெறுத்தவர். இப்படிப்பட்டவரிடம் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை என்று சொன்னால் ஒப்புக்கொள்வாரா என்ன? அத்துடன் பின்விளைவுகளைப் பற்றி கவலைகொள்ளாமல் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் சுபாவம் உள்ளவர் என்பதால் வங்கி முதல்வரின் கொள்கை நம்மைப் போன்ற வங்கிகளுக்கு ஒத்துவராது என்றும் வங்கியை அழிவுக்கு இட்டுச் செல்லும் என்றும் காரசாரமான ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தார்.

அவருக்கு கீழே பணியாற்றிய இரு முதன்மை மேலாளர்களும் (Chief Managers) அவருக்கு இணையான வயதும் அனுபவமும் கொண்டவர்கள். அவர்கள் இருவருக்குமே எங்களுடைய வட்டார மேலாளர் அப்படி எழுதியிருக்க வேண்டாம என்று தோன்றினாலும் இவருடைய கடிதத்தைக் கண்டு வெகுண்டு இவரை அந்த வட்டார அலுவலகத்திலிருந்து மாற்றினால் நல்லதுதான் என்று நினைத்து 'ஒங்கள மாதிரி ஆளுங்களாலதான் இப்படி தைரியமா எழுத முடியும்.' என்று அவரை தூண்டிவிட்டனர்.

ஆனால் அவர்கள் நினைத்தது போன்று எங்களுடைய வங்கி முதல்வர் கோபம் கொள்ளவில்லை. அவருடைய கடிதத்திற்கு உடனே பதிலும் அனுப்பவில்லை. அவர் பதவியேற்ற புதிதில் நான் ஒரு பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ள எங்களுடைய வங்கியின் பயிற்சி கல்லூரிக்கு சென்றிருந்தேன். அந்த பயிற்சியின் இறுதி நாளன்று அவர் பரிசளிப்பு விழாவில் கலந்துக்கொள்ள வந்திருந்தார். அப்போது அவர் பேசியது: 'Don't take any decision when you are angry... I mean, when you feel that you are not emotionally not stable...' அவர் என்னுடைய வட்டார மேலாளருடைய காரசாரமான கடிதத்திற்கு உடனே பதிலளிக்காமல் இருந்தபோது அவர் கூறியதுதான் எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது.

சுமார் இரண்டு மாதங்கள் கழித்து அவர் சென்னைக்கு விஜயம் செய்தார். எங்களுடைய வட்டார மேலாளர் அவரை விமான நிலையத்தில் வரவேற்று சென்னையிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றிற்க்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் எழுதிய கடிதத்தை அவரிடமே வாசித்து காண்பித்து 'what do you think now?' என்றாராம். அத்துடன் நில்லாமல் 'Given a chance, I think you would take back this letter' என்றாராம். என்னுடைய வட்டார மேலாளர் அசடு வழிந்தவாறு 'சாரி சார்' என்றாராம் வேறு வழியில்லாமல்.

'அவர் அப்படி கோபப்படாம சாந்தமா சொன்னப்போ என்னால வேற ஒன்னும் செய்ய முடியலை' என்று அவர் திரும்பிவந்து எங்களிடம் கூறியபோது அட! இவரையே கவுத்துட்டாரே என்று எங்களை வியக்க வைத்தது.

பிறகென்ன? அடுத்த ஐந்தாண்டுகள் அதாவது அவர் பதவியில் இருந்தவரை...அவர் நினைத்தது போலவேதான் வங்கி செயல்பட துவங்கியது...

தொடரும்....

08 மே 2007

திரும்பிப் பார்க்கிறேன். II - 56

வங்கிகளின் தலையாய நோக்கம் கடன் வழங்குவதுதான் என்றாலும் தாங்கள் கொடுக்கும் கடன்கள் முழுமையாக அதாவது அசலும் வட்டியும் வசூலாக வேண்டும் என்பதில் குறியாயிருப்பது வழக்கம்.

ஏனெனில் அவர்கள் கையாள்வது பொதுமக்களின் பணம். அவர்கள் அரும்பாடுபட்டு சேமித்தது.

ஒருநாட்டின் வளர்ச்சிக்கு அத்தியாவசிய தேவை வணிகம் மற்றும் தொழிலில் முடக்கும் முதலீடு. அதற்கு அந்த நாட்டு மக்களின் தனிமனித சேமிப்பு மிக, மிக அவசியம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் எல்லா தனிமனித சேமிப்புகளுமே முதலீடாக மாறுவதில்லை.

என்னுடைய சேமிப்பை நான் அப்படியே என்னுடைய வீட்டிலோ அல்லது வங்கி லாக்கரிலோ பாதுகாத்து வைத்திருந்தால் அது முதலீடாகாது. ஆனால் அதே சமயம் ஒவ்வொரு தனிமனிதனும் வணிகனாகவோ அல்லது தொழிலதிபராகவோ மாறுவது என்பதும் முடியாத காரியம்.

ஆகவே ஒரு நாட்டின் தனிமனித சேமிப்பை திரட்டி அதை முதலீடாக மாற்றுவதில் அந்த நாட்டின் வங்கிகள் பெரும் பங்கு ஆற்றுகிறது என்பதை மறந்துவிடலாகாது.

அது அவர்களுடைய செயல்பாடுகளில் மிகவும் முக்கியமானது. ஆகவேதான் வங்கிகளின் அடிப்படைய செயல்பாட்டை சேமிப்போரிடமிருந்து அவர்களுடைய சேமிப்பைத் திரட்டி அதை தேவைப்படுவோரை தேடிப்பிடித்து கடனாக வழங்கவேண்டும் என்று பல வல்லுனர்கள் வங்கிகளைப் பற்றி குறிப்பிடுகையில் கூறி வைத்துள்ளார்கள்.

இதில் 'தேவைப்படுவோரை தேடிப்பிடிப்பது' என்பது அத்தனை எளிதான விஷயமல்ல. அதற்கு ஒரு வங்கிக் கிளையின் மேலாளரிலிருந்து அவர் பரிந்துரைக்கும் கடன் விண்ணப்பங்களை சரிபார்த்து கிளை மேலாளருடைய பரிந்துரையை பரிசீலித்து மேலதிகாரிகளுக்கு பரிந்துரைக்கும் என்னைப் போன்ற மேசையதிகாரிகளிலிருந்து அவற்றிற்கு அனுமதிவழங்கும் உயர் அதிகாரிவரை அனைவருக்கும் ஒருமித்த கருத்து இருக்க வேண்டியது அவசியம்.

இவர்களுள் கிளை மேலாளர் மட்டுமே வாடிக்கையாளரை சந்திக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும். அவரைப் பற்றிய விவரங்களை சேமித்து அது உண்மைதானா என்று உறுதிப்படுத்திக்கொள்வதுடன் அவருடைய வணிக அல்லது தொழில் செய்யும் இடத்தையும் பார்வையிடுகிறார்.

அவருக்கு அடுத்தபடியாக அவருடைய பரிந்துரைகளை சரிபார்க்கும் மேசையதிகாரியும் சில சமயங்களில் அவருடைய கிளை இயங்கிவரும் வட்டார அலுவலக அதிகாரிகளும் வாடிக்கையாளரை சந்திக்க வாய்ப்புண்டு.

இவர்களைத் தவிர மற்ற எல்லா நிலையிலுள்ள சகல உயர் அதிகாரிகளும் வாடிக்கையாளரின் கோப்புகளில் காணப்படும் விவரங்களை வைத்தே அவரை மதிப்பிடுகின்றனர். இத்தகைய முறையில் நல்லதும் உண்டு, தீயதும் உண்டு. வாடிக்கையாளரை நேரடியாக சந்திக்கும் கிளை மேலாளர் அவருடைய வெளித்தோற்றத்தை வைத்து அவரை உயர்வாகவோ தாழ்வாகவோ மதிப்பிட வாய்ப்புள்ளது. நம்மில் பலருக்கும் ஒருசிலரை பார்த்தவுடனே பிடித்துப் போகிறது. சிலரை ஓரளவுக்கும் சிலரை பிடிக்காமலும் போய்விடுகிறது. இதற்கு என்ன காரணம் என்பது நமக்கே தெரிவதில்லை.

கிளை மேலாளர்களுக்கு பிடித்துப் போகின்றவர்களுடைய வணிகம் அல்லது தொழில் எந்த நிலையிலிருந்தாலும் அதை பெரிதுபடுத்தாமல் அவர்கள் கோரும் கடனை பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிப்பார்கள். அப்படி தீர்மானித்தபிறகு அந்த விண்ணப்பத்திலிருக்கும் குறைகள் எதுவுமே அவர்களுடைய கண்களுக்கு புலப்படாமல் போய்விடும். மாறாக ஒருவரை பிடிக்கவில்லையென்றால் அவருடைய விண்ணப்பத்தில் எத்தனை நிறை இருந்தாலும் அதை கவனிக்க தவறிவிடுவார்கள்.

ஆனால் வட்டார அலுவலகம் மற்றும் மத்திய அலுவலகம் போன்ற நிர்வாக அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளுடைய பார்வை அப்படியல்லாமல் தங்கள் முன் இருக்கும் கோப்பிலுள்ள விவரங்களை வைத்தே பெரும்பாலும் வாடிக்கையாளருடைய தரத்தை கணிக்கின்றனர். ஆகவே அவர்களால் பாரபட்சமின்றி முடிவெடுக்க முடிகிறது. இது நல்ல விஷயம்.

ஆனால் என்னைப் போன்ற மேசையதிகாரிகள் மட்டுமல்லாமல் நிர்வாக அலுவலகங்களில் பணியாற்றும் பல அதிகாரிகளும் கடன் விண்ணப்பத்தைப் பரிந்துரைத்த கிளை மேலாளர் யார் என்பதையும் பார்ப்பதுண்டு. ஒரு கிளை மேலாளருடைய கணிப்பில் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் அவர் எதை அல்லது எவரை பரிந்துரைத்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். 'இது டிபிஆர் ரெக்கமெண்ட் பண்ண ஃபைல். அவர் ரெக்கமெண்ட் பண்ணா சரியாத்தான் இருக்கும்.' என்கிற ஒரு மெத்தனம் ஏற்பட்டுவிடுவதை பல சமயங்களிலும் பார்த்திருக்கிறேன். அதுவே ஒரு கிளை மேலாளருடைய நடவடிக்கைகளின் மீதோ அல்லது அவருடைய விஷயஞானம் அல்லது திறமையின் மீதோ சந்தேகம் வந்துவிட்டால் போதும் அவர் அத்தி பூத்தாற்போல் ஒரு நல்ல வாடிக்கையாளருக்காக, அத்தியாவசிய தேவைக்காக பரிந்துரை செய்திருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவார்கள்.

நான் வட்டார கிளையில் பணியாற்றிய காலத்தில் மூன்று வட்டார மேலாளர்களின் கீழ் பணியாற்றியுள்ளேன். அவர்களுள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் செயல்படுவதைப் பார்த்திருக்கிறேன். அதில் நான் இரண்டாம் முறையாக பணியாற்றிய மேலாளருடைய பாணியே தனி!

அவருக்கு செல்வந்தர்களைக் கண்டாலே விருப்பமில்லை என்பதை ஏற்கனவே கூறியிருக்கிறேன். அத்துடன் எவ்வித வில்லங்கமும் இல்லாமல் ஒரு விண்ணப்பம் வந்தாலும் மனிதருக்கு சந்தேகம் வந்துவிடும். சாதாரணமாக வாடிக்கையாளரைப் பற்றி எழுதும்போது பல கிளை மேலாளர்களும் அவர் மிகுந்த செல்வந்தர் அல்லது வசதிபடைத்த குடும்பத்திலிருந்து வருகிறார் என்று எழுதுவார்கள். அதைப் பார்த்ததுமே நம்முடைய வட்டார மேலாளர் வெகுண்டெழுவார். அதற்குப் பிறகு அந்த கோப்பையே மேலே படிக்க விருப்பமில்லாமல், Reject it என்று திருப்பியனுப்பிவிடுவார். Let the rich manage themselves... we don't need to support such people.. என்பார். அப்படீன்னா குடுத்த கடன் முழுசா எப்படி சார் வரும் என்று கேட்டால். கடன திருப்பி குடுக்கறதுக்கு பணம் படைத்தவனா மட்டும் இருந்தா போறாது.. நல்ல மனசு வேணும்னு வாதாடுவார்.

அவர் கூறியதிலும் நியாயம் இல்லாமல் இல்லை... செல்வந்தர்கள் என்றால் கடனை திருப்பி செலுத்திவிடுவார்கள் என்றோ நடுத்தர மற்றும் வறிய சூழலிலிருந்து வரும் வாடிக்கையாளர்கள் திருப்பி செலுத்தாமல் இழுத்தடிப்பார்கள் என்றோ கூறிவிட முடியாது. ஆனால் வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாமல் இழுத்தடிக்கும் செல்வந்த வாடிக்கையாளரிடமிருந்து பணத்தை கறந்துவிடலாம். ஆனால் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ள வசதியற்ற வாடிக்கையாளரிடமிருந்து பணத்தை வசூலிப்பது சாத்தியமில்லை.

ஆனால் என்னுடைய வட்டார மேலாளருடைய இத்தகைய கண்ணோட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் என்னுடைய அப்போதைய வங்கி முதல்வர். அவர் பதவியேற்ற தினத்தன்றே தலைமையகத்திலிருந்த கடன் வழங்கும் இலாக்காவின் தலைவரிடம் 'You should start thinking big...' என்று அறிவுறுத்தியதாக சில நொடிகளில் வங்கி முழுவதும் செய்தி பரவியது.

அவர் சென்ற இடமெல்லாம் இதையேதான் வலியுறுத்தினார். அன்றுவரை சிறு விவசாயிகள், சிறு வணிகர்கள், சிறு தொழில்கள் என இருந்த எங்களுடைய வங்கியின் பார்வையை கார்ப்பரேட் வாடிக்கையாளர்களை நோக்கி திருப்ப படாதபாடு பட்டார் அவர். ஒரு லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் வழங்கும் கடனிலிருந்து கிடைக்கும் வட்டியை என்னால் சில ஆயிரம் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களிடமிருந்து ஈட்டிவிட முடியும் என்று தன்னுடைய வட்டார மேலாளர்களுடைய கூட்டத்தில் பேசுவார்.

அவருடைய கூற்றில் உண்மை இருந்தது. ஆனால் அவர் கவனிக்க தவறியது என்னவென்றால் அத்தகைய கார்ப்பரேட் வாடிக்கையாளர்களைக் கையாளும் அறிவுத்திறன் எங்களுடைய கிளை மேலாளர்களிடம் இருந்ததா என்பது. அதுவரை தங்க நகைகள் மீது கடன் வழங்குவதையே தங்களுடைய பிரதான செயலாக கருதி வந்திருந்த சிறு கிளை மேலாளர்களையும் start thinking big என்ற கொள்கை திணற அடித்தது. முன்பெல்லாம் தங்களுடைய கிளைக்கு இவ்வளவு தொகை கடனாக வழங்க வேண்டும் என்று வட்டார மேலாளர்கள் நிர்ணயிக்கும் இலக்கை தங்க நகைகள் மீது வழங்கும் கடனை வைத்தே எட்டி வந்த இத்தகைய மேலாளர்கள் இனி என்ன செய்யப் போகிறோம் என்று கலங்கி நின்ற நிலைக்கு அவருடைய பேச்சு கொண்டு சென்றதை அவர் உணராமல் போனதுதான் துரதிர்ஷ்டம்.

அதனுடைய பின்விளைவை அவர் மட்டுமல்லாமல் வங்கி முழுவதுமே அனுபவிக்க வேண்டியிருந்தது.... அடுத்த சில ஆண்டுகளில்...

தொடரும்..

07 மே 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 55

முந்தைய பதிவின் முடிவில் நம்முடைய நாட்டின் பொருளாதாரம் இன்னும் வளரும் நாடுகள் (Developing Country) என்ற நிலையிலேயே இருப்பதற்கு ஒரு காரணம் வர்த்தகம் மற்றும் தொழில் செய்பவர்களின் நேர்மையற்ற தனமும் ஒரு காரணம் என்று கூறியிருந்தேன்.

இது நாட்டிலுள்ள எல்லா வணிகர்களையும் தொழிலதிபர்களையும் ஒட்டுமொத்தமாக குறை கூறுவதாக எடுத்துக்கொள்ளலாகாது. நேர்மையுடன் தொழில் செய்து வங்கியிலிருந்து பெறும் கடன் மூலம் பாமரனாய் இருந்து இன்று பெரும் செல்வந்தர்களாக உயர்ந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றும் வாங்கிய கடன ஒழுங்கா திருப்பி கட்டுனாலே போறும் சார். எதுக்கு மேல, மேல கடன் என்று கூறும் வணிகர்களும் தொழிலதிபர்களும் கூட இருக்கிறார்கள். இன்று ஐ.டி. உலகில் கொடிகட்டிப் பறக்கும் பல நிறுவனங்களூம் zero debt நிறுவனங்கள்தான்.

என்னுடைய வட்டார அலுவலகத்தில் கடன் வழங்கும் இலாக்காவில் மேசையதிகாரியாக சுமார் இரு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய காலத்தில் இத்தகைய பல வாடிக்கையாளர்களின் நிதியறிக்கையைப் பார்த்திருக்கிறேன். அவர்களுள் பலர் தங்களுக்கு தேவையான முதலீட்டில் சுமார் எண்பது சதவிகிதத்திற்கும் கூடுதலாக தங்களுடைய சொந்த பணத்தையே முடக்கியிருப்பார்கள்.

இத்தகையோருள் ஒருவருடைய நிறுவனங்களைப் பற்றிச் சொல்லத்தான் வேண்டும்.

அவர் தமிழகத்தைச் சார்ந்தவர்தான். இப்போது சென்னையையே முற்றுகையிட்டு ஆதிக்கம் செய்துவரும் வணிக சமூகத்தைச் சார்ந்தவர். அவர் இப்போதும் எங்களுடைய வங்கியின் முக்கியமான வாடிக்கையாளராயுள்ளதால் அவர் வணிகம்/தொழில் செய்துவரும் நகரத்தை குறிப்பிட முடியவில்லை.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு தன்னுடைய கிராமத்திலிருந்து அருகிலிருந்த நகரத்திற்கு பிழைப்பு தேடி வந்தவர். ஒரு உடைத்த கடலை, பட்டாணி, பொறி சில்லறை கடையில் நாளொன்றுக்கு ஒரு ரூபாய் ஊதியத்திற்கு பணிக்கு சேர்ந்தவர். அவருடைய முதலாளி மதுரையிலிருந்து மொத்தமாய் இவற்றை வாங்கி வந்து விற்பனை செய்துக்கொண்டிருப்பதைப் பார்த்தவர், 'முதலாளி முழுக்கடலையை நாமளே வாங்கி வந்து ஒரு மெஷின வாங்கி ஒடச்சி வித்தா கொஞ்சம் கூட லாபம் கிடைக்குமே' என்று பரிந்துரைத்தார். 'அதுக்கு மொதலுக்கு எங்கல போறது?' என்ற முதலாளியை பேங்குல கேக்கலாம் முதலாளி என்று அவரை வற்புறுத்தி அழைத்துச் சென்றார். ஊரிலிருந்த ஒரே அரசு வங்கியின் மேலாளர் அழுக்கு வேட்டியும் சட்டையுமாக தன் முன் வந்து நின்ற இருவரையும் பார்த்து என்ன நினைத்தாரோ 'ஒரு அஞ்சு பவுன் நகையிருந்தா கொண்டாங்க அடகு வச்சிக்கிட்டு ஒங்களுக்கு வேண்டிய கடன தரேன்' என்றாராம். முதலாளி தயங்கி நிற்க நம்மவர் அவருடைய காதில் ரகசியமாக ஒரு யோசனையை சொல்ல வங்கியென்று பாராமல் அவருடைய கன்னத்தில் ஓங்கியறைந்துவிட்டு வெளியேறினாராம் முதலாளி!

'கட்டுனவ தாலிய அடகு வச்சி தொழில் பண்ணணுமால்லே?' என்பது அவருடைய கேள்வி. தன்மானம் அவரை அதை செய்யவிடாமல் தடுத்தது. அறைபட்ட நம்மவர் அப்போதே முடிவு செய்தார். இனி தான் யாரிடமும் வேலை செய்வதில்லை என்று. உடனே ஊருக்கு புறப்பட்டுச் சென்று தன்னுடைய தாய் மற்றும் பாட்டியிடம் கெஞ்சி கூத்தாடி கிடைத்த நகைகளை கொண்டு வந்து அடகு வைத்து கிடைத்த முதலில் அதே நகரத்தில் ஒரு மூலையில் ஒரு அறவை மிஷினை வாடகைக்கு எடுத்து மதுரைக்கு சென்று முழுக்கடலையை வாங்கிவந்து உடைத்து விற்க ஆரம்பித்தார். ஒரேயொரு கூலியாளை வேலைக்கு வைத்துக்கொண்டு நேரம் காலம் பாராமல் உழைத்து அடுத்த ஒரேயாண்டில் வாடகைக்கு எடுத்த மிஷினையே விலைக்கு வாங்கிக்கொண்டார். மதுரைக்கு சென்று அதிக விலைக்கு உடைத்த கடலை வாங்கி வந்து சில்லறை விற்பனை செய்து வந்த அவருடைய முதலாளியே நாளடைவில் இவரிடம் வந்து கடலையை வாங்கிச் செல்லும் அளவுக்கு அடுத்த சில ஆண்டுகளில் உயர்ந்திருக்கிறார்.

அவருக்கு ஆபத்பாந்தவனாய் இருந்த அந்த அரசு வங்கி மேலாளர் மாற்றலாகிச் செல்ல அடுத்துவந்தவருக்கு இவரைக் கண்டதுமே பிடிக்காமல் போனது. ஓரளவுக்கு வசதி வந்திருந்தும் எளிமையாக உடையணிவதையே விரும்பிய இவர் வங்கி மேலாளரின் கணிப்பில் தரமிறங்கிப்போனார். அப்போதுதான் அந்த நகரத்தில் எங்களுடைய வங்கி கிளை திறக்கப்பட்டிருந்தது. எங்களுடைய வங்கியின் முதல் தமிழ் மேலாளர் அந்த கிளைக்கு பொறுப்பேற்றிருக்கிறார். எங்களுடைய மேலாளருக்கு இவரை முதல் சந்திப்பிலேயே பிடித்துப்போனது. இருவரும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதும் இதற்கு ஒரு காரணமாயிருந்திருக்கலாம். அவருடைய பூர்வீகத்தையும் கடந்த மூன்றாண்டுகளில் அவர் அடைந்திருந்த முன்னேற்றத்தையும் கண்டு வியந்துபோன எங்களுடைய மேலாளர் அவருடைய அறவை மில்லை மேலும் மேம்படுத்த அவர் வாங்க விரும்பிய இயந்திரங்களை மட்டுமே செக்யூரிட்டியாக எடுத்துக்கொண்டு அவருக்கு தேவைப்பட்ட கடனை வழங்கியிருக்கிறார். புதிய கிளைகளைத் துவக்கும்போது இத்தகைய கடன்கள் வங்கியின் பொது நியதிகளை மீறி வழங்கப்படுவதுண்டு. சில மேலாளர்கள் துணிவுடன் இத்தகைய செயலில் இறங்குவதும் சகஜம்தான். அதற்கு வாடிக்கையாளர்களை சரிவர தேர்வு செய்ய வேண்டும். அவ்வளவுதான். அந்த திறமையும் துணிவும் எங்களுடைய மேலாளருக்கு இருந்தது. அவர் முதல் முதாலாக கொடுத்திருந்த கடன் சுமார் ஐம்பதாயிரம். அந்தக் காலத்தில் சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்பு அது பெரிய தொகைதான். இல்லையென்று சொல்வதற்கில்லை.

ஆனால் அவருடைய இன்றைய நிலை! சொன்னால் நம்பமாட்டீர்கள். இன்று அவர் ஓய்வு பெற்றுவிட்டாலும் அவருடைய ஆரம்பக் கால பட்டாணி, பொறிகடலை வியாபாரத்தை மட்டும் அவர் இன்னும் தன்னுடைய சொந்த மேற்பார்வையிலேயே வைத்திருக்கிறார்! அவருடைய பிள்ளைகள் இருவரால் நடத்தப்படும் மொத்த நிறுவனங்கள் பத்துக்கும் மேல்! ப்ளைவுட் பலகைகளிலிருந்து கட்டட வேலைகள் (construction) வரை தனித்தனி நிறுவனங்களிலும். ஒன்றிலும் குடும்பத்திலுள்ளவர்களைத் தவிர யாருடனும் கூட்டு இல்லை. ஒரு ஆண்டின் நிகர வருமானம் (லாபம்) சுமார் நான்கு கோடிகளுக்கும் மேல்! நான் மேசையதிகாரியாக இருந்த காலத்தில் அவருடைய நிறுவனங்களின் அனைத்து நிதியறிக்கைகளையும் பரிசீலித்திருக்கிறேன்.. அந்த நிறுவனங்களின் மொத்த முதலீட்டில் சுமார் எழுபத்தைந்து சதவிகிதத்திற்கும் மேல் அவருடைய சொந்த முதலீடுதான்! சில நிறுவனங்கள் '0 டெப்ட் நிறுவனங்கள்'!. எல்லா நிறுவனங்களின் கடன்களுக்கும் பெரியவர் தன்னுடைய சொந்த ஜாமீனைக் கொடுத்திருப்பார். ஆனால் அவருக்கென்று எந்த தனிப்பட்ட சொத்தும் இருக்கவில்லை. அவருடைய சொத்து (Asset) என்பது அவருடைய நிறுவனங்களில் அவர் செய்திருந்த முதலீடு மட்டும்தான். அவருடைய மூத்த மகன் நிறுவனங்களின் செயல்பாடுகளில் ஈடுபடும் வரை அவருக்கோ அல்லது அவர்களுடைய குடும்பத்திற்கோ குடியிருக்க சொந்த வீடு கூட இல்லை என்பதுதான் அதிசயம்.

நான் வட்டார அலுவலகத்தில் மேசையதிகாரியாக இருந்த சமயத்தில் அவருடைய சில கடன் விண்ணப்பங்களை பரிசீலிப்பவன் என்ற முறையில் அவருடைய பண்ணை வீட்டுக்கு ஒருமுறை சென்றிருந்தேன். சுமார் எழுபத்தைந்து வயதிலும், பல நிறுவனங்களின் உரிமையாளர் என்கிற அந்த நிலையிலும் அவரிடம் எளிமையைத்தான் காண முடிந்தது. அவருடைய நிதியறிக்கைகளில் தெரிந்த transparency அவருடைய பேச்சிலும் தெரிந்தது. எங்களுடைய முதல் சந்திப்பிலேயே தன்னுடைய ஆரம்பகால அனுபவத்தை என்னிடம் பகிர்ந்துக்கொண்ட அவருடைய வெள்ளை மனது என்னை மிகவும் கவர்ந்தது.

நான் அங்கு சென்றிருந்த நேரத்தில்தான் அவருடைய முயற்சியால் கட்டட வேலைக்கான இரும்பு (Torr steel) கம்பிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று கட்டி முடிந்து திறப்புவிழா நடக்கவிருந்தது. சுமார் இருபது கோடி முதலீட்டில் நிறுவப்பட்டிருந்த தொழிற்சாலையில் அவர்களுடைய நிறுவனத்தின் சேமிப்பிலிருந்து சுமார் பதினைந்து கோடிக்கும் மேல் முடக்கியிருந்ததைப் பார்த்த நான். 'நீங்க எதுக்கு term lending institutionக்கு போகாம ஒங்க பணத்தையே முடக்கியிருக்கீங்க? நீங்க ட்ரை பண்ணியிருந்தா ரொம்ப சீப்பான ரேட்டுல லோன் வாங்கியிருக்கலாமே?' என்றபோது. அவருடைய மூத்த மகன் சிரித்துக்கொண்டே 'இது அப்பாவோட ஆசை. எங்களுக்கு உடன்பாடில்லைன்னாலும் அவர் என்ன சொல்றாரோ அதும்படியே செஞ்சிடறதுன்னு முடிவு செஞ்சிருக்கோம். அப்பாவுக்கு சொந்தமா ஒரு வீடு வாங்கறதுல கூட விருப்பமில்லை... இந்த பண்ணை வீடுகூட வாடகைதான்... பத்து வருச லீஸ். எல்லாரும் ஒரே குடும்பமா இருக்கணுங்கறதுக்காக எடுத்தது. ஓனரும் அப்பாவோட நண்பர்தான். முப்பது லட்சம், நாப்பது லட்சம்னு எதுக்குலே குடியிருக்கற வீட்டுக்கு செலவழிக்கிறது. அந்த தொகைய பிசினஸ்ல போட்டா வர்ற வருமானத்துல பாதியக் கொண்டே வீட்டு வாடகைய குடுத்துரலாம்பார்.. உண்மைதான்.. இந்த மாதிரி வீடு வேணும்னா கொறஞ்சது அம்பது லட்சம் வேணும். அதுக்கு ஒங்க பேங்க் வட்டியே வருசத்துக்கு ஏறக்குறைய ஏழரை லட்சத்துக்கு மேல வந்துரும். அதுல பாதிய வாடகைக்கு குடுத்தா போறும்... என்ன நா சொல்றது?' என்றபோது... வங்கியிலிருந்து ஒரு கோடி வரை கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் தன்னுடைய வீட்டு கழிப்பறைவரை ஏசி செய்திருந்த வேறொரு தொழிலதிபரை நினைத்துக்கொண்டேன்...

தொடரும்

02 மே 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 54

சாதாரணமாக வணிகர்களும் சரி தொழில் செய்பவர்களும் சரி தங்களுடைய முதலீட்டை விட வங்கியிலிருந்து மேலும், மேலும் கடன் பெறுவதையே விரும்புவதைப் பார்த்திருக்கிறேன்.

மற்றவர்களுடைய பணத்தில் கிடைக்கும் வசதிகளை அனுபவிக்கும் சுகமே அலாதியானதுதானே.

ஒரு வணிகரின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது அதில் தவறேதும் இல்லைதான். பொருளாதார வல்லுனர்கள் கூட borrowed capital is always cheaper than the own capital என்று கூறி வைத்துள்ளதைப் பார்க்கிறோம்.

இதற்கு அவர்கள் கூறும் காரணத்தைக் கேட்டால் நமக்கும் அதில் தவறேதும் இல்லையே என்று தோன்றும். உங்களிடம் நூறு ரூபாய் உள்ளது என வைத்துக்கொள்வோம். அதை உங்களுடைய வணிகத்தில்தான் முதலீடு செய்ய வேண்டும் என்று இல்லை. அதை வைத்துக்கொண்டு எதை வேண்டுமானாலும் வாங்கலாம். ஒன்றும் வாங்க விருப்பமில்லையா? பங்கு சந்தையில் முதலீடு செய்து இரட்டிப்பாக்கலாம். அல்லது ஒரு வங்கியிலோ டெப்பாசிட் செய்துவிட்டு வட்டியை வாங்கலாம். எப்போது தேவையோ அப்போது மீண்டும் பணமாக்கிக் கொள்ளலாம். உங்களுடைய சேமிப்பு கூடுகிறதோ இல்லையோ இழக்க வாய்ப்பில்லை.

ஆனால் அதையே உங்களுடைய வணிகத்திலோ அல்லது தொழிலிலோ முடக்கிவிட்டால் அதை அவ்வளவு எளிதாக மீண்டும் எடுக்க முடியாது. உங்களுடைய முதலீடு இரட்டிப்பாகலாம். அதுபோலவே அதை முழுவதுமாக இழந்தும் விடலாம்.

வணிகம் அல்லது தொழில் துவங்கவோ அல்லது உள்ளதை விரிவாக்கம் செய்யவோ வங்கியிலிருந்து மட்டுமல்ல வெளியிலிருந்தும் கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. அதுவும் சலுகை வட்டியில். அப்படியிருக்க உங்களுடைய சேமிப்பை எதற்கு அதில் முதலீடு செய்ய வேண்டும் என்கிற வாதம் கேட்பதற்கு நியாயமானதாகத்தான் தோன்றும்.

ஆனால் வங்கிகள் இதை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கின்றன?

ஒவ்வொரு வகை வணிகத்திற்கும், தொழிலுக்கும் தேவையான முதலீடு எவ்வளவு என்பதை அந்தந்த துறை வல்லுனர்களைக் கொண்டே ஆய்வு செய்து கணித்திருக்கின்றன வங்கிகள். இதைத்தான் ஆங்கிலத்தில் adequate capital என்கிறார்கள்.

சாதாரணமாக ஒரு வணிகத்திற்கு ரூ.100 முதலீடு தேவையென்றால் அதில் குறைந்தபட்சம் ரூ.25 ஆவது உரிமையாளரின் பங்காக இருக்க வேண்டும். அதற்கும் குறைவாக முதலீடு செய்பவர்களுக்கு உதவ வங்கிகள் முன்வருவதில்லை. மேலும் தன்னுடைய இந்த ரூ.25 உடன் நண்பர்கள் உறவினர்கள் ஆகியோரிடமிருந்து மேலும் ரூ.25ஐ கொண்டு வர வேண்டும். மீதமுள்ள ரூ.50ஐ வங்கிகள் பலதரப்பட்ட கடன் திட்டங்களில் குறுகிய மற்றும் நீண்ட கால கடன்களாக வழங்க முன்வருகின்றன.

வணிகம் அல்லது தொழிலுக்கு தேவையான அசையா சொத்துக்களை அதாவது தொழிற்சாலை, இயந்திரங்கள், உபகரணங்கள் வாங்க நீண்ட கால கடன்களையும் தொழிலை அன்றாடம் நடத்திச் செல்ல தேவையான அசையும் சொத்துக்களான சரக்குகள் (stock), மூலப்பொருட்கள் (raw materials) ஆகியவற்றை வாங்கவும், தொழிலாளர்கள் ஊதியம், மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து போன்ற செலவினங்களுக்காக குறுகியக் காலக் கடன்களையும் வங்கிகள் வழங்குவது வழக்கம். இது வங்கிகளுக்கு வங்கி சிறு மாறுதல்கள் இருந்தாலும் இதுதான் பொதுவான அணுகுமுறை.

ஒவ்வொரு வகை கடன்களை வழங்கும்போதும் அதற்கு தேவையான தொகையில் பத்திலிருந்து இருபத்தைந்து சதவிகித தொகை உரிமையாளர் தன்னுடைய பங்காக கொண்டு வரவேண்டும் என்று வங்கிகள் எதிர்பார்க்கின்றன. அதாவது தொழிற்சாலை எழுப்ப ரூ.1000 தேவை என்றால் ரு.250 லிருந்து ரூ500 வரை உரிமையாளர் தன் பங்காக கொண்டு வரவேண்டும். அதுபோலவே இயந்திரங்களில் பத்திலிருந்து பதினைந்து சதவிகிதம்
வரையிலும் சரக்கு கொள்முதல் செய்வதில் இருபத்தைந்து சதவிகிதம் வரையிலும் மற்ற செலவினங்களில் பத்திலிருந்து இருபத்தைந்து சதவிகிதம் வரையிலும் உரிமையாளருடைய பங்கு இருக்க வேண்டும் என வங்கிகள் எதிர்பார்க்கின்றன.

அத்துடன் நின்றுவிடாமல் வர்த்தக அளவு கூடக் கூட நிறுவனத்தின் தேவையும் கூடுமல்லவா? அப்போதெல்லாம் வங்கிகள் மட்டுமே தங்களுடைய கடன் தொகையை கூட்டித் தரவேண்டும் என்று பல வணிகர்களும் தொழிலதிபர்களும் கருதுகின்றனர். ஆனால் வங்கிகளோ தேவையான கூடுதல் தொகையில் உரிமையாளர்களும் தங்களுடைய முதலீட்டை தொடர்ந்து கூட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. தங்களுடைய மற்ற சேமிப்பிலிருந்து கொண்டு வருகிறார்களோ இல்லையோ குறைந்தபட்சம் சம்பந்தப்பட்ட வணிகத்திலிருந்து கிடைக்கும் லாபத்தையாவது அதிலேயே முதலீடு செய்யவேண்டும். ரூ.100 லாபம் கிடைக்கும் என்றால் அதில் ரூ.75 ஐ வணிகத்திலிருந்து எடுக்கலாகாது. அதை விடுத்து கிடைக்கும் லாபம் முழுவதையும் எடுத்து வேறேதும் சொத்தில் முதலீடு செய்வதோ அல்லது ஆடம்பர செலவுகளில் வீணடிப்பதோ வங்கிகளுக்கு தெரியவரும் பட்சத்தில் தங்களுடைய கடன் தொகையை கூட்ட முன்வருவதில்லை. எந்த வணிகர் தன்னுடைய சொந்த முதலீட்டை தன்னுடைய வணிகத்தில் முடக்க விரும்பவில்லையோ அதில் வங்கிகளும் பணத்தை முடக்க விரும்பவதில்லை என்பதை பல வணிகர்களும் உணர்வதில்லை.

'சார் இப்பதான் பிசினஸ் கூடற நேரம். இப்ப போய் நீங்க கடன கூட்டித் தரமாட்டேன்னு சொன்னா எப்படி சார்?' என்று வாதிடுவார்கள். 'சரிங்க. உங்க பிசினசுக்கு கூடுதல் கேப்பிடல் வேணும்னு ஒங்களுக்கு தெரியுது. ஆனா உங்க பணத்தை அதில இன்வெஸ்ட் பண்ணணும்னு ஒங்களுக்கு தோனலையே.' என்றால் 'யார் சொன்னது?' என்று எதிர்வாதம் செய்வார்கள். 'ஒங்க பாலன்ஸ் ஷீட்தான் சார் சொல்லுது.' என்று அவருடைய நிறுவனத்தின் நிதியறிகையிலிருக்கும் விவரங்களை அவர் முன் வைத்தால் அப்போதும், 'சார் அது நம்ம ஆடிட்டர் பண்ண வேலைசார். அவர ஒங்கக் கிட்ட பேச சொல்றேன்.' என்று நழுவுவார்கள்.

வங்கிகள் எத்தனை சலுகைக் கடன்கள் வழங்கியும் நம் நாட்டின் பொருளாதராம் இன்னும் ஒரு வளரும் நாட்டின் நிலையிலேயே நிற்பதற்கு முக்கிய காரணம் நம் வணிகர்களின் மற்றும் தொழிலதிபர்களின் நேர்மையற்றதனமும், நிலையற்ற கண்ணோட்டமும் ஒரு காரணம் என்றாலும் மிகையாகாது என்பது என்னுடைய முப்பதாண்டுகால அனுபவத்தில் நான் படித்தவை.

தொடரும்...

30 ஏப்ரல் 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 53

நான் மதுரை கிளையிலிருந்து மாற்றப்பட்டு முதல் முறையாக ஒரு நிர்வாக அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்தபோது அதிகாரம் செய்தே பழகிப்போன நான் எப்படி அதிகாரத்துக்கு கட்டுப்படப் போகிறேன் என்ற மனநிலையில் இருந்தேன்.

ஆனால் அங்கு சுமார் பதினைந்து மாதங்கள் பணியாற்றிவிட்டு மீண்டும் ஒரு கிளைக்கு, அதுவும் சென்னையிலேயே மேலாளராக பதவியமர்த்தப்பட்டபோது, 'மீண்டுமா?' என்ற மனநிலையில்தான் கிளைக்கு சென்றேன். அது என்னுடைய வட்டார மேலாளரே எதிர்பார்க்காத மாற்றம் என்பதுடன் அவருக்கு மிகவும் பிடித்திருந்த ஒரு மேலாளரை திடீரென்று மாற்றிவிட்டு என்னை அந்த பதவியில் அமர்த்தியிருந்ததால் அவருடைய பகைக்கும் ஆளாக வேண்டியிருந்தது. ஆனால் நாளடைவில் எங்கள் இருவருக்குமிடையிலிருந்த உறவு சுமுக நிலைக்கு வந்திருந்தது என்பது உண்மைதான்.

என்னுடைய கிளை சிப்பந்தியொருவர் அகாலமாய் மரணமடைந்தபோது அதற்கு என்னுடைய கிளையில் நடந்திருந்த சில விதி மீறல்களும் ஒரு காரணம் என்பதால் நான் மீண்டும் தண்டிக்கப்பட்டு பதவியிழந்த நிலையில்தான் என்னுடைய வட்டார அலுவலகத்தில் சேர வேண்டிய சூழல். சாதாரணமாகவே கிளையில் குப்பைக் கொட்ட முடியாதவர்கள்தான் வட்டார அலுவலகங்களைப் போன்ற நிர்வாக அலுவலகங்களுக்கு மாற்றப் படுவார்கள் என்ற ஒரு எண்ணம் அப்போதுமட்டுமல்ல இப்போதும் நிலவி வருகிறது.

ஆனால் வட்டார அலுவலகத்தினுள் என்னுடைய இரண்டாவது பிரவேசம் முந்தைய பிரவேசத்தைப் போல் அத்தனை குழப்பமாக இருக்கவில்லை. ஏற்கனவே ஒரு வருடத்திற்கும் மேல் வட்டார அலுவலகத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருந்ததால் இம்முறை என்னால் மிக எளிதாக என்னுடைய அலுவல்களில் ஒன்றிப்போக முடிந்தது. முந்தைய பணிக்காலத்தில் கிளைகளுக்கு ஆய்வுக்கு சென்றதில் எனக்கு பல கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருந்ததால் அதை இம்முறை முற்றிலுமாக தவிர்ப்பதில் குறியாயிருந்தேன்.

என்னுடைய அதிர்ஷ்டம் இம்முறை எனக்கு எடுத்தவுடனேயே கடன் வழங்கும் இலாக்காவில் போஸ்டிங் கிடைத்தது. என்னுடைய அலுவலகத்தின் ஆய்வு இலாக்காவின் தலைமை அதிகாரி என்னுடைய முந்தைய ஆய்வு அறிக்கைகளை வாசித்திருந்ததால் கூட என்னை தவிர்த்திருக்கலாம் என்று நினைத்தேன். அதுவும் எனக்கு நல்லதாக தோன்றியது. எதற்கு மீண்டும் வம்பு என்று எனக்கு கிடைத்த பதவியிலேயே கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தேன்.

ஏற்கனவே பல பெரிய கிளைகளுக்கு ஆய்வு சென்றிருந்த அனுபவம் கடன் வழங்கும் இலாக்காவில் மிகவும் உதவியாயிருந்தது. சாதாரணமாக கிளைகளுக்கு ஆய்வு செல்கையில் நம்முடைய கண்களுக்கு அதிகம் தென்படுவது கடன் வழங்குகையில் நிகழும் குறைபாடுகள்தான். சேமிப்பு கணக்குகளில் உள்ள குறைபாடுகள் வட்டி வழங்குவதில்தான் இருக்கும். அதற்கு அடுத்தபடியாக வாடிக்கையாளர்களை அடையாளம் காணத் தவறுவது (introduction of the customers). வங்கியின் சேமிப்பைக் கூட்ட வேண்டுமே என்பதற்காக எந்த வழியில் சேமிப்பு வந்தாலும் அதனுடைய மூலத்தைப் பற்றி (source) எவ்வித கவலையும் கொள்ளாமல் பல மேலாளர்கள் ஏற்றுக்கொண்டுவிடுவார்கள். அதிலும் முதல் முதலாக கிளைக்கு மேலாளர் பொருப்பை ஏற்பவர்கள் முதல் கிளையிலேயே தங்களுடைய திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்ற ஒருவகை வெறியில் (வெறி என்பது சற்று அதிகப்படியோ என்று நினைப்பவர்களுக்கு passion என்று சொல்லலாம்). எப்படியும் வெற்றியடைய வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு மத்தியில் சில இப்படித்தான் வெற்றியடைய வேண்டும் என்று நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் வெற்றி பெற எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் வேண்டுமானால் சற்று அதிகமாக தோன்றலாம். ஆனால் அவர்களும் நிச்சயம் வெற்றிபெறுவார்கள். இதை என்னுடைய அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.

சேமிப்பு கணக்குகளில் உள்ள குறைபாடுகளால் வங்கிக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை என்பதும் உண்மை. ஆனால் கடன் கணக்குகள் அப்படியல்ல. வாடிக்கையாளர்களை அடையாளம் காண்பதென்பது பல வருட அனுபவங்களுக்குப் பிறகு வருவது. சாலையில் போவோர் வருவோரிடமிருந்தெல்லாம் சேமிப்பை கான்வாஸ் செய்யலாம். ஆனால் கடன் என்று வரும்போதும் சகோதரர்களையும் சந்தேகப்பட வேண்டும் என்பார்கள் எங்களுடைய பயிற்சி வகுப்புகளில்.

Identification of the borrowers is an art... அது ஒரு கலை என்பதும் உண்மைதான். பகட்டாக உடையுடுத்தி வருபவரெல்லாம் செல்வந்தர்கள் என்றோ மிகச் சாதாரணமாக தோற்றமளிப்பவர்களெல்லாம் எளியவர்கள் என்றோ கணிப்பிட முடியாது என்பதை என்னுடைய அனுபவத்திலேயே உணர்ந்திருக்கிறேன்.

பல அனுபவம் மிக்க மேலாளர்களும் கூட இந்த தவற்றை செய்துவிட்டு தங்களுடைய பல்லாண்டு கால உழைப்பை வீணாக்கிவிடுவதைப் பார்த்திருக்கிறேன். சாதாரணமாக ஒரு வங்கி மேலாளர் வாடிக்கையாளர்களுடைய வெளித்தோற்றத்தில் மயங்கி அவர்களுடைய உண்மை பொருளாதார நிலையில் கவனம் செலுத்த மறந்துபோவார்கள். மேலும் ஒரு கிளையின் வணிகத்தை கூட்டவேண்டும், தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இலக்குகளை அடைய வேண்டும் என்பதிலேயே அவர்களுடைய எண்ணம் இருக்கும்.

ஆனால் என்னைப் போன்று நிர்வாக அலுவலகங்களில் பணியாற்றும் மேசை அதிகாரிகளுக்கு அந்த பிரச்சினை இல்லை. மேலும் நிர்வாக அலுவலகங்களில் பணியாற்றுபவர்களும் ஏற்கனவே மேலாளர்களாக பணியாற்றியிருப்பவர்களாகத்தான் இருப்பார்கள். ஆகையால் கிளை மேலாளர்கள் பரிந்துரைத்த கடன் விண்ணப்பங்களை சரியான கோணத்தில் பரிசீலித்து மேலதிகாரிகளுக்கு பரிந்துரைப்பது எளிது.

ஆனால் சில மேசை அதிகாரிகள், குறிப்பாக கிளை மேலாளர்களாக இருந்தபோது அவர்கள் அளித்திருந்த கடன்கள் வாராக் கடன்களாகிப்போய் அதன் விளைவாக பதவியை இழந்தவர்களாக இருந்தால், அவர்களுடைய கண்ணோட்டம் எதிர்மறையாக (Negative) இருக்க வாய்ப்புள்ளது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல அவர்கள் பரிசீலிக்கும் அனைத்து கடன் பரிந்துரைகளையும் சந்தேகக் கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்கள்.

Experience should make one to be positive என்பார் என்னுடைய வங்கி மேலாளர்களுள் ஒருவர். உண்மைதான் ஆனால் நமக்கு ஏற்படும் எதிர்மறையான அனுபவங்கள் சில வேளைகளில் நம்மில் பலரை எதிர்மறையாகவே சிந்திக்க தூண்டுகிறது. ஆனால் என்னைப் பொருத்தவரை எந்த சூழலிலும் ஒரு நேர்மறையான எண்ணத்துடனேயே வாழ்க்கையை கண்ணோக்க முயன்றிருக்கிறேன். எத்தனை முறை சறுக்கி விழுந்தாலும் மீண்டும் எழுந்து எனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதையே செய்வதில் உறுதியாயிருந்திருக்கிறேன். அந்த பாதையில் எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள் மிகவும் கசப்பானதுதான் என்றாலும் அதனால் சில வேளைகளில் சோர்ந்துபோயிருக்கிறேன் என்றாலும் அதை என்னால் இயன்றவரை களைந்துவிட்டு பாசிட்டிவ் எண்ணங்களுடன் பயணித்திருக்கிறேன் என்றுதான் நினைக்கிறேன். ஆகவே மூன்று வருடங்களில் இரண்டு முறை மேலாளர் பதவியை இழந்தபோதும் அத்துடன் என்னுடைய அலுவலக வாழ்க்கை அத்துடன் முடிந்துபோய்விட்டது என்று நினைத்ததில்லை.

கிளை மேலாளர்கள் பாசிட்டிவாக பரிந்துரைத்து அனுப்பியுள்ள கடன் விண்ணப்பங்களை அதே கண்ணோட்டத்துடன் நிர்வாக அலுவலகங்களிலுள்ள மேசை அதிகாரிகளும் அணுகாவிட்டால் நாளடைவில் 'நாம என்ன ப்ரொப்போசல அனுப்புனாலும் பாசாக போறதில்லை. அப்புறம் எதுக்கு வீணா..' என்று மேலாளர்கள் கடன்களை வழங்குவதையே நிறுத்திவிடுவார்கள். அத்துடன் வங்கி வர்த்தகமும் ஸ்தம்பித்துப் போய்விடும் என்று எங்களுடைய பயிற்சி வகுப்புகளில் மீண்டும் மீண்டும் எடுத்துரைப்பார்கள்.

ஆனால் அதே சமயம் கிளை மேலாளர்கள் கவனிக்க தவறிவிட்ட விஷயங்களை அவை நல்லவையானாலும் தீயவையானாலும், அவற்றை என்னைப் போன்ற மேசை அதிகாரிகள் கண்டுபிடித்து மேலதிகாரிகளுடைய பார்வைக்கு கொண்டு வரவேண்டும். When the branch managers look at the customer you should look at his financials என்பதும் எங்களுக்கு வழங்கப்படும் பயிற்சி வகுப்புகளில் கூறப்படும் அறிவுரை.

ஒரு வாடிக்கையாளர் எத்தனை திறமைசாலியாக இருந்தாலும், எவ்வளவு நேர்மையுள்ளவராயிருந்தாலும் அவருடைய பொருளாதார நிலை (financials) சரியில்லையென்றால் எந்த ஒரு தொழிலும், வணிகமும் வெற்றியடைய வாய்ப்பில்லை, நாம் வழங்கும் கடனும் முழுமையாக திரும்பிவர வாய்ப்பில்லை.

ஆகவே என்னைப் போன்ற மேசை அதிகாரிகள் மேலாளர்களுடைய பரிந்துரையை பரிசீலிப்பதை விட அத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் நிதியறிக்கைகளை (balance sheet) பரிசீலிப்பதிலேயே குறியாயிருப்பதுண்டு..

நான் என்னுடைய வட்டார அலுவலகத்தில் பரிசீலித்த சில கடன் விண்ணப்பங்களைப் பற்றி அடுத்த சில தினங்களில் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். வங்கிகளின் அணுகுமுறையை தெரிந்துக்கொள்வதில் உங்களில் சிலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன். குறிப்பாக வணிகம் அல்லது தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு...

தொடரும்...

24 ஏப்ரல் 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 52

நான் இரண்டாம் முறையாக வட்டார அலுவலகத்தில் இணைந்த ஒரு மாதத்திற்குள் என்னுடைய வங்கியின் அடுத்த முதல்வர் நியமிக்கப்பட்டார்.

என்னுடைய வங்கி சரித்திரத்தில் முதன் முறையாக நாகர்கோவிலைச் சார்ந்த ஒரு கிறிஸ்துவர் முதல்வராக நியமிக்கப்பட்டது என்னைப் போன்றவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

அன்று முதல் வங்கியின் கண்ணோட்டத்திலும் ஒரு பெரிய மாற்றம் வந்தது என்றால் மிகையாகாது. அவர் நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் ஒரு உயர் அதிகாரியாக பணியாற்றிக்கொண்டிருக்கும்போதே எங்களுடைய வங்கிக்கு முதல்வராக நியமிக்கப்பட்ட பெருமையும் இருந்தது. அதுவரை முதல்வராக நியமிக்கப்பட்டவர்கள் அனைவருமே பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தவர்கள்.

அவர் அவருடைய வங்கியிலிருந்து ஓய்வுபெற இன்னும் ஐந்து வருடங்களுக்கு மேல் இருந்ததால் என்னுடைய வங்கி முதல்வர் பதவிக்காலத்திற்குப் பிறகும் தன்னுடைய தாய் வங்கிக்கு (Parent Bank) திரும்பிச் செல்லக் கூடிய வாய்ப்பு இருந்தது. அதுவே அவரை ஒரு கண்டிப்பான, அதாவது எங்களுடைய இயக்குனர் குழுவுக்கு அஞ்சி நடக்க தேவையில்லாத, முதல்வராக செயல்பட உதவியது. அத்துடன் அவருடைய விஷயஞானமும், இறைபக்தியும், நேர்மையும் மேலைநாடுகளில் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு எங்களுடைய அதிகாரிகள் நடுவில் பெருத்த மதிப்பைப் பெற்றுத்தந்திருந்தது.

நான் முன்பு கூறியிருந்த 'தண்ணி' கலாச்சாரமும் கூட வெகுவாக குறைந்திருந்தது என்றும் கூறலாம். எந்த ஒரு கிளைக்கு அல்லது இலாக்காவிற்கு அலவலக நிமித்தம் சென்றாலும் அவருடைய மதிய உணவு இட்லி, தோசை காப்பி என வெகு எளிமையாக முடிந்துவிடும். இரவு உணவு பழங்கள் மட்டுமே. இயக்குனர்கள் மற்றும் வங்கியின் உயர் அதிகாரிகள் பங்குபெறும் கமிட்டிக் கூட்டங்களிலும் இதுதான் staple menu.

எப்போது கமிட்டி கூட்டம் முடியும் பாட்டிலை திறக்கலாம், ஆடு, கோழியை விழுங்கலாம் என்ற எண்ணத்துடன் அதுவரை இயங்கிவந்தவர்கள் நொந்துப்போனார்கள். 'மனுசன் தானும் அனுபவிக்கறதில்லை பிறத்தியாரையும் அனுபவிக்க விடறதில்லன்னா என்னத்த பண்றது? தலையெழுத்தேன்னு அனுபவிக்க வேண்டியதுதான்.' என்று பலரும் புலம்புவதைக் கேட்டிருக்கிறேன்.

அத்துடன் முந்தைய முதல்வர்களைப் போலல்லாமல் உயர் அதிகாரிகள் மற்றும் வட்டார மேலாளர்களுடைய கூட்டத்திற்கு வரும்போது அக்கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய விஷயங்களை பட்டியிலிட்டு கொண்டுவருவதுடன் அதில் பங்குபெறும் ஒவ்வொருவருடைய செயல்பாடுகளைப் பற்றிய விவரங்களையும் விரல்நுனியில் வைத்திருந்தது பலருக்கும் தர்மசங்கடத்தை அளித்தது. 'என்னய்யா இது? Friendsகளை பாத்து பேசினமா, ரெண்டு பெக்க போட்டமான்னு இல்லாம... இப்பல்லாம் இந்த கான்ஃப்ரன்ஸ்ன்னால அலர்ஜியாயிருச்சிப்பா?' இத்தகைய கூட்டங்களில் இது சர்வசாதாரணமாக கேட்கும் புலம்பல்!

ஆனால் இந்த மாற்றத்தை இருகரம் விரித்து வரவேற்றவர் என்னுடைய வட்டார மேலாளர்தான். ஏனென்றால் அவருக்கும் இதெல்லாம் முற்றிலும் ஒத்துவராத விஷயங்கள், அதாவது குடி, குப்பி (bottle), குசலம் விசாரிப்பது எல்லாமே.. அதற்கு வேறொரு காரணம் இருந்தது. அவர் சிறுவயதிலேயே மனைவியை இழந்துவிட்டவர். 'ஆமா அந்தம்மா இவர்கூட பத்து வருசம் வாழ்ந்ததே பெரிய விஷயம்.' என்பார்கள் அவருடைய தாம்பத்தியத்தைப் பற்றி நன்கு அறிந்த அவருடைய சக அதிகாரிகள். மனைவியை இறந்தபோது பத்தும், எட்டும் வயதில் இருந்த இரு மகன்களே அவருடைய முழு உலகமாயிருந்தது. மறுதிருமணம் செய்துக்கொள்ளாமல் தன் மகன்களை வளர்த்து ஆளாக்கியவருக்கு அவர்களுக்கு ஒவ்வாத எந்த பழக்கமும் தனக்கும் தேவையில்லை என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது. ஆனால் அவர் வளர்த்து ஆளாக்கிய இரு மகன்களுமே வயதுக்கு வந்ததும் அவரை விட்டு பிரிந்து சென்றதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 'இறக்கை முளைச்சதுக்கப்புறமும் இந்த மனுசங்கிட்டருந்து அவஸ்தைப்படறதுக்கு அதுங்களுக்கு பைத்தியமா என்ன?' என்பார்கள் அவரை நன்கு அறிந்திருந்தவர்கள் ஒரு devilish மகிழ்ச்சியுடன்.

என்னுடைய வங்கி முதல்வருக்கு இருந்த நற்குணங்களில் ஒன்றும் என்னுடைய வட்டார மேலாளரிடம் இல்லையென்றாலும் இவரும் teetotaller என்பதாலேயே முன்னவருக்கு பின்னவரை மிகவும் பிடித்துப்போனது. பின்னவருடய மத, இன, மொழி வெறி முன்னவரைப் பொறுத்தவரையில் அடிபட்டுபோனது என்றுகூட சொல்லலாம். அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் நெருக்கமாகிப் போனார்கள். அத்துடன் பின்னவருடைய விஷயஞானமும், சுயதம்பட்டமும் கூட அவர்களுடைய நெருக்கத்திற்கு காரணமாயிருந்திருக்கலாம்.

புதிய முதல்வர் பணிக்கு சேர்ந்தவுடனேயே வங்கியில் தன்னுடைய மாநிலத்தைச் (தமிழ்நாடு) சார்ந்தவர்களுள் வெகு சிலரே உயர் அதிகாரிகளாக இருப்பதைக் கவனித்திருப்பார் போலிருந்தது. அந்த வெகுசிலருடைய தனிப்பட்ட கோப்புகளை (personal files) எங்களுடைய எச்.ஆர் இலாக்காவிலிருந்து பெற்று படித்திருந்தார் என்பதை என்னை சந்தித்த முதல் சந்திப்பிலேயே என்னுடைய பூர்வாங்கத்தையே எடுத்துரைத்தபோது தெரிந்தது.

'It's not enough that you are talented and sincere tbr.. you should also know how to get along with others, especially your seniors.' என்றார் முதல் சந்திப்பிலேயே. நானும் ஒங்களமாதிரிதான். நம்ம குடும்ப பின்னணிக்கு சுத்தமா சம்பந்தமில்லாதவங்களோடத்தான் இந்த முப்பது வருசமா வேல செஞ்சிருக்கேன். ஆனா வேலைன்னு வந்துட்டா இதயெல்லாம் பெரிசுபடுத்தறதுல அர்த்தமே இல்ல. If you want climb up the ladder you'll have to change.. and change fast. அதாவது என்னோட tenureலயே... அப்படீன்னா என்னால ஏதாச்சும் செய்ய முடியும். என்ன சொல்றீங்க?' என்றார்.

அவர் சென்னை வட்டார அலுவலகத்திற்கு வந்திருந்த முதல் சந்திப்பிலேயே என்னை தனியாக அழைத்து உரையாடியது என்னுடைய வட்டார மேலாளரை எரிச்சல்கொள்ளச் செய்தது. அன்று முதலே என் மீது தேவையில்லாத ஒரு வன்மத்தை காட்ட துவக்கினார் என்றால் மிகையாகாது. நல்லவேளை என்னுடைய இலாக்கா தலைவராக இருந்த chief manager எனக்கு ஆறுதலாக இருந்தார் என்பது ஒரு நல்ல விஷயம். அவராலும் பொறுத்துக்கொள்ளாத கட்டத்தில், 'பேசாம இவர் ஒங்கக்கிட்ட நடந்துக்கற விதத்த சேர்மன் கிட்ட சொல்லிருங்களேன் டிபிஆர். அவருக்குத்தான் ஒங்கள புடிச்சிருக்குதே.' என்றார். நான் சிரித்துக்கொண்டே விசயத்தை மாற்றிவிடுவேன்.

என்னுடைய வங்கி முதல்வர் ஏற்கனவே என்னுடைய கோப்புகளில் இருந்தவற்றைப் படித்துவிட்டு ஒருதலைப்பட்சமாக நான் என்னுடைய போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தவராயிற்றே. அவரிடம் சென்று என்னுடைய வட்டார மேலாளரைப் பற்றி குறைகூறுவதால் எந்த பயனும் இருக்கப்போவதில்லை என்று நினைத்தேன். மேலும் அவரும் என்னுடைய வட்டார மேலாளரும் மிகவும் நெருக்கமானவர்கள் என்பது எல்லோருமே அறிந்த விஷயம்.

மேலும் என்னுடைய மகள்கள் இருவருமே சென்னையில் இருந்த மிகச்சிறந்த பள்ளிகளில் படித்துக்கொண்டிருந்தார்கள். என்னுடைய வட்டார மேலாளரை அனுசரித்து செல்வது என்னுடைய பிரச்சினை மட்டுமே.. ஆனால் அவரை விரோதித்துக்கொண்டு மாற்றலாகிச் சென்றால் அது என்னுடைய குடும்பத்திலிருந்த அனைவரையுமே பாதிக்க வாய்ப்புள்ளது என்பதால் என்னால் முடிந்த அளவு அவரை அனுசரித்துச் செல்வதென முடிவெடுத்திருந்தேன்.


தொடரும்...

23 ஏப்ரல் 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 51

என்னுடைய மாற்றல் உத்தரவு வந்து சேர்ந்ததுமே என்னுடைய கிளையிலிருந்த பணியாளர்கள் மட்டுமல்லாமல் சென்னைக் கிளையிலிருந்த பணியாளர்களுள் பெரும்பாலோனோர் அதிர்ச்சியடைந்தனர்.

அதற்கு காரணகர்த்தாவாயிருந்த சென்னைக் கிளை மேலாளர் ஒருவரை எதிர்த்து மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினால் என்ன என்றும் கூட ஆலோசிப்பதாக என்னுடைய உதவி மேலாளர் என்னிடம் கூறியதும் பதறிப்போய் அப்போது சென்னையில் ஊழியர் மற்றும் கடைநிலை அதிகாரிகளுடைய சங்க தலைவராயிருந்தவரை தொடர்புக்கொண்டு எனக்கு உதவுவதாக நினைத்துக்கொண்டு தயவுசெய்து அத்தகைய விபரீதத்தில் இறங்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன்.

அவர்களுடைய ஆர்ப்பட்டம் எனக்கு துணைபோவதை விட மேலும் சங்கடத்தையே விளைவிக்கும் என்பதை நான் உணர்ந்திருந்தேன்.

மேலும் என்னுடைய உதவி மேலாளர் என்னிடம், 'நீங்க எதுக்கு சார் எல்லாத்துக்கும் நீங்கதான் பொறுப்புன்னு ஏத்துக்கிட்டீங்க? இதுதான் காலங்காலமா நடந்துக்கிட்டிருக்கு, என்னால நினைச்சாக்கூட அத தடுத்து நிறுத்தியிருக்க முடியாது. ஏன்னா எங்க ஜோனல் மேனேஜருக்கு தெரிஞ்சிதான் இதெல்லாம் நடக்குதுன்னு சொல்லியிருக்கலாமே... அவரா நினைச்சிருந்தா நம்ம ப்யூன கூப்ட்ட வார்ன் பண்ணிருக்கலாமே சார். அவரும் சேந்துக்கிட்டு அவர் வீட்டு வேலைய எல்லாம் இவர்கிட்ட வாங்குனதாலதான அவர் அந்த அளவுக்கு சுதந்திரமா நினைச்ச நேரத்துல போறதும் வர்றதுமா இருக்க முடிஞ்சது? அதனால நீங்க பேசாம இதுக்கெல்லாம் காரணம் எங்க அசிஸ்டெண்ட் மேனேஜர்னுதான்னு சொல்லிட்டு போயிருக்கலாம். எனக்கும் டைரக்டர் லெவல்ல இன்ஃப்ளூயன்ஸ் இருக்கு சார். ஒங்களுக்கு நடந்தா மாதிரி நிச்சயம் எனக்கு நடந்துருக்காது. பேருக்கு ஒரு என்க்வயரின்னு வச்சி க்ளோஸ் பண்ணியிருப்பாங்க.' என்றார்.

நான் அவரை வியப்புடன் பார்த்தேன். அவர் அதற்கு முன்பு அந்த தொனியில் என்னிடம் பேசியதேயில்லை. இருப்பினும் அதை பெரிதுபடுத்துவதில் பயனில்லை என்று நினைத்து, 'சரி போகட்டும்.. எதெது நடக்குமோ அதது நடக்கும்கறதுல நம்பிக்கையுள்ளவன் நான்.' என்றேன்.

உண்மைதான் நான் என்னுடைய உதவி மேலாளர் மீது பழியைப் போட்டிருக்கலாம். ஆனால் அது என்னுடைய மனசாட்சிக்கு விரோதமான செயல் என்று நினைத்தேன். நான் ஏற்கனவே கூறியிருந்ததுபோல அதற்குப் பிறகு நான் அந்த கிளையில் மேலாளராக நீடித்திருக்க முடியாது. நான் என்ன சொன்னாலும் அதற்கு என்னுடைய உதவியாளர்கள் மத்தியில் மதிப்பிருக்காது. இவரை நம்பினால் நம்மை நட்டாற்றில் விட்டுவிடுவார் என்று நம்மிடம் பணியாற்றுபவர்கள் நம்மைப் பற்றி நினைக்க ஆரம்பித்துவிட்டால் அதன் பிறகு அவர்களை நம்முடைய விருப்பத்திற்கு வேலை வாங்குவது இயலாததாகிவிடும்.

அத்துடன் நான் விரோதித்திருந்த உயர் அதிகாரி வேறெந்த வழியிலாவது என்னை பழிவாங்கியிருப்பார் என்றும் அறிந்திருந்தேன். அவர் என்னை மட்டுமல்லாமல் தன்னை விரோதித்த அனைவரையுமே பழிவாங்குவதில் குறியாயிருந்தார் என்பதை அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற தினத்தன்று தலைமை அலுவலக ஊழியர்கள் பத்தாயிரம்வாலா சரவெடிகளை அவர் வாகனத்தின் முன்பு கொளுத்தி மகிழ்ந்தனர் என்பதைக் கேள்விப்பட்டபோது தெரிந்துக்கொண்டேன்.

பதவியிலிருக்கும்போது அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடாமல் முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கு நல்லது செய்வது என்ற கொள்கையைக் கடைபிடிப்பவர்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். இல்லாவிடில் பதவி பறிபோனதும் அதுவரை இருந்த மதிப்பும் மரியாதையும் சேர்ந்து போய்விடும் என்பதை நம்மில் பலரும் உணர்வதில்லை.

பத்தே மாதத்தில் மேலாளர் பதவியிலிருந்த இறக்கப்பட்டத்தில் மனவருத்தம் இருந்தது உண்மைதான். ஆனால் செய்த தவறை தட்டிக்கழிக்காமல் ஏற்றுக்கொண்டு அதற்குரிய தண்டனையை உடனே பெற்றுக்கொள்வது அதை மறைத்து அதனால் ஏற்படும் மன உளைச்சலில் அவதிப்படுவதை விட மேலானது. தண்டனையைப் பெற்றதுமே நம்மீது மனத்தாங்கல் கொண்டிருந்தவர்கள் கூட நம்மைப் பார்த்து அனுதாபப்படுவர் என்பதையும் அதன் பிறகு மீண்டும் வட்டார அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்தபோது உணர்ந்தேன்.

*****

நான் பணிக்கு சேர்ந்த அதே வாரத்தில் புது வட்டார மேலாளரும் பணிக்கு சேர்ந்தார்.

என்னுடைய துரதிர்ஷ்டம் அவர் மாற்றலாகி வந்திருந்த அதே அலுவலகத்தில்தான் என்னுடைய முந்தைய சீஃப் மேலாளரும் (என்னுடைய இலாக்கா அதிகாரியாக இருந்தவர்) பணிபுரிந்திருந்தார். ஆகவே என்னைப் பற்றி மிக நன்றாகவே (எதிர்மறை!) கூறியிருப்பார் போலிருக்கிறது. வந்து பொறுப்பேற்ற மறுநாளே என்னுடைய அப்போதைய இலாக்கா அதிகாரியிடம் என்னைக் குறித்து விசாரித்ததாக அவரே என்னிடம் வந்து கூறினார். 'என்ன டிபிஆர் ஒங்களப்பத்தி அவ்வளவா நல்ல ஒப்பீனியன் இல்ல போலருக்கு. என்னால முடிஞ்ச அளவுக்கு ஒங்களபத்தி அவர் கேள்விப்பட்டது சரியில்லைன்னு சொல்லியிருக்கேன், டோண்ட் ஒர்றி.' என்றார்.

இது எல்லா நிறுவனங்களிலும் நடக்கக் கூடியதுதான். நம்மால் எல்லோரையும் எல்லா நேரங்களிலும் திருப்திப்படுத்த முடிவதில்லை. நாம் எப்படி நம்முடைய கருத்துக்களை எல்லா நேரத்திலும் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது சரியாகாதோ அதுபோலவே மற்றவர்களுடைய கருத்தை நாமும் எல்லா நேரங்களிலும் ஏற்றுக்கொள்ள தேவையில்லை என்பதும் தவறாகாது.

நம்மில் சிலர் மற்றவர்களுடைய கருத்துடன் ஒத்துப்போக முடியாத சமயத்திலும் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை அல்லது அதை மிக நாசூக்காக வெளிப்படுத்திவிடுகிறோம்.

நான் இரண்டிலுமிருந்து மாறுபட்டவன். என்னுடைய மனதில் தோன்றும் ஒவ்வாமையை உடனே முகத்தில் மட்டுமல்லாமல் வார்த்தையிலும் காட்டிவிடுவது வழக்கம். Highly emotional என்பார்களே அந்த ரகம். அத்துடன் Highly expressive முகமும்! நண்பர்களையும் மிக எளிதில் விரோதிகளாக்கிவிட இது நல்ல காம்பினேஷன் என்பார் என்னுடைய முன்னாள் வங்கி முதல்வர்களுள் ஒருவர்.

காலப்போக்கில் அது சற்று குறைந்திருப்பது உண்மைதான் என்றாலும் இன்றும் என்னுடைய உணர்வுகளை மறைத்துக்கொள்ள சிரமப்படத்தான் வேண்டியிருக்கிறது. என்ன செய்வது.. இறைவனின் படைப்பு அப்படி அமைந்துப்போனது. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்.

அவர் முந்தைய வட்டார மேலாளரைவிடவும் வயதில் குறைந்தவர். நன்கு படித்திருந்ததுடன் விஷய ஞானமும் அதிகம். ஆனால் அத்துடன் அல்லது அதனால் அவருக்கிருந்த ஈகோதான் என்னுடன் மட்டுமல்லாது அவருக்கு கீழ் பணியாற்றிய அனைவருடனான தனிமனித உறவுகளில் ஏற்பட்ட விரிசல்களுக்கு முக்கிய காரணமாக இருந்தது.

அத்துடன் அவரிடம் காணப்பட்ட இன, மத மற்றும் மொழி வெறியும் அவருடன் சுமுகமான உறவு வைத்துக்கொள்ள தடையாயிருந்தன. நடுத்தரத்திற்கும் சற்று கீழேயிருந்த குடும்பத்திலிருந்து வந்திருந்ததால் அவரை விட பொருளாதாரத்தில் சற்று மேலானவர்களிடம் தேவையில்லாத ஒரு வெறுப்பு. இதை பல சமயங்களிலும் நேரடியாக அவர் காட்டியதை பார்த்திருக்கிறேன்.

குறிப்பாக ஒரு பெரிய தொழிலோ அல்லது வர்த்தகமோ துவங்க விரும்பி வங்கியில் கடன் கேட்டு வருபவர்களை தேவையில்லாமல் தன்னுடைய முதிர்ச்சியற்ற அணுகுமுறைகளால் நிந்தித்ததை பார்த்திருக்கிறேன். 'என்ன பண்றது டிபிஆர்? நாம குடுக்கற கடன் ஒழுங்கா திரும்பி வந்தாப் போறும்னுதான நாமல்லாம் நினைப்போம்? அதுக்குத்தான வசதிபடைச்சவங்களுக்கு லோன் குடுக்க நாம ப்ரிஃபர் பண்ணுவோம்? ஆனா இவர் என்னடான்னா அந்த மாதிரி ஆளுங்கள கண்டால எரிஞ்சி விழறார்.. எங்க போய் சொல்றது?' என்று என்னுடைய வட்டார கடன் வழங்கும் இலாக்கா தலைவர் அங்கலாய்க்காத நாளே இல்லை எனலாம்.

அதிலும் அவரை நேரில் சந்தித்து தங்களுடைய கடன் விண்ணப்பத்தை சாதகமாக பரிசீலனை செய்யவோ அல்லது மேலிடத்துக்கு பரிந்துரைக்கவோ கேட்க வந்துவிட்டால் போதும் மனிதர் சாமியாட்டம் ஆடிவிடுவார். 'என்னங்க என்னெ வளைச்சி போடலாங்கற நினைப்புல வந்தீங்களா?' என்பார். 'அதுக்கெல்லாம் மசியற ஆள் நான் இல்லை. லோன் அப்ளிகேஷன குடுத்துட்டு அத ஃபாலோ பண்ணி என்னெ வந்து பாக்கற வேலையையெல்லாம் இத்தோட விட்டுருங்க. ஒங்களுக்கு லோன் வாங்கற தகுதியிருந்தா போறும்... தன்னால லோன் கிடைச்சிரும்.. இல்லன்னா நீங்க எத்தன தடவ நடந்தாலும் கிடைக்காது.. போய்ட்டு வாங்க.'

இப்படியாக என்னுடன் கருத்தொற்றுமை ஏற்படாத அந்த வட்டார மேலாளர் கையில் சுமார் மூன்று வருடங்கள் நான் பட்ட பாடு சொல்லி மாளாது.


Thodarum