அப்புறம் ஒரு விஷயம் சார்.. சொல்ல மறந்துட்டேன்..’ என்றதும் குழம்பிப்போனேன். வேறேதும் பிரச்சினையாயிருக்குமோ என்று ஓடியது என் எண்ணம்.
‘சொல்லுங்க.’ என்றேன்.
‘நேத்து நீங்க போய் பார்த்தீங்களே அந்த கூட்டுறவு வங்கி ஜி.எம்? அவரே இன்னைக்கி காலைல நாந்தான் உங்கள அனுப்பிச்சேன்னு தெரிஞ்சிக்கிட்டு என்னை கூப்பிட்டார். என்ன சார் இப்படி நான் அனுப்பின சார் கிட்ட நடந்துக்கிட்டீங்களே, மானம் போயிருச்சி சார்னு சொன்னேன். அவரும் உடனே நீங்க அனுப்பின ஆளுன்னு எனக்கு தெரியாது சார். மன்னிச்சிருங்க.. சாரை உடனே குடி வரச்சொல்லுங்கன்னு சொன்னார். நான் உங்கள கேட்டுட்டு சொல்றேன்னு சொன்னேன். என்ன சொல்லட்டும் சார்?’
எனக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என்னுடைய அனுமதியில்லாமலே ஒரே ஒரு நாள் பழக்கத்தில் இத்தனை உரிமையுடன் நாயக்கர் நடந்துகொண்ட விதம் எனக்கு எரிச்சலையும் அதே நேரத்தில் ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்தியது. நிதானமாக கவனத்துடன் இவரை கையாளவேண்டும் என்று என் உள்மனது எச்சரித்தது.
‘சரி சார். இவ்வளவு தூரம் நீங்களா உரிமையெடுத்துக்கிட்டு செய்யறப்போ நான் என்ன சொல்றது? நீங்க சொல்றபடியே செஞ்சிரலாம் சார்.’ என்றேன்.
உரக்க சிரித்தார் நாயக்கர். ‘இதுல என்னய்யா சிரிப்பு வேண்டியிருக்கு. சிரிப்பா போனது நானில்லே?’ என்று நினைத்துக்கொண்டேன்.
‘அதான் சார் கிராமப்புற ஆளுங்களோட பாசம்கறது. ரெண்டு நாளைக்கு முன்னால என்னோட நண்பர் மெட்றாஸ்லருந்து கூப்ட்டு இன்னார் ரயில்ல புறப்பட்டு வராறு.. அவருக்கு நான் ரொம்ப கடமைப் பட்டிருக்கேன். அவருக்கு என்னவெல்லாம் வேணுமோ அத்தனையும் செஞ்சி கொடுக்க வேண்டியது உன் கடமைடான்னு சொன்னத எப்படி சார் மறுக்க முடியும். அவர் உங்களுக்கு எவ்வளவு கடமை பட்டிருக்காரோ அதே மாதிரி கடமை அவருக்கு நான் பட்டிருக்கேன்லே. இன்னைக்கி நா இந்த நிலைமைல இருக்கேன்னா அதுக்கு அவரோட அப்பாருதான் சார் காரணம். அந்த நன்றி விசுவாசம்தான். என்ன நான் சொல்றது?’
உண்மைதான். சென்னையிலிருந்த நாயக்கருடைய நண்பர் மிகவும் நல்லவர். தங்கமானவர் என்று கூட சொல்லலாம். ‘சார், நீங்க சாங்ஷன் பண்ண இந்த கடன் தொகை தகுந்த சமயத்தில் கிடைத்த ஒரு புதையல் மாதிரி சார். நீங்க மட்டும் மத்த மேனேசருங்க போல ரூல், நியாயம்னு பேசி இழுத்தடிச்சிருந்தீங்கன்னா என் தொழிலும் நானும் திவாலாயி போயிருப்போம் சார்.’ என்று என் கிளையிலிருந்து கடன் தொகைக்கான காசோலையை பெற்ற அன்று நாத்தழுதழுக்க அவர் நன்றி கூறியது நினைவுக்கு வந்தது.
அதற்கு பிரதிபலனாகத்தான் நான் அவரிடம் ‘தஞ்சைக்கு மாற்றலாகிப் போகிறேன் அங்கே உங்களுக்கு யாரையாவது தெரியுமா சார்’ என்று கேட்டவுடனே சிறிதும் தயங்காமல் நாயக்கரின் விலாசத்தை கொடுத்ததோடு நிற்காமல் அவரே தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு எனக்கு உதவும்படி கூறியிருக்கிறார் போலும்.
இப்படி ஒருவருக்கொருவர் கடமைப்பட்டிருப்பதும் தேவைதான். நாயக்கர் என் சென்னை வாடிக்கையாளருக்கு கடமைப்பட்டிருக்கிறார், அவர் எனக்கு கடமைப்பட்டிருக்கிறார், நான் இப்போது நாயக்கருக்கு கடமைப்பட்டிருக்கிறேன். இப்படியே கடமைபட்டோர் வட்டம் பெரிதாகி, பெரிதாகிதான் இந்த உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறதுபோலும். ('டேய் என்னாச்சி திரும்பிப் பார்க்கறேன்னுட்டு தத்துவ ஞானிமாதிரி ஆயிட்டே?' பயந்துராதீங்க எப்பவும் போல என் மனசாட்சிதான்.) சரி விஷயத்துக்கு வருவோம்.
நாயக்கர் கூறியபடி அந்த கூட்டுறவு அதிகாரியின் வீட்டிற்கு குடிபுகுவது அத்தனை புத்திசாலித்தனமாக இருக்காது என்றே பட்டது எனக்கு.
ஏன்?
ஒருவேளை நேற்று நான் அவரை ‘புகார் செய்யப்போகிறேன்’ என்று அச்சுறுத்தியதாலேயே எனக்கு அவர் வீட்டை வாடகைக்கு விட சம்மதித்திருக்கலாமே. அவருடைய தாயாரிடம் அவர் என்ன பொய் சொல்லி என்னை குடியமர்த்துகிறாரோ.. என் மனைவியோ மிகவும் எளிதாக உணர்ச்சிவசப்படக்கூடியவர். அங்கே குடிபோன பிறகு வீட்டு உரிமையாளருடைய தாயார் ஏதாவது அவமானப்படும்படி பேசிவிட்டால் மனம் குன்றிப்போக வாய்ப்புண்டு.
‘என்ன சார்? நீங்க அந்த வீட்டுக்கு குடிபோறீங்கன்னு அவர கூப்பிட்டு சொல்லிரலாங்களா?’
அவ்வீட்டில் குடிபோவதிலிருந்த சாதக பாதகங்களை அலசிக்கொண்டிருந்த என்னை நாயக்கரின் குரல் உசுப்பியது.
‘சார் நான் நேர்ல வந்து சொல்றேனே. அதுவரைக்கும் நீங்க அவர கூப்பிடாதீங்க. இப்ப வந்தா ஃப்ரீயா இருப்பீங்களா?’
‘என்ன சார் நீங்க, ஃப்ரீ க்ரீன்னுட்டு. புறப்பட்டு வாங்க. உங்க வேலைய முடிச்சிட்டுத்தான் இன்னைக்கி வேற வேலை.’
நான் அவருடைய அலுவலகத்தை அடைந்த போது அவருடன் வேறு சிலரும் இருந்தனர்.ஆனால் நான் சென்று அமர்ந்ததும் நாயக்கர் அவர்களை மவுன பாஷயில் வெளியேற வைத்தார்.
‘சொல்லுங்க சார். முதல்ல ஒரு மோர் குடிங்க. வாங்கிட்டு வரச்சொல்றேன். நேத்தைக்கு நீங்க வந்தப்போ உங்கள சரியா உபசரிக்க முடியாம போயிருச்சி. உங்க வீட்ல என்ன ஏதாவது தப்பா நினைச்சிருப்பாங்களா?’ என்றார்.
எனக்கு அவரைப் பார்க்க வியப்பாக இருந்தது. மனுஷன் உள்ளத்தில் நல்லவராய்த்தான் இருப்பார் போல. சரியான ஜாதி வெறி பிடிச்ச மனுஷனா இருப்பார் போலருக்குதே என்று நான் நேற்று நினைத்தது தப்போ என்று தோன்றியது.
‘சேச்சே, அப்படியெல்லாம் நினைக்க மாட்டாங்க சார்.’ என்றேன்.
அலுவலக சிப்பந்தி கொண்டு வைத்த மோர் சில்லென்றும், காரமாகவும் தொண்டைக்கு இதமாயிருந்தது. ‘மோர் ரொம்ப நல்லாயிருக்கு சார்.’ என்றேன்.
அவர் உரக்க சிரித்தார். ‘இதென்ன சார் பிரமாதம். இத விட பிரமாதமான விஷயங்கள் நம்ம ஊர்ல இருக்கு. இப்பத்தான வந்திருக்கீங்க. போகப் போக இந்த ஊரு பிடிச்சிப் போயி இங்கவே செட்டிலானாலும் ஆயிருவீங்க. சரி அது போட்டும். நீங்க வீட்டு விஷயத்துல என்ன முடிவெடுத்தீங்க?’
நான் என்னுடைய எண்ணத்தை சுருக்கமாக கூறினேன்.
சிறிது நேரம் மெளனமாய் இருந்த நாயக்கர் ‘சரி சார். நீங்க சொல்றதும் சரியாத்தான் படுது. நம்ம தரகர் வரட்டும். நான் சொல்லி ரெண்டு நாளைக்குள்ள வேற ஏற்பாடு பண்றேன்.’ என்றார்.
அவர் கூறியதுபோலவே தஞ்சை மருத்துவ கல்லூரிக்கு அருகாமையிலேயே நல்ல வசதிவாய்ந்த புத்தம்புது வீட்டை அடுத்த நாளே பிடித்துக்கொடுத்தார். நான் போஸ்டல் காலனி வீட்டிற்கு கொடுத்திருந்த ரூ.1000/- த்தையும் திரும்ப பெற்றுத் தந்தார் தரகர்.
அத்துடன் என்னுடைய வீட்டுப் பிரச்சினை முடிந்தது. அடுத்த சில நாட்களில் என்னுடைய வீட்டுப் பொருட்களும் இரு சக்கர வாகனமும் வந்து சேர்ந்தன. அடுத்த நாளே என் மனைவியும் ஊரிலிருந்து அவருடைய தாயாருடன் வந்திறங்கினார்.
ஆக ஒருவாறாக என்னுடைய தஞ்சைவாசம் இனிதே ஆரம்பித்தது.
அன்றிலிருந்து என்னுடைய வங்கி கிளை திறப்பதற்கான வேலைகளில் மும்முரமானேன்.
முதலில் தகுந்த ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும். அதற்கு முன் என் வங்கியின் வட்டார அலுவலகத்திற்கு (கோவையில் இருந்தது) தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு என்னுடைய வீட்டு விலாசத்தை அறிவித்தேன். பிறகு என் வீட்டிற்கொன்றும் கிளைக்கு ஒன்றுமாக இரு தொலைப்பேசி இணைப்புகளைப் பெற என் வட்டார மேலாளரிடம் அனுமதி பெற்று அதற்கு வேண்டிய விண்ணப்ப படிவங்களை பெற்று விண்ணப்பித்தேன்.
தஞ்சாவூரில் அந்த காலத்தில் தொலைப்பேசி இணைப்பு பெறுவது குதிரைக்கொம்பாக இருந்தது. அதுவுமல்லாமால் நான் குடிபுகுந்த வீட்டுக்கு அருகில் யாரும் தொலைப்பேசி வைத்திராததால் 500 அடி தூரத்திலிருந்த பிரதான சாலை சந்திப்பிலிருந்து கேபிள் இழுக்கவேண்டியிருந்தது.
நம் ஆபத்பாந்தவன் நாயக்கரின் செல்வாக்கு அங்கும் விளையாடியது! அவர்மூலமாக தொலைப்பேசி அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவரை அணுகி என் வீட்டு இணைப்புக்கான அனுமதி உத்தரவை ஒரே வாரத்திற்குள் பெறமுடிந்தது. ஆயினும் அடிமட்ட ஊழியர்களுக்கு சில ‘சில்லரை நோட்டுகளை’ தள்ளிய பிறகே வீட்டு இணைப்பு ‘இணைப்பானது!!’
என்னுடைய வீட்டிற்கு தொலைப்பேசி இணைப்பு வந்தது என்னையும் என் மனைவியை விடவும் சந்தோஷப்பட்டது மாடியிலிருந்த வீட்டு உரிமையாளர்தான். பணி ஓய்வு பெற்ற கணவன், மனைவி என வயசான காலத்தில் பிள்ளைகள் எல்லோரும் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு சென்றுவிட தனியாய் விடப்பட்ட அவ்விருவருக்கும் என்னுடைய தொலைப்பேசி இணைப்பு சென்னையிலும், மும்பையிலும் வசித்து வந்த அவருடைய பிள்ளைகளுடன் தொடர்புகொண்டு பேச மிகவும் வசதியாயிருந்தது.
அவர் சென்னையில் பல ஆண்டுகாலம் மாநில அரசு பொதுப்பணித் துறையில் பொறியாளராக பணியாற்றியவர். ‘ரிட்டையர் ஆனதும் என் பூர்வீக ஊரான கும்பகோணத்திலிருந்த நஞ்சை நிலத்தை வித்துட்டு இந்த நிலத்தை வாங்கனேன் சார். மெட்றாஸ்லயே முப்பது வருஷம் வாழ்ந்திட்டு கும்பகோணம் மாதிரியான டவுண்ல என்னால இருக்க முடியல. அதான் இங்க வந்தேன். நீங்க மெட்றாஸ்காரங்கன்னு சொன்னதும் எனக்கு பிடிச்சி போச்சி. அதுவும் பேங்க் மேனேஜர்னு வேற சொன்னீங்க. எனக்கு இந்த வாடகைப் பணம் வந்துதான்னனு இல்லே.ஆனா துணைக்கும் ஒரு சின்ன குடும்பமா வந்தா குடுக்கலாம்னுதான் இருந்தேன். நான் நினைச்சா மாதிரியே தரகர் உங்கள கூட்டிக்கிட்டு வந்தப்போ உடனே ஒத்துக்கிட்டேன். இப்ப பாருங்க.. உங்களுக்கு டெலிஃபோன் கனெக்ஷனும் வந்திருச்சி. இந்த ஊர்ல உங்கள மாதிரி அதிகாரிங்களுக்குத்தான் ஆஃபீஸ்லயே வீட்டுக்கு ஃபோன் வசதியெல்லாம் கிடைக்குது.. நான் முப்பது வருஷமா அரசாங்கத்துல குப்ப கொட்டியும் ரிட்டயர்ட் ஆறதுக்கு ரெண்டு வருஷத்துக்கு முன்னாலதான் டெலிஃபோன் கொடுத்தான். அரசாங்க உத்தியோகத்துல பேரும் அதிகாரமும்தான் பெரிசா தெரியும். சலுகைகள்னு ஒன்னும் ஒப்பேறாது..’
தொலைப்பேசி இணைப்பு கிடைத்த அன்று வீட்டுக்காரர் அடித்த லெக்சர் இது. மூச்சுவிடாமல் பேசுவார். ஆனால் கணவன், மனைவி இரண்டு பேருமே குனத்தில் சொக்கத் தங்கம்.
தொடரும்..
"ஒருவேளை நேற்று நான் அவரை ‘புகார் செய்யப்போகிறேன்’ என்று அச்சுறுத்தியதாலேயே எனக்கு அவர் வீட்டை வாடகைக்கு விட சம்மதித்திருக்கலாமே. அவருடைய தாயாரிடம் அவர் என்ன பொய் சொல்லி என்னை குடியமர்த்துகிறாரோ.. என் மனைவியோ மிகவும் எளிதாக உணர்ச்சிவசப்படக்கூடியவர். அங்கே குடிபோன பிறகு வீட்டு உரிமையாளருடைய தாயார் ஏதாவது அவமானப்படும்படி பேசிவிட்டால் மனம் குன்றிப்போக வாய்ப்புண்டு."
பதிலளிநீக்குஇவ்வளவு யோசித்திருக்கிறீர்களே, என்னைப் போல நீங்களும் உணர்ச்சி வசப்படுபவராகவே எனக்குத் தெரிகிறீர்கள். அதனால்தான் அந்த வீட்டுக்காரரின் மனச்சங்கடம், உங்கள் மனைவிக்கு ஏற்படக்கூடிய மனவருத்தம் எல்லாவற்றையும் யோசித்திருக்கிறீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மேலே உள்ள பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html
பதிலளிநீக்குஅன்புடன்,
டோண்டு ராகவன்
வாங்க டோண்டு சார், வணக்கம்!
பதிலளிநீக்குஎன்னைப் போல நீங்களும் உணர்ச்சி வசப்படுபவராகவே எனக்குத் தெரிகிறீர்கள். //
உணர்ச்சிவசப்படுவதால்தான் நம்மைப்போன்றோர் அவதிப்படுகிறோம். யார் என்ன சொன்னா நமக்கென்ன, யார் என்ன நினைச்சா நமக்கென்னன்னு போய்கிட்டேயிருக்கறவங்கள பாருங்க எந்த நோய்நொடியுமில்லாம ஜாலியா இருப்பாங்க. உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள்ள வைத்திருக்கறவந்தான் ஞானின்னு சும்மாவா சொன்னாங்க?
வாங்க ராஜ், நன்றி.
பதிலளிநீக்குஉங்களுக்கு முன்ஜாக்கிரதை தான் அதிகம்னு தோணுது.//
ரொம்ப கரெக்ட். எந்த வேலைக்கும் இது வேணும்னாலும் ஒரு வங்கி மேலாளருக்கு இது கொஞ்சம் கூடுதலாவே வேணும். ஏன்னா அவங்க கொடுக்கறதும், வாங்கறதும் வாடிக்கையாளர்களின் பணம். கரணம் தப்பினா மரணம்கறாமாதிரி கொஞ்சம் கவனம் தவறினாலும் ஏற்படக்கூடிய இழப்பு கணிசமானதாக இருக்கும்.
முன் ஜாக்கிரதை, முன் திட்டம், புத்தி, பொறுமை, பொருப்பு - இப்படி உருப்படியான் நல்ல குணங்கள் இல்லாமலே 'சிலருக்கு'(!) லைஃப்பும் ஓடிக்கிட்டு இருக்கு...!
பதிலளிநீக்குஅவங்கெல்லாம் கொடுத்து வைத்தவர்கள் என்பார்களே அந்த ரகம் தருமி சார்.
பதிலளிநீக்குஒன்னு கேள்வி பட்டிருக்கீங்களா? என்னாலதான் எல்லாம் நடக்குதுன்னு முன் ஜாக்கிரதையா, பொறுப்பா திட்டம் போட்டு செய்றவங்களை கடவுள் நான் எதுக்குப்பா அதான் நீயே எல்லாத்தையும் பாத்துக்கறியேன்னு கை கழுவிருவாராம். ஒன்னைப் பத்தியும் கவலைப் படாம நீயே கதிப்பான்னு இருக்கறவங்களோட எல்லா காரியங்களையும் கடவுளே பாத்துப்பாராம்.
ஹும்.. நமக்குத்தான் எல்லாம் தெரியுமேன்னு நடக்தாலதான் தடுக்கி விழுந்து அய்யோ அம்மான்னு கத்தறோமோன்னு சில சமயத்துல தோணும்.
Hello TBR
பதிலளிநீக்குI take this opportunity to wish you and your family a very happy and prosperous 2006!
Murali
Thank you for your Greetings Murali.
பதிலளிநீக்குI wish you and your family the same.
tbrjoseph