03 டிசம்பர் 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 28

என்ன பண்ணல்லாம் சொல்லுங்கன்னு போன பதிவில கேட்டிருந்தேன். யாருமே கண்டுக்கல.

இந்த கைக்கூலி (மலையாளத்துல லஞ்சம்) பெறுவதென்பது வங்கிகளில் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதென்பது என்னுடைய வாதம். லஞ்சத்தின் மூல காரணம் போதிய ஊதியமில்லாமை. அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கு அதிகாரம் அதிகம், ஊதியம் குறைவு. அதிகமான அதிகாரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய? ஆகவேதான் அவர்கள் தொட்டதுக்கும் விட்டதுக்கும் சம்பளத்தோடு சேர்த்து கிம்பளத்துக்கும் ஆசைப்படுவதில் தப்பில்லை என்று நினைப்பேன். அரசியல்வாதிகளுக்கு அது பிறவி குணம். ஒன்றும் செய்ய முடியாது.

ஆனால் அந்த காலத்திலேயே வங்கி ஊழியர்களுக்கு அதுவும் வங்கி அதிகாரிகளுக்கு மற்ற துறையினரை விட ஓரளவுக்கு போதுமானதையும் விட கூடுதலாகவே ஊதியம் கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போதும் கணினி அதுவும் மென்பொருள் வல்லுனர்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் வங்கி அதிகாரிகளுடைய மாத ஊதியம் மற்ற எல்லா துறையினரையும் விட அதிகம்தான்.

ஆகவேதான் நான் ஆரம்பமுதலே கைக்கூலி பெறுவதை ஒரு கேவலமான செயலாக கருதினேன். அதனால் எனக்கு கிடைத்த வசதி, வாய்ப்புகள் குறைந்து போயிருக்கலாம். சில, பல வாடிக்கையாளர்கள் மற்றும் என்னுடைய வங்கி உயர் அதிகாரிகளின் விரோதத்தையும் சம்பாதிக்க வேண்டி வந்துள்ளது என்பதும் உண்மைதான். இதை எழுதுவதன் மூலம் இதை நீங்கள் என்னுடைய சுயபுராணம் என்று நினைத்தாலும் சரி, இதுதான் உண்மை.

எனவே என்னுடைய மேலாளர் அனுபவத்தில் எந்த வாடிக்கையாளராவது ‘உங்கள வேண்டிய விதத்தில் கவனித்துக்கொள்கிறேன்’ என்று அசடு வழிந்துக்கொண்டு வந்து நின்றால் கண்டிப்பாய் அவருக்கு லோன் இல்லை. அது எத்தனை பிரமாதமான Proposal ஆக இருந்தாலும் எந்த அதிகாரி பரிந்துரைத்திருந்தாலும் சரி. அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் நான் சந்திக்க தயாராயிருந்தேன்.

இனி பிள்ளை விஷயத்துக்கு வருவோம்.

‘சரி சார். அந்த (கவனிப்பு) விஷயத்தை விடுங்க. இந்த வண்டிங்கள உங்க பேர்லதான ரெஜிஸ்டர் பண்ண போறீங்க?’ என்றேன் அவரைப் பார்த்து.

‘என் பேர்ல ஏற்கனவே அஞ்சாறு வண்டிங்க இருக்கறதுனால (பக்கத்திலிருந்தவரை காட்டி) இவர் பேர்ல ரெண்டு வண்டிகளை பதியலாம்னு இருக்கேன்.’

அவருடன் வந்தவரைப் பார்த்தாலே தெரிந்தது, அவருடைய பணியாட்களில் ஒருவராய்த்தான் இருக்க வேண்டும் என்று.

‘சரி சார். அந்த இன்னொன்னு?’

அடுத்து இருந்தவரை சங்கடத்துடன் பார்த்தார். அவரும் புரிந்துகொண்டு உடனே எழுந்து என் அறையை விட்டு வெளியே சென்று நின்றுகொண்டார்.

நான் வியப்புடன் அவரைப் பார்த்தேன். ‘என்ன சார், அவர் ஏன் எழுந்து போய்ட்டார்?’

‘அது ஒன்னுமில்ல சார். இவனுக்கு தெரிய வேணாமேன்னு பார்த்தேன். மூனாவது வண்டிய அன்னைக்கி நீங்க ரூம்ல பாத்தீங்கள்ளே அவங்க பேர்ல பதியலாம்னு இருக்கேன். அதான்.. இவன் வாய்தவறி வீட்ல போய் உளறிட்டான்னா, குடிமுழுகிப் போயிரும்.”

அவரை என்ன சொல்வதென்றே எனக்கு விளங்காமல் ஒரு நிமிடம் அவரையே பார்த்தேன்.

‘சார் நீங்க தப்பா நினைச்சிக்காதீங்க. லோனை கட்டப்போறது நான்தானே? சுமாரா எவ்வளவு நாளைக்குள்ள சாங்க்ஷன் கிடைக்கும் சார்? ஏன் கேக்கறேன்னா நான் இன்னும் ரெண்டு வாரத்துல மறுபடியும் மெட்றாஸ் வருவேன். அப்போ எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டீங்கன்னா டாக்குமென்ட்ஸ் எல்லாம் கையெழுத்து போட்டுரலாமேன்னுதான்..’

ரொம்ப வேகமாத்தான் இருக்கீரு என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டு, ‘அவ்வளவு சீக்கிரம் கண்டிப்பா முடியாது சார். முதல்ல நீங்க வண்டிய யார் பேர்ல பதிய போறீங்களோ அவங்களோடதும் உங்களோடதும் Financial Statement, Annual Income எல்லாம் டீடெய்லா நீங்க தரணும். அந்த பேப்பர்ஸ் எல்லாம் எனக்கு திருப்தியா இருந்தாத்தான் லோன் அப்ளிகேஷனே கொடுப்பேன். அப்புறம் இவ்வளவு பெரிய தொகைங்கறதுனால சொத்து ஜாமீன் கேப்பாங்க. அதோட டீடெய்ல்சும் வேணும். அதெல்லாம் நீங்க கொண்டு வரலேன்னு நினைக்கிறேன். நாளைக்கே ஊர்லருந்து வரவச்சி தந்தா சரி, ரெண்டு நாளைல பாத்துட்டு சொல்லிடறேன். இல்லன்னா ஊருக்கு போய் அனுப்புங்க.’

கோபத்தில் சட்டென்று அவர் முகம் சிவந்து என்ன சொல்வதென்று தெரியாமல் ஒரு நொடி தடுமாறினார். கண்கள் இரண்டும் சிவந்து -குடிகாரன் கண்களைப் போலன்னு வச்சிக்குங்களேன் - என்னைப் பார்த்தபோது இது போன்ற ஆட்களை கையாளுவதில் அதிக அனுபவமில்லாத நான் ஒரு நொடி பயந்துபோனேன். இருப்பினும் பயத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் அவரையே பார்த்தேன்.

‘சார். உங்க மனசுல என்ன நினைச்சிக்கிட்டிருக்கீங்க? இந்த மாதிரி சேட்டே எங்கிட்ட பேசுனதில்லை.. நான் யாருன்னு நினைச்சிக்கிட்டிருக்கீங்க? வக்கத்த பயல்னா? என்ன கேட்டீங்க? என்னோட பைனான்ஸ் ஸ்டேன்ட்மென்டா? லோன் எடுக்கப் போறவன் (வெளியே நிற்பவரைக் காட்டி) அவன், அப்புறம் என் வப்பாட்டி, அவங்க ஸ்டேட்மென்ட கேளுங்க, தப்பில்ல. என்னோடத எதுக்கு? என்ன சார் ஆழம் பாக்கறீங்களா? வேண்டாம். அதுக்கு உங்க வயசு பத்தாது. சொல்லிட்டேன். முதல்ல உங்க பியூன கூப்ட்டு லோன் அப்ளிகேஷன் ரெண்டு கொண்டு வரச்சொல்லுங்க. ஒன்னுல இவன் கையெழுத்து போடுவான். ஒன்னு நான் கொண்டுபோய் அந்த பொம்பள கிட்ட கையெழுத்து வாங்கிட்டு நாளைக்கு குடுத்தனுப்புறேன். அதுல என்ன வேணுமோ எழுதிக்கிங்க. அது உங்க இஷ்டம். இன்னொன்னையும் இப்பவே சொல்லிடறேன். இதோ நிக்கறானே இவனுக்கு தனியா சொத்து, பத்து எதுவும் இல்ல. என் கிட்ட வேல பாக்கறான். அதனால சொத்து ஜாமின்லாம் குடுக்க முடியாது. அவ்வளவுதான். வண்டிய பேருக்கு மட்டும்தான் அவன் மேல பதியப்போறேன். ரெண்டு மாசத்தக்கப்புறம் அவன்கிட்டருந்து ஒரு பவர் பேப்பர்ல வண்டிய எம்பேர்ல மாத்திக்க சொல்லி எழுதி வாங்கிருவேன். வண்டிக்கு லோன நான்தான கட்டப் போறேன்? அவனில்லேல்லே? அந்த பொம்பள வண்டி மட்டும் அவ பேர்லயே இருக்கும். அந்த லோனையும் நானே கட்டிடறேன். என்ன நா சொல்றது விளங்குதா?’

அவருடைய இந்த நீண்ட பிரசங்கத்தின் பின்னே தொனித்த மிரட்டல் எனக்கு நன்றாக புரிந்தது. கூடுதல் ரசாபாசம் ஆகாமல் இதை கையாளவேண்டும் என்று முடிவு செய்தேன். என்னுடைய மேசையின் கீழ் பொறுத்தப்பட்டிருந்த அழைப்பு மணியை அழுத்தினேன். ஒரு நொடியில் வந்த பியூனிடம் கடன் வழங்குவதற்கான எல்லா படிவங்களிலும் இரண்டிரண்டு கொண்டு வரச்சொன்னேன். அவற்றை இரண்டு உறைகளில் போட்டு அவரிடம் நீட்டினேன்.

அவர் ஒன்றும் புரியாமல் என்னையே பார்த்தார். ‘என்ன சார் ஒன்னுல இவர்கிட்ட கையெழுத்து வாங்கிக்குங்கன்னு சொன்னேனே. அப்படியே குடுக்கறீங்க?’

நான் பொறுமையுடன் விளக்கினேன். ‘சார் நான் இப்போ சொல்றத கோபப்படாம கேளுங்க. நீங்க இதுக்கு முன்னால எங்கல்லாம் எப்படியெல்லாம் நீங்க லோன் வாங்கியிருக்கீங்கங்கறத பத்தியெல்லாம் எனக்கு கவலையில்லை. என்னோட கிளையில உங்களுக்கு லோன் வேணும்னா இந்த அப்ளிகேஷனோட நான் சொன்ன உங்களோடதும், யார் பேர்ல லோன் வாங்கறதா இருக்கீங்களோ அவங்களோட Financial Statements, Annual Income சான்றுகளும் கொடுத்தாத்தான் லோன் பேப்பர்ஸ் எங்க ஹெட் ஆஃபீசுக்கு போவும். அத்தோட நான் சொன்ன சொத்து ஜாமீன் அது யாரோட சொத்துங்கறத பத்தயெல்லாம் எனக்கு கவலையில்லை, கண்டிப்பா வேணும். இல்லன்னா..’ நான் முடிப்பதற்குள் குறுக்கிட முயன்றவரை சைகை காண்பித்து நிறுத்திவிட்டு தொடர்ந்தேன். ‘இல்லன்னா போகாது. அவ்வளவுதான்.இப்ப சொல்லுங்க. என்ன சொல்லப் போறீங்க?'

அதீத கோபத்துடன் எழுந்து நின்ற பிள்ளை.. ஏற்கனவே கருப்பாய் இருந்த முகம் மேலும் கருத்துபோக, உதடுகள் துடிக்க.. என்னை பார்த்தார்.

நான் உண்மையிலேயே அரண்டு போய் அவரையே பார்த்தேன்...


தொடரும்.

15 கருத்துகள்:

  1. சார், முதலில் .. தமிழ்மண திரட்டியில் இந்த இடுகை உங்கள் என்கதையுலகம் பதிவிற்கு சுட்டி அங்கு "no blog found' தருகிறது.

    கையூட்டு பற்றி அதிர்ச்சிதான் அடைய முடியும். என்ன எழுதுவது. வங்கி அதிகாரிகள் என்ன, யாருக்குமே லஞ்சம் வாங்குவதை நியாயப் படுத்த முடியாது.உங்கள் நிலை சரியானது; அடிதடியிலிருந்து எப்படி தப்பினீர்கள் என்றறிய அடுத்த இடுகைக்கு காத்திருக்க வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  2. //ஆனால் அந்த காலத்திலேயே வங்கி ஊழியர்களுக்கு அதுவும் வங்கி அதிகாரிகளுக்கு மற்ற துறையினரை விட ஓரளவுக்கு போதுமானதையும் விட கூடுதலாகவே ஊதியம் கிடைத்துக் கொண்டிருந்தது//


    அந்த காலத்தில எல்லாம் நல்ல சம்பளம் வாங்கி அனுபவிச்சுட்டீங்க...இப்ப கடைசியா
    சேர்நத நாங்கள்ளால் பிச்சை காசுக்கு உழைக்கிறோம்னு நினைக்கிறேன். அதுவும் கடைசியா போட்டீங்களே ஒரு செட்டில்மெண்ட் ..கொடுமைடா சாமி..

    ஜுனியர்கள்னா பேங்கில ஒரு இளக்காரம்தான் அதுவும் அதிகாரிகள் வர்க்கத்துல....

    இந்த காலத்துல எல்லார் துறைகளிலும் சம்பளம் உயர்ந்த அளவுக்கு இங்கே ஒண்ணும் ஏறலே....நீங்க பாட்டுக்கு ஏ.ஸி கேபினுக்குள்ளே உட்காந்துட்டு ஏதோ பதிவு போட அதை படிச்சுட்டு அவனவன் பிராஞ்சு'ல வந்து சத்தம் போடறான்..பார்த்து பண்ணுங்க தலைவா...

    பதிலளிநீக்கு
  3. இது என்னாடா பெரிய வம்பாப்போச்சு(முத்து- வையும் சேர்த்துத்தான்)..அடுத்த அத்தியாயம் சீக்கிரம் எழுதுங்க ஜோசப் சார்.

    பதிலளிநீக்கு
  4. அடுத்த அத்தியாயம் சீக்கிரம் எழுதுங்க

    பதிலளிநீக்கு
  5. வாங்க மணியன்,

    அது நான் தவறுதலாக என்கதையுலகத்துல போட்டுட்டு பிறகு நீக்கியதால வந்த விளைவு.

    நீங்க சொன்னது மிகவும் சரி. கையூட்டு பெறுவது அது யாராயிருந்தாலும் தவறுதான்.

    பதிலளிநீக்கு
  6. இன்னிக்கு ராத்தூக்கமில்லாம இப்படிப் புலம்ப வச்சுட்டீங்களே! பெரிய ஆள்தான் நிங்க. சீக்கிரம் அடுத்த பதிவைப் போடுங்க. அந்த ஆளு கையை நீட்டிடப்போறாரு:-)

    பதிலளிநீக்கு
  7. வாங்க முத்து, நன்றி.

    பிச்சை காசுக்கு உழைக்கிறோம்னு நினைக்கிறேன்//

    அதென்ன முத்து இப்படி சொல்லிட்டீங்க? வாங்கற ஊதியம் போறலைன்னு தோண்றதுதான் கையூட்டு பெறும் பலரும் அதை நியாயப் படுத்த கூறும் வாதம், குடிகாரன் கவலையை மறக்க குடிக்கிறேன் என்பது போல.

    ரெண்டாவது

    ஜுனியர்கள்னா பேங்கில ஒரு இளக்காரம்தான் அதுவும் அதிகாரிகள் வர்க்கத்துல....//

    ஒருக்காலும் இல்லை. என்னைப் போன்றவர்கள் நிச்சயம் இதுவரை அப்படி நினைத்ததேயில்லை. ஏனெனில் நாங்களும் அந்த நிலையிலிருந்து வந்தவர்கள்தானே.

    மூன்றாவது

    நீங்க பாட்டுக்கு ஏ.ஸி கேபினுக்குள்ளே உட்காந்துட்டு ஏதோ பதிவு போட //

    இது கொஞ்சம் ஓவரா தெரியுதே. பராசக்தியில சிவாஜி பணக்கார வர்க்கத்தை தாக்கறா மாதிரி தாக்கிட்டீங்களே முத்து. நான் இப்ப ஏசி காபின்ல இருக்கறவன்தான். ஆனாலும் நானும் நாயா பேயா காட்டுலயும் மேட்டுலயும் வேல செஞ்சவன்தான் முத்து. இனி வரும் பதிவுகள்ல எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபங்கள எழுதும்போது சொல்லுங்க, நான் இந்த நிலைக்கு வர்றதுக்கு எத்தனை பாடுகளும், தியாகங்களும் செய்ய வேண்டியிருந்தன என்று.

    கடைசியாக

    அதுவும் கடைசியா போட்டீங்களே ஒரு செட்டில்மெண்ட் ..கொடுமைடா சாமி..//

    ஒத்துக்கறேன். கடந்த செட்டில்மெண்ட் ஜூனியர் அதிகாரிகளுக்கு எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லைதான். ஆனால அதற்கு முந்தைய செட்டில்மெண்ட் அவர்களுக்கு சாதகமாயிருந்ததே.. அதற்கென்ன சொல்கிறீர்கள்?

    இருப்பினும் உங்களுடைய ஆதங்கத்தை புரிந்துகொள்கிறேன் முத்து.

    அந்த காலத்தில எல்லாம் நல்ல சம்பளம் வாங்கி அனுபவிச்சுட்டீங்க...//

    ஹூம்..என்னத்த சொல்ல?

    பதிலளிநீக்கு
  8. வாங்க ஜோ, நன்றி.

    என்னோட மாமனார் வீட்ல அன்னைக்கு சொன்னத சொல்றேன். 'இப்படிபட்ட வேலைன்னு தெரிஞ்சிருந்தா பொண்ணே குடுத்திருக்க மாட்டோமே.'

    ஒரு வங்கி மேலாளர் என்னவெல்லாம் அனுபவிக்க வேண்டியிருந்ததை சொல்லணும்னுதான் இந்த தொடரை எழுத வேண்டும் என்று நினைத்தேன். சில அரசுடமையாக்கப்பட்ட வங்கி மேலாளர்கள் இதை விட கொடுமைகளை அனுபவித்ததை அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. வாங்க தருமி சார், நன்றி.

    திங்கள்கிழமைதான் அடுத்த பதிவு.

    காத்திருங்களேன். காதல்லதான் காத்திருப்பது சுகம். மத்ததுலல்லாம் டென்ஷன்தான். இல்லை?

    பதிலளிநீக்கு
  10. வாங்க துளசி, நன்றி.

    நேத்தைய மழையில எலக்ட்ரிசிட்டி இல்லாம ராத்திரி முழுசும் கொசுங்களுக்கு துணையா முழிச்சிக்கிட்டிருந்தேன். அதான் எல்லாத்தையும் பழி வாங்கலாம்னு நினைச்சி சரியான எடத்துல தொடரும் போட்டுட்டேன்.எப்படி?
    :-)))))))))))))

    பதிலளிநீக்கு
  11. வாங்கற ஊதியம் போறலைன்னு தோண்றதுதான் கையூட்டு பெறும் பலரும் அதை நியாயப் படுத்த கூறும் வாதம்//
    நாங்கள்ளால் கையூட்டு வாங்குவோம் ...ஏன்னா எங்களுக்கு சம்பளம் பத்தலை என்றா நான் சொன்னேன்?
    நீங்க பாட்டுக்கு சபைல பேங்குகாரனுக்கு நல்ல சம்பளம் என்று தவறான தகவல்( சர்வீஸ் அதிகம் உள்ளவர்கள் நிலையை) மட்டும் கூறி விட்டீர்கள் என்றால் அது மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் என்பதுதான் நான் சொல்லவந்தது.

    //இது கொஞ்சம் ஓவரா தெரியுதே. பராசக்தியில சிவாஜி பணக்கார வர்க்கத்தை தாக்கறா மாதிரி தாக்கிட்டீங்களே முத்து. நான் இப்ப ஏசி காபின்ல இருக்கறவன்தான். ஆனாலும் நானும் நாயா பேயா காட்டுலயும் மேட்டுலயும் வேல செஞ்சவன்தான் முத்து.//
    சேச்சே எனக்கு தெரியாதா சார் நீங்க கஷ்டபட்டது எல்லாம்..ஆனா இப்போது சிதம்பரம் டெய்லி அறிக்கை விடறார்
    . எட்டு டூ எட்டு பேங்கிங்..
    .லீவ் எல்லாம் குறைக்கிறாங்க...
    ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டிங்கற மாதிரி நம்ம
    செட்டில்மெண்ட் மட்டும் லாப நஷ்ட கணக்கை பாக்குது..மத்த சென்ட்ரல் கவர்மெண்ட் டிபார்ட்மெண்ட எல்லாம் நல்லா இருக்கு..
    ஒரு குப்பனும் சுப்பனும் வந்து பேங்குல "லா" பேசற மாதிரி வேற கவர்மெண்ட் ஆபிசில பேசமுடியுமா?
    அப்படி உழைச்சு நமக்கு மரியாதை என்ன கிடைக்குது? என்னிக்காவது நீங்க வீட்டுக்கு அஞ்சு மணிக்கு வேண்டாம் எழு மணிக்காவது போயிருக்கீங்களா?
    என்னிக்காவது சனிக்கிழமை வீட்டுக்கு (அரை நேரமாம்) கரெக்ட் டைமுக்கு போக முடியுதா? (இன்னைக்கும் சேர்த்துத்தான்)
    நீங்க பாட்டுக்கு ஏதோ பண மழையில நாம நனையிற மாதிரி எழுதிட்டீங்களே சார்?

    பதிலளிநீக்கு
  12. ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்ங்கறா மாதிரி ரெண்டு வங்கி அதிகாரிகளும் வாக்குவாதத்துல இறங்கிட்டா.. அது நல்லதா முத்து?

    உங்க வாதத்துல நியாயத்தை ஒத்துக்கறேன். முத்து.

    நீங்க பாட்டுக்கு ஏதோ பண மழையில நாம நனையிற மாதிரி எழுதிட்டீங்களே சார்? //

    என்னோட Product Development Centreலருக்கற எல்லாரும்,என்னையும் சேர்த்து ராத்திரி எட்டு மணிக்கு முன்னால வீட்டுக்கு போன சரித்திரமே இல்ல. ஆனா நாங்க இருக்கற பில்டிங்க்ல சுமார் பத்து IT Offices இருக்கு. அதுல ஒன்னு கூட நாங்க போற நேரத்துல மூடியிருக்காது. பெண்கள் உட்பட எந்த நேரத்துலதான் வீட்டுக்கு போவாங்கன்னே சொல்ல முடியாதாம். அவங்களுக்கும் நாங்க எங்க டெவலப்பர்சுக்கும் கொடுக்கற ஊதியத்துல பெரிசா வித்தியாசம் ஒன்னும் இல்லேங்கறது சத்தியம்.

    சரி போட்டும். நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன். நீங்க சொல்ல வந்ததையும் சொல்லிட்டீங்கன்னு நினைக்கிறேன். போதும்னு நினைக்கறேன். சரியா?

    பதிலளிநீக்கு
  13. சார்,


    நம்ம பொழப்ப பத்தி பேசினால் இந்த ஃபாரம் பத்தாது. ஆனா நீங்க எப்படி இவ்ளோ பெரிய அதிகாரி ஆனிங்கன்னு இப்போ புரியது.(ரொம்ப பொறுமையா அதே சமயம் வளைஞ்சு கொடுத்து....)
    நம்ம ஆர்கியுமெண்ட் எல்லாம் பாஸிடிவ் ஆகத்தான் இருக்கும்.என்ன
    சொல்றீங்க?

    பதிலளிநீக்கு
  14. ரொம்ப பொறுமையா அதே சமயம் வளைஞ்சு கொடுத்து....) //

    நானு ஒரு காலத்துல பொறுமை இல்லாதவனாத்தான் இருந்தேன். ஒரு சமயம் உடம்பு சரியில்லாம ரெண்டு நாள் ICUல இருக்க வேண்டி வந்திச்சி. அந்த ரெண்டு நாள்ல ரெண்டு மரணத்தை நேரடியா பார்த்தேன். ஏன் அந்த ICU வில சுய நினைவோட இருந்தவன் நான் ஒருவன்தான். அப்பத்தான் தெரிஞ்சது இந்த வாழ்க்கையோட நிலையற்ற தன்மையும் நமக்குள்ளருக்கற அகங்காரத்தோட வெறுமையும். அதுதான் என்னை ஒரு பொறுமையுள்ளவனா,எந்த ஒரு சூழ்நிலையிலயும் நிதானம் தவறாதவனா மாத்திச்சி. இப்பவும் பழையபடி கோபம் வ்ர்றதுண்டு, சில சமயங்கள்ல. ஆனா உடனே மறைஞ்சி போயிரும்.

    நம்ம ஆர்கியுமெண்ட் எல்லாம் பாஸிடிவ் ஆகத்தான் இருக்கும்.என்ன
    சொல்றீங்க?//

    கரெக்ட். அப்படித்தான் இருக்கணும்.
    மனசுல வச்சிக்கறதுனால எந்த பலனும் இல்ல. திங்கள் கிழமை பார்க்கலாம். பை.

    பதிலளிநீக்கு
  15. வாங்க ராஜ்,

    சனிக்கிழமை பதிவை இன்னைக்கித்தான் படிச்சீங்க போல. நன்றி.

    காற்றலை வாங்கறதுக்கென்ன காற்று வாங்குவதற்கே லோன் குடுக்கற காலம் இது. ஒவ்வொரு வங்கியும் போட்டி போட்டுக்கிட்டு குடுக்கற காலமாச்சே. அன்னைக்கி பணப்புழக்கம் சுருங்கி இருந்த காலம். அதனாலதான் கடன் கேட்போர் எண்ணிக்கையும் அதிகமா இருந்திச்சி.
    கடன் கிடைக்காது என்கின்ற பட்சத்தில் மேலாளரை ஆள் வைத்து மிரட்டுகின்ற காலம் அது.

    பதிலளிநீக்கு