தேர்தல் 2014 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் 2014 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 மே 2014

தேர்தல் 2014 - விசித்திரமான முடிவுகள்!

நடந்து முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் பல சுவாரஸ்யமான தகவல்களை தருகின்றன.

ஒரு கட்சி பெறும் இடங்களை விட அது பெறும் வாக்கு விழுக்காடே (vote percentage) அது மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு மதிப்பை பெற்றுள்ளது என்றோ அல்லது ஒரு தேர்தலில் வாக்களித்தவர்களில் எத்தனை விழுக்காடு வாக்காளர்கள் அந்த கட்சியை ஆதரித்தார்கள் என்றோ காட்டுகிறது என்பார்கள். 

இந்த அடிப்படையில் பார்த்தால் ஒரு கட்சி தேர்தலில் பெறும் வாக்கு விழுக்காட்டுக்கும் அது வெற்றி பெறும் இடங்களுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்க வேண்டும் அல்லவா? 

ஆனால் கடந்த இரு பொதுத் தேர்தல் முடிவுகளை ஒப்பிடும்போது சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் பல விசித்திர முடிவுகளை அளித்துள்ளதைக் காண முடிகிறது. 

கீழ்காணும் பட்டியலைப் பாருங்கள்:


கடந்த, அதாவது 2009ல் நடந்த தேர்தலில் 22.90 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருந்த அஇஅதிமுக இம்முறை அதை இரட்டிப்பாக்கியுள்ளது, அதாவது 44.30 விழுக்காடு வாக்குகளை பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் 2104ல் அது வெற்றிப் பெற்ற இடங்களின் எண்ணிக்கையும் 9லிருந்து 18 ஆக அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அது பெற்ற இடங்களோ நான்கு மடங்கு. அதாவது 2009ல் ஒன்பதாக இருந்த அதன் இடங்கள் 2014ல் 37 ஆக உயர்ந்துள்ளது.

திமுகவை எடுத்துக்கொண்டால் 2009ல் 25.10 விழுக்காடாக இருந்த அதன் வாக்கு விழுக்காடு 2014ல் வெறும் 1.50 விழுக்காடு குறைந்து 23.60 விழுக்காடாக இருந்தது. இதன் அடிப்படையில் 2009ல் 18ஆக இருந்த அதன் இடங்கள் சுமார் இரண்டு இடங்கள் குறைந்து 16ஆக இருந்திருக்க வேண்டும். ஆனால் 2014ல் அதற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

இந்திய அளவிலும் இதே போக்குதான் காணப்படுகிறது



இதற்கு என்ன காரணம்?

உலகிலுள்ள பல நாடுகளிலும் கட்சிகள் மட்டுமே போட்டியிடுகின்றன. தேர்தலின் முடிவில் கட்சிகள் பெற்றுள்ள வாக்கு விகிதங்களின் அடிப்படையில் நாட்டின் ஆட்சி மன்றங்களில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. 

ஆனால் இந்தியாவில் நாடு முழுவதும் சிறு, சிறு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகள் பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். இது winner take all என்ற அடிப்படையில் அமைகிறது எனலாம். 

தமிழகத்தைப் பொறுத்தவரையில் 44.30 விழுக்காடு வாக்காளர்கள் மட்டும் வாக்களித்த ஒரு கட்சிக்கு மொத்தமுள்ள இடங்களில் 90 விழுக்காடுக்கும் மேல் இடங்கள் கிடைத்துவிட்டது. அப்படியானால் அவரை எதிர்த்து வாக்களித்த மக்களின் வாக்குகள் அனைத்தும் செல்லாக் காசாகி விட்டன என்பதுதானே பொருள்?

இந்திய அளவில் பார்த்தால் வெறும் 31.00 விழுக்காடு வாக்காளர்களால் ஆதரிக்கப்பட்ட ஒருவர் அவரை எதிர்த்து வாக்களித்த 69.00 விழுக்காடு வாக்காளர்களுக்கும் பிரதமராகிறார்! 

ஆகவேதான் இந்த முறை மாற்றப்பட்டு கட்சிகள் பெறும் வாக்கு விகிதாச்சார அடிப்படையில் நாடாளுமன்றத்தில் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை என்னுடைய முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இல்லையென்றால் தேர்தலின் நோக்கமே கேலிக்குறியதாகிவிடும் என்பது என்னுடைய கருத்து.

******

தமிழக தேர்தல் முடிவுகளை இன்னும் ஆழமாக ஆய்வு செய்தால் 2009 தேர்தலிலும் சமீபத்தில் நடந்த தேர்தலிலும் அஇஅதிமுக பெற்ற வாக்கு விழுக்காடு இரட்டிப்பாக அதிகரித்ததற்கு முக்கிய காரணம் அதை எதிர்த்து நின்ற கட்சிகள் இழந்த அனைத்து வாக்குகளும் அதிமுகவுக்குச் சென்றுவிட்டன என்பதை உணரமுடிகிறது. 

இதற்குக் காரணம் அதிமுகவை எதிர்த்து முந்தைய தேர்தலில் கூட்டணி அமைத்து களம் இறங்கிய கட்சிகள் இம்முறை தனித்தனியாக நிற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டன என்பதுதான். அதாவது அதிமுகவுக்கு எதிராக விழுந்துள்ள 56 விழுக்காடு வாக்குகள் நாலாபுறமும் சிதறியதாலேயே அதிமுகவால் நினைத்தும் பார்க்க முடியாத அளவு இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 

இதுமட்டுமேதான் அதிமுகவின் வரலாறு காணாத வெற்றிக்குக் காரணம். 

அதை விடுத்து எங்களுடைய கடந்த மூன்றாண்டு கால மக்கள் நலத் திட்டங்களுக்கு மக்கள் அளித்த பரிசு இது என்று அதிமுக கூறிவருவது சரியல்ல. 

மேலும் காங்கிரஸ் கட்சியின் கடந்த பத்தாண்டு கால அலங்கோல ஆட்சியால் வெறுப்புற்று போயிருந்த மக்கள் அதனுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி செய்த திமுகவையும் தண்டித்தே ஆகவேண்டும் என்ற மனநிலையில் இருந்திருக்க வேண்டும். ஆனாலும் திமுகவுக்கு எப்போதும் இருந்து வந்துள்ள வாக்கு வங்கியில் பெரிதாக ஏதும் தாக்கம் ஏற்படவில்லை என்பது அது பெற்றுள்ள வாக்கு விழுக்காடிலிருந்து தெரிகிறது. இவ்விரண்டு தேர்தல்களிலும் அது பெற்றுள்ள வாக்கு விகிதத்தில் 1.50 விழுக்காடு மட்டுமே சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை என்றால் அது தேர்தல் நடத்தும் விதத்திலுள்ள குறைபாடே அல்லாமல் வேறில்லை. மேலும் மொத்த முள்ள 39 தொகுதிகளில் பாஜக மற்றும் பாமக வெற்றிபெற்றுள்ள இரண்டு தொகுதிகளைத் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பெற்றது திமுகதான். ஆகவே அன்புமனி ராமதாஸ் பீற்றிக்கொள்வதைப் போல திமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படவில்லை என்பதுதான் உண்மை.

******

மேலும் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக கட்சிகள் இந்த தேர்தலை அணுகிய முறையிலும் பெருத்த வித்தியாசத்தை காண முடிகிறது.

திமுக தன்னுடைய பலன் எது என்று உணராமல் கூட்டு சேர வந்த காங்கிரசை உதறியது. தேதிமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டிருந்தாலாவது சில இடங்களை  தேற்றியிருக்கலாம். அதையும் அவராக வந்தால் பார்க்கலாம் என்று பேசிப் பேசியே காலத்தை வீணடித்துவிட்டனர்.  இடையில் அழகிரி வேறு சச்சரவை ஏற்படுத்தி கட்சியின் உள்பூசலை அம்பலமாக்கிவிட்டார். தேர்தல் பிரசாரத்தில் தங்கள் கட்சியை எதற்காக மக்கள் ஆதரிக்கவேண்டும் என்று பேசாமல் ஜெயலலிதாவை கிண்டலடிப்பதிலேயே குறியாயிருந்தனர். அதுவும் கூட மக்களை வெறுப்படையச் செய்திருக்கலாம். 

ஆனால் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே தனித்துத்தான் போட்டியிடுவது என்று அஇஅதிமுக தீர்மானித்தது. இதற்கு முக்கிய காரணம் கடந்த மூன்றாண்டுகளில் எதையும் பெரிதாக நாம் சாதிக்கவில்லை, ஆகவே மக்களின் ஏகோபித்த ஆதரவு நமக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்பதை அந்த கட்சி உணர்ந்திருந்தது. இருந்தும் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் நமக்கு எதிராக விழக்கூடிய வாக்குகளை சிதறடிக்க வேண்டும் என்று ஜெயா மிகச் சரியாக ஊகித்தார். மேலும் திமுகவுடனோ அல்லது காங்கிரசுடனோ எந்த கட்சியும் கூட்டு வைத்துக்கொள்ள முன்வராது என்பதையும் மீதமுள்ள கட்சிகள் பாஜகவுக் இணைந்து போட்டியிட்டாலும் அதனால் சொல்லக் கூடிய அளவுக்கு தாக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்பதையும் அவரால் கணிக்க முடிந்தது. ஆகவேதான் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதென முடிவு செய்தார்.

அதல்லாமல் மத்தியில் ஆட்சி செய்யவுள்ள அரசில் அங்கம் வகிக்கும் கட்சியாக தனது கட்சியை தெரிவு செய்ய வேண்டும் என்று ஜெயா  முழங்கி வந்தது எல்லாம் வெறும் ஜாலவித்தையே. கடந்த பத்தாண்டுகளாக திமுக மத்தியில் அங்கம் வகித்திருந்தாலும் மத்திய அரசு தமிழகத்தில் கொண்டு வந்த பல நலத்திட்டங்களை அந்த காலத்தில் சுமார் ஏழு ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த அஇஅதிமுகவின் ஒத்துழைப்பின்மையால் பெரிதான தாக்கம் எதையும் ஏற்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை. மத்திய அரசில் அங்கம் வகித்திருந்த திமுகவின் முயற்சியால் பல நல்ல திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைத்தும் அதை முழுமையாக செயலாக்காமல் தடுத்து நிறுத்தியது அஇஅதிமுக அரசுதான் என்றால் மிகையாகாது.

இதை ஏன் சொல்கிறேனென்றால் கடந்த தேர்தலில் நரேந்திர மோடியின் அலை உணரடப்படாத ஒரு சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. நரேந்திர மோடி பிரதமானால் அதை செய்வார், இதை செய்வார் என்றும் இந்தியர்கள் வெளி நாடுகளுக்கும் குறிப்பாக அமெரிக்காவுக்கு செல்ல விசா வாங்க வரிசையில் காத்திருந்ததுபோல வெளி நாட்டவர்கள் இந்தியாவுக்கு வர காத்திருக்கும் நிலை வரும் என்றெல்லாம் இங்குள்ளவர்கள் தினந்தோறும் கூறி வருகிறார்கள். ஆனால் அத்தகைய நல்ல திட்டங்களை மத்திய அரசு தீட்டினாலும் அவற்றை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டுமென்றால் இங்குள்ள மாநில அரசு மத்திய அரசுடன் தோழமையுடன் செயல்பட வேண்டும். மத்திய அரசு கொண்டு வரும் எந்த நல்ல திட்டமும் மாநிலத்தில் செயல்படுத்துவதற்கு மாநில அரசால் மட்டுமே முடியும். பறக்கும் சாலைத் திட்டத்தை கிடப்பில் போடுவதற்கு மாநில அரசு செய்ததுபோல் இனி வரும் மத்திய திட்டங்களுக்கும் மாநில அரசு முட்டுக்கட்டை போடுமானால் மத்திய அரசின் எந்த நலத்திட்டங்களும் தமிழகத்திற்கு பலனளிக்காமல் போய்விடும். 

நம்முடைய முதலமைச்சருக்கும் புதிய பிரதமர் மோடிக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது என்றும் ஆகவே அவர் பிரதமராவதற்கு இவர் ஆதரவு தெரிவிப்பார் என்று கூறிய ஒரே காரணத்திற்காக முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் மலைச்சாமியை தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முந்தைய நாள் கட்சியின் அடிப்படைத் தொண்டர் நிலையிலிருந்தே தூக்கியெறிந்தவர் ஜெயலலிதா. இதன் மூலம் அவர் தெரிவிக்க விழைந்தது என்ன? மோடி பிரதமராவதல்ல கட்சியினுடைய விருப்பம் என்பதுதானே? பாஜகவுக்கு இந்த அளவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்று அவர் நினைத்திருப்பார் போலிருக்கிறது. ஒருவேளை மூன்றாம் அணியினருக்கு பெரும்பான்மை கிடைத்தால் முன்பே மமதா கூறியதுபோன்று தமக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைக்கக் கூடும் என்று எண்ணியிருப்பாரோ? இருக்கும். இல்லையென்றால் அத்தனை மூர்க்கத்தனமாக மயில்சாமியை கட்சியைவிட்டே தூக்கியெறிந்திருக்க மாட்டார். ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் இவருடையது மட்டுமல்லாமல் தன்னுடன் கூட்டணி வைத்திருந்த எந்த கட்சியின் தயவும் இல்லாமல் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு மோடிக்கு பெரும்பான்மை கிடைத்துவிட்டது என்பதை அறிந்ததும் உடனே அவருக்கு வாழ்த்துக் கூறி கடிதம் எழுதிவிட்டார். மோடியும் கடிதம் கிடைத்ததும் பதில் கடிதம் போடாமல் உடனே தொலைபேசியில் அழைத்து மத்திய அரசின் அனைத்து ஒத்துழைப்பும் மாநில அரசுக்கு இருக்கும் என்று கூறிவிட்டார் போலிருக்கிறது.

இனிவரும் காலங்களில் இதே நட்பு நிலையை கடைபிடித்து மத்திய அரசின் நலத்திட்டங்களின் பயன்களை அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் மாநில அரசு செயல்படுமானால் அடுத்த சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாமல் மோடி மத்தியில் பிரதமராக இருக்கும் வரையில் இங்கும் அஇஅதிமுக தொடர்ந்து ஆட்சி செய்ய வாய்ப்பு உள்ளது. அதை விடுத்து தேவையில்லாத ஈகோவுடன் இப்போதுள்ள அதே மனநிலையுடன் செயல்படுவாரேயானால் அடுத்த தேர்தலிலேயே ஆட்சியை இழந்துவிட வாய்ப்புள்ளது.

இந்த தேர்தல் இன்னொரு அருமையான தீர்ப்பையும் அளித்துள்ளது எனலாம். அதாவது தனிநபர்களை மட்டுமே நம்பியிருக்கும் கட்சிகளுக்கு இனி வாய்ப்பில்லை என்பது. இத்தகைய துக்கடா கட்சிகளால் தங்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை மக்கள் மிகத் தெளிவாக தெரியப்படுத்திவிட்டார்கள். மத்தியில் காங்கிரசும் பாஜகவும் இருபெரும் கட்சிகளாக இருப்பதுபோன்று தமிழகத்தில் திமுக, அஇஅதிமுக என இரண்டு கட்சிகள் போதும். காங்கிரசும் பாஜகவும் கூட இனி இங்கு வேரூன்ற வாய்ப்பில்லை போலுள்ளது. அவர்கள் இருவருமே தமிழகத்தின் இரு பெரும் கட்சிகள் ஏதாவது ஒன்றுடன் கூட்டணி வைத்துக்கொள்வதைத் தவிர இனி வேறு வழியில்லை. 

**********

  

25 ஏப்ரல் 2014

தேர்தல் குளறுபடிகள் (நேற்றைய பதிவின் தொடர்ச்சி)

நான் நேற்றைய தினம் இட்டிருந்த 'தேர்தல் குளறுபடிகள்' என்ற பதிவில் கருத்துரை இட்டிருந்த பலரும் 'கடைசி நேர ஏமாற்றத்தைத் தவிர்க்க உங்களுடைய பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை இணையதளத்தில் தேடிப் பார்த்திருக்கலாமே' என்று கூறியிருந்தனர். அவர்களுக்கெல்லாம் என்னுடைய பதிலிலேயே விளக்கமளித்திருந்தாலும் அதை பலரும் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் ஒரு சிறிய விளக்கப் பதிவு.

நான் வசிக்கும் பகுதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட பகுதி ஆகும். இதில் மொத்தம் ஐந்து தெருக்கள் உள்ளன. நான் இந்த தெருக்களின் பெயர்களைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் கூறியுள்ளேன். ஏனெனில் இவை யாவுமே நாட்டின் பிரபல நதிகளின் பெயர்களைக் கொண்டுள்ளன. நகரின் பிரதான தெருவின் பெயர் யமுனா தெரு. அதிலிருந்து இரண்டு தெருக்கள் பிரிகின்றன. இவற்றின் பெயர்கள் முறையே மகாநதி தெரு மற்றும் காவேரி தெரு. காவேரி தெருவில் இடம் வலமாக இரண்டு தெருக்கள் பிரிகின்றன. இவற்றின் பெயர்கள் முறையே பவானிதெரு, பொன்னி தெரு. நான் குடியிருப்பது பவானி தெரு. இந்த தெருவில் பத்து வீடுகள் உள்ளன. என்னுடைய வீட்டைத் தவிர்த்தால் மற்ற அனைத்தும் ஐந்து வருடங்களுக்கு மேல் அங்கு உள்ளவை. நான் இங்கு புதுவீடு கட்டி குடிவந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன.

இதில் விசித்திரம் என்னவென்றால் தேர்தல் ஆணையத்திலுள்ள பட்டியல்களில் இந்த தெருக்களின் பெயர்களே இல்லை. அதில் சிந்து நகர் மெயின் ரோடு, சிந்து நகர் முதல் சாலை, சிந்து நகர் இரண்டாவது சாலை என்றே குறிப்பிடப்பட்டுள்ளன. வீட்டு எண்களும் இப்படித்தான். வீட்டு வாசல்களில் குறிப்பிடப்பட்டுள்ள வீட்டு எண்களுக்கும் வாக்காளர்கள் பட்டியலிலுள்ள எண்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. என்னுடைய மனைவிக்கு அளிக்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டிலும் கூட  (Booth slip) என்னுடைய வீட்டு இலக்கம் காலியாக விடப்பட்டிருந்தது. இந்த தெருக்களிலுள்ள பல வீடுகள் ஐந்து, பத்து வருடங்களாக உள்ளன என்கிறார்கள். ஆகவே இங்கு நிரந்தரமாக வசிக்கும் பலருக்கும் Voter ID உள்ளது. ஆனால் அவற்றிலும் கூட வீட்டு இலக்கம் தவறுதலாக அச்சிடப்பட்டிருந்தது. 'இதையெல்லாம் பூத்ல யாரும் செக் பண்ணப் போறதில்லை சார். இவ்வளவு ஏன், பூத் ஸ்லிப்புல இருக்கற ஃபோட்டோவுல இருக்கற ஆள்தானா நாமன்னு கூட அங்க யாரும் பாக்க மாட்டாங்க.' என்றார் என்னுடன் வாக்களிக்க வந்திருந்த ஒருவர். வாக்களித்துவிட்டு வந்த என்னுடைய மனைவியும் இதையேத்தான் சொன்னார். 'யாருமே ஃபோட்டோவையெல்லாம் பாக்கலீங்க. லிஸ்ட்ல கையெழுத்த மட்டும் வாங்கிக்கிட்டாங்க' என்றார். வீட்டு வரி ரசீது மற்றும் மின் கட்டண ரசீது மற்றும் தபால் நிலைய பதிவேடுகளில் தெருக்களின் பெயர்களும் வீட்டிலக்கங்களும் சரியாக பதிவு செய்யப்பட்டிருக்கும்போது தேர்தல் இலாக்காவில் மட்டும் ஏன் இந்த குளறுபடிகள்? இதற்கு யார் காரணம்? 

இனி என்னுடைய பெயர் விடுபட்ட விஷயத்திற்கு வருவோம். நான் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வேறொரு விலாசத்தில் இருந்ததாலும் என்னுடைய வீட்டு கட்டிடப் பணிகள் முடியும் தருவாயில் இருந்ததாலும் புதுவீட்டுக்கு சென்ற பிறகு பதிவு செய்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு (9.3.2014) புதிய வாக்காளர்களுடைய பெயர்களை பதிவு செய்துக்கொள்ள ஒரு சிறப்பு முகாம் எல்லா வாக்குச் சாவடிகளிலும் நடைபெறவுள்ளது என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கையை கேட்டதும்தான் நானும் என்னுடைய மனைவியும் என்னுடைய தெருவில் புதிதாக குடிவந்திருந்த இன்னும் சிலரும் எங்கள் பகுதி வாக்குச் சாவடிக்குச் சென்று படிவம் எண் 6ஐ சமர்ப்பித்தோம். எங்களுடன் சேர்ந்து அன்றைய தினம் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் அந்த வாக்குச் சாவடியில் விண்ணப்பித்தோம்.

அன்றிலிருந்து சுமார் ஒரு மாதம் கழித்து திருத்தப்பட்ட துணை வாக்காளர் பட்டியல் இணையதளத்தில் வெளிவரும் நீங்கள் பார்த்துக்கொள்ளலாம் என்றார்கள். ஆனால் தேர்தல் தியதி வரையிலும் அவை வெளியிடப்படவே இல்லை. வாக்குச் சாவடிக்கு செல்லும் தினத்தன்றும் காலை எழுந்ததும் இணையதளத்தை ஆராய்ந்தேன். ஆனால் அதே நேரத்தில் பலரும் இதே வேலையை செய்துக்கொண்டிருந்தார்களோ என்னவோ தேர்தல் ஆணைய தளம் முடங்கிப் போயிருந்தது. சரி வாக்குச் சாவடிக்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று சென்றோம். வாக்குச் சாவடிக்கு அருகே அதிமுக, திமுக கட்சியினர் வாக்காளர் பட்டியல் சகிதம் காத்திருந்தனர். அவர்களிடம் விண்ணப்பம் சமர்ப்பித்ததற்கு சான்றாக எங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த ரசீதைக் காண்பித்து கேட்டோம். ஆனால் 'இந்த புது லிஸ்ட் எங்கக்கிட்ட இல்ல சார் பூத்தில் கேட்டுப்பாருங்கள்.' என்று கூறவே வேறு வழியின்றி வாக்குச் சாவடிக்குச் சென்றோம். அங்கு ஒரு மாதத்திற்கு முன்பு எங்களிடம் புது விண்ணப்பங்களைப் பெற்ற அதே பணியாளர்கள் (உண்மையில் அவர்கள் மூவரும் அருகிலிருந்து அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களாம்!) அன்றும் பணியில் இருந்தனர். அவர்களிடம் அவர்கள் அளித்திருந்த ஒப்புதல் சீட்டைக் காட்டி எங்க பேர் லிஸ்ட்ல இல்லையே என்றோம். அவர் 'இதுல இருக்காதுங்க. இன்னைக்கி காலையிலதான் எங்களுக்கு வேற ஒரு அடிஷனல் லிஸ்ட் குடுத்துருக்காங்க. அதுல இருக்கான்னு பாக்கறேன்' என்று கூறிவிட்டு தன் கைப்பையில் பத்திரமாக வைத்திருந்த புதிய திருத்தப்பட்ட பட்டியலை எடுத்தார். அதில் ஐந்தாறு பக்கங்களே இருந்தன. அதாவது 9.3.14 அன்று அதே வாக்குச்சாவடியில் புதிதாக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவர்களுடைய பெயர்களைக் கொண்ட துணைப்பட்டியல்!

அதை வாங்கிப் பார்த்தபோதுதான் தெரிந்தது என்னைப் போலவே அன்று படிவங்களை சமர்ப்பித்த பலருடைய பெயரும் விடுபட்டுப்போயிருந்தது. பலருக்கும் அவர்களுடைய குடும்பங்களில் யாராவது ஒருவர் அல்லது இருவருடைய பெயர்கள் விடுபட்டுப் போயிருந்தன. என்னுடைய விஷயத்தில் என்னுடைய மனைவி பெயர் இருந்தது. என்னுடைய பெயர் இல்லை. எனக்கு அடுத்த வீட்டில் இருந்தவருடைய பெயரும் அவருடைய மகனுடைய பெயரும் இருந்தது. மனைவியின் பெயர் இல்லை. ஏன் என்று கேட்டால் 'எங்களுக்கே புரியலையே சார்' என்ற பதில்தான் மீண்டும், மீண்டும் வந்தது. அவர்களையும் குறை சொல்வதில் பயனில்லை. ஏனெனில் வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட படிவங்களை தாலுக்கா அலுவலகத்தில் சமர்ப்பிப்பதுடன் அவர்களுடைய அலுவல் முடிவடைகிறது. ஆனாலும் அவர்களுடன் ஏமாற்றமடைந்த வாக்காளர்கள் சிலர் தேவையில்லாமல் கோபப்பட அவர்களும் பதிலுக்கு கோபப்பட்டனர். பிறகு அங்கு பணியில் இருந்த காவலர்கள் வந்து சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. 

எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் புதிதல்ல. பணியின் நிமித்தம் நான் பல ஊர்களில் பணியாற்ற வேண்டியிருந்தாலும் ஒவ்வொரு தேர்தலின் போதும் அந்தந்த ஊரில் பதிவு செய்துக்கொண்டு வாக்களிப்பது வழக்கம். மும்பையில் இருந்தபோதும் வாக்களித்துள்ளேன். அப்போதெல்லாம் கணினிகளும் இருக்கவில்லை. இருந்தாலும் இந்த அளவுக்கு பிரச்சினை இருக்கவில்லை. சென்னையிலும் கூட இருமுறை வாக்களித்துள்ளேன். இந்த முறை எனக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் பெயர்கள் விடுபட்ட அனுபவம் ஏற்பட்டுள்ளது. இன்றைய செய்தியில் மும்பையில் ஒரே விலாசத்தில் பல ஆண்டுகள் வசித்து வரும் பிரபல குற்றவியல் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியின் பெயரே விடுபட்டுப் போயுள்ளது என்ற செய்தியை படித்தபோது அவருக்கே இந்த நிலை என்றால் நாம் எம்மாத்திரம் என்று நினைத்துக்கொண்டேன்.

இம்முறையும் கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும்தான் இத்தகைய குழப்பங்கள் பல இடங்களிலும் ஏற்பட்டுள்ளதாம். இதற்கு முக்கிய காரணம் எவ்வித முன்னனுபவமோ ஆள் பலமோ (Manpower)இல்லாத ஒரு தனியார் நிறுவனத்திடம் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை ஒப்படைத்ததுதான் முக்கிய காரணம் என்கிறார்கள். இவர்களுடைய cut and paste வேலைதான் இத்தனை குழப்பத்திற்கும் காரணமாம். ஒரே விலாசத்தில் பல ஆண்டுகள் வசித்துவந்தவர்களுடைய விஷயத்தில் இவ்வித குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பில்லை. என்னைப் போன்று புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படும்போதுதான் இவை நிகழ்கின்றன போலும். மேலும் இம்முறை தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கும்போதுதான் புதிதாக வாக்காளர்களைச் சேர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முறை தமிழகத்தில் மட்டும் ஆறு லட்சம் புதிய வாக்காளர்கள் 9.3.14 அன்று நடத்தப்பட்ட முகாம்களில் விண்ணப்பத்திருந்தனராம். இவர்களுடைய பெயர்கள்தான் பெரும்பாலும் விடப்பட்டுவிட்டன என்கின்றனர். 

இதில் இன்னுமொரு செய்தியையும் பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். நேற்றைய தினம் நடைபெற்ற வாக்குப்பதிவில் எப்போதும் இல்லாத அளவுக்கு வாக்கு விகிதம் உயர்ந்திருப்பதைப் பார்க்கும்போது Bogus voting நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளதாகவே எண்ணுகிறேன். ஏனெனில் பூத் ஸ்லிப்பில் இருக்கும் புகைப்படத்தை வாக்குச்சாவடியில் அமர்ந்திருக்கும் பணியாளர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. பூத் ஸ்லிப்பிலோ அல்லது வாக்குச்சாவடியிலுள்ள பட்டியலிலோ வாக்காளர்களின் கையொப்ப நகல் ஏதும் இல்லை. ஆகவே யார் வேண்டுமானாலும் யாருடைய பூத் ஸ்லிப்பை வேண்டுமானாலும் கொண்டு சென்று வாக்களிக்க முடியும் என்றே தோன்றுகிறது. ஆண் பெயரிலுள்ள வாக்காளருக்கு யாராவது ஒரு ஆணும், அதே போன்று பெண் வாக்காளர் பெயரில் யாராவது பெண்ணும் சென்றால் போதும். குறிப்பாக கிராமப் புறங்களில் இம்முறையில் வாக்குகள் தவறுதலாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்றே எண்ணுகிறேன். இதற்கு மோடி அலையோ லேடி அலையோ அல்லது டாடி அலையோ தேவையில்லை. கேடிகள் அலையே போதும். இவர்களுக்கு முன்னால் வாக்குச் சாவடிகளில் எவ்வித ஈடுபாடும் இல்லாமல் பணியாற்றும் அரசு ஊழியர்கள் எம்மாத்திரம்?


**********

22 ஏப்ரல் 2014

பாஜகவின் விளையாட்டு ஆரம்பம்!

 
பாஜக RSSன் முகமூடி என்பதையும் பிரதமர் வேட்பாளர் RSS இயக்கத்தின் பிரதிநிதி என்பதையும் இதுவரை மறுத்து வந்தவர்களை கடந்த இரண்டு தினங்களில் பாஜகவின் கிரிராஜ் சிங் மற்றும் RSSன் டொக்காடியா ஆகியோருடைய பேச்சு சிந்திக்க வைத்துள்ளது.
 
அப்படி என்ன சொல்லிவிட்டார்கள் இவர்கள்?
 
பீஹார் மாநிலத்தில் பாஜக வேட்பாளராக களத்தில் உள்ள கிரிராஜ் சிங் நரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள் பாக்கிஸ்தானுக்குத்தான் செல்ல வேண்டும் என்று பகிரங்கமாக பேசியுள்ளார். இவருக்கு எதிராக பீஹார் போலீசாரால்  பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைக்கு மறுமொழியாக ' நான் இஸ்லாமியர்களை குறிப்பிடவில்லை.  நரேந்திர மோடியை எதிர்ப்பவர்களைத்தான் குறிப்பிட்டேன்.' என்று இவர் அளித்துள்ள பதில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததுமே அதை எதிர்த்த அத்வானியையும் சேர்த்துத்தான் இவர் குறிப்பிட்டிருப்பார் என்று  பலரும் கிண்டலடித்துள்ளனர். இவருடைய பேச்சுக்கு ட்விட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் பாஜக இவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

 
நரேந்திர மோடியின் பால்ய சிநேகிதர் டொக்காடியோவோ ஒருபடி மேலே சென்று ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இஸ்லாமியர்கள் சொத்து வாங்குவதை நாமே சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தடுக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். ஆனால் இவருடைய பேச்சை கிரிராஜ் சிங்கின் பேச்சைப் போல் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் இவர் ஒரு தீவிர RSS பேர்வழி. ஒரு காலத்தில் இவரும் நரேந்திர மோடியும் RSSன் அடிப்படை உறுப்பினர்களாக இருந்த காலத்தில் இணைபிரியா தோழர்களாக இருந்தவர்கள். ஆனால் சமீப காலமாக, அதாவது மோடி குஜராத் முதலமைச்சரான காலத்திலிருந்து, இவர்களுக்கிடையில் நல்லுறவு இல்லை என்றும்  ஆகவே இவர் மோடி பிரதமராவதை விரும்பாமல்தான் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்தை பேசியுள்ளார் என்கின்றனர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.
 
ஆனால் இவ்விருவர்களுடைய பேச்சு தேர்தலுக்குப் பிறகு நடக்கவிருக்கும் மதக்கலவரங்களுக்கு ஒரு முன்னோடியாகவே காண்பதாக  பாதிக்கப்படவுள்ள இஸ்லாமிய தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
இதை இஸ்லாமிய சமுதாயத்தினரின் panic reaction என்று கூறி ஒதுக்கிவிட முடியாது என்பதும் உண்மை.
 
நரேந்திர மோடிக்கு எதிராக பேசுபவர்களை, எழுதுபவர்களை நீ கிறிஸ்த்துவன் ஆகவே நீ சோனியாவின் அடியாள் அல்லது நீ இஸ்லாமியன் ஆகவே நீ பாக்கிஸ்தானுடைய கையாள் என்றெல்லாம் விமர்சித்து எழுதும் அநாமதேய ஞான சூன்யங்கள் நம்முடைய பதிவுலகிலும் உள்ளனர் என்பது என்னுடைய கடந்த சில பதிவுகளுக்கு வந்த கருத்துரைகள் உணர்த்துகின்றன.
 
அதாவது படித்த இளைஞர்கள் மத்தியில் கூட இத்தகைய உணர்வுகள் வேரூன்றியுள்ளபோது அரசியல்வாதிகளைக் குறை கூறுவதில் என்ன பயன்?
 
**********
 
சில தேர்தல் கேலிக் கூத்துக்கள்.
 
மேற் கூறிய இருவரின் பேச்சு எதிர்வரும் மதக் கலவரங்களை கோடிட்டு காட்டுகின்றன என்றால் நம்முடையவர்களின் தேர்தல் பேச்சுக்கள் சிரிப்பை வரவழைக்கின்றன.  தமிழர்கள் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் என்பதையும் இவை மீண்டு நிரூபிக்கின்றன.
 
'நாட்டின் மிகச் சிறந்த முதலமைச்சர் மோடி அல்ல, இந்த லேடிதான்.' இது நம்முடைய முதலமைச்சரின் அறை கூவல். இது ஏதோ வேத மொழி என்பதுபோல் இதே வாக்கியத்தை மீண்டும், மீண்டும் ஒலிபரப்பிக் கொண்டுள்ளது ஜெயா டிவி.
 
இதைப் பற்றி பத்திரிகையாளர்கள் கலைஞரிடம் கேட்டதற்கு அவர் அடித்த கிண்டல். 'அவர் நிலைக்கண்ணாடியில் முன் நின்றுக்கொண்டு சொல்லியிருப்பார்.'
 
'இந்த கூட்டத்திற்கு வந்திருக்கும் கூட்டம் பாசத்துக்காக வந்த கூட்டம். க்வாட்டருக்கோ இல்ல பிரியாணிக்கோ வந்த கூட்டமல்ல.' கேப்டனின் மனைவி.
 
'இவங்க வீட்டுக்காரரையே க்வாட்டர் குடுத்துத்தான் கூட்டிக்கிட்டு வராங்க.' நாம் தமிழர் சீமான்!!
 
'மத்த கட்சி தலைவர்களைப் போல் கூட்டத்திற்கு வருகிறேன் என்று கூறிவிட்டு பிறகு வராமல் மக்களை ஏமாற்றும் தலைவனல்ல நான். இன்று எனக்கு கடுமையான காய்ச்சல். இருந்தும் மாத்திரைகளைப் போட்டுக்கொண்டு உங்களை சந்திக்க வந்துள்ளேன்.' சென்னை அண்ணா நகர் கூட்டத்தில் ஜெயலலிதா.
 
'என்னுடைய நலனை விட நாட்டு மக்களின் நலனையே நான் பெரிதாக கருதுகிறேன். ஆகவேதான் உடல் நிலை குறைவிலும் மக்களைச் சந்திக்க தமிழகத்தில் பல பகுதிகளிலும் சென்று பேசி வருகிறேன்.' ஆவடி பொதுக்கூட்டத்தில்.
 
இவ்விருவருடைய நாட்டுப் பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது!
 
'இவங்க குடுக்கற மிக்சி, க்ரைன்டருக்கெல்லாம் கரண்டே வேணாம். தானாவே ஓடும்!' பாமக நிறுவனர் இராமதாஸ்.
 
'தேர்தல் நேரத்துல நடக்கற மின் தடைக்கு சிலருடையே சதியே காரணம்!' ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு.
 
'போலீஸ் இலாக்காவை தன் கையிலேயே வைத்திருந்தும் சதியை கண்டுபிடிக்க முடியாத ஜெயலலிதா உடனே பதவி விலக வேண்டும்.' ஸ்டாலின்.
 
'ப. சிதம்பரம் ஒரு ரீக்கவுன்ட் (Recount) அமைச்சர்'  சிவகங்கை கூட்டத்தில் நரேந்திர மோடி.
 
'நரேந்திர மோடி ஒரு என்கவுன்டர் (Encounter) முதலமைச்சர்'  ப. சிதம்பரத்தின் பதிலடி.
 
'இது வெறும் ஆட்சி மாற்றத்தை கொண்டுவரப்போகும் தேர்தல் அல்ல. எதிரிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற உதவும் தேர்தல்.' ஜெயலலிதா. இவர் எதிரிகள் என்பது இவருடைய சொந்த எதிரிகளான ப. சிதம்பரம் போன்றவர்கள்தான் என்பது அனைவருக்கும் தெரியும்.
 
இப்படி எழுதிக்கொண்டே போகலாம். அந்த அளவுக்கு காமடி செய்துள்ளனர் நம்முடைய அரசியல்வாதிகள்.
 
***********
 
இன்றுடன் தேர்தல் பரப்புரை முடிவடைகிறது. இதுவரை இல்லாமல் முதல் முறையாக தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்பட்டுவிட்டன.  ஆனால் கட்சித் தொண்டர்களுக்கு தேவையான சரக்கை ஏற்கனவே டோர் டெலிவரி செய்தாயிற்றாம்!!
 
மட்டன்/சிக்கன் பிரியாணி சமையல்காரர்களுக்கும் பயங்கர கிராக்கியாம். எட்டு கிலோ பிரியாணி செய்ய ஐநூறு ரூபாய் கேட்டு வந்த பிரியாணி சமையல்காரர்கள் இப்போது இரண்டாயிரம் ரூபாய் கேட்கிறார்களாம்!
 
அதனாலென்ன? ஆளுங்கட்சி வட்டச் செயலாளர் வீட்டு முற்றத்திலேயே சுடச்சுட பிரியாணி தயாரிக்கப்பட்டு வினியோகமும் செய்தாயிற்று. 
 

 
இங்கு நடப்பது தேர்தல் அல்ல. தீபாவளி தமாக்கா என்பார்களே அதுபோலத்தான். சிலருக்கு இது சீரியஸ் பிசினஸ். லட்சக் கணக்கில் முதல் போட்டு கோடிக் கணக்கில் லாபம் எடுக்கும் மொத்த வணிகம்.
 
***********
 
நீங்க என்ன சொன்னாலும் அது செவிடன் காதுல ஊதுன சங்கு போலத்தாங்க. நாங்க மோடிய தேர்ந்தெடுக்கறதுன்னு முடிவு பண்ணியாச்சி. எதுக்கு வீணா எழுதி உங்க டைம வேஸ்ட் பண்றீங்க என்று ஒரு சில தீவிர மோடி ஆதரவாளர்கள் கூறுவது காதில் விழுகிறது.
 
சரிங்க. போடறதுன்னு தீர்மானிச்சாச்சி. மக்களவையில சிம்பிள் மெஜார்ட்டிக்கு தேவையான 272 இடங்கள் பாஜகவுக்கு கிடைக்கறா மாதிரி செஞ்சிருங்க. இல்லன்னா மறுபடியும் கூட்டணி ஆட்சின்னு பழைய குருடி கதவ திறடிங்கறா மாதிரி ஆயிரும்.
 
கடைசியா ஒரு விஷயம்.
 
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்தால்தான் மத்திய அரசின் திட்டங்களை திறம்பட செயல்படுத்த முடியும் என்று பல மாநில ச்ஆட்சியாளர்கள் கூறிவருவதைக் கேட்டிருக்கிறோம். அப்படியானால் மொத்தமுள்ள 29 மாநிலம் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களில் ஐந்தே ஐந்து மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்யும் பாஜக எவ்வாறு நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் தங்களுடைய திட்டங்களை செயல்படுத்தப் போகிறது? நரேந்திர மோடி கொண்டு வர நினைக்கும் மாற்றம் மத்திய அரசோடு நின்றுவிடுமோ? 
 
மத்தியில் அமையவுள்ள ஆட்சியில் அங்கம் வகிக்கும் கட்சியாக  நம்முடைய கட்சி இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு தேவையானவற்றை நம்மால் கேட்டுப் பெற முடியும் என்று ஜெயலலிதா கூறிவருவது எந்த அளவுக்கு உண்மை? அப்படியொரு சூழல் ஏற்படவில்லை என்றால் தமிழகத்தின் கதி அதோகதிதானா?
 
***************

18 ஏப்ரல் 2014

நரேந்திர மோடி சுய ஒழுக்கம் இல்லாதவர்!

தனி மனித ஒழுக்கத்தில் மிக முக்கிய அம்சமாக கருதப்படுவது உறவுகளை மதித்தல், காத்தல் மற்றும் அவற்றை பேணுதல்.
 
தனி மனித உறவுகளில் மிக முக்கியமானதாக கருதப்படுவது தாய்-பிள்ளை உறவு. அதற்கு அடுத்தபடியாக வருவது கணவன் - மனைவி உறவு. தாய்க்குப் பின் தாரம் தானே!
 
அத்தகைய முக்கியமான, புனிதமான உறவைக் கூட மதிக்கத் தெரியாதவர் அல்லது மறுத்தவர்தான் நம்முடைய அடுத்த பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி.
 
நரேந்திர மோடியின் திருமண விவகாரம் இன்று நாடு முழுவதும் பேசப்படுவதற்குக் காரணம் அதை அவர் இதுவரை அங்கீகரிக்காமல் இருந்ததுதான். தேர்தல்களின் போது சமர்ப்பிக்கப்படும் வேட்பாளர் மனுவில்  அவர் திருமணமானவர் என்பதை மறைக்கவில்லை குறிப்பிடாமல் மட்டுமே விட்டுவிட்டார் என்று வாதிடுபவர்களைப் பார்த்து ஒரு கேள்வி. ஒருவர் தான் திருமணமானவர் என்பதைக் கூடவா குறிப்பிட மறந்துவிடுவார்? அதுவும் நாடே போற்றும் அளவுக்கு நிர்வாகத் திறமை உள்ள ஒருவர்! அவருக்கு அதை வெளியிட மனமில்லை அவ்வளவுதான். அதுதான் உண்மை.
 
எதற்காக அவர் திருமணமானவர் என்பதை குறிப்பிட  மனமில்லாமல் இருந்திருப்பார்? மனைவி ஒருவேளை அழகில்லையோ? அல்லது அவருக்கு இணையாக படித்திருக்கவில்லையோ? அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்திருப்பாரோ? சாதாரணமாக இத்தகைய காரணங்களுக்காகத்தான் சிலர் தங்களுடைய மனைவியை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தாமல் இருப்பது வழக்கம்.
 
ஆனால் நரேந்திர மோடியை விடவும் எவ்விதத்திலும் குறிப்பாக, அழகில்  குறைந்தவர் அல்ல அவருடைய மனைவி யசோதபென் என்பது அவர்களுடைய இந்த திருமணப் புகைப்படத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடும்.
 
 
படிப்பை எடுத்துக்கொண்டால் நரேந்திர மோடியும் திருமணமான காலத்தில் பள்ளி இறுதி வகுப்பைக் கூட தாண்டாதவர்தான். அவருடைய மனைவி ஏழாம் வகுப்பு மட்டுமே. இதிலும் பெரிதாக எந்த குறைபாடும் தோன்றவில்லை. பொருளாதார அந்தஸ்த்திலோ என்றால் நரேந்திர மோடிக்கு அந்த வயதில் சுயமாக எந்த வருமானமும் இல்லை. அவரே தன்னுடைய மூத்த சகோதரருடைய டீக்கடையில் பணியாற்றி வந்திருந்தவர்.
 
 
பின் எதற்காக இந்த பிரிவு?
 
யசோதாபென் திருமணமானபோது ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்ததால் அவருடைய பள்ளிப் படிப்பை தொடரட்டுமே என்றுதான் திருமணமான ஒரு சில மாதங்களிலேயே அவரை தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தாராம் மோடி.  மோடியின் அன்பைப் பெற வேண்டுமே என்ற உறுதியுடன் பள்ளி இறுதி வகுப்பு  முடித்து அதே கிராமத்திலேயே இயங்கிவந்த ஒரு ஆரம்ப சுகாதார பள்ளியில் ஆசிரியராகவும் சேர்ந்தார் யசோதா.
 
ஆனால் மோடி?
 
எந்த வித வேலைக்கும் செல்லாமல் மனம் போன போக்கில் இமயமலை அடிவாரத்தில் ஒரு சன்னியாசியைப் போல இரண்டு வருடங்கள் சுற்றித் திரிந்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பினாராம். பிறகு மீண்டும் தன்னுடைய சகோதரர் நடத்திவந்த டீக்கடையில் பணியாற்றிவந்திருக்கிறார். அதன் பிறகு RSSன் சித்தாந்தத்தால் கவரப்பட்டு அவர்களுடன் தன்னையும் இணைத்துக்கொண்டிருக்கிறார். பள்ளியில் மிகவும் ஆவரேஜ் மாணவர் என்று கருதப்பட்டவருக்கு அப்போதே சிறந்த பேச்சாற்றலும் வாதத் திறனும் இருந்துள்ளது (நம்முடைய திராவிட தலைவர்களும் இவ்வாறு பேசி, பேசித்தானே தமிழகத்தை பிடித்தார்கள்!!).
 
ஆக, இவருடைய மனைவி இவரை விட எவ்விதத்திலும் தாழ்ந்தவர் இல்லை என்பது தெளிவாகிறது. பாஜக இதற்கு இன்னுமொரு மொக்கை வாதத்தையும் எடுத்து வைக்கிறது. அதாவது மோடிக்கு நடந்தது பால்ய திருமணமாம்! அதாவது விவரம் தெரியாத வயதில் நடந்த திருமணமாம், உண்மையில் மோடிக்கு அப்போது பதினெட்டு வயது. அவருடைய மனைவிக்கு பதினேழு வயது. ஏழு அல்லது எட்டு வயதில் நடந்திருந்தால்தான் அது பால்ய திருமணம்!
 
 
மேலும் தன்னுடைய மனைவியின் வருமான வரி அடையாள எண் (PAN) என்னவென்றோ அல்லது அவருடைய சொத்து விவரங்களோ தமக்கு தெரியாது என்றும் மோடி தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளாராம். ஏனெனில் அவருடன் இப்போது எந்த தொடர்பும் இல்லையாம்.
ஆனால் உண்மையில் அவருக்கு தன்னுடைய மனைவி எங்கிருக்கிறார், என்ன வேலை பார்க்கிறார், எந்த சூழலில் வசிக்கிறார் என்றெல்லாம் மிக நன்றாக தெரியும். ஒரு சாதாரண பத்திரிகை நிரூபரே அவரைத் தேடிப்பிடித்து பேட்டி எடுக்க சென்றபோது அடுத்த சில மணி நேரங்களில் அவர் பணியாற்றிக்கொண்டிருந்த பள்ளிக்கே தன்னுடைய அடியாட்களை அனுப்பி மிரட்டியவர்தான் இந்த மோடி.
 
 
அவரை பேட்டி எடுக்கச் சென்ற ஒரு பெண் நிரூபர் கூறுவதை கேளுங்கள்:
 
"நான் அவர் வசிக்கும் இடத்திற்கு அருகில் இருந்தவர்களிடம் அவரைப் பற்றி விசாரித்துக்கொண்டிருந்தேன். அப்போது அந்த ஊரில் வெளியாகிக்கொண்டிருக்கும் ஒரு துக்கடா பத்திரிகையின் ப்ரகாஷ் பாய் என்ற நிரூபர் வந்து என்னை உடனே இங்கிருந்து சென்றுவிடுங்கள் என்று மிரட்டினார்.
 
ஆனால் அதை நான் பொருட்படுத்தாமல் அங்கேயே நின்றுக்கொண்டிருந்தேன். பிறகு அவர் வசித்துக்கொண்டிருந்த, தகரத்தால் நாற்புறம் வேயப்பட்டிருந்த ஒரு அறை மட்டுமே உள்ள வீட்டை தேடிக் கண்டுபிடித்தேன்.  அங்கு கழிப்பறையோ, குளியலறையோ எதுவுமில்லை.  அவருடைய கணவர் என்கிற மோடி அப்போது அந்த மாநிலத்தின் முதலமைச்சராக மாளிகையில் வசித்துக்கொண்டிருக்கும்போது இவர் அதே மாநிலத்தின் ஒரு கோடியில் இப்படியொரு சூழலில் வாழ்ந்துக்கொண்டிருப்பது எனக்கு வருத்தத்தை அளித்தது.
 
ஒரு துவக்க பள்ளி ஆசிரியராக மாதம் பத்தாயிரம் ஈட்டிக்கொண்டிருந்தாலும் தன்னை மற்றவர்களிடமிருந்து மறைத்துக்கொள்ளவே இப்படியொரு வாழ்க்கையை அவர் வாழ்ந்துக்கொண்டிருந்தார். ஆனாலும் அவர் பணியாற்றிய பள்ளியிலும் அவர் வசித்து வந்த பகுதியிலும் அவர்தான் மோடியின் மனைவி என்பதை அனைவரும் அறிந்து வைத்திருந்தார்கள்.
 
பிறகு அவர் பணியாற்றிய பள்ளிக்கு சென்று அங்கு அவரை சந்திக்க விரும்புவதாக ஒரு பணியாளரிடம் கேட்டேன். அடுத்த சில நிமிடங்களில் யசோதாபென் தன் முகத்தை சேலை தலைப்பால் மூடியவாறு வந்து என்ன கேட்கப் போகிறீர்கள் என்றார் தயக்கத்துடன். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஏன் முகத்தை மூடிக்கொண்டிருக்கிறீர்கள் என்றேன். என்னை நீங்கள் புகைப்படம் எடுக்க மாட்டேன் என்று உறுதியளித்தால் முகத்துணியை அகற்றுகிறேன் என்றார்.  ஏன் இப்படி அஞ்சுகிறீர்கள் என்றதற்கு எனக்கு இந்த வேலையை விட்டால் வேறு வழியில்லை. நான் உங்களுக்கு பேட்டியளித்தது 'அவருக்கு' தெரியவந்தால் எனக்குத்தான் ஆபத்து என்று தட்டுத் தடுமாறி சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அவர் உணவு இடைவேளையின்போது வெளியில் வரும்போது மீண்டும் சந்திக்கலாம் என்று நான் வெளியில் காத்துக்கொண்டிருந்தேன். அப்போது சர், சர்ரென்று நான்கைந்து கார்கள் வந்து பள்ளி வளாகத்தில் நின்றன. அதிலிருந்து இறங்கிய சில அடியாட்கள் தலைமையாசிரியர் அறைக்குள் சென்று பேசிவிட்டு அடுத்த பத்து நிமிடங்களில் அங்கிருந்து சென்றார்கள்.  அவர்கள் சென்றதும் ஒரு பணியாள் என்னிடம் வந்து தலைமையாசிரியர் உங்களை இங்கிருந்து உடனே சென்றுவிட கூறுகிறார். ஆகவே சென்றுவிடுங்கள் என்று கெஞ்சினார்."
 
இதிலிருந்து என்ன தெரிகிறது?
 
நரேந்திர மோடிக்கு தன் மனைவி எங்கிருக்கிறார், என்ன செய்துக்கொண்டிருக்கிறார், அவருடைய வருமானம் எவ்வளவு என்பதெல்லாம் மிக நன்றாகத் தெரியும். இருந்தும் வேண்டுமென்றே அவரைப்பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்பதுபோல் மனுவில் குறிப்பிடுவதும் தனக்கு குடும்பம் இல்லை என்று பொதுக்கூட்டங்களில் பேசுவதும் சிதம்பரம் சொல்வதுபோல் அவர் ஒரு compulsive lier என்பதை தெளிவாக்குகிறது.
 
மேலும் ஒருவருடன் தானும் வாழாமல் வேறு எவருடனும் வாழவிடாமல் செய்வதற்கு பெயர் என்ன தெரியுமா? வக்கிரமம்!
 
Denial of conjugal rights என்பது சட்டப்படிக் குற்றம்.  இந்து திருமணச் சட்டம் பிரிவு ஒன்பது என்ன சொல்கிறது?
 
தாம்பத்திய உரிமைகளைத் திரும்பக் கோருதல்:
 
கணவனோ அல்லது மனைவியோ எவ்வித தகுந்த காரணமும் இல்லாமல் அந்த உறவிலிருந்து பிரிந்து வாழ்ந்தால் அதனால் பாதிக்கப்படும் நபர் அந்த உரிமைகளைத் தனக்கு திரும்ப அளிக்குமாறு நீதிமன்றத்தை அணுகலாம்.
 
Section 9 in The Hindu Marriage Act, 1955
9. Restitution of cojugal right. 1[ When either the husband or the wife has, without reasonable excuse, withdrawn from the society of the other, the aggrieved party may apply, by petition to the district court, for restitution of conjugal rights land the court, on being satisfied of the truth of the statements made in such petition and that there is no legal ground why the application should not be granted, may decree restitution of conjugal rights accordingly.
 
தன்னுடைய வாழ்க்கையில் உடன் வாழ வந்த பெண்ணை அவருக்கு உரிமையுள்ள தாம்பத்திய வாழ்க்கையைக் கூட  ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் மறுத்து வரும் ஒரு நபரை எப்படி அப்பழுக்கில்லாதவர் என்று ஏற்றுக்கொள்வது?
 
சிந்தியுங்கள் நண்பர்களே!
 
****************
 
 
 

17 ஏப்ரல் 2014

ஊழலில் ஆ. இராசாவும் நரேந்திர மோடியும் ஒன்றுதான்!

ஊழல் என்றால் கையூட்டு பெறுவது என்பது மட்டுமல்ல. 

1. வேண்டுமென்றே அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது 
 2. தனிமனித ஒழுக்கம் இல்லாமலிருப்பது
 3. ஆடம்பர வாழ்க்கை நடத்துவது 
 4. உண்மைகளை மறைப்பது 
 5. மதத் துவேஷம் மற்றும் இனத்துவேஷம் காட்டுவது 

 இவை எல்லாமே ஊழலைச் சார்ந்தவைதான். 

 நாட்டின் அடுத்த பிரதமராக வருவதற்கு தகுதியானவர் என இன்று பலராலும் கருதப்படும் நரேந்திர மோடி அவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ஒழுங்கீனங்களுக்கும் சொந்தக்காரர். நான் திருமணமாகாத ஒண்டிக்கட்டை, எனக்கு குடும்பம் என்று ஏதும் இல்லை. ஆகவே ஊழலில் ஈடுபட்டு பொருள் சேர்க்கும் தேவை எனக்கு இல்லை என்று நரேந்திர மோடி பல தடவை பகிரங்கமாக அறிவித்துள்ளார். 

இதே போன்றதொரு அறிவிப்பை முன்னொரு காலத்தில் நம்முடைய மேடமும் வெளியிட்டவர்தான். ஆனால் இன்று அவர் நாட்டின் மிகப்பெரிய சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பது நமக்கெல்லாம் தெரியும். இந்த வழக்கில் மட்டுமல்லாமல் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யாத வழக்கிலும் வெளிநாட்டிலிருந்து மூன்று லட்சம் டாலர்கள் நன்கொடையாக பெற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கிலும் அவர் தண்டனை பெறப்போவது உறுதி. இதே நிலை நரேந்திர மோடிக்கும் ஏற்படுமா என்பதைக் காலம்தான் பதில் சொல்லும். 

ஆனால் அவர் ஊழலற்றவர் மட்டுமல்ல ஊழலுக்கு அப்பாற்பட்டவர் (incorruptible) என்றெல்லாம் பாஜகவும் கூறிவருவது எந்த அளவுக்கு உண்மை என்பதை அவர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து ஒன்றை மட்டும் இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். 

2006ம் ஆண்டு.

தமிழகத்தைப் போலவே நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தும் மின் பற்றாக்குறையால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தது. அரசு மின் உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி மாநிலத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லாமையாலும் அரசு நிறுவனங்களின் உற்பத்தித் திறனை உடனடியாக அதிகரிக்க தேவையான நிதி அரசின் வசம் இல்லாமையாலும் தனியார் நிறுவனங்களிடமிருந்து சுமார் 3000 மெகாவாட் மின்சாரத்தை வாங்குவது என அரசு தீர்மானித்தது. 

இதற்காக அதே மாநிலத்தைச் சார்ந்த அடானி குழுமத்துடன் (Adani Group of Companies) தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கென இரண்டு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. அதன்படி முதல் ஆயிரம் மெகாவாட் மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றிற்கு ரூ.2.89 என்றும் அடுத்த ஆயிரம் யூனிட் ஒன்றிற்கு ரூ. 2.35 என்றும் முடிவானது. அதாவது, அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சாரத்திற்கு அதிக விலையும் உள்நாட்டில் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சாரத்திற்கு குறைந்த விலை என்றும் முடிவு செய்யப்பட்டது. 

ஆனால் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரென கருதப்படும் திரு அடானி அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களுடனான இந்த இரண்டு ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு குஜராத் மின் வினியோக கழகம் (Gujarat Urja Vikas Nigam Limited (GUVNL)-இது நம் தமிழ்நாட்டின் TANGEDCO போன்ற அரசு மின் வினியோக நிறுவனம்) டாடா குழுமத்தைச் சார்ந்த Coastal Gujarat Power Project என்ற மின் உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து யூனிட் ஒன்றிற்கு ரூ. 2.26 வாங்குவதென ஒப்பந்தத்தை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் இது அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சாரம் என்பதுதான்.

இவ்விரண்டு நிறுவனங்கள் அல்லாமல் யூனிட் ஒன்றிற்கு ரூ.2.20க்கும் மின்சரத்தை விற்பதற்கு குஜராத் மற்றும் அண்டைய மாநிலத்தில் இயங்கிவந்த பல தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் முன்வந்தும் அவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு அடானி குழமத்திற்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றிற்கு சுமார் ஐம்பதிலிருந்து அறுபது காசுகள் கூடுதலாக விலை நிர்ணயித்தது ஏன்? இந்த அடாவடியான முடிவின் மூலம் குஜராத் அரசுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.700 கோடி நஷ்டம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களுடனான ஒப்பந்தம் இரண்டும் நீண்ட கால ஒப்பந்தம் என்பதால் அடுத்த இருபது ஆண்டுகளில் அரசுக்கு சுமார் ரூ.15,000/- கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறது இதை முதன் முதலில் கண்டுபிடித்து அறிவித்த குலெய்ல் என்ற தான்னார்வு தொண்டு நிறுவனம்.

இது ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பதற்கு ஒப்பானது. 

ஆகவே மோடி ஒன்றும் நம்மில் பலரும் நினைப்பதைப் போன்று ஊழலற்றவரோ அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக முடியாதவரோ அல்ல. ஆனால் இந்த சலுகைகள் நரேந்திர மோடிக்கு தனிப்பட்ட வகையில் எவ்வித இலாபமும் கிடைத்திருக்க வழியில்லை என்று சிலர் வாதிடலாம். அடானி குழுமத்திற்கு மட்டுமல்லாமல் டாட்டா, அம்பானி போன்ற பல பெரும் பண முதலைகளுக்கு இவர் அளித்து வந்த சலுகைகள் ஒவ்வொன்றிற்கும் கைமாறாக பல நூறு கோடிகள் RSS மற்றும் பாஜகவுக்கு நன்கொடையாக சென்று சேர்ந்துள்ளது என கூறப்படுகிறது. 

ஆகவேதான் ஒருவகையில் பார்த்தால் ஊழலில் நரேந்திர மோடியும் நம்மூர் ஆ. இராசாவும் ஒன்றுதான் என்று தலைப்பில் குறிப்பிட்டேன். ஏனெனில் ஆ. இராசாவுக்கும் 2ஜி ஊழல் மூலம் தனிப்பட்ட வகையில் எவ்வித இலாபமும் க்டைக்கவில்லை. இலாபம் அடைந்தது கலைஞரும், அவருடைய கட்சியும், அவருடைய குடும்ப தொலைக்காட்சியும்தான். 

 இன்றைய பதிவு 'வேண்டுமென்றே அரசுக்கு நிதி இழப்பு ஏற்படும் வகையில் செயல்படுவது' என்ற குற்றச்சாட்டிற்கு சான்று. நாளை அடுத்த குற்றச்சாட்டான தனிமனித ஒழுக்கம் இல்லாதிருப்பதைப் பற்றி...

**********

30 ஜனவரி 2014

திண்ணை (வெட்டி?) பேச்சு!

இந்த வெட்டி திண்ணைப் பேச்சு என்ற பகுதியை சில மாதங்களாக நிறுத்தி வைத்திருந்தேன். இதற்கு முக்கிய காரணம் விவாதம் செய்ய தேவையான காரசாரமான விஷயங்கள் எதுவும் நாட்டில் நடக்காமல் இருந்ததுதான். தேர்தல் நெருங்குவதால் மீண்டும் இதை துவக்கலாம் என்ற எண்ணத்தில் இந்த வாரம் முதல் துவக்கியுள்ளேன். வழக்கம் போலவே தேர்தல் வரை எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் வரும். 

இதிலுள்ள கருத்துக்கள் பெரும்பாலும் என்னுடையவைதான் என்றாலும் அதற்கு மாற்றாக உள்ள கருத்துக்களையும் உங்கள் முன் வைக்கவே ரஹீம்பாய், கணேஷ் என்ற கற்பனை நபர்களையும் இணைத்துள்ளேன். 

*****

ரஹீம்பாய் அவருடைய வீட்டு திண்ணையில் அமர்ந்திருக்கிறார். ஜோசப்பும் உடன் இருக்கிறார். கணேஷ் அப்போதுதான் வருகிறார்.

ரஹீம்: என்னய்யா வழக்கம் போலவே இன்னைக்கிம் லேட்டாத்தான் வறீர் போல?

கணேஷ்: (சிரிப்புடன்) லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் நியூசோட வருவோம்ல?

ஜோசப்: அதென்னங்க லேட்டஸ்ட் நியூஸ்?

கணேஷ்: நம்ம வாசன அம்போன்னு விட்டுட்டாங்களே அத சொல்ல வந்தேன்.

ரஹீம்: (சிரிக்கிறார்) ஓ அதுவா. கரெக்ட். ஒரு சீட்டுக்கு பாத்தா வர்ற தேர்தல்ல கிடைக்கற ஒன்னும் ரெண்டும் கிடைக்காம போயிருமேன்னு பாத்துருப்பாங்க. அது மட்டுமில்லீங்க. இதுல இன்னொன்னும் இருக்கு.

ஜோசப்: அதென்ன இன்னொன்னு?

ரஹீம்: மந்திரி சபையில இருந்துக்கிட்டே இது சரியில்ல, அது சரியில்லன்னு அறிக்கை விட்டுக்கிட்டே இருந்தாருல்ல? நாராயணான்னு இருந்தவரு போட்டுக் குடுத்துருப்பாரு. 

ஜோசப்: அப்படீங்கறீங்க? எனக்கென்னவோ இது திமுகவோட மறுபடியும் கூட்டணி வச்சிக்கறதுக்கு காங்கிரஸ் பண்ற அட்டெம்ப்ட்டுன்னு நினைக்கேன். என்ன சொல்றீங்க கணேஷ்?

கணேஷ்: ஆமா எனக்கும் அப்படித்தான் தோனுது. ஆனா இப்பவும் கலைஞர் இதப் பத்தி மூச்சு விடாம இருக்கார் பாருங்க. கூட்டணி வேணும்னா அவங்களே வரட்டும்னு....

ரஹீம்: அவர் கூப்ட்டும் நடிகர் பதிலே சொல்லாம இருக்காரில்லையா அந்த கடுப்பாருக்கும். 

கணேஷ்: அதான் நடிகர் வந்தா காங்கிரசோட வாங்கன்னு சொல்லிட்டாராமே.

ஜோசப்: இதத்தான் நேரம்னு சொல்றது. அறுபது வருசமா அரசியல்ல இருந்துட்டு இப்போ நேத்து பேய்ஞ்ச மழையில முளைச்ச காளான்கிட்டல்லாம் கையேந்த வேண்டியிருக்கு பாருங்க. இத என்னன்னு சொல்றது?

ரஹீம்: நீங்க என்ன ஜோசப் புரியாத ஆளாருக்கீங்க? அறுபது வருசம் இருந்து என்ன பிரயோசனம்? தனியா நின்னா ஒன்னு கூட கிடைக்காது போலருக்கே? 

கணேஷ்: அதென்னவோ உண்மைதான். வீட்ல இருக்கறவங்கள கட்டுக்குள்ள வச்சிக்க முடியாதவங்கல்லாம் நாட்டுக்கு நல்லது பண்றேன்னு வந்தா யார் நம்புவாங்க? சரி, அப்படியே இவங்க மூனு பேரும் கூட்டணி வச்சாலும் பெருசா எதுவும் கிடைக்குமா என்ன?

ஜோசப்: நல்ல கேள்வி. நாலு முனை, அஞ்சி முனை போட்டின்னு இல்லாம மும்முனை போட்டின்னு ஓட்டு சிதறாம இருக்கும். 

ரஹீம்: என்னது மும்முனை போட்டியா? எது பாஜக, பாமக, மதிமுக கூட்டணியா? நீங்க வேறங்க. அதெல்லாம் ஒரு கூட்டணின்னு சொல்லிக்கிட்டு. டெப்பாசிட் கிடைச்சா லாபம். 

கணேஷ்: (கோபத்துடன்) யோவ் பாய், ஆரம்பிச்சிராத. இன்னைக்கி நாடு முழுசும் அடிக்கற மோடி அலையில...

ரஹீம்: (குறுக்கிடுகிறார்) என்னது மோடி அலையா? எங்க, இங்கயா? ஜோக் அடிக்காதைய்யா. நார்த்ல எப்படியோ, சவுத்ல அப்படியொன்னும் காணம். குறிப்பா தமிழ்நாட்ல.... போன தடவ மாதிரிதான்... ஒன்னு கிடைச்சா லாபம். 

கணேஷ்: பாத்துக்கிட்டே இருங்க. நாப்பதையும் அள்றமா இல்லையான்னு...

ஜோசப்பும் ரஹீம்பாயும் உரக்க சிரிக்கின்றனர். கணேஷ் அவர்கள் இருவரையும் எரித்துவிடுவதுபோல் பார்க்கிறார்.

கணேஷ்: (எரிச்சலுடன்) என்ன ஜோசப், நீங்களும் இந்தாள் கூட சேந்துக்கிட்டு சிரிக்கறீங்க?

ஜோசப்: தப்பா நினைச்சிக்காதீங்க கணேஷ். ஆனாலும் உங்களுக்கு ரொம்பத்தான் பேராசை. இல. கணேசனுக்கே இந்த அளவுக்கு ஆசை இருக்காது. அஞ்சோ ஆறோ கிடைச்சாப் போறும், நாமளும் ஒரு ஸ்டேட் மந்திரியாயிரலாம்னு நினைச்சிக்கிட்டிருப்பார்.

ரஹீம்: அது இருக்கட்டுங்க. திமுக-காங்கிரஸ்-தேதிமுக கூட்டணிய பத்தி சொல்லுங்க, எத்தன சீட் கிடைக்கும்?

ஜோசப்: கரெக்டா சொல்ல முடியாது. என்னெ கேட்டா இந்த கூட்டணியால அம்மாவுக்கு கிடைக்கப் போற விக்டரி மார்ஜின் வேணும்னா குறையலாம். ஆனா இவங்களுக்கு உருப்படியா இடங்க ஏதாச்சும் கிடைக்குமாங்கறது சந்தேகம்தான். மிஞ்சிப் போனா நாலஞ்சி கிடைக்கலாம். அதையும் நிச்சயமா சொல்ல முடியாது. 

ரஹீம்: எனக்கும் அப்படித்தான் தோனுது. முப்பத்தொன்பது சீட்ல முப்பதுக்கு குறையாம அம்மாவுக்கு போயிரும். வைகோ ஜெயிக்க சான்ஸ் இருக்கு. விடுதலை சிறுத்தை சரியான தொகுதியில நின்னா ஜெயிக்கலாம். மீதி மூனு சீட்டு திமுகவுக்கு கிடைக்கும். காங்கிரசுக்கும் தேதிமுகவுக்கும் ஒன்னும் கிடைக்க சான்ஸ் இல்ல. என்ன சொல்றீங்க?

கணேஷ்: (சலிப்புடன்) அடப் போங்கய்யா.... நீங்களும் ஒங்க ப்ரடிக்‌ஷனும்... பாஜகவுக்கு தமிழ்நாட்லருந்து கிடைக்கற ஒவ்வொரு சீட்டும் நம்ம ஸ்டேட்டுக்கு முக்கியம். ஏன்னா சென்ட்ரல்ல மினிஸ்ட்ரி ஃபார்ம் பண்ணப் போறது நாங்கதான். இங்க மட்டும் ஒன்னும் கிடைக்காம போச்சி அடுத்த அஞ்சி வருசத்துக்கு நம்மள யாரும் கண்டுக்க மாட்டாங்க. அது இலங்கை விஷயமானாலும் சரி, நம்ம ஃபிஷ்ஷர் மேன் விஷயமானாலும் சரி.... 

ரஹீம்: (நக்கலாக) அப்படி நடந்தாத்தான? 

ஜோசப்: அப்படியே நடந்தாலும் இங்க மேடத்துக்கு கிடைக்கற முப்பது, முப்பத்தஞ்சி சீட்டும் ரொம்ப பெரிய ரோல் ப்ளே பண்ணுங்க. ஏன்னா பாஜகவுக்கு 200 சீட்டுக்கு மேல கிடைக்கறதுக்கு சான்ஸே இல்லேங்கறாங்க. மினிஸ்ட்ரி ஃபார்ம் பண்ணணும்னா அதிமுகவோட சப்போர்ட் நிச்சயம் வேண்டியிருக்கும். என்ன சொல்றீங்க பாய்?

ரஹீம்: மேடத்துக்கு முப்பது இடங்க கிடைக்கும்கறத ஒத்துக்கறேன். ஆனா நீங்க சொல்றா மாதிரி பிஜேபிக்கு இருநூறு சீட் கிடைக்கும்கறத நா ஒத்துக்க மாட்டேன். 175லருந்து 180க்கு மேல ஒப்பேறாது. அத்தோட அதிமுகவ தவிர வேற எந்த பெரிய கட்சி பிஜேபிக்கு சப்போர்ட் பண்ணுங்கறீங்க? தமிழ்நாட்ட விட்டா சொல்லிக்கறளவுக்கு சீட் கையில இருக்கப் போற கட்சிங்கள்ல எஸ்.பி, பி.எஸ்.பி, டிஎம்சி... இவங்கள்லாம் பிஜேபிய சப்போர்ட் பண்ணுவாங்களா என்ன? அப்புறம் பீஹார்ல நித்தீஷ். மோடின்னு பேர் சொன்னாலே கடுப்பாறவர். அகாலிக்கு இந்த தடவ பெருசா ஒன்னும் கிடைக்கப் போறதில்லையாம். 

ஜோசப்: என்ன பாய் ரொம்ப டீப்பாவே அனலைஸ் பண்ணி வச்சிருக்கீங்க போல?

ரஹீம்: (சிரிக்கிறார்) நம்ம கடையில வியாபாரம் நடக்குதோ இல்லையோ வர்றவங்கள்லாம் இதப்பத்தித்தான பேசிக்கிறாங்க? எல்லாம் கேள்வி ஞானம்தான். 

கணேஷ்: யோவ், ரோட்ல போற வர்றவன் சொல்றதையெல்லாம் வச்சிக்கிட்டு பேத்தாத. 225லருந்து 250 சீட்டுக்கு கீழ போறதுக்கு சான்ஸே இல்ல. மினிஸ்ட்ரி ஃபார்ம் பண்றதுக்கு சிம்பிள் மெஜாரிட்டி இருந்தாலே போறும். உங்க மேடம் சப்போர்ட்லாம் நமக்கு தேவையே இருக்காது. சிவசேனா சப்போர்ட் மட்டுமே போறும். 

ரஹீம்: இந்த நினைப்புலத்தான கூட்டணியில இருந்த நித்தீஷ கட் பண்ணி விட்டுட்டீங்க?

கணேஷ்: பின்னே? இன்னைக்கி நாடு முழுசும் மோடிய நம்பறத தவிர வேற வழியே இல்லேன்னு பேசிக்கிறாங்க நீங்க என்னடான்னா மேடம் அத செஞ்சிருவாங்க, இத செஞ்சிருவாங்கன்னு பேசிக்கிட்டு....

ஜோசப்: சரி கணேஷ். நீங்க சொல்ற 250 சீட் எங்கருந்தெல்லாம் கிடைக்கும்னு சொல்றீங்க? 

கணேஷ்: அதெல்லாம் கரெக்டா சொல்ல முடியாது. ஆனா கிடைக்கும். 

ரஹீம்: (சிரிக்கிறார்) அதான பாத்தேன். எந்த டீட்டெய்லும் இல்லாம மோடி வித்தை காட்ற மாதிரி பேசாதய்யா. இருக்கறதிலயே பெரிய ஸ்டேட்ஸ்ல எதுலயும் உங்களுக்கு பெருசா கிடைக்கப் போறதில்ல. அப்புறம் எப்படி 250னு சொல்றீங்க? சவுத்லருக்கற ஆந்திரா, கர்நாடகா, கேரளா அப்புறம் தமிழ்நாடு/பாண்டியிலருக்கற மொத்த இடங்க 130ல ஒங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்னாவது சொல்ல முடியுமா?

கணேஷ்: (கூரையை பார்க்கிறார்) 50 இல்லன்னா 60 கிடைக்கும்.

ரஹீம்: (சிரிக்கிறார்) யோவ், எங்க வீட்டுக் கூரைய பாக்காத. அது வெறும் ஓடு, ஓட்டு இல்ல. நா சொல்றேன். கர்நாடகாவ தவிர வேற எங்கயும் ஒன்னும் பேறாது. அங்கக் கூட போன தடவ மாதிரி டபுள் டிஜிட்ல கிடைக்காது. நாலஞ்சி கிடைச்சா லாபம். வெஸ்ட்ல மஹாராஷ்டிராவுல ஒங்களுக்கும் சிவசேனாவுக்கும் சேத்து இருக்கற 48 சீட்ல பாதி கிடைக்கலாம். அப்புறம் குஜராத், சட்டீஸ்கர், மத்திய பிரதேஷ், ராஜஸ்தான், ஹரியானாவுலருந்து எழுபதுலருந்து எண்பது வரைக்கும் கிடைக்கும். பீஹார், ஒரிசா, பஞ்சாப்லருந்தெல்லாம் ஒரு பத்து பதினைஞ்சி.... கொல்கொத்தாவுலருந்து நாலஞ்சி கிடைச்சா லாபம், உபியில எஸ்.பி, பிஎஸ்பிக்கு கிடைச்சதுபோக ஜாஸ்தி போனா பத்து... எல்லாத்தையும் கூட்டி கழிச்சி பாத்தா 175லருந்து 180 வரைக்கும்தான்..... 

கணேஷ்: யோவ், அது மோடி இல்லாமையே கிடைச்சிரும். மோடிதான் பிரைம் மினிஸ்டர் கேன்டிடேட்டுன்னு சொன்னதுக்கப்புறம் பெரிய அலையே வீசுதுய்யா. இதுல மேடம் கட்சிய சேத்து எல்லாமே அடிச்சிக்கிட்டுப் போயிரும். நீங்க வேணா பாருங்க. 

மீண்டும் ஜோசப்பும் ரஹீம்பாயும் சிரிக்கின்றனர்.

ஜோசப்: சரிங்க நீங்க சொல்றா மாதிரியே நடக்கட்டும். வேற ஏதாச்சும் பேசுவோம்.

கணேஷ்: (சிரிக்கிறார்) ஒங்க ராஹுல் பேபி ஒரு பேட்டி குடுத்தார அதப் பத்தி பேசலாமா? நா ரெடி. 

ஜோசப்: அரசியல பொறுத்தவரைக்கும் ராஹுல் பேபிதான் ஒத்துக்கறேன். ஆனா அன்னைக்கி அவர் சொன்னதுல விஷயம் இல்லாம இல்ல.

கணேஷ்: எது? விஷயமா? நீங்க வேற ஜோசப். அவர் அன்னைக்கி எந்த கேள்விக்கி ஒழுங்கா பதில சொன்னார்? செவிடன் காதுல விழுந்தா மாதிரி கோஸ்வாமி கேட்ட எல்லா கேள்விக்கும் ஒரே பதிலத்தான சொல்லிக்கிட்டிருந்தார்? நாட்ல இருக்கற எல்லா பொம்பளைங்களையும் எம்பவர் பண்ணப் போறாராம். அத ஏன் இந்த பத்துவருசத்துல செய்யலேன்னு கேட்டா பதில காணம். அத்தோட விட்டாரா? இவர் என்னவோ ஃபாரின்லருந்து வந்து குதிச்சா மாதிரி இங்க நடக்கற எதுவுமே சரியில்ல, நா வந்து எல்லாத்தையும் மாத்தப்போறேங்கறார். எது சரியில்ல, எத மாத்தப்போறேன்னு சொல்லாம..... என்னெ கேட்டா இவருக்கு விஷய ஞானமே இல்லீங்க... இப்படியொரு முக்கியமான இன்டர்வ்யூவுக்கு வர்றவரு எதையுமே ப்ரிப்பேர் பண்ணாம வந்து சொதப்பி இருக்கற கொஞ்ச நஞ்ச பேரையும் ரிப்பேராக்கிட்டு போனதுதான் மிச்சம். 

ஜோசப்: அப்படி ஒரேயடியா சொல்லிற முடியாதுங்க. அவர் சொன்ன நாலு விஷயத்த பத்தி சொல்றேன். கேட்டுட்டு சொல்லுங்க.

ரஹீம்: நாலு விஷயமா? அப்படியென்ன சொன்னார்?

ஜோசப்: 1. அரசியல் கட்சிங்க, ஜுடிஷியரி அப்புறம் மீடியாவையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குள்ள கொண்டு வரணும். 2. குஜராத் கலவரத்துக்கு ஸ்டேட் கவர்ன்மெண்ட் சரியான ஆக்‌ஷன் எடுக்காததுதான் முக்கிய காரணம். அதனால அப்போ சீஃப் மினிஸ்டரா இருந்த மோடிதான் இதுக்கு பொறுப்பு 3. பார்லிமென்ட், கேபினட் மினிஸ்ட்ரின்னு இருக்கறப்போ ஒரு ப்ரைம் மினிஸ்டர் மட்டும் பெருசா எதையும் செஞ்சிற முடியாது. 4. மோடி சொல்ற மெத்தேட இம்ப்ளிமென்ட் பண்ணா அது அதிகாரம் முழுசையும் ஒரு சின்ன க்ரூப்கிட்ட குடுத்தா மாதிரி ஆயிரும்னு அவர் சொன்னதுல தப்பு ஏதாச்சும் இருக்காங்க?

கணேஷ்: (கோபத்துடன்) என்ன ஜோசப் நீங்களுமா? குஜராத் கலவரத்துல மோடி மேல எந்த தப்பும் இல்லேன்னு இதுக்குன்னு சுப்ரீம் கோர்ட் போட்ட டீமே சொல்லிருச்சி. அவங்க சொன்னதுல தப்பு ஒன்னும் இல்லேன்னு சுப்ரீம் கோர்ட்டும் சொல்லிருச்சி. அதுக்கப்புறமும் இதையே சொல்லிக்கிட்டிருந்தா எப்படின்னு கோஸ்வாமி கேட்டாரே? அதுக்கு ஒங்க தலைவர் என்ன சொன்னார்? கேட்டத வுட்டுப்போட்டு எதை, எதையோ சொல்ல்க்கிட்டிருந்தார். சுப்ரீம் கோர்ட் சொன்னதையெல்லாம் ஏத்துக்க முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதான?

ரஹீம்: யோவ் என்னய்யா பெரியா டீம்? அவனுங்க யார் கிட்ட விசாரிச்சாங்க? கலவரம் நடந்தப்போ அதிகாரத்துல இருந்தவங்கக் கிட்டத்தான? பாதிக்கப்பட்ட யாரையாச்சும் விசாரிச்சாங்களா? எல்லா இடத்துலயும் போலீஸ் இருந்தும் ஒன்னுமே செய்யாம வேடிக்கைப் பாத்துக்கிட்டிருந்தாங்களே அதுக்கு யார்யா பொறுப்பு? ஃபீல்டுல இருக்கற போலீஸ் டீம் அவங்க மேலதிகாரிங்களுக்கு ஒவ்வொரு நிமிஷமும் கலவரம் ஜாஸ்தியாய்ட்டே இருக்கு நாங்க என்ன பண்ணணும் சொல்லுங்கன்னு மெசேஜ் மேல மெசேஜா அனுப்பியும் மேலருந்து ஒன்னும் பதிலே வராம இருந்துதுன்னு பேப்பர்ல எல்லாம் போட்டுருந்தானே அது பொய்யா? இவ்வளவு ஏன், மோடியோட டைரக்ட் சூப்பர்விஷன்ல இருந்த போலீஸ் அதிகாரிகளே அவர் சொல்லித்தான் நாங்க செஞ்சோம்னு அஃபிடவிட்லாம் தாக்கல் பண்ணாங்களே அதெல்லாம் பொய்யின்னா அவங்க மேல எதுக்கு இதுவரைக்கும் ஆக்‌ஷன் எடுக்காம இருக்காங்க? ஒன்னு சொல்றேன் கேளு. அடுத்த எலெக்‌ஷன்ல பிஜேபி தோக்கணும். மோடி குஜராத் சீஃப் மினிஸ்டர் போஸ்டலருந்து ராஜினாமா பண்ணணும். அதுக்கப்புறம் ஒரு இன்வெஸ்ட்டிகேஷன் நடக்கட்டும். அப்புறம் பாருங்க. ஒவ்வொரு அதிகாரியும் கதறிக்கிட்டு உண்மைய சொல்றத. இதுக்கு பயந்துதானய்யா மோடி இன்னும் கூட அந்த போஸ்டலருந்து ரிசைன் பண்ண மாட்றாரு? 

கணேஷ்: (கோபத்துடன்) யோவ் எதையாவது ஒளறாத. சுப்ரீம் கோர்ட்டே அவங்க ரிப்போர்ட்ட படிச்சிட்டு எல்லாம் சரிதான்னு சொல்லியாச்சி....

ஜோசப்: கணேஷ் கோபப்படாதீங்க. ரஹீம் பாய் சொல்றதுலயும் நியாயம் இருக்கு. ஒரு சீஃப் மினிஸ்டர் பதவியில இருக்கறப்பவே அவருக்கு எதிரா எந்த அதிகாரிங்க பேசுவாரு? நியாயமா இவர் மேல அலிகேஷன் வந்தப்பவே இவர் ராஜினாமா செஞ்சிட்டு என்ன இன்வெஸ்ட்டிகேஷன் வேணும்னாலும் செஞ்சிக்குங்கனு சொல்லியிருக்கணும். சரி அப்பத்தான் செய்யல. பி.எம். கேன்டிடேட்டுன்னு அனவுன்ஸ் பண்ணதுக்கப்புறமாவது செஞ்சிருக்கலாம்லே? பாய் சொல்றா மாதிரி அவர் பதவியில இல்லாட்டி எந்த அதிகாரி என்ன விட்னெஸ் குடுப்பாரோங்கற பயத்துலதான் இன்னமும் அந்த போஸ்ட்ல ஒட்டிக்கிட்டுருக்கார். அந்த மாதிரி அதிகாரிங்க சொன்னத வச்சித்தான் சுப்ரீம் கோர்ட் அப்பாய்ன்ட் பண்ண இன்வெஸ்ட்டிகேஷன் டீமும் அவங்க ரிப்போர்ட ப்ரிப்பேர் பண்ணியிருப்பாங்க. அவங்க ரிப்போர்ட்ல டிஃபெக்ட் எதுவும் இல்லேன்னுதான் சுப்ரீம் கோர்ட் சொல்லுதே தவிர மோடி குத்தம் இல்லாதவர்னு சொல்லல. ரெண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.

கணேஷ் சலிப்புடன் எழுந்து நிற்கிறார்: இதுக்கு மேலயும் இங்க இருந்தா எதையாவது எக்குத்தப்பா சொல்லிருவேனோன்னு பயமா இருக்குங்க. நா வரேன்.... அடுத்த வாரம் பாக்கலாம்.

அத்துடன் அவர் எழுந்து அவர்களுடைய பதிலுக்கு காத்திராமல் சென்றுவிட ஜோசப்பும் ரஹீம்பாயும் செய்வதறியாது அமர்ந்திருக்கின்றனர்.

********