‘மிஸ்டர் ஜோசப். நான் காலைல சொன்னதப்பத்தி பெரிசா ஒர்றி பண்ணாதீங்க. உங்களப்பத்தி எனக்கு H.O.ல கிடைச்ச தகவல் அப்படி இருந்திச்சி. அதனாலதான் டீடெய்லா செக் பண்ணனும்னு தோணிச்சி. உங்கள மாட்டி விடணும்னு இல்ல. நவ் ஐ ம் நாட் வொர்றீட் எனிமோர். நாளைக்கே உங்கள் நான் ரிலீவ் பண்ணிடறேன். மத்தத நான் அப்புறமா பார்த்துக்கறேன்.’ என்றவரை சந்தேகக் கண்ணோடு பார்த்தேன்.
ஆனாலும் அவர் கூறியதை மறுத்து பேச என்னால் முடியவில்லை. ‘சரி.’ என்று சொல்லிவிட்டு என் வாகனத்தை முடுக்கி அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு வீடு திரும்பினேன். போகும் வழியெல்லாம் இவரை எந்த அளவுக்கு நம்பலாம் என்ற யோசனைதான்.
வீட்டையடைந்ததும் எல்லா அறைகளிலும் விளக்குகள் எரிய வீடே ஜெகஜோதியாக இருப்பதையும் வீட்டினுள் ஆட்கள் நடமாடுவதையும் பார்த்தேன். ஊரிலிருந்து யாரோ வந்திருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு வாகனத்தை அதன் இடத்தில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தேன்.
என் மாமனாரும் இரு மைத்துனர்களும் ஊரிலிருந்து வந்திருந்தார்கள். என்னுடைய மாற்றத்தை என் மனைவி தொலைப்பேசியில் அறிவித்திருக்க வேண்டும். எனக்கு உதவி செய்யும் எண்ணத்துடன் உடனே புறப்பட்டு வந்துவிட்டார்கள்.
அந்தகாலத்தில் இப்போது இருப்பது போல Packers & Movers என்று யாரும் இருக்கவில்லை. எல்லா தட்டுமுட்டு சாமான்களையும் நாமேதான் மூட்டைக் கட்டி ஏதாவது ஒரு வாகனத்தைப் பிடித்து அனுப்ப வேண்டும்.
நல்லவேளை, என் மாமனார் சமயோசிதமாக அவருடைய நண்பர் வேலை பார்த்த சென்னையில் தலைமையகத்தை கொண்டிருந்த ஒரு டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் விலாசத்தோடு வந்திருந்தார்.
அடுத்த இரண்டு நாட்களில் என் மைத்துனர்களின் துணையுடன் எல்லா பொருட்களையும் Pack செய்து தயாராக வைத்தேன்.
முதலில் நானும் என் மனைவியும் தஞ்சைக்கு சென்று தங்குவதற்கு ஒரு வீட்டைப் பிடிக்க வேண்டுமென்றும் அதுவரை என் மைத்துனர்கள் சென்னை வீட்டில் பொருட்களுக்கு பாதுகாப்பாக தங்கியிருக்க வேண்டுமென்றும் தீர்மானித்தோம். பிறகு வீடு அமைந்ததும் மைத்துனர்கள் பொருட்களை டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் வண்டியில் ஏற்றி அனுப்பவும் ஏற்பாடு செய்திருந்தேன்.
என்னுடைய கிளையிலிருந்து விடுவிக்கப்பட்ட அடுத்த நாளே தஞ்சைக்கு கிளம்பி செல்லவேண்டியதுதான்.
ஒரு நாள் கழித்து என்னுடைய விடுவிப்பு சான்றிதழைப் பெற்றுக்கொள்ள என்னுடைய கிளைக்கு சென்றேன். மேலாளர் அறையில் அவரை காணாததால் என்னுடைய உதவி மேலாளரை அணுகி அவர் எங்கே என்று வினவினேன். அவரோ என்னை நிமிர்ந்துக் கூட பாராமல் தனக்கு தெரியாது என்றார். அவர் குரலிலிருந்த அலட்சியம் என்னை எரிச்சலூட்டியது.
பார்க்கப்போனால் விடுவிக்கப்படும் வரை அந்த கிளையின் உண்மையான மேலாளர் நான்தான். அதை என்னுடைய உதவி மேலாளருக்கு உணர்த்தவேண்டும் என்று தீர்மானித்து நேரே என் அறைக்கு சென்று அமர்ந்து அழைப்பு மணியை அடித்தேன். உள்ளே வந்த சிப்பந்தியுடன் உதவி மேலாளரை கூப்பிடச் சொன்னேன்.
சிப்பந்தி சென்று கூறியவுடன் வராமல் தன் இருக்கையிலமர்ந்தவாறே என்னை திரும்பிப் பார்த்தார். நான் அவரைப் பார்க்காமல் தொலைப்பேசியை எடுத்து வெறுமனே ஒரு எண்ணை சுழற்றி இணைப்பு கிடைப்பதற்குமுன் வேண்டுமென்றே வெளியே இருந்த உதவி மேலாளருக்கு கேட்கும் வகையில் உரத்த குரலில் பேச ஆரம்பித்தேன்.
‘சார் நான்தான் டிபிஆர். இன்னைக்கி என்னை ரிலீவ் பண்ண வேண்டிய மேனேஜர் அலுவலகத்துக்கு வரவில்லை. உதவி மேலாளர் எனக்கு எதுவும் தெரியாது என்று அலட்சியமாக கூறுகிறார். நான் என்ன செய்யட்டும், கூறுங்கள்.’ என்றேன்.
என்னுடைய குரலைக் கேட்ட உதவி மேலாளர் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்தார். நான் அவர் வந்ததை கவனியாதவன்போல் தொலைப்பேசியில் என் நாடகத்தை தொடர்ந்தேன். ‘என்ன சார்? உதவி மேலாளருக்கு கொடுக்கவா? நீங்களே அவர்கிட்ட கேக்கறீங்களா? சரி சார். இதோ கொடுக்கிறேன்’ என்றவாறு அவரை நோக்கி திரும்பி ஒலிவாங்கியை நீட்டினேன். ‘இந்தாங்க நம்ம H.R.Head லைன்ல இருக்கார். நீங்களே அவர்கிட்ட உங்க மேனேஜர் எங்க போயிருக்கார்னு தெரியலைன்னு சொல்லுங்க.’
அவர் நான் சொல்வதை நம்பி ஒலிவாங்கியை வாங்க மறுத்து, ‘ வேணாம் சார். எனக்கு அவர் எங்க போயிருக்கார்னு தெரியும் சார். இதுக்கு எதுக்கு Head Officeக்கெல்லாம் ஃபோன் பண்ணிக்கிட்டு.. நீங்களே ஏதாச்சும் சொல்லிட்டு வைங்க சார். நான் போன எடத்த சொல்றேன்.’ என்றார்.
பதற்றத்தில் முகம் வெளுத்துபோய் நின்ற அவரைப் பார்க்கவே பாவமாயிருந்தது. ‘உங்களுக்கெல்லாம் இப்படி பண்ணாத்தான் வழிக்கு வருவீங்க’ என்று நினைத்துக்கொண்டு டயல் டோன் கேட்கும் ஒலிவாங்கியில், ‘சாரி சார். மேனேஜரே வந்துட்டாரு. ரிலீவ் பண்றதுல ஏதாச்சும் பிரச்சினையிருந்தா மறுபடியும் கூப்டறேன் சார்.’ என்று பொய்யாய் கூறிவிட்டு தொலைப்பேசியை வைத்தேன்.
உதவி மேலாளரை கோபத்துடன் பார்த்தேன். அதுவும் நடிப்புத்தான். ‘இங்க பாருங்க. எனக்கும் நம்ம மானேஜருக்கும் இடையில நீங்க வந்து நுழைஞ்சி ஆதாயம் பார்க்க முயற்சி பண்ணீங்க.. அது உங்களுக்குத்தான் வினையா முடியும். சொல்லிட்டேன். நீங்க ஆஃபீசரா ஆகி ஒரு வருஷம்தான் ஆயிருக்கு. இந்த வருஷத்தோட உங்க கான்ஃபிடன்ஷியல் ரிப்போர்ட் நான்தான் அனுப்ப வேண்டியிருக்குங்கறதையும் மறந்துராதீங்க. புரிஞ்சிதா? இப்ப சொலுங்க எங்க உங்க மேனேஜர்? என் ரிலீவிங் ஆர்டர் என்னாச்சி?’ என்றேன்.
சிறிது நேரம் தயங்கி நின்றவர், ‘சார் அவர் வேணும்னே வீட்லருந்துக்கிட்டு உடம்பு சரியில்லைன்னு நீங்க வந்தா சொல்ல சொன்னார் சார். அவருக்கு உங்கள எப்படியாவது மாட்டிவிடணும். அதுக்காக ரெண்டு நாளா எல்லாத்தையும் துருவி துருவி பார்த்தார். ஒன்னும் கிடைக்கலை. அதான் வெறுப்புல இப்படியாவது தொந்தரவு கொடுக்கலாம்னு நினைக்கறார் போலருக்குது. அவர் உங்கள மாதிரி இல்ல சார். ரொம்ப மோசமான ஆளு. இவர் கிட்ட நான் எப்படித்தான் வேலை செய்யப்போறேனோன்னு நினைச்சா பயமா இருக்கு சார்.’ என்றார்.
‘டேய் போறுன்டா.. போன மூனு நாளா அந்தாள்கிட்ட குழைஞ்சி, குழைஞ்சி நின்னுட்டு .. இப்ப சும்மா பேருக்கு ஒரு மிரட்டல் விட்டதும் அந்தாளையே குறை சொல்லுறியா?’ என்று நினைத்து வியப்புடன் அவரை பார்த்தேன்.
என்னுடைய பார்வையிலிருந்த வியப்பு அவருக்கு புரிந்திருக்க வேண்டும். ‘என்ன சார் அப்படி பாக்கறீங்க? நான் அவர் முன்னால உங்கள அலட்சியப்படுத்துனது உண்மைன்னு நினைச்சீங்களா? அதெல்லாம் வெறும் நடிப்பு சார். அந்தாளுக்கு பயந்துக்கிட்டு அப்படி செஞ்சேன்.’
நான் அவரை பரிதாபத்துடன் பார்த்தேன். ‘சரி அப்படியே இருக்கட்டும். கொஞ்ச நேரத்துக்கு முன்னால நான் அவர் எங்கேன்னு கேட்டப்போ கொஞ்சம்கூட சட்டை பண்ணாமல் அலட்சியமா பேசனீங்களே, அது? அதுவும் அவருக்கு பயந்தா? அவர்தான் இங்க இல்லவே இல்லையே?’
என்னுடைய நேரடி தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத அவர் ஒரு நிமிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறினார். ஏதோ சாக்கு சொல்ல வந்தவரை ‘போதும்.’ என்பதுபோல் சைகைக் காண்பித்துவிட்டு இருக்கையிலிருந்து எழுந்தேன்.
‘இங்க பாருங்க. இப்ப நான் போறேன். மாலை நான்கு மணிக்கு வருவேன். அப்போது என்னுடைய ரிலீவிங் சான்றிதழ் எனக்கு கிடைக்கவில்லையென்றால் நான் மீண்டும் H.R. Headடிடம் புகார் செய்வேன் என்று உங்க மேலாளரிடம் தெரிவியுங்கள். புரிகிறதா?’ என்று எச்சரித்துவிட்டு அவருடைய பதிலுக்கு காத்திராமல் வெளியேறினேன்.
என்னுடைய எச்சரிக்கை நான் எதிர்பார்த்த வேலையை செய்திருந்தது. நான் மீண்டும் மாலையில் திரும்பி சென்றபோது மேலாளரே இருக்கையிலிருந்து எழுந்து என்னை ஒரு அகண்ட சிரிப்புடன் வரவேற்றார்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் என்னுடைய மாற்றலுக்கான உத்தரவும், விடுவிப்பு சான்றிதழும் ஒரு உறையில் என்னிடம் வந்தன. நான் அதைப் பெற்றுக்கொண்டதும் மேலே பேசிக்கொண்டிருக்க விரும்பாமல் எழுந்து பேருக்கு ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு வெளியேறி ஹாலில் இருந்த என் உதவி மேலாளர் உட்பட அனைத்து ஊழியர்களிடமும் விடைகூறிக்கொண்டு கிளையை விட்டு வெளியேறினேன்.
அன்றோடு அக்கிளையினுடனான என்னுடைய மேலாளர் பந்தம் விட்டுப்போனது.
அடுத்த நாளே நானும் என் மனைவியும் இரவு நேர ரயிலில் புறப்பட்டு சென்றோம்.
நான் தஞ்சையிலிருந்த நாட்களில் என் பெற்றோரை சந்திக்க சென்னைக்கு செல்லவேண்டியிருந்தாலும் என்னை விடுவித்த மேலாளர் அக்கிளையில் இருந்த வரை நான் அங்கு சென்றதே இல்லை. ஆனால் நான் முந்தைய பதிவில் கூறியிருந்தபடி அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அன்று வேறொரு அலுவல் நிமித்தம் சென்னையில் இருந்ததால் அவரை சந்திக்க நேர்ந்தது. ஆனால் பாவம் அன்று அவர் இருந்த நிலை கண்டு அனுதாபப்படத்தான் என்னால் முடிந்தது.
‘உங்க மேலே அவர் செய்யாத புகாரே இல்ல டிபிஆர். இப்ப பார்த்தீங்களா அவருக்கு நேர்ந்த நிலைமைய.. அப்போ நீங்களா இருந்ததால அவருக்கெதிரா ஒன்னும் சொல்லாம இருந்தீங்க.. உங்க எடத்துல நான் இருந்திருந்தா அவர் கதையே கந்தலாயிருக்கும்.’ என்று ஏளனத்துடன் பேசிய அன்று சென்னை மத்திய கிளை மேலாளராக இருந்த என் நண்பரைப் பார்த்தேன்.
ஒன்றும் சொல்ல தோன்றாமல் வெறுமனே புன்னகைத்தேன். அதில் வேடிக்கை என்னவென்றால் என் மத்திய கிளையின் மேலாளருக்கு எதிராக என்னுடைய தலைமையகத்திற்கு கிடைத்த ஒரு புகாரின் உண்மையைக் கண்டுபிடித்து அறிக்கையனுப்புவதற்காகத்தான் என்னை அனுப்பியிருந்தார்கள், ரகசியமாக. என்னுடைய விசாரிப்பின் அறிக்கையை இவர் படித்து பார்க்கும்போது என்னைப் பற்றி இவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று நினைத்தேன்.
தொடரும்..
நடிப்புலேயும் மன்னந்தான் நீர்.
பதிலளிநீக்குஎப்படி உங்களாலெ சிரிக்காம இருக்க முடிஞ்சது?
நானா இருந்தா அவ்வளோதான்!
வாங்க துளசி,
பதிலளிநீக்குஉலகமே ஒரு நாடகை மேடை நாமெல்லாருமே நடிகர்கள்தானே.
சிலர் சில நேரங்களிலும் நடிப்பார்கள். சிலர் எப்போதுமே நடிப்பார்கள். நாம் முதல் சிலரா இல்லை ரெண்டாவது சிலரா என்பதுதான் கேள்வி!:-))
வாங்க சதீஷ்,
பதிலளிநீக்குதஞ்சாவூர்! அதுதான் எனக்கு சொந்த ஊர் அடுத்த ரெண்டு வருஷத்துக்கு. உங்கூர பத்தி சொன்னா சொல்லிக்கிட்டே இருக்கலாம். அடுத்த பதிவிலருந்து ஒரே தஞ்சாவூர் புராணம்தான். நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு.
Mr. ஜோஸஃப்,
பதிலளிநீக்குநான் உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து, ரசித்து வந்துள்ளேன். உங்களின் பணி அனுபவங்கள், என் போன்ற மேனேஜ்மென்ட் ஏணியின் முதல் படியில் இருப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கின்றது. உங்களுக்கு என் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
பெத்தராயுடு
வாங்க பெத்தராயுடு,
பதிலளிநீக்குஉங்களுடைய கிறீஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி.
உங்களுக்கும் மலரும் புத்தாண்டில் எல்லா நன்மைகளும் கிடைக்க வாழ்த்துகிறேன்.