26 ஆகஸ்ட் 2019

அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க.


’உங்களால ஏன் மத்தவங்களோட அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியல டிபிஆர்?’

இந்த கேள்விய என்னுடைய அலுவலக அதிகாரிகள் பலரும் கேட்டுள்ளனர்.

நானும் இதைப் பற்றி பலமுறை யோசித்து பார்த்திருக்கிறேன். ஏன் நம்மால் மட்டும் மற்றவர்களை அனுசரித்துச் செல்ல முடியவில்லை என்று என்னையே கேட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த கேள்விக்கு எனக்கு விடை கிடைக்க சுமார் இருபது ஆண்டுகள் தேவைப்பட்டது. அதாவது என்னுடைய 45வது வயதில் எங்கள் வங்கியின் பயிற்சி கல்லூரியில் முதல்வராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததில் இருந்து...

என்னுடைய இந்த போக்கிற்கு என்னுடைய பிடிவாத குணமும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது என்பதை அனுபவம்தான் எனக்கு கற்றுக்கொடுத்தது. இதற்கு இளம் வயதிலேயே (முப்பது வயது) ஒரு கிளையின் மேலாளராகக் கூடிய வாய்ப்பு கிடைத்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.

அதாவது உடன் பணியாற்றுபவர்களுடன் அனுசரித்து செல்வதில் அதிக அனுபவம் இல்லாமலேயே ஒரு கிளையின் மேலாளராகிவிடுவதில் பல சிக்கல்கள் உள்ளன. கிளை மேலாளர் பதவி கிடைத்ததுமே ’என்னுடன் பணியாற்றுபவர்கள்’ என்கிற எண்ணம் போய் ’எனக்கு கீழே பணியாற்றுகிறவர்கள்’ என்கிற எண்ணம் மேலோங்கி நிற்க ஆரம்பித்துவிடுவதன் விளைவும் என்னுடைய பிடிவாத குணத்திற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். எனக்குத்தான் எல்லாம் தெரியும், நான் சொல்வதுதான் சரி என்கிற எண்ணம் நான் அறியாமலேயே என்னுள் ஏற்பட்டுவிட்டிருக்கலாம். என்னுடைய கிளையில் எனக்கு கீழே
பணியாற்றுபவர்கள் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் நான் சொல்வதைப் போலத்தான் அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற என்னுடைய குணம் மற்றவர்களை அரவணைத்துச் செல்ல இயலாவிட்டாலும் அனுசரித்தும் கூட செல்ல முடியாத ஒரு போக்கை என்னுள் வளர்த்துவிட்டிருந்தது.

இத்தகைய குணத்திற்கு இன்னொரு காரணம் எதையும் வேகமாக செய்து முடிக்கும் பழக்கமும் எனக்கு இருந்தது. என்னுடைய வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத என்னுடைய சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது என்னால் முடியாத காரியமாக இருந்திருக்கிறது. இதற்கு என்னுடைய அனுபவமின்மைதான் காரணமாக இருந்தது என்பதை அப்போது என்னால் உணர்ந்துக்கொள்ள முடியவில்லை.

இதற்கு நான் வளர்ந்த விதமும் ஒரு காரணம். நான் என்னுடைய பெற்றோர்களை விடவும் அதிக நேரம் செலவிட்டது என்னுடைய தாய் வழி தாத்தாவிடம்தான். அவர் அத்தனை கண்டிப்புக்காரர். பேசுவதிலும் எழுதுவதிலும் செயலாற்றுவதிலும் படு வேகம். பல சமயங்களில் அவர் சொல்வதை புரிந்துக்கொள்ளாமலே தலையை ஆட்டிவிட்டு பின்னால் குட்டுப்ப்ட்டதும் உண்டு. அதீத கோபத்திற்கு சொந்தக்காரர். அவருடைய நேரடி பார்வையில் நான் வளர்ந்ததும் என்னுடைய பிடிவாத குணத்திற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். பேச்சில் செயலில் வேகம் இவையும் அவர் என்க்கு விட்டுச் சென்ற குணங்கள்.

அதன் பிறகு எட்டாவது முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை நான் வளர்ந்த போர்டிங் பள்ளில். கத்தோலிக்க பாதிரியார்களால் - என்னுடைய தந்தையின்
ஒன்றுவிட்ட சகோதரர் அங்கு துணை அதிபராக இருந்தார்  - நடத்தப்பட்ட பள்ளி. எதுவும் நேரத்திற்கு செய்ய வேண்டும் என்கிற கண்டிப்பான சூழல்.
மணியடித்தால் சாப்பாடு, விளையாட்டு, படிப்பு, தூக்கம் என்ற இயந்திரகதியான ஐந்து வருட வாழ்க்கை என்னை எதை செய்தாலும் வேகமாக, குரிப்பிட்ட காலக் கெடுவுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்கிற என்னுடைய குணத்திற்கு ஒரு காரணம்.

இத்தகைய குணம் நம்மில் பலருக்கு இருக்கலாம். நம்மை சுற்றிலும் இருப்பவர்களை அனுசரித்து செல்வது என்பது அத்தனை எளிதான காரியமல்ல. அதற்கு மிக அதிக பொறுமை வேண்டும். அது நம்மில் வெகு சிலருக்குத்தான் அமைய வாய்ப்புள்ளது.

நம்மை மாதிரியான சாமான்யர்களுக்கு மட்டுமல்ல. உலக சரித்திரத்தை புரட்டிப் பார்த்தால் நாம் இதுவரை அறிந்துள்ள பல உலக தலைவர்களுக்கும் இந்த குணம் இருந்திருப்பதை காண முடிகிறது.

ஜியார்ஜ் வாஷிங்டன் துவங்கி இன்றைய ரஷ்ய தலைவர் புடின், அமெரிக்க தலைவர் டிரம்ப், வட கொரிய அதிபர், சீன அதிபர்... ஏன் நம்முடைய பிரதமர் என பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. இதில் நம்மால் மறக்க முடியாத தமிழக தலைவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள். அவருடைய அமைச்சரவையில் அவரை அனுசரித்து செல்ல முடியாதவர்களில் பலருடைய பதவிக்காலம் ஒரு சில வாரங்களிலேயே கூட முடிந்திருக்கிறது.

இத்தகைய பிடிவாத குணம் இருப்பதால்தானோ என்னவோ அவர்களால் அவர்கள் நினைத்தபடி செயலாற்ற முடிகிறது என்று கூட தோன்றுகிறது. இது நல்லதா கெட்டதா என்பது அவரவர் கண்ணோட்டத்தைச் சார்ந்தது.

ஆனால் ஓரளவுக்கு பிடிவாதமும் ஓரளவுக்கு அனுசரித்துச் செல்லும் குணமும் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

என்னுடைய வாழ்க்கையில் நடந்தவைகளையெல்லாம் இப்போது அசைபோட்டு பார்க்கும் போது அப்போது நான் சந்தித்த பிரச்சினைகளை இப்போது சந்தித்திருந்தால் நிச்சயம் அவற்றை இன்னும் அறிவுபூர்வமாக (Matured) கையாண்டிருப்பேனோ என்று தோன்றுகிறது.

நம்முடைய இளம் வயதில் நாம் அறிவுபூர்வமாக அணுகுவதை விட உணர்வுபூர்வமாக அணுகியிருப்போம். அதுவே நம்மை மற்றவர்களிடமிருந்து விலக்கி வைத்திருக்கலாம். ஆனால் காலப் போக்கில் அதாவது அனுபவங்கள் கூட கூட நம்முடைய அணுகுமுறை மாற வேண்டும். அப்படி அல்லாமல் முப்பது வயதில் எத்தனை பிடிவாதம் இருந்ததோ அதே அளவு பிடிவாதம் அறுபதுகளை கடந்தும் தொடர்ந்தால் நாம் இப்போது காணும் பல உலக தலைவர்களைப் போலத்தான் நாமும் இருப்போம்.

இன்றைய உலகில் அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் போர், அமெரிக்கா-ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான போர் பதற்றம் என இன்றைய உலகின் பல பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் இத்தகைய தலைவர்களின் பிடிவாத குணம்தான். இந்த பிடிவாத குணம்தான் மற்றவர்களை அனுசரித்து செல்ல முடியாமல் தடுக்கிறது என்று நினைக்கிறேன். அதாவது நான் உன்னை விட பலம் வாய்ந்தவன் ஆகவே நீதான் என்னை அனுசரித்து செல்ல வேண்டும் என்கிற குணம்.

இதை நம்மில் பலரும் தவிர்த்தால் உலகத்தில் பிர்ச்சினைகளே இருக்காது.

*************

14 ஆகஸ்ட் 2019

காஷ்மீர் முடிவின் பின்னணி என்ன?

சமீபத்தில் காஷ்மீர் மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த அனைத்து சிறப்பு சலுகைகளும் ரத்து செய்யப்பட்டு அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேவங்களாக பிரிக்கப்பட்டதையொட்டி நாடு முழுவதும் பலவகையான விமர்சனங்கள் எழுந்தன.

நாட்டின் பிரதான எதிர் கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் இதை முழுமூச்சுடன் எதிர்த்து வந்தாலும் அவை ஆட்சியில் இல்லாத மாநிலங்களை ஆளும் பாஜக அல்லாது ஆட்சியாளர்களும் இதை மறைமுகமாக ஆதரித்ததால்தான் இந்த மசோதா மாநிலங்கள் அவையிலும் மிக எளிதாக நிறைவேற்றப்பட்டது.

எதற்காக இந்த அவசர முடிவு என்கின்றனர் பலரும்.

ஆனால் உண்மையில் இது அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்பதை இந்த முடிவின் பின்னணியை சற்று ஆராய்ந்தால் தெரியும் என்று நான் கருதியதன் விளைவே இந்த பதிவு.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்ட குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்த சிற்றரசுகள் இருந்தனவாம். அவற்றை அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் அவருக்கு உறுதுணையாக அப்போது உள்துறையில் உயர் அதிகாரியாக இருந்த கேரளத்தைச் சார்ந்த திரு வி.பி.மேனன் ஆகியோரின் விடா முயற்சியாலும் இந்த சிற்றரசுகள் இந்தியாவுடன் ஒவ்வொன்றாக இணைக்கப்பட்டன. இவற்றுள் இவ்விருவரின் எவ்வித முயற்சிகளும் பிடிகொடுக்காமல் இருந்துவந்தவை ஹைதராபாத் மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசுகள்.

இவ்விரண்டு அரசர்களையும் தன்னுடைய புத்திக் கூர்மையாலும் நாவண்மையாலும் வழிக்கு கொண்டு வந்தவர் திரு வி.பி. மேனன் அவர்கள்தான் என்கிறது வரலாறு. பட்டேலுக்கு நூறடியில் உருவச் சிலை வைத்து போற்றும் பாஜக  அவருக்கு வலதுகரமாக இருந்து இயங்கிய விபி மேனனை முற்றிலுமாக மறந்து போனது வியாப்பாக உள்ளது.

ஜம்மு காஷ்மீர் அரசின் அப்போதைய மன்னராக இருந்த ஹிரிசிங்கிற்கு இந்தியாவுடனோ பாக்கிஸ்தானுடனோ இணைவதில் தயக்கம் இருந்தது. ஆனால் இந்தியா சுநந்திரம் அடைந்த போது காஷ்மீரை தன் வசம் எடுத்துக்கொள்ள முடியாத ஏமாற்றத்தில் இருந்த பாக்கிஸ்தான் காஷ்மீரிலுள்ள பஷ்த்தூன் இனத்தவர்களை தூண்டிவிட்டு காஷ்மீரின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதனைக் கண்ட மன்னர் இனிமேலும் தனித்து ஆட்சி நடத்த முடியாது என்று அஞ்சி இந்தியாவுடன் இணைவது என முடிவு செய்தார். ஆனால் இதில் பல நிபந்தனைகளை மன்னர் முன் வைத்ததால் அவருடைய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மனமில்லாதிருந்த நேரு அவர்கள் இணைப்பில் தீவிரம் காட்டவில்லை. இந்த இடைபட்ட காலத்தில் பஷ்த்தூன் மக்களுடைய தாக்குதலில் காஷ்மீரின் வடக்கு மற்ரும் மேற்கு பகுதிகளை பாக்கிஸ்தான் கைப்பற்றியது. இவை இப்போதும் பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டுக்குள் உள்ள காஷ்மீராக கருதப்படுகிறது.

வழிக்கு வராமல் முரண்டுபிடித்த மன்னரை சமாதானப்படுத்தி இணைப்பு ஆவணத்தில் அவருடைய கையொப்பத்தை பெற இந்திய அரசு திரு வி.பி. மேனனை அனுப்பி வைத்தது. அவருடைய தொடர் முயற்சியின் பலனாக 1947 வருடம் அக்டோபர் மாதத்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது.

ஆனால் மன்னரின் முக்கிய நிபந்தனைகளான தங்களுக்கு என்று தனி கொடி, நாடாளுமன்றம், தனி குடியுரிமை போன்ற நிபந்தனைகளை இந்திய அரசால் நிராகரிக்க முடியவில்லை. இத்துடன் வெளியுறவு, இராணுவம் மற்றும் தகவல்தொடர்பு ஆகியவற்றை தவிர மற்ற அனைத்தையும் முடிவு செய்துக்கொள்ளும் உரிமையும் ஜம்மு காஷ்மீர் அரசுக்கு அளிக்கப்பட்டது. இந்த சுதந்திரத்தை அவர்களுக்கு அளிக்க வசதியாகத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 370 வது பிரிவு சேர்க்கப்பட்டது. இதன்
படி இம்மூன்று துறைகளைத் தவிர மற்ற அனைத்து துறைகளையும் பாதிக்கும் இந்திய அரசின் எந்த சட்டட்மானாலும் அவை ஜம்மு காஷ்மீர் அரசின் ஒப்புதலுடன் மட்டுமே இயற்றப்பட வேண்டும். இல்லையெனில் இத்தகைய சட்டங்கள் எதுவும் காஷ்மீர் மக்களை கட்டுப்படுத்தாது/ மேலும் காஷ்மீரில் அப்போது நிரந்தரமாக வசித்து வந்த மக்களே அந்நாட்டின் நிரந்தர குடிமக்களாக கருதப்பட்டனர். அவர்களுக்கு மட்டுமே அந்த மாநிலத்தில் அசையா சொத்துக்களை வாங்கவோ விற்கவோ முடியும் என்ற சலுகையும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. காஷ்மீர் பெண்களை மணக்கும் வெளி மாநிலத்து கணவர்களுக்குக் கூட இந்த  உரிமை மறுக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மன்னரின் இத்தனை நிபந்தனைகளையும் விருப்பமில்லாவிட்டாலும் அப்போதைய பிரதமாரக இருந்த நேரு ஏற்றுக்கொண்டதற்குக் காரணம் காஷ்மீரை பாக்கிஸ்தானிடம் இழந்துவிக் கூடாது என்பதுதான்.

இந்த சிறப்புச் சலுகைகளை 1951ம் ஆண்டு துவக்கப்பட்ட பாரதீய ஜனசங்க கட்சி துவக்க முதலே எதிர்த்து வந்தது. இமயம் முதல் குமரிவரை இந்தியா ஒரே நாடு என்பது அக்கட்சியின் தாரக மந்திரமாக இருந்தது. ஆகவேதான் காஷ்மீர் மக்களுக்கு இதுவரை அளித்து வந்த சிறப்பு சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டபோது ஜனசங்க கட்சியின் நிறுவனர் (founder)ஷ்யாம பிரசாத் முகர்ஜியின் கனவு நனவானது என்று மறைந்த தலைவர் பெயரில் இன்றும்
இயங்கிவரும் ஆய்வு மைய இயக்குன அனிர்பன் கங்குலி கூறியதாக செய்திகளில் பார்த்தோம். பாரதிய ஜனசங்கத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சியாக பெயரளவில் மட்டும் மருவிய பாஜக தங்களுடைய நெடுங்கால கனவுத் திட்டத்தை இந்திய நாடாளுமன்றத்தில் இதற்கு தேவையான பெரும்பான்மை கிடைக்கும் காலத்திற்காகவே காத்திருந்தது. தற்போது அந்த கட்சிக்கு மாநிலங்களவையில் இதை நிறைவேற்ற போதிய பெரும்பான்மை இல்லாவிடினும் ஒடிசா., தில்லி ,ஆந்திரா, தெலுங்கான மற்றும் நம்முடைய தமிழகம் ஆகிய மாநிலங்களைச் சார்ந்த உதிரி கட்சிகளின் துணையுடன் அதை மிக எளிதாக நிறைவேற்றி சுமார் எழுபதாண்டுகால போராட்டத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டுள்ளது.

இதுதான் உண்மை.

இதற்கு இமயம் முதல் குமரி வரை இந்தியா ஒரே நாடுதான் ஆகவே இதில் எந்த மாநில மக்களுக்கும் தனி அரசாங்கம் தனி கொடி, குடியுரிமை போன்ற
சலுகைகள் தேவையற்றவை என்பது மட்டுமே இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவுக்கு பிண்ணனியாக இருக்க வாய்ப்பில்லை. காஷ்மீர் மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகளில் மிக முக்கியமாக கருதப்படுவது வெளிமாநிலத்தவர்கள் அங்கு அசையா சொத்துக்களை வாங்க முடியாது என்பதும் இந்த முடிவின் ஒரு முக்கிய காரணமாக எடுத்துரைக்கப்படுகிறது.

சமீபத்திய பண மதிப்பிழப்பு முடிவு அமலுக்கு வருவதற்கு முந்தைய ஒரு சில மாதங்களில் பாஜக வட இந்தியாவில் பல விலை மதிப்பு மிக்க அசையா
சொத்துக்களை பாஜக வாங்கி குவித்ததாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியானதை படித்திருப்பீர்கள். அது போன்றதொரு நிகழ்வுகள் அடுத்த சில
ஆண்டுகளில் காஷ்மீரில் நடக்க வாய்ப்புள்ளது. கோடிக்கணக்கில் பணத்தை சேமித்து வைத்திருக்கும் பாஜக காஷ்மீர் மாநிலத்தில் தங்கள் விருப்பப்படி அசையா சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போவது நிச்சயம். நில அளவை மற்றும் நில மாற்றம் (transfer of property) மாநில ஆளுநரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளபடியால் இவர்கள் நினைப்பதை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள முடியும். இங்கு அம்மையார் காலத்தில் அவரின் பெயரை பயன்படுத்தி ஒரு கும்பல் தமிழக சொத்துக்களை அடுமாட்டு விலைக்கு வாங்கினார்களே அதுபோல பாஜகவின் இரட்டை தலைவர்களின் பெயரை பயன்படுத்தி தற்போது ஆளுங்கட்சியினரின் ஆதரவைப் பெற்றுள்ள பல அடாவடி கார்ப்பரே நிறுவன முதலாளிகளும் காஷ்மீர் மாநிலத்தின் பெரும்பகுதியை வாங்கி குவிக்க வாய்ப்புண்டு என்றாலும் மிகையாகாது.

அதுமட்டுமல்ல அந்த மாநிலத்தில் கொட்டிக் கிடக்கும் கனிமவளங்களை இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களை ஏவிவிட்டு கொள்ளையடிப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். கீழ் காணும் வரைபடத்தை பார்த்தாலே இதன் தீவிரம் உங்களுக்கு புரியும்.



************ 

05 ஆகஸ்ட் 2019

புதிய கல்விக் கொள்கை (நிறைவுப் பகுதி)

பொது (அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்) மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்துமே இக் கொள்கை வரைவில் குறிப்பிட்டப்பட்டுள்ள அனைத்து
ஒழுங்கு முறைகளுக்கும் கட்டுபட்டே இயங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அப்படியானால் நாட்டின் மிகப் பெரிய பொது (மத்திய அரசின்  மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குவதால் இதுவும் பொது
பள்ளியாக கருதப்படுகிறது)  பள்ளியான CBSE பள்ளி மற்றும் அரசு உதவிப் பெறாத தனியார் பள்ளிகளான ICSE போன்ற பள்ளிகளும் இந்த கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் படுமா என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

இந்த CBSC பள்ளிகளில் மட்டும் எதற்காக பாடங்கள் ஆங்கிலத்தில் நடத்தப்படுகின்றன என்று சிலர் கேட்கலாம். இந்த பள்ளிகள் மத்திய அரசு
அலுவலகங்களில் பணியாற்றுபவர்களின் வாரிசுகளுக்காகவே துவக்கப்பட்ட பள்ளிகளாகும். இத்தகைய பணியாளர்கள் குறிப்பாக அதிகாரிகள் நாட்டின் எந்த பகுதிக்கும் மாற்றப்படலாம் என்பதாலும் பல மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் தாய் மொழியாக கருதப்படும் மொழிகள் கட்டாய பாடமாக இருப்பதாலும் இவர்களுடைய வாரிசுகளுக்கு படிப்பில் சிரமம் ஏதும் இல்லாமல் இருக்கவே இத்தகைய பள்ளிகள் அனைத்து மாநிலங்களிலும் துவங்கப்பட்டன.

ஆனால் பல மாநிலங்களிலும் நடத்தப்பட்டும் வரும் அரசு நிதி உதவி பெறாத பல தனியார் பள்ளிகளும் இவர்களுடைய பாடத்திட்டத்தையே பின்பற்றுவதால் இத்தகைய ஆங்கில வழிக் கல்வி நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் பரவி கிடக்கின்றன. தமிழகத்திலும் சமச்சீர்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் பல தனியார் பள்ளிகள் CBSC பாடத்திட்டத்திற்கு மாறிக்கொண்டிருக்கின்றன. ஆகவே இத்தகைய பள்ளிகள் புதிய கல்விக் கொள்கையால் பாதிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அதே சமயம் அரசிடமிருந்து நிதியுதவி பெறாத (புதிய)தனியார் பள்ளிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் அத்தகைய பள்ளிகள் அரசின் ‘ஒழுங்குமுறை சுமைகளிலிருந்து’ (Regulatory burdens) விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கொள்கை வரைவில் குரிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு என்ன பொருள்?

கொள்கை வரைவில் இதுவரை நாம் கண்ட அனைத்து ஒழுங்குமுறைகளும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும்தானா?

இவை அனைத்தும் அரசு உதவி பெறாத பள்ளிகளுக்கு மட்டும் சுமைகளாக தெரிகின்றனவா என்ற கேள்வி எழுகிறதல்லவா?

அதாவது எதிர் வரும் காலங்களில் அரசின் ஒழுங்குமுறை அனைத்தும் இனி துவங்கவிருக்கும் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தாது போலுள்ளது.

எதை நோக்கி பயணிக்க இந்த விதிவிலக்கு? இத்தகைய தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டிலுள்ள மாணவர்களை முதல் தரம்,. இரண்டாம் தரம் என்று பிரிக்கத்தானோ?

புதிதாக துவங்கப்படும் தனியார் பள்ளிகளில் மும்மொழி கொள்கை என்கிற எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் தற்போது CBSC போன்ற பள்ளிகளில்
நடைமுறையிலுள்ள ஆங்கில வழி கல்வியே தொடரும் என்பதால் அத்தகைய பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அறிவாற்றலிலும் திறனிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளீலும் பயிலும் மாணவர்களை விட சிறந்தவர்களாக திகழப்போவது நிச்சயம்.

நாட்டில் நடைபெறவிருக்கும் அனைத்து நுழைவு தேர்வுகளும் இத்தகைய அரசு உதவி பெறாத தன்னார்வ நிறுவனங்களால் நடத்தப்படும் பாடத்திட்டங்களின் அடிப்படையிலேயே நடத்தப்படப் போவதும் உறுதி,

இந்த அவலம்தானே சமீப காலமாக மத்திய அரசு நடத்தும் NEET போன்ற நுழைவுத் தேர்வுகளில் நடக்கிறது? மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் நடத்தப்பட்டு வந்த இத்தகைய தேர்வுகள் இனி பொறியியல் கல்லூரிகளுக்கும் சில வருடங்கள் கழித்து கலைக் கல்லூரிகளுக்கும் விரிவு படுத்தப்பட்டால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர் கல்வி பயிலும் வாய்ப்பையே இழந்து பள்ளிக் கல்வியுடன் நிறுத்திக்கொள்ளும் காலம் வெகு விரைவில்
வரத்தான் போகிறது!

கல்வி மேலாண்மை

தற்போது தேசிய அளவில் கல்வி மத்திய அரசின் பொதுப் பட்டியலில் இருந்தாலும் மாநில அளவில் இதை ஒழுங்குப்படுத்தி மேலாண்மை செய்யும் பொறுப்பு மாநில கல்வி இயக்குனர் அலுவலகத்திடம் இருந்து வருகிறது. ஆகவேதான் 1968ல் இருந்தே நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் மும்மொழி கொள்கை அமலில் இருந்தாலும் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் இந்தியை கட்டாய மொழிப் பாடமாக்காமல் இயங்க முடிந்தது. பள்ளிகளுக்கான கொள்கையை வகுத்தல், பள்ளிகளை மேற்பார்வை மற்றும் ஒழுங்குப் படுத்துதல் ஆகிய அனைத்தையும் இந்த அமைப்பே கவனித்து வந்தன.

ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பவிருக்கும் புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்தால் தேசிய அளவில் பள்ளிக் கல்வி மட்டுமல்லாமல்
உயர்கல்விக்கும் சேர்த்தே அளவிலா அதிகாரங்களைக் கொண்டஒரு ஆணையம் (தேசிய கல்வி ஆணையம் - ராஷ்ட்ரிய சிக்‌ஷா ஆயோக்!) அமைக்கப்பட்டு நாடு முழுமைக்கும் ஒரே ஆதார், ரேஷன் அட்டை என்பது போல் ஒரே கல்வி முறை அமலுக்கு வரும். இந்த தேசிய ஆணையம் இடும் அனைத்துக் கட்டளைகளையும் ஒவ்வொரு மாநில அளவிலும் அமைக்கப்படும் இவ்வாணையத்தின் அதிகாரமற்ற கிளைகளான மாநில கல்வி ஆணையம் செயல்படுத்த நிர்பந்திக்கப் படும்.

இந்த ஆணையத்தின் தலைவராக நம் பாரத பிரதமர் அவ்ர்கள் இருப்பார்.

இந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் பேர்பெற்ற கல்வியாளர்கள், மாநில முதலமைச்சர்கள் அல்லது கல்வி அமைச்சர்கள் ஆகியோர் இடம் பெற்றிருப்பர். இந்த ஆணையம் நாட்டின் கல்வி சம்பந்தமான அனைத்திற்கும் முடிவு எடுக்கக் கூடிய அதிகாரம் பெற்றிருக்கும்.

இந்தியாவின் அனைத்து இயக்கங்களையும் ஒவ்வொன்றாக தன் நேரடி கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்திருக்கும் மத்திய பாஜக அரசு தற்போது கல்வியையும் தன் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

தற்போதும் கல்வி மத்திய அரசின் பட்டியலில்தான் இருந்து வருகிறது என்றாலும் மாநில அளவில் அந்தந்த மாநில கல்வி இயக்குனர்களுக்கு தங்களுடைய மாநில அளவில் தேவையான மாற்றங்களை செய்துக்கொள்ளக் கூடிய தன்னாட்சி அதிகாரம் இருந்தது.

அது இப்போது முழுமையாக பறிக்கப்பட்டு மத்திய கல்வி ஆணையத்தின் ஆணைகளை செயல்படுத்தும்  ஒரு கிளை ஆணையமாக மாற்றப்பட்டுள்ளது.

இப்படி பல குழப்பங்களையும் குறைபாடுகளையும் நடைமுறைக்கு சாத்தியமற்ற மாற்றங்களையும் உள்ளடக்கியுள்ள கல்வித் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு மத்திய அரசு ஏன் இத்தனை அவசரம் காட்டுகிறது என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

மத்தியிலுள்ள இன்றைய ஆட்சியாளர்களுக்கு நாடாளுமன்றத்தில் உள்ள அசுர பலத்தின் உதவியுடன் இந்த வரைவு கொள்கை எதிர்கட்சிகளின் அனைத்து எதிர்ப்ப்புகளையும் மீறி சட்டமாக்கப்படுவது என்னவோ நிச்சயம்.

அப்படியொரு நிலை ஏற்படுமானால் தமிழக மாணவர்களுக்கு குறிப்பாக கிராமப் புற ஏழை மாணவர்களுக்கு எதிர்வரும் காலம் ஒரு இருண்ட காலமாகத்தான் அமையப் போகிறது.



(நிறைவு)

03 ஆகஸ்ட் 2019

புதிய கல்விக் கொள்கை - 6

2008-2009 கணக்கெடுப்பின் படி தமிழகத்தில்

Number of Districts: 30
Number of Educational Districts: 65
Number of Blocks: 385

Number of Schools

Primary School (1-5 only) 23395
Middle School (1-8) 7597
High School (6-10) 2176
Higher Secondary School (6-12) 2100
Grand Total 35268

அரசு பள்ளிகள் உள்ளன.

இவற்றுள் கிராமப் புற மற்றும் நகர்புறங்களில்

Primary and Middle Schools - 32648
Secondary Schools - 3997 உள்ளன

ஒட்டு மொத்த இந்தியாவை எடுத்துக்கொண்டால் 2016-17ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 28 விழுக்காடு அரசு துவக்க (Primary) பள்ளிகளிலும் 15 விழுக்காடு நடுநிலைப் பள்ளிகளிலும் (Upper Primary) 30 மாணவர்களுக்கும் குறைவாகவே உள்ளனராம்! மேலும் சுமார் 1.20 லட்சம் பள்ளிகள் ஒற்றை ஆசிரியர் பள்ளிகளாம்! இவற்றுள் சுமார் 95,000 பள்ளிகள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகள் வரை மட்டுமே உள்ள பள்ளிகள்!

இவ்வாறு தனித்து இயங்கும் சிறு, சிறு பள்ளிகளை நிர்வகிப்பதிலும் ஆசிரியர் நியமனங்களிலும் மிக அதிகம் சிரமங்கள் உள்ளது. ஆகவே இத்தகைய பள்ளிகள் அனைத்தும் அதாவது இருபது மாணவர்களுக்கும் குறைவாக பள்ளிகளை அவை எத்தகைய பள்ளிகளாக இருப்பினும் அருகாமையிலுள்ள பள்ளிகளுடன் இணைக்கப்பட வேண்டுமாம்!

தமிழகத்தைப் பொறுத்தவரை சமீபத்திய கணக்கெடுப்பின்படி 20 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள துவக்கப் பள்ளிகள் சுமார் 1000.

மீதமுள்ள பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில் நூறு மாணவர்களுக்கும் குறைவாக உள்ளனராம்.

புதிய வரைவு கல்விக் கொள்கை 20 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை, அவை எந்த வகையைச் சார்ந்த பள்ளியாக இருப்பினும், 2020 கல்வியாண்டுக்குள் அடுத்துள்ள  பள்ளிகளுடன் இணைத்துவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழக கல்வித் துறையோ ஐம்பது மாணவர்களுக்கும் குறைவாகவுள்ள கிராமப்புற துவக்கப்பள்ளிகளை மூடுவதற்கு அல்லது அடுத்துள்ள பள்ளிகளுடன் இணைப்பதற்கு உத்தரவு பிறப்பித்துவிட்டதாக மார்க்சிஸ்ட் கட்சி சமீபத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

தற்போதுள்ள அரசு பள்ளிகள் சிலவற்றில் முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையிலும் இன்னும் சில பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையிலும் இருப்பதை மேல் காணும் புள்ளி விவரங்களிலிருந்து  அறிந்துக்கொள்ள முடிகிறது. இந்த பள்ளிகள் பெரும்பாலும் கிராமப்புற/சிறு நகர்புறங்களில் இயங்கி வருகின்றன. இவை எவ்வாறு பிரிக்கப்படும். அப்படிப்பட்ட சூழலில் எத்தனை பள்ளிகள் மற்ற பள்ளிகளுடன் இணைக்கப்படும் அல்லது மூடப்படும் என்பது தெரியவில்லை.

பெரு நகரங்களான சென்னை, கோவை, மதுரை போன்றவற்றிலும் இத்தகைய குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது ஒரு பள்ளியிலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தூரத்தில் வசிக்கும் மாணவர்கள் மட்டுமே அந்த பள்ளியில் சேர்க்கப்படுவார்கள் என்ற எழுதப்படா விதி கடைபிடிக்கப்படுகின்றது. புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்தால் தற்போது மழலையர் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை வகுப்புகளைக் கொண்டுள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கதி என்னவாகும்?

ஆக, புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் தற்போது இயங்கிவரும் பள்ளிகள் பிரிக்கப்பட்டால் அதிகம் பாதிக்கப்படப் போவது கிராம மற்றும் சிறு நகரங்களில் படிக்கும் மாணவர்கள்தான்

அகில இந்திய அளவில் சுமார் 1.25 இலட்சம் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மூடப்படவுள்ளது என்பதை நினைத்துப் பார்க்கவே மலைப்பாக உள்ளது!

இன்னும் சிலவற்றைப் பற்றி நாளை (திங்களனறு) விவாதிக்கலாம்






02 ஆகஸ்ட் 2019

புதிய கல்விக் கொள்கை - 5

நேற்றைய பதிவில் கடந்த சுமார் நாற்பதாண்டு காலமாக நடைமுறையில் இருந்து வரும் 10+2 என்ற பள்ளிக் கல்வி  முறை புதிய கல்வி திட்டத்தின் படி 5+3+3+4 ஆக அதிகரிக்கப்படவுள்ளது என்று குறிப்பிட்டிருந்தேன்.

இதில் அடிப்படை ஆண்டுகள் (foundation years) எனப்படும் முதல் ஐந்து ஆண்டுகளில் முதல் மூன்றாண்டுகள் மழலையர் பள்ளி பருவத்தைச் சார்ந்தவை.

தற்போது எந்த அரசு பள்ளிகளிலும் இந்த வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. பெரும்பாலான அரசு பள்ளிகள் ஐந்து வயது பூர்த்தியான குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்கும் முறையை பின்பற்றி வருகின்றன.

குறிப்பாக கிராமப்புறங்களில் அங்கீகாரமில்லாத சில தனியார் பள்ளிகள் மட்டுமே இத்தகைய வகுப்புகளை நடத்தி வருகின்றன. இத்தகைய மழலையர் வகுப்புகள் அரசு துவக்கப்பள்ளிகளுடன் இணைக்கப்பட்டால் தற்போது இயங்கிவரும் இதகைய பள்ளிகளின் நிலை என்னவாகும்? இந்த மூன்று வகுப்புகளையும் தற்போதுள்ள அரசு துவக்கப்பள்ளிகளுடன் இணைக்க உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது அத்தனை எளிதான காரியமா?

மேலும் புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிட்டுள்ள  இந்த நான்கு பிரிவுகளுக்கென தனித்தனி பள்ளிகள் அமைக்கப்படுமா என்பதும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

அப்படி அமைக்கப்படும் பட்சத்தில் ஒரு பள்ளியிலிருந்து அடுத்த பள்ளிக்கு செல்வதற்கு மீண்டும் மீண்டும் பெற்றோர்கள் அலைய வேண்டிய சூழல் ஏற்பட வாய்ப்புண்டு. தற்போது பெரும்பாலான நகர்ப்புற பள்ளிகளில் மழலையர் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை படித்து முடிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆகவே அத்தகைய பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு எவ்வித தொல்லையுமில்லாமல் படித்து முடித்துவிட முடிகிறது.

பொதுத் தேர்வுகள்

தற்போது மேல்நிலை பள்ளி முடிவில் அதாவது 10வது வகுப்புக்கும் அதன் பிறகு 11 மற்றும் 12வது வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவை நான்கு பள்ளிகளாக பிரிக்கப்படுவதால்  மூன்றாவது, ஐந்தாவது மற்றும் எட்டாவது வகுப்புகளுக்கும் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் ப்ரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது சாத்தியமா? இந்த வயதுகளில் குழந்தைகளை இத்தகைய மன அழுத்தத்திற்கு உட்படுத்த வேண்டுமா?

மேலும் நான்காவது நிலையான மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான நான்கு ஆண்டுகள் எட்டு செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டு நான்காம் ஆண்டு இறுதியில் ஒரே சான்றிதழ் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இப்போது நடைமுறையிலுள்ள பத்தாவது மற்றும் பன்னிரண்டாவது வகுப்புகளில் நடத்தப்படும் பொதுத்தேர்வும் தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது?

அப்படியானால் இந்த நான்காண்டுகளில் நடத்தப்படும் செமஸ்டர் தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தப்படுமா? இவ்வாறு ஒவ்வொரு அரையாண்டிலும் செமஸ்டர் எனப்படும் பருவ தேர்வுகள் நடத்தப்படும்போது மேலும் இரண்டு பொதுத்தேர்வுகள் எதற்காக?

அடுத்த முக்கியமான பிரச்சினை பள்ளிகள் ஒருங்கிணைப்பு.

இதைப் பற்றி நாளை விவாதிக்கலாம்.







01 ஆகஸ்ட் 2019

புதிய கல்விக் கொள்கை - 4

நேற்றைய பதிவில் மும்மொழிப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு காராணமாக கொள்கை வரைவில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பற்றி எழுதியிருந்தேன்.

ஆனால் உண்மையில் அதுவல்ல காரணம் .

புதிய கொள்கை வரைவு அறிக்கையின் 82ம் பக்கத்தில் (பத்தி 4.5.4) குறிப்பிடப்பட்டுள்ள வாக்கியங்களை அப்படியே மொழிபெயர்த்து தருகிறேன்.

“ நாடு சுதந்திரம் பெற்ற காலம் முதலே ஆங்கில மொழியில் மட்டுமே புலமை வாய்ந்த (15 விழுக்காடு உள்ள) ‘மேல்தட்டு மக்கள்’ 55 விழுக்காடுக்கும் அதிகமாகவுள்ள ஹிந்தி பேசும் மக்களை தங்கள் ஆளுமைக்கு உட்படுத்தி வைத்துள்ளனர். இதை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு ஒரு புதிய கல்விக் கொள்கை தேவைப்படுகிறது .”

இதுதான் இந்த புதிய கொள்கையின் உண்மையான காரணம்.

அதாவது, இதுவரை ஒடுக்கப்பட்டிருந்த ஹிந்தி பேசும் பெரும்பான்மை இந்தியர்களின் வாழ்வில் ஒரு புதிய ஒளி ஏற்றுவதுதான் இந்த கல்விக் கொள்கையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் மும்மொழிப் பாடத் திட்டத்தின் மூல நோக்கம் என்றாலும் மிகையாகாது!

அதே சமயம் கொள்கை வரைவில் எந்த இடத்திலும் மூன்றாவது மொழியாக இந்தியை மட்டுமே மாணவர்கள் தெரிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப் படவில்லை என்பதும் உண்மை. அதை தீர்மானிக்கும் உரிமையை மாணவர்களுக்கே விட்டுக்கொடுத்துள்ளது.

சரி, மாணவர்களின் விருப்பத்தை யார் முடிவு செய்வார்கள் என்று பார்த்தால் அங்குதான் சிக்கலே.

புதிய கல்விக் கொள்கையின் படி பள்ளிப் பருவ காலம் தற்போது நடைமுறையிலுள்ள 10+2 என்ற முறையிலிருந்து 5+3+3+4 ஆக திருத்தியமைக்கப்பட வுள்ளது.

இது

1. ஐந்து வருட அடித்தள நிலை (Foundation) - 3 வயதிலிருந்து 8 வரை - தற்போதைய மழலை வகுப்புகள், 1 & 2 KG, 1,2 வகுப்புகள்
2. மூன்று வருட ஆயத்த நிலை (Preparatory) 8 வயது முதல் 11 வயது வரை -
தற்போதைய 3 - 5 வகுப்புகள்
3. மூன்று வருட நடு நிலை = 11லிருந்து 13 வயது வரை - 6,7,8 வகுப்புகள்
4. நான்கு வருட மேல்நிலை கல்வி (High)- 14 முதல் 18 வயதுவரை - 9,10,11,12 வகுப்புகள்.

இவற்றுள் அடிப்படைக் கல்வி நிலையிலேயே அதாவது அடித்தள நிலையிலிருந்தே மும்மொழி கல்வி அறிமுகப்படுத்தப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் மூன்று வயதிலிருந்து எட்டு வயது வரையிலும் குழந்தைகளுக்கு புதிய மொழிகளைக் கற்றுக்கொள்ளும் திறன் அதிகமாக இருக்கும் என்பதால் அவர்கள் எந்த மொழியையும் எளிதில் கற்றுக்கொள்வார்கள் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது (பக்கம் 79).

இந்த வயதில் மூன்றாவது மொழிப் பாடமாக தெரிவு செய்யும் திறன் நிச்சயம் குழந்தைகளிடம் இருக்கப் போவதில்லை.

ஆகவே இதை தீர்மானிக்கப் போவது 1. பெற்றோர்கள் அல்லது 2. பள்ளி நிர்வாகம்.

ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் எந்த மொழியை அதிக மாணவர்கள் தெரிவு செய்கிறார்களோ அதைத்தான் மீதமுள்ள மாணவர்களும் தெரிவு செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார்கள்.  ஏனெனில் ஒரு வகுப்புக்கு நான்கைந்து மொழிப்பாட ஆசிரியர்களை எந்த பள்ளி நிர்வாகத்தாலும் நியமிக்க முடியாது.

மேலும் மூன்றாவதாக இந்தியாவின் 8வது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த மொழியை வேண்டுமானாலும் மாணவர்கள் தெரிவு செய்துக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் எந்த மொழியை அதிக மக்கள் பேசுகிறார்களோ அல்லது எந்த மொழியை படித்தால் நம் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்குமோ அந்த மொழியைத்தான் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகமும் தெரிவு செய்வார்கள்.

அப்படிப் பார்த்தால் இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களில் பேசப்படும் மொழி இந்தி ஒன்றுதான். ஆகவே பெற்றோர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியை தெரிவு செய்யும் கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்படுவார்கள் என்பது இந்த கொள்கையை தயாரித்தவர்களுக்கும் தெரியும் இப்போது மத்தியில் ஆட்சியிலுள்ளவர்களுக்கும் தெரியும்.

ஆகவே தான் இந்த மும்மொழிக் கல்வி திட்டமே எங்களுக்கு வேண்டாம் என்று குரலெழுப்ப துவங்கிய தமிழக எதிர் கட்சியாளர்களுடன் இணைந்து மக்களும் போராட்டத்தில் இறங்க வேண்டும் என்கிறேன்.

இது என்னை பாதிக்கப் போவதில்லை என்று ஒதுங்கியிராமல் தமிழக மக்கள் அனைவருமே விழித்தெழுந்து போராட வேண்டிய தருணம்.

நாளை இந்த கொள்கையால் கிராமப் புற மாணவர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட் போகிறார்கள் என்பதை விவாதிக்கலாம்.