22 டிசம்பர் 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 41

நான் சிறிது நேரம் அவரையே பார்த்தேன். இவருடைய ஆணவ பேச்சிற்கு எப்படி பதிலடி கொடுக்கலாம் என்று யோசித்தேன்.

அவர் என்னை விட நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் சீனியர், வயசிலும் அனுபவத்திலும், என்பதை மறுக்க முடியாதுதான். ஆனாலும் அவர் பேசிய தோரணை என்னை வெறுப்பேற்றியது.

நான் அக்கிளையில் கொடுத்த கடன்களைப் பெற்ற எந்த ஒரு வாடிக்கையாளரும் அதை திருப்பித்தராமல் இருக்கவில்லை. அதாவது, முதலமைச்சரை திறப்புவிழாவிற்கு அழைத்ததன் நிமித்தம் வழங்கிய கடன்களைத் தவிர. அதைப் பற்றி கடந்த முறை என் கிளையில் ஆய்வு நடத்திய என் வட்டார மேலாளரே தன் அறிக்கையில் பெரிதாக ஒன்றும் கூறாமல் விட்டுவிட்டார்.

ஆனால் இவரோ என்னிடமிருந்து கடன் பெற்ற எல்லா வாடிக்கையாளர்களையுமே சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதுபோல் பட்டது. இவருக்கு வேண்டுமானால் வாடிக்கையாளர்களுடைய வர்த்தக தளங்களைச் சென்று பார்க்கலாமே. அதை விட்டு விட்டு அவர்களையெல்லாம் இவரை வந்து பார்க்க சொல்வது ஒரு அகங்ககார செயலாகவே பட்டது எனக்கு. எந்த ஒரு வாடிக்கையாளரையும், அவர் எத்தனை சிறியவராக இருந்தாலும், சரியான காரணமில்லாமல் வங்கிக்கு வரவழைத்து தொல்லை செய்யக்கூடாது என்பது நான் கடைப்பிடித்து வந்த நியதி.

ஆகவேதான் அவருடைய இந்த விநோத விருப்பத்திற்கு பதிலொன்றும் கூறாமல் அவரையே பார்த்தேன்.

‘என்ன ஜோசப்? பதிலையே காணோம். அவங்கள இங்க வரச்சொன்னா நான் எங்கே ஏதாவது கேக்க கூடாத கேள்வியெல்லாம் கேட்டு உங்க குட்டு வெளிவந்துருமோன்னு பயப்படறீங்களா? சொல்லுங்க.’

எத்தனை அநாகரீகமான, பொறுப்பற்ற பேச்சு? கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அடக்க முயற்சித்து தோற்றுப் போனேன். ‘சார், இந்தமாதிரியான பேச்சையெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கணும்னு எனக்கு தலையெழுத்தில்லை. நீங்க கேட்டா மாதிரி எனக்கு செய்ய இஷ்டமில்லை. என்னுடைய இந்த செயலுக்கு உங்க ரிலீவிங் மேனேஜர் ரிப்போர்ட்ல என்னைப் பற்றி ஏதாவது எழுதணும்னு உங்களுக்கு தோனிச்சின்னா தாராளமா எழுதிக்குங்க. தயவுசெய்து இந்த மாதிரி பேசறத நிறுத்திட்டு சேஃப் ரூம்லருக்கற, தங்க நகைகள், சொத்து மற்றும் பங்கு பத்திரங்கள் மாதிரியானவற்றை உங்களுக்கு சரிபார்க்கணும்னா நான் இன்னைக்கும் நாளைக்கும் இருப்பேன். அந்த நேரத்துல என் முன்னாலயே நீங்க சரிபார்த்துக்கணும். இல்லன்னா நான் பாட்டுக்கு இறங்கி போயிகிட்டே இருப்பேன். என்னை ரிலீவ் பண்றதும் பண்ணாததும் உங்க இஷ்டம்.’

என்னுடைய அசாத்திய கோபத்தை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவருடைய முகமே காட்டிக்கொடுத்தது. என்னுடைய குரல் அறைக்கு வெளியே கேட்டிருக்க வேண்டும். ஹாலில் இருந்த சகல தலைகளும் அறையை நோக்கி திரும்பின. என்னுடைய உதவி மேலாளர் இருக்கையிலிருந்து எழுந்து நின்று எங்கள் இருவரையும் பார்த்தவாறே அறையை நோக்கி வந்தார். நான் வரவேண்டாம் என்பதுபோல் சைகை செய்யவே அவர் திரும்பி சென்று இருக்கையில் அமர்ந்து எங்களையே பார்த்தார். நான் என் பார்வையைத் திருப்பி என் முன் அமர்ந்திருந்தவரை பார்த்தேன்.

சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் இருந்த அவர், ‘ஓகே. இஃப் யூ டோன்ட் வான்ட் டு டூ வாட் ஐ வான்டட் தட்ஸ் ஃபைன் வித் மி. ஆனா பின்னால வருத்தப்படாதீங்க. அவ்வளவுதான்.’ என்றவாறு எழுந்து நின்றார். ‘வாங்க சேஃப் ரூம்லருக்கற செக்யூரிட்டீசைப் பாக்கலாம்.'

நான் இருக்கையிலிருந்து எழுந்திருக்காமல், ‘நாம போக வேண்டாம் சார். உதவி மேலாளர்கிட்ட சொன்னா போறும். அவரே கொஞ்சம் கொஞ்சமா நம்ம டேபிளுக்கு கொண்டு வருவார்.’ என்றேன்.

சிறிது நேரம் என்ன பதில் சொல்வது என்று யோசித்தவர் மீண்டும் இருக்கையில் அமர்ந்து அறையையே பார்த்துக்கொண்டிருந்த உதவி மேலாளரை பார்த்து சைகை செய்ய அவரும் உள்ளே வந்து மிகவும் பவ்யமாய் நின்றார். அவர் என்னைப் பார்ப்பதை முற்றிலும் தவிர்த்ததை நான் கண்டுகொள்ளவில்லை.

அன்றைய தியதியில் நான் கொடுத்து, நிலுவையிலிருந்த தங்க நகை கடன்கள் சுமார் ஆயிரத்துக்கு மேலிருந்தன. அதற்கு ஈடாக வைக்கப்பட்டிருந்த நகைகளையெல்லாம் பரிசோதிப்பதென்பது நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம். அதேபோல்தான் சொத்து பத்திரங்களும் மற்றவையும்.

ஒரு கிளையிலிருந்து மாற்றலாகி போகும் மேலாளருக்கும் புதிதாய் பொறுப்பேற்க வந்த மேலாளருக்கும் இடையில் பரஸ்பரம் நம்பிக்கை வேண்டும் என்பதுதான் அடிப்படை நியதி. வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த எல்லா பொருட்களையும் சரிபார்த்துவிட்டுத்தான் என்னால் வங்கிக்கு பொறுப்பேற்கமுடியும் என புது மேலாளர் வாதிட ஆரம்பித்தாலோ அல்லது மாற்றலாகிப் போகும் மேலாளர் தான் விடுவிக்கப்படுவதற்கு முன்பு தன் முன்னாலேயே இவை எல்லாவற்றையும் பரிசோதித்து எந்த பிரச்சினையுமில்லை என்ற அறிக்கை தரப்படவேண்டும் என்று வாதிட்டாலோ பிரச்சினைக்கு முடிவே இராது.

அதுவுமல்லாமல் ஒரு கிளையின் வர்த்தகத்தைப் பொறுத்தே பொறுப்பேற்க கால அவகாசம் நிர்ணயிக்கப்படும். அதற்குள்ளாகவே பொறுப்பேற்க வந்தவர் தன்னால் இயன்றவரை இவற்றையெல்லாம் பரிசோதித்து தன்னை திருப்திப் படுத்திக்கொள்ள வேண்டும். அதே போல மாற்றலாகிப் போகிறவர் பொறுப்பேற்க வந்தவரை விசுவசித்து பொறுப்பை ஒப்படைத்துச் செல்லவேண்டும்.

இதில்தான் பரஸ்பர நம்பிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

பொறுப்பேற்க வந்த முதல் நாள்வரை அவரைப் பற்றிய என்னுடைய அபிப்பிராயம் நன்றாய்தானிருந்தது. ஆனால் இன்று அவர் நடந்துக்கொண்ட விதம் அவர்மேல் நான் வைத்திருந்த நம்பிக்கையை தகர்க்கும் விதமாக அமையவே எனக்கும் என்னுடைய அணுகுமுறையை மாற்றிக்கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

மேலும், எனக்கு அதுதான் முதல் கிளை. அதுவரை நான் எந்த கிளையின் பொறுப்பையும் புதிதாய் வந்த மேலாளருக்கு ஒப்படைத்து பழக்கம் இல்லை. ஆனால் இவர் அப்படியல்ல. ஏற்கனவே இரண்டு கிளைகளில் பணியாற்றி மாற்றலானவர்.

ஆகவே அவர் அடகு வைக்கப்பட்ட ஒவ்வொரு நகைகளையும் கல்லில் உரைத்துப் பார்த்து பரிசோதிக்க ஆரம்பித்ததும் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தேன். அவர் என்னை முற்றிலும் பொருட்படுத்தாமல் உதவி மேலாளர் உதவியுடன் தன்னுடைய பரிசோதனையை தொடர்ந்து செய்ய ஆரம்பித்தார். இந்த வேகத்தில் சென்றால் கிளையின் முழு பொறுப்பையும் ஏற்றெடுக்க நிச்சயம் பத்து நாளாவது ஆகும் என்று நினைத்தேன்.

இருப்பினும் நான் ஏதாவது சொல்லப்போக மீண்டும் பிரச்சினை வெடிக்குமோ அன்ற அச்சத்தில் வாளாவிருந்தேன்.

அவர் ஒவ்வொரு கணக்கையும் சரிபார்த்து முடித்தவுடன் தன்னுடைய கருத்துக்களை ஒரு குறிப்பேட்டில் குறித்துக்கொள்ள ஆரம்பித்தார். நான் அவரிடம், ‘சார், நீங்கள் குறிப்பெடுக்கின்ற குறிப்புகளின் நகல் எனக்கு வேண்டும். ஆகவே ஒரு கார்பன் பேப்பரை உபயோகித்து குறிப்பெடுத்தால் உதவியாயிருக்கும்.’ என்றேன்.

அவர் நான் கூறியதைக் கேட்டும் கேட்காததுபோல் தன் வேலையைத் தொடரவே எனக்கு எரிச்சல் வந்தது. உடனே எழுந்து நின்றேன். ‘சார், என்னுடைய வேண்டுகோளை நீங்கள் அலட்சியம் செய்யும் பட்சத்தில் நான் இங்கே இருப்பதில் அர்த்தமில்லை. நீங்கள் இருவருமே பரிசோதித்து முடித்து எனக்கு தெரிவித்தால் போதும். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் வருவேன். நீங்கள் உங்களுடைய அறிக்கையை தந்தால் நல்லது. இல்லையென்றால் நான் நம் H.R.ல் கூறிவிட்டு சென்றுவிடுவேன். ஆனால் ஒன்று, நான் இங்கிருந்து இறங்கி சென்றபிறகு நீங்கள் அறிக்கையில் வில்லங்கமாக எழுதும் ஒவ்வொரு குறிப்பையும் நான் எதிர்ப்பேன்.’ என்று கூறிவிட்டு அவருடைய பதிலை எதிர்பாராமால் கதவைத் திறந்துகொண்டு வெளியேறினேன்.

என்னுடைய இந்த நடவடிக்கையை அவர் எதிர்பார்க்கவில்லை. நான் படியிறங்கி என்னுடைய இரு சக்கர வாகனத்தை அடைவதற்குள் என் பின்னாலேயே ஓடி வந்தார். ‘ஜோசப் நில்லுங்க. டோன்ட் கெட் எக்சைட்டட். வி வில் டிஸ்கஸ் அபவுட் திஸ். ப்ளீஸ் கம் பேக்.’ என்றார்.

வங்கி கட்டிடத்தின் கீழ் தளத்திலிருந்த கடைகளின் உரிமையாளர்கள் வெளியே வந்து எங்கள் இருவரையும் பார்ப்பதைக் கண்ட நான் இதை விவகாரமாக ஆக்க விரும்பவில்லை. மறுபேச்சு பேசாமல் அவருடன் திரும்பி சென்றேன்.

நாங்கள் இருவரும் அறைய அடைவதற்கு முன்னரே என்னுடைய உதவி மேலாளர் குறிப்பேட்டில் கார்பனை வைத்து இது வரை குறிப்பெடுத்ததை மீண்டும் நகல் எடுக்க கண்டேன். ‘படவா, அப்படி வா வழிக்கு.’ என்று மனதில் நினைத்துக்கொண்டு இருக்கையில் அமர்ந்து அவர்கள் செய்வதை பார்த்துக்கொண்டிருந்தேன்.

நகல் எடுக்க ஆரம்பித்ததும் அவருடைய குறிப்பெடுக்கும் வேகமும் வெகுவாய் குறைந்தது. அதுமட்டுமல்ல, மொத்தமிருந்த ஆயிரம் கணக்குகளையும் ஒவ்வொன்றாக பரிசோதிப்பதை நிறுத்திவிட்டு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கடன் தொகை கொண்ட கணக்குகளில் ஈடாக வைக்கப்பட்டிருந்த நகைகளை மட்டும் பரிசோதிக்க ஆரம்பித்தார். அத்தகைய கணக்குகள் அதிகபட்சம் இருநூறு மட்டுமே இருந்ததால் அவருடைய பரிசோதனை அன்றிரவு சுமார் ஒன்பது மணிக்கு முடிந்தது.

எல்லா கணக்குகளையும் பரிசோதித்து முடிந்த பிறகும் ஒரு குற்றத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற ஏமாற்றம் அவர் முகத்தில் நன்றாகவே தெரிந்தது.

அதுவரை பரிசோதித்த பொருட்களையெல்லாம் சேஃப் ரூமில் வைத்துவிட்டு கிளையை விட்டு வெளியேறும்போது இரவு மணி பத்து.

‘மிஸ்டர் ஜோசப். நான் காலைல சொன்னதப்பத்தி பெரிசா ஒர்றி பண்ணாதீங்க. உங்களப்பத்தி எனக்கு H.O.ல கிடைச்ச தகவல் அப்படி இருந்திச்சி. அதனாலதான் டீடெய்லா செக் பண்ணனும்னு தோணிச்சி. உங்கள மாட்டி விடணும்னு இல்ல. நவ் ஐ ஆம் நாட் வொர்றீட் எனிமோர். நாளைக்கே உங்கள் நான் ரிலீவ் பண்ணிடறேன். மத்தத நான் அப்புறமா பார்த்துக்கறேன்.’ என்றவரை சந்தேகக் கண்ணோடு பார்த்தேன்.

தொடரும்

13 கருத்துகள்:

  1. இதைத்தான் calling the bluff என்று கூறுவார்கள். அதை நீங்கள் நன்றாகவே செய்தீர்கள். இந்த மேலாளர்தானே உங்கள் உதவி மேலாளருக்கு ஆப்பு வைத்து, பிறகு வேறு விஷயத்தில் தானே சிக்கிக் கொண்டது?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  2. வாங்க ராஜ், நன்றி.

    நீங்க சொல்றது ரொம்ப சரி ராஜ்.

    நாம ஓடிக்கிட்டே இருக்கறவரைக்கும் நம்மள துரத்துற நாய் நாம திரும்பி பார்த்தா நின்னுட்டு நாம எதிர்கொண்டா திரும்பி ஓடும்னும்பாங்க. எவ்வளவு சரியான வார்த்தை.

    பதிலளிநீக்கு
  3. வாங்க டோண்டு சார், நன்றி.

    இந்த மேலாளர்தானே உங்கள் உதவி மேலாளருக்கு ஆப்பு வைத்து, பிறகு வேறு விஷயத்தில் தானே சிக்கிக் கொண்டது?//


    கரெக்ட் சார். அவரேதான்.

    பதிலளிநீக்கு
  4. வாங்க புதுவை, நன்றி.

    You are very correct. Unless both the Managers have confidence in each other the process can't be completed in time.

    That is what I experienced with him.

    பதிலளிநீக்கு
  5. சார் , நான் என்ன புதுசா சொல்ல போறேன்..அருமை...எங்க பிராஞ்சுல
    எல்லாம் (சின்ன பிராஞ்சு) எல்லாம் நகை செக்யூரிட்டி செக் பண்ணிதான் புது ஆள் சார்ஜ் எடுத்துக்குவாரு...

    அந்த கார்பன் டெக்னிக் சூப்பர்....

    ஆனா ஒரு சந்தேகம் நம்ம சம்பத் எங்க சார் போனாரு?

    பதிலளிநீக்கு
  6. வாங்க முத்து நன்றி..

    சம்பத் ஒரு நாள் பின்னூட்டத்துல என்னை 'என்ன சார் மிஞ்சிப்போனா டி.ஜி.எம் ஆயிருப்பீங்க.. ஆனா இப்பவும் நீங்கதான் சார் உங்க பேங்க்ல கிங்கு'ன்னு எழுதினார். நீங்களும் படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன். அதுக்கு நான் இந்த மாதிரி விஷயங்கள எல்லாம் பின்னூட்டத்துல எழுதாதீங்க சம்பத்னு எழுதினேன். அது அவர ரொம்பவும் ஹர்ட் பண்ணிருச்சீன்னு நினைக்கிறேன். எதுக்கு வம்புன்னு படிக்கறதோட இப்பல்லாம் நிறுத்திக்கறார். நானும் அவருடைய உணர்வுகள மதிச்சி விட்டுட்டேன். நாள்பட இருக்கற நட்பு இந்த மாதிரி விஷயத்தால் பாழாயிரக்கூடாதே.. அதுல நான் மிகவும் குறியாயிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. பிரச்னைகளையும் மனிதர்களையும் நீங்கள் சமாளிக்கும் விதம் அருமை.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சிமிகு கிருஸ்துமஸ் மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. ஒரு கணமும் தயங்காம பிரச்சனைகளை 'டீல்' பண்ணறீங்க பாருங்க அது க்ரேட்.

    சோதனை முடிஞ்சதா இன்னும் தொடருதா?

    பதிலளிநீக்கு
  9. வாங்க மணியன், நன்றி.

    உங்களுக்கும் என்னுடைய கிறீஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

    பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கையில் சுவாரஸ்யமே இருக்காதே.

    பதிலளிநீக்கு
  10. வாங்க துளசி, நன்றி,

    பிரச்சினைகளை எதிர்கொண்டு சமாளிக்கும்போது கிடைக்கும் ஒரு மனவு நிறைவு இருக்கிறதே. அதுவும் கிரேட்தான்.

    இப்பொழுது நான் உள்ள பதவியில் அதெல்லாம் இல்லையே என்று ஏங்குகிறேன்.:-(

    பதிலளிநீக்கு
  11. உளங்கனிந்த கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. வாங்க சதீஷ், நன்றி.

    சுவாரஸ்யமான மனிதர்கள், சுவாரஸ்யமான அனுபவங்கள். அதுதான் என்னுடைய வங்கி வாழ்க்கை. என் சொந்த வாழ்க்கையில் சந்தித்த இன்னும் பல சுவாரஸ்யமான நபர்களைக் குறித்து எழுதினால் இன்னும் பல மாதங்களுக்கு எழுதலாம்.

    பதிலளிநீக்கு
  13. வாங்க முகமூடி,

    உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

    உங்களுக்கும் ஹாலிடே வாழ்த்துக்களும் புத்தாண்டு வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு