08 டிசம்பர் 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 32

மதுரை மற்றும் திருநெல்வேலிவாசிகள் ஊரை விட்டு சென்று எத்தனை வருடங்கள் ஆனாலும் அவர்களுடைய பாஷை மட்டும் அவர்களை விடவே விடாது. அப்படி பார்க்கப் போனால் அது எந்த ஊர்வாசிகளாயிருந்தாலும் அப்படித்தான்.

குறிப்பாக மதுரை, திருநெல்வேலி ஊர்க்காரர்கள் பேச்சிலிருந்தே அவர்களை மிகவும் எளிதாக அடையாளம் கண்டுக்கொள்ள முடியும். தமிழை தெளிவாக, அழகான உச்சரிப்புடன் பேசுவது இவர்களுக்கு கைவந்த கலை.

என் தந்தை, தாய் இருவருமே திருநெல்வேலியை சார்ந்தவர்கள்தான். பின்னே? தாய் மாமன் மகளை கல்யாணம் பண்ணிக்கிட்டா வேற, வேற ஊர்க்காரங்களாவா இருப்பாங்க?

என் சகோதரர்களுள் நான் மட்டும்தான் சென்னையை விட்டு தூத்துக்குடிக்கு போய் பெண் எடுத்தேன். அதற்கு முக்கிய காரணம் எனக்கு வேலை செய்யாத பெண் வேண்டும் என்பதுதான். அப்போதுதான் ஊர் ஊராக மாறிப் போக வசதியாக இருக்கும் என்பதால்.

ஆதலால் எனக்கும் என் சகோதரர்களுக்கும் திருநெல்வேலி பாஷையின் சாயல்கூட இருக்காது. என் இளைய சகோதரர்கள் இருவரும் தனிச்சென்னை பாஷை பேசுவார்கள். ஆனாலும் நான் அலுவலகத்தில் என் வாடிக்கையாளர்களிடம் உரையாடும்போது பெரும்பாலான வாடிக்கையாளர்கள், குறிப்பாக திருநெல்வேலையை சார்ந்தவர்கள், நான் பேசுவதை வைத்தே ‘சார் நீங்க நம்ம ஊரா?’ என்பார்கள்.

அப்படித்தான் அன்றும்!

எதிர்முனையிலிருந்து பேசியவருடைய பேச்சே அவர் திருநெல்வேலியை சார்ந்தவர் என்று எனக்கு காட்டிக்கொடுத்தது.

‘சொல்லுங்க சார்? உங்களுக்கு யார் வேண்டும் என்றேன்.’

‘எய்யா நா இன்னைக்கி காலைல ஒரு ஷிப்பிங் லோன் விஷயமா ஒரு வடக்கத்திக்காரரு வந்தாருல்லய்யா. அவர்கிட்ட கணக்குபிள்ளையா வேல பாக்கறம்யா. எங்க மானேசர் கொஞ்சம் பிசியா இருக்காராய்யா, அதான் நான் பேசறேன். நான் வந்தா போறுமாய்யா, இல்ல மானேசர் சார்தான் வரணுமா? அத கேட்டுக்கிட்டு வரலாம்னுதான்யா கூப்டேன்.’

ஓ அவரா? ‘ சரி வாங்க. எப்ப வர்றீங்க? நான் ஒரு அஞ்சு, ஆறு வரைக்கும் இருப்பேன். இன்னைக்கே வந்தாலும் சரி.’ என்றேன்.

‘இன்னைக்காய்யா?’ என்றவர் அருகிலிருந்த ஒருவரிடம் பேசுவது கேட்டது. சில நொடிகளுக்குப் பிறகு, ‘சரி வரேன்யா. வச்சிடறேன்.’ என்று கூறிவிட்டு நிறுத்தினார்.

நான் உடனே என் உதவி மேலாளரை அழைத்து விவரத்தைக் கூறிவிட்டு இதை ரகசியமாக வைத்திருங்கள் என்று எச்சரித்தேன். பிறகு இந்த கடனுக்கான விண்ணப்பம் மற்றும் அதன் தொடர்புள்ள எல்லா படிவங்களையும் இரண்டு தொகுப்பில் இட்டு கொண்டுவருமாறு பணித்தேன்.

நான் ஏற்கனவே கூறியுள்ளபடி என் கிளை காலை 8.45 துவங்கி பிற்பகல் 3.45 மணிக்கு முடிந்துவிடும். ஆயினும் நானும் என் உதவி மேலாளரும் சாதாரணமாக மாலை 6.00 அல்லது 7.00 மணிவரை அலுவலகத்தில் இருப்பது வழக்கம். புதிய கிளை என்பதால் சில்லரை வேலைகள் அதிகமாகவே இருந்தன.

என்னை தொலைப்பேசியில் அழைத்தவர் ஆறு மணி ஆகியும் வராததால் என் உதவி மேலாளரை அழைத்து ‘நீங்கள் வேண்டுமானால் செல்லுங்கள். நான் காத்திருந்து அவரை பார்த்துவிட்டுத்தான் செல்வேன்’ என்றேன். அவர் என்னைப் பார்த்த பார்வையிலேயே காத்திருந்து என்ன நடக்கிறது என்பதை பார்க்கவேண்டும் என்று ஆவல் இருந்ததை காண முடிந்தது. ஆனாலும் என்ன நினைத்தாரோ, சரி சார் என்று கூறிவிட்டு சென்றார்.

நான் எழுந்து சென்று கிளை வாசற்கதவை அகல திறந்துவைத்துவிட்டு என் அறையில் சென்றமர்ந்துக் கொண்டேன். அவர் வந்தபோது மாலை 7.00 மணியை கடந்திருந்தது. கோபப்படுவதில் என்ன பயன்? சேர்மன் பரிந்துரைத்த வாடிக்கையாளராயிற்றே.

‘சார். மன்னிச்சிருங்க. லேட்டாயிருச்சின்னு தெரியும்.’ என்ற முகவுரையுடன் நுழைந்தவரை பார்த்தேன்.

கலைவாணர் NSKவை கற்பனை செய்துக்கொள்ளுங்கள். வேட்டி, சட்டை, அதற்குமேல் ஒரு கருப்பு கோட்டு. திருநெல்வேலிக்கே உரிய கருத்த நிறம், வெள்ளை வெளேர் என்ற சுருட்டை முடி, அதே நிறத்தில் புருவங்கள், மீசை. தலைமுடி சற்றே பின்வாங்கியிருந்தது. அறுபது, அறுபத்தைந்து வயதிருக்கும்.

அவரைப் பார்த்தபோது என் குடும்பத்திலிருந்த யாரையோ பார்த்ததுபோல் உணர்ந்தேன். அவர் அமர்ந்து கையிலிருந்த குடையை (அது, நல்ல வெயில் காலம்!) மூலையில் சாய்த்து வைத்துவிட்டு கையில் கொண்டு வந்திருந்த துணிப்பையிலிருந்து ஒரு கோப்பை எடுத்து விரித்து வைத்துக்கொண்டு என்னை பார்த்து சிரித்தார். வெற்றிலை காவியேறிய ஆனால் ஆரோக்கியமான பற்கள்!

‘எய்யா நான் கேக்கனேன்னு தப்பா எடுத்துக்கிறாதீங்க. நீங்க நம்ம ஊராய்யா?’ எடுத்த எடுப்பிலேயே இந்த கேள்வியைக் கேட்டதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் இதுவரை பேச ஆரம்பித்தால்தான் கேட்டிருக்கிறார்கள். இவரென்ன பார்த்தவுடனேயே கேட்கிறார் என்று பார்த்தேன்.

‘முதல்ல உங்களுக்கு எந்த ஊர்னே சொல்லலையே? அப்புறம் எப்படி நான் சொல்றது?’ என்றேன் சிரித்துக்கொண்டே.

அவரும் சிரித்தார். ‘எனக்கு பாளையங்கோட்டை. அங்க பேட்டை. பீரீஸ் குடும்பம்னா தெரியாதவங்க யாருமே இருக்க மாட்டாங்க. சொல்லுங்க நீங்களும் திருநெல்வேலிதானே?’

எனக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். என் தந்தையும் பேட்டையை சார்ந்தவர்தான். அம்மா பீரிஸ் குடும்பத்தை சார்ந்தவர். அப்படியென்றால் இவரை என் தாயாருக்கு தெரிந்திருக்க வேண்டும். சரி, கடன் பெற வந்தவரிடம் குடும்பக்கதை பேச வேண்டுமா? எனக்கு அந்த ஊர் இல்லையென்று சொல்லிவிடலாமா என்று யோசித்தேன்.

‘சொல்ல இஷ்டமில்லன்னா விட்ருங்கய்யா. ஏதோ உங்கள பார்த்ததும் அசப்புல என் சித்தப்பா மாணிக்கம் பீரிஸ்சை பாத்தாப்பல இருந்துது. அதான் கேட்டேன்.’ என்றவரை சந்தோஷத்துடன் பார்த்தேன். இவர் கூறிய மாணிக்கம் பீரீஸ் என்னுடைய தாத்தா! என் தாயாரின் அப்பா மற்றும் என் தந்தையின் தாய் மாமன்!

என் தாத்தாவின் அண்ணன் குடும்பமும் சென்னையில்தான் இருக்கிறதென்று என் தாயார் கூற கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பல ஆண்டு காலமாக தொடர்பு இல்லாததால் உறவுமுறை விட்டுப்போயிருந்தது. இப்போது என்ன செய்ய? இவரிடம் உறவுமுறை பேசி வந்த காரியம் கெட்டுப்போனால் என்ன செய்வது என்று சில நொடிகள் யோசித்தேன். சரி, அப்படி என்ன பெரிதாய் ஆகிவிடப்போகிறது என்ற முடிவெடுத்தேன்.

‘அதெப்படிய்யா? எனக்கு 32 வயசுதான் ஆச்சு. என்னைப் போய் எங்க தாத்தா மாதிரி இருக்கேன்னு சொல்றீங்க?’ என்றேன்.

அவர் சந்தோஷ மிகுதியால் எழுந்து என் மேசையை சுற்றி வந்து என்னை கட்டிப்பிடித்து தோளில் தட்டிக்கொடுத்தார். உணர்ச்சி மிகுதியால் பேச முடியாமல் தடுமாறியவரை ஆசுவாசப்படுத்தி அழைத்து சென்று அவருடைய இருக்கையில் அமர்த்தினேன்.

‘உங்கள நான் எப்படி கூப்பிடணும்னு கூட எனக்கு தெரியலை. உங்கள பார்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம். நீங்க கண்டிப்பா வீட்டுக்கு வந்துட்டு போகணும். இப்ப நீங்க வந்த விஷயத்த பேசுவோம். ஏன்னா நான் நாளைக்கு உங்க முதலாளி வந்துபோன விஷயத்தை என் சேர்மனுக்கு சொல்லணும், அதான். தப்பா நினைச்சிக்காதீங்க.’ என்றேன்.

அவர் முகம் சட்டென்று மாறி கலக்கத்துடன் என்னை பார்த்தார். ‘நீங்க எனக்கு மருமகன் முறை வேணும். எனக்கு என்ன செய்யற்துன்னு தெரியலை. இங்க புறப்பட்டு வரும்போது இப்படி ஒரு இக்கட்டுல மாட்டிக்குவேன்னு தெரியலையேய்யா. நான் என்னத்தன்னு சொல்றது?’

எனக்கு ஒன்றும் புரியவில்லை? ‘நீங்க என்ன சொல்றீங்க? என்ன இக்கட்டுல மாட்டிக்கிட்டீங்க? தெளிவா சொல்லுங்கய்யா.’

அவர் தயங்கியவாறே தன் முன் திறந்துகிடந்த கோப்பை பார்த்தார். ‘உங்க பேர் என்ன தம்பி?’ என்றார் என்னை நிமிர்ந்து பார்க்காமல்.

என் பெயரை சொன்னேன்.

ஒரு புன்னகையுடன் ‘உங்க தாத்தா பேரு சூசை மாணிக்கம். உங்க பேரு சூசையா? நல்லாருக்கு (ஜோசப் என்றால் தமிழில் சூசை!).’ என்றவர் சோகத்துடன் ‘உங்கள எப்படி தம்பி நான் ஏமாத்தறது?’ என்றார்.

நான் அதிர்ந்துபோய் அவரையே பார்த்தேன். ‘அய்யா, நீங்க என்ன சொல்றீங்க?’

‘எய்யா, என் முதலாளி ஒரு பக்கா ஃப்ராடாச்சே.’

சட்டென்று என் மனதில் என்னுடைய ஆரம்ப ஊகம் சரிதான் என்ற மகிழ்ச்சி ஏற்பட்டாலும் அவரையே பார்த்தேன். ‘ஃப்ராடா? என்னய்யா இது அவர்கிட்ட வேல பாக்கற நீங்களே இப்படி சொன்னா எப்படி? நானா இருந்ததால பரவாயில்லை. இதுவே வேற ஆளா இருந்து நீங்க சொன்னத அவர்கிட்ட போய் சொன்னா உங்க வேல என்னாறது?’

அவர் சோகத்துடன் என்னைப் பார்த்து ‘இல்லை’ என்பதுபோல் தலையை அசைத்தார். ‘வேற ஆளா இருந்தா நான் ஏன் தம்பி என் முதலாளிய பத்திய உண்மைய சொல்லப் போறேன்? ஏமார்றவன் இருக்கறவரைக்கும் ஏமாத்தறவன் இருந்துக்கிட்டுத்தானே இருப்பான் அப்படீன்னு நினைச்சிக்கிட்டு என் முதலாளி சொல்றத செஞ்சிட்டு போய்கிட்டே இருப்பேன். ஆனா நீங்க அப்படியா தம்பி? வேணாம் தம்பி. அவரை பத்தி சொன்னா சொல்லிக்கிட்டே இருக்கலாம். அந்த மாதிரி இன்டர்நேஷனல் ஃப்ராடு அவன். அவன்கிட்ட ஏமாந்த உங்களமாதிரி மேனேசர்ங்க நிறைய பேர் இருக்காங்க. தம்பி ஒன்னு கேக்க மறந்துட்டேன். உங்க சேர்மன் யாரு? அவர் பேர் என்ன சொல்லுங்க?’

நான் பெயரை சொன்னேன்.

அவர் நம்பமுடியாமல் என்னையே பார்த்தார். ‘அவரா தம்பி? அவர் ஒரு குழந்தைமாதிரிய்யா. அவர் இருந்த பாங்குலதான் எங்க முதலாளி முதல் முதலா டீலிங்க்ஸ் வச்சிருந்தான். அங்க ஏகப்பட்ட கடன். உங்க சேர்மன் அங்க ஜி.எம்மா இருந்தபோதிலிருந்தே எனக்கு தெரியும். இவனுக்கு அவர் குடுத்த லோனெல்லாம் இப்ப கெடு முடிஞ்சி வட்டிய கூட அடைக்க முடியாம இழுத்தடிச்சிக்கிட்டு இருக்கான். இன்னும் ஒரு மாசத்துக்குள்ள அசலும் வட்டியுமா சேர்த்து முப்பது லட்சத்தை அடைக்கலைன்னா கோர்ட்ல கேஸ் போட்ருவோம்னு மிரட்டறாங்க. அதுக்குத்தான் போன ஒரு மாசமா அடுத்த இளிச்சவாயன் யார் மாட்டுவான்னு அலைஞ்சிக்கிட்டிருந்தான். உங்க சேர்மன் மாட்டிக்கிட்டார் போல. அவரு உங்கள மாட்டிவிட்டுட்டாரு. இதுலருந்து நீங்க எப்படி தப்பிப்பிங்களோ, அது உங்க சாமர்த்தியம். நீங்க என்னடான்னா லோன் பேப்பர்ஸ் எல்லாம் ரெடியா எடுத்து வச்சிக்கிட்டு உக்காந்திருக்கீங்க.’

ஸ்தம்பித்துபோய் சிலையாய் அமர்ந்திருந்த என்னைப் பார்த்து அவருக்கு என்ன தோன்றியதோ மூடி வைத்திருந்த கோப்பையும் மூலையில் நிறுத்திவைத்திருந்த குடையையும் கையில் எடுத்துக்கொண்டு எழுந்து நின்றார்.

நான் அவசர, அவசரமாக எழுந்து என் மேசையிலிருந்த விண்ணப்ப படிவங்களை எடுத்து ஒரு பிளாஸ்டிக் உறையில் வைத்து அவரிடம் நீட்டினேன்.

‘இது எதுக்குய்யா? நான் சொன்னத நீங்க நம்பலையோன்னு தோனுது. கண்ண மூடிக்கிட்டே கிணத்துல விழுறதுன்னு தீர்மானிச்சிட்டீங்களாய்யா?’ என்றவரை பார்த்து லேசாக புன்னகைத்தேன்.

‘அப்படி இல்லைய்யா. நீங்க உங்க வேலையை செய்ங்க. இத உங்க மேனேஜர் கிட்ட குடுத்துருங்க. என்ன செய்யணும்னு நான் தீர்மானிச்சிக்குறேன். உங்க முதலாளி எப்படீன்னு வெளிப்படையா சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்கய்யா. நான் அவரை டீல் பண்ற விதத்துல டீல் பண்ணிக்கறேன். நீங்க அதப்பத்திய கவலைய விட்டுருங்க. வாங்க, வீட்டுக்கு போய்ட்டு போலாம்.’ என்றேன்.

அவர் ‘இல்லை’ என்பதுபோல் தலையை அசைத்தார். ‘இல்லய்யா. இந்த மனநிலையில வந்து வீட்லருக்கறவங்ககிட்ட நான் எதையாவது சொல்லப் போக சின்னஞ்சிறுசுக பயந்துரக்கூடாதில்ல? இப்பத்தான் நீங்க யாருன்னு தெரிஞ்சிட்டுல்ல.. வீட்ல உள்ளவங்களையும் கூட்டிக்கிட்டு சாவகாசமா ஒரு நாள் வாரேன். இப்ப நேரமாயிருச்சி. கம்பெனி டிரைவர் வேற இருக்கான். நான் இப்ப உங்களோட வீட்டுக்கு வந்தேன்னா பின்னால உங்களுக்கும் பிரச்சினையாயிரும்யா.. அதான் சொல்றேன். சாக்கிரதயா அவன்கிட்ட டீல் பண்ணுங்கய்யா. எமகாதக பய. தன் காரியம் நடக்கலைன்னா என்ன வேணும்னாலும் செய்வான். பாத்துக்குங்க. நான் வரட்டுமாய்யா. வீட்ல இப்ப ஒன்னும் சொல்ல வேணாம். எல்லாம் நல்லபடியா முடியணும்னு நான் வேண்டிக்கறேன்.’

அவர் சென்று வெகு நேரமாகியும் வீட்டுக்கு கிளம்ப மனசில்லாமல் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து விட்டத்தில் சுழலும் மின் விசிறியையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

மனதில் ஒரு இனம் புரியாத சோகம்.

தொலைபேசி அடிக்கவே இந்த நேரத்தில் யாராயிருக்கும் என்று நினைத்துக்கொண்டு எடுத்தேன். என் மனைவி! 'இதோ வருகிறேன்.' என்று கிளம்பினேன்.

போகும் வழியெல்லாம் இந்த பிரச்சினையை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற சிந்தனை..

தொடரும்

26 கருத்துகள்:

  1. இதே மாதிரி நிலை எனக்கும் நடந்திருக்கின்றது. கல்லூரியில் ஒரு சயன்ஸ் எக்சிபிஷன். அதில் நானும் ஒன்றை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தேன். ஒரு பள்ளிக்கூடப் பெண். பார்க்க வந்திருந்தவள். என்னை உற்றுப் பார்த்து விட்டு, நீங்க இன்னார் வீட்டுப் பையனா என்று கேட்டார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்தப் பெயரை கேட்டதேயில்லை அதற்கு முன். நான் இல்லீங்க என்று சொல்லி விட்டேன். வீட்டுக்கு வந்தால் அந்தப் பெயர் எனது முப்பாட்டனார் பெயராம். நான் மயக்கமே போட்டு விழாத குறை.

    பதிலளிநீக்கு
  2. Seththum koduththa seethakathi mathiri, even after his death your grandfather helped u. Great! As a person who had lot of affection on grandparents, i felt very happy over this. Susai sir(my dearest friend name is also Joseph and I call him susai!), u have very nice writing skill. We r all enjoying your life story, by participating in it.

    பதிலளிநீக்கு
  3. வாங்க ராகவன்.

    நம்மள்ல நிறைய பேருக்கு இந்த மாதிரி எதிர்பாராத நேரத்துல நடக்கும். சில சமயங்கள்ல உலகம் எவ்வளவு சின்னதுன்னு தோணும். இந்த நேரத்துல வேறொரு சம்பவம் ஞாபகத்துக்கு வருது. ஒரு முறை நான் திருச்சூர் ரவுண்டல (அது ஒரு பெரிய மைதானம். திருச்சூர் பூரம்னு கேள்விப்பட்டிருப்பீங்க. சுமார் 50 யானைகள் எதிரும் புதிருமா நிற்க வருஷம் ஒருமுறை வானவேட்டிக்கைகளோட நடக்கற திருவிழா ரொம்பவும் ஃபேமஸ்) என் நண்பரோட நடந்துக்கிட்டடு போயிக்கிட்டிருக்கேன். பின்னாலருந்து ஒருத்தர் வேகமா யார் பேரையோ கூப்பிட்டுக்கிட்டு ஓடி வந்தார். நாங்க யாரையோ கூப்பிடறார் போலருக்குன்னு சட்டை பண்ணாம போறோம். அவர் ஓடி வந்து என் முதுகுல பளார் அறைஞ்சி என்னடா கூப்டுகிட்டே இருக்கேன். பாத்தும் பாக்காதமாதிரி போறியேன்னார். நான் அதுக்கு முன்னால பார்த்ததே இல்லை.என் நண்பரும் அவரிடம் எதுக்கு இப்ப அவரை அடிச்சீங்கன்னு சண்டைக்கு போய்ட்டா. அவர் சார் நீங்க மாதவன் நாயர்தானேன்னார்! என் நண்பர் இல்லை இவர் பேர் ஜோசப், தமிழர் என்றார். அவர் நம்பாமல் இருவரையும் மாறி மாறி பார்த்துட்டு என் விலாவில் இடித்து குலுங்கி குலுங்கி சிரித்தார். டேய் தமாஷ் பண்ணாத எனக்கென்ன கண்ணு அத்தனை குருடா. டேய் வேணாம்டா.என எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பிறகு ஒரு வழியாக புரியவைத்து விடைபெற்றோம். அவருடைய நண்பரும் அசல் அச்சாய் என்னைப் போலவே இருப்பாராம். ஒருவேளை என் ட்வின் சகோதரராக இருப்பாரோ என்று இன்றும் இந்த சம்பவம் நினைவுக்கு வரும்போது நினைத்துக்கொள்வேன்.

    பதிலளிநீக்கு
  4. என்ன சார்,திடீர்ன்னு ஊர் ஞாபகம் வர வச்சுடீங்க? அனுபவிச்சு எழுதியிருக்கீங்க .நம்மூரு ஆளுகல்லாம் பாசமானவங்க!

    பதிலளிநீக்கு
  5. Seththum koduththa seethakathi mathiri, even after his death your grandfather helped u. //

    Yes Krishna, you are absolutely right! He indeed helped me on that day. Otherwise I would have landed myself in a very serious problem. Even now when I narrate this incident a fear runs down my spine!

    Thanks for your comments.

    பதிலளிநீக்கு
  6. ஆமா ஜோ. நான் தஞ்சாவூர் கிளைல இருந்தப்ப இதே மாதிரியான ஒரு ஆபத்தான சிச்சுவேஷன்ல என்ன காப்பத்துனதும் நம்ம ஊர சேர்ந்தவர்தான். விவரமா ஒரு பதிவுல சொல்றேன்.

    பதிலளிநீக்கு
  7. வழக்கத்தைவிட அதிக ஆர்வத்தைத் தூண்டியது இன்றைய பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  8. நீங்கள் கூறுவது என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஹைப்பர் லிங்குகளை நினைவுபடுத்துகிறது. அவற்றுக்கான சில உதாரணங்கள்:
    1)
    2)

    உங்கள் அனுபவங்கள் சுவாரஸ்யமாக உள்ளன. தொடருங்கள்.

    என்னுடைய இந்தப் பின்னூட்டத்தின் நகல் என்னுடைய இப்பதிவில் பின்னூட்டமாக இடப்படும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  9. நன்றி அன்பு,

    இதே ஸ்வாரஸ்யத்தை தொடர்ந்து தருவதற்கு முயற்ச்சிக்கிறேன்!

    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. நன்றி ராஜ்.

    காலைல துளசியோட லடாய் பண்ணீங்களே அதுகூட ரொம்ப ஸ்வாரஸ்யமா இருந்துது!

    Alphabetical orderனு சொல்லி நல்லா சமாளிச்சிட்டீங்க.

    பதிலளிநீக்கு
  11. உங்கள் அனுபவங்கள் சுவாரஸ்யமாக உள்ளன. தொடருங்கள்.//

    நன்றி ராகவன் சார்.

    சார் நீங்க வெவ்வேற பதிவுகள்ல இடற பின்னூட்டங்கள எப்படி ஒரே இடத்துல Pool பண்றீங்க. கொஞ்சம் சொல்லுங்களேன்.

    உங்க hyper links பார்த்துட்டு சொல்றேன்.

    பதிலளிநீக்கு
  12. டோண்டு சார்,

    உங்க ரெண்டு ஹைப்பர் லிங்க்சையும் படிச்சேன். உங்களுக்கு அபார ஞாபக சக்தி சார்!

    அந்த மாதிரிஎல்லாம் என்னால நினைவு வச்சிக்க முடியாது.

    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. sir, one doubt, your immediate responses to our comments point to the fact that u will be watching the blog very often. Be careful sir. Upto now u have done wonderful job in your work by fully concentrating on the job at the time of work hours.Now, with this blogging, u will be getting mind diversion. I am a bit worried whether this will affect your work. sorry, if i meant anything wrong.

    பதிலளிநீக்கு
  15. கிருஷ்ணா,

    நீங்கள் கூறியிருப்பதை புரிந்துகொள்ளமுடிகிறது. பிரச்னை ஜோச்ஃப் சாருக்குமட்டுமல்ல. என்போன்ற பலருக்குமிருக்கிறது. அத்தியாவாசிய வேலைகளைத்தவிர இந்தப்பக்கம் வராமலிருப்பதை சிரமப்பட்டுத்தான் தவிர்க்கவேண்டியிருக்கிறது. உண்மை. தொடர்ந்து முயல்கிறேன், பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  16. அன்பு,

    கவலைப் படாதீங்க.

    துளசி ஏதாவது பிசியா இருக்காங்களோ என்னவோ. அவங்க ரொம்ப ஸ்போர்ட்டிவான ஆளு.

    ஷி வில் ரெஸ்ப்பான்ட் டு யுவர் clarification. Take it easy!

    பதிலளிநீக்கு
  17. Krishna,

    I don't normally visit my blog frequently to find out the responses. The comments would pop up in gmail talk alerts as and when a comment is posted in my ennulagam and enkathaiulagam blogs. I would immediately draft a reply in word copy it and paste it in the blogger box. It would take about one or two minutes!

    It does not affect my routine work. I work as the head of our IT division. We develope sw for our Bank. So customers won't visit me often. It is a boring work in fact. At times I sit all along in my cabin. My developers would normally disturb me only when they need some clarification on their work. Therefore, the visits to thamizhmanam blogs relieve me from my monotonous work once in a while!

    பதிலளிநீக்கு
  18. At times I sit all along in my cabin.

    Krishna,

    it should read all alone!

    பதிலளிநீக்கு
  19. Dear Joseph

    Very interesting life story. Made me to visit your blog daily :).

    You have a good writing style. All the best for your blog.

    Murali

    பதிலளிநீக்கு
  20. Its interesting... I agree, wherever we go, ths slang doesnt change..

    Whenever I meet some new people, they easily find that I am from Madurai area thru my slang. I noticed many times..

    பதிலளிநீக்கு
  21. ஏங்க நீங்க அந்த பெரியவர பத்தி இப்படி விலாவாரியா எழுதிட்டீங்களே... இதெல்லாம் தெரிஞ்சி அவரு (அப்போதைய) முதலாளி இப்ப அவருக்கு ஏதும் தொல்லை கொடுத்திட்டா? ரொம்ப வருஷம் முந்தி நடந்ததுதான், இருந்தாலும் ஒரு சந்தேகம்

    அப்புறம் உங்க சக ஆபிஸர்கள், கஸ்டமர்கள பத்தியெல்லாம் வெளிப்படையா சொல்றதால நீங்க கஸ்டமர் (அ) பேங்க் ப்ரவஸி் கோட் எதுவும் மீறலதான... ஏன் கேட்கிறேன்னா, என்னோட வேலையில எங்க கஸ்டமர் பத்திய தகவல அவரது அனுமதி இல்லாம அவரோட குடும்பத்துக்கே கூட கொடுக்க கூடாது...

    பதிலளிநீக்கு
  22. நல்லாப் போகுது. படிச்சுக்கிட்டு வர்றப்பவே இப்பத் 'தொடரும்' னு போட்டுருவீங்கன்னு
    பயந்துக்கிட்டே படிச்சேன். சுவாரசியமா இருக்கறப்பத் 'தொடரும்'னு திடுக் பண்ணறது
    உங்க வாடிக்கையாச்சே:-))))))

    ஆமாம். நான் இன்னிக்கு வரக் கொஞ்சம் லேட்டாயிடுச்சு. அதுக்குள்ளே நம்ம மண்டையை,
    அதாங்க நம்ம பேரைப் போட்டு உருட்டிக்கிட்டு இருக்கீங்க?( ஆஹா... எப்படியோ பின்னூட்டத்துலே
    நம்ம பேர் அடிபடுது. ஹை!)

    ராஜ் சொன்னதை நான் தப்பாவே எடுத்துக்கலை. ஆண்கள் உலகமாப் போச்சே, கொஞ்சம்
    பெண்களையும் சேர்த்துக்கக் கூடாதான்னு ஒரு ஆதங்கம்தான். அட. ஆட்டத்துலே எங்களையும்
    கொஞ்சம் சேர்த்துக்குங்கப்பா!)

    அவரும் எப்படியோ Alphabetical orderனு சொல்லித் தப்பிச்சுக்கிட்டார்:-)))))

    ஆனா பொதுவாச் சொல்ல இப்பெல்லாம் 'கஸ்டமர் இஸ் ரைட்'னு சொல்லிடறாங்கல்லெ?

    முகமூடி வேற ஏதோ 'ப்ரைவஸி ஆக்ட்'ன்னு சொல்லி குண்டு போடறாரு. அதையும் கொஞ்சம் பாருங்க.

    பதிலளிநீக்கு
  23. நன்றி கிறுக்கன் & முரளி.

    நன்றி முகமூடி,

    நான் என்னுடைய இருபது வருட மேலாளர் அனுபவத்தில் நான் கொடுத்த ரு.1.00 லட்சம் & above கடன்களின் எண்ணிக்கை சுமார் 1000 க்கும் மேல் இருக்கும். நான் சந்தித்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 10000க்கும் மேல் இருக்கும். அதில் நான் இதுவரை இத்தொடரில் எழுதியவர்கள் ஒரே ஒருவரைத் தவிர மற்றவர்கள் எல்லாம் ஒரு இறந்திருக்க வேண்டும் அல்லது என் வங்கியுடனான தொடர்பை துண்டித்துக்கொண்டவர்களாக இருக்க வேண்டும். அதிகாரிகளும், நான் குறிப்பிட்ட சேர்மனும் அப்படித்தான். பலர் இறந்துவிட்டனர். அதுமட்டுமல்ல நான் இதுவரை யாரைப் பற்றியும் அவதூறாக எழுதவில்லை என்று நினக்கிறேன். யார் பெயரையும் இதுவரை குறிப்பிடவில்லை. ஆகவே நீங்கள் குறிப்பிட்ட சீக்ரசி issue எழவில்லை என்றுதான் நினைக்கிறேன். இனியும் கவனமாக இருப்பேன்.

    பதிலளிநீக்கு
  24. வாங்க துளசி,

    நேத்து நீங்க நான் என் பதிவை போஸ்ட் பண்றதுக்குள்ளவே வந்துட்டீங்கன்னு நினைக்கிறேன். அந்த நேரத்துல ராஜ் உங்ககிட்ட மாட்டிக்கிட்டார். கஸ்டமர் ஈஸ் தி கிங்குன்னு சொல்றது குவீனையும் சேர்த்துத்தான். குவீன் இல்லாம கிங் ஏது? சிவனில்லாமல் பார்வதி இல்லை பார்வதி இல்லாமல் சிவன் இல்லை சிவனும் பார்வதியும் ஒன்னுன்னு நீங்க கேட்டதில்லை. இதுவும் அதுமாதிரின்னு வச்சிக்குங்களேன்.

    அப்புறம் முகமூடியோட கன்சர்ன் நியாயமானதுதான். ஆனால் நான் மிகவும் கவனமாகவே எழுதுகிறேன். நான் இப்போது குறிப்பிடும் வாடிக்கையாளர் இறந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. நான் குறிப்பிடும் சேர்மனும் இறந்து பதினைந்து வருடங்கள் ஆகிறது.

    பதிலளிநீக்கு
  25. //குறிப்பிடும் வாடிக்கையாளர் இறந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. நான் குறிப்பிடும் சேர்மனும் இறந்து பதினைந்து வருடங்கள் ஆகிறது.//

    ஆஹாஹா.... இருங்க உங்களுக்கு ஆவி உலக வழக்கம் தெரியாதா?:-))

    நல்லா மாட்டிக்கிட்டீங்க.

    பதிலளிநீக்கு
  26. ஓ அப்படியொரு உலகம் இருக்கா? உங்களுக்கு ஆவிகளோட பேசுற பழக்கம் இருக்காங்க துளசி?

    பதிலளிநீக்கு