இப்போது என் முன்னே நின்ற பிரச்சினை இதுவரை நான் எதிர்கொண்ட பிரச்சினைகளிலெல்லாவற்றையும் விட மிகவும் சிக்கலானது என்பதை நான் அறிந்திருந்தேன்.
ஒருவேளை இதில் என் வங்கியின் சேர்மன் சம்மந்தப்படாமல் இருந்திருந்தால் நிலமை இத்தனை சிக்கலாயிருந்திருக்காது. நேற்று நான் கேள்விப்பட்ட விஷயத்தை என்னுடைய உயர் அதிகாரிகளுள் யாரிடமாவது கூறவேண்டும். யாரிடம் கூறினால் தகுந்த பலன் கிடைக்கும் என்றுதான் நான் அடுத்த நாள் காலை அலுவலகத்தை வந்தடைந்ததிலிருந்தே சிந்திக்க தொடங்கினேன்.
காலையில் என் அறையில் சென்று அமர்ந்ததுமே என் உதவி மேலாளர் என் அறைக்கு வந்து ‘நேற்று அவர் வந்திருந்த்தாரா சார்?’ என்று ஆவலுடன் கேட்டார். நான் பட்டும் படாமலும், ‘ஆமாம். கடன் சம்மந்தப்பட்ட எல்லா படிவங்களையும் கொடுத்திருக்கிறேன். இன்று சென்று மார்ட்கேஜ் செய்யப்போகின்ற ப்ராப்பர்ட்டியை பார்த்துவிட்டால் ப்ரொப்போசலை அனுப்பிவிடலாம் என்று நினைக்கிறேன்.’ என்று அவரிடம் கூறினேன். ஏனோ தெரியவில்லை, அவர் என்னை நம்பாததுபோல் பார்த்தார். நான் அதைக் கண்டுக்கொள்ளாமல் என் மேசை மேல் இருந்த கோப்புகளை பார்ப்பதில் மும்முரமாய் இருக்க, சிறிது நேரம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தவர் பிறகு வேறு வழியில்லாமல் அவருடைய இருக்கைக்குச் சென்று அவருடைய பணிகளை கவனிக்க ஆரம்பித்தார்.
நான் என்னுடைய வங்கி தொலைப்பேசி டைரக்டரியை எடுத்தேன். என் தலைமையகத்திலிருந்த அதிகாரிகளின் பெயர்களையும் அவர்களுடைய நேரடி தொலைப்பேசி எண்களையும் ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பித்தேன். சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. என்னுடைய முதல் அக்கவுண்டன்ட்! அவர் இப்போது தலைமையகத்தில் H.R. Head ஆக இருந்தார். கரெக்ட்! அவர்தான் சரியான யோசனையை கூறக்கூடியவர் என்று தீர்மானித்து அவருடைய நேரடி தொலைப்பேசி எண்ணை டயல் செய்தேன்.
அவர் எடுத்ததும், ‘சார் நான்தான் டிபிஆர். என்றேன்.’
அவர் உடனே சந்தோஷமாக, ‘என்ன டிபிஆர். மதறாஸ்ல கலக்குறீங்கன்னு கேள்விப்பட்டேன். கேக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு. ஆனா உங்க வட்டார மேலாளருக்கு உங்கள அவ்வளவா பிடிக்கலைன்னு நினைக்கிறேன். போன வட்டார மேலாளர்கள் கூட்டத்துல உங்களப்பத்தி பேசினார். ஆனா சேர்மன் கண்டுக்கலை. ஐ திங்க் சேர்மன் ஈஸ் இம்ப்ரஸ்ட் அபவுட் யுவர் பெர்ஃபார்மன்ஸ். யு ஷ¤ட் கன்சிடர் யுவர்செல்ஃப் லக்கி டிபிஆர். என்ன விஷயமா கூப்டீங்க எனிதிங் சீரியஸ்?’ என்றார் படபடவென்று.
அவர் சேர்மனைப் பற்றி கூறியதை கேட்டதும் எனக்கு மேலும் கலக்கமாயிற்று. அதே சேர்மன் பரிந்துரைத்த வாடிக்கையாளரைப் பற்றி குறை கூறுவது எப்படி சாத்தியம்? இவர் நான் கூறுவதை நம்புவாரா? என்றெல்லாம் என் சிந்தனை சென்றது. ஆயினும் வேறு வழி தெரியாததால் வருவது வரட்டும், இவரிடம் கூறிவிடுவது என்று தீர்மானித்து, சுருக்கமாக கூறினேன் (அப்போதெல்லாம் எஸ்.டி.டி பயங்கரமான காஸ்ட்லி சமாச்சாரம். தந்தியடித்தாற்போல் பேசவேண்டும். இல்லையென்றால் தொலைப்பேசி கட்டணத்திற்கென்று என் கிளைக்கு ஒதுக்கப்பட்ட ஆண்டு பட்ஜெட் ஒரே மாதத்தில் காலியாகிவிட வாய்ப்புண்டு!).
அவரும் பொறுமையுடன் நான் பேசி முடிக்கும்வரை கேட்டுவிட்டு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார். பிறகு ‘இதைப்பற்றி வேறு எந்த அதிகாரியிடமாவது கூறினீர்களா டிபிஆர்?’ என்றார். நான் ‘இல்லை சார்.’ என்று பதிலளித்தேன்.
சிறிது நேரம் அவர் ஒன்றும் கூறாதிருக்கவே எனக்கு கவலை அதிகரிக்க ஆரம்பித்தது. தயக்கத்துடன், ‘சார் ஆர் யூ தேர்?’ என்றேன்.
அவர் உடனே, ‘ஐ ஆம் வெரி மச் ஹியர் டிபிஆர். ஐ ஆம் ஜஸ்ட் திங்கிங். நாம அவசரப்பட்டு ஏதாவது செய்யப்போக விஷயம் சிக்கலாகிவிடக் கூடாது. சேர்மன் புதியவர். அவருடைய மனசில் என்ன இருக்கிறது என்பதை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும். டிபிஆர் ப்ளீஸ் கிவ் மி ஒன் ஹவர் டைம், ஐ வில் கெட் பேக் டு யூ.’ என்று நான் ‘சரி’ என்று சொல்வதற்குள் இணைப்பைத் துண்டித்து விட்டார்.
அவருடைய இந்த செய்கை ‘நாம் செய்தது சரியா’ என்று என்னை சிந்திக்க தூண்டியது. ‘சரி வருவது வரட்டும். சொன்னது சொன்னதுதான். அவர் மீண்டும் தொடர்பு கொள்ளும்வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை’ என்று நினைத்துக் கொண்டு என்னுடைய வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தேன்.
அன்று புதன் கிழமையாதலால் தங்க நகைகள் அடகு வைத்து கடன் பெற வாடிக்கையாளர்கள் வந்துகொண்டே இருந்தனர். ஆதலால் என்னுடைய பிரச்சினையைப் பற்றி ஆலோசிக்க நேரம் இல்லாமல் பகல் உணவு நேரம் வரை அது சம்பந்தப்பட்ட வேலைகளில் மூழ்கிப்போனேன்.
நான் தங்கியிருந்த வீடு என்னுடைய அலுவலகத்திலிருந்து ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவாயிருந்ததால் மதிய உணவிற்கு வீட்டுக்கு செல்வது வழக்கம். ஸ்கூட்டரில் சென்றால் அதிக பட்சம் ஐந்து நிமிட தூரம்தான். வீட்டுக்கு சென்று உணவருந்திக்கொண்டிருக்கும் நேரத்தில் என் உதவி மேலாளர் தொலைப்பேசியில் அழைத்து ‘ நீங்க போனதும் சேர்மன் அலுவலகத்திலிருந்து தொலைப்பேசி வந்தது சார். நீங்க திரும்பி வந்ததும் உடனே கூப்பிட வேண்டும்’ என்று சொன்னதாக கூறினார். வீட்டு தொலைப்பேசியில் எஸ்.டி.டி. வசதி இல்லை. டிரங்க் கால் புக் செய்தால் குறைந்த பட்சம் அரைமணி நேரமாவது கும். அவசரமென்றால் ‘லைட்னிங் கால்’ செய்யலாம். உடனே கிடைக்கும். ஆனால் கட்டணம் நான்கு மடங்கு! கட்டுப்படியாகாது. அவசர அவசரமாக உணவருந்திவிட்டு ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு அலுவலகம் திரும்பினேன்.
சேர்மன் எடுத்த எடுப்பிலேயே ‘வாட் ஹேப்பண்ட் டிபிஆர்? மை ஃப்ரெண்ட் ஈஸ் நாட் ஹாப்பி த வே யூ ட்ரீட்டட் ஹிம் வென் ஹி கேம் தேர் டு மீட் யூ. I am disappointed with you young man. Be careful when you meet him again. Go and meet him now itself and call me back in the evening. I will be waiting for your call. Don’t disappoint me again. I may not be as tolerant as I am now. OK?’ என்று எனக்கு பதிலளிக்க சந்தர்ப்பம் தராமலேயே இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
என்னுடைய சேர்மன் பழகுவதற்கு மிகவும் மென்மையானவர். இதுவரை யாரையும் கோபப்பட்டு பேசியதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதும் என்னோடு பேசிய அவருடைய குரலில் கோபத்திற்கு பதிலாக ஒருவித சலிப்பே தென்பட்டது.
என்ன செய்யலாம்? உடனே ஏதாவது செய்தாகவேண்டும். இப்படியே சும்மா உட்கார்ந்திருந்தால் பிரச்சினை தீராது என்று யோசித்தேன்.
சிறிது நேர யோசனைக்குப் பிறகு வாடிக்கையாளர் விட்டுச்சென்ற விசிட்டிங் கார்டை எடுத்து அவருடைய மேலாளருடைய் எண்ணை சுழற்றினேன். அவர மறுமுனையில் எடுத்ததும் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நான் நேற்று அனுப்பிய படிவங்களைப் பூர்த்தி செய்தாகிவிட்டதா என்று வினவினேன்.
‘என்ன சார் நீங்க ரொம்ப ஃபாஸ்டா இருக்கீங்க? இன்னும் அது சம்மந்தப்பட்ட நிறைய பேப்பர்ஸ் ரெடி பண்ணனுமே. அப்புறம் நீங்க அந்த ப்ராப்பர்ட்டியை பாக்க வேணாமா? சார் இப்பத்தான் பெங்களூர் புறப்பட்டு போறாரு. ஒன்னு பண்ணலாம். நீங்க மார்ட்கேஜ் பண்ணப் போற ப்ராப்பர்டிய வேணும்னா நம்ம கணக்குப் பிள்ளையோட போய் பார்க்கறீங்களா?’ என்றார்.
மீண்டும் அவரா என்று தயங்கினேன். இருந்தாலும் அவர் வேண்டாம் என்று நான் கூற அதை அவர் வேறுவிதமாக அர்த்தம் செய்துக்கொண்டு கணக்குப்பிள்ளைக்கு ஏதாவது பிரச்சினை வந்துவிடுமோ என்று நினைத்து, ‘சரி சார். நீங்க அட்ரஸ் குடுங்க நான் நேரா என் ஸ்கூட்டர்ல அங்க போயிடறேன். உங்க கணக்குப்பிள்ளை அங்க வந்தா போறும்.’ என்றேன்.
அவர் முதலில் ‘வேண்டாம் சார். நம்ம கணக்குப்பிள்ளை உங்கள வந்து பேங்க்ல பிக்கப் பண்ணிக்குவார்.’ என்றார். ஆனால் என்னுடைய வற்புறுத்தலுக்குப் பிறகு என்னுடைய யோசனைக்கு சம்மதிக்க நான் தொலிப்பேசி இணைப்பைத் துண்டித்துவிட்டு எழுந்து ஒரு Scribbling Padஐ எடுத்துக்கொண்டு என் உதவி மேலாளரிடம் கூறிவிட்டு புறப்பட்டு அவர் கூறிய விலாசத்தை சென்றடைந்தேன்.
கணக்குப்பிள்ளை வீட்டு வாசலிலேயே காத்திருந்ததால் வீட்டை அடையாளம் கண்டுக்கொள்ள எளிதாய் இருந்தது. அவருடன் வேறொருவரும் நின்றுக்கொண்டிருந்ததால் அவர் முன் கணக்குப்பிள்ளையுடனான என்னுடைய உறவைக் காட்டிக்கொள்ள விரும்பாமல் பொதுவாக இருவரையும் பார்த்து புன்னகைத்தேன்.
கணக்குப்பிள்ளை தன்னுடன் வந்தவரை அவருடைய நிறுவனத்தின் கட்டட பொறியாளர் என்று அறிமுகப்படுத்தினார். மூவரும் வீட்டின் முன்கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தோம்.
வீடு வெளியிலிருந்து பார்த்ததைவிட மிகவும் விசாலமாக இருந்தது. குறைந்த பட்சம் ஐந்து பெரிய படுக்கையறைகளும், ஒரு நீள் சதுரத்தில் வரவேற்பு-கம்-உணவறை, மிகவும் விசாலமான எல்லா வசதிகளையும் கொண்ட சமையலறை, அலுவலக அறை, என பார்ப்பதற்கு பிரம்மாண்டமான அமைப்பும், அழகான வேலைப்பாடுகளைக் கொண்ட தேக்கு மரத்தாலான நிலைகளும், கதவுகளும் நிறைந்த அந்த பங்களா நிலத்தின் மதிப்போடு சேர்த்து குறைந்த பட்சம் ஐம்பது லட்சம் பெறும் என்று தீர்மானித்தேன்.
உடன் வந்திருந்த பொறியாளர் கையோடு கொண்டுவந்திருந்த வீட்டின் வரைப்படத்தை சாப்பிடும் மேசையில் பரப்பி வைத்து வீட்டின் மொத்த அமைப்பையும், அளவையும் கச்சிதமாக எடுத்துரைத்தார். பார்த்த மாத்திரத்தில் அந்த சொத்து எனக்கு மிகவும் பிடித்துப் போனது. என் மனசில் ஓடிய சிந்தனைகள் என் முகத்திலும் பிரதிபலித்திருக்க வேண்டும். கணக்குப்பிள்ள என்னைப் பார்த்து சைகைக் காட்டுவதை ஓரக்கண்ணால் பார்த்து என் புருவங்களை உயர்த்தி, ‘என்ன?’ என்றேன்.
அவர் வீட்டின் பின்புற வாசலைக் காட்டி ‘அங்கே வாங்க’ என்பதுபோல தலையை ஆட்டினார். நான் பொறியாளரைப் பார்த்தேன். கணக்குப்பிள்ளை உடனே அவரைப் பார்த்து, ‘பாய், நீங்க டெரஸ்ல போய் சார் சொன்ன வேலையை பாருங்க நான் இவரை பின்னாலருக்கற கெஸ்ட் ஹவுசைக் காட்டிட்டு வரேன்.’ என்றார்.
அவரும் என்னைப் பார்த்து புன்னகைத்துவிட்டு, ‘மேல டெரஸ்லருக்கற வாட்டர் டாங்க்ல கொஞ்சம் வேலையிருக்குன்னு மேஸ்திரி சொன்னார். நான் அத பார்த்துட்டு வரேன். நீங்க இவரோட போய் கெஸ்ட ஹவுசை பார்த்துட்டு வாங்க.’ என்றபடி மாடிப் படி ஏற நான் அவசர அவசரமாக கணக்குப்பிள்ளைக்கு பின்னால் ஓடினேன். பொறியாளர் திரும்பி வருவதற்குள் அவர் என்ன சொல்லப்போகிறார் என்பதை கேட்டுவிட வேண்டும்.
அவரும் நான் அருகில் சென்றதுமே சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தம்பி வீட்ட பார்த்துட்டு ஏமாந்திராதீங்க. இது என் முதலாளியொட சொந்த வீடில்லை. இது ரெண்டு மாசத்துக்கு முன்னாலத்தான் ஒரு மார்வாடிக்கிட்டருந்து அஞ்சி வருஷ லீஸ்ல ஏதோ திட்டத்தோடத்தான் எடுத்திருக்காரு. இத இவரால மார்ட்கேஜ் பண்ண முடியவே முடியாது. சொல்லிட்டேன். அவன் ஏதாவது பத்திரத்தை ஜோடிச்சி குடுக்கக்கூட தயங்கமாட்டான். பார்த்து செய்ங்க.’ என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்.
தொடரும்.
எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தா அதுக்கு நீங்கதான் காரணமுன்னு ஒரு லெட்டர் எழுதிவச்சிரலாமான்னு யோசிக்கிறேன்:-))))
பதிலளிநீக்குஇப்படி குண்டு மேலே குண்டு போட்டா எப்படி?
பரவாயில்லை. கொஞ்சம் தில்லு முல்லு கத்துக்க உதவுது:-)
இதுக்கெல்லாமா ஹார்ட் அட்டாக் வரும். இதையெல்லாம் நேர்ல அனுபவிச்ச எனக்கே வராதபோது.
பதிலளிநீக்குமனுஷ குணமே இதுதான்.நல்லத பத்தி எழுதுங்க. அத யாரையுமே Influence பண்ணாது. ஆனா அதே யார், யாரை எப்படி ஏமாத்துனான்னு எழுதுங்க உடனே அட இப்படியெல்லாம் கூட பண்லாமான்னு ஞானம் பொறக்கும்.என்ன நான் சொல்றது சரிதானே.
என்ன ராஜ் நீங்க, இதவிட எத்தன்கல்லாம் இருக்காங்க. ஆனா அவன்கல்லாம் இன்னமும் உயிரோட இருக்காங்களே. வெளிப்படையா எழுதுனா அவ்வளவுதான் என்கதி.
பதிலளிநீக்குThe fact that u r now IT cheif in that bank now implies that, with Gods grace u have overcome such horrible situations. Only with that good end result in mind we have to read your article. Otherwise, like Thulasiakka says, heart attack will come to us!!, if not for u!! (Releived on seeing your post reg immeadiate replies during office hours).
பதிலளிநீக்குsir, any numbering mistake, is it 33?
பதிலளிநீக்குரொம்ப சுவராசியமாயும், ஆர்வாமுயும் இருக்கிறது தொடர்... திக்திக்...திக்திக்...
பதிலளிநீக்குYes Krishna there is a mistake in the episode number. It should be 33. I've changed it. Thanks.
பதிலளிநீக்குAs you said by God's grace I could progress in my career without much blemish.
But I had to suffer some ignominy on my way. I'll narrate those painful moments also in my posts.
வாங்க அன்பு, நன்றி.
பதிலளிநீக்குஇதை எழுதும்போதுகூட நான் அன்று அனுபவித்த திக் திக்கை மறுபடியும் அனுபவிக்கிறேன்.
அன்பு சொன்னா மாதிரி திக் திக்குன்னு ஒரு க்ரைம் நாவல் எழுதறா மாதிரி எழுதறீங்க.
பதிலளிநீக்குநாளைக்கு என்ன நடக்கும்னு தெரிஞ்சிக்கறதுக்கு ஆவலாயிருக்கு.
டி.பி.ஆர். ஜோசஃப்,
பதிலளிநீக்குமுதல் முறை உங்கள் பதிவிற்கு வருகிறேன். உங்கள் அனுபவம், நீங்கள் சொல்லும் விதம் அற்புதம். அடுத்த episode எப்போ ?
அன்புடன்,
தேசிகன்
http://www.desikan.com/blogcms/
கம்பெனிக்கு கம்பெனி இதுதான் விஷயம் போல இருக்கு. இங்கயும் பாலிடிக்சு. அங்கயும் பாலிடிக்சு. என்னவோ சாமி. நடக்குறது நல்லா நடந்தாச் சரி.
பதிலளிநீக்குகரெக்ட் ராகவன்.
பதிலளிநீக்குஆனா ஒன்னு. முதலாளி விசுவாசத்தோட உறவுமுறைக்கு முக்கியத்துவம் கொடுத்த அந்த கணக்குபிள்ளைய என்னால இன்னைக்கி வரைக்கும் மறக்க முடியலை. அவர் காலமாகி சுமார் பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன.
மிக்க நன்றி தேசிகன்.
பதிலளிநீக்குஉங்கள் பதிவுகளைப் படித்துவிட்டு பின்னூட்டம் இடுகிறேன்.
அடுத்த பதிவு திங்கள்கிழமை.
உங்கள் பதிவு வளரத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு பாடமாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை. நன்றாகப் பகிர்ந்து கொள்கிறீர்கள் அய்யா.
பதிலளிநீக்கு