29 டிசம்பர் 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 46

சட்டென்று எனக்கு கோபம் வந்தது. ‘என்னங்க இது அக்கிரமம்! அதுக்கெதுக்கு என்னை வெக்கேட் பண்ண சொல்றீங்க?’

‘சார் உங்களுக்கே தெரியும். இது ஒரு அரசாங்க விடுதி. இதுல அரசு விருந்தினர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கணும்னு அரசு ஆணை. நாயக்கர் ரூம் கேட்டப்பவே அவர்கிட்ட அதிகபட்சம் ரெண்டு நாளைக்குத்தான் ரூம் கொடுக்க முடியும்னு சொல்லியிருந்தோம். அவரும் சரின்னு சம்மதிச்சப்புறம்தான் ரூம் கொடுத்தோம். அதனால நீங்க வெக்கேட் பண்றத தவிர வேற வழியில்ல சார்.’

‘சரிங்க. இத நேத்தே செக் இன் பண்ணப்போ சொல்ல வேண்டியதுதானே. இப்படி திடுதிடுப்புன்னு சொன்னா ரெண்டு வயசு குழந்தைய வச்சிக்கிட்டு நான் நடுத்தெருவுலயா நிக்க முடியும்?’

எதிர் முனையில் அவர் யாருடனோ விவாதிப்பது லேசாக கேட்டது. ‘சார் நாயக்கர் உங்கக்கிட்ட சொல்லியிருப்பாருன்னு ரிசப்ஷன்ல நினைச்சிருக்காங்க. நீங்க ஒன்னும் இப்பவே போகவேணாம் சார். உங்களால முடிஞ்சா டவுண்லருக்கற லாட்ஜ்ல கிடைக்கிதான்னு பாருங்க. இல்லன்னா நாங்களே அரேஞ்ச் பண்ணித் தரோம். சாரி ஃபார் தி ட்ரபிள் சார்.’

எனக்கு கோபம் அதிகரித்தாலும் ஹோட்டல் சிப்பந்திகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட விருப்பமில்லாமல். ‘சரிங்க. நீங்களே ட்ரை பண்ணி ஒரு டபுள் ரூம் புக் பண்ணி குடுங்க.’ என்று இணைப்பைத் துண்டித்தேன். ‘சை! இன்னைக்கி காலைல முழிச்ச முகமே சரியில்லை போலருக்குதே.’ என்ற முனகலுடன் நிமிர்ந்தேன். எதிரில் முகத்தில் கேள்விக்குறியுடன் என் மனைவி, குளித்து முடித்த கோலத்துடன். ‘யாருங்க ஃபோன்ல? எதுக்கு இப்படி கோபப் பட்டீங்க? நீங்க போட்ட சத்தம் பாத்ரூம்ல கேக்குது. நல்ல வேளை பாப்பா முளிச்சிக்கலை.’

‘பின்னே திடீர்னு கூப்ட்டு ரூம் காலி பண்றான்னா கோபப்படாம கொஞ்ச சொல்றியா?’

‘ஐயையோ, காலி பண்ணிட்டு எங்க போறது? என்னங்க நீங்க? முதல்லயே விசாரிச்சிட்டு எடுக்க மாட்டீங்களா?’ என்ற என் மனைவியை எரிச்சலுடன் பார்த்தேன்.

சட்டென்று ஒரு யோசனை உதித்தது. என் மனைவியையும் மகளையும் சிறிது நாளைக்கு தூத்துக்குடிக்கு அனுப்பிவிட்டு இந்த வீட்டுப் பிரச்சினை தீரும் வரை தனியாக ஒரு விடுதியில் தங்குவது என்று.

தலையை உலரவைத்துக்கொண்டிருந்த என் மனைவியைப் பார்த்தேன். ‘இங்க பார். உன்னையும் பாப்பவையும் பஸ் ஏத்தி விடறேன். தனியா உங்க ஊருக்கு போயிரமாட்டே? மெட்றாஸ்லருந்து சாமானெல்லாம் வந்ததுக்கப்புறமா உங்கம்மா கூட புறப்பட்டு வந்தேன்னா நல்லாருக்கும், என்ன சொல்றே?’

ஊருக்கு போ என்றால் கசக்காவா செய்யும்? உடனே, ‘சரிங்க. நீங்க போய் டிக்கெட் கிடைக்குதான்னு பாருங்க. பகல் நேரம்தானே, த்ரூவா தூத்துக்குடிக்கு டிக்கட் கிடைச்சா நானே போய்க்கறேன். மதுரைல இறங்கி போறதுதான் கொஞ்சம் சிரமம். பாப்பா வேற இருக்கில்ல..’

அப்பாடா ஒரு பிரச்சினை விட்டது. தனியாளாய் இரண்டு, மூன்று நாளைக்கு ஏதாவது ஒரு அறையில் தங்கி சமாளித்துக்கொள்ளலாம்.

‘சரி. நீ தலைய காய வச்சிட்டு பலாரத்துக்கும் பாப்பாவுக்கு பாலுக்கும் ரூம் சர்வீசுக்கு சொல்லிரு. நான் குளிச்சிட்டு வந்து பஸ் ஸ்டாண்டுக்கு போறேன். அதுவரைக்கும் வேற ஏதாவது ஃபோன் வந்தா அப்புறமா கூப்பிடச் சொல்லு.’ என்றவாறு கட்டிலில் கிடந்த துவாலையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தேன்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் பயணச்சீட்டை எடுத்து என் மனைவியையும் மகளையும் தூத்துக்குடி செல்லும் பேருந்தில் நடத்துனரிடம் அறிமுகப்படுத்தி பாதுகாப்பாய் அனுப்பிவைத்தேன்.

இனி அடுத்தது வீட்டுப் பிரச்சினை. காலையில் சென்னையிலிருந்து வந்த அறிவுரை இப்போதும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது..

“நாயக்கர் தஞ்சாவூர்ல மட்டுமில்ல சுத்தி இருக்கிற இருபது இருபத்தஞ்சி கிராமங்கள்லயும் ரொம்பவும் செல்வாக்கு இருக்கறவர். அவரால உங்க பேங்குக்கு நல்லமாதிரியான பார்ட்டிங்களயெல்லாம் கொண்டுவரமுடியும். அதனால ஆரம்பத்திலயே அவர் மனசு கோணாம பார்த்துக்கறது நல்லதுன்னு நினைக்கறேன். அதனாலத்தான் சொல்றேன். மத்தபடி உங்க இஷ்டம்.”

என்னுடைய அறைக்கு திரும்பி நெடுநேரம் யோசித்தேன். நானோ பட்டணத்துவாசி. சென்னையை விட்டு சிறு நகரங்களில் வசித்ததே இல்லை. அதனால் கிராமவாசிகளின் நட்பு முறை, பழக்கங்கள், பேச்சு எல்லாமே எனக்கு பரிச்சயமில்லாத ஒன்று. அதேபோல் அவர்களுக்கிடையே இருந்த ஜாதி மற்றும் மொழியால் ஏற்பட்டுப்போன பிரிவுகளும் என்னால் புரிந்துக்கொள்ள முடியாததாய் இருந்தது.

என் வாடிக்கையாளர் கூறியதுபோல இப்பிரிவினைகளை யார் நினைத்தாலும் ஒரே இரவில் மாற்றிவிடமுடியாதென்பது நிதர்சனமான, மறுக்க முடியாத உண்மை.

என் முன்னே இருந்த பிரச்சினைக்கு இரண்டு தீர்வுகள் இருந்தன. ஒன்று, நாயக்கருடைய கருத்தை புறக்கணித்துவிட்டு இப்போது பார்த்திருந்த வீட்டில் குடியேறுவது.

இரண்டாவது, அவருடைய கருத்தை ஏற்றுக்கொண்டு அவர் வேறொரு வீட்டை அமைத்து தரும்வரை பொறுத்திருப்பது.

ஆனால் இரண்டிலும் சிக்கல்கள் இருந்தன.

முதலாவது தீர்வில் நாயக்கருடைய பகை. அதனால் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருந்தது. அவருடைய கோவை வாடிக்கையாளர்களில் யாரேனும் ஒருவருக்கு அதே ஊரிலிருந்த என்னுடைய வட்டார அலுவலகத்துக்கு பழக்கம் இருக்க வாய்ப்புண்டு. அவர் மூலம் என்னுடைய வட்டார மேலாளருக்கு தெரியவந்தால் எனக்கே பிரச்சினையாக முடியலாம். 'தஞ்சையில் நம்ம புதிய கிளையைத் திறப்பதற்காகத்தான் உங்களை அனுப்பினோம். தஞ்சையிலுள்ள ஜாதிப் பிரச்சினைக்கு தீர்வு காண அல்ல' என்று அவர் குற்றம் சாற்றும் பட்சத்தில் நான் தலைகுனிய வேண்டியிருக்கும்.

நேற்று நாயக்கர் தரகரை நடத்தியவிதத்திலிருந்து அவரே வேண்டுமானாலும் என்னுடைய வட்டார மேலாளரின் தொலைப்பேசி எண்ணைக் கண்டுபிடித்து புகார் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதுவுமல்லாமல் நாயக்கர் நினைத்தால் என்னுடைய கிளைக்கு தகுந்த இடம் கிடைக்கவிடாமல் தொல்லைக் கொடுப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஆக, முதல் தீர்வு இந்த விஷயத்தை முடிவுக்கு கொண்டுவராது என்று தோன்றியது.

சரி, அடுத்த தீர்வில் என்ன பிரச்சினை?

நேற்று நான் முன்தொகையாக கொடுத்த ரூ.1000/- திரும்பப் பெற வேண்டுமானால் வீட்டு உரிமையாளரைச் சந்தித்து பேச வேண்டியிருக்கும். சரி, அப்படியே போய் சந்தித்தாலும் நேற்று ‘வீடு ரொம்பவும் பிடிச்சிருக்குங்க. நீங்க வேற யாருக்கும் வீட்டைக் கொடுக்காம இருக்கறதுக்குத்தான் இந்த ரூ.1000/-‘ என்று சொல்லிவிட்டு இப்ப போயி என்னன்னு சொல்றது? நீங்க கீழ் சாதின்னா? இப்படி யோசிப்பதே கேவலமாய் பட்டது எனக்கு.

பேசாம சேர்மன் சொன்ன கப்பல் பார்ட்டிக்கு லோன் கொடுத்திருந்தா இந்த பிரச்சினையே வந்திருக்காதில்ல? பெரிய நீதிமான் மாதிரி ரூல் பேசினே.. இப்ப என்னாச்சி, ஊர் பேர் தெரியாத ஊர்ல வந்து லோல் படுறே? என்று குதர்க்கம் பேசிய என் உள் மனதை அடக்க முடியாமல் தடுமாறினேன்.

என் யோசனையை கலைக்கும் விதமாக அடித்த தொலைப்பேசியையே குழப்பத்துடன் சிறிது நேரம் பார்த்துவிட்டு ஒலிவாங்கியை எடுத்தேன். எதிர்முனையில் நாயக்கர்!

‘சொல்லுங்க சார்.’ என்றேன் தயக்கத்துடன்.

‘என்ன சார் உங்க வீட்டம்மாவையும் குழந்தையையும் ஊருக்கு அனுப்பிட்டீங்க போல?’

நான் திடுக்கிட்டு போய் ஒலி வாங்கியையே பார்த்தேன். இவருக்கென்ன ஊரெல்லாம் உளவாளிகள் இருக்கிறார்களா?

அவர் எதிர்முனையில் உரக்க சிரிக்க ஒலிவாங்கியை சற்றே தள்ளிப்பிடித்தேன். ‘என்னாடா இது அதுக்குள்ள இவனுக்கு எப்படி தெரிஞ்சதுன்னு பாக்கறீங்களா? நேத்தக்கி இங்க வந்திருந்தீங்க இல்லையா? அதுல ஒருத்தன் உங்கள இன்னைக்கி மைய பஸ் ஸ்டாண்டுல பாத்திருக்கான். அவந்தான் உடனே ஓடியாந்து தகவல் சொன்னான்.’

சரிதான். இந்தாளுக்கு தெரியாம நாம் இந்த ஊர்ல ஒன்னும் செய்ய முடியாது.. ஆக, என்னுடைய முதல் தீர்வு நிச்சயம் பிரச்சினையை பெரிதாக்குமே தவிர குறைக்காது என்பது தெளிவு..

‘என்ன சார், சைலண்டாயிட்டீங்க. சொல்லுங்க.. எதுக்கு அவங்கள சொல்லாம கொள்ளாம ஊருக்கு அனுப்பிச்சிட்டீங்க? நேத்து நீங்க பார்த்த வீட்டை நான் வேணாம்னு சொல்லிட்டேன்னா?’

‘அதெல்லாம் ஒன்னுமில்லை சார். எத்தனை நாளைக்கு ஹோட்டல்ல ரூம் போட்டு தங்கறதுன்னு பார்த்தேன். அத்தோட இந்த ரூமை வேறு காலி பண்ண சொல்றாங்க. அதான் அவங்களாவது நிம்மதியா ஊர்ல ஒரு வாரத்துக்கு இருக்கட்டுமேன்னு அனுப்பி வச்சேன். உங்கள பாக்கறதுக்கு கிளம்பிக்கிட்டு இருந்தேன். அதுக்குள்ள நீங்களோ பண்ணிட்டீங்க..’

சலிப்புடன் உச் கொட்டிய நாயக்கர், ‘ஆமா சார். இந்த கவர்மெண்ட் லாட்ஜ்னால இப்படித்தான். நம்ம பெரிய கோயில் கட்டி இந்த வருஷத்தோட ஆயிரம் வருஷம் பூர்த்தியாவுது. அதுக்கு ஒரு வாரத்துக்கு பெரிசா விழா எடுக்கறோம். நானும் விழா கமிட்டி உறுப்பினராக்கும். அதான் ரூமை காலி பண்ண சொல்லியிருப்பான். நீங்க வேற லாட்ஜெல்லாம் தேடி அலைய வேணாம் சார். கவலைய விடுங்க. நம்ம நண்பரோட கெஸ்ட ஹவுஸ் இப்ப நீங்கருக்கற ரூமைவிட விசாலமா இருக்கும். அத ஒரு வாரத்துக்கு அரேஞ்ச் பண்ணி தரேன். நீங்க நேத்து பார்த்த வீட்டு அட்வான்ஸ் தொகையை போய் வாங்கிட்டு வந்திருடான்னு தரகன அனுப்பிருக்கேன். அவன் வந்ததும் உங்ககிட்ட வருவான். உங்க பெட்டிய அவன் கிட்ட குடுத்துருங்க. கெஸ்ட ஹவுசை உங்களுக்கு காமிப்பான். அப்புறம் ஒரு விஷயம் சார்.. சொல்ல மறந்துட்டேன்..’ என்றதும் குழம்பிப்போனேன். வேறேதும் பிரச்சினையாயிருக்குமோ என்று ஓடியது என் எண்ணம்.

தொடரும்

15 கருத்துகள்:

  1. Defintely a mega serial materials u have!! Very interesting write ups. Jokes apart, this caste division existing in outside chennai is really mind blowing. I will choose this caste division on par with political corruption for our downside in all thru this years.
    (Sir, when were u in Katpadi?)

    பதிலளிநீக்கு
  2. Welcome Krishna, Thanks for your comments.

    I studied in Don Bosco High School, Katpadi, during 1963 to 66.

    பதிலளிநீக்கு
  3. Dear Krishna,

    Division of people on the basis of caste persists in Chennai also, why even in Mumbai I had experienced this!

    It is clearly seen at Villages because they do not know how to hide their feelings.

    பதிலளிநீக்கு
  4. "பேசாம சேர்மன் சொன்ன கப்பல் பார்ட்டிக்கு லோன் கொடுத்திருந்தா இந்த பிரச்சினையே வந்திருக்காதில்ல?"
    அப்படிக் கொடுத்திருந்தா வேற பிரச்சினை வந்திருக்குமுல்ல. அது சரி அந்த கப்பல் பார்ட்டிக்கு கடன் கொடுத்தார்களா, அது திரும்ப ஒழுங்காகக் கட்டப்பட்டதா? அவ்வாறு கட்டப்படாமல் இருந்திருந்தால் சம்பந்தப்பட்ட மேலாளர்தானே பாதிக்கப்பட்டிருப்பார்?

    அப்படியே அது கட்டப்பட்டிருந்தாலும் அது நீங்கள் முதலில் கறாராக இருந்ததன் பலனாகத்தான் இருக்கும். அதற்காக உங்களுக்கு கிரீடம் எல்லாம் வைத்திருக்க மாட்டார்கள்தான். ஆனாலும் சம்பந்தப்பட்ட பல பேருக்கு அது புரிந்திருக்கும் அல்லவா.

    அதே போல மூப்பனார் அவர்கள் கைகாண்பித்தவர்களுக்கெல்லாம் கடன் கொடுத்து சிக்கலில் மாட்டிக் கொண்ட கோபால கிருஷ்ணன் அவர்களே இப்போது நினைவுக்கு வருகிறார். மூப்பனார் அவர்களிடம் நிருபர்கள் இது பற்றி கேட்ட போது அவர் பாக்கை மென்று கொண்டே "இந்தாளுக்கு ரூல்ஸ்படி ஏதாவது செய்ய முடிந்தால் செய்யவும்" என்றுதான் கேட்டு கொண்டேன் என்று கைகழுவிவிட்டார். அச்சமயம் இதை பத்திரிகையில் படித்த நான் மிகவும் எரிச்சல் அடைந்தேன்.

    அதே போல கடன் மேளாவில் கடனுக்காக செக்யூரிடி கேட்டார் என்பதற்காக ஒரு வங்கி மேனேஜரை எல்லார் எதிரிலும் திட்டி அவமானப் படுத்திய ஜனார்த்தன் பூஜாரி அவர்களும் அவ்வாறே "கடன் கொடுக்கும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகளை மறக்காமல் இருப்பது வங்கி மேனேஜரின் பொறுப்பு என்று விலாங்கு மீனாக பிற்காலத்தில் நழுவினார்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  5. வாங்க டோண்டு சார், வணக்கம்.

    அந்த கப்பல் பார்ட்டிக்கு எனக்கு அடுத்ததாய் வந்த மேலாளர் பரிந்துரை செய்து மேலிடத்திற்கு அனுப்பியதென்னவோ உண்மைதான். ஆனால் சேர்மனே அதை நிராகரித்துவிட்டார். பரிந்துரை செய்த மேலாளருக்கு என்னுடைய தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு சின்ன குட்டும் கிடைத்தது!

    அரசியல்வாதிகளென்ன, சில சமயங்களில் வங்கியிலுள்ள மேலதிகாரிகளே ஒரு கடன் வாராக்கடனாகும் போது தங்களுக்கு கீழேயுள்ள அதிகாரிகளின் மேல் பழியைப் போட்டு தப்பிவிடுவார்கள். பாவம் பெரும்பாலும் கிளை மேலாளர்கள்தான் அகப்பட்டுக்கொண்டு முழிப்பார்கள்!


    பேரு பெத்த பேரு நீலு தாகலேது என்று தெலுங்கில் ஒரு சொல் உண்டு. அதுபோல்தான் மேலாளர்களின் நிலையும். புகழைவிட பொல்லாப்பே அதிகம்.

    பதிலளிநீக்கு
  6. தர்ம சங்கடமான நிலைமைதான். இருந்தாலும் ஒரு சிறு சந்தேகம். உங்கள் கப்பல் பார்ட்டியையே எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கண்டுபிடித்ததையெல்லாம் தெளிவாக மேற்கோள் காட்டி கடனை மறுக்குமாறு சிபாரிசு எழுத்து ரூபத்தில் செய்திருந்தால் சேர்மன் அதை ஓவர்ரூல் செய்ய முடியுமா?

    நான் வெளி ஆள், சுலபமாகக் கேட்டு விட்டேன் என நினைக்கிறேன். ஆனால் அவ்வாறு சிபாரிசு செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவல். ஏனேனில், நிச்சயமாக உங்கள் கண்டுபிடிப்புகளை வைத்துத்தான் சேர்மன் அந்த கடனை ரிஜக்ட் செய்திருக்க வேண்டும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  7. சேர்மன் அதை ஓவர்ரூல் செய்ய முடியுமா?

    ஆனால் அவ்வாறு சிபாரிசு செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவல். //

    அது சேர்மனைப் பொறுத்தது. அவர் நடுநிலையாளராக இருந்தால் மேலாளருடைய பரிந்துரையை ஆராய்ந்து பார்த்து அதில் பாரபட்சம் இல்லை என்பது தெரியவரும் பட்சத்தில் கடனை நிராகரிப்பதுடன் புத்திசாலித்தனமாய் செயல்பட்ட மேலாளரை பாராட்டவும் செய்வார். என் விஷயத்திலும் அது நடந்திருக்கிறது.

    ஆனால் தேவையில்லாத ஈகோ பிடித்த சேர்மனாக இருந்தால் நான் கொண்டு வந்த பார்ட்டியை நீ என்ன குறை சொல்வது என்று குற்றம் கண்டுபிடித்து அந்த மேலாளரையே தண்டித்தாலும் தண்டிப்பார்.

    மேலாளரானாலும், சேர்மனாலும் எல்லாம் அற்ப மனிதர்கள்தானே.
    என்ன சொல்றீங்க டோண்டு சார்!

    பதிலளிநீக்கு
  8. இப்பத்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே நம்ம வீட்டுக்கு வந்திருந்த நணபரின் மனைவி,
    நாங்க என்ன ஜாதி என்று கேட்டாங்க. அவுங்க கேரளா கிறிஸ்த்தவர்கள்.

    நான் சிரிச்சுக்கிட்டே சொன்னேன் மனுஷ ஜாதின்னு:-)

    சாதி படுத்தும் பாடு!

    பதிலளிநீக்கு
  9. வாங்க துளசி,

    பார்த்தீங்களா? கடல் கடந்து போனாலும் நம்ம இந்திய மூளையே மூளைதான். கரெக்டா சாதிய பத்தி கேக்க வச்சிருது பாருங்க.

    அதுவும் கேரளாகாரங்க. தேவைதான்.

    பதிலளிநீக்கு
  10. //சட்டென்று ஒரு யோசனை உதித்தது. என் மனைவியையும் மகளையும் சிறிது நாளைக்கு தூத்துக்குடிக்கு அனுப்பிவிட்டு இந்த வீட்டுப் பிரச்சினை தீரும் வரை தனியாக ஒரு விடுதியில் தங்குவது என்று//

    என்ஜாய் பண்ணியிருக்கீங்க...நானெல்லாம் ஊருக்கு போன்னாலும் போக மாட்றா சார்..

    //இந்திய மூளையே மூளைதான். கரெக்டா சாதிய பத்தி கேக்க வச்சிருது பாருங்க.//

    நகரத்திலேயோ அல்லது தமிழ்மணத்திலேயோ யாராவது சாதியை பத்தி கேட்டால் அசிங்கம் தான். ஆனால் கிராமத்தில் கேட்பான் சார்...அதற்கு ஒரு பரிமாணத்தில் நாம் சிந்தித்து காரணம் சொல்லமுடியாது...

    சில கிராமத்து கிளைகளில் வங்கி மேலாளர் கூட ஆட்கள் சாதி தெரியாம அவங்ககூட டீல் பண்றது கஷ்டம்.எந்த திசையிலிருந்து எந்த பிரச்சனை வரும்னு தெரியாது..

    எங்க ஊர்ல எங்க பியூன்(தலித்) ஆறாயிரம் சம்பளம் வாங்கியும் ஊரை ஒட்டி இருந்து சேரில தான் வீடு கிடைச்சது. அப்புறம் நான் ஊருக்குள்ள வெறும் 350 ரூபாய்க்கு ஒரு நெருங்கிய கஷ்டமர் மூலமாக அவருக்கு வீடு ஏற்பாடு பண்ணினேன். இதனால் ஊரில் சிலரை நான் பகைத்துக்கொள்ள வேண்டியும் வந்தது.

    அங்க floating population இல்லை. அவனவன் மூஞ்சை தான் பார்த்துகிட்டு வாழனும்கறது ஒரு ரீசன்.

    பதிலளிநீக்கு
  11. வாங்க முத்து,

    நானெல்லாம் ஊருக்கு போன்னாலும் போக மாட்றா சார்..//

    ரெண்டு போடுங்க. ஓடியே போயிருவாங்க.. அவங்க என்னை போடாம இருந்தா போறாதான்னு நீங்க சொன்னா நோ கமெண்ட்ஸ் :-)

    சில கிராமத்து கிளைகளில் வங்கி மேலாளர் கூட ஆட்கள் சாதி தெரியாம அவங்ககூட டீல் பண்றது கஷ்டம்//

    நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட். அது பிசினஸ் பண்றதுக்கு. அப்போ நாம யாரையும் டிஸ்கிரிமினேட் பண்றதில்லை. நாம வாடிக்கையாளரை எப்படி டீல் பண்றதுங்கறதுக்கு அவங்களோட ஜாதிய தெரிஞ்சிக்கறதுல தப்பேயில்லை. ஆனா அத அவங்கள இல்ட்ரீட் பண்றதுக்காக யூஸ் பண்ணா அது ரொம்ப தப்பில்லையா? அந்த மாதிரி நிகழ்ச்சிகளைத்தான் நான் சுட்டிக்காட்ட முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. //It is clearly seen at Villages because they do not know how to hide their feelings. //

    நிசம்தானுங்கோ

    பதிலளிநீக்கு
  13. வாங்கோ பட்டிணத்து ராசா,
    உண்மைதானுங்கோன்னு ஒத்து ஊதுனதுக்கு நன்றிங்கோ.

    பதிலளிநீக்கு
  14. வாங்க ராஜ்,

    லீவ்லருந்து வந்தவுடனே வேலை கழுத்தை நெரிச்சிருக்குமே. நான் எத்தனை நாள் லீவ்ல போனாலும் நான் பாக்கற வேலையை திரும்பி வந்து நானேதான் பார்க்கணும். திரும்பி வந்து குவுஞ்சி கிடக்கற பேப்பர்ச பார்த்தா ஏண்டா லீவ்ல போனோம்னு இருக்கும்.

    பதிலளிநீக்கு