26 டிசம்பர் 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 43

அதில் வேடிக்கை என்னவென்றால் என் மத்திய கிளையின் மேலாளருக்கு எதிராக என்னுடைய தலைமையகத்திற்கு கிடைத்த ஒரு புகாரின் உண்மையைக் கண்டுபிடித்து அறிக்கையனுப்புவதற்காகத்தான் என்னை அனுப்பியிருந்தார்கள், ரகசியமாக. என்னுடைய விசாரிப்பின் அறிக்கையை இவர் படித்து பார்க்கும்போது என்னைப் பற்றி இவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று நினைத்தேன்.

இதைப் பற்றி நேரம் வரும்போது கூறுகிறேன்.

நானும் என் மனைவியும் தஞ்சாவூரில் வந்து இறங்கியபோது அதிகாலை 4.00 மணி. சென்னையிலிருந்து புறப்படுவதற்குமுன் என்னுடைய சென்னை கிளையின் வாடிக்கையாளர்களுள் ஒருவருடைய தஞ்சை நண்பர் நாயக்கர் (முழுப்பெயர் வேண்டாம். அவர் காலமாகிவிட்டாலும் அவருடைய வாரிசுகள் இன்று தஞ்சையில் மிகவும் செல்வாக்குடன் இருக்கிறார்கள்.) மூலமாக தஞ்சை ரயில்நிலையத்துக்கு அருகிலிருந்த தமிழ்நாடு ஹோட்டலில் அறைக்கு ஏற்பாடு செய்திருந்ததால் ரயிலிலிருந்து இறங்கியவுடனே எந்தவித சிரமுமில்லாமல் எங்களுடைய தஞ்சைவாசம் ஆரம்பித்தது.

மேற்கூறிய நாயக்கர் தஞ்சையில் அரிசி மொத்த வியாபாரியாக இருந்தார். அத்துடன் கோவையிலிருந்த பல மொத்த அரிசி வியாபாரிகளுக்கு தஞ்சை விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்து, தஞ்சை நகரத்தையொட்டியிருந்த Rice Millகளில் சுத்தம் செய்து அனுப்பி வைக்கும் கமிஷன் ஏஜென்ட் ஆகவும் இருந்தார்.

நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால் பெருநகரவாசிகளுக்கே உரித்தான பந்தா இல்லாமல் மிகவும் எளிமையாக இருந்தார். நான், குளித்து முடித்து அவரைத் தொலைபேசியில் அழைக்கலாம் என்று நினைத்தபோது அவர் பார்வையாளர் அறையில் வந்து காத்திருப்பதாக என்னுடைய அறைக்கு தொலைப்பேசி வரவே ஆச்சரியத்துடன் அவசர அவசரமாக உடை மாற்றிக்கொண்டு சென்றேன்.

என்னுடைய சென்னை கிளை வாடிக்கையாளர் என்னைப் பற்றி என்ன கூறியிருந்தாரோ தெரியவில்லை, என்னைக் கண்டதும் உடனே எழுந்து நின்று கரம் கூப்பி மிகவும் மரியாதையுடன் காலை வணக்கம் சொன்ன விதம் என்னை சங்கடத்திற்குள்ளாக்கியது. என்னுடைய தந்தை வயதிருக்கும் அவருக்கு.

பளபளக்கும் கருத்த மேனி நிறம், வெள்ளை வெளேர் என்ற கதர் சட்டை கதர் வேஷ்டியில் சற்று தூக்கலாகவே தெரிந்தது. மேட்சிங் நிறத்தில் நெற்றியிலிருந்து மேல் தூக்கி வாரப்பட்டிருந்த தலை முடியும், நீண்டு, திரண்டு வளர்ந்திருந்த மீசையும் நெற்றியில் பிரதானமாய் தோன்றிய சந்தணப் பொட்டும் ஒரு கிராமத்து மிராஸ்தார் தோரணத்தை அளித்தாலும் அவருடைய தோற்றத்திற்கு சற்றும் பொருந்தாத எளிமையும் சேர்ந்து பார்ப்பவர் மனதில் ஒரு கண்ணியமான தோற்றத்தை ஏற்படுத்தியது.

அசப்பில் பார்த்தால் மோட்டார் சுந்தரம் பிள்ளை நடிகர் திலகத்தின் சாயல். என்னையுமறியாமல் இதை நான் அவரிடமே கூறிவிட்டேன்.

நடிகர் திலகத்தின் கனத்த குரலில் உரக்க சிரித்தார். ‘நமக்கும் சூரக்கோட்டைதான் சார்.’ என்றார். பிறகு தொடர்ந்து, ‘உங்கள பத்தி நம்ம நண்பர் நிறைய சொல்லியிருக்கார் சார். உங்களுக்கு உடனடியா குடியிருக்க ஒரு வீடு வேணும், அவ்வளவுதானே சார்? எனக்கு தெரிஞ்ச வீட்டு தரகர் கிட்ட சொல்லியிருக்கேன். ஒரு மணி நேரத்துல வந்துருவான். இன்னைக்கி சாயரட்சைக்குள்ள முடிச்சிரலாம், சார்.’ என்று வார்த்தைக்கு வார்த்தை 'சார்' போட்டது என்னை மேலும் தர்மசங்கடத்திற்குள்ளாகியது.

நடிகர் திலகத்தின் குரல் மாடுலேஷன்கூட கச்சிதமாக அப்படியே இருந்ததுபோல் தோன்றியது எனக்கு. ஒருவேளை பிரமையோ என்றும் நினைத்தேன்.

‘சரி சார். நானும் என் மனைவியும் வந்திருக்கோம். இன்னைக்குள்ள வீடு அமைஞ்சிட்டா நல்லாருக்கும். உங்கள பத்தியும் உங்க நண்பர் என் கிட்ட நிறைய சொல்லியிருக்கார். நீங்கதான் எங்க கிளைக்கு வேண்டிய இடத்தையும் பிடிச்சி தரணும். நீங்க இதே ஊர்ல ரொம்ப வருஷமா இருக்கறதனாலதான் சார் கேக்கறேன். எனக்கும் உங்களவிட்டா எனக்கு வேற யாரும் தெரியாதில்லையா?’ என்றேன்.

‘செஞ்சிரலாம் சார். நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் பத்து மணிக்கு மேல தரகர அனுப்பிவைக்கறேன். முதல்ல வீட்டை பிடிச்சி சாமானெல்லாம் கொண்டுவந்து செட்டிலாயிருங்க. பிள்ளைங்களுக்கு ஸ்கூல்ல அட்மிஷன் வேணும்னாலும் சொல்லுங்க. எனக்கு ரெண்டு மூனு ஸ்கூல் கரஸ்பான்டன்ட்ஸ் கூட தெரியும்.’

நான் நன்றியுடன் அவரைப் பார்த்து புன்னகைத்தேன். ‘எனக்கு ரெண்டு வயசுல ஒரு பொண்ணு மட்டும்தான். அதனால இன்னும் ஒரு வருஷத்துக்கு அந்த கவலை இல்லை.’

‘அப்படீயா சார்.'என்று மீண்டும் உரத்த குரலில் சிரித்தார். 'நான் பார்த்த பாங்க் மேனேசர்ங்கல்லாம் நாப்பது நாப்பத்தஞ்சி வயசு ஆளுங்க. படிக்கற பசங்க இருப்பாங்க. அந்த நினைப்புல கேட்டேன். நீங்க தரகரோட போங்க. வீடும் பிடிச்சி வாடகையும் பிடிச்சிருந்தா தரகர் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிறுங்க. வீட்டுக்காரர்கிட்ட பேசி உங்களுக்கு வீடு கிடைக்கறத நான் பார்த்துக்கறேன். இங்க அநேகமா ரெண்டு மூனு ஜாதிகாரங்கதான் வீடு சொந்தமா வச்சிருப்பாங்க. அதுல - - - ஜாதிகாரங்க வீடுக நல்லாருந்தாக்கூட நமக்கு வேணாம். போயிராதீங்க. இன்னொன்னு. நீங்க கிறீஸ்தவங்கன்னு சொன்னதுமே இன்ன ஜாதிதான் நினைச்சுக்கிட்டு வீடு தரமுடியாதுன்னு சொல்வாங்க. நீங்க வேலை செய்யற பாங்கும் இங்க யாருக்கும் தெரியறதுக்கு வாய்ப்பில்லாததனால நீங்களா இதையெல்லாம் வீட்டுக்காரங்க கிட்ட சொல்லா வேணாம். நம்ம தரகர்கிட்ட உங்களபத்தி சொல்லியிருக்கேன். நீங்க போய் வீடு புடிச்சிருக்கான்னு மட்டும் பாருங்க. மத்தத நான் பேசி முடிச்சி தரேன்.’

சென்னையிலேயே பிறந்து வளர்ந்த எனக்கும் இந்த ஜாதி விஷயங்களிலெல்லாம் அத்தனை அக்கறையில்லை. நான் காட்பாடியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் என் தந்தைக்கு திடீரென சென்னைக்கு மாற்றலாகிவிட்டதால் நான் ஒன்றரையாண்டுகள் பள்ளி மாணவர் விடுதியில் தங்கி படிக்க நேர்ந்தது. காட்பாடி, வேலூரை சுற்றியிருந்த சுமார் ஐம்பது கிராமங்களில் வசித்த நடுத்தர, மற்றும் ஏழை மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில்தான் முதன் முதலாக ஜாதி என்கின்ற பாகுபாடு பள்ளி பயிலும் மாணவர்கள் மனதிலும் வேரூன்றி நின்றதை பார்க்க முடிந்தது.

அப்போதெல்லாம்கூட நான் அதை பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் என்னுடைய இரண்டு வருட தஞ்சைவாசத்தில் கிராம மக்களை ஜாதி எந்த அளவுக்கு அடிமைபடுத்தி வைத்துள்ளதென்பதை புரிந்துக் கொண்டேன்.

நான் சந்தித்த சில கசப்பான விஷயங்களை வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.

நான் நாயக்கரைப் பார்த்து, ‘சரி சார். நான் வீட்டையெல்லாம் பார்த்துட்டு வந்து உங்களை பார்க்கிறேன்.’ என்று விடைபெற்றேன்.

நாயக்கர் கூறிய தரகர், ஒரு வாடகை காரில் சரியான நேரத்தில் வந்து என்னை அழைத்துச் சென்றார். தரகர்களுக்கே உரித்த பாணியில் அவர் போகும் வழி முழுவதும் தன்னுடைய நேர்மையைப் பற்றி பெருமையாக கூறிக்கொண்டதுடன் தஞ்சையிலுள்ள பெரும்பாலான வங்கி மேலாளர்கள் வீடு வேண்டுமென்றால் இவரைத்தான் தேடி வருவார்கள் என்றும் கூறினார்.

அவருடன் அன்று நாள் முழுவதும் தஞ்சையை வலம் வந்தது இதை எழுதும்போதும் அப்படியே என் கண் முன் விரிகிறது.

சென்னைவாசி போன்ற பெருநகரவாசிகளுக்கே உரித்தான கர்வம் எனக்கும் இருந்தது. சிறு நகர மற்றும் கிராமவாசிகள் என்றால் பட்டிகாடுகள், அதிக படிப்போ நாகரீகமோ இல்லாதவர்கள் என்று.

தஞ்சையில் என்னுடைய முதல் நாள் அனுபவம் என்னுடைய எண்ணத்தை உறுதிபடுத்தவே செய்தது. அது என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தினால் ஏற்பட்ட எண்ணம். அது ஒட்டுமொத்த தஞ்சைவாசிகளைப் பற்றிய எண்ணமாக நீங்கள் கருதலாகாது.

நாயக்கர் ஆரம்பத்திலேயே என்னை எச்சரித்திருந்தாலும் நான் அன்று சந்தித்த வீட்டு உரிமையாளர்கள் அனைவருமே என்னுடைய ஜாதியைப் பற்றி மீண்டும் மீண்டும் விசாரித்தபோது என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. முதலில் சந்தித்த இரண்டு வீடுகளில், ‘அதெல்லாம் உங்களுக்கு எதுக்குங்க?’ என்று நான் கோபப்பட்டபோது அவர்கள் தரகரைப் பார்த்து, ‘ஏம்யா, நீராவது இந்த மாதிரி பட்டணத்துக்காரகளுக்கு விலாவாரியா சொல்லி கூட்டிக்கிட்டு வரப்படாது? இந்த மாதிரி ---- ஆளுங்கல்லாம் (அவர்கள் பழித்து சொன்ன ஜாதி பெயரை தவிர்த்திருக்கிறேன்) இருக்கறதுக்குன்னுதான டவுணுக்கு வெளிய மெடிக்கல் காலேசுக்கு பக்கத்துல புதுசு புதுசா காலனிங்க வந்திருக்கில்ல? அங்க கூட்டிக்கிட்டு போம்யா.’ என்று ஏளனத்துடன் கூறியதைக் கேட்டு வேதனையுடன் என் மனைவியைப் பார்த்தேன். ஆனால் ‘இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லீங்க. எங்கூர்லயும் இருக்கறதுதான். இதுக்கெல்லாம் டென்ஷனாயி வந்த இடத்துல சண்டை போடாதீங்க.’ என்றார் என் மனைவி. அவர் கூறியது நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரி என்பதை தூத்துக்குடியில் பணிபுரிந்த இரண்டாண்டுகளில் அனுபவித்து புரிந்துக்கொண்டேன்!

‘சார், நீங்க இந்த மாதிரி கோபப்பட்டு பலனில்லைங்க. டவுணுக்குள்ள இன்னமும் ----- ஆளுகள தங்க விடமாட்டாங்க. மெடிக்கல் காலேஜ் வந்ததுக்கப்புறம் உங்களமாதிரி பட்டணத்துக்கார டாக்டர், நர்சம்மாங்க, டாக்டருக்கு படிக்கறவங்களுக்கெல்லாம் ஏத்தா மாதிரி புதுசு புதுசா காலனிங்க வந்திருக்கு. ஆனா பஜார்லருந்து பத்து மைலுக்கு மேல இருக்கும். உங்க கிட்ட வண்டி இருக்குங்களா? இருந்தா அங்கேயே போய் பாக்கலாம். வாடகை கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் வீடு நல்லா வசதியா இருக்கும்.’ என்றார் தரகர்.

நான் என் மனைவியைப் பார்த்தேன். அவரும் ‘சரிங்க. உங்ககிட்டதான் ஸ்கூட்டர் இருக்கில்ல? பத்து, பதினஞ்சி மைலுங்கறது பெரிய தூரமில்லையே.’ என ஆமோதிக்க நான் தரகரைப் பார்த்து தலையசைத்தேன்.

‘புதுசு புதுசா’ என்று தரகர் வர்ணித்த காலனியிலிருந்த வீடுகள் ஏறத்தாழ நான் சென்னையில் வசித்துவந்த வீடுகளைப் போலவே இருந்தன. அதில் ஒன்றை தேர்ந்தெடுத்தேன். வீட்டு உரிமையாளர் தமிழக அரசின் கூட்டுறவு வங்கியொன்றில் உயர்ந்த பதிவியில் இருந்தார். அவர் அதற்கு முன்பு பல வருடங்கள் சென்னை கிளைகளில் மேலாளராக பணிபுரிந்தவர் என்று அவருடைய மனைவி கூறியதும், ‘அப்பாடா, இவர்கள் நிச்சயம் ஜாதியைப் பற்றி கேட்கமாட்டார்கள்.’ என்று நிம்மதியடைந்தேன். நாங்கள் சென்ற சமயம் பகல் நேரமாதலால் மதிய உணவருந்த வங்கி வாகனத்தில் வந்திருந்த வீட்டு உரிமையாளர் என்னைப் பார்த்ததுமே கேட்ட முதல் கேள்வி இதற்கு முன்பு நான் சந்தித்த வீட்டு உரிமையாளர்கள் கேட்ட கேள்வியேதான், ஆனால் சற்றே பாலிஷாக இருந்தது.

நான் ஆச்சரியத்துடன் அவரையே பார்த்தேன். ‘சார் நீங்க மெட்றாஸ்ல ரொம்ப வருஷம் இருந்திக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். நீங்க போய் இப்படி..’

நான் அப்படி வெளிப்படையாக பேசியதும் அதிர்ச்சியடைந்து என்ன சொல்வதென்று தெரியாமல் தன் மனைவியையும், தரகரையும் மாறி, மாறி பார்த்தார். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. தன் மனைவியைப் பார்த்து, ‘நீயே பேசி முடிச்சிரு. சாரி சார், எனக்கு அர்ஜண்டா ·பீஸ்ல வேலை இருக்கு.’ என்று கூறிவிட்டு தன் வாகனத்தை நோக்கி நடந்தவரை நிறுத்தி என்னுடைய அடையாள அட்டையை (என்னுடைய வங்கியில் புகைப்படம் மற்றும் என்னுடைய கையொப்பத்துடன் கூடிய ஒரு அடையாள அட்டை எல்லா ஊழியர்களுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது) நீட்டினேன்.

அதைப் பார்த்தவர் ஒரு நிமிடம் அதிர்ச்சியுடன் நின்று என் இரண்டு கைகளையும் பற்றிக் கொண்டார். ‘சார் நீங்களும் ஒரு பேங்க் மானேஜரா? ஐ ஆம் வெரி சார்.. உங்ககிட்ட போயி..’ பிறகு தரகரைப் பார்த்து ‘என்னய்யா தரகரே.. கூட்டிக்கிட்டு வர்றதுக்கு முன்னாலயே ஒரு வார்த்தை சொல்லப்படாது..’ என்று கோபித்துக் கொண்டார்.

வங்கி மேலாளர் என்றால் எந்த ஜாதியானாலும் பரவாயில்லையென்று நினைத்தாரா அல்லது தஞ்சை வங்கி வட்டாரத்தில் தன்னைப்பற்றி இவர் கூறினால் தன் இமேஜ் போய்விடுமே என்று நினைத்தாரா என்று தெரியவில்லை. அவர் நடந்துகொண்ட விதத்தை ஈடுகட்டும் விதமாக என்னையும் என் மனைவியையும் தன் வீட்டிற்குள் அழைத்துச் சென்று காப்பி ('வெல்ல' காப்பி வாய்க்குள் இறங்க மாட்டேன் என்று அடம்பிடித்தது!) பலகாரம் கொடுத்து உபசரித்தார்.

‘வந்த இடத்துல நீங்க அப்படி கேட்டதும் நான் சட்டுன்னு பயந்துட்டேங்க. நல்ல வேளை, இவரும் உங்க வேலையே பாக்கறதுனால தப்பிச்சோம்.’ என்று ரகசிய குரலில் பேசிய என் மனைவியைப் பார்த்து ஒன்றும் சொல்லாமல் புன்னகை செய்தேன்.

‘யார்றா அது? நடுக்கூடத்துல வச்சி உபசாரம் பண்ணிக்கிட்டிருக்கே..’ என்று வீட்டின் பின் புறத்திலிருந்து வந்த ஓசையைக் கேட்டதும் பதறி எழுந்து ஓடிய வீட்டு உரிமையாளரைப் பார்த்து வியந்துபோய் நானும் என் மனைவியும் ஒருவரையொருவர் பார்க்க, தரகர் கலவரத்துடன் எங்களையே பார்த்தார்.

தொடரும்

4 கருத்துகள்:

  1. என் நங்கநல்லூர் வீட்டை 22 வருடங்களுக்கு வாடகைக்கு விட்டிருந்தேன். மொத்தம் 8 குடித்தனக்காரர்கள். நாங்கள் போட்ட ஒரே கண்டிஷன் அசைவ உணவு சமைக்கக் கூடாது என்பதுதான். கடைசி குடித்தனக்காரர், கேரளாவைச் சேர்ந்தவர். அசைவ உணவு சாப்பிடக்கூடியவர் என்றாலும் என் வீட்டில் அதைச் செய்யவில்லை.

    கூறப்போனால் சாப்பாடு விஷயத்தில் உள்ள வேறுபாடுதான் ஜாதியைப் பார்க்கச் சொல்லும் முக்கியக் காரணங்களில் ஒன்று. நானும் சென்னையிலேயே பிறந்து வளர்ந்து, பல ஜாதி நண்பர்களுடன் பழகி வந்ததால் இந்த ஜாதி வேறுபாடு அவ்வளவாக என் கவனத்தைக் கவரவில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  2. ஆமாங்க, இந்த சா'தீ' எப்ப அணையப்போகுதோ?

    பதிலளிநீக்கு
  3. வாங்க டோண்டு சார், நன்றி.

    நீங்க சொல்றதும் ஒருவிதத்துல சரிதான். சென்னையில் இப்போதும் வெஜிட்டேரியன்சுக்கு மட்டும் என்ற போர்டை மாம்பலம் ஏரியாவில் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் பார்த்திருக்கிறேன்.

    ஆனால் தஞ்சை விஷயம் வேறு. தஞ்சை பற்றிய பதிவுகளின் இறுதியில் உங்களுக்கே விளங்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. வாங்க துளசி. பொண்ணு கிட்ட நீங்க நலம் கேட்ட விஷயத்தை சொன்னேன். உங்க பின்னூட்டங்களில் சிலவற்றை படித்து பார்த்தவள் உங்களுடைய ஸ்டார் பதிவுகளில் சிலவற்றையும் படித்து பார்த்தவளுக்கு உங்களுடைய காஷுவல் நடை மிகவும் பிடித்துப் போனது.

    ஜாதித்தீ கிராமப்புறங்களில் அணைய இன்னும் நூறாண்டுகளாவது ஆகும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு