16 டிசம்பர் 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 38

சரி உங்க ஃப்யூச்சருக்கு ஏதாச்சும் கெடுதல் வந்துதா அதச் சொல்லுங்க சார் என்கிறீர்களா?

வந்தது.. அடுத்த நாள், அடுத்த வாரம், அடுத்த மாதம் என ஓரிரண்டு மாதங்களுக்கு ஒன்றும் நேரவில்லை.

நான் இந்த விஷயத்தையே மறந்துபோயிருந்த சமயத்தில் வந்தது.

அப்போது என்னுடைய வங்கியின் சென்னைக் கிளைகளுள் மேலாளராக இருந்த ஒருவர் என்னுடைய நெருங்கிய நண்பர். அவர் என்னை விட மூன்றோ நான்கோ வயதுதான் மூத்தவர். எனக்கு முந்தைய பேட்ச்சில் மேலாளனாரவர். சென்னைக்கு வந்து ஒரு சில மாதங்களே ஆகியிருந்தன. அடிக்கடி தொலைப்பேசியிலும் நேரிலும் சந்தித்து பேசிக்கொள்வோம்.

ஒரு நாள் காலை நான் அலுவலக வேலையில் மும்முரமாக இருந்தபோது அவரிடமிருந்து தொலைப்பேசி வந்தது. பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு அவர், ‘டிபிஆர். நான் போன வாரம் நம்ம ஹெட் ஆஃபீசுக்கு போயிருந்தபோது ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். அது உண்மையா இல்லையான்னு தெரியலை. நான் சொன்னேன்னு நீங்க கேக்காதீங்க.. ஆனா இப்பவே நீங்க தலையிடலேன்னா ஆர்டர்ஸ் வந்ததுக்கப்புறம் ஒன்னும் செய்ய முடியாம போனாலும் போயிரும். நம்ம H.R. Headதான் உங்க பழைய அதிகாரியாச்சே. ஃபோன் பண்ணி கேட்டுப் பாருங்க. அவர் நினைச்சா உங்கள காப்பாத்த முடியும்னு நினைக்கிறேன்.’ என்று ஒரே பூடகமாக பேசினார்.

‘என்ன சொல்றீங்க சார்? நீங்க என்ன கேள்விப் பட்டீங்க? தெளிவா சொன்னாத்தானே நான் H.Rல கேக்க முடியும்.’ என்றேன்.

அவர் தயங்கியவாறே, ‘உங்கள் இன்னும் ரெண்டு வாரத்துக்குள்ள இங்கருந்து மாத்தப் போறாங்க டிபிஆர். ஒருவேளை நார்த்துக்கு கூட இருக்கலாம். நான் சொன்னேன்னு யார்கிட்டயும் சொல்லிராதீங்க. அப்புறம் என்பாடு திண்டாட்டமாயிரும்.’ என்று கூறிவிட்டு வைத்துவிட்டார்.

எனக்கு சிறிது நேரம் என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் இந்த கிளைக்கு வந்து சரியாய் ஏழு மாதங்கள் கூட முடியவில்லை. பொதுவாக மேலாளராகிவிட்டாலே எந்த நிமிடமும் மாற்றப்படுவது உண்டுதான். ஆனால் சாதாரணமாக இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு மேலாளர் மாற்றப்படுகிறார் என்றாலே ‘இவரு என்னமோ தில்லுமுல்லு பண்ணிட்டார் போல. அதான் தூக்கிட்டாங்க’ என்று பேச்சாகிவிடும்.

இதில் ஆறேழு மாதத்திற்குள்ளாகவே மாற்றப்பட்டால் கேட்கவே வேண்டாம். அதுவும் முதன்முதலாய் மேலாளராக அமர்த்தப்பட்ட கிளையிலிருந்து!

முதன்முதலாய் மேலாளர் பதவியில் அமர்த்தப்படுபவர் சாதாரணமாக ஒரு கிராமத்தில்தான் அமர்த்தப்படுவார் என்றும் அந்த நியதிக்கு மாறாக பெருநகர் கிளைகளில் ஒன்றில் நான் அமர்த்தப்பட்ட போதே சர்ச்சை கிளம்பியது என்றும் நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன்.

அப்படியே ஒரு சிறிய கிளைக்கு நான் பொறுப்பேற்று படிப்படியாய் முன்னேறி இப்படி ஒரு பெருநகர் கிளைக்கு வந்திருக்கலாம். நானா கேட்டேன் பெருநகர் கிளை வேண்டும் என்று?

அவர்களாகவே இதுபோன்ற கிளையில் அமர்த்திவிட்டு ஆறேழு மாதத்திற்குள் மாற்றம் செய்தால் அதுவும் வட இந்திய கிளை ஒன்றிற்கு என்றால் அது நிச்சயம் எனக்குக் கிடைத்த தண்டனையாகவே நான் கருதினேன்.

ஆனால் இதை எப்படி தடுப்பது? அப்போது H.R. Headஆக இருந்தவர் என்னுடைய முதல் அக்கவுண்டன்ட் என்பதை ஏற்கனவே கூறியிருந்தேன். அப்படியிருந்தும் என்னை மாற்றுவதற்கான எண்ணம் இருந்தால் அவரும் ஏன் என்னிடம் இருந்து மறைத்தார்? ஒரு வேளை இந்த மாற்றம் அவருக்கு தெரியாமல் நடக்கிறதா? அவரையே கேட்டுப் பார்த்தால் என்ன?

இப்படி என்னை நானே கேட்டுக்கொண்டு குழம்பிப் போனேன். இந்த விஷயத்தை அதிகாரத்தில் இருக்கும் யாரிடமாவது உண்மையா இல்லையா என்று கேட்டுத் தெரிந்துக்கொள்ளாவிட்டால் தலையே வெடித்துவிடும் போலிருந்தது!

இருப்பினும் காலையிலேயே அவரைக் கூப்பிட்டால் ஒருவேளை அவருடைய வேலையில் மும்முரமாயிருந்தால் என்னிடம் சரியாக பேசுவாரோ மாட்டாரோ என்று நினைத்து என்னுடைய anxietyஐ அடக்கிக்கொண்டு அன்றைய வேலையை கவனிக்கத் தொடங்கினேன். ஆனாலும் மனம் என் முன்னாலிருந்த வேலைகளில் ஒட்டமாட்டேன் என்று அடம் பிடித்தது.

சரி, வருவது வரட்டும் என்று நினைத்துக்கொண்டு அவருடைய பிரத்தியேக தொலைப்பேசி எண்ணை சுழற்றினேன். வெகு நேரம் அடித்தும் யாரும் எடுக்கவில்லை. சரி, சகுணம் சரியில்லை, மாலையில் அழைக்கலாம் என்று நினைத்துக்கொண்டு இனைப்பைத் துண்டித்துவிட்டு வேறு வழியில்லாமல் என் வேலையை பார்க்க ஆரம்பித்தேன்.

மாலை ஐந்து மணியானதும் மீண்டும் அதே எண்ணைச் சுழற்றினேன். அப்போது அதே நிலைதான். ஒருவேளை அவர் வேலைக்கு வரவில்லையோ என்று நினைத்துக்கொண்டு என் தலைமையகத்தின் தொலைப்பேசி ஆப்பரேட்டரை அழைத்து ‘.. சார் அலுவலகத்துக்கு வரவில்லையா’ என்று கேட்டேன். ஆமாம் சார், அவர் இன்றையிலிருந்து ஒரு நான்கு நாள் விடுப்பில் சென்றிருக்கிறார் என்று பதில் வந்தது. ‘வீட்டுக்கு வேணும்னா கூப்பிட்டு பாருங்க டிபிஆர். சார்.’ என்றார் அவர்.

வீட்டுக்கா? அவர் ஏதாவது நினைத்துக்கொண்டால்? என்று என் சிந்தனை ஓடியது. ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு யோசித்தேன். என் உள் மனசு ‘கூப்பிடு’ என்றது. ஒருவேளை நான் தாமதித்து, பிறகு ஏதாவது ஏடாகூடமான உத்தரவு வந்துவிட்டால் ‘ஐயோ தாமதம் செய்யாமல் கேட்டிருந்தால் ஒருவேளை நமக்கும் சாதகமான இடத்துக்கு கிடைத்திருக்குமே’ என்று மனது கிடந்து அடித்துக்கொள்ளுமே என்ற நினைப்பில் மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவருடைய வீட்டு எண்ணை சுழற்றினேன்.

அவர்தான் எடுத்தார்.

‘சார். நான்தான் டிபிஆர். உங்கள வீட்ல தொந்தரவு செய்றதுக்கு சாரி சார்.’ என்றேன்.

அவர் லேசாக சிரித்தார். ‘ it is ok. சொல்லுங்க. உங்க மாற்றல் விஷயமா?’ என்றார் நான் கேட்காமலே.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவருக்கு தெரிந்திருந்தும் ஏன் என்னிடம் கூறாமல் இருந்தார்?

அவரே தொடர்ந்தார். ‘டிபிஆர். நான்தான் நம்ம ..... கிளை மேனேஜர் கிட்ட சொல்லி உங்களுக்கு மறைமுகமா விஷயத்தை தெரிவிக்க சொன்னேன். சொன்னாரா?’

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர் என்னுடைய கிளையில் அதிகாரியாக இருந்தபோது வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுவார், செய்வார். அவரே இப்படி வேறொருவர் வழியாக மறைமுகமாக எனக்கு இந்த விஷயத்தை தெரியப்படுத்துகிறார் என்றால் நிச்சயம் என் விஷயத்தில் முடிவெடுத்தது அவருக்கு மேல் இருப்பவராகத்தான் இருக்க முடியும்.

‘கவலைப் படாதீங்க டிபிஆர். நார்த்துக்குத்தான் முதல்ல ப்ரொப்போஸ் பண்ணாங்க. ஆனா நம்ம பிரின்சிப்பால்.. (அதாவது நான் வங்கியில் சேர்ந்தபோது எனக்கு கிளை மேலாளராக இருந்தவர். இப்போது வங்கியின் பயிற்ச்சி கல்லூரி முதல்வராக இருந்தார்.) தலையிட்டதால உங்கள பக்கத்திலேயே போடறதுக்கு சேர்மன் ஒத்துக்கிட்டார். ஆனா அது எங்கன்னு என்னால இப்ப சொல்ல முடியாது. இன்னும் ஒரு வாரத்துல முடிவு பண்ணி ஆர்டர்ஸ் போட்டுருவோம். பொறுமையா இருங்க. எல்லாம் நல்லபடியா முடியும்.’ என்றவர். ‘அப்புறம் டிபிஆர். ஒரு விஷயம்.’ என்றார்.

ஏதோ முக்கியமான விஷயம் என்று சட்டென்று மாறிய அவருடைய குரலே சொன்னது.

‘சொல்லுங்க சார்.’ என்றேன்.

‘சேர்மன் உங்க பேர்ல கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கார். நானும் நம்ம பிரின்சிப்பால் சாரும் உங்களபத்தி ரொம்ப நேரம் வாதாட வேண்டியிருந்தது. பார்த்து நடந்துக்குங்க. இந்த சேர்மன் Term முடியறதுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கும்னு தெரியுமில்லே. பி கேர்ஃபுல். மறுபடியும் ஏதாவது பிரச்சினையில மாட்டிக்காம பார்த்துக்குங்க.’

எனக்கு சட்டென்று கோபம் வந்தது. எல்லோருமே என் மேலேயே குற்றம் சொல்கிறார்களே என்று எரிச்சல் வந்தது. ‘சார், நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு சேர்மன் சொன்னாரா சார்?’ என்றேன். என்னுடைய குரலில் இருந்த கோபம் அவருக்கு புரிந்திருக்க வேண்டும்.

‘பார்த்தீங்களா? இந்த கோபம்தான் உங்களுக்கு முதல் எதிரி டிபிஆர். உங்க எண்ணமும் நோக்கமும் சரியா இருந்தா மட்டும் போறாது. அதை செயல் படுத்தற விதமும் சரியா இருக்கணும். உங்க வயசுல எனக்கும் இந்த கோபம்தான் பெரிய எதிரியா இருந்தது. நீங்க இப்ப இருக்கற சூழ்நிலையில இந்த கோபம் உங்களுக்கு வேணாம் டிபிஆர். நிதானமா யோசிச்சி பாருங்க. நானும் நடந்ததையெல்லாம் விசாரிச்சி தெரிஞ்சிக்கிட்டேன். உங்க எண்ணம், நோக்கம் எல்லாம் சரி. ஆனா இத நீங்க சேர்மன்கிட்டவே பக்குவமா தெரியபடுத்தியிருந்தா அவரே கரெக்டா ஹேண்டில் பண்ணியிருப்பார். உங்களோட அணுகுமுறையினால, அது சரியா தவறான்னு இப்ப தர்க்கம் பண்ணி பிரயோசனமில்லை, சேர்மன் கொண்டு வந்த பார்ட்டி ஒரு ஃப்ராடுங்கறா மாதிரி க்ரெடிட் டிபார்ட்மென்ட்டுல ஒரு எண்ணத்த ஏற்படுத்திருச்சிங்கறதுதான் உண்மை. அதுதான் சேர்மனை ரொம்பவும் பாதிச்சிருச்சின்னு நினைக்கிறேன். எனிவே.. யூ கான்ட் நவ் அன்டூ வாட் ஹேஸ் பீன் டன். லீவ் இட். பொறுமையா இருங்க. நல்லது நடக்கும்.’

இணைப்பை துண்டித்துவிட்டு நெடு நேரம் அவர் கூறியதையே நினைத்துக்கொண்டிருந்தேன். இறுதியில், அவர் கூறியதில் எந்தவித தவறும் இல்லை என்றே பட்டது. என்னுடைய தவறான அணுகுமுறையால், பாராட்டு கிடைத்திருக்க வேண்டிய ஒரு செயல் எனக்கு அவப்பெயரை தேடித் தந்தது!

ஒரு வாரம் கழித்து என்னுடைய மாற்றலுக்கான தகவல் தலைமையகத்திலிருந்து வந்தது..

புதிதாக திறக்கப்படவிருந்த என்னுடைய தஞ்சைக் கிளைக்கு...!

ஆனால் அதற்கு முன் என்னுடைய தலைமையகத்திலிருந்து என்னிடம் விளக்கம் கேட்டு வந்த அந்த கடிதம்!

அதை நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை..

12 கருத்துகள்:

  1. புதியதாக துவக்கும் பிராஞ்சுக்குன்னு உங்களை செலக்ட் பண்ணி போட காரணம்?

    டிரான்ஸ்பர் ஆர்டர் போட்டுட்டு மொபைல் ஆஃப் பண்ணிட்டு போற எக்ஸ்கியூட்டிவ்ஸ் இல்லையா சார் அங்க?

    பதிலளிநீக்கு
  2. வாங்க புதுவை, நன்றி.

    What you said is true. I was greatly relieved when I was transferred within TN only.

    பதிலளிநீக்கு
  3. வாங்க ராஜ், நன்றி.


    கூட இருந்த ஆளே குழிபறித்த கதை கேட்டிருக்கிறீர்களா? அதுதான் நடந்தது!

    நாளைக்கு விவரமாக எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. வாங்க முத்து, நன்றி.

    ஒருவேளை கோடம்பாக்கம் திறப்பு விழா வெற்றிகரமாக நடந்ததுதான் காரணமோ என்னவோ.

    அதுமட்டுமல்ல. ஒரு புதிய கிளையை திறப்பதென்பது தலைவலி பிடித்த வேலையாயிற்றே. ஆகவே அவ்வளவு எளிதில் யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். நம்மைப் போல் influenceஎதுவும் இல்லாத ஆட்கள் தலையில் கட்டிவிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  5. நாளைக்கு சொல்றேனே ராஜ்.

    பதிலளிநீக்கு
  6. இன்னொருக்கா முதலமைச்சரைக் கூப்புடமாட்டீங்கதானே திறப்புவிழாவுக்கு?

    போட்டும். தஞ்சாவூர் நல்ல ஊர்தான்.

    பதிலளிநீக்கு
  7. வாங்க துளசி,

    முதலமைச்சரா.. பாருங்க வேடிக்கையை. இன்னும் ரெண்டு பதிவுகளுக்கப்புறம் எழுதறேன்.

    அதுவரைக்கும் கொஞ்சூண்டு பொறுமை..

    பதிலளிநீக்கு
  8. Dear Sir,

    Thank you for timely Help

    பதிலளிநீக்கு
  9. Dear Muthu you are welcome!

    ஒன்னும் பிரச்சினையில்லையே.

    உங்கள நம்ம பதிவில பாக்க முடிஞ்சதே.. அதுபோதும்.

    பதிலளிநீக்கு
  10. Hello TBR
    Have you written novels before? I cant wait for the next installment. 24 hours to go :(

    Keep up the great blog. I really appreciate your daily installments.

    Murali

    பதிலளிநீக்கு
  11. Dear Sir,

    "உங்கள நம்ம பதிவில பாக்க முடிஞ்சதே.. அதுபோதும்."

    சேம் சைடு கோல் போடறீங்களே சார்....தொடர்கதையை தவிர எல்லாம்
    படிச்சிருவேணாக்கும்...(today i have posted one article)

    பதிலளிநீக்கு