15 டிசம்பர் 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 37

ஆனால் நாம் நினைப்பதல்லவே நடப்பதும்!

அடுத்த நாள் காலை என்னுடைய தலைமை அலுவலகத்திலிருந்து தொலைப்பேசி வந்தபோதுதான் புரிந்தது இந்த உண்மை!

என்னை அழைத்தவர் என்னுடைய மத்திய கடன் வழங்கும் இலாக்காவின் தலைவர் (நம் குழப்பல் மன்னன்!).

‘டிபிஆர். அல்லே?’ அவருடைய குரலில் இருந்தே விஷயம் கொஞ்சம் சீரியஸ்தான் என்று புரிந்துக்கொண்டேன்.

வருவது வரட்டும் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு ‘அதே சார்.’ என்றேன்.

‘அந்த கப்பல் பார்ட்டி விஷயம் என்னாச்சி டிபிஆர்? ப்ரொப்போசல் பேங்க்ல கொடுத்து பத்துநாளைக்கு மேலாச்சி. டிபிஆர் அத வச்சிக்கிட்டு ஏதாவது ஆராய்ச்சி பண்றாரான்னு கேக்கறார் சேர்மன். என்ன சொல்லட்டும் டிபிஆர்?’

என்ன சொல்வது? நான் சிறிது நேரம் யோசித்துக்கொண்டிருந்தேன்.

‘என்னாச்சி டிபிஆர். ஏதாவது ப்ராப்ளமா? என்ன பேசாம இருக்கீங்க? Is the proposal ready or not?’

‘The proposal is not ready sir, there are some problems.’ என்றேன்.

அவருடைய குரலில் கோபம் கொப்பளித்தது. சாதாரணமாக எளிதில் கோபப்படாதவர் அவர் என்பது எனக்கு தெரியும். ‘அதான் என்ன ப்ராப்ளம்னு கேட்டேனே. சொல்லுங்க. என்ன ப்ராப்ளம்?’

‘அவர் ஆஃபர் பண்ண ப்ராப்பர்ட்டியிலதான் சார் ப்ராப்ளம்.’

அவர் மேலும் கோபப்பட்டார். ‘Look TBR. Don’t waste my time. What is the problem in the property?’

நான் வேகமாக ஒன்றுவிடாமல் சொன்னேன். சிறிது நேரம் மறுமுனையிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர் அருகிலிருந்த வேறு யாரிடமோ பேசுவது கேட்டது. பிறகு, ‘ஓகே டிபிஆர். நான் பிறகு கூப்பிடுகிறேன்.’ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் தெரிந்தது. அவர் சேர்மனுடைய சேம்பரிலிருந்து பேசினார் என்றும் அப்போது நம்முடைய சேட்டும் அங்கே இருந்தார் என்பதும்.

அதாவது, என்னுடைய உதவி மேலாளர் சேட்டுடைய அலுவலகத்துக்குச் சென்று பத்திர விஷயத்தைக் கூறியதும் அன்றிரவே சேட் ரயிலைப் பிடித்து சேர்மனைக் காண சென்றிருக்கிறார். ஏன்? நான் விஷயத்தை என்னுடைய தலைமை அலுவலகத்திற்கு அதிகாரபூர்வமாக தெரிவிப்பதற்கு முன் சேர்மனிடம் அறிவித்துவிடலாம் என்ற எண்ணத்தில்.

அடுத்த சில நாட்களுக்கு எந்தவித தகவலும் இல்லாமற் போகவே நான் என் உதவி மேலாளரை அழைத்து சொத்து பத்திரங்களை மாற்றுவது குறித்து சேட்டின் மேலாளரிடம் தொலைப்பேசியில் விசாரிக்கக் கூறினேன்.

அவர் இரண்டு முறைக் கூப்பிட்டும் மேலாளரிடமிருந்து சரியான பதில் வரவில்லை.

ஒரு வாரம் சென்றது.

திடீரென்று ஒரு நாள் சேட்டின் மேலாளர் என்னுடைய உதவி மேலாளரை தொலைப்பேசியில் அழைத்து என்ன கூறினாரோ தெரியவில்லை அவர் என்னிடம் பதற்றத்துடன் ஓடி வந்தார்.

நான் என்ன என்பதுபோல் அவரைப் பார்த்தேன்.

‘சார் அவங்களுக்கு வேற பாங்குலருந்து லோன் கிடைச்சிருச்சாம். நம்ம கிட்ட கொடுத்த பேப்பர்ஸ் எல்லாத்தையும் இன்னைக்கே திருப்பியனுப்ப சொல்றாங்க சார்.’ என்றார்.

‘இது, இது, இதைத்தான் நான் எதிரிபார்த்தேன்.’ என்று மனதுக்குள் மகிழ்ந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

‘சரி நல்லாதாப் போச்சு விட்டுத் தள்ளுங்க.’ என்றேன்.

அவர் போகவில்லை. ‘சார் இதுல இன்னொரு பிரச்சினையிருக்கே.’ என்றார்.

‘என்ன பிரச்சினை?’

‘நம்ம வக்கீலுக்கும், வேல்யூவருக்கும் அவங்களோட ஃபீசா அஞ்சாயிரம் அட்வான்ஸ் பேமண்டுலருந்து கொடுத்திருக்கோம் சார். அத இவர்கிட்டருந்து இப்ப எப்படி ரிக்கவர் பண்றது?’

அட ஆமாம். அது என் மண்டையில் உறைக்கவில்லையே? இப்ப என்ன பண்றது? ‘லோனே வேணாம், அப்புறம் எதுக்குய்யா நான் உங்க வக்கீல் ஃபீஸ், எஞ்சினீயர் ஃபீஸ்னு குடுக்கணும்’னு திருப்பி கேட்டா என்ன பண்றது? என்று நினைத்தேன்.

என் உதவி மேலாளரைப் பார்த்தேன். அவர் பயங்கர டென்ஷனில் இருந்தார். ‘நீங்க ஒன்னு பண்ணுங்க. உடனே புறப்பட்டு போய் இந்த விஷயத்தை அவரோட மேனேஜர்கிட்ட பேசி எப்படியாவது இந்த பணத்தை வாங்கப் பாருங்க. ஃபோன்ல பேசுனா சரிவராது. என்ன சொல்றீங்க?’ என்றேன்.

அவருக்கு இந்த யோசனை பிடிக்காவிட்டாலும் என் பேச்சைத் தட்டமுடியாமல் அன்று மாலையே சென்றார். ஆனால் பலனில்லாமல் வெறுங்கையுடன் திரும்பினார். ‘சார் என்னை அவங்க ரொம்ப மோசமா ட்ரீட் பண்ணாங்க சார். உங்க மேனேஜருக்கு ஒரு நல்ல லெசன் டீச் பண்ணாம விடமாட்டோம்னு வேற சொன்னாங்க சார்.’ என்றவரை நான் சந்தேகத்துடன் பார்த்தேன். இதை இவரா ஜோடித்து சொல்கிறாரோ என்ற எண்ணத்தில்.

பிறகு சமாளித்துக்கொண்டு ‘சேட் கொடுத்த விண்ணப்பம் மற்றும் பத்திர நகல்களும் உங்க கிட்டவே இருக்கட்டும். அவர் என்றைக்கு பணத்தை கொடுக்கிறாரோ அப்போது திருப்பி அனுப்பலாம்.’ என்று அவரை சமாதானம் செய்து அனுப்பினேன்.

பிறகு என்னுடைய தலைமை அலுவலகத்துக்கு தொலைப்பேசி செய்தேன். சம்பந்தப்பட்ட அதிகாரி லைனில் வந்ததும் சேட்டுக்கு கடன் வேண்டாம் என்று என்னுடைய உதவி மேலாளர் கூறியதை தெரிவித்தேன்.

சிறிது நேரம் ஒன்றும் மறுமொழி கூறாமல் இருந்தவர், ‘டிபிஆர். அவருக்கு லோன் வேணாம்னா போகட்டும். ஆனா நீங்க அவர ஹேண்டில் பண்ண முறை கொஞ்சம் கூட சரியில்லைன்னு நம்ம சேர்மன் நினைக்கிறார். அது உங்களோட ஃபியூச்சரை பாதிக்குமா இல்லையான்னு இப்ப என்னால சொல்ல முடியலை. இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல முடியும்.’ என்று நான் பதில் கூறுவதற்கு முன் இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

நான் விக்கித்துப் போய் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன்.

‘அது உங்களோட ஃபியூச்சரை பாதிக்குமா இல்லையான்னு இப்ப என்னால சொல்ல முடியலை.’ என்ற வார்த்தைகள் என்னையே சுற்றிச் சுற்றி வந்தன.

தொலைப்பேசி அடிக்கவே எடுத்தேன். கணக்குப்பிள்ளை!

‘அய்யா, இங்கன பெரிய களேபரமே நடக்குது.’ என்றார்.

‘களேபரமா? என்னய்யா சொல்றீங்க?’ என்றேன்.

‘ஆமாய்யா. நம்ம முதலாளி உங்கள ஒரு வழியா ஆக்காம விடமாட்டேன்னு கொதிச்சிப் போயிருக்கான்யா. நீங்க கொஞ்ச நாளைக்கு லீவு எடுத்துக்கிட்டு ஊர் பக்கம் போய் வாங்கய்யா.’ என்றார்.

அவருடைய குரலிலிருந்த பதற்றம் என்னையும் ஒரு நிமிடம் தொற்றிக்கொண்டாலும் அடுத்த நிமிடமே சகஜ நிலைக்கு திரும்பினேன். அவருடைய யோசனைப்படி செய்வதாக கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தேன்.

எனக்கும் இப்படி ஒரு யோசனை கடந்த சில வாரங்களாகவே இருந்தது. ஆனால் என் மனைவியிடம் திடீரென்று ஊருக்கு போய் வரலாம் வா என்றால்? அவளுக்கு நிச்சயம் சந்தோஷமாகத்தான் இருக்கும். பிறந்து வளர்ந்த ஊரை விட்டு வந்து நேரத்திற்கு வீட்டிற்கு வராத மனுஷனுடன் வீட்டில் தனியாக ஒன்றரை வயது குழந்தையுடன் இரவு பத்துமணி வரை கொட்ட கொட்ட விழித்துக்கொண்டு புருஷன் வரும் வரை காத்திருப்பதை விட வேறு கொடுமை ஒரு பெண்ணுக்கு இருக்கமுடியுமா, என்ன?

ஆனாலும் ஊருக்கு போவதற்கும் ஏதாவது காரணம் வேண்டுமே. சும்மா வெறுமனே போய் ‘மாமனார் வீட்டில் ஒரு வாரம், பத்துநாள் இருந்துட்டு வரேம்மா’ என்றால் என் தாயிடம் இருந்தும் திட்டு கிடைக்குமே. அவர்களுக்கு வாரம் ஒருமுறை தன் பேத்தியை வந்து பார்க்காமல் இருக்க முடியாது. ஆக, அது சரிப்பட்டு வராது. என்ன செஞ்சிருவான் சேட், பார்க்கலாம் என்ற அசட்டு தைரியத்தில் ஊருக்கு போகும் யோசனையை தள்ளி வைத்தேன்.

நான் அந்த வயதில் பயங்கரமான எமோஷனல் பேர்வழி. அத்துடன் அசட்டு தைரியம் வேறு. ஏதோ நான்தான் இந்த உலகத்திலேயே நேர்மையானவன் போலவும், என்னுடைய வங்கியை இத்தகைய எத்தர்களிடத்திலிருந்து காப்பாற்றவே மேலாளராக அவதாரம் எடுத்தவன்போலவும் நினைத்துக்கொள்வேன்.

இதுபோன்று இன்னும் பல பெரிய ‘தலை’களை விரோதித்துக்கொண்டு ‘தலைமறை’வாக செல்லவேண்டிய சந்தர்ப்பங்கள் வந்தபோதும் கூட என்னுடைய மடத்தனத்தை நான் உணர பல வருடங்கள் பிடித்தன.

இப்போது இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது இந்த வயதில் இதுபோன்ற சம்பவங்களை சந்திக்க நேர்ந்தால் என்னுடைய அணுகுமுறை நிச்சயம் மாறுபட்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

என்ன சொல்ல வரீங்கன்னு நீங்க மனசுக்குள்ள நினைக்கறது தெரியுது. அதாவது ‘குடுக்கறத’ வாங்கிக்கிட்டு ‘செய்யவேண்டியத’ செஞ்சிட்டு போயிருப்பேன்னு சொல்ல வரீங்களான்னு கேக்கறீங்க. அப்படித்தானே.

இல்லை. நிச்சயமாக இல்லை. ஆனால் புனைப் பெயரில் தந்தியடிப்பது போன்ற அமெச்சூர் வேலையெல்லாம் செய்திருக்க மாட்டேன்.

சரி உங்க ஃப்யூச்சருக்கு ஏதாச்சும் கெடுதல் வந்துதா? அதச் சொல்லுங்க சார் என்கிறீர்களா?

வந்தது.. அடுத்த நாள், அடுத்த வாரம், அடுத்த மாதம் என ஓரிரண்டு மாதங்களுக்கு ஒன்றும் நேரவில்லை.

நான் இந்த விஷயத்தையே மறந்துபோயிருந்த சமயத்தில் வந்தது.

அது நடந்தபோது எனக்காக வருத்தப்பட்டவர்களை விட ‘வேணும் இவனுக்கு. அப்பவே நான் சொன்னேன், இவன செலக்ட் பண்ணது சரியில்லைன்னு. யார் கேட்டா?’ என்று சந்தோஷப்பட்டவர்கள்தான் அதிகம்.

நான் இதை எதிர்பார்த்ததுதான்.. ஆனால் நான் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் நேர்ந்தபோதுதான் மனசுக்குள் வலித்தது.. சோர்ந்து போனேன்.

அன்று கிடைத்த அடியிலிருந்து மீண்டும் எழுந்து வர சுமார் ஏழு ஆண்டுகள் பிடித்தன..

தொடரும்.

11 கருத்துகள்:

  1. அடக்கடவுளே.... நல்லது செஞ்சதுக்கு 7 வருசமா?

    அட ஜெயில் இல்லீங்க. நம்ம மனக்கஷ்ட்டதைச் சொன்னேன்.

    ம்... அப்புறம்?

    பதிலளிநீக்கு
  2. வாங்க ராஜ், நன்றி.

    tough times dont last, but tough people do-//

    இப்ப படிக்கும்போது இந்த வார்த்தைகள் நல்லாருக்கு ராஜ். ஆனா அடி கிடைச்ச சமயத்துல வயசும் அனுபவமும் இல்லையே. வலிதாங்க முடியாம சோர்ந்து போகத்தான் முடிஞ்சது.

    பதிலளிநீக்கு
  3. வாங்க புதுவை, நன்றி.

    7 years punishment for doing good thing to a bank?... //

    நம் நிறுவனத்துக்கு செய்றத யார் சார் நினைவுல வச்சிருக்காங்க? தலைகளை அனுசரித்து போவதுதான் இன்றும்கூட மிக முக்கியம்.

    You want to survive? Be subservient! அதாவது ஆட்சி செய்ய வேண்டுமென்றால் முதலில் அடிமையாய் இருக்க பழகிக்கொள்.

    பதிலளிநீக்கு
  4. வாங்க துளசி, நன்றி.

    ஏழு வருஷ சிறை இல்லை. வனவாசம்! பரமபதத்தில் பாம்பு போல சரசரவென்று ஒரு இறக்கம். அவ்வளவுதான்.

    இப்போது நினைத்துப் பார்க்கும்போது அப்படிப்பட்ட இறக்கம் எனக்கு ஏற்படவில்லையென்றால் ஒருவேளை இப்போதிருப்பதை விட ஒரு படி மேலே போயிருக்கலாம் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  5. ஜோசப் சார்,

    இப்பவும் உங்களுக்கு என்ன சார் குறைச்சல்? இன்னைக்கும் நீங்க உங்க பேங்க்ல உங்கள கிங்குன்னுதானே சொல்றாங்க. நான்தான் கேட்டிருக்கேனே.

    என்ன பெருசா போனா டி.ஜி.எம் ஆயிருப்பீங்க? அவ்வளவுதானே. அதுக்காக கவலைப் படாதீங்க. பதவிய விட மதிப்புதான் முக்கியம். அது உங்களுக்கு இப்பவும் இருக்கு. அது எனக்கு தெரியும்.

    பதிலளிநீக்கு
  6. என்ன சார் என் மறுமொழியக் காணோம்?

    பதிலளிநீக்கு
  7. வாங்க மூர்த்தி,

    என்ன மறுமொழி மூர்த்தி? புரியலை.

    பதிலளிநீக்கு
  8. சாரி மூர்த்தி,

    நேத்தைக்கி நீங்க போட்ட பின்னூட்டத்த நான் எப்படியோ மிஸ் பண்ணிட்டேன்.

    நீங்க கேட்டதுக்கப்புறம்தான் போய் பார்த்தேன். மறுமொழி போட்டுட்டேன். படிங்க.

    நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  9. Hello TBR

    Another good one today. Sorry I cant write in Tamil to fully explain my feelings after reading this post.

    As I read somewhere on the web,
    Experience does not teach first and test later.

    It tests first and gives lesson later.

    Murali

    பதிலளிநீக்கு
  10. Dear Murali,

    You are absolutely right. Whatever we learn in business schools will be of no use when we face reality at work places.

    It is the experience which gives us maturity and the will to face adversities.

    I learned it in the hardway.

    பதிலளிநீக்கு
  11. மன்னிச்சுக்குங்க சம்பத்,

    உங்க கருத்துக்கு என்ன பதில் போடறதுன்னு தெரியாமத்தான் சும்மா இருந்துட்டேன். இதையெல்லாம் பின்னூட்டத்துல எழுதணுமா? வேண்டாமே.

    இருந்தாலும் உங்க கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு