பொது அறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது அறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

04 பிப்ரவரி 2014

சுர்ர்ர்ர்ரென்று வரும் கோபம்...

நான் பணியில் இருந்த காலத்தில் பயங்கர கோபக்காரன் என்று பெயர் எடுத்தவன். எதற்கெடுத்தாலும் கோபம் வரும். அப்படி நடந்துக்கொண்டால்தான் பிறர் நம்மைக் கண்டு அஞ்சுவார்கள் என்ற எண்ணம். ஒரு அதிகாரி என்றால் கண்டிப்பும் கறாருமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மற்றும் நம்முடைய கோபத்தால் மட்டுமே நமக்குக் கீழே பணியாற்றுபவர்கள் நமக்கு அஞ்சுவார்கள் என்ற எண்ணமுமே இதற்கு முக்கிய காரணம். அது ஓரளவுக்குத்தான் உண்மை என்பதை புரிந்துக்கொள்ள பல காலம் பிடித்தது. இந்த அதீத கோபம் என்னை பல சமயங்களில் தனிமைப்படுத்தியுள்ளது. 

என்னுடைய வங்கி தலைவர்களுள் ஒருவர் 'நண்பர்களையும் விரோதிகளாக்கிவிடும் திறமை உனக்கு சற்று அதிகமாகவே உள்ளது' என்றார் ஒருமுறை கேலியுடன். ' As you go up in the ladder you should know how to manage your anger.'என்றார் தொடர்ந்து. 

நான் மும்பையில் கிளை மேலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஒருமுறை புறநகர் மின்வண்டியிலிருந்து இறங்கும்போது தலைசுற்றி பிளாட்பாரத்தில் விழுந்துவிட்டேன். யாரோ என்னைப் பின்னாலிருந்து பிடித்துத் தள்ளியதுபோலிருந்தது.  மும்பை புறநகர் மின்வண்டிகளிலிருந்து இறங்கும்போது நம்மை தொடர்ந்து இறங்க முயலும் கும்பல் முன்னாலிருப்பவர்களை தள்ளிவிடுவது சகஜம்தான் என்றாலும் அன்று நான் விழுந்ததற்குக் காரணம் அதுவல்ல என்பது நண்பர்கள் சிலர் உதவியுடன் என் கிளைக்கு அருகிலிருந்து மருத்துவரைச் சந்தித்தபோதுதான் தெரிந்தது. என் தலைசுற்றுக்குக் காரணம் என்னுடைய உயர் இரத்த அழுத்தம் அபாய எல்லையை நெருங்கியிருந்ததுதான். 'இவ்வளவு ப்ரஷர வச்சிக்கிட்டு எப்படி நீங்க மேனேஜ் பண்ணிக்கிட்டிருந்தீங்க?' என்றார் மருத்துவர். எனக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்ததே அப்போதுதான் தெரிய வந்தது. 'குறைஞ்சது ஒரு வாரம் கம்ப்ளீட் ரெஸ்ட் எடுக்க வேண்டும்' என்றவர் 'கொஞ்ச நாளைக்கி மாசம் ஒரு முறை BP செக் பண்ணிக்குங்க சார்' என்று எச்சரிக்கையும் செய்து அனுப்பினார். அன்று துவங்கிய மருத்துவம் இன்றும் தொடர்கிறது.... அதாவது சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக!

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்குத்தான் அதீத கோபம் வருகிறதா அல்லது அதீத கோபம் கொள்பவர்களுக்குத்தான் உயர் இரத்த அழுத்தம் வருகிறதா என்ற கேள்வி கோழியிலிருந்து முட்டை வந்ததா முட்டையிலிருந்து கோழி வந்ததா என்று கேட்பது போன்றது. 

ஆனால் உண்மையில் உயர் இரத்தம் அழுத்தம் உள்ளவர்களுக்குத்தான் கோபம் வரும் என்பதில்லை. கோபம் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். பச்சிளம் குழந்தைக்கும் கோபம் வரும். அதை வெளிக்காட்டிக்கொள்ளத்தான் அது அழுகிறது. தொட்டிலில் சிறு நீர் கழித்து நெடு நேரம் ஆகியும் அதனுடைய அரைக்கச்சையை (nappy) மாற்றாவிட்டால் வீரிட்டு அழுவது கோபத்தின் வெளிப்பாடுதான். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் மிருகங்களுக்கும் கூட கோபம் வருவது சகஜம். 

கோபம் என்பது நம்முடைய உணர்வுகளின் வடிகால் என்றும் கூறலாம். உணர்ச்சி உள்ள அனைவருக்குமே கோபம் வரும், வர வேண்டும். கோபம் வராத மனிதன் இல்லவே இல்லை என்றும் கூறலாம். சிலர் அதை உடனே வெளிக்காட்டிவிடுவார்கள். இவர்களைத்தான் கோபக்காரர் என்கிறோம்.

 வேறு சிலர் கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். எந்த சந்தர்ப்பத்திலும் நிதானம் இழக்காமல் இருப்பதைப் போல் காட்டிக்கொள்வார்கள். இவர்களை சாது என்றோ அல்லது கோழை என்றோ குறிப்பிடுகிறோம். சாது போல் இருப்பவர்களுக்கு எப்போதாவது வரும் கோபம் கோபக்காரர்களுக்கு அடிக்கடி வரும் கோபத்தை விட பயங்கரமானது. அதனால்தானோ என்னவோ சாது மிரண்டால் காடு கொள்ளாது என்கிறார்கள். இதை யானையை எடுத்துக்காட்டாக கூறுவார்கள். 

கோபம் வருவதில் தவறில்லை ஆனால் அது நியாயமான காரியங்களுக்கு வர வேண்டும். நம்மைச் சுற்றி நடக்கும் அநீதிகளைக் காணும்போது வரும் கோபம் நியாயமான கோபம். அதாவது மற்றவர்களுடைய நலனுக்காக நாம் கோபப்படும்போது அதை ஆக்கபூர்வமான கோபம் எனலாம். நமக்கு தேவையானவற்றை கேட்டுப் பெறுவதற்கு ஏற்படும் கோபமும் நியாயமான கோபம்தான். தொழிலாள வர்க்கத்தினரின் போராட்டங்கள் முதலாளித்துவத்திற்கு எதிராக ஏற்படும் கோபத்தின் வெளிப்பாடுகளே. இவற்றில் தவறில்லை. அழுகிற பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும் என்பார்கள். 

ஆக கோபம் அனைவருக்குமே வரும். அதில் தவறில்லை. ஆனால் அதை எவ்வாறு வெளிக்காட்டுகிறோம் என்பதில்தான் நம்மில் சிலர் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறோம். சாது அல்லது கோபக்காரன் என்று முத்திரைக் குத்தப்படுவது நம்முடைய கோபத்தை வெளிக்காட்டும் முறையால்தான். சில குழந்தைகள் பசி வந்துவிட்டால் அழுது ஊரையே கூட்டிவிடுவார்கள். வேறு சில குழந்தைகளோ பசித்தாலும் தேமே என்று இருக்கும். அதுபோலத்தான் நம்முடைய கோபத்தின் வெளிப்பாடும். 

ஆனால் கோபத்தை வெளிக்காட்டிவிடுவதுதான் நம்முடைய ஆரோக்கியத்திற்கு நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். அதை அடக்குவதால் அது நம்முடைய இரத்த அழுத்தத்தை உயர்த்தக் கூடுமாம்.

ஆனால் அதீத கோபமும் ஆபத்தான விஷயம்தான். ஆகவே இவ்விரு துருவங்களுக்கும் இடையிலுள்ள நிலையில் நம்மை வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாகிறது. அதாவது நம்முடைய கோபத்தை ஓரளவுக்கு திறம்பட கையாள்வது. அதை ஆக்கப்பூர்வ உணர்வாக (constructive expression) வெளிப்படுத்துவது. நம்முடைய எதிர்ப்பை, ஏமாற்றத்தை அல்லது சலிப்பை பிறர் புரிந்துக்கொள்ளும் வகையில் வெளிப்படுத்துவது.

ஏனெனில் நம் உள்ளத்தில் ஏற்படும் இத்தகைய உணர்வுகளை வெளிக்காட்டுவதன் மூலம் மட்டுமே இத்தகைய உணர்வுகளுக்கு காரணமாக இருப்பவர்களுக்கு நம்முடைய உணர்வை உணர்த்த முடியும்.

கோபத்தை கட்டுக்குள் வைத்திருப்பதும் அதை அடக்க முயல்வதும் இருவேறு விஷயங்கள். Anger Management என்பதும் Anger Control என்பதும் ஒன்றல்ல. கோபத்தை கையாள்வது (Managing one's anger) என்பது அனைவருக்கும் சாத்தியப்படுவதில்லை. அது அனுபவத்தால் மட்டுமே வரக்கூடியது.

கோபம் வராமல் இருக்கவே முடியாது. ஏனெனில் அது நம் கையில் மட்டும் இல்லை. சாலையில் பயணிக்கும்போது விபத்து ஏற்படாமல் இருப்பது எவ்வாறு நம் கையில் மட்டும் இல்லையோ அதுபோலத்தான் இதுவும். 

காலையில் எழுந்தவுடன் 'இன்று முழுவதும் நான் யாரிடமும் கோபப்பட மாட்டேன்.' என்ற உறுதிமொழியுடன் வீட்டிலிருந்து சாலையில் இறங்கியதுமே நாம் கோபப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவதுண்டு. நம் கண்ணெதிரிலேயே சாலை விதிகளை மதிக்காமல் செல்லும் வாகன ஓட்டிகளையோ அல்லது சாலையை கடக்கும் பாதசாரிகளையோ கணும்போது  நம்மையுமறியாமல் கோபம் எழலாம். மேலும் பேருந்து நிறுத்தத்தில் வேண்டுமென்றே நிற்காமல் செல்லும் பேருந்து ஓட்டுனர், பேருந்தில் இடமிருந்தும் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு நம்மை பேருந்தில் ஏறவிடாமல் தொல்லைதரும் பயணிகள் என நாம்  கோபம் கொள்வதற்கு என்று பல காரணிகள் உள்ளன. 

இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் போகிறவர்கள்தான் அதிகம். ஆனால் ஒரு சிலருக்கு இதை பொறுத்துக்கொள்ள முடியாது. இது அவரவர்களுடைய மனநிலையைப் பொறுத்தது. வளர்ப்பு முறையைப் பொறுத்தது. 
- -
எதற்கெடுத்தாலும் சினம் கொள்பவர்களை - அதாவது அதை வெளிக்காட்டிக்கொள்பவர்களை -  சில வாரங்கள் தொடர்ந்து கண்கானித்து வந்ததிலிருந்து கண்டுபிடித்த சிலவற்றை பட்டியலிட்டுள்ளனர் மனநல ஆய்வாளர்கள். 

1. எதை செய்தாலும் இதை இப்படித்தான் செய்ய வேண்டும், 
2. எதையும் என்னால் மட்டுமே சரியாகச் செய்ய முடியும்,
3. என்னுடன் ஒத்துப் போகாத அனைவரும் என்னுடைய எதிரிகள்,
4. நான் சொல்வதைத்தான் மற்ற அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற பிடிவாத எண்ணம் கொண்டவர்கள் அதாவது எதற்கும் எந்த காலத்திலும் எவருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ள மறுப்பவர்கள்.

இத்தகைய மனநிலை உள்ளவர்கள்தான் பெரும்பாலும் அதிக சினம் கொள்பவர்களாம். 

ஆனால் இவர்களுள் அனைவருமே தங்களுடைய கோபத்தை அப்படியே வெளிக்காட்டுபவர்கள் என்று கூறிவிட முடியாது.  கடுகடுவென்ற முகபாவனையுடன் உள்ளவர்களை இவர்கள் கோபக்காரர் என்று எளிதில் இனம் கண்டுக்கொள்ள முடிகிறது. ஆனால் இதே மனப்போக்கு உள்ளவர்களும் தங்களை மற்றவர்கள் இனம் கண்டுக்கொள்ளக் கூடாது என்ற எண்ணத்துடன் சாது வேடம் போடுபவர்களும் உண்டு. முன்னவர்களை விட இவர்கள்தான் மிகவும் அபாயகரமானவர்கள்.  நான் திருடன் என்பதை ஒப்புக்கொள்பவனை விட நல்லவனைப் போல் வேடமிட்டுக்கொண்டு கொள்ளையடிப்பவனைப் போன்றவர்கள் இவர்கள். 

கோபம் வரும்போது அதை வெளிக்காட்டிவிட வேண்டும் இல்லையென்றால் அது நம்முடைய உடல் நலத்தை பாதிக்கக் கூடும் என்று கூறினேன். இதற்கு என்னுடைய நெருங்கிய நண்பரும் அவருடைய மனைவியுமே உதாரணம்.

என்னுடைய நண்பர் சினம் கொண்டு நான் பார்த்ததே இல்லை. எந்த சூழலிலும் தன்னுடைய நிதானத்தை இழக்க மாட்டார். அவருடைய மனைவி அவருக்கு நேர் எதிர். எதற்கெடுத்தாலும் கோபம் வரும்.  மனைவியின் கோபம் நண்பரை பாதிக்கவில்லை என்பதை அவருடைய முகத்தை பார்த்தாலே தெரியும். அருகிலேயே அமர்ந்திருந்தாலும் எதுவும் நடக்காததுபோல் இருப்பார். அதுவே அவருடைய மனைவியின் கோபத்தை அதிகரிப்பதை பார்த்திருக்கிறேன். 'நா கரடியா கத்தறேன், எப்படி ஒக்காந்துருக்கார் பாருங்க? இவர் இப்படி இருக்கறதாலத்தான் எனக்கு கோபமே வருதுங்க.' என்பார் மனைவி. எப்படி நண்பரால் இப்படி இருக்க முடிகிறது என்று நானும் பல சமயங்களில் வியந்திருக்கிறேன். ஆனால் சில வருடங்கள் கழித்து அவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டபோதுதான் தெரிந்தது அவர் கோபத்தை எந்த அளவுக்கு அடக்கி வைத்திருந்தார் என்பது. தன்னுடைய அதீத கோபம்தான் தன்னுடைய கணவருக்கு மாரடைப்பு ஏற்பட காரணம் என்பதை அறிந்தபோது நொருங்கிப் போனார் அவருடைய மனைவி. 

சிலர் வேண்டுமென்றே கோபப்படுவார்கள். இத்தகையோருக்கு அது தங்களுக்கும் தங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் அதை கண்டுக்கொள்ளாதவர்கள் போல் இருப்பார்கள். இத்தையோரை திருத்தவே முடியாது. இவர்களுக்கு யோகா போன்றவைகள் கூட பலனளிக்காது.  அது அவர்களுடைய குணநலன் (character). 

வேறு சிலர் தங்களையுமறியாமல் கோபப்படுவார்கள். தாங்கள் செய்வது தவறு என்று தெரியும். ஆனால் தவிர்க்க முடியாமல் தவிப்பார்கள். கோபம் வரும்போதெல்லாம் அதை தவிர்ப்பதற்கு முயல்வார்கள். ஆனால் முடியாமல்போய்விடும். பிறகு தங்களுடைய கோபத்திற்கு வருத்தம் தெரிவிப்பார்கள். இவர்கள் தங்களுடைய கோபத்தை தவரிக்கவோ அல்லது ஓரளவுக்கு கட்டுக்குள் வைத்துக்கொள்ளவோ முயற்சி செய்யலாம். 

கோபத்தை தவிர்க்க என்ன செய்யலாம்?

1. கோபத்திற்கு காரணமாகவுள்ள நபர்களிடமிருந்தோ அல்லது அந்த இடத்திலிருந்தோ விலகிச் சென்றுவிடலாம்.

2. கோப மன நிலையில் உள்ளபோது பேசாமல் இருந்துவிடலாம்.

3. மனதை சாந்தப்படுத்த உதவும் உடற் பயிற்சிகள் அல்லது யோகா போன்றவைகளில் ஈடுபடலாம். 

இப்படி எத்தனையோ வழிகளில் கோபத்தை எல்லை மீறி செல்லாமல் கையாள (Manager) முயற்சி செய்யலாம். 

இதையும் மீறி கோபம் வரும்போது அதை உள்ளுக்குள்ளேயே வைத்து புழுங்காமல் வெளியில் காட்டிவிடுவதுதான் நல்லது. ஆனால் அதையும் ஒரு எல்லைக்குள் வைத்துக்கொள்ள பயிற்சி செய்ய வேண்டும்.  

சினம் கொள்ளாம் இருப்பது முற்றும் துறந்த துறவிக்கே சாத்தியமாகும். ஆகவே கோபத்தை திறம்பட கையாள்வது எப்படி என்பதை மட்டுமே நாம் கற்றுக்கொள்ள வேண்டும். 

இது ஒரு நாளில் கைவந்துவிடும் கலையல்ல. காலப் போக்கில் அனுபவமும் விவேகமும் கூட கூடத்தான் இது சாத்தியமாகும்.

சினம் கொள்வதைப் பற்றி வள்ளுவர் என்ன கூறியுள்ளார் என்பதை இணையத்தில் ஆராய்ந்தபோது என் கண்ணில் பட்டவற்றை கீழே கொடுத்துள்ளேன்.  

குறள் 303: 

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய 
பிறத்தல் அதனான் வரும்.

கலைஞர் உரை: 
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.

குறள் 304: 

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் 
பகையும் உளவோ பிற.

கலைஞர் உரை: 
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.


குறள் 305: 

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் 
தன்னையே கொல்லுஞ் சினம்.

கலைஞர் உரை: 
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், 

அவனை அழித்துவிடும்

குறள் 307: 

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு 
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

கலைஞர் உரை: 
நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.


குறள் 310: 

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் 
துறந்தார் துறந்தார் துணை.

கலைஞர் உரை: 
எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.

இன்று மனநல ஆய்வாளர்கள் ஆய்ந்து கண்டறிபவைகளை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வைத்துள்ளார் வள்ளுவர்!! தமிழின் பெருமையை இதற்கு மேலும் பறைசாற்ற வேண்டுமா என்ன?

**********

07 ஜனவரி 2014

INSOMNIA என்றால் என்னாங்க - நிறைவுப் பகுதி


சாதாரணமாக இரவில் நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆக குறைந்தது இரண்டு மணி நேரம் தேவைப்படுகிறது. அதிலும் spicy food  எனப்படும் காரசாரமான நம்முடைய உணவு செரிமானம் இன்னும் சற்று கூடுதல் நேரம் தேவை. ஆகவே பத்து மணிக்கு உறங்க செல்லும் பழக்கம் உள்ளவர்கள் குறைந்தபட்சம் எட்டு மணிக்காவது தங்களுடைய இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும். இது சாத்தியமில்லை என்பவர்கள் உறக்கம் வரவில்லையே என்று புலம்புவதில் பயனேதும் இல்லை. வயிற்றில் உள்ள உணவை செரிமானம் செய்யும் வேலையில் மும்முரமாக இருக்கும் நம்முடைய மூளையிடம் நான் உறங்க வேண்டும் என்று கட்டளையிட்டாலும் அது பொருட்படுத்தாது. இன்னும் சிலர் படுத்தவுடனே உறங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் உணவுடன் சேர்த்து மதுவையும் அருந்துவார்கள். மதுவின் தாக்கம் மூளையின் செயல்பாட்டையும் பாதிப்பதால் உடனே உறக்கம் வந்துவிடும் என்பது உண்மைதான். ஆனால் மதுவின் தாக்கம் குறைந்ததும் மீண்டும் மூளை விழித்தெழுந்து உணவை ஜீரணிக்கும் வேலையில் இறங்கும். நம்முடைய உறக்கமும் கலைந்துவிடும். அப்புறம் சிவராத்திரிதான். 

உணவு மட்டுமல்லாமல் நாம் பகலில் பருகும் குடிநீரின் அளவும் நம்முடைய உறக்கத்தை பாதிக்குமாம். நாளொன்றுக்கு இரண்டு லிட்டர் அளவு குடிநீரை பருக வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால் அதே சமயம் இரவு ஏழு மணிக்குப் பிறகு நாம் பருகும் நீரின் அளவை படிப்படியாக குறைத்துவிட வேண்டும். உதாரணத்திற்கு இரவு உணவின்போது இரண்டு டம்ளர் நீருக்கு மேல் (அரை லிட்டர்) பருகக் கூடாது. இல்லையெனில் அதுவே நம்முடைய உறக்கத்தை கலைத்துவிடும். குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்களும் சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்களும் இரவு ஏழு மணிக்குப் பிறகு பருகும் நீரின் அளவில் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். இரவு நேரங்களில் மது அருந்தும் பழக்கம் உடல்நலத்திற்கு மிகவும் கேடு என்பதற்கு இதுவும் ஒரு காரணம். குடிநீரைப் போலவே காப்பி/தேநீர் அருந்தும் பழக்கத்திலும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். வயது ஏற, ஏற இவற்றின் அளவைக் குறைத்துவிடுவது நல்லது. அறுபது வயதுக்கு மேலுள்ளவர்கள் காலையில் அருந்தும் காப்பி அல்லது தேநீருடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். பதினோரு மணிக்கு ஒன்று மாலை நான்கு மணிக்கு என்று மூன்று வேளையும் அருந்தும் பழக்கம் தொடர்ந்தால் அதுவே இரவில் உறக்கத்தை பாதிக்க வாய்ப்புண்டு. 

படுக்கையறை அமைப்பு

நம்முடைய படுக்கையறையின் அமைப்பும் இரவு உறக்கத்தை கூட்டவோ குறைக்கவோ செய்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். நம்முடைய படுக்கை உறங்குவதற்கு மட்டுமே என்பதை நம்மில் பலரும் புரிந்துக்கொள்வதில்லை. ஆங்கிலத்தில் இதை Bed is for sleep and sex only என்கின்றனர் வேடிக்கையாக. படுக்கையில் அமர்ந்துக்கொண்டு தொலைக்காட்சி பார்ப்பது, கணினியில் அலுவலக வேலையை பார்ப்பது, ஐ பேடில் இணையத்தில் உலவுவது ஏன் புத்தகம் படிப்பது போன்ற எந்த அலுவலையும் செய்யக் கூடாது. 

படுக்கையறையை வடிவமைக்கும்போதே இதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். படுக்கையின் அளவு ஆறடிக்கு நான்கடி என்றால் படுக்கையறையின் அளவு பதினைந்துக்கு பத்து அடி என்ற அளவுக்கு மேல் (அதாவது நீளத்தில் பதினைந்து அகலத்தில் பத்திலிருந்து பன்னிரண்டு) இருக்கலாகாதாம். அதாவது படுக்கையை சுற்றிலும் இலகுவாக சென்றுவர தேவையான  இடம் மட்டுமே இருக்க வேண்டுமாம். படுக்கையை அடுத்து ஒரு சிறிய சாய்வு நாறிகாலி (ஈசிச் சேர் அல்ல) படுக்கைத் தலைமாட்டில் இருபுறமும் சிறு அலமாரிகளைக் கொண்ட மரத்தால் ஆன இணைப்பு (டார்ச், குடிநீர் ஆகியவை வைத்துக்கொள்ள) என ஒரு சில பொருட்கள் மட்டுமே இருக்க வேண்டும். சுவரில் மணிக்காட்டி நிச்சயம் இருக்கக் கூடாது. மணிக்காட்டியே தேவையில்லை என்று சொல்லும்போது டிவி பெட்டிக்கோ அல்லது கணினிக்கோ அங்கு நிச்சயம் இடம் இல்லை.

அடுத்ததாக அறையில் cross ventilation வசதிக்காக இரண்டு ஜன்னல்கள் இருக்க வேண்டும் (இது குடியிருப்புகளில் சாத்தியமில்லை என்பது உண்மைதான்). அதில் ஒரு ஜன்னல் தலைப் பக்கமும் மற்றொன்று இடம் அல்லது வலப்பக்கத்திலும் இருக்கலாம். அதாவது கிழக்கு திசையில் ஒரு ஜன்னல் என்றால் இரண்டாவது ஜன்னல் மேற்கு திசையில் இருக்கலாகாது. வடக்கிலோ அல்லது தெற்கிலோ இருக்க வேண்டும். ஏனெனில் ஜன்னல்கள் எதிரெதிர் திசையில் இருப்பதால் பயன் ஏதும் இல்லையாம்! ஏசி வசதி செய்யும் பட்சத்தில் அது ஒரு ஜன்னலின் மேற்புறத்தில் பொருத்தப்பட வேண்டும். அது கட்டிலின் தலைப்பக்கத்தில் இருந்தால் நல்லது. ஏசியின் குளிர்ந்த காற்று நேரடியாக தலையை தாக்காது. 

அடுத்தது  அறையின் லைட்டிங் (lighting). உறக்கத்திற்கு மிகவும் அவசியமானது இருட்டு. ஆகவே ஜன்னல்களில் நல்ல தடிமனான திரைச்சீலை அவசியம் தேவை. படுக்கை தலைமாட்டில் கையடக்க டார்ச் லைட் இருந்தால் போதும். ஏனெனில் இரவு நேரங்களில் எழுந்திருக்க நேரும்போது மின்விளக்கை எரியவிடுவதும் கூட நம்முடைய உறக்கத்தை பாதிக்க வாய்ப்புண்டாம். Night lamp பழக்கமுள்ளவர்கள் அதை படுக்கைக்கு கீழே அதாவது தரையிலிருந்து ஒரு அடிக்குள் அமைத்துக்கொள்வது நல்லது. இப்போதெல்லாம் இரவில் கண்களை தேவையில்லாத வெளிச்சத்திலிருந்து பாதுகாக்க Eye Pads நிறைய வந்துவிட்டன. அவற்றை வாங்கி அணிந்துக்கொள்ளலாம். அவை கறுப்பு நிறத்தில் இருப்பதால் கண்களுக்கு இதமாக இருப்பதுடன் வெளிச்சத்தை முற்றிலுமாக மறைத்துவிடுகின்றன. கடைகளில் கிடைக்காத பட்சத்தில் நாமாகவே கூட தயாரித்துக்கொள்ளலாம். 

அதற்கடுத்தது அறையினுள் ஒலியின் அளவு. வெளிச்சத்திற்குப் பிறகு நம்முடைய உறக்கத்திற்கு தேவையானது நிசப்தம். சாதாரணமாக நம்முடைய செவி தலைக்கு மேல் சுற்றும் மின்விசிறியின் ஓசைக்கு பழகிப்போய்விடும். அது எத்தனை கடகடவென்று ஓசையிட்டாலும் அது நம்முடைய உறக்கத்தை பாதிப்பதில்லை. அதுபோலவே ஏசி பெட்டியின் ஓசையும் எளிதில் பழகிவிடும். ஆனால் அறைக்கு வெளியிலிருந்து வரும் ஓசைகள் அவற்றின் ஒலி அளவு குறைவாக இருப்பினும் அது நம்முடைய மூளைக்கு பழக்கமில்லாத ஓசை என்பதால் அது நம்முடைய உறக்கத்தை பாதிக்கிறது. ஆகவே இத்தகைய ஒலிகளை எந்த அளவுக்கு தடுக்க முடியுமோ அந்த அளவுக்கு தடுத்துவிடுவது நல்லது. Eye Padகளைப் போலவே Ear Plugs/Shieldகளும் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை அணிந்துக்கொள்ளலாம். 

நம்முடைய மூளையையும் உடலையும் உறக்கத்திற்கு தயாரிப்பது

நான் மேலே குறிப்பிட்டவற்றையெல்லாம் செய்தாலும் சில நேரங்களில் உறக்கம் எளிதில் வருவதில்லை. இதற்கு நம்முடைய மூளையும் உடலும் உறக்கத்திற்கு தயாராக இல்லை என்று பொருள். அன்றைய தினம் நாம் செய்த ஏதோ ஒரு செயலோ அல்லது கேட்ட ஏதோ ஒரு செய்தியோ நம்முடைய மூளையை (மனதை) பாதித்திருக்கும் பட்சத்தில் அதையே நினைத்து மனது அலைபாய்ந்துக்கொண்டிருக்கக் கூடும். ஆகவே உறங்கும்க நேரம் வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகிலும் படுக்கையறைக்கு சென்றுவிடுவது நல்லது. ஆனால் உடனே படுக்கையில் வீழ்ந்துவிடாமல் படுக்கைக்கு அருகில் உள்ள சாய்வு நாற்காலியில் அமர்ந்து விளைக்கை அணைத்துவிட்டு, கண்களை மூடி அமர்ந்திருக்கலாம். மனம் அப்போதும் ஒரு நிலையில் வராமல் அன்று நடந்தவற்றையே நினைத்து உழன்றுக்கொண்டிருக்குமானால் அதை அதன் போக்கிலேயே விட்டுவிட வேண்டும். இப்படி செய்திருக்கலாமோ அப்படி செய்திருக்கலாமோ அல்லது நாம் அவ்வாறு பேசியிருக்கலாகாதோ, சினம் கொண்டிருக்கலாகாதோ என்றெல்லாம் மனம் அலைபாயும்போது அதனுடன் நாமும் சேர்ந்துக்கொண்டு அதன் போக்கிலேயே செல்ல வேண்டும். பத்து அல்லது பதினைந்து நிமிடத்திற்குள் மனம் தானாக அமைதியடையும். இதற்கு ஏதுவாக நமக்கு பிடித்த இசையை மெலிதாக வைத்து கேட்கலாம். அதற்கென அறையெங்கும் ஸ்டீரியோ வசதி செய்துக்கொள்ள வேண்டும் என்று பொருளில்லை. கையடக்க டேப் ரிக்கார்டரோ அல்லது நம்முடைய செல்ஃபோனிலோ நமக்கு பிடித்த இசையை (Instrumental music is preferable) கேட்கலாம். அல்லது மனதில் அமைதி ஏற்படுத்தக் கூடிய புத்தகத்தை வாசிக்கலாம். மிதமான சூட்டில் குளிக்கலாம். இவ்வாறு எதையாவது செய்து நம்முடைய மூளையை உறங்கும் நேரம் வந்துவிட்டது என்று அறிவுறுத்தி தயாரிப்பதும் ஒரு கலை. 

அதை விடுத்து படுக்கையில் படுத்துக்கொண்டு அடுத்த நாள் அலுவலகத்தில் செய்ய வேண்டியவற்றைப் பற்றி ஆலோசிப்பது மூளையை அமைதிப்படுத்துவதற்குப் பதிலாக தூண்டிவிடுவதற்கு ஒப்பாகும். 'இன்னைக்கி செய்ய வேண்டியத பத்தியே நினைச்சி நினைச்சி நேத்து தூக்கமே போயிருச்சிப்பா.' என்று கூறுபவர்களை பார்த்திருக்கிறேன். எல்லாவற்றையும் யோசித்து முடிவெடுத்திருப்பார்கள்.  ஆனால் அதை நிறைவேற்றும் சமயம் வரும்போது உடலும் மூளையும் அதீத அசதியின் காரணமாக ஒத்துழைக்க மறுத்துவிடும். பிறகென்ன, சொதப்பல்தான். மேலதிகாரிகளின் கோபத்தையும் ஏச்சையும் கேட்க வேண்டியதுதான். 

நாம் நம்முடைய தினசரி அலுவல்களை திறம்பட செய்து முடிக்க நமக்கு மிகவும் அத்தியாவசியமானது உறக்கம். அது நம்முடைய உடலுக்கு மட்டுமல்லாமல் மூளைக்கும் ஓய்வு அளிக்கிறது. அடுத்த நாள் உற்சாகத்துடன் எழுந்து நம்முடைய அன்றைய அலுவல்களை செய்து முடிக்க இத்தகைய ஓய்வு மிகவும் அவசியம். 'தூங்குறதுக்குக் கூட நேரம் கிடைக்க மாட்டேங்குதுப்பா, அவ்வளவு வேலை.' என்பவர்கள் நிச்சயம் அவர்களுடைய அலுவல்களில் திறனுள்ளவர்களாக இருக்க வாய்ப்பில்லை. எத்தனை அலுவல்கள் இருந்தாலும் நேரத்திற்கு படுத்து நேரத்திற்கு எழுபவர்களால் மட்டுமே அதே திறனுடன் வருடக் கணக்கில் செயலாற்ற முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கனவுகளில்லா உறக்கம் என்பது சாத்தியமில்லை என்பதும் உண்மை. அதுபோலவே யாராலும் எட்டு மணி நேரம் தொடர்ந்து உறங்கவும் முடியாது. உறக்கத்தின் இடையே பல சுழற்சிகள் (cycles) உண்டு என்கின்றனர் மருத்துவர்கள். அது உண்மைதான். உறக்கம், விழிப்பு,  மீண்டும் உறக்கம் என்னும் சுழற்சி முறையில்தான் உறக்கம் வரும். மேலும் மாதத்தில் ஒரு வாரம் ஆழ்ந்த உறக்கம் அடுத்த வாரம் மிதமான உறக்கம் மீண்டும் அடுத்த வாரம் ஆழ்ந்த உறக்கம் என்பதும் உண்டு. ஆகவே ஒரு சில நாட்கள் ஆழ்ந்த உறக்கம் இல்லை என்றவுடன் அதையே நினைத்து மனதை குழப்பிக் கொள்வதில் அர்த்தமில்லை. அதுபோன்றே எனக்கு உறக்கம் வரவில்லையே, வரவில்லையே என்று படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து கவலைப்படுவதிலும் பொருளில்லை. உறக்கம் வராத சூழலிலும் கண்களை இறுக மூடி படுத்திருக்க வேண்டும். அந்த சூழலில் நம்மையுமறியாமல் மனம் எங்கெங்கோ அலைந்துக்கொண்டிருக்கும். அதை அதன் போக்கிலேயே விட்டுவிடுவது நல்லது. அதுவாக தன்னால் மீண்டும் தன்னிலைக்கு திரும்பி வரும்போது மீண்டும் உறக்கம் நம்மை ஆட்கொள்ளும். 

எந்த சூழலிலும் படுத்த உடனே உறங்கும் பலரை நானும் பார்த்திருக்கிறேன். அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். ஆனால் நம்மில் பலருக்கும் அந்த வரம் கொடுக்கப்படவில்லை. அதில் நானும் ஒருவன். சர்வீசில் இருந்தபோது குறிப்பாக கடைசி பத்துவருடங்கள் வங்கியின் கணினி மையத்தின் தலைவராக இருந்தபோது உறக்கம் வராமல் கழித்த இரவுகள் எத்தனை! ஆகவே இப்போதும் சர்வீசில் உள்ளவர்களுக்கு அதுவும் அதிகார பொறுப்பிலுள்ளவர்களுக்கு நான் இதுவரை சொன்ன எந்த டெக்னிக்கும் செல்லுபடியாகாமல் போகவும் வாய்ப்புள்ளது என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனாலும் முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை. உடனே தீர்வு ஏற்படவில்லயென்றாலும் நாளடைவில் ஆழ்ந்த உறக்கம் கைவசப்பட வாய்ப்புள்ளது.

*******

06 ஜனவரி 2014

INSOMNIA என்றால் என்னங்க?

'இரவு உறக்கமின்மை' (insomnia) என்பது ஒரு வியாதி இல்லை என்றாலும் அதை அலட்சியப்படுத்துவது முறையல்ல என்கின்றனர் மருத்துவர்கள். நிம்மதியற்ற உறக்கம் (restless sleep) என்று துவங்கி நாளடைவில் உறக்கமின்மையில் (insomnia) கொண்டு விட்டுவிடும் . உறக்கமின்மைதான் நம் உடலில் ஏற்படும் பலவித நோய்களுக்கும் உபாதைகளுக்கும் மூல காரணம்  என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதுவே நாளடைவில் மனத்தளவிலும் பாதிப்பை ஏற்படுத்திவிடுமாம்!

சாதாரணமாக, அதிக உடல் உழைப்பு இல்லாதவர்களிடையில்தான் உறக்கமின்மை அதிகம் காணப்படுகிறது என்றாலும் நம்முடைய மூளை தொடர்ந்து அதிக அளவில் செயல்படும்போதும் (hyper-active) உறக்கமின்மை ஏற்படுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஒரு திடகாத்திரமான மனிதனுக்கு தினமும் குறைந்தபட்சம் எட்டு மணி நேர உறக்கம் தேவை. எட்டு மணி நேர உறக்கம் என்று கூறும்போது அது 'இரவு உறக்கத்தை' (Night sleep) மட்டுமே குறிக்கிறது. மேலும் இரவில் எட்டு மணி நேரம் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். பகல் நேர உறக்கத்தையோ அல்லது நாள் முழுவதும் அவ்வப்போது உறங்குவதையோ குறிப்பிடவில்லை.

ஆனால் இன்றைய அவசர உலகில் இத்தகைய தடையில்லா இரவு உறக்கம் (undisturbed night sleep) என்பது அனைவருக்கும் சாத்தியப்படுவதில்லை. குறிப்பாக நம்முடைய இளைய தலைமுறையினருக்கு - அதிலும் குறிப்பாக கணினி தொடர்பான அலுவல்களில் உள்ளவர்களுக்கு -  இது சாத்தியமில்லை. BPO போன்ற சேவை துறையில் பணியாற்றும் பல இளைஞர்கள் தொடர்ந்து இரவு நேரங்களில் பணியில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் வார இறுதி நாட்களில் தவிர இரவு உறக்கம் என்பது கற்பனையிலும் சாத்தியமில்லை. 

ஆகவே இந்த கட்டுரையில் நான் கூறவிருக்கும் எதுவும் BPO அல்லது இரவு நேரத்தில் (Night duty) பணிக்கு செல்பவர்களுக்கு பொருந்தாது. அவர்களைப் பொருத்தவரை உறக்கமின்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. இத்தகையோர் காலையில் அலுவலகத்திலிருந்து திரும்பியதும் உணவையும் மறந்து உறங்குவதைப் பார்த்திருக்கிறேன். 

இவர்களுடன் இன்றைய தலைமுறையினரையும் சேர்த்துக்கொள்ளலாம். இவர்களுக்கு வார நாட்களில் உறக்கத்தை சேமித்து வைத்து வார இறுதி நாட்களில் அவற்றை பயன்படுத்திக்கொள்ளும் வித்தையும் கைவந்த கலையாகிவிட்டது. மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிக் காலங்களில் வேறு வழியில்லாமல் துவங்கும் இப்பழக்கம் நாளடைவில் பழகிப்போய்விடுகிறது. ஆனால் இளம் வயதில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தாத இந்த பழக்கம் நடுத்தர வயதை எட்டும்போதே பல நோய்களுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது என்பதும் உண்மை. 

ஆனால் இரவு உறக்கத்தில் மூளைக்கும் உடலுக்கும் கிடைக்கக் கூடிய ஓய்வு பகல் உறக்கத்தில் கிடைப்பதில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆகவேதான் insomania என்றால் அது இரவு உறக்கமின்மையை மட்டுமே குறிக்கின்றது என்கின்றனர்.

உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஆழ்ந்த இரவு உறக்கம் கிடைக்க என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று சுருக்கமாக பார்க்கலாம்.

1. குறித்த நேரத்தில் உறங்கச் செல்ல வேண்டும். 

நம்முடைய உடலுக்குள் body clock என்ற ஒரு அம்சம் உள்ளது. அது மூளையின் ஒரு பாகத்தில் உள்ளதாம்.  மூளையின் இந்த பகுதிதான் அதை இயக்குகிறது என்று இதுவரையிலும் உறுதியாக சொல்லப்படவில்லை. ஆனால் அத்தகைய மணிக்காட்டி நம் உடலுக்குள் இருப்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதை நம்மால் பல சமயங்களிலும் உணர்ந்துக்கொள்ள முடியும். குறிப்பாக ஒருவர் தினமும் எட்டு மணிக்கு உறங்க செல்வது வழக்கமாகிவிட்டால் அவரையும் அறியாமல் எட்டு மணிக்கு கண்கள் அசத்தும். அவர் அந்த நேரத்தில் வீட்டில் இருந்தாலும் சரி அல்லது வெளியில் வேறெந்த அலுவலில் இருந்தாலும் சரி அவருடைய மூளை 'இது நீங்கள் உறங்கும் நேரம்' என்று சொல்லிவிடும். அதை பொருட்படுத்தாமல் அவர் செய்துக்கொண்டிருக்கும் அலுவலிலேயே குறியாக இருந்தால் ஒரு சில நிமிடங்களில் மூளை அதை புரிந்துக்கொள்ளும். எட்டு மணிக்கு உறங்கிக்கொண்டிருந்தவர் அடுத்து சில தினங்களுக்கு தொடர்ந்து ஒன்பது மணிக்கோ அல்லது பத்து மணிக்கோ உறங்கும் பழக்கத்தை துவங்குவாரேயாகில் மூளை அதை புரிந்துக்கொண்டு அன்றிலிருந்து உறக்க நினைவுறுத்தலை மாற்றிக்கொள்ளும். அதே போன்று இரவு உறக்கத்தின் இடையில் சிறுநீர் கழிக்கவோ அல்லது வேறெந்த தேவைகளுக்கோ ஒருவர் படுக்கையிலிருந்து எழுந்து செல்ல நேரிடும்போது அப்போது எத்தனை மணி என்று தெரிந்துக்கொள்ள படுக்கையறை கடிகாரத்தில் பார்த்தால் அந்த நேரத்தை மூளை குறித்துக்கொள்ளுமாம்! பிறகு அதே நேரத்தில் அடுத்த நாளும் விழிப்பு வருமாம்! சந்தேகமிருந்தால் பரீட்சித்து பாருங்கள்! இதைத்தான் 'உடல் மணிக்காட்டி' (body clock) என்கின்றனர்.  

2. உடல் உழைப்பு தேவை

அதிக உடலுழைப்பு உள்ளவர்களுக்கு உடல் அசதியால் உறக்கம் எளிதாக வந்துவிடுகிறது. அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு அவர்களுடைய அலுவல்களில் உடலை விட மூளையைதான் அதிகம் பயன்படுத்த வேண்டியுள்ளது. 

உடல் சோர்வைப் போலவே மூளையும் ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்குப் பிறகு சோர்வடைகிறது என்றாலும் அது உடல் சோர்வை ஏற்படுத்துவதில்லை. ஆகவேதான் இத்தகையோருக்கு இரவில் எட்டு மணி நேர தடையில்லா உறக்கம் சாத்தியப்படுவதில்லை. 

ஆகவேதான் உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு தினசரி ஒரு குறிப்பிட்ட அளவு உடற்பயிற்சி அல்லது நாற்பது நிமிட நடை ஆகியவை தேவை என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள். 

3. உணவு பழக்கம்

அதுமட்டுமல்லாமல் நம்முடைய இரவு நேர உறக்கம் நம்முடைய உணவுப் பழக்க வழக்கத்தையும் சார்ந்ததுதானாம். 

நம்முடைய சிறு வயது முதலே வயிறு நிறைய உண்ண வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றனர் நம்முடைய பெற்றோர். இப்போதும் பல பெற்றோர்கள் தங்களுடைய குழந்தை சற்று குண்டாக இருப்பதையே விரும்புகின்றனர். அத்தகைய குழந்தைகள்தான் ஆரோக்கியமான குழந்தை என்ற நினைப்பு இன்னும் நம்மில் பலரிடமும் உள்ளதை காண முடிகிறது. இந்த வயிறு முட்ட சாப்பிடும் பழக்கம் நம்முடைய மனதில் நன்றாக ஊன்றப்படுவதால் அதுவே பிற்காலத்தில் உறக்கமின்மைக்கும் அதன் விளைவாக சகல நோய்களுக்கும் மூல காரணமாகிவிடுகிறது. 

குறிப்பாக, இன்றைய நவீன அதிவேக யுகத்தில் ஒரு நாளின் முக்கிய உணவாக கருதப்படும் காலை உணவு (Break fast) பலராலும் புறக்கணிக்கப்படுவதை காண்கிறோம். பள்ளிப்பருவத்தில் துவங்கும் இந்த பழக்கம் கல்லூரி முடிக்கும்வரை மட்டுமல்லாமல் அலுவலகங்களுக்கு செல்லும் வயது வரையிலும் கூட தொடர்வதுண்டு. காலை உணவு அறவே புறக்கணிக்கப்படுகிறது என்றால் பள்ளி/கல்லூரி/அலுவலகங்களுக்கு கொண்டு செல்லும் மதிய உணவோ கையடக்க டப்பாவில்! கால் வயிறுக்கும் கூட போறாத நிலை. காலை மற்றும் மதிய உணவில் சேர்க்க முடியாத அனைத்தையும் இரவு உணவில் சேர்த்து உண்ணும் நம்முடைய பழக்கமே இரவு நேர உறக்கத்தை பாதிக்கும் முக்கிய காரணம் என்றாலும் மிகையாகாது. காலையில் ஒரு மகாராஜாவைப் போலவும் இரவில் ஒரு பிச்சைக்காரனைப் போலவும் உண்ண வேண்டுமாம்!

மேலும் இரவு உணவு என்பது நம்மில் பலருக்கும் படுக்கைக்கு செல்வதற்கு அரை மணி முன்புதான் சாத்தியப்படுகிறது. இரவு பத்து மணிக்கு வீடு திரும்பி உடை மாற்றி குளித்து உணவு மேசையில் அமர்ந்து உண்டு முடிக்கும்போது மணி பதினொன்றாகிவிடும். உண்டு முடித்து சில நிமிடங்கள் (அதிகபட்சம் செய்தியை பார்க்க அரை மணி நேரம்). அதன் பிறகு படுக்கைதான். 

சாதாரணமாக இரவில் நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆக குறைந்தது இரண்டு மணி நேரம் தேவைப்படுகிறது. அதிலும் spicy food  எனப்படும் காரசாரமான நம்முடைய உணவு செரிமானம் ஆக இன்னும் சற்று கூடுதல் நேரம் தேவை. ஆகவே பத்து மணிக்கு உறங்க செல்லும் பழக்கம் உள்ளவர்கள் குறைந்தபட்சம் எட்டு மணிக்காவது தங்களுடைய இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும். இது சாத்தியமில்லை என்பவர்கள் உறக்கம் வரவில்லையே என்று புலம்புவதில் பயனேதும் இல்லை. வயிற்றில் உள்ள உணவை செரிமானம் செய்யும் வேலையில் மும்முரமாக இருக்கும் நம்முடைய மூளையிடம் நான் உறங்க வேண்டும் என்று கட்டளையிட்டாலும் அது பொருட்படுத்தாது. இன்னும் சிலர் படுத்தவுடனே உறங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் உணவுடன் சேர்த்து மதுவையும் அருந்துவார்கள். மதுவின் தாக்கம் மூளையின் செயல்பாட்டையும் பாதிப்பதால் உடனே உறக்கம் வந்துவிடும் என்பது உண்மைதான். ஆனால் மதுவின் தாக்கம் குறைந்ததும் மீண்டும் மூளை விழித்தெழுந்து உணவை ஜீரணிக்கும் வேலையில் இறங்கும். 

நம்முடைய உறக்கமும் கலைந்துவிடும். அப்புறம் சிவராத்திரிதான். 

நாளை நிறைவுபெறும். 

10 டிசம்பர் 2013

PPP அடிப்படையில் இந்தியா ஜப்பானை முந்தியது!!

GDP, GNP அடிப்படையில் உலகில் ஒன்பதாவது இடத்திலுள்ள இந்தியா 'வாங்கும் திறன் ஒப்பீடு' (Purchasing Power Parity) அடிப்படையில் ஜப்பானை முந்தி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது என்கிறது உலக நாணய நிதியம் (IMF). 2011ம் ஆண்டு இறுதியில் அது வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (GDP) இந்த ஒப்பீட்டின் அடிப்படையில் $ 4.46 trillion ஆகவும் ஜப்பானின் மதிப்பு $ 4.44 trillion ஆகவும் இருந்ததாம்!! 

அது என்ன வாங்கும் திறன் ஒப்பீடு?

சுருக்கமாக பார்க்கலாம்.

உலகிலுள்ள மிகப் பெரிய பொருளாதார சக்தி எனப்படும் அமெரிக்காவின்  நாணயமான டாலருடன் உலகிலுள்ள மற்ற நாடுகளின் நாணயங்களின் வாங்கும் திறனை (Purchasing Power) ஒப்பிட்டுப் பார்ப்பதுதான் இந்த 'வாங்கும் திறன் ஒப்பீடு.'

ஆங்கிலத்தில் இதை Purcasing Power Parity என்கிறார்கள். 

உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் செல்லுபடியாகக் கூடிய ஒரே நாணயம் அமெரிக்காவின் டாலர்தான் என்றால் மிகையாகாது. ஆகவே உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் வசிப்பவர்களுடைய வாங்கும் திறனை மதிப்பீடு செய்ய 1986ம் வருடம், அமெரிக்காவில் கிடைக்கும் ஒரு பொருளின் விலையை மற்ற நாடுகளில் நிலுவையிலுள்ள விலையுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தது  அமெரிக்காவின் பிரபல  'தி எக்கனாமிஸ்ட்'  சஞ்சிகை (Magazine).

அமெரிக்காவிலுள்ள மக்டனால்டு பர்கர் (Burger) ஒன்றின் விலையை அந்த நிறுவனத்தின் கிளைகள் இயங்கிவரும் ஏனைய நாடுகளிலுள்ள விலையுடன் ஒப்பிட்டு அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டின் நாணயத்தின் மதிப்பு என்ன என்பதை தோராயமாக கணக்கிட்டு Big Mac Index என்ற ஒரு பட்டியலை வெளியிட்டது இந்த சஞ்சிகை. அதன்படி இந்தியாவின் ரூபாய்தான் உலகிலேயே குறைத்து மதிப்பிடப்படும் நாணயம் என்று கண்டறியப்பட்டது.  

இதை எப்படி கண்டுபிடித்தார்கள் என்று பார்ப்போம்.

அமெரிக்காவில் மிகவும் பிரபலமான மக்டனால்டு பர்கரின் சராசரி விலை $ 4.56. இந்தியாவில் அதே பர்கர் $ 1.50 கிடைக்கிறது. தற்போதைய அன்னிய செலாவணி மாற்று விகிதத்தின் படி ஒரு டாலரின் மதிப்பு ரூ.59.98. இதன் அடிப்படையில் இந்தியாவில் இந்த பர்கரின் விலை Rs.90/-  ($1.50x59.98).   அமெரிக்காவில் இதன் இந்திய ரூபாய் மதிப்பு சுமார் Rs.273.50 ($4.56x59.98).  இதன்படி பார்த்தால் ஒரு டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு Rs.19.70(90/4.56=19.70)  என்றுதான் இருக்க வேண்டும். இது அன்னிய சந்தையின் டாலர் மதிப்புடன் ஒப்பிடுகையில் ரூ.40.30 குறைவு (60 - 19.70=40.30).

ஆகவேதான் இந்திய ரூபாயை the world's most underestimated currency என்கிறது இந்த கணிப்பு.  

இந்த சூத்திரத்தின் அடிப்படையில் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பை (GDP)கணக்கிடும்போதுதான் அது ஜப்பானின் ஒட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பை மிஞ்சுகிறதாம்! 

இந்த தளத்தில் உலகிலுள்ள அனைத்து நாடுகளுடைய நாணயத்தின் டாலருக்கு எதிரான உண்மையான மதிப்பை உடனடியாக கணக்கிட்டும் பார்க்கும் வசதியுள்ளது. 

மக்டனால்டு பர்கர் என்பதில் மட்டுமில்லாமல்  இந்திய-அமெரிக்க நாடுகளில் விற்கப்படும் பெட்ரோல் விலையிலும் இதே நிலைதான். சென்னையில் எண்பது ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலின் அமெரிக்க விலை சுமார் மூன்று டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் நூற்றியெண்பது ரூபாய். இந்த அடிப்படையில் பார்த்தாலும் ஒரு டாலரின் இந்திய மதிப்பு அன்னிய செலவானி சந்தையிலுள்ள டாலரின் மதிப்பைக் காட்டிலும் மிகவும் குறைவு (80/3=26.66). எலக்ட்ரானிக் பொருட்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் மற்ற எல்லா பொருட்களுடைய விலையிலும் இத்தகைய கணிசமான வேறுபாட்டை நம்மால் காண முடிகிறது.

ஆனால் இது ஒரு குறியீடு மட்டுமே என்பதையும் இதை மட்டும் வைத்து ஒரு நாட்டிலுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை அளவிட்டுவிட முடியாது என்பதையும் மறுப்பதற்கில்லை. 

இத்தகைய ஒப்பீடுகள் பை-லேட்டிரல் எனப்படும் இரண்டு நாடுகளுடைய நாணயங்களின் மதிப்பை ஒப்பிட பயன்படுவதுடன் வர்த்தக அடிப்படையில் அவ்விரு நாடுகளுக்கிடையிலும் நடைமுறையிலுள்ள நாணய மாற்று விகிதத்தில் ஒரூ நீண்டகால தாக்கத்தை (Long Term Effect) ஏற்படுத்தவும்  வாய்ப்புள்ளது என்கின்றனர் சில பொருளாதார நிபுணர்கள். 

இரு நாடுகளுக்கிடையிலுள்ள வர்த்தகத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் சந்தை பணமாற்று விகிதத்திற்கும் (Exchange Rate) இத்தகைய வாங்கு திறன் அடிப்படையில் கணிக்கப்படும் நாணய மதிப்பிற்கும் (Estimated under PPP) ஏன் இந்த வேறுபாடு என்ற கேள்வி எழலாம்.

இதற்கு பல காரணங்கள் இருப்பினும் இவற்றில் முக்கியமானதாகக் கருதப்படுவது இரண்டு காரணங்கள்:

1. அந்தந்த நாட்டிலுள்ள தொழிலாளர் ஊதியம் (Labour cost).

இது ஓரளவுக்குத்தான் உண்மை என்றாலும் இதுதான் மிக முக்கியமான காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்தியாவில் ஒரு தொழிலாளருக்கு வழங்கப்படுவதைப் போல மூன்று மடங்கு அதிகமான தொகை ஊதியமாக அமெரிக்காவில் வழங்கப்படுகிறது. ஒரு பொருளின் உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் தொழிலாளர்  ஊதியம்(Labout Cost) பொருட்களின் இறுதி சந்தை விலையையும் ஏற்றிவிடுகிறது. 

2. இந்திய நாட்டின் கணக்கில் வராத வர்த்தகத்தின் மதிப்பு. (Hidden strength of India's parallel economy)

இந்த கறுப்புச் சந்தை இந்திய பொருளாதாரத்தின் மிகப்பெரிய பலவீனம் எனக் கருதப்பட்டாலும் சில வேளைகளில் அதுவே நம்முடைய பலமாகவும் கருதப்படுகிறது. கணக்கில் வராத வர்த்தகர்கள் அல்லது தயாரிப்பாளர்களால்  அரசுக்கு விற்பனை வரி, கலால் வரி, வருமான வரி, சொத்துவரி என பலவிதங்களில் வரி செலுத்தும் நேர்மையான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தயாரித்து விற்கும் பொருட்களின் விலையை விடவும் பண்மடங்கு குறைத்து விற்க முடிகிறது. 

அத்தகைய பொருட்களுடன் போட்டிப் போடும் நிலைக்கு உள்ளூர் மற்றும் அயல்நாட்டு வர்த்தகர்களும் தள்ளப்படுவதால்தான் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம்முடைய சந்தையில் இந்த அளவுக்கு பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன என்கின்றனர். மேலும் சீனாவைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் உலகின் மற்றெந்த நாட்டிலும் இல்லாத உள்நாட்டு தேவைகள் (Domestic Demand) இந்தியாவில் இருப்பதும் ஒரு காரணம். இதில் இன்னொரு காரணமும் உள்ளது. இதை ஆங்கிலத்தில் Economies of Scale என்கிறார்கள். அதாவது இந்தியாவிலுள்ள மிக அதிக அளவிலான நுகர்வோர் தேவைகளால் (Increasing demand of the domestic consumer) பொருட்களின் தயாரிப்பும் அதிகரிக்கப்படுகிறது. ஒரு பொருளை அதிக தளவில் தயாரிக்கும்போது (Mass Production) அதன் தயாரிப்பு செலவையும் குறைக்க முடியும் என்கிறார்கள்.

அது எப்படி?

ஒரு பொருளை தயாரிக்க தேவைப்படும் செலவினங்களில் (Production cost) நிரந்தர செலவு (Fixed Cost) அன்றாட செலவு (Variable Cost)  என்று இரு இனங்கள் உண்டு. இதில் தொழிற்சாலையின் வாடகை, தயாரிப்பில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்காகும் பராமரிப்பு செலவுகள் மற்றும் அவற்றின் தேய்மானம் (Depreciation), உழைப்பாளரின் ஊதியம் (Labour Cost) ஆகியவை ஒரு பொருள் தயாரித்தாலும் நூறு பொருட்கள் தயாரித்தாலும் பெரிதாக மாறப்போவதில்லை. ஆகவே ஒரு பொருளை அதிக அளவில் தயாரிக்கும்போது அதன் சராசரி உற்பத்தி செலவு ( Average Production Cost) குறைகிறது. இதன் விளைவாக அவற்றின் விலையையும் கணிசமாக குறைக்க முடிகிறது. விற்பனைக்கு வரும் பொருட்களை பெருமளவில் கொள்முதல் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் பல்பொருள் அங்காடிகளால் (Super Markets) ரோட்டோர சில்லறைக் கடைகளை விடவும் மலிவான விலைக்கு பொருட்களை விற்க முடிவதற்கும் இதுவே காரணம். (அதே சமயம் இத்தகைய ரோட்டோர சில்லறைக் கடைகளும் சந்தையில் இருப்பதால்தான் பல்பொருள் அங்காடிகளும் அவர்களுடன் போட்டி போடுவதற்காகவே தங்களுடைய பொருட்களின் விலையை குறைக்கும் நிர்பந்தத்திற்குள்ளாகிறார்கள் என்பதும் உண்மை. எதிர்வரும் காலங்களில் ரோட்டோர சில்லறைக் கடைகள் அடியோடு அழியுமானால் அப்போது பல்பொருள் அங்காடிகளின் ஆதிக்கம் பெருகி அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் உள்ளதுப்போல் அவர்களுடைய (Supermarkets) கட்டுப்பாட்டில் நம்முடைய நுகர்வோரும் சிக்கி திணறப்போவது உறுதி. )

இந்திய சந்தையில் பணவீக்கத்தின் (inflation) தாக்கத்தால் அன்றாடம் ஏறும் விலைவாசியால் பாதிக்கப்படும் நம்முடைய நுகர்வோருக்கு PPP என்பதோ வாங்கு திறன் ஒப்பீடு என்பதோ அல்லது இந்தியாவின் நாணயம்தான் உலகிலேயே குறைத்து மதிக்கப்படும் நாணயம் என்பதோ எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை  என்பது உண்மை. ஆனாலும் இத்தகைய ஒப்பீடுகளின் மூலம் உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம்முடைய நாட்டிலுள்ள விலைவாசி அவ்வளவு அதிகமில்லை என்பதை நம்மால் உணர முடிகிறது. 

கடந்த மூன்று மாத காலமாக அமெரிக்காவில் வசித்து வரும் என்னுடைய மகள் கூறுவதை கேட்டதிலிருந்து இந்தியா இந்தியாதான் என்பதை உணர முடிகிறது. என்னுடைய மலேசிய வாசத்தின்போதும் இதை முழுவதுமாக உணர முடிந்திருக்கிறது. இங்கு யாராலும் வாழ்ந்துவிட முடியும். கோடீஸ்வரனாலும் வாழ முடியும் அதே அளவுக்கு இல்லாவிடினும் தன்னுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துக்கொண்டு பாமரனாலும் வாழ்ந்துவிட முடிகிறது.

'நான் சென்ற நாட்டில் இந்த நாடு சிறந்தது' என்று அன்று கண்ணதாசன் எழுதிய பாட்டில் வரும் வரிகள் இன்றளவும் உண்மை. 

**********

03 டிசம்பர் 2013

GNP என்றால் என்ன - GDP க்கும் அதற்கும் என்ன வித்தியாசம்?

கடந்த வாரம் GDP என்றால் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பு என்று பார்த்தோம். உண்மையில் அது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டிலேயே பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு என்று கூற வேண்டும். அதாவது, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு முழுவதுமாக இதில் சேர்க்கப்படுவதில்லை. ஒரு நாட்டின் ஏற்றுமதி அதன் இறக்குமதியை விட அதிகமாக இருக்கும் சூழலில் மட்டுமே அதிகமுள்ள பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு மற்ற உள்நாட்டு தயாரிப்புகளின் மதிப்புடன் சேர்க்கப்படுகிறது. 

ஆனால்  GNP என்பது எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டாலும் அவை நம்முடைய நாட்டை சார்ந்தவர்களால் தயாரிக்கப்படும் பொருட்களாக இருக்கும் பட்சத்தில் அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தின்  மதிப்பையும் (Income) உள்ளடக்கியதாகும். 

இன்னும் எளிமையாக கூறவேண்டுமானால் நம்முடைய நாட்டின் GDP நம்முடைய நாட்டில் வாழும்/இயங்கும் அயல் நாட்டைச் சார்ந்த தனிநபர்  அல்லது நிறுவனங்கள் இங்கு தயாரிக்கும் அல்லது அளிக்கும் சேவைகளின் மதிப்பை உள்ளடக்கியது என்றாலும் அவற்றால் அவர்களுக்கு (அயல் நாட்டினருக்கு) கிடைக்கும் வருமானம் அதாவது, முதலீடு மற்றும் பங்குகளிலிருந்து கிடைக்கும் டிவிடன்ட், கடன் பத்திர முதலீட்டிலிருந்து கிடைக்கும் வட்டி, அயல் நாட்டினருக்கு சொந்தமான நிறுவனங்கள் ஈட்டும் லாபம் ஆகியவற்றின் மதிப்பு ஒட்டுமொத்த GDP யிலிருந்து குறைக்கப்படுகிறது. 

ஆகவே நம்முடைய GDP வருடா வருடம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும் நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த வருமானம் அதே அளவு வளரும் என்று சொல்ல முடியாது. 

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் இங்கு  செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள்  ஒவ்வொரு வருடமும் ஈட்டும் லாபம் மற்றும் FIIs எனப்படும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் நம்முடைய பங்கு சந்தைகளில் செய்யும் முதலீடுகளிலிருந்து ஈட்டும் லாபம் ஆகியவை நம்முடைய GDP அதாவது நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் சேவைகளின் மதிப்பிலிருந்து குறைக்கப்படும். அதே சமயம் நம்முடைய நாட்டினர் வெளிநாடுகளில் ஈட்டும் வருமானம், லாபம், வட்டித் தொகை ஆகியவை நம்முடைய GDPயுடன் சேர்க்கப்பட்டும். இந்த கூட்டுத்தொகைதான் GNP எனப்படுகிறது.

தலை சுற்றுகிறதா?

இதை ஒரு சூத்திரத்தின் மூலம் விளக்குகிறேன்.

கடந்தவாரம் GDPஐ கணக்கிட நாம் பார்த்த சூத்திரம் இது: 

GDP=C+I+G+(X-M) 

இதில் 

C= Consumption அதாவது தனிநபர் மற்றும் நிறுவன செலவினங்களையும் 

I= Investments அதாவது இவ்விருவகுப்பினரின் முதலீடுகளையும் 

G= Government Expenditure & Investments அதாவது அரசு செய்யும் செலவினங்கள் மற்றும் முதலீடுகளையும் 

X= Exports அதாவது நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பையும்

M= Imports அதாவது இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பையும் குறிக்கிறது என்று பார்த்தோம்

இந்த முறையில் கணக்கிடப்படும் GDPயிலிருந்து 

1. வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அவர்களுடைய நாட்டிற்கு அனுப்புகிற வருமானத்தை குறைக்க வேண்டும்

2. நம்முடைய நாட்டினர் வெளிநாடுகளிலிருந்து நம்முடைய நாட்டுக்கு அனுப்பியுள்ள வருமானத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். 

இதன் கூட்டுத் தொகைதான் GNP (Gross National Product).

இன்னும் தெளிவாக்க வேண்டுமானால் GDPயை கணக்கிட நம்முடைய நாட்டின் பூளோக எல்லைக்குள் (Geopgraphic Area) தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களின் மதிப்பையும் பார்க்கிறார்கள். அது எந்த நாட்டினரால் தயாரிக்கப்பட்டது என்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால் அவற்றால் கிடைக்கும் வருமானம் நமக்கு கிடைப்பதில்லை. 

ஆகவேதான் நம்முடைய GDPயின் தொடர் வளர்ச்சி மட்டுமே நம்முடைய பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் ஒரு நாட்டின் GNP வளர்ச்சியடையும் போது அது அந்த நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தையும் அந்த நாட்டினரின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தும் என்று நம்பப்படுகிறது. 

இதை சூத்திரத்தில் கூற வேண்டுமென்றால் GNP = GDP + Net Income Earned from Abroad என்று கூறலாம்.

இதில் NET என்ற வார்த்தை நம்முடைய நாட்டினர் அயல் நாட்டில் ஈட்டும் வருமானம் மற்றும் நம்முடைய நாட்டில் அயல்நாட்டினர் ஈட்டும் வருமானம் ஆகியவற்றிற்கு இடையிலுள்ள வித்தியாசத்தை (Difference between Income earned by our citizens abroad AND Income earned by foreign nationals in our Country) குறிக்கிறது. 

சுருக்கமாக கூறவேண்டுமென்றால் ஒரு நாட்டின் GNP என்பது அந்த நாட்டினர் ஈட்டும் மொத்த வருமானத்தின் மதிப்பு என்றும் கூறலாம். 

ஆயினும் உலகிலுள்ள அனைத்து நாடுகளும் தங்களுடைய பொருளாதார வளர்ச்சியை GDP அடிப்படையிலேயே கணக்கிடுகின்றனர் என்பதும் உண்மை. ஆகவே 1991 வரை தங்களுடைய நாட்டுப் பொருளாதார நிலையை GNP மூலம் மட்டுமே கணக்கிட்டு வந்த அமெரிக்கா அதன் பிறகு பிற உலக நாடுகள் பின்பற்றும் முறையான GDP முறையை பின்பற்ற துவங்கியது.

(United States used GNP as its primary measure of total economic activity before 1991, when it began to use GDP. In making the switch, the Bureau of Economic Analysis (BEA) noted that GDP provided an easier comparison of other measures of economic activity in the United States and that "virtually all other countries have already adopted GDP as their primary measure of production.") 

Source:http://en.wikipedia.org/wiki/Gross_national_product

GDP முறையை அடிப்படையாக வைத்தே உலகிலுள்ள நாடுகளை உலக வங்கி தரவரிசைப் படுத்துகிறது என்றாலும் GNP அடிப்படையிலும் நாடுகளின் தரவரிசை பட்டியலும் விக்கிப்பீடியா தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா 2010 மற்றும் 2011 வருடங்களில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. (GDP அடிப்படையிலும் இந்தியா இதே இடத்தில்தான் உள்ளது). இதிலிருந்து என்ன புரிகிறது? நம்முடைய நாட்டைப் பொருத்தவரை GDP மற்றும் GNP ஆகிய எந்த முறையில் கணக்கிட்டாலும் பெரிய வேறுபாடுகள் இல்லை. 

ஆனால் உலகின் மற்ற வேறெந்த நாடுகளிலும் இல்லாத ஒரு பிரத்தியேகம் நம்முடைய நாட்டில் உள்ளது. அதுதான் parallel economy எனப்படும் கறுப்புச் சந்தை. நம்முடைய நாட்டின் உற்பத்தியாகட்டும் அல்லது வருமானமாகட்டும் அவற்றில் சரிபாதி, - சிலர் சம அளவு என்றும் கூட கூறுகின்றனர் - கணக்கில் வரவு வைக்கப்படாமலேயே இருந்து வருகிறது. ஆகவே நம்முடைய நாட்டில் வெளியிடப்படும் GDPயின் மதிப்பு உண்மையில் வெளியிடப்படும் மதிப்பை போல் ஒன்றரை மடங்கு இருக்க வேண்டும் என்றாலும் மறுப்பதற்கில்லை. இதை நம்முடைய நாட்டின் சாபக்கேடு என்றும் சொல்லலாம் அல்லது மறைந்துக்கிடக்கும் வலிமை என்றும் (Intrinsic Value)கூறலாம். அது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தைப் பொருத்தது.  

ஒரு நாட்டின் GNPயும் GDPஐ போலவே நடப்பு விலைவாசியிலும் (current market prices) அடிப்படை ஆண்டிலிருந்த (Base Year) விலைவாசியிலும் கணக்கிடுகிறார்கள். இதன் மூலம் கணக்கிடப்படும் ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு நாடு எந்த அளவுக்கு உற்பத்தியிலும் வருமானத்திலும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை கணக்கிட முடிகிறது.

ஒரு நாட்டின் ஒட்டுமொத்த GNPஐ அந்த நாட்டிலுள்ள மக்கள்தொகையால் வகுத்து (Divide) கிடைக்கும் தொகையை Per Capita GNP என்கின்றனர். 

ஒரு நாட்டின் Per Capita GNP மதிப்பை அமெரிக்க டாலருக்கு மாற்றுவதன் மூலம் உலகிலுள்ள அனைத்து நாடுகளின் தனிநபர் வருமானத்தை ஒரே நாணய மதிப்பில் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது என்கிறது உலக வங்கி. ஆனால் இந்த தொகை நாட்டிலுள்ள அனைத்த நபர்களுக்கும் ஒரே அளவில் கிடைக்கிறது (equal distribution) என்பதை காட்டுவதில்லை என்பதும் உண்மை. 

ஒரு நாட்டினரின் வாழ்க்கைத் தரத்தை இன்னொரு நாட்டினரின் வாழ்க்கைத் தரத்துடன் Per Capita GDP மற்றும் Per Capita GNP அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்ப்பதைவிட அவ்விரு நாட்டினரின் வாங்கும் திறன் அடிப்படையில் (Purchasing Power) ஒப்பிட்டு பார்க்கும் முறையை Purasing Power Parity Method என்கின்றனர். 

அது என்ன என்பதை அடுத்த பதிவில் காணலாம். 







26 நவம்பர் 2013

ஜிடிபி அப்படீன்னா என்னாங்க (நிறைவுப் பகுதி)

ஆனால் பொருட்களின் தயாரிப்பு செலவும் சந்தை விலையும் எல்லா வருடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லையே? ஆகவே கடந்த ஆண்டோ அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு கணக்கிடப்பட்ட GDPயுடனோ ஒப்பிட்டு எத்தனை விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளோம் என்று எவ்வாறு தெரிந்துக்கொள்வது?  

உதாரணத்திற்கு 2000-2001ம் ஆண்டிலிருந்து நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (GDP) எத்தனை விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை கணக்கிடவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். 2010-11 ஆண்டில் இருந்த விலைவாசியே இப்போதும் இருக்காது அல்லவா? இப்படிப்பட்ட சூழலில் நாட்டின் உற்பத்தியில் எவ்வித வளர்ச்சியும் இல்லையென்றாலும் இந்த இடைபட்ட காலத்தில் ஏற்பட்ட விலைவாசி உயர்வே நாட்டின் உற்பத்தி வளர்ச்சி அடைந்துவிட்டதைப் போன்றதொரு பிரமையை ஏற்படுத்திவிடக் கூடும். அதாவது 2010-11ல் நாட்டின் தானிய உற்பத்தி 1000 கோடி டன்னாக இருந்தது என்று வைத்துக்கொள்வோம். அன்று ஒரு டன் தானியத்தின் விலை ஒரு இலட்சம் ரூபாய் என்ற நிலையிலிருந்து பத்து ஆண்டுகளில் ஒன்றரை மடங்கு அதிகரித்திருக்கும் சூழலில் 2012-13ல் நாட்டின் தானிய உற்பத்தி  அதே அளவான ஆயிரம் கோடி டன்னாக இருந்தாலும் தற்போதைய சந்தை விலையில் அதன் மதிப்பு ஒன்றரை மடங்கு அதிகரித்திருக்குமே! 

இந்த விலைவாசி உயர்வை சமநிலைக்கு கொண்டுவந்தால் மட்டுமே நாட்டின் உண்மையான உற்பத்தி நிலவரம் தெரியவரும் என்பதால் எந்த ஆண்டுடன் ஒப்பிட விரும்புகிறோமோ அந்த ஆண்டின் சந்தை விலையிலேயே நடப்பு ஆண்டின் உற்பத்தியையும் கணக்கிடுவார்கள். எந்த ஆண்டு விலைவாசியுடன் ஒப்பிடுகிறோமோ அந்த ஆண்டை தொடக்க ஆண்டாக (Base Year) வைத்துக்கொண்டு நடப்பு ஆண்டிலுள்ள (current year) உற்பத்தி அளவை தொடக்க ஆண்டின் விலைவாசியில் கணக்கிடுவார்கள். இந்த முறையை deflator method என்கிறார்கள். சாதாரணமாக ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டிற்கு முந்தைய ஆண்டை தொடக்க ஆண்டாக வைத்துக்கொண்டு அந்த ஆண்டிலிருந்த விலைவாசிக்கே அந்த திட்டத்தின் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை கணக்கிட்டு ஒப்பிட்டுப் பார்ப்பது வழக்கம். 

மேலும் நடப்பு நிதியாண்டின் ஒவ்வொரு ஆண்டிலும் உள்ள ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் எந்த அளவு உற்பத்தியை எட்ட வேண்டும் என்ற குறியீட்டையும் (Target or Estimate) நிர்ணயித்துக்கொள்வார்கள். இந்த அடிப்படையில் மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation)ஒவ்வொரு ஆண்டும் தயாரித்து அளிக்கும் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி பற்றிய அறிக்கையின் மாதிரி இது. இத்துடன் ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கத்திலும் அடுத்த மூன்று மாத காலத்தில் அடைய வேண்டிய இலக்கையும் நிர்ணயித்து அந்த கால இறுதியில் இலக்கை அடைந்தோமா இல்லையா என்ற ஆய்வையும் இந்த அமைச்சகம் நடத்துகிறது. இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்துத்தான் ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் நாட்டின் பொருளாதார ஆய்வு (Economic Survey) அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி தயாரித்து வெளியிடுகிறது. 

நான் கொடுத்துள்ள மாதிரி அறிக்கை நாட்டின் மொத்த உற்பத்தியை உற்பத்தி முறையிலும் (Production Method) நாட்டின் மொத்த செலவு முறையிலும் (Expenditure Method) முறையிலும் கணக்கிட்டுள்ளதை பார்க்கலாம். இவ்விரண்டு அறிக்கைகளும் ஒரே மதிப்பைத்தான் காட்டியுள்ளன என்றாலும் இரண்டாம் அறிக்கையின் (Expenditure Method) பதினாறாவது இலக்கத்தில் (No.16) காட்டப்பட்டுள்ள வித்தியாசங்கள் (discrepancies) என்ற  தொகை இந்த இரண்டு முறைகள் மூலமாக கணக்கிடப்படும் இறுதி மதிப்பிலுள்ள (final figure) வேறுபாடு எனவும் கொள்ளலாம். 

இந்த அறிக்கையின் இறுதியில் 31 மற்றும் 32 வது இலக்கங்களில் காட்டப்பட்டிருக்கும் எண்களைப் பாருங்கள். 31ல் இந்தியாவின் மக்கள் தொகையும் 32ல் per capita income என்று நம் நாட்டிலுள்ள ஒரு நபரின் வருமானத்தையும் காட்டப்பட்டுள்ளது. 

எண் 32ல் காட்டப்பட்டுள்ள தொகைதான் மிக முக்கியமான தொகை. இதன் அடிப்படையில்தான் நம்முடைய நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மற்ற நாடுகளிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிட வகை செய்கிறது. இதன் அடிப்படையில் ஐ.நா, உலக வங்கி போன்ற அகில உலக அமைப்புகள் உலகிலுள்ள நாடுகளை வரிசைப் படுத்துகின்றன. அதன் ஒரு மாதிரியையும் அளித்துள்ளேன். 

கடந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பின் அடிப்படையில் இந்தியா பத்தாவது இடத்திலுள்ளதை காண முடிகிறது. ஆனால் இது நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பை மட்டுமே வைத்து கணிக்கப்பட்டுள்ளது என்பதையும் மறந்துவிடக் கூடாது. நம்மையும் விட வளர்ந்த நாடுகளாக கருதப்படும் பல ஐரோப்பிய நாடுகளைவிடவும் நம்முடைய ஒட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பு அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம் நம்முடைய நாட்டின் விஸ்தீரணமும் (Georgraphical Area)மக்கள் தொகையும் (Working Population)என்று கூறலாம். ஆனால் Per Capita Income அடிப்படையில் நம்முடைய நாடு நம்மை விடவும் சிறிய நாடுகள் பலவற்றிலும் இருந்து பின்தங்கியிருப்பதை காண முடிகிறது. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பீட்டின் அளவுக்கு முக்கிய காரணமாக இருக்கும் நம்முடைய மக்கள்தொகையே இதற்கும் காரணமாக அமைந்துள்ளதுதான் வேதனை. இதே அளவு உற்பத்தியும் தற்போதுள்ள மக்கள் தொகையில் பாதியும் இருந்திருந்தால் நம்முடைய நாடு உலக அரங்கில் முதல் இடத்தில் இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கடந்த சுமார் பதினைந்து ஆண்டுகளாக நம்முடைய மக்கள் தொகை அதிகரிக்கும் விழுக்காடு (Percentage increase in population) குறைந்துள்ளதை கருத்தில் கொண்டு இனிவரும் இருபத்தைந்தாண்டுகளில் இதே நிலையிலோ அல்லது இதை விட குறைவான விழுக்காட்டிலோ மக்கள் தொகை கூடுமானால் 2035ம் ஆண்டு வாக்கில் நம்முடைய நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மேற்கத்திய நாடுகள் பலவற்றை விடவும் உயர்ந்திருக்கும் என்று நிச்சயமாக நம்பலாம். ஆகவேதான் 2050ம் ஆண்டில் உலகின் மிக பலம் பொருந்திய நாடாக இந்தியா இருக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். 

சரி. கடந்த சில ஆண்டுகளாக நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (GDP)யின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்ததை விடவும் குறைந்து வருகிறது என்று ஏன் கூறுகிறார்கள்?

இந்த நிலைக்கு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள்தான் காரணம் என்கிறார்களே?

இவை சரிதானா?

என்னைக் கேட்டால் இப்போது கடைபிடித்துவரும் பொருளாதார கொள்கையை நரசிம்மராவ் அவர்கள் பிரதமராவதற்கு முன்பிருந்தே (அதாவது இந்திரா காந்தி அம்மையார் ஆண்ட காலத்திலிருந்து) கடைபிடித்து வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பேன். 

எதிலும் தன்னிறைவு எல்லாவற்றிலும் தன்னிறைவு என்ற சித்தாந்தம், என்னால் முடியாதது எதுவும் இல்லை என்கிற மனப்போக்கு, ஒரு நூறு ஆண்டுக்கும் மேலாக ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டுக் கிடந்து அனுபவித்த துன்பங்கள் ஆகியவைதான்  உலகமயமாக்கல் (Globalisation) கொள்கையை நாம் எதிர்க்க காரணங்கள். Iron Curtain என வர்ணிக்கப்பட்டு வந்த ரஷ்யா போன்ற நாடுகளும் பொதுவுடமை கொள்கையை விடாமல் கட்டிக்காத்துவந்த சீனா போன்ற கம்யூனிச நாடுகளுமே உலகமயமாக்கலை இருகரம் விரித்து வரவேற்கிற சூழலிலும் இன்றும் இந்த கொள்கையை எதிர்த்துவரும் சிலரைக் கண்டால் எரிச்சலாகத்தான் வருகிறது. 

நம்முடைய நாடு இன்று கணினி துறையில் அதீத வளர்ச்சியடைந்திருந்தாலும் இன்றும் நம்முடைய நாட்டு நிறுவனங்கள் ஒரு கணினி சேவை நிறுவனங்களாகவே (Services) கருதப்பட்டு வருகின்றனவே தவிர மைக்ரோ சாஃப்ட் போலவோ அல்லது ஆப்பிள் போலவோ ஒரு உற்பத்தி (Product Company) நிறுவனமாக கருதப்படாததற்கு முக்கிய காரணம் தொழில்துறையில் நம்முடைய நாடு இன்னும் முன்னேறாததுதான். 

ஒரு நாட்டின் தொழில்துறை தொடர்ந்து முன்னேறுவதற்கு தொடர் முதலீடுகள் அவசியம் தேவை. நம்முடைய நாட்டிலுள்ள தனிநபர் சேமிப்பில் ஏறக்குறைய எழுபது விழுக்காடு முதலீடாக மாறுவதில்லை. அப்படியே மாறினாலும் அவற்றில் பெரும் பங்கு தங்கம் மற்றும் அசையா சொத்துக்களில்தான் முதலீடு செய்யப்படுவதை பார்க்கிறோம். 

இவையும் முதலீடுகள்தான் என்றாலும் அதனால் நாட்டின் உற்பத்தி பெருகப்போவதில்லை. ஏனெனில் நம்முடைய சேமிப்பை பெருமளவில் விழுங்கும் தங்கம் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டிய சூழல். 

நான் ஏற்கனவே கூறியுள்ளபடி நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதிக்கு செலவிடப்படும் தொகை நாட்டின் GDP கணக்கிலிருந்து குறைக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் GDP என்ற மூன்றெழுத்தில் நடுவிலுள்ள 'D' அதாவது Domestic என்ற ஆங்கில வார்த்தை உள்நாட்டை குறிக்கிறது. அதாவது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு உள்நாட்டிலேயே பயன்பாட்டுக்கு வரும் பொருட்களின் மதிப்பு மட்டுமே இந்த கணக்கீட்டில் உட்படுத்தப்படுகிறது. ஆகவேதான் தங்கத்தில் செய்யும் முதலீடுகளை தயவு செய்து குறைத்துக்கொள்ளுங்கள் என்கிறது மத்திய நிதியமைச்சகம். 

அப்படியானால் சீனா இந்தியாவை விடவும் அதிக தங்கத்தை இறக்குமதி செய்வதாக கூறுகிறார்களே என்கின்றனர் சில அறிவுஜீவிகள். உண்மையில் சீனாவில் தனிநபர் எவரும் தங்கத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அங்கு அரசாங்கம்தான் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. ஏனாம்? தங்களுடைய நாட்டின் சொத்தை மற்ற நாடுகளைப் போன்று அமெரிக்க டாலர்களில் வைக்க அவர்களுக்கு விருப்பமில்லையாம். ஆகவேதான் நாட்டின் கையிருப்பின் பெரும் பகுதியை தங்கத்தில் முடக்கி வைக்கின்றனர். மேலும் அமெரிக்க வங்கிகளில் வைத்தால் நாளை ஏதாவது ஒரு காரணத்திற்காக அவற்றை அமெரிக்க அரசு முடக்கிவிட்டால்?

இதுதான் தங்க முதலீட்டில் நமக்கும் சீனாவுக்கும் உள்ள வித்தியாசம்.

சரி அடுத்தபடியாக நம்முடைய GDPஐ எப்படியெல்லாம் உயர்த்த முடியும் என்று பார்ப்போம்.

நம்முடைய நாட்டின் மொத்த உற்பத்தி (GDP) குறையும்போதெல்லாம் அதை தூக்கி நிறுத்துவதற்கு அரசு தன்னுடைய செலவை (Expenditure) கூட்ட வேண்டும். ஏனெனில் இந்த கணக்கீட்டில் தனிநபர் மற்றும் கார்ப்பரேட் எனப்படும் நிறுவனங்களின் செலவு மற்றும் முதலீடுகள் (Savings and Investment) தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வதற்கு வாய்ப்புகள் குறைவு. பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் சூழலில் தனிநபர் வருமானமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. பிறகு எப்படி சேமிப்பது? தனிநபர் சேமிப்பு குறைந்து போனால் அவர்களுடைய வாங்கும் திறனும் (purchasing power) குறைகிறது. வாங்கும் திறன் குறைந்தால் உற்பத்தியாகும் பொருட்கள் சந்தையில் தேங்கிவிடுகின்றன. சந்தையிலேயே பொருட்கள் விற்காமல் இருக்கும் சூழலில் அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுடைய விற்பனை குறைந்துவிடுகிறது... விற்பனைக் குறைவு அவர்களுடைய வருமானத்தை குறைக்கிறது... குறைந்த வருமானம் அவர்களுடய சேமிப்பையும் அதன் விளைவாக முதலீட்டையும் பாதிக்கிறது..... இது ஒரு சுழற்சி  (cycle) இதில் சிக்கிக்கொண்டால் அதிலிருந்து மீண்டு வருவதென்பது அத்தனை எளிதல்ல.

இந்த சூழலில்தான் அரசு தலையிட்டு தன்னுடைய செலவை (Public Spending) அதிகரிக்க வேண்டும். அதுவும் கூட ஓரளவுக்குத்தான் செய்ய முடியும். இந்த சூழலில்தான் அன்னிய நாட்டின் முதலீடுகள் அவசியமாகின்றன. இதைத்தான் நம்மால் செய்ய முடியாதவற்றை மற்றவர்களைக் கொண்டு செய்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன். நம்மால் முடியாதது எதுவுமில்லை என்கிற வாதம் எவ்வளவு வெற்று வாதம் (empty argument) என்பது புரிகிறதா?

நம்முடைய நிறுவனங்களாலும் அரசாலும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத தொகையை முதலீடாக நம்முடைய நாட்டில் செய்ய வருபவர்கள் ஏதோ நம்முடைய நாட்டு பொருளாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்ற தேசப்பற்றுடன் வருவதில்லை. எங்கு விதைத்தால் நல்ல பலன் கிடைக்குமோ அங்குதானே விவசாயி விதைக்கிறான்? அதுபோன்றுதான் அன்னிய முதலீடும். அன்னிய நிறுவனங்கள் இங்கு வருவதற்கான காரணத்தை ஆராயாமல் அதன் மூலம் கிடைக்கின்ற, நம்மால் செய்ய முடியாத, முதலீட்டால் நம்முடைய நாட்டின் தொழில் வளமும் உற்பத்தியும் பெருகுகிறதா என்பதைத்தான் பார்க்க வேண்டும். 

அன்னிய முதலீடு அறவே இல்லாமல் நம்முடைய பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லை. இன்று நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் தொழில்துறையின் பங்கு 25 விழுக்காடு மட்டுமே தானாம். எட்டு விழுக்காடு விவசாயத்துறையும் மீதமுள்ள 67 விழுக்காடு சேவைத் துறையும் அளிக்கிறதாம். இந்த சேவைத் துறையிலும் பெரும்பங்கு அளிப்பது சமீப ஆண்டுகளில் வளர்ந்துவரும் கணினி மற்றும் தொழில்நுட்ப துறைகளாம். இந்த நிலை மாற வேண்டும். நாட்டின் உற்பத்தி திறன் உயர வேண்டுமென்றால் நாட்டின் முதலீடும் பன்மடங்கு அதிகரிக்க வேண்டும். இன்று பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் (Developed Countries) எனக் கருதப்படும் அனைத்து நாடுகளுமே தொழில்துறையிலும் வளர்ந்த நாடுகளே (Industrialised Countries). இன்று சீனா அவர்களுடைய கொள்கைகளுக்காக உலகளவில் வெறுக்கப்பட்டாலும் அவர்களுடைய பொருளாதார வலிமை அவர்களைக் கண்டு அச்சமடைய வைத்துள்ளது.  

உலக நாடுகளின் தர வரிசையில் இந்தியா உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென்றால் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியின் அளவும் மதிப்பும் உயர்ந்துக்கொண்டே செல்ல வேண்டும். நாட்டின் மக்கள்தொகையும் கட்டுக்குள் நிற்க வேண்டும். 

மத்தியில் எந்த கட்சி ஆட்சியை பிடித்தாலும் இப்போதுள்ள பொருளாதார கொள்கைகளிலிருந்து அடியோடு மாறிவிட வாய்ப்பே இல்லை. தேர்தல் நேரத்தில் என்ன சொன்னாலும் இதுதான் இன்றைய நிதர்சனம். இன்று மத்தியில் கொள்கைகளை வகுப்பது அரசியல்வாதிகள் அல்ல என்பதும் உண்மை. நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் இந்திய மற்றும் அன்னிய தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களே....

இந்த தொடரில் இனியும் பல பொருளாதார பதிவுகளை இடலாம் என்று நினைத்துள்ளேன்..... ஒவ்வொரு பதிவும் எழுதி முடிக்க பல இணையதளங்களிலுள்ளவைகளை தேடிப்பிடிக்க வேண்டியுள்ளதால் பல நாட்கள் தேவைப்படுகின்றன. ஆகவே அடிக்கடி இல்லாவிடினும் அவ்வப்போது எழுதுவேன்...

*********

25 நவம்பர் 2013

ஜிடிபி (GDP) அப்படீன்னா என்னாங்க?


ஒவ்வொரு மூன்று மாத கால இறுதியிலும் நம்முடைய நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று இந்திய ரிசர்வ் வங்கியின் பொருளாதார அறிக்கை கூறுவதையும் நாட்டின் நிதி அமைச்சர் இனி வரும் காலங்களில் அது முன்னேறி எதிர்பார்த்த விழுக்காட்டை அடையும் என்று ஆரூடம் கூறுவதையும் கேட்டிருக்கிறோம்.

2005 முதல் 2010ம் ஆண்டு வரை எட்டு விழுக்காடாக இருந்து வந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, மத்தியில் ஆளும் காங்கிரசின் தவறான பொருளாதார கொள்கைகளின் விளைவாக,  கடந்த இரு ஆண்டுகளாக ஐந்திலிருந்து ஆறு விழுக்காடாக குறைந்துவிட்டது என்கின்றன எதிர் கட்சிகள்.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்றால் என்ன? அதை எப்படி கணக்கிடுகின்றனர் (calculate) என்று பார்ப்போமா?

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அதனுடைய வயதை குறிப்பிடுவதல்ல. இந்தியாவின் வயது என்று சொல்ல வேண்டுமானால் அது ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலையடைந்த ஆண்டிலிருந்து எத்தனை ஆண்டுகள் கழிந்துள்ளன என்பதை வைத்து சுமார் அறுபத்தியாறு வயது என்று கூறலாம் (2013-1947).

ஆனால் அதுவல்ல ஒரு நாட்டின் வளர்ச்சி. உலக சந்தையில் ஒரு நாட்டின் வளர்ச்சி என்று குறிப்பிடுவது அதனுடைய பொருளாதார வளர்ச்சியைத்தான்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்றால் என்ன அது எப்படி கணிக்கப்படுகிறது?

அதற்கு முன்பு உங்களுடைய குடும்பம் பொருளாதார ரீதியாக எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்று யாராவது நம்மை கேட்டால் நாம் அதை எவ்வாறு விளக்குவோம் என்று பார்ப்போம்.

சாதாரணமாக நம்முடைய குடும்ப பொருளாதார வளர்ச்சி என்பது நம்முடைய வாழ்க்கைத் தரத்தின் வளர்ச்சியைத்தான் குறிக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு வாடகை வீட்டில் வசித்து வந்த நான் இப்போது சொந்த வீட்டில் வசிக்கிறேன், சைக்கிளில் சென்று வந்த நான் இப்போது நாற்சக்கர வாகனத்தில் செல்கிறேன் என்றால் என்னுடைய வருமானம் பெருகியுள்ளது என்றுதானே அர்த்தம்? இது என்னுடைய பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கிறது என்று கூறலாம்.  இந்த வளர்ச்சியை அதாவது பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த என்னுடைய ஆண்டு வருமானத்திற்கும் இப்போதுள்ள ஆண்டு வருமானத்திற்கும் இடையிலுள்ள நிகர வித்தியாசத்தை விழுக்காடு அடிப்படையில் கூறுவதைத்தான் வளர்ச்சி விகிதம் என்கிறோம். இதை AI (2013) - AI (2003)/100 என்ற சூத்திரத்தின் (formula) மூலம் எத்தனை விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது என்று கணக்கிடலாம்.

இதே அடிப்படையில் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தில் (Annual National Income) முந்தைய ஆண்டிற்கும் நடப்பு ஆண்டிற்கும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை கணக்கிடமுடியும்.

ஒரு நாட்டிலுள்ளவர்களுடைய ஒட்டுமொத்த வருமானத்தின் அடிப்படையில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுவது ஒரு வகை. இதை ஆங்கிலத்தில் Income Method என்கிறார்கள்.

இதையே ஒரு நாட்டில் ஓராண்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களின் பொருளாதார மதிப்பை (economic value) கணக்கிடுவதன் மூலமும் கண்டுக்கொள்ள முடியும். இந்த கூட்டுத்தொகையைத்தான் Gross Domestic Products அல்லது GDP என்கிறார்கள். அதாவது நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களின் ஒட்டுமொத்த மதிப்பு. தயாரிப்பு என்கிறபோது ஒருநாட்டில் கிடைக்கும் அனைத்து சேவைகளின் (services) மதிப்பும் அடங்கும்.

ஒரு நாட்டின் GDP மூன்று வழிகளில் கணிக்கப்படுகிறது.

1. நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடுவது (மேலே பார்த்த Income Method),

2.நாட்டின் ஒட்டுமொத்த செலவினங்களின் அடிப்படையில் கணக்கிடுவது (Expenditure Method),

3.நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் பொருளாதார மதிப்பின் அடிப்படையில் கணக்கிடுவது (Production Method)

உலகிலுள்ள அனைத்து நாடுகளும் இந்த மூன்று வகைகளில் ஏதாவது ஒன்றின் அடிப்படையில்தான் தங்களுடைய பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுகின்றன.

இந்தியா உட்பட பல நாடுகளும் Expenditure Methodஐ பயன்படுத்துகின்றன.

இந்த முறையில் நாட்டிலுள்ள தனிநபர் மற்றும் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் செலவிடும் தொகையுடன் மத்திய, மாநில அரசுகள் செலவிடும் தொகையும் சேர்த்து உள்நாட்டில் செலவிடப்படும் ஒட்டுமொத்த தொகை கணக்கிடப்படுகிறது. அதனுடன் இம்மூன்று வகையினரும் செய்யும் முதலீட்டுத் தொகை (Investment) சேர்த்துக்கொள்ளப்படுகிறது. இக்கூட்டுத் தொகையிலிருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளுக்கிடையிலுள்ள வித்தியாசத்தின் மதிப்பு சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

இதை சூத்திரத்தில் GDP=C+I+G+(X-M) என்று குறிப்பிடுகிறார்கள். இதில் C தனிநபர் மற்றும் நிறுவன செலவினங்களையும் I இவ்விருவகுப்பினரின் முதலீடுகளையும் G அரசு செய்யும் செலவினங்கள் மற்றும் முதலீடுகளையும் X நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பையும் M இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பையும் குறிக்கிறது.

நம்முடைய நாட்டின் GDP மதிப்பு செலவினங்களின் அடிப்படையில்தான் செய்யப்படுகிறது என்றாலும் இதையே Production Methodடிலும் கணக்கிடப்பட்டு இவ்விரண்டு முறைகளிலும் கிடைக்கும் முடிவை ஒப்பிட்டுப்பார்ப்பதும் உண்டு.

நம்முடைய நாட்டிலுள்ள அனைத்து உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் மதிப்பு (value) என்பது நாட்டில் கிடைக்கும் அனைத்து சேவை (மருத்துவம், போக்குவரத்து என்பன போன்ற) களின் மதிப்பையும் உள்ளடக்கியதாகும். இதிலிருந்து ஒரு பொருளின் இறுதி வடிவத்தை அடைய பயன்படுத்தப்படும் பொருட்களின் (Intermediary prodcuts) மதிப்பை குறைத்துவிட்டால் நாட்டின் ஒட்டுமொத்த பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு கிடைத்துவிடும்.

அது என்ன intermediary products என்று கேட்க தோன்றுகிறதல்லவா?

உதாரணத்திற்கு ஒரு ரொட்டி தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் கோதுமை அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் மைதா, டால்டா அல்லது வெண்ணெய், உப்பு என்பன போன்ற பொருட்களைத்தான் intermediary products என்கிறார்கள். இவற்றை தனித்தனியாக மதிப்பிடாமல் இறுதி வடிவமான ரொட்டியின் (Bread) மதிப்பை மட்டும் எடுத்துக்கொள்வார்கள்.

இதில் இயந்திரங்கள், இரும்பு போன்ற உலோகங்கள், கட்டுமானப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என நம்முடைய வாழ்க்கைக்கு பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருட்களும் மற்றும் நம்முடைய தேவைக்கு பயன்படுத்தும் அனைத்து சேவைகளும் அடங்கும்.

இவற்றின் தயாரிப்பு அளவிகள் (Measures or Units) வெவ்வேறாக இருக்கும் என்பதால்தான் அவற்றின் பண மதிப்பை (Money/Economic Value)கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர்.

இதை அவற்றின் உற்பத்தி மதிப்பிலும் (Production Cost) அதன் சந்தை மதிப்பிலும் (Market Price) கணக்கிட்டு ஒப்பிட்டு பார்க்கப்படுகின்றன. இரண்டு வகையிலும் கணக்கிடப்படும் மதிப்பு ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் அல்லவா?

ஆனால் ஒரு பொருள் அதன் உற்பத்தியாளரிடமிருந்து (Producer) நேராக அதன் நுகர்வோரிடம் (consumer) சென்றடைவதில்லை. சாதாரணமாக  பொருட்கள் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கப்படும் விற்பனை வரி அல்லது சுங்க வரி விதிக்கின்றன. ஒரு சில பொருட்கள் மீது (உ.ம். சமையல் எரிவாயு) அரசாங்கம் மான்யம் வழங்குகிறது.

உதாரணத்திற்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுத்துக்கொள்வோம். நமக்கு வழங்கப்படும் ஒரு சிலிண்டர் எரிவாயு தயாரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆகும் மொத்த செலவு ரூ.900 லிருந்து ரூ.1000 வரை ஆகிறது என்கிறார்கள். அதன் மீது மாநில அரசு விதிக்கும் வரியையும் சேர்க்கும்போது அதன் விலை ரூ.1050/- ஆகிறது. உற்பத்தி செலவான ஆயிரம் ரூபாயில் மத்திய அரசு மான்யமாக ரூ.600 வழங்குகிறது. ஆக, ஒரு எரிவாயு சிலிண்டர் அதன் நுகர்வோரை சென்றடையும்போது ரூ. 450/- என்ற நிலையை அடைகிறது (1000 + 50 - 600).

ஆனால் நாட்டின் GDP கணக்கிடும்போது உற்பத்தியாளர் வசமிருந்து அது சந்தைக்கு செல்லும்போது மதிப்பிடப்படும் மதிப்பைத்தான் எடுத்துக்கொள்வர். எரிவாயு சிலின்டர் எடுத்துக்காட்டில் அது ரூ.1000மாகத்தான் எடுத்துக்கொள்ளப்படும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு வகைகளிலும் கணக்கிடப்படும் நாட்டின் மொத்த வருமானம் ஒன்றாகத்தான் இருக்கும், இருக்க வேண்டும்.

ஆனால் பொருட்களின் தயாரிப்பு செலவும் சந்தை விலையும் எல்லா வருடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லையே? ஆகவே கடந்த ஆண்டோ அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு கணக்கிடப்பட்ட GDPயுடனோ ஒப்பிட்டு எத்தனை விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளோம் என்று எவ்வாறு தெரிந்துக்கொள்வது?  

அடுத்த பகுதியில்.....




27 ஆகஸ்ட் 2013

ஊக வணிகம்தான் (Speculation) இந்திய ரூபாயின் சரிவுக்கு காரணமா?

கடந்த வாரம் நான் எழுதிய 'இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?' ங்கற பதிவில இந்த மாதிரியான ஏற்ற இறக்கத்துக்கு speculationனும் ஒரு முக்கிய காரணம்னு நண்பர் ஒருவர் கருத்துரையில் எழுதியிருந்தாங்க. 

அது ஓரளவுக்கு உண்மைதான். 

அதனால அதைப்பற்றி இன்னும் கொஞ்சம் டீப்பா பார்த்தா என்னன்னு மனசுல தோனிச்சி..

Speculationங்கற ஆங்கில வார்த்தைய அப்படியே தமிழ்ல சொல்லணும்னா ஊகம்னு சொல்லலாம். அதாவது நாளைக்கி அல்லது இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்புறம் என்ன நடக்கும்னு ஊகிக்கறது. இன்னும் கொஞ்சம் சிம்பிளா சொல்லணும்னா அதாவது இன்னைக்கி டிஸ்கஸ் பண்ணப்போற டாப்பிக்கோட பின்னணியில சொல்லணும்னா, ஊகத்தின் அடிப்படையில் வணிகம் செய்தல் அப்படீன்னு சொல்லலாம். சுருக்கமா சொன்னா 'ஊக வணிகம்'. 

இந்த மாதிரியான வணிகம் பெரும்பாலும் பங்கு சந்தையிலதான் (share market) நடக்கும்னு கேள்விப்பட்டிருக்கோம். ஆனா இந்திய மற்றும் அன்னிய செலவாணி பணசந்தை (currency and forex market)கள்லயும் இது நடக்குது!

ஆனா இந்தியாவைப் பொருத்தவரையிலும் பணத்தை வைத்து வணிகம்(currency trading)  செய்வது சட்டவிரோதமாகும். அத்தகைய வணிகத்தில் ஈடுபட விரும்பறவங்க அரசாங்கத்துக்கிட்டருந்து அதுக்குன்னு லைசென்ஸ் வாங்கணும். இவங்களதான் இப்போ Authorised Money Exchangersனு சொல்றாங்க. இதுல கூட வர்த்தகம் செய்யலாம்னுதான் லைசென்ஸ் சொல்லும். அதாவது குடுத்து வாங்கலாம், அன்றைய சந்தை நிலவரப்படி. ஊக அடிப்படையில் அல்ல. இதுவும் கூட சமீப காலத்துல அறிமுகப்படுத்தப்பட்ட லைசென்ஸதான். முந்தியெல்லாம் வங்கிகள் இல்லன்னா தாமஸ் குக் மட்டுந்தான் forex trade செஞ்சிகிட்டு இருந்தாங்க. வங்கிகள தவிர இந்த exchange பிசினஸ்ல பல வருஷங்களா இருந்துவந்த கம்பெனி தாமஸ் குக். 

சரிங்க... எதுக்கு இந்த ஊக வணிகத்துல ஈடுபடறாங்க? யார், யாரெல்லாம் இதுல முக்கியமா ஈடுபடறாங்க?

முதல்ல எதுக்கு இந்த forex trade பண்றாங்கன்னு பாக்கலாம். 

இதுல ரெண்டு வகை இருக்கு.

1. பணமாற்று விகிதத்துல ஏற்பட மாற்றங்களால தங்களுக்கு நஷ்டம் வராம பாத்துக்கறதுக்கு (to protect from possible losses due to exchange fluctuations)

2.இந்த் ஏற்ற தாழ்வுகளை பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பது (to make profit out of  exchange flucations).

இத அதிகமா அன்னிய செலவாணி சந்தையிலதான் செய்யிறாங்கன்னு சொல்லலாம். 

இத இன்னும் தெளிவாக்கறதுக்கு  தினமும் சந்தையில நடக்கற சில பண வர்த்தகங்கள பாக்கலாம். இத்தகைய வணிகங்கள் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் வழியாக மட்டுமெ செய்ய முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் வெளியூருக்கு செல்லும்போது டாலரை வாங்கும் Money exchanger இதை செய்ய முடியாது.

1அ. இந்திய இறக்குமதியாளர்கள் அதாவது அன்னிய செலவாணியை சந்தையிலிருந்து வாங்குபவர்கள்:

நான் வெளி நாட்டுலருந்து - அது எந்த நாடுங்கறது முக்கியமில்ல - சில மிஷின்கள இறக்குமதி பண்றேன்னு வச்சிக்குவோம். அத்தோட மொத்த மதிப்பு 1000 அமெரிக்க டாலர். நான் போட்டுருக்கற ஒப்பந்தப்படி பணத்த இன்னும் மூனு மாசத்துல குடுக்கணும். இன்னைக்கி அமெரிக்க டாலருக்கு இந்திய பணம் ரூ.65/- ரேட்ல வர்த்தகம் நடக்குது. இப்ப நாடு இருக்கற நிலமையில இந்த ரேட் இன்னும் ஏர்றதுக்கு சான்ஸ் இருக்கு.... 65/- ங்கறது மூனு மாசத்துல எழுபதோ, எழுபத்தஞ்சோ கூட ஆவலாம்னு சொல்றாங்க. இப்படியே போனா என்னோட பேமென்ட் ட்யூ ஆவறப்போ யூ எஸ் டாலர் எழுபத்தஞ்சிக்கு போனா நா 75000/- ரூபா கொடுக்க வேண்டியிருக்கும். பணமாற்று விகிதத்துல ஏற்படற மாற்றத்தால எனக்கு தேவையில்லாம பத்தாயிரம் நஷ்டம். இத தவிர்க்கறதுக்கு ஒரு வழி இருக்கு. நா என்னோட பேங்க்ல போயி எனக்கு ஒரு forward contract வேணும்னு கேக்கறேன். அதாவது என்னோட பில் ட்யூ ஆவறப்போ நீங்க எனக்கு தேவையான ஆயிரம் டாலர இன்னைக்கி இருக்கற ரேட்டுலயே விக்கணும்னு ஒப்பந்தம்.  சாதாரணமா எக்சேஞ் ரேட் ஏறிக்கிட்டிருக்கற மார்க்கெட்ல இன்னைக்கி ரேட்டுக்கே மூனு மாசம் கழிச்சி விக்கறதுக்கு எந்த பேங்கும் ஒத்துக்க மாட்டாங்க. இன்னிக்கி இருக்கற ரேட்டுலருந்து ஒரு மார்ஜின் (margin) வச்சி 67-70க்குள்ள ஒரு ரேட்டுக்கு ஒப்பந்தம் போடுவாங்க. அதாவது உங்களுக்கு நஷ்டம் வேணாம் எங்களுக்கும் நஷ்டம் வேணாம்கறா மாதிரி ஒரு நடுநிலையான ரேட்டுக்கு ஒத்துக்குவாங்க. அந்த ஒப்பந்தப்படி மூனு மாசம் கழிச்சி ட்யூ டேட் வர்றப்போ எதிர்பார்த்தா மாதிரியே ரேட் எழுபத்தஞ்சிக்கு மேல போனாலும் நான் ஒப்பந்தத்துல போட்ட ரேட் படி இந்திய பணத்த குடுத்தா போறும். ஆனா நாம எதிர்பார்த்ததுக்கு எதிர்மாறா ரேட் ஏறாம அப்படியே நின்னாலும் இல்ல கொஞ்சமா ஏறியிருந்தாலும் ஒப்பந்தப்படிதான் நான் பணம் குடுத்தாவணும். இந்த ஒப்பந்தம் வழியா நா ஆயிரம் டாலர் வாங்குவேங்கறதால என்னோட பேங்குக்கு இது ஒரு sale contract. அவங்க சந்தையிலருந்து வாங்கி எனக்கு விப்பாங்க. 

1ஆ. ஏற்றுமதியாளர்கள் அதாவது அன்னிய செலவாணியை சந்தையில் விற்பவர்கள்.

நான் வெளிநாட்டுக்கு பழங்கள், காய்கறிகள் ஏற்றுமதி செய்ற வியாபாரி. சமீபத்துல அமெரிக்காவுக்கு ஆயிரம் டாலர் மதிப்புள்ள பொருட்கள ஏத்துமதி செஞ்சிருக்கேன். ஆனால் பணம் மூனு மாசம் கழிச்சித்தான் கைக்கு வரும். இப்ப இருக்கறா மாதிரி டாலரோட மதிப்பு ஏறு முகமா இல்லைன்னு வச்சிக்குவோம். 2000த்துலருந்து 2010 வரைக்கும் நிலமை அப்படித்தான் இருந்துது. அதாவது அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவுல முதலீடு பண்ணா நல்லா லாபம் சம்பாதிக்கலாம்னு நினைச்சிருந்த காலம் அது.  இந்திய ரூபாயோட மதிப்பு எங்க ஏறிடுமோன்னு நினைச்சிக்கிட்டிருந்த காலம். இந்திய ரூபாயோட மதிப்பு மூனு மாசத்துல ஏறிடும்கற சூழ்நிலையில எனக்கு இன்னைக்கி உடனே பணம் வந்தா ஒரு டாலருக்கு அறுபத்தஞ்சி ரூபா வீதம் ரூ.65,000/- கிடைக்கும். ஆனா டாலரோட மதிப்பு 63க்கோ இல்ல 62.5க்கோ சரிஞ்சிருச்சின்னா எனக்கு 63,000/- இல்லன்னா 62,500/- தான் கிடைக்கும். என்னோட எந்த தவறும் இல்லாம எனக்கு exchange rate மாற்றத்தால 2,500லருந்து 3000 வரைக்கும் நஷ்டம் ஏற்பட சான்ஸ் இருக்கு. அதனால நா என்னோட பேங்குக்கு  போயி ஒரு forward contract வேணும்னு கேக்கறேன். அதாவது எனக்கு வரப்போற ஆயிரம் டாலர் பணத்த இன்னைக்கி ரேட்டுலயே மூனு மாசம் கழிச்சி வாங்கிக்கணும்னு ஒப்பந்தம். அமெரிக்க டாலரோட மதிப்பு இறங்கப் போவுதுங்கறா மாதிரி சூழ்நிலையில இந்த ரேட்டுக்கு எந்த பேங்கும் ஒத்துக்க வழியில்லை. ஏற்கனவே சொன்னா மாதிரி இன்னைக்கி என்ன ரேட் இருக்கோ அதுக்கும் மூனு மாசத்துக்கு அப்புறம் என்ன ரேட் இருக்கும்னு பேங்க் நினைக்கிதோ அதுக்கும் இடையில ஒரு ரேட் வச்சி ஒப்பந்தம் போடுவாங்க. அது 64-62க்குள்ள இருக்கலாம். மூனு மாசம் கழிச்சி டாலரோட இந்திய மதிப்பு 61க்கு கீழ போயிருந்தாக் கூட என் கிட்ட போட்டுருக்கற ஒப்பந்தப்படி ரூ.65க்குத்தான் பேங்க் வாங்கியாகணும். நேர் மாறா டாலரோட மதிப்பு 66 ஆனாலும் எனக்கு 65,000/-தான் கிடைக்கும். பேங்க் எங்கிட்டருந்து 65000/- வாங்கற டாலருக்கு அன்னைய ரேட்டுலதான் சந்தையில வித்தாகணும். நஷ்டமோ லாபமோ பேங்குக்குத்தான், எனக்கில்ல.

இந்த ரெண்டு வர்த்தகத்துலயும் (transactions) ஒப்பந்தப்படி பண்றதால பேங்குகளுக்கு நஷ்டம் வரா மாதிரி தெரியுதேன்னு நீங்க கேக்கலாம்.

ஆனா sale ஆனாலும் purchase ஆனாலும் அதுக்கு ஈடா இன்னொரு வர்தகமும் நடக்கும். அதாவது என்னோட பேங்க் எனக்கு ஆயிரம் டாலர் விக்கணும்னா அந்த ஆயிரம் டாலர சந்தையிலருந்து வாங்கியாகணும். இந்திய பணம் மாதிரி லட்சக் கணக்குல அன்னிய செலவாணிய எந்த பேங்காலயும் கையில வச்சிக்கிட்டிருக்க முடியாது. 

இறக்குமதியாளருக்கு விக்கிறதா ஆயிரம் டாலர் ஒப்பந்தம் (forward sale contract) போடறப்போ அன்னைக்கே இன்னொரு பார்ட்டியோட (அது பேங்கா இருக்கலாம் இல்ல அவங்களோட இன்னொரு ஏற்றுமதி கஸ்டமரா இருக்கலாம். மேல சொன்ன உதாரணம் 1ஆ வில இருக்கற ஏற்றமதி கஸ்டமரோட போட்டா மாதிரி இன்னொரு பர்சேஸ் (forward purchase contract) போட்ருவாங்க. அதாவது யார்கிட்டருந்து வாங்குனாலும் அத உடனே யாருக்காவது வித்துறனும். இதுக்கு squaringனு பேங்குக்காரங்க சொல்வாங்க. purchase இல்லாத sale contractம் இருக்காது. Sale இல்லாத purchase contractம் இருக்காது. இதுக்கு squared positionனு பேரு.

ஒருநாளைக்கு பத்து பேர் கிட்ட வாங்குன டாலர அத்தனையையும் அன்னைக்கே சாயந்தரத்துக்குள்ள (close of business) யாருக்காச்சும் வித்துறணும்கறது இந்திய ரிசர்வ் வங்கியோட கன்டிஷன். ஆனா இது எல்லா சமயத்துலயும் முடியாம போயிரும். உதாரணத்துக்கு ரிலையன்ஸ் மாதிரி ஒரு பெரிய கம்பெனிக்கு வர்த்தகம் முடியறதுக்கு அஞ்சி நிமிஷத்துக்கு முன்னால அமெரிக்காவுலருந்து பத்து மில்லியன் டாலர் வருதுன்னு வையிங்க. அத அவங்களோட பேங்க்குக்கு வித்துடறாங்க. ஆனா வர்த்தகம் முடியற நேரத்துக்குள்ள அந்த பத்து மில்லியனையும் வாங்கறதுக்கு எந்த பேங்கும் இல்லேன்னு வையிங்க. அத அப்படியே வச்சிக்கிட்டு அடுத்த நா வர்த்தகம் துவங்குனதும் விக்கலாம். இந்த மாதிரி விக்காம வச்சிருக்கற நிலைமைக்கு open positionன்னு சொல்வாங்க. 

இந்த மாதிரியான open position ரொம்பவும் டேஞ்சரான விஷயம். உதாரணத்துக்கு நேத்து பிசினஸ் முடியற சமயத்துல வந்த பத்து மில்லியன் டாலர விக்காம வச்சிருக்கேன்னு வையிங்க. நேத்தே அத வித்திருந்தா ரூ.65க்கு வித்துருக்க்லாம். ஆனா அடுத்த நாள் காலையிலயும் விக்க முடியல. ரேட் குறைஞ்சிக்கிட்டே போயி 64 இல்லன்னா 63 ஆயிருது. ஒரு டாலருக்கு ஒரு ரூபாயிலருந்து ரெண்டு ரூபா வரைக்கும் நஷ்டம்! பத்து மில்லியனுக்கு பார்த்தா எவ்வளவு நஷ்டம்! பத்து மில்லியன் டாலர்னா  ஒரு கோடி டாலர்!!. ஒரு டாலருக்கு இரண்டு ரூபா நஷ்டம்னா ஒரே நாள்ல ஒரே வர்த்தகத்துல எனக்கு இரண்டு கோடி  நஷ்டம்! இத சின்ன பேங்குகளால தாங்க முடியாதுல்ல? அதனால ஒரு வங்கியோட net worthல இத்தன சதவிகிதத்துக்கு மேல இந்த மாதிரியான open positon வச்சிருக்கக் கூடாதுங்கற கன்டிஷன் இருக்கு. ஆனாலும் ICICI,CITI,SBI, மாதிரி பேங்குங்க இந்த லிமிட்டுக்கு மேலயும் வச்சிருப்பாங்க. அரசு வங்கிகள் இல்லாத சில பெரிய தனியார் வங்கிகள் இந்த மாதிரி open positionன வேணும்னே வச்சிருப்பாங்க. அதாவது நாளைக்கு ரேட் ஏறும்கற ஊகத்துல லாபம் பண்ற நோக்கத்தோட வச்சிக்கிட்டுருப்பாங்களாம். 

இந்த மாதிரியான open position வச்சிருக்கற பேங்குகளுக்கு மட்டுமில்லாம நாட்டோட பணத்தோட மதிப்புக்கும் பெரிய சவாலா இருக்கற விஷயம். இது எல்லை மீறி போவுதுங்கற சந்தேகம் ரிசர்வ் வங்கிக்கு வந்தா உடனே அந்தமாதிரியான பேங்குகள கூப்ட்டு எச்சரிப்பாங்க. போன ரெண்டு மாசமா அநேகமா தினமும் ஸ்டேட் பாங்க் மாதிரியான பேங்குகள அவங்க கூப்ட்டு வார்ன் பண்ணிக்கிட்டே இருக்காங்களாம்.

இந்த மாதிரியா லாப நோக்கத்தோட ரிஸ்க் எடுத்து செய்யிற பிசினஸத்தான் speculative businessனு சொல்றோம். இது அளவுக்கு மீறிப் போனா அந்த பேங்குகளோட ஒட்டுமொத்த நிதிநிலைமையே மோசமாயிறக் கூட சான்ஸ் இருக்கு. இந்த மாதிரி சம்பவம் வெளிநாடுகள்ல கூட நிறைய நடந்திருக்கு. நிறைய பேங்க் இல்லன்ன நிதிநிறுவனங்கள் திவாலா ஆயிருக்கு.

சரி அடுத்து இந்த மாதிரியான speculation எப்படி ஒரு நாட்டோட பணத்தோட மதிப்பை பாதிக்குதுன்னு சுருக்கமா பாக்கலாம்.

நா மேல சொன்னா மாதிரியான forward contract போடறது ஒரு எல்லை மீறி போவுதுன்னு வையிங்க. அதாவது வெளிநாட்டுலருந்து இறக்குமதி பண்ற எல்லாருமே மூனு மாசத்துக்கப்புறம் இந்த ரேட்தான் இருக்கும்னு ஒரு ஊகத்துல ஒரு ரேட் வச்சி ஒப்பந்தம் போடறாங்க. அதாவது இந்த மாதிரி ஒப்பந்தம் போடறவங்கள்ல பத்துல ஒன்பது பேர் இன்னைக்கி 65ரூபாயா இருக்கற டாலரோட மதிப்பு மூனு மாசம் கழிச்சி 68ரூபாவா ஆகப் போவுதுன்னு தீர்மானிச்சி ஒப்பந்தம் போட்டா உண்மையிலேயே அது மூனு மாசம் கழிச்சி 68லதான் போய் நிக்குமாம்! 

இத ஆங்கிலத்துல herd mentalityன்னு சொல்றாங்க. தமிழ்ல சொல்லணும்னா மந்தை செயல்பாடு... அதாவது மந்தையிலருக்கற நூறு ஆட்டுல பத்து ஆடு மேற்கு திசை பாத்து திரும்புனா அத தொடர்ந்து வந்துக்கிட்டிருக்கற அத்தனை ஆடுகளும் அதே திசையில திரும்புமாம்! இது நம்ம நாட்டுக்கு மட்டுமில்ல இந்த மாதிரியான வர்த்தகம் - பங்கு வர்த்தகம்னாலும் அன்னிய செலவாணி வர்த்தகம்னாலும் - பொருளாதாரத்துல மிகவும் முதிர்ந்த (matured) நாடுன்னு நாம நினைக்கற அமெரிக்கா போன்ற நாடுகளிலும் - வர்த்தகர்கள் இந்த மனநிலையிலதான் வர்த்தகம் செய்வாங்க. அதனாலதான் ஒருநாள்ல முதல் முதல் மார்கெட்ல இறங்கற ஆசிய நாடுகள்ல (இதுல ஜப்பான்லதான் stock exchange முதல்ல துவங்கும்) எப்படி வர்த்தகம் நடக்குதோ அவங்கள தொடர்ந்து ஐரோப்பா அவங்கள தொடர்ந்து கடைசியில வர்ற அமெரிக்காக்காரனும் அதே மாதிரிதான் வர்த்தகம் செய்வான். ஜப்பான்காரனும் முந்தா நாள் கடைசியில அமெரிக்காவுல எப்படி வர்த்தகம் முடிஞ்சிதுன்னு பார்த்துட்டு அதே trendலதான் பிசினஸ தொடங்குவானாம்!. உலக வர்த்தக மயமாக்கல் கொள்கையை கடைப்பிடிக்கற எல்லா நாடுகள்லயும் இந்த பிரச்சினை இருக்கத்தான் செய்யும். என்னைக்கி இந்த வலையில இந்தியா மாட்டுச்சோ அன்னையிலருந்து இந்தியாவுலயும் அதே நிலைலதான் பங்கு வர்த்தகமும் அன்னிய செலவாணி வர்த்தகமும் நடக்குது. 

Speculative trading (ஊக வணிகம்) ஒரு அளவுக்குள்ள இருந்துச்சின்னா அது நாட்டோட பொருளாதாரத்துக்கு உதவியா கூட இருக்கும். ஒரு வளரும் நாட்டுல இது நடக்கறது ரொம்பவும் சகஜம், தேவையும் கூட. ஆனா அளவுக்கு மீறுனா அமிர்தமும் நஞ்சுங்கறா மாதிரி இந்த speculative forex trade with profit motive எல்லைய மீறிப் போறதாலயும் கூட இந்திய ரூபாயின் மதிப்பு ஊகம் பண்ண முடியாத அளவுக்கு ஏறி இறங்கிக்கிட்டு இருக்கலாம். 

இத கட்டுப்படுத்தறதுக்கு ஒவ்வொரு வங்கியும் என்ன பொசிஷன்ல இருக்காங்கன்னு உடனுக்கு உடனே கண்டுபிடிக்கற வசதி ரிசர்வ் வங்கிக்கு இப்ப இல்லை. இதுதான் பெரிய துரதிர்ஷ்டம். பேங்குகளோட அன்னிய செலவாணி வர்த்தகத்த ஒரு வரைமுறைக்குள்ள கொண்டு வர்றதுக்குன்னே FEDAIனு (அன்னிய செலவாணியில் டீலர்கள் அசோசியேஷன்) ஒரு கூட்டமைப்பு இருக்கத்தான் செய்யிது. அவங்களாலயும் எல்லா பேங்குகளோட டீலிங்ஸையும் உருப்படியா மானிட்டர் (effective monitoring) பண்ண முடியலைங்கறதுதான் உண்மை. 

இதுக்கு ஒவ்வொரு வர்த்தகத்தையும் அது நடக்கறப்பவே மானிட்டர் பண்றா மாதிரி (online monitoring) ஒரு சரியான மென்பொருளை கண்டுபிடிக்கணும். உடனுக்குடனே இல்லாட்டியும் அன்றைய வர்த்தகத்தின் முடிஞ்சவுடனேயாவது (end of business day) தெரிஞ்சிக்கறா மாதிரி ஒரு வசதி இருந்தா இத ஓரளவுக்கு கட்டுக்குள்ள வச்சிக்க முடியும். வெறும் லாப நோக்கத்தோட speculative tradingல தொடர்ந்து ஈடுபடற வங்கிகள் இல்லன்னா நிதிநிறுவனங்களோட லைசென்ஸ உடனுக்குடனே சஸ்பென்ட் பண்ண முடியுறா மாதிரி வசதி இருந்தா யாரும் இந்த டிரேடிங்ல ஈடுபட தயங்குவாங்கன்னு நினைக்கிறேன்.

********** 





23 ஆகஸ்ட் 2013

சேரன் மகள் தாமினியின் மனமாற்றத்திற்கு யார் காரணம்?


ரெண்டு மாசமா ஊரையே கலக்கிக்கிட்டிருந்த சேரன் - தாமினி - சந்துரு விஷயம் ஒருவழியா க்ளைமாக்ஸ் முடிஞ்சி சுபம்னு போட்டாச்சி.

ஆனா இதுக்கு பின்னால யார், யாரெல்லாமோ சதி செஞ்சிருக்காங்கன்னு சந்துரு சைட் வக்கீல்ங்க புலம்பிக்கிட்டிருக்காங்க. 

ஒருவேளை அவங்களுக்கு வந்துக்கிட்டிருந்த ஃபீசும் இலவசமா கிடைச்சிக் கிட்டுருந்த பப்ளிசிட்டியும் போயிருச்சேங்கற ஆதங்கமும் (வயித்தெரிச்சல்னு சொன்னா நல்லாருக்காதே!) ஒரு காரணமாருக்கும்.

இதுல ஒரு பெரிய பங்கும் நீதிமன்றமும் ப்ளே பண்ணியிருக்காங்கன்னும் சொல்றாங்களாம்.  சந்துரு ஹேபஸ் கார்பஸ் மனு போட்டதும் தாமினிய ஆஜராக்கியாச்சி. உடனே அத தள்ளுபடி செஞ்சி தீர்ப்பளிக்காம எதுக்கு கேஸ ரெண்டு வாரத்துக்கு தள்ளி வச்சாங்க? கேஸ் நிலுவையிலருக்கறப்போ தாமினிய அரசு காப்பகத்துல வைக்காம சேரன் அன்ட் கோ ஈசியா அப்ரோச் பண்ணி அவர ப்ரெய்ன் வாஷ் பண்றதுக்கு வசதியா அவரோட நண்பர் வீட்லயே தங்க வச்சது எதுக்காக?  நீங்களும் வேணும்னா தாமினிய பாத்து பேசலாம்னு சந்துரு அன்ட் கோவுக்கும் பர்மிஷன் இருந்தாலும் எதிராளியோட
நண்பர் கஸ்டடியில இருக்கறப்போ அவங்களால எப்படிங்க அந்த பொண்ணோட பேச முடியும்னு கேக்கறாங்களாமே?  சேரனுக்கு ஆதரவா ஒட்டுமொத்த கோலிவுட்டே தாமினிய டெய்லி போயி பாத்து பேசி ஒருவழியா அவர இந்த முடிவுக்கு வரவச்சாங்களாமே?

இதெல்லாம் இப்போதைக்கி விடை தெரிஞ்சிக்க முடியாத கேள்விங்க...

எப்படியோ இப்போதைக்கி இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துருச்சி.... இது நல்ல முடிவா இல்ல இந்த முடிவுலயே தாமினி நிலைச்சி நிப்பாங்களா?

இந்த கேள்விகளுக்கும் காலந்தாங்க பதில் சொல்லணும்....

சரி... நா இன்னைக்கி சொல்ல வந்த விஷயத்த சொல்றேன்...

என்ன இது அதுக்குள்ள முடிச்சிட்டீங்கன்னு கேக்கறீங்களா? என்னங்க பண்றது?

இந்திய ரூபாயின் மதிப்பு ஏன் தொடர்ந்து வீழ்ந்து வருகிறது
 
இந்த பதிவுக்கு இப்படி தலைப்பு குடுத்துருந்தா எத்தனை பேர் படிச்சிருப்பீங்க?

அதனாலதான் இந்த பம்மாத்து வேலை...!

தலைப்ப பாத்துட்டு வந்து மாட்டிக்கிட்டீங்க இல்ல.... திட்டறத திட்டிட்டு வந்ததுக்கு முழுசா படிச்சிட்டு போயிறுங்க..

போன ஒரு மாசமாவே நம்ம நாட்டு பணத்தோட மதிப்பு விழுந்துக்கிட்டே வர்றத பார்த்துக்கிட்டு இருக்கோம். குறிப்பா அமெரிக்க டாலருக்கு எதிரான மதிப்பு கழுத தேஞ்சி கட்டெறும்பான கதையா குறைஞ்சிக்கிட்டே போவுது.

இதுக்கு உண்மையிலேயே என்னங்க காரணம்?

அதையெல்லாம் பாக்கறதுக்கு முன்னால எதுக்கு இந்த மாதிரி ஏறுது, இறங்குதுன்னு நமக்கு புரியற பாஷையில  பாக்கலாம்.

சாதாரணமா சந்தையில எந்த பொருளோட மதிப்பும் (மதிப்புன்னா விலைன்னு வச்சிக்கலாம்) ஏறவோ இறங்கவோ செஞ்சா அதுக்கு நம்மள மாதிரி ஜனங்க, குறிப்பா வாங்கறவங்க மத்தியில இருக்கற அந்த பொருள் மேல இருக்கற விருப்பும் வெறுப்பும்தான் முக்கிய காரணம். அதாவது, ஒரு பொருள் எனக்கு ரொம்ப தேவைன்னா அது எவ்வளவு விலை இருந்தாலும் வாங்கிறணும்னு தோனும். அதுக்கு நேர் மாறா ஒரு பொருள் எனக்கு தேவை இல்லைன்னா அது எவ்வளவு சீப்பா கிடைச்சாலும் வாங்கணும்னு தோனாது.

ரெண்டாவது, அது சந்தைக்கு வர்ற அளவு. சந்தையில ஒரு பொருள் ஜாஸ்தியா கிடைக்குதுன்னா அதாவது அத விரும்பி வாங்கறவங்களோட எண்ணிக்கையை விட அதிகமா கிடைச்சிதுன்னா அதோட விலை இறங்கத்தான் செய்யும்.

உதாரணத்துக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னால நார்த்ல பல இடங்கள்லயும் மழை அடிச்சி கொளுத்திச்சி. இதனால வெங்காய சாகுபடி நினைச்சபடி நடக்கல. அதனால வெங்காய சப்ளைக்கு நார்த் இந்தியாவையே நம்பியிருந்த நம்ம சந்தையிலயும் வெங்காய வரத்து கணிசமா குறைஞ்சிருச்சி. வரத்து குறைஞ்சிதே தவிர நம்மோட தேவை குறையல.  அதனால கிலோ பதினோரு ரூபாய்க்கு வித்துக்கிட்டிருந்த வெங்காயம் படிப்படியா அதிகரிச்சி இப்போ அறுபது ரூபாய எட்டிப் புடிச்சிருக்கு.

இத ஆங்கிலத்துல சொன்னா the prices of a commodity goes up when the supply is unable to meet the demand. இன்னும் சிம்பிளா சொல்லணும்னா ஒரு பொருளோட சந்தை வரத்து அதன் தேவையைக் காட்டிலும் அதிகமா இருந்தா அதன் விலை குறையும். அதுக்கு நேர் எதிரா தேவை வரத்தை விட அதிகமா இருந்தா அதன் விலை உயரும் (when the suplly is more than the demand the prices go down. It goes up when demand is more than the supply.). 

இதுதான் விலைவாசி ஏறி இறங்குவதன் அடிப்படை நியதி (basic principle)

இதை அப்படியே இந்திய ரூபாயின் மதிப்புடன் ஒப்பிட்டு பாக்கலாம்.

அன்னிய செலவாணி சந்தையில் (forex market) டாலருக்கு (ஏனெனில் இப்போதும் உலக வர்த்தகத்தில் வாங்கல் விக்கல் எல்லாமே டாலரில்தான் நடக்கிறது) ஏற்படும்  தேவைகள்தான் அதன் மதிப்பை (விலையை) நிர்ணயிக்கின்றன.

இந்தியாவில் டாலருக்கு தேவை எப்போதெல்லாம் ஏற்படுகிறது?

1. நாட்டின் Trade deficit அதிகரிக்கும்போது. அதாவது நாட்டின் இறக்குமதி அதன் ஏற்றுமதியை விட அதிகரிக்கும்போது. ஒரு நாட்டின் ஏற்றுமதி மதிப்பிற்கும் அதன் இறக்குமதி மதிப்பிற்கும் இடையிலுள்ள வித்தியாசம்னு சொல்லலாம். ஆனா இந்த இரண்டுமில்லாத விஷயங்களும் இருக்கு. அத அப்புறம் பாக்கலாம். (இந்திய இறக்குமதியில் 35% பெட்ரோல் போன்ற எரிபொருட்களும் அதற்கு அடுத்தபடியாக 11% தங்கமும் இடம் பெறுதாம்).

2.அன்னிய முதலீட்டாளர்கள் தங்களுடைய இந்திய முதலீட்டை மீண்டும் தங்கள் நாட்டுக்கு திருப்பி எடுத்துக்கிட்டு போகும்போது.

இது ரெண்டும்தான் இன்றைய பரிதாப நிலைக்கு முக்கிய காரணங்கள்னு சொல்றாங்க.

இந்த ரெண்டுக்கும் அப்புறமும் விஷயங்கள் இருக்கு:

1. இந்திய நிறுவனங்கள் அன்னிய நாடுகளில் செய்யும் முதலீடுகள். (டாட்டா இங்கிலாந்துலருக்கற கோரஸ்னு ஒரு பெரிய ஸ்டீல் கம்பெனிய வாங்குனத இதுக்கு உதாரணமா சொல்லலாம்).

அதுமட்டுமில்லாம

2..மந்தமான இந்திய பொருளாதார சூழல். இங்க வந்து முதலீடு பண்ணா லாபம் வருமான்னு அன்னிய முதலீட்டாளர்கள் மனசுல ஏற்படற ஒரு தயக்கம். சமீப காலத்துல டாலர் முதலீடுகள் குறைஞ்சி போறதுக்கு இதுதான் முக்கிய காரணம்.  ஏற்கனவே செஞ்சிருந்த முதலீட்டையும் திருப்பி எடுத்துக்கிட்டு போய்கிட்டிருக்கறப்போ புது முதலீட்ட எதிர்பாக்கறது முட்டாள்தனம் இல்லையா?

3. அமெரிக்க மத்திய வங்கியின் பொருளாதார கொள்கைகளில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்கள்.

இந்தியாவுலருக்கற முதலீட்டையெல்லாம் மறுபடியும் அமெரிக்காவுக்கே கொண்டு போனதுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்? எங்க லாபம் ஜாஸ்தியோ அங்கதான முதலீட்டாளர்கள் போவாங்க? அதுதான் இப்ப நடக்குது. சமீபத்திய கணக்கெடுக்கின்படி இந்தியாவுல சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டிருக்காம். அதாவது சுமார் ரூ.90,000 கோடி!  இதுல பெரும்பங்கு இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. போன மூனு மாசமா இந்திய ஷேர் மார்க்கெட் யோயோ (yoyo)மாதிரி ஏறவும் இறங்கவும் அன்னிய முதலீட்டாளர்கள் எடுக்கறதும்
போடறதுமா இருக்கறதுதான் காரணம்.

உலக பொருளாதார சந்தையில் ஏற்படும் மாற்றங்கள்.

நேரு காலத்துலருந்து நரசிம்மராவ் காலம் வரைக்கும் இந்திய பொருளாதாரம் உலக பொருளாதாரத்துலருந்து விலகியே இருந்துதுங்கறது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்பல்லாம் உலக சந்தையில ஏற்படற எந்த மாற்றமும் நம்மை அவ்வளவா பாதிச்சதில்லை. ஆனா நரசிம்மராவ் காலத்துல இந்திய பொருளாதரத்துல தாரளமயமாக்கல்னு ஒரு புது கொள்கைய கொண்டு வந்ததுக்கப்புறம் இந்திய பொருளாதாரம் உலக சந்தையோட ஒருங்கிணைக்கப்பட்டாச்சி (integrated). அதாவது அன்னிய நாட்டுக்காரங்க அவங்க பணத்த இந்திய சந்தையில முதலீடு செய்றதுக்கு தாராளமா அனுமதிக்கப்பட்டாங்க. அத்தோட இந்திய கம்பெனிங்கள்ல ஒரு குறிப்பிட்ட விழுக்காடு முதலீடு செய்யவும் பர்மிட் செஞ்சாங்க. அதனால அமெரிக்க டாலர் அதிக அளவுல இந்தியாவுக்குள்ள வர ஆரம்பிச்சிது. இந்தியாவோட அன்னிய செலவாணி கையிருப்பும் ரிக்கார்ட்னு சொல்ற அளவுக்கு கட்டுக்கடங்காம அதிகமாச்சி. இதுக்கு நாங்கதான் காரணம்னு நரசிம்மராவ் அரசு மட்டுமில்லீங்க அவங்கள தொடர்ந்து வந்த NDAவும் சொல்லி எலெக்‌ஷன்ல ஓட்டு வாங்குனதும் உண்மை.

அப்பவே இந்த கொள்கை எதிர்காலத்துல இந்தியாவுக்கு எதிரா திரும்பும்னு எப்பவும் மாதிரியே கம்யூனிஸ்ட்காரங்க கூப்பாடு போட்டாங்க. அவங்க மட்டுமில்லாம அதுவரைக்கும் சந்தையை ஆட்டிப்படைச்சிக்கிட்டிருந்த டாட்டா, பிர்லா, அம்ம்பானி போன்ற இந்திய முதலாளிங்களும் இது சரியில்லைன்னாங்க. அன்னிய நாட்டு முதலீட்டாளர்கள் லாபம் கிடைக்கும்னுதான் இங்க வராங்க அது இல்லேன்னு ஆயிருச்சின்னா கண்ண மூடி திறக்கறதுக்குள்ள தங்களோட பணத்தை தூக்கிக்கிட்டு பறந்துருவானுங்க, ஆனா நாங்க அப்படியில்ல லாபம்னாலும் நஷ்டம்னாலும் நாங்க தொடர்ந்து சந்தையிலதான் இருப்போம்னாங்க. ஆனா வந்து குவிஞ்ச டாலரோட மயக்கம் அன்னைக்கி ஆட்சியிலிருந்தவங்களுக்கு - அது காங்கிரசானாலும் பிஜேபியானாலும் (இந்த ரெண்டு ஆட்சியிலயும் சில சமயங்கள்ல கம்யூனிஸ்ட்டும் பார்ட்னரா இருந்தாங்கங்கறதும் உண்மைதான். ஆனா அது அவங்களுக்கு மறந்து போச்சி) - புரியல, இல்லன்னா புரியாத மாதிரி பாவலா பண்ணாங்க.

அவங்க சுயநலத்தோட சொன்னாங்களோ இல்ல பொதுநலத்தோட சொன்னாங்களோ இப்ப அவங்க அன்னைக்கி சொன்னதுதான் நடக்குது. இங்க நிலமை சரியில்லேன்னு தெரிஞ்சதும் அன்னிய முதலீட்டாருங்க பணத்தோட
பறந்துக்கிட்டே இருக்காங்க.

இதுதான் இந்திய பணத்தின் வீழ்ச்சிக்கு காரணம்.

இதவிட சிம்பிளா சொல்லுங்களேன்ன்னு நீங்க சொல்றது கேக்குது.

அமெரிக்க டாலர் இந்தியாவுல யாருக்கெல்லாம் வேணும்னு பாக்கலாம் (அதாவது டிமான்ட் பண்றவங்க).

1. இறக்குமதி பண்றவங்களுக்கு. இவங்க இறக்குமதி பண்ற பொருட்களுக்கு காசு குடுக்கணும்னா டாலர்லதான் குடுக்கணும். அத அவங்க கணகு வச்சிருக்கற பேங்க்லருந்துதான் வாங்கணும். பேங்க் சந்தையிலருந்து வாங்கணும்.

அதாவது இன்னொரு பேங்க்லருந்து. எல்லா பேங்குகளும் சேர்ந்து நடத்தறதுதான் அன்னிய செலவாணி சந்தை (forex market).

2.அன்னிய முதலீட்டாளர்கள் தங்களோட முதலீட்டை மறுபடியும் எடுத்துக்கிட்டு போறப்பவும் அவங்களுக்கு டாலர்லயே திருப்பி குடுத்தாகணும். இதுக்கும் அன்னிய செலவாணி சந்தையிலருந்துதான் டாலர வாங்கணும்.

3.வெளிநாடுகளில் முதலீடு செய்ய விரும்பும் இந்திய நிறுவனங்கள். இவங்களும் இந்த சந்தையிலதான் இந்திய பணத்த டாலரா மாத்தணும்.

இவங்க மூனு பேரும்தான் இந்த சந்தையிலருந்து டாலர வாங்கறதுல முக்கியமானவங்க.

இந்த சந்தையில டாலர விக்கறவங்க (அதாவது சப்ளை பண்றவங்க)
 
 
1. இந்திய ஏற்றுமதியாளர்கள்
 
இவங்க ஏற்றுமதி செஞ்ச பொருட்களோட விலை வெளிநாட்டுக்காரங்கக் கிட்டருந்து அவங்க பேங்க் வழியா டாலரா வரும். அத அப்படியே கையில வச்சிக்க முடியாது. குறிப்பிட்ட நாளுக்குள்ள சந்தையில வித்தாகணும்.

2.அன்னிய முதலீட்டாளர்கள்
 
இந்திய நிறுவனத்திலோ இல்ல பங்கு சந்தையிலோ முதலீடு செய்ய விரும்பற அன்னிய கம்பெனிங்க அவங்களோட டாலர், யூரோ, பவுன்ட் ஸ்டர்லிங் மாதிரி பணத்தையும் இந்த சந்தையிலதான் வித்தாகணும். அதாவது அவங்க முதலீடு எந்த கம்பெனிக்கு போய் சேருதோ அந்த கம்பெனிங்க அவங்க பேங்க் வழியா சந்தையில வித்துருவாங்க. பங்கு சந்தையில முதலீடு செஞ்சா அந்த பங்குகள அவங்களுக்கு வித்த ஆளுங்க (கம்பெனிங்க) அவங்களோட பேங்க் வழியா சந்தையில வித்துருவாங்க.

இவங்க ரெண்டு பேரும்தான் இந்த சந்தையில டாலர விக்கறதுல முக்கியமானவங்க.

டாலர விக்கறவங்கள சப்ளையருங்கன்னும் டாலர வாங்கறவங்கள டிமான்ட் பண்றவங்கன்னும் சொல்லலாம்.

இந்த சந்தையில டாலர் சப்ளையர்ங்கள விட டிமான்ட் பண்றவங்க ஜாஸ்தியானா டாலர் விலை கூடும். நேர் எதிரா இருந்தா டாலர் விலை குறையும்.

இதுதாங்க மேட்டரே... இத விட சிம்பிளா சொல்ல முடியாதுன்னு நினைக்கறேன்.

இந்த ஏத்த இறக்கத்துல தலையிட்டு ஏதாச்சும் செய்ய முடியும்னா அது இந்திய மத்திய ரிசர்வ் வங்கி இல்லன்னா ஆட்சியிலருக்கற மத்திய அரசு - குறிப்பா சொல்லணும்னா நாட்டின் நிதி மந்திரி.

ரிசர்வ் வங்கி நினைச்சா டாலர் எப்பல்லாம் விலை ஏறுதோ அப்போ தங்களோட கையிருப்புலருக்கற டாலர சந்தையில விக்கலாம். அதாவது டாலர் தேவைப்படற வங்கிகளுக்கு குடுக்கறது.

சந்தையில டாலர் எப்பல்லாம் அதிகமா வருதோ அப்பல்லாம் அத பேங்குகள்கிட்டருந்து வாங்கிக்கிறது.

அவங்க இல்லாம மத்திய அரசு செய்யக் கூடியது என்னன்னா இங்கருந்து போனாப் போறும்னு நினைக்கற அன்னிய முதலீட்டாளர்கள திருப்திப்படுத்தற விஷயமா ஏதாச்சும் செய்யிறது. சாதாரணமா டாலர் ஒரே சீரா உள்ள வந்துக்கிட்டே இருக்கறதுக்கு அன்னிய முதலீடு கொள்கையை ஒரே சீரா வச்சிக்கிட்டிருக்கறது ரொம்ப அவசியம். அது இல்லாம நினைச்சா நீங்க இஷ்டம் போல வரலாம்னு சொல்றது கொஞ்ச நாள் கழிச்சி நீங்க வரத்தேவையில்லேங்கறா மாதிரி புதுசு புதுசா கண்டிஷன் போடறதுன்னு ஒரு அரசு செஞ்சா இவனுங்கள நம்பி எப்படிறா நம்ம பணத்த இங்க வச்சிக்கிட்டிருக்கறது நினைச்சி இருக்கறவணும் ஓடிருவான்.

அதான் இப்ப மெயினா நடக்குது. புதுசா வரலாம்னு நினைச்சவனும் மனச மாத்திக்கிட்டா இங்க இருக்கறவனும் விட்டாப் போறும்னு ஓடிக்கிட்டிருக்கான்.

உதாரனத்துக்கு சில்லறை வணிகத்துல அன்னிய முதலீட்டாளர்களை அனுமதிக்கறதா வேணாமான்னு தெரியாம மத்திய அரசு ஆடுன ஆட்டத்த அவ்வளவு சீக்கிரம் அவங்க மறந்துருவாங்களா?

அதனால இப்பத்தைக்கி அன்னிய முதலீட்டாளர்கள் தாஜா பண்ணி இந்தியாவுக்குள்ள வரவைக்க முடியாதுங்கறது மத்திய அரசுக்கு தெரிஞ்சி போச்சி. வருமானம் குறைஞ்சி போச்சின்னா செலவ குறைச்சித்தான ஆகணும்? டாலர் உள்ள வர்றது குறைஞ்சிட்டதால வெளிய போற டாலரையாவது முடிஞ்ச மட்டும் குறைப்போம்னு நினைச்சி  செஞ்சதுதான்:
 
1. தங்க இறக்குமதி வரிய இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு ஏத்துனது. இந்த வருசத்து மொத்த தங்க இறக்குமதி 850 டண் மேல போகக் கூடாதாம். ஆனா தங்கத்துக்கு இந்தியாக்காரங்க மத்தியில இருக்கற டிமான்ட் குறையவே இல்லையாம். அதனால இனியும் வரிய கூட்டறதுக்கு சான்ஸ் இருக்காம்! தங்கம்தான் அதிக லாபம் தரும்னு நினைச்சா அதிக விலையும் குடுத்துத்தான் ஆவணும், வேற வழியில்லை.

2. அதே மாதிரி பெட்ரோல் இறக்குமதியும். இந்திய மதிப்பு குறைஞ்சிக்கிட்டே இருக்கறவரைக்கும் பெட்ரோல் விலை ஏறிக்கிட்டேதான் இருக்கும். புலம்பி பிரயோஜனம் இல்லை. வேணும்னா வாரத்துக்கு ஒரு நாள் பஸ்லயோ, ஷேர் ஆட்டோவுலயோ இல்லன்னா சைக்கிள்லயோ ஆஃபீஸ்க்கு போங்க... உடம்பும் இளைக்கும்.

2. இந்திய கம்பெனிங்களோட அன்னிய முதலீட்டு அளவை குறைச்சது. இனி எந்த இந்திய கம்பெனியும் மத்திய அரசோட அனுமதியில்லாம அன்னிய கம்பெனிங்கள வாங்கிற முடியாது.  அவங்கக்கிட்ட டாலர் கையிருப்பு ஜாஸ்தியாருந்தா இந்திய சந்தையிலதான் விக்கணும்...

இந்த மூனையும்தாம் இந்திய அரசாங்கம் இப்பத்தைக்கி செய்ய முடியும்.

இன்னொன்னும் செய்யலாம். நிறைய இந்திய ஐ.டி. கம்பெனிங்க (இன்ஃபோசிஸ் இதுல முக்கியமான கம்பெனி) தங்களோட டாலர் பணத்த அயல்நாட்டு வங்கிகள்ல குவிச்சி வச்சிருக்கறதா கேள்வி. அதையெல்லாம் திரும்ப இங்க கொண்டு வரணும்னு ஒரு கன்டிஷன் போடலாம். அதுக்கு ஏதாச்சும் வரி விலக்கு அளிச்சாலும் அது உடனே ரிசல்ட் குடுக்க வாய்ப்பிருக்கு. ஆனா அவ்வளவு நாட்டுப்பற்று உள்ளவங்க இல்லை நம்ம முதலாளிங்கங்கறது வேற விஷயம்.

இது தேர்தல் வருடம். அதனால பார்லிமென்டையே ஒழுங்கா நடத்த முடியாம தடுமாறுற ஒரு அரசாங்கத்தால அன்னிய முதலீட்டாளர்கள மறுபடியும் இந்தியாவுக்குள்ள வர வைக்கிற மாதிரி பெரிய பொருளாதார முடிவுகள் எடுக்க முடியாதுங்க. அப்படியே எடுத்தாலும் இப்ப இருக்கறவங்க வர்ற தேர்தல்ல தோத்துட்டா அடுத்த வர்ற அரசு என்ன செய்யுமோன்னு அன்னிய முதலீட்டாளர்க நினைப்பாங்க இல்ல?

அதனால காருக்கு டிங்கரிங் பண்றா மாதிரி இப்பத்தைக்கி இத தட்டி, அத தட்டி மேனேஜ் பண்ண வேண்டியதுதான்.

அதத்தான் ப.சிதம்பரம் செஞ்சிக்கிட்டிருக்கார்.

இன்றைய நிலமையில யார் அந்த பதவியில இருந்தாலும் இதத்தான் செய்ய முடியுங்க...

வீணா புலம்பி எந்த பிரயோஜனமும் இல்லை....

அன்னிய செலவாணி சந்தையில ரூபா மதிப்பு விழுந்தா ஆட்டோமேட்டிக்கா நேரடிய பலனடையப் போறது யாருன்னு தெரியுதா? இன்னைக்கி இதப்பத்தி கொஞ்சம் சத்தமாவே புலம்பற அயல்நாட்டுல வேலை செய்யிற நம்ம ஆளுங்கதான்.

டாலர்ல சம்பாதிக்கறவங்களுக்கு இது ஒரு எதிர்பார்க்காத வரப்பிரசாதம்தானே.... போன மாசம்வரைக்கு, 500 டாலர் (25,000/-) வீட்டம்மாவுக்கு அனுப்பிக்கிட்டுருந்த இந்தியாகாரர் இந்திய ரூபா இப்படியே விழுந்து ஒரு டாலருக்கு ரூ.70/-ன்னு ஆவுதுன்னு வையிங்க... அப்போ அவர் அனுப்பற 500 டாலரோட மதிப்பு ரூ.35,000/- ஆயிருமே... அவரோட வீட்டம்மாவுக்கு ஒரேயடியா ரூ.10000/- இன்க்ரிமென்ட் கிடைச்சா மாதிரிதானே?

அத நினைச்சி சந்தோஷப்படறத விட்டுப்போட்டு... எதுக்கு நாட்டப் பத்தி கவலைப்படறீங்க?

சரிங்க, என்னெ மாதிரி இந்தியாவுல சம்பாதிக்கறவங்களுக்கு இதனால பெருசா இழப்பிருக்கா? பெட்ரோல் விலை ஏறும். அத தவிர பெருசா இழப்பு நமக்கு இருக்கப்போவதில்லை... தங்கம் விலை ஏறும். அதால பாதிக்கப்படப் போறவங்க எத்தனை சதவிகிதம் இருப்பாங்க? விடுங்க கவலைய.

இன்னொரு விஷயமும் சொல்றேன்.. இந்த பண வீழ்ச்சி இந்தியாவுல மட்டுமில்லீங்க BRICS நாடுகள்னு சொல்ற நாடுகள்ல சீனா மற்றும் கனடாவ தவிர பிரேசில், ரஷ்யா மட்டுமில்லாம இந்தோனேஷியா, தாய்லாந்து மாதிரியான நாடுகள்லயும் நிலையும் இதேதான்....

எங்கல்லாம் பொருளாதாரம் மந்த நிலையிலோ இருக்கோ... யாரெல்லாம் அன்னிய முதலீட்டாளர்களை நம்பி பொழப்ப நடத்தறாங்களோ அங்க எல்லாமே இதே நிலைதான்...
********