ஆனால் அதற்கு முன் என்னுடைய தலைமையகத்திலிருந்து என்னிடம் விளக்கம் கேட்டு வந்த அந்த கடிதம்!
அதை நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை.
சாதாரணமாக என்னுடைய தலைமையகத்திலிருந்தும், வட்டார அலுவலகத்திலிருந்தும் வரும் தபால் உறைகளை நான்தான் பிரித்து படிப்பேன். தினமும் இருபது, முப்பது தபால்கள் வரும் என்பதால் மீதமுள்ள தபால் உறைகளை என்னுடைய உதவி மேலாளரே பிரித்து தேவைப்பட்டால் என் பார்வைக்கு அனுப்புவார்.
அன்று என்னுடைய தலைமையகத்திலிருந்து வந்த உறையைப் பிரித்ததும் முதலில் என் பார்வையில் பட்ட கடிதம் என்னை அதிர்ச்சியில் ழ்த்தியது. கடிதத்தின் தியதியைப் பார்த்தேன். இரண்டு நாட்களுக்கு முன்தான் தயாரிக்கப் பட்டிருந்தது. இரண்டே நாட்களுக்குள் வந்து சேர்ந்ததைப் பார்க்கும்போது இது யாரோ திட்டமிட்டு செய்த வேலை என்று தெரிந்தது. அதற்கு நம் கிளையிலிருந்தே யாரோ துணை போயிருக்கிறார்கள். யாராயிருக்கும் என்ற ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை. எல்லாம் நம் உதவி மேலாளருடைய வேலையாய்த்தான் இருக்கும்.
ஆனாலும் இதைத் தெளிவுபடுத்த என்னிடம் ஒரு ஆதாரமும் இல்லை.
மீண்டும் கடிதத்தைப் பார்த்தேன். அதன் சாராம்சம் இதுதான்.
‘உங்கள் கிளையின் கடந்த மாத அட்வான்ஸ் பேமெண்ட் அறிக்கையின்படி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் உங்களுடைய சட்ட ஆலோசகருக்கும், சொத்து மதிப்பீட்டாளருக்கும் கொடுக்கப் பட்ட ரூ.5000/- இன்னும் வரவு செய்யப்படாமல் இருக்கிறது. அதை வரவு செய்ய முடியாத பட்சத்தில் அதை ஏன் உங்கள் ஊதிய பணத்திலிருந்து வசூலிக்க கூடாது என்று இக்கடிதம் கண்ட இரண்டு நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு பணிக்கப்படுகிறீர்கள். தவறும் பட்சத்தில் இத்தொகை இம்மாத ஊதியத்திலிருந்து கழிக்கப்படும். பொது மேலாளர்.’
நான் என் உதவி மேலாளரை அழைத்து கடிதத்தைக் காண்பித்து அவர் படிப்பதையே பார்த்தேன். ஆனால் அவரோ முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் வாசித்தார். இதில் எனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை நிரூபிக்கத்தான் அவர் இப்படி செய்கிறார் என்று எனக்கு தெரிந்தது.
‘என்ன சார்.. திடீர்னு இப்படி வந்திருக்கு? இப்ப என்ன செய்யப் போறீங்க?’ என்று கேட்டவரை வியப்புடன் பார்த்தேன். ‘என்ன செய்யப் போறீங்க?’ அதாவது இவருக்கு அதில் எந்த பங்கும் இல்லை என்பது போல!
சாதாரணமாக வங்கியிலிருந்து முன் தொகையாக எடுக்கும் எந்த தொகையும் அதன் சம்பந்தப் பட்ட வாடிக்கையாளருடைய கணக்கிலிருந்து அடுத்த நாளே வசூலித்துவிட வேண்டும் என்பது நியதி. வாடிக்கையாளருக்கு கணக்கு இல்லாத சூழ்நிலையில் அளிக்கப்படுகின்ற சேவைக்கு தேவையான தொகையை அவரிடமிருந்து முன்கூட்டியே வசூலிக்க வேண்டுமே தவிர வங்கியுடைய ‘முன் தொகை’ கணக்கிலிருந்து எடுக்கக் கூடாதென்பதும், தவிர்க்க முடியாத சூழ்நிலையில், எடுக்கப்பட்ட தொகையை எவ்வளவு விரைவில் வசூலிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் வசூலித்துவிடவேண்டும் என்பதும், அப்படி வசூலிக்கப்படாத நிலை ஏற்பட்டால் கிளை மேலாளர் துவங்கி கிளையிலுள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எல்லோரிடமிருந்தும் சமமாக பிடிக்கப்படவேண்டும் என்பதும் எங்கள் வங்கியின் பொது நியதி.
ஆக, சேட்டிடமிருந்து வசூல் ஆகாத சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு என் உதவி மேலாளரிடத்திலுமிருந்தும் விளக்கம் கேட்கப்படவேண்டும். அத்துடன் அவரிடமிருந்து சரி பாதியான தொகையும் வசூலிக்கப்படவும் வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் ஒருதலைப் பட்சமாக என்னிடமிருந்து மட்டும் விளக்கம் கேட்டிருப்பதும் வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக்க முடியாத சூழ்நிலை எழுந்தால் என்னுடைய ஊதியத்திலிருந்து முழுத்தொகையும் பிடிக்கப்படும் என்பதும் சற்று அதிகப்படியான மிரட்டலாகவே எனக்குப் பட்டது.
நான் என்னுடைய உதவி மேலாளரைப் பார்த்து கேலியுடன் சிரித்தேன். ‘என்ன சார் என்ன செய்யப் போறிங்கன்னு கேக்கறீங்க? இந்த விளக்க கடிதத்தின் பின்னணியில இப்ப நான் உங்க கிட்ட விளக்கம் கேட்டா என்ன பண்ணுவீங்க?’ என்றேன்.
அவர் திடுக்கிட்டு முகம் மாறுவதைப் பார்த்து ரசித்தேன். ‘படவா, எங்கிட்டவே விளையாடறியா? அன்னைக்கி போலி நகையை நீ எடுத்தப்பவே நான் பழியை உம்மேல தூக்கிப் போட்டிருந்தா சரியா இருந்திருக்கும். காப்பாத்தி விட்டதுக்கு என்னையே காட்டி குடுக்கறியா. இரு வச்சிக்கறேன்.’ என்றேன் எனக்குள்.
இதைத்தான் White Collar Mentality என்பார்கள். இதே ஒரு தொழிற்சாலைத் தொழிலாளர்கள் இருவர் இடையில் நடந்திருந்தால் இருவரும் மற்றவர் சட்டையைப் பிடித்து நீயா நானா பார்த்துவிடலாம் என்று அடிதடி சண்டையில் இறங்கிவிடுவார்கள்.
கிரிக்கெட்டும் கால்பந்தாட்டமும் போல் என்றும் சொல்லலாம். கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்கள் நான்கு அல்லது ஆறு ரன்கள் அடித்த மட்டையாளரைப் பார்த்து கூறும் கடுஞ்சொல்கள் கால்பந்தாட்ட வீரர் ஒருவரின் வாயிலிருந்து வந்தால் இரு வீரர்களும் மைதானத்திலேயே கட்டிப் புரண்டு சண்டை போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
என்னைக் காட்டிக் கொடுத்தவர் என் உதவி மேலாளர்தான் என்று எனக்கு நன்றாய் தெரிந்திருந்தும் என்னால் நேரடியாக அவரை ஒன்றும் சொல்ல முடியாது.
இவர் காட்டிக் கொடுத்தார் என்று எப்படி நீங்கள் நினைக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்.
சாதாரணமாக வங்கியின் எல்லா கிளைகளிலுமிருந்தும் (அப்போது என்னுடைய வங்கிக்கு இரு நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகள் இருந்தன) ஒவ்வொரு மாத இறுதியிலும் சமர்ப்பிக்கப்படும் இத்தகைய அறிக்கைகளை பரிசீலித்து ஒரு மாதத்திற்கு மேல் வசூலிக்கப் படாத தொகைகளை பட்டியலிட்டு சம்பந்தப்பட்ட கிளை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க குறைந்தது மூன்று மாத காலமாகிவிடும்.
அப்படியிருக்க, கடந்த மாத இறுதியில் சமர்ப்பிக்கப் பட்ட அறிக்கையைப் பரிசீலித்து ஒரே வாரத்திற்குள் விளக்கம் கேட்பது என்றால் யாருடைய உந்துதலால் என்று கண்டு பிடிக்க முடியாதா என்ன?
ஏன் இந்த அவசரம்? சொல்லுகிறேன்.
எனக்கு இக்கிளையிலிருந்து மாற்றல் ஆகிவிட்டது என்று அவருக்கு எப்படியும் தெரிந்திருக்கும். நான் போவதற்குள் இத்தொகையை முழுவதும் என்னிடமிருந்து வசூலிக்காவிட்டால் நான் சென்ற பிறகு வரும் மேலாளர் என்னுடைய உதவி மேலாளரையும் சிக்க வைத்துவிட்டால்? நான் இருக்கும்போதே என்றால் ஒரு வேளை பழியை நானே ஏற்றுக்கொண்டு முழுத்தொகையையும் அடைக்கலாம் அல்லவா?
ஆனால் இவரை அவ்வளவு எளிதில் தப்பிக்க விடக்கூடாது என்று நினைத்துக்கொண்டு அவரைப் பார்த்தேன்.
‘என்ன சார்? நான் கேட்டதுக்கு பதிலையே காணோம்?’
அவர் தடுமாறினார். ‘சார் எங்கிட்ட என்ன விளக்கம் கேக்கப் போறீங்க? நான் உங்களுக்கு தெரியாமல் ஒன்னும் செய்யலையே?’
நான் கோபம் வந்ததுபோல் நடித்தேன். ‘என்ன, எங்கிட்ட கேட்டுட்டு செய்தீங்களா? எங்க அன்னைக்கி பிரிப்பேர் பண்ண வவுச்சர கொண்டு வாங்க?’ என்றேன்.
அந்த வவுச்சரை நான் அன்று அவர் சேட்டின் அலுவலகத்துக்குச் சென்று வசூலிக்க முடியாமல் வெறுங்கையுடன் திரும்பி வந்தாரே அன்றைக்கே எடுத்து பார்த்துவிட்டேன். அவர் சட்ட ஆலோசகருக்கு கொடுக்க வேண்டிய தொகையை நான் விடுப்பில் இருந்த தினத்தன்றுதான் எடுத்திருக்கிறார். மதிப்பீட்டாளருக்கு கொடுக்கப்பட்ட தொகைக்கான வவுச்சரில் மட்டும்தான் நான் கையெழுத்திட்டிருந்தேன். ஒரு கிளையில் நடக்கும் எல்லா காரியங்களுக்கும் மேலாளர்தான் பொறுப்பு என்று எனக்கும் தெரியும், அவருக்கும் தெரியும். இருந்தாலும், அவருடைய செயலுக்கு அவரிடமிருந்தும் நியாயமாக விளக்கம் கேட்கப்படவேண்டும் என்பதும் நியதி.
அதை வைத்துத்தான் அவரை சிறிது மிரட்டிப் பார்க்க ஆசைப்பட்டேன்.
அன்றைய தினத்தின் வவுச்சர் கட்டை எடுத்துக்கொண்டு வந்தவர் என்னிடம் காண்பிக்காமல் தன் கையிலேயே வைத்துக்கொண்டு என்னைப் பார்த்து பரிதாபமாக பார்த்து, ‘நீங்க அன்னைக்கு லீவு சார். நான்தான் கையெழுத்து போட்டிருக்கேன்.’ என்றார்.
‘அதுக்கு உங்க கிட்ட விளக்கம் கேட்கலாம் இல்லையா?’
‘சாரி சார்.’ என்றவரை கூர்ந்து பார்த்தேன். நீங்கதானே ஹெட் ஆஃபீசுக்கு சொல்லி நான் போறதுக்குள்ள என்கிட்ட விளக்கம் கேக்க வச்சீங்கன்னு நேரடியாகவே கேட்டால் என்ன? என்று நினைத்தேன். சற்று நேரத்திற்குப் பிறகு இந்த சில்லரை விஷயத்தை நீட்டி மீண்டும் ஒரு சச்சரவில் மாட்டிக்கொள்ள வேண்டுமா என்று நினைத்தேன்.
‘சரி. அது போட்டும். சேட்டோட மானேஜர்கிட்ட அதுக்கப்புறம் இதப்பத்தி பேசினீங்களா?’ என்றேன் அவரைப் பார்த்து.
‘இல்ல சார்?’
‘ஏன்? அது உங்க வேலையில்லேன்னா? சரி.. அவர் கொடுத்த அந்த பத்திர நகல்கள்? அது இன்னும் உங்க கிட்டதான இருக்கு?’
‘இல்ல சார். அத அவரோட மானேஜரே ஒரு நாள் வந்து சண்டை போட்டு வாங்கிக்கிட்டு போய்ட்டார் சார்.’
நான் திடுக்கிட்டு அவரைப் பார்த்தேன். அடப்பாவி. இதை ஏன் என் கிட்டருந்து மறைக்கணும்? அந்த பத்திரத்தை வச்சி மிரட்டியே அந்த ஆள்கிட்டருந்து வசூல் பண்ணிருக்கலாமே? இப்ப அதுவுமில்லாம எப்படி வசூல் பண்றது?
‘என்னது குடுத்தீட்டீங்களா? எப்படீங்க என் பர்மிஷன் இல்லாம குடுக்கலாம்? சரி, குடுத்தீங்க. ஏன் இதுவரைக்கும் என்கிட்ட சொல்லலை?’
பதில் பேச முடியாமல் வாய் மூடி நின்றவரைப் பார்த்தேன். ஏதோ நடந்திருக்கிறது. இவர் என்னிடமிருந்து மறைக்கிறார்.
‘சார் ஒரு நாள் நீங்க இல்லாத நேரத்துல வந்தார். தகராறு பண்ணிட்டு இங்கருந்தே ஹெட் ஆஃபீசுக்கு போன் பண்ணி நம்ம க்ரெடிட் டிப்பார்ட்மெண்ட சீஃப் கிட்ட புகார் பண்ணார். அவர் உடனே ஃபோன்லயே அவர் கேட்டத குடுத்துறுங்க. பிரச்சினை பண்ண வேண்டாம்னு சொன்னார். அதான் குடுத்தேன். உங்க கிட்ட சொல்ல மறந்து போச்சி சார்.’
நான் அவரையே வியப்புடன் பார்த்தேன். மறந்து போச்சா?
‘சரி, அவர்கிட்ட இந்த பணத்த பத்தி சொன்னீங்களா?’ என்றேன்.
‘இல்ல சார்.’
எனக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது. அவரிடம் கூறியிருந்தால் ஒரு வேளை அவரே சேட்டோட மேனேஜர்கிட்ட பேசி வசுல் செய்திருக்கலாம் அல்லாவா? ‘ஏங்க சொல்லலை? சொல்லியிருந்தா ஒருவேளை அவர் உங்களை பத்திரத்தை திருப்பி கொடுக்க சொல்லியிருக்க மாட்டாரில்லே?’
‘அவர் அன்னைக்கி பண்ண கலாட்டாவுல எனக்கு ஒன்னுமே ஓடலை சார். உங்க கிட்ட சொல்லவும் பயமா இருந்துது சார்.’
நான் அவரையே பார்த்தேன். முட்டாள். அப்போ சும்மா இருந்திருக்கலாம் இல்லே? நானே போறதுக்குள்ள இதுக்கும் ஏதாவது வழி பண்ணியிருப்பேனே. பண்றதையும் பண்ணிட்டு என்னை மாட்டிவிடறதுக்கு வழி பண்ணியா? இரு வரேன்.
‘அப்ப ஒன்னு பண்ணுங்க. நான் லீவ்ல இருந்தப்போ முன் தொகையா கொடுத்த ரூ.3000/- நீங்க கட்டிருங்க. மீதியை நான் அவர்கிட்டருந்து வசூல் பண்ண பாக்கறேன். இல்லன்னா நான் போறதுக்குள்ள கட்டிடறேன். என்ன?’ என்றேன் அவரைப் பார்த்து.
அவர் உடனே வாடிப்போன முகத்துடன், ‘நீங்க இப்படி பேசினா எப்படி சார்?’ என்றார்.
‘பின்னே. நீங்கதானே இத ஊதி பெரிசாக்குனது? இல்லன்னா மூனு, நாலு மாசம் கழிச்சிதானே இப்படி ஒரு க்வரி (query) வரும்? சொல்லுங்க, நீங்கதானே இந்த வேலையை செய்தது? ஒத்துக்கிட்டீங்கனா அன்னைக்கி காப்பாத்துன மாதிரியே இதுலருந்தும் காப்பாத்தறேன். இல்லன்னா நீங்கதான் என்னை கேக்காம பத்திரத்தை எடுத்து குடுத்திட்டீங்க அதனால என்னால வாடிக்கையாளர் கிட்டருந்து பணத்த வசூலிக்க முடியலைன்னு விளக்கம் எழுதி போடப் போறேன். என்ன சொல்றீங்க?’
அவர் ஒன்றும் பேசாமல் சிறிது நேரம் வாடிய முகத்துடன் நின்றார். பிறகு.. ‘சாரி சார். ஏதோ ஒரு வேகத்துல அப்படி செஞ்சிட்டேன். மன்னிச்சிருங்க சார்.’ என்றார். இன்னும் சிறிது நேரம் நான் வதைத்தால் அழுதுவிடுவார் போல தெரிந்தது. இப்போதைக்கு இது போதும் என்று நினைத்து, ‘சரி, இனிமே உங்க வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க. எனக்கு மேலிடத்துல யாரும் இல்லங்கற தைரியத்துல விளையாடி பாக்காதீங்க, போங்க.’
அவர் தன் இருக்கைக்கு போனதும் சேட்டிடம் கணக்குப்பிள்ளை வேலைபார்த்த என் உறவுக்காரரை அழைத்து நான் மாற்றப்பட்ட விஷயத்தை சுருக்கமாக தெரிவித்து விட்டு சேட்டிடம் இருந்து வசூலிக்கப்படவேண்டிய தொகையைப் பற்றி கூறினேன்.
‘அப்படியாய்யா? உங்கள மாத்திட்டாங்கன்னு கேக்கறதுக்கு ரொம்ப வருத்தமாருக்குய்யா. இந்த பணத்தப் பத்திய கவலைய விட்டுருங்க. அத நீங்க போறதுக்குள்ள எப்படியாவது சேட்டுக்கிட்ட பேசி நான் வாங்கி தந்துடறேன்.’ என்றவர் அடுத்த ஒரு வாரத்திற்குள்ளாகவே அந்த பணத்தை ஒரு ஊழியர் மூலம் கொடுத்தனுப்பினார்.
நானும் அவரை உடனே தொலைப்பேசியில் கூப்பிட்டு நன்றி கூறினேன். பணம் வந்து சேர்ந்த அன்றைய தினமே என்னுடைய தலைமையலுவலகத்திற்கு விளக்கும் கூறி பதிலனுப்பினேன். அதில் என்னுடைய உதவி மேலாளரைக் குறித்து ஒன்றும் எழுதாமல் இருந்ததைப் பார்த்துவிட்டு என்னிடம் ஓடிவந்து காலில் விழாத குறையாக நன்றி தெரிவித்தார் என்னுடைய உதவி மேலாளர்.
ஆனால் பாவம், நான் மாற்றலாகிப் போய் அடுத்த ஆறு மாதத்திற்குள்ளாகவே வேறொரு சில்லரைப் பிரச்சினையில் சிக்கிக்கொண்டு புது மேலாளரால் (அவர் மேலிடத்துக்கு மிகவும் வேண்டப்பட்டவர்) காட்டிக் கொடுக்கப்பட்டு அவர் செய்த குற்றத்திற்கு சிறிதும் பந்தமில்லாமல் மிக அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட்டு இப்போதும் அவர் உதவி மேலாளராகவே இருக்கிறார்.
இதில் வேறொரு வேடிக்கை என்னவென்றால் இவரைக் காட்டிக் கொடுத்து அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தந்த மேலாளரும் அதே கிளையில் ஒரு பிரச்சினையில் சிக்கிக்கொண்டு மேலிடத்தில் செல்வாக்கிருந்தும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு அவமானம் தாங்காமல் ராஜிநாமா செய்துவிட்டு போய்விட்டார். ஆனால் அவருடைய மனைவி மிகவும் வசதி படைத்தவர் என்பதால் அவருடைய சொந்த ஊரிலேயே வர்த்தகம் செய்கிறார்.
கெடுவான் கேடு நினைப்பான் என்று சும்மாவா சொன்னார்கள்.
தொடரும்
பி.கு.: நான் அலுவல் விஷயமாக வெளியூர் செல்வதால் அடுத்த பதிவு புதன் அல்லது வியாழன் கிழமைதான். காத்திருங்கள் :-))
'கெடுவான் கேடு நினைப்பான்'
பதிலளிநீக்குசரியா அன்னைக்கே சொல்லிவச்ச நம்ம முன்னோர்கள் எவ்வளோ பட்டுருக்கணும்.
சரிங்க. உங்களுக்கு லீவு ரெண்டு நாளைக்கு மட்டுமே சாங்க்ஷன் செஞ்சுருக்கேன். புதன் மாலைக்குள்ளெ பதிவு போட்டுரணும். ஆமா:-)))))
சந்தோஷமாப் போயிட்டு வாங்க.
கலக்கிட்டீங்க ஜோஸஃப் அவர்களே. என் C.P.W.D. அனுபவம் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. அது பற்றி இப்போதே தனிப்பதிவு போடுவேன்.
பதிலளிநீக்குஅன்புடன்,
டோண்டு ராகவன்
நீங்க பெருந்தன்மையா லீவ் சாங்ஷன் பண்ணதுக்கு ரொம்ப தாங்க்ஸ் துளசி.
பதிலளிநீக்குபுதன் கிழமை மாலைக்குள்ள கண்டிப்பா போட்டுடறேன்.
வியாழக்கிழமை கோலாலம்பூரில் வாழும் என் மூத்த மகள் கிறீஸ்துமஸ்சுக்கு வருவதால் ஒரு வாரம் லீவ் போடலாம் என்றிருக்கிறேன். அதற்கும் சாங்க்ஷன் பண்ணீங்கன்னா பரவாயில்லை.
பண்ணுவீங்க இல்லே?
வாங்க டோண்டு சார், நன்றி.
பதிலளிநீக்குஉங்க பதிவ சீக்கிரம் போடுங்க. படிக்கலாம். இன்னைக்குள்ள போடலன்னா புதன் கிழமைதான் படிக்க முடியும்.
பரவால்லையா? :-)
வாங்க ராஜ், நன்றி.
பதிலளிநீக்குI just wanted him to realise that he can't simply get away with that kind of mischief. Not that I wanted to show him, his place.
அய்யோ...
பதிலளிநீக்குஒரு வார லீவுன்னு சொல்லி எங்களை இப்படித் தவிக்க வச்சுட்டீங்களே.
இது உங்களுக்கே நியாயமா சார்???
வாங்க சுதர்சன்,
பதிலளிநீக்குநக்கல் இல்லையே?
அதுன்னாலும் பரவால்லை. ஒரு வாரம்னாலும் ஒரு ரெண்டு மூனு நாளைக்கு போட முடியாது. அப்புறம் வீட்லருந்தே போடறேன்.
ரெண்டு வருஷம் கழிச்சி பொண்ணு கூட ஒரு ரெண்டு வாரம் கூட செலவழிக்கலைன்னா எப்படீங்க? அப்புறம் நீங்க என்ன பெரிய எழுத்தாரளா ஆயிட்டீங்க எங்களயெல்லாம் கவனிப்பீங்களான்னும் பொண்ணு கோச்சிக்கிட்டா அவ்வளவுதான்.
ஞாபகம் இருக்கு சதீஷ். இன்னைக்கி மதியத்துக்குள்ள போட்டுடறேன். நன்றி.
பதிலளிநீக்குவாங்க வாங்க வாங்.....க.
பதிலளிநீக்குபொண்ணு சுகமா? சடார்னு ரெண்டு போஸ்டிங்கைப் போட்டுருங்க.
நன்றி துளசி,
பதிலளிநீக்குபொண்ணு இன்னும் வரலையே. வியாழக்கிழமைதான் வரா.
நான் திங்கள், செவ்வாய் ரெண்டு நாளும் திருச்சூர்ல ஒரு செமினாருக்காக போயிருந்தேன்.