20 டிசம்பர் 2019

நேரத்தை அறுவடை செய்தல்!

நேரத்தை அறுவடை செய்தல் (Harvesting time) என்ற வார்த்தை பயன்பாட்டை கேட்டிருக்கிறீர்களா?

சமீபத்தில் இணையதளம் ஒன்றில் ஒரு ஆங்கிலக் கட்டுரையில் இந்த சொல் பயன்பாட்டை படித்தேன். 

இதற்கு நேரத்தை மிச்சப்படுத்துதல் என்று சுருக்கமாக கூறிவிடலாம்.

ஒவ்வொரு மணித்துளியும் பொன் போன்றது என்பதை மும்பையில் சில ஆண்டுகள் வசித்தால் போதும், தெளிவாக தெரிந்துவிடும். 

நான் மும்பையில் இரு தவணைகளாக சுமார் ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். 

முதல் தவணையில் நான் பணியாற்றிய செம்பூர் கிளைக்கு அருகிலேயே குடியிருந்ததால் அலுவலகத்திற்கென்று போக-வர செலவிடும் நேரம் அதிகம் போனால் அரை மணி நேரம்தான். பெரும்பாலான நாட்களில் உடன் வசித்த நண்பர்களுடன் பேசிக்கொண்டே நடந்து சென்றுவிடுவேன். 

ஆனால் இரண்டாவது தவணையில் நான் பணியாற்றிய இடம் காலா கோடா என்ற பகுதி மும்பையின் ஒரு கோடியிலும் நான் வசித்த இடமான வாஷி மறு கோடியிலும் இருந்ததால் போக-வரவே தினமும் சுமார் மூன்று மணி நேரம் செலவிட வேண்டியிருக்கும். அப்போது வாஷியிலிருந்து மும்பை வி.டி. ரயில் நிலையத்திற்கு விரைவு மின்வண்டியும் கிடையாது. 

வாஷி ரயில் நிலையத்திலிருந்து ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் வெவ்வேறு மார்க்கங்களில் மின்வண்டிகள் புறப்பட்டுக்கொண்டே இருக்கும். நான் செல்லவிருந்த மார்க்கத்தில் சுமார் ஒன்பது நிமிடங்களுக்கு ஒரு வண்டிதான். அதாவது அதிகாலை 4..01 முதல் வண்டி என்று துவங்கி ஒவ்வொரு ஒன்பது மணித்துளிகளுக்கு ஒரு வண்டி என்று அடுத்த நாள் விடியற்காலை 1.00 மணி வரை தொடர்ந்து இரு மார்க்கங்களிலும் வண்டிகள் வரும், செல்லும். இடையில் சிக்னல் கோளாறு, எதிரில் வரும் வண்டிகளுக்கு இடம் விட்டு காத்திருத்தல் போன்றவைகளால் கால தாமதம் ஏற்படும் சமயங்களில் - இது பெரும்பாலும் எல்லா நாட்களிலும் நடக்கும் - அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தில் எதுவும் நடக்காது... ஒரு மணித் துளி காலதாமதமாக நாம் நிலையத்தினுள் நுழைந்தாலும் மின்வண்டியை தவறவிட்டுவிட்டு அடுத்த வண்டிக்காக காத்திருக்க வேண்டியதுதான்.

பெரும்பாலும் ஒரு வண்டி காலதாமதமானால் அடுத்த வண்டியில் பயணிப்பதற்கென வந்து சேரும் பயணிகளும் சேர்ந்துக்கொள்ள இரண்டு வண்டிகளுக்கான கூட்டம் நிலையத்தை அடைத்துக்கொண்டு காத்திருக்கும். நம்மால் அந்த பயணிகளுடன் போட்டி போட்டிக்கொண்டு வண்டியில் ஏற முடியவே முடியாது. அதை விட்டு விட்டு அடுத்த வண்டிக்கு காத்திருக்க வேண்டியதுதான். அப்போதுதான் ஒவ்வொரு மணித் துளியின் அருமையும் நமக்கு புரியும்.

சென்னையிலும் இதே அளவு என்றில்லாவிட்டாலும் புற நகர் வண்டிகளை பிடிப்பவர்கள் ஓடும் ஒட்டத்தை பார்த்தாலே தெரியும், நேரத்தின் அருமை!

இதைத்தான் கட்டுரையாளர் harvesting time என்று கூறியிருந்தார். நேரத்தை அறுவடை செய்தல்.

நேரத்தை மிச்சப்படுத்துதல் ஒரு கலை. அது அனைவருக்கும் கைவரும் என்று கூற முடியாது.

சிலர் எல்லாவற்றிலும் பரபரப்பாக இருப்பர். வேறு சிலர் எதிலும் நிதானமாக இருப்பர். 

ஒரு குடும்பத்தில் கணவன் - மனைவி இருவருமே பரபரப்புள்ளவர்களாக இருந்தாலும் பிரச்சினைதான். அல்லது ஒருவர் பரபரப்பானவராகவும் ஒருவர் நிதானமானவராக இருந்தாலும் பிரச்சினைதான். இருவருமே நிதானமானவர்களாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.

பெரும்பாலான வீடுகளில் அலுவலகம் புறப்பட்டுச் செல்லும் சமயங்களில் வாக்குவாதங்கள் ஏற்படுவதே இந்த நேரப் பிரச்சினையால்தான். 

நேரத்தை மிச்சப்படுத்த பல எளிய வழிகள் உள்ளன. 

அவற்றில் சில:

1. மென்பொருள் தயாரிப்பவர்கள் தயாரிப்பில் இறங்குவதற்கு முன்பாக ஒரு Flow Chart தயாரித்துக்கொள்வார்கள். அதை நாமும் தினசரி அலுவல்களில் தயாரித்துக்கொள்ளலாம். காலையில் எழுந்ததிலிருந்து எந்தெந்த அலுவல்களை அன்று செய்ய வேண்டும் என்பதை முந்தைய தின இரவே தயாரித்துக்கொள்ளலாம். 

2. எடுத்ததை எடுத்த இடத்திலேயே வைத்துவிடுவது. நம்முடைய பெரும்பாலான நேரம் விரையமாவதே நமக்கு தேவையான பொருட்களை தேடுவதில்தான் என்றால் மிகையல்ல. 

3.வீட்டில் எந்த பொருள் அது பற்பசையானாலும் சமையலுக்கு பயன்படும் பொருட்களானாலும் அது இன்னும் இரண்டொரு நாட்களில் தீர்ந்துவிடப்போகிறது என்று தெரிய வரும்போதே அதை ஒரு புத்தகத்தில் (டைரி என்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், என்று கடைக்குச் செல்ல வேண்டுமோ அந்த தேதியிலேயே) குறித்துக் கொள்ளலாம். 

4. மார்க்கெட்டுக்கு செல்லும்போதும் மார்க்கெட்டின் அமைப்பை மனதில் வைத்துக்கொண்டு வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலை தயாரித்துக்கொள்ள வேண்டும். கடை வாயிலிருந்து துவங்காமல் கடைக் கோடியிலிருந்து துவங்கி வாசல் வரை பொருட்கள் கிடைக்கும் பகுதிகளை மனதில் வைத்துக்கொண்டு பட்டியலை தயாரித்தால் நேரமும் மிச்சம் எதுவும் மறந்தும் போகாது. இப்போது பெரு நகரங்களில் மால்கள் தான் பிரசித்தம் என்பதால் அதன் வரைப்படத்தையும் மனதில் வைத்து பட்டியலை தயாரித்துக்கொள்ளலாம்.

5. சமையலில் தினமும் என்ன குழம்பு அல்லது கறிகாய் வைப்பது என்ற குழப்பத்திலேயே இல்லத்தரசிகள் நேரத்தை வீணடிப்பார்கள். என் வீட்டிலும் அப்படித்தான். ஆனால் நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றதிலிருந்து அதற்கும் ஒரு அட்டவணை வைத்திருக்கிறேன். கடந்த பத்து வருடங்களாகவே அதாவது 2010லிருந்து வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்குவது என் வேலைதான். ஆகவே எந்த நாள் எந்த சமையல் என்பதையும் நானே தீர்மானித்துவிடுவேன். ஏழு நாட்களுக்கு ஏழு குழம்பு அதற்கு தேவையான கறிகாய் எல்லாம் அந்த அட்டவணைப்படிதான். அதிலேயே தினமும் பல மணித்துளிகள் மிச்சமாவதை உணர முடிகிறது. 

7. வெளியில் எங்காவது புறப்பட வேண்டுமென்றால் நான் மனதில் வைத்திருக்கும் நேரத்திலிருந்து குறைந்தது அரை மணி நேரம் முன்பாகவே புறப்பட வேண்டும் என்று வீட்டிலுள்ளவர்களிடம் கூறிவிடுவேன். புறப்படும் நேரத்தில் ஏற்படும் டென்ஷனை இது பல மடங்கு குறைத்துவிடுவதுண்டு. 

8.எல்லாவற்றிற்கும் நேரம் என்று ஒன்று உண்டு என்பார்கள் நம் முன்னோர்கள். எதை எதை எப்போது செய்ய வேண்டுமோ அதை அப்போதே செய்து முடித்துவிட்டால் நேரத்திற்கு நேரமும் மிச்சம் தேவையில்லாத படபடப்பும் தேவைப் படாது என்பார்கள். அதை வேத வாக்காக எடுத்துக்கொள்வதும் நேரத்தை மிச்சப்படுத்தும். 

9. முடியாது என்ற வார்த்தையை தயங்காமல் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.  எல்லாவற்றிற்கும் சரி சரி என்று சொல்ல ஆரம்பித்தால் எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க முடியாது.

10. நம்முடைய செல்பேசியிலுள்ள ‘நாட்க்காட்டி (Calendar) செயலி’யை பயன்படுத்தி ஒரு மாதம் முழுவதும் எந்தெந்த தேதியில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் குறித்துக்கொண்டு அலாரமும் வைத்துவிட்டால் நேரம் வெகுவாக மிச்சப்படும், மறந்தும் போகாது. குறிப்பாக மின்கட்டணம், கடன் அட்டை பணம் செலுத்துதல் என்பன போன்ற முக்கியமான விவரங்களை அந்தந்த நாட்களில் குறித்து வைத்துக்கொண்டாலும்  தாமதக்கட்டணம் செலுத்துவதையும் தவிர்க்க முடியும். 

இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம். 

ஒரு பதிவை எழுத துவங்கும்போதே இதைத்தான் எழுத வேண்டும் என்று நாம் மனதில் குறித்துக்கொள்வதில்லையா? அதே போன்று அனைத்தையும் திட்டமிட்டு செயல்படுத்தினால் நேரம் மிச்சம்தான்.

ஒரு நாளைக்கு இருபத்தி நாலு மணி நேரம் போறமாட்டேங்குது என்பவர்களில் பெரும்பாலானோர் இவ்வாறு திட்டமிடாமல் செயல்படுபவர்களே என்பது என் கருத்து. என் அனுபவமும் அதுதான். 

**********

13 டிசம்பர் 2019

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்!

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.....

வாழ்க்கை  என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும் 

இதுதான் வாழ்க்கை. இதை ஏற்ருக்கொண்டால் நிம்மதி பிறக்கும். என்கின்றன இந்த திரைப்படப் பாடல் வரிகள்.

ஆனால் இது  தோல்வியை, இழப்பை ஏற்றுக்கொள் அதற்காக வருந்தாதே என்று நம்மை நாமே திருப்திப் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவது போலல்லவா உள்ளது?

அதையே இப்படி பாடிப் பார்த்தால்..

உனக்கும் மேலே உள்ளவர் கோடி 
உழைத்து உழைத்து  முன்னே செல்லு

என்றும் 

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் சாதனை இருக்கும்

ஆம்!

சாதிக்க வேண்டும் என்று நினைத்து முன்னே செல்வதுதான் இன்றைய தேவை.

நம்மால் முடிந்தால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை என்பதை என்னுடைய மேலாளர் வாழ்க்கையில்  ஒன்றும் இல்லாமையிலிருந்து தங்களுடைய அசுர உழைப்பால் மிக உன்னத நிலையை அடைந்த பல வாடிக்கையாளர்களை கண்டிருக்கிறேன். 

நான் முதல் முதலாக சென்னை கிளை ஒன்றில் மேலாளராக அமர்த்தப்பட்ட சமயம்.

சென்னை அமைந்தகரையில் 20க்கு 20 அடி பரப்பளவு மட்டுமே  இருந்த ஒரு சிறைய கடையில் ஐந்தாறு இரும்பு கட்டில்கள், மேசை மற்றும் கூரை மின் விசிறிகள், மடக்கும் இரும்பு நாற்காலிகள் என சுமார் பத்து பதினைந்து பொருட்களை மட்டுமே இருப்பு வைத்துக்கொண்டு தவணை முறையில் அவற்றை விற்பனை செய்து வந்த ஒருவரை என்னுடைய கிளை அருகில் அதே மாதிரியான ஆனால் சற்றே பெரிய அளவில் வணிகம் செய்துக்கொண்டிருந்த ஒரு வாடிக்கையாளர் அறிமுகப்படுத்தினார். எங்களுடைய வங்கியில் அ[போது வணிக கணக்கு (current account) துவங்க குறைந்தபட்சமாக ரூ. 500/- செலுத்தப்படுவதுடன் அதை இருப்பிலும் வைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த தொகை கூட அவரிடம் இருக்கவில்லை. ஆகவே முதலில் நீங்கள் உங்களுடைய பெயரில் சேமிப்பு கணக்கு துவங்குங்கள்.... வணிகம் சற்று பெருகியதும் வணிகக் கணக்கு துவங்கலாம் என்று அறிவுரை கூறி ரூ.100 மட்டும் செலுத்தி கணக்கு துவக்க வைத்தேன்.

அத்துடன் நில்லாமல் அடுத்த சில மாதங்களில் அப்போது பிரபலமாக இருந்த சிறு வணிகக் கடன் திட்டத்தில் (Small Loan Scheme) ரூ.10000/- ஓவர்டிராஃப்ட்டும் வழங்கினேன். அதற்கு ஈடாக அடகு வைக்கக் கூட அவரிடம் ஒன்றும் இருக்கவில்லை. அவரை அறிமுகப்படுத்தியவருக்கு அவருக்கு ஜாமீன் வழங்கவும் அவ்வளவாக விருப்பமில்லை. ஆனாலும் வேறொரு வாடிக்கையாளருடைய தனிநபர் ஜாமீன் இல்லாமல் கடன் கொடுக்கவும் வழியில்லை. ஆகவே அவரை நானே சமாதானப்படுத்தி ஜாமீன் வழங்க வைத்து கடனை வழங்கினேன்.

அவர் மீது நான் வைத்திருந்த நம்பிக்கை வீண் போகவில்லை. அவருடைய தன்னம்பிக்கையும் அயரா உழைப்பும் நான் அங்கிருந்த மாற்றலாகிப்போகும் சமயத்தில் அதாவது சுமார் இரண்டு ஆண்டு காலத்தில் அவருடைய ஒவர்டிர்ஃப்ட் லிமிட் ஒரு லட்சமாகவும் அவருடைய வருட வணிகம் சுமார் பத்து லட்சமாகவும் வளர்ந்திருந்தது. 

நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது  அந்த கிளையின் மிகப் பெரிய வாடிக்கையாளராக உயர்ந்துள்ளார் என்று கேள்விப்பட்டபோது வியந்துபோனேன். இப்போதும் அதே பகுதியில்தான் அவருடைய கடை உள்ளது சுமார் நாற்பதாயிரம் சதுர அடி பரப்பில்.... அதே சாலையில் அவருடைய இரு இளைய சகோதரர்களும் அதே மாதிரியான கடைகளை நடத்தி வருகின்றனர்.

ஆயினும் அதே எளிமையுடன் அவர் இருப்பதை பார்க்கும்போது எவ்வித பின்புலனும் இல்லாமல் தனி ஒருவர் நினைத்தால் தன்னுடைய அயரா உழைப்பால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்பதை  உணர்ந்தேன்.

அதே போல் தூத்துக்குடியில் நான் மேலாளராக பொறுப்பேற்றபோது  மீன் ஏற்றுமதியாளர்களுக்கு ஐஸ் கட்டிகளை சிறிய அளவில் விற்பனை செய்துக்கொண்டிருந்த ஒருவரை சந்திக்க நேரந்தது. தூத்துக்குடியில் பிரதான தொழில் மீன்பிடி தொழில். அங்கு கிடைக்கும் சிங்க இறால்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அவற்றை டண் கணக்கில் கொள்முதல் செய்து மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கென்றே கேரள மாநிலத்தைச் சார்ந்த பலர் அங்கு தொழிற்சாலைகளை நடத்தி வந்தனர். இவர்களுக்கு ஐஸ் கட்டிகளை வழங்குவதற்கென்றே பல சிறிய நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வந்தன. வருடத்தில் எட்டு மாதங்கள் சீசன் படு ஜோராக நடக்கும். 

என்னுடைய வாடிக்கையாளர் மிகவும் நலிந்த குடும்பத்திலிருந்து வந்தவர். வேறொரு நிறுவனத்தில் தினக்கூலிக்கு ஐஸ் வெட்டும் பணியில் இருந்தவர். அவருக்கும் இதே போன்று ஒரு தொழிலை சொந்தமாக துவங்கி தொழில் செய்ய வேண்டும் என்ற ஆவல். நான் செல்லும் தேவாலயத்துக்குத்தான் அவரும் வருவார். அப்போது தூத்துக்குடியில் சிறப்பாக செயல்பட்டு வந்த பல்நோக்கு சேவை மையத்திலிருந்த மேலாளர் இவரை பரிந்துரைத்ததால் அரசு செயல்படுத்தி வந்த திட்டத்தின் கீழ் ரூ.பத்தாயிரம் கடனாக கொடுத்தேன். அந்த திட்டத்தில் அரசு சார்பில் இருபத்தைந்து விழுக்காடு மானியமாக வழங்கப்பட்டது. 

நான் கடன் வழங்கியது 1985ம் வருடம். இன்று தூத்துக்குடியிலேயே பெரிய ஐஸ் கட்டி தொழிற்சாலை அவருடையதுதான். தனி ஆளாக தன்னுடைய உழைப்பால் மட்டுமே உயர்ந்த மனிதர் அவர்!

இதுபோல் சென்னை ராயப்பேட்டையில், புரசை வாக்கத்தில் மும்பை செம்பூரில் என என்னுடைய பல கிளைகளில் மிக நலிந்த பின்னணியிலிருந்து வந்த பல வாடிக்கையாளர்கள் சுமார் இருபது ஆண்டு கால இடைவெளியில் நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து நிற்பதை பார்த்தபோது..

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் சாதனை இருக்கும்

என்கிற வரிகள் எத்தனை உண்மையானது என்பது புலப்பட்டது...

உழைப்பு, உழைப்பு, உழைப்பு இது மட்டுமே போதும்.... சரியான நேரத்தில் தேவைப்படும் மூலதனமும் கிடைத்துவிட்டால் வணிகத்தில் எட்டிவிட முடியாததே இல்லை எனலாம். 

***********



10 டிசம்பர் 2019

'எங்கள் ப்ளாக்' தளத்தில் என் கதை

என்னுடைய சிறுகதை 'கூடா நட்பு ' நண்பர் ஸ்ரீராமின் '' எங்கள் ப்ளாகில்வெளியாகி உள்ளது.

வாசித்து அங்கே உங்களுடைய கருத்துரைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

05 டிசம்பர் 2019

எனது நான்காவது கிண்டில் புத்தகம்

இது என்னுடைய நான்காவது கிண்டில் புத்தகம்.

இது இன்று முதல் கிண்டில் ஆன்லைன் ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும்.

இதில் இரண்டு சிறுகதைகள் உள்ளன. இவை சுமார் 7 வருடங்களுக்கு முன்பாக எழுதப்பட்டதால் இதை பலரும் படித்திருக்க வாய்ப்பில்லை.

ஆகவே இதை தரவிறக்கம் செய்து படிப்பவர்கள் இதை பற்றிய தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நட்புடன்
டி பி ஆர

சுட்டி:

https://www.amazon.in/dp/B0827JZSP1/ref=cm_sw_r_cp_apa_i_Bem6Db5T0DV15

மனம் ஒரு குதிரை

மனம் ஒரு குரங்கு 
மனித மனம் ஒரு குரங்கு 
அதைத்தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் 
நம்மைப்பாவத்தில் ஏற்றி விடும் 
அது பாசத்தில் தள்ளி விடும்
மனம் ஒரு குரங்கு 
மனித மனம் ஒரு குரங்கு"

அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது
அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது
அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது
அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது
நயத்தாலும் பயத்தாலும் அடங்கி விடாது
நமக்குள்ளே இருந்து கொண்டு நன்மை தராது

இதே பெயரில் வந்த பழைய தமிழ்படத்தில் வந்த பாடல் வரிகள்.

ஆனால் உண்மையில் பார்க்கப் போனால் மனம் ஒரு குரங்கு என்பதை விட ’ஒரு குதிரை’ என்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

மனதை  கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவில்லை யென்றால் நம்மை பாதாளத்திலும் தள்ளிவிடும்!

இந்த வரிகள் நிச்சயம் குரங்குக்கு பொருந்தாது. 

அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது.

எந்த குரங்க போயி அடிக்கப் போறோம், இல்ல அணைக்கப் போறோம்? அடிச்சாலும் கடிக்கும், அணைத்தாலும் பிராண்டும். 

குதிரைதான் கட்டுப்பாட்டில் வைத்திராவிட்டால் பாதாளத்தில் அதாவது பள்ளத்தில் தள்ளிவிடும்.

ஆகவே மனம் ஒரு குதிரை என்பதுதான் சரியாக இருக்கும்.

மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதில் பலனில்லை. அதை கட்டவிழ்த்து பறக்க விட வேண்டும். அப்படி பறக்கவிட்டால் அது நம்மை பாவத்திலோ அல்லது பள்ளத்திலோ  தள்ளிவிடும் என்பதில் அர்த்தமில்லை.

பள்ளத்தில் விழுந்துவிடுவோம் என்று நினைத்தால் குதிரை சவாரி செய்வதில் கிடைக்கும் இன்பம் கிடைக்காமலே போய்விடுமே. அந்த இன்பம் அதில் சவாரி செய்தவர்களுக்குத்தான் தெரியும். அது ஒரு அலாதியான இன்பம். 

முதல் முதலாக இரு சக்கர வாகனம் ஒன்றில் பயணிக்கும்போது அனுபவித்த மகிழ்ச்சிக்கு ஒப்பானது என்றால் மிகையல்ல.

சைக்கிள் ஓட்டி பழகும்போது நாலு தடவ கீழ விழுந்து எழுந்து படிச்சாத்தாண்டா அதுல ஒரு த்ரில்லே இருக்கும் என்றான் எனக்கு பயிற்றுவித்த நண்பன். 

இது குதிரை சவாரிக்கும் பொருந்தும். 

ஒரு குதிரையை கட்டுக்குள் கொண்டுவருவது எத்தனை கடினமோ அதை விட கடினம் மனதை கட்டுக்குள் கொண்டு வருவது.

அதே சமயம் அதை கட்டுக்குள் கொண்டு வந்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை. 

அது அவரவர் மனநிலையைப் பொருத்தது.

நம் மனதில் உள்ளவற்றை அசைபோட்டு பார்ப்பதே ஒரு அலாதியான இன்பம்தான். 

இன்றைய தினம் நடந்துக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்வை சார்ந்தே பல கடந்த கால நினைவுகள் வந்து போவதை நான் உணர்ந்திருக்கிறேன்...

நான் குடியிருக்கும் வீட்டின் எதிர் வீட்டில் வசிக்கும் ஒரு ஏழு வயது சிறுவன் முதல் முறையாக தன் தந்தையின் உதவியுடன் சைக்கிள் ஓட்டிப் பழகுவதை கண்டபோது நான் இளம் வயதில் அதை பழகியதும் நினைவுக்கு வந்தது அதை என் இரு மகள்களுக்கும் பயிற்றுவித்ததும் நினைவுக்கு வந்தது.

மூச்சு வாங்க என் சைக்கிள் பின்னால் ஓடி வந்த என் நண்பனின் நினைவும் வந்தது... நான் அதே போல் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க என் மகளின் ஸ்கூட்டர் பின்னால் ஓடிய நினைவும் வந்தது...

இன்றைக்கு இணையதளத்தில் ‘தேடல்’ மென்பொருள்கள் பலவும் இந்த அடிப்படையில்தான் செயல்படுகின்றன போலும். ஒரு விஷயத்தை அடிப்படையாக எடுத்துக்கொண்டு அது சார்ந்த பல விஷயங்களை பின்னோக்கி சென்று தேடுவதை பார்த்தால் நம் மனதும் இதைப் போன்றுதானே செயல்படுகிறது என்று எண்ண தோன்றும்.

யோகாசனம் பயிலும் போதும் தியானத்தில் ஈடுபடும்போதும் மனம் ஒரு நிலையில் நிற்காமல் அலைந்துக் கொண்டிருந்தால் அதை கட்டுப்படுத்தாதீர்கள் அதை அதன் வழியிலேயே அலையவிட்டு ஒருநிலைப் படுத்த முயலுங்கள் என்று பயிற்றுவிப்பார்கள். 

இந்த யுக்தியை நானும் பல சமயங்களில் கையாண்டிருக்கிறேன்.

தினமும் இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பு ஒரு பதினைந்து நிமிடம் கண்களை மூடி பிரார்த்தனை செய்வதுண்டு. ஆனால் அந்த பதினைந்து நிமிடமும் மனம் ஒரு நிலையில் நிற்காது அலைந்துக்கொண்டே இருக்கும். உதடுகள் பிரார்த்திக்கொண்டு இருந்தாலும் மனம் ஒரு தறிகெட்ட குதிரையைப் போல அலைந்துக்கொண்டிருக்கும். அதை நம் வயப்படுத்த முயன்றால் பிரார்த்தனை தடைப்பட்டு போகும்......

இதற்கு சாத்தான் காரணம் என்பார்கள் நம் முன்னோர்கள். நீ கடவுளை நினைச்சி பிரார்த்தனை செய்வது சாத்தானுக்கு பிடிக்காதாம். அதனாலதான் அது தன் சீடர்களை அனுப்பி உன் மனதை அலையவிடுகிறது என்பார் என் அம்மாச்சி (அம்மாவின் தாயார்). எனக்கும் அது பல சமயங்களில் உண்மையாக இருக்குமோ என்று தோன்றுவதுண்டு. 

மனம் அப்படிப்பட்டதுதான். சமயத்திற்கு ஏற்றாற்போல் மாறிக்கொள்ளும். 

திருடுவது, கையூட்டு பெறுவது, கற்பழிப்பது எல்லாமே தவறு என்று நம்மில் பலருக்கு தெரிகிறது. ஆனால் அதில் தினம் தினம் ஈடுபடுபவர்களுக்கு அது தெரிவதில்லையே ஏன்? 

அதற்கு அவர்களுடைய கெட்டுப் போன மனதுதான் காரணம். மனம் நம் அனைவருக்கும் பொதுவானதுதான் என்றாலும் அதை நாம் எவ்வாறு பழக்கிவிடுகிறோமோ அதைத்தான் அது மீண்டும் மீண்டும் செய்யும்.  

அதைத்தான் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள் போலும். 

************




01 டிசம்பர் 2019

கிண்டில் புத்தகம் இலவசமாய்



இது என்னுடைய மூன்றாவது கிண்டில் புத்தகம்.

இன்று முதல் நான்கு நாட்களுக்கு இலவசம்.

விரும்புபவர்கள் தரவிறக்கம் செய்து படிக்கவும்.  கிண்டில் கடையில் ‘குற்ற வழக்குகள்’  என்று தேடினால் கிடைக்கும்.

உங்கள் கருத்துக்களை முடிந்தால் கிண்டில் தளத்திலும் முடியாதவர்கள் இந்த தளத்திலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த வாரம் நான் இலவசம் என்று குறிப்பிட்ட இரண்டு புத்தகங்களையும் இதுவரை சுமார் ஐநூறு பேர் தரவிறக்கம் செய்துள்ளனர்.

சிலர் என்னுடைய மின்னஞ்சலில் பாராட்டுகளும் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நட்புடன்,
டிபிஆர்.