12 செப்டம்பர் 2019

பொதுத்துறை வங்கிகளின் இணைப்பின் பின்னணி என்ன?

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களால் அறிவிக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு திட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துமே மிகவும் நலிவடைந்த வங்கிகளாகும். 

நிரவ் மோடியுடன் கூட்டு சேர்ந்துக்கொண்டு வங்கி ஊழியர்கள் செய்துக்கொண்டிருந்த மோசடியை பல ஆண்டுகளாக கண்டுக்கொள்ளாமல் இருந்ததன் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளை இழந்த பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியன்டல் பேங் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளை இணைத்து இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியாக உருவாகப்போகிறது என்கிறார்கள்.  இந்த மூன்று வங்கிகளுடைய ஒட்டுமொத்த வைப்பு நிதி மற்றும் அவை வழங்கியுள்ள கடன் தொகைகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் இந்திய ஸ்டேட் வங்கிக்கு அடுத்த வங்கியாக உருவெடுக்கும் என்பது உண்மைதான். ஆனால் இவற்றின் ஒட்டுமொத்த வாராக்கடன்களின் அளவும் நாட்டிலேயே அதிகமானதாகத்தான் இருக்கும்.  இவை மூன்றுமே வட இந்தியாவில் அதிக கிளைகளைக் கொண்டுள்ள வங்கிகளாகும். இவற்றை இணைப்பதன் மூலம் ஒரே நகரத்தில் ஏன் ஒரே சாலையில் கூட பல கிளைகளைக் கொண்டுள்ள வங்கியாகவும் மாறும் சூழல். 

அடுத்து தென் இந்தியாவைச் சார்ந்த அதுவும் ஒரே மாநிலத்தில் தலைமையலுவலகத்தைக் கொண்டிருக்கும் கனரா மற்றும் சின்டிகேட் வங்கிகள். மேலே குறிப்பிட்ட வட இந்திய வங்கிகள் அளவுக்கு மோசமான நிலைமையில் இவ்வங்கிகள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் ஒரே மாநிலத்தைச் சார்ந்தவை என்பதால் பல கிளைகளை மூடவோ இடமாற்றம் செய்யவோ வேண்டியிருக்கும். 

மூன்றாவது வங்கி யூனியன் வங்கி, ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகளை இணைத்து உருவாக்கப்படவுள்ளது. இதில் மிகப்பெரிய அளவில் நிர்வாக சீர்திருத்தங்கள் செய்ய தேவையிருக்காது. ஆனால் இதுவரை சுமாராக இயங்கி  வரும் யூனியன் வங்கியின் நிதிநிலமை மற்ற இரு வங்கிகளின் வாராக் கடன் மற்றும் அவற்றின் மோசமான நிதிநிலையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இணைப்புக்குப் பிறகு யூனியன் வங்கி அதிகாரிகளின் கையே ஓங்கி நிற்கும். ஏனெனில் இதனுடன் ஒப்பிடுகையில் அனைத்து வகையிலும் மற்ற இரு வங்கிகளும் சிறியவை.

நான்காவது இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கிகளை இணைத்து உருவாக்கப்படவுள்ளது. ஒன்று மேற்கு வங்கத்தைச் சார்ந்தது. இன்னொன்று தமிழகத்தைச் சார்ந்தது.   ஆனால் அலகாபாத் வங்கியின் மிக அதிக அளவிலான வாராக்கடன்கள் இந்தியன் வங்கி ஈட்டக்கூடிய மொத்த லாபத்தையும் விழுங்கிவிடும் போலுள்ளது. 

இந்த பத்து வங்கிகளை இணைத்து வர்த்தக அளவில் நான்கு பெரிய வங்கிகளாக உருவாக்குவதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் நடவடிக்கைகளில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஏனெனில் இந்திய வங்கித்துறையின் செயல்பாடுகளில் குறைகளாக உலக வங்கி குறிப்பிட்டுள்ள அனைத்தும்  இணைப்புக்குப் பிறகும் தொடரத்தானே போகிறது.

1. வங்கி செயல்பாடுகளில் ஆட்சியாளர்களின் தலையீடு.  இது என்றும் தொடரும் தொடர்கதையாகத்தான் இருக்கும்.

2. வாடிக்கையாளர்களின் கடன் தேவைகளை சரியாக கணிக்கும் திறன் இந்திய வங்கிகளிடம் இல்லை . இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளான வங்கி அதிகாரிகள்தானே இணைப்புக்குப் பிறகும் இந்த வங்கிகளை வழிநடத்தப் போகிறார்கள்? அப்படியானால் அவர்களுடைய கணிக்கும் திறனில் முன்னேற்றம் ஏற்படவா போகிறது? வங்கிகள் பெரிதானால் அவர்களுடைய கடன் வழங்கும் திறன் பெருகும் வங்கிகளும் வலுவடையும் என்கிறார் நம்முடைய நிதியமைச்சர். 

நூறு ரூபாயை வைத்துக்கொண்டு இலாபம் ஈட்ட தெரியாதவனிடம் ஆயிரம் ரூபாயை கொடுத்தால் சரியாகிவிடும் என்பதுபோல் இருக்கிறது. மேலும்  கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வாணம் ஏறி வைகுண்டம் போறானாம் என்பார்களே அதுபோல் உள்ளது நிதியமைச்சரின் இந்த கணிப்பு.

ஆக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ள இரண்டு குறைபாடுகளுமே வங்கிகளின் இணைப்புக்குப் பிறகும் தொடரத்தான் போகின்றது.

வங்கிகளின் இணைப்புக்கு இது ஒரு காரணமாக நிதியமைச்சர் கூறினாலும் உண்மையான காரணம் அதுவல்ல என்று நினைக்கிறேன். இணைக்கப்படவுள்ள வங்கிகளுடைய சமீபத்திய நிதிநிலை அறிக்கைகளை ஆய்வு செய்ததில் நான் கண்டது இதுதான். இவை வழங்கிய மொத்த கடன்களில் யாருக்கு அதிக அளவில் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை கீழேயுள்ள படத்தை  பார்த்தாலே புரிந்துவிடும்.



சமீபத்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையின் படி வங்கிகளிலுள்ள மொத்த வாராக்கடன்களில் கார்ப்பரேட் குறிப்பாக சேவைத் துறை மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட கடன்கள்தான் அதிகம் அதாவது 75 விழுக்காடு! இதையும் வங்கிகளின் மொத்தக் கடன் தொகையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது சுமார் 50 விழுக்காடு என்ற உண்மையையும் ஒப்பிட்டு பார்க்கும்போது இன்றை பொதுத்துறை வங்கிகளின் அவல நிலைக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் காரணம் என்பது தெளிவாக புரிகிறது.

சிறு சிறு வங்கிகளாக செயல்பட்டுக்கொண்டிருக்கும்போதே விவசாயத்துக்கும் சிறு குறு தொழில்களுக்கும் 20 விழுக்காட்டுக்கும் குறைவாக கடன் வழங்கி வரும் இந்த வங்கிகள் இணைக்கப்பட்டு பெரும் வங்கிகளானால் யாருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் எனறு நினைக்கிறீர்கள்? அது நிச்சயம் விவசாயம், சிறு குறு தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களாக இருக்க வாய்ப்பேயில்லை. இதே நிலைதான் தனிநபர் கடன்களுக்கும் ஏற்படும். 

தற்போது வங்கிகளுடைய முதலீட்டு தொகையில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு வரையில் மட்டுமே கடன் வழங்க முடியும் என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதன் படி பார்த்தால் தனித்தனியாக குறைந்த அளவு முதலீட்டுடன் இயங்கி வரும் இந்த வங்கிகளால் பெரிய அளவில் கடன் தேவைப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் பல சிக்கல்கள் உள்ளன. ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஐந்தாயிரம் கோடி கடன் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.  இப்போதுள்ள சூழலில் அத்தனை பெரிய கடனை தனியாக வழங்க பெரும்பான்மையான வங்கிகளால் முடியாது. அந்த சூழலில் கார்ப்பரேட் நிறுவனம் பிரதான கணக்கு வைத்திருக்கும் வங்கி பிற வங்கிகளுடன் இணைந்து கூட்டாக அந்த கடனை வழங்க ஒரு அமைப்பை (consortium) ஏற்படுத்தும். மொத்த கடன் தொகையை தங்களுடைய தகுதிக் கேற்ப பிரித்துக் கொள்ளும். இதனால் கடன் வழங்குவதிலும் அதன் பிறகு கடனை நிர்வகிப்பதிலும் வசூலிப்பதிலும் இந்த வங்கிகள் அனைத்தும் கூட்டாக மட்டுமே எந்த முடிவையும் எடுக்க முடியும். இது கடன் வழங்கும் வங்கிகளுக்கும் கடன் பெறும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் பல சிக்கல்களை ஏற்படுத்தும்  தனித்தனியாக இயங்கிவரும் சிறிய வங்கிகளை இணைப்பதன் மூலம் இந்த சிக்கல்களை முழுமையாக தவிர்க்க முடியும் என்பதாலும் இந்த வங்கி இணைப்பு நாடகம் அரங்கேற்றப்படுகிறது. இதனால் வங்கிகளின் வர்த்தகம் வேண்டுமானால் படு வேகமாக வளரும். ஆனால் அந்த வர்த்தகம் வலுவானதாக பாதுகாப்பானதாக இருக்குமா என்பதுதான் கேள்வி. இதையே தான் பாதிக்கப்படவுள்ள வங்கிகளின் வங்கி ஊழியர் சங்கங்களும் கூறுகின்றன. 

மேலும் வளர்ந்துவிட்ட வங்கி முன்பு போல் விவசாயம், சிறு குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் கடன்களை வழங்குவதில் அக்கறை காட்டுமா என்பதும் கேள்விக்குறி.

மத்தியில் ஆளும் பாஜகவின் தேவையும் இதுவாக இருக்கலாம். ஏனெனில்  கடந்த தேர்தலுக்கு முன்னால் கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடையில் சுமார் 90 விழுக்காட்டுக்கும் மேல் பாஜகவுக்குத்தான் வழங்கப்பட்டது என்பதை பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டதை கண்டிருப்பீர்கள். ஆகவே அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதை ஆட்சியாளர்கள் விரும்புவார்கள். 

இதுதான் இந்த இணைப்பின் பின்னால் இருக்கும் உண்மையான காரணமாக இருக்கக் கூடும்.

இதனால் அதிகம் பாதிக்கப்பட போகிறவர்கள் வங்கி ஊழியர்கள். பத்து வங்கிகளை இணைத்து அதுவும் நாட்டின் ஒரே பகுதியில் இயங்கி வரும் வங்கிகள் இணைக்கப்படும்போது நிச்சயம் பல கிளைகள் ஒருங்கிணைக்கப்படுவதை தவிர்க்க வாய்ப்பே இல்லை. யாருக்கும் பணியிழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று நிதியமைச்சர் கூறினாலும் பணியிழப்பு ஏதாவது ஒரு வகையில். அது கட்டாய அல்லது விருப்ப ஓய்வாக இருக்கலாம், அல்லது மறைமுக பணியிழப்பு அதாவது வலுக்கட்டாயமாக பணியிட மாற்றம் செய்யப்படும் சூழலில் ஊழியர்களே பணியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்படலாம். பணியிழப்பு எந்த ரூபத்தில் வந்தாலும் அது இழப்புத்தானே?

சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விவாதத்தில் வங்கிகள் இணைப்பு வங்கி ஊழியர்களுக்கு வேண்டுமானால் சிக்கலை ஏற்படுத்தலாம் ஆனால் மொதுமக்களுக்கு அது நல்ல பலனையே தரும் என்று பாஜக பேச்சாளர் கூறினார். இதுதான் அந்த கட்சி தலைமையின் நிலைப்பாடாக இருக்கலாம். 

ஆனால் எந்த ஒரு நிறுவனமும் நல்ல நிலையில் இயங்க வேண்டுமென்றால் முதலில் அதில் பணியாற்றும் ஊழியர்களுடைய நலனில் நிர்வாகம் அக்கறை காட்டவேண்டியது அவசியம், மன நிறைவு இல்லாமல் பணியாற்றும் ஊழியர்களால் பணியாற்றும் நிறுவனத்திற்கும் எந்த பலனும் கிடைக்காது அதனுடைய வாடிக்கையாளர்களுக்கும் சரியான சேவையை வழங்க முடியாது. நாட்டின் மிகப் பெரிய சேவை (srvices) நிறுவனங்களான பொதுத்துறை வங்கிகளின் எஜமானர்களான இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் இதை மறந்துவிடக் கூடாது.

இன்று இருக்கும் ஆட்சியாளர்கள் நாளை இருப்பதில்லை. அதில் பாஜகவும் விதிவிலக்கல்ல. சிறையில் தள்ளுபவர்களே பிற்காலத்தில் சிறைக்கு செல்ல நேரிடுவதை கண்கூடாக காண்கிறோம்.

இதை உணர்ந்து இணைக்கப்படும் வங்கிகளை இணைப்புக்குப் பிறகு நிர்வாக பொறுப்பில் அமர்த்தப்படும் அதிகாரிகள் ஆட்சியாளர்களின் 

தலையீட்டுக்கு அஞ்சி வங்கிகளை பாதிக்கும் முடிவுகளை எடுக்கலாகாது. அது நாளை உங்களையே பாதிக்கலாம். நீங்கள் பாதிக்கப்படும்போது அதற்கு காரணமாயிருந்த அரசியல்வாதிகளோ, அரசு அதிகாரிகளோ உங்களை காப்பாற்ற வரப்போவதில்லை.

இணைக்கப்படவிருக்கும் வங்கிகளில் யூனியன் வங்கி, கனரா வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகிய மூன்றைத் தவிர மற்ற ஏழு வங்கிகளும் கடந்த சில ஆண்டுகளாகவே நஷ்டத்தில் இயங்கிவருகின்றன. இவை சேர்த்து வைத்துள்ள வாராக்கடன்களால் இதுவரை இலாபத்தில் இயங்கிவந்த மற்ற மூன்று வங்கிகள் ஈட்டுகின்ற இலாபத்தை இணைக்கப்படவுள்ள வங்கிகள் முழுவதுமாக கரைத்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனை.

*********

11 செப்டம்பர் 2019

பொதுத்துறை வங்கிகள் இணைப்பின் பின்னணி.

வாராக் கடன்கள் 

2001ம் ஆண்டு வரை ஒரு கடன் கணக்கில் பற்று வைக்கப்படும் வட்டித் தொகையானது அது வாடிக்கையாளரால் திருப்பி செலுத்தப்பட்டாலும் நிலுவையில் இருந்தாலும் அது வங்கியின் வருமானமாக கருதப்பட்டது. இதன் விளைவாக வங்கிகள் தங்களுடைய ஆண்டு நிதிநிலை அறிக்கைகளில் காட்டி வந்த இலாப தொகைகள் உண்மையிலேயே ஈட்டப்பட்டதுதானா என்கிற ஐயம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட துவங்கியது. மேலும் பற்று வைக்கப்பட்ட வட்டித் தொகைகளை வசூலிப்பதில் வங்கிகள் போதிய அக்கறை காட்டுவதில்லை என்பதையும் இந்திய ரிசர்வ் வங்கி தங்களுடைய தணிக்கைகளில் கண்டுபிடித்தது.

இந்த குறையை போக்கும் நோக்கத்துடன் 31.3.2001ல் ஒரு சுற்றறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு அனுப்பியது. அதில்  வட்டி, அல்லது தவணைத் தொகை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு செலுத்தப்படாமல் இருந்தால் அந்த கணக்குகள் குறையுள்ள கணக்குகளாக I(Substandard)கருதப்பட வேண்டும் என்றும் அத்தகைய கணக்குகளில் பற்று வைக்கப்பட்ட வட்டி தொகைகள் வங்கியின் இலாப கணக்கில் வருவாயாக எடுத்துக்கொள்ளப்படக் கூடாது என்றும் வங்கிகள் அறிவுறுத்தப்பட்டன.

இந்த அதிரடி உத்தரவால் நாட்டில் பல வங்கிகள் குறிப்பாக பொதுத்துறை வங்கிகளுடைய உண்மையான நிதி நிலை வெட்ட வெளிச்சமானது. இதுவரை இலாபத்தில் இயங்கிவந்த  பல வங்கிகள் நஷ்ட கணக்கு காட்ட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டன. 

மேலும் இத்தகைய கணக்குகள் வாராக் கடனாக கருதப்பட்டு அவற்றில் நிலுவையிலுள்ள தொகைகளில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு தொகையை ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் தங்களுடைய இலாபத்தில் இருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வங்கிகள் அறிவுறுத்தப்படவே வங்கிகளின் நிதிநிலமை இன்னும் மோசமானது. பெரும்பாலான பொதுத்துறை  வங்கிகள் பெருத்த இழப்பை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் அவற்றின் முதலீடும் (capital) பெருமளவு சரியத் துவங்கியது.  வாராக் கடன்களின் அளவோ  2001 ஆண்டு இருந்த அளவிலிருந்து வளர்ந்து வளர்ந்து இப்போது ஒரு பூதாகரமான நிலையை அடைந்துள்ளதை கீழ்காணும் படத்தில் காணலாம்.  இத்தகைய கடன்களில் சுமார் 90 விழுக்காடு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் என்கிறது ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கை.


(1 trillion=1lakh crores)


அத்துடன் வங்கிகள் தங்களுடைய முதலீட்டில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு வரை மட்டுமே கடன் வழங்க முடியும் என்ற ரிசர்வ் வங்கியின் நிபந்தனையும் வங்கிகளின் கடன் வழங்கும் திறனை வெகுவாக பாதிக்க துவங்கியது. இதனை தொடர்ந்து வங்கிகளின் வருவாய் ஈட்டும் திறனும் சரியத் துவங்கியது. விளைவு? வங்கிகளின் நஷ்டம் நாளுக்கு நாள் பெருகி சில வங்கிகளின் முதலீடு முழுவதுமாக கரைந்து போயின. 

இந்த சூழலிலிருந்து பொதுத்துறை வங்கிகளை மீட்டெடுக்கத்தான் மத்திய அரசு அவ்வப்போது மத்திய நிதியிலிருந்து ஒரு கணிசமான தொகையை வங்கிகளுக்கு முதலீடாக வழங்கத்துவங்கியது. துவக்கத்தில் ஆயிரக்கணக்கான கோடிகள் என்ற நிலை இப்போது இலட்சம் கோடிகளாக உயர்ந்துள்ளது. அதாவது மக்கள் செலுத்தும் வரிப்பணம் இத்தகைய வங்கிகளுக்கு முதலீடாக சென்றடைகின்றன. இதன் விளைவாக வரியை நேர்மையுடன் செலுத்தும் மக்களுக்கு நேரிடையாக எவ்வித பலனும் கிடைப்பதில்லை. சமூக நலத்திட்டங்களுக்கு செலவழிக்கவோ அல்லது இயற்கை சீற்றத்தால் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய நிவாரணம் அளிக்கவோ அல்லது விவசாயக்கடன்களை ரத்து செய்யவோ போதிய நிதி இல்லை என்பதை காரணம் காட்டி புறக்கணிக்கும் மத்திய அரசு வங்கிகளின் முதலீட்டை கூட்டுவதற்கு லட்சோப லட்ச கணக்கில் வாரி இறைப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுவதில் என்ன தவறிருக்க முடியும்?

கடந்த நிதியாண்டில் பல பொதுத்துறை வங்கிகள் நஷ்ட நிலையிலிருந்து மீண்டு வந்துள்ளன என்று இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்தாலும் இது உண்மையான நிலை அல்ல என்று பல பத்திரிகைகளும் பொருளாதார நிபுணர்களும் எழுதி வருவதை காண முடிகிறது. வாராக்கடனாக ஏற்கனவே கணிக்கப்பட்ட கணக்குகளை மறுசீரமைப்பு (restructuring) என்ற பெயரில் மறுவாழ்வு அளித்து அவற்றை இன்னும் சில மாதங்களுக்கு அதாவது அடுத்த நிதியாண்டு வரையிலும் வங்கிகள் நீட்டித்து வருகின்றன என்பதுதான் உண்மை. ஆனால் இவற்றில் நிலுவையிலுள்ள வட்டியையோ அல்லது மாதத் தவணைகளையோ சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து உண்மையிலேயே வசூலிக்கப்படுகின்றனவா என்பது சந்தேகமே. வங்கிகள் கடன்களை கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து வசூலிப்பதை விட எழுதித் தள்ளுவதே அதிகம் என்பதை கீழுள்ள படத்தை பார்த்தாலே தெரியும்



இதுதான் இன்றை பொதுத்துறை வங்கிகளின் உண்மையான நிலமை.

ஜி20 நாடுகளில் இரண்டாவது மிகவும் மோசமான வங்கித் துறையைக் கொண்டிருப்பது இந்தியா என்கிறது உலக வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கை. பொதுத்துறை வங்கிகளின் இத்தகைய பரிதாபகரமான நிலைமைக்கு முக்கியமான காரணங்களாக உலக வங்கி முன்வைப்பது வங்கிகளின் கடன் கொள்கைகள்தானாம். அதாவது இந்திய வங்கிகளுக்கு வாடிக்கையாளரின் கடன் தேவைகளை சரியாக கணிக்கும் திறன் இல்லை என்றும் பெரும்பாலான வங்கி செயல்பாடுகளின் ஆட்சியாளர்களின் தலையீடு இருப்பதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டுகிறது. 

இது எனக்கு தெரிந்தவரை உண்மை தான். இன்று வங்கிகளில் உயர்பதவியில் அமர்ந்திருக்கும் பல அதிகாரிகள் ஆட்சியாளர்களின் தயவாலும் பரிந்துரையாலும் அந்த பதவியை அடைந்தவர்களே. ஆகவே ஆட்சியாளர்களின் தேவைகளை அவ்வப்போது நிறைவேற்றியே தீரவேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். இது இப்போதைய ஆட்சியாளர்களை மட்டும் குறை சொல்வதில் பயனில்லை. வங்கிகள் எப்போது நாட்டுடமை ஆக்கப்பட்டனவோ அப்போதிலிருந்தே மத்தியிலும் மாநிலங்களிலும் அதிகாரத்திலுள்ளவர்களின் தலையீடு இருந்து வந்ததை மறுப்பதற்கில்லை. 

இத்தகைய சூழலில் நலிவடைந்துள்ள பொதுத்துறை வங்கிகளை இணைப்பதன் மூலம் சரிவை சரிக்கட்டிவிட முடியும் என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்திருப்பது வியப்பளிக்கிறது. 

அதை நாளை பார்க்கலாம்.....

10 செப்டம்பர் 2019

வங்கிகள் இணைப்பின் பின்னணி என்ன?

1969 ஆம் ஆண்டு முதன் முறையாக நாட்டில் அப்போது இயங்கிவந்த  பதினான்கு பெரிய தனியார் வங்கிகள் (50 இலட்சத்திற்கும் அதிகமான வைப்பு நிதி (Deposit) கொண்டிருந்த) வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இதன் பின்னால் அரசியல்தான் இருந்ததே தவிர நாட்டின் பொருளாதாரம் உயர்வடைய வேண்டும் என்றோ அல்லது ஏழை எளிய மக்கள் எளிதாக கடன் பெற வேண்டும் என்ற எண்ணமோ இருப்பதாக தெரியவில்லை என அப்போதே பல எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதன் பிறகு பதினோரு ஆண்டுகள் கழித்து மேலும் ஆறு (அதாவது ரூ.200 இலட்சம் வைப்பு நிதி கொண்டிருந்த)வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. 

தேசியமயமாக்கப்பட்டபோது அரசால் முன்வைக்கப்பட்ட காரணங்களுள் மிக முக்கியமானது என்னவென்றால் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மக்களும் எளிதில் கடன் பெற முடிவதுடன்  வங்கி சேவைகள் நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்றடையும் என்பது. 

இந்த இரு நோக்கங்களும் பெரும்பாலும் நிறைவேறியுள்ளன என்பதை மறுக்க முடியாது.:

1. தேசியமயமாக்கப்பட்டதிலிருந்து அதாவது கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாட்டிலுள்ள மொத்த வங்கி கிளைகளின் எண்ணிக்கை சுமார் 8,500லிருந்து 1.45,000 ஆக உயர்ந்துள்ளது. இவற்றுள் சுமார் 90% கிளைகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் என்றால் மிகையல்ல.



2. சுமார் 65000 வாடிக்கையாளர்களுக்கு ஒரு வங்கி கிளை என்ற 1969ம் வருட நிலையிலிருந்து சுமார் 14,000 வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிளை என்ற அளவுக்கு வங்கிகள் நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ளன. இவற்றுள் ஐம்பது விழுக்காடு கிளைகள் கிராம மற்றும் சிறிய நகர்ப்புறங்கிளில் செயல்படுகின்றன. 

3.1969ம் ஆண்டு வரை வசதிபடைத்தவர்களுக்கு மட்டும் வங்கிக் கடன் என்ற நிலை மாறி விவசாயம், சிறு, குறு தொழில்கள், சில்லறை வணிகம் என  நாட்டில் யார் வேண்டுமானாலும் வங்கிகளை அணுகி மிகுந்த சிரமம் இல்லாமல் கடன் பெற முடியும் என்ற நிலை உருவானது.

4. வங்கிகளில் கணக்கு துவங்கும் பழக்கமும் மிகப் பெரிய அளவில் பெருகிவருவதையும் பார்க்க முடிகிறது. கடந்த ஐம்பதாண்டுகளில்  வங்கி சேமிப்பு (DEPOSIT) தொகை ரூ.1,24,000 billion (1 Billion=100 crores) என்ற எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இத்தொகையில் நீண்ட கால வைப்புத்தொகை (fixed deposits) ஐம்பது விழுக்காட்டிலிருந்து சுமார் தொன்னூறு விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. இது நாட்டிலுள்ள வங்கிகள் மீது குறிப்பாக பொது வங்கிகள் மீது மக்கள் வைத்திருக்கும் அபிரிமிதமான நம்பிக்கையை காட்டுகிறது எனலாம். 

5. இதே போன்று வங்கிகள் கடனாக வழங்கும் தொகையும்  ரூ.1,05,000 billion அளவுக்கு  உயர்ந்துள்ளது.




சுருக்கமாக கூற வேண்டுமென்றால் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு நாடு அடைந்த பொருளாதார வளர்ச்சிக்கு பொதுத்துறை வங்கிகள் பெருமளவு உதவிசெய்துள்ளன என்பது உண்மைதான். 

ஆனால் நாட்டுடமையாக்கப்படுவதற்கு முன்பு சிறிய அளவில் கட்டுப்பாடுடன் இயங்கிவந்த தனியார் வங்கிகளின் கிளைகள் கட்டுக்கடங்காத அளவுக்கு பெருகியதாலும் அதன் விளைவாக ஏற்பட்ட மிகப் பெரிய வணிக வளர்ச்சியாலும் நிர்வாக ரீதியாக பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழலுக்கு வங்கிகள் தள்ளப்பட்டன என்பதும் உண்மை. இன்று பொதுத்துறை வங்கிகளில் பல பெரும் நஷ்டத்தில் இயங்கிவருவதற்கு இத்தகைய அபிரிதமான வளர்ச்சியும் ஒரு முக்கியமான காரணமாக கருதப்படுகின்.றது.

மிகப் பெரிய அளவிலான விரிவாக்கம்  மிகப் பெரிய அளவிலான வைப்புத் தொகைகளையும் வங்கிகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து ஈட்டித் தந்தன. வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட வைப்பு தொகைகளுக்கு நியாயமான அளவிலான வட்டி அளிப்பதற்கு அவற்றை அதிக அளவில் கடனாக வழங்க வேண்டிய அவசியமும் வங்கிகளுக்கு உருவானது. இலட்ச கணக்கில் கடன் வழங்கி வந்த வங்கிகள் கோடிக் கணக்கில் வழங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டன. இது மேலும் மேலும் பலுகிப் பெருகி இன்று ஒரே நிறுவனத்திற்கு ஆயிரம், இரண்டாயிரம் கோடிகள் என கடன் வழங்கும் நிலையை நாட்டுடமையாக்கப்பட வங்கிகள் அடைந்துள்ளன. 

கோடிகள் ஆயிரக் கணக்கில் பெருகி இன்று இலட்சம் கோடி என்ற பெரும் தொகைகயை நாட்டிலுள்ள வெகு சில கார்ப்பரேட் நிறுவனங்களை மிகப் பெரிய வணிக மற்றும் தொழில் நிறுவனங்களாக இந்த வங்கிகள் உருவாக்கியுள்ளதை காணமுடிகிறது.

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மிகச் சிறிய நிறுவனங்களாக இருந்த நிறுவனங்கள் பல இன்று உலக நிறுவனங்களாக  (multi-national ompanies) உருமாறியுள்ளன என்றால் அதற்கு மிக முக்கியமான காரணம் வங்கிகள் வழங்கிய கடன்களே என்றால் மிகையாகாது.

வங்கிகளிடமிருந்து எளிதாக பெற்ற கடன் தொகைகளை பெரும்பாலான நிறுவனங்கள் சரியாக பயன்படுத்தாத காரணத்தாலும், உலகளவில் பொருளாதாரம் சரிவை சந்தித்தாலும் பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்க துவங்கின. இதன் விளைவாக வங்கிக் கடன்களை திருப்பித் தர முடியாத சூழல் ஏற்பட்டது.

இதன் விளைவாக வங்கிகள் வழங்கிய கடன்கள் வாராக் கடன்களாக உருமாற வங்கிகளின் வருமானம் சரியத் துவங்கியது...

நாளையும் தொடரும்

02 செப்டம்பர் 2019

சுருங்கி வரும் பதிவர் வட்டம்

சுமார் பதினைந்து ஆண்டுகளாக கோலோச்சு வந்த தமிழ் வலைப்பூக்களின் (Blogs) திரட்டியான ‘தமிழ்மணம்’ செயலிழந்து போனதை அடுத்து தமிழ் பதிவர் வட்டம் வெகுவாக சுருங்கி போய்விட்டது என்றால் மிகையாகாது.

தமிழ் பதிவுகளை அவை எழுதப்பட்ட ஒரு சில நொடிகளிலேயே திரட்டி அவற்றை அழகாக வரிசைப் படுத்தி வெளியிட்டு வந்த ‘தமிழ்மணம்’ நிதிபற்றாக் குறை காரணமாக (அப்படித்தான் தோன்றுகிறது) சடுதியாக செயலிழந்துபோனது நம் தமிழ் பதிவர் வட்டத்துக்கு பெருத்த ஏமாற்றமாக போய்விட்டது.

தமிழ்மணம் போன்ற திரட்டிகள் பலவும் இன்று செயலிழந்து போனதும் உண்மை. அகில இந்திய அளவில் மிகவும் பிரபலமாக இருந்த இண்டிப்ளாகும் (Indieblog) கூட இப்போது புதிய அங்கத்தினர்களை ஏற்பதில்லை. கடந்த காலங்களில் இணைக்கப்பட்ட பதிவர்களின் பதிவுகளை மட்டும் இப்போதும் திரட்டி வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.  ஆனால் அது ஆங்கில வலைப்பூக்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் திரட்டி என்பதால் அதில் இடம் பெறும் தமிழ் பதிவுகள் வெகு வெகு சொற்பம்தான். அவர்களிலும் பலர் அவ்வப்போதுதான் எழுதுகிறார்கள்.

திரட்டிகள் செயலிழந்து நிற்கும் இத்தகைய சூழலில் பதிவுர்கள் எழுதும் பதிவுகளை மற்ற சக பதிவர்களுக்கோ அல்லது பொது வாசகர்களுக்கோ எடுத்துச் செல்வது அத்தனை எளிதல்ல என்பதை இப்போதும் தொடர்ந்து எழுதி வரும் பதிவர்கள் அறிவார்கள்.

பெரும்பாலான பதிவர்கள் தங்களுடைய சக பதிவாள நண்பர்கள் நட்பு அடிப்படையிலேயே கூகுள் தேடுதலை பயன்படுத்தி தேடிப் பிடித்து வாசித்து வருகிறார்கள் என்பதை ப்ளாகர் வெளியிடும் தகவல்களில் (Statistics) இருந்து அறிந்துக்கொள்ள முடிகிறது.

என்னுடைய பதிவுகளை வாசிக்கும் மொத்த வாசகர்களில் சுமார் 95 விழுக்காடு வாசகர்கள் கூகுள் தேடல் வழியாகத்தான் தளத்திற்கு வருகிறார்கள் என்பது கீழ்காணும் திரையை பார்த்தாலே தெரியும்


இந்த படத்தில் மேல் பகுதியில் கூகுள் தேடலுக்கு கீழே ஃபீட்லி (feedly) என்ற தேடல் இருப்பதை காணலாம்.

அது உண்மையில் ‘தேடல்’ அல்ல ‘திரட்டி’. திரட்டி என்பதை விட ’வாசிப்பான்’(reader) என்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த வாசிப்பானின் பெயரை சில மாதங்களுக்கு முன்பு தற்செயலாகத்தான் என்னுடைய ப்ளாகர் ’Stat' பகுதியில் பார்த்தேன். உடனே இது என்னவாக இருக்கும் என்ற எண்ணத்துடன் கூகுள் தேடலில் ‘feedly' என்று தேடிப்பார்த்தபோது கிடைத்ததுதான் இந்த அற்புத கையடக்க 'app.'

இதை உடனே என்னுடைய செல்பேசியில் தரவிறக்கம் செய்து அதில் கூறியுள்ளபடி செய்து எனக்கு தெரிந்த சில பதிவர்களின் பதிவு விலாசங்களை சேர்த்தேன். அவற்றில் சமீபத்தில் எழுதப்பட்ட பதிவுகளின் விவரங்கள் அடுத்த சில நிமிடங்களிலேயே கிடைத்தன.



ஸ்மார்ட் செல்பேசி (ஆண்டிராய்ட் அல்லது ஆப்பிள் iOS) வைத்திருப்பவர்கள் இந்த செயலியை (app) கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம். 

ஸ்மார்ட் செல்பேசி இல்லாதவர்கள் கனிணியிலும் இந்த மென்பொருளை பயன்படுத்தலாம்.

இந்த தளத்தின் விலாசம்: www.feedly.com

இதில் நுழைந்தவுடன் நாம் காணும் login திரை இது::



இந்த தளத்திற்குள் நுழைய (login) தனியாக கணக்கு எதுவும் தேவையில்லை . நம்முடைய கூகுள் அல்லது முகநூல் கணக்கையே பயன்படுத்தலாம்.


இதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி உள்ளே நுழைந்ததும் நாம் காணும் திரை:



இதில் ’தேடல்’ பெட்டியில் நீங்கள் விரும்பும் தளத்தின் பெயரை டைப் செய்த உடனே அதனுடைய பெயர் பெட்டியின் கீழே காண்பிக்கப்படும். அதையும் க்ளிக் செய்யுங்கள்.


உடனே அந்த தளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகளை காட்டும்.



இந்த திரையில் ‘follow' பட்டனை க்ளிக் பண்ணிட்டு அதுக்குக் கீழே ‘new feed' ஐயும் க்ளிக் செய்யுங்கள்.


இந்த திரையில் உங்களுடைய ‘new feed' பெயரை ‘தமிழ்’ என்றே தெரிவு செய்யுங்கள். ஏனெனில் இந்த தளத்தில் உலகெங்கும் உள்ள பல ஆங்கில பதிவுகளும் படிக்க கிடைக்கின்றன. 

நாம் தெரிவு செய்யும் பதிவுகள் பெரும்பாலும் தமிழில் இருக்கும் என்பதால் அந்த தொகுப்பின் பெயர் தமிழ் என்று இருந்தால் அவை அனைத்தையும் இந்த தொகுப்பிலேயே சேமித்து வைத்தால் பிறகு படிப்பதற்கு எளிதாக இருக்கும். 

இவ்வாறு நீங்கள் படிக்க விரும்பும் அனைத்தும் தளங்களையும் அதாவது RSS FEED உள்ள் சுமார் 100 தளங்களை இந்த இலவச மென்பொருளில் (free version) சேமித்துக்கொள்ளலாம். நாம் சேமித்த தளங்களின் பட்டியல் திரையின் இடது பகுதியில் காண்பிக்கப்படும்.

இதில் சேமிக்கப்பட்டுள்ள தளங்களில் பதிவு செய்யப்படும் பதிவுகள் அவை பதியப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே இந்த செயலியில் தரவிறக்கம் செய்யப்படுவதை கண்டிருக்கிறேன். 

செல்பேசியில் என்றால் உடனே அழைப்பான் (notification) வரும். கனிணி என்றால் நாம் இந்த feedly.com தளத்தில் நுழைந்தவுடனேயே புதிதாக வந்துள்ள பதிவுகளின் பட்டியல் காட்டப்படும்.

நான் என்னுடைய செல்பேசியில் சேமித்து வைத்துள்ள பட்டியலிலுள்ள அனைத்து தளங்களின் நகல்களையும் என்னுடைய கனிணியிலும் காண முடிகிறது. இதற்கென்று மீண்டும் உள்நுழைய (login) தேவையில்லை. 

என்னுடைய செல்பேசியில் நான் சேமித்து வைத்துள்ள சுமார் பதினைந்து பதிவர்களின் தளங்களின் பட்டியலை மேலே வெளியிட்டுள்ளேன். இதில் இடம் பெறாத பதிவர்கள் தங்களுடைய தளத்தின் விலாசத்தையும் தாங்கள் பருந்துரைக்கும் பதிவர்களின் தளங்களுடைய விலாசங்களையும் இந்த பதிவின் கருத்துரையில் (comments) நானும் அவற்றை சேமித்துக்கொண்டு இனி வரும் காலங்களில் படிக்க உதவியாக இருக்கும். நன்றியுள்ளவனாகவும் இருப்பேன்.

**********