13 டிசம்பர் 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 35

அடுத்த நாள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து, அடகு வைக்கப்படும் சொத்து சம்பந்தப்பட்ட எல்லா பத்திரங்களின் சர்ட்டிஃபைட் நகல்களையும் சமர்ப்பித்தபோதுதான் நம்முடைய ஆள் கணக்குப்பிள்ளை எச்சரித்தது போல் எத்தனிலும் எத்தன் என்று எனக்கு விளங்கியது.

மேலே செல்லும் முன் ஒரு விஷயம்!

நேற்று நான் அடகு வைக்கப்படவிருக்கும் வீட்டைக் காண சென்றிருந்தபோது என்னுடன் வந்திருந்த கணக்குப்பிள்ளை மற்றும் பொறியாளரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு என் அலுவலகத்துக்கு திரும்புவதுபோல் கிளம்பிச் சென்ற நான் அடுத்த தெருவிலேயே நுழைந்து அவர்கள் இருவரும் பயணம் செய்த வண்டி அங்கிருந்து கிளம்பிச் செல்லும்வரைக் காத்திருந்தேன்.

அவர்கள் கிளம்பிச் சென்றதும் மீண்டும் அவ்வீட்டைச் சுற்றிலும், அதாவது சொத்தின் நான்கு திசைகளிலும் அமைந்திருந்த வீடுகளின் கதவு (Door No)மற்றும் நில எண்களை (Plot No) நான் கொண்டு சென்றிருந்த குறிப்பேட்டில் குறித்துக் கொண்டேன். பிறகு அதில் கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் வசித்துவந்தவர்களையும் சந்தித்தேன். மற்ற இரண்டு திசைகளில் ஒன்று சாலை, மற்றொன்று ஒரு அலுவலக கட்டிடம். என்னுடைய எதிர்பாராத அதிர்ஷ்டம், அதில் ஒரு வீட்டின் உரிமையாளர் என்னுடைய வங்கிய சென்னை மத்திய கிளையின் வாடிக்கையாளராகவும் இருந்தார். இதைத்தான் நம்முடைய நல்ல நேரம் என்போம்.

அவருடன் சிறிது நேரம் பேசியதில் சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளரின் பெயரும் அவருடைய தற்போதைய பெங்களூர் விலாசமும் கிடைத்தது!

அந்த குறிப்பேட்டை எடுத்து சொத்தின் தாய் மற்றும் சமீபத்திய பத்திரங்களில் சொத்தின் எல்லையாக (Boundaries) தாய் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்த சொத்துக்களின் விவரங்களை என்னுடைய குறிப்பேட்டில் நான் குறித்து வைத்திருந்த விவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். இரண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! சரி, கடன் விண்ணப்பத்தை பார்த்தால் என்ன என்று பார்த்தேன். அதிலிருந்த விவரங்கள் நான் குறித்துவைத்திருந்த குறிப்புடன் ஒத்துப்போனது!

அதாவது வாடிக்கையாளர் சமர்ப்பித்த பத்திரங்களைப் பொறுத்தவரை நான் நேற்று சென்று கண்ட வீடும் அடகு வைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்த சொத்தும் வெவ்வேறானவை.

இதன் உள்ளர்த்தம் உங்களுக்கு விளங்குகிறதா?

1. என்னுடைய தலைமையகத்துக்கு கடனுக்கான அனுமதியை (Sanction)பெறுவதற்காக வாடிக்கையாளரின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மட்டுமே அனுப்பப்படும். சொத்துப் பத்திரங்களின் நகல்கள் அனுப்பபடமாட்டாது.

2. என்னுடைய வங்கி சட்ட ஆலோசகரிடமிருந்து சட்ட சான்றிதழ் (legal opinion )பெற சொத்தின் பத்திர நகல்கள் மட்டுமே அளிக்கப்படுவது வழக்கம். அவருடைய பார்வைக்காக (legal scrutiny) கொடுக்கப்படும் பத்திரங்களில் எந்த சட்டக் குறைபாடும் (legal deficiency) இருக்கப்போவதில்லை. மேலும் இச்சொத்து பதிவு செய்யப்பட்டுள சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து இது சம்பந்தமாக எத்தனை வருட வில்லங்க சான்றிதழ் எடுத்தாலும் ஒரு வில்லங்கமும் இல்லை என்றுதான் சொல்லும்! ஆக வக்கீல் இச்சொத்து அடகு வைக்கப்பட ஏதுவான சொத்து என்றுதான் பரிந்துரைப்பார்.

3. வங்கியின் சார்ட்டர்ட் பொறியாளரிடம் சொத்தை மதிப்பீடு செய்ய வாடிக்கையாளர் சமர்ப்பித்த சொத்தின் விவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை மட்டுமே கொடுப்பது வழக்கம். எனவே அவரால் விண்ணப்ப படிவத்தில் இருக்கும் விவரங்களை அக்கம்பக்கத்திலுள்ள வீடுகளில் விசாரித்தாலும் குறையேதும் கண்டுபிடிக்க முடியாது.

4. என்னுடைய வட்டார மேலாளரும் சொத்தை மதிப்பீடு செய்ய செல்லும் சமயத்தில் அவருக்கு நான் சமர்ப்பித்த விண்ணப்ப நகலையே கொண்டு செல்வார். அதனால் அவரும் இந்த குழப்பத்தை கண்டுபிடிக்க இயலாது.

5. எந்த மேலாளரும் சாதாரணமாக, அதாவது சொத்தைக் குறித்தோ அல்லது விண்ணப்பதாரரைக் குறித்தோ ஏதேனும் ஐயப்பாடு ஏற்படும் சமயங்களைத் தவிர, விண்ணப்ப படிவத்தில் காணப்படும் சொத்தின் விவரங்களை சம்பந்தப்பட்ட பத்திரங்களுடன் ஒப்பிட்டு பார்க்க மாட்டார்.

வங்கியின் செயல்பாடுகளைக் குறித்து நன்றாக அறிந்திருந்தால் மட்டுமே இப்படியெல்லாம் ஆலோசித்து இத்தகைய தகிடுதத்தம் செய்ய முடியும். அதனால் தான் நம் வாடிக்கையாளர் எத்தனிலும் எத்தன் என்று சொன்னேன்.

மேல்வாரியாக பார்க்கும்போது இது ஒரு சாதாரண விஷயமாக படலாம். ஒருவேளை விண்ணப்பதாரர் தவறுதலாக தவறான பத்திரங்களை கொடுத்திருக்கலாம் அல்லவா? இதை ஏன் நீங்கள் சந்தேகக் கண்ணோடு பார்க்கவேண்டும என்று நீங்கள் கேட்கலாம். நானும் இவ்விண்ணப்பதாரரைக் குறித்து சந்தேகம் கொள்ளாமலிருந்தால் அப்படித்தான் நினைத்திருப்பேன்.

அவருடைய கணக்குப்பிள்ளை ‘என் முதலாளி என்ன வேணாலும் செய்வான்யா, சாக்கிரதையா இருங்க’ என்று என்னை எச்சரித்திருக்காவிட்டால் எனக்கு இப்படியெல்லாம் சிந்திக்க வேண்டும் என்ற எண்ணமே எழுந்திருக்காது.
ஆகவே எனக்கு இது தற்செயலாக நடந்த மனித தவறு (human error) அல்ல. திட்டமிடப்பட்ட சதிச் செயல் என்று தோன்றியது.

ஆயினும் இவ்விஷயத்தை என்னுடைய தலைமையகத்துக்கு அதிகார பூர்வமாக அறிவிக்க முடியாத சூழ்நிலையிலிருந்தேன். ஏன்? விண்ணப்பதாரர் என்னுடைய சேர்மனுக்கு அறிமுகமானவர். நீங்கள் ஏன் இக்குழறுபடிக்கு விண்ணப்பதாரரிடம் விளக்கம் கேட்கவில்லை, ஏன் இது ஒரு சாதாரணமான கவனக்குறைவாக இருக்கக்கூடாது? என்றெல்லாம் கேள்வியெழ வாய்ப்புண்டு.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் நம்முடைய சேட் ‘ஆமாம், இது என்னுடைய மானேஜரின் கவனக்குறைவுதான், உங்களுடைய மேலாளர் ஆரம்பத்திலேயே இதை என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்திருந்தால் நான் சரியான சொத்துக்குரிய பத்திரங்களுடன் விண்ணப்பத்தை சமர்த்தியிருப்பேன்’ என தப்பிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

எனவே முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்ற நினைப்பில் வழக்கத்திற்கு மாறாக சட்ட ஆலோசகரிடம் சொத்து பத்திரங்களுடன் சேர்த்து விண்ணப்ப படிவத்தின் நகலையும் அனுப்பி வைத்தேன். ஆனால் என் துரதிர்ஷ்டம் ஒரு வாரம் கழித்து அவர் என்னுடைய செய்கையின் பொருளைப் புரிந்துக்கொள்ளாமல் பத்திரங்களை மட்டும் படித்துப் பார்த்து சொத்தில் எந்த வில்லங்கமும் இல்லை என்று சான்றிதழ் வழங்கிவிட்டார்.

அவரிடம் மீண்டும் சென்று விண்ணப்ப படிவத்தையும் பத்திரத்தையும் ஒப்பிட்டு பார்த்தீர்களா என கேட்க நான் தயங்கினேன். அவர் சொத்து விவரங்கள் விண்ணப்ப படிவத்திலும், பத்திரங்களிலும் வெவ்வேறாக குறிப்பிட்டிருக்கும் பட்சத்தில் அதை நிவர்த்தி செய்யாமல் என்னிடம் எதற்காக சான்றிதழ் கேட்டீர்கள் என்று கேட்பதுடன் என்னுடைய நேரத்தை உங்கள் மேலாளர் வீணடித்துவிட்டீர்கள் என்று என்னுடைய வட்டார மேலாளரிடம் முறையிடலாம்.

எனக்கு விண்ணப்பதாரரைக் குறித்து எழுந்துள்ள சந்தேகத்தை யாரிடமும் வெளிப்படையாக கூறவும் முடியாத தர்மசங்கடம் எனக்கு. ஏனெனில் அதற்கு என்னிடம் தகுதியான ஆதாரங்கள் இல்லை. கணக்குப் பிள்ளையின் குற்றச்சாட்டை மட்டும் வைத்தா சேர்மன் பரிந்துரைத்த விண்ணப்பதாரரை சந்தேகித்தீர்கள் என்று என்னுடைய வட்டார மேலாளர் கேள்வியெழுப்பினால் என்னால் சரியான விளக்கம் கூறமுடியாது.

என்ன செய்யலாம் என்று யோசித்து யோசித்து ஒரு வழியும் கிடைக்காமல் குழம்பிப் போனேன். சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. சொத்தின் உரிமையாளருக்கு ‘உங்களுடைய சொத்தை நீங்கள் வாடகைக்கு கொடுத்த ஆள் அடகு வைக்க முயல்கிறார்’ என்பதை தெரியப்படுத்தினால்? ஆனால் அதிலும் ஒரு சங்கடம் இருந்தது. அவருடைய தொலைப்பேசி எண் என்னிடம் இல்லை. மீண்டும் போய் அவருடைய விலாசத்தை கொடுத்தவரிடம் போய் கேட்டால் அவருக்கு சந்தேகம் ஏற்படலாம். அவர் சென்னையிலிருந்த வேறொரு கிளையின் வாடிக்கையாளர் வேறு. அவர் தன்னுடைய கிளை மேலாளரிடம் இதைப் பற்றி சொல்லப் போக அவர் மேலிடத்திற்கு அறிவித்துவிட்டால் வேறு வினையே வேண்டாம். அப்படியே தொலைப்பேசி எண் கிடைத்தாலும் சொத்து உரிமையாளரிடம் பேசும்போது நான் யார் என்பதை வெளியிடவேண்டும். அதிலும் சிக்கல். கடிதம் அனுப்பி காத்திருக்கவும் நேரம் இல்லை.

ஒரே வழி, இதைக்குறித்து தந்தி மூலம் சூசகமாக தெரிவிப்பதுதான். தந்தியில் விலாவாரியாக எழுத முடியாது. சுருக்கமாக ஆனால் அதே சமயம் அவருக்கு புரியும் வகையில் எழுதவேண்டும். ஒரு மணிநேரம் யோசித்து என்னால் இயன்றவரை தெளிவாக வாசிப்பவர் புரிந்துக்கொள்ளும் வகையில் எழுதி முடித்தேன். இன்னொரு பிரச்சினை. தந்தியடிக்க வங்கி ஊழியர் யாரையும் அனுப்ப முடியாது. நானே செல்வது என தீர்மானித்தேன். வேறொரு சிக்கல். வங்கியின் அருகிலிருந்த தந்தியலுவலகத்திலிருந்து அனுப்ப முடியாது. நம்முடைய விண்ணப்பதாரருக்கு இவ்விஷயம் தெரியவந்து நான் அனுப்பிய தந்தியலுவலகத்தில் இதை அனுப்பியவர் எப்படி இருந்தார் என்ன பெயர் அவர் படிவத்தில் எழுதினார் என்றெல்லாம் விசாரிக்க முற்பட்டால் பிரச்சினையாகிவிடும். பணம்தான் பாதாளம் வரை பாயுமே. சுளையாய் இருபது லட்சத்தை அபேஸ் செய்ய நினைத்தவருக்கு அதற்காக எவ்வளவு செலவு செய்யவும் தயங்க மாட்டார் அல்லவா?

எனவே தந்தியை ஜாப் டைப்பிங் கடை ஒன்றுக்கு கொண்டு சென்றேன். அதிலும் என் கிளையின் அருகிலிருந்த கடையை தவிர்த்து வேறொரு பகுதியிலிருந்த கடைக்கு சென்றேன். அனுப்புனர் பெயரும் விலாசமும் என்னுடைய கற்பனை. பிறகு சென்னை அண்ணாசாலையிலிருந்த தந்தியலுவலகத்துக்கு சென்று முன்பின் தெரியாத ஒருவரிடம் தந்தி படிவத்தை கொடுத்து அனுப்ப சொன்னேன். அந்த காலத்தில் பத்து ரூபாய் பணம் பெரிய தொகையல்லவா? என்ன ஏது என்று கேட்காமல் அவரும் வரிசையில் நின்று அனுப்பினார்.

என்னுடைய இந்த செயல் இரண்டே நாட்களில் பலன் அளித்தது. ஆனால் அதுவே எனக்கு வேறு வழியில் பிரச்சினையாக அமைந்தது..

தொடரும்..

13 கருத்துகள்:

  1. சார்: இந்தத் தொடர் தமிழ் வலைப்பதிவுகளில் ஒரு புது சகாப்தம். வங்கி பற்றிய பல விஷயங்கள் சாதாரணப் பொதுமக்களுக்குத் தெரியவருகிறது!

    தொடரை மிகவும் ரசிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  2. வாங்க ராஜ், நன்றி.

    இப்ப முன்னால இருந்தத விடவும் ஜாக்கிரதையா இருக்கணும்.ஏன்னா இப்பல்லாம் சாதாரண வாடிக்கையாளர்கள்கூட இப்படியான ஏமாற்று வித்தைகளில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்களாம்! என்னுடைய மேலாளர் நண்பர்கள் கூறுகிறார்கள். நான் வங்கி கிளைகளில் இருந்து Administrative தரப்பிற்கு வந்து பத்தாண்டுகள் ஆகின்றன.

    பதிலளிநீக்கு
  3. வாங்க புதுவை, நன்றி.

    நீங்க சொல்றது மிகவும் சரி. திருடனைப் பிடிப்பவனுக்கும் திருடத் தெரியனும் என்பார்களே. அதுபோல எத்தனுடைய பார்வை நமக்கிருந்தால்தான் எத்தர்களை பிடிக்க முடியும்.

    That is why it is said that a policeman should have a criminal mind to succeed in nabbing other criminals.

    பதிலளிநீக்கு
  4. என்னங்க நீங்க, படே ஆளுதான்.
    ஆனா அப்ப 20 லட்சம்னு சொல்றது எவ்வளோ பெரிய தொகை. அம்மாடியோவ்.

    அஞ்சு லட்சம் சேர்த்துட்டுத் திரும்பிப் போயிரலாமுன்னுதான் வெளிநாடெ வந்தோம் அப்ப:-)))))

    பதிலளிநீக்கு
  5. வாங்க பத்ரி, நன்றி.

    இதே போல ஒவ்வொரு துறையிலிருப்பவரும் அவரவர் துறையைப் பற்றி எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

    ஆங்கில நாவலாசிரியர் Arthur Hailey யோட நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? அவருடைய Airport, Wheels மற்றும் நோபெல் பரிசு பற்றிய ஒரு நாவல், பெயர் மறந்துவிட்டது. இவற்றை படிக்கும்போது கதையை விட அவருடைய அந்தந்த துறைகளை ஆராய்ந்து தரும் தகவல்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. வாங்க சத்தீஷ், நன்றி.

    கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளில் (Procedure) பெரிதாக எந்த மாறுதலும் வரவில்லை, தேவையுமில்லை. ஆனால் அவற்றை சரியாக கடைப்பிடிக்காமல் வர்த்தகத்தை கூட்டவேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் செயல்படும்போதுதான் மேலாளர்களில் பலரும் ஏமாந்து போகிறார்கள்.ஏமாற்றப்படுவோரை விட ஏமாந்துபோவோர்தான் அதிகம்.

    பதிலளிநீக்கு
  7. வாங்க துளசி, நன்றி.

    வங்கி மேலாளர்களைப் பொறுத்தவரை, கடன் அளிப்பது பொதுமக்களின் பணம் என்பதால் இரண்டு லட்சமாக இருந்தாலும் இருபது லட்சமாக இருந்தாலும் கவனமாக அதுவும் சரியான நபருக்கு மட்டுமே (Eligible borrower) கொடுக்கப்படவேண்டும் என்பதுதான் அடிப்படை நியதி. அதை மீறி செய்பவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். பலருக்கு வேலைமட்டும் தான் போயிருக்கிறது. ஆனால் வேறு சிலர் கம்பியெண்ணவும் வேண்டியிருந்திருக்கிறது!

    பதிலளிநீக்கு
  8. நமக்கு மட்டுமே(வங்கி அதிகாரிகள்) தெரியவேண்டிய சில விஷயங்களை வெளியே விடறீங்கன்னு நெனைக்கிறேன். உஷார். மற்றபடி சூப்பர் தல.

    பதிலளிநீக்கு
  9. வாங்க முத்து, நன்றி.

    சில விஷயங்களை வெளியே //

    இருக்கலாம் முத்து. ஆனா அது வங்கிகளோட செயல்பாடுகளைக் குறித்துதானே.

    வங்கி மேலாளர்கள் எத்தனை கவனத்துடன் செயல்பட வேண்டியிருக்கிறதென்பதை பொதுமக்கள் தெரிந்துக்கொள்வதில் தவறில்லை என்றுதான் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. அனுபவங்களூடே, இந்திய வங்கிகளைப்பற்றியும் தெரிந்துகொள்ள முடிகிறது. நன்றி!

    ஆங்கிலத்தில் ஆர்தர் ஹெய்லியின் நாவல்கள் படித்தால் அவர் களனாக அமைத்திருக்கும் தொழில்கள் செயல்படும் விதம் நமக்குப் பரிச்சயமாகும்.

    நீங்களும் உங்களின் தொழில் அனுபவத்தை வைத்து, நாவல் குறுநாவல் என்று முயற்சிக்கலாமே.

    உண்மையைச் சொன்னால் பார்க்குமிடமெல்லாம் குஷ்பு குஷ்பு என்று இருப்பதால் நான் உங்களின் மற்றப்பதிவுக்குப் போகவில்லை.

    இங்கே இந்தப் பதிவில் எங்களுடன் பகிர்ந்துகொள்ளமுடியாதவற்றை, அங்கே நீங்கள் எழுத்லாம். என்ன, உங்க சொந்த அனுபவமா என்று நிறைய பின்னூட்டம் வரும். :)

    -மதி

    பதிலளிநீக்கு
  11. இங்கே இந்தப் பதிவில் எங்களுடன் பகிர்ந்துகொள்ளமுடியாதவற்றை, அங்கே நீங்கள் எழுத்லாம்.//

    நல்ல யோசனைதான். முயற்சிக்கிறேன் மதி.

    பதிலளிநீக்கு
  12. "பிரைஸ்" இர்வின் வாலஸ் இல்லையா? அவரும் களம் சார்ந்த படைப்பாளி. ஒரு காலத்தில் அவருடையது எல்லாம் மனப்பாடம்.
    அதே போல வக்கீல் கதைகள், ஜான் கிர்ஷம். பாருங்க ஜோசப் சார், கதை எங்கேயோ போய்விட்டது:-) படித்துக் கொண்டு
    இருக்கேன். நல்லா போகுது

    பதிலளிநீக்கு