03 செப்டம்பர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 6

Police Custody: 

1. Abdul Rehman Antulay v. R. S. Nayak (1992) 1 SCC 225

"The period for remand and pre-conviction detention should be as short as possible. In short the accused not be subjected to unnecessary or unduly long incarceration prior to his conviction."

2. State of U P v, Ram Sagar Yadav (1985) 1 SSC 552

"Remand orders should be passed by magistrate on proper application of mind and not mechanically."

******


காவல்துறை வாகனத்திலிருந்து இறங்கிய மஃப்டியிலிருந்த இரு காவலர்கள் கோபால் தன் முகத்தை துவாலையால் மூடியவாறு இறங்கியதும் அவரை இங்கும் அங்கும் நகரமுடியாதவாறு பெருநகர் 12ம் நடுவர் அறையை   நோக்கி நடத்திச் செல்வதை பார்த்தவாறே ராஜசேகர் கோபாலின் தந்தை சீனிவாசனை நெருங்கினான். 'என்ன சார், நீங்க எப்படி இங்க?'

அவர் திரும்பி அவனை பார்த்தார். 'வந்துட்டீங்களா சார்.. உங்களதான் கூப்டணும்னு நினைச்சேன்.. வீட்ல இருக்க முடியல சார்... அதான்..' என்றவாறே காரின் மறுபுற கதவைத் திறந்துக்கொண்டு இறங்கியவரை அவனுக்கு அறிமுகப்படுத்தினார் சீனிவாசன். 'சார் இவர் மகாதேவன். நம்ம ஃபேமிலி லாயர்.... இவர்தான் கோபால வச்சிருந்த ஸ்டேஷன கண்டுபிடிச்சி கூப்ட்டுக்கிட்டு போனார்...'

ராஜசேகர் அவருடைய கரங்களைப் பற்றி குலுக்கினான். 'சார் நான் ராஜசேகர், க்ரிமினல் லாயர். சாரோட அப்பார்ட்மென்ட்லதான் குடியிருக்கேன்... சார் சொல்லித்தான் எனக்கு விஷயமே தெரியும்... கோபால் சார எனக்கு 
அவ்வளவா  பழக்கமில்லை...'

மகாதேவன் தன்னை ஏற இறங்க பார்ப்பதை கவனித்த ராஜசேகர் இவர் பாக்கறத பாத்தா ஏதோ டவுட்டாருக்கே என்று நினைத்தான். 

'இன்னைக்கி பெய்ல் கிடைக்க ட்ரை பண்றேன்னு இவர் கிட்ட சொன்னீங்களாமே... How is it possible?'

ராஜசேகர் சமாளித்தான். 'சார் இருந்த டென்ஷன்ல எனக்கு அப்படி சொல்றத தவிர வேற வழி தெரியல சார்...பெய்லபிள் செக்‌ஷன்ல போட்ருந்தா பாக்கலாம்னுதான் சொன்னேன்...' என்றவாறே தன் எதிரில் பதற்றத்துடன் நின்றிருந்த சீனிவாசனை பார்த்தான். 'என்ன சார் அப்படித்தான சொன்னேன்?'

சீனிவாசன் தன்  வழக்கறிஞரைப் பார்த்தார். 'ஆமா மகா.. அப்படித்தான் சொன்னார்... நீ வேற யாரையும் அப்ரோச் பண்ண வேணாம்... இவரையே வச்சிக்கலாம்னு டிசைட் பண்ணிட்டேன்... இவர் நம்ம அப்பார்ட்மென்ட்லயே இருக்கறதால அடிக்கடி டிஸ்கஸ் பண்றதுக்கும் சவுகரியமா இருக்கும்....' 

மகாதேவனுக்கு அவர் முடிவில் விருப்பம் இல்லை என்பதை அவர் முகம் மிகத்தெளிவாக காட்டியதை ராஜசேகர் கவனித்தான். இருப்பினும் அதை கண்டுக்கொள்ளாதவன் போல் சீனிவாசனை பார்த்தான். 'சார்... நீங்க கவலைப்படாதீங்க... இன்னைக்கி பெய்ல் கிடைக்காட்டாலும் கோபால் சார என் முன்னால வச்சித்தான் போலீஸ் விசாரிக்கணும்னு மஜிஸ்திரேட் கிட்ட கேக்கலாம்னு இருக்கேன்... அவர் பெர்மிட் பண்லன்னாலும் பரவால்லை... நமக்கு போலீஸ்ல ஆள் இருக்கு சார்....'

'அது போறும் சார்... ஸ்டேஷன்ல வச்சி கோபால்கிட்ட பேசினேன்... நல்லபடியா ட்ரீட் பண்ணாங்கன்னு சொன்னான். முதல்ல கொஞ்சம் டென்ஷனாத்தான் இருந்திச்சி... இப்ப பரவால்லை.'

'சார்... வக்காலத்து பேப்பர்ல கையெழுத்து வாங்கணும்னு சொன்னீங்களே?' என்று தனக்குப் பின்னாலிருந்து குரல் கேட்க ராஜசேகர் திரும்பி, 'யோவ், நீ பாஸ்கர் கிட்ட போயி அடுத்தது நம்ம கேஸ்தானான்னு கேட்டுட்டு வா...' என்றான் அடிக்குரலில். 

'சரி சார்' என்ற குமாஸ்தா ஓட்டமும் நடையுமாக சென்றான். 

மகாதேவன் வியப்புடன் ராஜசேகரைப் பார்த்தார். 'என்ன சார் க்ரிமினல் கேஸ்ல வக்காலத்து கம்பல்சரி இல்லையே? இதுகூடவா தெரியாது உங்களுக்கு?'

அவருடைய குரலில் இருந்த கேலி ராஜசேகரை எரிச்சலடையச் செய்தது. ஆனாலும் பொறுத்துக்கொண்டான். 'தெரியும் சார். ஆனா பின்னால கேஸ் பேப்பர்ஸ் காப்பி கோர்ட்லருந்து வாங்கணும்னா வக்காலத்து வேணும்." 

அவனுடைய பதில் மகாதேவனின் முகத்தை இருளடையச் செய்தது. 

ராஜசேகர் அதற்கு மேல் என்ன பேசுவது என தெரியாமல் ஒருவித சங்கடத்துடன் நின்றான். மூவர் மத்தியிலும் ஒருவித தர்மசங்கடமான அமைதி நிலவியது.

அவர்களுடன் நின்றிருந்த சீனிவாசனுக்கும் இருவருக்கும் இடையில் நடந்த சம்பாஷனை சங்கடத்தை கொடுத்தது. இவனெ கூட்டிக்கிட்டது வந்தது தப்பாருக்கும் போலருக்கே என்று நினைத்தவாறு  கோர்ட் வளாகத்தில் நின்ற கும்பலைப் பார்த்தார். 'நல்ல வேளை சார்... எங்க டிவி காரங்க காமராவ தூக்கிக்கிட்டு வந்து நிப்பாங்களோன்னு பார்த்தேன்.' என்றார் அவர்களுடைய கவனத்தை திசை திருப்பும் விதமாக, 'எதுக்கும் இருக்கட்டும்னுதான் வீட்லருந்து வரும்போது ஒரு டர்க்கி டவல கொண்டு வந்து கோபால்கிட்ட குடுத்தேன். முகத்த மூடிக்கறதுக்கு வசதியாருக்குமே... என்ன சொல்ற மகா?' 
என்றார். 

மகாதேவனின் முகத்தில் நிலவிய அதிருப்தி மாறாமல் இருந்ததை கவனித்த ராஜசேகர், 'சார் நீங்க பேசிக்கிட்டிருங்க நா உள்ள போய் நம்ம கேஸ் எப்ப வரும்னு பாத்துட்டு வரேன்.' என்றவாறு நீதிமன்ற அறையை நோக்கி நடந்தான்.

அவன் செல்லும் வரை காத்திருந்த மகாதேவன், 'சீனி, எனக்கென்னவோ இந்தாள பாத்தா சரிப்பட்டு வராதுன்னு தோனுது. நம்ம பழைய லாயர வச்சுக்கறதுதான் பெட்டர்னு நினைக்கறேன்,  அவர்கிட்ட ஏகப்பட்ட அசிஸ்டென்ட்ஸ் வேற.... இந்தாளு எப்படி ஒத்தாளா.... இது சரிவரும்னு தோனல சீனி.' என்றார்.

மகாதேவன் ஒருவித எரிச்சலுடன் அவரை பார்த்தார். 'அதான் சொன்னேனே மகா... இவரே போதும். அதுவுமில்லாம கோபால்தான் எனக்கும் அந்த பொண்ணோட சாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லேன்னு சொல்றானே? இதுக்கெதுக்கு பெரிய லாயர்? எனக்கு கோபால் மேல எவ்வளவு நம்பிக்கையிருக்கோ அதே அளவுக்கு இவர் மேலயும் நம்பிக்கையிருக்கு. அதுவுமில்லாம இவர் நம்ம அப்பார்ட்மென்ட்லயே குடியிருக்கார். நம்மளும் ஃபாலோ பண்ண ஈசியா இருக்குமே...'

'உனக்கு தெரியாது மகா. கோபால் என்னதான் சொன்னாலும் இந்த கேஸ இன்வெஸ்டிகேட் பண்ற எஸ்.ஐ. ஒரு பயங்கரமான ஆளுன்னு சொல்றாங்க. கேஸ ஜோடிக்கிற விதத்துல ஜோடிச்சி எதையாவது ஏடாகூடமா ஆயிருச்சின்னா அப்புறம் நீதான்....'

'இப்படி அபசகுணமா பேசாத மகா' என்று எரிந்து விழுந்தார் சீனிவாசன். அப்படியே இவரால முடியலன்னாலும் மேல்கோர்ட் இருக்கவே இருக்கு.... அப்பீல்ல பாத்துக்கறேன்...'

மகாதேவனின் முகம் தொங்கிப்போனது. சீனிவாசன் உரத்த குரலில் இறைந்ததைக் கேட்டு அருகிலிருந்த ஒருசிலர் தங்களை கவனிப்பதை உணர்ந்த அவர், 'சரி உன் இஷ்டம். ஏதோ எனக்கு சொல்லணும்னு தோனிச்சி... அதான்...'

அதிகம் பேசிவிட்டோமோ என்று அச்சமடைந்த சீனிவாசன் மகாதேவனை சமாதானப்படுத்தினார். 'எனக்கு புரியுது மகா... நீ நல்லதுக்குத்தான் சொல்வே.... ஆனா காலையில நா இருந்த மனநிலையில இவர பத்தி நம்ம ஆடிட்டர் சொன்னதும் சரின்னுட்டேன்.. இப்ப நீங்க வேணாம்னு சொன்னா சரிவராது.... ஏன்னா இனியும் இவர் முகத்த நா டெய்லி பாக்கணுமே... அதுவுமில்லாம கோபால் ரொம்ப கான்ஃபிடன்டா சொல்றதால கேஸ்ல பெருசா காம்ப்ளிகேசன் வராதுன்னு நினைக்கேன்... மத்தது பகவான் கையில... என்ன சொல்றே?'

'நீ சொல்றதும் சரிதான்... சரி வா, வராந்தாவுல நின்னு என்ன நடக்குதுன்னு பாக்கலாம்.'

*****

ராஜசேகர் வராந்தாவில் நின்று நடுவர் அறைக்குள் எட்டிப்பார்த்தான். வேறு ஏதோ ஒரு வழக்கு நடந்துக்கொண்டிருந்தது. 

அறையை சுற்றிலும் பார்வையை செலுத்தினான். சுவரோரம் கிடந்த மர பெஞ்ச் ஒன்றில் கோபாலும் அவனை அழைத்துவந்த இரு காவலர்களும் அமர்ந்திருப்பது தெரிந்தது. அவர்களுக்கு அருகில் காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவரும் அரசு வழக்கறிஞர் (APP) ஒருவரும் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்தான். அந்த துணை பப்ளிக் ப்ராசிக்யூட்டர் மாதவன் அவனுடன் சென்னை சட்டக்கல்லூரியில் ஒன்றாக படித்தவர் என்பதால் நல்ல பழக்கம் இருந்தது. 

தயக்கத்துடன் அவர்களை நெருங்கி குரலை சற்று இறக்கி, 'ஹலோ மாதவன் எப்படி இருக்கே?' என்றான். 

சட்டென்று அவனை திரும்பிப் பார்த்த மாதவன், 'என்ன சேகர்... எங்க இந்த பக்கம்? பாத்து ரொம்ப நாளாச்சு?'

கோபாலை சுட்டிக்காட்டி, 'நாந்தான் டிஃபென்ஸ்...' என்றான்.

'என்னது நீயா?' என்றான் சற்று வியப்புடன். அவனையுமறியாமல் அவனுடைய குரல் சற்று உயர்ந்து ஒலிக்க வழக்கு ஒன்றை விசாரித்துக்கொண்டிருந்த நடுவர் எரிச்சலுடன் மேசையை தட்டுவது தெரிந்தது. உடனே இருவரும் வெளியேறி வராந்தாவில் நின்றனர்.

'அக்யூஸ்டோட அப்பா எங்க அப்பார்ட்மென்ட்லதான் இருக்கார் மாதவன்... அதான்...'

மாதவன் கேலியுடன் சிரித்தான். 'அதான பாத்தேன்... ஆள பாத்தா கொஞ்சம் பசையுள்ள பார்ட்டி மாதிரி தெரியுதே...'

அவனுடைய குரலில் தென்பட்ட கேலியை கண்டுக்கொள்ளாத ராஜசேகர், ' எனக்கு கோபால் கூட கொஞ்சம் பேசணும்... உன் கூட பேசிக்கிட்டிருந்தவர் எஸ்.ஐ. தன்ராஜ் தானே... இந்த கேஸ டீல் பண்றவரு?'

மாதவன் திரும்பி கோபாலுக்கருகில் நின்றிருந்த தன்ராஜைப் பார்த்தான். 'ஆமா... ஆளு கொஞ்சம் திமிர் புடிச்சவன்... என்னவோ சென்னயில இவன விட்டா வேற யாரும் இல்லேன்னு நினைப்பு..... சரி... வா.. சொல்லி பாக்கறேன்... இப்ப விசாரனையிலிருக்கற கேஸ் முடிஞ்சதும் நம்மளுதுதான்னு பாஸ்கர் சொன்னார்...'

மாதவன் முன்னால் நடக்க ராஜசேகர் அவன் பின்னால் நடந்தான். 

மாதவன் தன்ராஜை நெருங்கி ஏதோ சொல்ல அவர் திரும்பி தன்னை பார்ப்பதையும் அவர் முகத்தில் சட்டென்று கோபம் எழும்பி தணிவதையும் ராஜசேகர் கவனித்தான். பிறகு விருப்பமில்லாமல் சரி என்பதுபோல் தலையை அசைக்க மாதவன் திரும்பி ராஜசேகரை பார்த்து சரி என்று தலையை அசைக்க ராஜசேகர் கோபாலை நெருங்கி அவருக்கு அருகில் அமர்ந்தான். 

'மிஸ்டர் கோபால் ஐ ஆம் ராஜசேகர்... உங்க ஃபாதர் சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கேன். கொஞ்சம் மெதுவாத்தான் பேச வேண்டியிருக்கு இல்லாட்டி மஜிஸ்திரேட் கோச்சுப்பார்.'

'சரி சார்' என்றான் கோபால் தலையைக் குனிந்தவாறே. 

'ஒங்கள போலீஸ் கஸ்டடியில எடுத்து விசாரிக்கணும்னு போலீஸ் கேப்பாங்க. நானும் கூட இருக்கணும்னு பெட்டிஷன் பண்லாம்னு நினைக்கேன்..'

கோபால் தலையை நிமிர்ந்து அவனை பார்த்தான். 'அது தேவையிருக்காதுன்னு நினைக்கறேன் சார். அந்த பொண்ணோட 
சாவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்ல ... இத ஏற்கனவே மிஸ்டர் தன்ராஜ்கிட்ட சொல்லியாச்சு... அப்புறம் எதுக்கு விசாரணைன்னு எனக்கு ஒன்னும் புரியல....'

நீதிமன்ற ஊழியர் பாஸ்கர் தன் இருக்கையிலிருந்து அவர்கள் இருந்த திசையில் திரும்பி உதட்டின் மீது விரலை வைத்து எச்சரிப்பது தெரிந்தது. ராஜசேகர் உடனே எழுந்து நின்றான். 'சரி.. அப்புறம் பாக்கலாம்... தைரியமா இருங்க.' என்று கூறிவிட்டு எழுந்தவன் தன் அருகில் வந்து நின்ற தன்னுடைய குமாஸ்தாவிடமிருந்து வக்காலத்து படிவத்தை அவனிடம் கொடுத்தான். 'இதுல ஒரு கையெழுத்த போட்டு இவர்கிட்ட குடுத்துருங்க. வக்காலத்து ஃபார்ம்.' பிற்கு அங்கிருந்து நகர்ந்து வழக்கறிஞர்களுக்கென இருந்த இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்தான். ஒருவழியாக விசாரிக்கப்பட்டிருந்த வழக்கு முடிவுக்கு வந்தது..

'அடுத்தது எந்த கேஸ்யா?' என்றார் நடுவர் பாஸ்கரிடம்.

'ரிமான்ட் கேஸ்ங்கய்யா... மிஸ் மாதவி கொலை....'

மஜிஸ்திரேட் இடைமறித்தார்...' அந்த சினிமா எக்ஸ்ட்ராதானே... நேத்து நடந்தது... சரி யார் ஆஜராவரா?' என்றவாறே 'நாந்தான் யுவர் ஹானர்' என்றவாறு எழுந்து நின்ற மாதவனை கவனித்துவிட்டு சரி என்பதுபோல் தலையை அசைத்தார். 

பிறகு பாஸ்கரன் தன்னிடம் நீட்டிய காகிதங்களை ஒரு முறை பார்த்துவிட்டு, 'சரி என்ன பண்ணணும்?'

'ஒரு வாரம் கஸ்டடியில எடுத்து விசாரிக்கணும் யுவர் ஹானர்' என்றான் மாதவன்..

நடுவர் சிரித்தார். 'இதுக்கு எதுக்குய்யா ஒரு வாரம்?'

மாதவன் சங்கடத்துடன் நெளிந்தான். 

இதுதான் சந்தர்ப்பம் என்று எழுந்த ராஜசேகர், 'யுவர் ஆனர்..' என்றான்.

மஜிஸ்திரேட் ஒருவித கேலி புன்னகையுடன், 'யார்யா ராஜசேகர் மாதிரி இருக்கு?' என்றவாறு பாஸ்கர் நீட்டிய வக்காலத்து பேப்பரை வாங்கி படித்து பார்த்துவிட்டு தன் மேசையில் வைத்தார். 'நீங்கதான் டிஃபென்சா?'

'யெஸ் யுவர் ஆனர்.'

'சொல்லுங்க... போலீஸ் கஸ்டடியே வேணாம்னு சொல்லப் போறீங்களா?' என்றார் கேலியுடன்.

'இல்லே யூவர் ஆனர்' 

'அப்போ குடுக்கலாம்கறீங்களா?'

'அதில்ல யுவர் ஆனர்..'

'வேற என்னதான் சொல்ல வறீங்க?'

'என் கட்சிக்காரர விசாரிக்கறப்போ நானும் கூட இருக்கணும்னு....'

மஜிஸ்திரேட் சிரித்தவாறே அரசு வழக்கறிஞர் மாதவனைப் பார்த்தார். 'என்ன மாதவன்?'


தொடரும்...


11 கருத்துகள்:

  1. //வக்காலத்து// I know the general meaning of this word, during a normal conversation. But, What is the meaning of this in legal terms?

    Thanks in advance.

    பதிலளிநீக்கு
  2. அடுத்து என்ன நடக்குமோ என்ற ஆவலோடு தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ஒரு கோர்ட் சூழலைக் கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  4. Packirisamy N said...
    //வக்காலத்து// I know the general meaning of this word, during a normal conversation. But, What is the meaning of this in legal terms? //

    From the search I made over Internet I could gather that Vakalatnama is a urdu word. It literally means 'on behalf of'. It is not defined either in Civil Code or Criminal Proc. Code. In Civil code it is said that an authorisation should be obtained from the accused to represent him in the case. However, it is not a PA in general terms. It can be said that it is a limited PA authorising a lawyer or whoever is going to represent him to appear in Court on his behalf, to collect copies of all the documents relating to the suit including the judgement copy etc.

    Even though it is not compulsory in criminal cases it is always obtained as it is required to be produced in the court to collect copies of all documents including the copies of FIR,Chargesheet,etc.

    I included a dialogue between Mahadevan and Rajasekar only to emphasise this point.

    Thanks for coming and making this query.

    பதிலளிநீக்கு
  5. வே.நடனசபாபதி said...
    அடுத்து என்ன நடக்குமோ என்ற ஆவலோடு தொடர்கிறேன்.//

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  6. சென்னை பித்தன் said...
    ஒரு கோர்ட் சூழலைக் கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள்!//

    ஏதோ என்னால் முடிந்தது. சாதாரணமாக தமிழ் சினிமாக்களில் நீதிமன்றங்களை தங்களுக்கு தோன்றியபடி சித்தரிப்பார்கள். ஆனால் நிஜத்தில் மாவட்ட நீதிமன்றங்கள் மிகவும் informalஆகவே உள்ளன.

    பதிலளிநீக்கு
  7. சென்னை பித்தன் said...
    த.ம.1//

    மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  8. குற்றம் சாட்டப் பட்டவர் வக்கீல் யாரும் இல்லாமல் தானாகவே வழக்கை நடத்தலாமா.?

    பதிலளிநீக்கு
  9. G.M Balasubramaniam said...
    குற்றம் சாட்டப் பட்டவர் வக்கீல் யாரும் இல்லாமல் தானாகவே வழக்கை நடத்தலாமா.?//

    இதைப் பற்றி சட்டத்தில் ஏதும் குறிப்பாக கூறப்படவில்லையென்றாலும் நடைமுறையில் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அதை பயன்படுத்திக்கொள்வோர் மிகவும் குறைவு. வழக்கறிஞர்களுக்கு எதிராக தொடரப்படும் வழக்குகளிலும் கூட இந்த உரிமையை அவர்கள் பயன்படுத்துவதில்லை. நான் அவனில்லை என்பதுபோன்ற திரைப்படங்களில்தான் இதை பார்த்திருக்கிறேன். ஏனெனில் இதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளனவாம். ஆனால் அதை மட்டுமே எழுத ஒரு தனி பதிவு வேண்டும்:))

    பதிலளிநீக்கு
  10. நானும் ஒவ்வொரு பகிர்வாக படித்து விடலாம் என்று வந்தால் அதற்குள் நிறைய பதிவுகள் வந்து விடுகிறதே.. உங்கள் ஆர்வம் கண்டு மகிழ்ந்தேன். அடுத்து என்ன நடக்கும் என்பதை நான் இப்பவே அடுத்த பகிர்வில் படித்து விடுவேனே..

    பதிலளிநீக்கு