IPC:Sec.299. Culpable homicide Whoever causes death by doing an act with the intention of causing death, or with the intention of causing such bodily injury as is likely to cause death, or with the knowledge that he is likely by such act to cause death, commits the offence of culpable homicide.
IPC:Sec.300 Exception 4. -Culpable homicide is not murder if it is committed without premeditation in a sudden fight in the heat of passion upon a sudden quarrel and without the offender having taken undue advantage or acted in a cruel or unusual manner.
375. Rape: A man is said to commit "rape" who, except in the case hereinafter excepted, has sexual intercourse with a woman under circumstances falling under any of the six following descriptions:- First- Against her will. Secondly- Without her consent. Thirdly- With her consent, when her consent has been obtained by putting her or any person in whom she is interested in fear of death or of hurt.
******
'காலையில நம்ம இன்ஸ்பெக்டர் ஐய்யாத்தான் நீ மஃப்டியில போயி வாட்ச் பண்ணுய்யான்னு சொல்லி அனுப்பிச்சாருங்க... நீங்க அப்போ ஸ்டேஷன்ல இல்ல... அதான் ஒங்கக் கிட்ட சொல்ல முடியலை...'
'சரி.. சரி... இப்ப எதுக்கு கூப்ட்ட அதச் சொல்லு?'
'ஐயா.... அந்த ஆளோட பி.ஏ கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஆட்டோவுல ஏறி போறத பாத்தேன்.... அவர் போன விதம் சந்தேகமாருக்குய்யா அதான் அவர ஃபாலோ பண்லாமா இல்ல இங்கயே நிக்கலாமான்னு கேக்கலாம்னு.....'
தன்ராஜுக்கு கோபம் வந்தது....' யோவ் நீ ஃபாலோ பண்ணி என்னத்த கிழிக்கப் போறயோ எனக்கு தெரியல... ஒன்னே அனுப்புனது இன்ஸ்பெக்டர் ஐயாதான? அவரையே கேளு... என்னெ டிஸ்டர்ப் பண்ணாத.. வை..' எதிர்முனையில் தனபால் எதையோ சொல்ல முயல்வது தெரிந்தும் அதற்கு இடம் கொடாமல் இணைப்பைத் துண்டித்தார்.
எதுக்கு நா இன்வெஸ்ட்டிகேட் பண்ற கேஸ்ல இந்த மனுஷன் மூக்க நுழைக்கிறார்? எல்லாம் அந்த பி.பி. பண்ற வேலையாருக்கும்.... என்று மனதுக்குள் பொருமினார். ஏற்கனவே கொலையை நேரில் பார்த்த சாட்சியம் இல்லாததால் எப்படி இந்த வழக்கை வெற்றிகரமாக நடத்தப்போகிறோம் என்று நொந்துப்போயிருந்தவருக்கு ஸ்டேஷன் ஆய்வாளருடைய இந்த தேவையற்ற குறுக்கீடு எரிச்சலை அளித்தது.
இதுவரைக்கும் கிடைச்சத வச்சி வழக்க நடத்த முடிஞ்சா நடத்திக்கட்டும், நம்ம chargesheet முடிச்சி குடுத்துட்டு அதுக்கப்புறம் நீங்களே பாத்துக்குங்க சார்னு விட்ருவோம்.... இன்வெஸ்டிக்கேஷன நடத்துங்கன்னு சொல்லி கேஸ
குடுத்துட்டு நமக்கு பின்னால முட்டாத்தனமா எதையாச்சும் செய்யிறது... சரி வாட்ச் பண்றதுக்கு ரெண்டு பேர அனுப்பியிருக்கேன் தன்ராஜ்.... அதுல என்ன கிடைக்கிது பாப்பமேன்னு ஒரு வார்த்தை நம்மக் கிட்ட சொல்லியிருக்கக் வேணாம்?
சரி, எப்படியோ போகட்டும். இதுவரைக்கும் நமக்கு கிடைச்சிருக்கறத வச்சி சார்ஜ்ஷீட்ட எழுதி முடிச்சி SHOகிட்ட குடுத்துருவோம். அவர் வேணும்னா பிபி கிட்ட காமிச்சிக்கட்டும் என்ற நினைப்புடன் தான் எழுத துவங்கியிருந்த சார்ஜ்ஷீட் படிவத்தை எடுத்து மளமளவென பூர்த்தி செய்தார்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் எந்தெந்த பிரிவுகளின் கீழ் குற்றம் வருகிறது என்ற பகுதி வந்ததும் சற்று யோசித்தார். கொலைன்னு எழுதலாமா இல்ல கல்பபிள் ஹோமிசைட்னு (Culpable Homicide) எழுதலாமா என்று ஒரு நிமிடம் தயங்கினார். இதை திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்று சொல்வதற்கு தகுந்த ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர் சம்பவம் நடந்த அன்று சம்பவ இடத்தில் மாலை ஆறு மணிக்கும், ஏழு மணிக்கும் பார்த்ததாக இரண்டு சாட்சிகள் இருப்பது என்னமோ உண்மைதான். ஆனால் கொலையுண்டவரின் தலையில் ஏற்பட்ட இரண்டு காயங்களுக்கிடையில் குறைந்தது அரை மணி நேரமாவது இருக்க வாய்ப்புண்டு என்கிறது பிரேதபரிசோதனை அறிக்கை.
கோபால் மாலை ஆறு மணிக்கு அங்கிருந்து கிளம்பிவிட்டதை பார்த்த சாட்சி மாநகராட்சி பார்க்கிங் ஊழியர். அதற்குப் பிறகு மாலை ஏழு மணிக்கு அந்த வீட்டின் கதவை தட்டிக்கொண்டு நின்றதை பார்த்ததாக அடுத்த வீட்டு பெண்ணின் சாட்சி.... இரண்டுக்கும் இடையில் ஒரு மணி நேர இடைவெளி. ஆனாலும் அக்யூஸ்ட் அந்த வீட்டினுள் இருந்து வந்ததை இரு சாட்சிகளுமே பார்த்திருக்கவில்லை என்பதும் மிகவும் முக்கியமான விஷயம். அப்படியிருக்கும்போது அந்த இரண்டு காயத்துக்கும் அக்யூஸ்டை எப்படி பொறுப்பாக்குவது? ஒருவேளை அக்யூஸ்ட் அங்கு வந்து சென்றபிறகு வேறு யாரேனும் வீட்டிற்குள் சென்றிருந்தால்? இந்த சந்தேகம் அவருக்கு துவக்கமுதலே இருந்து வந்தது உண்மைதான். ஆனால் அப்படியொருவரை அங்கு பார்த்ததாக எந்த சாட்சியும் கிடைக்கவில்லை. சூழ்நிலை சாட்சியங்களை வைத்து இது ஒரு திட்டமிட்ட கொலை என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிருபிக்க முடியுமா? ஆகவே இ.த.ச. 299 பிரிவுதான் சரியானது என தீர்மானித்து அதையே குறிப்பிட்டார்.
அதே சட்டத்தின் 300வது பிரிவிலுள்ள exception 4ன் படி கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏதுமில்லாமல் இரு நபர்களுக்கிடையில் ஏற்படும் மோதலில் சட்டென்று எழுந்து வரும் ஆத்திரத்தால் ஒருவர் மற்றவரை தாக்குவதால் ஏற்படும் மரணம் கொலையாகாது என்றும் உள்ளதே. கையிலுள்ள ஆதாரங்களின் படியும் கொலையுண்டவரின் உடம்பில் காணப்பட்ட காயங்கள் படியும் இது வேண்டுமென்றே செய்யப்பட்ட கொலையாக இருக்க முடியாது என்றே தன்ராஜ் கருதினார்.
பிறகு சம்பவம் நடந்த தினத்தன்று அக்யூஸ்ட் கொலையுண்டவருடன் உடல் உறவு கொண்டிருந்தார் என்ற தகவல் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததை பற்றி சிந்தித்தார். கற்பழிப்பு என்று சேர்த்தால் என்ன? ஆனால் இருவருக்கும் இடையில் கடந்த சில மாதங்களாக மணிக்கணக்கில் நடைபெற்றிருந்த தொலைபேசி உரையாடல்களையும் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதா மாதம் அவளுக்கு அளித்து வந்திருந்த தொகையையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் அவர்கள் இருவருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறதே? பிறகெப்படி இதை கற்பழிப்பு என்பது? எதிரியின் வழக்கறிஞர் இதை மிக எளிதாக தன்னுடைய வாதத்திலோ அல்லது குறுக்கு விசாரணையிலோ ஒன்றுமில்லாமல் செய்துவிட முடியுமே? சரி எதற்கும் இருக்கட்டும் என்று இ.த.ச. 375யும் சேர்த்தார்.
பிறகு சார்ஜ்ஷீட்டில் மீதமிருந்த பகுதிகளை பூர்த்தி செய்து, அதனுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள், சான்றுகள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவற்றை பட்டியலிட்டு ஒரு உறையிலிட்டு மூடி எழுந்து சென்று SHO ஆய்வாளர் அறையை எட்டிப் பார்த்தார். அறை காலியாக இருந்தது. வாசலில் அமர்ந்திருந்த ரைட்டரை சைகை காட்டி அழைத்து அவர் வந்ததும் அவர் கையில் உறையை திணித்தார். 'யோவ் இத சார் வந்தா குடுத்துரு, மறந்துராதே...' என்றார்.
'ஐயா இப்ப வந்துருவாங்க சார்.. இத நீங்களே அவர்கிட்ட நேர குடுத்தா.....'
'யோவ் அது எனக்கு தெரியாதா?' என்று எரிந்து விழுந்தார் தன்ராஜ். 'இந்தா இத புடி. எனக்கு அர்ஜன்டா ஒரு வேலை இருக்கு. திரும்பி வர்ற சாயந்தரம் ஆயிரும். ... சார் கேட்டா சொல்லிரு ' என்றவாறு ரைட்டரின் கையில் உறையை திணித்துவிட்டு அவருடைய பதிலுக்கு காத்திராமல் வெளியேறி தன் பைக்கை நோக்கி நடந்தார்.
'என்ன ஆச்சி இவருக்கு?' என்பதுபோல் அவர் வெளியேறும் வரை பார்த்துக்கொண்டு நின்றிருந்த ரைட்டர் தன் மேசை மீது வைத்திருந்த பொது நாட்குறிப்பு புத்தகத்தில் உரையைப் பெற்றுக்கொண்டதை நேரத்துடன் குறித்துக்கொண்டு தன் வேலையை பார்க்கலானார்.
*********
பனகல் பார்க்கிலிருந்து வெளியேறிய ராஜசேகர் தன் காரில் ஏறி அமர்ந்து அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தான்.
மணியைப் பார்த்தான்.
அடுத்து தான் சந்திக்க நினைத்திருந்தவரை இப்போது போய் பார்க்க நேரம் இருக்குமா என்று யோசித்தான்.விசிட்டர்ஸ் டைம் முடியறதுக்கு இன்னும் ஒன்றரை மணி நேரம் இருக்கு. அதுக்குள்ள போயிறலாம் என்ற முடிவுடன் கோபாலின் மனைவி நளினி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையை நோக்கி விரைந்தான்.
அவன் சென்ற வழி முழுவதும் வாகன நெரிசல் அதிகமாயிருந்ததால் நான்கு கி.மீ தூரமே இருந்த இடத்தை அவன் சென்றடைய அரை மணி நேரத்திற்கும் மேல் எடுத்தது. இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் பார்வையாளர் நேரம் முடிந்துவிடும் என்பதால் கிடைத்த இடத்தில் வாகனத்தை பார்க் செய்துவிட்டு நளினி அனுமதிக்கப்பட்டிருந்த அறை விவரத்தை ரிசெப்ஷனில் கேட்டு தெரிந்துக்கொண்டு விரைந்தான்.
நல்லவேளையாக அவன் அங்கு சேர்ந்தபோது நளினியுடன் அவளுடைய மாமனார் சீனிவாசனும் அவருடைய தங்கையும் இருந்தனர். ஆகவே அவன் தன்னை யாரென்று நளினியிடம் கூறிக்கொள்ள தேவையில்லாமல் போய்விட்டது.
அறிமுகமில்லாத நபரிடம் அவர் மனம் விட்டு பேசுவாரோ என்ற தயக்கத்திற்கும் இப்போது இடமிருக்காது என்பதை நினைத்து நிம்மதியடைந்தான்.
'வாங்க சார்.... என்ன இந்த பக்கம்?' என்றார் சீனிவாசன் அவனைக் கண்டதும்.
ராஜசேகர் தயக்கத்துடன் சீனிவாசனையும் அவருடைய தங்கையையும் பார்த்தான். அவர்கள் இருவரும் இருந்தது அவனுக்கு ஒரு வகையில் உதவியாகத்தான் இருந்தது என்றாலும் அவர்கள் இருக்கும்போது நளினி தன்னுடன் தயக்கமில்லாமல் பேசுவாரா என்கிற தயக்கமும் இருந்தது. இருந்தாலும் இவர்களை எப்படி போகச் சொல்வது?
'இல்ல சார்.... கோபால் சாரோட வய்ஃப பாத்துட்டு போகலாம்னுதான்....' என்று இழுத்தான் தயக்கத்துடன்.
சீனிவாசனுக்கு உடனே புரிந்துவிட்டது. எழுந்து தன் தங்கையை பார்த்தார். 'மங்களம் டைமாச்சி வா...' என்றவாறு தன் மருமகளைப் பார்த்தார். 'நளினி இவர் நம்ம லாயர். கோபால் கேஸ்ல இவர்தான் ஆஜராவறார்... நம்ம ஃப்ளாட்லதான் குடியிருக்கார்.... இவர் உங்கிட்ட கேஸ் விஷயமா என்ன கேட்டாலும் தயங்காம சொல்லு....'
நளினி அப்போதும் தயக்கத்துடன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த ராஜசேகர், 'அப்படியெதும் சங்கடமா கேட்டுற மாட்டேங்க... கவலைப்படாதீங்க.' என்றான் புன்னகையுடன்.
'அவளுக்கு தெரியும் சார்.... நீங்க என்ன வேணும்னாலும் கேட்டு தெரிஞ்சிக்கலாம்...' என்ற சீனிவாசன் எழுந்து புறப்பட்டு நின்ற அவருடைய சகோதரியுடன் அறையை விட்டு வெளியேறினார்.
அவர்கள் இருவரையும் தொடர்ந்து சென்ற ராஜசேகர், 'சார் ஒரு நிமிஷம்..' என்றான்.
சீனிவாசன், 'நீ போய் கார்கிட்ட வெய்ட் பண்ணு... நா சார் கிட்ட பேசிட்டு வந்துடறேன்.' என்றவாறு தன் சகோதரியை அனுப்பிவிட்டு ராஜசேகரை பார்த்தார். 'சொல்லுங்க சார்...'
'இப்ப அவங்க ஹெல்த் பரவால்லையா சார்?'
'ஆமா சார்.. She is perfectly OK....ஆனா வீட்டுக்கு வர்றதுக்கு பயமாருக்கு போலருக்கு.... எங்கூட வந்து இரும்மான்னு சொல்லி பார்த்தேன்.... அதுக்கும் ஒன்னும் சொல்லாம இருக்கா... அந்த பாவி என்ன செஞ்சானோ தெரியல அவன் பேர கேட்டாலே மிரள்றா.. பாத்தா பாவமாருக்கு.... அவளுக்கு அண்ணன் ஒருத்தன் இருக்கான்னுதான் பேரு.... இதுவரைக்கும் ஒருதரம் கூட வந்து பாக்கலை... ஆக, அங்கயும் போறதுக்கு வழியில்லை... அதான் இங்கயே இன்னும் ஒரு வாரம் இருக்கட்டும்டான்னு என் ஃப்ரெண்டுக்கிட்ட கேட்டுக்கிட்டேன்.... சரின்னுட்டான்.... இந்த ஹாஸ்பிட்டல்ல எல்லாமே அவந்தான்... அதனால அவன் சொன்னா அதுக்கு அப்பீலே இல்ல..ஆனா அதுக்காகன்னுட்டு இங்கவே ரொம்ப நாள் வச்சிக்கிட்டிருக்க முடியாதே.... ஒரு வாரம் பாப்போம்னுட்டு ஒன்னும் சொல்லலை...'
'நா கேஸ் விஷயமா பேசறதாலே அவங்க ஹெல்த்துக்கு ஏதும்.....'
சீனிவாசன் சிரித்தார். 'அவளுக்கு உடம்புக்கு ஒன்னுமில்ல சார்... மனசுலதான் தேவையில்லாத பயத்த வச்சுக்கிட்டிருக்கா.... எங்க கோபால் பெய்ல வந்து மறுபடியும் ஏதாச்சும் செய்வானோங்கற பயமாருக்கலாம்.... நீங்க போயி பேசுங்க... ஆனா இன்னும் அரை மணிதான் இருக்கு போலருக்கு....'
'அது போறும் சார்... சும்மா ரெண்டு மூனு விஷயம்தான் கேக்கணும்...'
'அப்ப சரி... ஆனா நீங்க கேக்கற எல்லா கேள்விக்கும் பதில் சொல்லலன்னா வருத்தப்படாதீங்க. எங்கக் கிட்டவே பேசறதுக்கு பயப்படறா... பேசிப் பாருங்க...' என்றவாறு சீனிவாசன் லிஃப்ட்டை நோக்கி நடக்க ராஜசேகர் அறைக்குள் நுழைந்து நளினியின் கட்டிலருகில் கிடந்த இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்தான்.
அவனையே பார்த்தவாறு கட்டிலின் தலைமாட்டில் சாய்ந்து அமர்ந்திருந்த நளினி அவனைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தாள். முகம் முழுவதுமாக வெளிறிப்போயிருந்தது. சதைப்பிடிப்பே இல்லாமல் மெலிந்து காணப்பட்ட அவருடன் அதிக நேரம் பேசாமல் சுருக்கமாகவே விசாரணையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.
'உங்க ஹஸ்பென்ட் கோபால பத்தி ஒரு சில கேள்விங்கள மட்டும் கேக்கலாம்னு பாக்கேங்க.... உங்களால பேச முடியுதா?' என்று துவங்கினான்.
நளினியிடமிருந்து ஒரு மெலிதான புன்னகையும் முடியும் என்பதுபோன்ற தலையசைப்புமே பதிலாக கிடைத்தது.
'உங்களுக்கும் கோபாலுக்கும் மேரேஜ் ஆகி எத்தன வருசம் இருக்கும்?'
'போன வாரத்தோட ரெண்டரை வருஷம் ஆவுது...'
'உங்களுக்குள்ள துவக்கத்திலிருந்தே மனஸ்தாபம் இருந்திச்சீங்களா?'
'ஆமான்னுதான் சொல்லணும்.... ஏன்னா அவருக்கு என்னெ மேரேஜ் பண்ணிக்கறதுக்கு எந்த இஷ்டமும் இல்ல. எங்க மாமனாரோட கட்டாயத்துக்காகத்தான் பண்ணிக்கிட்டேன்னு நா கல்யாணம் ஆகி வந்த முத நாளே மூஞ்சில அடிச்சா மாதிரி சொல்லிட்டார்.....' என்று கூறிக்கொண்டிருக்கும்போதே நளினியின் குரல் நடுங்க ஆரம்பித்தது. சிரமப்பட்டு அழுகையை கட்டுப்படுத்த முயல்வது தெரிந்தது. கோபால் எந்த அளவுக்கு முன்கோபியோ இவர் அந்த அளவுக்கு உணர்ச்சிவசப்படுபவர் போலிருக்கிறது என்று நினைத்தான். பயந்த சுபாவம் கொண்டவரும் போலிருக்கிறது. அவருடைய இந்த பயம்தான் கோபாலை மேலும் ஆத்திரமடையச் செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது.
'அப்போ உங்களுக்குள்ள சுமுகமான உறவே இருந்ததில்லைன்னு சொல்லலாமா?'
ஆமாம் என்பதுபோல் தலையை மட்டும் அசைத்தாள் நளினி...
'உங்களுக்கு மேரேஜ் ஆனப்பலருந்தே அவருக்கு மத்த பெண்களோட தொடர்பு இருந்ததா... உங்களுக்கு ஏதாச்சும் தெரியுமா?'
'முதல்ல தெரியல சார்.... ஆனா எனக்கு சந்தேகம் இருந்துது...'
'எப்படி சொல்றீங்க?'
தொடரும்..
IPC Sec: 299 க்கும் 300 க்கும் உள்ள வேறுபாட்டை இன்றுதான் தெரிந்துகொண்டேன். இவைகளின் விளக்கத்தை கொடுத்திராவிட்டால் கதையில் துணை ஆய்வாளர் Charge Sheet இல் இந்த Section ஐ குறிப்பிட்டதின் காரணமும் அதனால் ஏற்பட இருக்கும் விளைவுகள் பற்றியும் தெரிந்துகொள்ளமுடியாமல் போயிருக்கும். பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குகதை வேறுமாதிரி திசையில் பயணிப்பதுபோல் தெரிகிறதே. காத்திருக்கிறேன் அடுத்து நடக்க இருப்பதை அறிய.
பதிலளிநீக்கு/பிறகு சம்பவம் நடந்த தினத்தன்று அக்யூஸ்ட் கொலையுண்டவருடன் உடல் உறவு கொண்டிருந்தார் என்ற தகவல் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததை பற்றி சிந்தித்தார்./ இது என்ன புது தகவல்.? கோபாலுடன்தான் உறவு என்று தெரிந்ததா.?
26 அத்தியாயத்தையும் காப்பி பண்ணி சேமித்திருக்கிறேன்.180 பக்கங்கள் ஆகிவிட்டது. நீங்கள் தொடரை முடித்தபின்தான் படிக்க ஆரம்பிக்கவேண்டும். ஏனெனில் சஸ்பென்சுகளைத் தாங்கும் சக்தி இல்லை. அநேகமாக என் ஆயுளுக்குள் இந்த தொடரைப்படித்து முடித்து விடுவேன் என்று நம்புகிறேன்.
பதிலளிநீக்குநடனசபாபதியின் பின்னூட்டங்களிலிருந்து தொடர் படு சஸ்பென்சாக இருக்கும் போலிருக்குது.
பதிலளிநீக்குவே.நடனசபாபதி said...
IPC Sec: 299 க்கும் 300 க்கும் உள்ள வேறுபாட்டை இன்றுதான் தெரிந்துகொண்டேன். இவைகளின் விளக்கத்தை கொடுத்திராவிட்டால் கதையில் துணை ஆய்வாளர் Charge Sheet இல் இந்த Section ஐ குறிப்பிட்டதின் காரணமும் அதனால் ஏற்பட இருக்கும் விளைவுகள் பற்றியும் தெரிந்துகொள்ளமுடியாமல் போயிருக்கும்.//
இந்த பகுதியை படிப்பவர்களுக்கு உதவியாக இருக்குமே என்றுதான் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவுகளை பதிவு செய்தேன்.
கதை வேறுமாதிரி திசையில் பயணிப்பதுபோல் தெரிகிறதே. //
அப்படியா?
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.
G.M Balasubramaniam said...
பதிலளிநீக்கு/பிறகு சம்பவம் நடந்த தினத்தன்று அக்யூஸ்ட் கொலையுண்டவருடன் உடல் உறவு கொண்டிருந்தார் என்ற தகவல் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததை பற்றி சிந்தித்தார்./ இது என்ன புது தகவல்.? கோபாலுடன்தான் உறவு என்று தெரிந்ததா.?//
DNA டெஸ்ட் செய்து பார்த்தால்தான் தெரியுமாம்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
பதிலளிநீக்குபழனி. கந்தசாமி said...
26 அத்தியாயத்தையும் காப்பி பண்ணி சேமித்திருக்கிறேன்.180 பக்கங்கள் ஆகிவிட்டது. நீங்கள் தொடரை முடித்தபின்தான் படிக்க ஆரம்பிக்கவேண்டும். ஏனெனில் சஸ்பென்சுகளைத் தாங்கும் சக்தி இல்லை. அநேகமாக என் ஆயுளுக்குள் இந்த தொடரைப்படித்து முடித்து விடுவேன் என்று நம்புகிறேன். //
உங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் ஆயுள் முடிந்துவிடுமா என்ன? நீங்கள் வெகு நாள் நல்ல சுகத்தோடு வாழ வேண்டும் என்பதுதான் என்னைப் போன்றோர்களுடைய ஆவல் சார்.... பிரார்த்தனையும் கூட..
நீங்கள் ஒவ்வொரு பதிவையும் காப்பி/பேஸ்ட் முறையில் சேமிக்க வேண்டாம். அதற்காகத்தான் இன்று ஒரு சிறப்பு பதிவில் தொடர் முழுவதையும் pdf கோப்பாக தரவிறக்கம் செய்வது எப்படி என விளக்கியுள்ளேன். நீங்கள் தொடர் முடிந்தவுடன் படிக்க வேண்டும் என்று நினைத்தால் இறுதி பதிவில் நான் வெளியிடும் ஒருங்கிணைந்த PDF கோப்பை தரவிறக்கம் செய்து படித்துக்கொள்ளலாம். நன்றி.
நடனசபாபதியின் பின்னூட்டங்களிலிருந்து தொடர் படு சஸ்பென்சாக இருக்கும் போலிருக்குது.//
க்ரைம் நாவலின் முக்கிய அம்சமே சஸ்பென்ஸ்தானே :))
மிக்க நன்றி, திரு.ஜோசப்.
பதிலளிநீக்குபாவம் அந்த பெண்மணியிடம் என்ன என்ன கேள்விகள் கேட்பாரோ இந்த மனுசன்.
பதிலளிநீக்குSasi Kala said...
பதிலளிநீக்குபாவம் அந்த பெண்மணியிடம் என்ன என்ன கேள்விகள் கேட்பாரோ இந்த மனுசன்.//
ரொம்பவும் சங்கடமான கேள்விங்கள கேக்க மாட்டேன்னுதான் சொல்லிட்டாரே?
Sasi Kala said...
பதிலளிநீக்குபாவம் அந்த பெண்மணியிடம் என்ன என்ன கேள்விகள் கேட்பாரோ இந்த மனுசன்.//
ரொம்பவும் சங்கடமான கேள்விங்கள கேக்க மாட்டேன்னுதான் சொல்லிட்டாரே?