09 செப்டம்பர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 12

"Even the apex court, in one of its judgments, expressed anguish over repeated adjournments: "We are distressed to note that it is almost a common practice and regular occurrence that trial courts flout the said command with impunity."

"Even when witnesses are present, cases are adjourned on far less serious reasons or even on flippant grounds. Adjournments are granted even in such situations on the mere asking for it. Quite often, such adjournments are granted to suit the convenience of the advocate concerned," the bench observed.

******


ராஜசேகர் சீனிவாசனின் கையில் இருந்ததை வாங்கினான். அது ஒரு கணிசமான தொகைக்கு அவனுடைய பெயருக்கு எழுதப்பட்டிருந்த காசோலை!.

'இது எதுக்கு சார்?'

'இந்த கேசுக்குண்டான ஒங்க ஃபீஸ் சார்.'

'இன்னும் கேஸ் ட்ரையலுக்கே வரலையே சார்... அதுக்குள்ள எதுக்கு இவ்வளவு பெரிய அமவுன்ட்?'

'இல்ல சார்.... இந்த கேஸ் முடிஞ்சதுக்கப்புறம் இத கொடுக்கணும்னு எனக்கு தோனுமான்னு தெரியலை.... அதனாலதான் இப்பவே கொடுத்துட்டேன்.....' 

அவருடைய குரலில் இருந்த இறுக்கம் அவனை வேதனையடையச் செய்தது. 'சார்... இப்ப நீங்க ரொம்ப டென்ஷன்ல இருக்கீங்கன்னு நினைக்கேன்.... தயவு செஞ்சி இத திருப்பி வாங்கிக்கிருங்க.... கேஸ் ட்ரையலுக்கு வரட்டும்.... ப்ராசிக்யூஷன் சைட்ல இவ்வளவு டீப்பா போயி இன்வெஸ்ட்டிகேஷன் பண்ண மாட்டாங்க. அவங்களுக்கு இருக்கறதெல்லாம் அந்த பக்கத்து வீட்டு லேடியோட விட்னஸ்தான்... அத கோபாலுக்கும் அவங்களுக்கும் இருந்த முன்விரோதத்த காட்டி ஈசியா ஒடச்சிறமுடியும்....'

அவனை மேலே பேச விடாமல் கையை உயர்த்தி தடுத்து நிறுத்திய சீனிவாசன் ஒரு விரக்தி சிரிப்புடன் அவனை பார்த்தார். 'மறுபடியும் டெக்னிக்கலா அவனெ காப்பாத்த போறீங்களா சார்? வேணாம் சார்... அப்படித்தான் அந்த மொதல் கேஸ்லயும் அவனோட வக்கீல் காப்பாத்துனார்.... அதனாலதான் அவரையே இந்த கேஸ்லயும் வைக்கணும்னு மகாதேவன் துடியா துடிக்கிறான்......'

அவர் சொல்வதில் உள்ள அர்த்தம் அவனுக்கு புரிந்தது. இருந்தும் எப்படி பதிலளிப்பது என புரியாமல் தன் கையிலிருந்த காசோலையையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான். அறையிலிருந்த சுவர்க் கடிகாரம் பத்து முறை ஒலித்து அவனுடைய கவனத்தை ஈர்த்தது. 

'பத்து மணியாயிருச்சா... இன்னும் ஒரு மணி நேரத்துல கோர்ட்ல இருக்கணுமே....' என்று நினைத்தவாறு ராஜசேகர் எழுந்து நின்றான். 'சாரி சார்... எனக்கு டைம் ஆயிருச்சி... நா கெளம்பறேன்... இந்த செக் இப்போதைக்கி உங்கக் கிட்டவே இருக்கட்டும். சாயந்தரம் மீட் பண்ணி இதப்பத்தி பேசலாம்...' என்றவாறு காசோலையை தனக்கு முன்னாலிருந்த குறுமேசை மீது வைத்துவிட்டு தன்னுடைய ஒலிப்பதிவு கருவியையும் வசந்தின் அறிக்கை அடங்கிய கோப்பையும் எடுத்து கைப்பெட்டியில் வைத்து எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி திரும்பினான்.  

அவன் சற்றும் எதிர்பாராதபோது அவன் குறுமேசையில் விட்டுச் சென்ற காசோலையை எடுத்து மடித்து அவனுடைய சட்டைப் பையில் திணித்த சீனிவாசன், 'இத வேணாம்னு சொல்லி என்னெ மேலும் கடனாளியாக்கிறாதீங்க சார்.... You report has opened my eyes......இந்த கேஸ் இனி எப்படி முடிஞ்சாலும் I can face it...  ஒங்களால என்ன முடியுமோ அத செய்ங்க...  மீதி எதுவானாலும் விதிப் படி நடக்கட்டும்....' அதற்கு மேலும் தயங்கி நின்ற ராஜசேகரின் முழங்கையைப் பற்றி அவனை வாசல்வரை கொண்டு சென்று வழியனுப்பினார்.

*********

சாதாரணமாக நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன்பு தன்னுடைய அலுவலகத்திற்குச் சென்று தன்னுடைய குமாஸ்தா அன்று என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு செல்வது வழக்கம். ஆனால் அன்று அதற்கு நேரம் இல்லையென்பதால் வீட்டிலிருந்து நேராக நீதிமன்றத்தை நோக்கி வாகனத்தை செலுத்தினான். அலுவலக நேரம் என்பதால் போகும் வழி முழுவதும்  வாகன நெரிசல் வழக்கம்போல் அவனை வேறெதையும் சிந்திக்க விடாமல் தடுத்தது. டிராஃபிக் சிக்னலுக்காக காத்திருக்க வேண்டிய இடம் ஒன்றில் தன்னுடைய குமாஸ்தாவை தொலைபேசியில் அழைத்து நீதிமன்றத்திற்கு வந்துவிடும்படி பணித்தான். 

அவனுடன் பேசிவிட்டு இணைப்பைத் துண்டித்த மறுநிமிடமே அவனுடைய கைப்பேசி மீண்டும் அலறியது. 

சிக்னல் சிவப்பிலிருந்து பச்சைக்கு தாவ வாகனத்தை கிளப்பியவாறே கைப்பேசி திரையைப் பார்த்தான். 

அவனுடைய மனைவி கோகிலா!

'இவகிட்ட டிரைவ் பண்றப்போ கூப்டாதேன்னு எத்தனை தடவ சொல்றது?' எடுக்காமல் விட்டுவிடலாமா என்று யோசித்தான். ஆனால் அது தொடர்ந்து அடிக்கவே எடுத்து எரிச்சலுடன், 'என்ன?' என்றான்.

'கோவப்படாதீங்க. நீங்க போன கொஞ்ச நேரத்துலயே கீழ் வீட்ல சீனிவாசனுக்கு ஹார்ட் ஹட்டாக் மாதிரி வந்துருச்சிங்க... ஆடிட்டர்தான் ஆம்புலன்ஸ வரவச்சி அடையார்லருக்கற ஹாஸ்ப்பிடலுக்கு கொண்டு போய்ட்டு இருக்காங்க.'

இதை சற்றும் எதிர்பார்க்காத ராஜசேகர் அதிர்ச்சியில் உறைந்துபோனான். கோபாலைப் பற்றிய விசாரனை தகவல்களை அவரிடம் காட்டி அவருடைய உயிருக்கு எமனாக ஆகிவிட்டோமோ என்ற எண்ணமும் இதற்கெல்லாம் மூல காரணமே நாம்தானே என்ற  குற்ற உணர்வும் அவனை வதைத்தது. இப்போது என்ன செய்வது என்று குழம்பினான். அன்று விசாரனைக்கு வரவிருந்த இரு வழக்கிகளிலுமே அதற்கு முந்தைய விசாரனை தேதியில் வாய்தா வாங்கியிருந்ததாலும் அவை இறுதிக்கட்டத்திலிருந்த வழக்குள் என்பதாலும் மேலும் வாய்தா வாங்க வாய்ப்பில்லை என்பது அவனுக்கு உறைத்தது. நீதிமன்ற அலுவல்களை முடித்துக்கொண்டு சீனிவாசனை சென்று சந்திக்கலாம் என்ற தீர்மானத்துடன் நீதிமன்றத்தை நோக்கி விரைந்தான்.

ஆனால் அன்றைய தினம் அத்தனை எளிதாக முடியப் போவதில்லை என்பதை அவனுக்கு உணர்த்தும் விதமாக மீண்டும் அவனுடைய கைப்பேசி ஒலித்தது. அவனுக்கு அறிமுகமில்லாத எண். ஒருவேளை மருத்துவமனையிலிருந்து இருக்குமோ என்ற நினைப்புடன் எடுத்து 'ஹலோ' என்றான்.

எதிர்முனையிலிருந்து ஒரு உரத்த குரல். 'சார்.... நீங்க அட்வகேட் ராஜசேகர்தானே..'

'ஆமாங்க... நீங்க யாரு தெரியலையே.... நா டிரைவ் பண்ணிக்கிட்டு இருக்கேன். அர்ஜன்ட் இல்லேன்னா ஒரு அரை மணி நேரம் கழிச்சி.....'

'சார்... அர்ஜன்ட்தான் சார்... காஞ்சிபுரம் சித்ரா ஹோட்டல் ரிசப்ஷன்லேருந்து பேசறோம்,  நம்ம ஹோட்டல்ல ஸ்டே பண்ண வச்சீங்களே மிஸ்டர் கோபால், அவர கொஞ்ச நேரத்துக்கு முன்னால போலீஸ் வந்து அரெஸ்ட் பண்ணி கூட்டிக்கிட்டு போய்ட்டாங்க சார்... என்ன ஏதுன்னு ஒன்னும் சொல்லலை.... நேரா சென்னைக்கித்தான் கொண்டு போறோம்னு கூட வந்த ஏட்டு சொன்னார்... ரூம் பில் கூட செட்டில் பண்ணல சார்... என்ன ஏதுன்னு பாருங்க.'

இதை சற்றும் எதிர்பார்த்திராத ராஜசேகர் ஏதோ நினைவுக்கு வர, 'ஏங்க, நீங்க இந்த இன்ஃபர்மேஷன மிஸ்டர் கோபாலோட ஃபாதருக்கு ஃபோன் பண்ணி சொன்னீங்களா?' என்றான். ஒரு வேளை இந்த தகவல்தான் அவரை அதிர்ச்சியடைய செய்ததோ... அவன் நினைத்தபடியேதான் நடந்திருந்தது. 'ஆமா சார்... மிஸ்டர் கோபால்தான் அப்பாவுக்கு ஃபோன் பண்ணி சொல்லிருங்கன்னு சொன்னார்.'

'அவர் எப்படி ரியாக்ட் பண்ணார்?'

'அவர் ஒன்னுமே சொல்லலை சார்... அவரோட லாயர்கிட்ட சொல்லிருங்கன்னு சொல்லிட்டு ஃபோன வச்சிட்டார்.'

அதற்கு மேலும் தொடர்வதற்கு விருப்பமில்லாமல் இணைப்பைத் துண்டித்துவிட்டு மவுனமாகிப்போன கைப்பேசியை பார்த்தவாறே ஒரு சில நொடிகள் அமர்ந்திருந்த ராஜசேகர் சுதாரித்துக்கொண்டு வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு ஸ்டீயரிங் மீது சாய்ந்து அமர்ந்தான். 'இன்னைக்கி யார் முகத்துல முழிச்சேன்... இப்படி படுத்துதே.. இப்ப எங்கன்னு போறது? இன்னும் அரை மணி நேரத்துக்குள்ள கோர்ட்ல இருக்கணுமே...' சட்டென்று ஏதோ நினைத்துக்கொண்டவனாய் தன் கைப்பேசியை எடுத்து தன்னுடைய முன்னாள் அசிஸ்டென்ட் வசந்தை அழைத்தான். வசந்த் ஃப்ரீலான்ஸ் இன்வெஸ்டிகேஷன் தொழிலை முழுநேர அலுவலாக துவக்குவதற்கு முன்பு ராஜசேகரின் ஜூனியராகத்தான் இருந்தான். 

'என்ன பாஸ்?' என்று வழக்கம்போலவே உற்சாகதுடன் வந்தது வசந்தின் குரல். 'ஏதாவது அர்ஜன்ட் ஒர்க்கா?'

'அன்று காலையிலிருந்து நடந்தவைகளை அவனிடம் சுருக்கமாக கூறி முடித்த ராஜசேகர், 'கோபால கோர்ட்ல ப்ரொட்யூஸ் பண்றப்ப அங்க நா இருந்தாவனும் வசந்த். அதனால நீ உடனே கோர்ட்டுக்கு புறப்பட்டு வா... இன்னைக்கி எப்படியாவது அந்த ரெண்டு கேஸ்லயும் வாய்தா வாங்கிரு... மஜிஸ்டிரேட் முரண்டு புடிச்சார்னா இதான் ஃபைனல் இனி கேக்க மாட்டோம்னு சொல்லு... நா இன்னும் ஹாஃபனவர்ல கோர்ட் வாசல்ல இருப்பேன்.... ஓக்கேவா... நா கோபால் கேஸ முடிச்சிட்டு சீனிவாசன் சார வேற போயி பாக்கணும்....'

'சரி பாஸ்.... தோ கிளம்பிட்டேன்'

கைப்பேசியை மூடி வைத்துவிட்டு கைக்கடிகாரத்தைப் பார்த்தான். வாகன நெரிசல் சற்றே தளர்ந்திருந்தை உணர்ந்தவன் மீண்டும் வாகனத்தை கிளப்பி அடுத்த அரை மணியில் நீதிமன்ற வளாகத்தை அடைந்தான். 

அவன் வாகனத்தை வழக்கமாக நிறுத்தும் இடத்தில் தன்னுடைய குமாஸ்தா நாகு கலவரத்துடன் நின்றிருப்பதை கவனித்தான். ராஜசேகர் வாகனத்திலிருந்து இறங்குவதற்கு முன்பே அவனை நெருங்கிய நாகு, ' மிஸ்டர் கோபால மறுபடியும் அரெஸ்ட் பண்ணிட்டாங்களாம் சார்... மாதவன் சார் ஆஃபீஸ்லருந்து  ஃபோன் பண்ணி சொன்னாங்க...ஏதோ பெய்ல் கண்டிஷன வயலேட் பண்ணிட்டாராம்....பண்ணென்டு மணிக்குள்ள கோர்ட்ல ப்ரொட்யூஸ் பண்ணிருவாங்கங்கறா மாதிரி சொன்னார்.....' என்றான் மூச்சு விடாமல்.

'ஆமாய்யா... எனக்கும் ஃபோன் வந்துச்சு' என்ற ராஜசேகர், 'நீ இந்த கேஸ் கட்டுங்கள புடி.... நா வசந்த வரச்சொல்லியிருக்கேன். ரெண்டு கேஸ்லயும் கடைசியா ஒரு முறை வாய்தா வாங்கிரணும். நீயும் வசந்த் கூட இருய்யா..'

'சரி சார்... நா பாத்துக்கறேன்.' என்று கெத்தாக கூறிய குமாஸ்தா மீது 'கிழிச்சே... நீ உள்ள பூந்து குட்டைய குழப்பாம இருந்தா போறும்...' என்று எரிந்து விழுந்தான்.

அடுத்த பத்து நிமிடங்களில் வசந்த் வந்து சேர்ந்தான். அவனையும் குமாஸ்தாவையும் அழைத்துக்கொண்டு நீதிமன்ற கட்டிடத்துக்குள் நுழைந்த ராஜசேகர் அன்று விசாரனைக்கு வரவிருக்கும் வழக்குகளைப் பற்றி சுருக்கமாகக் கூறிவிட்டு அவன் என்ன செய்ய வேண்டும் என்றும் கூறினான். 'கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான் வசந்த். மஜிஸ்டிரேட் நல்ல மூடுல இல்லன்னா பேஜார் பண்ணிருவார்... இருந்தாலும் நீ அப்செட் ஆயி எதையாவது சொல்லி வச்சிராத. வேற எதுக்கும் அவர் மசியலன்னா மட்டும் கோபால் கேஸ் விஷயத்த சொல்லி நா இன்னொரு கோர்ட் ரூம்ல இருக்க வேண்டிய கட்டாயமாயிட்டதால என்னால வர முடியலன்னு சொல்லு... அதுக்கப்புறம் அவர் என்ன செய்றாரோ செஞ்சிக்கட்டும்... என்ன சொல்றே?'

'நீங்க கவலைப்படாதீங்க பாஸ்... அந்த பொடிமட்ட கேஸ்தான, நா பாத்துக்கறேன்...'என்று உற்சாகமாக அவனை வழியனுப்பி வைத்தான் வசந்த். அன்றைய வழக்குகளை விசாரிக்கவிருந்த நீதிபதி அடிக்கடி பொடி உறிஞ்சும் வழக்கம் உள்ளவர் என்பதால் அவருக்கு வழக்கறிஞர்கள் வைத்த பெயர் 'பொடி மட்டை!'

தொடரும்..

8 கருத்துகள்:

  1. ஒவ்வொரு பதிவிலும் ஒரு எதிர்பாரா முடிச்சு தந்து, அதை எப்படி வழக்கறிஞர் எதிர்கொள்ளப் போகிறார் என்று படிப்பவர் மனதில் ஆர்வத்தை உண்டாக்கி தொடரை கொண்டுபோகும் உங்களுக்கு ‘மர்மத்தொடர் மன்னர்’ என்ற பட்டம் தரலாம்! ஆர்வத்தோடு காத்திருக்கிறேன். நாளை வரும் பதிவுக்காக.

    பதிலளிநீக்கு
  2. ’வசந்த்’ என்ற பெயருக்கு வேறு பெயர் வைத்திருக்கலாமோ .. சுஜாதா நினைவுக்கு வருவதால் சொன்னேன் ...!

    பதிலளிநீக்கு
  3. வே.நடனசபாபதி said...
    ஒவ்வொரு பதிவிலும் ஒரு எதிர்பாரா முடிச்சு தந்து, அதை எப்படி வழக்கறிஞர் எதிர்கொள்ளப் போகிறார் என்று படிப்பவர் மனதில் ஆர்வத்தை உண்டாக்கி தொடரை கொண்டுபோகும் உங்களுக்கு ‘மர்மத்தொடர் மன்னர்’ என்ற பட்டம் தரலாம்! //

    சரியான இடத்துல தொடரும் போட்டாத்தான ஒரு சுவார்ஸ்யம் இருக்கும். அதனாலதான்:))

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்...

    பதிலளிநீக்கு
  4. தருமி said...
    ’வசந்த்’ என்ற பெயருக்கு வேறு பெயர் வைத்திருக்கலாமோ .. சுஜாதா நினைவுக்கு வருவதால் சொன்னேன் ...!//

    எனக்கு சுஜாதாவையும் பிடிக்கும் அதிலும் அதிகமாக அவர் படைத்த கேரக்டர் வசந்தையும் எனக்கு பிடிக்கும். அந்த பெயரில் ஒரு கதாபாத்திரத்தை வேண்டுமென்றேதான் படைத்தேன். வேண்டுமானால் அவருக்கு இது ஒரு tribute என்று வைத்துக்கொள்ளுங்கள்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

  5. பெயில் கண்டிஷன் மீறியதால் போலீஸ் மீண்டும் கைது செய்தது என்னும்போது என்ன மீறல் என்று சொல்ல வில்லையே. பெற்ற தந்தையே பிள்ளையை நம்பாமல் இருப்பது ராஜசேகருக்கு அனுகூலம்தானே. பதிவு நன்கு களைகட்டுகிறது. தொடர்கிறேன். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. .M Balasubramaniam said...

    பெயில் கண்டிஷன் மீறியதால் போலீஸ் மீண்டும் கைது செய்தது என்னும்போது என்ன மீறல் என்று சொல்ல வில்லையே. //

    அடுத்த பதிவில் தெரிந்துவிடும்:)

    பெற்ற தந்தையே பிள்ளையை நம்பாமல் இருப்பது ராஜசேகருக்கு அனுகூலம்தானே. பதிவு நன்கு களைகட்டுகிறது. தொடர்கிறேன். பாராட்டுக்கள்.//

    மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  7. அவருடைய தந்தைக்கு என்ன ஆனது அன்று அறிய ஆவல்.

    பதிலளிநீக்கு
  8. si Kala said...
    அவருடைய தந்தைக்கு என்ன ஆனது அன்று அறிய ஆவல்.//

    பெருசா ஒன்னும் ஆகலை.... சின்ன ஷாக், அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு