"CRPC SEC.161.Examination of witnesses by police.- (1) Any police officer making an investigation or any police officer not below such rank as the State Government may, by general or special order, examine orally any person supposed to be acquainted with the facts and circumstances of the case.
(2) Such person shall be bound to answer truly all questions relating to such case put to him by such officer, other than questions the answers to which would have a tendency to expose him to a criminalcharge or to a penalty or forfeiture."
*****
மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள சீனிவாசனை பார்த்துவிட்டு வெளியே வந்த அட்வகேட் மகாதேவன் சட்டை பாக்கெட்டிலிருந்த தன்னுடைய கைப்பேசி மணி ஒலிப்பதை கேட்டு எடுத்து பார்த்தார். அறிமுகமில்லாத எண்ணைக் கண்டதும் சற்று தயங்கினார். பிறகு எடுத்து தயக்கத்துடன், 'யாருங்க?' என்றார்.
'மிஸ்டர் மகாதேவன்?'
'ஆமா, நீங்க யாருங்க?'
'நா மயிலாப்பூர் எஸ்.ஐ. தன்ராஜ் பேசறேன். மிஸ்டர் கோபால் உங்க க்ளையன்ட்தானே?'
'ஆமா, சொல்லுங்க.'
'மாதவி கொலை சம்பந்தமா மிஸ்டர் கோபாலோட செல்ஃபோன் கால்ஸ் ரெக்கார்ட்ஸ ஸ்க்ரூட்டினி பண்ணதுல அவர் கொலை நடந்த அன்னிக்கி உங்க கூட பேசினத பார்த்தோம். அது சம்மந்தமா உங்கக்கிட்ட சில கேள்விங்க கேக்க
வேண்டியிருக்கு. அதுக்குத்தான் கூப்ட்டேன்.'
மகாதேவன் சற்று தயக்கத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தார். பார்வையாளர்கள் நேரம் என்பதால் மருத்துவமனை வளாகம் நிறம்பி வழிவதைக் கண்டார். நல்ல நேரம் பார்த்து கூப்ட்றான் பார். இந்த பப்ளிக் ப்ளேஸ்ல வச்சி என்னத்த பேசறது?
'சொல்லுங்க, என்ன கேக்கணும்?'
'என்ன விஷயமா ஒங்களுக்கு ஃபோன் செஞ்சார்னு சொல்ல முடியுமா?'
அவர் பதிலளிப்பதற்கு முன் அவரை நெருங்கிய அவருடைய வாகன ஓட்டுனர், 'சார் கெளம்பிட்டீங்களா? வண்டிய கொண்டுட்டு வரவா?' என்றான். ஒரு நிமிஷம் இரு என்று அவனுக்கு சைகை காட்டிய மகாதேவன், 'சார் நா இப்ப வெளியில இருக்கேன்... வேணும்னா நாளைக்கி காலைல ஒங்கள ஸ்டேஷன்ல வந்து மீட் பண்ணவா?' என்றார் தயக்கத்துடன்.
தன்ராஜுக்கு எரிச்சல் வந்தது. அடக்கிக்கொண்டார். அடுத்த நாள் காலை வரை பொறுத்திருக்க அவர் தயாராக இல்லை. 'ஒரேயொரு விஷயம் மட்டும் தெரிஞ்சா போறும் சார். Just one or two questions.'
இவன் விடமாட்டான் போலருக்கே என்று நினைத்த மகாதேவன். 'ஒரு நிமிஷம் இருங்க' என்று கூறிவிட்டு தன் கைப்பெட்டியை தன் டிரைவரிடம் கொடுத்தார். 'நீங்க வண்டிய எடுத்துக்கிட்டு வாசலுக்கு வாங்க...' என்று அனுப்பி
வைத்தார். 'சொல்லுங்க சார்....' என்றார் கைப்பேசியில்.
'நீங்கதான் சொல்லணும்.'
என்னத்த சொல்றதது? கோபால் அன்னைக்கி சொன்ன விஷயத்த இவன்கிட்ட சொன்னா வேற வினையே வேணாம். அதையே மோட்டிவா ஆக்கிறுவானுங்க.. எதையாவது சொல்லி சமாளிப்போம். கோர்ட் சம்மன் வந்தா அப்போ பாத்துக்கலாம்.
'கோபாலும் இன்னொரு பார்ட்டியும் சேர்ந்து ஒரு ஜாய்ன்ட் ப்ராஜக்ட் பண்ணப் போறாங்க சார். அதுக்கு டாக்குமென்ட் ரெடி பண்ன சொல்லியிருந்தார்... அது ரெடியாயிருச்சான்னு கேட்டார்.... இன்னும் ரெண்டு மூனு நாள்ல ரெடி பண்றேன்னு சொன்னேன்.'
'அந்த பார்ட்டி யாருன்னு சொல்ல முடியுமா?'
தன்ராஜ் கேட்பது என்ன என தெரிந்தும் வேண்டுமென்றே, 'பார்ட்டியா? என்ன பார்ட்டி?' என்றார்.
'அதான் சார் அந்த ஜாய்ன்ட் ப்ராஜக்ட் பார்ட்டி' என்றார் தன்ராஜ் எரிச்சலுடன்.
அதற்குப் பிறகும் மகாதேவன் தயங்குவது தெரிந்தது. தன்ராஜ் தன் அதிகாரத்தை பயன்படுத்துவது என தீர்மானித்தார்.
'சார் நீங்க எதையோ மறைக்கறா மாதிரி தெரியுது. சொல்றதா இருந்தா சொல்லுங்க. இல்லன்னா கோர்ட்லருந்து சம்மன் வரும். பரவால்லையா?'
ஏற்கனவே சீனிவாசனிடம் திட்டு வாங்கிவிட்டு வந்திருந்த மகாதேவனுக்கு கோபம் சுர்ர்ர்ரென்று வந்தது. 'என்ன சார் மிரட்டறீங்களா? கோர்ட் சம்மன பார்த்து பயப்படற ஆள் நா இல்ல சார்... நானும் ப்ராக்டீசிங் அட்வகேட்தான்... சம்மனே அனுப்புங்க... கோர்ட்ல வந்து சொல்லிக்கறேன்....'
தன்ராஜ் இதை எதிர்பார்க்கவில்லை. ஜகா வாங்கினார். 'சார் கோபப்படாதீங்க. இன்னும் ஒரு வாரத்துல சார்ஜ்ஷீட் ஃபைல் பண்ணணும்னு சொல்லி மேலருந்து ப்ரஷர் வருது. எனக்கு பெரிசா ஒன்னும் தெரிய வேணாம். அந்த பார்ட்டியோட பேர மட்டும் சொல்லுங்க.'
அப்படி வா வழிக்கி. போலீஸ்னா அக்யூஸ்ட்தான்யா பயப்படணும் என்று மனதுக்குள் நினைத்த மகாதேவன். 'அவர் பேர் கன்ஷ்யாம்.. மார்வாடி... சவுக்கார் பேட்டையில ஆஃபீஸ்... ஃபோன் நம்பர் வேணும்னா கோபாலோட பி.ஏ.கிட்ட கேட்டுக்குங்க.'
தன்ராஜ் 'சரி' என்று சுருக்கமாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.
கோபாலில் செல்ஃபோன் அழைப்புகள் அடங்கிய பட்டியல் மட்டும் நேற்றே கிடைத்திருந்தால் இன்று காலையில் அவரை மீண்டும் கைது செய்தபோது அதைப்பற்றிய விவரங்களை அவரிடமே கேட்டுத் தெரிந்திருக்கலாம். அவர் சொன்னதை வைத்துக்கொண்டு இவரிடமும் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டிருக்கலாம். ஏனெனில் மகாதேவன் தன்னை சமாளிப்பதற்காக உண்மைக்கு புறம்பாக எதையோ கூறியிருக்க வேண்டும் என்றே அவருக்கு தோன்றியது.
கோபாலின் செல்ஃபோனிலிருந்து சென்றிருந்த அழைப்புகளின் பட்டியலை கன்ஷ்யாம் என்ற பெயரை பார்த்தது நினைவில் இருந்தது. அந்த ஆள கூப்ட்டு பேசணுமா என்று ஒருசில நொடிகள் சிந்தித்தார். பிறகு இப்போதைக்கு வேண்டாம் என்று தீர்மானித்து கோபாலுடைய அலுவலகம் மற்றும் வீட்டிலிருந்து கைப்பற்றிய ஆவணங்களை ஆராயத் துவங்கினார். எல்லாமே அவருடைய தொழில் சம்மந்தப்பட்ட ஆவணங்களாகவே இருந்தன. எந்த இடத்திலும் மாதவி என்ற பெயர் தென்பட்டதாக தெரியவில்லை. அதுவரை ஆய்வு செய்த ஆவணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மீதமிருந்த வங்கி கணக்கு புத்தகத்தை திறந்து கடைசி பக்கத்தை பார்த்தார். கணக்கில் மீதமிருந்த தொகை அவர் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஆனால் நிறைய வரவு செலவுகள் நடந்திருந்தன. அவற்றில் பெரும்பான்மையானவை அவருடைய பர்சனல் செலவினங்களாகவே தென்பட்டன. அவற்றில் ஒரே மாதிரியான தொகைக்கு மாதா மாதம் காசோலை வழங்கப்பட்டிருப்பதைக் கண்டார். ஆனால் காசோலை விவரம் தெளிவாக இல்லை. 'to cheque'என்று மட்டுமே இருந்தது. வங்கிக்கு சென்று விசாரிக்க வேண்டும் என்று குறித்துக்கொண்டு அதை மற்ற கைப்பற்றிய ஆவணங்களிலிருந்து பிரித்து வைத்துவிட்டு மீதமிருந்த ஆவணங்களை அது வைக்கப்பட்டிருந்த கோப்பில் வைத்து நாடாவை இறுக்கக் கட்டி மேசை டிராயரில் வைத்து பூட்டிவிட்டு எழுந்து கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இந்நேரம் லஞ்ச் ஹவர் முடிஞ்சிருக்கும். இப்ப போனா பேங்க்ல கஸ்டமர்ஸ் யாரும் இருக்க மாட்டாங்க என்று நினைத்தவாறு கணக்கு புத்தகத்தை திறந்து எந்த வங்கி என்று பார்த்தார். 'லஸ் கார்னர்லதான் இருக்கா... அஞ்சி நிமிஷ தூரம்தான். இன்னைக்கி அதையாவது பாத்துட்டு வந்துருவோம்...' என்று எண்ணியவாறு வாயிலை நோக்கி நடந்தார்.
********
ராஜசேகர் அடையாறிலிருந்த மருத்துவமனையை அடைந்தபோது பார்வையாளர்கள் நேரம் கடந்திருந்தது. அவன் தன்னுடைய வாகனத்தை பார்க் செய்துவிட்டு இறங்கி மருத்துவமனை வரவேற்பு பகுதியை அடைந்து, 'இன்னைக்கி காலையில மிஸ்டர் சீனிவாசன்னு ஒருத்தர அட்மிட் பண்ணாங்க' என்றான்.... 'அவர பார்க்க முடியுமா?'
'சாரி சார்... விசிட்டர்ஸ் டைம் இப்பத்தான் முடிஞ்சிது.'
'வர்ற வழியில டிராஃபிக் ஜாம்ல மாட்டிக்கிட்டேங்க... If you don't mind ஒரு அஞ்சி நிமிசம் அவர பார்த்துட்டு...' என்று ராஜசேகர் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, 'சார்... நீங்களா?' என்ற குரல் கேட்டு திரும்பினான். அவருடைய அப்பார்ட்மென்டில் குடியிருக்கும் ஆடிட்டர் வாசுதேவன்.
'ஆமா சார்.... மிஸ்டர் சீனிவாசன பாத்துட்டு போலாம்னு வந்தேன்.... விசிட்டர்ஸ் ஹவர் முடிஞ்சிருச்சின்னு சொன்னாங்க... அதான்...'
'ஆமாம் சார்.' என்ற வாசுதேவன் தன் கையில் இருந்த பார்வையாளர் அடையாள அட்டையை அவனிடம் கொடுத்தார்.
'நான்-விசிட்டர்ஸ் அவர்ல கூட இந்த அட்டைய யூஸ் பண்ணி பேஷன்ட பாக்கலாம். ஆனா ஒருத்தர்தான் அலவுட்... நா கேன்டீன்ல வெய்ட் பண்றேன். நீங்க போய் பாத்துட்டு வந்துருங்க..ICUன்னு கேளுங்க.. First floor.'
ராஜசேகர் எதிரில் தெரிந்த மாடிக்கு செல்லும் படிகளில் ஏறி ICU அறைக்குள் நுழைந்தான். அறைக்குள் இருந்த மங்கலான வெளிச்சத்திற்கு அவனுடைய கண்கள் பழகும் வரை வாசலிலேயே நின்றிருந்தான். அறைக்குள் நான்கு படுக்கைகள் இருந்தன. ஒவ்வொரு படுக்கையை சுற்றிலும் துணித் திரைகள். வாசலுக்கருகில் அமர்ந்திருந்த நர்ஸிடம் தன் கையிலிருந்த பார்வையாளர் அட்டையை காட்டினான். நர்ஸ் காட்டிய திசையில் நடந்து திரையை விலக்கி படுக்கையில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த சீனிவாசனைப் பார்த்தான். அவருடைய இந்த நிலைமைக்கு காரணம் நாம் அவசரப்பட்டு செய்த செயல்தானே என்ற எண்ணம் அவனை வதைத்தது. அவருடைய படுக்கை தலைமாட்டில் வைக்கப்பட்டிருந்த கருவிகளுடைய திரைகளில் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த சமிக்கைகளைப் பார்த்தான். ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு ஓசைபடாமல் வந்த வழியிலேயே திரும்பினான்.
மீண்டும் தரைதளத்துக்கு வந்த ராஜசேகர் மருத்துவமனை வளாகத்தினுள் அமைந்திருந்த உணவகத்தை அடைந்து வாசுதேவனை தேடினான். அறைக்கோடியில் காலியாயிருந்த ஒரு மேசையின் முன் அவர் அமர்ந்திருந்ததைக் கண்டு அவரை அணுகி அமர்ந்தான். பார்வையாளர் நேரம் கடந்திருந்ததால் உணவகத்தில் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.
'டாக்டர்ஸ் என்ன சொல்றாங்க சார்? ஹார்ட்ல ப்ராப்ளம் இல்லேன்னு சொன்னதா என் வைஃப் ஃபோன் பண்ணாங்க...' என்றான்.
'ஆமா சார்.... அஞ்சாறு வருசத்துக்கு முன்னாலதான் பைபாஸ் பண்ணாங்க... போன தடவ அட்டாக் வந்தப்போ என்ன சிம்ப்டம்ஸ் இருந்துதோ அதே மாதிரி இருந்தா மாதிரிதான் எனக்கு தோனிச்சி.. அதனாலதான் எதுக்கும் இருக்கட்டுமேன்னு கொண்டு வந்து அட்மிட் பண்ணேன்.. ஆனா இது அட்டாக் இல்லேன்னுட்டாங்க... But ICUல இருக்கட்டும், நைட் முழுசும் பாத்துட்டு சொல்றேன்னுட்டார் சீஃப் டாக்டர். சீனிக்கி பைபாஸ் பண்ணவர்தான் இப்ப சீஃபாருக்கார். அதனால பயமில்ல... அதுவுமில்லாம இந்த ஹாஸ்ப்பிட்டல் முழுசுமே நம்ம சீனி பிசினஸ்ல இருந்தப்போ கட்டுனது. அதனால அவனுக்கு இங்க ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்..' என்று பதிலளித்த வாசுதேவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தணிந்த குரலில், 'என்ன சார் கோபால மறுபடியும் அரெஸ்ட் பண்ணிட்டாங்களாமே.' என்றார்.
தான் அவரிடம் அளித்திருந்த கோபால் சம்மந்தப்பட்ட அறிக்கையை வாசித்ததால்தான் சீனிவாசன் இந்த நிலைமைக்கு ஆளானார் என்று நினைத்திருந்த ராஜசேகர் சற்று நிம்மதியடைந்தான். 'ஆமா சார்... சார்ஜ் ஷீட் ஃபைல் பண்ணி கேஸ் ட்ரையலுக்கு வர்ற வரைக்கும் வெளியில யார் கூடயும் ஃபோன்ல பேசாதீங்கன்னு சொல்லியும் இவர மர்டர் நடந்த அன்னைக்கி அந்த வீட்டுக்கு முன்னால பாத்ததா போலீஸ் கிட்ட சொல்லியிருந்த அந்த பக்கத்து வீட்டு லேடிக்கி ஃபோன் பண்ணியிருக்கார். இவர் என்ன சொன்னார்னு தெரியல. அந்த லேடி உடனே போலீசுக்கு ஃபோன் பண்ணி சொல்லிட்டாங்க. இதுதான் சாக்குன்னு அவங்க பெய்ல கேன்சல் பண்ணச் சொல்லி பெட்டிஷன் ஃபைல் பண்ணிட்டாங்க. என்னால ஒன்னும் செய்ய முடியல.. சீனிவாசனுக்கு சீரியசா ஒன்னும் இல்லேல்ல சார்?'
'இல்ல சார்.. He looks ok now. அட்மிட் பண்ணவுடனே ஆக்சிஜன் குடுத்தாங்க. ஒரு பத்து நிமிஷத்துல நார்மலாய்ட்டார். கொஞ்ச நேரத்துக்கு முன்னால அவங்க ஃபேமிலி அட்வகேட் வந்திருந்தார். அவர் ஏதோ சொல்ல வந்தார். ஆனா சீனிவாசன் மறுபடியும் டென்ஷனாயி சத்தம் போட்டார். என்ன விஷயம்னு தெரியல. சத்தம் கேட்டு ஓடி வந்த நர்ஸ் எல்லாரையும் வெளிய அனுப்பிட்டாங்க. சீஃப் டாக்டர் வந்து பார்த்துட்டு ஒருத்தர் மட்டும்தான் இருக்கலாம்னு கன்டிஷனா சொல்லிட்டு போய்ட்டார். நானும் அவர் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டுமேன்னு சரின்னுட்டேன்..தூங்கறதுக்கு மருந்து குடுத்துருக்காங்கன்னு நினைக்கறேன்... நீங்க போனப்போ தூங்கிக்கிட்டு இருந்துருப்பாரே?' என்று பதிலளித்த வாசுதேவன் தூரத்தில் தெரிந்த சர்வரை வரும்படி அழைத்தார்.
அவன் வந்ததும் வராததுமாக, 'சார்... டேபிள் சர்வீஸ் கிடையாது. பேஷன்ட்ஸுக்கு ஏதாச்சும் ஃபுட் வேணும்னா சொல்லுங்க... ரூம்ல கொண்டு போய் குடுத்துருவேன். உங்களுக்குன்னா கவுண்டர்ல ஆர்டர் பண்ணி வாங்கிக்க வேண்டியதுதான்.' என்றான்.
'அப்படியா சரி...' என்றவாறு எழுந்து நின்ற வாசுதேவன் ராஜசேகரை பார்த்தார். ' நீங்க ஏதாச்சும் சாப்பிடறீங்களா சார்? நா லஞ்ச் கூட இன்னும் சாப்பிடல.' என்றார்.
'இல்ல சார்... நீங்க சாப்டுங்க...'
அடுத்த சில நிமிடங்களில் வாசுதேவன் தனக்கு வேண்டியவற்றை தட்டுகளில் பெற்றுக்கொண்டு மேசைக்கு திரும்பி வந்து அமரும்வரை ராஜசேகர் காத்திருந்தான். அவர் அமர்ந்ததும், 'நா கிளம்பட்டுமா சார்?' என்றவாறு எழுந்து நின்றான்.
'ஒரு நிமிஷம் சார்... உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்.'
ராஜசேகர் மீண்டும் அமர்ந்தான். அவராக பேசட்டும் என்று காத்திருந்தான்.
வாசுதேவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தொடர்ந்தார், 'சார் நா கேக்கறேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க. கோபால் இந்த கேஸ்லருந்து விடுபடறதுக்கு சான்ஸ் இருக்கா?'
ராஜசேகர் எப்படி பதிலளிப்பது என தெரியாமல் சில நொடிகள் மவுனமாக அமர்ந்திருந்தான்.
'நா கேட்டது தப்புன்னா விட்ருங்க சார்...'
'இல்ல சார்... அதுக்கு முன்னால ஒங்கள ஒன்னு கேக்கலாமா?'
'தாராளமா கேளுங்க.'
'கோபால் இந்த மர்டர பண்ணியிருப்பார்னு நீங்க நினைக்கறீங்களா?'
தொடரும்...
வாசுதேவன் வழக்கறிஞரிடம் கேட்கும் கேள்வியை பார்க்கும்போது அவரும் இதில் சம்பந்தப் பட்டிருப்பாரோ என்ற சந்தேகம் எழுகிறது. காத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்கு!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவே.நடனசபாபதி said...
வாசுதேவன் வழக்கறிஞரிடம் கேட்கும் கேள்வியை பார்க்கும்போது அவரும் இதில் சம்பந்தப் பட்டிருப்பாரோ என்ற சந்தேகம் எழுகிறது.//
இந்த மாதிரி சமயத்துல யார் கேள்வி கேட்டாலும் சந்தேகமாத்தான் இருக்கும்.
வருகைக்கும் தொடர்ந்து அளித்துவரும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சார்.
எல்லா தேவன் மேலயும் சந்தேகமாத்தான் இருக்கு.
பதிலளிநீக்குSasi Kala said...
பதிலளிநீக்குஎல்லா தேவன் மேலயும் சந்தேகமாத்தான் இருக்கு.//
ஆடிட்டர், வக்கீல் இவங்க சொன்னத வச்சித்தான சொல்றீங்க? இன்னும் சிலர் சொல்லப் போறதையும் கேட்டுட்டு சொல்லுங்க...நன்றி.