13 ஜனவரி 2006

நிழலும் நிஜமும் (நகைச்சுவை)

டேய்.. போலீஸ்காரன் மேலயே கைய வைக்கிறியா? நடறா ஸ்டேஷனுக்கு.. அங்க போயி முட்டிக்கி முட்டி தட்டினாத்தான் புத்தி வரும்.. நடறா..

கவு: (சுற்றிலும் குழுமியிருந்த கூட்டத்தைப் பார்க்கிறார்) பார்றா இந்த அநியாயத்த.. இவர் மேல போயி நான்  கை வச்சிட்டேனாம்.. ஏங்க இது உங்களுகே நியாயமா இருக்கா? சொல்லுங்க.. நான் உங்கள தூக்கிவிடலன்னா அந்த பன்னித் தலையன் மேலயே உருண்டுக்கிட்டிருக்க வேண்டியதுதான்.. ஏதோ நம்ம தமிள் நாட்டு போலீசாச்சே.. மானம் போயிரக் கூடாதுன்னு தூக்கி விட்டா.. அதுக்கு போயி ஸ்டேஷனுக்கு வா மேஷனுக்கு வான்னு.. ஏன் சார் போலீஸ், இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல..

செந்: (மீண்டும் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைகிறார்) ஏண்ணே.. உங்களுக்கு இது தேவையா.. சார் எத்தன சீனியர் போலீஸ் தெரியுமா? அவர் மேல போயி கை வச்சிட்டீங்களேண்ணே.. டூ பேட்.. டூ பேட்..

கவு: டேய் என்ன நக்கலா? போலீஸ் இருக்காரேன்னு பாக்கறேன்.. ஆமா இப்போ என்னமோ பேட்டுன்னு சொன்னியே.. என்னாடா?..

செந்: (அலட்சியத்துடன்) அது இங்கிலீஸ்னே.. அதெல்லாம் ஒங்களுக்கு புரியாது.. அப்படீன்னா.. ரொம்ப மோசம்னு அர்த்தம்..

கவு: இப்ப என்னடா மோசத்த கண்டுட்டே..

செந்: பின்னே.. சாரை தொட்டு அடிச்சிருக்கீங்க.. சும்மாவா.. அதுவும் சார் யாரு? தமிழ்நாட்டு காவல் படை.. அதுவும் இத்தன பேருக்கு முன்னால.. போலீசா.. கொக்கா.? என்னய்யா பாத்துக்கிட்டு சும்மா இருக்கீங்க.. சொல்லுங்கய்யா.. இவரு அவர அடிச்சாரா இல்லையா.. நீங்கதான் பாத்துக்கிட்டிருக்கீங்கல்லே.. சொல்லுங்க..

கவு: (கூட்டத்தைப் பார்த்து) ஆமாய்யா.. சொல்லுங்க.. நீங்கதான்யா சாட்சி.. நானாய்யா இவர அடிச்சேன்? சொல்லுங்கய்யா.. யாராச்சும் ஒரு ஆள் சாட்சி சொல்லுங்கய்யா..

கூட்டத்தில் ஒருவர்: அட போங்கய்யா.. சாட்சி சொல்லிட்டு அப்புறம் அவரு கூப்டற எடத்துக்கெல்லாம் யார் அலையறது? நீங்க ஜெயிலுக்கு போனா என்ன.. போவாட்டி என்ன.. நம்ம சோலிய பாக்கறத விட்டுப்புட்டு.. போய்யா நீயும்.. உன்.. (அவர் விருட்டென்று போக.. கூட்டத்திலிருந்த அனைவரும் கலைந்து செல்கின்றனர்.. செந்தில், க.மணி, காவற்காரர் மட்டும் நிற்கின்றனர்..)

காவல்: டேய் நடங்கடா.. உங்க ரெண்டு பேரையும் நியூசன்ஸ் கேஸ்ல புக் பண்ணிருக்கேன்.. ஊம், நடங்க..

கவு: என்னா கேசுங்கோ போலீஸ்.. ஏன் தமிள்ல சொல்ல மாட்டீங்களோ?

செந்: (தலையிலடித்துக் கொள்கிறார்) அண்ணே.. நியூசன்ஸ்னா சந்தேகக் கேஸ்னு அர்த்தம்.. இது கூட தெரியாம.. அதுக்குத்தான் நாலெழுத்து படிச்சிருக்கணுங்கறது.. இப்ப பாருங்க.. (கா.காரிடம்) ஏங்க ஏட்டய்யா, எங்க மேல என்ன சந்தேகம்னு கேஸ் போடப் போறேங்கறீங்க? சொல்லுங்க.. கொலை பண்ணமா, கஞ்சா வச்சிருந்தோமா.. என்னன்னு சந்தேகப் படறீங்க? சொல்லுங்க. சொன்னாத்தானே வக்கீல் வச்சி வாதாட முடியும்? (க.மணியைப் பார்த்து பெருமையுடன் சிரிக்கிறார்) எப்படிண்ணே?

கவு: டேய் வேணாண்டா.. கொலைங்கற, கஞ்சாங்கற. அவர் என்ன சொன்னாரோ ஏது சொன்னாரோ.. நீயா ஏதாச்சும் ஐடியா கொடுத்து என்ன வம்புல மாட்டி விட்டுராதடா.. (கா.காரரிடம் கெஞ்சுகிறார்) ஐயா போலீஸ்.. நா புள்ளக் குட்டி காரங்க.. இந்த சொறியன் தான்யா வாடா கோயம்பேடு மார்க்கட்ல இளிச்ச வாயங்க நெறைய பேர் இருப்பாய்ங்க.. ஏதாச்சும் கோல்மால் பண்ணி இன்னைக்கி சாப்பாட்டுக்கு வேண்டியத சம்பாதிச்சிக்கலாம்னு கூட்டியாந்தான். வந்த எடத்துல ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் குளப்பி என்னத்தையோ சொல்லப் போக நா கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுட்டேன்யா..

செந்: (கவு.மணியை நெருங்கி ரகசிய குரலில்) அண்ணே சும்மாயிருங்கண்ணே.. இவர் கிட்ட போயி கெஞ்சிக்கிட்டு.. இவரால என்ன பண்ணிரமுடியும்னு இப்படி கெஞ்சறீங்க.. இவர் சாதாரண போலீஸ்ணே.. சும்மா மார்க்கெட்ல ரோந்து போய்ட்டு வாயான்னு ஸ்டேஷன்லருந்து அனுப்பிருப்பாங்க.. ஒரு அஞ்சோ பத்தோ தூக்கிப் போட்டா அள்ளிக்கிட்டு போயிருவாரு.. இப்ப பாருங்க..
(சட்டைப் பாக்கெட்டிலிருந்து இரண்டு ரூபாய் நோட்டை எடுத்து தன் முதுகுக்குப் பின்னால் வைத்துக் கொண்டு கா.காரரிடம் தன் முதுகைக் காட்டிக்கொண்டு நிற்கிறார்.) அய்யா.. இந்தாங்க சீக்கிரம் யாரும் பாக்கறதுக்குள்ள எடுத்துக்குங்க..

(கா.காரர் தன் கையிலிருந்த லட்டியால் ஓங்கி செந்திலின் விரல்களில் அடிக்கிறார்.)

(செந்தில் அடியின் வீரியத்தில் துடிதுடித்துப் போய் கையை வாயில் வைத்துக் கொண்டு சூப்புகிறார்)

காவல்: டேய் உங்கள் எந்த கேசுல புக் பண்றதுன்னு தெரியாமத்தான் பப்ளிக் நியூசென்ஸ் - அதாவது பொது இடத்தில் இடைஞ்சல்  - கேஸ்ல புக் பண்லாம்னு பார்த்தேன். இப்ப ஒரு அரசாங்க அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றம்கற கேசையும் போட்டுடறேன்.. ரெண்டுபேரும் நடங்கடா..

(இரண்டு பேர் முதுகிலும் கையை வைத்து தள்ளிக்கொண்டு போகிறார்)

கவு: டேய்.. நாரவாயா.. இது ஒனக்கே அடுக்குமாடா.. சும்மா வீட்ல இருந்தவன இங்க கூட்டியாந்து.. ஒன்னுத்துக்கும் உதவாத பிரச்சினைய பண்ணி.. பெருசா இங்கிலீஷ் தெரியும்னு.. அவர் ஒன்னு சொல்ல நீ ஒன்னு நினைச்சிக்கிட்டு.. இப்ப பார்றா உன்னால நானும் மாட்டிக்கிட்டு.. டேய் மவனே.. இது தேவையாடா.. வூட்ல அவ வேற தேடிக்கிட்டு இருப்பாளேடா.. இப்ப அவளுக்கு எப்படிறா நியூஸ் சொல்றது? ஏதாவது பேசறானா பார்.. டேய் வாய்ல என்னத்தடா வச்சிருக்கே..  இந்த அடிக்கே வாய்ல விரல வச்சிக்கிட்டு சூப்பிக்கிட்டு வரியே.. அங்க ஸ்டேஷன்ல போயி என்ன பிரேடு எடுக்க போறானுங்களோ தெரியலையேடா.. (குரல் எடுத்து கத்துகிறார்) ஐயா மாருங்களே.. அம்மா மாருங்களே.. இந்த அநியாயத்த கேக்கறதுக்கு யாருமே இல்லீங்களா..

காவல்: (லட்டியை ஓங்குகிறார்) டேய் என்ன சவுண்டு வுடுற? பேசாம வந்தேன்னா.. இப்ப போட்டுருக்கற ரெண்டு கேசோட போயிரும்.. அஞ்சோ, ஆறோ மாசம் உள்ளருந்துட்டு வெளிய வந்துரலாம்.. இனியும் கூவி கலாட்டா பண்ணே.. கலகத்த தூண்டுனேன்னு அந்த கேசையும் சேத்துருவேன்.. அப்புறம் மவன, ரெண்டு பேரும் ஒரு வருஷத்துக்கும் களிதான்.. நடங்கடா..

(கோயம்பேடு சந்தை வளாகத்திலிருந்த காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வாளர் முன்பு நிறுத்தப் படுகின்றனர் இருவரும்.)

ஆய்: (காவற்காரரையும் க.மணியையும் செந்திலையும் பார்க்கிறார்) உன்ன என்ன செய்றதுக்கு அனுப்பினேன், நீ என்ன பண்ணிட்டு வந்து நிக்கறே? மினிஸ்டரு வராரு கூட்டம் கூடாம பாத்துக்கயான்னா இவனுங்கள தள்ளிக்கிட்டு வந்து நிக்கற.. யார்யா இந்த ரெண்டு பேரும்? (இருவரையும் மீண்டும் உற்றுப் பார்க்கிறார்) சார் நீங்க கவுண்டமணி, செந்தில் இல்ல.. நீங்க எங்க சார் இங்க?

(க.மணியும், செந்திலும் சிரிக்கின்றனர்)

கவு: ஒன்னுமில்ல சார்.. நாங்க ---- டிவிக்காக ஒரு ப்ரோக்ராம் பண்றோம்.. எங்க வழக்கமான சண்டைய பார்த்துட்டு பொது ஜனங்க எப்படி ரியாக்ட் பண்றாங்கன்னு பாக்கத்தான் இங்க வந்து பண்ணோம்.. நாங்க ரெண்டு பேரும் பண்ணிக்கிட்டிருந்தத நாங்க நினைச்சா மாதியே நிஜம்னு நினைச்சி கூட்டமும் கூடிருச்சி..அதுல நிஜ போலீஸ் வருவார்னு நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கல சார்.. இவர் வந்ததும்.. சரி இதுவும் நேச்சுரலாத்தான் இருக்குன்னு டைரக்டர் சிக்னல் காண்பிக்கவே நாங்களும் தொடர்ந்து ஆக்ட் பண்ண ஆரம்பிச்சோம், இவர் அத உண்மைன்னு நம்பி எங்க ரெண்டு பேரையும் இங்க தள்ளிக்கிட்டு வந்துட்டாரு.. எங்கள யாருமே அடையாளம் கண்டுக்கலைன்னு நினைச்சி கொஞ்சம் வருத்தமாயிருந்தாலும்.. இந்த சீன் நல்லா வந்ததுல ரொம்ப சந்தோஷம் சார்.. இருந்தாலும் உங்களுக்கு தான் வீண் சிரமம். சாரி சார்..  மன்னிச்சிக்குங்க.. (பின்னால் திரும்பி பார்த்து  நிலையத்தில் காமராவுடன் நுழையும் டைரக்டரையும் அவருடைய சிஷ்யர்களையும் காட்டி) பார்த்தீங்களா சார்.. நேச்சுரலா இருக்கட்டுமேன்னு ஒரு இருபதடி தள்ளி பார்க் பண்ண வேன்லருந்து ஷூட் பண்ணிக்கிட்டிருந்த டைரக்டர், காமரா மேன் இவங்கதான். (இயக்குனரைப் பார்த்து) சார், நீங்க சொல்லுங்க சார்.. ஐயாவுக்கு தெரியணுமில்ல..

இயக்குனர்: ஆமா சார்.. எங்க கம்பெனி ஐடெண்டி கார்டு சார்.. (தன்னுடைய கார்டை கொடுக்கிறார்)

ஆய்: (காவல்காரரைப் பார்த்து) யோவ் உருப்படியா ஒரு காரியம் செய்ய சொன்னா.. போய்யா, நிஜம் எது நிழல் எதுன்னு தெரியாம.. (குழுவைப் பார்த்து) சாரிங்க.. இருந்தாலும் ஒரு வார்த்தை என் கிட்ட சொல்லிட்டு புடிச்சிருக்கலாம்லே.. அனாவசியமா மினிஸ்டர் வர நேரத்துல கூட்டம் கூடிச்சின்னா.. அப்புறம் எங்களுக்குத்தான் ப்ராப்ளம்.. போங்க.. (க.மணி, செந்திலிடம் தன் மேசையிலிருந்த புத்தகத்தை எடுத்து நீட்டுகிறார்.) சார் வந்ததுதான் வந்தீங்க.. இதுல உங்க கையெழுத்த போட்டுட்டு போங்க சார்..

கவு: (திடுக்கிட்டு) எதுல? உங்க ஸ்டேஷன் புஸ்தகத்துலயா?

ய்: (சிரிக்கிறார்) இல்ல சார்.. சும்மா உள்ளருக்கற இந்த பேப்பர்ல போடுங்க.. எம் பசங்களுக்கு உங்க தமாஷ்னா உசிருசார்.. உங்கள ஸ்டேஷன்ல பாத்தேன்னு சொன்னா நம்ப மாட்டான்க சார்.. அதுக்குத்தான்..

கவு: (செந்திலைப் பார்த்து கேலியுடன்.) டேய்.. பாத்தியாடா.. எனக்கு எங்கல்லாம் விசிறின்னு.. சார் எவ்வளவு பெரிய ஆய்வாளர்.. உங்கிட்ட கேட்டாரா பார்த்தியா..

ஆய்: சார் கோச்சிக்காதீங்க.. உங்க ரெண்டு பேர் கையெழுத்தும் தான் வேணும்..

செந்: (சிரிக்கிறார்) பார்த்தீங்களாண்ணே.. சினிமாவுலதான் நீங்க அடிப்பீங்க, நான் வாங்கிப்பேன்.. நிசத்துல உங்களுக்கிருக்கா மாதிரியே எனக்கும் விசிறிங்க இருக்காங்க.. தெரிஞ்சிக்குங்க..

(காமரா மேன் இந்த காட்சியையும் படம் பிடிக்கிறார்)

ஆய்: (பதற்றத்துடன் எழுந்து) சார் காமராவ மூடுங்க சார்.. மினிஸ்டர் வர நேரம்.. ப்ளீஸ்.. போங்க சார்... (காவல்காரரைப் பார்த்து) யோவ் நீ என்ன இளிச்சிக்கிட்டு நிக்கே.. போய்யா நிஜமாவே கூட்டம் ஏதும் கூடாம பாரு போ.. நீங்க வாங்க சார்.. படப்பிடிப்பை நாளைக்கு வச்சிக்கிட்டீங்கன்ன நல்லாருக்கும் .. நான் முறையா பாதுகாப்பு தரேன். இப்ப தயவு செய்து போங்க.. ப்ளீஸ்..

முற்றும்

8 கருத்துகள்:

  1. அட! நல்லாருக்கு சார் இது. நகைச்சுவையாவும் இருந்துச்சு....அதே மாதிரி முடிவும் நல்லாருந்துச்சு..என்ன சார் செந்தில் விரல்ல அடி வாங்கிக் குடுத்துட்டீங்க....கவுண்டமணி தப்பிச்சுக்கிட்டாரே......அவருக்கும் ரெண்டு தட்டு போட்டிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. வாங்க ராகவன்,

    வீட்ல எல்லோரும் பாண்டிச்சேரி வரைக்கும் ஒரு ஜாலி ரைட் போயிருந்தோம். இப்பத்தான் வந்தோம். அதான் ரிப்ளை போட லேட்.

    பொங்கல் எப்படி இருந்திச்சி..

    நந்தவனம் சைட் இப்பவும் சரியாவலைன்னு நினைக்கிறேன். இந்த நகைச்சுவை எப்பிசோட் இன்னும் திரட்டிக்கு வரலை.. ரெண்டு தடவைப் போட்டுட்டேன்.. என்ன ப்ராப்ளம்னு தெரியலை.

    பதிலளிநீக்கு
  3. பாண்டிச்சேரி டிரிப்பா...கூல்...

    இப்ப தமிழ்மணத்துல எல்லாம் சரியா வருதே. பிரச்சனை இருக்கக் கூடாதே. நீங்க போட்டதும் தமிழ்மணம் திரட்டாது. நீங்க send செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. வாங்க ராகவன்,

    எல்லா பதிவும் அனுப்பிக்கிட்டுத்தானே இருக்கேன். அதல்ல பிரச்சினை. உங்க கிட்ட சொல்றதுக்கு முன்னால ரெண்டு தடவை அனுப்பு பட்ட்னை க்ளிக் பண்ணேன். Nothing to uploadnu வந்தது.

    அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சி மறுபடியும் க்ளிக் பண்ணப்போ ஒரு பிரச்சினையுமில்லாம அப்லோடாயிருச்சி.

    பதிலளிநீக்கு
  5. போங்க சார். சூப்பரா போய்க்கிட்டிருந்துச்சு. நிழல், நிஜம்ன்னு சப்புன்னு ஆக்கிட்டீங்களே. போலீஸ் ஸ்டேஷன் போய் இன்னொரு பகுதி வரும்ன்னு பாத்தா...

    :-)

    இதுவும் நல்ல கற்பனைதான். தலைப்பை பார்த்தவுடனே தெரியலை. தலைப்பெல்லாம் நீங்க பொருத்தமாத் தான் வக்கிறீங்க. நமக்குத் தான் யோசிக்கத் தெரியலை. ;-)

    நல்லா இருந்துச்சு சார்.

    பதிலளிநீக்கு
  6. வாங்க குமரன்,

    மிக்க நன்றி..

    ஆக்சுவலா எழுதிக்கிட்டே போனப்ப சட்டுன்னு வந்து ஐடியா அது. சரி அப்படியே முடிச்சிரலாம்னு முடிச்சிட்டேன். முதல்ல Candid Cameraன்னு தலைப்பு வச்சேன். ஆனா அதுவே க்ளைமாக்ஸை காட்டிக் குடுத்துறுமோன்னு தோனிச்சி. அப்புறம்தான் இந்த தலைப்பு வச்சேன்.

    பதிலளிநீக்கு