30 ஜனவரி 2006
திரும்பிப் பார்க்கிறேன் 69
என்ன பதில் கூறலாம் என்று யோசனையுடன் அவர்கள் இருவரையுமே மாறி, மாறி பார்த்தேன்..
‘என்ன ஜோசப், உங்களுக்கு விருப்பமில்லேன்னா நாங்க கம்பெல் பண்ணலை. ஆனா ஒன்னு, அவர் அன்னைக்கி ஜாதி விஷயமா பேசினத நீங்க மனசுல வச்சிக்கிட்டுருக்கறதுல அர்த்தமில்ல ஜோசப். அவர் சொன்னது அவங்க குடும்பத்துல பரம்பரை பரம்பரையா செஞ்சிட்டிருக்கறததான். அதுல எங்களுக்கு சம்மதமில்லைங்கறது வேற விஷயம். ஆனா அதுக்காக அவரை எங்களால வெறுக்க முடியலை ஜோசப். ஏன்னா அவங்க குடும்பம் நம்ம டயோசியசுக்கு (ஒரு ஆயரின் அதிகாரத்திற்குக் கீழ் வரும் எல்லா பங்குகளையும் சேர்த்து மேற்றிராசனம் (டயோசிசிஸ்) என்று அழைக்கப்படுகிறது.) கொடுத்த நன்கொடைகள கணக்கிலெடுக்கறப்போ அவர மன்னிக்கத்தான் தோனுது. தவறு செய்தவரகளை மன்னிக்கறதுதானே ஜோசப் நம்முடைய வேதத்திற்கு முதுகெலும்பே. இறைவனே அவரை மன்னிக்க தயாராயிருக்கும்போது நாம எம்மாத்திரம்?’
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எனக்கு ஆயரை திறப்புவிழாவுக்கு அழைக்க வேண்டுமென்று ஆலோசனை சொன்ன பாதிரியாராச்சே, என்னால் என்ன சொல்ல முடியும்? அதுமட்டுமல்ல. அவர் சொன்னதுபோல் கத்தோலிக்க கிறீஸ்துவ மதத்தின் முதுகெலும்பே தவறு செய்தவர்களை, அது எதிரியாயிருந்தாலும், மன்னிப்பதுதானே?
நான் எத்தனை பாவம் செய்திருப்பேன்? பாவசங்கீர்த்தனத்தில் (கத்தோலிக்க கிறீஸ்துவர்களுடைய பாவ அறிக்கையை கடவுளுடைய பிரதிநிதியாகிய பாதிரியாரிடம் வெளியிடுவதன்மூலம் கடவுளிடமிருந்து பாவமன்னிப்பு கிடைக்கிறது என்பது நம்பிக்கை) எத்தனை பாவங்களை அறிக்கையிட்டிருப்பேன்! இறைவன் என்னுடைய பாவங்களை முழுமனதோடு மன்னித்திருக்கையில்.....
‘சரி ஃபாதர். கிளை திறந்ததும் நீங்க சொன்னத யோசிக்கறேன். எங்க வங்கியோட நியதிகளுக்கு உட்பட்டு என்னால உதவி செய்ய முடிஞ்சா கண்டிப்பா செய்யறேன்.’ என்றேன்.
‘அது போதும் ஜோசப். அவரோட நிதி நிலைமை நீங்க கொடுக்கப் போற கடன அடைக்கறதுக்கு போதுமானதா இருக்குதான்னு ஜட்ஜ் பண்ணிட்டு குடுத்தாப் போறும். இப்ப வேணும்னா நீங்க அவர பாக்கணும்னாலும் பாக்கலாம் ஜோசப்.’
இப்பவேவா? நிச்சயம் அவர் கேட்கும் கடன் தொகை என்னுடைய அதிகாரத்திற்குள் இருக்காது. என்னுடைய வட்டார மேலாளரையும் கடந்து என்னுடைய தலைமையலுவலகத்திற்கு அனுப்ப வேண்டியதாயிருக்கும். இருந்தாலும் பார்த்து வைப்பதில் தவறில்லையே என்று நினைத்தேன். மேலும் எனக்கு மீண்டும் தஞ்சை டவுணுக்குள் போகவேண்டிய வேலையொன்றும் அன்று இல்லை. இதை முடித்துக் கொண்டு நேரே வீட்டுக்கு சென்று விடலாம் என்று நினைத்தேன்.
‘நோ ப்ராப்ளம் ஃபாதர். எனக்கும் இன்னைக்கி வேறு வேலையில்லை. அவர் ஃப்ரீயான்னு கேளுங்க. போய் பார்த்துரலாம்.’ என்றேன்.
அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு என்னுடைய பங்கு குரு அவருடைய இல்லத்திற்குள் சென்றார். அவருக்கு தொலைப்பேசி செய்ய என்று நினைத்தேன். நானும் என்னை ஆயருக்கு அறிமுகப்படுத்திய பாதிரியார் மட்டும் இருந்தோம்.
‘ஃபாதர் நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சிக்கமாட்டீங்களே’ என்றேன்.
பாதிரியார் பங்கு அலுவலகத்தைப் பார்த்தவாறு, ‘சொல்லுங்க ஜோசப்.’ என்றார்.
‘அவர் என்ன பிசினஸ் செய்து நஷ்டமடைஞ்சார் ஃபாதர்?’
பாதிரியார் சங்கடத்துடன் என்னைப் பார்த்தார். ‘எதுக்கு கேக்கறீங்க ஜோசப்?’
‘இல்ல ஃபாதர். சும்மாத்தான்.’
‘அது ஜோசப்..’ என்று இழுத்தவர், ‘தமிழ்நாடு அரசு செஞ்ச வேலைதான். சொல்றதுக்கே வெக்கமாயிருக்கு ஜோசப். யாரோ சொன்னாங்கன்னு இவரும் இவரோட பார்ட்னர்சும் சேர்ந்து சாராயக்கடை ஏலத்துல பார்ட்டிசிபேட் பண்ணாங்க. கடையும் கிடைக்கலை. இவர் லஞ்சம்னு கொடுத்த பணமும் திரும்பி வரலை. எல்லாம் நம்ம ஊர் கட்சிக்காரங்க பண்ண வேலை..’
எனக்கு நன்றாகப் புரிந்தது. நான் முந்தைய கிளையில் மேலாளராக இருந்தபோது துவங்கிய பிரச்சினை இது. என்னுடைய சென்னை கிளையின் வாடிக்கையாளர்களில் ஒருவரும் இதேபோல் ஆளுங்கடசியின் வட்டார செயலாளரின் தூண்டுதலால் வைப்பு நிதியிலிருந்த மொத்த தொகையையும் எடுத்து கொடுத்து ஏமாந்து நின்றது நினைவுக்கு வந்தது.
அந்த காலக்கட்டத்தில் குறைந்த காலத்தில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறதென்று நினைத்து ஏமாந்து போனவர்கள் ஏராளம், ஏராளம். தமிழ்நாடு அரசு முதன்முதலாக பொது ஏல முறையில் சாரயக் கடைகளை திறந்த சமயம் அது. அரசியல்வாதிகளின் தகிடுதத்தங்களைக் புரிந்துக் கொள்ளாமல் ஏமாந்து நின்ற தொழிலதிபர்கள் அநேகம் பேர். அவர்களில் இவரும் ஒருவர் போலிருக்கிறது..
நான் மேலே குறிப்பிட்ட என்னுடைய சென்னைக் கிளை வாடிக்கையாளர் மிகவும் கண்ணியமான குடும்பத்திலிருந்து வந்தவர். நான் கிளையைத் துவக்கிய ஆரம்பக் காலத்தில் என்னுடைய மத்திய கிளை வாடிக்கையாளர் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். என்னுடைய கிளையின் அருகிலேயே அவருடைய பங்களா இருந்தது.
பரம்பரை பரம்பரையாக வசதிப்படைத்த குடும்பத்திலிருந்து வந்தவர். பழகுவதற்கு மிகவும் நல்லவர். அவருடைய நண்பர் கூறினாரே என்ற ஒரே காரணத்துக்காக வேறொரு வங்கியிலிருந்த வைப்புநிதி கணக்கிலிருந்த தொகையை அதனுடைய காலத்திற்கு முன்பே முடித்து அதனால் ஏற்பட்ட வட்டித்தொகை நஷ்டத்தையும் கணக்கில் கொள்ளாமல் என்னுடைய வங்கியில் இட்டவர்.
கணவன், மனைவி, ஒரு மகள் என்ற அந்த சிறிய குடும்பத்தை எனக்கு மிகவும் பிடித்துப்போக நான் அந்த குடும்பத்தின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவனாகிப் போனேன்.
ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையால் என்னுடைய அறிவுரையை முற்றிலும் அலட்சியப்படுத்தி ஒரு அரசியல்வாதியின் நயவஞ்சக பேச்சை நம்பி ஏமாந்து போனார்.
இப்போதும் என்னுடைய நினைவில் நின்றது அவருடைய செயல். ‘அரசின் சாராயக் கடை ஏலத்தில் நீங்கள் பேருக்கு பங்குக்கொண்டால் போதும். உங்களுக்கு இத்தனை கடை கிடைப்பதற்கு நான் பொறுப்பு’ என்ற பேச்சை நம்பி என்னுடைய கிளையிலிருந்த தன்னுடைய வைப்புநிதியை முழுவதும் எடுத்து அவரிடம் கொடுத்து... ஏலமும் கிடைக்காமல்... அரசியல்வாதியை நம்பிக் கொடுத்த பணமும் கிடைக்காமல்... தன்னுடைய சேமிப்பு முழுவதையும் ஏமாந்து.. நான் மாற்றலாகி அவரிடம் விடைப்பெற சென்ற சமயத்தில் அவர் நோய்வாய்பட்டு படுக்கையில் கிடந்ததைப் பார்த்தது.. என்னுடைய மனதை மிகவும் சங்கடப்படுத்திய காட்சி அது...
எனக்கு பாதிரியார் கூறியவரின் நிலை நன்றாகப் புரிந்தது. அந்த சூழ்நிலையில் ஒழுக்கமான குடும்பத்திலிருந்து வந்த ஒருவர் குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில், பேராசை என்று என்னால் கூறமுடியவில்லை, நஷ்டப்பட்டு... அவரிடம் அனுதாபப்படுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?
அத்தகையவரை நம்பி நான் எப்படி கடன் கொடுப்பது?
இங்கே பாதிரியார்களைப் பற்றி ஒரு வார்த்தை. நானும் கத்தோலிக்க கிறிஸ்துவன்தான். நான் முன்பே கூறியபடி என்னுடைய குடும்பத்திலும் இரண்டு பாதிரியார்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் பாதிரியார்களைப் பற்றிய என்னுடைய கணிப்பை இங்கே கூறாமல் இருக்க முடியவில்லை.
அவர்கள் குழந்தைகள் மாதிரி. அவர்களுக்கு நல்லவர்கள் யார், தீயவர்கள் யார் என்று இனம் கண்டுக்கொள்ள தெரியாது. செய்வதையெல்லாம் செய்துவிட்டு அவர்களிடம் சென்று ‘சாரி ஃபாதர். நான் வேணும்னு செய்யலை’ என்று கூறினால் போதும். உடனே மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள். அவர்களை ஏமாற்றி கோவில் சொத்துக்களை ஏமாற்றி அனுபவித்த எத்தர்களில் பலபேரை எனக்குத் தெரியும்.
‘என்ன ஃபாதர் நீங்க? அவன் ஒரு சரியான ஃப்ராடு. அவனுக்கு போய் ஹெல்ப் பண்றீங்களேன்னு’ கேட்டா, ‘போட்டும் சார்.. அவங்க உண்மையிலேயே கெட்டவங்களாயிருந்தா கடவுள் பார்த்துப்பார்’னு சொல்ற குழந்தை குணம் கொண்டவர்கள்.
அவர்களைப் போன்றவர்தான் இவரும் என்று நினைத்தேன் நான்.
இந்த இடத்தில் நான் ஒன்று கூற விரும்புகிறேன். என்னுடைய மேலாளர் அனுபவத்தில் எந்த ஒரு சூழ்நிலையிலும் என்னுடைய மதத்தைச் சார்ந்தவர் என்பதால் நான் தகுதியில்லாத எவருக்கும் விதிகளை மீறி கடன் கொடுத்ததேயில்லை.
விதிகளை மீறி இருக்கிறேன். ஆனால் என்னுடைய மதத்தைச் சார்ந்தவர் என்பதால் அல்ல. கடன் பெறுவதற்கு முழு தகுதியும் உள்ளவர் என்றால் அவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்றாலும், எந்த சாதி சனத்தைச் சார்ந்தவர் என்றாலும் விதிகளை சிறிது தளர்த்தி உதவி செய்திருக்கிறேன். சில சமயங்களில் ஏமாற்றப்பட்டு என்னுடைய மேலதிகாரிகளின் தண்டனைக்கும் உள்ளாகியிருக்கிறேன்.
இருப்பினும் என்னுடைய மேலாளர் அனுபவத்தை ஒட்டுமொத்தமாக பார்த்தால் நான் ஏமாற்றப்பட்ட நேரங்கள் மிகவும் கொஞ்சமே. அதனால்தானோ என்னவோ இன்னமும் கொஞ்சம் நல்ல பேரோடு பதவியில் இருக்கிறேன்.
சரி விஷயத்துக்கு வருவோம்.
என்னுடைய பங்கு குரு தொலைப்பேசி செய்துவிட்டு திரும்பி வந்து, ‘உங்களுக்கு வேற எதுவும் அர்ஜெண்டா வேலையில்லேன்னா அவரை போய் பார்க்கலாம் சார். டஇப்ப அவர் வொர்க் ஷாப்லதான் இருக்காராம்.’ என்றார்.
‘ஓ! பாக்கலாமே. அவர பார்த்துட்டு வீட்டுக்கு போக வேண்டியதுதான்.’ என்று நான் எழுந்து நின்றேன்.
பாதிரியார்கள் இருவரும் அவரவர் இரு சக்கர வாகனத்தில் கிளம்ப நான் என்னுடைய ஸ்கூட்டரில் கிளம்பினேன்.
அவருடைய பட்டறை தேவாலயத்திலிருந்து மிக அருகிலேயேதான் இருந்தது. நாங்கள் மூவரும் அங்கு சென்று சேர்ந்தபோது நான் அன்று சந்தித்த நபரும் அங்குதான் இருந்தார். அவர் என்னைக் கண்டதும் சற்றே சங்கடப்பட்டார் என்பது அவரை பார்த்ததுமே எனக்கு விளங்கியது.
தொடரும்..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
I remmeber the story of Dharaman and Dhuriyothanan. Dharman went out, searched and then told Kannan that he cant find out even one bad guy and Duriyothanan searched the same world and told that he cant find out even one good guy. I feel, Fathers are like that only, child heart (not childish), kind and genorous and always willing to see the one good point amidst 100 bad points. As a manager of a bank, u have a responsibility and I am sure u would have acted as per that only.
பதிலளிநீக்குஇது போன்ற சிபாரிசுகள் சற்றுச் சிக்கலானவையே. பெரிய பொறுப்புகளில், அதுவும் மதம் சார்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் பேச்சைக் கொண்டு உதவுவது அல்லது உதவாமல் இருப்பது என்பதே ஒரு அறத்துன்பந்தான். மிகவும் சிக்கலான விஷயத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் முடிவுகளை எடுக்கக் கூடாது. வங்கி விதிமுறைகளுக்குட்பட்டு முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.
பதிலளிநீக்குவாங்க கிருஷ்ணா,
பதிலளிநீக்குDharman went out, searched and then told Kannan that he cant find out even one bad guy and Duriyothanan searched the same world and told that he cant find out even one good guy. //
You are right. It depends on the person who is looking at people and their actions.
An action of ours which would look good to certain people might look bad or wrong for others.
There are similar stories in Bible too.
Thanks for your comments.
As a manager of a bank, u have a responsibility and I am sure u would have acted as per that only.//
You are right again. Since branch managers are supposed to be the custodians of the public money it is their duty to act responsibly.
வாங்க ராகவன்,
பதிலளிநீக்குஎடுத்தேன் கவிழ்த்தேன் முடிவுகளை எடுக்கக் கூடாது. //
உண்மைதான். சில சமயங்களில் நமக்கு வேண்டியவர்களைக் கூட மறுத்துப் பேச வேண்டியிருக்கிறது.
//தவறு செய்தவரகளை மன்னிக்கறதுதானே ஜோசப் நம்முடைய வேதத்திற்கு முதுகெலும்பே. இறைவனே அவரை மன்னிக்க தயாராயிருக்கும்போது நாம எம்மாத்திரம்? //
பதிலளிநீக்குWell said..
// அவர்கள் குழந்தைகள் மாதிரி.//
This is exactly true sir.
வாங்க கார்த்திக்,
பதிலளிநீக்குஉங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி.