31 ஜனவரி 2006

திரும்பிப் பார்க்கிறேன் 70

அவருடைய பட்டறை தேவாலயத்திலிருந்து மிக அருகிலேயேதான் இருந்தது. நாங்கள் மூவரும் அங்கு சென்று சேர்ந்தபோது நான் அன்று சந்தித்த நபரும் அங்குதான் இருந்தார். அவர் என்னைக் கண்டதும் சற்றே சங்கடப்பட்டார் என்பது அவரை பார்த்ததுமே எனக்கு விளங்கியது.

ஆனால் நான் அதைப் பொருட்படுத்தாதுபோல் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். எங்களுடைய அறிமுகப்படலம் முடிந்ததும் இரு பாதிரியார்களும் விடைபெற்று சென்றனர்.

அடுத்த அரைமணி நேரம் அவருடைய தொழிலைப் பற்றி அவர் கூறியதைப் பொறுமையுடன் கேட்டேன். அப்போது தஞ்சையில் அவருக்குப் போட்டியாக யாரும் இல்லாததால் அவருடைய ஆட்டோமொபைல் வர்த்தகமும், இருசக்கர, நாற்சக்கர சேவை மையமும் மிகச் சிறப்பாகவே நடந்துக் கொண்டிருந்தது.

அவருடைய நிறுவனத்தின் நிதிநிலையும் நான் எதிர்பார்த்த அளவு மோசமில்லை. வங்கிக் கடன் கொடுப்பதற்கு ஏதுவான தொழில்தான் என்று எனக்குத் தோன்றியது. அவருடைய நிறுவனத்தின் நிதியறிக்கையின்படி பார்த்தால் வர்த்தகத்தில் அவர் செய்திருந்த முதலீடு வேறெந்த வர்த்தகத்திற்கும் மாற்றப்பட்டிருக்கவில்லை.

பாதிரியார் அவர் நஷ்டப்பட்டதாய் கூறிய தொகை நிச்சயம் அவருடைய ஆட்டோமொபைல் நிறுவனத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கவில்லை. ஆயினும் அவராக முன்வந்து நட்டம் அடைந்த விவரத்தைத் தெரிவிக்காததால் எனக்கு எப்படி கேட்பது என்று தெரியாமல் சுற்றி வளைத்து, ‘உங்களுக்கு தேவையான தொகை நிறுவனத்துல இருக்கே. அப்ப எதுக்கு இப்ப இருக்கற கடன் தொகைய விட இரண்டு மடங்கு அதிகமா கேக்கறீங்க?’ என்றேன்.

அவர் பதில் கூறாமல் என்னையே பார்த்தார். பிறகு நாங்கள் அமர்ந்திருந்த அறையிலிருந்த அவருடைய பணியாட்களை வெளியே போகும்படி கண்ணால் சைகைக் காண்பித்துவிட்டு தன் மேசை இழுப்பிலிருந்து ஒரு கனத்த கோப்பை எடுத்தார்.

‘சார், ஃபாதர் உங்கக் கிட்ட சொல்லியிருப்பாருன்னு நினைக்கிறேன். ஒரு ஆறு மாசத்துக்கு முன்னால தேவையில்லாதவங்க பேச்சைக் கேட்டு கொஞ்சம் முட்டாள்தனமான பிசினஸ்ல பணத்த முடக்கி நஷ்டமாயிருச்சி.’

‘ஆனா உங்க ட்டோமொபைல் ஃபர்மோட பேலன்ஸ் ஷீட்டுல அந்தமாதிரி தொகைய மாத்துனா மாதிரி தெரியலையே?’

அவர் என்ன சொல்லலாம் என்று யோசிப்பதுபோல தோன்றியது. ‘இவர் மட்டும் உண்மையை சொல்லாவிட்டால் நிச்சயம் உதவி செய்யக்கூடாது’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அவருடைய பதிலை எதிர்பார்த்து காத்திருந்தேன்.

அவர் வேறொரு இழுப்பிலிருந்து ஒரு சிறிய டைரிபோன்ற புத்தகத்தை எடுத்தார். அதைப் பிரித்து ஒரு குறிப்பிட்ட பக்கத்தை எனக்கு காண்பித்தார்.

அதில் அவருடைய வேறொரு நிறுவனத்திற்கு கடனாகக் கொடுத்தவர்களின் பட்டியல் இருந்தது. ஒவ்வொருவரும் கொடுத்த தொகையுடன் இறுதியில் மொத்த தொகையும் குறிப்பிடப்பட்டிருந்தது.

‘இதுவும் உங்க நிறுவனம்தானா?’ என்றேன்.

‘ஆமாம் சார்.ஆனா இதுல எங்க ஃபேமிலி மெம்பர்ஸ் மட்டும்தான் பார்ட்னர்சா இருக்காங்க. இந்த ஃபர்மை  அரசாங்க ஏலத்துல தஞ்சாவூர் மற்றும் சுத்துப்புறத்துல ஒரு அஞ்சி சாராயக்கடை எடுக்கறதுக்காகவே ப்ளோட் பண்ணோம்.

தற்சமயத்துக்கு ஆட்டோமொபைல் பிசினஸ்க்காக பேங்க்லருந்து எடுத்த கடன் தொகைலருந்துதான் கட்சிக்காரங்களுக்கு கொடுக்க வேண்டியதாப் போச்சி. கடை ஏலம் எடுத்ததும் எங்க பேங்க்ல அதுக்கு தனியா கடன் குடுக்கறேன்னு இதுக்கு முன்னாலருந்த மேனேஜர் சொல்லியிருந்தார். நான் இந்த பிசினஸ்லருந்து தேவையான தொகையை எடுத்ததும் தெரியும். கடையும் கிடைக்கலை. மேனேஜரும் மாத்தலாகிப் போயிட்டார். புது மேனேஜர் ஸ்டாக் வெரிஃபிகேஷனுக்கு வந்தப்போ பேங்கலருக்கற கடன் தொகைக்கு ஈடா ஸ்டாக் இல்லைங்கறத பார்த்துட்டு உடனே ஓவர்டிராஃப்டுலருந்து சரக்கு வாங்குறதுக்குத் தானே பணம் ட்ரா பண்ணணும்? இப்போ தேவையான சரக்கு கையிருப்பு இல்ல. அதனால ஓவர்டிராஃப்ட் கணக்குலருந்து தேவைக்கு அதிகமா எடுத்ததை உடனே ரெகுலரைஸ் பண்ணணும்னு சொல்லிட்டார். நான் இன்னும் கொஞ்சம் டைம் குடுங்கன்னு எவ்வளவோ சொல்லியும் கேக்கலை.. கைமாத்தா இவங்க கிட்டல்லாம் வாங்கிதான் பேங்க் ஓவர்டிராஃப்ட ரெகுலரைஸ் பண்ணேன்.. முதல்ல அக்கவுண்டை ரெகுலரைஸ் பண்ணுங்க, நான் உங்களுக்கு  கூடுதலா தேவைப்படற தொகையை மேலிடத்துல சொல்லி சாங்க்ஷன் வாங்கித்தரேன்னு சொன்னவர் நான் ரெகுலரைஸ் பண்ணதும் கைய விரிச்சிட்டார். கைமாத்தா வாங்குன ரெண்டு மூனு இடத்துலயும் அவரே ஃபோன் சொல்லிட்டார். அவர் வேற ஏதோ எதிர்பார்த்து அது கிடைக்கலைன்னதும் இப்படி செஞ்சிட்டார்னு நினைக்கிறேன். அவங்க எல்லாரும் கொடுத்த தொகைய திருப்பி கேக்கறதுனால இப்ப ரொம்ப கஷ்டத்துல இருக்கேன். வாங்குன எடத்துல நேரத்துக்கு திருப்பித் தரலைன்னா மார்க்கெட்ல எங்க க்ரெடிபிளிட்டியும் போயிரும். அப்புறம் ஆட்டோமொபைல் பிசினஸ்சுக்கும் யாரும் க்ரெடிட் தரமாட்டாங்க. இருபத்தஞ்சி வருஷமா இந்த பிசினஸ் பண்ணிக்கிட்டிருக்கேன். இப்படியொரு இக்கட்டான சிச்சிவேஷன நாங்க ஃபேஸ் பண்ணதேயில்லை. எல்லாம் என் நேரம்னு சொல்றதா இல்ல முட்டாள்தனம்னு சொல்றதான்னு தெரியலை. இந்த சூழ்நிலையிலதான் நான் நேத்தைக்கு பிஷப் ஹவுஸ் போயிருந்தப்போ ஃபாதர்கிட்ட சொன்னேன். உங்கக் கிட்ட சொல்றேன்னு சொன்னார்.’

அவரை பார்க்க ஒரு பக்கம் பாவமாயிருந்தாலும் இவ்வளவு பெரிய தொகையை நான் கொடுக்க முன்வந்தாலும் அவரால் இப்பிரச்சினையிலிருந்து மீண்டும் எழுந்து வர முடியுமா, அப்படியே முடிந்தாலும் அதற்கு எவ்வளவு காலம் வேண்டியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன்.

இருப்பினும் அவரை மேலும் நிராசைக்கு தள்ள விரும்பாத நான், ‘சரி சார். நான் கிளையைத் திறந்ததும் உங்க நிறுவனத்தோட கடந்த மூனு வருஷத்தோட பேலன்ஸ் ஷீட்டும், உங்க பேங்க் பாஸ் புத்தக நகலையும் கொண்டு வாங்க. என்னால முடியுதான்னு பாக்கறேன். இப்ப எதுவும் ப்ராமிஸ் பண்ண முடியாது. ஏன்னா உங்களுக்கு தேவையான தொகை என்னுடைய அதிகாரத்தைக் கடந்தது. ஐ வில் ட்ரை டு ஹெல்ப் யூ, ஒன்லி தட் மச் ஐ கேன் டெல் யூ நவ்.’ என்று விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பினேன்.

வீட்டையடைந்ததும்தான் நினைவுக்கு வந்தது. என்னுடைய வட்டார மேலாளர் பொது மேலாளரிடம் தங்கும் அறையைப் பற்றி கேட்டு சொல்வதாய் சொன்னாரே.. என்ன சொன்னாரோ தெரியவில்லையே என்று..

வீட்டினுள் நுழைந்ததும் என் மனைவியிடம் நான் இல்லாத நேரத்தில் எனக்கு தொலைப்பேசி அழைப்பு ஏதும் வந்ததா என்று வினவினேன்.

'ஆமா,  நீங்க வீட்டுக்குள்ள வந்தவுடனே பேங்க் விஷயம் நான் சொல்லக் கூடாது. நீங்க மட்டும் கேக்கலாமோ?’ என்றார் என் மனைவி.

என்ன மறுமொழி சொல்வதென தெரியாமல் ஒரு நொடி விழித்தேன். பிறகு சமாளித்துக் கொண்டு.. ‘சரி தப்புதான். முதல்ல ஒரு காப்பிய குடு.. அப்புறம் சொல்லு..’ என்றேன்.

‘சரி பரவாயில்லை. சும்மாத்தான் சொன்னேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னால உங்க திருச்சி மேனேஜர் ஃபோன் பண்ணார். நீங்க இன்ன¨க்கி அங்க வருவீங்கன்னு உங்க ஜோனல் மேனேஜர் சொன்னாராம். அதான் என்னாச்சி, ஏன் வரலைன்னு கேட்டார். அப்புறம் திருச்சி கோத்ரெஜ்லருந்தும் ஃபோன் வந்துது. இன்னைக்கி காலைல என்னமோ சேஃப் டெப்பாசிட் லாக்கராமே அத லாரியில ஏத்தி அனுப்பியிருக்காங்களாம். ராத்திரி எட்டு மணிபோல உங்க ஆஃபீசுக்கு வந்து சேருமாம். இறக்கி வைக்கறதுக்கு ஆளுங்களும் வராங்களாம். அந்த நேரத்துல நீங்க அங்க இருக்கணுமாம்.’

‘அப்படியா? நல்லதாப் போச்சி. இதுக்குத்தான் திருச்சிக்கு வரேன்னு சொல்லியிருந்தேன். சரி.. எங்க ஜோனல் மேனேஜர்கிட்டருந்து ஃபோனே வரலையா?’

‘இல்லீங்க. இருங்க காப்பி கொண்டுவரேன்.’ என்றவர் அடுத்த சில நிமிடங்களில் காப்பி டம்ளருடன் திரும்பி வந்து , ‘என்னங்க நீங்க திருச்சிக்கு போகும்போது நானும் வரேங்க. திருச்சி சாரதாஸ்ல பட்டுப்புடவையெல்லாம் சீப்பா இருக்குமாம். எங்க அம்மா சொல்லியிருக்காங்க.’ என்றார் ஒரு அசட்டுப் புன்னகையுடன்.

‘போச்சிரா. இது வேறயா? மாமியாருக்கென்ன.. மூத்த மகன் கப்பல்ல பொறியாளர். மாசா மாசம் சொளையா வருது.. எனக்கு அப்படியா?’ என்று மனதுக்குள்தான் நினைக்க முடிந்தது. வெளியே சொன்னால் அப்புறம் பிரச்சினைதான். ‘சரியென்று சொல்லி வைப்போம். திருச்சிக்கு போவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே போனால் ஆயிற்று.’ என்று நினைத்துக் கொண்டு, ‘சரிம்மா. திருச்சிக்கு போகும்போது பார்க்கலாம்.’ என்று அப்போதைக்கு தப்பித்தேன்.

மணியைப் பார்த்தேன். மாலை ஏழு மணி ஆகியிருந்தது.

போவதற்கு முன் என்னுடைய வட்டார மேலாளரை அழைத்து விஷயத்தைக் கேட்டுவிடலாம் என்று நினைத்து அவரை அழைத்தேன்.

அவர் தொலைப்பேசியை எடுத்தவுடனே, ‘என்ன டிபிஆர்.. நீங்க திருச்சிக்கு வருவீங்கன்னு சொல்லி வச்சிருந்தேனே. நீங்க போகலையா?’ என்றார்.

‘இல்ல சார். நாம ஆர்டர் பண்ண ஃபர்னிச்சரும் SDLம் டெஸ்பாட்ச் பண்ணிட்டேன்னு ஃபோன் வந்தது, அதான் போகவேண்டாம்னு டிசைட் பண்ணேன். இன்றைக்கு ராத்திரி எட்டு மணிக்குள்ள வந்துரும். அதான் வீட்டுக்கு வந்து சொல்லிட்டு போலாம்னு வந்தேன்.’ என்றேன்.

‘அப்படியா சரி டிபிஆர். வேற விஷயம் ஒன்னுமில்லையே.’

அவர் இணைப்பை துண்டித்துவிடுவாரோ என்ற அச்சத்தில், ‘சார் நம்ம ஜி.எம் கிட்ட கேட்டு சொல்றேன்னு சொன்னீங்களே, கேட்டீங்களா?’ என்றேன் அவசர அவசரமாக.

‘ஆமா டிபிஆர். கேட்டுட்டேன். அதுக்கிடையில நம்ம கோயம்புத்தூர் கஸ்டமர் ஒருத்தரோட ஃப்ரெண்டோட ஃபார்ம் ஹவுஸ் தஞ்சாவூர்லருந்து இருபத்தஞ்சி கிலோ மீட்டர் தூரத்துல இருக்காம். அவர் நம்மளோட ரொம்ப காலத்து கஸ்டமர். நானும் உங்க கூடவே வந்து இருந்துட்டு வரேன்னு சொன்னார். ஜி.எம்முக்கு ரொம்ப பழக்கமானவர் வேற. சரின்னு சொல்லிட்டேன். சோ. அந்த பிரச்சினையப் பத்தி நீங்க கவலைப் படாதீங்க. அவரும் கூடவே வர்றதுனால எங்களுக்குன்னு நீங்க தனியா கார் கூட அரேஞ்ச் பண்ண வேணாம்.’

அப்பாடா.. ஒரு பெரிய பிரச்சினை விட்டதென்ற நிம்மதியுடன், ‘சரி சார். ரொம்ப தாங்க்ஸ். நாளைக்கு அழைப்பிதழ் ப்ரூஃப் ரெடியாயிரும். அது கிடைச்சதும் உங்களுக்கு ஃபோன்லயே படிச்சி காட்றேன். நீங்க அப்ரூவ் பண்ணிட்டீங்கன்னா உடனே ப்ரிண்டுக்கு கொடுத்திரலாம். ரெண்டு நாளைல தரேன்னு ஃபாதர் சொல்லியிருக்கார்.’ என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தேன்.

இன்னும் அரை மணி நேரத்தில் என்னுடைய கிளை அலுவலகத்திலிருக்க வேண்டும் என்ற முனைப்போடு என்னுடைய வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்..

நான் சென்றடைவதற்கு முன்பே திருச்சியிலிருந்து வந்த வாகனம் என்னுடைய அலுவலகத்திற்கு முன்பு நின்றுக் கொண்டிருந்தது. வாகனத்தைச் சுற்றிலும் பெருந்திரளான கும்பல் நின்றுக் கொண்டிருந்ததை தெரு முனையிலிருந்தே என்னால் பார்க்க முடிந்தது.

என்ன ஏது என்று பார்ப்பதற்குள் லாரி ஓட்டுனருடன் யாரோ இருவர் தகராறு செய்துக் கொண்டிருப்பதையும் கட்டட உரிமையாளரின் சகோதரர் மகன் அவர்களுள் ஒருவருடைய சட்டையைப் பிடித்து அடிப்பதைப் பார்த்தேன்..

சலிப்புடன், ‘என்னடா இது.. மறுபடியும் ஒரு பிரச்சினையா?’ என்று நினைத்துக் கொண்டு வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு ஓட்டமும் நடையுமாய் சென்றேன்..

அதற்குள் கைகலப்பு பெரிதாகி...

தொடரும்..  






8 கருத்துகள்:

  1. கைகலப்புதான் இதுவரைக்கும் வராம இருந்தது. இப்ப அதுவும் வந்துருச்சி..மயிர்க்கூச்செரியும் திரைக்காவியமுன்னு விளம்பரம் செஞ்சிரலாம் சார். :-)

    பதிலளிநீக்கு
  2. //அதற்குள் கைகலப்பு பெரிதாகி... //

    grrrrrrr.....

    :))

    -Mathy

    பதிலளிநீக்கு
  3. Ennada ethu, konja nala sir problem illama irrukkarennu parthen. Vanthudichu Ayya vanthudichu! (Sir, i didnt mean the saree problem, madam adikka vara poranga. nan sonnathu lorry problem...!)

    பதிலளிநீக்கு
  4. வாங்க ராகவன்,

    அந்த ஓனரோட நெவ்யூ சரியான கோபக்கார பேர்வழி. அவர் இருக்கற எடத்துல கைகலப்பு இல்லன்னாத்தான் ஆச்சரியப்படணும்.

    மயிர்கூச்செற்யும்னு வேணும்னா சொல்லலாம்.. ஆனா திரைக்காவியம்னு..?:-()

    பதிலளிநீக்கு
  5. வாங்க மதி,

    அந்த grrrrrrrrrr க்குதான் அர்த்தம் என்னன்னு தெரியலை..

    வலி தாங்க முடியாம கத்தற சவுண்டா?

    :-(

    பதிலளிநீக்கு
  6. வாங்க கிருஷ்ணா,

    ப்ராப்ளம் இல்லாம வாழ்க்கை இல்லையே.. அதான் மறுபடியும் வந்துருச்சி..

    என்னோட இந்த வேலையில இந்த மாதிரி நிறைய கைகலப்புகள் நடந்திருக்கு.. ஏன் நானே ஒரு நேரத்துல வாங்கியிருக்கேன்.

    எல்லாம் இந்த கடன் குடுக்கறதுனால வர்றதுதான். கொடுத்துக்கிட்டே இருந்தா நல்ல மேனேஜர். நிறுத்துனா அவ்வளவுதான் போட்டு தள்ளிருவாங்க..

    என்ன பண்றது.. வேற வேலை தெரியாமத்தான் குப்பைய கொட்டிக்கிட்டு இருக்கேன். இருபது வருஷம் ஓட்டியாச்சி. இன்னும் நாலு வருஷம்..

    பதிலளிநீக்கு
  7. இந்த தொடர்ல சண்டைக் காட்சி தான் இது வரை இல்லாம இருந்தது..அடுத்த அத்தியாயத்துல அந்த குறையும் தீர்ந்தது.

    பதிலளிநீக்கு
  8. வாங்க ஜோ,

    ஆனா இந்த சண்டைக் காட்சியில யாரும் பறந்து பறந்து அடிக்கவும் மாட்டாங்க. யாரும் ஒரு குத்துக்கு பறந்து போய் விழவும் மாட்டாங்க.
    பளார், பளார். அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு