27 ஜனவரி 2006
திரும்பிப் பார்க்கிறேன் 68
இதே சிந்தனையுடன் அவரிடம், ‘எங்க ஜோனல் மேனேஜர் கிட்ட கேட்டுட்டு உங்கள வந்து பாக்கறேன் சார்’ என்று கூறிவிட்டு தஞ்சை பேருந்து நிலையத்தையொட்டியிருந்த தபால் நிலையத்தை நோக்கி சென்றேன் தொலைப்பேசி செய்ய...
ஆனால் அவர் அன்றைக்கு என்ன மூடில் இருந்தாரோ நான் சொல்வதை ஒரு பெரிய விஷயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை..
‘அதனாலென்ன டிபிஆர். We will somehow manage. It is a matter of two, three days only. நீங்க கவலைப்படாம திறப்புவிழா வேலைய பாருங்க. ஜி.எம் தான் என்ன சொல்வாருன்னு தெரியல.. நான் அவர்கிட்ட பேசி சமாதானம் பண்றேன். திருச்சில ஸ்டே பண்ணிட்டா போச்சு. Don’t worry. I’ll try to convince him.’ என்றார்.
என்ன மறுமொழி சொல்வதென தெரியாமல் மவுனமாயிருந்தேன்.
சில சமயங்களில் அப்படித்தான். நாம் ஒரு விஷயத்தைப் பெரிதாக நினைத்துக் கொண்டு ஐயோ என்ன செய்வது என தெரியாமல் திகைத்துப் போய் நிற்போம். ஆனால் அது பிறருடைய கண்களுக்கு ஒன்றுமில்லாத விஷயமாக போய்விடும். நேர் எதிராக, நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாய் நினைக்காமல் ஒதுக்கித் தள்ளிவிடுவோம். ஆனால் அதுவே பூதாகரமாக மாறி நம்மை நாம் முற்றிலும் எதிர்பார்க்காத நேரத்தில் நம்மைப் பயமுறுத்தும்.
இப்படி பல நேரங்களில் என்னுடைய அலுவலக வாழ்க்கையில் நேர்ந்திருக்கிறது.
‘என்ன டிபிஆர். சைலண்டாயிட்டீங்க. சின்ன சின்ன விஷயத்துக்கொல்லாம் அப்செட்டானீங்கன்னா இனியும் நீங்க செய்ய இருக்கற எல்லா வேலையிலயும் ஏதாச்சும் தப்பு நடந்துக்கிட்டே இருக்கும். லீவ் திஸ் டு மீ. திருச்சியிலருந்து SDL (Safe Deposit Locker), Furniture எல்லாம் வந்துருச்சா? இன்னும் வரலைன்னா நம்ம திருச்சி மேனேஜருக்கு ஃபோன் பண்ணுங்க. முடிஞ்சா ஒரு நடை திருச்சிக்கு போய்ட்டு வந்துருங்க.. I’ll call you back after speaking to our GM. Bye.’ துண்டிக்கப்பட்ட தொலைப்பேசியையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த நான் ஒலிவாங்கியை அதன் இருக்கையில் வைத்துவிட்டு வெளியேறினேன்.
கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். மணி பிற்பகல் மூன்று மணி!
இனி திருச்சிக்குச் சென்று திரும்ப வாய்ப்பில்லை. நாளைக் காலையில் செல்வதுதான் உசிதம் என்று நினைத்தேன்.
என்னுடைய வாகனத்தை அடைந்தபோது சட்டென்று நினைவுக்கு வர புறப்பட்டு நேரே ஆயரின் இல்லத்திற்கு சென்று வரவேற்பறையில் நான் சந்திக்க நினைத்த பாதிரியார் இருக்கிறாரா என்று விசாரித்தேன்.
வரவேற்பறையில் இருந்த பெண் பாதிரியார் என்னுடைய பங்கு தேவாலயத்திற்கு சென்றிருப்பதாக தெரிவிக்கவே என் வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கு சென்றேன்.
நான் சென்றடைந்த நேரம் அவரும் என் பங்கு குருவும் அவர்களுடைய இல்லத்திற்கு வெளியே மர நிழலில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். சுற்று வட்டாரத்தில் பெரிய கட்டடங்களே இல்லாததால் மாலை காற்று சுகமாக வீசிக் கொண்டிருந்தது. வெளியே வெயில் சுட்டெரித்தாலும் தேவாலயத்தைச் சுற்றிலுமிருந்த மரங்களின் நிழலில் வெயிலின் கொடுமை காணாமற் போயிருந்தது.
நான் வாகனத்தில் வந்திறங்கியதைப் பார்த்த இருவரும் இருக்கையிலிருந்து எழுந்து நின்று என்னை வரவேற்றனர். நானும் சிரித்துக் கொண்டே அவர்கள் இருவருக்கும் வணக்கம் செலுத்தினேன்.
‘வாங்க சார். வந்து உக்காருங்க. என்ன விஷயம்?’ என்ற என் பங்கு குருவைப் பார்த்து புன்னகையுடன், ‘இல்ல ஃபாதர்.. என் கிளைப்பு திறப்புவிழா பத்திரிகையை ஃபைனலைஸ் பண்ற விஷயாம ஃபாதர பாக்கறதுக்காக பிஷப் ஹவுசுக்கு போயிருந்தேன்.’ என்று அவருடைய நண்பரை நோக்கி கையைக் காண்பித்தேன். ‘ஃபாதர் இங்க இருக்கறதா சொன்னதுனால உடனே புறப்பட்டு வந்தேன்.’
உடனே நான் குறிப்பிட்ட பாதிரியார் என்னைப் பார்த்து புன்னகை செய்தார். ‘அப்படியா சார்.. வாங்க வந்து உக்காருங்க. இன்விடேஷன் டிராஃப்ட் கொண்டு வந்திருக்கீங்களா? கொடுங்க பாக்கலாம்.’
நான் என் வாகனத்திலிருந்த என்னுடைய கைப்பெட்டியைத் திறந்து அதிலிருந்த அழைப்பிதழ் மாதிரியை எடுத்துக் கொண்டு சென்று அவர்கள் இருவரும் காண்பித்த இருக்கையில் அமர்ந்தவாறே என் கையிலிருந்த அழைப்பிதழ் மாதிரியை அவரிடம் கொடுத்தேன்.
அதை நிதானமாக வாசித்துப் பார்த்த பாதிரியார் அவருடைய நண்பரிடம் கொடுத்துவிட்டு என்னைப் பார்த்தார். ‘கரெக்டா வந்திருக்கு சார். நீங்களும் கத்தோலிக்கர் என்பதால ஆயரோட பேரையும் அவருடைய படிப்பு எல்லாத்தையும் கரெக்டா போட்டுருக்கீங்க. நானே இன்னைக்கி சாயந்திரத்துக்குள்ள எங்க ப்ரெஸ் இன் சார்ஜ் ஃபாதர் கிட்ட கொடுத்துடறேன். ரெண்டு நாளைக்குள்ள ரெடியாயிரும். ப்ரூஃப் வேணும்னா நீங்க நாளைக்கு காலைல ஒரு பதினோரு மணி போல நேரா ப்ரெஸ்சுக்கு போயிருங்க. நான் சொன்னேன்னு என் பேர சொன்னீங்கன்னா போறும் ஃபாதர் குடுத்துருவார். ஆனா நீங்க அப்ரூவ் பண்ற நேரத்துலருந்து 36 ஹவர்ஸ் வேண்டியிருக்கும்.’ என்றார்.
நானும் சரி என்று சொல்லிவிட்டு கிளம்பும் நோக்கத்தில் எழுந்து நின்றேன்.
பாதிரியார்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். என்னுடைய பங்கு குரு என்னைப் பார்த்தார். ‘என்ன சார் நீங்க வந்த வேல முடிஞ்சதும் கிளம்பறீங்க? ஏதாவது அர்ஜண்ட் வேலை இருந்தா போங்க. இல்லன்னா ஒரு பத்து நிமிஷம் உக்காருங்க.’
‘அப்படியொன்னும் இல்ல ஃபாதர். நான் வரும்போது நீங்க ரெண்டு பேரும் ஏதோ பேசிக்கிட்டிருந்தீங்க. நான் வந்ததுனால உங்க டிஸ்கஷன நிறுத்திட்டீங்களோன்னும் நினைச்சித்தான் நான் கிளம்பினேன். சொல்லுங்க.’ என்றவாறு மீண்டும் அமர்ந்தேன்.
அவர்கள் இருவரும் மீண்டும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். இருவரும் எதைப் பற்றியோ சொல்லுவதற்கு தயங்குவது போல தெரிந்தது.
நான் அவர்களே முதலில் பேசட்டும் என்று காத்திருந்தேன்.
‘சார்..’ என்று தயக்கத்துடன் ஆரம்பித்தார் என் பங்கு குரு..
‘சொல்லுங்க ஃபாதர்.. நீங்க சொல்ல வந்தது எதுவானாலும் சொல்லுங்க..’ என்றேன்.
‘நீங்க அன்றைக்கு என்னைப் பார்க்க வந்தீங்களே. அந்த தேர் திருவிழாவுக்கு முந்தின நாள்னு நினைக்கிறேன்.’
எனக்கு நன்றாக ஞாபகம் வந்தது. அந்த நாளை எப்படி மறக்க முடியும்? கோவில் தர்மகர்த்தா என்ற பெயரில் ஒருவர் கோவில் தேர் எந்த பாதையில் செல்ல வேண்டும் என்று வாதிட்டதை நினைத்துக் கொண்டேன்.
‘நல்லா நினைவிருக்கு ஃபாதர். சொல்லுங்க.’
‘அவர் இப்ப கொஞ்சம் ஃபைனான்ஸ் ப்ராப்ளத்துல சிக்கிக்கிட்டிருக்கார். அவருக்கு உங்க பேங்க் உதவி பண்ண முடியுமான்னு கேக்கலாம்னுதான் ஃபாதர கூப்டு டிஸ்கஸ் பண்ணிக்கிட்டிருந்தேன். ஃபாதர் உங்க பேங்கோட ப்ராஞ்ச் திறந்ததும் கேக்கலாம்னு சொல்லிக்கிட்டிருந்தார். எதிர்பாராம நீங்களே வந்துட்டீங்க.’ என்றவரையே சிறிது நேரம் பதில் கூறாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
எப்படி இருக்கு? அவர் இவரை ஒரு குருவானவர் என்று கூட பார்க்காமல் எடுத்தெறிந்து பேசிவிட்டு சென்றவர். அவருக்கு இவர் உதவி செய்ய வேண்டுமென்று அவர்களுக்கிடையில் நடந்த வாக்குவாதத்தை முற்றிலும் ஒத்துக்கொள்ளாத என்னிடம் கேட்கிறார்.
இவர் வேண்டுமானால் ஒரு பாதிரியானவர் என்ற உன்னத நிலையில் நின்று அவரை மன்னித்துவிட தயாராயிருக்கலாம். ஆனால் நான் சாதாரண மனிதன் தானே. நான் அவரை அவ்வளவு சீக்கிரம் மன்னிக்க தயாராக இல்லை. என்னுடைய வங்கி வாழ்க்கையில் என்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி நான் எத்தனையோ தொழிலதிபர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் கடனுதவி செய்திருக்கிறேன்.. சில நேரங்களில் வங்கியின் நியதிகளை என் தேவைக்கேற்ப வளைத்தும் செய்ய வேண்டியிருந்திருக்கிறது. ஆனால் கடன் தேவைப்படுகிறவர்கள் சார்பில் ஒரு அத்தியாவசிய தேவை, வங்கியின் நியதிகளுக்குட்பட முடியாத நிலை என்று இருந்தால் மட்டுமே அப்படி செய்திருக்கிறேன். அதனால் சில பின் விளைவுகளையும் நான் சந்திக்க நேர்ந்திருக்கிறது.
ஆனால் அந்த கோவில் தர்மகர்த்தா விஷயத்தில் எனக்கு சிறிதளவும் இரக்கம் ஏற்படவில்லை. ஆகையால் பிடிவாதமாக மவுனம் சாதித்தேன்.
பாதிரியார்கள் இருவருக்குமே என்னுடைய மவுனத்தின் பொருள் புரிந்தது. ஒரு தர்மசங்கடமான மவுனம் அங்கு நிலவியது.
என்னை ஆயரிடம் அழைத்துச் சென்ற பாதிரியார் என்னைப் பார்த்தார். ‘ஜோசப் அன்னைக்கி நடந்ததையெல்லாம் பங்கு சாமியார் நீங்க வர்றதுக்கு முன்னால எங்கிட்ட சொன்னார். உங்க மவுனமே இதுல உங்களுக்கு விருப்பமில்லங்கறத காட்டுது. இருந்தாலும் நான் இப்ப சொல்லப் போறத கொஞ்சம் கேளுங்க. அப்புறமும் இதுல உங்களுக்கு விருப்பமில்லாத பட்சத்துல நாங்க ரெண்டு பேருமே வற்பறுத்த மாட்டோம். என்ன சொல்றீங்க?’
எனக்கும் அவர்கள் என்னதான் சொல்லப் போகிறார்கள் பார்ப்போமே என்று தோன்றியது. ‘சொல்லுங்க ஃபாதர்.’ என்றேன்.
‘ஜோசப்.. நீங்க சந்திச்சவரோட முப்பாட்டங்க கோவிலுக்கு தானமா கொடுத்த இடம்தான் இதெல்லாம். சுமார் இரண்டு ஏக்கர் இருக்கும். அன்னைக்கி இது கட்டாந்தரையா இருந்த எடம்தான். ஆனா இன்னைக்கி ரேட்ல பார்த்தா குறைஞ்சது பத்து, பதினஞ்சி லட்சம் பொறும். முக்கியமா மெடிக்கல் காலேஜ் வந்து பிரபலமானதுக்கப்புறம் தஞ்சாவூர் டவுண் காலேஜையும் தாண்டி வளர்ந்துக்கிட்டே போயிருச்சி. நீங்க குடியிருக்கற எடமெல்லாம் கூட இவங்க குடும்பத்துக்கு சொந்தமா இருந்ததுதான். நாளடைவில அவங்க குடும்பத்துக்கு தேவையானத மட்டும் வச்சிக்கிட்டு பணத்தேவை ஏற்பட்டப்போ எல்லாம் ப்ளாட் போட்டு போட்டு வித்துட்டாங்க. இப்ப அவங்களுக்குன்னு இருக்கறது அவங்களோட ஆட்டோ மொபைல் ஷோ ரூமும் அதுக்குப் பின்னாலருக்கற வொர்க் ஷாப்.. அதோ நீங்க பாக்கறீங்களே அந்த பங்களா, அதுவும் அதுக்கு பின்னாலருக்கற சுமார் பத்தாயிரம் சதுர அடி இடம்தான்.. இந்த ஊர்ல முதல் முதல் அம்பாசிடர் கார் டீலர்ஷிப் எடுத்தது அவங்க அப்பாதான்.. இவர் காலத்துல ஃபியட் கார் டீலர்ஷிப் எடுத்தார்.. அப்புறம் பஜாஜ் ஸ்கூட்டர், லாம்பி அப்படீன்னு விரிவு பண்ணார்.. போன பத்து வருஷத்துல நல்லாவே இருந்தார்.. இடையில அவரோட பார்ட்னரா சேர்ந்த ஆளுங்க பேச்ச கேட்டுக்கிட்டு அவருக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத பிசினஸ்ல கால வச்சிட்டு பயங்கர நஷ்டமாயிருச்சி.. அவர் இதுவரைக்கும் தொடர்பு வச்சிருந்த ------பேங்க் திடீர்னு கைய விரிச்சிட்டாங்க.. இவரோட குணத்துக்கு புதுசா வந்த மேனேஜர்கிட்ட ஒத்துப் போக முடியலை..’ மேலே தொடராமல் தயக்கத்துடன் நிறுத்திய பாதிரியாரையே பார்த்தேன்.
அவருடைய குரலில் இருந்த இறக்கம், கவலை என்னை வியப்பில் ழ்த்தியது..
இவரையே பயமுறுத்தி இந்த பங்கில் இருந்து விரட்டியவர் அவர் என்று நான் வேறொரு பங்கு விசுவாசி மூலமாக அறிந்து வைத்திருந்தேன். அப்படியிருக்க அவர் முட்டாள்தனமாக முன்பின் பழக்கமில்லாத வர்த்தகத்தில் இறங்கி நஷ்டமடைந்துவிட்டார் என்பதற்காக கவலைப் பட்டு அவருக்கு உதவ வேண்டுமென்று என்னிடம் வந்து நிற்கிறார்..
என்ன பதில் கூறலாம் என்று யோசனையுடன் அவர்கள் இருவரையுமே மாறி, மாறி பார்த்தேன்..
தொடரும்..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஜோசப் சார்,
பதிலளிநீக்குரொம்ப நல்ல ஃபாதர்-ஆ இருக்காரே? மேல சொல்லுங்க.
Man makkal Man makkale. They wont have prejudiced mind. They will act for that moment without thinking of the past deed of the person in front of them. So only they are Great people. Had a sense of satisfaction to my heart. U were lucky to have seen such people like this Father, that pannaiyar.. Poramaya Iruuku sir, ippallam ippadipatta manitharkalai parkka mudivathu romba kashtam.
பதிலளிநீக்குசம்பவத்தின் நிலைக்களம், சம்பந்தப் பட்டவர்களின் உணர்ச்சிகள் என்று எல்லாவற்றையும் அழகாக எடுத்துரைக்கும் உங்கள் வல்லமை அனைவருக்கும் வருவதில்லை. அதனால் தான் நீங்கள் சிறந்த கதைகளை எழுத முடிகிறது. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாங்க ஜோ,
பதிலளிநீக்குஆமாம். அவர மாதிரி ஆளுங்க இன்னமும் இருக்கறதுனாலதான் திருச்சபை இன்னமும் செழிப்பா இருக்குன்னு நினைக்கிறேன்.
வாங்க கிருஷ்ணா,
பதிலளிநீக்குரொம்ப கரெக்டா சொன்னீங்க.
நாம எல்லாருமே இந்த மாதிரி மனுஷ தெயவங்கள சந்திச்சிக்கிட்டுத்தான் இருக்கோம்.. என்ன? நம்மளோட அவசர வாழ்க்கையில அத நின்னு நிதானமா யோசிச்சி பார்க்கறதுக்குத்தான் நேரம் கிடைக்கிறதில்ல..
இராமநாதன்,
பதிலளிநீக்குசாரிங்க.. உங்க பின்னூட்டத்த வெளியிட முடியலை..
இது ஒரு பொது இடமில்லையா? நீங்க சொன்னது சரியா தப்பான்னு கூட என்னால சொல்ல முடியலை..
தப்பா நினைச்சிக்காதீங்க..
உங்களுடைய டிடெக்டிவ் மைண்ட இந்த சீரியல படிக்கும்போது ஆஃப் பண்ணிட்டு எஞ்சாய் பண்ணுங்க..
வாங்க மணியன்,
பதிலளிநீக்குஉங்க வாழ்த்துக்கு நன்றிங்க..
இது எல்லா மென்பொருள் நிபுணர்களுக்கும்..
பதிலளிநீக்குமாடரெஷன் யூஸ் பண்ணி பின்னூட்டத்துலருக்கறத எடிட் பண்ணி நமக்கு வேண்டாதவற்றை மட்டும் எடுத்துவிட்டு பப்ளிஷ் பண்ண முடியுமா?
தப்பால்லாம் நினைக்கல. நானேதான் அத அழிக்கறதுக்கு உங்களுக்கு உரிமையுண்டுன்னு சொல்லிருக்கேனே
பதிலளிநீக்கு----
//பின்னூட்டத்துலருக்கறத எடிட் பண்ணி நமக்கு வேண்டாதவற்றை //
பண்ணலாமே. நான் அப்படித்தான் செய்யறேன்.
எப்படின்னா.. முதல்ல பப்ளிஷ் செஞ்சுட்டு அப்புறம்
இங்க போய் அவங்க சொல்ற மாதிரி செய்யலாம்.
ஒரு கோட் கொடுத்திருக்காங்க. அத templateஇல் சேத்துட்டா உங்க வலைப்பதிவிலிருந்தே நீங்க மட்டுமே செய்யறா மாதிரி பண்ண முடியும். எப்படி செயல்படுத்தறதுன்னு குழப்பமா இருந்துதுன்னா மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
நன்றி
----
. :)
நன்றி இராமநாதன்,
பதிலளிநீக்குகோட எங்க பேஸ்ட பண்றதுன்னுதான் குழப்பமா இருக்கு.
ப்ளாகர் கமெண்ட்சுக்கு கீழ பேஸ்ட பண்ணியிருக்கேன். அடுத்த பின்னூட்டம் வரும்போதுதான் பாக்கணும்..
சரிவரலைன்னா உங்கள தொடர்பு செய்யறேன். உடனே பதிலளித்ததற்கு நன்றி.
என்ன ராஜ் ரொம்ப ஸ்பீடா இருக்கீங்க?நீங்க கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் இப்பவே சொல்லிட்டா சுவாரஸ்யம் போயிருமே..
பதிலளிநீக்குசொல்றேன்.. நேரம் வரும்.. அந்த பதிவில சொல்றேன்..
கொஞ்சம் காத்திருங்க.. :-))
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல். ஆனாலும் பாத்திரம் அறிந்து பிச்சை போட வேண்டும்.
பதிலளிநீக்குஅவருக்கு உதவ வேண்டும் என்பதும் நல்ல எண்ணமே. ஆனால் அந்த உதவி அவரால் நல்ல விதமாகவும் பயன்படுத்தப்படுமா என்றும் எண்ணப்பட வேண்டும்.
வாங்க ராகவன்,
பதிலளிநீக்குஆனால் அந்த உதவி அவரால் நல்ல விதமாகவும் பயன்படுத்தப்படுமா என்றும் எண்ணப்பட வேண்டும். //
சரியாகச் சொன்னீர்கள்.