பலன்? என்னுடைய இருபது மணிநேர பேருந்து பயணம் தேவைப்படவில்லை.. அத்துடன் வேறெந்த பிரச்சினையுமில்லாமல் அடுத்த வாரத்திலேயே Furnsihing sanction என்னுடைய தலைமையலுவலகத்திலிருந்து தபாலில் வந்து சேர்ந்தது!
ஆக, கிளைத் திறப்பு பணிகள் மும்முரமாக நடக்க ஆரம்பித்தது.. Furnishing ஆரம்பித்து ஒரே வாரத்தில் முடிந்தது.
இதற்கிடையில் நாயக்கர், சேட், பாய் என எல்லோரும் போட்டிப் போட்டுக்கொண்டு என்னை அவரகளுடைய நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி ஜமாய்த்தார்கள்.
நான் சென்று சந்தித்த நபர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். பண்ணையார்கள், மிராசுதார்கள், ரைஸ் மில் முதலாளிகள் என தஞ்சையை சுற்றி இருந்த ஏறக்குறைய எல்லா கிராமங்களுக்கும் சென்றுவர வாய்ப்பு கிடைத்தது..
நான் சந்தித்த நபர்களைப் பற்றி எழுத ஆரம்பித்தால் அதற்கே பத்து பதிவுகள் முழுசாய் எழுத வேண்டியிருக்கும். அவர்களுள் பலர் என்னுடைய சிறுகதைகளில் நாயகர்களாய், பாத்திரங்களாய் வந்திருக்கிறார்கள்!
சரி விஷயத்துக்கு வருவோம்.
நான் சந்தித்த நபர்களில் ஒரு அதிசய பண்ணையாரைப் பற்றி கட்டாயம் எழுத வேண்டும். அப்படியொரு அபூர்வமான மனிதர் அவர்!
நாயக்கர் என்னை அழைத்துச் சென்ற சமயத்தில் அவர் கும்பகோணம் சென்றிருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை. இரண்டு மூன்று நாட்கள் கழித்து அவர் ஊரில் இருப்பதை நாயக்கர் வழியாய் உறுதி செய்துக்கொண்டு நான் மட்டும் சென்றேன்.
நான் அங்கு சென்றடைந்தபோது பிற்பகல் 3.00 மணி. நான் என் வாகனத்தை நிறுத்திவிட்டு நான் இருந்த இடத்தை சுற்றி ஒரு பார்வை பார்த்தேன்.
எங்கு பார்த்தாலும் மரங்கள்.. மா, பலா, வேம்பு, இன்னும் என்னென்னவோ.. வரும் வழியில் உறைத்த கொளுத்தும் வெயில் சுட்டெரித்தது. இங்கு அதன் சுவடே தெரியவில்லை. ஜில்லென்றிருந்தது!
தோப்பின் இடது புறத்தில் கண்ணுக்கெட்டியவரை பச்சை பசேலென்ற வயல்வெளி! தூ.....ரத்தில் தெரிந்த முள்வேலியைப் பார்த்தேன். அதுவரை இவருடையதா! பார்க்கவே மலைப்பாயிருந்தது..
ஆளரவேமே இல்லாத தோப்பில் தூரத்தில் நிழலாய் தெரிந்த தொழிலாளர்களின் கூட்டம்.. அவர்கள் சருகுகள் மேல் அவ்வப்போது நடந்த காலடி ஓசையையும் இடை இடையே கேட்ட மாமர குயில்களைத் தவிர எந்தவித ஓசையுமில்லாமல் ஒருவித அலாதியான நிசப்தம்..
முகப்பு வாசலில் இருந்து சுமார் 200 அடிக்கு நடந்து வீட்டையடைந்தேன். சுற்லுமிருந்த பணக்காரத்தனத்திற்கு எந்தவித சம்பந்தமுமில்லாமல் ஒரு பழைய, ஆனால் பிரம்மாண்டமான வீடு.. பராமரிப்பில்லாமல் அங்கங்கே காரை பெயர்ந்து, சுவரெல்லாம் பாசி பிடித்து, பிளவுகளில் அரசமர கிளைகள் வேர் பிடித்து.. சுருக்கமாய் சொன்னால் யாருமே குடியிருக்கவில்லை என்பதுபோலிருந்தது..
கம்பிகள் பொறுத்தப்பட்ட வாசற்கதவின் ஊடே பார்த்தேன். வெளியே தோப்பிலிருந்த இருட்டை விட வீட்டின் உள்ளே இன்னும் அதிகமான கரும் இருட்டு.. வீட்டின் நடுவிலிருந்த வானம் பார்த்த முற்றம் சூரிய ஒளியில் மணிரத்னத்தின் படங்களில் வருவது போல் அதிக பிரகாசமாய் தெரிந்தது!
கண்ணை இடுக்கிக் கொண்டு பார்த்தேன்... கண்கள் இருட்டுக்கு பழக்கமானதும் ஒரு பழைய நீள் சதுர பெஞ்சில் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது.
இருட்டில் மங்கலாய், நிழலாய் தெரிந்தாலும் நாய்க்கர் கொடுத்த பில்டப்பிற்கு கொஞ்சமும் சம்பந்தமுமில்லாத தோற்றத்தில்... இவரை சந்திப்பதில் வங்கி மேலாளர் என்ற முறையில் எனக்கேதாவது பலன் இருக்குமா என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது..
இருப்பினும் வந்தது வந்தாயிற்று அவரை சந்தித்துவிட்டு செல்வதென தீர்மானித்து அழைப்பு மணி ஏதாவது இருக்கிறதா என வாசற்படியைப் பார்த்தேன்..
வாசற்படியிலிருந்து சற்று தள்ளி கூரையிலிருந்து முறுக்கு கயிற்றில் தொங்கிய ரயில் தண்டவாளத் துண்டையே ஆச்சரியத்துடன் பார்த்தேன். அதுதான் அழைப்பு மணியா? என்ற சந்தேகத்துடன் சரி அடித்துதான் பார்ப்போமே என்ற நினைப்புடன் அதன் துளையில் சொருகப்பட்டிருந்த சிறு இரும்புத் துண்டையெடுத்து இரண்டு முறை தட்டினேன்.
சில விநாடிகள் எந்தவித விளைவும் இல்லை.. மீண்டும் அடித்தாலென்ன என்று யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில் வீட்டின் பின்புறத்திலிருந்து என்னை நோக்கி வந்த பெண்ணைப் பார்த்தேன். சின்னதாய், சிவப்பாய், அழகாய்.. பணிப்பெண்ணாயிருக்க வழியில்லை..
‘யாருங்க?’ இனிமையான குரல்.
‘பண்ணையாரைப் பாக்கணும்.’ என்றேன் தயக்கத்துடன்.
என்னை மேலும் கீழும் பார்த்த அந்த அழகான கண்களை ரசிக்காமல் இருக்க முடியவில்லை..
‘நீங்க..?’
‘நாயக்கர் சொல்லி வந்திருக்கேன். நான் ஒரு பேங்க் மானேஜர்..’
அழகிய கண்கள் இரண்டும் விரிந்தன. ‘ஓ நீங்கதானா அது? சித்தப்பா சொல்லிக்கிட்டிருந்தாங்க. இருங்க, நா பின் பக்கமா வந்து வாசற் கதவை திறக்கிறேன். சித்தப்பா தூங்கிக்கிட்டிருக்காங்க. நா எழுப்பறேன்.’ அப்பெண் சிரித்தபோது அழகாய், வரிசையாய், வெள்ளையாய் பற்கள் தெரிந்தன..
பட்டணத்து சாயம், பூச்சு எதுவுமில்லாமல் மஞ்சள் தேய்த்துக் குளித்த கிராமத்து இயற்கை அழகு.. (தப்பா நினைச்சிக்காதீங்க.. அப்ப எனக்கு வயசு 32 தானே.. அதான் கொஞ்சம் அதிகமாவே ரசிச்சிட்டேன்.)
அந்த பெண் பின்புறமாய் வந்து வாசற்கதவைத் திறக்க நான் என் காலனிகளை வாசலிலேயே விட்டு விட்டு தாழ்வாய் இருந்த நிலைப்படி இடிக்காமல் குனிந்து உள்ளே நுழைந்தேன்.
அந்த பெண் ‘இந்த பெஞ்சில உக்காருங்க.. சித்தப்பா இப்ப வந்துருவாரு.’ என அவர் காட்டிய பெஞ்சைப் பார்த்து ஒரு நொடி தயங்கினேன். ஏனென்றால் அதில் இங்கும் அங்கும் நீட்டிக் கொண்டிருந்த ஆணிகள்தான் காரணம்.
என் தயக்கத்தைப் புரிந்து கொண்ட அப்பெண் ஒரு சிறு புன்னகையுடன் ஓரத்திலிருந்த ஒரு சுமாரான மர நாற்காலியை என்னருகில் இழுத்து விட்டு விட்டு என்னைப் பார்த்தாள். நானும் புன்னகையுடன் நன்றி என்றுவிட்டு இருக்கை நுனியில் அமர்ந்தேன்..
கொலுசு சத்தம் சிணுங்க அந்த பெண் திரும்பிச் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த நான் முற்றத்தையொட்டியிருந்த அறையிலிருந்து வெளியே வந்த பண்ணையாரைப் பார்க்கவில்லை.
சட்டென்று வந்து என் முன்னே புன்னகையுடன் நின்றவரைப் பார்த்த நான் சங்கடத்துடன் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தேன்.
அவர் அகண்ட சிரிப்புடன் பதில் வணக்கம் தெரிவித்துவிட்டு, ‘வாங்க தம்பி.. நாயக்கர் நீங்க வருவீங்கன்னு சொன்னார். எனக்கு பகல் சாப்பிட்டதும் ஒரு மணி நேரம் சின்ன தூக்கம் போடணும். அத எதுக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.’ என்று சிரித்தார்.
மறுமொழி பேசாமல் அவரையே, அவருடைய மிகச்சாதாரணமான தோற்றத்தையே பார்த்தேன். ‘சார்.. அவர் மட்டும் நினைச்சாப் போறும் நீங்க முதல் ஒரு வருஷத்துல எவ்வளவு டெப்பாசிட்ட பிடிக்கணும்னு நினைக்கிறீங்களோ அத முழுசையும் அவர் ஒருத்தராலயே கொடுக்க முடியும்.. அவ்வளவு சொத்து இருக்கு அவருக்கு..’ என்ற நாயக்கரின் வார்த்தைகளை நினைத்துப் பார்த்தேன்.. இவரா.. இவரிடமிருந்தா?
‘வாங்க தம்பி.. இந்த புழுக்கத்துல அவதிப் படாம.. நாம தோப்பு வீட்டுல உக்காந்து பேசலாம்..’ என்றவர் வீட்டினுள் திரும்பி.. ‘மல்லி.. நா தம்பி கூட தோப்பு வீட்டுக்கு போறேன்.. நீ எளனி வெட்டிப் போட நம்ம மாரிய அனுப்பிவிட்டுட்டு.. என் கணக்கு புத்தகத்த எடுத்துக்கிட்டு சித்த நாழி கழிச்சி வா.. என்ன?’ என்றார்.
வீட்டினுள் இருந்து, ‘சரி சித்தப்பா..’ என்ற குரல் வந்தது..
அவர் முன்னே சொல்ல நான் அவரைப் பின் தொடர்ந்து வெளியே வந்து வாசலில் இருந்த என் காலனிகளுக்குள் என் கால்களை கஷ்டப்பட்டு நுழைத்துக் கொண்டு அவர் பின்னால் விரைந்தேன்..
அவர் கூறிய தோப்பு வீடு முகப்பு வாசலில் இருந்து சுமார் ஐநூறு அடி தூரத்திலிருந்தது..
அந்த அடர்ந்த தோப்பினூடே நடந்து சென்றது இன்று வரை மறக்க முடியாத ஒரு சந்தோஷமான அனுபவம்.. பிற்பகல் வெயிலின் உக்கிரமம் முற்றிலும் தெரியாத அளவுக்கு ஒரு சுகமான காற்று நாலா திசைகளிலிருந்தும் வீச.. மாம்பூவின் வாசம் நாசியைத் துளைக்க.. அந்த இன்பத்தை சென்னைவாசியான நான் முழுவதுமாய் அனுபவித்தேன்.
தோப்பு வீடு முகப்பு வீட்டை விட மோசமாயிருந்தது.. அதன் வெளியே இருந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்த பண்ணையார் அதற்கு எதிரிலிருந்த பழைய மர நாற்காலி ஒன்றை கை காட்டினார்.
நான் அதில் படிந்திருந்த தூசியைப் பார்த்துவிட்டு எப்படி அமரவதென யோசித்துக் கொண்டிருக்கையில் பண்ணையார் வீட்டினுள் திரும்பி குரல் கொடுக்க அடுத்த நொடியில் வீட்டின் பின்புறம் இருந்து ஓடி வந்த ஒரு வேலையாள் நாற்காலியை மேல் துண்டால் துடைத்தார்.
‘சொல்லுங்க தம்பி.. நாயக்கர் உங்கள பத்தியும் உங்க பேங்க பத்தியும் நிறைய சொன்னார்.. என்னால முடிஞ்சத நிச்சயமா பண்றேன்..’
நான் ஓட்டமும் நடையுமாய் வந்துக்கொண்டிருந்த ‘மல்லி’ என்று அவர் சற்று முன் முகப்பு வீட்டில் அழைத்த அந்த பெண் வருவதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வந்து நின்ற அந்த பெண் நீட்டிய கணக்குப் புத்தகத்தை வாங்கி பார்த்த பண்ணையாரின் முகத்தையே பார்த்தேன்.. என்னையுமறியாமல் ஒரு கேலி புன்னகை என் உதடுகளில் தவழ்ந்திருக்க வேண்டும்.
மல்லி என்ற பெண்ணின் முகம் சட்டென்று கோபத்தில் சிவந்தது...
தொடரும்
அடாடா! உருவு கண்டு எள்ளாமை வேண்டுமே சார். சரி. அந்தப் பொண்ணுக்கு அப்படி என்ன கோவம் வந்துச்சுன்னு பாக்கலாம்.
பதிலளிநீக்குநான் சொல்றேன்,
பதிலளிநீக்குபேங்க் மேனேஜர் கால்மேலெ கால் போட்டு உக்கார்ந்திருந்தாரோ?
வாங்க ராகவன்,
பதிலளிநீக்குஅந்த மல்லி ஒரு சென்சிட்டிவ் ஆன பொண்ணு, ஆனா ரொம்ப நல்ல, புத்திசாலி பொண்ணு.. அந்த பொண்ணைதான் என் சிறுகதை ஒன்னுல கதாநாயகியாக்கிருக்கேன்.
வாங்க துளசி,
பதிலளிநீக்குசத்தியமா அது இல்ல காரணம்..
நாளைக்கு பாருங்களேன்..