02 ஜனவரி 2006

திரும்பிப் பார்க்கிறேன் - 47

தொலைப்பேசி இணைப்பு கிடைத்த அன்று வீட்டுக்காரர் அடித்த லெக்சர் இது. வளவளன்னு பேசுவார். னால் கணவன், மனைவி இரண்டு பேருமே குணத்தில் சொக்கத் தங்கம்.

***

தஞ்சையில் வங்கிகள் அதிகம் இருந்த சாலை தெற்கு மத்திய சாலை (South Main Street). பத்துக்கும் மேற்பட்ட வங்கிகள் அச்சாலையில் இருந்தன. அதிலேயே போய் நம்முடைய கிளையையும் திறக்க வேண்டுமா என்று யோசித்தேன்.

ஆகவே அடுத்து வந்த இரண்டு வாரங்களில் அச்சாலையைத் தவிர்த்து நாயக்கர் பரிந்துரைத்த பல இடங்களையும் சென்று பார்த்தேன். ஒன்று இடம் (Locality) நன்றாயிருக்கும், கட்டிடங்கள் தரமில்லாதவையாய் இருக்கும். அல்லது கட்டிடம் புதிதாக இருக்கும் இடம் வங்கி கிளைக்கு ஏதுவானதாக இருக்காது.


தஞ்சையுடைய உள் நகரத்தில் (Inner town) இருந்த பெரும்பாலான கட்டிடங்கள் பழையகாலத்து, அதாவது சுமார் ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டவையாகவே இருந்தன. அதிலும் பெரும்பாலானவை குடியிருக்க மட்டுமே ஏதுவானவை.

நடுவில் பெரிய வானம் பார்த்த கூடமும் அதைச்சுற்றிலும் பெரிய மரத்தூண்களால் தாங்கப்பட்ட ஓட்டுகூரை தாழ்வாரமும் அதையொட்டி விசாலமான அறைகளும்.. சுவர்கள் பெரும்பாலும் சுண்ணாம்பு கற்களாலானவை. கூரைகளும் பழங்காலத்து பாணியில் மர உத்தரங்களுடன் இருந்தன.

வங்கிகளுக்கு அத்தியாவசிய தேவையான பாதுக்காப்பு அறைகள் (Safe Rooms) அமைப்பதற்கு இத்தகைய கட்டிடங்கள் ஏதுவாக இல்லை.

அப்பகுதியில் இருந்த ஏறக்குறைய எல்லா வங்கிகளுக்கும் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்கள் செய்திருந்த ஏற்படுகளையும் பார்த்தேன். கட்டிடங்கள் பழையனவாயிருந்தாலும் பெரும்பாலான வங்கிகள் கட்டிட சுவர்களையொட்டி RCC சுவர்களை எழுப்பி பாதுகாப்பு அறைகளை அமைத்திருந்தனர்.

எனக்கு அது நல்ல உத்தியாகப் படவே அதற்குப் பிறகு பழைய கட்டிடங்கள் ஆனாலும் பரவாயில்லையென்று நினைத்து தேடத் துவங்கினேன். ஆனால் உரிமையாளர்களில் சிலர் ‘சார் அதெல்லாம் முடியாதுங்க. நீங்க அஞ்சி வருஷம் இருந்துட்டு காலி பண்ணிட்டு போற நேரத்துல உங்க இரும்பு கதவை மட்டும் எடுத்துக்கிட்டு போயிருவீங்க. அதுக்கப்புறம் அந்த அறைய வச்சிக்கிட்டு நாங்க என்ன பண்றது?’ என்றார்கள்.

வேறு சிலர், ‘செஞ்சிரலாங்க. ஆனா அதுக்கு தேவையான பணத்தை நீங்கதான் முழுசா தரணும். அத்தோட நீங்க காலி பண்ணிட்டு போறதாயிருந்தா கட்டிடம் இப்ப எப்படியிருக்கோ அதேப்போல திருப்பி தரணும். அதுக்கு சரின்னா சரி.’ என்றார்கள்.

தலைமுடியைப் பிச்சிக்கிட்டு ஓடாத குறைதான்.

நாயக்கருக்கே சில வாரங்களில் அலுத்துப் போய்விட்டது. அதற்குப்பிறகு அவருடைய அலுவலகத்திற்கு நான் செல்லும்போதெல்லாம் மிகவும் பிசியாக இருப்பதுபோல் காண்பிக்க ஆரம்பித்தார். செல்லும்போதெல்லாம் நேரத்திற்கேற்றது போல் கொடுக்கப்பட்டு வந்த காப்பி, மோர், இத்யாதிகளும் மெல்ல, மெல்ல குறைக்கப்பட்டு இறுதியில் சுத்தமாக நின்றுப்போனது.

பார்த்தேன். இனியும் அங்கு போனால் ‘என்ன சார் வேணும்னு’ கேட்டாலும் கேட்பார் என்று நினைத்துக்கொண்டு அவருடைய அலுவலகத்துக்கு செல்வதையே நிறுத்திக்கொண்டேன்.

ஆக, நான் தஞ்சைக்கு வந்து ஒரு மாதம் ஆகியும் கிளைக்கு ஏதுவான இடம் ஒன்றும் கிடைத்தபாடில்லை. என்னுடைய வட்டார அலுவலகத்தை தொடர்பு கொண்டபோதெல்லாம் அவர்கள் கேட்ட முதல் கேள்வியே ‘இடம் என்னாச்சி டிபிஆர்?’ என்பதுதான்.

என்னுடைய இரு சக்கர வாகனத்தில் காலையில் வீட்டிலிருந்து புறப்பட்டு தஞ்சையில் சுற்றிய இடத்தையே இரண்டு மூன்று முறை சுற்றுவேன். வெறுத்துப் போய்விடும். மதிய உணவை தஞ்சை பேருந்து நிலையத்தை அடுத்திருந்த உணவகங்களில் ஏதாவது ஒன்றில் முடித்துக் கொண்டு மீண்டும் மாலைவரை சுற்றுவேன்.

உணவகங்களுக்கும் மட்டும் தஞ்சையில் பஞ்சமேயில்லை. அடுத்தது துணிக் கடைகள்.. அடேங்கப்பா! சென்னையில் கிடைக்கக் கூடிய அனைத்து ரக ஜவுளிகளும் தஞ்சையில் கிடைத்துவிடும்! தஞ்சையை சுற்றியிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழா நேரங்களில் வந்து குழுமும் கூட்டத்தைப் பார்க்க வேண்டும்!

தலையில் முண்டாசு, தோளில் துண்டு என காளை மாடுகள் பூட்டிய வண்டிகளில் பெண்டாட்டி, பிள்ளைகள் சகிதம் தஞ்சைக்கு வந்து குழுமும் ஜனத்திரளும் அத்துடன் தஞ்சை பெரிய கோவிலைக் காண வரும் சுற்றுலா பயணிகளும் சேர்ந்து தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டதுபோல் இருக்கும்.

நான் தஞ்சை சென்றடைந்தது அக்டோபர் மாதத்தில். தீபாவளி, கிறீஸ்துமஸ், பொங்கல் எல்லாம் வந்து போனது. இடம்தான் கிடைத்தபாடில்லை!

சரி, உள்ளூர் செய்தித்தாளில் ஒரு சிறிய விளம்பரம் கொடுக்கலாம் என்று யோசித்து என் வட்டார அலுவலகத்தை அனுமதி கேட்டேன். அனுமதி கிடைத்ததும் திருச்சியிலிருந்து வெளிவரும் தமிழ் செய்தித்தாள் ஒன்றிலும் இந்தியன் எக்ஸ்பிரசிலும் விளம்பரங்கள் கொடுத்தேன்.

இரண்டிலும் கொடுத்த விளம்பரங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் அது வேறொரு சிக்கலில் கொண்டு விட்டது. விளம்பரத்தில் என்னுடைய பெயரும் விலாசமும் கொடுத்திருந்தேன். தொலைப்பேசி எண் கொடுக்கவில்லை. நேரம், காலம் தெரியாமல் தொலைப்பேசி அழைப்புகள் வருமே என்ற எண்ணத்தில். விளம்பரம் கொடுக்கப்பட்ட நாளிலிருந்து தினமும் பத்து, பதினைந்து கடிதங்கள் என்னுடைய பெயருக்கு வரவே என்னுடைய பகுதியைச் சார்ந்த தபால் அலுவலகத்திற்கு பெரிய தலைவலியாய் போனது.

முக்கிய காரணம், தபால் அலுவலகம் என்னுடைய வீட்டிலிருந்து சுமார் இரண்டு கி.மீ தூரத்திலிருந்ததுதான். மேலும் தஞ்சை-மருத்துவக் கல்லூரி பிரதான சாலையிலிருந்து இறங்கி மண் சாலையில் சைக்கிளை மிதித்துக்கொண்டு என் வீடு வந்து சேர தபால்காரருக்கு குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது ஆகும். என் வீட்டையடுத்திருந்த வீடுகளில் பெரும்பாலோரும் உள்ளூர்வாசிகளே இருந்ததால் அவர்களுக்கு வாரம் ஒரு முறை தபால் வருவதே அபூர்வம்!

ஆக, எனக்கு வேண்டி மட்டும் தினமும் இருமுறை வந்து தபால் பட்டுவாடா செய்ய விருப்பமில்லாத ஊழியர் ஒவ்வொரு முறை வரும்போதும் ‘ஏதாவது’ கிடைக்காதா என்ற நினைப்பில் ‘சார் உங்க வீட்டுக்குன்னு அஞ்சி கிலோமீட்டர் சைக்கிளை மிதிச்சிக்கிட்டு வர வேண்டியிருக்கு சார்’ என்று இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை ஐந்து கிலோ மீட்டராக்கி சலித்துக்கொள்வார்.

சரி, இன்னும் ஒரு வார காலத்திற்குத்தானே என நினைத்துக்கொண்டு இரண்டாம் நாள் முதல் அவர் வரும்போதெல்லாம் ரூ.5/- கொடுக்க ஆரம்பித்தேன்.

வந்தது தொல்லை!

முதல் இரு நாட்கள் தினசரி இரு முறை வந்துகொண்டிருந்தவர் நான் கொடுத்த ரூ.5/- அவரை தினமும் நான்கு முறை வரவைத்தது! காலையிலேயே வந்த தபால்களை நான்கு பாகமாக பிரித்து கொண்டு வருவாரோ என்னவோ. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவர் வர ஆரம்பித்தனர். அதாவது யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! என்ற எண்ணத்தில்.

‘ஏங்க.. உங்களுக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு? இப்படி பேங்க் காசுன்னுட்டு வர்றவனுக்கெல்லாம் எடுத்து குடுக்கறீங்க?’ என்று என் அலுவலக விஷயத்தில் அதுவரை தலையிடாதிருந்த என் மனைவியே கேள்வி கேட்கும் நிலைக்கு வந்துவிட்டது அவர்களுடைய ‘டெலிவரி லீலைகள்.’

வீட்டுக்காரரையோ கேட்கவேண்டாம். தபால்காரர்கள் ஒவ்வொரு முறை அழைப்புமணியை அடிக்கும்போதெல்லாம் மேலிருந்து அவர்களை திட்டித் தீர்ப்பார். ‘ஏம்பா. சார் வாசல் கதவ திறந்து வச்சிட்டுத்தானே உக்காந்திருக்காரு. அப்புறம் ஏம்பா.. பெல்ல அடிச்சி என் தூக்கத்த கெடுக்கறே? அவர் உள்ள இருந்தாலும் தபால உள்ளாற வீசிட்டு போய்கிட்டே இரேன். எனக்கு வர்ற தபால வாசல் கேட்டு வழியாவே வீசுற ஆளுதான நீ.’ என்பார்.

பதிலுக்கு, 'ஆமா நீங்க வருஷத்துக்கு ஒரு நா அழுதுக்கிட்டே கொடுக்கற ரெண்டு ரூபாய்க்கு படியேறி வந்து கொடுக்கணுமாக்கும்.’ என்று அவர் காதுபடவே முனகுவார்கள்.

‘ஏம்பா, உங்களுக்கு கவர்மெண்ட்ல சம்பளம் கொடுக்கறாங்க இல்லே.. அப்புறம் நான் வேற தனியா கொடுக்கணுமாக்கும். முப்பது வருஷமா செக்கு மாடு மாதிரி உழைச்சிருக்கேன் தெரியுமா உனக்கு? ஒருத்தன் கிட்டயும் அஞ்சு ரூவா காசு வாங்கனேன்னு சொல்ல முடியுமா?’ என்பார்.

இடையில் நான் தலையிட்டு நிறுத்தாவிட்டால் இப்படி முன்னும், பின்னும் வாக்குவாதம் தொடரும். இறுதியில் ‘வயாசானவராச்சேன்னு பாக்கறேன்’ என்ற எச்சரிக்கையோடு தபால்காரர் செல்வார்.

சரி, விஷயத்துக்கு வருவோம்.

என்னுடைய விளம்பரத்திற்கு வந்திருந்த கடிதங்களையெல்லாம் பிரித்து விலாசங்களை ஒரு புத்தகத்தில் குறித்துக்கொண்டு அடுத்த நாள் முதல் செல்ல ஆரம்பித்தேன். அப்போதுதான் தெரிந்தது பெரும்பாலானவை நான் ஏற்கனவே பார்த்து வேண்டாம் என்று நிராகரித்தவை. மீதியுள்ளவை ஒன்று தகுதியில்லாத கட்டிடங்கள், அல்லது எக்குத்தப்பாய் வாடகை கேட்ட உரிமையாளர்கள்.

ஆக, அதுவும் பயலனளிக்கவில்லை.

என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நான் படும் பாட்டைப் பார்த்து என் வீட்டில் பணிபுரிய தினமும் இரு நேரம் வரும் பெண்மனி ஒருநாள் என் மனைவியிடம் , ‘அம்மா எனக்கு ஒரு யோசனை தோணுது. சொல்லலாங்களா’ என்று கேட்பதை நான் பார்த்தேன். என் மனைவி என்னைப் பார்த்து, ‘என்னங்க, இவங்க சொல்றதையும்தான் கேப்பமே?’ என்றார்.

நான் இருவரையும் வியப்புடன் பார்த்தேன். யோசனை யார் சொன்னால் என்ன? உபயோகமாயிருந்தால் சரிதான். ‘சரி சொல்லுங்க.’ என்றேன்.

‘பக்கத்துலருக்கற நம்ம மாதா கோயில் சாமியார்கிட்ட கேட்டு பாருங்க சார். கோயிலுக்கு பெரிய, பெரிய ஆளுங்கல்லாம் வந்து நான் பாத்துருக்கேன். சாமியார் பங்களாயிலயும் நாந்தான் சார் கூட்டிப் பெருக்குறேன்.’

அப்படியா, அட! இதுவும் நல்ல யோசனையாச்சே. எனக்கேன் இது தோனாம போச்சி?' என்று நினைத்துக்கொண்டு, ‘சரிம்மா. நீங்க சொல்றதும் நல்லாத்தான் இருக்கு. சாமியார் எந்த நேரத்துல ஃப்ரீயா இருப்பார். உங்களுக்கு தெரியுமா?’ என்றேன்.

தொடரும்

6 கருத்துகள்:

  1. சுவாரசியமான அனுபவம். இப்போதைய தஞ்சை மற்றும் தமிழகத்தின் வேறு நகரங்களில் நீங்கள் அப்போது பட்ட கஷ்டங்களைப் பட வேண்டியிருக்காது என நினைக்கிறேன்.

    நிற்க. இப்போது நான் இப்பின்னூட்டம் இடுவதன் நோக்கமே உங்களுக்கு ஒரு நற்செய்தி (!) தருவதற்குத்தான். தமிழ்மணத்துக்கு வாரிசு வந்து விட்டது. காசி அவர்கள் இதை http://www.nandhavanam.com/home.php என்று அப்டேட் செய்கிறார். சீக்கிரம் அதில் தங்கள் பதிவை இணைத்துக் கொள்ளுங்கள். அவர் தரும் இரு மீயுரைகளையும் உங்கள் டெம்பிளேட்டில் சேர்த்து கொள்ளவும். நான் செய்தாகி விட்டது. இப்போதைக்கு தமிழ்மணமும் நந்தவனமும் தனித்தனியாக இருப்பினும் future belongs to Nandhavanam.

    பதிவுகள் உடனுக்குடன் இற்றைப்படுத்தப்படுகின்றன. தேவையானதைச் செய்யவும்.

    இப்பின்னூட்டம் என் தனிப்பதிவில் நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  2. வாங்க டோண்டு சார், நன்றி.

    எனக்கும் காசி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.

    புதிய தளத்தில் என்னுடைய இரண்டு வலைப்பூக்களையும் பதிந்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  3. ஒரு நாளைக்கு நாலுவாட்டி அஞ்சஞ்சு ரூபாய் கொடுத்து இந்த ஆளுங்களைக் கெடுத்துவச்சது நீங்கதானா?

    அட தேவுடா!

    பதிலளிநீக்கு
  4. ஆஹா,
    //தெற்கு மத்திய சாலை//
    நம்மூர் பெருமை கேட்க நல்லாத்தான் இருக்கு. உங்க பேங்க் கிழக்கு ராஜ வீதியில தானே இருக்கு? சரியா நினைவிலில்லை. தெற்குவீதி கூட்டம்.. அப்பப்பா.

    இதுவரைக்கும் வெளிதஞ்சாவூர்தான் சொல்லிருக்கீங்க. ஆனா இந்த ராஜ வீதிகளுக்கு நடுவுல இருக்கு பாருங்க. சந்துங்க. அதப்பத்தியும் மறக்காம எழுதுங்க. ஏன்னா பாதி தஞ்சாவூர் அங்கதான் இருக்கு. பஸ் ஸ்டாண்டிலேர்ந்து வடக்குவீதி வரைக்கும்கூட சவுகரியமா சந்துகள் வழியாவே ஸ்கூட்டர்லேலாம் வந்திடலாம். நெரிசலும் இருக்காது. ஆனா அந்த maze ல தெரியாம போய் மாட்டிகிட்டோம்னா அப்புறம் GPS உதவியோடதான் வெளியவரணும். அதெல்லாம் லோக்கல்ஸ் க்கு மட்டுமே தெரிஞ்சது! :)

    பதிலளிநீக்கு
  5. வாங்க துளசி,

    திருவிழாவுக்கு திருவிழா இனாம் கொடுக்கறது நம்ம ஊர் வழக்கம்தானே. நான் தங்கியிருந்த இடத்துக்கு தினம் தபால்காரர் வர்றதே ஒரு திருவிழாமாதிரிதான் இருந்திச்சாம். எங்க வீட்ல வேல செஞ்சிக்கிட்டிருந்த அம்மா சொல்வாங்க. அதான் அவர் வரும்போதெல்லாம் குடுக்கணும்னு தோனியிருக்கு.

    பதிலளிநீக்கு
  6. வாங்க ராமனாதன்.

    நீங்க சொல்றது சரிதான். நானே என் ஸ்கூட்டர்ல பஸ் ஸ்டாண்டுலருந்து குறுக்கால சந்துக்குள்ள பூந்துதான் எங்க பேங்க்குக்கு போவேன். ரெண்டு பக்கமும் திறந்த சாக்கடையில விழாமயும் எதிர்ல வர்ற சைக்கிள்ல மோதாம திடீர்னு வீடுகள்லருந்து வெளிய குதிக்கற பசங்கள அவாய்ட் பண்ணி போறதே ஒரு சர்க்கஸ் மாதிரிதான். முதல்ல நான் எங்க கிளைய திறந்துக்குறேன். அப்புறம் ஊர பத்தி விலாவாரியா எழுதறேன்.

    பதிலளிநீக்கு