நாளைய பிரச்சினை நாளைக்கு ...
அடுத்த நாள் காலையில் கண் விழித்தவுடனே எனக்கு முன் இரண்டு முக்கிய கடமைகள் இருந்தன.
முதலில் துவக்க விழாவுக்கு வரவிருக்கின்ற என்னுடைய பொது மேலாளர் மற்றும் வட்டார மேலாளர் தங்குவதற்கு சகல வசதிகளுடன் கூடிய இரண்டு அறைகளுக்கு ஏற்பாடு செய்வது.
பிறகு, திருச்சிக்கு சென்று வருவது.
முதலில் செய்ய வேண்டிய காரியத்தை காலையிலேயே முடித்துவிட்டால் மதியத்திற்கு முன்பாக திருச்சி சென்று இரவுக்குள் ஊர் திரும்பிவிடலாம் என்ற முனைப்போடு வீட்டிலிருந்து ஒன்பது மணிக்குப் புறப்பட்டேன்.
இப்போதுள்ளது போன்று சகல வசதியுடன் ஸ்டார் அந்தஸ்த்து பெற்ற விடுதிகள் அப்போது இல்லை. தமிழக அரசு சுற்றுலாத் துறை நடத்திய விடுதி ஒன்றும், வேறொரு விடுதி (இப்போது அதை மூடி விட்டார்கள் ) ஒன்றும் மட்டுமே இருந்தன.
என்னுடைய வட்டார மேலாளர் வந்தபோது இவற்றுள் எதில் அறை இருந்ததோ அதில் ஏற்பாடு செய்வது வழக்கம்.
ஆகவே முதலில் தஞ்சை மெய்ன் சாலையில் இருந்த டிடிசி விடுதிக்கு சென்று விசாரித்தேன்.
எனக்கு வேண்டியிருந்த நாட்களில் அறைகள் காலியில்லை என்று பதில் வந்தது. அங்கிருந்து அடுத்த விடுதிக்கு சென்றேன். ஊஹ¤ம். அங்கும் காலியில்லை.
அதுவரை, இவை இரண்டில் ஏதாவது ஒன்றில் அறை கிடைக்காமல் இருந்ததில்லை. சாதாரணமாக தஞ்சை பல்கலைக் கழகத்திலோ அல்லது தஞ்சை மருத்துவ கல்லூரியிலோ பயிற்சி கூட்டங்களோ அல்லது செமினார்களோ நடந்தால் மட்டுமே இவ்விரு விடுதிகளும் அறை கிடைப்பது கடினம்.
ஆகவே வரவேற்பறையிலிருந்த ஊழியர்களை இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தேன்.
‘சார் அன்னைக்கி மட்டுமில்ல.. அந்த வாரம் முழுசும் தஞ்சாவூர்லருக்கற எல்லா அறைகளும் புக் ஆயிருச்சி. ரூம் வேணும்னா திருச்சிக்குதான் போவணும்.’ என்று பதில் வந்தது.
எனக்கு வியப்பாயிருந்தது. அப்போது தஞ்சையில் நடுத்தர விடுதிகள் பத்துக்கும் மேல் இருந்தன. எல்லாவற்றிலுமிருந்த அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளனவென்றால்... அப்படியென்ன நடக்கவிருக்கிறது? ஏதாவது அரசு விழா அல்லது அரசியல் கட்சிகளின் கூட்டமாயிருக்குமோ..
‘இல்ல சார். நம்ம ------ மினிஸ்டர் வீட்டுக்கு கல்யாணம். அதான்..’ என்றார் வரவேற்பறையில் என்னைப் போலவே அறை கிடைக்காமல் வெறுத்துப் போயிருந்த ஒருவர். ‘இவனுங்களுக்கென்ன? பணமா இல்லை.. ஊரையே புடிச்சிக்கிட்டான்க.. என்னத்த சொல்றது?’
நான் என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப் போய் நின்றேன். பிறகு இனியும் தாமதித்துப் பயனில்லை என்று உடனே புறப்பட்டு அருகிலேயே இருந்த நாயக்கரின் அலுவலகத்துக்குச் சென்றேன்.
என்னைப் பார்த்ததும் வியப்புடன், ‘வாங்க சார்.. ரெண்டு வாரத்துக்கு மேல ஆச்சு உங்கள பார்த்து. நான் சொன்ன பண்ணையார பார்த்துட்டு வரேன்னு போனவர்தான். இன்னைக்கி வரீங்க. நீங்க வந்து பார்த்தீங்கன்னு நீங்க அங்கருந்து புறப்பட்டவுடனே அவர் போன் பண்ணி சொன்னாரு. உங்கள அவருக்கு ரொம்ப புடிச்சி போச்சி போலருக்கு.. கட்டாயம் உங்க பேங்குல கணிசமா ஒரு தொகைய போடறேன்னு சொன்னார்.’ என்றார்.
அவர் கூறியது உண்மைதான். நான் வேலைப் பளுவில் அவருக்கு நன்றி கூற மறந்தே போய்விட்டேன். ‘சே.. என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார் அவர்.’ என்று என்னை நானே நொந்துக் கொண்டேன். இப்போது இந்த விடுதி விஷயத்தைச் சொன்னால் நிச்சயம் என்னைப் பற்றிய அவருடைய மதிப்பு இனியும் குறைய வாய்ப்பிருக்கிறது.. என்ன செய்யலாம்? என்று யோசித்தேன்.
‘என்ன சார்? நான் ஏதாச்சும் தப்பா சொல்லிட்டேனா? உங்களுக்கு இருந்த வேலையில மறந்து போயிருப்பீங்க. விடுங்க.. வந்த விஷயத்த சொல்லுங்க. உங்க முகத்த பார்த்தா புதுசா ஏதோ பிரச்சினைன்னு தோனுது. எதாருந்தாலும் சொல்லுங்க.’
சரி.. அவரே கேட்கிறார். சொல்லி விடுவோம், என்ற முடிவுடன் அவரைப் பார்த்தேன். ‘தப்பா நினைச்சிக்காதீங்க சார். இங்கயும் அங்கயும் ஓடுனதுல பண்ணையாரைப் பார்த்த விஷயத்த உங்க கிட்ட சொல்ல மறந்துட்டேன்.’ என்றதுடன் நிறுத்தாமல் கடந்த வாரத்தில் நான் செய்தவைகளை, யரை சந்தித்த விஷயமும் சேர்த்து, சுருக்கமாக விவரித்தேன்.
‘அப்படியா சார்? பாத்தீங்களா ஒரே ஆளா இருந்துக்கிட்டு இவ்வளவு வேலையையும் செஞ்சி முடிச்சிருக்கீங்க. நான் என்னடான்னு எங்கிட்ட சொல்லலங்கற விஷயத்த பெரிசா சொல்லிக்கிட்டு நிக்கறேன். இப்ப நாந்தான் என்ன தப்பா நினைச்சிக்காதீங்க சொல்லணும். வந்ததுலருந்து நின்னுக் கிட்டே இருக்கீங்களே சார். உக்காருங்க. மோர் கொண்டு வரச் சொல்றேன். குடிச்சிட்டு நிதானமா எதுவாருந்தாலும் சொல்லுங்க. உங்களாலயே செஞ்சி முடிக்க முடியலைனா நிச்சயம் பெரிய விஷயமாத்தான் இருக்கும். சொல்லுங்க, என்னால ஏதாவது செய்ய முடியுதான்னு பாக்கறேன்.’ என்றார் மூச்சு விடாமல்.
அவர் அளித்த குளிர்ந்த மோர் என்னுடைய டென்ஷனை சற்றே குறைத்தது. அறை கிடைக்கவில்லை என்று தெரிந்தால், ‘இது கூட உங்களா முடியலையா ஜோசப்? இட் ஈஸ் அ ஷேம்.’ என்பாரே என்னுடைய வட்டார மேலாளர் என்று நினைத்தேன்.
இவராலாவது முடிந்தால் அதிலிருந்து தப்பிக்கலாமே என்று நினைத்து, ‘சார்.. திறப்பு விழாவுக்கு வர்ற எங்க ஜெனரல் மேனேஜரும், வட்டார மேலாளரும் தங்கறதுக்கு அந்த டேட்டுல ஒரு ரூம் கூட கிடைக்கல சார். எல்லா இடத்துலயும் சுத்திட்டுதான் வரேன். என்ன பண்றதுன்னு தெரியலை.. அதான் உங்க மூலியமா ட்ரை பண்ணலாம்னு...’ என்றேன் தயக்கத்துடன்..
அவர் ‘அப்படியா, ஏன்?’ என்பதுபோல் பார்த்துவிட்டு சுவரில் தொங்கிய நாட்காட்டியைப் பார்த்தார். அதில் நான் கூறிய மூன்று தியதிகளையும் ஏற்கனவே சிவப்பு மையால் வட்டமிட்டு வைத்திருக்கப்பட்டிருந்ததை வியப்புடன் நானும் பார்த்தேன்.
‘என்ன சார்? உங்களுக்கும் அழைப்பு வந்திருக்கா? அந்த டேட்டுல வட்டம் போட்டு வச்சிருக்கீங்க?’ என்றேன்.
அவர் சலிப்புடன் என்னைப் பார்த்தார். 'ஆமா சார். நேத்து வரைக்கும் ஊர்ல தாதா மாதிரி சுத்திக்கிட்டிருந்தான். தலைவர் சீட்ட குடுத்தாலும் குடுத்தாரு.. அவர் பேர சொல்லிக்கிட்டு ஒரு களுதைய நிக்க வச்சாக்கூட செயிச்சிருக்குமே. செயிச்சிட்டான். இப்ப கைல புடிக்க முடியல.. வீட்டுல கல்யாணம்.. ஊரையே வளைச்சி போட்டுட்டான்.. லாட்ஜ்காரங்க இஷ்டப்பட்டா குடுக்கறாங்க? இல்லேன்னா, அவனோட அடிபொடிங்க என்ன வேணாலும் செய்யுமேன்னு பயந்துக்கிட்டுத்தான். தலைவர் பேர சொல்லி சொல்லியே புடிச்சிருப்பானுங்க.. நீங்க அன்னைக்கி பாத்துத்தானா திறப்பு விழாவ வைக்கணும்? நா இல்ல சார், யார் நினைச்சாலும் ஒன்னும் பண்ண முடியாதே.. இப்ப என்ன பண்ணலாம்?’
என்னடா இது இவரும் இப்படி சொல்லிட்டாரே.. சே.. டேட்ட முடிவு பண்றது முன்னால இவர கேட்ருக்கலாம். எல்லாம் நம்ம முட்டாத்தனம்.. என்று என்னை நானே நொந்துக் கொண்டேன்..
அவரும் என்னையே பார்த்தார். பிறகு, ‘தேதிய ஒரு வாரத்துக்கு தள்ளிப் போடுங்களேன் சார்.’ என்றார் தயக்கத்துடன்..
அது முடிஞ்சாத்தான் செஞ்சிரலாமே.. ஆயர்கிட்டக் கூட சொல்லி சமாளிச்சிரலாம். ஆனா என் வங்கி அதிகாரிகளை சமாளிப்பதுதான் கஷ்டம். உடனே இவன் எதுக்கும் லாயக்கில்லாதவன்னும் முத்திரை குத்தி விடுவார்களே என்று யோசித்தேன்..
‘அது முடியும்னு தோனலை சார். பிஷப்புக்கிட்ட வேற தேதிங்க கிடைக்கணும்.. அழைப்பிதழ் அடிக்கலைன்னாலும் மறுபடியும் அவர்கிட்ட போய் நின்னு முடியாதுன்னுட்டா வேற ஒருத்தர தேடி அலையணும். அதான் யோசிக்கிறேன்.’
‘அதுவும் சரிதான் சார்.’ என்றவர் சிறிது நேரம் யோசித்து விட்டு, ‘நான் ஒரு யோசனை சொல்றேன். நீங்க உங்க ஜோனல் மேனேஜர் கிட்ட கேட்டுட்டு சொல்லுங்க.’ என்றார்.
‘சொல்லுங்க சார்.’ என்றேன் வலுடன்.
‘இங்கருந்து ஒரு பத்து கிலோ மீட்டர் தூரத்துல நம்ம நண்பர் ஒருத்தரோட பண்ணை வீடு இருக்கு. அவருக்கு ரெண்டு மூனு ரைஸ் மில் இருக்கு. உங்க பேங்க்ல லோன் கீன் எதுவும் கிடைக்குமா சார்னுகூட என் கிட்ட கேட்டார். திறக்கட்டும் சார் நான் கேட்டு பாக்கறேன்னு சொல்லியிருக்கேன். பண்ணை வீட்ல வசதிங்கன்னு பெரிசா இருக்காது. இருந்தாலும் ரெண்டு மூனு நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன். உங்க ஜோனல் மேனேஜர் கிட்ட சொல்றதுக்கு முன்னால நீங்க போய் பாக்கணும்னாலும் சொல்லுங்க ஏற்பாடு பண்றேன்.’
நான் என்ன சொல்வதென தெரியாமல் தயங்கினேன். என்னுடைய வட்டார மேலாளர் ஒருவேளை சம்மதித்தாலும் சம்மதிப்பார். ஆனால் என்னுடைய பொது மேலாளரைப் பற்றி நான் கேள்விப் பட்ட வரைக்கும் அவர் நிச்சயம் இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார். கண்டிப்பு, நேர்மை என்ற சொற்களுக்கு பொருளாய் இருப்பவர் அவர். முன் பின் தெரியாத, வங்கியின் வாடிக்கையாளராகக் கூடிய, அதுவும் கடன் உதவியை எதிர்பார்த்திருக்கும் ஒருவருடைய வீட்டில் நிச்சயம் தங்க சம்மதிக்க மாட்டார்.
இருந்தாலும் உடனே ‘வேண்டாம்’ என்று சொல்லாமல் ‘என் வட்டார மேலாளரிடம் கேட்டுவிட்டு சொல்றேன் சார்.’ என்று கூறிவிட்டு புறப்பட்டு நேரே சேட்டின் அலுவலகம் சென்றேன்.
அவரும் நாயக்கர் கூறியது போலவே ‘முடிஞ்சா உங்க டேட்சை மாத்தப் பாருங்க சார். டவுண்ல அந்த ரெண்டு ஓட்டல விட்டா வேற எங்க கிடைச்சாலும் உங்க அதிகாரிகளுக்கு பிடிக்காது.’ என்றார்
நான் சுருக்கமாக அதிலிருந்து பிரச்சினைகளை எடுத்துரைத்தேன். அவர் உடனே, ‘சார் உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா ஒன்னு சொல்றேன்.’ என்றார்.
‘சொல்லுங்க’ என்றேன்.
‘எனக்கு மெடிக்கல் காலேஜ் பக்கத்துல ஒரு கெஸ்ட ஹவுஸ் இருக்கு. பிசினஸ் விஷயமா நம்ம மெட்றாஸ் ஃப்ரண்டு அவரோட சினி ஃப்ரெண்ட்ச எப்பனாச்சும் கூட்டிக்கிட்டு வருவாரு.. நாங்க ரெண்டு பேரும் இன்வெஸ்ட் பண்ணிதான் அந்த கெஸ்ட் ஹவுசை கட்டியிருக்கோம். ஒரு த்ரீ ஸ்டார் ஓட்டலருக்கற எல்லா வசதிகளும் இருக்கும். உங்க ஜி.எம்மும் ஜோனல் மேனேஜரும் தாராளமா வந்து தங்கலாம். வித் நோ ஸ்ட்ரிங்க்ஸ் அட்டாச்ட். நான் பிசினசையும் ஃப்ரண்ட்ஷிப்பையும் மிக்ஸ் பண்றதே இல்லை..’ என்றார்.
நாயக்கருடைய நண்பரின் பிரச்சினை இவர் விஷயத்திலும் இருக்கிறதே என்று யோசித்தேன்.. இவரும் நிச்சயம் என்னிடம் இவருடைய வர்த்தகத்திற்கு கடன் கேட்டு வரப்போகிறவர்களில் ஒருவராயிருப்பாரே.. ஜி. எம் ஒத்துக் கொள்வாரா?
என்ன செய்யலாம்?
சே, இன்று விழித்தபோது இப்படி நாள் முழுவதும் இதற்கே போய்விடும் என்று நினைக்கவேயில்லை..
How am I going to explain this mess to my Zonal Manager?
இதே சிந்தனையுடன் அவரிடம், ‘எங்க ஜோனல் மேனேஜர் கிட்ட கேட்டுட்டு உங்கள வந்து பாக்கறேன் சார்’ என்று கூறிவிட்டு தஞ்சை பேருந்து நிலையத்தையொட்டியிருந்த தபால் நிலையத்தை நோக்கி சென்றேன் தொலைப் பேசி செய்ய...
தொடரும்..
ம்ம்ம்...கொடுமை....இந்த அரசியல் அடாவடிகள் எல்லாம் ஒழியனும். அதுக்கு இப்போதைக்கு வாய்ப்பு இல்லை. ஆனால் நிலைமை நிச்சயம் மாறும். நாடும் முன்னேறும்.
பதிலளிநீக்குவாங்க ராகவன்,
பதிலளிநீக்குசுமார் 22 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சியைத்தான் இங்கே குறிப்பிட்டுள்ளேன். ஆனால் இப்போது நிலைமை முன்னேறியா இருக்கிறது? இனியும் 25 ஆண்டுகள் போனாலும் பெரிதாய் ஒன்றும் மாறிவிடப் போவதில்லை. இதுதான் நம் தாய்த்திருநாடு!
வாழ்க நம் குடியரசு!!
(forgive me for typing in english..i have no other option)
பதிலளிநீக்குDear Mr.Joseph, Lets hope for a better tommorow...I enjoyed your writings...keep it up...
வாங்க அஷோக்,
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்துக்கு நன்றி.
தமிழில் எழுதுவது மிகவும் எளிது. ஒலியியல் தட்டெழுதும் பலகையும் (Keyboard) தமிழ் மென்பொருளும் இலவசமாகவே கிடைக்கின்றன. இணைய தளங்களில் ஒரு சுற்று வாருங்கள். நிச்சயம் கிடைக்கும்.