24 ஜனவரி 2006

திரும்பிப் பார்க்கிறேன் 65

என்னையுமறியாமல் இரண்டு நாட்களுக்கு முன்னர் நான் சந்தித்த அந்த போலி சமூக சேவகரை நினைத்துக் கொண்டேன்.

பளிங்காலான இயேசு பிரானின் உருவத்தை மேசை மேல் வைத்திருத்தல் மட்டுமே ஒரு கிறீஸ்துவனின் அடையாளம் என்று புரிந்துக் கொண்டு அவருடைய போதனைகளை காற்றில் பறக்கவிட்ட அவர் எங்கே..

அதே இயேசு பிரான் தன் பொறுப்பில் விட்டுச் சென்ற பதினாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் உண்மையான ஆயனாய் பரிமளிக்கும் இவர் எங்கே..

இவர் வந்திருந்து என் கிளையைத் திறந்து வைத்தால் மட்டும் போதும் என்று அதுவரை நினைத்திருந்த நான் இவரையும் அந்த பண்ணையாரையும் போன்றோரின் கைகளிலிருந்து முதல் டெப்பாசிட் தொகை கிடைக்கப் பெற்றால் எத்தனை நன்றாயிருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தேன்..

நான் பதிலுக்கு அவரைப் பார்த்து பணிவுடன் புன்னகைத்து விட்டு எழுந்து நின்று மரியாதையுடன் நான் கொண்டு சென்றிருந்த அழைப்பு கடிதத்தை அவருடைய கையில் கொடுத்தேன்.

நான் எழுந்து நின்றதில் அர்த்தம் உண்டு.. ஏனெனில் அவர் மிகவும் மரியாதைக்கு பாத்திரமானவர். ஆனால் அவரும் பதிலுக்கு எழுந்து நின்று என்னுடைய கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்..

பிறகு நிதானமாக உறையை பிரித்து என்னுடைய கடிதத்தைப் படித்துவிட்டு கையிலேயே வைத்துக் கொண்டார். ‘ரொம்ப சந்தோஷம் தம்பி.. கண்டிப்பா வரேன்.’ என்றார் சுருக்கமாக.

நான் மேலே என்ன பேசுவதென தெரியாமல் மவுனமாயிருந்தேன். ஆயர் என்னுடன் வந்த பாதிரியாரைப் பார்த்து. ‘நீங்க இவருக்கு என்னென்ன உதவி பண்ண முடியுமோ எல்லாம் பண்ணி குடுங்க ஃபாதர்.’ என்றவாறே எழுந்து நின்று தன்னுடைய வலக்கரத்தை உயர்த்தி, ‘God bless you my son.’ என்று ஆசீர்வதிக்க இதை முற்றிலும் எதிர்பார்க்காத நான் என்னையுமறியாமல் ஒரு நொடி கண்கள் கலங்கிப் போய் நின்றேன். பிறகு சுதாரித்துக் கொண்டு அவருடைய மோதிரத்தை மீண்டும் ஒருமுறை முத்தம் செய்துவிட்டு வெளியேறி வராந்தாவில் என்னுடன் வந்த பாதிரியாருக்காக காத்திருந்தேன்.

அடுத்த நிமிடமே அவர் வெளியே வந்து, ‘வாங்க ஜோசப்.’ என்று என்னை அழைத்துக் கொண்டு அவருடைய அறைக்கு சென்றார்.

அவருடைய அறையும் எளிமையாகத்தான் இருந்தது. ஆனாலும் யரின் அறையை விட சற்றே வசதிகளுடன்..

‘எல்லாருமே ஆயர் மாதிரி எளிமையா இருக்க முடியாது ஜோசப். நீங்க அவர பார்த்துட்டு நாங்க எல்லாருமே அப்படித்தான் நினைச்சிராதீங்க.. நாங்களும் மனுஷங்க தானே.. ஒருவேளை நானும் ஆயரோட வயசுல இந்த உலகத்துலருக்கற எல்லா வசதிகளையும் துறந்துருவேனோ என்னமோ.. இந்த வயசுல.. இதையெல்லாம் துறக்க முடியலை ஜோசப். தினமும் ரேடியோ சிலோன்ல பாட்டு.. ஜெயகாந்தன், நா.பா, அகிலன் எழுதிய நாவல்கள்.. இதெல்லாம் சோதனையாத்தான் இருக்கு.. நாலு கூட்டங்களுக்கு போய் பேசறதுக்கு அப்பப்ப மதறாசிலிருக்கிற என் நண்பர் (இவர் அதிமுக எம்.பியாக இருந்தவர். திருநெல்வேலியை அடுத்த ஊரைச் சார்ந்தவர். இவரும் பாதிரியாரும்  கல்லூரி நண்பர்கள் என்றார்) எனக்கு தேவைப்படுகிற புத்தகங்கள வாங்கி அனுப்புவார்.. இதெல்லாம்தான் என் தனிமையை போக்கும் நண்பர்கள்..’ என்றார், என் பார்வையை புரிந்துக் கொண்டு..

‘அதுலெல்லாம் தப்பே இல்லை ஃபாதர். நீங்க சொல்லாமலே எனக்கு தெரியும். ஏன்னா என் குடும்பத்துலருந்தும் அப்பா வழியில ஒருத்தரும் அம்மா வழியில ஒருத்தரும்னு ரெண்டு பேர் குருவா இருக்காங்க.’ என்றேன்.

‘அப்படியா?’ என்று வியந்தவரிடம் அவர்களைப் பற்றி கூற அவர் மேலும் ஆச்சரியத்துடன், ‘என்ன ஜோசப், ரொம்ப நெருங்கி வந்துட்டிங்க போலருக்கு? அவங்க ரெண்டு பேரையுமே தெரியுமே.. ஒரு வழியில என்னோட கசின்ஸ்தான்..’ என்றார்.

ஆக அடுத்த அரைமணி நேரம் எங்கள் இருவருடைய குடும்பத்தினரைப் பற்றி பேச்சு திரும்பியது. பிறகு அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு எழுந்தேன். ‘இன்னொரு விஷயம் ஜோசப். நீங்க உங்க அழைப்பிதழை அச்சடிக்கறதுக்கு வேற எங்கயும் போக வேணாம். எங்க கண்ட்ரோல்லருக்கற அச்சகத்துலயே அடிச்சிரலாம். இல்லன்னா ஆயருடைய பெயரையும் அவருடைய பதவியையும் பத்தி விளக்கமா சொல்லி அடிக்க வேண்டியிருக்கும். நீங்க வேற யாரையும் கூப்பிடறதா இருந்தா எனக்கு முன்னாலயே சொல்லணும் ஜோசப். ஏன்னா ஆண்டவர் பிரச்சினை¨க்குரிய ஆளுங்க கூட ஒரே மேடையிலருக்கறத விரும்ப மாட்டார். உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.’ என்றார்.

அவர் கூறியது எனக்கு நன்றாகவே புரிந்தது. ‘நாங்க வேற யாரையும் கூப்டறதா இல்லை ஃபாதர். நீங்க சொன்ன மாதிரியே உங்க ப்ரெஸ்சுலயா அடிச்சிரலாம். நான் மேட்டரை ஃபைனலைஸ் பண்ணிட்டு வந்து ரெண்டு நாளைல சொல்றேன்.’ என்று உறுதியளித்துவிட்டு என் கிளைக்கு திரும்பினேன்...

போகும் வழியில் மத்திய தந்தியலுவலகத்துக்குள் நுழைந்து என் வட்டார மேலாளரிடம் நான் ஆயரை சந்தித்த விஷயத்தை விவரித்துக் கூறிவிட்டு அழைப்பிதழ் அச்சடிப்பதற்கு அனுமதி பெற்றேன்.

என்னுடைய கிளையின் ஃபர்னிஷிங் வேலை முடியும் தருவாயிலிருந்தது. ‘இன்னும் ரெண்டு நாள்தான் சார். கண்ணாடி வேலைதான் லேட்டாக்கிருச்சி. இங்க நாங்க நினைச்ச கண்ணாடி கிடைக்காம திருச்சிலருந்து கொண்டு வர வேண்டியாதா போயிருச்சி சார்.’ என்ற ஒப்பந்தக்காரரைப் பார்த்தேன். அவருக்கு கண்ணாடி மட்டும்தான் திருச்சியிலிருந்து வேண்டியிருந்தது.

எனக்கோ.. என்னுடைய கிளைக்கு வேண்டியிருந்த ஏறக்குறைய எல்லாமே திருச்சியிலிருந்துதான் வாங்க வேண்டியிருந்தது. திருச்சி என்றதும்தான் நினைவுக்கு வந்தது..

நான் ஐந்து வாரங்களுக்கு முன் ஆர்டர் செய்திருந்த மேசை, நாற்காலிகள், இரும்பு அலமாரிகள், இன்னும் வரவில்லையே என்பது நினைத்துக் கொண்டு அடுத்த நாளே திருச்சி சென்றுவர வேண்டுமென்று குறித்துக் கொண்டேன்.

சரி.. வந்ததுதான் வந்தோம் கட்டிட உரிமையாளரையும், சேட்டையும் பார்த்துவிட்டு போகலாம் என்று முதலில் என் கிளைக்கு எதிரே இருந்த உரிமையாளரின் சகோதரர் கடைக்கு சென்றேன்.

‘வாங்க சார்.’ என்று வாயெல்லாம் பல்லாக வரவேற்றனர் கல்லா பெட்டியிலிருந்த இரு சகோதரர்களும்.

கடந்த முறை அவர்களை சந்தித்தபோதிருந்த கவலை ரேகைகளை அவர்களுடைய முகத்தில் காணவில்லை. NTC நிறுவனத்திடமிருந்து தங்களுடைய கடையை இனியும் குறைந்தது இரண்டு வருடங்களுக்காவது மீட்க முடியாது என்ற நிலையை வேறு வழியில்லை என்று ஒத்துக் கொண்டவர்கள் போலிருந்தனர் இருவரும். நானும் அப்பிரச்சினையைக் கிளறுவதால் எந்த பயனுமில்லை என்ற நினைப்பில் அதைப் பற்றி ஒன்றும் பேசாமல் பொதுவான விஷயங்களை பேசிவிட்டு கிளம்பி சேட்டுடைய அலுவலகத்தை அடைந்தேன்.

உணவு வேளையானதால் பசி வயிற்றைக் கிள்ளியது. சேட்டின் அலுவலகத்தில் வேறு சிலர் திண்ணையில் காத்திருந்ததை சாலையிலிருந்தே கண்ட நான் சரி, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து என் வாகனத்தை வந்த வழியே திருப்ப முயன்றேன். அந்த நேரம் பார்த்து வாசலுக்கு வந்த சேட்டின் மூத்த மகன் (அவருக்கு இரு மகன்களும் ஒரு மகளும்) என்னைப் பார்த்ததும், ‘சார் எங்க போறீங்க? அப்பா உள்ளதான் இருக்கார். வாங்க.’ என்று இறங்கி வந்து என்னைப் பிடித்துக் கொண்டார். நானும் வேறு வழியின்றி வாகனத்தை நிறுத்தி விட்டு அவர் பின்னே சென்றேன்.

அலுவலகம் முழுவதும் ஆட்கள்!

நான் ஏதாவது விசேஷமோ என்று தயங்கி நின்றேன். சேட்டின் மகன் தரையில் விரிக்கப் பட்டிருந்த மெத்தையில் அமர்ந்திருந்த எல்லோரையும் விலக்கிக் கொண்டு தன் தந்தையிடம் சென்று நான் வந்திருந்த விஷயத்தை அறிவிக்க அவரும் உடனே வந்து என்னை அழைத்துச் சென்று கூட்டத்தின் நடுவில் அமர்த்தினார்.

‘சார் நல்ல நேரத்துல வந்தீங்க. இங்க கூடியிருக்கற எல்லாரும் நம்ம ஜாதி ஆளுங்க சார். இங்கரூந்து திருச்சி, கும்பகோணம் இந்த பக்கம் திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு வரைக்கும் இருக்கற சுத்துவட்ட ஊர்ல நம்மள மாதிரியே பிசினஸ் பண்ணிக்கிட்டிருக்கறவங்க.. இந்த மாதிரி வருஷத்துக்கு ஒரு தரம் ஒரு ஊர்ல வச்சி மீட் பண்றது வழக்கம். இந்த வருஷம் இங்க..’ என்றார். அத்துடன் அங்கிருந்த எல்லோருக்கும் என்னையும்  என்னுடைய வங்கியையும் அறிமுகப்படுத்தினார்.

குழுமியிருந்த எல்லோரும் என்னைப் பார்த்து வணக்கம் செலுத்தியதுடன் என்னைக் கட்டாயப் படுத்தி இரண்டொரு வார்த்தைகள் பேசவும் வைத்தனர்.

தற்செயலாக நடந்த அந்த சந்திப்பு பிறகு என்னுடைய வங்கி வர்த்தகத்தில் மிகவும் உதவியாக இருந்தது. ஏனென்றால் தஞ்சை நகரம் அக்காலத்தில் அவ்வளவாக தொழில் வளர்ச்சி பெறாத நகராமாயிருந்தது.

உள்ளாடைகள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த டாண்டெக்ஸ் நிறுவனம், லக்ஷ்மி சீவல் நிறுவனம் என்ற நிறுவனங்களைத் தவிர வேறு எந்த தொழில் நிறுவனங்களும் இல்லை..

ஆகவே தஞ்சையிலிருந்த எல்லா வங்கிகளும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை விட்டால் தங்க நகைக் கடன் கொடுப்பதிலேயே கவனம் செலுத்த வேண்டியிருந்தது. சேட்டும் அவருடைய குலத்தை சார்ந்தோர் மட்டுமே ஹ¤ண்டிகளுக்கு மேல் கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு உள்ளூரிலிருந்த செல்வாக்கும், பழக்கமும் அவர்களால் மிகவும் எளிதாக பலதரப்பட்ட தொழில் மற்றும் வர்த்தகம் செய்வோருக்கு கடன் வழங்க முடிந்தது.

என்னுடைய கிளைத் திறந்த ஆரம்ப மாதங்களில் இவர்களுக்கு கடன் வழங்கியதன் மூலம்  முதல் ஆறு மாதங்களிலேயே என்னுடைய கிளை லாபக் கணக்கைக் காண்பிக்க மிகவும் உதவியாய் இருந்தது.

அத்துடன் அவர்கள் மூலமாக பல வர்த்தக மற்றும் தொழிலதிபர்களின் அறிமுகமும் எனக்கு கிடைக்க வழி பிறந்தது..

அன்றைய கூட்டத்தில் கலந்துக் கொண்ட நான் அவர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகல் உணவு விருந்திலும் கலந்துக் கொண்டு பிற்பகலில் வீடு திரும்பியபோது ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது..

தொடரும்

16 கருத்துகள்:

  1. நல்ல வேளை. இத்தன நாள்..ஏதாவது குண்டக்க மண்டக்க அதிர்ச்சிகள் வரும். இந்த வாட்டி இன்ப அதிர்ச்சி. நல்லதுதான். என்ன இன்பமோ! நாளைக்குத் தெரிஞ்சிரப் போகுது.

    வானொலி கேட்பதும் புத்தகங்கள் படிப்பதும் சரியா தவறா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. தவறில்லை என்று எனது கோணத்திலிருந்து படுகிறது. ஒவ்வொருவர் கோணமும் ஒவ்வொரு விதம்.

    பதிலளிநீக்கு
  2. வாங்க ராகவன்..

    எப்பவுமே அதிர்ச்சி, அதிர்ச்சின்னு பிரச்சினையாவே வருதேன்னு நிறைய பேர் கேட்டதுனால அதிர்ச்சிய ஒரு இன்பமாக்கலாமேன்னுதான்..

    நாளைக்கு பாக்கலாம்..

    பதிலளிநீக்கு
  3. வாங்க ராஜ்,

    யாருங்க அந்த எம்.பி? கொஞ்சம் சொல்லுங்க பாக்கலாம்?

    கரெக்டா சொல்லிட்டீங்கன்னா அந்த ரெண்டுபேர் பேரையும் உங்களுக்கு தனியா மெய்ல அனுப்பறேன்.. ஹி,ஹி..

    பதிலளிநீக்கு
  4. ஆமாம்,
    முத தடவையா இன்ப அதிர்ச்சி! :))

    பதிலளிநீக்கு
  5. வாங்க இராமநாதன்..

    அப்பாடா போன ரெண்டு பதிவுகள்ல உங்க ஊர் ஆளுங்கள யார பத்தியும் குத்தம் சொல்லல..

    அதுவே ஒரு இன்ப அதிர்ச்சிதானே..

    நாளைக்கி சொல்லப் போறது எனக்குத்தான் இன்பம்.. உங்களுக்கு அது எப்படி இருக்குமோ..

    பாக்கலாம்.

    பதிலளிநீக்கு
  6. //ஏறக்குறைய எல்லாமே திருச்சியிலிருந்துதான் வாங்க வேண்டியிருந்தது. //

    தஞ்சை மாவட்ட தலைநகராயிற்றே! எல்லா வசதிகளும் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  7. வாங்க மணியன்,

    நீங்க சொல்றது சரிதான். ஆனா 25 வருஷத்துக்கு முன்னால நான் கூறிய வசதிகள் ஒன்றும் தஞ்சையில் இல்லை.. இப்போது ஒருவேளை இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  8. கரெக்டா ஊகிச்சிட்டீங்க ராஜ்..

    ஆனாலும் 'அந்த' ரகசியத்தை எப்படி சொல்றது.. போட்டும் விட்ருங்க..

    அத தெரிஞ்சிக்கிட்டு என்னாவ போவுது..

    பதிலளிநீக்கு
  9. வானொலி கேட்பதும் புத்தகங்கள் படிப்பதும் சரியா தவறா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. தவறில்லை என்று எனது கோணத்திலிருந்து படுகிறது. ஒவ்வொருவர் கோணமும் ஒவ்வொரு விதம்//

    உங்களுடைய இந்த கேள்விக்கு பதில் சொல்லாம விட்டுட்டேன்..

    பொதுவாவே அந்த காலத்துல கத்தோலிக்க பாதிரியார்களென்றால் முற்றும் துறந்த முனிவர்கள் போலிருக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தது..

    அது பாதிரியார்களுக்கே தெரியும்.. அதனால்தான் அவர் என்னிடம் ஏதோ செய்யக் கூடாத காரியத்தை தான் செய்துவிட்டது போல் வானொலி பெட்டிக்கும்.. தான் படித்துக் கொண்டிருந்த புத்தகங்களுக்கும் ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்தார்.

    எனக்கும் அதிலொன்றும் தவறில்லை என்று தான் தோன்றியது..

    பதிலளிநீக்கு
  10. ஜோசப் சார், பதிவுக்கு சம்மந்தம் இல்லாத விஷயம். உங்க பிளாக்குல மட்டும் பழைய பதிவுகளில் பட்டியல் காணலையே?
    உதாரணமாய், "திரும்பிப்பார்க்கிறேன் - 65 " இது, அறுபத்தி நாலு வரை ஓரமாய் பெயர்கள் லிஸ்டாய் இருந்தால், படிக்காதவங்க
    கிளிக்கி படிச்சிப்பாங்க இல்லையா? கொஞ்சம் பாருங்க.

    பதிலளிநீக்கு
  11. இன்ப அதிர்ச்சியா?

    பலே பலே.

    ஊருக்குக் கிளம்பற நாள், நல்ல நாளாத்தான் இருக்கு!
    அதையும் படிச்சுட்டே கிளம்புவேன்.

    பதிலளிநீக்கு
  12. சார்,
    இன்ப அதிர்ச்சினு சொன்னது எங்களுக்குத்தான்! பின்ன பிரச்சனைனு முடிக்காம நல்ல விஷயத்த சொல்லி அபூர்வமா முடிச்சிருக்கீங்களே... குமரன் சொன்ன அதேன்னு புரிஞ்சாலும், நாளை வரை பொறுத்திருந்து பின்னூட்டமிடுகிறேன்.

    நன்றி


    உஷா அக்கா சொன்னது போல பழைய பதிவுகளுக்கு சைட்பாரிலாவது தொடுப்பு கொடுக்கவும். புதிதாய் வருவோர்க்கு எளிமையாய் இருக்கும்.

    ---
    சம்பந்தமில்லாமல் ஜோசப் சார்.. கோச்சுக்காதீங்க! :)

    துளசியக்கா,
    நியுஸி

    பாரத்

    சென்னை

    மதுரை

    வெயில்

    குளிர்

    ஹாலிடே

    ஜாலிடே

    தமிழ்


    இதெல்லாமும் கூட ஒண்ணும் சொல்லலியா????? :(((

    பதிலளிநீக்கு
  13. வாங்க உஷா.

    நீங்க சொல்றது சரிதான். எனக்கே பழைய பதிவுகளை ப்ளாக்லருந்து refer பண்றது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு.

    செய்யணும்.. இந்த வீக் எண்டுல கொஞ்சம் அடுத்த வீக் எண்டுல கொஞ்சம் செய்து முடிக்கறேன்..

    பதிலளிநீக்கு
  14. வாங்க துளசி,

    ஐயையோ ரொம்ப எதிர்பார்புகளை கிரியேட் பண்ணிட்டேனோ..

    தேவுடா எனக்கு இன்ப அதிர்ச்சியா தோன்றது எல்லாருக்கும் அப்படியே தோனணுமே..

    பதிலளிநீக்கு
  15. வாங்க இராமநாதன்,

    குமரன் சொன்னதா? ஓ! அதுவா.. அது இந்த பதிவுல வராது.. அதுக்கு இன்னும் ஒரு அஞ்சாறு பதிவுகள் போவணும்.

    இது வேற..

    ஏங்க உங்க மூனெழுத்து பதிவுல பின்னூட்டம் ரெக்கார்ட் கிரியேட் பண்ணியாச்சி..

    அது இன்னமும் முடியலையா?

    சரி.. அன்பு, பாசம்,காதல்,தாபம், உறவு, ஏன் மோதல், கோபம் இதையும் உங்க லிஸ்ட்ல சேர்த்துருங்க.. அதாவது இத இதுக்கு முன்னால யாரும் சொல்லாம இருந்தா. உங்க பதிவிலருக்கற பின்னூட்டங்கள படிச்சி முடிக்கறதுக்கு வெர்ட்டிக்கல் ப்ரவுசர அமுக்கி ஆள்காட்டி விரலே தேய்ஞ்சி போயிருச்சி..

    பதிலளிநீக்கு
  16. வாங்க ராஜ்,


    மன்னிச்சிருங்க ராஜ்.. உங்க கற்பனை குதிரையை தட்டிவிடுங்க.. உங்களாலயே கண்டுபிடிக்க முடியும்..

    பதிலளிநீக்கு