என்னுடைய தலைமையலுவலகத்திலிருந்து வந்த அனுமதி கடிதத்தை எடுத்துக்கொண்டு சந்தோஷத்துடன் உரிமையாளரைக் காணச் சென்றபோதுதான் அதிர்ச்சி காத்திருந்தது.
சை! தஞ்சாவூர் புறப்பட்டு வந்த நேரமே சரியில்லை போலருக்குதே என்று சோர்வடைந்தேன்.
நான் அங்கு சென்ற நேரம் காலை சுமார் 11.00 மணி. நான் பார்த்த NTC கடை பூட்டியிருந்தது. வார நாட்களில் கடை பூட்டியிருக்கவே நான் ஏதோ பிரச்சினை என்று நினைத்தேன்.
வாகனத்தை நிறுத்திவிட்டு என்ன செய்வதென சிறிது நேரம் யோசித்தேன். பிறகு எதிரே இருந்த அவருடைய சகோதரருடைய கடையைப் பார்த்தேன்.
அந்த நேரம் பார்த்து வெளியே வந்த மூத்த சகோதரரின் மகன் என்னைப் பார்த்துவிட்டு ஒரு சிறு புன்னகையுடன் வணக்கம் தெரிவித்தார். நான் அவரை நோக்கிச் செல்ல அவர் உள்ளே திரும்பி தன் தந்தையிடம் நான் வந்திருக்கிறேன் என்று கூறினார். அவரும் உடனே எழுந்து வந்து என்னை வரவேற்றார்.
நான் அவருடைய முகத்தைப் பார்த்தேன். களையிழந்து காணப்பட்டது. வழக்கமாக என்னை வரவேற்கும்போதெல்லாம் பற்கள் முழுவதும் தெரியும்படி ஒரு சிரிப்பு அவருடைய முகமெல்லாம் மலரும். இன்று அதைக் காணோம் என்று மட்டுமல்ல, முகத்தில் ஒரு சோகம் கப்பிக்கொண்டிருந்தது.
‘சார் எங்க ஹெட் ஆஃபீஸ்லருந்து சாங்ஷன் வந்திருச்சி. நீங்க கேட்ட வாடகையும் முன் வாடகையும் அதே மாதிரியே சாங்ஷன் பண்ணிட்டாங்க. லீஸ் டீட் போட்டுட்டு எடத்த எடுத்து ஃபர்னிஷிங் வேலை பார்க்க வேண்டியதுதான் பாக்கி. உங்க தம்பி வீட்லருந்தா கூப்டுங்க சார். லீஸ் டீட் மாதிரியொன்னு கொண்டு வந்திருக்கேன். நீங்க வேணும்னா உங்க வக்கீல் கிட்ட கொடுத்து பார்த்துட்டு ரெண்டு நாள்ல சொல்லுங்க.’ என்று நான் பேசிக்கொண்டே போக அவர் எந்தவித ரியாக்ஷனும் இல்லாமல் இருந்தார்.
‘என்னவோ நடந்திருக்கு’ என்று நினைத்தேன். இல்லையென்றால் நான் கூறிய விஷயம் உண்மையிலேயே சந்தோஷப்பட வேண்டிய விஷயம். அதைக் கேட்டதும் ஒரு உரிமையாளர் என்ற நிலையில் ‘நாம கேட்ட வாடகையை அப்படியே தரேன்னு சொல்லிட்டங்களே’ங்கற சந்தோஷமாவது வரவேண்டும் அல்லவா?
‘என்ன சார், ஏன் டல்லாயிருக்கீங்க?’ என்றேன் தயக்கத்துடன்.
அவர் தன் மகனை சிறிது நேரம் பார்த்தார். ‘எல்லாம் இவனால வந்த வினை சார். சும்மா இருக்காம ஒரு வாரம் முன்னால அந்த NTC கடை மானேஜர்கிட்ட வம்புக்கு போயிருக்கான். அவரு அப்ப ஒன்னும் சொல்லாம இருந்துட்டு சைலண்டா டெல்லிக்கு எழுதிப் போட்டுட்டாரு. இப்ப நமக்கு வில்லங்கமா போயிருச்சி.’
எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘என்ன சார் சொல்றீங்க. ஒன்னும் புரியலை. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.’ என்றேன்.
அவர், ‘சார் நாங்க அவங்கள அந்த கடைய காலி பண்ணுங்கன்னு சொன்னப்ப அந்த இடத்துல நாங்களே ஒரு கடைய திறந்து நடத்தப் போறோம்னுதான் சொல்லியிருந்தோம். அதனாலதான் கோர்ட்ல எங்களுக்கு சாதகமா விதியாச்சி. அன்னைக்கி உங்கள கூட்டிக்கிட்டு போய் கடை முழுசும் காண்பிச்சாரு இல்லையா நம்ம தம்பி? அது அந்த கடை மேனேஜருக்கு கொஞ்சமும் பிடிக்கல சார். நீங்க போனதுக்கப்புறம் இங்க வந்து எங்கிட்ட சத்தம் போட்டார். நான் அப்ப உங்கள நான் தனியா கவனிச்சிக்கறேன்னு சொல்லி அவர சமாதானம் பண்ணி அனுப்புனேன். அவரும் இளிச்சிக்கிட்டு சரின்னு போனார். ஆனா நம்ம பையன் அவர்கிட்ட போயி உனக்கெதுக்குரா குடுக்கணும்கறா மாதிரி அவர் கீழ வேல செய்யறவங்க முன்னால கேட்டுட்டான். அவருக்கு ரொம்பவும் அவமானமா போயிருச்சி போல. அதான் சைலண்டா அவங்க ஹெட் ஆஃபீசுக்கு தந்தி கொடுத்துட்டாரு. அவங்க உடனே ஹைகோர்ட்ல போயி நாங்க யாருக்கும் வாடகைக்கு கொடுக்க கூடாதுன்னு ஸ்டே வாங்கிட்டாங்க. தம்பி இப்ப மெட்றாஸ்லதான் இருக்காரு. இன்னும் ஒரு நாலு மாசத்துக்கு நம்மளால ஒன்னும் பண்ண முடியாதுன்னு வக்கீல் கைவிரிச்சிட்டாராம். நேத்தைக்கித்தான் தம்பி ஃபோன் பண்ணான். அதான் என்ன பண்றதுன்னு தெரியாம உக்காந்திட்டிருக்கேன். இவன் விளையாட்டா செஞ்ச காரியம் இப்ப பாருங்க. எல்லாருக்கும் கஷ்டம்.’ என்றார்.
நான் என்ன பதில் பேசுவதென தெரியாமல் உட்கார்ந்திருந்தேன். மொதல்ல பேரனால வில்லங்கம் வந்தது. இப்ப மகனால.. நல்ல குடும்பம்டா சாமின்னு நினைச்சேன்.
சரி.. இப்ப இந்த வில்லங்கத்துலருந்து எப்படி மீள்றது? என் வட்டார மேலாளர்கிட்ட சொல்லாம இருக்க முடியாது. இன்னும் நாலு மாசங்கள் காத்திருப்பதென்பது இயலாத காரியம். அதுவும் தலைமையகத்திலிருந்து அனுமதி கடிதம் வந்தபிறகு..
புது கிளைகள் திறக்க ரிசர்வ் வங்கி அளித்திருந்த அனுமதி காலாவதியாக இனியும் இரண்டு மாதங்களே இருந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்குள் வேறு இடத்தைப் பிடித்து வேலைகளை துவங்கா விட்டால் ரிசர்வ் வங்கியின் அனுமதியை மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டி விண்ணப்பிக்க வேண்டி வரும். நிச்சயம் இது என்னுடைய செயல்பாட்டில் உள்ள குறையாகவே என்னுடைய தலைமையலுவலகத்தில் கணிக்கப் படும். அதுவும் இப்போதைய சேர்மனுக்கு ஏற்கனவே என்னைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை.
எல்லாம் மன முதிர்ச்சியில்லாத ஒரு வாலிபனால் வந்த வில்லங்கம். உள்ளுக்குள் ஆத்திரம் வந்தாலும் வெளியே காட்டிக்கொள்ள முடியாத நிலை..
நான் நினைத்துக் கொண்டிருந்தது என் முகத்தில் தெரிந்திருக்க வேண்டும். என் எதிரில் அமர்ந்திருந்தவர் கல்லா பெட்டியிலிருந்து இறங்கி என் அருகில் வந்து நின்றார். ‘சார் உங்க ஃபீலிங்ஸ் புரியுது. என்க்கு ஒரு யோசனை தோனுது.. உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன். சொல்லட்டுங்களா?’
எனக்கு எந்த யோசனையாயிருந்தாலும் அது இந்த வில்லங்கத்திலிருந்து விடுபடக்கூடியதாயிருந்தால் போறும் என்ற மனநிலை. ‘சொல்லுங்க சார்’ என்றேன்.
‘சார் போன தடவை வந்திருந்தப்போ தம்பி கடைக்கு பின்னாலருந்த ஒரு கொடவுன காண்பிச்சாரா?’
‘ஆமாம் காண்பிச்சார். அதுவும் NTCக்குதான வாடகைக்கு குடுத்திருக்கீங்க?’
அவர் உற்சாகமானார். ‘அதான் இல்ல சார். அந்த இடம் சும்மாத்தான் கிடந்தது. மானேஜர் ரிக்வஸ்ட பண்ணதால அந்த இடத்துல அவங்க துணி பேல்ஸ் டெல்லியிலருந்து மொத்தமா வரும்போது வச்சிக்கறதுக்கு குடுத்தோம். இப்பத்தான் அவர் வில்லங்கம் பண்ணிட்டாரில்ல? கொடவுன்லருந்து அவங்க கடைக்கு போற வழிய அடைச்சிட்டு ரோட்லருந்து ஒரு தனி வழி ஏற்பாடு பண்ணிட்டா நீங்க இந்த கேஸ் முடியற வரைக்கும் உங்க ப்ராஞ்சை அங்க வச்சிக்கலாம். இடம் சுமாரா 800 சதுர அடிதான் இருக்கும். ஒரு ஆறேழு மாசத்துக்கு மேனேஜ் பண்ணிட்டீங்கன்னா போறும் சார். நீங்க பின்னாலருக்கற எடத்துல ஓப்பன் பண்ண உடனே தம்பி அந்த கடைய நாங்கதான் யூஸ் பண்ண போறோம் மானேஜர் லஞ்சத்துக்கு ஆசைபட்டு இந்த மாதிரி பொய்யான தகவல் டெல்லிக்கு குடுத்தார்னு நாங்க கோர்ட்ல வாதாடி கேசையே ஒன்னுமில்லாம பண்ணிர்றோம் சார்.. என்ன சொல்றீங்க?’
நல்ல யோசனையாகத்தான் எனக்கு பட்டது. ஆரம்பத்தில் இரண்டு குமாஸ்தா ஒரு காசாளர் என மூன்று பேருக்கு மேல் இருக்கமாட்டார்கள். வர்த்தகம் சூடு பிடிக்க குறைந்தது ஒரு வருடமாவது ஆகும். அதுவரை 800 சதுர அடி இடமானாலும் போதும்.
ஆனால் அதுமட்டுமல்ல பிரச்சினை. ஏற்கனவே தலைமையலுவலகத்திலிருந்து அனுமதி கிடைத்தப் பிறகு அந்த இடம் ஏன் கிடைக்கவில்லை? இப்படி ஒரு வில்லங்கம் இருக்க வாய்ப்பிருக்கிறதென்று ஏன் முன்னமே தங்களுடைய பரிந்துரையில் தெரிவிக்கவில்லையென்று கேள்வி வருமே அதை எப்படி சமாளிப்பது என்றுதான் யோசித்தேன். உண்மையில் பார்க்கப் போனால் என்னுடைய வட்டார மேலாளருக்கு நான் அனுப்பிய முதல் தகவல் அறிக்கையிலேயே இந்த இடத்தில் ஒரு கடை இருக்கிறது, அது இரண்டு மாதங்களுக்குள் காலியான பிறகுதான் நம்முடைய கிளையை திறக்க இயலும் என்றுதான் எழுதியிருந்தேன்.
ஆனால் இடத்தை பார்க்க வந்த வட்டார மேலாளர்தான் இடம் அவருக்கு மிகவும் பிடித்துப்போனதால் அப்படி எழுதினீங்கன்னா H.O. அனுமதி நிச்சயமா கிடைக்காது டிபிஆர். அதான் கண்டிப்பா காலி பண்ணிருவாங்கன்னு ஓனர் சொல்ராறே. அது போதாதா என்று என்னை சம்மதிக்க வைத்தார். இப்படி ஒரு வில்லங்கம் வரும் என்று நானும் எதிர்பார்க்காததால் அவர் கூறியபடியே என்னுடைய பரிந்துரையில் இதைப் பற்றி குறிப்பிடாமல் விட்டுவிட்டேன்.
இப்போது கடையிருந்த விஷயத்தை எழுதாமல் இருக்க முடியாது. வட்டார மேலாளர் என்னிடம் சொன்னதை நிச்சயம் தலைமையலுவலகத்திடம் ஒப்புக்கொள்ள மாட்டார். ஒப்புக்கொண்டால் அவருக்கே பிரச்சினை வர வாய்ப்புள்ளது. You had concealed material facts while seeking sanction என்று தலைமயலுவலகம் அவர் மீதே பாய வாய்ப்பிருக்கிறது.
யோசித்து, யோசித்து ஒரு வழியும் தெரியாமல் அவரை பார்த்தேன்.
என்னையே பார்த்துக்கொண்டிருந்தவரின் முகம் மீண்டும் களையிழந்து போனது. ‘என்ன சார் யோசிக்கிறீங்க? எப்படி உங்க ஜோனல் மானேஜர்கிட்ட சொல்றதுன்னு பாக்கறீங்களா?’ என்றார்.
‘ஆமாம் சார்.’
‘சார் அதுக்கும் நான் ஒரு யோசனை சொல்லட்டுமா?’ என்றவரை மனதுக்குள் எரிச்சலுடன் பார்த்தேன்.
‘சொல்லுங்க.’
‘சார், தம்பி ஊர்லருந்து வந்ததும் நாம மூனுபேருமா கோயம்புத்தூர் போய் உங்க ஜோனல் மானேஜர பார்த்து பேசலாம் சார். உங்களுக்கு எந்த வித பிரச்சினையுமில்லாம பேசி அவர சம்மதிக்க வச்சிரலாம்னு நினைக்கிறேன். நீங்க சரின்னு சொன்னா நாளைக்கே போறதுக்கு பஸ்சுக்கு டிக்கட் போட்டுடறேன். என்ன சொல்றீங்க?’
நல்ல யோசனைதான். ஆனால் வட்டார மேலாளர் சம்மதிக்க வேண்டுமே. சரி, பேசி பார்ப்போம் என்ற முடிவுடன் நான் எழுந்து நின்றேன். ‘சரி சார். நான் சார்கிட்ட ஃபோன் பண்ணி சொல்றேன். அவர் என்ன சொல்றார்னு பார்த்துட்டு உங்களுக்கு ஃபோன் பண்றேன். அதுக்கப்புறம் நீங்க டிக்கட் புக் பண்ணுங்க.’
ஆனால் அவர் எழுந்திருக்காமல் தன் அருகிலிருந்த தொலைப்பேசியை என் முன்பு வைத்தார். ‘சார் நீங்க இதுலயே பேசுங்க சார். விஷயத்த சட்டுன்னு முடிச்சிரலாம்லே.’ என்றார்.
எனக்கு தயக்கமாயிருந்தது.. ஏனெனில் அதில் விஷயமிருந்தது..
நான் அவரை சம்மதிக்க வைக்க உண்மைக்கு புறம்பாக ஏதாவது சொல்ல வேண்டியிருக்கும் அதைப் போய் இவர் முன்பு எப்படி...
தொடரும்
சோதனைமேல் சோதனை போதுமடா சாமி.....
பதிலளிநீக்குவேதனை தான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி..
பதிலளிநீக்குவாங்க துளசி,
பதிலளிநீக்குநீங்க தொடங்கி வச்ச புலம்பல ஜோ சூப்பரா முடிச்சி வச்சிருக்கார் பாருங்க.
வாழ்த்துக்களும், நன்றியும்.
வாங்க ஜோ,
பதிலளிநீக்குதுளசியும் நீங்களும் பாடுன கோரஸ் பாட்டு சூப்பர்.
வாழ்த்துக்கள்.
தில்லாலங்கடியிலயும் பெரிய தில்லாலங்கடிதான் போங்க......இது பெரிய மகாபாரதம்தான்.
பதிலளிநீக்குஇதுல என்னன்னா.....பிரைவேட்ல ரிசல்ட்ட பாப்பாங்க...கவர்மெண்ட்டுல துட்டப் பாப்பாங்க....ம்ம்ம்....என்ன ஆச்சோ அப்புறம்!
வாங்க ராகவன்,
பதிலளிநீக்குபிரைவேட்ல ரிசல்ட்ட பாப்பாங்க...கவர்மெண்ட்டுல துட்டப் பாப்பாங்க....//
ரொம்ப கரெக்ட். நன்றி.