13 ஜனவரி 2006

நிழலும் நிஜமும் (நகைச்சுவை)

நிழலும் நிஜமும் (நகைச்சுவை)

இடம் கோயம்பேடு சந்தை

பாத்திரங்கள்:

கவுண்டமனி, செந்தில், மற்றும் பலர்.

காலை நேரமாதலால் காய்கறி விற்போரும் வாங்குவோரும் வருவதும் போவதுமாக கூட்டம் அலைமோதியது.

கவுண்டமனியும் செந்திலும் ஒரு மீன்பாடி வண்டியில் வந்து இறங்குகிறார்கள்.

கவு: டேய், டேய் மொட்டைத் தலையா, பாத்துறா, என்னமோ ப்ளைமவுத் கார ஓட்டுறா மாதிரி ஓட்டுற..

செந்: (இளக்காரமாக சிரிக்கிறார்) என்னண்ணே என் தலை நிறைய புதர் மாதிரி கருகருன்னு முடி வச்சிருக்கேன். என்ன போயி மொட்டத் தலையாங்கறீங்க? அப்புறம் என்னடான்னா ப்ளைமவுத் காருங்கறீங்க.. நீங்க எந்த ஒலகத்துல இருக்கிறீங்க? இப்பல்லாம் ஏதுன்னே ப்ளைமவுத் காரு.. அதான் ஜிங், கிங்குன்னு புதுசா, புதுசா என்னென்னமோ வந்துருக்கே அதுல ஏதாச்சும் சொல்லக்கூடாது? நீங்க சரியான வேஸ்ட்டுண்னே..

கவு: (சலித்துக்கொள்கிறார்) டேய்.. வர வர நீ ரொம்பத்தான் லொள்ளு பண்றே.. சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா.. சரிடா.. புதர் தலையான்னு சொல்லிட்டன் போறுமா..

செந்: (கேலியுடன்) அப்புறம் அந்த காருண்னே? அதுக்கு ஒன்னும் பதில் இல்லையா?

கவு: அடப் போடா. நா எங்க புது கார பாக்கறது? நமக்கெல்லாம் அந்த சின்ன வயசுல பாத்த காருங்க பேருதாண்டா ஞாபகத்துல வருது.. சரி.. டேய், இங்க எதுக்குடா என்ன கூட்டிக்கிட்டு வந்த? இது எதோ மார்க்கெட்டு மாதிரியிருக்கு. ஏண்டா, ஏதாச்சும் காய் கறி வியாபாரம் பண்ணப்போறமாக்கும்.. இது நமக்கு சரிபட்டு வரும்கற?

செந்: (எரிச்சலுடன்) இன்னைக்கி உங்களுக்கு என்னாச்சிண்னே .. நான் வர்ற வழி முச்சூடும் கிளிப்பிள்ளிக்கி சொன்னா மாதிரி சொல்லி கூட்டியாந்தா இங்கன வந்து மறுபடியும் எதுக்குடா கூட்டியாந்தேங்கறீங்க?

கவு: மறந்து போச்சிரா பனங்கொட்ட தலையா. இன்னொரு தபா தான் சொல்லேன்.. பெருசா அல்டிக்கற?

செந்: (வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி லுங்கியை அவிழ்த்து விடுகிறார். வண்டியின் கேரியரில் இறங்காமல் அமர்ந்துக்கொண்டு எங்கோ பார்த்துக்கொண்டிருந்த க.மணியை பார்க்கிறார்) என்னண்ணே.. இறங்கலையா?

கவு: (தூக்கத்திலிருந்து விழித்தெழுவர் போல முழிக்கிறார்) எ.. என்னடா?

செந்: (எரிச்சலுடன்) சரியா போச்சி.. ஏன்ணே.. தெரியாமத்தான் கேக்கறேன், வீட்ல அண்ணிக்கூட ஏதாச்சும் தகராறா? வந்ததுலருந்தே பாக்கறேன். பேயறைஞ்சா மாதிரி இருக்கீங்க? வர்ற வழியெல்லாம் இங்க என்னத்துக்கு வரோம், என்ன செய்யப் போறோம்னு சொல்லிக்கிட்டே வந்தேன்.. இங்க வந்தப்புறம் எதுக்குடா கூட்டியாந்தேங்கறீங்க? சொல்லுங்கண்ணே, என்ன விஷயமாந்தாலும் சொல்லுங்க.. அதான் நா இருக்கேன்ல.. தம்பிக்குடையான் படைக்கு அஞ்சான்னு சும்மாவா சொல்லியிருக்காங்க.. சும்மா சொல்லுங்கண்ணே.. (சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பெருமையுடன் சிரிக்கிறார்)

கவு: (சந்தேகத்துடன் செந்திலை பார்க்கிறார்) டேய்.. இப்ப என்ன சொன்னே.. ஒன்னுமே புரியலையடா.. எங்க இன்னொரு தபா சொல்லு?

செந்: (குழப்பத்துடன்) என்னத்த சொல்ல சொல்றீங்க?

கவு: அதாண்டா.. சொறி, படைன்னு என்னமோ சொன்னீயே.. அத இன்னொரு தபா சொல்லுடா..

செந்: (இளக்காரமாக) என்னண்ணே நீங்க.. எவ்வளவு பெரிய விஷயம் சொல்லிக்கிட்டிருக்கேன்.. கேவலமா சொறி, படைன்னு சொல்றீங்க.. அதுன்ணே.. அதாவது கிருஷணன் இருக்காருல்லண்ணே..

கவு: யாரு, அந்த கிருஷ்ண பகவானையா சொல்றே?

செந்: குறுக்க குறுக்க பேசாம கேளுங்கண்ணே..

கவு: (வாயைப் பொத்திக்கொள்கிறார்) சரிடா சொல்லு..

செந்: அந்த கிருஷ்ணனோட தம்பி அண்ணனுக்கெதிரா எவ்வளவு பெரிய படை வந்தாலும் ஒத்தையா நின்னு சமாளிப்பாராம். அதத்தான்ன தம்பிக்குடையான் படைக்கு அஞ்சான்னு சொல்லுவாங்க.. டிவியில ராமாயணம் போட்டான்லே அதுலருந்துதான்ன கத்துக்கிட்டேன். அதெல்லாம் நீங்க எங்க பாத்திருக்கப் போறீங்க.. எங்கயாச்சும் டப்பாங்குத்து பாட்டு போட்டா பாப்பீங்க..

கவு: (தரையில் எதையோ தேடுகிறார்) சை.. தேடுறப்ப ஒன்னும் கிடைக்காதே..

செந்: என்னத்தண்ணே தேடறீங்க? எங்கிட்ட சொன்னா நானும் கூட தேடுவேன்லே?

கவு: (ஓரத்தில் கிடந்த பெரிய கல்லைக் காட்டுகிறார்) டேய் இரும்புத்தலையா அந்த கல்லை எடுறா.

செந்: (திடுக்கிட்டு) அந்த கல்லா? வேணாண்ணே..

கவு: ஏண்டா? தூக்க முடியாதேன்னு பாக்கறியா?

செந்: சேச்சே அதுக்கில்லண்ணே..

கவு: பின்ன? உன் தல மேல போட்டுறுவேன்னு பாக்கறியா?

செந்: ஹெஹ்ஹே.. ஏன்னே..  உங்களால அத முட்டு வரைக்கும் கூட தூக்க முடியாது.. அப்புறம் எந் தலை மேல எங்க போடறது.. வேற ஏதாச்சும் பேசுங்கண்ணே..

கவு: டேய் கொஞ்சம் அப்படி திரும்பி நில்லு..

செந்: (குழப்பத்துடன்) எதுக்குண்ணே.. இதுக்கும் அதுக்கும் என்னண்ண சம்பந்தம்?

கவு: நில்லேன் சொல்றேன்..

(செந்தில் திரும்பி நிற்கிறார். க.மணி எட்டி உதைக்க செந்தில் தலைக்குப்புற கல் இருந்த இடத்துக்கு அருகில் போய் விழுகிறார். க.மணி குனிந்து கல்லை எடுத்து அவர் தலைக்கு மேல் கொண்டு செல்கிறார். இதைப் பார்த்து ஒரு சிறு கூட்டமே அவர்களைச் சுற்றி கூடிவிடுகிறது.)

கவு: டேய்.. கல்ல தலைக்கு மேல தூக்க முடியாதுன்னா சொன்னே.. இப்ப என்னடா சொல்றே.. இப்படியே போட்டுரட்டுமா?

செந்: (கைகளை தன் தலைக்கு மேல் வைத்துக்கொண்டு) அண்ணே வேனாண்ணே.. விளையாடாதீங்க.. ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிரப்போதுன்ணே..

(கூட்டத்திலிருந்த இரண்டு பேர் க.மணியை பிடித்து பின்னுக்கிழுக்கின்றனர்.)

கவு: (திமிறுகிறார்) யோவ் வுடுங்கய்யா.. இந்த பிடாரித் தலையன் மண்டையில இத போட்டுட்டுதான் மறு வேலை. வுடுங்கய்யா..

பிடித்துக்கொண்டிருந்தவர்களுள் ஒருவர்: ஏன்ணே.. எதுக்கு அவர் தல மேல போடணுங்கறீங்க.. சொல்லுங்க.. விட்டுடறோம்..

(க.மணி கையிலிருந்த கல்லை கீழே போட்டுவிட்டு முறைக்கிறார். கேட்டவன் நெற்றியில் வேகமாக தட்ட அவரும் போய் செந்திலின் மேல் விழுகிறார். அவரைப் பிடித்துக் கொண்டிருந்த இன்னொருத்தர் குதித்து பின்வாங்குகிறார்)

கவு: ஏண்டா, டேய்.. என்ன நீ பெரிய வஸ்தாதுன்னு நினைப்பா? எனக்கும் அவனுக்கும் இடையில வந்து பூந்துக்கிட்டு காரணத்த சொல்லு ... பூரணத்த சொல்லுன்னுக்கிட்டு.. சொல்லலன்னா என்னடா பண்ணுவே? (செந்திலை குனிந்து பார்க்கிறார்) டேய் கரிச்சட்டித் தலையா என்னாடா மேல ஆளு கிடக்குதேன்னு பாக்கறியா? மவனே.. இன்னைக்கி நீ தப்பிச்சே.. இப்படியே பேசிக்கிட்டிருந்தே .. உனக்கு என் கையாலதான் சாவே.. எந்திரிச்சி வாடா..

(அந்த நேரம் பார்த்து கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஒரு காவற்காரர் நுழைகிறார்)

காவல்: யோவ் தள்ளுய்யா.. என்னாய்யா இங்க கூட்டம்? போங்கய்யா... (தரையில் கிடக்கும் செந்திலையும் முறைத்துக்கொண்டு நிற்கும் க.மணியையும் பார்க்கிறார். செந்தில் மீது விழுந்து கிடந்தவர் எழுந்து ஓடிவிடுகிறார். குண்டான செந்திலால் சட்டென்று எழுந்திருக்க முடியாமல் தடுமாறுகிறார்.) டேய் எந்திரிடா.. (படு ஒல்லியான அவர், கையைக் கொடுத்து தூக்கிவிட முயல அவரும் சேர்ந்து செந்திலின் மேல் விழ கூட்டமே கொல்லென்று சிரிக்கிறது. சமாளித்துக்கொண்டு எழுந்து நிற்க முடியாமல் தடுமாறியவரை க.மணி பிடித்து நிறுத்துகிறார்.)

கவு: ஏங்க போலீஸ்.. இவனே நெதமும் பத்து வாட்டி திங்கறவன்.. இவன போயி நீங்க தூக்க போவணுமா.. லட்டியால முட்டில ரெண்டு தட்டுனீங்கன்னா படக்குன்னு எழுந்திரிச்சிருக்கப் போறான்.. அத வுட்டுட்டு.. என்ன போலீசோ நீங்க, போங்க.. (காவற்காரரின் கையிலிருந்த லட்டியைப் பிடுங்கி செந்திலின் அருகே தரையில் இரண்டு தட்டு தட்ட செந்தில் பதறியடித்துக்கொண்டு எழுந்து ஓடுகிறார். கூட்டம் மீண்டும் சிரிக்கிறது)

கவு: பாத்தீங்களா ஓடறத.. இந்தாங்க.. (லட்டியை கொடுக்கிறார்) இத தூக்கறதுக்காவது சத்து இருக்கா? (அவருடைய வலது கை முஷ்டியைப் பிடித்து பார்க்கிறார்) என்னா சார் கைல எலும்புதான் மாட்டுது.. சதையையே காணோம்.

காவல்: (கவு.மணியின் கையை உதறிவிட்டு லட்டியை பிடுங்கிக் கொள்கிறார். பிறகு அவருடைய சட்டைக் காலரை எட்டிப் பிடிக்கிறார்.) டேய்.. போலீஸ்காரன் மேலயே கைய வைக்கிறியா? நடறா ஸ்டேஷனுக்கு.. அங்க போயி முட்டிக்கி முட்டி தட்டினாத்தான் புத்தி வரும்.. நடறா..

இதன் அடுத்த, இறுதிப் பகுதி நாளை..

4 கருத்துகள்:

  1. இந்தக் கவுண்டமணிக்கு நல்லா வேணும். செந்திலையா இப்பிடித் திட்டுறது. பாவம் செந்திலு. என்ன நல்லது செய்யக் கூட்டீட்டு வந்தாரோ! (அந்த நல்லது எந்த மாதிரி நல்லதா கவுண்டமணிக்கு மாறுமுன்னு நமக்குத் தெரியுமே ஹி ஹி ஆனாலும் கடைசீல கவுண்டரு மாட்டிக்கிட்டு முழிக்கிறதும் செந்தில் தப்பிச்சுப் போயிர்ரதும் நமக்கு நல்லாத்தான இருக்கு..)
    கலக்குங்க ஜோசப் சார். நட்சத்திர வாரங்கறத...நட்சத்திரங்கள் வாரமுன்னு சொல்லனும்.

    பதிலளிநீக்கு
  2. சார்,

    குறிப்பிட்ட அந்த கார் கரகாட்டக்காரன் படத்தில் வர்ற கார் தானே...

    பதிலளிநீக்கு
  3. வாங்க ராகவன்,

    செந்தில் எப்ப பார்த்தலும் அடிவாங்குறதால எனக்கும் இந்த ஜோடியில அவரைத்தான் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  4. வாங்க முத்து (தமிழினி!),

    கரெக்ட் முத்து, அதே கார்தான்.

    பதிலளிநீக்கு