23 ஜனவரி 2006

திரும்பிப் பார்க்கிறேன் 64

நேரே அருகிலிருந்த தஞ்சை மத்திய தந்தியலுவலகத்திற்குச் சென்று என் வட்டார மேலாளரையழைத்து விஷயத்தைச் சொன்னேன். அவருக்கு ஏக சந்தோஷம். ‘நாம இத முதல்லயே யோசிச்சிருக்கலாம். நான் ஒன்னு பண்றேன். இப்பவே நம்ம ஜி.எம் கிட்ட சொல்றேன். அவர் மறுப்பு சொல்லலேன்னா உடனே ஃபோன் பண்ணி பிஷப் கிட்ட கேட்டுட்டு அவர் சரின்னா இன்னைக்கி ராத்திரியே புறப்பட்டு வரேன். நாளைக்கு ரெண்டு பேருமா போயி இன்வைட் பண்ணலாம். நீங்க கொஞ்ச நேரம் கழிச்சி வீட்டுக்கு போங்க.. நான் இன்னும் ஒரு மணி நேரத்துல உங்கள கூப்பிடுவேன்.’ என்றார்.

அதேபோல் அன்றே அவர் தஞ்சை ஆயரை (நான் நேற்றைய பதிவில் அவரை பேராயர் என்று குறிப்பிட்டது தவறு. சென்னை, மதுரை போன்ற நகரங்களில் இருந்தவர்கள்தான் பேராயர் (Archbishop) என்று அழைக்கப்பட்டனர்) அழைக்க அவரும் சந்தோஷத்துடன் சம்மதித்ததாகவும் அடுத்த நாள் நான் மட்டும் சென்று அவரை அதிகாரபூர்வமாக அழைத்தால் போதும் என்று கூறியதாக என்னுடைய வட்டார மேலாளர் கூறினார்.

அடுத்த நாள் நான் காலை சுமார் பதினோரு மணிக்கு என்னுடைய வங்கியின் சார்பான அதிகாரபூர்வமான கடிதத்துடன் அவரை திறப்புவிழாவுக்கு வந்திருந்து கிளையை திறந்துவைக்க வேண்டுமாறு அழைக்க சென்றேன்.

முதலில், முந்தைய தினம் நான் சந்தித்த பாதிரியாரை சென்று சந்தித்து விவரத்தைக் கூறினேன். அவர் சிரித்துக் கொண்டே ‘நீங்க இங்கயே கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுங்க. நான் மேல போயி ஆண்டவரோட வேற யாரும் ஃபாதர்ஸ் இருக்காங்களான்னு பார்த்துக்கிட்டு வரேன்.’ என்று ஆயரின் அறை இருந்த இரண்டாவது மாடிக்கு சென்றுவிட்டு சில நிமிடங்களில் இறங்கி வந்தார்.

அவருடைய முகத்தில் ஏதோ சிந்தனை. ‘என்ன ஃபாதர் ஆண்டவர் ஃப்ரீயா இல்லையா? நான் வேணும்னா அப்புறம் வரட்டுமா?’ என்றேன். அவர், ‘ஒன்னுமில்லை ஜோசப். ஆண்டவர் ரூம்ல அந்த ------- பேங்க் காஷியர் ஐயரும் இருக்கிறார். அதான் பார்க்கிறேன்.’ என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆண்டவருடன் ஐயரா? நான் குழப்பத்துடன் அவரைப் பார்த்தேன். ‘என்ன ஃபாதர் சொல்றீங்க? அவர் அவங்க பேங்க் விஷயமா பேச வந்திருக்கிறாரோ என்னவோ? சரி. நான் கொஞ்ச நேரம் வெய்ட் பண்றேன். உங்களுக்கு ஏதாவது வேலை இருந்தா பாருங்க ஃபாதர். அவர் போய்ட்டாரான்னு தெரிஞ்சிக்கிட்டு உங்க ரூமுக்கு சொல்லியனுப்புறேன்.’

அவர் லேசாக சிரித்துவிட்டு என் எதிரிலேயே அமர்ந்தார். ‘இல்ல ஜோசப் உங்களுக்கு இவர பத்தி தெரியாது. ஐயர் நம்ம ஆண்டவரோட ஸ்கூல் மேட். அவர் மெட்ரிக்குலேஷனுக்கு மேல தாண்டலை.. முப்பது வருஷத்துக்கு முன்னால இந்த பேங்குல கிளார்க்கா சேர்ந்தவர், இன்னும் கேஷியராத்தான் இருக்கார். நம்ம ஆண்டவர் பொருளாதரம் முதுகலையில கோல்ட் மெடலிஸ்ட். ரோம்ல தியாலஜியில டாக்டர் பட்டம். தமிழ்நாட்டுலருக்கற மிகப் பழமையான மேற்றிராசனத்தின் ஆயர்.. இவருக்கும் அவருக்கும் ஏணி வச்சாக்கூட எட்டாது. நம்ம ஆண்டவர் மனிதர்களுடைய அந்தஸ்த்தைப் பார்க்காமல் பழகக் கூடியவர். இவர் அதையே அட்வாண்டேஜா எடுத்துக்கிட்டு எப்ப பார்த்தாலும் ஆண்டவர வந்து பாக்கறதும் மேற்றிராசனத்தோட நிதி விஷயத்திலெல்லாம் தலையிட்டு அறிவுரை வழங்கறதும்.. சில சமயங்கள்ல எங்களாலயே ஒன்னும் பண்ண முடியலை ஜோசப்.. இப்பக் கூட ஆண்டவர் உங்க பேங்க் திறப்புவிழாவுக்கு உங்க ஜோனல் மேனேஜர் கூப்பிட்டத அவர்கிட்ட சொல்லிக்கிட்டிருக்கார். அந்த ஆள் தாராளமா போங்க.. ஆனா டிப்பாசிட் குடுக்கறத பத்தி எங்க மேனேஜர் கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு அட்வைஸ் குடுத்திட்டிருக்கார். அதான் யோசனையோட இப்ப போயி பாக்கணுமான்னு இறங்கி வந்துட்டேன்.’

நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன். இப்படிப்பட்ட போட்டிகளும் பொறாமைகளும் நிறைந்ததுதான் வங்கி உலகம். ஒரு வங்கியின் மேலாளர் தன்னுடைய வங்கியில் மட்டுமே ஒருவர் தன்னுடைய எல்லா சேமிப்புகளையும் வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பது நான் பல இடங்களிலும் கண்டதுதான். அதற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.  அதத நான் இதுவரை பொருட்படுத்தியதேயில்லை. ‘அதானாலென்ன ஃபாதர். நான் என்னுடைய திறப்புவிழா தின டெப்பாசிட் டார்கெட்ட ரீச் பண்ணிட்டேன். எனக்கு இப்ப ஆண்டவர் கிட்டருந்து டெப்பாசிட் ஒன்னும் வேண்டாம் ஃபாதர். அவர் மனமுவந்து இத்தன ஷார்ட் நோட்டீஸ்ல ஒத்துக்கிட்டதே பெரிய விஷயம். இப்போதைக்கு அது போதும் ஃபாதர். அதப்பத்தி நீங்க கவலைப்படாதீங்க. நான் வேணும்னா கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணி பார்த்துட்டு போறேன். . அத்தோட இன்னொன்னு ஃபாதர், நீங்க உங்களுடைய Multipurpose social service societyயோட திட்டங்களுக்கு உதவி செய்ய வேண்டியதப் பத்தி என்னோட ஜோனல் மேனேஜர்கிட்ட பேசிட்டேன். உங்களுடைய எல்லா திட்டங்களுக்கும் எங்க வங்கியோட ஒத்துழைப்பு நிச்சயம் உண்டு ஃபாதர்.’ என்றேன்.

அவர் வியப்புடன் என்னை பார்த்தார். என் கைகளைப் பிடித்துக் கொண்டார். ‘ரொம்ப நன்றி ஜோசப். நான் இதை எதிர்ப்பார்க்கவில்லை.  நேத்தைக்கி நான் சும்மா ஒரு பேச்சுக்குத்தான் அதைப் பத்தி சொன்னேன். எனக்கு சில மானேஜர்களோட அலட்சியப் போக்க பார்த்து ஏற்பட்ட வேதனை அது. டெப்பாசிட்டுக்கு வேண்டி நடையா நடப்பாங்க. அவங்களுக்கு வேண்டியது கிடைச்சதும் அது மெச்சூர் ஆகற வரைக்கும் திரும்பியே பாக்க மாட்டாங்க. நான் எந்த திட்டத்துக்கும் உதவனும்னு கேட்டு போனாலும் சும்மா பேச்சுக்கு ப்ராமிஸ் பண்ணிட்டு கடைசி நேரத்துல credit squeeze அப்படீன்னு சொல்லி தட்டிக் கழிச்சிருவாங்க. அந்த ஆதங்கத்துலதான் நான் அப்படி பேசினேன். இருந்தாலும் அத நீங்க சீரியசா எடுத்துக்கிட்டு... ரொம்ப தாங்க்ஸ் ஜோசப்..’

எனக்கு அவருடைய குரலில் இருந்த உணர்ச்சி தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. என்ன செய்வதென தெரியாமல் நின்றுக் கொண்டிருந்தேன்.

அப்போது மாடிப் படிகள் வழியாக ஒருவர் இறங்கிச் செல்வதைக் கண்டேன். அவருடைய தார்பாச்சு என்பார்களே அம்மாதிரியான உடையும் நெற்றியில் நடுநாயகமாக இருந்த நாமமும் அவரை அடையாளம் காட்டியது. அவர் இறங்கி அங்கிருந்த எல்லா பாதிரியார்களையும் பார்த்து புன்சிரிப்புடன் கூழைக் கும்பிடு என்பார்களே அதுமாதிரியான ஒரு கும்பிடு போட்டவாறே வெளியேறி வாசலிலிருந்த தன்னுடைய இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்றார்.

அவர் சென்றதும் என்னுடன் உரையாடிக் கொண்டிருந்த பாதிரியார் நிம்மதி பெருமூச்சு விட்டார். ‘வாங்க ஜோசப்.. இப்போ ஆண்டவர் ஃப்ரியா இருப்பார். வாங்க வேற யாரும் வர்றதுக்குள்ள போய் பார்த்துட்ட வந்திரலாம். வாங்க.’

அவர் முன்னே செல்ல நான் அவரைப் பின் தொடர்ந்தேன்.

இரண்டாவது மாடியின்  கோடியில் இருந்த ஆயரின் அறையை அடைந்து வெளியே வராந்தாவில் இருந்த எளிமையான பிரம்பு நாற்காலிகளில் ஒன்றில் என்னை அமரச் சொல்லிவிட்டு அவர் ஆயரின் அறைக்குள் சென்றார்.

சில நொடிகளில் வெளியே வந்த பாதிரியார், ‘உங்கள உள்ளவே வரச் சொல்லிட்டார் ஜோசப், வாங்க.’ என்றார். நான் உடனே என்னுடைய காலனிகளைக் கழற்ற குனிந்தேன். அவர் என்னை தடுத்து, ‘இட் ஈஸ் ஓகே. இங்க அந்த ஃபார்மாலிட்டியெல்லாம் இல்லை, சும்மா வாங்க.’ என்றார்.

நான் அரைமனதுடன் என் காலனிகளுடனேயே அறைக்குள் நுழைந்தேன். அதுதான் ஒரு மேற்றிராசனத்தின் தலைவரான ஆயரின் அறைக்குள் நுழைவது முதல் முறை.

தஞ்சை மேற்றிராசனம் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட, வேளாங்கன்னி திருத்தலம் உட்பட, சிறு நகர்களையும், கிராமங்களையும், உள்ளடக்கிய தமிழ்நாட்டிலுள்ள மிகப் பெரிய மேற்றிராசனங்களில் ஒன்று.

அத்துடன் தமிழ்நாட்டிலேயே நிதிநிலையில் முதலிடத்தில் இருந்த மேற்றிராசனம். அதன் தலைவரான ஆயரின் நேரடி மேற்பார்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட சேவை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், சிறுவர், இளைஞர், முதியவர் இல்லங்கள் என வேளாங்கன்னியில் பக்தர்கள் அளிக்கும் காணிக்கையின் உதவியுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வந்தன.

அத்தனை சக்திவாய்ந்த ஒரு ஆயருடைய அறை எப்படி இருக்கும் என்ற மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் அறைக்குள் நுழைந்த நான் அந்த அறையின் எளிமை, இன்னும் சொல்லப் போனால், வறுமை கோலத்தைக் கண்டு வியந்துபோய் ஒரு விநாடி ஆயருக்குத் தரவேண்டிய மரியாதையைக் கூட கொடுக்க மறந்து பேச்சற்று நின்றேன்.

சாதாரணமாக, ஆயரைச் சந்திக்க செல்லும் எவரும் அவருடைய விரலில் இருந்த ஆயரின் அதிகார மோதிரத்தை முத்தம் செய்வது வழக்கம். அது எனக்கும் மிக நன்றாகத் தெரியும். ஆனால் அதை மறந்துவிட்டு நின்ற என்னையே இருவரும் புன்னகையுடன் பார்த்தனர்.

நான் அவர்கள் என்னையே பார்ப்பதை உணர்ந்து  சுதாரித்துக் கொண்டு கால்களை மடக்கி குனிந்து அவருடைய கரத்தை மரியாதையுடன் பிடித்து  மோதிரத்தை முத்தம் செய்து, ‘வணக்கம் ஐயா’ என்றேன்.

அவருக்கெதிரே இருந்த இரு மிகச் சாதாரணமான மர இருக்கைகளில் அமரும்படி சைகைக் காண்பித்து அவர் அவருக்கென இருந்த ஒரு பழைய சாய்வு நாற்காலியில் அமர்ந்தார்.

கீழே வரவேற்பறையிலிருந்த இருக்கைகளுடன் சேர்த்து இவற்றையும் செய்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். அத்தனை பழையதாய் வார்னிஷைக் கண்டு பல வருடங்களானதுபோல் இருந்தன. நான் மெள்ள அறையை சுற்றி மீண்டும் பார்த்தேன்.

அறையின் ஒரு மூலையில் மருத்துவமனைகளில் நாம் காண்பது போன்ற இரும்பு கட்டில். அதன் மேல் மெத்தை என்று ஒன்றும் இல்லாமல் வெறும் கோரைப்பாய்.. தலையணையக் காணவில்லை..
கட்டிலைச் சுற்றிலும் மிகப் பழைய, வெள்ளை நிறத்தை இழந்திருந்த கொசு வலை. அறை ஜன்னல்களில் பெட்ஷீட்டை நினைவுறுத்திய திரைகள், பழைய மங்களூர் ஓடுகளுடன் கூடிய மிக உயர்ந்த கூரை, மேலிருந்த மர உத்தரத்திலிருந்து தொங்கிய பழங்காலத்து  மின் விசிறி..

அறையின் இடது புறத்தில் சுவரையொட்டி பழைய பர்மா தேக்கிலான பல இழுவைகளைக் கொண்ட மேசை.. மேசை முழுவதும் பலதரப்பட்ட கோப்புகள், மேசையின் சுவரையொட்டிய விளிம்பில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள்.. பழயை காலத்து மேசை விளக்கு.. என காணும் இடத்தில் எல்லாம் எளிமையின் கோலம்..

அறை முழுவதும் உலா வந்த என் பார்வை இறுதியில் ஆயரின் முகத்தில் சென்று நின்றபோது அவர் ஒரு சிறு புன்னகையுடன் என்னைப் பார்ப்பதைப் பார்த்ததும் கையும் களவுமாய் பிடிபட்ட கள்வனைப் போல் திருதிருவென விழித்தேன்.

தொடரும்..


8 கருத்துகள்:

  1. எளிமைதாங்க எப்போதும் மனநிறைவைத்தரும். அதுவும் மேலே போகப்போக சாதாரணமா இருக்கத்தெரிஞ்சுக்கணும்.

    உங்க ஆயர் எல்லோருக்கும் நல்லவழிகாட்டியாத்தான் இருந்திருக்கார்.

    பதிலளிநீக்கு
  2. எளிமை மிகவும் இனிமைன்னு சொல்லிக் கேள்வி. செஞ்சு கேள்வியில்லை. அதுக்கெல்லாம் ஞானம் வேணும் ஞானம் வேணும் ஞானம் வேணும்டோய்!

    பட்டினத்தாருக்கு ஒரு வேட்டி. அருணகிரிக்கு கூட ஒரு ஜெபமாலை. அதுவும் முருகன் தந்தது. பத்ரகிரியாருக்கு வேட்டியும் ஓடும் நாயும்.

    கோயிலோட இந்தப் பக்கத்து வாசல்ல பட்டினத்தார். அந்தப் பக்கத்து வாசல்ல பத்ரகிரி. பத்ரகிரிக்கு பட்டினத்தார்தான் ஆசான். அரசராயிருந்து பட்டினத்தடிகளைப் பார்த்து அவரும் ஞானியானாரு.

    பத்ரகிரியாரப் பாத்து ஒரு நாய் அவரோட ஒட்டிக்கிச்சு. அவரும் ஒரு திருவோட்டுல பிச்சையெடுத்து தானும் நாயும் தின்னுக்கிட்டிருந்தாரு.

    அப்படியிருக்குறப்ப ஒரு நாள் ஒரு ஆள் வந்து பட்டினத்தடிகள் கிட்ட என்னமோ கேட்டிருக்காரு. அதுக்கு பட்டிணத்தடிகள்...அடுத்த கோபுரம் போய்ப் பாருங்க. அங்க ஒரு சமுசாரி இருப்பாரு. அவருட்ட கேளுங்கன்னு சொல்லீருக்காரு.

    அந்தாளும் அப்படியேப் போயி பத்ரகிரியாருகிட்ட சொல்லீருக்காரு. அப்பத்தான் பத்ரகிரிக்கு ஓட்டு மேலையும் நாய் மேலையும் இருந்த பாசம் புரிஞ்சதாம். ஓட்டை நாயோட தலைல போட்டு ஒடச்சிட்டாரு. அந்த நாய் பரமனடி போயிருச்சு. ஓடு ஒடஞ்சிருச்சு. அந்த நாய் காசிராஜன் மகளாப் பொறந்து பதினாறு வயசுல பத்ரகிரியத் தேடிக்கிட்டு (காசிராஜனையும் கூட்டிக்கிட்டு) திருவெண்ணெய்நல்லூருக்கு வந்திரூச்சு. சாமி ஏத்துக்கனும் வேண்டி நிக்குது. நாந்தான் சாமி அந்த நாய். இப்ப இப்பிடி வந்திருக்கேன்னு உக்காந்து அழுகுது. இவரு பயந்து போய்...என்னடா இது....எங்க போனாலும் தொடருதேன்னு சிவ சிவன்னு அழுதுகிட்டே கோயிலுக்குள்ள போய் இறைவனோட சேந்துட்டாரு. பின்னாடியே போன அந்தப் பொண்ணும் அப்படியே. பாத்துக்கிட்டிருந்த பட்டினத்தடிகளுக்குப் பேச்சே வரலை. தனக்குப் பின்னாடி வந்த பய தமக்கு முன்னாடி முக்தியாயிட்டானே. நமக்கு எந்நாளோன்னு வருத்தப்பட்டாரு. அவருக்கும் திருவொற்றியூர்ல அது கிடைச்சது.

    பதிலளிநீக்கு
  3. வாங்க துளசி,

    எளிமைதாங்க எப்போதும் மனநிறைவைத்தரும். //

    இந்த உண்மையை நம்மள்ல எத்தனை பேர் தெரிஞ்சி வச்சிருக்கோம்?

    பதிலளிநீக்கு
  4. வாங்க ராகவன்,

    அதுக்கெல்லாம் ஞானம் வேணும் ஞானம் வேணும் ஞானம் வேணும்டோய்!//

    அந்த ஞானத்தை எங்களுக்கு குடு சாமின்னுதான் நெதமும் கேக்கணும்.

    ..அப்படியிருக்குறப்ப ஒரு நாள் ஒரு ஆள் வந்து பட்டினத்தடிகள் கிட்ட என்னமோ கேட்டிருக்காரு...அத கேட்டுட்டு பத்ரகிரிக்கு ஓட்டு மேலையும் நாய் மேலையும் இருந்த பாசம் புரிஞ்சதாம். //

    அந்த 'என்னமோ' என்ன ராகவன்?

    பதிலளிநீக்கு
  5. // அந்த ஞானத்தை எங்களுக்கு குடு சாமின்னுதான் நெதமும் கேக்கணும். //

    ரொம்பச் சரியாச் சொன்னீங்க சார். நம்மூரு அருணகிரியும் அதத்தான் சொல்றாரு. இப்ப அந்த வரிகளையெல்லாம் சொல்ல முடியாது. ஏன்னா..நாளைல இருந்து கந்தரநுபூதி விளக்கம் தொடங்குது. வாரம் ஒன்னுன்னு அம்பத்து மூணு வாரத்துக்கு. அதுல இதெல்லாம் சொல்லீருக்கு. அப்பப்ப அதையும் எட்டிப் பாருங்க ஜோசப் சார். அத்தோட ஒங்க கருத்துகளையும் போடுங்க.

    ////அப்படியிருக்குறப்ப ஒரு நாள் ஒரு ஆள் வந்து பட்டினத்தடிகள் கிட்ட என்னமோ கேட்டிருக்காரு...அத கேட்டுட்டு பத்ரகிரிக்கு ஓட்டு மேலையும் நாய் மேலையும் இருந்த பாசம் புரிஞ்சதாம். //

    அந்த 'என்னமோ' என்ன ராகவன்? //

    அதுதான் மறந்து போச்சு சார். தேடிப் பாத்துட்டு நாளைக்கு சொல்றேன். அதுக்குள்ள குமரன் இந்தப் பதிவைப் படிச்சிட்டா அவரே சொல்லீருவாரு.

    பதிலளிநீக்கு
  6. எளிமை தமிழரின் குணநலன். "அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" என்பார்கள். நிகழ்கால நிகழ்வுகளால் எளிமையும் அடக்கமும் கேலிப் பொருளாகியுள்ளன.
    கடவுளுக்கு அளித்த காணிக்கைப் பணத்தை விரயமாக்காது எளிய வாழ்வு வாழ்ந்து முன்மாதிரியாய் விளங்கிய அப்பெருமகனார் வணக்கத்திற்குறியவர்.

    ஆனாலும் அப்படிப்போடு இட்ட ஒரு பதிவில் கண்டது போல சிக்கனத்திற்கும் கருமித்தனத்திற்கும் மிக குறைந்த இடைவெளியே.

    பதிலளிநீக்கு
  7. வாங்க மணியன்..

    சிக்கனத்திற்கும் கருமித்தனத்திற்கும் மிக குறைந்த இடைவெளியே.//

    நீங்க சொல்றதும் சரிதான். ஆனால் பொதுமக்களின் நன்கொடையை ஆடம்பரத்துக்காக குறைத்து செலவழிப்பது கருமித்தனமல்லவே. அதனால் அவருக்கு என்ன லாபம் வந்துவிடப் போகிறது?

    ஆனாலும் அவர் வகித்திருந்த பதவிக்கு இத்தனை எளிமை தேவைதானா என்று எனக்கு தோன்றியதென்னவோ உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  8. அதுதான் மறந்து போச்சு சார். தேடிப் பாத்துட்டு நாளைக்கு சொல்றேன். அதுக்குள்ள குமரன் இந்தப் பதிவைப் படிச்சிட்டா அவரே சொல்லீருவாரு. //

    பரவால்லை ராகவன். நீங்க என் பைபிள் பதிவில கேட்டுருக்கற ஒரு கேள்விக்கும் என்னால பதில் போடமுடியலை.. யார் முதல்ல போடறாங்கன்னு பாக்கலாம்..

    பதிலளிநீக்கு