19 ஜனவரி 2006

திரும்பிப் பார்க்கிறேன் 62

வீட்டையடைந்ததும் என் வட்டார மேலாளர் வழியாய் வேறொரு வில்லங்க செய்தி!!

அதைக் கேட்டவுடனே எனக்கு ‘இந்தாளுக்கு வேற வேலையில்லை.. ஒன்னுமில்லாத விஷயத்தையெல்லாம் பெரிசுபடுத்தி எதையாச்சும் சொல்றதே வேலை.. பேசாம திருப்பிக் கூப்பிடாமயே இருந்திட்டா என்ன?’ என்று நினைத்தேன்.

‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதாங்க ஃபோன் வந்திச்சி.. நீங்க வந்ததும் கூப்பிட சொல்றேன்னேன். நீங்க போய் முதல்ல குளிச்சிட்டு வந்து  சாப்டுங்க.. அப்புறம் கூப்டலாம்’ என்ற என் மனைவியை முறைத்துப் பார்த்தேன்..

சாதாரணமாக வீட்டுக்கு வெளியே நடந்தவைகளால் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களை என் மனைவியின் மீது காட்ட மாட்டேன். அன்றைக்கு என்ன தோன்றியதோ.. ‘நான் வீட்டுக்குள்ள வர்றதுக்குள்ள விஷயத்த சொல்லிட்ட. இனி நா எங்க குளிக்கறது? சாப்டறது? எல்லாம் அவர்கிட்ட பேசிட்டு பாத்துக்கலாம்.. இதான் கடைசி.. சொல்லிட்டேன்.. இனிமே இந்த மாதிரி விஷயங்கள வீட்டுக்குள்ள வந்ததும் சொல்லாத..’ என்றேன் குரலை உயர்த்தி.

திருமணம் முடிந்து இந்த இரண்டு வருடத்தில் இப்படி கடிந்து நான் பேசியதில்லை.. என்னுடைய கோபத்தின் பின்னணியை அறிந்திராத என் மனைவியின் கண்கள் சட்டென கலங்கிப் போனது. அதைப் பார்த்ததும்தான் என் தவறு எனக்கு புரிந்தது..

பிறகு அவரை சமாதானப்படுத்திவிட்டு அவர் கூறியதைப் போலவே சென்று குளித்துவிட்டு வந்து அவர் கொடுத்த காப்பியைக் குடித்துவிட்டு வேண்டா வெறுப்புடன் என் மேலாளரை அழைத்தேன்.. அவர் சாதாரணமாக இரவு எட்டு மணிக்கு முன்பு வீடு திரும்பமாட்டார்.. நான் அழைத்தபோது அலுவலகத்தில்தான் இருந்தார். என்னுடைய அழைப்பை எதிர்பார்த்து காத்திருந்தார் போல் தெரிந்தது..

‘எடுத்தவுடனே.. என்ன டிபிஆர். எங்கே போயிருந்தீங்க?’ என்றார் யார், எவர் என்று கேட்காமலே..

‘கொஞ்சம் டெப்பாசிட்டர்ச பார்க்க போயிருந்தேன் சார். சொல்லுங்க என்ன விஷயம்?’ என்றேன்.

‘அதிர்ச்சியாயிடாதீங்க டிபிஆர். சேர்மன் திறப்புவிழாவுக்கு வரமுடியாதுன்னு சொல்லிட்டார்.’

என்னது? ஏனாம்? எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. நாள் குறித்துவிட்டு.. அழைப்பிதழ் வடிவத்தை முடிவு செய்வதற்காக என்னுடைய தலைமையலுவலகத்திற்கு அனுப்பி ஒரு வாரம் ஆகிறதே ஏதும் பிரச்சினையோ என்று இன்று காலைதான் நினைத்தேன். இதுதான் பிரச்சினை போல் தெரிகிறது..

சை.. என்ன ஆளுங்கடா.. எவனோ என்னத்தையோ போய் சேர்மன்கிட்ட சொல்லி கெடுத்திட்டான்க போலருக்கே.. என்று நொந்துபோனேன்..

‘என்ன டிபிஆர். அப்செட்டாயிட்டீங்களா? நாம என்ன பண்றது? நீங்க அனுப்பின இன்விடேஷன் மாட்டர கன்ஃபர்ம் பண்றதுக்கு சேர்மன் கிட்ட போயிருக்கு. அவர் ஒன்னும் சொல்லாம அவர் பேர மட்டும் அடிச்சிட்டு ‘let him manage with operations GM’னு எழுதி திருப்பியனுப்பிட்டாராம். HOவில யாருக்கும் அவர்கிட்ட போயி என்ன, ஏதுன்னு கேக்கறதுக்கு பயமாயிருக்காம்.. ஒருவேளை அவர கேக்காமலே அவர் பேர போட்டுட்டோம்னு கோபமான்னு தெரியலை..’

அதுதான் காரணமா? அடப்பாவி மனுஷா.. நான் போன வாரம் VIP யாரையும் கூப்டாம நம்ம சேர்மன வச்சே திறப்புவிழா நடத்திரலாம்னு சஜ்ஜஸ்ட் பண்ணப்போ நான் சேர்மன்கிட்ட சொல்லிக்கறேன்னு சொல்லிட்டு பேசாம இருந்திட்டார் போலருக்குதே.. சே.. திறப்புவிழாவுல வச்சி அவருக்கு என் பேர்லருந்த தவறான எண்ணத்த போக்கிரலாம்னு நினைச்சிருந்தேனே.. இப்ப என்ன பண்றது?

‘இப்ப என்ன பண்ணலாம்னு நினைக்கிறீங்க டிபிஆர். ஜி.எம் கிட்ட கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் பேசினேன்.. அவர் டிபிஆர். ஓப்பன் பண்ற பிராஞ்சுக்கு தைரியமா போலாமா... நம்ம பழைய சேர்மனனுக்கு ஆனா மாதிரிஆயிராதில்லன்னு தமாஷ் பண்ணார்.. அதுக்குத்தான் நம்ம சேர்மன் நைஸா ஒதுங்கிட்டார் போலன்னும் கிண்டல் பன்றார்..’

போ.. இது வேறயா? கொடுமைடா.. என்று நினைத்தேன். இருக்கும். சேர்மன் பயங்கர ரெலிஜீயஸ் மைண்டட்னு கேள்விப் பட்டிருந்தேன்.. அலுவலக காரியங்களுக்குக் கூட நல்ல நேரம், எமகண்டம் பாக்கற ஆளுன்னு நான் அங்கே சென்றிருந்த அவருடைய காரியதரிசி கூறிக் கொண்டிருந்ததைக் கேட்டிருந்தேன்..

‘சார்.. நம்ம ஜி. எம் என்ன சொல்றார் சார்.. வேற யாரையும் கூப்பிடணுமா வேணாமா.. கொஞ்சம் கேட்டு சொல்லுங்க சார்.. நான் கேட்டா ஏதாச்சும் தப்பா நெனச்சிக்க போறார்.. இன்னும் ரெண்டு நாளைக்குள்ள நாம டிசைட் பண்ணலைன்னா அப்புறம் திறப்பு விழாவ தள்ளிப் போடறா மாதிரி ஆயிரும்.. என்ன சொல்றீங்க சார்?’ என்றேன்..

‘திறப்பு விழாவ தள்ளிப் போடறதா? அது மட்டும் வேணவே வேணாம். நீங்க இப்ப சொன்னத நான் ஏற்கனவே கேட்டுட்டேன்.. அவரு லோக்கல்ல யாராவது பிசினெஸ் மேன் கெடச்சா பார்க்க சொல்லுங்க.. இல்லன்னா யாரும் வேணாம்னு சொல்லிட்டார். நீங்க ஒன்னு பண்ணுங்க டிபிஆர். நாளைக்கு ஒரு நாள் எடுத்துக்கிட்டு முயற்சி பண்ணுங்க.. நாளைக்கு சாயந்திரத்துக்குள்ள யாரும் கிடைக்கலைன்னா.. யாரும் வேணாம். I will wait for your phone call tomorrow. என்னேரமானாலும் கூப்டுங்க..’

இணைப்பைத் துண்டித்துவிட்டு யோசித்தேன்..

என்னையே பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி.. ‘என்னங்க நீங்க இல்லாதப்போ இன்னொரு ஃபோன் கூட வந்துச்சு..’ என்றார் தயக்கத்துடன்.

எனக்கு அவருடைய முகத்திலிருந்த தயக்கத்தைப் பார்த்ததும் ஏண்டா இவளை முட்டாத்தனமா கோச்சிக்கிட்டோம் என்று தோன்றியது..

‘சொல்லு, யார் பண்ணா?’

‘நம்ம பங்கு சாமியார்.’

‘என்னவாம்?’

‘உங்களுக்கு டைம் இருக்கும் போது வரணுமாம். அவர் நம்ம ஊர் சாமியார் போலருக்கு.’

‘என்னது அவரா? அவர்தான் போய்ட்டாருன்னு சொன்னாங்களே? நாம ரெண்டு மூனு மாசமா அவர பாக்கவேயில்லையே.. நான் போனப்போ வேற ஒரு சாமியார்தானே இருந்தாரு.. வேற ஏதாவது சொன்னாரா?’

‘இல்லீங்க.. நீங்க வீட்ல இல்லேன்னதுமே.. இத மட்டும் சொல்லிட்டு வச்சிட்டார்.’

என்னவாயிருக்கும்? இரவு மணி எட்டரையாகியிருந்தது. இப்போது அவரைக் கூப்பிடுவது அவ்வளவு உசிதமாயிருக்காதென நினைத்தேன். சரி, நாளைக் காலையில் போய் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன்..

அதே போல் அடுத்த நாள் காலை முதல் வேலையாய் அவரை சுமார் ஒன்பது மணிக்கு தொலைப் பேசியில் அழைத்தேன். மணி அடித்துக் கொண்டே இருந்தது..

சரி.. அலுவலகம் செல்லும் வழியில் பார்த்துவிட்டு போகலாம் என்று நினைத்து, குளித்து உடை மாற்றிக்கொண்டு புறப்பட்டேன்.

தஞ்சை டவுணுக்கு செல்லும் வழியில்தான் என் பங்கு தேவாலயம் இருந்தது. தேவாலயத்திற்கு பின்புறத்தில்தான் பங்கு குருவும் தங்கியிருந்தார்.. நான் இரண்டு மாதங்களுக்கு முன்பு கண்ட அதே குருவானவர்தான் நான் சென்றபோதும் இருந்தார். இவரா தொலைப்பேசியில் அழைத்திருப்பார்?

நான் என் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கவும் அவர் என்னைப் பார்த்துவிட்டு புன்னகையுடன் வெளியில் வந்தார். ‘என்ன சார்.. நான் சொன்ன இடத்தைப் பார்த்தீங்களா? அப்புறம் ஒன்னுமே சொல்லலையே.. வேற இடம் கிடைச்சுதுன்னு கேள்விப்பட்டேன்..’

அப்படியானால், இவர் இல்லை என்னை நேற்று அழைத்தது. ‘சரி இவர்கிட்ட பேசிக்கிட்டிருந்தா நம்ம வேலை கெட்டுரும்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.. ‘இல்ல ஃபாதர். நீங்க சொன்ன இடம் safe room கட்டறதுக்கு தோது படலை.. உங்க கிட்ட விஷயத்த சொல்லலாம்னு ரெண்டு மூனு தடவை ஃபோன்ல கூப்டேன்.  ரிங் போய்ட்டே இருந்திச்சி.. அப்புறம் நான் மறந்தே போய்ட்டேன்.. கோயிலுக்கு வரும்போதெல்லாம் உங்ககிட்ட பேசணும்னு முயற்சி பண்ணேன்.. ஆனா பூசை முடிஞ்சதும் உங்கள சுத்தி எப்ப பார்த்தாலும் கூட்டமா இருக்கே.. சரி அப்புறம் பாத்துக்கலாம்னு போயிருவேன்.. இன்னைக்கி இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன்.. சாரி ஃபாதர்.. தப்பா நினைச்சிக்காதீங்க.. ஒரு பிராஞ்ச் தொறக்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வைக்கிறா மாதிரி.. நான் ஒருத்தன் மட்டும் இருந்துக்கிட்டு.. நேரமே போதலை ஃபாதர்..’

அவர் சிரித்தார். ‘It is ok.’ என்றார். ‘அப்புறம் சார், உங்கள ரெண்டு நாளைக்கு முன்னால நம்ம பழைய பங்கு சாமியார் கேட்டார். உங்க வீட்டு ஃபோன் நம்பரும் குடுத்தேன்.. அவரு இப்ப நம்ம பிஷப் ஹவுஸ்லதான் இருக்கார்.. கூப்டாரா?’

‘இல்லையே ஃபாதர்.. எதுக்கு என்ன பாக்கணும்னு சொன்னாரா?’ என்றேன் உண்மைக்கு புறம்பாக.. பொய் சொல்றதே பாவம்.. அதுவும் ஒரு குருவிடத்திலா என்று என் மனசாட்சி உறுத்தியது. வேறென்ன செய்ய? ஆமாம் ஃபாதர் நேத்துதான் கூப்டுருந்தார் என்றால், ஓ! அதுக்குத்தான் இந்த பக்கம் வந்தீங்களான்னு நினைச்சிக்குவார் அப்புறம் வீணா வருத்தப்பட்டாலும் படுவார்.. என்று என் மனசாட்சிக்கு பதிலளித்தேன்..

அவர் சிரித்தார். ‘தெரியலை சார்.. நீங்க வேணும்னா போய் பாருங்களேன்..’ என்றார்.

அதற்குப் பிறகு சிறிது நேரம் கோவில் விஷயங்களைப் பேசிவிட்டு விடைபெற்றுக் கொண்டு கிளம்பி நேரே பிஷப் இல்லத்திற்கு சென்று அவரைப் பற்றி வரவேற்பறையிலிருந்த பெண்ணிடம் விசாரித்தேன். அவர் என்னை சிறிது நேரம் காத்திருக்க சொல்லிவிட்டு ஒரு சிறுவனையழைத்து நான் பார்க்க வந்த குருவிடம் நான் வந்திருப்பதை கூறும்படி சொன்னார்.

சிறுவன் சென்ற சில நொடிகளிலேயே அவரும் ஒரு புன்சிரிப்புடன் படிகளில் இறங்கி வந்து.. ‘வாங்க சார்.. ரொம்ப நாளாச்சே பார்த்துன்னுதான் ஃபோன் பண்ணேன்.. வாங்க, ஆஃபீஸ் ரூம்ல உக்காந்து பேசலாம்.’ என்று அழைத்துச் சென்றார்..

இத்தனை நாள் இல்லாம என்ன திடீர்னு... இவர் என்ன கேக்கப் போறார்னு தெரியலையே.. ஏதாவது வேலை விஷயமா இருக்குமா.. இல்ல வேறேதாச்சுமா.. கடவுளே இனியொரு பிரச்சினைய சந்திக்கற மனநிலை எனக்கிப்போ இல்லைப்பா.. என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அவர் பின்னால் சென்றேன்..

தொடரும்..

5 கருத்துகள்:

  1. அந்தச் சேர்மனுக்கு என்ன ஆத்திரமோ......சரி. அதுவும் நாளைக்குத் தெரிஞ்சிட்டுப் போகுது.

    பங்குச் சாமியார், பங்குத்தந்தைங்குற பேருகள்ளாம் தூத்துக்குடீல நெறைய கேட்டிருக்கேன்.

    என்னதான் இருந்தாலும் சமயத்துல சட்டுன்னு கோவம் வந்துருதுல்ல...மனுசங்க சார். நம்மள்ளாம் மனுசங்க.

    பதிலளிநீக்கு
  2. இதுக்குத்தான் வீட்டுலே பொம்பளைங்க சொல்றது,'ஆபீஸ் வேலை ஆபீசோடு. வீட்டுக்குக் கொண்டு வராதீங்கன்னு'
    யாராச்சும் கேட்டாத்தானே? (-:

    பதிலளிநீக்கு
  3. அந்தச் சேர்மனுக்கு என்ன ஆத்திரமோ.....//

    என்னுடைய கோடம்பாக்கம் கிளையை திறந்து வைத்துவிட்டு அன்று இரவே சேர்மன் மரித்தது நினைவிருக்கிறதா? அதுவும் ஒரு காரணமாம். அவரே சிரித்தவாறு என்னிடம் பின்னர் கூறினார். என்னால் அசடு வழியவே முடிந்தது..

    மூட நம்பிக்கை எங்கெல்லாம் பாய்கிறதென பாருங்கள்..

    எங்களுடைய முன்னாள் சேர்மன்களில் முதலில் இறந்தவர் அவர்தான்!

    பதிலளிநீக்கு
  4. வாங்க துளசி,

    நீங்க சொல்றதுதான் என் கொள்கையும்.. ஆனா வீடும் ஆஃபீசும் ஒன்னா இருந்த நேரமாச்சே அது?

    என்ன பண்றது?

    பதிலளிநீக்கு
  5. வாங்க ராஜ்,

    நாளைய பதிவில விவரமா சொல்றேன்.

    பதிலளிநீக்கு