18 ஜனவரி 2006

திரும்பிப் பார்க்கிறேன் 61

அவர் எதற்காக அப்படி செய்தாரோ ஆனால் அது அவரைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள உதவியாக இருந்தது. பின் வாசலையொட்டி இருந்த காரேஜில் அப்போது மிகவும் அரிதாயிருந்த பணக்காரத்தனமான பளபளக்கும் இம்பாலா கார் ஒன்று நின்றுக் கொண்டிருந்தது...!

நான் சாலையில் இறங்கி சுமார் இருபத்தைந்து அடி தூரம் நடந்து என் வாகனத்தை அடைந்தேன். வாகனத்தில் ஏறும் முன்பு மீண்டும் அவ்வீட்டை ஒரு முறை பார்த்தேன்.

வெளியிலிருந்து பார்க்கும்போது அவ்வீட்டினுள் நான் கண்ட காட்சிகளின் அடிச்சுவடுகூட தெரியவில்லை. வீட்டின் முகப்பில் அவர் நடத்தி வந்த ஸ்தாபனங்களின் பெயர் பலகைக் கூட வைக்கப்பட்டிருக்கவில்லை.

இவ்வீடல்லாமல் வேறெங்காவது இவருக்கு அலுவலகம் இருக்குமோ என்று நினைத்தேன்.

பண்ணையாரைப் பார்த்துவிட்டு வந்தபோது என் மனதில் ஒரு இனம் புரியாத வேதனை கலந்த சந்தோஷம் இருந்தது. அவரை சந்தித்த அடுத்த இரண்டு மூன்று நாட்கள் வரை அவரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன்..

ஆனால் இவரை சந்தித்துவிட்டு வீடு திரும்பியபோது என் மனதில் எஞ்சி நின்றது ஒருவித கோபமும், ஏமாற்றமும்தான்.

முதலில் இந்த மனுஷனோட ரெட்டை வேஷத்த வெளிப்படுத்தினாலென்ன என்றும் கூட தோன்றியது. ஆனால் அதுவல்லவே உன்னுடைய தொழில் என்றது என் மனது..

இருப்பினும் என் மனசாட்சியை திருப்திப்படுத்தவாவது இவரைப் பற்றி முழுவதும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற உறுதியில் வீட்டையடைந்ததும் அவரிடமிருந்து கொண்டு வந்த புத்தகத்தை ஒரே இருப்பில் படித்து முடித்தேன்.

அதிலிருந்த அவருடைய ஸ்தாபனங்கள் பெயரில் நடந்து வந்த பள்ளிகள், ஆசிரமங்கள் ஆகியவற்றின் விலாசத்தைக் குறித்துக் கொண்டு விஷயத்தை விவரிக்காமல் அதில் குறிப்பிட்டிருந்த கிராமங்களுக்கு எப்படி செல்ல வேண்டுமென்று மட்டும் என்னுடைய வீட்டு உரிமையாளரிடம் கேட்டு தெரிந்துக் கொண்டேன்.

அடுத்த நாள் காலையிலேயே எழுந்து ஒரு வாடிக்கையாளரைச் சந்திக்க செல்கிறேன் என்று என் மனைவியிடம் கூறிவிட்டு என் வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்.

நான் குறித்து வைத்திருந்த எல்லா விலாசங்களையும் ஒரு சுற்று சுற்றிவிட்டு வீடு திரும்பி வந்து சேர்ந்தபோது இரவு மணி 11.00 மணி..

முந்தைய நாள் அவரை சந்தித்துவிட்டு வந்ததை விட நான் மிகவும் சோர்ந்து போயிருந்தேன்.. உடலாலும், மனதாலும்.

அவர் நடத்தி வந்த பள்ளிகளில் தஞ்சை டவுணிலிருந்த ஒன்றைத் தவிர மற்ற எல்லா பள்ளிகளும் பேருக்குத்தான் நடந்துக் கொண்டிருந்தன.. அடிப்படை வசதிகள் ஒன்றுமில்லாமல்.. வானம் பார்த்த கூரைகளுடன்.. இரண்டொரு வகுப்புகளைக் கொண்ட .. அதிலும் எந்தவித பயிற்சியுமில்லாத ஆசிரியைகளால்.. ‘போன ரெண்டு மாசமா சம்பளம்கூட தரலை சார். எப்பவாச்சும் வருவார்.. வெள்ளைக் காரங்கள கூட்டிக்கிட்டு வந்து.. உங்க பணத்த வச்சித்தான் வசதிகளை அதிகரிக்கணும்.. அப்படி, இப்படின்னு எங்க முன்னாலயே அவங்க கிட்ட நடிப்பாருங்க.. என்னதான் இருந்தாலும் எங்களுக்கும் அவர விட்டா இந்த ஊர்ல வேற வழியில்லைங்கறதுனாலயும் அவரைப் பகைச்சிக்கிட்டா இந்த ஊர்ல நிம்மதியா இருக்க முடியாதுங்கறதாலயும் நாங்களும் கேட்டுக்கிட்டு சும்மா நிப்போம்..’ எலும்பும் தோலுமாய் பயிற்றுவித்த ஆசிரியைகள் கூறியதைத்தான் எல்லா பள்ளிகளிலும் கேட்க முடிந்தது..

அடுத்தது அனாதை சிறுவர்களின் ஆசிரமம். கட்டடம் என்னவோ அட்டகாசமாக இருந்தது.. தரைத் தளம், முதல் தளம் என தூரத்திலிருந்து பார்த்தபோது அனைத்து வசதிகளுடன் இருந்ததைப் போல தோற்றமளித்தது..ஆனால் நெருங்கிச் சென்று பார்த்தபோது முற்றிலும் மாறுபட்டிருந்தது..

பேருக்கு நான்கைந்து சிறுவர்கள் ஒரு பெரிய அறையில் தரையில் உறங்கிக் கொண்டிருக்க வெளியில் கரடு முரடான மைதானத்தில் ஐந்தாறு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு சிறுவனின் முதுகிலும் சட்டையில்லை.. கிழிந்த நிஜார்களுடன்.. குளித்து பல நாட்கள் ஆன கோலத்தில்.. பார்க்கவே பரிதாபமாய்..

சிறுவர்கள் படுத்துறங்கிய அறைகளைத் தவிர மற்றவையெல்லாம் பூட்டப் பட்டிருந்தன. ஒருவேளை வெளிநாட்டு பார்வையாளர்கள் வரும் சமயங்களில் மட்டும் திறக்கப்படுமோ?

‘உங்க சேர்மனை வேணும்னாலும் கூப்டுக்கிட்டு போயி காட்டலாம் சார். ஒரு வாரத்துக்கு முன்னால சொன்னா போறும்.’ என்ற அவருடைய வார்த்தைகள் நினைவுக்கு வந்தவன.

எதற்கு? எல்லாவற்றையும் தயார் செய்து ஷோ காண்பிக்கவா? இருக்கலாம்.

அதே நிலைதான் நான் சென்ற இடமெல்லாம். எல்லா இடங்களிலும் அவருடைய ஸ்தாபனங்களின் பெயர் தாங்கிய பெயர் பலகைகள் மட்டும் அட்டகாசமாக இருந்தன..

இப்படிப் பட்டவர்களை இச்சமுதாயம் எப்போது இனம் கண்டுக் கொள்ளப் போகிறது?

அங்கிருந்து நேரே வீட்டிற்கு செல்லாமல் என்னுடைய கிளைக்கான ஃபர்னிஷிங் வேலைகள் பார்த்துவிட்டு செல்லலாம் என்று தெற்கு வீதிக்கு சென்றேன்..

வேலைகள் மும்முரமாக நடந்துக் கொண்டிருந்தன. கிளைக்கான பெயர் பலகையும் சென்னையிலிருந்து வந்து இறங்கியிருந்தது..

மரவேலையாட்கள் அவர்களுடைய வேலைகளை முடித்துவிட்டு சென்றவுடன் மின் வேலைகளையும் முடித்துவிட்டால் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் திறப்புவிழாவை நடத்திவிடலாம் என்று நினைத்தேன்.. இன்றே என்னுடைய வட்டார மேலாளரை அழைத்து திறப்பு விழாவுக்கு நாள் குறிக்க கூறவேண்டும் என்று நினைத்தேன்.

நான் பார்த்திருந்த இடம் மிகவும் சிறியதாக இருந்ததால் வழக்கமாக இடப்படும் மேலாளருக்கான தனி அறையை தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது என்றார் ஃபர்னிஷிங் செய்ய வந்தவர். ‘அதானாலென்ன, பரவாயில்லை.’ என்று பதிலளித்துவிட்டு வெளியேறி சாலைக்கு வந்தேன். NTC துணிக்கடை மேலாளர் என்னை பார்த்து புன்னகை செய்யவே நானும் பதில் புன்னகை செய்துவிட்டு எதிரே இருந்த உரிமையாளரின் சகோதரர் கடைக்கு செல்ல புறப்பட்டேன்.

NTC மேலாளர் கடையிலிருந்து இறங்கி வந்து, ‘சார் ஒரு நிமிஷம்.. இங்க வரீங்களா?' என்றார்.

நான் திரும்பி எதிர் திசையில் இருந்த கடையிலிருந்து யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்துவிட்டு அவசரமாய் அவருடன் கடையில் நுழைந்தேன்.

‘என்ன சார், சொல்லுங்க?’ என்றேன்.

அவர் கடைச் சிப்பந்திகளுக்கு கேட்காத குரலில். ‘சார் நான் சொல்றேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க. பாய் உங்கள என்னவோ பொய் சொல்லி பின்னாலருக்கற எடத்த உங்களுக்கு குடுத்திருக்கார்னு நினைக்கிறேன்.’ என்றார்.

‘என்னய்யா புதிர் போடறே?’ என்று மனதில் நினைத்துக் கொண்டு, ‘எதுக்கு அப்படி சொல்றீங்க?’ என்றேன்.

‘சார், நாங்க இன்னும் ரெண்டு வருஷத்துக்கு இங்கருந்து போறதா உத்தேசமில்லே.. இவர் எப்போ உங்களுக்கு இடத்தை தர்றதா ஒப்பந்தம் போட்டாரோ அப்பவே அவர் இந்த இடத்துல சொந்தமா கடை திறக்கப் போறதில்லேன்னு உறுதியாயிருச்சி.. இதே விலாசத்துல உங்க பேங்க் திறக்கப் போறதா அந்த ஒப்பந்தம் சொல்றதால இவங்க எங்கள காலி பண்றதுக்கு முன்னால சொன்ன வாதம் பொய்யின்னு கோர்ட்ல நாங்க ஈசியா ப்ரூவ் பண்ணிட்டோம். அத ஒத்துக்கிட்டு இவரோட எவிக்ஷன் நோட்டீஸ் கோர்ட்ல டிஸ்மிஸ் ஆயிரிச்சி.. அத உங்கக் கிட்ட சொல்லாம மறைச்சிருக்கார்னு நினைக்கிறேன். நீங்க இப்ப இருக்கற எடத்துல கிளையைத் திறக்கறது அவ்வளவு உசிதமா படும்னு எனக்கு தோனலை சார். அப்புறம் உங்க  இஷ்டம்.’

எனக்கு முற்றிலும் புதிய செய்தியாகப் பட்டதால் என்ன செய்வதென தெரியாமல், ‘சரி சார். நான் யோசிச்சி செய்றேன்.’ என்று பதிலளித்துவிட்டு வெளியே வந்தேன்.

நான் வெளியே வரவும் எதிர்கடையிலிருந்து என் கட்டிட உரிமையாளர் வரவும் சரியாய் இருந்தது. நான் NTC கடையிலிருந்து வந்ததைப் பார்த்ததும் அவருடைய முகம் இருளடைந்து போனதை நான் பார்த்தேன்.

இருப்பினும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் ஒரு சிறு புன்னகையுடன் அவரை நோக்கிச் சென்றேன். ‘என்ன சார், ரொம்ப நாளாச்சி பார்த்து? ஊர்ல இல்லையா?’ என்றேன்.

அவரும் பதிலுக்கு புன்னகை செய்ததுடன், ‘வாங்க சார். அண்ணா உள்ளதான் இருக்கார். உங்க கிட்டயும்  ஒரு முக்கியமான விஷயம் சொல்லலாம்னு காத்துக்கிட்டிருக்கோம்.’ என்றவரை ஒன்றும் புரியாததுபோன்ற முகபாவனையுடன் பார்த்தேன்.

அவருடைய மூத்த சகோதரரும் கல்லா பெட்டியிலிருந்து இறங்கி வந்து எங்கள் இருவருடனும் கலந்துக் கொண்டார்.

நான் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் அவர்களே பேசட்டும் என்று காத்திருந்தேன். NTC மேலாளர் கூறியது அதிர்ச்சி தரக்கூடிய விஷயம்தான் என்றாலும் திறப்பு விழாவுக்கு நாள் குறிக்க வேண்டிய அப்போதைய சூழ்நிலையில் இதைப் பற்றியெல்லாம் கவல¨ப்படுவதில் பலனில்லை என்றுதான் நான் நினைத்தேன். இருப்பினும் இந்த விஷயத்தை என்னிடமிருந்து மறைத்ததை மட்டும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை..

அதையும் வெளிப்படையாக கேட்டு மனவருத்தத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையில் நான் அப்போது இல்லை. திறப்பு விழா முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் நினைத்தேன்.

அப்போது எனக்கு முக்கியமாகப் பட்டது கிளையைத் திறப்பதுதான். ஆகவே நான் அவர்களாக இதைப் பற்றி பேசினால் பார்த்துக் கொள்ளலாம் என்று வாளாவிருந்தேன்.

மேலும் அன்றைக்கு அதைப் பற்றி அவர்கள் பேசாமலிருந்தால் கூட போதும் என்று தோன்றியது. ஏனென்றால் அன்றைய மனப்பிரயாசத்திற்கான கோட்டா முடிந்துவிட்டது என்று நினைத்தேன். ஏற்கனவே தஞ்சை சுற்றுவட்டார கிராமங்களில் சுற்றியலைந்து நான் கண்ட காட்சிகளால் மனமும் உடலும் சோர்ந்து போயிருந்த நேரத்தில் NTC மேலாளரின் கைங்கரியத்தில் (அவருக்கு என் மேலிருந்த கரிசனையை விட கட்டட உரிமையாளர் மேலிருந்த காழ்ப்புணர்வுதான் காரணம் என்று எனக்கு தெரிந்திருந்துதானிருந்தது) அது மேலும் என் சோர்வைக் கூட்டியிருந்ததால் அன்றைக்கு போதும் என்றிருந்தது.

ஆனால் விட்டால்தானே..

வீட்டையடைந்ததும் என் வட்டார மேலாளர் வழியாய வேறொரு வில்லங்க செய்தி!!

தொடரும்

6 கருத்துகள்:

  1. ஜோசப் சார்...பிரச்சனைகளுக்கு ஒங்க மேல ரொம்பப் பிரியம் போல. வாலு போயி கத்தி வந்தது டும் டும் டும் கதை மாதிரியில்ல இது போகுது....அது சரி...ரொம்ப அழுத்தப்படுற கரிதான் வைரமாகுதாம்...நம்மள வைரமாக்க ஆண்டவன் எடுக்குற முயற்சீன்னு இத நெனச்சுக்க வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  2. வாங்க ராகவன்,

    நாம சந்திக்கிற ஒவ்வொரு பிரச்சினையும்தான் நம்மள மேலும் மேலும் திறமையுள்ளவர்களா மாத்துதுங்கறத உறுதியா நம்பறவன் நான்.

    அதனால இப்பவும் பிரச்சினைகளைக் கண்டு ஓடி ஒளிஞ்சிக்க நினைக்கறதில்லே..

    இனி ஒவ்வொரு இடுகைக்கும் கீழே படிப்பினைன்னு சின்னதா எழுதலாம்னு நினைக்கிறேன். இது வரைக்கு வந்த எல்லா இடுகைக்கும் என்ன படிப்பினைன்னு ஒரு தனி பதிவா போடலாம்னும் உத்தேசமிருக்கு.. பாக்கலாம்.

    பதிலளிநீக்கு
  3. வாங்க ராஜ்,

    நீங்க சொல்றதும் சரிதான். ஆனா ஒன்னு ராஜ். இந்த மாதிரி ஆளுங்க நிச்சயம் ஒரு நாள் மாட்டிக்குவாங்க..

    இவருக்கும் அப்படி நடந்திருக்கும்னு நினைக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  4. ஜோசஃப் சார்,
    இன்னமும் இவர் யாருன்னு என்னால யூகிக்கக் கூட முடியலை. அதுவும் இவ்வளவு பிரபலமான ஆளு, ஏகப்பட்ட ஸ்கூலெல்லாம் நடத்துனாருன்னு வேற சொல்றீங்க.

    புரியாம மண்டைய பிச்சுகிட்டுருக்கேன். பண்ணையாரும் பிடிபடல. அவராவது பரவால்ல... ஏன்னா, நம்மூர சுத்தியிருக்கிற ஆயிரக்கணக்கான கிராமங்கள்ல ஒன்னுத்துல இருந்துருக்கலாம். சேட் யாருன்னு ஒருமாதிரி புரிஞ்சுகிட்டேன். ஆனா, இவர் டவுன்ல பெரிய ஆளுங்கறீங்களே! :(

    //இவருக்கும் அப்படி நடந்திருக்கும்னு நினைக்கிறேன்//
    ஆருன்னு க்ளூ தனிமயில்ல கொடுத்தீங்கன்னா, என்னாச்சுன்னு நான் சொல்றேன். ஹி ஹி.

    பதிலளிநீக்கு
  5. வாங்க இராமநாதன்,

    அந்த விஷப் பரீட்சையெல்லாம் வேணாம் இராமநாதன்..

    நான் இதை எழுதறதின் நோக்கம் இந்த மாதிரி இன்வெஸ்டிகேஷனுக்கில்ல. நான் சந்திச்ச மனுஷங்களப் பத்தி சொல்றதுக்குத்தான்..

    அவர் இப்ப இருக்கறதுக்கு சான்ஸ் ரொம்ப கம்மி. ஏன்னா நான் அவர சந்திச்சப்பவே 60 வயசு இருக்கும்..

    ஆனா டவுண்லருந்த அவரோட ஸ்கூல் இப்பவும் இருக்குன்னு நினைக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  6. இந்த மாதிரி பல நிகழ்ச்சிகளைப் பார்த்தும் கேட்டும் இருக்கறதாலே இப்பெல்லாம்
    தருமம் செய்யணுமுன்னாக்கூட கொஞ்சம் யோசிச்சுத்தான் செய்யவேண்டி இருக்கு.
    அதான் 'பாத்திரம் அறிந்து பிச்சை போடு'ன்னு சொல்லிட்டு போயிட்டாங்களே அந்தக்
    காலத்துப் பெருசு.

    ஆமாம், இவ்வளவு மனப் பிரயாசங்களை எப்படித்தான் தாங்கினீங்க? அப்பச் சின்ன வயசு,
    அதனால தாங்கிக்கற சக்தி இருந்துருக்கும். இல்லே?

    பதிலளிநீக்கு